Search This Blog

27.1.09

இந்து மதக் கடவுள்களில் ஆபாசங்கள்தான் கொஞ்சமா? நஞ்சமா?



கலாச்சாரக் காவலர்களா இவர்கள்?

கருநாடக மாநிலம் மங்களூரில் அம்னீசியா லவுஞ்ச் ஹோம் என்ற உணவு விடுதியிருக்கிறது. அந்த விடுதியில் ஆபாச நடனம் நடைபெறுகிறது என்று கூறி சிறீ ராமசேனா என்னும் இந்து மதவெறி அமைப்பினைச் (புரொமோத் முடாலிக் என்பவரைத் தலைமையாகக் கொண்டது) சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் விடுதியின் உள்ளே புகுந்து பெண்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அங்கிருந்த பெண்களிடமும் தவறாக நடந்து கொண்டுமிருக்கின்றனர்.

இந்த வன்முறை நடவடிக்கையைப் பெண்கள் அமைப்புகளும், பல்வேறு பொது அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்திருக்கின்றன.

இந்த அமைப்பு பாரதீய ஜனதாவிலிருந்து பிரிந்து தனியாக நடை போட்டாலும் அடிப்படையில் இந்துத்துவா பேசும் வெறியர்கள்தாம்.

மகாராட்டிரத்தில் சிவசேனா என்ற அமைப்பு எப்படி செயல்படுகிறதோ அதேபோல மாநில வெறி உணர்வோடும், இந்துத்துவா வெறியோடும் அனல் கக்கும் மதவெறிக் கும்பல் அது.

ஆபாசமாக நடனம் ஆடினார்கள் என்று சமாதானம் சொல்லக்கூடும். அப்படியேயிருந்தாலும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சண்டியர்த்தனம் செய்ய இவர்களுக்கு உரிமை ஏது? காவல்துறையிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கலாமே!

தீபா மேத்தா வாட்டர் என்ற திரைப்படம் எடுத்தபோதுகூட உத்தரப்பிரதேசத்தில் இந்துத்துவா கும்பல் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டு படப்பிடிப்பு சம்பந்தமான அத்தனைக் கருவிகளையும் நாசப்படுத்தியதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

உ.பி.யிலிருந்து இடத்தை மாற்றி கொல்கத்தா செல்ல அவர்கள் திட்டமிட்டபோது, எங்கு சென்றாலும் கல்லால் அடிப்போம் என்று கத்திய காட்டுவிலங்காண்டிக் கூட்டம்தான் இது.

இதே கருநாடக மாநிலத்தில் பெங்களூருக்கு அருகே ஆனெகல் என்ற இடத்தில் சமுதாய நாடகக் குழுவினர் நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது பெங்களூரு மாநகராட்சி பா.ஜ.க. உறுப்பினர் எம். நாகராஜ் தலைமையில் காவிக் கும்பல் உள்ளே நுழைந்து கடுமையாகக் கலைஞர்களைத் தாக்கியதுண்டு (1.5.1999).

சென்னையில் பாரதியார் நினைவு இல்லத்தில் கவிதைத் திருவிழா நடத்தப்பட்டபோதும்கூட இந்து வெறியர்கள் தடிகளுடன் உள்ளே புகுந்து கவிஞர்களைத் தாக்கியதுடன் தந்தை பெரியார், லெனின், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் நூல்களைக் கிழித்து எறிந்தனரே! (1998 செப்டம்பர் 13).


பாசிஸ்டுகள் எப்பொழுதும் தங்களுக்கு எதிர்மறையான கலாச்சாரத்தை அனுமதிக்கவே மாட்டார்கள்.

ஆபாசத்தின்மீது அவர்களுக்கு உண்மையிலே வெறுப்பு இருக்குமானால், முதலில் இவர்கள் செல்லவேண்டிய இடம் உணவு விடுதிகள் அல்ல - நாடக அரங்குகளும் அல்ல. முதலில் இவர்கள் நுழையவேண்டிய இடம் இந்து மதக் கோயில்களுக்குள் - இந்து மதத்தின் தேர்களையெல்லாம் தீயிட்டுக் கொளுத்தவேண்டும், கோபுரங்களை இடித்துத் தரைமட்ட மாக்கவேண்டும்.

கற்பனைக்கெட்டாத காட்டுவிலங்காண்டிகள் கூடக் கண்களை மூடிக்கொள்ளும் அளவுக்கு ஆண் - பெண் உறவுகளைக் கேவலப்படுத்தும் சிற்பங்கள், சித்திரங்கள் அங்கெல்லாம் பச்சைப் பச்சையாகத் தீட்டப்பட்டு இருக்க வில்லையா?

கம்ப இராமாயணத்தில் சீதையின் உடலை கம்பன் வருணித்ததுபோல வேறு யாராவது வருணித்தது உண்டா?

இந்து மதக் கடவுள்களில் ஆபாசங்கள்தான் கொஞ்சமா? நஞ்சமா? பார்வதிக்கும், சிவனுக்கும் நடந்த கல்யாணத்தில்கூட புரோகிதனாகயிருந்த பிரம்மா, பார்வதியின் தொடையைப் பார்த்து இந்திரியம் கசிந்தான் என்பதைவிடக் கேவலம் வேறு எங்கு உண்டு?

தம் முதுகு நிறைய அழுக்குகளை மூட்டை மூட்டையாகச் சுமந்து கொண்டு, அடுத்தவன் நகத்தில் அழுக்கு என்று ஆர்ப்பாட்டம் போடுவது யாரை ஏமாற்ற?


வன்முறைமூலம் எதையும் சாதிக்கலாம் என்பது எப்பொழுதும் அவர்கள் கைவசம் வைத்திருக்கும் வழிமுறை யாகும். அதுவும் அவர்களின் ஆட்சி நடக்குமேயானால், காவல் துறையே இவர்களாக மாறி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித் தீர்த்துவிடுவார்கள்.

கருநாடக மாநிலக் காவல்துறை 17 பேர்களைக் கைது செய்துள்ளது உண்மைதான் என்றாலும், பொது மக்களின் கண்களில் மண்ணைத் தூவும் சித்து விளையாட்டாக அது இருக்கக் கூடாது. உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து உண்மையான முறையில் வழக்கை நடத்தவேண்டியது அவசியமாகும்.


-----------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம்- 27-1-2009

2 comments:

Unknown said...

//இந்து மதக் கடவுள்களில் ஆபாசங்கள்தான் கொஞ்சமா? நஞ்சமா? பார்வதிக்கும், சிவனுக்கும் நடந்த கல்யாணத்தில்கூட புரோகிதனாகயிருந்த பிரம்மா, பார்வதியின் தொடையைப் பார்த்து இந்திரியம் கசிந்தான் என்பதைவிடக் கேவலம் வேறு எங்கு உண்டு?//

ச்சீச்சீ இவ்வளவு ஆபாசமா?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்