Search This Blog

6.2.11

ஏ, சூத்திரா, பஞ்சமா - எட்டி நில் என்ற காலம் போய்விட்டது!

மாவலி வழி வந்த நல்லாட்சி நடத்துகின்ற இந்தச் சூத்திரர்களின் ஆட்சியை ஒழித்திட சதி!
சதியை முறியடிப்போம், திராவிடத்தைக் காப்போம்!

சூத்திரர்களின் ஆட்சியை ஒழிக்க குறிப்பிட்ட ஒரு கூட்டம் சதி செய்கிறது. அதனை வீழ்த்தி திராவிடர் இனத்தைக் காப்போம் என்றார் முதல் அமைச்சர் கலைஞர். சென்னை சைதாப்பேட்டை - ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற திமுக பொதுக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி வருமாறு:

ஏ, சூத்திரா, பஞ்சமா - எட்டி நில் என்ற காலம் போய்விட்டது!

எங்கே சூத்திரர்கள், திராவிடர்கள் - அவர்கள் தஸ்யூக்கள் என்று அழைக்கப்பட்ட மக்கள் நல்லாட்சி நடத்துகிறார்களோ அவர்களை யெல்லாம் வீழ்த்திவிட்டு, அங்கே தாங்கள் வந்து அமர்ந்து கொள்ள ஒரு கதையை ஜோடிப்பார்கள்.

அந்தக் கதையை ஜோடித்து விட்டு அதற்கு ஒரு பண்டிகையின் பெயரை இடுவார்கள். அது போலத்தான் தமிழ்நாட்டிலே நடைபெறுகின்ற இந்த ஆட்சி நான் மாவலி அல்ல - அவ்வளவு வலிமை பொருந்தியவன் அல்ல - மாவலி மரபின் ஆட்சி (கைதட்டல்) அவ்வளவு தான் - மாவலி மன்னனுடைய மரபு ஆட்சி.

அந்த ஆட்சியில் ஒருவனாக நான் இருக்கிறேன் என்றால் என் தலைமையிலே இருக்கின்ற இந்த ஆட்சியை வீழ்த்த ஒழிக்க அகற்ற புறம் கூறி இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட என்னென்ன தில்லுமுல்லுகள் உண்டோ, திருகு தாளங்கள் உண்டோ அவ்வளவையும் செய்து பார்க்க ஒரு கூட்டம் தயாராகியிருக்கின்றது.

ஏனென்றால் அவர்கள் கையை விட்டு அதிகாரம் போய், ஆட்சி போய்; ஏ சூத்திரா, எட்டி நில்! ஏ பஞ்சமா! பக்கத்திலே வராதே என்றெல்லாம் ஆணையிட்ட அந்தக் காலம் போய் பல ஆண்டுகள் ஆகிறது. அதை மீண்டும் பெறுவதற்காக ஒரு கூட்டம் இன்றைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.

அந்த முயற்சிக்கு அவர்களுக்குக் கிடைத்துள்ள சாதனமாக இருப்பது செய்திப் பத்திரிகைகள் - தொலைக்காட்சிகள் - இவைகள் தான் அவர்களுக்குப் பக்க பலமாக இருக்கின்றன.

பொய்ப் பிரச் சாரத்தைச் செய்தே, இந்த ஆட் சியை வீழ்த்தி விட்டு, நாம் வந்து அமர்ந்து விடலாம் என்று கருதுகிறார்கள் என்றால், அது முடியுமா, நடக்குமா என்பதுதான் கேள்வி. ஆனால், அந்த முயற்சி இப்போது நடக்கிறதே - அதை நாம் இப்போது அனுமதித்துக் கொண்டிருக்கிறோமே - இதனுடைய விளைவு களையும் நாம் அனுபவித்துத் தானே ஆக வேண்டும் என்ற அந்த நிலையை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்படி எண்ணிப் பார்ப்பதன் அடையாளமாகத்தான் அந்தக் கருத்துகளை உள்ளடக்கித்தான் காலையிலே நடைபெற்ற பொதுக் குழுவிலே - 21 தீர்மானங்களை நாம் நிறைவேற் றியிருக்கிறோம். மாவலி மன்னன் எப்படியெல்லாம் மக்களை வாழ வைத்தான், எப்படியெல்லாம் சாதனை புரிந்து, அவர்களை சந்தோஷப்படுத்தினான் - அவர் களுடைய வாழ்விலே ஒளி பெறச் செய்தான் என்பதைப்போல, இந்த ஆட்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் எத்தகைய நலன்களையெல் லாம் பெற்றார்கள் என்பதை அடுக்கடுக்காக - வரிசை வரிசையாக எடுத்துச் சொல்ல நிலை இருந்த போதிலும், வாய்ப்பிருந்த போதிலும், நேரமில்லாத காரணத்தால், நான் அவைகளையெல்லாம் சுருக்கமாக உங்களுக்குச் சொல்ல விரும்பு கிறேன்.


நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். புராணக் கதை போலத்தான் தெரியும். ஆனால் ஒரு வரலாறு, நம்முடைய பக்கத்து மாநிலம் கேரளத்தில் நடைபெறுகின்ற ஓணம் பண்டிகையைப் பற்றிய ஒரு வரலாறு.

ஓணம் என்றால் நம்முடைய தமிழகத்தில் நடைபெறுகின்ற, ஆயுத பூஜை, தீபாவளி இதைப் போன்ற ஒரு பண்டிகை அங்கே நடைபெறுகிறது என்றுதான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு உண்மை தெரிந்தது. ஓணம் என்பது - மாவலிச் சக்கரவர்த்தி என்று ஒருவர் கேரளத்தை ஆண்டார் என்றும், அவருடைய ஆட்சி எல்லா மக்களாலும் விரும்பப்பட்ட ஆட்சி என்றும், அந்த ஆட்சி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்று அந்த மக்கள் எல்லாம் வாழ்த்துகிறார்கள், பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் ஒரு நிலை ஏற்பட்டபோது அங்கிருந்த உயர் ஜாதி மக்கள் இப்படியே இந்த ஆட்சியை விட்டுக் கொண்டு போனால் உயர் ஜாதி மக்களாகிய நாம் என்றைக்கு ஆட்சி பீடத்திலே அமர்வது என்பதற்காக சூழ்ச்சி செய்து மகா விஷ்ணுவிடத்திலே சென்று கேட்டார்களாம். இப்படி ஒரு ஆட்சி நடக்கிறது, அதை ஒழிக்க வேண்டும் என்று. மகாவிஷ்ணு கேட்டாராம்.

ஏன்? என்ன அநியாயம் செய்கிறார்கள் அந்த ஆட்சி யாளர்கள்? என்று! சொல்லும்படியாக ஒன்றும் இல்லை, அவர்களே ஆண்டு கொண்டிருக்கிறார் கள். எங்களுக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை என்று சொன்னார்களாம்.

அவனே ஆண்டால் உங்களுக்கு என்ன ஆகிவிடும் என்று கேட்டார் கடவுள். ஒன்றும் இல்லை; பிறகு நாமெல்லாம் ஆட்சிப் பீடத்துக்கு வருவது என்பதை எண்ணிக் கூட பார்க்க முடியாது என்றார்களாம். சரி பரவாயில்லை உங்களுக்கு அந்த ஆட்சியை மாற்றித் தருகிறேன் என்று சொல்லி, மாவலி சக்கரவர்த்தி யிடம் சென்று - அவர் பெயரே மாவலி - மிகப் பிரமாண்டமான பலம் பொருந்திய மன்னன். அவனிடத்திலே கேட்டுத்தான் பெற முடியுமே தவிர, போரிட்டு அந்த ஆட்சியைப் பெற முடியாது என்பதால் கேட்டுப் பெறுவதற்காக தந்திரம் செய்து, யாகங்களைச் செய்து, யாசகம் கேட்டு, மூன்றடி மண் வேண்டும் என்று கேட்டு, அவன் மூன்றடி மண்ணுக்கு விருப்பம் தெரிவித்து வழங்கியபோது இரண்டடி அளந்து பார்த்து விட்டு, மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்று கேட்டு வேறு வழியில்லாமல் மாவலி மன்னனுடைய தலையி லேயே காலை வைத்து - அப்படி காலை வைத்த நேரத்தில் பலம் கொண்ட வரையில் அழுத்தி அவனை அழித்தார், ஒழித்தார்!

மாவலிச் சக்கரவர்த்தியை வீழ்த்த
அன்றே நடந்த சூழ்ச்சிகள்!


அவன் சாகும்போது கடவுளிடம் கேட்ட வரம் ஆண்டவனே, நான் இந்த மாநிலத்தை ஆண்டவன், நீ என்னை ஒழித்து விட்டு வேறொரு ஆட்சிக்கு இன்றைக்கு விதை தூவிவிட்டாய், இருந்தாலும் எனக்கொரு வரம் வேண்டும், அதைக் கொடு, நான் சாகத் தயார் என்றான். என்ன வரம் கேள் என்றான் ஆண்டவன். பெரிய வரம் ஒன்றுமில்லை, என்னால் வாழ வைக்கப்பட்ட மக்கள், என்னால் முன்னேறிய மக்கள், என்னால் வளம் பெற்ற மக்கள், என்னால் நலம் பெற்ற குடிபடைகள் - நான் இப்போது இறந்து போனாலும் - ஆண்டுக்கு ஒரு முறை நான் இங்கே வந்து அவர்களையெல்லாம் நான் ஆசை தீரப் பார்த்து, அவர்களின் வாழ்த்தைப் பெற வேண்டும், அந்த வரம் மாத்திரம் கொடு என் றானாம். பரவாயில்லை, அவன் ஒழிந்தால் சரி என்று அந்த வரத்தைக் கொடுத்து விட்டு ஆண்டவன் மறைந்து விட்டாராம்.

அந்த மக்களைக் காண அவர்களிடத்தில் வாழ்த்து பெற ஆண்டுதோறும் மாவலி வருகின்ற நாள் தான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்ற நாள் என்று இன்றைக்கும் கேரளத்தில் கதை வழங்குகிறது, புராணமாக அல்ல, வரலாறாகவே அந்தக் கதை அங்கே வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் - நான் புராணங்களில் கேள்விப்பட்டிருக்கிறோம். கொடுமை புரிகின்ற அசுரர்களைத்தான் தேவர்கள் அழிப்பார்கள் என்று. மக்களை கொலை செய்கின்ற, மக்களிடத்தில் கொள்ளை அடிக்கின்ற, அவர்களை இம்சைப்படுத்துகின்ற மன்னர்களைத் தான் தேவர்கள் அழிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் நல்லவனாக, மக்களிடத்திலே அன்பைப் பெற்று நீதான் எங்களுக்குத் தொடர்ந்து மன்னராக இருக்க வேண்டுமென்று வாழ்த்தைப் பெற்ற ஒருவனை அழிக்கிறான் ஒரு ஆண்டவன் என்றால், அந்த ஆண்டவனுக்காக ஒரு விழா, அது ஓணம் பண்டிகை என்றால், அப்படிக் கொண்டாடப்படுகின்ற அந்த ஓணம் பண்டிகை, நல்லவனுக்காக அவன் நல்ல ஆட்சி நடத்தியதற்காக பாராட்டி நடத்தப்படுகின்ற விழா என்ற அளவில் அது கொண்டாடப்படுகின்றது.

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்கிறேன். நான் இல்லாத காலத்திலேகூட, இன்னும் ஒரு நூறாண்டுக் காலத்திற்குப் பிறகு - கருணாநிதி என்று ஒருவன் இருந்தான் என்று வரலாறு சொன்னாலும், சொல்லாவிட்டாலும் - அவன் எழுப்பிய மாளிகைகள் - அவன் உருவாக்கிய கோபுரங்கள் - அவன் சித்திரித்த சின்னங்கள் - இவைகள் எல்லாம் இருந்து என் பெயரைச் சொல்லும். (பலத்த கைதட்டல்) ஆனால், என் பெயரைச் சொல்ல வேண்டும் என்பதற்காக இவை அல்ல.

என் பெயர் பரவ வேண்டும் என்பதற்காக அல்ல. என் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நான் ஆற்றிய காரியங்கள் தமிழனுக்காக, தமிழ் மக்களுக்காக, தமிழ்ச் சாதி மக்களுக்காக, தமிழ்ச் சமுதாயத்திற்காக, நான் ஆற்றிய பணிகள் இவைகள் வரலாற்றில் இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் நிலைக்கத்தான் போகிறது. அதை யாரும் மறுத்து விட முடியாது.

யாரும் அழித்து விட முடியாது. அப்படிப்பட்ட ஒரு வரலாற்றை உருவாக்குகிற தனி மனிதனாக அல்ல, இங்கே இருக்கின்ற நம்முடைய கழகத்தினுடைய காவலர்கள், பொதுச் செயலாளரிலிருந்து, துணைப் பொதுச் செயலாளர்களிலிருந்து மற்றும் கழக முன்னோடிகள் எங்களை யெல்லாம் இன்றைக்கு வாழ்த்திப் பாராட்டி எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கின்ற எங்களுடைய ரத்தங்களாக, எங்க ளுடைய உதிரங்களாக எங்களுடைய உயிர் மூச்சுக்களாக என் எதிரே அமர்ந்திருக்கின்ற தமிழ் பெருமக்களாகிய நீங்கள் - நீங்கள் நினைத்தால் போதும். யாரோ, பெரியார் சொன்னதைப்போல, ஒரு மேல்சாதிக்காரன் - ஒரு பத்திரிகைக்காரன் எங்களைப் பாராட்டி எழுதிவிட்டால், அது தான் எங்களுக்கு வைத்த மகுடம் என்று நாங்கள் கருத மாட்டோம். எங்களை ஒரு சாதாரண தாய், தமிழ்க் கிழவி, அப்பா, எங்களுக்கு வயிறாரச் சோறு கொடுத்தாயே, வாழ்க என்று சொன்னால் தமிழ்த் தாயே உருவெடுத்து வந்து வாழ்த்தியதாக நாங்கள் கருதிக் கொள்வோம்.

என் பணிகளை பாராட்ட நீங்கள் இருக்கிறீர்கள்!


எனவே, யாருடைய பாராட்டையும் அல்ல - யாருடைய மதிப்பு மரியாதையையும் அல்ல. நான் வேண்டி விரும்புவது நான் என் காலத்தில் ஆற்றிய இந்தப் பணிகளையெல்லாம் பாராட்டுவதற்கு கடல் போல் திரண்டிருக்கின்ற நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

உங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள். உங்களை நான் என்றைக்கும் மறக்காமல் இருப்பதற்கு தேவையான எல்லாவற்றையும் தமிழகத்திலே செய்து முடித்திருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன்.

செய்யத் தொடங்கியிருக்கிறேன். (கைதட்டல்) இந்தத் தொடக்கத்தைத் தொடர்ந்து முற்றாக முடிக்க வேண்டிய கடமை, கண்ணின் மணிகளே, தமிழ்த் தாய் பெற்றெடுத்த தங்கங்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்த ஓட்டமே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடி நரம்புகளே, ஒரு முடிவு எனக்கேற்படுமானால், அப்பொழுது கூட, இந்தப் பொறுப்புகளை எல்லாம் அண்ணா எப்படி என்னிடத்திலே ஒப்படைத்து விட்டுப் போனாரோ அதைப் போல இந்தப் பொறுப்பையெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்பு களே, உங்களிடத்திலே ஒப்படைத்திருப்பதாகக் கருதிக் கொண்டு இந்தக் கழகத்தைக் காப்பாற் றுங்கள், திராவிட இயக்கத்தைக் காப்பாற்றுங்கள், திராவிட இனத்தைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்.

-இவ்வாறு கலைஞர் உரையாற்றினார்.


-------------- சைதைப் பொதுக் கூட்டத்தில் முதல் அமைச்சர் கலைஞர்-"விடுதலை” 5-2-2011

0 comments: