Search This Blog

10.5.11

பெரியாரின் பொன்மொழிகள் - 3


உதிர்ந்த மலர்கள்

1. நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால் நமது நாட்டில் மதமும் மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாயிருக்கிறது.

2. சுயமரியாதை இயக்கமானது வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதுதான்.

3. சுயராஜ்யம் கேட்பதற்குமுன் அது ஏன் நமக்கு இல்லாமல் போய் விட்டது என்பதை அறிந்தாயா? என்றைக்காவது இந்து அல்லது இந்தியன் என்கின்ற முறையில் நீ சுயராஜியத்துடன் வாழ்ந்திருக்கின்றாயா?

4. ராமராஜ்யமென்றால் அது இந்துக்கள் ராஜ்யமல்ல. கடவுள் ராஜ்யம் என்று திரு. காந்தி இப்போது புரட்டிக் கொண்டார். ஆனாலும் பரவாயில்லை. அது எந்தக் கடவுள்? அந்தக் கடவுளின் ராஜ்ஜிய தர்மம் எது? அன்றியும் அவர் “என்னுடைய ராமன் வேறு ராமாயண ராமன் வேறு” என்கின்றார். சரி யென்றே வைத்துக் கொள்ளுவோம், ஆனால் அந்த இராமனை அவர் எங்கிருந்து கண்டு பிடித்தார். ராமாயணத்திலா அல்லது வருணாச்சிரமத்திலா?

5. “தீண்டாமை விலகினால் ஒழிய இந்தியா சுயராஜ்யம் பெற முடியாது. பெறுதவற்கும் அருகதை இல்லை” என்று சொன்ன திரு காந்தியார் இன்று சுயராஜ்யத்திற்கு ஆக உப்புக் காய்ச்சப் போவதின் காரணம் என்ன? தீண்டா மையை விலக்கவா அல்லது அது விலகிவிட்ட தென்று நினைத்தா அல்லது சுயராஜ்யம் பெறவா?

6. ஒரு மனிதன் தனக்கு மோக்ஷத்தில் இடம் பிடிப்பதற்கு ஆக வெகு பேர்களை நரகத்தில் (துக்கத்தில்) அழுத்துகிறான்.

7. மாடுகள் தினவெடுத்துக் கொண்டால் உரஞ்சிக் கொள்வதற்கு, தேப்புக்கல் அடித்து நட்டுவைக்கும் இந்து மக்கள் விதவைகளுக்கு என்ன செய்திருக்கின்றார்கள்?

8. மண மென்பது மணமக்களின் மன மொத்ததேயாகும்.

9. வருணாசிரமத்தையும் பிறவியில் ஜாதியையும் தகப்பன் வேலையையே மகன் செய்ய வேண்டுமென்னும் வகுப்பு பிரசாரத்தையும் செய்யும் திரு. காந்தியின் தீண்டாமை விலக்கு பிரசாரத்தை விட அரசாங்கத்தின் மது விலக்குப் பிரசாரம் மோசமானதல்ல.

10. ஒரு குறிப்பிட்ட பண்டிதனை விபசாரிமகன் என்று ஒரு காவியம் எழுதி அதில் அவனையே தன் தாயின் விபசார வியாபாரத்திற்கு தரகனாய் வைத்து அருமையான கற்பனைகளைக் கொண்டு பாடியிருந்தால் அந்த பண்டிதன் அந்தக் காவியத்தின் இன்பத்திற்கும் பொருள் சுவைக்கும் கற்பனை அலங்காரத்திற்கும் ஆசைப்பட்டு அக்காவியத்தை படிப்பானா காப்பாற்றுவானா? ஓ கவிச்சுவைக்காரர்களே பதில் சொல்லுங்கள். கம்பராமாயணம் அதில் சேர்ந்ததா அல்லவா?

11. பெரிய புராணமும் ராமாயணமும் பாரதமும் உள்ள வரை ஜாதி பேதமும் வருணாசிரமமும் ஒழியவே ஒழியாது.

12. சைவமும் வைணவமும் வருணாசிரம மதமே ஒழிய சமரச சமயமல்ல. எப்படி எனில் விபூதி பூசினால் தான் சைவன். நாமம் போட்டால் தான் வைணவன். தீக்ஷையும் சமாசனமும் (முத்திரையும்) பெற்றால் தான் உயர்ந்தவன் என்று மேற்படி இரு மதமும் நிபந்தனை கொண்டிருக்கிறது.

13. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன் பார்ப்பனனைச் சுவாமீ என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

14. சுயமரியாதைக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய் விட்டது.

ஆனால், நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோஷன் போட்டு கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத் தான் சுயமரியாதைக்காரர்கள் செய்கின்றார்கள்.

15. நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திரிதராஷ்டிரனும் பாண்டுவும் அவர்களின் தகப்பனுக்கு பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால் ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின்ற தென்றால் உடனே கோபித்துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

16. மார்ச்சு மாதம் 31 தேதியின் ரயில்வே கைடானது ஏப்ரல் மாதம் 1-ந் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்துவிட்டது. ஆனால் நாம் “திரேதாயுகத்”து கெய்டைப் பார்த்து “கலியுகத்தில்” பிரயாணம் செய்ய வேண்டுமென்கின்றோம்.

17. ஒரு திராவிடன் (தமிழ் மகன்) பார்ப்பன மதத்தில் இருப்பதைவிட மகமதிய மதத்திலோ கிறிஸ்தவ மதத்திலோ இருப்பது கொஞ்சம் கூட தப்பாகாது.

18. பத்து மாதத்துக் குழந்தையைக் கக்கத்தில் வைத்துச் சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்த்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

19. நம்மைப் பார்ப்பனர்கள் சூத்திரர்கள் என்று கூப்பிட்டால் நாம் அவர்களை மிலேச்சர்கள் என்று கூப்பிட்டு வழக்கப்படுத்த வேண்டும்.

20. மேல் நாட்டானுக்குப் பொருளாதாரத் துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம் சமூகம் கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

21. அரசியல் இயக்கம் “முதலில் நாங்கள் இந்தியர்கள் பிறகுதான் பார்ப்பனர்கள், பரையர்கள் என்று பார்க்க வேண்டும்” என்று சொல்லுகின்றது. ஆனால் சுயமரியாதை இயக்கமோ முதலில் நாங்கள் மனிதர்கள், பிறகுதான் இந்தியர்கள் அய்ரோப்பியர்கள், என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

22. வெள்ளைக் காரர்களை ஆதரிக்க இந்தியாவில் சட்டைக் காரர்கள் இருப்பது போலவே, ஆரியர்களை ஆதரிக்க சைவ, வைணவ மதக்காரர்கள் இருக்கிறார்கள்.

23. ஸ்தல புராணங்கள் என்பதெல்லாம் அன்னிய நாட்டு சரித்திரங் களையும் ஆராய்ச்சி சக்திகளையும் அறியும் ஆற்றல் கொண்டதாய் இருக்க வேண்டுமே யொழிய “எவ்வளவு பாபம் செய்தாலும் ஸ்த்தலத்தின் தூசி மேலே பட்டால் மோட்சத்திற்கு போகலாம்” என்பதாக இருக்கக் கூடாது.

24. மேல் நாட்டு வித்துவான்களும் பண்டிதர்களும் புதிய கருத்துக் களையும் புதிய காட்சிகளையும் கண்டு பிடிப்பதில் தங்கள் அறிவைச் செலுத்தி வருகிறார்கள். இந்தியப் பண்டிதர்களோ, முன் ஒருவன் எழுதி வைத் ததை குருட்டு உருப்போட்டு புதிய தத்துவார்த்தம் கூறுவதிலும், கொங்கை, அல்குல், துடை, உதடு, கூந்தல் ஆகியவைகளை வர்ணிப்பதுகளிலும் கடவுளைப் பற்றி போராடுவதிலும், கண்ணில் நீர் பெருகப் பாடுவதிலும் கருத்தைச் செலுத்தி வருகிறார்கள்.

25. ஒரே வஸ்துவைத் தலையில் இருக்கும் போது கூந்தல் என்று அழைக்கின்றோம் எண்ணை போட்டு சீவுகின்றோம். வாசனை கட்டுகின் றோம். ஆனால் அது அந்த இடத்தைவிட்டு நழுவி விட்டால் நேரே அதை குப்பைத் தொட்டியிலேயே கொண்டு போய்ப் போட்டு விடுகின்றோம். அதற்கு தலைக்கும் குப்பைத் தொட்டிக்கும் மத்தியில் ஒரு ராஜியோ சமாதானமோ செய்யத் தகுந்த வேறு இடம் எதுவுமே கிடையாது.

26. இந்தியாவுக்கு ஜனநாயகக் கொள்கை கூடவே கூடாது? ஏனென் றால் ஜனங்களில் 100க்கு 90 பேர்கள் பாமர (மூட) மக்கள். 100க்கு 97 பேர்கள் “இழி மக்கள்”. இவர்களது நாயகத்துவம் நாட்டைச் சீர்படுத்துமா?

27. ஒரு பார்ப்பான் தன்னை இந்தியா முழுமைக்கும் 33 கோடி மக்களுக்கும் பிரதிநிதி என்று சொல்லும் போது நான் ஒரு மூலையில் ஒரு வகுப்பாருக்கு பிரதிநிதி என்று சொன்னால் இதில் எவ்வளவு நஷ்டம் வந்து விடும்?

28. மனிதன் ஒரு நாளைக்கு இரண்டு தடவை மலத்தைத் தொடு கின்றான் - அதற்காக உடனே குளிப்பதில்லை - சதா றோட்டில் மலம் எச்சில் மூத்திரம் ஆகியவைகளை மிதித்துக் கொண்டு நடக்கிறான். அதற்காக வும் உடனே குளிப்பதில்லை. நதிக்கும் குளத்திற்கும் குளிக்கப் போய் குளித்து விட்டு தண்ணீர் கொண்டுவரும் ஸ்ரீகள் றோட்டில் மலம் எச்சில் மூத்திரம் முதலியவைகளை மிதித்துக் கொண்டு வருகிறார்கள். அதற்காகவும் குளிப்ப தில்லை. ஆனால் ஒரு “பறையரையோ” ஒரு “சூத்திரனையோ” தொட்டு விட்டால் - அவன் வேஷ்டி மேலே பட்டு விட்டால் - அவன் தண்ணீர் குழாயிக்கு பக்கத்தில் நின்று தண்ணீர் பிடித்த ஈரத்தை மிதித்து விட்டால், உடனே குளிக்க வேண்டுமென்கிறான். இவனுக்கு சுயராஜியம் வேண்டுமாம்.

29. வீதியில் மல மூத்திரம் எச்சில் மிதித்துக் கொண்டு நடந்து நமது வீட்டுக்கு பிச்சைக்கு வந்த பார்ப்பான், நமது பட்டுப் பாயைக் கண்டால் தாண்டிக் குதிக்கிறான் - அதை தொட்டால் தீட்டு என்கின்றான்.

30. பூணூல் போட்டதின் கருத்து இன்ன இன்னார் தான் படிக்கத் தகுந்தவர்கள் என்பதை காட்டுவதற்காகவும் “சூத்திரன்” இன்னான் என்று கண்டு பிடிப்பதற்கு ஆகவும் தான். அதனால் தான் மேலே வேஷ்டி போடுவது கூட மரியாதைக் குறை வென்று செய்யப்பட்டிருக்கிறது.

31. பார்ப்பனர்களைத் தவிர மற்றைய பெரும்பாலும் தொழிலாளிகளே பூணூல் போட்டுக் கொண்டிருப்பதின் காரணம் அக்காலத்தில் தொழிலாளிகளுக்கு ஏற்பட்ட ஒரு வித சுயமரியாதை உணர்ச்சியேயாகும்.

32. பார்பார்கள் எவன் பெண்ணுக்கோ பொட்டுக் கட்டி சிங்காரித்து கோவிலில் நிறுத்தி ஆள்களைத் தருவித்து கொள்ளை அடிக்கிறார்கள். இந்த வழக்கத்தை நிறுத்த வேண்டுமென்றால் இந்து மதம் கெட்டுப் போகுமாம்.

33. இரண்டாயிரம் வருஷமாக இந்திய மக்களுக்கு இருக்கும் இழிவை யும் அவமானத்தையும் விட உப்புச் சட்டம் அவமானம் என்று ஒரு தேசிய வாதி சொல்வதானது உண்மை அவமானத்தை மறைப்பதற்கு செய்யும் சூக்ஷியேயாகும்.

34. உப்புச் சட்டம் தேசத்திற்கு பெரிய அவமானம் என்று திரு மாளவியா இப்போது சொல்லுகிறார்.

ஆனால் சூத்திரப் பட்டம் தேசத்திற்கு பெரிய கவுரவமா என்று அவரை வணக்கமாகக் கேட்கின்றோம்.

இந்த நாட்டில் ஒரு “சூத்திரன்” உப்பு சத்தியாக்கிரகம் செய்வதைப் போன்ற சுயமரியாதை அற்ற தன்மை வேறு ஒன்றுமே இல்லை யென்று உறுதியாகச் சொல்லுவேன்.

35. பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருக்கும் அரசர்கள் “மகா விஷ்ணுவின் அவதாரமாவார்கள்”. “சூத்திரர்களுக்கும்” “பறையர்களுக்கு” அனுகூலமாயிருக்கும் அரசர்கள் இராக்ஷதர்கள், நீச்சர்கள், கெடுங்கோன்மை காரர்கள், அன்னியர்கள் ஆவார்கள். இதுதான் பார்ப்பன தர்மம்.

36. சீதையின் கற்பு விஷயத்தைப் பற்றி நான் என்ன சொல்லுகிறேன் என்பதைக் கவனிக்காதீர்கள். அந்தம்மாளுடன் நெருங்கிப் பழகிய புருஷனாகிய “திரிகாலக்கியானி சாக்ஷாத் ஸ்ரீராம பிரானே” என்ன சொல்லி இருக்கிறார் என்பதைத் தேடிப் பாருங்கள்.

37. ஒருவருடைய எவ்வித அபிப்பிராயத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதை வெளியிடக் கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.

---------------- ஈ.வெ.ரா. -- "குடி அரசு" - பொன்மொழிகள் - 13.04.1930

0 comments: