Search This Blog

4.1.09

"தீபம் ஏற்றுவதால் விளையும் கேடுகள்."




தீபமும் - திகைப்பும்


வீடுகளில் எல்லாம் அகல் விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி வைப்பார்கள். இரவு முழுவதும் கூட விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றியபடி இருப்பர், செல்வந்தர்கள் வீடுகளிலே பணியாட்களும் பிறரும். அந்நாளிலே திருவண்ணாமலையிலே தீபம். மலையுச்சியிலே பெருங்கொப்பரை. அது நிறையக் கற்பூரத்துடன் கலந்த நெய் - மேலும் மேலும் நெய்யும் திரியும் கொட்டிய வண்ணம் பக்தர்களின் கூட்டம்! தமிழகத்தில் உள்ள பெருவாரியான கோவில்களிலேயும் அந்தந்தக் கடவுளின் பொருள் நிலைக்கேற்ற வண்ணம் கார்த்திகை கொண்டாடப்பட்டே வருகின்றது. தீபத்திற்காக ஆயிரக்கணக்கான மணங்கு நெய்யும், நூற்றுக்கணக்கான (கேஸ்) பெட்டி கற்பூரமும் கட்டுக்கணக்கிலே திரி நூலும் எரிக்கப்படுகின்றன. வீடுகளிலே ஏற்றப்படும் கோடிக்கணக்கான கைவிளக்குகளால் ஆயிரக்கணக்கான குடங்கள் அளவுள்ள எண்ணெய் வீணாக எரிகின்றது. தீப தரிசனத்திற்காகச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களால், அவர்களது போக்குவரத்துக்காக ரயிலுக்குச் செலவிடும் தொகையும், வெளியூர்களில் தங்குவதால், ஏற்படும் செலவுத் தொகையும் ஏராளம். அவர்களுக்கு ஏற்படும் நேரக் கழிவும் உழைப்பு நீக்கத்தால் ஏற்படும் பொருள் இழப்பும் ஏராளம்!


நாசப்பட்டியல்

இவ்வளவு பெருங்கூட்டமான மக்கள் ஆண்டிலே ஓரிரண்டு நாட்கள் திருவண்ணாமலையிலே வந்து குவிவதை முன்னிட்டு நூற்றுக்கணக்கிலே கட்டப்பட்டுள்ள சத்திரங்களும், மடங்களும், பாக்கி இருக்கும் முன்னூற்று அறுபத்து மூன்று நாட்களும் பயன்படாமல் வீணாகக் கிடப்பதால் (சில சோம்பேறிகளுக்கு உறையுள் ஆவதைத் தவிர) அதற்காகச் செலவழிக்கப்பட்ட மூலதனம் பாழாகின்றது. இவ்வளவு பெருங்கூட்டமாக மக்கள் திரளுவதால் இலாபம் அடையும் (கொள்ளையடித்து வாழும்) கோயிற் பூனைகள், செல்வம் மிக்க செட்டியார் இனத்தாரையும், பிற தமிழரையும் தூண்டி விட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் வெள்ளியிலே வாகனம், நூதன ரதம், அற்புத கல்யாண மண்டபம், ஈஸ்வரனுக்கு பொன்னிலே கவசம், அம்மனுக்கு வைர ஒட்டியாணம், புதிய கோபுரக் கும்பாபிஷேகம், வேத வியாகர்ண பாடசாலை என்பவைகளை அமைக்கச் செய்வதாலும், அவைகளின் விளம்பரத்தின் மூலம் ஏராளமான மக்களைத் திரளச் செய்து அந்தப் பெருங் கூட்டத்தால் பெருங்கொள்ளை கொண்டு கவலையின்றி வாழ்வதற்கு வழி செய்து கொள்ளுந் தன்மையாலும், ஏற்படும் பொருள் இழப்பு ஏராளம். எவ்வகையானும் தமிழர் கோடிக்கணக்கிலே பொருளைக் கொட்டியழவும் தமிழரின் வளம் கெட்டழியவும் காரணமாகிறது கார்த்திகைத் தீபம்!

பொருள் பாழாக்கப்படுவதைத் தவிர மக்களுக்கு ஏற்படும் தொல்லையும் தொத்து நோயும், துயரும், பெருந்துன்பமும் அளவற்றவை என்பதோடு, அவர்களுடைய அறிவு அழியுந்தன்மையே திகைப்பு விளைவிப்பதாம்!

அற்ப மனப்பான்மை

இதுபற்றிய புராணக்கதை யாவருக்கும் தெரிந்ததே! இதன்படி மும்மூர்த்திகள் சந்திக்கின்றனர். ஏன்? எங்கே? எப்பொழுது? யாருக்கும் தெரியாது. மும்மூர்த்திகளிலே ஒருவர் சிவன். அவரே முழுமுதற் கடவுள் என சைவ மதத்தினர் கூறுவர்! அவர் ஏன் மற்ற சாதாரணக் கடவுளரைச் சந்திக்க வேண்டும்? நமக்குத் தெரியாது! சந்திப்பது ஒப்புரிமை படைத்தவர்களிடத்திலே நிகழ்வது இயற்கை. மேலும் முழுமுதற்கடவுளின் உயர்வை எடுத்துக் காட்ட வந்த இக்கதையில் சிவனைக் காண மற்றிருவரும் சென்றபோது இவை நிகழ்ந்ததாகவாவது கூறி இருக்கலாம்.அவ்வாறும் இல்லை. சந்தித்த இடத்திலே யார் பெரியவன் என்று விவாதம் ஏன் தோன்ற வேண்டும்? எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தபோது, பிரம்மாவும், விஷ்ணுவும், அப்பொழுதே யார் பெரியவன் என்ற சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்பியதன் விளைவா? மற்ற புராணங்களின்படி, விஷ்ணுவின் தொப்புள் கொடித் தாமரையிலே பிறந்தவர் பிரம்மா. விஷ்ணுவின் மகன் பிரம்மா என்று கதையிருக்க சந்தித்தபோது திடீரென்று சந்தேகம் பிறப்பானேன், தந்தைக்கும் மகனுக்குமே? யார் பெரியவர், என்ற விவாதம் மூர்த்திகளிடையே நடப்பானேன்? முக்காலத்தையும் உணரும் மூர்த்திகள் ஒருவரையொருவர் சந்திக்கப் போவதையே உணரவில்லை. சந்தித்தால் சச்சரவு ஏற்படும் என்பதை மட்டும்தான் உணரவில்லையா? அன்றி இவைகளை எதிர்பார்த்தேதான் சந்தித்தார்களா? அப்படியானால் முடிவும் அவர்கள் அறிந்ததேதானா? அதற்கு ஏன் ஒவ்வொரு மூர்த்தியும் ஒவ்வொரு புது உருவிலே தோன்ற வேண்டும்? நாமறியோம் என்பது மட்டுமல்ல, மும்மூர்த்திகளே கூட யாரை, எங்கே, எப்பொழுது சந்திக்க வேண்டும் என்று நிர்ணயமில்லாமலும், ஏன் சந்திக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாமலும், என்ன விளையும் என்பதை அறியாமலுமேதான் இருந்திருக்க வேண்டும்.

இது நிற்க. யார் பெரியவர் என்று பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையிலே வாதம் ஏற்பட்டதே தவிர, கதையின்படி யார் பெரியவர்? என்ற முடிவு காணப்படவில்லை. இடையிலே சிவன் ஜோதியாகி வானளாவினார்! இருவருக்கும் பெரியவருமானார்! அவ்வளவுதானே!

பொய் மூர்த்திகள்

இது கிடக்க, ஜோதியாய் நின்று பெருமாள் அடியும், முடியையும் காணச் சொன்ன போது எப்படிப் பேசினரோ? அந்த முகந் தெரிந்தால் பிரம்மமா - முடியைக் காண்பதும் கடினமாகுமோ? அசரீரியாகச் சொன்னதாக வைத்துக் கொள்வோம்! அடி முடியைக் காண விரும்பிய இருவரும் பன்றியும், அன்னமுமாய் உருவெடுப்பானேன்? பன்றியாகக் பல முறை உருவெடுத்த பழக்கத்தால் திருமால்தான் உடனே பன்றி வடிவெடுத்தார்! பிரம்மாவாவது ஏன் உயரப் பறக்கக்கூடிய கருடராக உருவெடுக்கக் கூடாதோ தெரியவில்லை. ஜோதியின் அடி இல்லை யென்றோ முடியில்லை என்றோ கருத முடியுமா? இருந்ததென்றால் இரு மூர்த்திகளும் தங்களின் இயற்கை உருவத்தை விட இதற்கேற்ற புது வடிவெடுத்துங்கூட காண முடியாத காரணமென்ன? ஜோதி யென்றால் அடி முடி இல்லாதது என்றால் - முழுமுதற் கடவுளல்லவா? எனவே அடிமுடி இல்லாத ஜோதியாகி நின்றார் என்றால் - இல்லாத அடியையும் முடியையும் காணும்படி கூறியது பொய்யல்லவா? அடி, முடி இருந்ததென்றால் - இருவரும் காணாததால் - காண இயலாததால் - மூர்த்திகள், படைப்பவர், காப்பவர் என்று பேசப்படுவது முழுப் பொய்யல்லவா? பின் விஷ்ணுவுக்கு மட்டும் கோயில்களேன்? பிரம்மாவைவிட எக்காரணத்தாலே விஷ்ணு கடவுள் என்று கருத முடியும்?

விஷ்ணுவுக்கோ, பிரம்மாவுக்கோ கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்தும் திறமை இருந்தாலும் தாங்களும் ஜோதியாகி (தீயாகி) ஜோதியிலே கலந்து அய்க்கியமாகி அடியையோ முடியையோ மட்டுமல்ல; அடி முடி இரண்டையுமே கண்டு திரும்பி வந்திருக்கலாம். அப்படியானால் சிவன் பெருமை நிலைக்காதே என்றெண்ணிய புராணீகர், விஷ்ணுவைப் பன்றியாக்கி, பிரம்மாவை அன்னமாக்கி, அரன் பெருமையைத் தடுத்தாட் கொண்டார் போலும்!

தாழம்பூ பிரச்சினை

இனி பிரம்மா முடியைக் காணச் சென்றபோது வந்த தாழம்பூ முடியிலிருந்து வந்ததென்றால் முடியிருந்ததென்றாகின்றது! அப்படியானால் பிரம்மாவால் ஏன் அடைய முடியவில்லை? அவரால் அடைய முடியவில்லையென்றால் தாழம்பூவால் மட்டும் கீழ்நோக்கி எப்படி அவ்வளவு தூரம் வர முடிந்தது? தாழம்பூ தானாக வரவில்லை யென்றால் - அது அசேதனம், சேதனமன்று, தானாக இயங்குவதன்று இயற்கையின் தன்மைக்கேற்ப இயல்வது. எனவேதான் கீழே விழுந்தது என்றால் - அன்னப் பறவையிடம் எப்படிப் பேச முடிந்தது? பொய்ச்சாட்சி கூறியதுதான் எப்படி? அது கூறவில்லை, அன்னப் பறவை அடையாளமாகக் கொண்டு வந்த தென்றால், தாழம்பூவைத் தண்டிப்பானேன்? தாழம்பூவைச் சிவனார் தண்டித்ததினின்று அது தலையிலே இருந்தது என்பதைச் சிவனார் ஒப்புக் கொண்டதாகத்தானே பொருள்! அப்படியானால் ஜோதியின் முடியிலே தாழம்பூவோ தாழைச் செடியோ எப்படி இருக்க முடியும்? எரிந்து சாம்பலாய்ப் போயிருக்காதா? ஜோதியான போது இறைவன் இவைகளை நீக்கி விட்டாரா? பிறகு தாழையின் கதி என்ன? ஜோதியிலே - கங்கை, சந்திரன் முதலானோர் தங்கியிருப்பதனால் ஒரு தாழம்பூ ஏன் விழவேண்டும்? இறைவன் தலையிலே சூட்டப்பட்டு விட்டால் பின் என்றும் அழியாது என்ற கூற்று பொய்ப்பதன்றோ? அதுவன்றி இறைவன், முடியினின்று விழும்பொழுதே, தாழை பொய் சொல்லிற்றென்றால் சிவனின் மகத்துவந்தான் என்னே?


ஒன்றரை அடி உருவம் ஏன்?

இறைவன் ஜோதியாய் நின்றதால்தான், அண்ணாமலையே தேயுஸ்தலம் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொண்டால் - பின் ஏன் தீபம் ஏற்றுகின்றனர்? அரனுடைய அடிமுடிகளை அரியும் அயனுமே காணமுடியவில்லை யென்றால், அடிமுடி இரண்டையும் எவருமே காணக்கூடிய வகையிலே தீபம் அமைப்பதன் அர்த்தமென்ன? அல்லது அத்தீபத்தைக் கண்டவுடனேயே, மக்கள் இறைவனின் செந்தழல் மேனியையும் அடிமுடி காண இயலா விண்ணுயர ஓங்கிய உயர்வையும் உணர்கின்றனர் என்றால், தீப விழா நடைபெறும் அதே இடங்களில் அருணாசலேஸ்வரருக்கு ஒன்றரை அடி உயரத்தில் சிலை (விக்ரகம்) எதற்காக? இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக தீபம் ஒளிவிட்டும் சிவனாரின் லிங்க வடிவமும், மூர்த்தி வடிவமும், ஒரு காலைத் தூக்கியருளும் நடராசரும், பொன்முடி தரித்த சுந்தரேஸ்வரரும் எதைக் காட்டுகின்றன? அடி முடியற்ற கடவுளைக் காட்ட தீபம் என்றால் தாளம் தவறாமல் அடி வைத்துச் சதிராடும் சாமிக்கும், இசை கேட்டுருகித் தலை(முடி)யசைக்கும் சாமிக்கும் இவை எதற்காக?தீபம் கண்ட மக்களுக்கு தீபத்தின் தத்துவம் பேசும் தொண்டர்கட்கு விக்ரக வணக்கந்தான் எதற்கு?

அண்ணாமலை தீபத்தைக் கண்டு ஜோதி வடிவைக் கொண்டு, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்ததை மக்கள் உணர்ந்து கொண்டால் தீபந்தான் எதற்கு? இவைகளை மக்கள் உணர்தல் எளிதோ, ஞானிகளன்றோ உணரவல்லார் எனின், தீபத் தின் பெயரால் மக்களின் பொருள் பாழாக்கப்படுவதேன்?
அகல் விளக்கெல்லாம், மின்மினியின் ஒளியிலெல்லாம் இறைவன் ஒளியைக் காண்பதாகக் கூறும் பக்தர்கள் அண்ணாமலைக்கே ஆண்டு தோறும் செல்வானேன்?
அறிவுடைமையாகுமா?

அகில உலகையும் அதில் வாழும் மக்களையும் படைத்த முழுமுதற் கடவுள் ஜோதி வடிவினன் என்பதை உலகோருக்கு உணர்த்த வேண்டுமானால், உலகில் பகல் முழுவதும் விளங்கும் பகலவனையே அதற்கு ஒரு அடையாளமாக்கியிருக்கலாம்! அகல் விளக்குக்கு எண்ணெய்யோ; தீபத்திற்கு நெய்யுந் திரியுமோ வீணாகாது. இவை வீணாவது பற்றிக் கவலையில்லை யென்றே கருதினாலும், அரியும், அயனும் அளவிட முடியாத அரன் என்று எடுத்துக்காட்ட எழுதப்பட்ட இறைவன், அவரவர்கள் பொருள் வலிவுக்கேற்பவும் சேர்த்த நெய், சூடம், திரி இவைகளுக்கேற்பவும் அளவிடப்படுவது அறிவுடைமையாகுமோ?
அண்ணாமலையே ஜோதி வடிவமென்றும், அதற்கு அடையாளமாகவே அதன் மேல் தீபமென்றும் கூறினால், ஜோதி வடிவு, ஜோதியை ஏன் இழந்தது என்பதையும் முன்பொரு காலத்தில் ஜோதியாகத்தான் இருந்ததென்றால், அதுவே நெருப்பாக நின்று மாறிவிட்ட பிறகு எதற்காக செயற்கைத் தீபம் என்பதையும் எண்ணிப் பாருங்கள்!

ஒளியே முக்கியமென்றும் எனவேதான் கடவுள் பெயரால் இவ்விழாவெனின், நூதன மின்சார சக்தியினால் குறைந்த செலவில் தீபத்தைப் போல் பல மடங்கு ஒளியைத் தரக்கூடிய மின்சார விளக்கை ஒன்றாகவோ, ஓராயிரத்து ஒன்றாகவோ போட்டு (அமைத்து) ஏழை மக்களுடைய பொருளுக்கு அழிவு இல்லாமல் செய்யட்டும். உற்சவ காலங்களில் தீவட்டிக்குப் பதில் காஸ்லைட் உபயோகிப்பது முறையானால் இது மட்டும் எப்படித் தவறாகும்? அகல் விளக்குக்குப் பதில் மின்சாரத் தொடர் விளக்குகள் அமைத்து கார்த்திகை கொண்டாடும் போது தீபம் மட்டும் ஏன் மாற்றம் பெறக்கூடாது?

ஆனால் தீபமோ வழக்கம்போல் வந்து போகிறது! தமிழர் பொருளோ என்றைக்கும் எரிக்கும் நெருப்பிலே எண்ணெய்யாகிறது! தமிழர் வாழ்வோ இன்றளவும் அறியாமை இருளிலே அழிவுறுகின்றது! இந்நிலையை உணர்ந்ததாலேயே தீபம் நமக்குத் திகைப்பாக இருக்கிறது! தீபத்தைப் போற்ற வேண்டாம்! திகைப்புற்றே கலங்கவேண்டாம்!!

-------------------- இனமான பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த நிலையில் கழகக் கருத்துகளைப் பரப்புபவராகவும் எழுதுபவராகவும் இருந்து விடுதலை, (4-12-1946)இல் எழுதிய கட்டுரை

0 comments: