Search This Blog

14.9.08

மந்திரிசபையையே பெரியாருக்குக் காணிக்கையாக வைத்த அண்ணா




யாருக்கும் கிடைக்காத பெருமை

அண்ணா முடிவெய்திவிட்டார். அண்ணா வாழ்க! அதாவது அண்ணா கொள்கை வாழ்க! நோய் வருவதும், முடி-வெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒருசம்பிரதாயமே ஆகும். என்றாலும் இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தையெல்லாம் தாண்டி மக்களின் உச்சநிலை துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார்.

யானறிந்தவரை, சரித்திரம் கண்டவரை அண்ணா முடிவுக்கு பொதுமக்கள் காட்டிய துக்க கொண்டாட்டத்தில் 4-இல், 8-இல் ஒரு பங்கு அளவுகூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டியதான நிகழ்ச்சி கிடையவே கிடையாது. அந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்று விட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியால் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு இவ்விஷயத்தில் மனித வாழ்வில் வேறு யாருக்கும் கிடைக்க முடியாத பெருமையை அண்ணா அடைந்து விட்டார். எனவே, அண்ணாவின் நற்குண நற்செய்கை; பெருமைக்கு இதற்கு மேல் எடுத்துக்காட்டு காட்டமுடியாது.

------------தந்தைபெரியார் அவர்கள் 4-2-1969 அன்று வானொலியில் ஆற்றிய உரை - "விடுதலை" 5-2-1969


அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மாபெரும் கஷ்டம் என்றே சொல்லவேண்டும். தமிழ்நாடும், தமிழ்ச் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றமடையக் காத்திருந்தது. அவரும் பகுத்தறிவுக்கொள்கைகளைப் பரப்பி அதை உருவாக்குவதே தனது கடமை என்று கருதி இருந்தார்.

நான் இந்த (என்னுடைய) மந்திரிசபையையே பெரியாருக்குக் காணிக்கையாக வைத்துவிட்டேன் என்று கூறி இருக்கிறார். அப்படி என்றால் பெரியார் கொள்கைப்படி நான் நடப்பேன் என்று சொன்னதாக நான் கருதுகிறேன்.

அதற்கேற்ப அவர் செய்த அரும்பெரும் காரியங்களில் முக்கியமானது சுயமரியாதைத் திருமண செல்லுபடி சட்டமாகும். அதில் கடவுளுக்கோ, மதத்திற்கோ, சாஸ்திரத்திற்கோ இடமில்லை என்பதாகும். இது தமிழ் நாட்டிற்கு மாத்திரமல்லாமல் உலகத்திற்கே மாபெரும் துணிச்சான காரியம் என்று கருதப்பட்டது.

மற்றும் பொதுப்பணி இடங்களிலுள்ள கடவுள் படங்களை அப்புறப்படுத்திவிட-வேண்டியது என்கின்ற அரசுக் கட்டளை-யானது மிக மிகத் துணிச்சலான சீர்திருத்தமாகும்.

மற்றும் இந்தி மொழி தமிழ்நாட்டுக்கு கட்டாயம் என்பது ஒப்புக்கொள்ள முடியாது என்று சட்டசபை மூலமே தீர்மானம் செய்ததானது தனது பதவி போனாலும் சரியென்று துணிவு கொண்ட காரியமாகும். இவை தவிர உத்தியோகங்களில், பதவிகளில் தமிழர்களின் உரிமையைப் பாதுகாத்ததாகும். இதில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க அதிசயம் என்னவென்றால், இவைகள் செய்யப்பட்ட பிறகும் நாட்டில் எல்லா கட்சியாருடனும் எல்லா மக்களுடனும் மிக்க நேசமாகவும், அன்புக்குரியவராகவும் இருந்து வந்ததாகும்.

அண்ணாவின் குணம் மிக மிக தாட்சண்ய சுபாவமுடையது என்றுதான் சொல்ல வேண்டும். யாரையும் கடிந்து பேசமாட்டார். தன்னால் முடியாத காரியமாய் இருந்தாலும் முடியாது என்று சொல்ல மிகவும் தயங்குவார். நல்ல ஆராய்ச்சி நிபுணர் என்று தான் சொல்ல வேண்டும்.......................

................அதாவது, நான் தி.மு.க.வுக்கு அது தேர்தலில் வெற்றி பெறும்வரை நான் அக்கழகத்திற்குப் படு எதிரியாக இருந்தவன். தேர்தலுக்குப் பிறகு அண்ணா என் எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து மிகப் பெருந்தன்மையோடு நட்பு கொள்ள ஆசைப்பட்டு என்னை அவர் பிரிவதற்கு முன் இருந்த மரியாதையுடன் நண்பராகவே நடத்தினார். அதன் பயனாக எனக்கும், மக்களிடையே அதிக மதிப்பு ஏற்பட்டதுடன், என் அந்தஸ்தும் அதிகமாயிற்று என்றுகூட சொல்லலாம். அதற்கு நான் கடமைப்-பட்டவனாக இருக்கவேண்டியதும் என் கடமையாகிவிட்டது.

இதன் பயன் தி.மு.க.வை என்றென்றும் பகுத்தறிவுக்கழகமாகவே இருக்க உதவும் என்று நினைப்பதோடு அண்ணா என்னிடம் காட்டிய அன்பும், ஆதரவும், அளித்த பெருமையும் தி.மு.க.வுக்குள் எந்தவிதக் கருத்து வேற்றுமையையோ, கட்சி மனப்பான்மையையோ கழகத்திற்குள் புகுத்தவிடாமல் கழகம் பெருமையோடு விளங்கவும், மக்களுக்குத் தொண்டாற்றவும் பயன்படும் என்று உறுதி கொண்டிருக்கின்றேன். அதற்கேற்ற தன்மைகளை, அண்ணா தம்பிமார்களுக்கு ஊட்டியும் இருக்கிறார் என்பதில் அய்யமில்லை.

இப்படிப்பட்ட ஓர் அற்புத குணம் படைத்த அண்ணா முடிவானது தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் பரிகாரம் செய்யமுடியாத நட்டமேயாகும். இப்படிப்பட்ட ஒரு நிலையில் ஏற்பட்ட அண்ணாவின் இந்த முடிவு இந்த நாட்டில் மற்ற எவருக்கும் எளிதில் கிடைக்க முடியாத உயர்தர முடிவாகும். அண்ணா நல்ல பதவியில், நல்வாழ்வில் எல்லா மக்களாலும் கொண்டாடி, புகழ்ந்து பாராட்டி முடிவைப் பற்றி துக்கம் கொண்டாடும்படியான அரியவாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து. அதுபோலவே அண்ணா அடைந்த புகழ் மிகப் பாராட்டுதற்குரியதாகும்.

------------------- தந்தைபெரியார் - "விடுதலை" தலையங்கம் - 3-2-1969

0 comments: