Search This Blog

14.2.11

பார்ப்பனர் ஆதிக்கம் என்றால் ...


வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வருகிறார்களாம்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸை வலுப்படுத்த 20 ஆயிரம் தொண்டர்கள் களத்தில் இறங்கப் போகிறார்களாம். இவர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வார்களாம். இதற்காக 16 பக்க கையேடு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாம்.

ஆர்.எஸ்.எஸின் தோற்றம், ஆர்.எஸ்.எஸ்.பற்றி தேசிய தலைவர்களின் கருத்துகள் இடம் பெறுமாம். ஆர்.எஸ்.எஸைக் கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான விமர்சனங்களும் முன் வைக்கப்படுமாம்.

பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வீட்டுக்கு வீடு கையேடுகளையும், துண்டு அறிக்கைகளையும் வழங்குவார்களாம்!

வரட்டும் - அதைத் தான் நாமும் எதிர்பார்க் கிறோம். 1925ஆம் ஆண்டில்தான் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் துவக்கப்பட்டன. சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை அமைப்புகளும் அதே ஆண்டில்தான் தொடங்கப்பட்டுள்ளன.

இத்தனை ஆண்டுகாலமாக எவ்வளவோ முயற்சி எடுத்துப் பார்த்தும் தமிழ்நாட்டில் அவர்களின் பருப்பு வேகவில்லை. அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களும் அவர்கள் கண்ட தன்மான இயக்கமாம், திராவிடர் கழகமும்தான்!

ஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மதத்தினைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டது. இந்து மதமோ பார்ப்பனர் ஆதிக்கத்தை, மேலாண்மையைக் கெட்டிப் படுத்தும் வெறி கொண்டதாகும்.

பார்ப்பனர் ஆதிக்கம் என்றால் பிறப்பில் அவர்கள் தான் முதன்மையானவர்கள். பிர்மா இந்த உலகத்தைப் படைத்ததே கூட பிராமணர்களுக்காகத்தான். அவர்கள் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தொண்டூழியம் செய்து கிடக்க வேண்டியவர்கள் என்ற நிலைப்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை இந்து மத - பார்ப்பன மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டப்பட்டது. இந்த நிலையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கிய தலைவர் தந்தை பெரியார்; இயக்கம் - திராவிடர் இயக்கமாகும்.

துயரப்படும் மக்கள் உண்மையை உணரும் அளவில் அவர்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற உணர்வு உச்ச கட்டத்திற்குச் சென்றது. பார்ப்பனர்கள் திறந்த மேனியில் தங்களின் உயர் ஜாதி ஆணவச் சின்னமான பூணூல் அணிந்து வருதல், உச்சிக்குடுமி வைத்துக் கொண்டு நடமாடுதல் என்பது எல்லாம் - அறவே நிற்கும் நிலை உருவாக்கப்பட்டது.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்கார் பார்ப்பனருக்கு மூன்றுகொம்பு என்று கோலி விளையாடும் சிறுவன்கூட கேலி பேசும் நிலை உருவாக்கப்பட்டது. எப்படியோ ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் பார்ப்பனீயத்தோடு இணைந்து நின்ற அமைப்புகளாகி விட்டதால் எதிர்ப்பிரச்சாரப் புயலில் பார்ப்பனீயத்தோடு அதுவும் கட்டுண்டு தாக்குதலுக்கு ஆளானது.

தமிழ் மண்ணில் பார்ப்பன எதிர்ப்பு என்பது கட்சிகளைக் கடந்து நிற்கக் கூடியதாகும்; ஜாதி, மதங்களைத் தாண்டி இது செங்குத்தாக நிற்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில்கூட ஜெயலலிதாவைச் சேர்த்து இரண்டே இரண்டு பார்ப்பனர்கள்தான் உறுப்பினர்கள். நூற்றுக்கு மூன்று கொடுத்துத் தொலையலாம் என்று நாம் நினைத்தால்கூட அதனைக்கூடக் கொடுக்க தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோ, பொது மக்களோ தயாராக இல்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்ற பா.ஜ.க. அத்தனைத் தொகுதிகளிலும் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை - டெபாசிட் காலியாயிற்று.

இடையில் திராவிட கட்சிகளின் துணையால் கொஞ்சம் துளிர்க்கப் பார்த்தது. அதுவும் நீடிக்க வில்லை. தனி மரமாக நின்று ஒப்பாரி வைக்கும் நிலை தான்.

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரங்கள் வரட்டும்; வீட்டுக்கு வீடு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விரும்புகிறோம்.

முதல் கேள்வி - பிறப்பின் அடிப்படையில் ஜாதி - உயர்வு தாழ்வை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆம் என்றால், அத்தோடு அவர்களின் பிரச்சாரம் அஸ்தமனம்தான். ஏற்கவில்லை என்றால், அவற்றை வலியுறுத்தும் இந்துமத வேதங்கள், ஸ்மிருதிகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை பகிரங்க மாகக் கொளுத்தத் தயார்தானா என்ற கேள்வி எழும்.
சங்கர மடத்தில் அடுத்த சங்கராச்சாரி யார்? என்ற வினாவும் வெடிக்கும்.

சம்பளம் கொடுத்து அனுப்பப்படும் இந்தப் பேர் வழிகள் என்ன செய்வார்கள்? முடிவைச் சொல்லவோ, முடிவு எடுக்கக் கூடிய இடத்திலோ இவர்கள் இல்லையே! என்ன செய்வார்கள்? கைபிசைந்து நிற்பார்கள்.

கழக இளைஞர்கள், மாணவர்கள், இனவுணர் வாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஒருங்கிணைந்து ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கத் தயாராக இருக்க வேண்டும். இது பெரியார் பிறந்த மண் என்பதை நிரூபிக்க வேண்டும்.

நாங்கள் தயார்! தயார்!! நீங்கள் தயார்தானா? என்று கேட்கும் நிலை உருவாகட்டும்! உருவாகட்டும்!!

--------------- "விடுதலை” தலையங்கம் 12-2-2011

0 comments: