Search This Blog

18.5.11

சாயிபாபாவா? சர்ச்சை பாபாவா?


மனிதரில் புட்டபர்த்தி சாய்பாபாவும் ஒரு மனிதர்; நமக்கு ஒன்றும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர் மனிதராக மட்டுமே இருந்திருக்கவில்லை. பகவானாகவும்(?) இருந்தார். அதனால்தான் சர்வசக்தி படைத்த அந்த பகவானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாமா எனக் கேட்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அவர் மருத்துவமனை அமைத்தார்;அதில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளித்தார்; இது நல்ல செயல்தான்,வரவேற்கிறோம். ஆனால், இந்த நலப்பணிகள் செய்ய அவர் என்ன செய்து பணத்தை ஈட்டினார்? தன்னைச் சர்வசக்தி உள்ளவராகக் காட்டிக்கொண்டார். அதற்காக சில தந்திரங்களைக் கையாண்டார். அதில் ஒன்று, பகவான் பாபா நோயுற்ற ஒருவரைத் தொட்டார்; அந்த நோயாளியின் நோய் குணமானது என தன் பக்தர்களை நம்பச் செய்தது. இந்தச் செய்தியைப் பரப்பி அப்பாவிப் பக்தர்களைக் கவரும் போதுதான் பகுத்தறிவாளர்கள் கேட்டார்கள். சரி,இது உண்மையானால் சாய்பாபா ஏன் மருத்துவமனை கட்ட வேண்டும்? நோயாளிகளையெல்லாம் வரிசையாக நிற்க வைத்து சாய்பாபா அவர்கள் மீது கையை வைத்தால் போதுமே! நோய் பறந்தோடிவிடுமே!

அவ்வளவு ஏன், தனக்கே உடல்நிலை சரியில்லாத போது ஏன் மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார். அவர் பகவான் அல்லவா? அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்படலாமா?

இந்த சாய்பாபாவுக்கு முன்பு இருந்த சாமியார்கள் எல்லாம் பெரும்பாலும் பரம்பரையாக மடங்களை நடத்திவந்தவர்கள் மட்டும்தான்.அவர்கள் எந்த சித்து வேலைகளையும் செய்ததில்லை. தங்களின் சமயப் பிரச்சாரங்களை மட்டும்தான் செய்து வந்தார்கள்.இந்த சாய்பாபாதான் வெறும் கையில் லிங்கம் எடுப்பது, விபூதி கொடுப்பது, தங்கச் சங்கிலி கொடுப்பது என மாஜிக் வேலைகளைச் செய்து மக்களை ஏமாற்றியவர்.இவர்தான் தனியே ஒருவர் சாமியார் தொழில் செய்து பணம் ஈட்டலாம் என்னும் புதுத் தொழிலைக் கண்டுபிடித்தவர். இன்று நாட்டில் இருக்கும் பல சாமியார்களுக்கு இவர்தான் முன்னோடி. சுதந்திர இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்ட காலகட்டத்தில் மக்களைப் பின்னோக்கி இழுத்துச் சென்றவர்; மூடநம்பிக்கை நோயை அறிவியலின் துணையோடு பரப்பியவர். இதனை யார்தான் மறுக்கமுடியும்?

சாய்பாபா மறந்த நிலையில் அவரைப் புகழ்கின்றவர்கள் அவரது மருத்துவப் பணிகளை, இன்னும் சில மக்கள் தொண்டுகளைப் பாராட்டுகிறார்கள். இது அவரது ஒரு முகம். இதுவும், அவரது இன்னொரு முகத்தை மறைக்க அவர் அணிந்துகொண்ட முகமூடி முகம் அவ்வளவுதான். சுயமாகப் பொருளீட்டித் தொண்டு செய்பவர்களும், மூடநம்பிக்கையால் மக்களை ஏமாற்றிப் பொருள் சேர்த்து அதன் மூலம் தொண்டு செய்பவர்களும் ஒன்றா?

ஒருவர் இறந்து விட்டதாலேயே அவர் புனிதர் என்றும், அவரைக் குற்றமற்றவர் என்றும் சொல்லிவிட முடியுமா?

சாய்பாபாவைப் பற்றி நினைவுகூறுபவர்கள் அவரது அறப்பணிகளை மட்டும் கூறவில்லை.அவரது அற்புதங்களையும் கூறுகிறார்கள்.அதனால்தான் பகுத்தறிவாளர்களும் அந்த அற்புதங்களை அவர் எப்படி நிகழ்த்தினார் என்பதை எடுத்துச் சொல்லவேண்டியவர்களாக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவரது குற்றச் செயல்களையும் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் நேருகிறது.

சாய்பாபா செய்யும் மோசடிகளை முதன்முதலில் தோலுரித்துக் காட்டியது திராவிடர் கழகம்தான். அவர் எப்படி தன் கையில் இருந்து விபூதி வரவழைக்கிறார்? வாயில் இருந்து லிங்கம் எடுக்கிறார்? என்பனவற்றையெல்லாம் மக்களிடம் விளக்கியது. தொடர்ந்து இந்தப் பணிகள் பல்லாண்டுகளாக நடைபெறுவது ஒருபுறம் இருக்க, சாய்பாபாவின் புட்டபர்த்தி ஆசிரமத்தில் நடந்த குற்றச்செயல்களை வெளிப்படுத்துவதற்கென்றே பல வெளிநாட்டினர் தனியே இணையதளத்தையே தொடங்கி அதில் சாய்பாபாவின் சமூக விரோதச் செயல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றனர். ஆஹா பார்த்தீர்களா... வெள்ளைக்காரர்கள்கூட சாய்பாபாவின் பக்தர்களாக இருக்கிறார்கள் என்று இங்கே சிலர் சொல்லிவருவதைப் பார்க்கிறோம். அந்த வெள்ளைக்காரர்களில் சிலர்தான் சாய்பாபாவின் ஒழுக்கக்கேடுகளை இந்த இணையதளத்தில் அம்பலப்படுத்தியுள்ளனர். www.exbaba.com என்ற இணைய தளம் பாபாவை அக்குவேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. சாய்பாபா பற்றி பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது இந்த இணையதளத்தின் நோக்கமாகும். ஏழு முதல் முப்பது வயது வரையுள்ள அவருடைய ஆண் பக்தர்களுடன் சாய்பாபா வைத்திருந்த பாலியல் உறவுகளைப்பற்றி நிறையச் செய்திகள் காணப்படுகின்றன.

இந்த இணைய தளத்தில், டேவிட், மற்றும் ஃபயே பெய்லி ஆகியோரின் கண்டுபிடிப்புகள் (Findings) எனும் அதிகாரப்பூர்வமான ஆவணம் இங்கு முதல் இடத்தைப் பெறுகிறது. டேவிட் மற்றும் ஃபாயே பெய்லி நீண்டகாலம் சாய்பாபாவின் பக்தர்களாக இருந்தவர்கள். தவறான பாலியல் உறவு, மோசடி, கொடுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகியவற்றுடன், சாய் பாபாவைக் கொலை செய்ய முயன்ற ஒரு செய்தியை அவர்கள் சொல்லுகிறார்கள். அதன் விளைவாகப் பல முக்கியமானவர்கள் சாய்பாபா இயக்கத்தில் இருந்து வெளியேறி விட்டனர்.

பெய்லியின் கண்டுபிடிப்புகளும், அவற்றிற்கு முன்னும் பின்னும் சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் இந்த இணையதளத்தில் ஆங்கில மூலத்தில் தரப்பட்டிருக்கிறது. முந்தைய பக்தர்கள் டச்சு மொழியில் கொடுத்துள்ள செய்திகள் ஆங்கில மொழிபெயர்ப்புகளாகத் தரப்பட்டுள்ளன.

சொல்லப்படும் செய்திகளை நம்ப முடியாமல் தலையாட்டுபவர்கள்கூட, திறந்த மனத்துடன் இணைய தளத்தைத் தொடர்ந்து படிப்பார்கள் என நம்புகிறோம். தங்களுடைய சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளத் தொடங்க ஆவல் கொள்ளுவார்கள் எனவும் நம்புகிறோம். உதவி செய்யவும் மேற்கொண்டு தகவல்களைத் தரவும் பலர் இருக்கிறார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

பாபாவின் போதனைகளில் முக்கியமாக வரும் பாலியல் பக்தரின் ஆன்மீகக் கண்ணோட்டத்தைக் குறைத்துவிடுகிறது. அவரின் ஆஸ்ரமத்தில் ஆண்களும் பெண்களும் தனித் தனியாகத்தான் தங்க வைக்கப்படுகின்றனர். திருமணமான தம்பதிகள் மட்டும் சேர்ந்து இருக்கலாம். கடந்த சில ஆண்டுகளாக இது மாறிவிட்டது. ஆண் பக்தர்களை மட்டும் பாபா தனியாக அழைத்து தரிசனம் தருகிறார். அப்போது எவரும் உடன் இருப்பதில்லை. எந்தப் பெண்ணையும் அவர் தனியாக அழைத்துப் பேசுவதில்லை.

பாபாவின் ஓரினச் சேர்க்கை பற்றி முதன் முதலாக எழுதிய அமெரிக்கா தால் ப்ரூக் 1970 - 71- இல் பாபாவுடன் ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருந்தார். தனி தரிசனங்களின் போது பாபா அவரைத் தழுவிக் கொண்டு அவரது பாலுணர்வைத் தூண்டினார் என்று அவர் கூறினார்.

1980-இல் மலேசிய இந்திய மாணவர்கள் ஒரு பெரும் பிரச்சினையை எழுப்பினர். சாய்பாபா தங்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாக அவர்களில் பலர் கூறியது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபா நிறுவியுள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, பாபா தங்களைக் கெடுத்துவிட்டதாக பல மலேசிய இந்திய மாணவர்கள் கூறினர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்த் ஹார்ட் என்பவர் 1990 இளவேனில் காலத்தில் பாபாவைத் தனியாகச் சந்தித்தபோது அவரைத் தழுவிக் கொண்ட பாபா அவரின் உறுப்பைத் தூண்டிவிட்டதாகக் கூறப்பட்ட பிரச்சினை ஹாலந்தில் 1992 ஜனவரியில் பேசப்படத் தொடங்கியது.

கடந்த ஆண்டு இதுபோன்ற பல கதைகள் வெளிவந்தன. இண்டர்நெட்டிலும் பத்திரிகைகளிலும் வந்த செய்திகளைத் தொகுத்து 20 புகார்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றில் 10 நிகழ்ச்சிகளைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களே நேரில் கூறியுள்ளனர். மற்ற 10 நிகழ்ச்சிகளில் இரண்டாம் தரப்பு மனிதர்கள் தகவல் தந்துள்ளனர்.

இத்தகைய தனிச் சந்திப்புகளின்போது பாபாவுடன் பாலியல் தொடர்பு கொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த தால் ப்ரூக், சாம், யங், 15 வயதுச் சிறுவன், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கான்னி லார்சன் இங்கிலாந்தின் கெயித் ஹார்டு, இரானின் செயித் கொராம் ஷெகல், ஜெர்மனியின் ஜென்ஸ் சேத்தி, ஆஸ்திரேலியாவின் ஹான்ஸ் டி க்ரேகர் ஆகிய 8 பேர் நேரடியாகத் தகவல் தந்துள்ளனர்.

பாபாவுடன் 16 ஆண்டுகளாகப் பாலியல் உறவு கொண்டதாக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் பாடியா தெரிவித்துள்ளார். 1986_இல் பாபாவைச் சந்தித்த 23 வயது ஸ்வீடன் இளைஞர் (பின்னர் தற்கொலை செய்து கொண்டார்). இங்கிலாந்து நாட்டு மைக்கேல் பெண்டர் (பின்னர் தற்கொலை செய்து கொண்டார்) 1989-இல் பாபாவைப் பலமுறை தனியாகச் சந்தித்தவர், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 18 வயதுச் சிறுவன் 1998-1999-இல் பாபாவை 8 முறை தனியாகச் சந்தித்தவன், மற்றும் இந்திய மாணவர்கள் பலரும் சாய்பாபா தங்களுடன் பாலியல் உறவு கொண்டதாக ஒப்புக் கொண்டு தகவல் தந்துள்ளனர்.

பாபாவைத் தனியாகச் சந்தித்த போது தங்களின் உறுப்புகளைத் தூண்டிவிட்டதாக அமெரிக்காவின் எம்.டி., ஜெட் கெயர்ஹான், நெதர்லாந்தின் மாத்திஜிஸ் வான்டெர் மீர், இங்கிலாந்தின் டேவிட் பால் டிப்மெக் ஆகியோர் தகவல் தந்துள்ளனர்.

இதுவரை படித்தது பாலியல் குற்றச்சாட்டு.இனி கொலைக் குற்றச்சாட்டு.

சாய்பாபாவின் ஆசிரம வளாகத்தில் கொல்லப்பட்டவர்கள்

1993- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6- ஆம் தேதி இரவு பத்தரை மணி அளவில் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் உள்ள கோயிலுக்குப் பக்கத்திலிருக்கும் சாய்பாபாவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் அவரது படுக்கை அறையில் இருந்த அபாயச் சங்கு ஒலித்தது.

புட்டபர்த்தி நகரத்தையே எழுப்பிய இந்த ஒலியைக் கேட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைத்தடிகளுடன் பாபாவின் படுக்கையறை நோக்கி ஓடினர்.

ஒருசிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில், முதல்மாடியில் தங்கியிருந்த சாய்பாபா தனது அறையின் பின்பக்கக் கதவைத் திறந்து இன்னொரு அறைக்குச் சென்றார்.

ஒருமணி நேரம் கழித்து புட்டபர்த்தி காவல்நிலைய ஆய்வாளர் கே.என். கங்காதர் துப்பாக்கிகளுடன் வர துப்பாக்கிகள் சுடும் சத்தம் 12 முறை கேட்டது.

அடுத்ததாக ஒரு லோக்கல் போலீஸ் ஃபோட்டோகிராபர் புகைப்படம் எடுத்துவிட்டு வெளியே வந்து சொன்னபோதுதான்.... அங்கு என்ன நடந்தது என்பதை அறிய முடிந்தது.

தரைத் தளத்தில் பாபாவின் ஓட்டுநர் ராதாகிருஷ்ணமேனன், அவரது பியூன் மகாஜன் ஆகியோர் கோடரிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

மேலே ஒரு அறையில் சாய்பாபாவின் கல்லூரியில் படிக்கும் சுரேஷ்குமார், சாய்குமார் என்கிற இரண்டு மாணவர்களும், மரைன் என்ஜினியரான சாந்தாராம் ஜெகன்னாத் என்கிற பக்தரும் போலீசாரால் சுடப்பட்டு பிணமாகக் கிடக்கிறார்கள்.

பாபாவின் அந்தரங்க உதவியாளரான பாப்பையா ரத்தம் சொட்ட நின்று கொண்டிருக்கிறார். அந்தக் குடியிருப்பில் பிணங்களோடு கட்டுக் கட்டாக இந்திய , அமெரிக்க ரூபாய் நோட்டுகளும் சிதறிக் கிடக்கின்றன என ஃபோட்டோகிராபர் சொன்னதைக் கேட்டுப் பதறிய பக்தர்கள், பாபாவுக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு, பாபாவின் சகோதரர் ஜானகிராமன், போலீஸ் சுட்டுக் கொன்றார்களே இந்த 4 பேரோடு விஜய், ரவீந்திரா என மொத்தம் 6 பேர் கோடரிகளோடு பாபாவைக் கொலை செய்ய வந்தார்கள். அவர்களைத் தடுத்த டிரைவரையும் பியூனையும் கொலை செய்துவிட்டு பாபாவின் படுக்கை அறைக்குள் நுழைந்து அவரைக் கொல்லப் பார்த்தார்கள். அதைத் தடுத்த அந்தரங்க உதவியாளர் பாப்பையாவைக் கொல்ல முயலும்போது விழித்துக் கொண்ட பாபா, அவர் அறையிலிருந்த அலாரத்தை அலற வைத்துவிட்டு பின்கதவு வழியாகத் தப்பித்துச் சென்றுவிட்டார். கொலைகாரர்கள் 4 பேர் அறையில் பதுங்கிக் கொண்டார்கள். விஜய், ரவீந்திரா ஆகியோர் தப்பி ஓடிவிட்டார்கள். அறைக்குள் இருந்த 4 பேரையும் போலீஸ் பிடிக்க முயன்றபோது அவர்கள் போலீசைத் தாக்கினார்கள். போலீஸ் அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டது என்றார்.

ஜூன் 7-ஆம் தேதி நடைபெற்ற இது உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்பொழுது வெளியான புகைப்படங்களில் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு கொலையாளிகளை நன்கு அடித்ததற்கான அடையாளங்கள் இருந்தன. கொலைச் சம்பவத்தைப் பற்றி எழுத்து மூலமாக யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை எனவே, சம்பவம் நடந்த 12 மணி நேரம் கழித்த பிறகு காவல் நிலைய ஆய்வாளர் கங்காதர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது என பத்திரிகைகள் எழுதின.


அப்போதைய மத்திய அமைச்சர் சவான் உட்பட வி.அய்.பிக்கள் பலர் வந்து பார்த்தனர். ஒருவாரத்திற்குப் பின்பு பக்தர்கள் மத்தியில் பேசிய பாபா, என்னை யாரும் கொலை செய்ய வரவில்லை என்றார். ஒரு மாதம் கழித்து தப்பி ஓடிய விஜய், ரவீந்திரா மகாராஷ்டிரா போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். நாங்கள் பாபாவுக்கு மிகவும் நெருக்கமான பக்தர்கள். பாபாவுக்கு வரும் நன்கொடைகளைச் சிலர் திருடுகிறார்கள். இதை பாபாவிடம் சொல்லப் போனோம். ஆதாராம் தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று பாபா சொல்லிக் கொண்டிருக்கும்போது - கீழ் அறையில் ஓட்டுநரை யாரோ அடிக்கும் சத்தம் கேட்டது. பாபா அறையில் இருந்த அலாரத்தை இயக்கினார். எங்களுடன் வந்த 4 பேரும் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டனர். நாங்கள் தப்பித்துவிட்டோம். பாபாவின் படுக்கையறைக்குப் பல முறை வந்து சென்ற பழக்கமுடையவர்கள் நாங்கள் என்றார்கள்.

எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை என்ற பாபாவின் பேச்சைத் தொடர்ந்து, லோக்கல் போலீஸ், சி.பி.அய். விசாரணை வரை சென்ற அந்த வழக்கில் 18 வருடங்களாகியும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. எங்களுக்கு நியாயம் வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள் இறந்தவர்களின் உறவினர்கள்.

இதுவும் பாலியல் குற்றச்சாட்டுதான்.

6.-12.-2000 நாளிட்ட இந்தியா டுடே இதழில் வெளிவந்தது.

பாபா ஆசிரமப் பள்ளி, கல்லூரிகளில் உள்ள இளம் மாணவர்களையும் பாபா பாலியல் பாலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். தற்போது சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கிருஷ்ணகுமார், என் வகுப்புத் தோழர்களில் நான்கு பேர் எப்படி பாபா அவ்வப்போது தங்கள் உறுப்பில் எண்ணெய் தடவிப் பார்ப்பார் என்று விவரித்திருக்கிறார்கள் என்கிறார்.

ஆனால், பாபாவின் மோகம் முப்பது நாள்தான். பாபா கைவிட்ட பையன்கள் மிகுந்த நையாண்டிக்கும் மன உளைச்சலுக்கும் பதற்றத்திற்கும் ஆளாவார்கள். இதை வெளியாரிடம் ஏன் பெற்றோரிடமேகூடச் சொல்ல முடியாது. ஏனெனில், அவர்களே பாபா பக்தர்களாக இருப்பதுதான் காரணம்.

இந்தியாவில் தற்போதைக்கு பாபா மீது குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவாகவில்லை. அப்படியெனில் பெரும்பாலான பாபாவின் பாலியல் ஒழுங்கீனங்கள் மேற்கத்திய நாட்டினருடன் மட்டுமே நடந்ததா? அமெரிக்கரான ஜெட் கேயெஹார்ன் இதை மறுக்கிறார். பாபா தன்னை 16 வயதில் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சொல்லும் அவர் மேற்கத்திய இளைஞர்கள் பயமின்றி வெளியே சொல்கிறார்கள். இந்தியச் சிறுவர்கள் உள்நாட்டிலேயே இருப்பதால் பயத்தில் மூச்சு விடுவதில்லை; அவ்வளவுதான்என்கிறார். பாபாவிற்கு இந்தியாவெங்கும் செல்வாக்கு இருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேற்கத்திக்காரர்களில்கூட ஒருவரைத் தவிர வேறு யாரும் பாபாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவில்லை. எல்லாக் குற்றச்சாட்டுகளும் இந்தியச் சட்ட வரம்பிற்கு உட்பட்டவையாதலால் பாபாவைக் கோர்ட்டுக்கு இழுக்கும் செல்வாக்கு தங்களுக்கு இல்லை என்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்திருப்பதே காரணம் என்கிறார்கள் விமர்சகர்கள். தவிர, இந்தியாவில் வழக்கைப் பதிவு செய்தாலும் ஓரினச் சேர்க்கை வன்முறையை நிரூபிப்பது கடினம். அத்தகைய குற்றம் இ.பி.கோ. பிரிவு 377- இன் கீழ் வரும் என்றும் இதன்படி ஹோமோசெக்ஸூவல் வன்முறை (ஸோ டோமி) உறவு சட்டப்படி தவறு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று கிரிமினல் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், எழுந்துள்ள புகார்களில் எதுவுமே வன்முறை பற்றிச் சொல்லாததால் முறை கேடாக நடந்து கொண்டதை நிரூபிப்பது கடினம் என்கிறார்கள்.

ஆனால், முன்னாள் சாய் பாபா பக்தர்கள் விடுவதாக இல்லை என்கிறார்கள். ஏதாவது ஒரு வகையில் சட்ட நடவடிக்கையை முடுக்கிவிட்டால் நெருக்கடி தாங்காமல் ஏதேனும் நடக்கும் என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. பாபாவின் பக்தராக 26 வருடங்கள் இருந்த க்ளென் மெலாய் என்பவர் தற்போது பாபாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி வருகிறார். ஒரு காலத்தில் பாபாவைக் கடவுளுக்கும் கடவுளாக ஈடுபாடு காட்டி மதித்தேன். இப்போது அவரது முகத்திரையைக் கிழிப்பதில் உறுதியாக இருக்கும் ஒருவருடன் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். என்கிறார் உறுதியோடு. ஆனால், உண்மைதான் பிடிபடாமல் நழுவுகிறது.

- சான்ஃபிரான்ஸிஸ்கோவிலிருந்து ஆர்தர் ஜே.பயஸூடன்.

சிட்னியைச் சேர்ந்த ஹன்ஸ் டி க்ரேகர் 5 ஆண்டுகள் பாபாவின் தீவிர பக்தராக இருந்தார். நவம்பர் 12 தேதியிட்ட த சண்டே ஏஜ் என்ற பத்திரிகையில் முதல்முதலில் பாபாமீது செக்ஸ் குற்றம் சுமத்தினார்.

குற்றச்சாட்டு (அவர் இந்தியா டுடேக்குக் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தின்படி): நான் அவர் காலைத் தொட்டு வணங்கிய போது அவர் என் தலையை அவரது இடுப்புப் பகுதியில் வைத்து அமுக்கினார். அவர் பிடி லேசாகத் தளர்ந்ததும் நான் என்னை விடுவித்துக் கொண்டேன். பாபா அவர் ஆடையை விலக்கி அரை குறையாக எழும்பியிருந்த அதைக் காட்டினார். நீ அதிர்ஷ்டசாலி என்று சொல்லி அவர் இடுப்பை என் முகத்தில் அழுத்தப் பார்த்தார். நன்கு யோசித்த பிறகு நான் இதைச் செய்ய இங்கு வரவில்லை என்று முடிவு செய்தேன். அவர் மனம் தான் எனக்கு வேண்டும் என்று பாபாவிடம் சொன்னேன். அவர் தன் உடைகளைக் களைந்துவிட்டு, அவர் மனம் என்னிடம்தான் இருப்பதாகச் சொன்னார். இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொண்டார் பாபா.

என்ன நிலை? பாபாவுக்கு எதிராக க்ரேகர் காவல் துறையில் புகார் எதுவும் இதுவரை கொடுக்கவில்லை. ஆசிரம நிருவாகமோ பதில் சொல்ல மறுக்கிறது.

ஜேன் சேத்தி ம்யூனிச்சுக்குக் குடியேறிய ஜெர்மானியர் ஒருவர் பத்து ஆண்டுகள் பாபாவின் விசுவாசியாக இருந்தார். செப்டம்பர், 18 தேதியிட்ட ஃபோகஸ் என்ற இதழில் பாபாமீது செக்ஸ் குற்றம் சுமத்தினார்.

குற்றச்சாட்டு (அவர் இந்தியா டுடேக்குக் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தின்படி): ஒரு தனி அறையில் வைத்து பாபா என்னை அருகில் வரச்சொன்னார். என் உதட்டோடு உதடாக முத்தமிட்டார். பயப்படாதே. இது நல்ல வாய்ப்பு. இதற்காக பலர் மாதக் கணக்கில் காத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் கிடைக்காதது உனக்குக் கிடைத்திருக்கிறது என்றார். பேன்ட் ஜிப்பை அவிழ்த்து, அந்தப் பாகத்தில் கை வைத்தார். ஆனால், என்னுடைய அது எழும்பவில்லை. காரணம், எனக்கு செக்ஸில் ஆர்வமில்லை. நான் மிகவும் வெறுத்துப் போனேன். அது ரொம்பத் தளர்வா இருக்கு. ஆற்றலை வீணாக்காதே என்று அசிங்கமாகப் பேசினார். அன்றுதான் அவர் சுய ரூபத்தைப் புரிந்துகொண்டேன்.

என்னநிலை: சேத்தி ம்யூனிச்சில் பாபாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருக்கிறார். ஆசிரமம் இந்த விஷயத்திலும் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

ஸ்வீடனின் கானி லார்சான் 21 வருடங்களாக பாபா பக்தர். அவரது குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதி லண்டன் த டெய்லி டெலிகிராப் நாளிதழில் அக்டோபர் 20 அன்று வெளியானது.

குற்றச்சாட்டுகள் (இந்தியா டுடேயிடம் கூறியபடி): பாபா என்னைப் பல தனிப்பட்ட நேர்காணலுக்காக அழைத்தார். அவர், தான் கடவுளென்றும் எனது பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறேன் என்றும் சொன்னபோது நம்பினேன். ஆனால், அவர் எனது பிறப்புறுப்புகளைத் தொட்டு எண்ணெய் பூசி விட்டார். மைதுனம் செய்துவிட்டார். அவருக்கும் அதையே செய்யுமாறு என்னையும் கேட்டார். அவர் என்னோடு பலமுறை ஓரல் செக்ஸிலும் ஈடுபட்டார். அவர் என்னிடமும் அப்படியே செய்யும்படிக் கேட்டபோது நான் பின்வாங்கினேன்.

நிலைமை: முறையாக புகார் பதிவு செய்யப்படவில்லை. ஆசிரமம் வாய் திறக்க மறுக்கிறது.

நிழல் ஆட்டம்

சர்ச்சை என்பது சாய்பாபாவுக்கு இன்னொரு பெயர். ஒன்றுகூட நிரூபிக்கப்படவில்லை யென்றாலும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

இவை சாய்பாபாவின் இன்னொரு முகத்தைக் காட்டும் செய்திகள். சில ஆண்டுகளுக்கு முன்னால் சர்ச்சையில் சிக்கிய திருவண்ணாமலை நித்தியானந்தாவைக் கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். இவரைப் போன்ற பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்தான் தற்போது மறைந்த சத்ய சாய் பாபா. பகவானின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளும், கொலைக் குற்றச் சாட்டுகளும், குற்றங்களும் இன்னும் அப்படியே இருக்கின்றன. ஆனால், மதச் சார்பற்ற நாடு என்று அரசியல் சட்டம் வருணிக்கும் இந்தியா, இந்த பகவானுக்கு அரசு மரியாதை கொடுத்து அடக்கம் செய்திருக்கிறது.

  • மணிமகன்

உண்மையை உணர்ந்த பாபாவின் பக்தர்

1985களில் மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்த தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் சாய்பாபாவின் மோசடிகளைத் தோலுரித்துக் காட்டினார். அப்போது அங்குள்ள சாய்பாபா பக்தரான வழக்குரைஞர் ஜெயராமன் என்பவர் சாய்பாபாவைப் பற்றிப் பேசக்கூடாது என்று கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதனைச் சந்திக்கத் தயார் என்று வீரமணி அவர்களும் பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

பிறகு அவர்களிடமிருந்து மூச்சுப் பேச்சில்லை; இரண்டு வருடங்களுக்குப் பிறகு திடீரென்று அதே வழக்குரைஞர் திரு. ஜெயராமன் அவர்களிடமிருந்து ஒரு பதிவு அஞ்சல் வந்தது. (அவரது வழக்குரைஞர் குழுமம் ராம் - ரெய்ஸ் - யாப் ஒரு தமிழர், ஒரு சீனர், ஒரு மலாய்காரர்).

அதில், என்னை உங்களுக்கு நினைவு இருக்குமென்று நினைக்கிறேன். முன்பு புட்டபர்த்தி சாய்பாபா பக்தனாக இருந்து உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய வக்கீல் நான். நீங்கள் சாய்பாபாபற்றிக் கூறியது - 100 க்கு 100 உண்மை என்பது இப்போது எங்கள் அனைவருக்கும் புரிந்துவிட்டது. எப்படியெனில், எங்கள் இளைஞர்கள் பலரை சாய்பாபாவிடம் ஓயிட்பீல்ட் ஆசிரமத்திற்கு ஆன்மீகப் பயிற்சிக்காக அனுப்பினோம். அவர்களிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டார். (Sodomy) ஆண் புணர்ச்சி மற்றும் பலவிதமான ஒழுக்க ஈனத்திற்கு அவர்களை அழைத்துக் கெடுத்துள்ளார். அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து பாபா படங்களைக்கூட போட்டு உடைத்துவிட்டோம். அவர் பற்றிய ஒரு நூலைக் குறிப்பிட்டீர்கள்; அதன் பிரதி இருந்தால் எங்களுக்கு அனுப்பி வைத்து உதவுங்கள் என்று எழுதினார்.

1980-களின் நடுவில் தால் ப்ரூக் அவதார் ஆஃப் நைட் நூலை எழுதினார். பாபாவின் 20 வருடங்களுக்கு முந்தைய காம லீலைகளை அவர் விவரித்திருந்தார். பாபாவின் பக்தர்கள் அதை மறுத்தார்கள். பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழி என்று குறிப்பிட்டார்கள். இப்போது அதன் இரண்டாம் பதிப்பு வந்திருக்கிறது.

பாபாவுக்கு எதிராக செக்ஸ் குற்றம் சுமத்தும் முன்னாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி இந்தியர்களும்கூட அவ்வாறு புகார் கூறுகிறார்கள். ஆனால், புகார் கூறும் யாரும் இந்தியாவில் வசிக்கவில்லை.
எந்தக் குற்றச்சாட்டுக்கும் சாய்பாபா ஆசிரமத்திடமிருந்து பதில் இல்லை.

(இந்தியா டுடே டிசம்பர் 6, 2000)

எவ்வளவு அருவருப்பான மனிதத் தன்மைக்குச் சற்றும் பொருந்தாத கேவலமான மனிதர் இந்தப் பேர் வழி என்று உணர்ந்து கொள்ள இன்னும் தயக்கமா?

ஒழுக்கத்தைப் பாழடிக்கும் பக்தி, அறிவை அபகரித்து அறியாமைக் குழிக்குள் நம்மைத் தள்ளும் பக்தி போதையிலிருந்து விடுபட வேண்டாமா?


சமாதியான சாமியார்

சாய்பாபா மரணமடைந்த போது பத்திரிகைகள் ஸித்தியடைந்தார் என்றும் முக்தியடைந்தார் என்றும் செய்திகள் வெளியிட்டன. அதைப் படித்தபோது, ஜி. நாகராஜன் எழுதிய இந்தக் கதை நினைவுக்கு வந்தது.

மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டுமே பேசிக்கொண்டனர்.

சாமியார் சமாதியாகிவிட்டார். இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார் என்றெல்லாம் பேசிக் கொண்டனர்.

ஊர்ச் சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்தனர். என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும், சாமியார் சமாதியாகிவிட்டார் என்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியேகொண்டு வந்தனர். சாமியார் வெளியே தூக்கி வரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடீரென்று, டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு என்று கத்திக் கொண்டு கூட்டத்தை விட்டு ஓடிவந்தான். உடனே, அத்தனை சிறுவர்களும், மடத்துச் சாமியார் செத்துப் போயிட்டாரு என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக் கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தைவிட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.

- நூல்: ஜி.நாகராஜன் ஆக்கங்கள், பிரிவு: நிமிஷக் கதைகள், தொகுப்பு: ராஜமார்த்தாண்டன், பக்கம்: 433, 43.


சாய்பாபா பற்றி தஸ்லிமா நஸ் ரீன்

சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக கிரிக்கெட் விளையாடாமல் பிரார்த்தனை செய்வதாக அறிவித்த சச்சின் டெண்டுல்கர் குறித்தும் விமர்சனம் செய்துள்ளார் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.

தற்போது ஸ்வீடன் நாட்டுக் குடியுரிமையைப் பெற்று ஸ்வீடனில் பாதுகாப்புடன் வசித்து வரும் இந்த நிலையில், சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக பிரார்த்தனை செய்யுமாறு சச்சின் டெண்டுல்கர் விடுத்த அழைப்பையும் தஸ்லிமா விமர்சித்துள்ளார்.

ஏன் சாய்பாபாவின் மரணத்திற்காக மற்றவர்கள் சோகமாக இருக்க வேண்டும். அவருக்கு 86 வயதாகி விட்டது. அவரை மரணமடைய அனுமதிப்பதுதான் சரியானது, நியாயமானது. சச்சின், அவருக்காகப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்று கூறியுள்ளார் தஸ்லிமா.

இதேபோல இன்னொரு செய்தியில், சாய்பாபா இறந்து விட்டார். 2022 ஆம் ஆண்டுதான் இறப்பேன் என்று முன்பு அவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு முன்பே இறந்து போய் விட்டார் என்று கிண்டலடித்துள்ளார்.

யாரும் சாய்பாபாவின் அஸ்தியைத் தங்களது விரல் நக இடுக்குகளில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்து அதைப் பத்திரப்படுத்த முயல மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று சற்று காட்டமாகவே விமர்சித்துள்ளார்.

ஒரு பாபா போய்விட்டார். இனி ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்தைப் பிடிக்க முயல்வார்கள். காரணம், பக்தி பிசினஸ் தற்போது நல்ல லாபகரமானதாக இருப்பதால் என்று கூறியுள்ளார்.

பாபா குறித்த தஸ்லிமாவின் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

-------------- நன்றி:- ”உண்மை” - மே 1_16 2011

0 comments: