Search This Blog

3.11.09

பெரியார் அந்தக் காலத்திலேயே ராமன் மீது கைவைத்தது ஏன் ?எதற்கு?

இராமன், இராமாயணத்தின்மீது பெரியார் கை வைத்ததால்தான் தென்னாட்டில் கலவரமில்லை!
அண்ணா கருத்தை விளக்கி தமிழர் தலைவர் பேச்சு!


தந்தை பெரியார் இராமன் மீது, இராமாயணத்தின் மீது கை வைத்ததால்தான் தென்னாட்டில் கலவரமில்லை என்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கமளித்தார்.

சென்னை பெரியார் திடலில் 31.8.2009 அன்று மாலை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவை ஒட்டி அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற விவாதங்கள் என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய ஆய்வுரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இன எழுச்சிக்கு ஆக்கம் தருமா?

மேலும் அண்ணா சொல்கிறார்: பள்ளி மாணவன், பரிட்சையில் கேள்விக்கு விடை எழுதினால், வெளியே வந்த பின் எட்டு கேள்விகளில் அய்ந்துக்கே விடையிறுத்தேன். அதிலே மூன்று நல்ல முறையிலே எழுதினேன். இரண்டு ஒரு விதமாக எழுதினேன் என்று ஆயாசப்படுவது போல இல்லையா கம்பரின் பாயிரம் என்று கேட்கின்றேன். ஏன் வந்தது அவருக்கு அந்தச் சந்தேகம்? மேலும் அவர் கூறினார். தேவபாடையில் இதனை மூவர் செய்தனர். மூவரில் முதல்வரான வால்மீகரது நூலை நான் மூலமாகக் கொண்டேன் என்றுரைத்தார். ஆரியர் தமது மொழியாம் வட மொழியைத் தேவபாடை என்று கூறுவர்.

தம்மைப் பூதேவர் என்றும் கூறுவர். அதனைக் கம்பர் கூறுமிடத்து, ஆரியரால் தேவபாடை என்று கூறப்படுவதான வடமொழி என்று எழுதாது தேவபாடை என்று ஏற்றுக்கொண்டு எழுதுவது சரியாகுமா? அம்மொழியைத் தேவபாடை என்று ஏற்றுக்கொண்டால், அம்மொழியினரைத் தேவர் என்றும், உயர்ந்தோரென்றும் கம்பர் ஒப்புக்-கொண்டதோடு, தமிழரையும் ஒப்புக்கொள்ளச் செய்கிறார் என்று ஏற்படுகிறது. ஓர் இன எழுச்சிக்கு இது ஆக்கம் தருமா? என்று கேட்கிறேன்.

கம்பரின் திறமை பற்றித் தோழர் சேதுப்பிள்ளை கூறுவார் பிறகு. ஆனால் அவரும் பண்டிதர்களும் கம்பரை எந்தத் திறமைக்காகப் புகழ்கின்றனரோ, அதே திறமையை தமிழர்கெட உதவிட செய்தது என்பதே எமது குற்றச்சாட்டு. கதையிலே வரும் பாத்திரங்களின் மனப்பாங்கையும், செயலையும் விளக்குவதிலே, கம்பர் மிகச் சமர்த்தர் என்று உரைக்கின்றனர். அந்த சமர்த்தான குற்றங்குறைகள் கொண்ட ஆரியத்தலைவர்களைச் சற்பாத்திரர்களாக்கிவிட்டது. எனவேதான், தமிழ்இனம், ஆரிய இனத் தலைவனைத் தேவனெனக் கொண்டது. என்று நாங்கள் கூறுகிறோம்.

இராமன் கிளம்பும் போது

காடேக இராமன் கிளம்பும்போது உடன்வரப் புறப்பட்ட சீதையுடன் வாதிடுகயில், சீதை கூறும் மொழியின் பகுதியையும், சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும் வால்மீகி கூறியுள்ள-படியே கம்பர் எடுத்தெழுதியிருப்பின், அந்த ஆரியப் பாத்திரங்களிடம் ஆபாசக் குணங்கள் கிடந்ததை தமிழர் கண்டு, அவர்களைத் தெய்வங்களென்று போற்றும் கீழ்நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள். கம்பரோ தமது கவித்திறமையினால், ஆரிய இராமனைக் குற்றங்குறையற்ற சற்பாத்திரனாக்கிக் காட்டி, வழிபாட்டுக்குரிய தெய்வமாக்கிவிட்டார்.

திராவிடருக்கும் ஆபத்து

இராவணன் மிக்க வலிமைசாலி, திறமையுடையோன், வேதம் பயின்றோன். சிவ பக்தன், இலங்கை சகல சுகமும் நிரம்பிய இடம் என்று வர்ணித்து விட்டு இவ்வளவு குணாளனும் திறமைசாலியுமான இராவணன் ஓர் ஆரிய மங்கையைக் கண்டு காமுற்றுக் கருத்தழிந்து அறம் விட்டு அழிந்தான் என்று முடிப்பது, திராவிட இனப்பெருமைக்கே ஊறுதேடுவதாகும். திராவிட இன மக்கள், நாம் எவ்வளவு ஆற்றல் படைத்திருப்பினும், கல்வி கேள்வி இருப்பினும், ஆரிய மங்கையரிடம் சபலப்பட்டு சங்கடத்துக்குள்ளாவோமா? அழிந்து படுவோமா? என்ற சந்தேகத்தையும், மண்டோதரி எனும் பேரழகியின் நாயகனாகவும், தேவமாதரும் ஏவலராக இருக்கும் நிலை பெற்ற சுந்தரனுமாகிய இராவணனோ, சீதை எனும் ஆரிய மங்கையைக் கண்டதும் மய்யல் கொண்டான். இராவணனுக்கே அந்நிலை வந்ததென்றால், நாம் தப்ப முடியுமா என்ற திகைப்பும் ஏற்படுமன்றோ! ஆற்றல் மிக்க ஓர் அரசன் ஆரிய மங்கையைக் கண்டு காமுற்றுக் கருத்தழிந்தான் என்ற கதையைப் படிப்பது, திராவிடருக்கும் ஆபத்து ஆரியருக்கும் ஆபத்து, என்றுரைப்பேன்.

கம்பசித்திரத்தின் மாண்பு

கவி நயத்தைக் காட்டி இராம காதையிலே வீரம் செறிந்திருக்கிறது. தியாகம் ததும்புகிறது. நட்புக்கு உதாரணம் நன்றாகக் காண்கிறோம். கற்புக்கும், காதலுக்கும் சான்றுகள் உள என்று கூறி அவ்வின்பத்துக்காகக் கம்பஇராமாயணம் தேவை என்று பேசுவோர் உரைப்பர். நான் கூறுகிறேன், காதலுக்கும், கற்பிற்கும் இராம காதையிலிருக்கும் இன்ப நுணுக்கப் பொருள்களை விட மிகச் சிறப்புடைத்தான பொருள்கள் நமது அகப் பொருளில் உண்டு.

எனவே கம்பராமாயணம் ஒழியின் காதலுக்கும், கற்புக்கும் கவிதை இராதே என்று, பண்டிதர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. நட்புக் குறித்துக் கூறுவரேல், இராமனுக்கும், படகோட்டி குகனுக்கும் கண்டதும் ஏற்பட்ட நட்பு எத்தகைய சிறப்புடையது என்று வியந்து கூறுவர். வால்மீகி நூற்படி, அயோத்தி எல்லையினன், இராமனின் நண்பன் குகன் என்பது விளங்கும், கம்பன் மொழி பார்த்திடின், குகன் இராமனைக் கண்ட அன்றே நட்புக்கொண்டான் என்று கூறுகிறார்.

நட்பின் சிறப்பு சாற்ற இராமனும், குகனுமாவது கண்டதும், நட்பு கொண்டனர். கம்பச் சித்திரத்தின் மாண்பு அது என்றால், கோப்பெரும் சோழனெனும் அரசனும், பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் காணாமலே ஒருவர் பற்றி ஒருவர் கேட்டே, மாறா நட்பினராக இருந்ததை விளக்கும் சங்கக்கவி நம்மிட-மிருக்கும் மாண்பு பற்றிப் பண்டிதர்களுக்குக் கவனமூட்டி, நட்பின் பெருமையைக் கம்பஇராமாயணம் ஒழிந்தால் நாடு மறந்திடாது, முன்னாள் இலக்கியமுண்டு என்று கூறுகிறேன். தியாகத்தைக் குறித்துக் கூறுவர். இராமன் அரசுரிமை துறந்து காடேகினான். மர உரி தரித்து மன்னன் மய்ந்தன், மாலின் அவதாரம் சென்றபோது, அத் தியாக மூர்த்தியின் முகம் அன்றலர்ந்த செந் தாமரை போன்றிருந்தது. தியாகத்தின் சிறப்பு இது. கம்பனின் கவித்திறம் இது என்றுரைப்பர். அரசு போவதறிந்த இராமனின் முகம்கோணியதை வால்மீகி கூறினார். கம்பர் மெழுகினார். கம்பர் மொழியைக் குறை கூறாது அங்ஙனமே கொண்டு பார்ப்பினும், அந்தத் தியாகத்தை மறக்க வேண்டாமென்று கூறுகிறேன். இராமனாவது தந்தை சொல்லால், சிற்றன்னையின் கொடுமையால் அரசு துறந்தார். இந்தத் தியாக நிகழ்ச்சியைத் தமிழனறிய, ஓர் ஆரிய இளவரசனுக்கு நேரிட்ட அவதியைக் கதையாக்கிக் காட்ட வேண்டுமா என்று கேட்கிறேன். நாம் காணாத அந்நிகழ்ச்சிகள் கிடக்கட்டும். நம் காலத்திலேயே காதலுக்காக வேண்டித் தம் மணி முடியைத் துறந்த எட்வர்ட் அவர்களின் மாண்பு கண்டோமே!

கம்பனின் கவிதை பயன் படவேயில்லையே

தனது இளமை எழில் செல்வம் யாவற்றையும் பரத்தைக்கு ஈந்து, வறியனாகித் திரும்பிடும். கோவலனைக் கண்ணகி கண்டபோது, தனக்குற்ற இடரெல்லாம் மறந்து, கோவலனிடம் கனிமொழி பேசிய அம்மாண்புடன் காட்டுக்கு வராதே என்றதும் இராமனை நோக்கிச் சீதை பேசும் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கற்பின் மாண்புக்குச் சிலப்பதிகாரமிருக்க, கம்பனின் ஆரியக்கதை வேண்டுமோ என்று யோசிக்கும்படி வேண்டுகிறேன்.

கம்பனின் கவிதை, அதற்குப் பயன்படவில்லையே என்று கவலையுறுகிறேன். வீரம் செறிந்துள்ளது கம்ப இராமாயனத்திலே என்பார் புலவர். தமிழ்நாட்டவருக்கு வீரத்தை உணர்த்த ஆரிய இராமகாதையன்றி வேறு வழி இல்லையா என்று உண்மையில் கேட்கிறேன்.

ஹிட்லருக்கு கிடைத்த படைபோல...

இராமனின் போரிலே வீரமிருந்ததென்று கூறினும், அது மனிதருக்குள் நடந்த போரல்ல; திருமாலின் அவதாரமாம் இராமன், மாயா அஸ்திரங்களின் வலிமை கொண்டு போரிட்டு வென்றான். இது வீரமாகாது. ஆண்டவனின் பிரபாவம் என்று கூறலாம். ஆண்டவனின் வீரத்தை வியந்துரைக்க வேண்டுமா?

தன் மனைவி சீதையை இராவணன் எடுத்துச் சென்றான் என்று கேள்விப்பட்டதும், இராமன் செய்திருக்க வேண்டியது என்ன? எங்கே அந்த இராவணன் என்று முழக்கமிட்டு இலங்கை சென்றிருக்க வேண்டும். இராவணனை எதிர்த்தொழித்திருத்தல் வேண்டும். அதுவே வீரம். யுக்தியுடன் காரியம் செய்ய வேண்டுமென்று கருதினால், உடனே அயோத்திக்கு இலக்குவனை அனுப்பித் தன் நாட்டுப் படைகளை இலங்கை மீது படையெடுக்க அழைத்திருக்க வேண்டும். இராமனின் பாதுகைக்கு பட்டாபிஷேகம் செய்வித்த பரதன் படை அனுப்பாதிரான். அப்படி அயோத்தியினின்றும் கிளம்பி இலங்கை சென்று போரிட்டால் ஆரிய வீரம் விளங்கியிருக்கும். அதையும் செய்யவில்லை ஆரிய இராமன்.

ஹிட்லருக்கு ருமேனியப் படை கிடைத்ததுபோல வானரப் படையைப் பெற்று, அதை இலங்காதிபதியின் மீது ஏவினான். இது இராஜதந்திரம் என்று கூறுங்கள்; ஒப்புக்கொள்கிறேன். ஆரிய தர்மம் என்றுரையுங்கள்; பொருத்தமாக இருக்கும். ஆனால், இதனை வீரமென்று கூறாதீர்கள். எவரும் ஒப்பார்.

சேரன், செங்குட்டுவன், கங்கைக்கரை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதை வீரமென்று கூறுங்கள். பொருத்தமாக இருக்கும். தமிழ் இனப் புகழினை மாநிலம் அறியும். அலைகடலை அடக்கும் மரக்கலம் செலுத்தி இராஜேந்திரன் பர்மாவை வென்றதைக் கூறுங்கள்; அது வீரச்செயல். கலிங்கத்தின் மீது படையெடுத்த மன்னன் கலிங்க நாடு மலையரண் உடைத்து, வேழப் படையுடன் செல்க என்று தளபதிக்குப் பணித்ததுடன், தரைப்படை செல்லுகையில் கப்பற் படையும் செல்லட்டும் என்று பணித்ததையும் காணின், வீரம், போர்த்திறம், போர்முறையின் மாண்பு யாவும் விளங்கும்.

கலிங்கத்துப் பரணியிலே வீரமிருக்கின்றதென்று கூறுங்கள்; முறை. வேறு எந்தப் பகுதிகளாகக் கம்ப இராமாயணம் இருந்தே தீரவேண்டும் என்று உரைக்கப் போகிறீர்கள் என்று கேட்கிறேன்.

கலை, கலை என்று பேசும் அன்பர்கள், இந்நாட்டு மக்களின் நிலை உணர்ந்தனரா? என்று கேட்கின்றேன். 100_க்கு 93 பேர் இங்குப் பாமரர். ஓய்வும், ஆர்வமும், தெரிந்து கொள்ளக்கூடிய தன்மையும் கொண்ட என் போன்றவர்கள் யாப்பு, அணி என்பவைகள் பற்றிக் கூறிடுகையில், இவர்களால் இதைத் தெரிந்துகொள்ள முடியவில்லையே என்று அயர்வர்.

ஓய்வின்றி, பக்குவமின்றி, எழுத்தறிவேயின்றி அவர்கள் கம்ப இராமாயணத்திலே உள்ள அணி-யழகு, உவமை உயர்வு கூறியா தெளிய வைப்பர்? பொதுமக்கள், இராமாயணம் என்றதும் மண்ணுக்கும் விண்ணுக்குமாக ஓங்கி வளர்ந்த அனுமன் அடி விழவும், ஆரியரை வணங்கவும் அறிவரேயன்றி, யாப்பும் அணியும் தெரிந்து இராமகாதை கற்பனை; அதிலே உள்ள கவித்திறனைக் கண்டு களிப்பதே முறைமை என்றா எண்ணுகின்றனர்? நமது பண்டிதர்களாவது இன்றுவரை பொதுமக்களிடம் சென்று இத்தகைய புராண இதிகாசங்கள் புனைந்துரை; கவிகளின் கற்பனை; மக்களுக்குச் சில நீதிகளை புகுத்தும் நூற்கள்; ஒழுக்கத்துக்காகக் கருத்துக் கூறும் ஏடுகள்; கோயில் கட்டிக் கும்பிட அல்ல என்று கூறினது உண்டா? கூறுவாரா?

சன் யாட் சென் காலத்திலே சீன மக்கள் பலப்பல தெய்வ வணக்கம் செய்து கிடந்தனர்.

யானை மீது இராமாயண ஓலைச்சுவடி

(இல்லை, இல்லை. நாங்கள் வணங்குவதற்காக இதைச் செய்யவில்லை. இலக்கியத்திற்காகத்தான் இதைச் செய்கிறோம் என்று இன்றைக்கு யாராவது சொல்கிறார்களா? இன்றைக்கு இராமாயண ஓலைச் சுவடியைக் கொண்டு வந்து யானை மீது ஏற்றி ஊர்வலம் விடுகிறார்கள். அந்த இராமனால்தான் நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கான பேரை கொல்லக் கூடிய அளவிற்கு பிரச்சினை ஆனது. ஏன் அந்தக் காலத்திலேயே தந்தை பெரியார் ராமன் மீது கைவைத்தார்?

பெரியார் அப்படித் தொடங்கினதனால்தான் தென்னாட்டில் கலவரம் வரவில்லை. வடநாட்டில் அந்தக் கலவரம் இருந்து கொண்டிருக்கிறது. இன்னமும் ராமன் அரசியலிலே முன்னாலே வருவதா? பின்னாலே வருவதா? என்று எண்ணுகிறார்கள்.

இராமனைப் பிடித்தவர்கள் எல்லாம் இப்பொழுது, வேறு எதைப் பிடிப்பது என்று அலைந்து கொண்டிருக்கின்ற கட்டத்திற்குப் போயிருக்கிறார்கள். அண்ணா அவர்கள் இங்கே ஒவ்வொரு வாதத்தையும் தெளிவாகச் சொல்லுகின்றார்.) சன்யாட்சென், அந்நாட்டுப் படித்தோரை அழைத்து, கடவுள்களின் பட்டியலைக் கேட்டாராம், மக்களுக்கு ஒரு முழு முதற்கடவுள் இருந்தால் போதுமல்லவா என்று, ஆமென்றனர் அறிஞர். அப்படியானால், இந்தப் பெயர் வரிசையிலே, ஒன்றை வைத்துக்கொண்டு மற்றவற்றைச் சிவப்புக் கோடிட்டு விடுக என்று செப்பினாராம். பிறகு, ஒன்றே தேவன் என்றனர் மக்கள்.

வேப்பஞ்சேலை கட்டும் வழக்கம்

இங்கே நமது சைவசமயத் தலைவர்கள், அய்ம்பதாண்டுகளுக்கு மேலாகவே சிறுதெய்வ வணக்கம். கூடாது; எமது சிவமொன்றே முழுமுதற் கடவுள் என்று கூறினர். பலன் என்ன? இன்றுவரை பெரியபாளையத்தம்மனுக்கு வேப்பஞ்சேலை கட்டும் வழக்கத்தைக்கூட ஒழித்த பாடில்லை.

எனவேதான், மக்களின் பொதுஅறிவு வளர்ந்த நாடுகளில், தெளிவு கொண்ட மக்கள் உள்ள தேசங்களில் இத்தகைய கற்பனைக் கதைகள் இருப்பினும் கவியழகை மட்டும் கண்டு, கருத்துரையிலே உள்ள ஆபாசத்தை, மூடத்தனத்தை நீக்குகின்றனர். கிரேக்க ரோமானியர்கள், இதிகாச காலக் கடவுள்களாகக் கொண்டிருந்த வீனஸ், அப்பல்லோ முதலியவற்றை, யேசுவிடம் விசுவாசம் வைத்ததும் விட்டொழித்தனர். பிரிட்டனிலே கிறித்துவ மார்க்கம் பரவியதும், பழங்காலத்திலே வணங்கியதார், ஓடின் எனும் தெய்வங்களை மறந்தனர். இங்கோ அன்று தொட்டு இன்றுவரை ஆரியக் கற்பனையான சிறு தெய்வங்களிலே ஒன்றை நீக்கவும் மக்கள் தயாரில்லை.

இந்நிலை கண்டு புலவர்கள் என்ன செய்தனர் என்று கேட்கிறேன். ஆரியர் தம் இன வளத்துக்காக வேண்டிப் புனைந்து கொண்ட கற்பனைகளை எல்லாம் கடவுளெனக் கொண்டுள்ள மக்களின் மதியைத் திருத்த முன் வந்தனரா? என்று கேட்கிறேன்.

அண்ணா அவர்களின் நகைச்சுவை

இராவணன் சீதையை எடுத்துச் சென்றது காமச் செயல் என்றன்றோ இன்னும் கூறுகின்றனர். அக்காலப் போர் முறையிலே, ஆநிரை கவர்தல், மாதரை எடுத்தல், கோட்டை தாக்கல் என்பன முறைகள். ஆகையால் இராமனைப் போருக்கிழுக்க தன் தங்கையை மான-பங்கம் செய்த பின்னர் போருக்கிழுக்க,அந்தச் சமயத்திலே இராமனிடம் எஞ்சியிருந்த (அண்ணா அவர்களின் நையாண்டியை, நகைச்சுவை உணர்வைப் பாருங்கள். அண்ணா அவர்களின் நகைச்சுவை நாசுக்காக இருக்கும்; தரக்குறைவாக இருக்காது.) விலை மதிக்கக்கூடிய பொருள் சீதை மட்டுமேயாகையால், சீதையை எடுத்துச் சென்றான் என்ற உண்மையை உரைக்கலாகாதா அவர்கள்?

கலை என்ற பெயரால் இவ்வளவு இழிவுகளையும் ஓர் இனத்துக்கு உண்டாக்குவது ஆகுமா? கலையிலே சுயமரியாதைக்காரர்கள் கைவைத்தால் மக்களின் ஒழுக்கம், மதத்தின் மாண்பு கெட்டு விடும் என்று கூறுகின்றனர். சுயமரியாதைக்காரர்களை நாத்திகர்கள் என்று நிந்திக்கின்றனர். எங்களின் காலத்தையும் கிளர்ச்சியையும் கவனிக்க வேண்டாம். மெய்யன்பர்களும், பக்திமான்களும், தோடுடைய செவியனைப் பாடுவோரும் நிறைந்திருந்த தமிழகத்திலே, ஆலயங்களிலே உள்ள நிலைமை என்ன என்பதைப் பாருங்கள்.

--------------------தொடரும்.....""விடுதலை" 1-11-2009

0 comments: