Search This Blog

22.5.11

பெரியார் மொழியைப் பார்த்த பார்வை - 3

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொல்லுவதற்கு காரணமென்ன? தமிழர் தலைவர் விளக்கம்

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுவதற்கு என்ன காரணம் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ஏனென்றால் இதை அவ்வளவு ஆழமாக சிந்தித்திருக்கின்றார். மதம் என்று வந்தால் அது ஒரு வட்டத்திற்குள் வந்து நின்றுவிடும். அதைத்தான் அய்யா அவர்கள் ரொம்ப அழகாக சொன்னார்.

தமிழ் மொழியை மதங்களிலே சாய்க்காமல்

தமிழ் மொழியை மதங்களிலே சாய்க்காமல் வேண்டும். புரட்சிக் கவிஞர் அவர்கள் இன்னொரு இடத்தில் சொல்லுகின்றார். சமயம் என்ற சூளையிலே தமிழ் நாட்டால் முளையாது என்று.

இந்த விதையைப் பாதுகாத்து கொண்டு வர வேண்டும். இது நல்ல விதை. ரொம்ப பாதுகாப்பான இடத்தில் தான் நட்டிருக்கின்றேன். இந்த நல்ல விதையை எங்கே நட்டிருக்கிறேன் என்றால் சூளையில் நட்டிருக்கிறேன். செங்கல் சூளைக்குள் நாட்டிருக்கிறேன் என்றால் அந்தச் செடி எங்கேயாவது வருமா? வளருமா?

அதனால் தான் சொன்னார். புரட்சிக் கவிஞர் மதம் என்ற சூளையிலே தமிழ் நட்டால் முளையாது என்று. எவ்வளவு அழகாக சொல்லிவிட்டார் பாருங்கள்.

தமிழ் நாட்டின் தெருக்களிலே தமிழ்தான் இல்லை

மனக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை. மாந்தோப்பில் நிழலா இல்லை. தனிப்பரிதான் துன்பமிது தமிழ்நாட்டின் தெருக்களிலே தமிழ் தான் இல்லை என்று சொன்னார். அதற்குரிய வாய்ப்பு ஏன் வரவில்லை?

உடனே அதற்கு விளக்கம் சொல்லுகிறார். அய்யா அவர்கள். பெரியார் கேட்கிறார். ஏன் மொழியைக் கொண்டு போய் மதத்தோடு இணைக்க வேண்டும்? அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்பதுதான் பெரியாரின் கருத்து.

நம்முடைய அரசியல் சட்டத்திலேயே மிகவும் ஆழமான சிந்தனை எது? முதலில் எடுத்தவுடனே நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறோம். sovereign, Democratic secular, Socialist, Republic அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முன்னுரையிலே இது தான் சொல்லப்பட்டிருக்கிறது.

அரசியல் சட்டத்தின் முன்னுரையில்

Soverign என்றால் என்ன? முழு உரிமை பெற்ற, Secular மதச் சார்பற்ற Socialist என்பதை பின்னாலே சேர்த்துக் கொண்டார்கள் மிக முக்கியமாக.

செக்குலர் என்பதற்கு மதச்சார்பின்மை என்று பொருள். இப்பொழுதும் கூட எல்லா மதத்தையும் ஒரே மாதிரி பாவிப்பது என்று தவறான விளக்கத்தைச் சொல்லுகின்றார்கள். இது தவறான அணுகுமுறை என்று பெரியார் சொல்லிவிட்டார். இது தனியே பேச வேண்டிய செய்தி.

பெரியார் அவர்களுடைய மொழி சிந்தனை என்பது வேறு. தமிழை மதத்தோடு சேர்த்து, சேர்த்து சொன்ன பொழுது அதற்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் பெரியார். அப்பொழுது தான் அது பண்பாட்டுப் படை எடுப்பிலிருந்து காப்பாற்ற முடியும் என்று சொன்னார்.

நீச்சர்கள் பேசுவதால் நீச்ச பாஷையா?

துணை வேந்தர் அவர்கள் நல்ல கேள்வி கேட்டார். நீச்சர்கள் பேசுவதால் அது நீச்ச பாஷையா? அல்லது நீச்ச பாஷை பேசுவதால் நீச்சர்களா? இந்த இரண்டு கேள்வியும் ஆழமான சிந்தனைக்கு உட்பட்டது.

உலகத்திலேயே எந்த பாஷையாவது நீச்ச பாஷை என்று சொல்லியிருக்கின்றார்களா? நீக்ரோக்கள் பேசக் கூடிய மொழியாக இருக்கலாம். இன்றைக்கு நீக்ரோ என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்த முடியாது. அமெரிக்கன் பிளாக், ஆஸ்ட்ரேலியன் பிளாக் தங்களை கறுப்பர்கள் என்று அழைப்பதைத் தான் அவர்கள் விரும்புகிறார்கள். கனடியன் பிளாக் என்று பெருமையாகச் சொல்லுகிறார்கள். எங்களுடைய கலாச்சாரம் கறுப்புக் கலாச்சாரம் என்று சொல்லுகிறார்கள்.

தமிழ் மொழிக்கும், தமிழனுக்கும் அனுமதியில்லை

அவர்களைக் கூட கொச்சையான மொழி பேசுகிறவர்கள் என்று அவர்கள் ஒதுக்கி வைக்கவில்லை. ஒரு பக்கம் கண்ணுதற் கடவுள் கழக மோடமர்ந்து என்று சொல்லுகின்றான். அப்புறம் ஏன் உள்ளே போக முடியவில்லை.

அந்த மொழிக்கு சுயமரியாதை வராத காரணத்தால் தான் இன்னமும் நம்முடைய கோயில்களிலே நம்முடைய மன்னர்கள் கட்டிய பெரிய கோயிலா கட்டும் அல்லது சிறிய கோயிலாகட்டும் அங்கே தமிழனும் உள்ளே போக முடியவில்லை.

தடைகள் இருக்கின்றன

இப்பொழுது தான் நிலைமை மாறியிருக்கிறது. இதற்கும் பல தடைகள் இருக்கிறது. கோயில்குள்ளே தமிழும் போக முடியவில்லை. தமிழனும் உள்ளே போக முடியவில்லை. இதைவிட வேறு கொடுமை என்ன?

அதோடு தமிழன் இல்லத்து மணவிழா என்பதற்கு அடையாளம் என்ன? அங்கே தமிழிலே நடக்கிறதா? இல்லையே. நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் போக முடியாதே.

இன்னமும் சமஸ்கிருதத்தில் தான் திருமணம்

இன்னமும் திருமணம் எப்படி நடக்கிறது? வட மொழியில் புரியாத மொழியில் சமஸ்கிருதத்தில் தானே திருமணத்தை நடத்துகிறார்கள். அந்த மொழி மீது நமக்கு ஒன்றும் கோபமில்லை. சில தமிழ றிஞர்கள் மேதைகள் என்று வந்தவர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள்? அந்த சமஸ்கிருத மொழி உச்சரிப்பால் ஒரு சிறப்பு இருக்கிறது. இது சாதாரண விசயமல்ல. தமிழில் இந்த சிறப்பெல்லாம் கிடையாது என்று சொன்னார்கள்.

ஆனால் மறைமலை அடிகளார் சொன்னார். சமஸ்கிருதத்தைப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் வயிற்று வலிவரும் என்று சொன்னார். இதை வேடிக்கைக்காக நான் சொல்லவில்லை.

மறைமலை அடிகளார் பாடம்

அண்ணா அவர்கள் 1967இல் ஆட்சிக்கு வந்தார். பாடத்திட்ட ஆட்சி மொழிக் குழுவில் இருந்த மு.வரதராசனார் மொழி பற்றிய மறைமலை அடிகளார் கூறிய கருத்துக்களை ஒரு பாடமாக வைத்தார். அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வருவார் என்று நினைத்து மறைமலை அடிகளார் இந்தப் பாடத்தை வைக்கவில்லை. அண்ணா அவர்கள் ஆட்சி காலத்தில் இந்த பாடத்தை எடுக்க வேண்டும் என்று எதிர்த்தார்கள்.

ஆனால் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. மறைமலை அடிகளார் சொன்ன அதே காரணத்தைத் தான் நானும் சொல்லுகிறேன் என்று சொன்னார். மறைமலை அடிகளார் சொன்னார். சமஸ்கிருதப் பாடத்தை வைத்தால் மாணவர்களுக்கு வயிற்று வலியே வரும். தமிழ் மொழியில் இந்த தொந்தரவு இல்லை என்று சொன்னார்.

அண்ணா சொன்னார் மறைமலை அடிகளாரைப் போல ஒரு மொழி அறிஞரே கிடையாது. சமஸ்கிருதத்தை ஆழமாகப் புரிந்தவர். எனவே அவர் விருப்பு, வெறுப்பு இன்றி எதையும் சொல்லவில்லை. விஞ்ஞான ரீதியிலே மருத்துவ தன்மையிலே உளவியல் கூற்றுப்படி மொழியல் அறிஞர் ஆராய்ந்தால் என்ன சொல்லுவார்களோ அதை சொன்னார் என்று அண்ணா சொன்னார். கடைசி வரை அதை எடுக்கவில்லை. அது பாடமாக இருந்தது. அது தான் மிக முக்கியமானது.

பரமசிவனுக்கு உகந்த மொழி அய்யா சொல்லுகிறார் பரமசிவனுக்கு உகந்த பாட்டு தமிழ் என்றால் (அய்யா அவர்கள் மனதிற்குப்பட்டதை பளிச்சென்று சொல்லுவார்) எதிர்ப்பைப் பற்றிக் கவலைப் படமாட்டார்.

பரமசிவனுக்கு உகந்த பாஷை தமிழ் என்றால் வைணவனும், துலுக்கனும் தமிழில் படிப்பது பாவமல்லவா? அந்த மதத்துக்காரன் இந்த மொழியை எப்படி படிப்பான்? மற்ற மதத்துக்காரன் அரேபியாவிலிருந்து வந்தவன் அல்ல. மற்ற மதத்துக்காரன் தான் இஸ்ரேயிலிருந்து குதித்தவன் அல்ல. அல்லது அகதியாக வந்தவன் அல்ல.


இனத்தால் திராவிடர்கள்

நான்கு தலைமுறைக்கு முன்னால் இனத்தால் அவர்கள் திராவிடர்கள். மொழியால் தமிழர்கள். இப்படி எல்லாம் இருக்கிற சூழ்நிலையில் ஏன் அவர்கள் இதைப் பற்றிச் சொல்லவில்லை?

மேலும் சொல்லுகிறார். அந்தப்படி இருந்தால் பார்ப்பனர்கள் தமிழ் மொழிக்கு சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதை பாவம் என்று சொல்வார்களா? ஒரு பெரிய மடத்தினுடைய தலைவர் நான் குளித்து சந்தியாவந்தனம் எல்லாம் பண்ணி விட்டேன். இனிமேல் என்னிடத்திலே தமிழில் பேச முடியாது.

சமஸ்கிருதத்தில் பேசினால்தான் நான் பேசுவேன். இல்லையானால் நான் உங்களோடு பேச முடியாது. நாளைக்கு வாருங்கள் என்று ஒரு தமிழ்ப்புலவர் சொன்னார். அவரும் பார்ப்பனர்தான். அதிலிருந்து அந்த மடத்தலைவரை போய் இவர் பார்க்கவில்லை. இது பற்றிய செய்தியைச் சொன்னவர் இன்றைக்கும் 94 வயதில் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

பேராசிரியர் திரு.என்.சுப்பிரமணியம் என்பது அவர்களுடைய பெயர். வரலாற்றைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். 30, 40 நூல்களுக்கு மேல் அவர் எழுதியிருக்கின்றார். மிகப்பெரிய வரலாற்று அறிஞர் அவர். இன்றைக்கும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். தன்வரலாறு நூலில்

அவன் தன் வரலாறு என்ற நூலை எழுதியிருக் கின்றார். அந்த நூலில் இதை எழுதியிருக்கின்றார். அவர் தான் இந்த செய்தியை சொல்லியிருக்கின்றார்.

காரைக்குடியிலே என்னுடைய தந்தையார் தமிழாசிரியராக இருந்தார். என் தந்தையார் காரைக்குடிக்கு வந்திருந்த சங்கராச்சாரியாரை சந்தித்தார். மறைந்த சங்காரச்சாரியார். இத்தனைக்கும் அவர் இவருக்கு அறிமுகமானவர். காரைக்குடியில் என்.சுப்பிரமணியம் அவர்களுடைய தந்தையார் தான் சங்காரச்சாரியாரை சந்திக்கச் செல்கின்றார். சங்கராச்சாரியார் தான் குளித்து முடித்துவிட்டு சந்தியாவந்தனம் ஜபதபம் எல்லாம் செய்து விட்டு வந்த பிறகு தமிழில் பேச மாட்டேன். சமஸ்கிருதத்தில்தான் பேசுவேன் என்று சொல்லியிருக்கின்றார். அப்படியானால் என் தமிழும் சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய நிலை இருந்தால் உங்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் திரும்பிப் போகிறேன் என்று சொன்னவர் யார்? நீங்கள் ஜாதியை கூட மறந்து விட்டு நினைத்துப் பார்க்க வேண்டும்.

மொழிக்கு சுயமரியாதை...!

இந்த இடத்திலே தன்மானம் மொழி சுயமரியாதை என்று சொன்னார்கள் பாருங்கள். அந்த மொழிக்குரிய சுயமரியாதை வந்ததென்றால் பெரியார் பிறந்த காரணத்தினாலே வந்த உணர்வு. அதற்கு முன்பு அப்படிப்பட்ட சூழல் இல்லை.

பெரியார் தமிழுக்கு விரோதி தமிழுக்கு விரோதமான கருத்துக்களை பெரியார் சொன்னார் என்று சொல்லுகிறார்கள்.

தமிழுக்கு எதிரானவர்

ஆகா பெரியார் தமிழுக்கு விரோதி தமிழுக்கு எதிரானவர் என்று சொல்வதா? கலைஞரோ அல்லது தமிழர்களை விரும்புகிறவர்கள் பெரியாரை பாராட்டினால் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் என்று சொல்வதா? தமிழ்மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று ஏன் எதனால் சொல்லுகிறேன் என்றால் என்று துணிச்சலோடு விளக்கத்தைச் சொன்னார்.

தமிழும் தமிழரும்!

தமிழும், தமிழரும் என்ற ஒரு நூலை நாங்கள் போட்டிருக்கின்றோம். எதையும் ஆதாரத்தோடு நாங்கள் பதில் சொல்லக் கூடியவர்கள். மொழி பற்றி அய்யா அவர்கள் சொல்லும் பொழுது கூட பண்பாட்டுப் படை எடுப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். மக்களுக்குத் தன்மான உணர்வை உண்டாக்க வேண்டும். மொழிக்கும் தன்மானம் இருக்க வேண்டும் என்று சொல்லுகிற பொழுது இங்கே சொல்லுகிறார் பாருங்கள்.

தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழி

தமிழ் மொழியானது ஏன் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுகின்றேன்? எதனால் சொல்லுகிறேன் என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம் என்று நினைப்பது.

அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தைப் பற்றிக் கூட சிந்திக்காமல் பேசிவருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் தமிழ் மொழி மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மொழி என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனையாய்ச் சொல்லிப் பேசுகிறார்கள்.

நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று அதைத்தானே முக்கிய காரணமாய்ச் சொல்லுகின்றேன் (துணிச்சலாக அய்யா, சொல்லுகிறார். அவர் ஒன்றும் நகாஸ் செய்யவில்லை) அன்று இருந்த மக்களின் மனநிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாமினியா கட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும் இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தி இல்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனாவாயா? பிரிமிட்டிங் என்றால் அதன் தத்துவம் என்ன? பார்பேரியன், பார்பனிலும் என்றால் அதன் பொருள் என்ன? 3,000, 4,000ம் ஆண்டுகளுக்கு முன் என்பது பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பனிலும் என்பதற்கு அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பதற்கு என்ன பேதம் கற்பிக்க முடியும்?

இன்று, நமது வாழ்வு கடவுள், மதம், மொழி, இலட்சிம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தனம் பொருந்தியவை தவிர, வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம். வேறு எதில் குரங்கு பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லுகிறார்.

--------------(தொடரும்) -"விடுதலை” 22-5-2011

1 comments:

குணசேகரன்... said...

யப்பா எவ்ளோ பெரிய..நல்ல பதிவு...