Search This Blog

6.5.11

மக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை!


மக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை!

பொருளாதாரம் பற்றிப் பேசுவோர் மத நம்பிக்கையின் காரணமாக மக்களின் பணம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதுபற்றி வாய் திறப்பதில்லை.

உண்மையைச் சொல்லவேண்டுமானால் அரசுக்கு மக்கள் செலுத்தும் வரியைவிட மதக் காரணங்களுக்காக - பண்டிகைகளுக்காக - கோயில் குளங்களுக்காக - சடங்குகளுக்காக மக்கள் செலவிடும் தொகைதான் அதிகம் - மிக அதிகம்.

மக்களிடம் பணம் தங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளும் பார்ப்பனீயத்துக்குப் பெயர்தான் இந்துத்துவா என்பது.

அட்சயதிதி என்று சொல்லி ஏழை மக்கள்கூட கடன் வாங்கியாவது நகை வாங்கிட வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

வழக்கம்போல இதற்கென்று புராணக் குப்பைகள் - அவற்றைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து விளம்பரம் செய்யும் விவரம் கெட்ட ஊடகங்கள் - எந்த வகையிலும் மக்களை மொட்டை அடித்தே தீருவது என்பதில் மட்டும் உறுதியாக - மிக உறுதியாக இருக்கிறார்கள்.

அட்சயம் என்றால் பூரணத்துவம் பெற்ற - அள்ள அள்ளக் குறையாது வளரக் கூடிய வல்லமை பெற்றது என்று பொருள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரையில் திருதியை திதியில் வரும் நாளே; அட்சய திதியன்று ஒரு தவிட்டுப் பானை வாங்கினாலும் தங்கம் நிறைந்த பானையாக மாறும் என்பது ஜோதிட மொழியாகும்.
காசி, விளாங்குளம், திருச்சோற்றுத் துறை, திருப்பரங்குன்றம், முழையூர் ஆகிய தலங்கள் அட்சய திருதியைத் தலங்கள் என்பர்.

திரவுபதை சூரிய பகவானை வேண்டிப் பெற்ற அட்சய பாத்திரத்தால் அள்ள அள்ளக் குறையாத அன்னத்தைத் தானம் செய்து புண்ணியம் பெற்றார் என்கிறது மகாபாரதம். ஒருமுறை கிருஷ்ண பரமாத்மா திரவுபதையைக் காணப் பசியோடு வந்தார். அந்நேரம் அட்சய பாத்திரம், கழுவிக் கவிழ்க்கப்பட்டிருப்பினும், அதில் ஒட்டியிருந்த ஒரு கீரை மட்டும் கண்டு விஷ்ணுவைப் பிரார்த்திக்க, மீண்டும் அன்னம் பெருகி, அதை கிருஷ்ணருக்குப் பரிமாறிப் பசியாற்றியதோடு அதி திதேவோபவா எனும் உயர்ந்த அறமான விருந்தோம்பலும் நிறைவேறப் பெற்ற புனித நாளும் அட்சய திருதியையாகும் எனக் கூறப்படுகிறது.

வறுமையில் வாடிய குசேலர் பால்ய நண்பன் கண்ணபிரானை பிடி அவலுடன் காணச் சென்றார். அந்த அவலை கண்ணபிரான் மகிழ்ந்து உண்டு அய்ஸ்வர்யம் பெருகச் செய்ததும் இந்நாளே. விஜய சாமுண்டீஸ்வரி மகிசாசுரனை வதம் செய்த நாளாகக் கொண்டாடப் படுவதும் இந்நாளே!

மகாகவி காளிதாசனும் தன்னுடைய உத்திர காவாமாமிருதம் எனும் நூலில் திதியிலேயே மிகச் சிறந்தது அட்சய திருதியை என்பார். ஆராதனைக்கும் சுப நிகழ்ச்சிக்கும் ஏற்ற நாள்.


அட்சய திருதியை நாளில் வெள்ளை, மஞ்சள் ஆடை உடுத்தி இஷ்ட தேவதையை வழிபடுவதும் மாதுளை முத்துக்களை சிவலிங்கத்துக்கு அர்ச்சித்தும், குபேர பூஜை செய்ததும் குண்டுமணித் தங்கம் குன்றளவு பெருகிட அட்சய திருதியையை ஆராதிப்போம் - இவை அத்தனையும் புராணக் குட்டிச் சுவர் கதைகளாகும்.

இவற்றில் எள் மூக்கு அளவுக்காவது அறிவு ஏற்றுக் கொள்ளும் சங்கதிகள் உண்டா?

இந்த இந்து மதக் குப்பைகள் இந்நாட்டில் வாழும் கிறித்தவர்களுக்கும், முசுலிம்களுக்கும், மற்ற மதத்தினருக்கும் பொருந்துமா?

கடவுள் என்பதுகூட இந்து மத அடைப்புக் குறிக்குள் சுருண்டு விடுமானால், அது என்ன சர்வ சக்தியும் சர்வ வியாபகமும் வாய்ந்தது?

இந்த நாளில் ஒரு குன்றிமணி அளவுக்கு நகை வாங்கினால்; குன்று அளவு பெருகுமாமே! அப்படியானால் கடந்த ஆண்டு இதே நாளில் நகை வாங்கியவர்களுள் எத்தனைப் பேருக்குக் குன்று அளவுக்குப் பெருகி யிருக்கிறது - கணக்குக் கொடுக்க முடியுமா?

நகை வாங்கியவர்கள் வீட்டில் தங்கம் பெருகிற்றோ இல்லையோ, நகைக் கடைக்காரர்களுக்கு மட்டும் கொள்ளை வியாபாரமும், வருமானமும் பெருகியது என்பது மட்டும் தான் உண்மை. இந்த நாள் வருவதற்கு முன் நகை வியாபாரிகள் ஏடுகளில் முழு பக்கம் விளம்பரம் கொடுத்து மக்களின் வாயில் எச்சில் ஊற வைக்கின்றனர். இதற்கு முன் ஒரே ஒரு நாள் என்ற நிலை இருக்க - இவ்வாண்டு இரண்டு நாள் அட்சய திருதியை என்று சரடு விட்டு, வியாபாரத்தை இரண்டு மடங்கு பெருக்கிக் கொண்டார்கள்.

தங்கம் என்பது அரசின் ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டிய ஒன்று. பண வீக்கம் கட்டுக்குள் இருப்பதற்கு இது இன்றியமையாத நிலைப்பாடாகும்.

பணவீக்கத்தை உண்டாக்கும் வகையில் இதுபோன்ற அறிவிப்புகளைத் தடை செய்ய வேண்டியது பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தலும் அவசியமே

-------------------"விடுதலை” தலையங்கம் 6-5-2011

3 comments:

Anonymous said...

நகைக்கடை வியாபாரிகள் கொள்ளைஅடிக்க கண்டுபிடித்த
ஒரு புதிய வழி.

Anonymous said...

நகைக்கடை வியாபாரிகள் கொள்ளைஅடிக்க கண்டுபிடித்த
ஒரு புதிய வழி.

தமிழ் ஓவியா said...

அட, தடி மாடே!

அட்சய திருதியையாம் - அது இந்நாள்தானாம். இந்த நாளில்தான் குசேலன் தனது பால்ய நண்பன் கண்ணபிரானைப் பார்க்கச் சென்றானாம். போனவன் சும்மா போகவில்லை. கண்ணபிரானுக்கு மிகவும் பிடித்தமான அவலையும் கொஞ்சம் எடுத்துச் சென்றானாம். அவன்தான் வறுமைக் கழுகு புடுங்கித் தின்னும் 27 பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெரும் குடும்பஸ்தன் ஆயிற்றே - கொஞ்சம் அவலைத்தானே எடுத்துச் செல்ல முடியும்? 27 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சென்றானாம் குசேலன். கொஞ்சம் அவலை கிருஷ்ணனுக்குக் கொடுத்த இந்த நாளில் கண்ணபிரான் ஏராளமான செல்வங்களை குசேலனுக்கு வாரி வழங்கினானாம். குசேலன் குபேரன் ஆகி விட்டானாம் - இந்த அட்சய திருதியையில்!

தந்தை பெரியார்தான் நாக்கைப் பிடுங்குமாறு ஒரு கேள்வி கேட்டார்.

ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால் அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தை பெற்று இருந்தால், இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தைகள் எட்டாக இருந்திருக்கும். இந்தக் குழந்தைகள் சோம் பேறித் தடியன்கள் போல் ஒரு வேலைக்கும் இலாயக் கில்லாத மாமிசப் பிண்டங்களாகவா இருந்திருக்கக் கூடும்? இப்படி இருபது வயதுக்கும் மேற்பட்ட மக்களை வீட்டில் வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சை எடுக்கப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இது போலிருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகி இருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்குக் கடவுள் செல்வம் கொடுக்கலாமா? இப்படி ஒரு கூட்டம் நம்மிடம் வந்து பிச்சை கேட்டால் நாம் என்ன சொல்லுவோம்? என்ற அறிவார்ந்த வினாவைத் தொடுக்கிறார் தந்தை பெரியார் (பொன்னி பொங்கல் மலர் 1948 சனவரி).

தடிப்பயல் மாதிரி 8 பிள்ளைகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கிறாயே அட தடிமாடே!, உனக்கு வெட்கம் இல்லையா? என்று சாதாரணமாகக் கேட்பார்களே - அந்த சர்வ சாதாரண புத்திகூட பகவான் கண்ணபிரானுக்கு இல்லையா?

இந்த அட்சய திருதியை நாள் என்பது சோம்பேறி களுக்குச் சோறு போடும் நாளா? உழைக்காமல் ஒருவ னுக்கு லஞ்சமாக அவல் மட்டும் கொடுத்து அதற்குப் பதிலாக அய்ஸ்வரியங்களை வாரிக் குவிக்கும் வடி கட்டின ஊழலுக்கு மஞ்சம் விரிக்கும் மடத்தனமான நாளா? குசேலன் குபேரன் ஆனது என்பது நாட்டு மக்களுக்குக் கெட்ட வழியைக் காட்டும் செயல் அல்லவா?

சோம்பேறியாக இரு - பகவானைக் கெஞ்சு - உனக்குப் பொன் கிடைக்கும் என்பது மக்களைச் சோம்பேறிகளாக்கும் சோணகிரித்தனம் அல்லவா - நியாயமாக அட்சய திருதியையை அரசு தடை செய்ய வேண்டும். அப்படி செய்வதுதான் மக்கள் நல அரசு என்பதற்கு (Welfare State) அடையாளமும் ஆகும்.
-----------விடுதலை 6-5-2011