Search This Blog

29.5.14

மூளைக்குள்ளே ஞானக் கண் உண்டா?-மடமைக் கருத்துக்கு மறுப்பு



    அபத்தமா? அறிவியலா?
    அண்மையில் வெளிவந்த ஒரு நூலினைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நூலின் பெயர் அறிவூட்டும் அறிவியல். அதன் ஆசிரியர் ஆர்.சண்முகம் அவர்கள், அந்நூலின்கண் உள்ள ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு, மூன்றாவது கண். அக்கட்டுரை, அறிவியல் ஆய்வு அல்ல; அபத்தக் களஞ்சியம்! அந்தக் களஞ்சியத்துக்குள் நுழைந்து ஒரு கண்ணோட்டம் விடுவோமா?
    நாசமாய்ப் போன நம்பிக்கை

    நூலாசிரியர் பின்வருமாறு தொடங்குகிறார். மனிதனுக்கு ஞானக் கண் என்று ஒரு மூன்றாவது கண் இருப்பதாகக் கீழைநாட்டு மக்கள் நெடுநாட்களாகவே நம்பி வருகிறார்கள். (இவர்கள் எதைத்தான் நம்பவில்லை?) திபெத்திய லாமாக்கள் மெல்லிய மூங்கில் ஊசியால் நெற்றியில் குத்தி, மூன்றாவது கண்ணைத் திறந்து கொள்வது வழக்கம் என்று தெரிகிறது. எப்படி இவருக்குத் தெரிகிறது?
    சொல்லாமலே யார் பார்த்தது?

    இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாகப் பின்வருமாறு எழுதுகிறார். கி.பி.1526-இல், வடமொழி நூல் ஒன்றில் ஞானக்கண், பலகோடிச் சூரியர்களுக்குச் சமமான தேஜஸைத் தருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்த நூலுக்குப் பெயரே இல்லையா? நூலாசிரியர் அவர்களே! கி.பி.1526இல் வடமொழியாகிய சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டிருந்தால் அதனைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிட வேண்டுமா? நூலின் பெயர் சொன்னால் என்ன? சொல்லக் கூடாதா? ஏன்? ஏன்? ஏன்?
    எதற்காக இந்தக் கண்?

    அது என்ன மூன்றாவது கண்? அது என்ன ஞானக்கண்? முகத்தில் உள்ள இரு கண்கள் மட்டும் ஊனக்கண்களா? இது மட்டும் ஞானக்கண்ணா? எதற்காக அந்த மூன்றாவது கண் இருக்க வேண்டும்? அதனால் என்ன பயன்?

    தப்பித்து வந்தாரம்மா!

    முன்பெல் லாம், இந்த நாட்டு மதவாதிகள் _ குறிப்பாக இந்துமதப் பற்றாளர்கள், தமது வேத, ஆகம, இதிகாச, புராணங்களில் கூறப்பட்டிருக்கும் செய்திகளை விளக்குவதற்கு வக்கில்லாமல் அவற்றிற்குத் தத்துவார்த்தம் (உட்பொருள்) என்பதாகத் தத்துப்பித்து என்று கூறித் தப்பித்து வந்தனர்.

    மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம்

    இப்பொழுது, அறிவியல் விரைவாக வளர்ந்து மலர்ந்துவரும் நிலையில் தத்துவார்த்தம் எடுபடாது என எண்ணி மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம் பூசும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அறிவியல் விளக்கம் தர அரும்பாடு பெரும்பாடு படுகின்றனர். அவற்றில் ஒன்றுதான் இந்த மூன்றாவது கண்.

    அது எது?

    மூன்றாவது கண் என்பது எது? என்பதற்கு நூலாசிரியர் எழுதுகிறார். நம் மூளையின் பின்புறம் உள்ள பைனியல் சுரப்பி (Pineal Gland) தான் அது. நெற்றியின் புருவமத்திக்கு நேர் பின்னால் அது அமைந்திருக்கிறது. அதுதான் கீழ்நாட்டறிஞர்(?) கூறும் ஞானக்கண். அதாவது மூன்றாவது கண்!

    இப்படிப் பாடுவரோ?

    பைனியல் சுரப்பி ஒரு கண் என்று மெய்ப்பிக்கப்பட்டிருந்தால், தெரிந்திருந்தால்
    பைனிய லே! இளமானே!
    பச்சைமயில் எனப்
    பார்த்தேன் உனை நானே! என்றும்,
    ஆயிரம் பைனியல் போதாது வண்ணக்கிளியே! என்றும்,
    பைனியல் படப் போகுதய்யா சின்னக்கவுண்டரே! என்றும்,
    இன்றைய திரைப்பாடலாசிரியர்கள் எழுதியிருப்பார்களோ? நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,
    பைனிய லின்பார்வை பாவையர்கள் காட்டிவிட்டால்
    வையகத்தில் காளையர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்! என்று, பாடியிருப்பாரோ, என்னவோ? பாவம்! அவர்களுக்கு, சண்முகனார் சொல்லாமல் விட்டுவிட்டாரே! பைனியல் சுரப்பிதான் மூன்றாவது கண் என நம்புவது வடிகட்டிய மடத்தனம் அல்லவா? பத்தாம்பசலிப் பைத்தியக்காரத்தனம் அல்லவா?





    இருக்கிறதா? இல்லையா?

    சரி, பைனியல் சுரப்பி என்பதாக ஒரு சுரப்பி (Gland) மெய்யாகவே இருக்கிறதா? இருக்கிறது! அய்யமில்லை. மூளையின் பின்னால் ஒரு பட்டாணி அளவில் வெண்சாம்பல் நிறத்தில் உள்ளது. ஆனால் அது கண் அன்று; சுரப்பி! நாளமில் சுரப்பி - (Harmone). இதனை, குளிர் குருதியோட்ட விலங்குகள் (Cold blooded animals)ஒரு வெப்பமானியாகப் பயன்படுத்துகின்றன.
    தட்ப வெப்பத்தைக் கட்டுப்படுத்த, பகலில் வெயிலிலிருந்து ஒளியவும், இரவில் பனிக் குளிரிலிருந்து ஒளிந்து கொள்ளவும் அல்லாமல் இது வேறு ஒன்று செய்வது இல்லை. இது, நீர், உப்புச் சமனிலை, குருதி அமைப்பு செரிமானம், பாலியல் முதிர்ச்சி, பாலியல் நடவடிக்கை ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகிறது. குருதியின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இவைதாம் பைனியல் சுரப்பியின் சில பணிகள்! இது பார்க்கப் பயன்படாது!
    எது கண் என்பது

    ஒன்றைக் கண் என்று சொல்ல, அதற்கு இமை அமைப்பு, தோற்றம், செயல்பாடு (பார்வை) இருத்தல் வேண்டுமே? அப்படி இருந்தால்தானே அது கண்? பைனியல் சுரப்பி அவ்வாறு அமைந்துள்ளதா? பார்வைக்குப் பயன்படுகிறதா? விழிவெண்படலம், கருவிழி, கண்மணி உள்ளனவா? ஒளியின் உதவியால் பார்க்கிறதா? அவ்வாறிருக்க, பைனியல் சுரப்பி எப்படி, கண் ஆகும்? அதனைக் கண் எனக் கதைக்கலாமா?

    சண்முகனார் சாற்றுவது

    இந்தப் பைனியல் ஓணான், தவளை முதலான விலங்கினங்கள் சிலவற்றிற்கும் உள்ளது. சில குறிப்பிட்ட நிறங்களை உட்கவர்ந்து அந்த உறுப்பாற்றலை நிறமாற்றங்களுக்குப் பயன்படுத்துகிறது என்று, நூலாசிரியரே நுவல்கிறாரே? இதிலிருந்து, கண் வேறு; அதன் செயல் வேறு; பைனியல் வேறு; அதன் செயல் வேறு என்பது தெரிகிறது அல்லவா? பின் எப்படி, பைனியல் கண் ஆகும்? அறிவுக் (ஞான) கண் ஆகும்? இதை அறிய எவருக்கும் சராசரி அறிவே போதுமே?

    யார் யார் யார் அவர் யாரோ?

    கீழ்நாட்டவர் கூறும், இந்தப் பைனியலைத்தான் ஞானக்கண் என்று இன்றைய விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் இப்படிக் கருதும் இன்றைய விஞ்ஞானிகள் யார்? அவர்கள் பேர் என்ன? ஊர் என்ன? இவரால் கூறமுடியுமா? அநாமதேயக் கடிதம் எழுதுவதுபோல் அல்லவா எழுதுகிறார்? சரியான அறிவியல் ஆதாரங்கள், அறிவியலாளர்கள் ஆய்வு முடிபுகள் முதலியவற்றை முன்வைக்க வேண்டாமா?

    பார்வைக்குப் பயன்படவில்லையே?

    1958இல் ஆரன் லெர்னர் என்பவர், இந்தச் சுரப்பியிலிருந்து மெலடானின் என்ற நாளமில் சுரப்பித் திரவம், தோலுக்கும் நிறத்திற்கும் மெலானின் (Melanin) என்ற பொருள் பரவுவதை இந்த ஹார்மோன் ஒழுங்குபடுத்துகிறது என்கிறார் நூலாசிரியர். சரி, ஒத்துக்கொள்வோம். கண்ணாக அமைந்து பயன்படுகிறது என்று சொல்லப்படவில்லையே? எப்படி இது இவருக்குச் சான்றாக அமையும்?

    மூளைக்குள் மூங்கில் ஊசியா?

    திபெத்திய லாமாக்கள் மூங்கில் ஊசியால் நெற்றியில் குத்தி பின்புற மூளைக்குக் கீழ் இருக்கும் கண்ணைத் திறப்பார்களாம்! என்ன கற்பனை? மூங்கில் ஊசியால் குத்தினால் முன் தலையின் மண்டை ஓட்டுக்குள் ஊடுருவி பின்புறம் போய்விடுமாமே? தலை என்ன ஆப்பிள் பழமா? ஒரு பக்கம் ஊசியால் குத்தினால் மறுபக்கம் எளிதாக உள்ளே ஊடுருவ? கெட்டியான மண்டை ஓட்டுக்குள் குத்தும்போது உடைந்து போக வாய்ப்புண்டே?
    உள்ளே இருக்கும் மூன்றாவது கண்ணை மூங்கில் ஊசியால் நெம்பித் திறப்பார்களாமே? அந்தக் கண்ணில் ஊசி குத்திவிடாதா? மூன்றாவது கண்ணில் பழுது ஏற்பட்டு விடாதா? திபெத்திய லாமா இப்படிச் செய்யலாமா?

    சூரியனின் சுடர் ஒளி

    மூன்றாவது (ஞான) கண் பல கோடி சூரியர்களுக்குச் சமமான தேஜஸைத் (வெப்பச்சுடரை) தருகிறதாம். அதாவது பைனியல் பல கோடி சூரிய வெப்பச் சுடரைத் தருமாம்! பேர், ஊர் தெரியாத பேர்வழியால் 1526இல் வடமொழியில் எழுதி வைக்கப்பட்டுள்ளதாகத் தம்பட்டம் அடிக்கிறார் நூலாசிரியர் சண்முகம்.
    வானில் கோடானு கோடிக்கணக்கில் விண்மீன்கள் உள்ளன. அவற்றுள் நமது பால்வெளிப் (Milky Way) பகுதியில் உள்ள நமக்கு மிகமிக அண்மையில் உள்ள விண்மீன் நமது சூரியன் (Sun). இந்தச் சூரியன் வெப்பமும் ஒளியும் நிறைந்த ஓர் அணு உலை (ஸிமீணீநீஷீக்ஷீ). இந்த ஒரு சூரியனின் விட்டம் 13,84,000 கி.மீ. இதன் வெளிப்புற வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ். மய்ய வெப்பம் 1 கோடியே 50 லட்சம் டிகிரி செல்சியஸ்.

    2 லட்சத்து 44 ஆயிரத்து 800 கி.மீ. தொலைவு வெளியில் வீசி எறியப்படும் சூரியனின் சுடர்க் கொழுந்து (Prominenees)களின் வெப்பம் எத்துணை மிகுதியாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

    பலகோடி சூரியர்கள் பரப்பும் வெப்பம்

    ஒரு சூரியனின் வெப்பநிலை வீச்சு இப்படி என்றால் வடநூல் கூறுவதுபோல பலகோடி சூரியர்கள் வசதிக்காக 10 கோடி சூரியர் என்று வைத்துக்கொண்டால் அவற்றின் வெப்பச்சுடரொளி (தேஜஸ்) எந்த அளவு இருக்க வேண்டும்? என்ன கேலிக்கூத்து இது?

    உன்னை நம்பி நெத்தியிலே பொட்டு வைச்சேன் மத்தியிலே!

    பலகோடி சூரியச் சுடரொளியைத் தரும் மூன்றாவது கண் வெளியிலுள்ள சூரிய _ சந்திரரின் ஒளிச்சுடரால் தாக்குண்டு சிதைந்து போகாமலிருக்கத்தான் நெற்றியிலே பொட்டு வைக்கிறார்களாம்!
    அந்தப் பொட்டு, கிட்டத்தட்ட ஒன்றரை கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தடுத்து விடுகிறதாம்! என்னமாய் நம் காதில் பூச்சுற்றுகிறார் சண்முகனார்!

    என்ன பொட்டு இது?

    ஆமாம், அது என்ன பொட்டு? தளதளக்கும் சாந்துப் பொட்டா? கமகமக்கும் சந்தனப் பொட்டா? பளபளக்கும் குங்குமப் பொட்டா? பலவண்ண ஒட்டு (Sticker) ப் பொட்டா? என்னவகைப் பொட்டு? இதற்கு இத்துணை ஆற்றல் உள்ளது என்று எந்த அறிவியலார் சொன்னார்கள்? நன்றாயிருக்கிறது கற்பனையின் விற்பனை?

    என்ன செய்கிறது இந்தப் பொட்டு?

    எந்த வகைப் பொட்டாக இருக்கட்டும்! அதிலுள்ள கூட்டுப் பொருள் எப்படி புருவ நடுப் பொட்டின் (Frontal Lobe)வழி உள்ளே புகுந்து, மண்டை ஓட்டினை ஊடுருவி நுழைந்து, மூளையின் வன்மையான நிலைச் சவ்வுப் பொருளைத் (Durametor) துளைத்து, மூளையின் பின்புறம் போய், சண்முகம் கூறும் பலகோடி சூரியர் தேஜஸைத் தடுத்து நிறுத்தும்? பாவம் பைனியல் சுரப்பி! அது படும்பாடுதான் என்னே! என்னே!

    மனதிலே மயக்கமா?

    இப்படி எல்லாம் பினாத்துவது, மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? அல்லது, மனநோயின் மறுபெயரா? மூடத்தனத்தின், மூடநம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்த மூன்றாவது கண் நம்பிக்கை.
    தீயினில் தூசாகும்!
    நூலாசிரியர் சண்முகம் உள்ளிட்ட இத்தகைய மூடநம்பிக்கையாளர்களுக்கு, திபெத்திய லாமாக்கள் உதவிக்கு வரமாட்டார்கள்! அநாமதேய வடநூலும் காப்பாற்றாது!!
    அறிவியல் இதனை அப்படியே ஊதித் தள்ளிவிடும். இது தீயினில் தூசாகும்!
    வேண்டாம் வீண்முயற்சி!
    ஆர்வமூட்டும் அறிவியல் _ என்று பெயர் வைத்துவிட்டு, அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான மூடநம்பிக்கை, மதக்கருத்து, கற்பனைக் கட்டுக்கதைகளுக்கு அறிவியல் முலாம் பூசும் வீண்முயற்சி வேண்டாம்! வேண்டாம், இந்த வெட்டி வேலை!
    விட்டுவிடுங்கள்! நாமும் இத்தோடு விட்டு விடுகிறோம்!

    ------------------- பேராசிரியர் ந.வெற்றியழகன்  மே 16-31 - 2014 "உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

    48 comments:

    தமிழ் ஓவியா said...

    நலிவடைந்த விவசாயம்


    விவசாயம் நலிந்ததா? நலிவடையச் செய்யப் பட்டதா? என்பது முக்கிய வினாவாகும்.

    நாட்டில் 69 சதவிகித மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 63 சதவிகித மக்கள் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆவார்கள்.

    இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் ஒரு தொழிலாகக்கூட அங்கீகரிக்கப்படவில்லை என்பது எத்தகைய கொடுமை!

    திருவாரூரில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் மாநாட்டின் முதல் தீர்மானமே இதுகுறித்ததுதான். விவசாயத்தை ஒரு தொழிலாக அறிவித்திடுக என்பதுதான்;

    விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதி படிப்படியாகக் குறைக்கப்பட்டது என்பது எத்தகைய அவலம்!

    அதன் விளைவு விவசாயத் தொழிலைவிட்டு கிட்டத் தட்ட 77 லட்சம் மக்கள் வேறு தொழிலுக்குச் சென்றுவிட் டனர். நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் விவசாயிகள் இத்தொழிலை விட்டு விலகிச் செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 46 விவசாயிகள் தற்கொலை செய்துகொள் கின்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    நாட்டின் உற்பத்தியில் 30 சதவிகிதம் விவசாயத் துறையில் கிடைப்பவையாகும்.

    அத்தகைய துறைக்கு மத்திய அரசு ஒதுக்கும் தொகை, 90-களில் 6 சதவிகிதமாக இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வாஜ்பேயி தலை மையில் அமைந்தபோது அது வெறும் 1.3 சதவிகிதமாக வீழ்ச்சியுற்றது.

    கிராமங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் 11 சதவிகிதம்தான். விவசாயிகள் வாங்கும் பல்நோக்கு டிராக்டருக்கு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம் 12 முதல் 16 சதவிகிதமாகும். ஆனால், பணக்காரர்கள் வாங்கும் சொகுசு கார்களுக்கு விதிக்கப்படும் வட்டியோ வெறும் 7 சதவிகிதம்தான்.

    ஏழை விவசாயிகள் வாங்கும் கடன்களைத் திருப்பிச் செலுத்திட கடும் கெடுபிடிகள்! ஆனால், பெரும் பண முதலைகளுக்கு வழங்கப்பட்ட கடனோ கோடானு கோடியாகும். அவர்களிடமிருந்து கடனை வசூல் செய்யாமல் வாராக் கடன் என்ற முறையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகை ரூ.1.23 லட்சம் கோடியாகும்.

    விஜய் மல்லையா நடத்தும் கிங் ஃபிஷர் விமான நிறுவனம் நட்டப்பட்டது என்றால், அதனைத் தூக்கி நிறுத்திட மத்திய அரசும், அரசு வங்கிகளும் ஓடோடி வருகின்றன. வங்கிகளுக்கு மட்டும் மல்லையா வைத்துள்ள கடன் பாக்கித் தொகை ரூ.7524 கோடியாம்!

    ஒரு காலகட்டத்தில் (1992-1993) நாட்டின் மொத்த உற்பத்தியில் 41 சதவிகிதமாக இருந்த விவசாய தொழில் 18 சதவிகிதமாக படிப்படியாக பெரும் வீழ்ச்சியை அடைந்துவிட்டது.

    தமிழ் ஓவியா said...


    உலகில் பட்டினிக் குறியீட்டில் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 66 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. உலக வங்கி தரும் புள்ளி விவரப்படி 37 சதவிகித இந்தி யர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே உழலுகின்றனர். உலகில் எடை குறைந்த குழந்தைகளில் 49 சதவிகிதமும், ஊட்டச் சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டதில் 34 சத விகிதமும், உலகில் அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகள் என்ற வரிசையில் 46 சதவிகிதமும் இந்தியாவிற்கே சொந்தமாகும்.

    இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் இந்திய விவசாய தொழில் உரிய முறையில் கவனிக்கப்படாமை தான்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எத்தனையோ நிபுணர் குழுக்கள் நியமிக்கப்பட்டு, முக்கியமான பரிந்துரைகளை வெளியிட்டதுண்டு.

    கணபதி பிள்ளை ஆணையம், கார்த்திகேயன் தலை மையிலான ஆணையம், மணி தலைமையிலான குழு, திரவியம் குழு, அரிபாஸ்கர் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

    1997 ஆகஸ்டு 27 இல் அய்.ஏ.எஸ். அதிகாரி - நில சீர்திருத்த ஆணையர் பெ.கோலப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு (தி.மு.க. ஆட்சியில்) நியமிக்கப்பட் டது. பலனுள்ள பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்டன.

    திருவாரூரில் திராவிடர் கழகம் நடத்திய விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் பெரும் பாலும் அவற்றை மய்யப்படுத்தியுள்ளன.

    முப்போகம் விளைந்த கழனிகள் எல்லாம் வெறிச் சோடி கிடக்கின்றன. விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    வேலை கிடைக்காத மக்கள் நகர்ப்புறங்களுக்கு நகர்கின்றனர். கடன் செலுத்த முடியாத விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

    இந்த நிலையில், மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் வீழ்ச்சியுற்ற விவசாயத் தொழிலை தூக்கி நிறுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

    இத்தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மக்கள் ஆவார்கள். விவசாயத்தைத் தவிர வேறு தொழிலை அறியாதவர்கள்.

    அரசு என்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஜீவாதார தொழில்மீதும், அதில் ஈடுபடும் மக்கள் மீதும் தானே அக்கறை செலுத்தவேண்டும்.

    மத்தியில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இத்துறை யில் அதன் கவனம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை; குஜராத்தைப் பொறுத்தவரை மோடி ஆட்சியில் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொண்டனர் என்பதுதான் உண்மை.

    மாநில அளவில் வளர்ச்சி வளர்ச்சி என்று விளம்பரம் செய்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கலாம். ஆனால், 123 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவை ஏமாற்றிட முடியாது.

    எங்கே பார்ப்போம்!

    Read more: http://viduthalai.in/page-2/81106.html#ixzz333wlmd5o

    தமிழ் ஓவியா said...


    வடமாநிலத்தவர்களும் - உயர்ஜாதியினரும் நிரம்பி வழியும் மத்திய அமைச்சரவை

    புதுடில்லி, மே 28- மத்திய அமைச்சரவையில் வட மாநிலங்களில் இருந்துதான் அதிகம் பேர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்கள். தென்மாநிலங்களில் இருந்து 6 பேருக்கே அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

    நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது. எதிர்பார்த்ததை விட கூடுதல் இடங்கள் கிடைத்தன.

    தொடக்க காலத்தில், எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறாது என்றும், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறின.
    பின்னர்தான் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் அளவில் ஆதரவு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவில், பாரதீய ஜனதாவே தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்குக் பெரும்பான்மையைப் பெற்றது.

    தனித்தே பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணிக் கட்சிகளையும் அமைச்சரவையில் நரேந்திரமோடி இணைத்துள்ளார்.

    அந்த வகையில் அகாலிதளம், லோக் ஜனசக்தி, சிவசேனா, தெலுங்குதேசம் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இருந்தாலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர் களுக்கே அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் உ.பி. முதலிடம் வகிக்கிறது. இந்த மாநிலத் தைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப் பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உண்டு. இதில் 71 தொகுதிகளைப் பா.ஜ.க. வென்றது.
    அதனால்தான் அந்த மாநிலத்திற்கு லாட்டரி பரிசு! அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 8 அமைச்சர் களில் 4 பேர் கேபினட் அமைச்சர்கள் ஆவர். ராஜ்நாத்சிங், உமா பாரதி, கல்ராஜ் மிஸ்ரா மற்றும் மேனகா காந்தி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

    மேலும் வி.கே.சிங், சந்தோஷ்குமார் கங்வார், மனோஜ் சின்கா மற்றும் சஞ்சீவ் பலியான் ஆகியோர் துணை அமைச்சர்கள் ஆவர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து 27 பேர் வெற்றி பெற்றனர். இந்த மாநிலத்திற்கு 4 கேபினட் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.

    பிகார் மாநிலத்தில் இருந்து பா.ஜ.க. கூட்டணிக்கு 23 இடங்கள் கிடைத்தன. அந்த

    மாநிலத்திற்கு 3 கேபினட் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.

    மராட்டிய மாநிலத்தில் 42 தொகுதிகளைப் பா.ஜ.க. கூட்டணி வென்றது. இந்த மாநிலம் 3 கேபினட் உள்பட 6 அமைச்சர்களைப் பெற்றுள்ளது.

    ராஜஸ்தானிலும் பாரதீய ஜனதா முழு அளவு வெற்றியை பெற்றது. ஆனால் இந்த மாநிலத்திற்கு ஒரே யொரு துணை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.
    தென் மாநிலங்களில்...

    தென்மாநிலங்களைப் பொறுத்தவரை 6 அமைச்சர் பதவிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதில் வெங் கையா நாயுடு (ஆந்திரா), சதானந்த கவுடா (கர்நாடகா), பொன்.ராதாகிருஷ்ணன் (தமிழ்நாடு) ஆகியோர் குறிப் பிடத்தக்கவர்கள்.
    நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த ஸ்மிரிதி இரானிக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. (இவர் தேர்தலில் தோற்றவர்).

    அந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அருண்ஜெட்லியும் முக்கிய அமைச்சர் பதவியில் இடம்பெற்றார்.

    கேபினட்டில் உயர்ஜாதியினர்....

    மோடி உள்ளிட்ட 23 கேபினட் உறுப்பினர்களில் மொத்தம் 12 பேர் உயர் ஜாதியினர்.
    என்னென்ன ஜாதியினர்? பார்ப்பனர்கள், ராஜ்புத்திரர்கள், கயஸ்தாஸ், வைசி யர்கள் இவர்கள்தான் வட இந்தியாவில் உயர் ஜாதி யினர். அதேபோல் லிங்காயத்துகள், ஒக்கலிகா மற்றும் மராத்தாஸும் கேபினட்டில் இடம்பெற்றுள்ளனர்.

    எஞ்சிய 11 பேரில் 5 பேர் இதர பிற்படுத்தப்பட் டோர்; இருவர் தலித்துகள்; ஒருவர் பழங்குடி இனத்தவர்.

    தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 10:

    தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் களில் 5 பேர் உயர் ஜாதியினர்; 4 பேர் இதர பிற் படுத்தப்பட்டோர்; பழங்குடி இனத்தவர் ஒருவர்.

    12 இணை அமைச்சர்கள்

    இணை அமைச்சர்கள் 12 பேரில் 4 பேர் பழங்குடி இனத்தவர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர். 3 பேர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்
    பிற்படுத்தப்பட்டோரில் கூட வலிமை வாய்ந்த ஜாட், குஜ்ஜார்கள், யாதவர்கள், கம்மாஸ் ஜாதியின ருக்கே பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

    மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குஸ் வாஹாவுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட் டுள்ளது.

    Read more: http://viduthalai.in/e-paper/81088.html#ixzz333xQDWKN

    தமிழ் ஓவியா said...

    பெயர் வைப்பதற்கு யோக்கியதை வேண்டாமா?

    நரேந்திர மோடி பிரதமர் ஆன அந்த நாளில், மைசூருவில் பிறந்த இரு குழந்தைகளுக்கு மோடியின் பெயரை முன்னாள் பி.ஜே.பி. அமைச்சர் எஸ்.ஏ.ராமதாஸ் என்பவர் சூட்டிவிட்டார். இப்படிப் பெயர் சூட்டப்பட்டது பெற்றோர்களுக்கே தெரியாது.

    ஆண் குழந்தைக்கு நரேந்திர கிருஷ்ணா மோடி என்றும், பெண் குழந்தைக்கு தன்மயி மோடி என்றும் பெயர் சூட்டினாராம்.

    அந்த இரு குழந்தைகளின் கல்விச் செலவை தாம் ஏற்பதாகவும், பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்புத் தரப் படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

    இந்தத் தகவலையறிந்த பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி, காவல்துறையினரிடம் புகாரும் கொடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக பெண் குழந்தையின் தந்தையாரான மஞ்சுநாத் கவுடா கூறியது கவனிக்கத்தக்கது.

    குழந்தை பிறந்த போது மருந்து வாங்க வெளியே சென்றிருந்தேன். அப்போது இவர் பெயர் சூட்டியுள்ளார்.

    என்னிடமோ, என் மனைவியிடமோ, உறவினர்களிடமோ அனுமதி பெறவில்லை.

    அது மாத்திரமல்லாமல் பெயர் சூட்டிய முன்னாள் அமைச்சர் ராமதாஸ் பெண்கள் விவகாரத்தில் ஏற்கெனவே சிக்கி, தற்கொலைக்கு முயற்சித்தவர்.

    அத்தகைய ஒருவர் என்னுடைய குழந்தைக்குப் பெயர் சூட்டிட தகுதி படைத்தவர் அல்லர். நான் என் குழந் தைக்கு என் தாயின் பெயரையே சூட்ட விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பி.ஜே.பி.,காரர்களின் யோக்கியதை எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

    Read more: http://viduthalai.in/e-paper/81092.html#ixzz333xfoYaL

    தமிழ் ஓவியா said...

    அமைச்சராவதற்குத் தனித்தகுதி

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் மதக் கலவரம் நடைபெற்றது. அந்தக் கலவரத்திற்குக் காரண மாக இருந்தவர் என்பதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். தடை உத்தரவை மீறி ஜாதிக் கூட்டத்தை நடத்தியதுதான் காரணம். ஒரு மாத காலம் சிறையில் இருந்திருக்கிறார். கால்நடை மருத்து வரான இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் பி.ஜே.பி.யில் இணைந்தார்.

    சரி, இவருக்கு இப்பொழுது என்ன? ஒன்றும் இல்லை, மோடி அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது. இவர் பெயர் பல்யான் ஜாத்.

    பெயரிலேயே இவர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர் என்பது ஒட்டி நிற்கிறது.

    மோடி அமைச்சரவையில் இதுபோன்றவர்கள் அமைச்சராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பி.ஜே.பி. அமைச்சரவை யில் இடம்பெற இதுபோன்ற மதம் மற்றும் ஜாதிக் கலவரக் கதாநாயகர்கள் கூடுதல் தகுதி பெற்றவர்களே!

    Read more: http://viduthalai.in/e-paper/81092.html#ixzz333xvAEZR

    தமிழ் ஓவியா said...

    உதிர்ந்த முத்து

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும் என்று ஆசைப் படுகிறேன். 2020 இல் முக்கிய நிறுவனங்களில் மேலாண்மைப் பொறுப்புகளில் 30 சதவிகிதம் பெண்கள் இருப்பார்கள்.

    - ஜப்பான் பிரதமர் ஷின்சோஅபே

    பொத்தானை அழுத்துவாராம்

    பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானை நம்பக்கூடாது; ஆனாலும், மோடிமீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. பாகிஸ்தான் வழிக்கு வராவிட்டால், அணுகுண்டு பொத்தானை பிரதமர் மோடி அழுத்துவார். - உத்தவ்தாக்கரே, தலைவர், சிவசேனா

    (பாகிஸ்தானிலும் பொத்தான் உண்டு என்பது இவர்களுக்குத் தெரியாதா?)

    Read more: http://viduthalai.in/e-paper/81101.html#ixzz333yEVdWY

    தமிழ் ஓவியா said...


    சமூக ஒற்றுமை


    ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும், சீர்திருத்தமும் பெறவேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும், தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாகவேண்டியது மிகவும் அவசியமாகும்.

    - (குடிஅரசு, 3.3.1929)

    Read more: http://viduthalai.in/page-2/81105.html#ixzz333yOUnV5

    தமிழ் ஓவியா said...


    ஆசிரியர் அவர்கள் திருக்குவளையில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்று


    தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திருக்குவளையில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்று கலைஞர் தாயார் அஞ்சுகம் மற்றும் முரசொலி மாறன் சிலைகளுக்கு மாலை அணிவித்து, நிழற்படக் காட்சியைப் பார்வையிட்டார்.

    அங்கே வைக்கப்பட்ட தகவல் பலகையில் கீழ்கண்டவாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதினார்

    பாராட்டிப் போற்றிவந்த பழமைலோகம்
    ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுதுபார்
    என்று மாணவப் பருவந்தொட்டே முழங்கி
    வாழ்வில் என்றென்றும் எத்தனைப் பெரும்
    பதவிகளும் புகழாரங்களும் வந்தாலும்
    தன்னை ஒரு மானமிகு சுயமரியாதைக்காரன்
    என்று அழைப்பதில் பெருமைகொண்ட
    முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த
    இல்லம் - திருக்குவளையில் கண்டேன்
    மகிழ்ந்தேன்.

    குவளையில் பிறந்தவர்
    குவலயத்தையே வியப்படையச் செய்த
    குருகுலச்சீடரான வரலாறு பெரும்
    எழுச்சி வரலாறு!

    இதை இளைஞர்கள் கண்டு
    அவரது உழைப்பை என்றும்
    பாடமாக்கி வாழவேண்டுமென
    விரும்பும் அவரது அன்பு இளவல்

    - கி.வீரமணி
    27.5.2014)

    Read more: http://viduthalai.in/page-4/81130.html#ixzz333yfut8b

    தமிழ் ஓவியா said...


    சோவிடம் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்


    உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் திரு சோ ராமசாமி அவர்கள் என்ற செய்தியைப் படித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், திருவாரூரிலிருந்து (26.5.2014) தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு சோவிடம் உடல்நலம்பற்றி விசாரித்தார்.

    உடல்நலம் பெற்று விரைவில் திரும்பிட வாழ்த்து களைத் தெரிவித்துக்கொண்டார்.

    வேறொரு மருத்துவமனையிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு இப்பொழுது மாற்றப்பட்டுள்ளார் சோ.

    Read more: http://viduthalai.in/e-paper/81152.html#ixzz339ZSBT8u

    தமிழ் ஓவியா said...

    எங்கள் பிள்ளைகளும் சாதிப்பார்கள்!

    தமிழ்நாடு முழுவதும் விசைத் தறிகளில் குழந் தைத் தொழிலாளர்களாக இருந்த 840 மாணவ - மாணவிகள் சிறப்புப் பள்ளி களில் சேர்க்கப்பட்டு, கல்வி வாய்ப்பு அளிக்கப் பட்டது. இதில் 795 பேர் பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றனர். இவர் களில் 24 பேர் 450-க்கு மேல் மதிப்பெண்கள் பெற் றனர். 490 மதிப்பெண் பெற்ற அகிலாவின் பெற் றோர் இன்னும் விசைத் தறியில்தான் வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

    எங்கள் பிள்ளைக ளுக்குச் சரியான வாய்ப்புக் கொடுத்தால், சாதித்துக் காட்டுவார்கள் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு அல்லவா!

    Read more: http://viduthalai.in/e-paper/81150.html#ixzz339Za7uD8

    தமிழ் ஓவியா said...

    புரோகிதராக மாறிய அமைச்சர்

    நாகப்பட்டினத்தில், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் - காட்பாடி கிளைக்கு 1700 சதுர அடியில் 54 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது.

    பூமி பூஜை என்று வந்து விட்டால் புரோகிதர் வேண் டாமா? ஏற்பாடு செய்திருந்த புரோகிதர் வரவில்லையாம்.

    புரோகிதர் வரவில்லை யென்றால் அ.இ.அ.தி.மு.க. வைச் சேர்ந்த அமைச்சர் போதாதா?

    மீன்வளத் துறை அமைச் சர் ஜெயபாலே அந்தப் புரோகித வேலைகளைக் கவனித்தாராம்.
    அந்த நேரத்திலே அ.இ. அ.தி.மு.க. பிரமுகர் சொன் னதுதான் நல்ல தமாஷ்!

    தி.மு.க. ஆட்சி என்றால் புரோகிதருக்கு வேலை இல்லை. அ.தி.மு.க. என்றால் எல்லா சடங்குகளும் உண்டு என்று பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்குத் தெரிந் திருக்கவேண்டாமா? என்று நச்சென்று ஒரு கடி கடித் தாராம்.

    கட்சிகளை விட்டுத் தள்ளுங்கள் - அரசு என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டது - எந்தவித மதச் சடங்குகளுக்கும் அங்கு இடம் இல்லை என்று அமைச்சருக்குத் தெரிந் திருக்கவேண்டாமா?

    அதுவும் அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், ஆட்சியிலும் வைத்துக் கொண்டுள்ளவர்கள் மூட நம்பிக்கைகளின் மூட்டை களாக இருக்கிறார்களே!

    (வாழ்க அண்ணா நாமம்!)

    Read more: http://viduthalai.in/e-paper/81150.html#ixzz339ZgIzsv

    தமிழ் ஓவியா said...

    குளிர்காய்வது
    யார்?

    பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதி பர் ராஜபக்சேவை அழைத்த விவகாரத்தில் தமிழ் மக்க ளின் உணர்வுகளைத் தூண் டிவிட்டு சில அரசியல் கட்சிகள் குளிர்காய நினைக்கின்றன. - பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பி.ஜே.பி. தலைவர், மத்திய அமைச்சர்

    எந்த அரசியல் கட்சிகள் இவை? பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த ம.தி.மு.க., பா.ம.க.வையும் குளிர்காயும் பட்டியலில் சேர்த்து விட்டாரே பொன்.ராதாகிருஷ்ணன்?

    தேர்தல் முடிந்த கையோடு பி.ஜே.பி.யோடு இணைய ஆசைப்படுபவர்கள் தாராளமாக இணை யலாம் என்றார் - இப் பொழுதோ இப்படிக் கூறுகிறார் - பாவம் கூட்டணிக் கட்சிகள்!

    Read more: http://viduthalai.in/e-paper/81150.html#ixzz339Zlrdlo

    தமிழ் ஓவியா said...


    ஆனந்தமூர்த்திகளை மிரட்டுவதா?


    16 ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்து நரேந்திர மோடியின் தலைமையில் அமைச்சரவை அமைத் தாகிவிட்டது. யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் மோடி பிரதமர் என்பது நிதர்சனம்.

    தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் நடை பெற்ற உரையாடல்கள், எதிர்விவாதங்கள் அடிப் படையில் பழி வாங்குவது என்று ஆரம்பித்தால், நாடு நாடாக இருக்காது - காடாகத்தான் மாறும். அது ஆளும் நிலையில் இருக்கும், பி.ஜே.பி.க்குத் தான் தலைவலியாகும்.

    கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி. சாகித்ய அகாடமி விருது பெற்ற வரும்கூட. தேர்தலுக்கு முன்னதாக ஒரு கருத்தினை வெளியிட்டதுண்டு.

    நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வரும் பட்சத்தில் நாட்டை விட்டே நான் வெளியேறி விடுவேன். குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தியவர் நரேந்திர மோடி. காந்தி, நேரு போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற இந்திய நாட்டை மோடி ரத்தப் பூமியாக மாற்றி விடுவார் என்று அவர் கருத்துக் கூறியது உண்மைதான்.

    ஆனந்தமூர்த்தி மட்டுமல்ல, நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென், இந்தியப் பத்திரிகைக் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ போன்றவர்கள்கூட மோடி பிரதமருக்குத் தகுதியானவர் அல்லர் என்று கூறியதுண்டு.

    இவர்களால் கூறப்பட்ட சொற்களில் வேறுபாடுகள் இருக்கலாம் என்றாலும், அடிப்படையில் வேறு பாடுகள் ஏதும் இல்லை.

    தேர்தல் முடிவு மோடிக்கு சாதகமாக வந்துவிட்ட தால், கருநாடக மாநிலத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் நமோ அமைப்பினர் எழுத்தாளர் ஆனந்தமூர்த்திக்குக் கடும் நெருக்கடியைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

    ஆனந்தமூர்த்தி பாகிஸ்தான் செல்லுவதற்கு விமான டிக்கெட் எடுத்தும் அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மின்னஞ்சல் வாயிலாகவும், தொலைப்பேசிகள் வாயிலாகவும் அவரை அச்சுறுத்தியும் வருகின்றனர். ஆனந்தமூர்த்தி இந்தியாவைவிட்டு வெளியேறா விட்டால், உலகத்தைவிட்டே வெளியேற்றுவோம் என்கிற அளவுக்குக் கொலை மிரட்டல்களை விட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.

    இதன் காரணமாக ஆனந்தமூர்த்தியின் இல்லத் திற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவேகவுடாவுக்கும் மிரட்டல் வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

    நரேந்திர மோடி பிரதமரானால் அரசியலை விட்டே விலகுவேன் என்று தேவேகவுடா கூறிவிட்டாராம். எப்பொழுது விலகப் போகிறீர்கள்? என்று மிரட்டல்கள் பி.ஜே.பி. வட்டாரத்திலிருந்து.

    இந்தி நடிகர் கமால் ஆர்கான் மோடி பிரத மரானால், டுவிட்டரிலிருந்து மட்டுமல்ல, இந்தி யாவை விட்டே வெளியேறுவேன் என்று சொன்னபடி வெளியேறியும் விட்டார்.

    ஆர்.எஸ்.எஸ்.பற்றி இந்து ஏட்டில் எழுதிய வித்யா சுப்பிரமணியத்திற்கு சில மாதங்களுக்குமுன் கொலை மிரட்டல் வந்ததையும் இத்துடன் இணைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

    இந்தியா முழுமையும் ஊடகங்களில் பணி யாற்றிய பி.ஜே.பி. மதவாத நஞ்சுக்கு எதிர்ப் பானவர்களையெல்லாம் எல்லா வகைகளிலும் நெருக்கடி கொடுத்து வெளியேற்றியதையும் கவனத்தில் கொண்டால், பாசிஸ்டுகள் இப்படித்தானே வரலாற்றில் பல பகுதிகளில் நடந்துகொண்டுள்ளனர் என்ற நினைவு வராமல் போகாது.

    பி.ஜே.பி.யின் இந்த அநாகரிக செயல்பாடுகள் குறித்து பெரிய அளவில் யாரும் வாய்த் திறக்க வில்லை என்பது, நாகரிக உலகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா என்ற வினாவை எழுப்புகின்றது.

    அதிகாரம் என்பது ஆபத்தான கருவி. அதனை லாவகமாகப் பயன்படுத்தத் தவறினால், எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதற்கு இதற்கு முன்னதாக எத்தனையோ எடுத்துக்காட்டுகளும் உண்டு.

    அதுவும் ஆளும் கட்சியாகிவிட்டால், கம்பியின் மீது கண்ணாடிப் பேழையைக் கையில் ஏந்தி நடப்பதற்கு ஒப்பானதாகும்.

    இன்றைக்கு ஏதோ சில காரணங்களுக்காக நிலை கெட்டு குடை சாய்ந்து எழுதும் ஏடுகள், எழுத் தாளர்கள்கூட பேனாவை எதிர்த் திசையில் பிடிக்க வெகுகாலம் ஆகாது.
    அடக்கமாக இருக்கும் வரையில் நல்லது - பாதுகாப்பானதும்கூட!

    Read more: http://viduthalai.in/page-2/81175.html#ixzz339a656KZ

    தமிழ் ஓவியா said...


    சேவை


    சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை. - (குடிஅரசு, 17.11.1940)

    Read more: http://viduthalai.in/page-2/81172.html#ixzz339aSQhqV

    தமிழ் ஓவியா said...

    இட ஒதுக்கீடு - 370 ஆவது பிரிவுகள் குறித்து பி.ஜே.பி. அமைச்சர்களின் கருத்துகள்

    நீக்கிப் பாருங்கள் - அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவீர்கள்!

    கனல் கக்குகிறார் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

    புதுடில்லி, மே 29- சிறுபான்மையினருக்கான இட ஒதுக் கீடு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கிடும் அரச மைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவு நீக்கம் குறித்து மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிராக கண்டனங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

    முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப் துல்லா கூறியதற்கு முஸ்லிம் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கடந்த செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட நஜ்மா, முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல என்றும் பார்சிகள்தான் சிறுபான்மையினர் எனவும் கூறி இருந்தார். இதைக் கண்டித்து, வட இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் கருத்து கூறினர்.

    உ.பி.யில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத் தின் இறையியல் துறை பேராசிரியர் முப்தி ஜாஹீத்கான் கூறியதாவது:

    பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்பது ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. ஆந்திர மாநில அரசு மீது டி.எம்.ஏ.பாய் தொடுத்த வழக்கை 11 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அதில், மாநில வாரியாக எடுக்கப்படும் கணக்கில் 15 சதவீதத் துக்கும் கீழ் உள்ளவர்கள் சிறுபான்மையினர்களாகக் கருதப்படுவார்கள் எனத் தீர்ப்பளித்தனர்.

    தொடக்கக் காலத்தில் அமைக்கப்பட்ட அரசியல் சாசன சட்டப்படி கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களும் சிறுபான்மையினர் ஆவர் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் நம் நாட்டின் ஆறு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினர். எனவே நஜ்மா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை அமல் படுத்த முயற்சிக்கிறார். இது, இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் புறம்பானது. நஜ்மா தனது கருத்தை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்றார்.

    இணை அமைச்சர் கருத்து

    பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், டில்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது. இதற்காக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நடத்தப்படுகிற கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டவர்களில் சிலர், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 370 குறித்த எங்கள் (ரத்து செய்வது) நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டனர்.

    இதன் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிப்பதற்கு மத்திய அரசு தயார். காஷ்மீரில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்போம். இதன் மூலம் அரசின் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களையும், ஏற்றுக்கொள்ளச்செய்வோம் எனக் கூறினார்.

    காஷ்மீர் முதல்வர் கொந்தளிப்பு!

    சிறீநகரில் நேற்று காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ் ஓவியா said...

    ஜம்மு-காஷ்மீர் எங்களுக்கே உரியது. அரசியல் நிர்ணய சபையைக் கூட்டாத வரையில், அவர்களால் (மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு) அரசியல் சாசனத்தின் பிரிவு 370-அய் நீக்க முடியாது. இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீரை இணைத்துக்கொள்ள அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் வழங்கி யுள்ளது. நீங்கள் மீண்டும் இந்தப் பிரச்சினையை (370-ஆவது பிரிவை நீக்குவது) எழுப்பினால், நீங்கள் அரசியல் நிர்ணய சபையை கூட்ட வேண்டும். அதன்பிறகு நாங்கள் பேசுவோம்.

    பாகிஸ்தான் தரப்பு காஷ்மீர் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைத்தான் இப்படி கூறுகிறார்.) இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று பாரதீய ஜனதா எப்போதும் கூறி வந்துள்ளது. அங்கிருந்தும், அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும். ஆனால் இது கொஞ்சம் கூட சாத்தியம் இல்லாத விஷயம். யார் அரசியல் நிர்ணய சபையை கூட்டுவது?

    காஷ்மீர் மாநில அரசுடனான தனது உறவை மத்திய அரசு வலுப்படுத்த வேண்டும். ஆனால் இத்தகைய செயல்பாடு, ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் மத்திய அரசை அன்னியப்படுத்தி விடும். நீங்கள் மாநில அரசுடனான உறவை வலுப்படுத்த இது சரியான வழி அல்ல.

    இது மாநில மக்களுக்கும், நாட்டின் எஞ்சிய பகுதி மக்களுக்கும் இடையேயான இடைவெளியை

    அதிகரித்துவிடும். பாரதீய ஜனதாவின் அரசியல் நிர்ப்பந்தம் எனக்கு புரிகிறது. ஆனால் முதலில் பிற வாக்குறுதிகளில் கவனம் செலுத்துங்கள். மாநில பொருள் சட்டம் தொடர்பாகவும், அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு பற்றியும் வேண்டுமென்றே குழப்பம் உருவாக் கப்படுகிறது.

    அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு வருமுன், பணக்கார பஞ்சாபியர்கள் இங்கு வந்து நிலங்களை வாங்கி விடுவார்கள் என்று மக்கள் பயந்தார்கள். மக்களை காப்பாற்றுவதற்காக மாநில சட்டங்களை இங்கே மகாராஜா அமல்படுத்தினார்.

    இன்றைக்கு எங்களது மாநில சட்டங்களுடன் விளையாடினீர்களேயானால், அப்படியொரு நிலை வந்தால், காஷ்மீருக்கு யாரும் வரமாட்டார்கள்.

    370 ஆவது பிரிவை நீக்குவது பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசத் தொடங்கி உள்ளதாக கூறி இருக்கிறீர்கள். நானும் சம்பந்தப்பட்டவன்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக உள்ளேன். எங்கள் கட்சியில் இருந்து யாரும் உங்களுடன் பேசவில்லை. எந்த அரசியல் கட்சியுடனும் பேச்சு நடத்தியதாக நான் கேள்விப்படவில்லை. பிறகு யாருடன் பேசினீர்கள்?

    அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை நீக்கிப் பாருங்கள். அடுத்து என்ன நடக்கும் என்று ஒவ்வொன் றையும் உங்களுக்கு கூறிக்கொண்டிருக்க மாட்டோம். நீங்கள் செய்யுங்கள். அதன் பின் பாருங்கள்.இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.

    ஆரம்பித்துவிட்டது ஆர்.எஸ்.எஸ்.
    இதற்கு ஆர்.எஸ்.எஸ். பதில் அளித்துள்ளது.

    இது தொடர்பாக அந்த இயக்கத்தின் மூத்த தலைவர் ராம் மாதவ் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், ஜம்மு- காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்காதா? 370 இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஜம்மு- காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதியாகத்தான் இருக்கும். ஜம்மு-காஷ்மீர் என்ன, தன் பெற்றோரின் சொத்து என முதலமைச்சர் உமர் அப்துல்லா நினைத்து விட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    காங்கிரஸ் கருத்து

    இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி நேற்று கருத்து தெரிவிக்கையில், அரசியல் சாசனப் பிரிவு 370 (3) உடன் இணைந்த பிரிவு 370 (2), அரசியல் நிர்ணய சபையின் (தற்போது இது இல்லை) ஒப்புதல் இன்றி, பிரிவு 370-அய் நீக்க முடியாது என்று தெளிவாகக் கூறுகிறது என கூறினார்.

    காங்கிரசின் மற்றொரு மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஜிதேந்திர சிங், மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் பொறுப் பையும் நேற்று ஏற்றுக்கொண்டார். அப்போது வந்திருந்த செய்தியாளர்கள், அரசியல் சாசனப் பிரிவு 370 விவகாரத்தில் சர்ச்சைகள் எழுந்திருப்பது பற்றி கேள்விகள் எழுப்பினர்.

    ஆனால், அவர் பதில் அளிப்பதை தவிர்த்து விட்டார். இங்கே அறிவியல் மணம் கமழ்கிறது. அறிவியல் பற்றித்தான் இங்கே பேசமுடியும். வேறு எதைப் பற்றியும் பேச முடியாது என அவர் கூறி விட்டார்.

    Read more: http://viduthalai.in/e-paper/81149.html#ixzz339bYFmaL

    தமிழ் ஓவியா said...


    பூமியின் நிலத்தோற்றம் மாறுகிறதா? ஏன்? எப்படி?


    பூமியின் நிலத்தோற்றம் மாற்றமடைய சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற செயற்கை காரணங்கள் பல உண்டு. அவை மனிதனாலேயே ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றை தாண்டி பூமியின் நிலத்தோற்றத்தை பெரிதும் மாற்றி யமைப்பது நதிகளே.

    தேவைக்கு அதிகமான தண்ணீரை நிலத்திலிருந்து கடலுக்கு கொண்டு செல்வது மட்டுமா நதியின் வேலை? ஒரு நிலத்தோற்றத்தை காலப்போக்கில் அரித்து தின்னும் ஆற்றலும் நதிக்கு உண்டு. அல்லது வண்டி வண்டியாக வீழ்படிவுகளை கொண்டுவந்து அந்த நிலத்தின் தோற்றத்தை அடியோடு மாற்றியமைக்கும் வல்லமையும் உண்டு.

    உலகில் எல்லா பகுதிகளிலும் காணப்படும் நதிதான், இயற்கையின் தோற்றத்தை மாற்றிக்கொண்டிருக்கும் மற்ற குத்தகைதாரர்களை விட வேகமாகவும், வீரியமாகவும் செயல்படக்கூடியது. போட்டு வைத்த திட்டத்தை நிறை வேற்றாமல் இதற்கு தூக்கமே வராது.

    எல்லா நதிகளுமே தன் சக்திக்கேற்ப பள்ளத்தாக்கு தோண்டுகின்றன. அந்த பள்ளத்தாக்குக்கு உள்ளே அரிப்பதும், சேர்ப்பதுமாக ஜனநாயக கடமையை ஆற்றிக்கொண்டே இருக்கின்றன.

    Read more: http://viduthalai.in/page-7/81185.html#ixzz339cVSqYG

    தமிழ் ஓவியா said...

    இள ரத்தம் பாய்ச்சி மூப்பின் பாதிப்புகளை குறைக்க முடியும்

    மூப்படைவதால் உடலில் ஏற்படும் தாக்கங்களை எதிர்காலத்திலே ஒரு நாள் நம்மால் கட்டுப்படுத்திட முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    மூப்பான சுண்டெலிகளுக்கு இளம் சுண்டெலிகளின் ரத்தத்தை செலுத்தி ஆய்வுகளை நடத்திய நிலையில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அவ்வாறாக ரத்தம் செலுத்தப்பட்ட வயோதிக சுண்டெலிகளின் மூளைத் திறனும் செயற்பாடுகளும் மேம்பட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    இயற்கையான ரசாயனங்களின் பலனால் மூப்படைந்தவர்களின் மூளையிலும் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சுண்டெலிகளில் செய்யப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மனிதர்களிடத்திலும் இனி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வை வழிநடத்திய மருத்துவர் டோனி விஸ் கோரே, நேச்சர் மெடிசின் என்ற நூலில் எழுதியுள்ளார்.

    Read more: http://viduthalai.in/page-7/81185.html#ixzz339ccBlOV

    தமிழ் ஓவியா said...

    நட்சத்திரங்கள் மின்னுவது ஏன்?

    அவை பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் சிறு புள்ளிகளாக கறுத்த வானத்தில் தெரிகிறது. அவற்றில் இருந்து வெளிப்படும் ஒளியில் ஒரு பகுதி பூமியை சுற்றியுள்ள காற்று உள்வாங்கிகொள்வதால் நட்சத்திரம் மின்னுகிறது.

    Read more: http://viduthalai.in/page-7/81190.html#ixzz339dGICPD

    தமிழ் ஓவியா said...


    பல்கலைக் கழகங்களின் அழைப்புகளையேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஜெர்மன் பயணம்


    பெரியாரியல், திராவிட இயக்கம் குறித்து ஆய்வுரை நிகழ்த்துகிறார்

    சுயமரியாதைத் திருமணத்தையும் செய்து வைக்கிறார்!

    சென்னை, மே 30- திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தருமான டாக்டர் கி.வீரமணி அவர்கள் பல்கலைக் கழகங்களின் அழைப்பினை ஏற்று சிறப்புரையாற்ற ஜெர்மன் செல்லு கிறார் அங்கு சுயமரியாதைத் திருமணத்தையும் நடத்தி வைக்கிறார். ஜெர்மனியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் அழைப்பை ஏற்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழ் ஆசிரியருமாகிய டாக்டர் கி.வீரமணி அவர்கள் ஜெர்மனி நாட்டுக்கு பயணமாகிறார்.

    ஜெர் மனியில் பொது இடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் பல்வேறு தலைப்புகளில் உரை ஆற்ற உள்ளார். தந்தை பெரியாரின் மிகப்பெரிய சமூகப் புரட்சிக் கருத்துக்கள், மனித நேய சிந்தனைகள் ஆகியவைகுறித்து ஆய் வுரைகள் நிகழ்த்துகிறார். மேலும், கல்வியில் தேவைப்படும் வளர்ச்சிக்கான செயல்திட்டங்கள்குறித்தும் பேசுகிறார். ஜெர்மனி கொலோன் பகுதியில் நான்கு நாட்கள் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

    ஜூன் மாதம் மூன்றாம் தேதி அன்று பொதுமக்களி டையே திராவிட இயக் கமும், பெரியாரின் பகுத்தறி வுக் கொள்கைகளும் என் னும் தலைப்பில் கொலோன் பகுதியின் மய்யப்பகுதியில் நியூமார்கட் ஜோயெஸ்ட் அருங்காட்சியகம், ராடென்ஸ்ட்ராட்ச் பகுதியில் பேசுகிறார். பொதுமக்களும் பகுத்தறிவாளர்களும் பங்கேற்கிறார்கள். ஜூன் நான்காம் தேதி அன்று இந்தி எதிர்ப்பு இயக்கம் என்னும் தலைப்பில் கொலோன் பல்கலைக்கழத்தில் உரை ஆற்றுகிறார்.

    ஜூன் அய்ந்தாம் தேதி அன்று வட்ட மேசை விவாதத் தில் திராவிட இயக்கமும் பகுத்தறிவு வாதங்களும் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகளும் என்கிற தலைப்பில் நடைபெறும் விவாதத்தில் கொலோன் பல்கலைக்கழகத்தில் தத்துவஇயல் துறை மற்றும் அரசியல் அறிவியல்துறை மாணவர்களுடன் விளக்க உரை ஆற்றுகிறார். ஆகேன் பல்கலைக் கழகத்தில் வரவேற்பு அரங்கத்தில் உரையாற்றுகிறார்.

    ஜெர்மனியில் இருக்கும்போது, டாக்டர் கி.வீரமணி பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை சந்திக்கிறார். மேலும் மாணவர்களுடனான கலந்துரையாடல்களில் பங்கேற்கிறார். ஜெர்மனி பயணத்தில் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணியுடன் துணை வேந்தர் கர்னல் டாக்டர் என்.இராமச்சந்திரனும் உடன் செல்கிறார். ஜூன் ஆறாம் தேதி அன்று ஹெய்டில்பர்க் பல்கலைக் கழகத்தில் உலகமயமாதல் காலக்கட்டத்தில் தமிழ்த் தேசியம் என்கிற தலைப்பில் உரை ஆற்றுகிறார்.

    சுயமரியாதைத் திருமணத்தையும் நடத்துகிறார்

    பெரியார் பகுத்தறிவு சிந்தனைகள் ஜெர்மனியில் பலருக்கும் அறிமுகமாகி பகுத்தறிவாளர்களாக பலரும் அங்கு உள்ளனர். டாக்டர் கி.வீரமணி ஜெர்மனியில் இருக்கும்போது மதத்துக்கு தொடர்பில்லாத சுயமரியாதைத் திருமணத்தையும் நடத்தி வைக்கிறார்.

    ஜூன் ஒன்பதாம் தேதி அன்று சென்னைக்கு திரும்புகிறார்.

    Read more: http://viduthalai.in/e-paper/81217.html#ixzz33FTZWxuO

    தமிழ் ஓவியா said...


    திருமணத்திற்கு ரூ.5 லட்சத்துக்குமேல் செலவு செய்தால் வரி விதிக்கப்படும் கருநாடக அரசு


    பெங்களூரு, மே 30-ஐந்து லட்சம் ரூபாய் அல் லது அதற்குமேல் செலவு செய்து ஆடம்பரமாக திரு மணம் செய்பவர்களிடம் வரி வசூலிக்கும் புதிய சட்டம் விரைவில் அமலாக் கப்படும் என்று கர்நாடக அமைச்சர் ஜெயசந்திரா தெரிவித்தார். சட்டத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் டி.பி. ஜெயசந்திரா நேற்று அளித்த நேர்காணல் கர்நாட காவில் கோடிக்கணக்கில் செலவு செய்து தேவையில் லாமல் ஆடம்பர திரு மணம் செய்கின்றனர். இதனால், யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.

    கவு ரவத்திற்காக ஆடம்பரமாக கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்வதை தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.

    ஆடம்பர திருமணம் செய்வதை தடுக்கும் வகை யில் புதிய சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஆயிரம் பேர்கள் சேரும் திருமணம் மற்றும் ரூ.5லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக செலவு செய்து திருமணம் செய்ப வர்கள் அரசுக்கு கட்டாயம் வரி செலுத்த வேண்டும். இந்த வரிப்பணம், வறு மையில் உள்ளவர்களின் திருமணத்திற்கு பயன்படுத் தப்படும். இதற்கு மாங் கல்ய நிதி என்று பெய ரிடப்பட்டுள்ளது.

    இதே திட்டத்தின் கீழ், கலப்பு திருமணம் செய் வோருக்கும் இந்த நிதி வினியோகிக்கப்படும். இந்து திருமண சட்டம் 1976-ன் படி ஆடம்பர திருமணம் செய்வோரிடம் வரி வசூ லிக்கும் புதிய சட்டம் விரைவில் அமல்படுத்தப் படும் என்று அமைச்சர் கூறினார்.

    Read more: http://viduthalai.in/e-paper/81213.html#ixzz33FTrSHGS

    தமிழ் ஓவியா said...

    பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த நாத்திக மாணவிக்கு தண்டனையா? அமெரிக்க மனித நேய அமைப்பு எதிர்ப்பு

    நியூயார்க், மே30- அமெரிக்காவில் நியூ யார்க்கை அடுத்த எல்மிரா சிட்டி பள்ளியில் கடவு ளுக்குக் கீழாக என்கிற சொற்பதத்தை சொல்ல மறுத்த மாணவிக்குத் தண் டனை வழங்கப்படுவதாக பள்ளி ஆசிரியை மிரட்டி உள்ளார்.

    பள்ளியில் பிரார்த் தனைப்பாடலை மனப் பாடம் செய்து ஒப்பிக்கக் கட்டாயப்படுத்திய ஆசிரியையிடம் மறுப்பு தெரிவித்த மாணவியைத் தண்டிப்பதாக மிரட்டிய ஆசிரியை குறித்து அந்த மாணவி அந்த பகுதியில் செயல்பட்டுவரும் பகுத் தறிவாளர்களுக்கான அமைப்பாகிய அமெரிக் கன் மனித நேய அமைப் பிடம் சென்று புகார் கொடுத்துள்ளார்.

    அந்த அமைப்பின் சட்டப்பிரிவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், மாவட் டத்தின் அலுவலருக்கு ஆசிரியையின் செயலுக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித் துள்ளனர்.

    இளங்கலை பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு பயிலும் அந்த மாணவி ஒரு கடவுள், மத மறுப்பாளர் ஆவார். எந்த நிலையிலும் அவர் பிரார்த் தனைக் கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்புவ தில்லை. ஏனென்றால், கட வுளுக்கு கீழாக என்று சொல்வதை அவர் எதிர்த்து வந்துள்ளார். அது போலவே, அன்றும் வெகு இயல்பாக இருப்பதுபோல் அமர்ந்து இருந்துள்ளார்.

    அதைக் கவனித்த ஆசிரியை எழுந்து நிற்குமாறு கூறி உள்ளார். அதற்கு அம் மாணவி மறுத்திருந்தால் ஒழுங்கின்மை என்று கூறி தண்டனை வழங்கும் நிலை யும் உள்ளது. இதற்கெல் லாம் மேலாக, அனைத்து வகுப்புத் தோழியர்கள் முன்னிலையில் அந்த மாண வியிடம் ஆசிரியை கூறும் போது, பிரார்த்தனைக் கூட்டங்களில் எழுந்து நிற்காமல் போனால், அமெரிக் காவை இழிவுபடுத்திய தாகும் என்றும், அதுவும் இரா ணுவத்தை தனிப்பட்ட வகையில் மரியாதை செலுத்த தவறியதாகவும் கருதப் படும் என்றும், மேலும் தேசத்தின்மீது உள்ள பற்று, தேசத்தின் மீதான விசுவாசம் ஆகியவை வெளிப்படையா கவே கேள்விக்குரியதாகி விடும் என்றும் அந்த மாண வியிடம் ஆசிரியை கூறி உள்ளார்.

    அமெரிக்கள் மனிதநேய அமைப்பின்சார்பில் மோனிகா மில்லர் அனுப்பி கடிதத்தில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவியின் தேசப்பற்று பற்றி கேள்வி எழுப்புவது என்பது அவருக்கு அரசியல மைப்பு அளிக்கும் உரிமை களை மீறுவதாகும். பிரார்த் தனைக் கூட்டத்தில் பங்கேற் காமல் இருக்க அவருக்கு அரசியலமைப்பு சட்டம் உரிமை அளித்துள்ளது.

    அமெரிக்கன் மனித நேய அமைப்பின் சட்டப்பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளி நிர்வாகம் 21 நாட்களில் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பள்ளி நிர்வாகம் இந்த விவகாரத்தில் ஆசிரி யையின் செயல்குறித்து கருத்து எதுவும் கூறாமல் மவுனமாகவே இருந்து வருகிறது.

    அமெரிக்கப் பள்ளிகளில் பிரார்த்தனைக் கூட்டங் களில் பங்கேற்பதுகுறித்த பிரச்சினையால் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர் களிடையே பிரிவினைகளை வளர்ந்து வருகின்றன.

    அதி லும் குறிப்பாக கடவுளுக்கு கீழாக என்கிற சொல்வது குறித்தும், பல கடவுள் களைக் கொண்டுள்ள மதங் களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் கடவுள், மதங்களை மறுக்கும் நாத்திகர்களுக்கு பிரார்த்தனைக் கூட்டங்க ளில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண் டும்.

    Read more: http://viduthalai.in/e-paper/81212.html#ixzz33FUL6uqm

    தமிழ் ஓவியா said...


    சிறிதும் இராது


    பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மை பற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் பற்றியோ கவலை சிறிதும் இராது.

    - (விடுதலை, 10.6.1968)

    Read more: http://viduthalai.in/page-2/81208.html#ixzz33FUYCo7p

    தமிழ் ஓவியா said...


    மூடநம்பிக்கைகளின் மோசமான விளைவுகள்!


    கடவுள் நம்பிக்கை என்பது மனிதனின் தன்னம்பிக் கையைத் தகர்க்கிறது என்பது மட்டுமல்ல; அது மூடநம்பிக்கையாக மாறி பெற்ற பிள்ளையையும், கட்டிய மனைவியையும் கூட நரபலி கொடுக்கக் கூடிய அளவுக்குக் கொலை வெறியை ஊட்டக் கூடியதாக இருக்கிறதே!

    தன் குடும்பக் கஷ்டங்களுக்குப்பிள்ளை பிறந்த நேரம் சரியில்லை என்று தந்தையே தன் பிள்ளையைக் கொன்ற சம்பவங்களைப் பார்த்த பிறகும் இவற்றை எப்படி நியாயப்படுத்துவார்கள்?

    தமிழ்நாட்டில் துறையூரை அடுத்த உப்பலியாபுரம் காவல் துறை சரகத்தைச் சார்ந்தது கோனேரிப்பட்டி, அந்தவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மனைவி ராணி ஆகியோர் உள்ளனர். லாரி ஓட்டுநரான ரவிச்சந்தி ரனின் முதல் மனைவிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகளுக்குத் திருமணம் நடந்து விட்டது. இரண்டாவது மகள் பானுப்பிரியா உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கிறார்.

    இதற்கிடையில் முசிறியையடுத்த கொளக்குடியைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் அமாவாசையன்று நடு வீட்டில் சொந்த மகளை நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும்; செல்வங்கள் கிடைக்கும் என்று கூறவே, ஓட்டுநர் ரவிச்சந்திரன் தன் மகள் பானுப்பரியாவை நரபலி கொடுக்கத் திட்டமிட்டுள்ளான். அவனுக்கு இரண்டாவது மனைவியும், மனைவியின் தந்தையும் உடந்தையாம்.

    நிலைமையைப் புரிந்து கொண்ட பானுப்ரியா வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்து கூக்குரல் போட்டுள்ளார். ஊர் திரண்டு வந்து பார்த்தபோது வீட்டின் நடுவில் குழி தோண்டப்பட்டு இருந்ததாம்; அங்கு தேங்காய், பழம், வெற்றிலை வகையறாக்கள் கிடந்தன; புதிய நபர்கள் சிலர் அங்கு அமர்ந்து கொண்டு பூஜைக்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததும் தெரிந்தது.

    பிரச்சினை காவல் நிலையத்திற்குச் செல்லவே காவல்துறையினர் விரைந்து வந்து அங்குள்ளவர் களைக் கைது செய்தனர். மந்திரவாதி தப்பி ஓடி விட்டான் - காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்று செய்தி வெளி வந்துள்ளது.

    இந்தக் கொலை முயற்சியை என்னவென்று சொல் லுவது! இதுதான் பக்தியா? இதுதான் மூடச் சடங்குகள் காட்டும் நல்வழியா?
    ஆன்மீக இதழ்களைப் பக்கம் பக்கமாக வெளி யிடும் பத்திரிகை முதலாளிகள்தான் இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு - கொலைகார சிந்தனை களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

    நாட்டில் திரியும் நரபலி சாமியார்கள், மந்திர வாதிகளை அடையாளம் கண்டு, காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    செங்கற்பட்டு மாவட்டத்தில் நரபலி சாமியார் ஒருவருக்கு மாவட்ட நீதிபதியாக இருந்த கே.ஆர். சத்தியேந்திரன் தூக்குத் தண்டனையே கொடுத்தார் என்பது இங்கு நினைவூட்டத் தக்கதாகும். தூக்குத் தண்டனை இல்லாவிட்டாலும் கடும் தண்டனை விதிக்க வேண்டும்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விசால நகரில் ஒரு சம்பவம்; எண்ணெய் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவருக்குத் தீராத முதுகு வலி! மருத்துவமனை களுக்குச் சென்றும் பலன் கிட்டவில்லை.

    வைத்தியத்தில் குணம் ஆகவில்லையென்றால் அடுத்து மாந்திரிகம் - தாந்திரிகம் தானே! ராம் சேவக் திவாரி என்ற ஒரு மந்திரவாதி குறுக்கே வந்தான். பூஜைகள் செய்தால் சரியாகி விடும் என்ற அவன் பேச்சைக் கேட்டு ஏமாந்ததுண்டு. மந்திரவாதிக்கு ஆனந்தகுமாரி, லலித்குமாரி, பூஜா திவாரி என்பவர்கள் எடுபிடிகள்!

    கணவனின் நோய் எப்படியாவது குணமாக வேண் டும் என்பதில் குறியாக இருந்த மனைவி பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கேட்ட பணத்தையெல்லாம் வாரி வாரிக் கொடுத்துள்ளார். செலவான தொகை மட்டும் ரூ.1.21 கோடியாம்!

    இதற்கிடையில் அந்த மந்திரவாதி இரவுப் பூஜை செய்ய வேண்டும் என்று கூறினானாம்; அதற்கும் நோயாளியின் மனைவி சம்மதித்தார். விளைவு அந்தப் பெண்ணை தம் காமவெறிக்குப் பலியாக்கினான் மந்திரவாதி. அதற்குமேல் பொறுமை காட்டாத அந்த பெண் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.

    மந்திரவாதியும், அவனின் எடுபிடிகளான மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர். இந்தியத் தண் டனைச் சட்டம் 376, 420, 384 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நியாயமாக மத்திய, மாநில அரசுகள் மந்திரம் மாந்திரிகம், ஜோதிடம் என்பனவற்றை அதிகாரப் பூர்வமாக தடை செய்ய வேண்டும்.

    விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று சட்டத்தில் எழுதி வைத்திருந்தால் மட்டும் போதாது; அதனைச் செயல்படுத்தும் பொழுது, விஞ்ஞானத் தன்மைக்கு எதிரான - மாறான இத்தகைய தீய விளைவுகளுக்குக் காரணமான முறைகளைத் தடை செய்தாக வேண்டும்.

    முதற் கட்டமாக இந்த மந்திரவாதிகளை - ஓரிடத்திற்கு வரவழைத்து அவர்களின் செயல்பாடு களை நிரூபித்துக் காட்ட ஒரு வாய்ப்புக்கூட அளித்துப் பார்க்கலாம்;

    அப்படி நிரூபிக்க இயலாத பட்சத்தில், அத்தகு செயலில் ஈடுபடக் கூடாது என்று முதற்கட்ட மாக எச்சரித்து, அனுப்பலாம்; அதையும் மீறி அவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைக் கூடமாகத்தான் இருக்க முடியும்.

    Read more: http://viduthalai.in/page-2/81207.html#ixzz33FUgpxsw

    தமிழ் ஓவியா said...


    பூசணிக்காய் மகத்துவம்


    புராணத்திலே கூறப்பட்டுள்ள கடவுள்கள் எப்படித் தோன்றினர் என்ற செய்திகளை நாம் படிக்க நேரிடும் போது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மக்களின் அறிவின்மையும் முட்டாள்தனமும் அவர்களுடைய விபரீதமான கற்பனையும் நமக்கு நன்கு தெளிவாகின்றது. அது - விஞ்ஞானம் வளராத காலம்.

    மக்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் இருந்த காலம்.

    அவ்வாறு அவர்களை சிந்திக்க விடாமல் அந்த கடவுளைக் கற்பித்தவர்கள் மக்களை முட்டாள்களாக்கி விட்டிருந்த காலம்.

    அவரவர் வசதி, கற்பனைக்கு ஏற்றவாறு கடவுளை கற்பனை செய்து பரப்பியவர் களும் அதை நம்பி ஏமாந்தவர்களும் வாழ்ந்த காலம்.

    ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் மக்களுடைய சிந்தனை, அறிவு இரண்டுமே இன்னும் புதுப்புதுக் கடவுள்களைக் கற்பிப்பதில்தான் ஈடுபட்டு இருக்கிறது. உண்மையைச் சிந்திக்க மறுப்பதோடு தங்கள் கற்பனையைத்தான் வளர்த்து வருகின்றார்கள்.

    கல்லைக் கடவுள் என்றார்கள் - அதை வணங்கினார்கள். அதற்குப் பால் அபிசேகம், நெய் அபிசேகம் நடத்தினார்கள். எண்ணெய்க் காப்பு சாத்தினார்கள். சாணிக்கு பொட்டிட்டார்கள் - சாமி என்றார்கள். கடவுளின் பெயரால் காலத்தையும் செல்வத்தையும் தங்கள் சக்தியையும் வீணாக்கினார்கள்.

    இன்று இதோ ஒரு புதுக் கற்பனை!

    திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள பல் குலங்கரா என்ற ஊரில் பூசணிக்காய்ப் பொட்டிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு ஊதுபத்தி கற்பூர ஆரத்தி காட்டி இருக்கிறார்கள். பால், நெய் என்றும் இன்னோரன்ன நைவேத்தியம் படைத்து இருக்கிறார்கள்.

    இத்தனையும் செடியிலே பந்து போல் குண்டாகக் காய்க்காமல் நீள் வடிவத்திலே பாம்புபோல் காய்த்துள்ள பூசணிக்காய்க்கு அடித்த சான்ஸ். தினமும் பக்த கோடிகள் ஆயிரக்கணக்கில் அந்த பூசணிக்காயைக் கும்பிட விஜயம் செய்கின்றனர்.

    வளைந்து காய்ந்த பூசணிக்காயைக் கடவுள் என்று வணங்கும் பக்தர்களே! கடவுள் உண்மையில் இருப்பாரேயானால் அந்தச் செடியிலே காய்த்துள்ள அந்த பூசணிக்காய் இன்னும் குறைந்தபட்சம் ஆறு மாதமாவது காய்ந்துப் போகாமல் இருக்குமா?

    ஒரு பூசணிக்காய் இயற்கைக்கு மாறாக வளைந்து காய்த்ததைக் கடவுள் என்று வணங்குகிறீர்களே...! உலகத்தில் இயற்கையாக பிறவாமல் வளைந்த முதுகோடு (கூன்) பிறக்கிறார்களே அவர்கள் எல்லாம் கடவுள்களா? அல்லது பிறவிக் கோளாறுகளோடு பிறக்கிறார்களே அவர்களெல்லாம் கடவுள்களா? அவர்களுக்கு பாலாபிசேகமும், நெய்யாபிசேகமும் செய்தீர்களா? அல்லது செய்ய முன் வருவீர்களா?

    இன்னுமொரு சுவையான செய்தி... இந்தப் பெயரைச் சொல்லி பண்ட் கலெக்சன் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம். இது என்ன நீங்கள் செய்கின்ற விபரீதமான கற்பனைக்கு கூலியா?

    ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு, நாள்: 26.5.1978

    Read more: http://viduthalai.in/page-7/81239.html#ixzz33FVQXq7B

    தமிழ் ஓவியா said...


    கடவுள் எங்கே இருக்கிறான்?


    ஜெபமாலை உருட்டுவதை விடு, அத்துடன் பாட்டையும், மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத் திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயிகளிடமும் கடவுள் இருக்கிறான்.

    அவர்களுடன் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் அவர்களுடைய ஆடையில் தூசி படிந்திருப்பதை பார். ஆகவே, நீயுங்கூட உன் காஷாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதை விடச் சுலபமான வழியும் கிடையாது

    குறிப்பு: கோயிலில் கடவுள் இருக்கிறார் என்பதை மறுக்கிறார், அந்தக்கால சீர்திருத்தக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

    ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த பெருங்கோயில் பல
    ஜாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய்
    நீதிஅறம் அழித்து வரல்
    நிர்மலனே நீ அறிவாய்
    கோதுகளை அறுத்தொழித்துக்
    குணம் பெருகச் செய்யாயோ?

    - திரு.வி.க.

    Read more: http://viduthalai.in/page-7/81240.html#ixzz33FVbZhC7

    தமிழ் ஓவியா said...


    பக்திப் பண்டாரங்களின் பார்வைக்கு!


    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், எழும்பூர் ரயில் நிலையத்திலும் வந்திறங்கிய பயணிகளிடம் ரிக்ஷாக்காரர்கள் எப்படி போட்டி போட்டுக் கொண்டு ஆள் பிடிப்பார்கள் என்பது சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருப்பவர்களுக்கு தெரியும். அதைப் போல, பூரி கோயிலில் பக்தர்களை இழுத்துப் பிடிக்கிறார்கள்.

    பண்டாக்கள் எனப்படும் பார்ப்பன அர்ச்சகர்கள். இது பற்றி இவ்வார சண்டே (மே 28) ஏட்டில் ஒரு தம்பதிகள் பெற்ற அனுபவம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தப் பெண் கீழ்க்கண்டவாறு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    கடந்த கோடை விடுமுறையின் போது நாங்கள் பூரிக்கு செல்ல நேரிட்டது. ஒரு நாள் சைக்கிள் ரிக்ஷா ஒன்றில் நானும் என் கணவரும் ஏறிக்கொண்டு பூரி ஜெகநாதன் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றோம். கோயிலை நோக்கிச் செல்லும் மய்ய வீதி வந்ததும் கிடு கிடு என்று எங்களை நோக்கி பண்டாக்கள் எனப்படும் அர்ச்சகர்கள் ஓடி வந்தார்கள். எங்களை சூழ்ந்தது ஒரே அர்ச்சகர்கள் கூட்டம் எங்களுக்கு முக்தி அளிப்பதில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம்!

    நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு நின்றது அந்தக் கூட்டம். ஒரு வயதான பல் எல்லாம் போன அர்ச்சகர் ஒருவர் எங்கள் ரிக்ஷாவுக்கு முன் வந்து நின்று கொண்டு இப்படியே வாருங்கள் என்று வழிகாட்டி அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். கூட்டத்திலிருந்து எல்லா பண்டாக்களையும் பிடித்து தள்ளிவிட்டு முன்னே ஓடி வந்தார். அவசர அவசரமாக எங்களுக்கு உத்தரவிட ஆரம்பித்தார். இதற்கு மற்றொரு இளம் பார்ப்பன அர்ச்சகர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அட முட்டாளே, என்ன விளையாடறே, இது என் கிராக்கி என்று உனக்கு தெரியாதா? ஒவ்வொரு வருஷமும் இவா பூரிக்கு வருவா ஒவ்வொரு முறையும் நான்தான் கோயிலுக்கு அழைத்துச் செல்வேன் தெரியுமா? என்று சத்தம் போட ஆரம்பித்தார்.

    அடப்பாவி, என்ன அபாண்டமாகப் புளுகுகிறானே, என்று நான் எதிர்ப்பைத் தெரிவிக்க நினைத்துக் கொண்டிருக்கும்போது, இந்த அர்ச்சகன் என்னை பேச விடாது, வலது கையை தூக்குங்கள் என்றான்.

    உடனே கையில் இரண்டு இலையை எடுத்து தன் கையிலிருந்த பாத்திரத்திலிருந்து 2 சொட்டுத் தண்ணீரை விட்டு வாங்கோ, இப்போ நீங்கள் தரிசனத்துக்கு ரெடியாயிட்டேள் என்றான். இதுதான் சமயம் என்று என் கணவர் குறுக்கிட்டுப் பேசினார். ரொம்ப நன்றி நாங்கள் இந்தக் கோயிலுக்கு நாங்களாகவே போய்க் கொள்கிறோம். எங்களை விடுங்களேன் என்றார்.

    அர்ச்சகர்கள்தான் பகவானிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சாஸ்திரங்களே கூறுகிறதே, தெரியாதோ? என்றான் அந்தப் பூசாரி. எனக்கு அதெல்லாம் தெரியும். வழிவிட போகிறீங்களா, இல்லையா? என்று ஆத்திரத்துடன் கேட்டார் என் கணவர்.

    நீங்கள் இந்துக்கள்தானா? என்று சந்தேகத்துடன் கேட்டான் ஒரு பூசாரி. ஆமாம் என்று சொன்னதுதான் தாமதம் அப்படியானால், உள்ளே பகவானைச் சென்று பார்க்காமல் உங்களை விடமாட்டோம் என்று மிரட்ட ஆரம்பித்தனர். ஒருவன் ஓடி வந்து காதில் ரகசியமாக உள்ளே இருக்கும் விசேஷ அர்ச்சகரை எனக்கு நன்றாகத் தெரியும்.

    10 ரூபாய் கொடுத்தால் போதும், விசேஷ பூஜை நடத்துவார். நிச்சயமாக சொர்க்கத்தில் உங்களுக்கு இடம் கிடைத்து விடும் வாங்கோ என்றான். நாங்கள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. சரி, ஏன் பேச்சை வளர்த்திக் கொண்டு 8 ரூபாய் மட்டும் கொடுங்கள், எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் ஜாதி என்ன சொல்லுங்கோ என்று ஆரம்பித்தான்.

    இப்போது எங்களைச்சுற்றி வேடிக்கைப் பார்க்கும் கூட்டம் இன்னும் அதிகரித்து விட்டது. இதுதான் சந்தர்ப்பம் என்று என் கணவர் சொன்னார் என்ன, எங்கள் ஜாதிதானே உங்களுக்கு தெரியவேண்டும்? நாங்கள் அரிஜன்! அவ்வளவுதான். இதைச் சொல்லியதுதான் தாமதம். மின்சாரம் பாய்ந்தது போல் அவர்களுக்கு அதிர்ச்சி! எல்லா அர்ச்சகர்களும் முணுமுணுத்துக் கொண்டனர். கிசுகிசு என்று ரகசியம். ஷாந்தம் பாபம் என்று எல்லோரும் ஒரே சத்தம் போட்டனர்.

    எந்தத் தொல்லையும் இடையூறும் இல்லாமல் நாங்கள் கோயிலுக்குச் சென்றோம். நல்ல காரியத்துக்காகப் பொய் சொல்வதில் தவறில்லையே, மகா பாரதத்தில் அரசன் யுதிஷ்திரதா கூட நல்ல காரியத்திற்காகப் பொய் சொல்லியிருக்கிறான்.
    இவ்வாறு அந்த பக்தை எழுதியிருக்கிறார்.

    - சண்டே, 28.5.1978

    Read more: http://viduthalai.in/page-7/81241.html#ixzz33FVr3xRc

    தமிழ் ஓவியா said...

    தமிழர் தலைவர் உரை

    தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டதா வது:

    இந்த மணவிழாவிலே நான் கலந்து கொள்வது என்பது அதிசயமானதல்ல. உரிமை, உறவின் பாற்பட் டது என மிக சிறப்பாக கூற வேண்டும். தந்தை பெரி யார் இருந்தவரையிலே அவர்கள் தலைமை தாங் குவார்கள் - அடுத்து அன்னை மணியம்மையார் இயக் கத்திற்கு தலைமை தாங் கியதால் அவர்கள் இந்த பணியை செய்திருப்பார் கள். அதே போல இந்த பணியை செய்வதற்கு என்னை எப்போதும் உரி மையோடு அம்மையார் வசந்தா, மண்டோதரி போன்றோர்கள் எந்த மண விழாவாக இருந்தாலும் இதற்கு முன்பு நடந்த மணவிழாவாக இருந்தா லும், எல்லா மணவிழாக் களிலும் வந்து நேரிலே அழைத்து சண்டை போட்டு தேதி வாங்கிக் கொண்டு செல்வார்கள்.

    வேறு நிகழ்ச்சிகள் அடுக்க டுக்காக இருந்த நேரத்தில் ஒரு முறை தஞ்சை பாலி டெக்னிக்கிலே அவர்கள் வந்து சந்தித்தபோது வரு வதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது, சுற்று பயண நெருக்கடி இருக்கிறது. உடல் நிலை இப்படி இருக் கிறது என்றெல்லாம் சொன்னபோது கூட அம் மையார் ஏற்க தயாராக இல்லை. அதுவும் கல் யாணி மறைவுக்கு பின் னாலே. மிக வேகமாக என் னிடம் உரிமையோடு கோபித்து கொண்டார்கள்.

    அப்படியானால் நீங்கள் எப்போது தேதி கொடுக் கிறீர்களோ அப்போதே திருமணத்தை வைத்து கொள்கிறோம். வேறு யாரையும் அழைத்து நடத்த நான் விரும்பவில்லை என கட் அண்டு ரைட்டாக மிக வேகமாக சொல்லிவிட்டு கொஞ்சம் கோபமாக வெளியே வந்தார். எல்லோ ருக்கும் வியப்பு. நான் உடனே அழைத்து நீங்கள் கேட்கிற தேதியிலேயே கட் டாயம் வருகிறேன் என சொல்லி மற்றவர்களுக்கு நான் சமாதானத்தை சொல்லி அந்த தேதியை கூட மாற்றி வைத்துவிட்டு இந்த திருமணத்திற்கு வந் தேன்.

    எனவே இவ்வளவு நெருக்கமான உறவு கருப்பு சட்டைகாரர்களுக்கு தான் உண்டு. கொள்கை உறவு தான் கருப்பு சட்டைகாரர் களிடத்திலே இருக்கக் கூடிய தீவிரமான உறவா கும். எங்களுடைய உண் மையான உறவுக்காரர்கள், கழக உறவுதான் மிக முக்கியமானதாகும்.

    தோழர் கணபதி, சிவா னந்தம் ஆகியோர் கல்யாணி அவர்களோடு என்றைக் கும் சேர்ந்திருப்பார்கள். நரசிங்கம் பேட்டை முத்து கிருட்டிணனை பார்க்க முடியாத சூழ்நிலை. பெரி யார் இயக்கத்திலிருந்து பணிகளை தீவிரமாக செய்ய கூடியவர்கள். எனவே இது எங்கள் குடும்பத்து மண விழா. எனவே மிகுந்த மகிழ்ச்சியோடு இதிலே பங்கேற்கிறேன். மண மக்கள் சுபா (எ) கல்யாணி - மனோகரன் இருவருமே நன்கு படித்த பொறியா ளர்கள்.

    அதுதான் பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றி, இதைவிட பொருத்தமான மணமக் களைத் தேடி கண்டுபிடிக்க முடியாது, மணமகன் கத் தாரிலே பணியாற்றுவதை அழைப்பிதழிலே காண்கி றோம். சுபா பெரியார் மணியம்மை பல்கலை கழக மாணவி ஆவார். இது எங்களுடைய பல்கலை கழக மாணவி என்ற உரி மையும் உள்ளது.

    சுபா திரு மணத்தை நானே தலைமை ஏற்று நடத்தக் கூடிய வாய்ப்பு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி, அவர்கள் இப்போது எம்பிஏ படிப்பது மிகுந்த பாராட் டுக்குரியது என மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்து கூறினார்

    Read more: http://viduthalai.in/page-4/81243.html#ixzz33FWbLXye

    தமிழ் ஓவியா said...


    நல்ல குடும்பம்


    நல்ல குடும்பம் எனப்படுவது வரவுக்கு மிஞ்சிய செலவு செய்யாமல் இருப்பதாகும். தமது வாழ்க்கைச் செலவை வரவுக்கு உள்பட்டே அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குடும்பம் தான் கண்ணியமான குடும்பமாகும்.

    - (விடுதலை,2.11.1961)

    Read more: http://viduthalai.in/page-2/81324.html#ixzz33L8imY5r

    தமிழ் ஓவியா said...


    அவாளால் தகர்க்கப்பட்ட தகுதி, திறமை மாய்மாலம்?

    - குடந்தை கருணா

    நாம் இடஒதுக்கீடு கேட்டு போராடினால், தகுதி திறமை போய் விடும் என அங்கலாய்த்த பார்ப் பனர்கள், நமக்கு எதிராக, வட நாட்டில் போராட்டம் நடத்தினார்கள்; உச்ச நீதி மன்றம் சென்று, வழக்குப் போட்டார்கள்.

    இட ஒதுக்கீடு அளிப்பதால், தகுதி திறமை ஒருபோதும் குறையாது; வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்திற்கு, அந்த உரிமை தரப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடி, இந்த தடை களையெல்லாம் உடைத்துத் தான், ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்கு முன்னேறி வருகிறார்கள்.

    இன்றைய கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பத்தாவது கூட படிக்க வில்லை, என சிலர் குற்றஞ்சாட்டிய தும் அப்படி கூறலாமா? ஒருவரது படிப்பை வைத்து, அவரது திற மையை எடைபோடலாமா? அவருக் குக் கல்வித்துறையில் முன் அனுபவம் இருக்கிறதா என்று கேட்கலாமா? முதலில் அவர் அந்த பணியைச் செய் யட்டும்;

    அதில் எவ்வாறு செயல்படு கிறார் என்று பார்த்து அப்புறம்தான் மதிப்பீடு அளிக்கவேண்டும் என இப்போது பார்ப்பனர்கள், நாம் வைக் கும் அதே வாதத்தை வைக்கிறார்கள். நம்மூர் தொலைக்காட்சியில், ராகவன் எனும் பார்ப்பனர், காமராசர் என்ன படித்தவரா? எனக் கேட்கிறார். கல்விப் புரட்சி ஏற்படுத்திய காமராசரும், ஸ்மிரிதி இரானியும் ஒரே நிலையில் வைத்து நாம் பார்க்க முடியாது.

    ஆயினும், நாமும் ஸ்மிரிதி ஜுபின் இரானி மீது வீசப்படும் இந்த குற்றச் சாட்டை ஆதரிக்கவில்லை; கல்வித் துறை அமைச்சராவதற்கு, இந்த படிப்புதான் வேண்டும் என நியதி எதுவும் கிடையாது.

    இதற்கு முன்னர் பாஜக ஆட்சியில் இருந்தபோது, இதே துறையை நிர்வகித்த மெத்தப்படித்த டாக்டர் முரளி மனோகர் ஜோஷி என்ன சாதனை செய்தார்? இந்தியாவில் ஒரு ஆயிரம் பேர்கூட பேசாத சமஸ்கிருத மொழியை, செம்மொழி என அறிவித்து, அதன் மேம்பாட்டுக்காக, ரூ.100 கோடி ஒதுக்கச் செய்தார்;

    ஜோஸ்யத்தை, வேத அறிவியல் என கூறி, அதனை பாடத் திட்டத்தில் சேர்த்திட முனைந்தார்; இந்த துறையில் இயங்கும், இந்திய வரலாற்று ஆய்வு குழுமத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை நியமனம் செய்தார். இதைத் தவிர, அவர் சாதித்தது ஒன்றும் இல்லை;

    உடம்பெல்லாம் மூளை என வர்ணிக்கப்பட்ட ராஜாஜி, தமிழ் நாட்டின் முதலமைச்சராகி, ஆயிரக் கணக்கான பள்ளிக்கூடங்களை இழுத்து மூடினார்; எஞ்சிய பள்ளிகளில் படிக்கும் நம் வீட்டுக் குழந்தைகள், பாதி நேரம் படிப்பு, மீதி நேரம் அவரவர் அப்பன் செய்யும் தொழிலை செய்ய வேண்டும் என்கிற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

    நம் தந்தை பெரியார், வெகுண்டெழுந்து, ராஜாஜியை முதல்வர் பதவியிலிருந்து விரட்டி, அந்த இடத்தில், அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராசர், முதல்வராக வருவதற்குக் காரணமா யிருந்தார்; குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டு, மேலும் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டு, தமிழ் நாட்டில் கல்விப்புரட்சி ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள், கல்வி பெற வாய்ப்பு அதிகமாக உருவானது.

    இப்போது, பார்ப்பனர்கள், தாங்கள் இது நாள்வரை கூறி வந்த தகுதி, திறமை என்பதை வாபஸ் வாங்கி, பேசுவதற்கான காரணம் என்ன? பார்ப்பனர்கள் இவ்வாறு பேசுவது ஸ்மிரிதி இரானி மீது அக்கறையால் அல்ல; ஸ்மிரிதி இரானி ஒரு பார்ப்பன பெண்மணியும் அல்ல; அவர் பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவர் இந்த துறையில், ஆர்.எஸ்.எஸ் சொல்லும்பணியை செவ்வனே செய்துமுடிக்க, ஆர்.எஸ். எஸால் அனுப்பப்பட்ட மோடி அமைச்சரவையில் ஒரு அமைச்சர். ஸ்மிரிதி இரானி, சமஸ்கிருதத்தை உயர்த்திப்பிடிப்பார்;

    ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார் என பார்ப் பனர்கள் கருதுகிறார்கள். அதற்குத் தடையாக, தகுதி, திறமை வருமானால், அதனை தகர்க்கவும் அவாள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் இப்போது, ஸ்மிரிதி இரானிக்கு வக்காலத்து வாங்கும் இந்த போக்கு.

    Read more: http://viduthalai.in/page-2/81322.html#ixzz33L8rWrWo

    தமிழ் ஓவியா said...


    உ.பி.யில் தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்முறை மாயாவதி சீறுகிறார்

    பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிகளின் தந்தை ஜீவன்லால்

    உஷைத், மே 31- உத்தரப்பிரதேச மாநி லத்தில் 2 தலித் சிறுமிகள் கும்பலால் பாலியல் வன் முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 2 காவ லர்கள் பணி நீக்கம் செய் யப்பட்டுள்ளனர். ஒரு காவ லர் உள்பட 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

    இவ்விவகாரத்தில் விரைவு நீதிமன்றம் அமைத்து, குற்றவாளி கள் உடனடியாகத் தண்டிக்கப் படுவார்கள் என உத்தரப் பிரதேச முதல்வர் அகி லேஷ் உறுதியளித் துள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநி லம் உஷைத் கிராமத்தைத் சேர்ந்த, 14, 15 வயதுள்ள இரு சிறுமிகள் கடந்த 27-ஆம் தேதி இரவு காணாமல் போயினர்.

    இதுகுறித்த வழக்கை காட்ரா சதாத்கஞ்ச் காவல் துறை பதிவு செய்ய மறுத் தது. 28-ஆம் தேதி காலை இரு சிறுமிகளின் உடல் களும் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டன.

    உயிரிழந்த ஒரு சிறுமி யின் தந்தை கூறுகையில், காவல்துறையின் உதவியை நாடினோம். அதில் ஒரு காவலர் இரண்டு மணி நேரத்தில் சிறுமிகள் வீடு திரும்பி விடுவர் எனத் தெரிவித்தார். ஆனால், தூக் கில் தொங்கிய நிலையில் தான் அவர்கள் கிடைத் தார்கள் என்றார்.

    இச்சம்பவத்தால் வெகுண்டெழுந்த கிராம மக்கள் காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்து போராட்டத்தில் இறங் கினர்.
    இதைத்தொடர்ந்து காவல்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய் தனர். இரு காவலர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

    பிரேதப் பரிசோதனை யில் இரு சிறுமிகளும் கும்பலால் பாலியல் வன் முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அதுல் குமார் சக்ஸேனா கூறிய தாவது:

    வழக்கில் தேடப்படும் ஏழு பேரில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வேஷ் யாதவ் மற்றும் சத்ரபால் யாதவ் ஆகிய 2 காவல்துறையினரும் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் சர்வேஷ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பப்பு மற்றும் அவதேஷ் யாதவ் என்ற 2 சகோதரர்களும் கைது செய்யபட்டுள்ளனர்.

    பப்பு மற்றும் அவதே ஷின் சகோதரர் உர்வேஷ், காவலர் சத்ர பால் மற்றும் மேலும் இருவரைத் தேடி வருகிறோம் என்றார்.

    இரு காவலர்கள் மீது, குற்றச் சதி வழக்கு பதியப் பட்டுள்ளது. மற்ற அய்வர் மீது பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் அகிலேஷ் யாதவ், பாதிக் கப்பட்ட 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங் கப்படும் என அறிவித்துள் ளார். மேலும் அக்குடும்பத் தினருக்குப் பாதுகாப்பும் தேவையான உதவிகளும் அளிக்கப்படும் என்றார். மேலும் இவ்வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன் றம் அமைக்கப்படும் என வும் அகிலேஷ் உறுதி யளித்துள்ளார்.

    இது தொடர்பாக மத் திய மகளிர் மற்றும் குழந் தைகள் நலத்துறை அமைச் சர் மேனகா காந்தி கூறு கையில், இதுபோன்ற சம்பவங்களில் பாலியல் வன்முறை விவகாரக் குழு உடனடியாக அமைக்கப் பட்டு, நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண் டும். பாதிக்கப்பட்ட குடும் பத்தினர் ஒப்புக் கொண் டால், சிபிஅய் விசார ணைக்கு பரிந்துரைக்கப் படும்.

    இச்சம்பவத்தில் காவல் துறையின் அலட் சியத்திற்கு சம பங்கு உள் ளது. காவல்துறை இன் னும் சரியான கோணத்தில் செயல்படத் தொடங்க வில்லை. இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத் துக் காவலர்களும் பணி நீக்கம் செய்யப்பட வேண் டும் என்றார்.

    இதனிடையே பாதிக் கப்பட்ட பெற்றோர், உ.பி. காவல்துறையின் நடவடிக் கைகள் சந்தேகத்துக்குரி யவை. அவர்களை நம்ப முடியாது என்பதால், சிபி அய் விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாயாவதி கடும் கண்டனம்

    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இது தொடர்பாக சிபிஅய் விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என வலியுறுத் தியுள்ளார்.

    தலித் சிறுமிகள் கும்ப லால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மகளிர் அமைப்பினர், மாணவர் கள் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தி வருகின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநி லம் சராய்மீர் பகுதியைச் சேர்ந்த 17 வயது தலித் சிறுமியை நான்கு பேர் பாலியல் வன்முறை செய் துள்ளனர். இச் செயலில் ஈடுபட்டவர்கள் முகேஷ், அர்விந்த், விக்ரம், துர்கேஷ் என அடையாளம் காணப் பட்டுள்ளது. இந்நால்வ ரும் தலைமறைவாகிவிட் டனர். காவல்துறையினர் வழக்குப் பதிந்து நால் வரையும் தேடி வருகின் றனர்.


    Read more: http://viduthalai.in/e-paper/81325.html#ixzz33L9FJINQ

    தமிழ் ஓவியா said...

    தமிழ் ஈழத்தின் தனித்தவுரை

    பெரியார் சாக்ட்டீசின் அருமை மகள் தமிழ் ஈழம் உரையாற்றுகையில் சுருக்கமாகக் குறிப்பிட்டதாவது:

    அப்பா அவர்கள் நான் பிறக்கும் முன் பெயர் சூட்டிவிட்டார். பையனாக இருந்தால் பிரபாகரன், பெண்ணாக இருந்தால் தமிழ் ஈழம் என்று பெயர் சூட்டி விட்டார்கள்.

    சென்னைக்கு நாங்கள் வந்தபோது அப்பொழுது இருந்த டி.வி.எஸ்.50 மூலம் சென்னை மாநகரம் முழுவதும் எனக்குச் சுற்றிக் காட்டினார்கள். எனக்கு சென்னை மாநகரம் அத்துப்படி - பொது விவரங்களை எனக்குச் சொல்லி கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

    அப்பாவுக்குத் தன்னைப் பற்றி ஒரு குறையுண்டு. நான் மட்டும் ஆங்கிலம் சரியாகக் கற்று இருந்தால் எங்கேயோ போயிருப்பேன் என்பார்.

    அதனால்தான் நான் ஆங்கிலத்தை ஆர்வமுடன் கற்றேன் - கல்லூரியிலும் அந்தப் பிரிவை எடுத்துப் படிக்க இருக்கிறேன். நான் இப்பொழுது துணிவை வரவரழைத்துக் கொண்டு விட்டேன்; அப்பா நினைத்ததை செய்து முடிப்பேன் - அம்மாவுக்குத் துணையாக இருப்பேன். பெரியார் கொள்கை வழியை என்றென்றும் பின்பற்றி நடப்பேன்.

    இந்தத் திடல் எனக்குப் பழக்கப்பட்ட ஒன்றுதான். திடலோடு என் தொடர்பு என்றைக்கும் இருக்கும். இங்கே வைக்கப்பட்டுள்ள அப்பாவின் படம் நான் எடுத்தது தான். ஒரு நாள் அப்பாவைப் பார்த்து இந்தவுடையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.

    அப்படியே நில்லுங்கள், ஒரு படம் எடுக்கிறேன் என்றேன். அந்தப் படம் இப்படி திறக்கப்படும் ஒன்றாக மாறும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று அடக்க முடியாத துயரத்தை அடக்கிக் கொண்டு அழுத்தமாகப் பேசினார். அவரது பேச்சை செவிமடுத்த பார்வையாளர்கள் அனைவரும் மிகவும் உருக்கமாகவும், உன்னிப்பாகவும், வியப்பாகவும் தமிழ் ஈழத்தினைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

    Read more: http://viduthalai.in/page-4/81317.html#ixzz33LAqq4K0

    தமிழ் ஓவியா said...


    சென்னை மந்திரிகளைப் பின்பற்றுதல்

    சென்னை மாகாண சுகாதார மந்திரி திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் மதுவிலக்கு விஷயமாய் கவர்ன் மெண்டாரின் கொள்கையை திட்டப்படுத்தவும், மக்களுக்கு மதுவிலக்கில் அதிக முயற்சி உண்டாக்கவும், வருஷம் ஒன்றுக்கு நாலு லட்ச ரூபாய் போல் செலவு செய்து நாட்டில் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்தது யாவருக்கும் தெரிந்த தாகும்.

    அதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் கண்டு உண்மையில் நமது நாட்டில் மதுவிலக்கு ஏற்பட்டுவிட்டால் எங்கு அதனால் பிழைக்கும் தங்களது உத்தியோகத் தொழிலும், வக்கீல் தொழிலும் மற்றும் மதுபானத்தின் பலனாய் ஏற்படும் பலவிதத் தொழிலும் நின்றுவிடுமோ எனக்கருதி பலவித தந்திரத்தாலும், மந்திரி கனம் முத்தையா முதலியாருக்குக் கெட்ட எண்ணம் கற்பித்தும், கவர்ன்மெண்டை தூண்டி முத்தையா முதலியாரின் கொள்கையை ஒப்புக் கொள்ளாமல் இருக்கச் செய்ய முயற்சித்தும் பயன்படாமல் போய் இப்போது சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு பிரச்சாரம் நடைபெறுவதும் யாவருக்கும் தெரிந்ததாகும்.

    தவிர, காந்தி மடத்தின் சட்டாம்பிள்ளையாகிய திரு. இராஜகோபாலாச்சாரியார் தினமும் இந்தக் கொள்கையையும், பிரச்சாரத்தையும் தூற்றிக் கொண்டு வருவதும் யாவருக்கும் தெரிந்ததாகும். மந்திரி கனம் முத்தையா முதலியார் அவர்களின் இந்தக் கொள்கையை இப்போது இந்தியாவில் பல பாகங்களிலும், மேல்நாடுகளில் பல பக்கம் பின்பற்ற துவங்கிவிட்டன.

    அதாவது, அய்க்கிய மாகாணமாகிய அலகாபாத் மாகாண அரசாங்கத்தார் இந்தக் கொள்கையைப் பின்பற்றி அந்த மாகாணம் முழுவதும் இப்பிரச்சாரம் செய்யத் துவங்கிவிட்டார்கள். மைசூர் அரசாங்கத்தாரும் இக்கொள்கையை பின்பற்றி பல ஆயிரம் ரூபாய்கள் ஒதுக்கிவைத்து பிரச்சாரம் துவக்கி விட்டார்கள். அமெரிக்கா அரசாங்கத்தார் இதைப் பின்பற்றி அய்ம்பதாயிரம் டாலர்கள் ஒதுக்கிவைத்து பிரச்சாரம் துவக்கி விட்டார்கள்.

    நியூசிலெண்ட் தீவு அரசாங்கத்தாரும் இதே முறையில் மதுவிலக்குப் பிரச்சாரம் துவக்கி விட்டார்கள். இவ்வளவு பேர்கள் ஒப்புக் கொண்டாலும் நமது நாட்டு பார்ப்பனர்களுக்கும். அவர்கள் சிஷ்யர்களுக்கும், காந்தி சிஷ்யர்களுக்கும் மாத்திரம் இது பிடிக்க வில்லையாம் ஏன்? மதுவிலக்குப் பிரச்சாரத்தின் பெயர் சொல்லி பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க முடியாமல் போனதும், மதுபானத்தால் பிழைக்கும் பார்ப்பனர்களின் வயிற்றில் மண் விழுவதாலும் தான்.

    ஆகவே, இனியாவது ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பொது மக்கள் இந்த அருமையான சந்தர்ப் பத்தை விட்டுவிட்டாமல் மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு வேண்டிய உதவி புரிந்து கூட்டம் கூட்டியும் மற்றும் பல விதத்திலும் பிரச்சாரம் செய்வதற்கு வேண்டிய ஆதரவளிக்க வேண்டுவ துடன் ஜில்லா தாலுகா போர்டு தலைவர்களும் முனிசிபல் சேர்மென்களும், ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் திரு.சவுந்தரபாண்டியன் அவர்களை பின்பற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட அங்கத்தினர்களும் இந்த பிரச்சாரத்துடன் ஒத்துழைத்து ஆதரவு செய்து கொடுக்க வேண்டுகின்றோம்.

    - குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 24.11.1929

    Read more: http://viduthalai.in/page-7/81292.html#ixzz33LB9yz7m

    தமிழ் ஓவியா said...


    கார்ப்பொரேஷன் தேர்தல்

    ஜஸ்டிஸ் கட்சி முனிசிபல் கவுன்சில் பார்ட்டியின் கூட்டம் ஒன்று 16.10.1929 தேதி இரவு 8 மணிக்கு தியாகராயர் மெமோரியல் கட்டிட மேல்மாடியில் கூடிற்று. 19 அங்கத்தினர்கள் விஜயமாயிருந்தார்கள். திருவாளர்கள் ஜி.நாராயணாசாமி செட்டியாரும், அவர் குமாரரும் மற்றுமிரண்டொரு வரும் வரவில்லை என்பதாகத் தெரிகின்றது.

    கூட்டத்தில் இரகசியமாய் ஓட்டு எடுத்ததில் திரு.ராமசாமி முதலியாருக்கு. 15 ஓட்டும், டாக்டர் நடேச முதலியாருக்கு 2 ஓட்டும் கிடைத்தன. அப்படி இருந்தும் இருவரும் தேர்தலில் போட்டிபோடப் போவதாகவே முடிவு செய்து கொண்டு போயிருக்கிறார்கள். ஏறக்குறைய இருவருமே சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்களின் ஓட்டுகளை நம்பிக் கொண்டிருப்பதோடு சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்கள் வீட்டுக்கும் தலைவர்கள் வீட்டுக்கும் இரு அபேட்சகர்களும் நடந்த வண்ணமாய் இருக்கின்றார்கள்.

    வெள்ளைக்காரர்கள் ஓட்டுகளையும் இருவரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஜஸ்டிஸ் கட்சி கவுன்சிலர்கள் ஓட்டு அநேகமாய் சரிசமமாய்ப் பிரியாவிட்டாலும் இரண்டு பேருக்குமாகத்தான் பிரியக் கூடும் போல் தெரிகின்றது. சுயராஜ்ஜியம் கட்சி ஓட்டுகளும் அதேமாதிரி தான் பிரியும் போல் தெரிகின்றது.

    வெள்ளைக்காரர்களின் ஓட்டுகள் நாலில் மூன்று பாகம் ஒருவருக்கும் ஒரு பாகம் ஒருவருக்குமாகப் பிரியலாம். மற்ற ஓட்டுகளும் சரிசமமாகப் பிரியலாம். எனவே, தேர்தலில் இருவர் போட்டியும் பலமாக இருக்கக் கூடும்.

    நம்மைப் பொறுத்த வரை முடிவைப் பற்றி கவலையில்லா விட்டாலும், அதன் பயனாய் ஏற்படக் கூடிய கட்சிப் பிளவு பார்ப்பனரல்லாதார் கட்சியையும் அக்கட்சியின் அடுத்த சென்னை சட்டசபை தேர்தல்களையும் பாதிக்காமல் இருக்க முடியாதென்றே கருதி கவலைப்படுகின்றோம்.

    தேர்தல்கள் வரும்போதெல்லாம் நிலைமையையும் நியாயத்தையும் உரிமையையும் சிறிதும் லட்சியம் செய்யாமல் பலத்தையும் தந்திரத்தையும் சண்டித்தனத்தையும் ஆதாரமாக வைத்தே முடிவு செய்வதாயிருந்தால், அக்கட்சிக்கு எந்த விதத்தில் யோக்கியதையும் நம்பிக் கையும் இருக்க முடியும் என்பது நமக்குப் புரியவில்லை.

    அநேகமாக 5,6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் வரக்கூடு மாதலால் திரு.ராமசாமி முதலியாரைப் போன்றவர்கள் கார்ப்பொரேஷன் தலைவரா யிருந்தால் கட்சி தேர்தலுக்கு அனுகூலமாயிருக்கக் கூடும் என்னும் காரணம் திரு. ராமசாமி முதலியாருக்கு அனுகூலமாக சொல்லிக் கொள்ளப்படுகிறது.

    டாக்டர். நடேச முதலியார் இந்த கட்சியில் சேர்ந்த காலம் முதல்கொண்டு கஷ்டப்படுகின்றவரான தினாலும் ஒவ்வொரு சமயத்திலும் இம்மாதிரி சாக்குகள் வந்தே அவருடைய உரிமை நழுவ விடப்படுவதாலும் அவரும் இதனாலேயே அடிக்கடி கோபித்துக் கொண்டு கட்சியில் கலகம் விளைவிப்பதும் வெளியில் போவதும் மறுபடி சமாதானமும் ஆசையும் சொல்லி அழைக்கப்படுவதாலும், ஏதாவது ஒரு தடவை அவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டியது ஒற்றுமையை உத்தேசித்தாவது அவசியம் என்கின்ற விஷயம் டாக்டர். நடேச முதலியாருக்கு அனுகூலமான காரணமாக சொல்லிக் கொள்ளப்படுகிறது.

    இரண்டு காரணங்களும் சரி என்று வைத்துக் கொண்டாலும் திரு.நடேச முதலியாருக்கு விட்டுக்கொடுப்பது இந்தத் தடவையா அல்லது அடுத்த தடவையா என்பதை வேண்டுமானால் மற்ற தலைவர்களும் சேர்ந்து யோசனை செய்து ஒரு முடிவு கட்ட வேண்டியதான விஷயம்.

    அப்படிக்கில்லாமல் எப்படியோ போகட்டும்! என்று மற்ற தலைவர்களும் இயக்கத் தலைவரும் அலட்சியாமாயிருப்பதும் சிலர் இருவருக்கும் நல்ல பிள்ளைபோல் நடந்து கொள்ளுவதும் உள்ளுக்குள் அவர்களுக்கு இஷ்டமானவர் களுக்கு வேலை செய்வதுமான காரியங்களானது, அவற்றின் பலன் எப்படியானாலும், அவை தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையையும் கோழைத் தனத்தையும் சுயநலத்தையும் காட்டுவதாகும்.

    நெல்லூர் மகாநாட்டு நடவடிக்கை ஒருவாறு நமது இயக்கத்தில் உள்ள கட்சிகள் இவ்வளவு என்பதைக் காட்டிவிட்டது. ஆனால் அடுத்துவரும் கார்ப்பொரேஷன் தலைவர் தேர்தலானது அக்கட்சிகளின் தனித்தனி வேலைத் துவக்கத்தை காட்டக் கூடியதாகிவிடுமோ என்றே பயப்படுகின்றோம்.

    ஆகையால் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் உடனே ஒரு கூட்டத்தைக் கூட்டி இருவரையும் தருவித்து இன்னார்தான் நிற்க வேண்டும் என்று தீர்மானம் செய்ய வேண்டியது அவருடைய முக்கியமானதும் கடமையானதுமான வேலையாகும்.

    அப்படிக்கில்லாமல் அலட்சியமாயிருப்பதோ அல்லது தனது தலைவர் ஸ்தானம் கவுரவிக்கப்படமாட்டாது என்பதோ காரணம் கொண்டு சும்மா இருப்பதானால் அவரும் பொறுப்பை உணராத தலைவர் என்றுதான் சொல்லித் தீர வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம்.

    - குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20-10-1929

    Read more: http://viduthalai.in/page-7/81293.html#ixzz33LBITWD2

    தமிழ் ஓவியா said...


    மதமாற்றம்: விவேகானந்தர்


    வட இந்தியாவில்தான் முகமதியர் படையெடுப்புகள் நடைபெற்றன. ஆனால் கேரளா, தமிழகம் போன்று மலேசியா, ஜாவா, சுமத்ரா, போர்னியோ இன்னும்பிலிப்பைன்ஸ், சீனத்தில்கூட எந்த படையெடுப்புமில்லாமல் கோடிக் கணக்கில் மக்கள் இஸ்லாமைத் தழு வியது ஏன்?

    ஆட்சிகள் மூலம்தான் மதமாற்றங் கள் ஏற்பட்டன என்பது உண்மையா னால் ஸ்பெயின் நாட்டை அரபு முஸ் லிம்கள் 700 ஆண்டுகள் ஆண்டார்கள். ஆனால் மதமாற்றம் ஏற்படவில்லை.

    இந்தியாவின் சில பகுதிகளை எட்டாம் நூற்றாண்டிலிருந்து முகமதியர் ஆண்டு வந்த போதிலும் ஐந்தில் ஒருவரே இஸ் லாமுக்கு மாறினர். கிறிஸ்தவ ஆங்கி லேயர் இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்டனர். ஆனால், 2-3 விழுக்காடு தான் கிறிஸ்தவர்களாகினர்.

    இன்று உலகின் ஜனத்தொகையில் நான்காவது பெரிய நாடு இந்தோனே சியா. இன்றைய மக்கள் தொகை 24 கோடி. 13,500 சிறிய பெரிய தீவுகளைக் கொண்ட நாடு.

    5,000 கி.மீ. நீளமுள்ள சமுத்திரத்தில் பரவியுள்ள நாடு. இன்றைய மக்கள் தொகையில் 88 விழுக்காடு இஸ்லாமியர்கள். இந்து மன்னர்களின் விஜயசாம்ராஜ்யம் 7 முதல் 13ஆம் நூற்றாண்டு வரை விரிவாகப் பரவி இருந்தது. ஆனால் இன்று 2 விழுக்காடு தான் இந்துக்கள்.

    இந்த நாட்டை 16ஆம் நூற்றாண் டிலிருந்து போர்ச்சுகீஸ், பிரிட்டிஷ் பிரான்சு, டச்சு முதலாளிகளின் கம் பெனிகள் (டச்சு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி 1602 - 1798) பல்வேறு பகுதி களைக் கைப்பற்றிக் கொண்டனர். 1922லிருந்து இந்தோனேசியா முழு மையாக டச்சு சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.

    இன்றைய இந்தோனேசியா 1949இல் தான் விடுதலை பெற்றது. சுமார் 500 ஆண்டு களுக்கு மேல் கிறிஸ்தவ ஐரோப்பியரின் ஆளுகை. ஆனால் இன்று 8 விழுக் காடுதான் கிறிஸ்தவர்கள்.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஏழை- எளிய மக்களுக்கும், முகமதியர் படை யெடுத்துப் பிடித்தது ஒரு விடுதலையாக அமைந்தது. ஆதலால் தான் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் முகமதியர்களாக மாறினர். இதை சாதித்தது வாளால் தான் என்பதற்கில்லை.

    வாளாலும், நெருப்பி னாலும் தான் இவையெல்லாம் சாதிக்கப் பட்டது என்பது மதி கேட்டின் உச்ச நிலையாகும் என்கிறார் விவேகானந்தர்.

    Read more: http://viduthalai.in/page4/81269.html#ixzz33LCxjs5S

    தமிழ் ஓவியா said...


    ஸ்ரீலஸ்ரீகளே! பிள்ளையார் சிலை உடைப்பு கிளர்ச்சி நடந்த நாள் (27.05.1953)


    இன்று!

    பிள்ளையார் சிலை உடைப்பு கிளர்ச்சி நடந்த நாள் (27.05.1953)

    ''பிள்ளையார் சிலை உடைப்புப் பற்றி தந்தை பெரியார்''

    'பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை தயங்கவேண்டிய தில்லை.

    பிள்ளையார் சதுர்த்தி பண்டி கையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள்.

    அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண் ணோடு மண்ணாக ஆகி விடுவ தில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

    நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்ல வில்லை; தொடவில்லை.

    நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல!

    வேத சாஸ்திர ஆதாரம் என்பதன் படியும் அது - கணபதி கடவுளல்ல!

    கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

    கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறி வும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.

    கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள - மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

    காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் - தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

    ஆற்றங் கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண் டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங் களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை - செம்பை- மண்ணை - அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டு மிராண்டி களான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன். இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

    யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

    மற்றும் இன்று ஆரியப் பார்ப் பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசஞ்சி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டண்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்ப வர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

    இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ் வரர்களே, புலவர்களே, பிரபுக் களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக் களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல் லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக் கிறேன்.'

    ----------------------7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை.

    (முகநூலிலிருந்து குடந்தை கோ. கருணாநிதி)

    Read more: http://viduthalai.in/page4/81271.html#ixzz33LDAbqji

    தமிழ் ஓவியா said...


    என்ன நடக்கிறது நாட்டில்?

    முக நூலில் இருந்து: ' . 2012 - எழுதப் பட்ட இந்தக் கட்டுரை பிஜேபி- இலங்கை அரசின் பொருத்தப்பாடுகளை எப்படி கணித்திருக்கிறது பாருங்கள் யார் இந்த ஷர்மிளா..?

    ஆசியாவின் ஹிட்லர் ராஜ பக்க்ஷே வுக்கும், இந்தியாவின் சுஷ்மா உள்ளிட்ட பாரதிய ஜனதா கும்பலுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஆழமான உறவுக்கும் ,திட்டமிட்டு பின்னப்பட்டுவரும் சதி வலைகளுக்கும் இடையில் ஒரு இணைப் புப் பாலமாக இயங்கிக் கொண்டிருக் கிறார் இலங்கையில் வசிக்கும் ஷர்மிளா என்ற இந்திய பெண்மணி...!

    பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரம் பொருந்திய மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்காவின் ஒரே மகள்தான் இந்த ஷர்மிளா.

    ஷர்மிளாவின் கணவர் அசோக் குமார் காந்தாதான் இலங்கைக்கான இந்திய தூதர்..!

    இந்திய தூதரும் அவரது குடும்பமும் இலங்கையில் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது உங்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கும்..?

    இந்திய அரசின் செலவில் இலங் கையில் சொகுசான வாழ்க்கை வாழும்

    இந்த ஷர்மிளாதான் சுஷ்மா உள்ளிட்ட பாஜகவினரையும் வட இந்திய பாஜக தலைவர்களையும் இலங்கை அரசுக்கும் ராஜபக்ஷேவிற்கும் ஆதரவாளர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்..

    புத்தரின் பெயரால் தற்போது நிகழும் ராஜபக்ஷேயின் மத்திய பிரதேச விஜயத் திற்கு ஏற்பாடு செய்ததும் இதே கும்பல் தான்....!

    பிகு:தற்போது இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆண்டாலும் மத்திய அரசு இலங் கைக்கு அனுப்பிய குழுவிற்கு சுஷ்மாவை தலைவராகப் போட்டதும், பாஜக இலங்கை அரசுடன் நெருங்கி வருவதும் இலங்கை அரசின் ராஜ தந்திர நடவ டிக்கைகளின் ஒரு அங்கமே ..

    இலங்கை அரசின் குறிப்பறிந்து அதற்கேற்ப ஒத்து ஊதுகிறது கொழும்பில் இயங்கும் இந்திய தூதரகம் ..

    அதாவது நாளை காங்கிரஸ் போய் பாஜக இந்தியாவில் ஆட்சிக்கு வந்தாலும் இந்திய அரசு இலங்கையிடம் அனுசரணையுடன் நடந்து கொள்ளவே இந்த ஏற்பாடு ..

    ஷர்மிளாவும் அவரது சகாக்களும் தங்கள் கஜானாவை நிரப்ப வேண்டி தமிழ் மகக்ளுக்கு எதிராக செய்துவரும் இத் தகைய மோசடித்தனங்களை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்...

    Read more: http://viduthalai.in/page4/81270.html#ixzz33LDNWt3I

    தமிழ் ஓவியா said...


    சர்க்கரை வியாதிக்கு இயற்கை தரும் நிவாரணம்


    இரண்டாம் ரக சர்க்கரைவியாதி மற்றும் இன்சுலின் தடுப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒமேகா - 3 என்ற கொழுப்பு அமிலத்தில் இருந்து பெறப்படும் மூலக்கூறு ஒன்று பெரும் உதவி புரியக்கூடும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    இந்த மூலக்கூறு சர்க்கரை வியாதிஉடையவர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர்கள் ஏற்கனவே இறங்கிவிட்டனர். இந்தஇயற்கை மூலக்கூறுக்கு அவர்கள்டிஎக்ஸ்(பிடிஎக்ஸ்) என்று பெயரிட்டுள்ளனர்.

    மனித தசைஉயிரணுக்களில் இண்டர்லூகின் 6 (ஐஎல்-6) எனப்படும் வேதியல் பொருளை உற்பத்தி செய்து வெளியில் பரவவிடுவது இதன் முக்கிய செயல்களில்ஒன்றாக இருக்கும். இந்த ஐஎல்- 6 உற்பத்தி அதிகரிப்பு முக்கியமானதாகும்.

    இது ரத்த ஓட்டத்தில் கலந்தால், ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவைக் கட்டுப்படுத்த இரண்டு வழிகளில் உதவி புரிகிறது.முதலாவதாக, குளுகோஸ் உற்பத்தியைக் குறைக்குமாறு இது கல்லீரலுக்கு உத்தரவிடுகிறது.

    இரண்டாவதாக தசை உயிரணுக்கள் பயன்படுத்தும் குளுகோஸின் அளவை அதிகரிக்க வேண்டுமென்று நேரடியாக தசை உயிரணுக்களுக்கு கட்டளையிடுகிறது. இந்த இரண்டும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றுநிறைவேற்றப்பட்டால், ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவுகுறைந்து விடும்.

    இது இரண்டாம் ரக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும். உடற்பயிற்சியால் உருவாகும் விளைவுகளை இந்த இயற்கை மூலக்கூறு உருவாக்குகிறது என்ற போதும், உடற்பயிற்சிக்கு இது பதிலியாகவோ, மாற்றாகவோ இருக்க முடியாது என்று பேராசிரியர் ஆண்ட்ரே மாரெட் கூறுகிறார்.

    Read more: http://viduthalai.in/page6/81274.html#ixzz33LEc1XEc

    தமிழ் ஓவியா said...


    பார்ப்பனர்களின் அகங்காரம் அடங்கி விட்டதா?

    The Times of India (28.8.2010) ஒரு தலைப்புச் செய்தியை வெளியிட்டு இருந்தது. Ignored by Political Parties and Denies Welfare, Large sections of a Traditconally Elite in Poverty Brahmins on the Margins, Fight for survival என்று தலைப்பிட்டிருந்தது.

    படித்தவர்கள் என்று கருதப்படக் கூடிய பார்ப்பனர்கள் இன்றைக்கு ஏழ்மையில் உழலுகிறார்கள். அரசியல் கட்சிகளால் உதாசினப்படுத்தப்படு கிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

    இதுபற்றி திருவாளர் சோ ராமசாமி யிடம் கேள்வி எழுப்பிய போது Brahmins are not wanted in Tamilnadu Beyond that I Do not want to comment என்று ஆதங்கத் தில் வெறும் போதிய சொற்களால் பதில் சொன்னார்.

    பார்ப்பனர்கள் தமிழ் நாட் மக்களால் விரும்பப்பட்டவில்லை; இதற்குமேல் எதையும் சொல்ல நான் விரும்பவில்லை என்று சலித்துக் கொண்டார்.

    தன் பக்கம் நியாயம் ஏதாவது இருந்தால் எகிறிப் பேசி இருப்பார்கள். இந்தப் பிரத்தியட்ச நிலையைத் தன் சாமர்த்தியமான லியாக்கியானத்தால் தூக்கி நிறுத்தக் கூடியவர்தான் ஆனாலும் அதற்குரிய நியாயமான அறிவுப் பூர்வ மான சங்கதிகள் சரக்குகள் அவர் வசம் இல்லை. எனவே தான் அவ்வாறு அவர் கூற நேர்ந்தது.

    சோவின் இந்தப் பதிலைப்பற்றி வாச கர் ஒருவர் கல்கிக்கு எழுதிக் கேட்டார்.

    கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்று துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி.

    கல்கி பதில்: பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது.

    சமுதாய நீரோட்டத் தில் தங்களையும் அவர்கள் இணைத்துக் கொண்ட நிலையில் அவர்களை ஒதுக்கு வதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுத தோன்றியிரு ப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப் பிரிவினை ஆபத்து.
    (கல்கி 19.9.2010 பக்கம் 30)

    சோவின் பதிலுக்கும் கல்கியின் பதிலுக்கு இடையில் நெளியும் வேறு பாட்டைக் கவனிக்கவேண்டும்.

    பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் விரும்பப்படவில்லை என்பது சோவின் அருள்வாக்கு. என்றால் அப்படியெல்லாம் அவர் வெறுக்கப்படவில்லை; அவர் களின் அங்காரம் என்றோ மறைந்து விட் டது என்று கல்கி மிகவும் விழிப்பாகப் பதில் கூறுகிறது.

    பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப் பட்டு விட்டனர் என்று சொன்னால் அதனுடைய பார தூர விளைவு வேறு விதமாப் போய் விடுமே!

    அதே நேரத்தில் கல்கிக்கு நமது கேள்விகள் உண்டு. பார்ப்பனர்கள் உயர் ஜாதியிரன் என்ற அகங்காரம் மறைந்து விட்டது உண்மையா?

    அனைத்து ஜாதியினக்கும் அர்ச்சகர் உரிமையுண்டு என்று ஒரு சட்டமன்றம் ஒரு மனதாகத் தீர்மானம் செய்தால் சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லுகிறார்களே பார்ப் பனர்கள் இதுதான் அவர்கள் ஜாதி ஆணவத்திலிருந்து அகன்று விட்டனர் என்பதற்காக அடையாளமா?

    சென்னை நாரதகானா சபையில் தாம்ப் ராஸ் எனப்படும் பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந் தது என்ன? ஆண்டவனுக்கு மேல் பிரா மணர் என்று பேசினாரா இல்லையா?

    ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி அவிட் டம் என்ற பெயரால் பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதன் தாத்பரியம் என்ன? தங்களை தூர ஜாதி - இரு பிறவியாளர்கள் என்று வெளிப்படுத்திக் கொள்வது தானே!

    திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ எடையில் பூணூல் செய்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அணிவித்தாரே - இது கடவுளேயே தங்கள் பிராமணர் ஜாதிக்குள் அடைக்கும் ஆவ ணம் அல்லவா டி.எம். கிருஷ்ணா இந்து ஏட்டில் குறிப்பிட்டு இருப்பதை வரவேற் கிறோம் - ஏன் பாராட்டவும்கூடச் செய்வோம்.

    Read more: http://viduthalai.in/page7/81277.html#ixzz33LEsjNYc

    தமிழ் ஓவியா said...


    அபாயம்தலைக்குமேலே!


    மேற்கு அண்டார்க்டிக்கா பனிப்படுகைகள் நொறுங்கி வருகின்றன. அபாயம் வெகு தொலை வில் இல்லை. 1973 முதல் இந்த கேள்வி எழுப்பப் பட்டு வருகிறது. மேற்கு அண்டார்க்டிக்காவில் உள்ள பனிப்பாறைகளின் தொடர்ச்சி சிதைகிறதா என்ற கேள்வியை ஜியோபிசிக்கல் ரிசர்ச் இதழ் இந்த கேள்வியைஎழுப்பியது.

    இது பற்றி ஆராய்ச் சியாளர்களிடம் முணுமுணுப்பு இருந்தது. அண்மையில் வெளியான இரு ஆய்வு அறிக் கைகள் இந்த கேள்விக்கு திட்டமாக ஆம் சிதைகிறது என்று கூறியுள்ளன. இவர்கள் ஆறு பனிப்படிவங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்.

    இவை ஒட்டு மொத்தமாக உருகி விட்டால் கடல்மட்டத்தின் உயரம் சுமார் 1.2 மீட்டர்கள் உயரும் என்றும் அந்த அறிக்கையில் கூறுகிறது. 2100ஆம் ஆண்டில் கடல்மட்ட உயர்வு குறித்து சர்வதேச பருவநிலைமாற்றகுழு நிர்ணயித்த அளவைக்காட்டிலும் இது இரண்டு மடங்காகும்.

    இது போன்ற அபாயமான விளைவுகளை இந்த அறிக்கை கூறவில்லை என்ற போதும், அவர்கள் கூறும்தகவல் கவலை அளிப்பதாகும். பைன் தீவுகள் பனிப்படிவம் கடலடி பனிப்பாறைகளோடு ஒன்றியிருந்த பகுதி கடலுக்குள் 1992 முதல் 2011ம் ஆண்டுக்குள் 31 கி.மீ. சுருங்கி விட்டது என்றும் த்வைட்ஸ் பனிப்படிவங்கள் 14 கிலோமீட்டர் பின் வாங்கியுள்ளன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. தரையோடு இணையும் பகுதி சுருங்குகிறது என்றால் அவை ஒரு தொடர் நிகழ்வாகவே இருக்கும்.

    இப்பனிப்படிவங்கள் திரும்பப்பெற முடியாத இழப்பு என்று பனிப்படிவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இது இழப்பு மட்டும் அல்ல. எதிர்காலத்துக்கு விடுக்கப்படும் அபாயமணி என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more: http://viduthalai.in/page7/81276.html#ixzz33LF0lKWI

    தமிழ் ஓவியா said...

    108 ஆம்புலன்ஸ் வந்தது எப்படி?

    25.2.2011 அன்று கோவையிலுள்ள கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் எனும் சிறந்த விருதினை மருத்துவர் பக்தவத்சலம் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

    அதே விழாவில் இன்னொரு அறிஞருக்கும் விருது வழங்கப்பட்டது.



    அவருடைய பெயர் டாக்டர் வெங்கட் செங்கவல்லி. அய்தராபாத்தைச் சேர்ந்த இவர் நெருக்கடியான ஒரு நேரத்தில் அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றி ஆராய்ந்து பல பட்டங்களைப் பெற்றவர். அய்தராபாத்தில் “Emergency Management And Research Institute” என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து திறம்படப் பணியாற்றி வருகிறார்.

    அவ்விழாவில் பேசிய வெங்கட் செங்கவல்லி, நான் அய்தராபாத்தில் நெருக்கடி நிலையில் நம் ஆளுமைத் திறன் _ ஆராய்ச்சி என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருங்காலத்தில் எனக்கு, ஆம்புலன்சு வண்டிகளை நெருக்கடி நிலையில் எப்படி விரைவாகப் பயன்படுத்திக் கொள்வது, உயிருக்குப் போராடுபவர்களைப் பாதுகாப்பாக உடனடியாக எப்படி மருத்துவமனைகளில் கொண்டு சேர்ப்பது என்பதை ஆராய வேண்டும் என்று தோன்றியது. தீயணைப்பு நிலையத்திற்கு நிலையான ஒரு தொலைப்பேசி எண் இருப்பதைப் போல, அவசர போலீஸ் உதவிக்கு ஒரு எண் இருப்பதைப் போல ஆம்புலன்சுக்கும் ஒரு நிலையான எண் வேண்டுமே என்று சிந்தித்தேன். அது இந்தியா முழுமைக்குமான ஒரு பொது எண்ணாக இருக்க வேண்டும். 108 என்ற எண் பொருத்தமானதாக எனக்குத் தோன்றியது. 108 என்ற இந்த எண்ணை அழைத்தால் அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்சு வண்டி முதலுதவி வசதிகளுடன் வந்து நிற்க வேண்டும்.

    இது தனியார் துறையில் இடம்பெற இயலாது. தீயணைப்புத் துறையைப் போல அரசாங்கம்தான் இதனை ஏற்று நடத்த வேண்டும். என்று தோன்றியது என்றும் சொல்லும் அவர், திட்டத்தைச் செம்மையாக வரையறைப்படுத்திக் கொண்டு முதலில் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியைப் போய்ப் பார்த்தார். திட்டத்தை நன்கு படித்துப் பார்த்த ஆந்திர முதலமைச்சர், அதனை நடைமுறைப் படுத்துவதென்று முடிவு செய்தார். அடுத்தவாரம் வந்து தம்மைச் சந்திக்குமாறு வெங்கட் செங்கவல்லியிடம் ஆந்திர முதலமைச்சர் கூறியனுப்பி விட்டார். அடுத்த நாள் செங்கவல்லிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டி விமான விபத்தில் காலமாகிவிட்டார்.

    மனந்தளராமல் தமது 108 ஆம்புலன்சு திட்டத்தை மராட்டிய முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தார். சில நாட்களிலேயே மராட்டிய முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தது. மராட்டிய முதலமைச்சரின் மனம் ஏற்குமாறு நல்ல முறையில் விளக்கமளித்துவிட்டு வெற்றிப் புன்னகையோடு வெளியில் வந்தார். இன்னும் சில நாட்களில் மராட்டிய மாநிலத்தில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழப் போகிறது என்று ஆவலோடு காத்திருந்தார் வெங்கட் செங்கவல்லி. ஆனால் அவர் எதிர்பார்த்த மாற்றம் வரவில்லை; மாறாக மராட்டிய முதலமைச்சரையே அங்கு மாற்றிவிட்டார்கள்! இப்போது புதிய முதலமைச்சர்!

    மனம் உடைந்துபோன மருத்துவர் எவ்வளவு அருமையான திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறோம்; நடைமுறைக்கு வராமல் காலம் தள்ளிக் கொண்டே போகிறதே என்று வருந்தினார்.

    கடைசியாக, இனி நாம் பார்க்க வேண்டிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிதான் என்று எண்ணிய வெங்கட் செங்கவல்லி, அவரிடம் விளக்கியுரைத்துவிட்டால் 108 எனும் இத்திட்டம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்ற நன்னம்பிக்கையோடு கலைஞரைப் பார்த்தார். கலைஞரைக் கவர்ந்தது 108! வெங்கட் செங்கவல்லி வெற்றி பெற்றார்.

    கலைஞர் ஆட்சியில், தமிழ்நாட்டில் எண்ணற்றோர் உயிரைக் காப்பாற்றி ஒளியூட்டிய 108 ஆம்புலன்ஸ் வந்தது இப்படித்தான்.

    - பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து

    தமிழ் ஓவியா said...

    அணைத்துக் கொண்டு அல்ல; அணைத்துவிட்டுப் படுங்கள்

    நவீன திறன்பேசிகள், குளிகைகள், கையடக்கக் கணினிகள் இன்று பெருகிப் போயுள்ளன. பகலெல்லாம் கட்டிக் கொண்டும், தூக்கிக் கொண்டும் அலைந்தாலும், இரவிலும் அவற்றை அணைத்தே பலர் உறங்குகின்றனர். படுக்கைக்கு அருகிலேயே வைத்து உறங்கும் பழக்கமும் இருக்கிறது. குறுஞ்செய்திக்காகவோ, அல்லது வேறு ஏதேனும் நினைவுறுத்தலுக்காகவோ அடிக்கடி ஒளியைப் பாய்ச்சும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும் என்கிறது ஓர் ஆய்வு.

    இரவா, பகலா என்று அனிச்சையாக நாம் உணர்வதில் வெளிச்சத்தின் பங்கு முக்கியமானது. பொதுவாகவே, மாலை நேரம் ஆகஆக புறச்சூழலில் சிவப்பு நிறம் அதிகரிக்கிறது. கண்ணின் ஆழப்பகுதியில் இருக்கும் செல்களில் உள்ள மெலனாப்சின் என்ற புரோட்டீன் மீது இந்த சிவப்பு நிறம் விழும்போது, பொழுது போய்விட்டது. படுக்கப் போ என்று அந்த செல்கள், மூளைக்கு உத்தரவிடுகின்றன. ஆக, இரவு நேரம் என்றால் கண்ணில் சிவப்பு நிற ஒளிதான் படவேண்டும்.

    இந்த அமைப்பை திறன்பேசிகள் குளறுபடி செய்கின்றன. அவற்றில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி தொடர்ந்து கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தால் இன்னும் இரவு நேரம் வரவில்லை என்ற தவறான தகவலைத்தான் கண் செல்கள், மூளைக்குக் கடத்தும். ஏனென்றால், நீலநிறம் என்பது அதிகாலை நேரத்துக்கானது. தூங்கியது போதும் என்று படுக்கையில் இருந்து நம்மை எழுப்பிவிடுவதற்கானது.

    எனவே, தொந்தரவு இல்லாத ஆழ்ந்த உறக்கம் கிடைக்க வேண்டும் என்றால் திறன்பேசிகளையும், குளிகைகளையும் அணைத்துவிட்டுப் படுங்கள். இல்லாவிட்டால் கண்ணில் படாமல் தொலைவிலாவது வைத்துவிட்டுப் படுங்கள் என்கிறார் இதுகுறித்து ஆய்வு நடத்திய அமெரிக்க வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த பிரையன் ஸோல்டோவ்ஸ்கி.
    செய்திகளை பகிர்ந்து கொள்ள

    தமிழ் ஓவியா said...

    அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகள்

    அமெரிக்க மண்ணிலே சிகாகோவிலே 1988லே தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வந்திருந்த தமிழ் ஆசிரியை சிறப்பாகச் சொல்லிக் கொடுத்தார்.

    தமிழ் என்றால் முடியாது என்ற வார்த்தையையே அறியாத அமெரிக்கத் தமிழ் நெப்போலியன் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் பாபு அவர்களின் அயராத உழைப்பால் இன்று நானூறுக்கும் மேற்பட்ட ஏழு பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன. அன்றிருந்த ஆசிரியைகள் கலைச்செல்வி கோபாலன், கண்ணகி விசுவநாதன், சரோ இளங்கோவன் போன்றோரின் ஆர்வத்தாலும், அன்பாலும் குழந்தைகள் மழலைத் தமிழ் பேசிய நிலை மாறி, இன்று அழகிய தமிழ் உச்சரிப்புடன், ஆர்வத்துடன் பேசி, பாடி, நடித்து, பல போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சி பொங்குகின்றது. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த அய்ந்து வயது சிறுவன் நூறு திருக்குறள்களை ஒப்புவிக்கின்றான். பல சிறுவர்கள், சிறுமியர்கள் 200, 300, 700 என்று ஒப்புவிக்கின்றனர். அவர்களாகவே திருக்குறள் பற்றிக் கதைகள் சொல்கின்றனர்.

    இன்று நடந்த ஆண்டு விழாவிலே பல போட்டிகள். முழுவதும் தமிழிலேயே ஆங்கிலம் கலக்காமல் கதை, வார்த்தைகள், பழமொழிப் போட்டிகள், கிராமிய கலை, பண்பாட்டுப் பாடல்கள், பொங்கலின் சிறப்புகள் என்று குழு குழுவாக அவர்கள் அளித்த நிகழ்ச்சிகள் பாராட்டின் உச்சத்தைத் தொட்டன.

    இது இல்லினாய் மாநிலத்தின் கல்வித் திட்டத்தில் குழந்தைகள் படிப்புத் தேவையில் இணைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகின்றது.

    இன்று பல தமிழ்ச் சங்கங்களும் அமெரிக்காவின் அத்துனைப் பெரு நகரங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் சனி, ஞாயிறுகளில் நடப்பதும், குழந்தைகளின் தமிழ் அறிவும், தவறில்லா உச்சரிப்பும் தாத்தா பாட்டிகளைப் பெருமையில் ஆழ்த்தி விடுகின்றன.

    - மருத்துவர் சோம.இளங்கோவன்

    தமிழ் ஓவியா said...

    நாடகம் ஆரம்பம்


    தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு ஒரு நாளைக்கு பல முறை உடைமாற்றுவதும், அந்தந்த பகுதிக்கேற்ற தொப்பிகள், உடைகள், வண்ணங்கள் பூசிக் கொண்டு தோன்றி, அடிப்படையே இல்லாத உணர்ச்சிப்பூர்வ வசனங்களாகப் பேசி வென்றுவிட்ட மோடியின் நாடகம் அடுத்த காட்சிக்குச் சென்றுள்ளது. காட்சியின் திரைவிலகியதும், நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறார் ராஜபார்ட் மோடி. முதல் அடி வைப்பதற்குள் கீழே விழுகிறார். ஏதும் சறுக்கிவிட்டதா என்று எல்லோரும் பதற்றத்துடன் பார்க்க, நாடாளுமன்றப் படிகளை விழுந்து வணங்குகிறார் மோடி. அத்தனை கேமராக்களும் சுற்றி சுற்றிப் படமெடுக்க, அவற்றின் பிளாஷ் ஒளியில் காட்சி முடிந்து, நாடாளுமன்ற மைய மண்டபத்துக்குள் தொடர்கிறது அடுத்த காட்சி. கண்ணீரும் கம்பலையுமாக மோடி தொடங்கிய நாடகத்தில் வாழ்ந்து கெட்ட துணை கதாபாத்திரமான அத்வானியும் சேர்ந்து கொள்ள 1960 களில் அழுவாச்சி படம் பார்த்த எபெக்டில் ஒட்டுமொத்த இந்தியாவும் கைக்குட்டை தேடுகிறது.

    இது ஒருபுறம் என்றால், பக்கத்து செட் நாடகத்தில் ராஜபார்ட்டான ராஜபக்சேவுக்கு, மோடி விடுத்த அழைப்பிற்கு தமிழ்நாடெங்கும் எதிர்ப்பு கிளம்ப, நாங்கள் விடுத்த அழைப்பு நெய்யில் பொறித்தது என்று விளக்கம் கொடுத்தார் பா.ஜ.க.வின் ஒரே தமிழ்நாட்டு எம்.பி. நாடகத்த்தில் தன் பங்கைச் சிறப்பாகச் செய்து பேர் வாங்க வேண்டும் என்ற துடிப்பு ராஜபக்சேவுக்கு இருக்காதா? உடனடியாக சிறையில் உள்ள இந்திய மீனவர்களையெல்லாம் விடுதலை செய்யப் போவதாக அவரும் அறிவித்துள்ளார். அதற்காக ஓநாய் சைவமாகிவிட்டது என்று பொருளல்ல. அப்புறம் அடுத்த முறை இந்தியா வரும்போது நல்லெண்ணத்துக்காக விடுவிக்க ஆள் வேண்டுமே! மீண்டும் கைதுகள் நடக்கும்; துப்பாக்கிச் சூடுகள் நடக்கும். கைது செய்யப்பட்டோர் விடுவிக்கப்படலாம். ஆனால், கொன்றவர்களை என்ன செய்வார்? சொல்லமுடியாது சூப்பர்மேனாக கேதர்நாத்தில் குஜராத்திகளை மட்டும் மோடி காப்பாற்றிய காட்சி போல், சிங்களர்களால் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களை மட்டும் சாவித்திரியாக வேடமேற்று மீட்டுவந்தாலும் வரலாம். யார்கண்டா? இந்த அய்ந்தாண்டில் இன்னும் என்னென்ன காட்சிகள் அரங்கேற இருக்கின்றவோ?

    தமிழ் ஓவியா said...

    நாடாளுமன்றத்தில் பெண்கள்


    அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 61 பெண்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    543 உறுப்பினர்ககளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் 15 தேர்தல்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் தேர்வாகியுள்ளனர்.

    சுதந்திரத்திற்குப் பின் நடைபெற்ற முதல் தேர்தலில் (1952) 5 விழுக்காடு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கடந்த 2009 தேர்தலில் 59 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    2014இல் தான் அதிகளவாக 11.3 விழுக்காடு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    33 விழுக்காட்டை நெருங்குவதற்கு இன்னும் எவ்வளவு காலமாகுமோ?

    தமிழ் ஓவியா said...

    பதவியேற்பு விழாவில் போர்க் குற்றவாளியா?

    26.05.2014 அன்று புதிய பிரதமராக, கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்திராமலேயே, தனித்த பெரும்பான்மைப் பலம் (மக்களவையில் 282 இடங்களை) பெற்று ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் பா.ஜ.க.வின் நரேந்திரமோடி அவர்களுக்கு எதிராக வாக்களித்த, நாட்டின் 69 சதவிகித மக்களில் ஒரு பகுதியாக உள்ளவர்களான நமது சார்பில், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். (நரேந்திரமோடி வாங்கிய வாக்கு 31 சதவிகிதம்).



    மாற்றத்தை விரும்பிய மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகள் பல்துறையிலும் உள்ளன. ஆட்சி எத்திசையில் செல்லுகிறது என்பதைப் பொறுத்தே, இந்த வெற்றி நிலைத்த வெற்றியா என்பதைத் தீர்மானிக்கும்.

    ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றாலும், பிரதமர் _- ஆட்சியாளர் _- அனைவருக்கும் உரியவர்; அனைவரது எதிர்பார்ப்புகளையும் அலட்சியப்படுத்தாது அரவணைத்துச் செல்ல வேண்டிய அறநெறி அரசியலே - ஜனநாயகம் என்ற மக்களாட்சி ஆகும்.

    அவரது பதவியேற்பு விழாவுக்கு பல நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி, அவர்கள் வந்து வாழ்த்துவது நாட்டிற்கு, புதிய அரசுக்குப் பலம், பெருமை என்றாலும்கூட, மிகப் பெரிய இனப் படுகொலை நிகழ்த்தி, அய்.நா. மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தின் முன்னால் போர்க் குற்றவாளி என்று குற்றவாளிக் கூண்டில் பெரும்பாலான அதன் உறுப்பு நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காரணமாக, நிறுத்தப்பட்டுள்ள இலங்கை அரசை _- அதன் அதிபர் ராஜபக்சேவை அழைப்பது எவ்வகையிலும் சரியானதாக அமைய முடியாது.

    அண்டை நாடு _ சார்க் (Saarc) உறுப்பு நாடு என்று காரணம் கூறுவது எவ்வகையிலும் சரியல்ல! தொப்புள் கொடி உறவுள்ள ஈழத் தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் வாழ்வுரிமையைப் பறித்ததோடு, 2009-இல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப்பின் 5 ஆண்டுகள் ஆகியும்கூட, அங்குள்ள தமிழர்கள் நிம்மதியாக வாழ இயலாத நிலை! சிறையில் அல்லது காணாமல் போனதாக அறிவிப்பு, ஆள் தூக்கும் அவலம்; மறைந்தவர்களுக்காக, கொல்லப்பட்டவர்களுக்காக அழுது கண்ணீர் வடிக்கக்கூட உரிமையற்ற பரிதாபம்!

    ஒரு ஜனநாயகத் தேர்தல் மூலம் வந்த வடக்கு மாகாணத் தமிழர் ஆட்சிக்குக்கூட எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை; இன்னமும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதும், அதனால் உயிருக்குப் பயந்து ஈழத் தமிழர்கள் இரத்தக் கறையுடன் கண்ணீருடன் தப்பி வருவதும், புகலிடங்களைத் தேடுவதுமாக உள்ள நிலையில், ராஜபக்சே இங்கே, புதிய மோடி அரசு பதவி ஏற்கையில் வந்து வாழ்த்துவதோ, பங்கேற்பதோ பல கோடித் தமிழர்கள் நெஞ்சம் -ஏற்கெனவே அவர்கள் வெந்த புண்ணோடு உள்ள நிலையில் _- இப்படி ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு நியாயமானதுதானா?

    ராஜரீகம் என்ற சாக்கு _- விளக்கம் ஏற்கப்படக் கூடியதல்ல.

    இதற்கு முன் தேசிய ஜனநாயக முன்னணி (NDA) வாஜ்பேயி அவர்கள் பிரதமராகப் பதவியேற்றபோதோ, 2004, 2009இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA)பிரதமர் மன்மோகன்சிங் பதவி ஏற்றபோதோ வெளி நாட்டவரை அழைக்கவே இல்லையே _- இப்பொழுது மட்டும் என்ன அவசியம் வந்தது?

    அய்.நா.வால் போர்க் குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவர், இன்னமும் தமிழினப் படுகொலைகளைத் தயங்காது நடத்திடும் படலம் அங்கே தொடரும் நிலையில் இது தவிர்க்கப்பட வேண்டாமா?

    உலக முழுவதும் உள்ள தமிழர்களின் வேண்டுகோள்!

    இது தமிழ்நாட்டுத் தமிழர்கள் வேண்டுகோள் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உணர்வு களின் பிரதி பலிப்பாகும்!

    இல்லையென்றால், இலங்கையுடன் ஈழத் தமிழர் பிரச்சினைகளைப் புதிய அரசு வந்தால் பெரும் அளவுக்குப் புதிய அணுகுமுறையோடு தீர்க்கும் என்று நம்பியவர்களின் நம்பிக்கை வீணாகி, இவர்களும் உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கப்பன் என்பதாகவே கருதப்படும். துவக்கத்திலேயே இப்படி ஒரு நிலையா? இன்னும் இராணுவத்தின் அட்டகாசம் அங்கு குறையவே இல்லை!

    புதிய மத்திய அரசில் பொறுப்பேற்க இருப்பவர்கள் சிந்திக்கட்டும்; துணிந்து முடிவுகளை வழமையாக தவறான ஆலோசனைகளைத் தருவதையே வாடிக்கையாகக் கொண்ட அதிகாரிகளை மட்டுமே நம்பாமல், சுதந்திரமாக மக்கள் உணர்வுகளைக் கருத்தில் எடுத்து முடிவு எடுப்பது அவசியம் _ அவசரம்.

    - கி.வீரமணி, ஆசிரியர்

    தமிழ் ஓவியா said...

    பாராட்டத்தக்க பீகார்!
    பாராட்டத்தக்க பீகார்!


    மக்களவைத் தேர்தலில் பீகாரில் அய்க்கிய ஜனதா தளம் 2 இடங்கள் மட்டும் பெற்றமைக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவித்தார். எனினும் சட்டசபையைக் கலைக்கு அவர் கோரவில்லை. பதவி விலகல் முடிவைட் திரும்பப் பெற வேண்டும் என்று கட்சிக்குள் பலரும் கோரினாலும், அதில் உறுதியாக இருந்தார் நிதிஷ்.

    தொடர்ந்து நடைபெற்ற அய்க்கிய ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான ஜிதன் ராம் மஞ்சி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவரான ஜிதன் ராம் மஞ்சி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. மொத்தம் 243 பேரைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் 117 இடங்களைப் பெற்றுள்ள அய்க்கிய ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் - 4, கம்யூனிஸ்டுகள்-1, சுயேட்சை-2 என நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற போதுமான இடங்களை மஞ்சி தலைமையிலான அரசு பெறும் என்றாலும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒரு முதல்வர் என்பதாலும், மதவாத சக்திகளை வீழ்த்தி, சமூகநீதியைக் காப்பாற்றவும் எங்களின் 21 சட்டப்பேரவை உறுப்பினர்களும் மஞ்சி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று அறிவித்த லாலு தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் சொன்னபடியே வாக்களித்து மொத்தம் 145 வாக்குகளுடன் நம்பிக்கை அளித்துள்ளது. இதை எதிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது பாரதிய ஜனதா. எதிரெதிர் திசைகளில் இருந்த லாலுவும், நிதிஷும் சமூக நீதித் தளத்தில் மறைமுகமாவேனும் கைகோர்த்திருப்பது நம்பிக்கைக் கீற்றைக் காட்டுவதாகக் கருதுகிறார்கள் சமூகநீதியாளர்கள்! இதைத்தான் நாடும் எதிர்பார்க்கிறது.

    தமிழ் ஓவியா said...

    மதத்தை மறுப்பதா? கர்ப்பிணிக்கு மரணதண்டனை தந்த மதம்


    இங்கல்ல... சூடானில்!

    மதத்தை மறுப்பதா?

    கர்ப்பிணிக்கு மரணதண்டனை தந்த மதம்


    சூடானில் மரியம் யாஹ்யா இப்ராகிம் (வயது 27) என்பவருக்கு 20 மாத வயதுள்ள ஆண்குழந்தை உள்ளது. தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆனால், அப்பெண்ணின் தந்தை குழந்தைப் பருவத்திலேயே பிரிந்துவிட்டார். தனக்குத் தெரிந்தவரை தான் ஒரு கிறித்தவர் என்றே கருதி வந்துள்ளார்.



    அவர் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டார். இதனால், அவர் மதத்தை மறுத்தவராகக் குற்றம் சுமத்தப்பட்டார். மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துகொண்டதைச் செல்லாது என்று விபச்சாரக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு மீண்டும் அவருடைய மதத்துக்குத் திரும்புவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்தது. ஆனால் அவர் கிறித்தவர் என்று தன்னைக் கூறிவிட்டார். அவர் தந்தை ஓர் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அப்பெண்ணையும் இஸ்லாமியர் என்று நீதிமன்றம் கூறுகிறது.

    சர்வதேச பொது மன்னிப்பு சபையின் சூடான் ஆராய்ச்சியாளர் மானர் அய்ட்ரிஸ் கூறும்போது, உண்மை என்னவென்றால், தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்பெண் அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப மதத்தைத் தேர்வு செய்துள்ளார். அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதால் மதத்தை மறுத்தார் என்று கூறியும், விபச்சாரம் செய்ததாகக் கூறியும் தண்டனைக்கு உள்ளாகி உள்ளார். மதத்தை மறுப்பது, விபச்சாரம் ஆகியவற்றைக் குற்றச் செயல்களாகக் கருதக்கூடாது. இச்செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் விதிகளை மீறி உள்ளது வெளிப்படையாகி உள்ளது என்று கூறுகிறார்.

    மேலும் அவர் கூறும்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மரியத்தின் மனதளவிலான மத நம்பிக்கை, மத அடையாளத்தைக் கூறுவதால் மட்டுமே அவர் தண்டிக்கப்படக் கூடாது. நிபந்தனைகளின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே சர்வதேச பொது மன்னிப்பு சபையின் விருப்பமாகும். மனசாட்சிப்படி அவருடைய நம்பிக்கையை, மதத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் கருத்துச் சுதந்திரத்தைக் காண முடியவில்லை. இவை எட்டமுடியாத தொலைவில் உள்ளது. தனிப்பட்டவர் மீதான தண்டனை, அதுவும் மதம், நம்பிக்கைமீது தண்டனை இவை போன்ற அனைத்திலும் கருத்துச் சுதந்திரத்தை உள்ளடக்கியே இருக்கிறது என்றார்.
    நீதிபதி அப்பாஸ் அல் கலீஃபா குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணான மரியம் யாஹ்யா இப்ராகிமிடம் இசுலாம் மதத்துக்குத் திரும்புகிறாயா என்று கேட்டபோது, நான் கிறித்தவர் என்று பதில் அளித்துள்ளார். அதன்பிறகே மரியத்துக்கு மதத்தை மறுக்கும் குற்றத்துக்கு மரண தண்டனையும், வேறு மதத்தவரைச் திருமணம் செய்துகொண்டதைச் செல்லாது என்று அறிவித்து, அதனால் விபச்சாரக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு நூறு கசை அடி தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானதை நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டு மதச் சுதந்திரத்தைக் கோரும் பதாகைகளுடன் முழக்கமிட்டவர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில வாரங்களாகவே அதிக சுதந்திரமும், சமுதாயம், பொருளாதார முன்னேற்றங்கள் வேண்டும் என்று கர்த்தூம் பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டு தொடர்ந்து போராட்டங்களைச் செய்து வருகின்றனர்.

    மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் சூடானிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், மனித உரிமை நசுக்கப்படுவதைக் கண்டித்தும் இசுலாமியத்தை முன்னெடுக்கும் அரசு நம்பிக்கையின்மீதான சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சூடான் அரசுக்குக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.