Search This Blog

27.11.09

லிபரான் அறிக்கையும், பா.ஜ.க.-அ.தி.மு.கவும்



1992 டிசம்பர் 6 ஆம் தேதி, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளைத் தேர்வு செய்து பா.ஜ.க., சங் பரிவார் வன்முறைக் கும்பல், அயோத்தியில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை தரைமட்டமாக இடித்துத் தள்ளி உலக மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு மாபெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்து, பெரிய பெரிய பதவிகளில் கொஞ்சம்கூட கூச்சமின்றி, வெட்கமின்றி அங்கம் வகித்தனர் என்பது கடைந்தெடுத்த வெட்கக்கேடாகும்.

இந்திய அரசமைப்பு ஆட்சி முறையில் ஆணையங்களின் செயல்முறைகள், வழக்குகளின் ஆயுட்காலம் என்பதெல்லாம் குறிப்பிட்ட காலவரையறை என்கிற எல்லைகளைக் கடந்து செல்வது என்பது சர்வ சாதாரணம் ஆகும்.

17 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்துள்ள நீதிபதி லிபரான் தலைமையிலான ஆணைய அறிக்கையில், உலகமே எதிர்பார்க்கும் பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான குற்றவாளிகளின் பட்டியலில், முன்னாள் பிரதமர், முன்னாள் துணைப் பிரதமர், முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட 68 பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மதச் சார்பின்மை மீதும், நீதியின்மீதும், சமூகத்தின் நல்லிணக்கத்தின்மீதும் அக்கறை உள்ளவர்களின் எண்ணம் எதுவாக இருக்க முடியும்?

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது முறையாக விரைவாக வழக்கு நடத்தி, உரிய தீர்ப்பினைப் பெறவேண்டும் என்றுதானே கருதவேண்டும்?

ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது? பிரச்சினையின் அடிநாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, லிபரான் ஆணையத்தின் அறிக்கை எப்படி ஏடுகளில் கசிந்தது என்பதைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்காக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளது. குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஒரு கட்சி இத்தகைய ஆர்ப்பாட்டத்தை நடத்துவதன்மூலம் அவர்களின் உண்மை உருவங்களும் ஆர்ப்பாட்டமாகவே தெரியக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

இதில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவுக்கு என்ன வந்தது? அவரும் பா.ஜ.க.வின் குரலை எதிரொலிக்கும் வகையில் லிபரான் ஆணையத்தின் அறிக்கை வெளியில் கசிந்ததற்காக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பதவி விலகவேண்டும் என்று அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இதன் தன்மை என்ன?

மசூதி இடிக்கப்பட்டதற்குப்பின் சம்பந்தப்பட்ட குற்றப் பத்திரிகையில் உள்ளவர்கள், பல தேர்தல்களில் வெற்றி பெற்று இருக்கிறார்களாம்; பதவிகளிலும் இருக்கிறார்களாம் இருக்கட்டும்; பெரிய பதவிகளில் இருந்தார்கள் என்பதற்காக அவர்கள் எந்த குற்றங்களைச் செய்திருந்தாலும் கண்டு கொள்ளக்கூடாது என்பதுதான் செல்வி ஜெயலலிதாவின் கருத்தா?

பாபர் மசூதி இடிப்பு என்பதைச் சர்வசாதாரணமாக அவர் கருதுகிறாரா?

பாபர் மசூதி இடிப்புக்கு, கரசேவைக்கு அ.இ.-அ.தி.மு.க. ஆள்களை அனுப்பியது என்ற ஒரு குற்றச்சாற்று ஏற்கெனவே அவர்மீது பரவலாக இருக்கிறது; ராமன் கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்ட முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியவர் இந்த ஜெயலலிதா அம்மையார்தான்.

அதேபாணியில்தான் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையும் தொனிக்கிறது.

பிரச்சினையைத் திசை திருப்பத்தான் ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளதாம். பா.ஜ.க.வின் மறுபக்கமாக இந்த அம்மையார் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இனம் இனத்தோடு சேர்கிறது.

இதன்மூலம் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்ய ஒரு சதித் திட்டம் பின்னப்படுகிறது என்று கருதிட இடம் இருக்கிறது.

இந்த நிலையில், மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரப்படவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும்.

வழக்கம்போல திராவிடர் கழகம் தன் கடமையைச் செய்ய முன்வந்துவிட்டது. டிசம்பர் 3 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்சிகளைக் கடந்து ஆதரவு தரக் கோருகிறோம்.

-------------------"விடுதலை" 27-11-2009


0 comments: