Search This Blog

26.11.09

மதவெறிக் கும்பலில் இந்து என்ன? இஸ்லாமியர் என்ன?

ஜஸ்டிஸ் லிபரான் ஆணையத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது
நடவடிக்கை எடுக்கக்கோரி டிசம்பர் 3 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில்
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் அறிக்கை


"சரியாக ஓராண்டுக்குமுன் மும்பை தாஜ் ஓட்டலில் மதவெறிக் கும்பல் பயங்கரவாதிகள் திட்டமிட்டுப் புகுந்து நிகழ்த்திய படுகொலைகளைவிட இந்த பாபர் மசூதி இடிப்புப் படுபயங்கரத்தை நாடு முழுவதும் ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அந்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது என்று இந்தியா குற்றம் சாற்றிவருகிறது.

இந்த அறிக்கையை கிடப்பில் போட்டு, உரியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முன்வரவில்லையானால், பாகிஸ்தான் அரசு செய்யும் அதே தவறினை நமது மத்திய அரசு செய்யலாமா? மதவெறிக் கும்பலில் இந்து என்ன? இஸ்லாமியர் என்ன? இதில் ஒரு குலத்துக்கொரு நீதி என்ற மனுதர்ம அணுகுமுறை இருக்கலாமா? "

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிசம்பர் 3 ஆம் தேதி மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1992 டிசம்பர் 6 ஆம் தேதி அன்று பாபர் மசூதியை இடித்து, அந்த இடம் இராமன் பிறந்த இடம், எனவே, அங்கே இராமன் கோயில் கட்டவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களான பி.ஜே.பி., விசுவ இந்துபரிஷத், பஜ்ரங்தள் போன்ற பல மதவெறி அமைப்புகள் நாடு முழுவதும் மதக் கலவரங்களை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்தன.

நாட்டில் ரத்த ஆறு ஓடி, மிகப்பெரிய அவலத்தை மத அடிப்படையில் ஏற்படுத்தி, இந்திய வரலாற்றில் ரத்தக் கறை படிந்தது. இடிக்கப்பட்டது வெறும் மசூதி அல்ல; ஜனநாயகம், மதச்சார்பின்மை என்ற அடித்தளங்களாகும் என்பதைக் கண்டு நல்லவர்கள் மனந்துடித்தனர்!

4000 உயிர்கள் பலி!

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் சுமார் 3000, 4000 உயிர்கள் தேவையின்றி பலியாக்கப்பட்டது. இந்து மதவெறித்தன, பாசிசக் கொடி ஏற்றப்பட்டது.

ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது மற்றவை அமளிக்காடுகளாக இருந்தபோது! காரணம், ஆய்வாளர்கள், ஏடு எழுதுவோர் சரியாகக் கணித்துக் கூறினர். இதற்கு மூலகாரணம் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் தமிழ் மக்களைப் பக்குவப்படுத்தி வைத்த-மையே என்று.

பாபர் மசூதி சம்பந்தமாக அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அசோக்சிங்கால், திகம்பரா, உமாபாரதி, கல்யாண்சிங் போன்றவர்கள்மீதான கிரிமினல் வழக்குகள் அலகாபாத் நீதிமன்றங்களில் ஊறுகாய் ஜாடியில் இன்னமும் ஊறிக் கொண்டுள்ளன! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்!

மசூதி இடிக்கப்பட்ட பின்பு, அதுபற்றிய உண்மைகளைக் கண்டறிந்து குற்றவாளிகள் யார் என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திட ஜஸ்டிஸ் லிபரான் அவர்கள் தலைமை நீதிபதியாக இருந்தபோதே நியமிக்கப்பட்டார்; அந்த விசாரணை தொடர் கதையாகி அவர் ஓய்வு பெற்ற நிலையிலும் தொடர்ந்து 48 முறைகளுக்குமேல் பதவி நீடிப்புப் பெற்று, 8 கோடி ரூபாய் செலவில் (மக்கள் வரிப்பணம்தான்) அது கடைசியாக ஒரு வழியாக அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு விட்டது.

குற்றவாளிகளின் பட்டியல்....

அதில் வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யாண்சிங் மற்றும் சிலர் உள்பட 68 பேர்கள் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று சில நம்பகத்தன்மை உடைய ஆங்கில நாளேடுகளில் செய்திகள் (ஸ்கூப்) வெளிவந்துள்ளன; இதைக் கண்டு இந்த மதவெறிக் கூட்டம் படமெடுத்தாடியது. நாடாளுமன்றத்தினை நடைபெறவிடாமல் கூச்சல், குழப்பம், அமளி துமளிகளை நடத்தின!

குற்றமுள்ள நெஞ்சுகள்

அவசரமாக மத்திய அமைச்சரவை கூடி முடிவெடுத்து நாடாளுமன்றத்தில் லிபரான் ஆணையத்தின் அறிக்கையை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்தார்; அதனையே தடுத்து நிறுத்திட முயன்றது இந்தக் கூட்டம். அடுத்து அதுபற்றி டிசம்பர் 1 ஆம் தேதி விவாதிக்க நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவெடுத்துள்ளனர்!

பா.ஜ.க.வினர் ஏன் இவ்வளவு பதற்றமுற்று ஓலமிடவேண்டும்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பதால்தானே!

இந்த அறிக்கை விளையாட்டு வேடிக்கை அறிக்கை அல்ல; மதவாத பயங்கரவாதத்தினை அடையாளம் காட்டும் காலந்தாழ்ந்த காலக்கண்ணாடி; இதன்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உடனடியாக முன்வரவேண்டும்; சிறீ கிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கைக்கு ஏற்பட்ட கதி அலமாரியில் தூசியுடன் வைக்கப்பட்ட அவலம் இதற்கும் ஏற்பட்டு-விடக் கூடாது!

மதவெறிக் கும்பலில் இந்து என்ன? முஸ்லிம் என்ன?

சரியாக ஓராண்டுக்குமுன் மும்பை தாஜ் ஓட்டலில் மதவெறிக் கும்பல் பயங்கரவாதிகள் திட்டமிட்டுப் புகுந்து நிகழ்த்திய படுகொலைகளைவிட இந்த பாபர் மசூதி இடிப்புப் படுபயங்கரத்தை நாடு முழுவதும் ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அந்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது என்று இந்தியா குற்றம் சாற்றிவருகிறது.

இந்த அறிக்கையை கிடப்பில் போட்டு, உரியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முன்வரவில்லையானால், பாகிஸ்தான் அரசு செய்யும் அதே தவறினை நமது மத்திய அரசு செய்யலாமா? மதவெறிக் கும்பலில் இந்து என்ன? இஸ்லாமியர் என்ன? இதில் ஒரு குலத்துக்கொரு நீதி என்ற மனுதர்ம அணுகுமுறை இருக்கலாமா?

எனவே, நாடு முழுவதும் உள்ள முற்போக்கு, ஜனநாயக மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ள அனைத்து சக்திகளும், கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் நடவடிக்கை உடனடியாக எடுக்க வலியுறுத்தவேண்டும். தனி நீதிமன்றம் அமைத்து, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிக்கும் வண்ணம் செய்து மக்களுக்கு நீதி வழங்கவேண்டும்!

டிசம்பர் 3 இல் ஆர்ப்பாட்டம்!

திராவிடர் கழகம் இதனை வலியுறுத்தி டிசம்பர் 3 ஆம் தேதி அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்திடும்.

இதில் கழக முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்வர்; குறிப்பாக இளைஞரணி, மாணவரணியினர், மகளிரணி, விவசாய அணியினர் பெருவாரியாக கலந்துகொள்வர்.

ஜஸ்டிஸ் லிபரான் ஆணையத்தின் அறிக்கையை வெளியிட நமது திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு தீர்மானம் ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளது! நடவடிக்கை எடுக்க நாம்தான் தொடர் குரல் கொடுக்க வேண்டும். தண்டனைக்குத் தப்பினால், நாட்டின் ஜனநாயக, மதச்சார்பின்மை என்ற அடித்தளம் நொறுங்கி விழுகிறது என்பது பொருளாகி விடக்கூடும்! எனவே, விரைந்த நடவடிக்கை தேவை! தேவை!!

தலைவர்,
திராவிடர் கழகம்.

--------------------"விடுதலை" 26-11-2009

1 comments:

Hariharan said...

ayya,
Narasimarao peyar yen Illai? Tamizhigam amaithi pongava irunthathukku amma vuku nantri solluvoma>