Search This Blog

3.11.09

ராஜபக்சேவும், ஏழுமலையானும்




திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினருடனும், ரதகஜ துரக பதாதிகளுடனும் (80 பேர்கள் கொண்ட குழு) திருப்பதி வந்து வெங்கடாசலபதியைத் தரிசித்தனர் என்ற செய்தி ஏடுகளில் தடபுடலாக வெளிவந்தது.

இவர்களின் வருகையால் பக்தர்கள் பல மணிநேரம் காத்துக் கிடக்க நேர்ந்தது என்ற தகவலும் கசிந்துள்ளது.

கோயில் மரியாதைப்படி அதிபரின் குடும்பத்திற்கு முகத்பார தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதாம்.

அதிபருக்காக ஆகமங்களுக்கு விரோதமாக விஷயங்கள் இடம்பெற்று இருக்கின்றன என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது.

கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி என்பது வேறு இடத்தில் கேட்கப்பட்ட பாடல்.

கையில் காசில்லை என்றால் கடவுளிடத்திலும் வேலை நடக்காது என்பது நடைமுறையாகும்.

ராஜபக்சே ஒன்றும் இந்து மதக்காரர் அல்லர். பவுத்த மதத்தைச் சார்ந்தவர். இன்னொரு மதக்காரரை எப்படி இந்து மதக் கோயிலில் நுழைய விடலாம் என்ற கேள்வி எழும். பவுத்தமும், இந்து மதத்தில் ஒரு பிரிவு என்று வளைத்துப் பேசியதன் அடிப்படையில் இது நடந்திருக்கிறது என்று இந்து வகையறாக்கள் சமாதானம் கூறக்கூடும்.

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், பவுத்தர்கள் தங்களை இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஏற்றுக்கொள்வதில்லை. ஒருமுறை அத்வானி அவ்வாறு சொல்லிவிட்டு நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

அகிம்சையை வலியுறுத்திய புத்தர் நெறியை மதமாக்கி, தமிழர்களின் ரத்தத்தை புத்தர் சிலைக்கு அபிஷேகம் செய்யும் அளவுக்கு ஒரு கேடுகெட்ட நிலை சிங்கள நாட்டில் நடைபெற்றதை யாரும் மறந்திருக்க முடியாது.

நெறி மதமானால், அது வெறியாகிவிடும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். ஹிந்து மதத்தின் வருணக் கோட்பாடுகளையும், சடங்காச்சாரங்களையும் தலைகீழாகப் புரட்டியடிக்கத்தான் கவுதம புத்தர் புதிய நெறிமுறைகளைக் கொடுத்தார்.

மகாவிஷ்ணுவுக்கு உள்ள பல பெயர்களில் வெங்கடேசனும் ஒன்று. அந்த மகாவிஷ்ணு அவதாரம் எடுத்துதான் கொலைகள் பலவற்றை நிகழ்த்தியிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

அப்படிப் பார்க்கப் போனால் பவுத்த நெறிக்கு எதிர்மாறான தத்துவத்தைக் கொண்டதுதான் திருப்பதி ஏழுமலையான் கோயில். புத்தரை ஆயுதந்தூக்கியாக மாற்றி அமைத்துக்கொண்ட சிங்கள இனத்தின் அதிபர் அந்தக் கண்ணோட்டத்தில் ஏழுமலையானைத் தரிசிக்க வந்தால் வியப்பில்லை.

திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துச் சென்றுவிட்ட பிறகுதான், இலங்கையில் விடுதலைப்புலிகளை தம்மால் ஒழித்துக்கட்ட முடிந்ததாக ராஜபக்சே கூறியிருக்கிறார்.


அப்படியென்றால், ஏழுமலையானைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் எப்படிப் பார்க்கவேண்டும் என்பது ஒன்று; மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எப்படிக் காணவேண்டும் என்பது இன்னொன்று; தமிழர்கள் நோக்கில் எப்படிக் கணிக்கவேண்டும் என்ற மூன்றாம் நிலை.

பொதுவான கண்ணோட்டத்தில் பார்ப்பதாக இருந்தாலும் மக்களைக் கொன்று குவித்திட கடவுள் பக்தி பயன்பட்டு இருக்கிறது. கருணையானவன் கடவுள் என்னும் பிரச்சாரம் எவ்வளவு மோசடியானது என்ற முடிவுக்காவது குறைந்த-பட்சம் வரவேண்டாமா? என்பதுதான் நமது கேள்வி.

இதில் இன்னொரு சூட்சமும் குடிகொண்டிருக்கிறது. தாம் செய்த மனிதப் படுகொலை (Genocide) கடவுள் பக்தி என்னும் மூடு திரைமூலம் மறைக்கும் ஒரு தந்திரமும் இதில் மறைந்திருப்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

இலங்கையில் நடைபெறும் கலவரங்களுக்கான பரிகாரம் ஒன்றை ஆன்மிகவாதிகள் கூறினார்கள். சிறீரங்கத்தில் உள்ள ரெங்கநாதன் கோயில் கோபுரம் வாஸ்து முறையில் சரியானபடி அமையவில்லை.

அதைச் சரி செய்ய கொழும்பில் ஒரு அரங்கநாதன் கோயிலைக் கட்டவேண்டும் என்று சொன்னார்களே நினைவிருக்கிறதா?

எந்தப் பிரச்சினையானாலும் அதனை பார்ப்பனியத்தின் இலாபமாக சுரண்டலாக மாற்றும் ஒரு சூழ்ச்சி அடங்கியிருப்பதை ஆறாவது அறிவைக் கொண்டு சிந்திப்பார்களாக!

---------------"விடுதலை" தலையங்கம் 3-11-2009


0 comments: