Search This Blog

22.1.09

தந்தை பெரியார் பதினோராவது அவதாரமா ?




தமிழன்தான் இசைக்கு வழிகாட்டியவன்

மயிலாடுதுறை மாநாட்டில் தமிழர் தலைவர் விளக்கவுரை




மயிலாடுதுறையில் 3-1-2009 அன்று நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி வருமாறு:

பெரியார் சொல்லியிருந்தால் பதினோராவது அவதாரம் தந்தை பெரியார் அவர்களுடைய உருவத்திற்கு ஏற்ப கொஞ்சம் கடைசி நாள் சொல்லியிருந்தால் கூட இன்றைக்கு அவர் பதினோராவது அவதாரமாக ஆக்கப்பட்டிருப்பார். பெரியாருக்கு பதினோராவது அவதாரம் கிடைத்தால் நாங்கள் எல்லாம் குட்டிச் சாமியாராகியிருக்க மாட்டோமா? அல்லது குட்டி அவதாரங்களாக ஆகியிருக்க மாட்டோமா?

65 ஆவது நாயன்மாராக இருக்கக் கூடாதா?

64 நாயன்மார்கள் இருக்கும்பொழுது நாங்கள் 65 ஆவது நாயன்மாராக இருக்கக் கூடாதா? என்ன கெட்டுப்போய்விடும்?

தந்தை பெரியார் எவ்வளவு எளிமையாகச் சொன்னார். பக்தர்களோடு சண்டை பிடிக்க வேண்டும் என்றா? அல்லது அவர்களுடைய மனதை புண்படுத்த வேண்டும் என்றா? நாங்கள் இதைச் செய்கின்றோம் இல்லை.

யாரையும் புண்படுத்த அல்ல; மக்களைப் பண்படுத்த

யாரையும் புண்படுத்த அல்ல, யாரையும் சங்கடப்படுத்த அல்ல. மக்களைப் பண்படுத்துவதற்காக. ஒரே வார்த்தையில் தந்தை பெரியார் சொன்னாரே, பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று. புத்திவந்தால் பக்தி போய்விடும்.

வெளிச்சம் வந்தால் இருட்டு போய்விடும். இருட்டு வந்தால் வெளிச்சம் போய்விடும். இரண்டும் ஒரே இடத்தில் இருக்க முடியாதே.

வானொலியைக் கண்டுபிடித்தவர் யார்?

நம்முடைய பெரியவர்கள், படித்தவர்கள், மேதாவிகள், மிகப் பெரிய அளவுக்கு ஆய்வு செய்தவர்கள். வானொலியை யார் கண்டுபிடித்தது? முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒரு பயலாவது வானொலியைக் கண்டுபிடித்தானா?

வானொலி என்றால் என்னவென்று நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளுக்குத் தெரியுமா? இதோ வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மாரியாத்தாளுக்குக் கூழ் - வீடியோ தேவைப்படுகிறது

மாரியாத்தாளுக்கு கூழ் ஊற்றினால் கூட வீடியோ தேவைப்படுகிறது. இந்த வீடியோவை யார் கண்டு பிடித்தது? மும்மூர்த்திகளில் யாராவது ஒருவர் கண்டு பிடித்தாரா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஒலி, பிறகு ஒளி - இப்பொழுது எல்லாவற்றையும் கண்டு பிடித்து வைத்துவிட்டான். தந்தை பெரியார் அவர்கள் அல்லவா ஒரு 60 வருடத்திற்கு முன்னாலே சொன்னார். இனிமேல் ஒவ்வொருத்தர் கையிலும், பையிலும், தலையிலும் தொலைபேசி இருக்கும் என்று சொன்னார். இப்பொழுது எங்கு பார்த்தாலும் டிரிங், டிரிங். என்று செல்ஃபோன் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறதே.

பாதிப்பேர் கையில் செல்ஃபோன்

பாதிப்பேர் இப்பொழுது செல்ஃபோன் வைத்திருக்கின்றார்களே, காய்கறிக்காரன் செல்ஃபோன் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கிறார். ரொம்ப வளர்ச்சி அது. இப்பொழுது எல்லோருமே செல்ஃபோன் வைத்திருக்கின்றார்கள். செய்திகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாகப் பரவுகின்றன. அறிவியல் வளர்ச்சியினால் இவ்வளவும் வந்திருக்கிறது.

செல்ஃபோனுக்குள் பாட்டு - வீடியோ

முதலில் வெறும் குரல்தான் செல்ஃபோனில் வந்திருக்கிறது. அடுத்து செல்ஃபோனில் 200 பாட்டுக்களை வைத்துக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு அதிலேயே ஃபோட்டோ எடுக்கலாம் என்று வந்திருக்கிறது. அதிலேயும் பல சிக்கல்களும் வந்திருக்கிறது. ஆகவே அதே நேரத்திலே அந்த பக்தியினாலே மனிதனுக்கு ஏற்பட்ட இலாபம் என்ன? புத்தியினாலே வளர்ந் திருக்கின்றான் மனிதன். பக்தியினாலே ஏற்பட்ட இலாபமென்ன? அது அடிப்படையானத் தேவை.

எப்படி மனிதன் நல்ல உடல் நலத்தோடு இருக்கவேண்டுமானால், வியாதிகள் அண்டக்கூடாது. கிருமிகள் இருக்கக் கூடாதென்றால் அசுத்த நீர்த்தேக்கங்கள் இருக்கக் கூடாது என்று சொல்லுகின்றோம்.

இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும்

இது இந்திய அரசியல் சட்டத்திலே ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கின்ற கடமை என்று எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் எந்தக் குடிமக்களாவது அதைப்பற்றிக் கவலைப்படுகின்றார்களா? இல்லை. எந்த அரசாவது அதைப்பற்றிக் கவலைப்படுகிறதா? தமிழகத்தில் இருக்கின்ற அரசு மட்டும் பகுத்தறிவு அரசு. இது பெரியார் பாரம்பரியத்திலே வந்த அரசு. விதி விலக்கு.

ஆனால், இந்தியாவின் இதரப் பகுதிகளிலே அரசியல் சட்டத்திலே இருக்கக் கூடிய அந்த அடிப்படைக் கடமை என்று எழுதப்பட்டிருக்கின்றதே - அந்த அடிப்படைக் கடமையிலே என்ன சொல்லப்பட்டிருக்கின்றது?it shall be duty of every citizen india to develop scientific tember,sprit of enquiry,reform,humanaism என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றதே - ஏன் - எதற்கு என்று கேள்வி கேள் என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஏன்? - எதற்கு? என்று கேள்வி கேட்கவேண்டும்

ஏன்? எதற்கு என்று கேள்வி கேட்பது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கடமை. ஆனால், இன்றைக்கு அந்தக் கேள்வி கேட்கின்ற உணர்வு ஆளுகின்றவர்களிடம் இருக்கிறதா? அல்லது ஆட்சி நடத்துகின்றவர்களிடம் இருக்கின்றதா? நீதியரசரிடம் இருக்கின்றதா? அல்லது மற்றவர்களிடம் இருக்கிறதா?

இப்பொழுது குளிர்காலம் மார்கழி, அடுத்து தை வரப் போகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் - அதுதான் பொங்கல் - புத்தாண்டு. இது ஒரு வரலாற்றுக்குரியது.

மார்கழியில் திராவிடர் கழகப் பிரச்சாரம் வந்தவுடன்

மார்கழியில் திராவிடர் கழகப் பிரச்சாரம் வந்தது என்று சொன்னவுடனே - செத்துப்போன சங்கராச்சாரியார் - இப்பொழுது சங்கரராமன் கொலை வழக்கில் அலைந்து கொண்டிருக்கிறாரே அந்த சங்கராச்சாரியார் அல்ல; செத்துப்போன பெரிய சங்கராச்சாரியார் ஒரு வழிமுறை சொல்லிக் கொடுத்தார்.

அதுவரையிலே சைவனுக்கும், வைஷ்ணவனுக்கும் சண்டை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதற்காக என்ன சொன்னார்?

நாத்திகர்களின் பிரச்சாரம் அதிகமாகிவிட்டது

நாத்திகர்களின் பிரச்சாரம் ரொம்ப அதிகமாகிவிட்டது. முதலில் அதைத் தடுக்க வேண்டும். அதற்காக என்ன செய்ய வேண்டும் என்றால் சைவத்தில் ஒரு பாட்டு, வைஷணவத்தில் ஒரு பாட்டு, திருப்பாவை, திருவெம்பாவை வருடாவருடம் இந்தப் பாட்டை எடுத்துப்போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நம்மாட்களும் இதைத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கின்றான்.

தொலைக்காட்சிகளில் கடவுளை எழுப்புகிறார்கள் வானொலியைத் திருப்புங்கள் - வானொலி திருப்பாவை கண்டு பிடித்தவனால் கண்டு பிடிக்கப்பட்டதல்ல. பொதிகை அல்லது தொலைக்காட்சிகள் அவர்கள் கண்டு பிடித்ததல்ல. அதிலே பாருங்கள், கடவுளை எழுப்புகிறார்கள். உலகத்திலேயே கடவுளை பாட்டுப்பாடி எழுப்புகிறவர்கள் இந்த நாட்டில்தான் உள்ளனர்.

மாணவர்கள் படிக்கிறார்கள், தூங்குகிறார்கள் அல்லது நாம் உரிய நேரத்திற்கு வேலை செல்லவேண்டும் அல்லது விமானத்தைப் பிடிக்க வேண்டும். அல்லது ரயிலுக்குப் போகவேண்டும். நாம் அலாரம் வைக்கின்றோம்.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

அதற்குத் தேவை எல்லாம் வல்ல - அங்கு - இங்கு எனாதபடி எங்கும் இருக்கிறவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். அப்பேர்பட்டவனை அவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த கடவுளை நம்மாள் எழுப்புகின்றான்.

உலகத்திலேயே தூங்குகிற கடவுளை எழுப்புகின்ற கடவுள் உலகத்தில் இந்த நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலாவது உண்டா? தூங்குகிற கடவுளை பக்தர்கள் ஒலிபெருக்கி வைத்து எழுப்புகின்றார்கள். சுப்ரபாதம் பாடி எழுப்புகின்றான்

அதுவும் டி.வி.யில், வானொலியில் சுப்ரபாதம் வைத்து எழுப்புகின்றான். இதோ பாருங்கள் - இன்றைக்குக் காலையில் வந்திருக்கின்ற செய்தி. தாய்மார்கள், சகோதரிகள் மன்னிக்க வேண்டும்.

ரொம்பப் பேர் அதிகாலையில் பாட்டு பாட வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். கடவுளை எழுப்புவதற்குப் பாட்டுப் பாடியிருக்கின்றான் - அந்தக் காலத்துப் பக்தன்

கடவுள்மீது நம்பிக்கை இருந்ததா?

அவனுக்கு கடவுள்மீது உள்ளபடியே நம்பிக்கை இருந்ததா? அல்லது வேறு உணர்வைக் கடவுள்மீது ஏற்றிச் சொன்னானா? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். என் கையில் இருப்பது தினமணி பத்திரிகை. விடுதலையிலோ அல்லது முரசொலியிலோ இந்த மாதிரி பாட்டு இருக்காது. பக்தியைப் பரப்புவதற்காக பாவையின் நோன்பு என்ற தலைப்பில் இன்றைய தினமணி பத்திரிகையில் இந்தப் பாட்டை போட்டிருக் கின்றார்கள்.

மலர் மார்பா வாய் திறவாய்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாட்டு - அதற்குக் கீழே விளக்கங்கள்

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டிலின் மேல்

மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி

கொத்தவர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்


என்று பாட்டுப்பாடி தூங்குகிற கடவுளைப் போய் எழுப்புகிறார்கள். கடவுள் எப்படித் தூங்கிக் கொண்டிருக்கின்றான் பாருங்கள்.

நம்மாள் அசந்து தூங்குகிற பொழுதுகூட கணவனோ, மனைவியோ தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது கொஞ்சம் போர்வை விலகியிருந்தால் கூட உடை விலகியிருந்தால் கூட அதை எடுத்துப் போர்த்திவிட்டுப் போவார்கள். அதுதான் நாகரிகமானது.

இந்தந் பாடலிலே வர்ணித்து சொல்லப்பட்டிருக்கின்றது - யானைத் தந்தததால் செய்த கட்டிலில் மென்மையான பஞ்சு மெத்தையில் சாதாரண பஞ்சு மெத்தை இல்லை. பூச்சூடிய கூந்தலுடைய நப்பின்னையை மார்புற தழுவிக் கிடந்த பரந்த மார்பனே வாய் திறந்து பேசுவாய்.

நப்பின்னை கொங்கை மேல் கிடந்த

நப்பின்னை கொங்கை மேல் கிடந்த மலர்மார்பா. கடவுள் என்ன பொசிசசனில் இருக்கிறார் பாருங்கள். சென்சார் இல்லாத பாட்டு.


கடவுள் அதிகாலையில் என்ன வேலை செய்திருக்கிறார் பாருங்கள் (சிரிப்பு). அந்த நேரம் போய் இவன் டிஸ்டர்ப் பண்ணுகின்றான். பொதுவாக இதுதான் பக்தி என்றால் இந்தப் பக்தியை மார்கழி மாதத்தில்தான் பரப்ப வேண்டுமென்றால் இதைவிட அசிங்கம், ஆபாசம் அருவருப்பு வேறு உண்டா?

சினிமாவில் ஆபாசம் என்றால் உடனே எழுதுகிறான் அதை ஆபாசம் என்று எழுதிவிட்டு உடனே இதைப் பாடுகின்றான். இந்த மாதிரி நிறைய சொல்லலாம். இன்றைக்கு கூட முரசொலி ஏட்டில் இந்த சீசனில் தெலுங்கு பாட்டு பாடுகின்றான் பாருங்கள்.

சென்னையில் திருவையாறாம்!

சென்னையில் திடீரென்று ஒரு விளம்பரம் வைத்து விடுகின்றான். சென்னையில் திருவையாறு. சென்னையில் திருவையாறு வருகிறதாம். திருவையாறிலேயே தண்ணீர் வரவில்லை. இந்த ஆட்சியில் இப்பொழுதுதான் மழை பெய்து கொஞ்சம் தண்ணீர் வந்திருக்கிறது.

திருவையாறில் தியாகராயர் உற்சவம்

திருவையாறில் தியாகராயர் உற்சவம். எல்லா அய்யர், அய்யங்கார் சாஸ்திரி சர்மாக்கள் எல்லாம் பாடுவார்கள். திருவையாறில் தமிழ்ப் பாட்டு பாடியவர் தண்டபாணி தேசிகர் என்பதற்காக தீட்டாயிடுத்து என்று சொல்லி விட்டார்கள்.

கலைஞர் அவர்களும் குடிஅரசு இதழில் தீட்டாயிடுத்து என்ற தலைப்பில் எழுதினார். தமிழ்ப்பாட்டு பாடக்கூடாது என்பதெல்லாம் பழைய கதை. பண்பாட்டுப் புரட்சியினுடைய போராட்டக் களங்கள். அப்படிப்பட்ட நிலையிலே இன்றைக்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார்.

தமிழில் பாடாமல் தெலுங்கிலே பாடிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழனுக்கு தமிழ்ப்பெயர் வைப்பதில் ஒரு சங்கடம். நமது பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் வருவதில்லை.

தமிழனுக்கு தமிழ் உணர்வு இல்லை

தமிழ்நாட்டிலே தமிழன் இன உணர்வு இல்லாமல் வாழக் கூடிய கொடுமை இருக்கிறது. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் அடையாளம் தெரிய வேண்டுமானால், முதலில் தமிழ்ப் பெயரைச் சூட்டவேண்டும் என்கிற உறுதி இருக்க வேண்டும். தமிழா தமிழனாக இரு. இதுதான் அடிப்படையானது. உங்களை மனிதர்களாக்க

இதெல்லாம் ஒரு கட்சிக்குரிய கொள்கை அல்ல. உங்களை நீங்களே மனிதர்களாக்குவது, உங்களை நீங்கள் மானமுள்ளவர் களாக உயர்த்திக் கொள்ளவேண்டும். உங்களுடைய சந்ததி யினருக்கு நல்ல விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற உணர்வு தேவை.

இந்த இயக்கம் இல்லையென்றால் தந்தை பெரியார் அவர்கள் இல்லையென்றால் அண்ணா இல்லையென்றால் திராவிட இயக்கம் இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்? புரியாத மொழியில் தெலுங்குப் பாட்டு பாடிக் கொண்டிருக்கின்றான். இவன் தாளம் போட்டுக் கொண்டிருக்கின்றான்.

என்ன பாட்டு? எதற்குத் தாளம் போடுகிறான் என்று கேட்டால் தெரியாது. தெலுங்குக் கீர்த்தனைக்குத் தமிழன் தாளம் போட்டுக் கொண்டிருக்கின்றான். அதைப்பற்றிய ஒரு விளக்கம் தெளிவாக இதில் எழுதியிருக்கின்றார்கள். அதை மட்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எப்படி திருப்பாவை, திருவெம்பாவையில் பாவை நோன்பு நிறைய இருக்கிறது. இது மாதிரி பாடல்கள் நிறைய இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் ஆந்திரா அரசுகளும் மாராட்டியர்களும் ஆண்டபோது தமிழிசை புறக்கணிக்கப்பட்டது.

முரசொலியில் சின்னகுத்தூசி கட்டுரை

முரசொலியில் இன்றைக்கு வந்திருக்கின்ற சின்ன குத்தூசி கட்டுரையில் ரொம்ப அற்புதமான தகவல் இதிலே இருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். தியாராஜருக்குத் தமிழ் தெரியாது. அவர் ஆந்திராவில் இருந்து வந்தார். அவர் அங்கங்கே பிச்சை எடுத்துக் கொண்டு அரிசி வாங்கிக் கொண்டு பாட்டுப் பாடிக் கொண்டு போனார்.

ஆக அவருக்குத் தெரிந்த மொழியில் தெலுங்கு மொழியில் பாடினார். அவருக்கு இருக்கின்ற மொழிப் பற்றை நாம் பாராட்ட வேண்டும். அவருக்குத் தமிழ் தெரியாது. அதனால் அவர் தெலுங்கு மொழியில் பாடினார். இங்கு வந்தவுடனே தியாகராயருக்குத் தமிழ் தெரியாது. ஆகவே அவர் அவருடைய தாய்மொழியில் எழுதினார்.

தமிழன்தான் இசைக்கு வழிகாட்டியவன்

தீட்சதர் வடமொழி வல்லுநர். யார்? முத்துசாமி தீட்சதர். அவர் மொழியைக் கையாண்டார். ஷியாமா சாஸ்திரி தனது தெலுங்கு பாண்டியத்தியத்தினாலே அந்த மொழியை எழுதினார். இவர்கள் மூன்றுபேர்தான் இசைக்கே மும்மூர்த்திகள் என்று சொல்லு வார்கள்.

ஆனால், அதற்கு முன்னாலே சீர்காழி முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அதற்கடுத்து அருணாசலக் கவிராயர் ஆகிய இந்த மூன்று பேரும் ஆதி மும்மூர்த்திகள்.

தமிழன்தான் முதலிலேயே இசைக்கு வழிகாட்டியவன். அவர்களுக்கு வரலாறு கிடையாது.

-------------------தொடரும்


--------------------- நன்றி: "விடுதலை" 22-1-2009

0 comments: