Search This Blog

22.1.09

அமெரிக்காவில் கிறித்துவர்களுக்கும் கடவுள், மத நம்பிக்கையற்றவர்களுக்கும் சமமதிப்பு -ஒபாமா அறிவிப்பு


ஒபாமாவுக்கு ஒரு வாழ்த்து!

அமெரிக்க அய்க்கிய நாட்டின் 44 ஆவது குடியரசுத் தலைவராக பராக் ஒபாமா பதவியேற்றுள்ளார் (20.1.2009).

இவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் உள்ள குறிப்பிடத்தக்க சிறப்பு - அந்நாட்டின் வரலாற்றிலேயே கறுப்பர் ஒருவர் முதல்முதலாக இந்தப் பதவிக்கு வந்ததுதான்.

நிறவெறிப் பேதம் கொடிகட்டிப் பறந்த ஒரு நாட்டில் அமெரிக்க வெள்ளையரை எதிர்த்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார் என்பது சாதாரணமானதல்ல.

இன்னும் மதவாதம் பேசிக்கொண்டு, இந்தியாவை ஹிந்து நாடாக ஆக்குவோம் என்றும் நீட்டி முழங்கும் தீய சக்தி என்னும் குப்பைகளுக்கு அமெரிக்க மக்களின் முடிவு ஒரு காட்டுத்தீயாகும்!

பதவியேற்பு விழாவில் முக்கியமாக அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ள ஒரு கருத்து அடிக்கோடிட்டுக் காட்டத்தகுந்ததாகும்.

கிறித்தவர், முசுலிம், யூதர்கள், ஹிந்துக்கள், கடவுள், மத நம்பிக்கையற்றவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய நாடே அமெரிக்கா, இதில் எவ்விதமான ஏற்றத் தாழ்வும் இல்லை என்று பிரகடனப்படுத்தியுள்ளதானது - உலக மக்களின் சிந்தனையில் புதிய பொறியைத் தட்டி எழுப்புவதாகும்.

கிறித்தவர்களை அதிகம் கொண்ட ஒரு நாட்டின் அதிபர் இவ்வாறு கூறியிருப்பது - புதிய சிந்தனை - புதிய பார்வை - புதிய நடப்புக்கான ஒரு ராஜபட்டையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒபாமா முசுலிம் என்றும், கருச்சிதைவுக்கு ஆதரவானவர் என்றெல்லாம்கூட விமர்சிக்கப்பட்டார் தேர்தலின் போது.

இதன் உட்பொருள் இதற்குள் மதவாதம் அடங்கியிருப்பதேயாகும். அவற்றையெல்லாம் புறங்கண்டு வெற்றிச் சிகரத்தை எட்டியிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் கடவுள், மத நம்பிக்கையற்றவர்களுக்கும் அமெரிக்காவில் சமமதிப்பு உண்டு என்று கூறியிருப்பது மிகப் பெரிய முற்போக்குச் சிந்தனை என்பதில் அய்யமில்லை.


நான் மனிதர்களை நேசிக்கிறேன்; நாம் யாரையும் வெறுக்க வேண்டியதில்லை. வெள்ளை நிறங் கொண்டவரை வெறுக்க வேண்டும் என்றால், என் தாத்தாவையும் நான் வெறுக்கவேண்டுமே! அதேபோல, கறுப்பு நிறங் கொண்டவர்களை நிராகரிக்கவேண்டும் என்றால், என் தந்தையைத் தாங்கிப் பிடித்து என் தாயை வெறுத்தாக வேண்டும். என் பெற்றோர்கள் யார்? கறுப்பு - வெள்ளை நிறக் காதலர்களுக்குப் பிறந்தவன் நான் கவித்துவமும், கருத்தாழமும் கொண்ட ஒரு மகன் உலகின் மிகப்பெரிய நாடு - செல்வாக்குள்ள நாடு - செல்வம் தழைக்கும் நாடு என்று கருதப்படுகிற ஒரு நாட்டின் அதிபதியாகி இருக்கிறார் என்பது கைதட்டி வரவேற்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

உலகின் தாதா என்ற அவப்பெயர் அமெரிக்காவின்மீது படிந்திருக்கிறது - அது கழுவப்படலாம். ஈராக் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, படைகள் திரும்பும் நிலையை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈழத் தமிழர்ப் பிரச்சினையிலும் அவர் முற்போக்கு எண்ணம் நல்ல வகையில் இருக்கும் - இருக்க வேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்பு!

அதிபர் ஒபாமா காலத்தில் உலகளாவிய உறவு மேம்படும் என்று 17 நாடுகளைச் சேர்ந்த 63 விழுக்காட்டினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

திறந்த மனத்தோடு உலகம் அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகளை உற்றுநோக்கிக் கொண்டு இருக்கிறது!

அவரைப் பொறுத்தவரை உள்நாட்டிலேயே பெரும் சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி என்கிற பொறியில் சிக்கிக்கொண்ட எலியாக அது தவித்துக் கொண்டு இருக்கிறது. அதனைச் சரிப்படுத்த வேண்டியது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல; அமெரிக்கப் பொருளாதாரப் பாதிப்பால் பெரும் தாக்குதலுக்கு - தாக்கத்திற்கு ஆளாக்கப்பட்ட பல நாடுகளின் பொருளாதாரத்தின் முதுகும் நிமிர்வதற்கு அது அவசியமாகிறது.

என்ன செய்யப் போகிறார் பாரக் ஒபாமா? உலகம் ஆவலோடு எதிர்நோக்கி நிற்கிறது. நல்லதையே நினைப்போமாக!

---------------- நன்றி: "விடுதலை" 22-1-2009

5 comments:

Unknown said...

ஒபாமா ஓரவஞ்சகம் இல்லாமல் நடந்து கொள்கிறார். இங்கிருக்கும் மதவெறியர்கள் சூலாயுதத்தால் தாக்குவோம் என்கிறார்கள்.
என்னயிருந்தாலும் பார்ப்பன வெறிக்கு ஈடாக எந்த வெறியும் இல்லை. வெளிநாட்டு அறிஞர்களிலிருந்து உள்நாட்டு அறிஞர்கள் வரை பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளமாட்டான், இரண்டகம் செய்வது அவன் கூடப் பிறந்தது என்று எழுதி வைத்தது சரிதான் என்பதை பார்ப்பனர்களின் செயல்கள் நிரூபிக்கிறது

குப்பன்.யாஹூ said...

ஒபாமா பதவி ஏற்பு விழாவிற்கு முன்னாள் சர்ச் சென்று (அதுவும் குறிப்பிட ஒரு சர்ச்சில் தான் அனைத்து அதிபர்களும் வேண்டுதல் செய்வார்களாம்- மூட நம்பிக்கை) அங்கு மூட நம்பிக்கையாம், இயேசு கிருஸ்துவை வேண்டுதல் செய்து பதவி ஏற்று உள்ளார்.

இது பற்றி கடவுளை மற என சொல்லும், விடுதலையோ, திராவிடர் கழஅகமோ ஏன் குறை கூறவில்லை.

ஒரு வேளை பெரியாருக்கு இந்து கடவுள் மட்டும் தான் எதிரியோ.

தன் பேச்சின் இறுதியில் ஒபாமா சொல்கிறார், கடவுள் அருளட்டும் எல்லாரையும், கடவுள் அருளட்டும் அமெரிக்காவை. (god bless you,god bless all, god bless america) இது குறித்து தங்கள் பதில் என்ன?

குப்பன்_யாஹூ

தமிழ் ஓவியா said...

//தன் பேச்சின் இறுதியில் ஒபாமா சொல்கிறார், கடவுள் அருளட்டும் எல்லாரையும், கடவுள் அருளட்டும் அமெரிக்காவை. (god bless you,god bless all, god bless america) இது குறித்து தங்கள் பதில் என்ன?//

கடவுள் நம்பிக்கையற்றவர்களையும், மற்ற மதத்தினரையும் சமமாக மதிக்கும் ஒபாமா அங்கே?

கடவுள் நம்பிக்கையற்றவர்களையும், மற்ற மதத்தினரையும் சூலாயுதத்தால் குத்துவோம் என்று சொல்லும் இந்துத்துவ வெறியர்கள் இங்கே?

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்பதுதான் பெரியரின் கொள்கை. இதில் அனைத்து மதக் கடவுளையும் சேர்த்துத்தான் இல்லை என்கிறார் பெரியார்.

குப்பன் தெளிவாக சிந்தித்தால் தெளிவு கிடைக்கும்.

தமிழ் ஓவியா said...

இரண்டாம் முறையாக பதவியேற்பு பிரமாணம் எடுத்துக் கொண்டாராமே ஒபாமா?
முதல்முறையே சரியாக எடுத்துக் கொள்ள உலகில் உள்ள அத்தனை மதக்கடவுள்களும் ஏன் உதவவில்லை?

நம்பி said...

ஒபாமாவின் வாழ்க்கையிலேயே மூன்று மதங்களில் தொடர்பு உள்ளது அதே போல் கடவுள் மறுப்பிலும் தொடர்பு உள்ளது.

அவர் தந்தை "பாரக் ஹூசைன் ஒபாமா" இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் "பகுத்தறிவுவாதி (நாத்திகர்).

ஒபாமாவின் தாய் "ஆன் டன் ஆம்" கிறிஸ்தவர். (ஆந்தரோ பாலிஜிஸ்ட்- முனைவர்-மனித இன நூலர்-ஆராய்ச்சியாளர்) அவரும் கடவுள் நம்பிக்கையில்லாதவர்.

அவருடைய தாயின் இரண்டாவது கணவரும், ஒபாமாவின் வளர்ப்புத் தந்தையுமான "லோலோ சொய்டோரோ" இந்தோனேஷியா நாட்டு இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இந்தோனேஷியாவில் பணிபுரிந்தவர்.


"சொய்டோரோவிற்கும்" ஒபாமாவின் தாய் "ஆன் டன் ஆம்க்கும்" பிறந்த மகளான "மாயா சொய்டோரோ" புத்த மதத்தைச் சார்ந்தவர். (ஒபாமாவின்....தங்கை. இவரும் தன் தாயின் நம்பிக்கைபற்றி கூறியிருக்கிறார்)

ஆகவே ஒபாமா மூன்று மதங்களில் தொடர்புடையவர். பகுத்தறிவு பின்புலமும் உடையவர்.