Search This Blog

23.11.09

தமிழரின் வளம் கெட்டழியவே கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை தீபம்
பேராசிரியரின் பொருளாதாரப் பார்வை: தீபமும்-திகைப்பும்

பேராசிரியர்
க. அன்பழகன் எம்.ஏ.,

(1947இல் விடுதலையில் வெளியான (கார்த்திகை 7 விய ஆண்டு) தீபமும் திகைப்பும் என்னும் பேராசிரியரின் திருவண்ணாமலை தீபம் பற்றிய கட்டுரை.

தம்முடைய கட்டுரையில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட தாழம்பூப் பிரச்சினை புராண வரலாற்றினை எடுத்துக்கூறிச் செயற்கைத் தீபம் ஏன் ஏற்றவேண்டும் என்று வினா எழுப்பி, ஒளியே முக்கிய மென்றும் எனவே தான் கடவுள் பெயரால் இவ்விழா வெனின் நூதன மின்சார சக்தியினால் குறைந்த செலவில் தீபத்தைப் போல் பல மடங்கு ஓளியைத் தரக்கூடிய மின்சாரவிளக்கை ஒன்றாகவோ ஓராயிரத்து ஒன்றாகவோ போட்டு (அமைத்து) ஏழை மக்களுடைய பொருளுக்கு அழில்லாமல் செய்யட்டும் உற்சவ காலங்களில் தீவட்டிக்கு பதில் காஸ்லைட் உபயோகிப்பது முறையானால் இது மட்டும் எப்படித்தவறாகும்? அனல் விளக்குக்குப்பதில் மின்சாரத் தொடர் விளக்குகள் அமைத்து கார்த்திகை கொண்டாடும் போதும் தீபம் மட்டும் ஏன் மாற்றம் பெறக்கூடாது என்று தீபத்திருநாள் கொண்டாடுபவர்களுக்கு மாற்றுச் சிந்தனை அளிக்கிறார். தீபம் நமக்குத் திகைப்பாக இருக்கிறது. தீபத்தைப் போற்ற வேண்டாம் என்று முடிக்கிறார்.)


கார்த்திகை நெருங்கி விட்டது! வீடுகளிலெல்லாம் அகல் விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றிவைப்பார்கள். இரவு முழுவதுங்கூட விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றியபடி இருப்பர், செல்வர்கள் வீடுகளிலே பணியாட்களும் பிறரும். அந்நாளிலே திருவண்ணாமலையிலே தீபம். மலை யுச்சியிலே பெருங்கொப்பரை, அது நிறையக் கற் பூரத்துடன் கலந்த நெய், மேலும் மேலும் நெய்யும் திரியும் கொட்டிய வண்ணம் பக்தர்களின் கூட்டம்! தமிழகத்தில் உள்ள பெருவாரியான கோவில்களி லேயும் அந்தந்தக் கடவுள்களின் பொருள் நிலைக் கேற்ற வண்ணம் கார்த்திகை கொண்டாடப்பட்டே வருகின்றது.

தீபத்திற்காக ஆயிரக்கணக்கான மணக்கும் நெய்யும் நூற்றுக்கணக்கான (கேஸ்) பெட்டி கற்பூரமும், கட்டுக்கணக்கிலே திரி நூலும் எரிக்கப்படுகின்றன. வீடுகளிலே ஏற்றப்படும் கோடிக்கணக்கான கை விளக்குகளால் ஆயிரக்கணக்கான குடங்கள் அளவுள்ள எண்ணெய் வீணாக எரின்கிறது. தீப தரிசனத்திற்காக திருவண்ணாமலைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களால், அவர்களது போக்குவரத்துக்காக ரயிலுக்குச் செலவிடும் தொகையும், வெளியூர்களில் தங்குவதால் ஏற்படும் செலவுத் தொகையும் ஏராளம். அவர்களுக்கு ஏற்படும் பொருள் இழப்பும் ஏராளம்!

நாசப்பட்டியல்

இவ்வளவு பெருங்கூட்டமான மக்கள் ஆண்டிலே ஓரிரண்டு நாட்கள் திருவண்ணாமலையிலே வந்து குவிவதை முன்னிட்டு நூற்றுக்கணக்கிலே கட்டப்பட்டுள்ள சத்திரங்களும், மடங்களும், பாக்கி இருக்கும் முன்னூற்று அறுபத்து மூன்று நாட்களும் பயன்படாமல் வீணாகக் கிடப்பதால் (சில சோம்பேறிகளுக்கு உறையுள் ஆவதைத் தவிர ) அதற்காகக் செலவழிக்கப்பட்ட மூலதனம் பாழாகின்றது. இவ்வளவு பெருங்கூட்டமாக மக்கள் திரளுவதால் இலாபம் அடையும் (கொள்ளையடித்து வாழும்) கோயிற்பூனைகள், செல்வம் மிக்க செட்டியார் இனத்-தாரையும், பிறதமிழரையும் தூண்டிவிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் வெள்ளியிலே வாகனம், நூதனரதம், அற்புத கல்யாண மண்டபம், ஈஸ்வரனுக்குப் பொன்னிலே கவசம், அம்மனுக்கு வைர ஒட்டியாணம் புதிய கோபுரக் கும்பாபிஷேகம், வேத வியாகர்ண பாடசாலை என்பவைகளை அமைக்கச் செய்வதாலும், அவைகளின் விளம்பரத்தின் மூலம் ஏராளமான மக்களை திரளச்செய்துஅந்த பெருங்கூட்டத்தால் பெருங்கொள்ளை கொண்டு கவலையின்றி வாழ்வதற்கு வழிசெய்து கொள்ளுந்தன்மையாலும், ஏற்படும் பொருள் இழப்பு ஏராளம். எவ்வகையானும் தமிழர் கோடிக் கணக்கிலே பொருளைக் கொட்டியழவும் தமிழரின் வளம் கெட்டழியவும் காரணமாகின்றது கார்த்திகை தீபம்.

பொருள் பாழாக்கப்படுவதைத்தவிர மக்களுக்க ஏற்படும் தொல்லையும், தொத்து நோயும், துயரும் பெருந்துன்பமும் அளவற்றவை என்பதோடு, அவர்களுடைய அறிவு அழியுந்தன்மையே திகைப்பை விளைப்பதாம்!

இது பற்றிய புராணக்கதை யாவருக்கும் தெரிந்தே! இதன் படி மும்மூர்த்திகள் சந்திக்கின்றனர். ஏன்? எங்கே? எப்பொழுது? யாருக்கும் தெரியாது. மும்மூர்த்திகளிலே ஒருவர் சிவன், அவரே முழுமுதற் கடவுள் என சைவ மதத்தினர் கூறுவர்! அவர் ஏன் மற்ற சாதாரணக் கடவுளரைச் சந்திக்க வேண்டும்? நமக்குத் தெரியாது! சந்திப்பது ஒப்புரிமை படைத்தவர்களிடத்திலேயே நிகழ்வது இயற்கை. முழுமுதற் கடவுளின் உயர்வை எடுத்துக்காட்ட வந்த இக்கதையில் சிவனைக்காண மற்றிருவரும் சென்ற போது இவை நிகழ்ந்த தாகவாவது கூறியிருக்கலாம். அவ்வாறும் இல்லை. சந்தித்த இடத்திலேயே யார் பெரியவன் என்ற விவாதம் ஏன் தோன்றவேண்டும்? எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தபோது பிரம்மாவும் விஷ்ணுவும், அப்பொழுதே யார் பெரியவன் என்ற சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள விரும்பியதின் விளைவா? மற்ற புராணங்களின்படி விஷ்ணுவின் மகன் பிரம்மா என்ற கதையிருக்க சந்தித்த போது திடீரென்று சந்தேகம் பிறப்பானேன், தந்தைக்கும் மகனுக்குமே? யார்பெரியவர், என்ற விவாதம் மூர்த்திகளிடையிலே நடப்பானேன்? முக்காலத்தையும் உணரும் மூர்த்திகள் ஒருவரையொருவர் சந்திக்கப் போவதையே உணர வில்லை! சந்தித்தால் சச்சரவு ஏற்படும் என்பதை மட்டும்தான் உணரவில்லையா? அன்றி இவைகளை எதிர்பார்த்தேதான் சந்தித்தார்களா? அப்படியானால் முடிவும் அவர்கள் அறிந்ததேதானா? அதற்கு ஏன் ஒவ்வொரு புதுஉருவிலே தோன்ற வேண்டும்? நாமறியோம் என்பது மட்டுமல்ல; மும்மூர்த்திகளேகூட யாரை,எங்கே, எப்பொழுது சந்திக்கவேண்டும் என்ற நிர்ணயமில்லாமலும், ஏன் சந்திக்கவேண்டும் என்ற சிந்தனை இல்லாமலும், என்ன விளையும் என்பதை அறியாமலுமே தான் இருந்திருக்கவேண்டும்!

இது நிற்க. யார் பெரியவர் என்று பிரம்மாவுக்கு விஷ்ணுவுக்கும் இடையிலே வாதம் ஏற்பட்டதே தவிர, கதையின்படி யார் பெரியவர் என்ற முடிவு காணப்படவில்லை. இடையிலே சிவனார் ஜோதியாகி வானளாவினார்! இருவருக்கும் பெரியவருமானார்! அவ்வளவுதான்!

பொய் மூர்த்திகள் இது கிடக்க. ஜோதியாய் நின்ற பெருமான் அடியையும், முடியையும் காணச் சொன்னபோது எப்படிப் பேசினாரோ? அந்த முகந்தெரிந்தால் பிரம்மா - முடியைக் காண்பதும் கடினமாமோ? அசரீரியாகச் சொன்னதாக வைத்துக் கொள்வோம்! அடிமுடியைக் காண விரும்பிய இருவரும் பன்றியும் அன்னமுமாய் உருவெடுப்பானேன்? பன்றியாக பலமுறை உருவெடுத்த பழக்கத்தால் திருமால் தான் உடனே பன்றி வடிவெடுத்தார்! பிரம்மாவாவது ஏன் உயரப்பறக்கக்கூடிய கருடனாக உருவெடுக்கக் கூடாதோ? தெரியவில்லை யென்றோ முடியவில்லை என்றோ கருத முடியுமா? இருந்ததென்றால் இரு மூர்த்திகளும் தங்களின் இயற்கை உருவத்தைவிட இதற்கேற்ற புது வடிவெடுத்துங்கூட காணமுடியாத காரணமென்ன? ஜோதி யென்றால் அடிமுடி இல்லாதது என்றால்முழுமுதற் கடவுளல்லவா? எனவே அடிமுடி இல்லாத ஜோதியாகி நின்றார் என்றால் - இல்லாத அடியையும் முடியையும் காணும்படி கூறியது பொய்யல்லவா? அடி முடி இருந்ததென்றால் இருவரும் காணாததால் காண இயலாததால்மூர்த்திகள், படைப்பவர், காப்பவர் என்று பேசப்படுவது முழுப்பொய்யல்லவா? பின் விஷ்ணுவிற்கு மட்டும் கோயில்களேன்? பிரம்மாவைவிட எக்காரணத்தாலே விஷ்ணு கடவுளென்று கருதப்படமுடியும்?

விஷ்ணுவுக்கோ, பிரம்மாவுக்கோ கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்தும் திறமை யிருந்தாலும் தாங்களும் ஜோதியாகி (தீயாகி) ஜோதியிலே கலந்து அய்க்கியமாகி அடியையோ முடியையோ மட்டுமல்ல; அடி முடி இரண்டையுமே கண்டு திரும்பி வெளிவந்திருக்கலாம். அப்படியானால் சிவன் பெருமை நிலைக்காதே என்றெண்ணிய புராணீகர், விஷ்ணுவை பன்றியாக்கி, பிரம்மாவை அன்னமாக்கி, அரன் பெருமையைத் தடுத்தாட் கொண்டார் போலும்!

தாழம்பூ பிரச்னை

இனி பிரம்மா முடியைத் தேடச்சென்றபோது வந்த தாழம்பூ முடியிலிருந்து வந்ததென்றால், முடியிருந்ததென்றாகிறது! அப்படியானால் பிரம்மாவால் ஏன் அடையமுடியவில்லை? அவரால் அடைய முடியவில்லையென்றால் தாழம்பூவால் மட்டும் கீழ்நோக்கி அவ்வளவு தூரம் வர முடிந்தது? தாழம்பூ தானாகவர வில்லையென்றால் - அது அசேதனம், சேதனமென்று, தானாக இயங்குவதென்று இயற்கையின் தன்மைக் கேற்ப இயல்வது. எனவேதான் கீழே விழுந்தது என்றால் அன்னப்பறவையிடம் எப்படி பேசமுடிந்தது? பொய் சாட்சி கூறியதுதான் எப்படி ? அது கூறவில்லை, அன்னப்-பறவை அடையாளமாகக் கொண்டு வந்ததென்றால், தாழம்பூவைத் தண்டிப்பானேன்? தாழம்பூவைச் சிவனார் தண்டித்ததினின்றும் அது தலைமையிலே இருந்தது என்பதைச் சிவனார் ஒப்புக்கொண்டதாகத் தானே பொருள்? அப்படியானால் ஜோதியின் முடியிலே தாழம்பூவோ தாழைச் செடியோ எப்படியிருக்க முடியும்? எரிந்து சாம்பலாய்ப் போயிருக்காதா? ஜோதியான போது இறைவன் இவைகளை நீக்கிவிட்டாரா? பிறகு தாழையின் கதியென்ன? ஜோதியிலே கங்கை சந்திரன் முதலானோர் தங்கி இருப்பதனால் ஒரு தாழம்பூ ஏன் விழவேண்டும்? இறைவன் தலையிலே சூட்டப்பட்டு விட்டால் பின் என்றும் அழியாது என்ற கூற்று பொய்ப்பதன்றோ? அதுவன்றி இறைவன் முடியினின்று விழும்போது தாழை பொய் சொல்லிற்றென்றால் சிவனின் மகத் துவந்தான் என்ன?

1 1/2 அடி உருவம் ஏன்

இறைவன் ஜோதியாய் நின்றதால்தான் அண்ணாமலையே தேயுஸ்தலம் என்று கூறப்படுவதை ஏற்றுக்கொண்டால் பின் ஏன் தீபம் ஏத்துகின்றனர்? அரனுடைய அடிமுடிகளை அரியும் அயனுமே காணமுடியவில்லையென்றால், அடி முடி இரண்டையுமே எவரும் காணக்கூடிய வகையிலே தீபம் அமைப்பதன் அர்த்தமென்ன? அல்லது அத்தீபத்தைத் கண்டவுடனேயே, மக்கள் இறைவனின் செந்தழல் மேனியையும் அடிமுடிகாண இயலா விண்ணுயர ஓங்கிய உயர்வையும் உணர்கின்றனர் என்றால், தீப விழா நடைபெறும் அதே இடத்தில் அருணாசலேஸ்வரருக்கு ஒன்றரை அடி உயரத்தில் சிலை (விக்ரகம்) எதற்காக? இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக தீபம் ஒளி விட்டும் சிவனாரின் இலிங்க வடிவமும், மூர்த்தி வடிவமும், ஒரு காலைத் தூக்கியருளும் நடராசரும், பொன்முடி தரித்த சுந்தரேசுவரரும் எதைக் காட்டுகின்றன? அடிமுடியற்ற கடவுளைக் காட்ட தீபம் என்றால் தாளம் தவறாமல் அடிவைத்துச் சதிராடும் சாமிக்கும், இசை கேட்டுருகித் தலை (முடி) யசைக்கும் சாமிக்கும் சிலை எதற்காக? தீபம் கண்ட மக்களுக்கு, தீபத்தின் தத்துவம் பேசும் தொண்டர்கட்கும் விக்ரகவணக்கந்தான் எதற்காக? அண்ணாமலை தீபத்தைக் கண்டு ஜோதி வடிவைக் கொண்டு. அங்கெங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நிறைந்ததை மக்கள் உணர்ந்து கொண்டால் தீபந்தான் எற்றுக்கு? இவைகளை மக்கள் உணர்தல் எளிதோ, ஞானிகளன்றோ உணரவல்லார் எனின், தீபத்தின் பெயரால் மக்களின் பொருள் பாழாக்கப்படுவானேன்?

அகல் விளக்கிலெல்லாம், மின்மினியின் ஒளியைக் காண்பதாகக் கூறும் பக்தர்கள் அண்ணாமலைக்கே ஆண்டு தோறும் செல்வானேன்?

அறிவுடைமையாகுமா ?

அகில உலகையும் அதில் வாழும் மக்களையும் படைத்த முழுமுதற் கடவுள் ஜோதிவடிவினன் என்பதை உலகோருக்கு உணர்த்தவேண்டுமானால், உலகில் பகல் முழுவதும் விளங்கும் பகலவரனையே அதற்கு ஒர் அடையாளமாக்கியிருக்கலாம்! அகல் விலக்குக்கு எண்ணெய்யோ, தீபத்திற்கு நெய்யுந்திரியுமோ வீணாகாது. இவை வீணாவது பற்றிக் கவலையில்லை யென்றேகருதினாலும்,-அரியும் அயனும் அளவிட முடியாத அரன் என்று எடுத்துக் காட்ட எழுதப்பட்ட இறைவன், அவரவர்கள் பொருள் வலிவுக் கேற்பவும், சேர்ந்த நெய், சூடம், திரி இவைகளுக்கேற்பவும் அளவிடப்படுவது அறிவுடைமையாகுமோ?

அண்ணாமலையே ஜோதிவடிவென்றும், அதற்கு அடையாளமாகவே அதன் மேல் தீபமென்றும் கூறினால், ஜோதி வடிவு ஜோதியை ஏன் இழந்தது என்பதையும் முன்பொரு காலத்தில் ஜோதியாகத்தான் இருந்ததென்றால்,அதுவே நெருப்பாக நின்று மாறிவிட்ட பிறகு எதற்காக செயற்கைத் தீபம் என்பதையும் எண்ணிப்பாருங்கள்!

ஒளியே முக்கியமென்றும், எனவேதான் கடவுள் பெயரால் இவ்விழாவெனின் நூதன மின்சார சக்தியினால் குறைந்த செலவில் தீபத்தைப் போல் மின்சார விளக்கை ஒன்றாகவோ, ஓராயிரத்து ஒன்றாகவோ போட்டு (அமைத்து) ஏழைமக்களுடைய பொருளுக்கு அழிவில்லாமல் செய்யப்படும் உற்சவகாலங்களில் தீவெட்டிக்குப்பதில் காஸ்லைட் உபயோகிப்பது முறையானால் அது மட்டும் எப்படித்தவறாகும்? அகல்விளக்குக்குப் பதில் மின்சாரத் தொடர்விளக்குகள் அமைத்து கார்த்திகை கொண்டாடும் போது தீபம் மட்டும் ஏன் மாற்றம் பெறக்கூடாது?

ஆனால், தீபமோ வழக்கம் போல் வந்து போகிறது! தமிழர் பொருளோ என்றைக்கும் எரிகிற நெருப்பிலே எண்ணெய்யாகிறது! தமிழர் வாழ்வோ இன்றளவும் அறியாமை இருளிலே அழிவுறுகின்றது! இந்நிலையை உணர்ந்ததாலேயே தீபம் நமக்குத் திகைப்பாக இருக்கிறது! தீபத்தைப் போற்ற-வேண்டாம்! திகைப்புற்றே கலங்கவேண்டாம்!

2 comments:

Unknown said...

இவன் ஒரு லூசாப்பா?

தமிழ் ஓவியா said...

//இவன் ஒரு லூசாப்பா?//

கார்த்திகை தீபத்திற்காகா செலவு செய்பவன் லூசுதானப்பா, லூசுதான்