Search This Blog

18.2.11

பெரியாரும் - சிங்காரவேலரும்

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலனாரின் 151 ஆம் ஆண்டு பிறந்த முக்கிய நாள் இந்நாள் (1860).

இந்தியாவில் பொதுவுடைமைக்குக் கட்சி ரீதி யாக அடிக்கால் போட்டவர் அவர் என்றால் அது மிகையாகாது.

வெறும் வர்க்கப்பேதம் பற்றிப் பேசினால் மட்டும் போதாது; வருக்க உணர்ச்சியை உண்டாக்கினால் மட்டும் போதாது - வருண சமூக அமைப்பை முக்கியமாகத் தகர்க்க வேண்டும் என்பதிலே தந்தை பெரியார் அவர்களுடன் கை கோத் தார். நூல்களைத் தேடித் தேடி படிக்கும் நூலகத் தேனீ அவர். அவர் வீட்டில் அவர் வைத்திருந்த நூலகம் பற்றி பெரிதாகப் பேசப் பட்டது.

அவருடைய சிந்தனைகளுக்கு வடிகாலாக தந்தை பெரியார் அவர்களின் குடிஅரசு இதழ் விளங்கியது. தங்குத் தடையின்றி அவர் கருத்துகளை குடி அரசில் எழுதிட முழு உரிமையையும் அளித்தார், தந்தை பெரியார்.

தம் கருத்துக்கு மாறாக இருந்தவற்றைக்கூட வெளியிட தந்தை பெரியார் சுதந்திரம் அளித்தார் என்றால், தந்தை பெரியார் அவர்களின் கருத்துச் சுதந்திர பெருமித உணர்வை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சிங்காரவேலனாரின் கருத்துக்கு மறுப்புக் கட்டுரையையும்கூட பகுத்தறிவு இதழில் (30.9.1934) தந்தை பெரியார் எழுதியதுண்டு. அப்படியொரு ஆரோக்கிய நிலையைப் பயிர் செய்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தைபெரியார்.

ம.சி. என்று சுருக்கமாகக் கூறப்படும் சிங்கார வேலரின் வாழ்க்கையில் பல முக்கியமான நிகழ்வுகள் உண்டு. 1902 உலகப் புத்தமத மாநாட்டுக்கு லண்டன் பயணம்; 1918 சென்னைத் தொழிலாளர் சங்கத்தைத் தோற் றுவித்தது; 1925இல் காஞ்சீபுரம் காங்கிரஸ் மாநாட்டில் கொடியேற்றியது; 1928இல் ஜாம்ஷெட்பூரில் ஏ.அய். டி.யூ.சி. தலைவர் முகுந்தலால் சர்க்காருடன் கிளர்ச்சியில் ஈடுபட்டு பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது;

1932இல் (டிசம்பர் 28,29) ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களுடன் இணைந்து சம தர்மத் திட்டத்தை சுய மரியாதைத் தொண்டர்கள் முன் வைத்தது. 1935-இல் புதுஉலகம் இதழ் துவக்கப்பட்டது போன்ற நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை யாகும்.

1925ஆம் ஆண்டில் யானை கவுனிப் பகுதியிலிருந்து சென்னை மாநக ராட்சி உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். மனச்சாட்சியின்படி என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

சுயமரியாதைச் சிறுவர்களுக்கு வாய்ப்பாடம் என்று குடிஅரசில் (15.1.1933) 10 அம்சங்களைக் குறிப்பிடுகின்றார்.

அதில் ஒன்று ஒரு வருஷத்துக்குள் குடி அரசுக்கு பத்து சந்தாக்களைச் சேர்க்கிறேன் என்பதுதான் அதில் முதல் கட்டளையாகும்.

பொதுவுடைமை - சுயமரியாதைக் கொள்கை களை முன்னெடுத்துச் சென்ற சிங்காரவேலரைப் போற்றுவோம். குறிப்பாக கம்யூனிஸ்டுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எந்த அளவுக்கு அவரின் பகுத்தறிவுக் கொள்கைகளை நடைமுறையில் பின்பற்றுகிறார்கள் என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டு விடுவோம்!

----------- மயிலாடன் அவர்கள் 18-2-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

காமராஜ் said...

இந்த வலைப்பரப்பில் சிங்காரவேலர் பற்றிப்பேச ஒரு குரல் இருக்கிறது என்பது
மிகுந்த சந்தோசம்.எனக்கு பொதுவுடமைக்கருத்தாளர்களில் மிகவும் பிடித்தவர் சிங்காரவேலர்.காரணம் வர்ணாசிரமம் ஒழியாமல் வர்க்க அரசியல் ஜெயிக்காது என்று சொன்னவர் அதனாலேதானென்னவோ அவர் பேசாப்பொருளானார்.
சிலவற்றைபேசுவதிலும் சிலவற்ரைப்பேசாமல் புறந்தள்ளுவதிலும்
அரசியல் இருக்கிறது.