Search This Blog

13.7.09

இந்துக்களின் கொடிய வழக்கம்

இம்மாதம் வெளியான மாடர்ன் ரிவ்யு எனும் மாதச் சஞ்சிகையில் கோரமான ஒரு பெண் கொலையைப் பற்றிக் கீழ்காணும் விவரங்கள் காணப்படுகின்றன. அவை வருமாறு:

பத்து வயதுள்ள லீலாவதியெனும் பெயருள்ள தனது மனைவியைக் கொன்றதாக ஜோகேந்திரநாத்கான் என்பவன் குற்றஞ்சாட்டப்பட்டு, நீதிபதி பேஜ் என்பவரால் மரண தண்டனை விதிக்கப்பட்டான்.

இப்பெண்ணின் பெற்றோர் கல்கத்தாவிலுள்ள சங்கரிதோலா சந்தில் மிட்டாய்க் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இப்பெண்ணுக்கும், ஜோகேந்திரநாத் கானுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் மணம் நடந்தது. பெண், பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தாள். மனைவியைத் தன்னூருக்கு அழைத்துச் செல்லக் கணவன் சென்ற பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி மாமனார் வீட்டுக்கு வந்தான். அடுத்த அய்ந்து நாட்களும் சுபதினமல்லவென்று கூறி சின்னாட் கழித்து மனைவியை அழைத்துச் செல்லும்படி பெண்ணின் பெற்றோர் விரும்பினார்கள். அதற்காக அவன் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்தான். முதல் இரண்டுநாள் இரவிலும் புருஷனும், மனைவியும் ஒரே அறையில் படுக்கை கொண்டனர். மூன்றாம் நாளாக, புருஷனுடன் ஒரே அறையில் உறங்கப் பெண் மறந்து தாயாருடன் படுக்கை கொண்டாள். பிப்ரவரி மாதம் 12ஆம் இரவு வெற்றிலை பாக்கு வேண்டுமென ஜோகேந்திரன் கேட்க, அவைகளைக் கொடுத்து வரும்படி தாயார் மகளை அனுப்பினாள். பெண் அறைக்குள் சென்றதும் கணவன் கதவைத் தாழிட்டுக் கொண்டான். சற்று நேரம் பொறுத்து பெண்ணின் அழுகுரலையும், வரிசையாக அடிகள் விழும் சத்தத்தையும் பெண்ணின் தாயாரும், பக்கத்திலுள்ளவர்களும் கேட்டனர். தாயார் அறைக்குள் ஓடிப் பார்க்க இரத்த வெள்ளத்தில் தன் மகள் தரை மேல் முகம் கவிழ்ந்து கிடப்பதைக் கண்ணுற்றனள். இரத்தம் தோய்ந்த கல் குழவியொன்று பக்கத்தில் கிடந்தது. இக்குழுவியால் மண்டை உடைக்கப்பட்டு மூளை தெறித்துக் கிடந்தது.

ஆ! கொடுமை! கொடுமை!! இக்கோரமான கொலையை பாதகச் செயலைக் கேள்வியுள்ள இந்திய மக்கள் அனைவரும் மனம் பதைபதைப்பர்; உள்ளமுருகுவர்; உடலம் நைவர்; கண்ணீரை ஆறாய்ப் பெருக்குவர்; கரைகாணாத் துன்பக் கடலில் வீழ்வர்; இளஞ்செல்வச் சிறுமியர்களாக இருப்பின், நெருப்பில் வீழ்ந்த புழுப்போல் துடிதுடிப்பர். பெண்மக்கள் எனும் செல்வம் படைத்த தாயாரும், தந்தையரும் மனங்கலங்கி, மாழாந்து, வெய்துயிர்த்து நிற்பர்; விம்மி, விம்மி அழுவர். இக்கொலைக் கொடியோனுக்கு விதித்த தண்டனை போதாது, போதாது என ஒவ்வொருவரின் உள்ளமும் அறை கூவா நிற்கும். இக்கொலை பாதகனைச் சித்திரவதை செய்தலே சிறந்த தண்டனையென ஒவ்வொருவரும் எண்ணுவர்.

இக்கொடிய நிகழ்ச்சி எமதுள்ளத்தில் தோற்றுவித்த எண்ணங்களை யெல்லாம் எடுத்துரைக்கப்புகின் இவ்வேடு முழுவதும் போதாதென்றே கூறுவோம். இக்கொடுஞ்செயலை எண்ணி எண்ணி அழுவதாற் பயனென்னை? உள்ளமுருகுவதாற் பயனென்னை? கொலைப் பாதகன் ஜோகேந்திர-நாத் கானைக் கடிந்த நோவதாற் பயனென்னை? இத்தகைய கொடிய செயல்கள் நிகழ்வதற்குக் காரணமென்னவென ஆராய்ந்து இனியும் அவ்வாறு நிகழாவண்ணம் ஏற்ற முறைகளைக் கையாள முற்படுவதே அறிவுடைமையாகும். கடந்த செயலைக் கருதி மனம் புழுங்குவதால் ஒரு பயனும் விளையாது. இத்தகைய செயல்களின் விளைவுக்குக் காரணமாக உள்ள இழிதகைமையை, கொடிய வழக்கங்களை ஒழிக்க வழி கோலுதல் அறிவாளிகளின் கடன்; தாய், தந்தையரின் கடன்; சமூகத்தினரின் கடனாம்.

இக்கோரமான கொலைச் செயல்களுக்குக் காரணமாக இருப்பது பால் மணம் மாறாச் சிறுமியர்களை காமவிகாரத்தாற் கட்டுண்டு விலங்குகளைப் போல் திமிர் கொண்டலையும் இளம் வாலிபர்களுக்கு வதுவை செய்து அவர் பால் ஒப்புவிக்கும் கொடிய குற்றமான வழக்கமென்று நாம் திண்ணமாகக் கூறுவோம். இத்தகைய கொடிய, அக்கிரமமான வழக்கம் இந்து சமயத்தின் பேரால் நடைபெறுவது நமக்குப் பேரவமானம்; நமது சமயத்தின் நற்பெயரை நாசமாக்கி, நாமும் அழிவென்னும் பெருங்குழியில் வீழ்ந்து இறப்போம். உண்டதும், உறங்குவதும், பூண்டதும், மணவினை செய்வதும் மக்கள் பெறுதலும் சமயக் கோட்பாடுகள் எனக் கூறின் இதனினும் அறியாமை வேறுளதோ? ஆண்டவனிடத்து மக்களைக் கொண்டு உய்விக்கும் அறிவு வழியே, ஆன்ம நெறியே சமயமல்லாது, சமூகக் கட்டுப்பாடு குலையாமல், சமூகம் என்றும் அழிவுறாமல் நின்று நிலவுவதற்கான முறைகளில் சேர்க்கப்படுவனவாகிய இவையெல்லாம் சமயநெறி எனக் கூறுதல் மடமையேயாகும். நமது நாட்டின் கண் தோன்றிய அறநூல்கள் எல்லாம் ஒரு சிறிது ஆண்டவனைப் பற்றியும், அவனை அடையும் நெறியைப் பற்றியும் கூறிப் பெரும்பாலும் சமூக வாழ்க்கையை மக்கள் இன்ன விதமாக நடத்துதல் வேண்டுமெனக் கூற நிற்பன. அவ்வற நூல்களில் காணும் சமூக வாழ்க்கையைப் பற்றிய விதிகள் காலம், இடம், மக்களின் மனப்பான்மை இவற்றிற்கேற்ப மாறி மாறி இருக்கும். அவ்விதிகள் இவ்விந்திய நாட்டிலேயே ஒரே பெற்றத் தாய் இருக்கக் காண்கின்றோமல்லோம். அவ்விதிகளை காலத்திற்குத் தக்கவாறும், இடத்திற்கேற்றவாறும் மாற்றியமைத்துக் கொள்ளுதல் கூடாதென்ற நியதி இல்லை. பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என ஆன்றோர் கூறியுள்ளார். மக்கள் செய்யும் மணவினை சமூக வாழ்க்கையைச் சார்ந்தே நடைபெறுவதாகும். குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்குத் தகுதியற்ற பருவத்தில் உள்ள சிறுமியர்களை மணம் என்னும் கயிற்றினால் பிணித்து, குடும்பம் என்னும் குழியில் வீழ்த்தி கணவன் என்னும் விலங்கனைய காவலாளி கையில் ஒப்புவிக்கும்படி எந்த அற நூலும், எந்த தர்ம சாஸ்திரமும் போதிக்கவில்லை என்பதை மக்கள் உணர்தல் வேண்டும்.

தொடரும்... ------------------ "குடிஅரசு" தலையங்கம் 7.6.1925

7 comments:

aik said...

ஒருவயதில் பெண்ணுக்கு திருமணம் செய்யலாம் என்று சொல்வது இந்துக்களின் பழக்கம்ல்ல.
இன்று இந்துக்களில் இந்த பழக்கமே இல்லை.

அப்படியிருக்கும்போது இந்த பழக்கத்தை இந்துப்பழக்கம் என்று கூறுவது முறையாகுமா?

ஆனால் முஸ்லீம்களிடையே இந்த பழக்கம் இருக்கிறது.


ஒரு வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்யலாமா


இந்த வீடியோவில் பேசுபவர் சவுதி அரேபிய இமாம். இது கொடுமையான வழக்கம் என்று பேசலாமே?

இந்துக்கள் இது தீயவழக்கம் என்று சொல்லி பிரச்சாரம் செய்ததும் அது சம்பந்தமான சட்டதிருத்தங்களை செய்து வழக்கத்தை மாற்றிவிட்டார்கள். ஏனெனில் இது இந்து சமுதாயத்தில் இருந்த தீய வழக்கம். இந்து மதத்தில் இருந்த தீய கொள்கை அல்ல.

ஆனால் முஸ்லீம்கள் செய்வார்களா? நபியே ஆறுவயது குழந்தையை கல்யாணம் செய்து முன்மாதிரியாக இருந்திருக்கிறார். இது எங்கள் மத நம்பிக்கை என்று சொல்கிறார்கள். இது இஸ்லாம் மதத்தில் உள்ள தீய கொள்கை. முஸ்லீம் சமுதாயங்களில் இருக்கும் தீய வழக்கம் அல்ல. புரிகிறதா?

இன்று எந்த தீய வழக்கம் இருக்கிறதோ, அது எங்கு இருக்கிறதோ, அதனை எதிர்த்து போராடுங்கள். உங்கள் வீரத்தை செத்த பாம்பை அடிப்பதில், இல்லாத வழக்கத்தை அடிப்பதில் காட்டாதீர்கள்

aik said...


ஒரு வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்யலாமா


இது லிங்க்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

தமிழ் ஓவியா said...

இந்துக்களில் இந்த வழக்கம் உண்டு என்கிறார் ராமானுஜ தாத்தாச்சாரியார் இந்து மதம்எங்கே போகிறது? என்ற நூலில்

aik said...

தமிழ் ஓவியா,

நீங்கள் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் சீடரா? அவர் என்ன சொன்னாலும் நம்புவீர்களா?

ஆனால் இங்கே அவர் சொன்னது தப்பா என்ன? சரிதான். அது இந்துக்களிடம் பழக்கமாக இருந்தது. இந்துமதத்தில் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை என்றுதானே நானும் சொன்னேன்?

அது கிடக்கட்டும்.

இங்கே இஸ்லாமை பற்றி சொல்லியிருப்பதற்கு தமிழினத்தலைவர், பகுத்தறிவு செம்மல் வீரமணியின் கருத்தென்ன?

தமிழ் ஓவியா said...

அனைத்து மதங்களும் ஒழிய வேண்டும் என்பதுதான் பெரியார் தொண்டர்களின் நிலை.

மூடநம்பிக்கைகள் இந்து மதத்தில் மட்டுமல்ல எந்த மதத்தில் இருந்தாலும் ஒழிக்கப் படவேண்டியவைகளே.

//நீங்கள் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் சீடரா?//

இல்லைங்க

//அவர் என்ன சொன்னாலும் நம்புவீர்களா?/

யார் என்ன சொன்னாலும் ஆராய்ந்து பார்த்து உண்மையக இருக்கும் பட்சத்தில் யார் சொன்னாலும் நம்புவேன்.

நன்றி

aik said...

//அனைத்து மதங்களும் ஒழிய வேண்டும் என்பதுதான் பெரியார் தொண்டர்களின் நிலை.
//

அப்ப இஸ்லாம் ஒழிய வேண்டும் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட வேண்டும் என்று சொல்கிறீர்களா?

//இங்கே இஸ்லாமை பற்றி சொல்லியிருப்பதற்கு தமிழினத்தலைவர், பகுத்தறிவு செம்மல் வீரமணியின் கருத்தென்ன?
//

இதனை அவரிடம் சற்று கேட்டுச் சொல்கிறீர்களா?

என்ன சொல்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

குழந்தைகள் திருமணம் காரணமாக முஸ்லீம்கள் தங்கள் திருமணத்தை அரசாங்க பதிவேடுகளில் பதிய முடியாது என்று தமிழ்நாட்டில் போர்கொடி தூக்கியிருக்கிறார்கள்

இதில் திராவிட கழகத்தின் நிலைப்பாடு என்ன?