Search This Blog

24.7.09

பெரியார் சிலைக்குக் கீழே கடவுள் மறுப்பு வாசகம் ஏன்?




பெண்கள் ரவிக்கை அணிய, மனிதன் காலில் செருப்பு போட, தெருவில் நடந்து போக உரிமை பெற்றுத் தந்தவர் அறிவு ஆசான் செருநல்லூரில்
பெரியார் புகழ் போற்றி தமிழர் தலைவர் பேச்சு


பெண்கள் ரவிக்கை போட, மனிதன் தெருவில் நடக்க, மனிதன் காலில் செருப்பு போட உரிமை பெற்றுத் தந்தவர் மாபெருந் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் அல்லவா? என்று கூறி விளக்கமளித்தார் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள். நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் செருநல்லூரில் 5.7.2009 அன்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை வருமாறு:

இதைத்தான் தந்தை பெரியார் சொன்னார். கடவுளை மற! மனிதனை நினை! என்று. பெரியார் பிறந்திருக்காவிட்டால் ரவிக்கை போட முடியுமா?

மனிதர்களில் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, இவனைத் தொடக்கூடாது; அவன் வீட்டில் சாப்பிடக் கூடாது, அவன் வீட்டிற்கு நெருங்கக் கூடாது என்று இப்படி எல்லாம் நம்முடைய சமுதாயத்தை இழிவுபடுத்தி வைத்தார்கள்.

இந்த நாட்டிலே எத்தனையோ ஜீவாத்மாக்கள், பரமாத்மாக்கள், மகாத்மாக்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள்.

ஆனால், தந்தை பெரியார் பிறந்த பிற்பாடு தான் நான் ஏன் கீழ் ஜாதி, என்னுடைய சகோதரன் எதற்காக சூத்திரன்? என்னோடு பிறந்தவன் எதற்காக பஞ்சமன்? பறையன்? பள்ளன்? சக்கிலியன்? அவன் மனிதனாவது எப்பொழுது? இந்தக் கேள்வியைக் கேட்டவர்தான் இதோ சிலையாக நிற்கிறாரே நம்முடைய அறிவுஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அவர் மட்டும் பிறந்திருக்காவிட்டால் நாம் முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்ட முடியாது. நம்முடைய தாய்மார்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த தாய்மார்கள் மார்பை மறைத்து ரவிக்கை போட முடியாது.

இப்பொழுது வயதான தாய்மார்களாக இருந்தாலும், கிழவியாக இருந்தாலும் ரவிக்கை போடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் பழைய தாய்மார்களை எல்லாம் பார்த்தீர்களேயானால் ரவிக்கை போட மாட்டார்கள். ஏன், வயதுள்ள பெண்களே ரவிக்கை போடமாட்டார்கள். காரணம் என்ன வென்றால், ரவிக்கை அணிவது மேல் ஜாதி பார்ப்பனர்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு என்று நூறு வருடங்களுக்கு முன்னாலே அந்த நிலை இருந்தது.


வெள்ளைக்காரர்கள் காலத்திலே பெண்கள் ரவிக்கை அணிய வேண்டும் என்பதற்காகப் போராட்டம் நடத்தியவர் தந்தை பெரியார். எனவே தெருவிலே நடக்கப் போராட்டம்; நாய் போகலாம், பன்றி போகலாம், கழுதை போகலாம். ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் கீழ்ஜாதி என்று சொன்ன காரணத்தினாலே நடக்கக் கூடாது. உயிரோடு இருக்கும்பொழுது கூட அல்ல, பிணமாக இருக்கும் பொழுது கூட மேல்ஜாதிக்காரன் குடியிருக்கின்ற தெருவிலே கீழ் ஜாதிக்காரன் பிணம் போக முடியாது.

பிணத்தைப் புதைக்க வழியில்லை

செத்துப்போன பிற்பாடு பிணத்தை எங்கே புதைப்பது என்றால் அவனுடைய ஜாதி சுடுகாட்டில் தான் புதைக்க வேண்டும். தாழ்ந்த ஜாதிக்காரனுடைய பிணத்தை உயர்ந்த ஜாதிக்காரன் சுடுகாட்டில் புதைக்க முடியாது. இன்றைக்கு இளைஞர்களுக்கு இதெல்லாம் தெரியாது. காரணம் என்ன? தந்தை பெரியாருடைய இயக்கம். கடந்த 85 ஆண்டுகாலமாக செய்த முயற்சி இருக்கிறது பாருங்கள் அது தான் மாபெரும் பணி.

சாதாரண கல்லைக் கொத்தி நமது சிற்பிகள் உருவாக்கி எல்லா கடவுள்களையும் உண்டாக்கினார்கள். கிருஷ்ணனா, நான் அடித்துக்கொடுக்கின்றேன். கண்ணனா, நான் அடித்துக்கொடுக்கின்றேன். ராமனா, இதைச் செய்கிறேன். எல்லா உருவத்தையும் செய்து கொடுத்த பிற்பாடு அந்தக் கல் சிலையைக் கொண்டு வந்து வைத்து ராமன் என்று சொல்லுகின்றான். கிருஷ்ணன் என்று சொல்லுகின்றான். ராமன் கோயில் என்று சொல்லுகின்றான்.

அவனுக்கும் உழைப்புக்கும் என்ன சம்பந்தம்? அவனுக்கும் இடத்திற்கும் என்ன சம்பந்தம்? அவனுக்கும் சிலை அடித்தவனுக்கும் என்ன சம்பந்தம்?

கலைஞரின் அரிய முயற்சியினாலே

அவன் சிலை மீது தண்ணீரைத் தெளித்தான். அவன் சிலைக்குப் பக்கத்தில் நின்று பக்தர்கள் போடுகின்ற காணிக்கையை எடுத்துக்கொள்கின்றான்.

தந்தை பெரியார்தான் ஜாதிப்பாம்பை அடித்தடித்துத் துரத்தினார். கடைசியிலே அது கருவறைக்குள்ளே பத்திரமாக நுழைந்து விட்டது என்றவுடனே அதையும் அடிக்க வேண்டும் என்று விரும்பினார்.

நல்ல வாய்ப்பாக அய்ந்தாவது முறையாக முதல்வராகிப் பொற்கால ஆட்சியை நமக்குத் தந்து கொண்டிருக்கின்ற கலைஞருடைய அரிய முயற்சியினாலே இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகப் போகிறார்கள். இன்னும் ஆறு மாதத்தில் பார்க்கப் போகிறீர்கள்.

பெரிய பெரிய கோவிலுக்குப் போனீர்களென்றால் அங்கு கறுப்பாக ஒரு உருவம் தெரியும். இதற்கு முன்னாலே கோயிலுக்குள் இருந்த உருவம் வெள்ளையாக இருந்தது. மஞ்சள் நிறமாக இருந்தது. இனிமேல் வரக்கூடிய உருவங்கள் எல்லாம் கருப்பாக இருக்கும்.

பார்ப்பான் வெளியே நின்று கொண்டு அவன் கையை மடக்கிக்கொண்டு. விபூதி கேட்பான். வாங்க விருப்பம் இருந்தால் வாங்கு; இல்லாவிட்டால் போ என்று சொல்ல வேண்டும்.

எந்த சாமியும் கோபித்துக்கொண்டு போகாது. ஏனென்றால் அது இருந்தால் அல்லவா கோபித்துக்கொண்டு போவதற்கு! வெளிநாட்டிற்கே பாஸ்போர்ட் வாங்காமல், விசா வாங்காமல் கொண்டு போகின்றான். இவன் ஏன் என்று கேட்பதில்லை.

நமது காவல்துறைதான் சாமியைக் கண்டுபிடித்துக் கொண்டு வருகின்றார்கள். இன்னும் கேட்டால் மோப்ப நாய்க்கு இருக்கின்ற சக்திகூட இந்த சாமிக்கு இருப்பதில்லையே! நாய்தான் அந்தச் சிலை எங்கே போனது என்று கண்டு பிடித்துக்கொண்டு வருகின்றது.

மின்சாரத்தைக் கண்டு பிடித்தது கடவுளா?

ஆகவே, தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவுச் சிந்தனையைச் சொல்லி மனிதனுக்கு இருக்கின்ற ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார்.

இதோ பாருங்கள். நான் இங்கே பேசுகிறேன். அங்கே தூரத்தில் கேட்கிறது. இதோ மின்சார விளக்கு எரிகிறது. இதை எல்லாம் யார் கண்டுபிடித்தது?

முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒரு பயலுக்காவது மின்சாரம் என்றால் என்னவென்று தெரியுமா? இல்லை வீடியோ கேமரா படமெல்லாம் எடுக்கிறார்களே இதெல்லாம் யாருக்காவது தெரியுமா? இதெல்லாம் மனிதனுடைய அறிவின் வளர்ச்சி தானே. அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார். மனிதர்கள் நல்ல கல்வி அறிவைப் பெற வேண்டும். அதைவிட முக்கியம். படிப்பறிவைவிட பகுத்தறிவைப் பெற வேண்டியது முக்கியம் என்று சொன்னார்.

ஆண், பெண் இருவரும் சமம் என்று சொன்னார். ஆண் எஜமானன் அல்ல; பெண் அடிமை அல்ல. ரொம்பத் தெளிவாகச் சொன்னார். எப்படி பிறவியினால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது இருக்கக்கூடாதோ, அதே போல மேலே ஆண் உயர்ந்தவர், பெண் தாழ்ந்தவர் என்றிருக்கக் கூடாது.

செருப்புப் போட உரிமை பெற்றுத் தந்தவர்

தந்தை பெரியார் தான் சொன்னார் அது தான் சுயமரியாதை இயக்கம். அதனால் தான் நாம் இன்றைக்கு எல்லோரும் சமமாக உட்கார்ந்திருக்கிறோம். இன்றைக்கு நமது தாய்மார்கள் நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்றீர்கள்.

ஆண்கள் எல்லாம் நின்று கொண்டிருக்கின்றார்கள். ஒரு நூறு வருடத்திற்கு முன்னாலே பெண்கள் உட்கார்ந்திருந்தீர்களேயானால் அவர்களுடைய நிலை என்ன ஆகும்? இந்தப் பொம்பளைங்களுக்கு என்ன தைரியமய்யா என்று கேட்டிருப்பார்கள். நம்முடைய மக்களுக்குச் செருப்புப் போட்டு நடக்க உரிமை இல்லை. அந்த உரிமையை வாங்கிக் கொடுத்தவர்தான் இங்கு சிலையாக நிற்கின்றாரே நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்!

ஆண்கள் எல்லாம் பயப்படுகிறார்கள். பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்துவிட்டால் நாற்காலி அவர்களுக்கே போய்விடுமோ நமக்கு வராது என்று நினைக்கின்றார்கள்.

அய்யா சிலைக்குக் கீழே கடவுள் வாசகம் ஏன்?

அந்த அளவிற்கு பெண்களுக்குக் கல்வி பெண்களுக்கு உத்தியோகம் பெண்களுக்கு வாய்ப்பு. இவையெல்லாமே இந்த இயக்கத்தினாலே கிடைத்தது. தந்தை பெரியார் அவர்களுடைய அருந்தொண்டினால். ஆகவே, அய்யா அவர்களுக்குச் சிலை வைப்பது என்பது ஏதோ மேலே இருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்று நாங்கள் ஒன்றும் நம்புவதற்காக இதைச் சொல்லவில்லை.

அல்லது நாளைக் காலை சுற்றி வந்து நின்றால் குழந்தை இல்லாதவர்களுக்கெல்லாம் குழந்தை பொத்து, பொத்தென்று விழுந்துவிடும் என்பதல்ல. அல்லது மனதில் நீங்கள் வேண்டிக்கொண்டதெல்லாம் நிறைவேறும் என்று நாங்கள் இங்கு வந்து சொல்ல வரவில்லை.

அதனால் தான் பெரியார் சொன்னார் என்னையும் இன்னும் ஒரு நூறு வருடம் கழித்து சாமியாராக்கினாலும் ஆக்கிவிடுவார்கள். என்னை ஒரு கடவுளாகவும் ஆக்கிவிடுவான்.

அதனால்தான் என் சிலைக்குக் கீழே கடவுள் இல்லை என்று போடு; கடவுள்இல்லவே இல்லை என்று சொன்னார். ஆகவே தான் யாரையும் புண்படுத்துவதற்கு நாங்கள்இதைச் சொல்லவில்லை.

எல்லாருக்கும் கடவுள் இல்லை என்று தெரிகிறது. இருந்தாலும் சில பேருக்குப் பழக்கம் _ தண்ணீர் போடுவது எப்படிப் பழக்கமோ, பொடி போடுவது எப்படிப் பழக்கமோ, சிகரெட் குடிப்பது எப்படிப் பழக்கமோ அது மாதிரி.

சிகரெட் குடிப்பவனைக் கேளுங்கள், என்னதான் ஒரு இழுப்பு இழுத்தால்தான் திருப்தியாக இருக்கிறதுங்க என்று சொல்லுகின்றார்கள். தண்ணீர் போடுகிறவனைக் கேளுங்கள். தண்ணீர் போட்டால்தான் ஒரு கிக்கு ஏறுகிறது என்று சொல்கின்றான். அது மாதிரி பக்தி, பக்தி என்று சொல்கிறான், ஒரு பஸ்கி போட்டால் தான் சரியாக இருக்கும் என்று கருதுகின்றான் _ எவனோ ஒருத்தன் பார்த்துக்கொண்டிருக்கின்ற மாதிரி.


------------------தொடரும் ..."விடுதலை" 24-7-2009

1 comments:

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/