Search This Blog

20.2.11

மதம் பொய், வேதம் பொய் , புராணம் பொய்,எல்லாம் பொய்

தேவர்களின் முறை

(சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் எழுதிய கற்பனை உரையாடல் இது)

லண்டன் மாநகரமாகிய வைகுண்டத்திலே ஜார்ஜ் மன்னராகிய மகாவிஷ்ணுவானவர் பார்லிமெண்டு என்னும் ஆதிசேஷன்மீது பள்ளி கொண்டிருக்கின்றார்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜி.ஏ. நடேசன், சி. ராஜகோபாலாச்சாரி, வி.எஸ். சீனிவாச சாஸ்திரி, என். சீனிவாசய்யங்கார், எஸ் சீனிவாசய் யங்கார், சிவசாமி அய்யர், வெங்கிட்டரமண சாஸ்திரி, சி.பி. ராமசாமி அய்யர், கே. சீனிவாசன், கே.எஸ். ராமசாமி சாஸ்திரி, சி.ஆர். சீனிவாசன், சத்தியமூர்த்தி முதலிய அநேக பூதேவர்கள் போய் கால்மாட்டில் நின்று கொண்டு தவம் செய்கின்றார்கள்.

மகாவிஷ்ணு: (தேவர்கள் தவத்திற் கிரங்கி) ஹே பூதேவர்களே! எங்கு வந்தீர்கள்?

பூதேவர்கள்: ஆபத்பாந்தவா, அனாத ரட்சகா! தங்களிடம்தான் வந்தோம்.

மகாவிஷ்ணு: என்ன விசேஷம்?

பூதேவர்கள்: தேவர்களுக்கு ஏதாவது இடுக்கண் வந்தால் அதைத் தடுக்க தங்களையன்றி இந்த உலகத்தில் யார் இருக்கின்றார்கள்? எனவே தங்களிடம் வந்தோம்.

மகாவிஷ்ணு: என்ன விசேஷம்?

பூதேவர்கள்: மகாப்பிரபூ! பழையபடி ராட்சதர்களுடைய ஆதிக்கம் வலுத்து விட்டது. பூதேவர்களாகிய எங்கள் நிலை இருப்பதா, இறப்பதா என ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றது. இந்த சமயம் தாங்கள் அருள் புரியவில்லையானால் பூலோகமே சாம்பலாய்ப் போய் விடும். பூலோகமே இல்லையானால் மகாவிஷ்ணுவாகிய தங்கள் பாடுகூட திண்டாட்டமாய் விடும். தங்களை வணங்கவோ, தங்களுக்குப் பூஜை, ஆராதனைகள், உற்சவம் முதலியவைகள் செய்யவோகூட யாரும் இருக்க மாட்டார்கள். வணங்காததும் பூஜிக்காததுமான பகவான் இருந்தென்ன ஒழிந்தென்ன? எனவே இந்தச் சமயம் தாங்கள் கிருபை கூர்ந்து எங்களைக் கடாட்சித்தருள வேண்டும்.

மகாவிஷ்ணு: என்ன! என்ன!! உங்களுக்கு அப்பேர்ப்பட்ட கஷ்டம் என்ன வந்தது? சங்கதியைச் சொல்லுங்கள்.

பூதேவர்கள்: பிரபுவே! முன் யுகங்களில் தேவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் போல இப்போது பெரிய ஆபத்துகள் வந்திருக்கின்றன.

மகாவிஷ்ணு: எப்படி வந்திருக்கிறது? சீக்கிரம் விவரமாய்ச் சொல்லுங்கள்.

பூதேவர்கள்: எப்படியோ வந்து விட்டது. பெரிய உபத்திரவமாய் இருக்கின்றது. ஒவ்வொரு யுகங்களிலும் தேவர்களுக்கு இடர்கள் செய்ய அசுரர்களாகவும், அரக்கர்களாகவும், ராட்சதர் களாகவும் வந்து எங்களை இடர்கள் செய்யும்போது பகவனாகிய தாங்கள்தான் பல அவதாரங்களாக வெளிக் கிளம்பி இராட்சதர்களை எல்லாம் அழித்து எங்களையும், எங்கள் உயர்வாகிய வேதங்களையும், உத்தியோகங்களாகிய யாகத்தையும் காத்தருளி வருகிறீர்கள்.

மகாவிஷ்ணு: ஆம், அது உண்மைதான்.

பூதேவர்கள்: பிரபுவே! இந்த யுகத்திலும் அதுபோலவே ஒரு ராட்சதன் தோன்றிவிட்டான். அவன் எங்களுடைய பெரிய பெரிய உத்தியோகமாகிய யாகத்திலும் வேதத்திலும் கையை வைத்து அவைகளையெல்லாம் அடியோடு ஒழிக்கப் பார்க்கிறான்.

மகாவிஷ்ணு: அப்படிப்பட்ட ராட்சதன் யார்?

பூதேவர்கள்: பிரபுவே! அவன் தான் சுயமரியாதை என்று சொல்லப்பட்ட ராட்சதன். அவன் இப்போது தேவர்களாகிய எங்களுக்கு மாத்திரம் துன்பம் விளைவிக்கின்றான் என்றோ, எங்களுடைய உத்தியோகங்களாகிய யாகத்தை மாத்திரம் அழிக்கின்றான் என்றோ கவலையீனமாய் இருந்து விடாதீர்கள். நாங்கள் ஒழிந்தால் பகவானாகிய தாங்களும் ஒழிந்து போவது நிச்சயம். ஏனென்றால் எங்களை ஒழித்தால்தான் தங்களை ஒழிக்க முடியுமென்று நினைத்து முடிவு செய்து தங்களை ஒழிப்பதற்காகவே முதலில் எங்களை ஒழிக்கின்றானாம்.

மகாவிஷ்ணு: அப்படியா அப்பேர்ப்பட்ட ராட்சதனா அவன்! அவனுக்கு இவ்வளவு சக்தி எப்படி வந்தது?

பூதேவர்கள்: அவன் மகா தவசிரேஷ்டன்; பெரிய பெரிய வரங்களைப் பெற்று விட்டான். அன்றியும் தக்க ஆயுதங்கள் அவனிடமிருக்கின்றன. அவ்வாயுதங்களுக்குப் பயந்து கொண்டு சில்லறைத் தேவதைகளும் தங்கள் பரிவாரங் களும்கூட அவனது பரிவாரங்களாக இருக்கின்றன. அவனைக் கண்டால் நடுங்காத முனிவர்கள் இல்லை; ரிஷிகள் இல்லை.

மகாவிஷ்ணு: அப்படியா, அவன் செய்யும் கொடுமை என்ன?

பூதேவர்கள்: மதம் பொய் என்கின்றான், வேதம் பொய் என்கின்றான், புராணம் பொய் என்கிறான், பராசர் ஸ்மிருதி பொய்யாம், மனுதர்ம சாஸ்திரம் பொய்யாம், எல்லாம் பொய் என்கிறான். ராமாயணம் பொய்யாம், பாரதம் பொய்யாம், திருவிளையாடல் புராணம் பொய்யாம், பெரிய புராணம்கூட பொய்யாம். தேவர்களைக் கண்டதார், விஷ்ணுவைக் கண்ட தார், சிவனைக் கண்டதார் எல்லோரும் பொய் என்கின்றான். இருக்கின்றதாக அகச்சான்று, புறச்சான்று காட்டினாலோ காட்டுகின்றவர்கள் எல்லாரையும் அயோக்கியர்கள், அன்னக் காவடிகள் என்கின்றான். சட்டங்கள் எல்லாம் அக்கிரமம் என்கிறான். அவனுடைய உபத்திரவத்தினால் புராணங்களே விற்பனை ஆவதில்லை. காலட்சேபங்களே நடைபெறுவதில்லை. இவைகள் போனாலும் போகட்டும். எங்கள் யாகங்கள் நடைபெறுவதில்லை. அவனால் எங்களுக்கு வெகு கஷ்டமாயிருக்கின்றது.

மகாவிஷ்ணு: அப்படியா சொல்லுகின்றான்?

பூதேவர்கள்: ஆமாம் பகவானே!!

மகாவிஷ்ணு: இன்னும் என்ன செய்கிறான்?

பூதேவர்கள்: நாள் பொய் என்கிறான், திதி பொய் என்கிறான், சடங்கு பொய் என்கின்றான், தேர் பொய், திருவிழா பொய் என்கின்றான்.

மகாவிஷ்ணு: சரி இவ்வளவையும் பொய் என்கின்றானா!

பூதேவர்கள்: ஆம் பிரபூ. மற்றும் இவனுடைய உபத்திரவத்தினாலே புஸ்தகக் கடைக்காரன் பட்டினி, புராணக் கடைக்காரன் பட்டினி, புராணப் பிரசங்கபண்டிதன் பட்டினி, புரோகிதன் பட்டினி, அர்ச்சகன் பட்டினி, குருமார் பட்டினி, சமயப் பிரசாரகன் பட்டினி, நல்ல ஆங்கிலம் படித்த சாஸ்திரிகள், சாதுக்கள் எல்லாம் பட்டினி, பி.ஏ., எம்.ஏ. படித்தவர்கள் பட்டினி கிடக்கும்படியாகி விட்டது. இதைப்பற்றிக் கேட்டால் மூட்டை தூக்கி மண்வெட்டி வயிறு வளர்க்கச் சொல்லுகிறான். கொடுமை! கொடுமை!! சகிக்க முடியவில்லை.

மகாவிஷ்ணு: நமது கடவுள் தன்மையைப்பற்றி என்ன சொல்லுகின்றான், அதையாவது ஒப்புக் கொள்ளுகிறானா இல்லையா?

பூதேவர்கள்: கடவுளைப்பற்றிச் சொன்னால் எனக்கு அவசியமில்லே என்கிறான். கடவுள் உண்டா இல்லையா என்றால், நான் அதைப்பற்றிக் கவலைப்படுவதே கிடையாது என்கின்றான். கடவுள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அதைப்பற்றி உனக்கென்ன கவலை என்கின்றான்.

மகாவிஷ்ணு: பின்னை அவன் எதைத்தான் ஒப்புக் கொள்ளுகின்றான்?

பூதேவர்கள்: அவன் மனிதனுக்கு மனிதன் சமத்துவம், அன்பு, இரக்கம், உதவி, ஒழுக்கம், சுயமரியாதை இவற்றைத் தவிர மற்றொன்றையும் மதிப்பதில்லை என்கின்றான்.

மகாவிஷ்ணு: அப்படியானால் இவற்றை எல்லாம் உலகம் ஒப்புக் கொள்ளுகிறதா?

பூதேவர்கள்: ஒப்புக் கொள்ளுகிறதே. இதுதானே ஆச்சாரியமாய் இருக்கின்றது. ஒப்புக் கொள்ளுவது மாத்திரமா? இந்தச் சமயம் நாங்கள் தெருவில் ஒண்டியாய்ப் போகிறதே ஆபத்தாய் இருக்கிறது.

மகாவிஷ்ணு: நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? நீங்களும் எதிர்த்துப் போர் செய்வதுதானே?

பூதேவர்கள்:: நாங்களும் எங்களால் கூடியவரை பார்த்தோம். எங்கள் ஆயுதங்களாக அந்த ராட்சதக் கூட்டத்திலிருந்தே சில ஆட்களைக் கைப்பற்றி அதன் மூலமாகவும் போரிட்டுப் பார்த்தோம். அவர்கள் ஆயுதங்களும், எங்கள் ஆயுதங்களும் எல்லாம் அவன் ஆயுதங்களுக்கு முன்னால் முனை மழுங்கிப் போய் விட்டன.

மகாவிஷ்ணு: அப்பேர்ப்பட்ட அந்த ராட்சதனுடைய ஆயுதந்தான் என்ன?

பூதேவர்கள்: குடிஅரசு, விடுதலை, நகரதூதன், சண்டே அப்சர்வர் முதலிய அநேக ஆயுதங்களின் வலிமை எங்கள் ஆயுதங்களின் முனைகளை எல்லாம் மழுங்க வைத்து விட்டன. எங்கள் கூலி ஆயுதங்களும், நாங்கள் லஞ்சம் கொடுத்து அமர்த்திய விபீஷணர் போன்ற ஆயுதங்களும் உயிரில்லாமல் போய் நாங்கள் வெளியே தலைநீட்ட முடியவில்லை. இப்போது நாங்கள் செத்த பாம்பை ஆட்டுவதுபோல் பொய் வேஷம் போட்டுக்கொண்டு திரிந்து பார்த்தும் வேறு மார்க்கமில்லாததால் தங்கள் பாதத்தில் வந்து விழுந்து விட்டோம். தாங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். தங்கள் பரிவாரங்களான யுத்த உதவி முதலிய உபதேவர்களின் பெருமையை நாங்கள் அறியாமல் பகிஷ்காரம் செய்து விட்டோம். அதைத் தயவு செய்து மன்னிக்க வேண்டும்.

மகாவிஷ்ணு: இதற்காக என்னை என்ன செய்யச் சொல்லுகின்றீர்கள்?

பூதேவர்கள்: தங்களிடமுள்ள சில பாணங்களைக் கேட்க வந்திருக்கின்றோம்.

மகாவிஷ்ணு:: என்ன பாணம்?

பூதேவர்கள்: 153ஏ பாணம் வேண்டும்.

மகாவிஷ்ணு: 144 பாணம் வேண்டாமா?

பூதேவர்கள்: 144 அவனிடம் செல்லாது. அது சரமாரியாய் அவன்மேல் விடப்பட்டும் அவைகள் அவனிடம் போய் போய் அவன் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு வந்து விட்டதோடு மாத்திரமல்லாமல் திரும்பி வந்து எய்தவர்கள் மீதுங்கூட சில சமயங்களில் பாய்ந்து விடுகின்றது.

மகாவிஷ்ணு: சரி நாம் நமது தூதர்களை முதலில் உங்கள் லோகத்திற்கு அனுப்புகிறோம். அவர்களைக் கொண்டு பூலோக நிலை அறிந்து பிறகு வேண்டியது போல் செய்வோம்.

பூதேவர்கள்: பிரபுவே! தங்கள் தூதர்கள் யார் தயவு செய்து அதைக் கொஞ்சம் தெரிவித்து விட்டால் நாங்கள் ஜாக்கிரதை யாயிருக்க அனுகூலமாயிருக்கும்.

மகாவிஷ்ணு: நமது தூதர்கள் மற்றொரு கமிஷன். அவர்களிடம் முறைகளை மெய்ப்பியுங்கள்.

பூதேவர்கள்: நாங்கள் அறியாத புத்தியினால் தங்கள் தூதர்களை ஆதியில் அலட்சியமாய் கருதி விட்டோம். அதனால் வந்த வினைப்பகுதி என்றுகூட சொல்லலாம். ஆனாலும் இப் போது அவர்களிடம் சொல்லிக் கொள்வது எங்களுக்கு கொஞ்சம் அவமானமாயிருக்கின்றதே.

மகாவிஷ்ணு: நேரில் தெரிவிக்காவிட்டால் பாதகமில்லை; மறைமுகமாக வேறு ஏதாவது வழிகளில் தெரிவித்து விடுங்களே.

பூதேவர்கள்: அப்படியே ஆகட்டும் பிரபுவே. எப்படியாவது இந்தச் சமயம் எங்களைக் காப்பாற்றுங்கள். இல்லாவிட்டால் தங்களுக்கும் எங்களுக்கும் இரண்டு பேருக்குமே ஆபத்து வந்துவிடும். இதை நன்றாய் மனதில் வையுங்கள்.

மகாவிஷ்ணு: நம்மைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்; உங்கள் காரியத்தை நீங்கள் ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்.
சரி, போய் வாருங்கள்.

------------------------------தந்தை பெரியார் - "குடிஅரசு" - 18.08.1940

0 comments: