Search This Blog

24.5.14

மாசி - சித்திரை திருவிழா இரகசியங்கள்,ஏமாறும் மக்கள்!

மாசி - சித்திரை திருவிழா இரகசியங்கள்



    இன்னும்-எத்தனை-காலம்தான்-ஏமாற்றுவார்
    மாசி - சித்திரை திருவிழா இரகசியங்கள்
    சைவ மீனாட்சி-வைணவ கள்ளழகர் ஏமாறும் மக்கள்
    தமிழகத்தில் சங்க காலத்தின் இறுதியில் வேதமதம் புகுந்ததை சங்கப்பாடல்கள் பலவற்றின் மூலம் அறியலாம். சங்ககாலத்தின் இறுதியில் வாழ்ந்த வள்ளுவனின் குறளில் கூட வேத மதத் தாக்கம்  மேலோட்டமாகக் காணப்படும். ஆனால், இவ்வேத மதம் பண்டைய  தமிழர்களின் வாழ்வியல் விழாக்களில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவில்லை.

    இயற்கையோடு இணைந்த தமிழர் விழாக்கள்
    பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு கலாச்சார மாற்றங்களைக் கண்டபோதும் தமிழர்களின் வாழ்வியலுடன் கூடிய விழாக்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சைவம் காலூன்றிய 6-ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தின் வாழ்வியலுடன் கூடிய விழாக்கள் சைவ சமய விழாவாக மாற்றம் கண்டதே தவிர தொன்று தொட்டு வந்த விழா மரபுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.

    இதற்கு முக்கியக் காரணம், அதிகாரத்தில் உள்ள பாண்டிய, சோழ, சேர மன்னர்கள் தங்களின் சமயம் சார்ந்த வாழ்வியலை மாற்றினார்களே தவிர மரபுவழி விழாக்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 12-ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் வீழ்ச்சியின் காரணமாக பாண்டியர்களின் ஆளுமை கிழக்குத் தமிழகத்தில் பரவியது. விளைவு, பரந்துவிரிந்த நிலப்பரப்பில் பல எதிரிகள் உள்ளுக்குள்ளேயே தோன்றி பாண்டியருக்குத் தலைவலியாக மாறத் தொடங்கினர்.
    அந்நியரின் ஆதிக்கமும் கலாச்சார மாற்றமும்
    இதே காலகட்டத்தில் சேரப்பேரரசின் ஆளுமைக்கு உட்பட்ட கொங்கணப்பகுதிகள் சாளுக்கியர்களின் கைவசம் செல்லத் தொடங்கின. விளைவு, சேரப்பேரரசும் மெல்ல மெல்ல தங்கள் பலம் இழந்தது. சேரநாட்டின் உட்பகுதி வரை துளுவ, கொங்கண, ராஷ்டிரகூடத்தாரின் நுழைவால் தமிழ் மொழி மாற்றம் கண்டு மலையாளமாகத் திரிந்தது. தொடர்ந்து வந்த காலகட்டத்தில் மூன்று பேரரசுகளும் அழியத் தொடங்கின.

    புதிய எதிரி

    அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் என்பவர் தெற்கில் உள்ள ஆட்சியாளர்களுக்குப் புதிய எதிரியாகி பெரும் தலைவலியாக மாறினார். இவர் பிடியில் இருந்து மதுரையைக் காப்பாற்ற கிருஷ்ண தேவராயரின் உதவியை நாடினர் பாண்டியர். இதன் காரணமாக கிருஷ்ணதேவராயரின் கீழ் வரும் ராஜ்யத்தில் ஒன்றாக மதுரை மாறியது. விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புகளை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர். கிருஷ்ண தேவராயரிடம் பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர் பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார் . விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார். எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார். இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்க மன்னர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.

    இதுவரை அந்நியர்கள் நிரந்தரமாக நுழையாத தமிழகமண்ணில் நாயக்கர்களின் ஆட்சி இப்படியாக நிரந்தரமானது. நாயக்கர்கள் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதியையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர். இந்த நிலையில் 1600-களில் விஜயநகரம் வலுவிழக்கத் தொடங்கியது. மதுரையில் பலம்வாய்ந்த நாயக்க மன்னர்கள் விஜயநகரத்தின் கீழ் இயங்குவதை விட்டு தன்னிச்சையான நாயக்கப் பேரரசு என்று முத்துவீரப்ப நாயக்கர் அறிவித்தார்.
    இதுதான் தமிழர்களின் வாழ்வியலில் பெரியமாற்றம் கொண்டுவர முக்கியக் காரணியாக விளங்கியது. 7ஆம் நூற்றாண்டில் இருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை வலுவாக இருந்த சைவம், வைணவத்தை மதுரைக்குத் தெற்கே வரவிடாமல் தடுத்து வைத்திருந்தது.

    வைணவ மதம் சார்ந்தவர்களான நாயக்கர்கள் வைணவத்தைப் போற்றியவர்கள். அதே வேளையில் அவர்களின் ஆளுமையில் இருந்த மதுரை பெரும்பான்மை சைவர்களால் நிரம்பி இருந்தது. மதுரை மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்று ஊகித்துக் கொண்டனர். அப்போது கட்டுக்கதைகளுக்கு எளிதில் பலியாகும் மக்களிடம் சில புரட்டுக்களைப் பரப்பாமல் வைணவத்தை வளர்ப்பது எளிதல்ல என்று நினைத்து சில தந்திரச் செயல்களைக் கையாண்டனர். இவர்களின் இந்த ஏமாற்றுத் திட்டத்திற்கு முதல் படியாக அமைந்ததுதான் மதுரை சித்திரைத் திருவிழா.






    மாசி மாதத் திருவிழா சித்திரைக்கு மாறிய கதை
    இன்றுள்ள மீனாட்சி அம்மன் கோவில் சிறிய அளவில் இருந்த ஒரு வழிபாட்டுத்தலம். இதனை ஒட்டியே பாண்டிய அரண்மனையும் இருந்தது. நாயக்கர்கள் வந்த பிறகு  தவிட்டுச் சந்தை மேடாக இருந்த பகுதியைச் சமப்படுத்தி தங்களுக்கு இருப்பிடம் அமைத்துக் கொண்டனர்.

    பிற்காலத்தில் பாண்டியர் வசித்த அரண்மனையை முழுமையாக பெரிய கோவிலாக மாற்றிவிட்டனர். மீனாட்சி அம்மன் கோவில் நாயக்கர்களின் கைகளில் சென்றதும் பாண்டிய மன்னர்கள் வசித்த அடையாளங்கள் அழிக்கப்பட்டு, மெல்ல மெல்ல அப்பகுதி முழுமையான கோவிலாக மாற்றப்பட்டது. வரலாற்றில் இதற்குப் பல சான்றுகள் உள்ளன.  அம்மன் மற்றும் சொக்கநாதர் சன்னதியுடன் இருந்த கோவில் விரிவுபடுத்தப்பட்டு  கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238ஆம் ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்குக் கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும் கட்டப் பெற்றது. வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.

    மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1563இ-ல் கட்டப் பெற்று 1570 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது.
    திருமலை நாயக்கர் காலத்தில் கோவிலுக்கு வெளியே அரண்மனையாக இருந்த இடம் பெரிய கோவிலாக மாற்றப்பட்டதைப் பற்றி விரிவாக ஆய்வு செய்ய மதநம்பிக்கை பெரும் தடையாக இன்றும் உள்ளது. ஆகவே வரலாற்றின் பல உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியாமல் வெறும் கட்டுக்கதைகளை மட்டுமே நம்பி இருக்கவேண்டிய சூழலில் தற்போதைய தமிழகம் தள்ளிவிடப்பட்டது.

    நாயக்கர்களின் வருகைக்கு முன்பு சைவத்தலமாக இருந்த மீனாட்சி அம்மன் கோவில் விழாக்கள் அனைத்தும் சமயக் குறவர்களின் வழிவந்த ஆதீனங்களின் கட்டளைப்படி நடந்து வந்தன. அதில் ஒன்றுதான் மாசி மாதத் திருவிழா.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முக்கியவிழா மாசிமாதம் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவிற்கு மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து அறுவடை முடிந்த பிறகு கட்டுச்சோறு கட்டிக்கொண்டு மாட்டுவண்டியிலேறியும் நடந்தும் குடும்பம் குடும்பமாக மாசி மாதத் திருவிழாவிற்கு வருகை புரிவார்கள். மாசி மாதம் மிதமான கோடைகாலம் என்பதால் நீண்டதூரப் பயணத்திற்கு உகந்த சூழல் நிலவும். அதாவது அவர்கள் கொண்டுவரும் உணவு இப்படி இயற்கையோடு இயைந்துதான் தமிழர் விழாக்கள் சிறப்புடன் அமைந்து இருக்கும்.

    தை மாதம் அறுவடைக் காலமாகையால் மக்கள் செல்வச்செழிப்புடன் இருந்திருப்பர். எனவே அதனை அடுத்து வரும் மாசி மாதத்தில் ஓய்வு மற்றும் கேளிக்கை நிமித்தமாக மீனாட்சி கோவில் விழாவிற்கு வருகை புரிவார்கள். மீனாட்சி அம்மன் தேர் செல்லும் வீதிகள் தான் மாசிவீதிகள்(கிழக்குமாசி, வடக்குமாசி, தெற்குமாசி, மேற்குமாசிவீதிகள்) என்று அழைக்கப்பட்டன. இக்காலங்களில் அவர்கள் ஊர்கள் இருக்கும் திசைகளில் உள்ள வீதிகளில் தங்களுக்கென அமைக்கப்பட்ட சத்திரங்களில் இருந்து விழாக்களில் கலந்து கொள்வார்கள்.
    நாயக்கர்களும் வைணவமும்

    நாயக்கர்களின் ஆட்சிக்கு முன்பு சைவ, வைணவர்களின் சண்டையின் முக்கிய மய்யமாக மதுரை இருந்தது. மதுரைக்கு வடப்புறம் வைணவர்களின் ஆதிக்கமும் தென்புறம் சைவர்களின் ஆதிக்கமும் நிறைந்து இருந்தது.  இந்த நிலையில் நாயக்கர்களின் ஆட்சி வந்த பிறகு சைவத்தலத்திற்கு உரிய முக்கியத்துவத்தைக் குறைக்கும் நோக்கில் வடமதுரையில் இருக்கும் வைணவத்தலங்களின் விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர்.

    திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு அழகர்கோவிலைப் பிரபலமாக்க தங்களுடைய யுகாதி பண்டிகையை ஒட்டி எதிர்சேவை என்னும் அழகர் ஊர்வலத்தை உருவாக்கினார்கள். இதன்படி அழகரை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வகையில் ஆண்டிற்கு ஒருமுறை அழகர் மலையில் இருந்து அலங்காநல்லூர் வழியாக சோழவந்தான் தேனூர் சென்று வைகை ஆற்றில் இறங்கும் விழா முன்னெடுக்கப்பட்டது. வழியில் செல்லும் அனைத்து ஊர்களிலும் அழகருக்குச் சிறப்பு பூசைகள், வழிபாடுகள் செய்யப்பட்டன. ஆனால் வைணவக் கடவுளான அழகரை மதுரை நகருக்கு அருகில் வர சைவ மதத்தவர் கடுமையாக எதிர்த்தனர். ஆகையால் சோழவந்தான் தேனூரோடு தன்னுடைய எதிர்சேவையை முடித்து விட்டு மீண்டும் அழகர் கோவில் சென்றுவிடுவார். அழகர் கோவில் கட்டிய பதினைந்தாம் நூற்றாண்டு முதல் திருமலை நாயக்கர் காலம் வரை சுமார் நூற்றி அய்ம்பது ஆண்டுகள் மதுரை மக்களுக்கு எந்த ஒரு தொடர்புமின்றியே இருந்தது.

    முன்பு கூறியது போல் மதுரை மக்கள் மாசி மாத மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். இந்த விழா மாசி மாதம் முழுவதும் நடக்கும் பெருவிழாவாக இருந்தது. மீனாட்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்கள் தங்களின் பரம்பரை வழிபடும் வைணவ தெய்வங்களுக்குக் கொடுக்கவில்லையே என திருமலை நாயக்கர் தன் இளம்பருவத்தில் இருந்தே நினைத்திருந்தார். எனவே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதுவரையில் சைவர்கள் ஆகிய பண்டாரங்களின் கைகளில் இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பார்ப்பனர்கள் துணையுடன் அச்சுறுத்திப் பறித்துக் கொண்டார். திருமலை நாயக்கரின் இந்தத் திட்டத்திற்குப் பெரும் துணையாக நின்றவன் ராமப்பையன் என்ற பார்ப்பனத் தளபதியாவான்.

    சோழவந்தானில் குளித்த அழகர் மதுரைக் கரைக்கு வந்ததெப்படி!

    வைணவ ஆதரவாளராகிய திருமலை நாயக்கர் இராமப்பையனின் ஆலோசனையின் பேரில் வஞ்சகத் திட்டம் ஒன்றை வகுத்தார். அதனடிப்படையில் அழகர் மதுரைக்குள் வரவேண்டும். மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க,  ஆற்றங்கரையில் உள்ள கருப்பண்ணசாமி என்ற குலதெய்வ கோவில்வரை அழகரைக் கொண்டு வரும் திட்டமும் தயாரிக்கப்பட்டது.  இதற்காக பல்வேறு கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டன.

    பாய்ந்துவரும் வைகையாற்றில் இதுவரையில் சோழவந்தான் அருகில் உள்ள தேனூரில்தான் அழகர் ஆற்றில் இறங்கிக்கொண்டு இருந்தார். இனிமேல் மதுரையில் (தற்போது கோரிப்பாளையம் என்ற பகுதியில்) வைகையாற்றில் இறங்குவார். காரணம் அழகர் வேறு யாருமல்ல, மீனாட்சியின்  அண்ணன்தான். மதுரையில் நடக்கவிருக்கும் தனது தங்கையின் திருமணத்திற்காக அழகர் மலையிலிருந்து வருகின்றார். வருகின்ற வழிநெடுக அவருக்குக் கிடைத்த வரவேற்பை எல்லாம் பெற்றுக்கொண்டு ஆங்காங்கே தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு வருகிறார்.

    நகரில் மீனாட்சி சொக்கன் திருமண முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டது. சொக்கநாதனைத் (சிவனை) திருமணத்திற்கு வந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் தாலி கட்டச் சொல்லி அவசரப்படுத்துகின்றனர். ஆனால் மீனாட்சியோ எனது அண்ணன் அழகர் வந்து என்னுடைய கரத்தை எடுத்து சொக்கனிடம் தாரைவார்த்துக் கொடுக்கவேண்டும் என்று அடம்பிடிக்கிறாள். மீனாட்சியின் விருப்பத்தைக் கண்ட சிவபெருமான், உடனே அழகராக(விஷ்ணு) மாறுகின்றார். மீனாட்சியின் கைகளைப்பிடித்து சொக்கனிடம் கொடுக்கின்றார். அதாவது சிவனே ஒரு பக்கம் அண்ணனாகவும் இன்னொரு பக்கம் கணவராகவும் மாறி நிற்கிறார்!

    (இதெல்லாம் ஆற்றின் அக்கரையில் கூப்பிடுதூரத்தில் உள்ள தல்லாகுளத்தில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும் கள்ளழகருக்குத் தெரியாதாம்.)


    மறுநாள் காலையில் தங்கை மீனாட்சி திருமணத்தை நடத்துவதற்காக தல்லாகுளத்தில் இருந்து கிளம்பி வைகை ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்குகிறார்.



    இதற்காகவே திருமலை நாயக்கர் காலத்தில் தல்லாகுளத்தில் பெருமாள் கோவில் கட்டப்பட்டது. மன்னரின் அதிகாரத்தின் முன்பு மக்கள் ஒன்றும் செய்ய முடியாத காரணத்தால் அழகர் தல்லாகுளம் வரை கொண்டு வரப்படுகிறார். அதன் பிறகு கருப்பண்ணசாமி கோவில் அருகில் வைகை ஆற்றில் இறங்குகிறார். அப்பொழுதுதான் அவருக்கு மீனாட்சிக்குத் திருமணமாகிவிட்ட சேதி வருகிறது. தன்னைப்போல் உருமாறி இந்தச் சிவன் பித்தலாட்டம் செய்து தங்கையைத் திருமணம் செய்துவிட, ஆத்திரம் வந்த அழகர், அண்ணனைப் போன்று வேடமிட்டவனையே அடையாளம் தெரியாத இவளெல்லாம் ஒரு தங்கையா? என்று நினைத்து இனி இப்படி ஒரு தங்கையே தனக்குத் தேவையில்லை என வைகையாற்றில் தலைமுழுகி அப்படியே வண்டியூர் பக்கமாகப்போய், போகின்ற வழியில் கொக்கைச் சுட்டு தனது வைப்பாட்டியிடம் கொடுத்து, இரவு முழுவதும் அங்கு கூத்தடித்து மறுநாள் மாறுவேடத்தில் தல்லாகுளம் சென்றார் என்ற இந்தக் கதையினைச் சொல்லி அதுவரையில் மாசிமாதம் நடைபெற்றுக் கொண்டு இருந்த விழாவை தனது விருப்பப்படி சித்திரைக்கு மாற்றினார் திருமலை நாயக்கர். அதிகாரத்தின் காரணமாக ஏற்பட்ட மாற்றமாக இருந்தாலும் கடவுளர்கள் தொடர்பாக இருப்பதால் கேள்வி எழுப்பாமல் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி அதனை முழுமையாக நம்பிவிட்டார்கள்.

    அழகர் வரும் பாதையை பணம் வைத்திருப்பவர்களும் அதிகாரம் படைத்தவர்களும் மாற்றிவிடலாம் என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகளே சான்றாக உள்ளன. மூன்றுமாவடியில் கிளம்பும் அழகர் ஊர்வலத்தின் அடுத்த நிறுத்தம் தல்லாகுளம்தான். ஆனால் 1980-களில் குளங்களை அழித்து வருமானவரித்துறை அதிகாரிகளின் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதன் பிறகு டி.ஆர்.ஓ காலனி மற்றும் ரிசர்வ்லைன் பகுதியில் மக்கள் தொகை அதிகமாகிவிட்டதால் அப்பகுதியில் உள்ள பிரமுகர்கள் அழகரின் பாதையைத் தங்களின் மண்டபப்படிகளுக்கு வரும்படி மாற்றினர். இதனால் அய்.டி.அய் நிறுத்தத்தில் இருந்து உள்ளே நுழைந்து டி.ஆர்.ஓ காலனி வழியாக ரிசர்வ்லைன் பகுதி கலெக்டர் பங்களா என புதிய பாதையில் அழகர் பயணிக்க ஆரம்பித்தார். வசதியும் அதிகாரமும் இருந்தால் அழகர் இழுக்கின்ற இழுப்பிற்கெல்லாம் சென்று திரும்புவார் என்பதற்கு  இதுவே பெரிய எடுத்துக்காட்டாகும்.

    பாழடைந்த சமணத்தலம் அழகர்கோவிலாக மாறியது

    12ஆம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து சுல்தான்களின் படையெடுப்பு பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. கர்நாடகத்தில் பல கோவில்களில் சிலைகளைத் திருடிச் சென்றுவிட்டனர். திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் சிலை பகைவர்கள் கையில் செல்லும் அபாயம் இருந்தது. சிலைகள் இல்லை என்றால் கோவில்களுக்குள் மக்கள் வரமாட்டார்கள். எதை வைத்து பூசை புனஸ்காரம் செய்து வருவாய் பார்ப்பது என்று கருதி இந்தச் சிலைகளை எங்கே பதுக்கி வைப்பது என திகைத்திருந்த போது எண்பெருங்குன்றங்களில் ஒன்றான அழகுமலையில் கைவிடப்பட்ட சமணத்தலங்கள் பெரும் இடிபாடுகளுடன் காணப்பட்டன. யாரும் அங்கு செல்ல முடியாவண்ணம் பல்வேறு கட்டுக்கதைகளைப் பரப்பிவிட்டார்கள். மக்கள் யாரும் நெருங்க அஞ்சும் அந்த இடம்தான் சிலைகள் பாதுகாப்பாக வைக்க சரியான இடமானது.
    இந்த நிலையில் திருவரங்கத்தில் போலியான ரங்கநாதர் சிலையை உருவாக்கி அவற்றுக்குப் பூசை செய்ய ஆரம்பித்தனர். திருவரங்கத்தில் முதலில் இருந்த ரங்கநாதர் சிலை அழகு மலையில் இருண்ட பாழடைந்த சமண குகைக்குள் இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நாயக்கர்கள் வசம் மதுரை வந்த பிறகு திருவரங்கர் சிலையை அங்கேயே வைத்து கோவில் ஒன்றைக் கட்டுகின்றனர். இந்தக்கோவில்தான் அழகர் கோவில் என்று பெயர் சூட்டப்படுகிறது. எல்லா நாயக்கர்களும் தங்களது பங்கிற்கு அழகர் கோவிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தி வந்தனர்.

    திருமலை நாயக்கர் காலத்தில் கோவிலைச் சுற்றி மதில்கள் கட்டப்பட்டன. கோபுரங்கள் மற்றும் மணிமண்டபம் அனைத்தும் கட்டப்பட்டன. அனைத்தையும் கல்வெட்டாக எழுதி வைத்திருக்கிறார்கள். நாயக்கர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சமணத்தலமாக இருந்த இடம் அழகர் கோவிலாக உருவானது பற்றி அறிந்தோம்.  நாயக்கமன்னர்கள் அழகர் கோவிலுக்கு பல ஏக்கர் நிலங்களைத் தானமாக வழங்கி கோவிலைப் புதுப்பித்தனர்.

    வைணவச்சாமியாக மாறிய கருப்பண்ண சாமி

    பெரியாறு அணை கட்டப்படாத காலகட்டங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையில் வெள்ளம் தோன்றி மதுரை நகரைக் காட்டாற்று வெள்ளம் அடிக்கடி தாக்கும். இதனால் மதுரையின் கரை தற்போதைய தல்லாகுளம் வரை இருந்தது. வைகை ஆற்றின் வெள்ளம் பாதிக்கும் இடம் வரை மக்களுக்கு அறிவிக்க அடையாளமாக எல்லையில் ஆங்காங்கே மண்டபங்களைக் கட்டி அங்கு காவல்தெய்வங்களை வைத்தனர். காரணம், இதற்கு அந்தப்பக்கம் குடியிருப்புகளைக் கட்டவேண்டாம் என்று அச்சுறுத்துவதற்காகவே. இப்படி கட்டப்பட்ட ஒன்றுதான் மதுரை கருப்பண்ண சாமி கோவில்.

    6-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவ வைணவ சண்டையிலும் மய்யமாக கருப்பண்ணசாமி கோவில் இருந்தது. அக்காலகட்டத்தில் வடபுறத்தோடு வைணவ மதத்தின் எல்லை முடிந்துவிடுகிறது என்பதற்கு அடையாளமாக கருப்பண்ணசாமி கோவில் மாற்றப்பட்டது. அதுவரையில் கேட்பாரற்றுக் கிடந்த கருப்பண்ண சாமிக்கு வைணவ நாமம் சாற்றப்பட்டது.

    1.    மதுரைப்பாண்டிய மன்னன் மலையத்துவசன் காஞ்சனமாலை (இப்படி ஒரு பெயரே பாண்டியமன்னர்கள் வரிசையில் இருந்தாக தெரியவில்லை)  தங்களுக்கு குழந்தையில்லை என்று தவமாய் தவமிருந்து 100 அசுவமேத யாகம் செய்ததன் விளைவாய் 3 வயது சிறுமியாய் வந்த (அவர்களுக்கு பிறக்கவில்லை) மீனாட்சியைக் கண்டு மகிழ்வுற்றாலும் தனக்கு ஒரு மகன் இல்லையே என்று ஆண்டவனிடம் அழுதபோது இந்த மீனாட்சியே மதுரை மண்ணைச் சிறப்புடன் ஆட்சி செய்து உனக்கு ஆண்மகன் இல்லாத குறையைத் தீர்த்துவைப்பாள் என்று கூறியதாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. பிறகு அழகர் என்ற அண்ணன் எங்கிருந்து வந்தான்?

    2.    சைவ வைணவ ஒற்றுமை என்றால் தமிழர்கள் தொன்று தொட்டுக் கொண்டாடி வந்த  மாசிமாதத்தில் வைக்காமல் அழகருடைய எதிர்சேவையை சித்திரையில் வைத்தது ஏன்?  வெப்பமிகுந்த சித்திரைக்கு இவ்விழாவை மாற்றியதால் காய்ந்து கிடக்கும் வைகை ஆற்றில் மாநகராட்சி அல்லவா தண்ணீர் ஊற்றுகிறது!! அழகருக்கே மாநகராட்சி தான் தண்ணீர் தருகிறது என்றால் அழகர் பெரியவரா? மாநகராட்சி பெரியதா?

    3.    பழமையான கோவில் நாயக்கர்களின் காலத்தின் தான் விரிவுபடுத்தப்பட்டது, இதன்படிப் பார்த்தால் திருவிளையாடல் புராணங்களும் நாயக்கர் காலத்தில் தானே நடந்தேறி இருக்கவேண்டும்?

    4.    தல்லாகுளம் பெருமாள் கோவில் பற்றி கதை கட்டினார்கள், ஒருமுறை திருமலை நாயக்கர் குதிரையில் வந்தாராம், அவரது குதிரையின் முன்பு ஆஞ்சநேயர் சுயம்புவாகத் தோன்றினாராம் உடனே அவரது கனவில் திருப்பதி வெங்கடாசலபதி பிரசன்னமாகி கோவில் கட்டச்சொன்னாராம் உடனே திருமலை நாயக்கரும் கோவில் கட்டினாராம் நாயக்கருக்குப் பிரசன்னமானதால் அது பிரசன்னவெங்கடாசலபதி கோவில் எனப் பெயர்பெற்றதாம். மீனாட்சி ஏன் நாயக்கரின் கனவிலோ நினைவிலோ வந்து தனக்கு ஆற்றுக்கு இந்தப்பக்கம் மற்றொரு மீனாட்சி கோவில் கட்டச் சொல்லவில்லை?

    5.    வைப்பாட்டி வீட்டிற்குச் செல்வது, கொக்கு சுடுவது, யாருக்கும் தெரியாமல் மாறுவேடமணிந்து ஓடுவது, அழகரின் இந்தத் திருவிளையாடல்கள் மனிதர்கள் செய்வதை ஆண்டவன் செய்ததாகச் சொல்லி வைத்துள்ளார்கள்.

    சான்றுகள் :
    தினகரன் ஆன்மீக மலர் 10.11.2012.
    தின இதழ் ஏப்ரல் 26.4.2014.
    பார்ப்பனர் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும், (புலவர் கோ.இமயவரம்பன்).
    சமணமும் தமிழும் (மயிலை சீனி. வேங்கடசாமி).
    மதுரை அருங்காட்சியகத்தில் உள்ள நாயக்கர் கால கல்வெட்டுகள் (காந்தி மியூசியம்)



    கூலியிலும் பேதம்
    அழகர் எதிர்சேவை என்பது சில வைணவப் பார்ப்பனர்களும் பெருவாரியான பார்ப்பனரல்லாத இளைஞர்களும் சேர்ந்து நடத்தும் ஒரு விழாவாகும். சுமார் பத்து நாட்கள் அழகர் கோவிலில் இருந்து மதுரை வரை தூக்கிச்சென்று பிறகு மதுரையில் இருந்து அழகர் கோவில் வரை சுமந்து சென்று இறக்கி விட்டு வருவார்கள். தற்போது இழுவை ரதம் ஒன்று உள்ளது. ஆனால் 1960-வரை பல்லக்குதான். அதில் வைணவப் பார்ப்பனர்கள் அமர்ந்துகொள்வார்கள். அவர்களையும் தூக்கிச் சுமக்க வேண்டும். எதிர்சேவை நடைபெறும்போது 7 முதல் 10 பார்ப்பனர்கள் வரை உடனிருப்பார்கள். ஆனால் சுமார் 50க்கும் மேற்பட்ட பல்லக்கு தூக்கிகளாக பார்ப்பனர் அல்லாதார் உடன் வருவார்கள். தூக்கிச் சுமப்பவர்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்குமாம். இதன் காரணமாக தூக்குவதற்குப் போட்டா போட்டி.

    அழகர் அழகுமலைக்குத் திரும்பியதும், பார்ப்பனர்களுக்கு பரிவட்டமும், பட்டாடைகளும் கிடைப்பதுடன் செல்வந்தர்கள் தரும் பாத்திரபண்டங்கள் மற்றும் அரிசி போன்றவை கிடைக்கும். தற்போது அனைவருக்கும் பணமாக வழங்கப்படுகிறது.
    ஆனால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குக் கிடைக்கும் பணம் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். அதாவது  வழியில் கிடைத்த அனைத்துப் பணத்தையும் இரண்டு விரல்கள் மாத்திரம் செல்லும் ஒரு உண்டியல் போன்ற ஒன்றில் போட்டு விடுவார்கள். அழகரைச் சுமந்தவர்கள் விரல்களை விட்டு அதில் எவ்வளவு பணம் சிக்குகிறதோ அதை அவர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் ஒருவர் ஒருமுறை மட்டும்தான் இதனைச் செய்ய  முடியும். இதில் அவர்களுக்கு பத்து ரூபாய் கிடைத்தாலும் நூறு ரூபாய் கிடைத்தாலும் அதுதான் அவர்களுக்கு அழகரைச் சுமந்து வந்ததற்கான கூலியாகும்.
    - சோமு.சுரேஷ், மதுரை.
    -------------------------------------------------------------------------------------------------------------------------------

                   --------------------- ”உண்மை” - மே 16-31 - 2014

    70 comments:

    தமிழ் ஓவியா said...


    தொழிலாளர் தோழர்களே திருவாரூரில் சந்திப்போம்!


    தோழர்களே,
    தொழிலாளர்களே,
    விவசாயப் பெருங்குடி மக்களே!

    நம்முன் ஏராளமான பிரச்சினைகள் உள் ளன. அதுவும் விவசாயம் என்பது கிட்டதட்ட மரணப் படுக்கையில் தள்ளப்பட்டு விட்டது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதி விவசாயம் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை!

    விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் சிக்கியுள்ளனர்.
    பெரும்பாலும் விவசாயத்தில் ஆண்களும் - பெண்களுமாக ஈடுபட்டு வருபவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களே! அதன் காரணமாகவே இது கேட்பாரற்றுக் கிடக்கிறது. எந்த உரிமைகளையும் இலவசமாகப் பெற்றிட முடியாது.

    போராடாமல் உரிமை நம் கதவை வந்து தட்டாது; வீதிக்கு வாருங்கள் தோழர்களே!

    வரும் 26இல் திருவாரூரில் திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டின் மூலம் புதிய திருப்பத்தை - எழுச்சியை - உருவாக்குவோம்!

    கோரிக்கைகள் நிறைவேறக் குரல் கொடுப்போம்!

    விவசாயத்தை வாழ விடு!

    இல்லையேல்

    மாற்றுவழியை எங்களுக்குக் கொடு! என்று குரல் கொடுப்போம் வாரீர்!

    காவிரி டெல்டா பகுதிகளில் வேலை வாய்ப் புடன் கூடிய உற்பத்திக்கு வழி செய்யும் தொழிற் சாலைகளை ஏற்படுத்துக! விவசாயக் குடும்பத்து இருபால் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புக்கு வழி செய்!

    மீன்பிடி தொழில் நடத்தாத காலங்களில் மீன வர்களுக்கு உதவுவது போல -

    விவசாய வேலை இல்லாத காலங்களில் விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கு என்று குரல் கொடுப்போம்!

    வாரீர்! வாரீர்!! கோரிக்கைகள் நிறைவேற கோடிக் கைகள் உயரட்டும்! உயரட்டும்!!

    உங்கள் தோழன்

    கி.வீரமணி
    தலைவர், திராவிடர் கழகம்



    சென்னை
    23.5.2014

    Read more: http://viduthalai.in/e-paper/80837.html#ixzz32afbd6hL

    தமிழ் ஓவியா said...


    ஜாதிப் பார்வையா?


    பிகார் மாநிலத்தில் முதல் அமைச்சர் நிதீஷ்குமார் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று, முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜிடான்ராம் மன்ஜி அவர்களை முதல் அமைச்சர் பதவியில் அமர வைத்தார். இந்த எண்ணம் எத்தனைப் பேருக்கு வரும் என்பது முக்கியமானதோர் கேள்வியாகும்.

    சமூக நீதி சிந்தனை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இதனை உள்ளத்தைத் திறந்து வைத்து வரவேற்பார்கள் - பாராட்டுவார்கள்.

    சமூக நீதிச் சிந்தனையற்றவர்களோ வேறு வகையில் எண்ணுவார்கள்; இருந்தும் இருந்தும் ஒரு தாழ்த்தப்பட்டவர்தான் கிடைத்தாரா என்று முணு முணுப்பார்கள். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு எப்படி செய்தியை வெளியிடுகிறது?

    “Nitish Plays Caste Card Names Former Minister Jitaram as Bihiar Chief Minister”

    என்று தலைப்புக் கொடுத்து செய்தியினை முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வெளியிடுகிறது.

    பிகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமார் ஜாதி துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி விட்டாராம். உயர் ஜாதிக்காரர் ஒருவரை அந்த இடத்தில் அமர்த்தினால் இவ்வாறு செய்தி வெளியிடுவார்களா? உயர் ஜாதிக்காரர்களை அமர்த்தினால் ஜாதிப் பார்வை கிட்டே நெருங்காது; அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டவர் ஒருவரை அமர்த்தினால், அவர்கள்மீது உடனே நான்கு கால் பாய்ச்சலில் தாவுகிறது ஜாதி முத்திரை.

    இது அவர்களின் ரத்தத்தோடு ரத்தமாக ஊறித் திளைத்து விட்ட ஜாதி ஆணவத்தின் எதிரொலி!

    பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளராக அறிமுகமான நிலையில் திடீரென்று நரேந்திரமோடி நான் ஒரு பிற்படுத்தப்பட்டவன் என்று சொல்ல ஆரம்பித்தாரே - ஏன்? (உண்மை என்னவென்றால் அவர் பிறந்த ஜாதி அம்மாநிலத்தில் முற்பட்டோர் பிரிவு, தன்னைப் பிற்படுத்தப்பட்டோர் என்று காட்டிக் கொள்வதற்காக அந்த ஜாதியைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட ஆணை பிறப்பித்து விட்டார் என்பதுதான் உண்மை)

    அதைப்பற்றி எல்லாம் இந்தப் பார்ப்பன ஊடகங்கள் மூச்சு விட்டனவா? ஆ. இராசாவை தாழ்த்தப்பட்டவர் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்ட போது! ஆகா, பார்த்தீர்களா இந்தக் கருணாநிதியை? ஜாதியைச் சொல்லித் திசை திருப்புகிறார் என்று கூச்சல் போட்ட சோ ராமசாமிகள் மோடி திடீரென்று பிற்படுத்தப் பட்டவர் என்று தன்னை முன்னிறுத்த முனைந்தபோது பேனாவின் வாலைச் சுருட்டி மேசை அறைக்குள் அடைத்து வைத்தது ஏன்?

    அதுவும் ஆங்கிலப் பார்ப்பன ஏடுகள் பற்றிக் கேட்கவா வேண்டும்? மண்டல் குழுப் பரிந்துரைகள் அதிகாரப் பூர்வமாக வெளி வராததற்கு முன்னதாகவே Burry the Mandal Report
    என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியவர்களாயிற்றே!

    உடனே “Hurry the Mandal Report” என்று பதிலடி கொடுத்தவர்தான் நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

    கருநாடக முதலமைச்சராக குண்டுராவ் வந்த பிறகு பாதிக்கப்பட்டிருந்த பார்ப்பனர்களில் ஏராளமானவர்கள் உயர் பதவிகளைப் பெற்று விட்டனர்
    - இந்தியன் எக்ஸ்பிரஸ் 1.1.1981

    இதற்கு என்ன பொருள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விரிவுரை பொழிப்புரை எழுதுமா?
    பிராமணான் செய்தால் பெருமாள் செய்த மாதிரியா?

    அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லக் கூடியவர்கள். அதனை எதிர்த்துத் தலையங்கம் தீட்டக் கூடியவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்களை முக்கிய மான பதவியில் அமர்த்தினால், ஜாதி ஒழிப்பு ஜாம்ப வான்கள் போல பூணூலை ஒரு கையில் இறுகப் பிடித்துக் கொண்டு அய்யய்யோ, ஜாதி பார்த்து நடந்து கொள்கிறார்களே! என்று நீலிக் கண்ணீர் வடிக் கின்றனர். இந்தச் சூழ்நிலையில் மேலும் ஒருபடி மேலே சென்று தான் அமர்ந்திருந்த முதல் அமைச்சர் நாற்காலியில் ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரரை முதல் வராக நியமித்த நிதீஷ்குமாரை மேலும் பாராட் டுகிறோம் - பல படப் பாராட்டுகிறோம்.
    இதன் வழி சமூக நீதிக் காற்று அங்கு சுழன்றடிக் கட்டும்!

    Read more: http://viduthalai.in/page-2/80829.html#ixzz32ag0h7yI

    தமிழ் ஓவியா said...


    முட்டாள்தனம்


    இந்து மதத்தையோ, அது சம்பந்த மான கடவுள், சாத்திரம், இதிகாசம், புராணங்களையோ, சீர்திருத்திவிடலாம் என்று நினைப்பது வெறும் கனவும், வீண் வேலையும், கடைந்து எடுத்த முட்டாள்தனமுமே யாகும். - (குடிஅரசு, _ 13.1.1945)

    Read more: http://viduthalai.in/page-2/80828.html#ixzz32ag98Fjk

    தமிழ் ஓவியா said...


    இளைஞர்களே, இப்படியா நீங்கள் வாழ்வது? மறைவது?

    நமது இளைஞர்களில் மிகப் பெரும்பாலோர் தேவையின்றி உயிர்ப் பலி தருகின்றவர்களாகி வருவது மிகவும் வேதனையையும் எல்லையற்ற சோகத்தையும் நம்முள் ஏற்படுத்து கிறது.

    ஒவ்வொரு பெற்றோரும் தேக்கி வைத்த ஆசைக் கனவுகள் எல்லாம், திடீர் மின்னல் தாக்கிப் பறிக்கப்பட்ட கண்ணொளி போல் ஆகி விடுகின் றனவே!

    தேவையற்ற விபரீத ஆசைகளுக்கு நீங்கள் இரையாகி இழத்தற்கரிய வாழ்வை இளையர்கள் இழக்கலாமா?

    இதோ இன்றைய தமிழ் இந்து நாளேட்டில் (23.5.2014) பக்கம் 10இல் வந்துள்ள நெஞ்சுருக்கும் செய்தி: இது கேரள மாநிலத்தில் நிகழ்ந்தது என் றாலும், அதிலிருந்து மற்ற அனைவரும் பாடம் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக அதனை அப்படியே தருகிறோம்.

    பாஸ்ட் புட், பேஸ்புக் இது இரண்டும் தான் இன்றைய இளைய தலைமுறை யினரின் அடையாளமாய் மாறிப் போயி ருக்கின்றன. முகநூலில் லைக் வாங்க ரிஸ்க் எடுத்து படம் பிடித்த மாணவர், இப்போது அந்த படத்தை பார்க்க உயிருடன் இல்லை.

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் வின்ஸ். இவரது மனைவி நிஷா. இத்தம்பதியின் மகன்கள் எட்வின், காட்வின்.

    இதில், எட்வின் பத்தாம் வகுப்பு படித்தார். காட்வின் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

    இருவரும் நண்பர்களுடன் அருகே உள்ள கனிமங்கலம் என்ற இடத்தை சுற்றிப் பார்க்க புதன்கிழமை சென்றனர். அங்கு, ஒருவர் மாற்றி ஒருவர் முக நூலில் பதிவு செய்ய புகைப்படம் எடுத்தனர்.

    அங்கிருந்த தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, மின்னல் வேகத்தில் வந்த ரயிலில் அடிபட்டு எட்வின் தலை துண்டானது. இதுகுறித்து, திருச்சூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்னொரு சம்பவம்

    கேரள மாநிலம் எருவா, வேலாத் தட்டுதரையை சேர்ந்தவர் அபிலாஷ் (32). முகநூலில் வினோதமான விஷ யங்களை படம் பிடித்து காட்டுவதில் இவருக்கு அலாதி விருப்பம். புதன் கிழமை, வீட்டில் தூக்கு மாட்டுவது போல் செல்போனில் வீடியோ எடுத்து அதை முகநூலில் பதிவிட ஆயத்த மானார்.

    இதற்காக தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டவர் செல்போனில் வீடியோவை ஆன் செய்து விட்டு, தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டினார்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக சேர் நகர்ந்தது. கயிறு இறுக்கி அபிலாஷ் மூர்ச்சையடங்கி போனார்.

    அவரது செல்போன் பழுதாகி இருப்பதால் அதை சீர் செய்யும் பணி நடைபெறுகிறது. அதன் பின்னர் தான் நடந்தவற்றின் முழு விவரங்களும் தெரிய வரும்.

    அபிலாஷ் ஏற்கெனவே இதே போல் ஒருமுறை முகநூலில் பதிவிட்டிருந்தார்.

    அதீத ஆர்வத்துக்கு தற்போது தன்னையே பலியாக்கி யுள்ளார். முகநூலில் புகைப்படம் பதிவிட ஆசைபட்டு 2 பேர் உயிரை விட்ட சம்பவம் கேரளத்தில் பரி தாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    - எதிலும் ஆசை வெறியாக மாறினால் இத்தகைய விபரீதங்கள் நிகழ்வுகளாவது தடுக்கப்பட முடி யாததாகும்.

    எனவே, இளைஞர்களே எச்சரிக் கையுடன் வாழுங்கள்!

    - கி.வீரமணி

    Read more: http://viduthalai.in/page-2/80831.html#ixzz32agKGYAe

    தமிழ் ஓவியா said...

    இனமானப் பேராசிரியர் எழுச்சிமிகு அறிக்கை கலைஞர் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டுகோள்


    புரட்சிக் குரல் கொடுத்த பகுத்தறிவுத் தந்தை பெரியார்
    ஆரிய மாயையை விளக்கிக் காட்டிய அறிஞர் அண்ணா
    வீழ்ச்சியுற்ற தமிழகத்தை எழுச்சி பெறச் செய்த கலைஞர்

    இனமானப் பேராசிரியர் எழுச்சிமிகு அறிக்கை
    கலைஞர் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டுகோள்





    சென்னை, மே 23- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்களின் கொள்கைக் கோட்பாடுகள், தொண்டுகள் பற்றி விரித்துக் கூறி முத்தமிழர் அறிஞர் கலை ஞர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளை (ஜூன் 3) சிறப்பாக கொண் டாடுமாறு அறிக்கை வெளியிட்டு உள்ளார் திமுக பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரி யர். க.அன்பழகன் அறிக்கை வருமாறு:-

    இதுகுறித்து பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-

    திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முத்தமிழ் அறிஞருமான கலைஞர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள் வருகிற ஜூன் 3 அன்று வருவதை நாம் அறிவோம். அந்த நாளை, தமிழ் இனம் பெற்ற பெருவாழ்விற்கு வழிகாணும் நாளாக நாம் பல ஆண்டுகளாகக் கொண்டாடி வருகி றோம்.

    செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள்!
    வரலாற்றுத் தொன்மையும் நாகரிக மேன்மையும்
    பண்பாட்டுச் சீர்மையும்

    தாய்மொழி வழித் தனித் தகுதியும் பெருமையும் வாய்ந்தவர்களான தமிழர்கள், ஆரியத்தின் நுழைவால், வைதிகத்தின் நச்சரவத் தீண்டுதலால், நால்வருணக் கோட்பாட்டிற்கு அடிமைப்பட்டதால் ஏற்பட்ட கேட்டால், இழிபிறப்பாளரெனும் சூத்திரர் ஆக குறிக்கப்பட்டு, பிறவி அடிமைகளாகவே பிரம்மன் படைத்ததாகக் கற்பிக்கப் பட்டு, மேல்வருணத்தார்க்குத் தொண்டு செய்வதற்கான தொழும்பர்களாக வாழ்வதே அவர்கள் பெற்ற பிறவிப் பேறு என்பதாக மனுநீதி மூலம் கட்டளையிடப்பட்டு, அதன் பயனாக திக்கற்ற தெரு நாயினும் கேவலமாய் உழன்ற நம் இன மக்களை, நீயும் ஓர் மனிதன், நீ எவனுக்கும் தாழ்வல்ல, உன் அடிமை மனப்பான்மையை அகற்று! நிமிர்ந்து நில்! தலையை உயர்த்து, தாழ்ந்து பணிவதைக் கைவிடு! எனப் புரட்சிக் குரல் எழுப்பிய சுயமரியாதைச் சுடர், பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-யும்,

    தமிழ் ஓவியா said...

    செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்!

    பெரியாரின் இலட்சியத்தை உள்ளங் கொண்டவராய், திராவிடத்தை வீழ்த்திய ஆரிய மாயையைப் படலம் படலமாக மக்களுக்கு விளக்கி உரைப்பாராய், தமது ஒப்புயர்வற்ற எழுத்தாற்றலாலும், இணையற்ற பேச்சுத் திறனாலும், பல்கலையும் பயின்று தேர்ந்த, நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த பேரறிவின் பெருக்கத்தாலும், தமிழ் மக்களின் தாய்மொழியாம் செம்மொழி மாட்சியையும், திராவிட இனத்தின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் தன்னிகரற்ற மானிட நேயக் கோட்பாட்டை யும், பல வகையிலும் விவரித்து, இளைய தலைமுறையினரை எழுச்சி பெறச் செய்து, திராவிடத்தில் சமத்துவ, சமதர்ம, ஜனநாயகக் கோட்பாடுடைய ஆட்சி உருவாக்கிடும் நோக்கம் உடையதாக தி.மு. கழகத்தை உருவாக்கி வழிநடத்திய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15-யும் போற்றிக் கொண்டாடி வருகிறோம் நாம்.

    முப்பெரும் விழாவை பொலிவுடையதாக நடத்தி
    கழக இலட்சியம் மங்காமல் செயல்படுபவர்!

    தந்தையிடமிருந்து பிரிந்துவர நேரிட்டாலும், தம்மிடம் நம்பிக்கை வைத்த பலப்பல ஆயிரம் தம்பிமார்களுடன் தமது பொதுத்தொண்டு தொடர்ந்திட, அண்ணா ஏற்றுக் கொண்ட ஜனநாயக முறைப்படி தோற்றுவிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க நாளான செப்.17யும் நாம் கொண்டாடி வருகிறோம்! அந்த முப்பெரும் விழாவைப் பொருளும் பயனும் பொலிவும் உடையதாக நடத்தி வருவதுடன் கழக இலட்சியம் மங்காமல் சுடர்விடுமாறு கொள்கை பரப்புபவர் நம் கழகத் தலைவர் கலைஞர்.

    கலைஞரின் வாழ்வு - வாழ்க்கை இலட்சியம் - உழைப்பு, முயற்சி, அறப்போராட்டம், தியாகம், சட்டமன்றப் பணி, முதலமைச்சராக ஆற்றியுள்ள தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள் எல்லாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோளான மனித நேய சமூக சமத்துவ இலட்சியத்தை அடைவதற்காகவே மேற்கொள் ளப்பட்டவையாகும்.

    வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சி பிறக்கவும், தாழ்ச்சி யுற்ற தமிழ் இனம் தலைநிமிரவும், மக்களை வாட்டும் வறுமையையும் ஏழ்மையையும், பாட்டாளிகளையே வாட்டும், பசியையும் பட்டினியையும் இல்லாமலே ஒழித்திடும் நோக்குடன் திட்டமிட்டுச் செயலாற்றிவரும் தமிழர் தலைவரே கலைஞர்!

    தமிழ் இனத்துக்காகவே தம்மை ஒப்படைத்துக் கொண்டு கலை, இலக்கியத்துறை ஆகியவற்றில் தமது இலட்சியப் பதாகையைப் பறக்கவிட்டு, மக்களை விழிப்படையச் செய்யும் இயக்கத்தை வளர்ப்பதையே தமது மூச்செனக் கொண்டு, அனைவர் நெஞ்சுக்குமான நீதியை நாளும் உணர்த்தியே நடைபோட்ட கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதையே பல ஆண்டுகளாகத் தமது கடமையாகக் கொண்டவர்களே கழகத் தோழர்கள்!

    ஆம், இந்த ஆண்டு கலைஞர் பிறந்தநாளைக் கொண் டாடும் வேளையில்தான், நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், வாக்காளர் பெருமக்களே ஆர்வத் துடன் பேசி வந்தது போன்று கழகத்தின் இலட்சியத்திற் கான வெற்றி கழகத்திற்குக் கிடைக்காமல், மாற்றாருக்கு வெற்றி வாய்த்துவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் எதிர்பாராததாகவும், எதிர்பார்க்க முடியாததா கவும், நடுநிலையாளரும், நல்லெண்ணம் கொண்டவர் களும் விரும்பாததாகவும் அமைந்ததொரு தேர்தல் முடிவு தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது உண்மை.

    எனினும் அரசியல் பயணத்தில், தேர்தல் எதுவெனினும் வெற்றியை மட்டுமே எதிர்பார்த்திட முடியாது. வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே!

    பேரறிஞர் அண்ணா அவர்கள், இனஉரிமைக்குப் பாடுபடும் நாம் எந்நிலையிலும் சோர்வுக்கு ஆளாகக் கூடாது என்று அறிவுறுத்துவதற்குத்தான், நாங்கள் வெற்றி யினால் வெறியாட்டம் போடவும் மாட்டோம், தோல்வி யினால் சோர்ந்து விடவும் மாட்டோம் என்பார்.

    தமிழ் ஓவியா said...

    மேலும், இந்தத் தேர்தல் முடிவு என்பது அடுத்தத் தேர்தல் வரைதான் என்பதால் எல்லாம் தற்காலிக மானதே; எதுவும் நிரந்தரமல்ல, என்பதையும் நாம் மறக்கக்கூடாது.

    தமிழ்மொழி செம்மொழி என்றஅறிவிப்பைப் பெற்றுத் தந்ததை மறக்க முடியாது!

    திராவிட முன்னேற்றக் கழகம், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அரசியல் கட்சியாகச் செயற்பட்டு, தமிழகத்தின் ஆளுங்கட்சியாக மட்டுமன்றி, நடுவண் அரசின் கூட்டணி ஆட்சிகளிலும் இடம் பெற்று, மத்தியில் நிலையான அரசு அமைந்திடவும், மாநிலத்தின் நலனுக்கான பல திட்டங் களை மய்ய அரசு ஏற்றிடவும், நமது தாய்மொழியாம் தமிழ்மொழி ஓர் செம்மொழியே என்பதை ஏற்று அறிவித்திடவும் செய்யும் வாய்ப்புப் பெற்றதை எவரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது!

    சமத்துவப் பெரியார் என்ற சிறப்புக்கு உரியவரானார் கலைஞர்!

    அனைத்து ஜாதியினரும் உரிய பயிற்சி பெற்றவர்களா யின் திருக்கோவில்களில் அர்ச்சகராகலாம் என்பதற்குத் தமிழக அரசு சட்டம் செய்தும் தமிழில் அர்ச்சனை செய்யப் படும் என்று அறிவிக்கச் செய்தும், மகளிர்க்கு உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் 33 விழுக்காடு இடஒதுக் கீடு வழங்கி யும், நிறைவேற்றிய கடமையால், சமத்துவப் பெரியார் என்று அழைக்கப்படும் சிறப்புக்குரியவர் ஆனார் கலைஞர்.

    அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவது அவருக்காக அல்ல; அவரது புகழ் பாடுவதற்காகவும் அல்ல!

    ஆனால் வீழ்த்தப்பட்ட திராவிட இனமக்களுக் காக நூறு ஆண்டுகட்கு முன்னர் குரல் கொடுக்க முன்வந்த நீதிக்கட்சியின் தலைவர்கள் - டாக்டர் நடேசனார், பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் காலம் முதலாக, அதன் வழிப்பட்ட பலநூறு தலைவர்களும், அறப்போர் வீரர் களும், தியாகிகளும், தாய்மார்களும் தொடர்ந்து காத்து வளர்த்து வரும் இலட்சியத்தை, எந்நாளும் காத்திடவே கழகப் பணி தொடர வேண்டும் என்பதற்காகவே கழகத் தலைவர் கலைஞரின் 91ஆவது பிறந்தநாளை நாம் கொண்டாடுகிறோம்!

    அப்படிப்பட்ட புடம்போட்ட பத்தரை மாற்றுத் தங்கமாக, தமிழ்இன வாழ்வுக்கும் தமிழக முன்னேற் றத்துக்கும் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்ட தலைவரின் பிறந்த நாளினை, நாடெங்கும் - மாவட்டத் தலைநகர் - வட்டத் தலைநகர் - ஒன்றியத் தலைநகர் - பேரூர் முதலான அனைத்து மய்யங்களிலும் கழகக் கொடி உயர்த்தி விழா கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு தி.மு.கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

    Read more: http://viduthalai.in/page-3/80792.html#ixzz32agXt3zB

    தமிழ் ஓவியா said...

    அய்யப்பனைக் காப்பாற்றிய சிறுநீர்!

    கடந்த 17.1.1978-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சியிலிருந்து வெளியிடும் செய்தித்தாளை படிக்க நேர்ந்தது. அதில் எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ் என்ற பகுதியில் ஒரு செய்தியை படித்து வியப்பும் அதேபோல் சிரிப்பும் உண்டாயிற்று.

    அய்யப்பப் பக்தர்கள் தான் இதற்குப் பதில் கூற வேண்டும். அதில் கண்டுள்ள செய்தியின் தமிழ் மொழியாக்கம் இதோ!

    ‘Urln Quers Fire’

    (எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ்), கோட்டயம், ஜனவரி -16, சிறுநீர் மீண்டும் செய்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்றும் எதிர்பாராத இடங்களில் கூட ஆச்சரியப்படத்தக்க செயல்களைப் புரிந்துள்ளது. சிறுநீரின் உபயோகம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கும்பளம் தோடி என்ற சபரிமலை வனப்பிரிவைச் சேர்ந்த பகுதி சாம்பலாகி இருக்கும். சபரிமலையின் எல்லா பகுதிகளும் காவல் புரிந்து வந்த காவல்துறையினர் ஜனவரி 9ஆம் தேதியன்று கும்பளம்தோடி என்ற பகுதியில் தீப்பிடித்துள்ளதாக கம்பியில்லாத் தொலைபேசி மூலமாக தலைமை அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பினர். காவல்துறை தனி அலுவலர் திரு. பி.ஆர்.மேனன் உடனடியாக 100 காவலர்களை இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களின் தலைமையில் தீக்கிரையாகி கொண்டிருக்கும்

    பகுதிக்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியை தீவிரமாக தொடங்கும்படி கட்டளையிட்டார். தீ மிகவும் அசுர வேகத்தில் பரவிக் கொண்டு கடவுள் அய்யப்பனின் தலமாகிய அந்த அடர்ந்த காட்டையே அழிக்கும் நிலைக்கு எத்தனித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் காவல் படையினர் அந்த இடத்தை சென்றடைந்தனர். அருகில் தண்ணீர் வசதியோ போதுமான அளவு மணலோ கிடையாது. காவலர்கள் என்ன செய்வது என்று அறியாமல் குழப்பத்திற்கிடையே கையற்ற நிலையில் தவித்துப் போயினர். ஆனால் தனி ஆயுதக் காவல்பிரிவைச் சார்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலும், கேரள ஆயுதக் காவல் பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பால்ராமும் பலவிதமான சிந்தனையில் ஈடுபட்டனர். இறுதியாக ஒரு விந்தையான எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது போலும். ஒரே சமயத்தில் 100 காவலர்களையும் தீயை நோக்கி சிறுநீர் விடும்படி அந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் கட்டளையிட்டனர். தீ மெதுவாக தணிந்தது. முடிவாக அணைக்கப்பட்டு விட்டது. சில தினங்களுக்கு முன்னர் மகர விளக்கு விழாவிற்காக சபரிமலைக்குச் சென்ற செய்தியாளர்களிடமும் இந்நிகழ்ச்சிகளை தனிக்காவலர் அலுவலர் மேனன் அவர்கள் விளக்கினார். தக்க சமயத்தில் செயல்புரிந்து வரவிருந்த பெரும் விளைவை தடுத்த தற்காக அந்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், அவர்கள் சேவையை பாராட்டி தகுந்த பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

    (ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்-
    17.1.1978, செவ்வாய், கொச்சி பதிப்பு)

    Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32ahLFFOV

    தமிழ் ஓவியா said...

    வளர்ச்சியைத்
    தடுப்பது எது?

    பல நூற்றாண்டாக ஜாதி முறை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள ஒரு சாபக்கேடு என்றே கருதுகிறேன். அதுவே இந்தியாவைப் பலவீனப்படுத்தியது. பலவீனப்படுத்தியது மட்டுமின்றி, அது இந்தியாவை கேவலபடுத்திக் காட்டியதுடன் வெளிநாட்டுப்படை எடுப்பாளரிடம் நம்மை அடிமைகளாக்கி விட்டது. ஏனெனில் ஜாதியே நம்மைப் பிளவுபடுத்தும் சாதனமாகும். பெரும்பாலான நமது மக்களை சாதி கேவலப்படுத்தியுள்ளது. நம்மில் சிலர்தான் இக்கேவலத்தைச் சுமத்தினர் பலர். இக்கேவலத்தை ஏற்றுக் கொண்டோம். இன்றைய உலகத்தில் ஜாதிக்கு இடமே கிடையாது. அது இன்று இருக்குமானால் நமது சோஷலிச - சமதர்ம -லட்சியத்தை நாம் அடைவதைத் தடைப்படுத்தவே செய்யும்.

    இந்தியா தனது மதமவுடிகங்களை களைந்து, விஞ்ஞான பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்க வழக்கங்களும் - இந்தியத் தாய்க்குச் சிறைச்சாலையை எழுப்பி இருக்கின்றன. இந்த மடமையே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. -ஜவகர்லால் நேரு

    Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32aiL6kUT

    தமிழ் ஓவியா said...

    மதத்தின் குத்துச்சண்டை!

    உலகக் குத்துச்சண்டை மாவீரனாகிய முகம்மது அலியையும் மதத்தின் கொடுமை விடவில்லை. கிருஸ்துவக் குடும்பத்திலே பிறந்த அவர், தன்னை கறுப்பு மனிதன் என்று வெள்ளை இனம் இழித்துப் பழித்ததைக் கண்டு தாள முடியாமல், தன்னை முஸ்லிமாக மாற்றிக் கொண்டார். மதம் மாறி விட்டார் என்றதும் மதவாதிகளின் ஆத்திரம் பன்மடங்காக ஆகிவிட்டது. எப்படியும் அலியை ஒழித்துக் கட்டுவது என்று திட்டம் தீட்டினார்கள்.

    வியட்நாம் போரில் அவரைக் கட்டாயமாக அமெரிக்க இராணுவத்தில் சேர உத்திரவு பிறப்பித்தனர். அலி மறுக்கவே அவர் கைது செய்யப்பட்டு சிறையிலே தள்ளப்பட்டார்.

    Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32aiUAepX

    தமிழ் ஓவியா said...

    சிந்தனை முத்துகள்

    பொருத்தமில்லாதவைகளைப் பற்றிய போதிய அறிவு இல்லாதவன் ஆதாரமின்றி பேசுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளுவதுதான் மத நம்பிக்கை.

    - ஆம்ப்ரோசுபியர்ஸ் - அமெரிக்க சிறுகதை எழுத்தாளர்.

    சந்நியாசி என்பவன் திருத்தியும் புகழ்ந்தும் கூறப்படும் ஒரு மாண்டுபோன பாவி!

    ஓர் எசமான், ஓர் எசமானி, இரண்டு அடிமைகள். ஆக மொத்தம் இரண்டே பேர் கொண்ட சமூகத்தின் நிலைமை - அதுதான் திருமணம்.

    மன்னிப்புக் கேட்பது மீண்டும் தவறு செய்வதற் காகப் போடப்படும் அடிக்கல்.

    சமாதானம் என்பது பன்னாட்டு விவகாரங்களில் இரண்டு போர்க்காலங்களுக்கு இடையே உள்ள ஏமாற்றுங் காலம்.
    -ஜோஷ் பில்லிங்ஸ் என்னும் புனைப் பெயர் கொண்ட அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்.

    மதங்கள் பைத்தியக்காரத்தனமாகப் காமச் சுவைகளையே சுற்றி வருகின்றன.
    - கூர்மான்ட் ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்

    குற்றமற்றவனாக இருப்பதை விட குற்றம் கண்டுபிடிப்பது மிகவும் எளிது.
    - பெஞ்சமின் டிஸ்ரேலி, பிரிட்டிஷ் பிரதமர்.

    மருத்துவன் நோயைத் தீர்க்கிறான். ஆண்டவன் நன்றியைப் பெறுகிறான்.
    -பீடர்ஃபின்லே, அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்

    பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்காமலேயே மத வழிபாட்டிலுள்ள அபத்தங்களை அம்பலப் படுத்தலாம்.
    - அனடோல் ஃரான்ஸ் - அமெரிக்க எழுத்தாளர்

    அற்புதம் என்பது காணாதவர்கள் கண்டதாகச் சொன்னதைக் கேட்பவர்கள் வர்ணிக்கும் கற்பனை நிகழ்ச்சியே.

    குழந்தைக்குப் பாடம் சொல்லித் தருவதன் குறிக்கோள் - ஆசிரியர் துணையின்றி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதுதான்.

    மனிதன், ஆண்டவனின் ஓர் அற்புதப் படைப்பு அப்படிச் சொல்வது யார்? மனிதன் தான்!
    - எல்பர்ட்ஹப்பர்ட், அமெரிக்க எழுத்தாளர்

    மதம் மனிதனை நாகரிகம் அடையச் செய்யவில்லை. மனிதன் தான் மதத்தை நாகரிகப்படுத்தி வருகிறான்.
    - ராபர்ட் க்ரீன் இங்கர்சால்

    என்ன பரிதாபம்! ஒரு மனைவியை சமாளிப்பது எப்படி என்று யாருக்குமே தெரிவதில்லை - பிரம்மச் சாரியைத் தவிர!
    - ஜார்ஜ் கோல்மன், ஆங்கில நாடகாசிரியர்

    Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32aidPwhN

    தமிழ் ஓவியா said...


    பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு அழைப்பா? நாடெங்கும் கண்டனப் புயல்கள்!

    சென்னை, மே 23- நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர். தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கலைஞர்

    இந்தியப் பிரதமராக திரு. நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்கும் விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதும், அவர் அந்த விழாவில் கலந்து கொள்ளவிருப்பதும் தமிழ்நாட்டு மக்களாலும், உலகத் தமிழர்களாலும் எவ்வகையிலும் ஏற்று, வரவேற்கப்பட இயலாத ஒன்றாகும்.

    ஏற்கெனவே இருந்த மத்திய காங்கிரஸ் அரசிடம் தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், சர்வதேச தமிழ் அமைப்புகளின் சார்பாகவும் பலமுறை இலங்கை அரசின் தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரான நடை முறைகள் குறித்துப் பலமுறை எடுத்துச் சொல்லியும், எச்சரிக்கை செய்தும், மத்திய காங்கிரஸ் அரசு அதைக் கிஞ்சிற்றும் காதிலே போட்டுக் கொள்ளாமல், இலங் கையை நட்பு நாடு என்றே தொடர்ந்து கூறி வந்ததின் காரணமாக ஏற்பட்ட எதிர்மறை விளைவினை அனை வரும் அறிவர்.

    தமிழின உணர்வு சம்பந்தமான இந்த உண்மையை புதிதாகப் பொறுப்பேற்கும் பா.ஜ.க. அரசு தொடக்க நிலையிலேயே உணர்ந்து கொள்ள முன்வரவேண்டும் என விரும்புகிறேன்.
    விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து, இந்தியாவுக்குக் கொண்டு வந்து தண்டிக்க வேண்டுமென்று ஒரு காலத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் பேர வையிலே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய வர்களே, தற்போது நல்லவர்கள் போலவோ அல்லது தம்மைத் திருத்திக் கொண்டவர்கள் போலவோ, ராஜ பக்சேவின் இந்திய வருகைக்கு தங்களின் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காரசாரமாக விடுத்துள்ள அறிக்கையைப் பார்க்கும்போது, இதே முதலமைச்சர் தான் தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற் றியவர் என்பது மறந்துவிடக் கூடியதல்ல.

    திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்க விருக்கும் அந்த நிகழ்ச்சியில், இலட்சக் கணக்கான இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் இன அழிப்பில் தீவிரமாக இறங்கிய - தமது குடிமக்கள் மீதே போர் தொடுத்த - மனித உரிமைகளைச் சிறிதும் மதிக்காத ஒருவர் இடம் பெற வேண்டுமா என்பதை மத்திய அரசு மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து சிந்தித்து, அந்த முயற்சியைக் கைவிட வேண்டுகிறேன்.
    - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

    Read more: http://viduthalai.in/page-8/80825.html#ixzz32aixaSw5

    தமிழ் ஓவியா said...

    தமிழக வழக்குரைஞர்கள்

    தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், என்.ராஜா ராமன் மற்றும் ஜி.நித்தியானந்தம் ஆகிய இருவரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு ஒரு கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;-

    இலங்கையில் படுகொலை பாதகங்களில் ஈடுபட்ட இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானம் ஒன்று ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

    போர்க்குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு மனிதருக்கு இந்திய அரசின் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பது தமிழர்களின் உணர்வுக்கு எதிரான காரியமாகும். எனவே, ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்களைப் பற்றிய விரிவான விசா ரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று மற்ற நாடுகளின் தலைவர்களுடன் நடைபெறும் பேச்சு வார்த்தைகளில் இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

    தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட இலங்கை அதிபர் ராஜபக்சவை இந்தப் பதவியேற்புக்கு அழைப்பது குறித்து இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மாணவர்கள் எதிர்ப்பு

    மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வ தற்காக இந்தியா வர உள்ள இலங்கை அதிபர் ராஜபக் சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாச்சலம் கொழஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள் கண்டன முழக்கம் எழுப்பினர்.

    கல்லூரியில் இன்று (23.5.2014) தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    Read more: http://viduthalai.in/page-8/80825.html#ixzz32ajKM8l1

    தமிழ் ஓவியா said...


    ஓசூர் தோழர் பாலகிருஷ்ணனைப் பாரீர்!


    - கவிஞர் கலி. பூங்குன்றன்


    தோழர்களே! தனியாக வெளியிடப் பட்டுள்ள ஒரு தோழரின் கடிதத்தைப் படியுங்கள்! படியுங்கள்!! படிக்கும்போதே நம் கண்களில் கண்ணீர் கசியும் - நெஞ்சமெல்லாம் நெகிழும்!
    பெரியார் உலக நிதிக்காக தன் இணையரின் தங்கச் சங்கிலியை அடமானம் வைத்து முதல் தவணையாக ரூ.15,000 அளித்தார் என்றால் அந்த உணர்வின் ஆழத்தை வார்த்தைகளால் படம் பிடிக்க முடியுமா?

    தனது பொருளாதார நிலையையும் மீறி பெரியார் உலகிற்கு நிதி அளிக்கத் தூண்டியது எது?

    அவரே அதற்கான காரணத்தைக் கூறி யுள்ளாரே! மண்ணை விடக் கேவலமாக இருந்த மக்களை மானமும் அறிவும் உள்ள மனிதனாக மாற்றிய தந்தை பெரியார் சிலை விண்ணில் உயர்ந்து நிற்க வேண்டும் என்று எண்ணுகிற இந்தத் தொழிலாளத் தோழரின் உள்ளம்கூட விண்ணளவு உயர்ந்ததல்லவா!

    நன்றி உள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பைப் பெரியார் உலகத் திற்கு அளிக்க வேண்டுமாய் மற்றவர் களையும் பணிவுடன் வேண்டிக் கொள் ளும் அந்த உள்ளத்தைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம்!

    அந்த உணர்வு மேலிடும் எவரும் ஓசூர் பாலகிருட்டிணனாகவே மாறுவார்கள் என்பதில் அய்யமில்லை.

    தமிழ் ஓவியா said...


    தோழர் பாலகிருஷ்ணன் அவர்களின் உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் உன்னதமான பாடத்தைப் போதிக்கிறது.

    பெரியார் பேருலகிற்கு நிதி அளிக்க வேண்டும் என்பதற்கு முதலில் நமக்கு மனம் தான் தேவை. அந்த மனம் மட்டும் நமக்கு வந்து விட்டால் பணம் ஒரு பொருட் டல்ல என்பதற்கு எடுத்துக் காட்டுதான் தோழர் ஓசூர் பாலகிருட்டிணன்.

    தந்தை பெரியார் தம் அளப்பரிய தொண்டால் ஒட்டு மொத்தமாக தமிழர் சமுதாயம் ஓங்கி உலகளந்து நின்றது என்றாலும், தனிப்பட்ட முறையில்கூட, நேரிடையாக பலன் பெற்ற தமிழர்கள் எண்ணற்றோர் அல்லவா!

    ஓசூர் தோழர் பாலகிருட்டிணன் அவர்கள் பெற்ற அந்தப் பரந்த நன்றி உணர்வைப் பெறுவார்களாயின் பெரியார் உலகத்திற்குத் தேவைப்படும் அந்த 30 கோடி ரூபாய்கூட ஒரு நொடியில் வந்து குவியாதா?

    நன்றி உள்ளவன்தான் மனிதன்; நன்றி யில்லாதவன் புழுப் பூச்சிக்குச் சமம் என்று கூடத் தந்தை பெரியார் கூறியதுண்டு.

    குறைந்தபட்சம் இந்தக் கருத்துக்குச் சொந்தக்காரரான தந்தை பெரியாருக்கு 95 அடி உயரத்தில் நிறுவப்படவிருக்கும் பேருருவச் சிலைக்கு நிதி அளிப்பதிலாவது காட்டிக் கொள்ள வேண்டாமா? அதற்கான தோர் அரிய சந்தர்ப்பம் தமிழர்களுக்கு இப்பொழுது கிட்டவில்லையா?

    தந்தை பெரியார் அவர்களுக்காக நன்றிக் காணிக்கை செலுத்தும் இப்படி யொரு சந்தர்ப்பம் கிடைத்ததற்காகக் கிளர்ச்சி கொண்டு நாம் எழுந்து நிற்க வேண்டாமா? அப்படி நிதி அளிப்பதன் மூலம் பெரியார் சகாப்தத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமைக்கு உரியவர்களாக ஆக வேண்டாமா?

    அதோ உயர்ந்து நிற்கிறாரே வைக்ககம் வீரர் பெரியார் அந்தச் சிலை நிறுவும் சீலத்திற்காக எனது தந்தை நிதி அளித்திருக்கிறார்; அவர் பெயர் அந்தக் கல்வெட்டில் இதோ பொறிக்கப்பட்டு இருக்கிறது என்று நம் சந்ததிகள் புள காங்கிதம் அடைய வேண்டாமா?
    மதவாத யானைகள் துதிக்கையைத் தூக்கிக் கொண்டு துவம்சம் செய்ய எத்தனிக்கும் இந்தக் கால கட்டத்தில், தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தை மேலும் பலமாகக் கட்டிக் காப்பது நமது கடமையல்லவா!

    பெரியார் உலகினை நிறுவுவதால் தந்தை பெரியார் அவர்களுக்குப் புதுப் பெருமை வந்து புகுந்திடப் போவதில்லை. அவர் ஒரு தத்துவம் - கால கட்டம் - திருப்பம் என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்களே - அந்த நிலை என்றோ உருவாகி விட்டது.


    தமிழ் ஓவியா said...

    பெரியாருக்குமுன் பெரியாருக்குப்பின் என்று ஒரு கோடு கிழித்துப் பார்க்கும் நிலைதான்!

    பின் ஏன் பெரியார் உலகம் என்ற வினா எழும்பலாம். வருங்காலத் தலைமுறையினர் தந்தை பெரியாரை எண்ணிப் பார்க்க - அந்தத் தத்துவ சீலத்தின் மணத்தினை நுகர இந்தத் தலைமுறையைச் சார்ந்த நாம் - தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த நாம் செய்து தீர வேண்டிய அடிப்படைக் கடமையின் பாற்பட்டது இது.

    எனவே, தோழர்களே இதுவரை பெரியார் உலகிற்கு நன்கொடை வழங்காத தமிழர்கள் நிதி வழங்கிட உறுதி கொள்வோம்!

    நாம் மட்டுமல்ல; நம் உற்றார் உறவினர், நண்பர்கள் புறக்கண்ணிலும், மனக் கண்ணிலும் தட்டுப்படும் ஒவ்வொருவரை யும் சந்தித்து பெரியார் உலகத்தின் மாட்சிமையை விளக்கிக் கூறி நிதி திரட்டும் வேலையில் நித்திரையை மறந்துகூட வீதியில் இறங்குவீர் தோழர்களே!
    பெரியார் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ததற்கான அர்த்தத்தை இதன் மூலம் நியாயப்படுத்துவோம் நண்பர்களே!

    தமிழர் குடும்பத் தலைக்கட்டுக்கு ரூ.5 வைத்தால்கூட இந்த நிதி நொடிப் பொழு தில் வந்து குவியாதா?

    கிளம்புங்கள் தோழர்களே! ஓசூர் பால கிருட்டிணனை நினையுங்கள் நண்பர்களே! நம்மை அறியாமலேயே நம் கால்கள் விரைவாக அடிகளை எடுத்து வைக்கும்!

    வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

    பெரியார் சிலை விண்ணில் உயர்ந்து நிற்க வேண்டும்

    அய்யா, நான் சலவைத் தொழில் செய்யும் (வண்ணான்) சமூகத்தைச் சார்ந்தவன். தாய் மொழி தெலுங்கு என்றாலும் தமிழ்மொழிப் பற்றின் காரணமாக தமிழ் வாசிப்பது ரொம்பவும் பிடிக்கும்.

    எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து கடவுள் நம்பிக்கை கிடையாது (எனக்கு மட்டும்) நான் எனது திருமணத்தில் எனது மனைவிக்கு தாலி அணிவிக்கவில்லை. காரணம் தெரியாது. (எனக்கு தாலிமீது நம்பிக்கை இல்லை) எனக்கு இரண்டு மகன்கள். கடந்த ஓராண்டு முன்பு மூத்த மகன் பிரகாஷ் சாலை விபத்தில் காலமானார். இரண்டாவது மகன் பிரசாத் தற்போது டிப்ளேமா (மெக்கானிக்) படித்து வருகிறார்.

    தமிழ் ஓவியா said...

    நான் கடவுள் குறித்து விவாதம் செய்தபோது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் இயக்கத்தை பற்றி இன்றைய கிருட்டிணகிரி மாவட்ட செயலாளர் வனவேந்தன் அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். விளைவு என் மகனை பெரியார் சமூக பாதுகாப்பு அணியில் பயிற்சி பெற அனுப்பி வைத்தேன். பயிற்சி பெற்ற என் மகன் இராசபாளையத்தில் நடந்த கழக மாநாட்டில் கம்பீரமாக நின்ற காட்சி எனக்கு மகிழ்வாக இன்றும் உள்ளது. இந்நிகழ்வை காண நானும் இராசபாளையம் மாநாட்டில் கலந்து கொண்டேன். நான் தொடர்ந்து விடுதலையை படித்து வருகிறேன். மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டங்கள், மாநாடு அனைத்திலும் பங்கு பெற்று வருகிறேன்.

    அதே வேளையில தந்தை பெரியாரை உலகம் அறிய செய்யும் பெரும் முயற்சி எடுத்துள்ள (பெரியார் உலகம்) தங்களது பணியில் நானும் எனது குடும்பமும் ஒரு துளி அளவாவது பங்கு பெற நினைத்து (12.4.2014) இன்றைய தினம் எங்கள் ஊருக்கு (தேர்தல் பரப்புரை) வருகை தந்துள்ள தங்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கான எனது கடமையை செய்ய நினைத்தபோது பணம் என்னிடம் இல்லை. எனது மனைவி தந்த தங்க செயினை வங்கியில் அடமானம் வைத்து, முதல் தவணையாக ரூ.15,000 தற்போது அளிக்கிறேன். மீதம் உள்ள 10,000 விரைவில் தந்து எனது கடமையை நிறைவேற்றுவேன்.
    மண்ணைவிட கேவலமாக இருந்த இந்த மக்களை மானமும், அறிவும் உள்ள மனிதனாக மாற்றிய தந்தை பெரியார் சிலை விண்ணில் உயர்ந்து நிற்க வேண்டும். அதற்கு நன்றி உள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை பெரியார் உலகத்திற்கு செய்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    - டி. பாலகிருட்டிணன், ஓசூர்

    Read more: http://viduthalai.in/page-1/80480.html#ixzz32ajb29lZ

    தமிழ் ஓவியா said...

    நான் கடவுள் குறித்து விவாதம் செய்தபோது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் இயக்கத்தை பற்றி இன்றைய கிருட்டிணகிரி மாவட்ட செயலாளர் வனவேந்தன் அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். விளைவு என் மகனை பெரியார் சமூக பாதுகாப்பு அணியில் பயிற்சி பெற அனுப்பி வைத்தேன். பயிற்சி பெற்ற என் மகன் இராசபாளையத்தில் நடந்த கழக மாநாட்டில் கம்பீரமாக நின்ற காட்சி எனக்கு மகிழ்வாக இன்றும் உள்ளது. இந்நிகழ்வை காண நானும் இராசபாளையம் மாநாட்டில் கலந்து கொண்டேன். நான் தொடர்ந்து விடுதலையை படித்து வருகிறேன். மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டங்கள், மாநாடு அனைத்திலும் பங்கு பெற்று வருகிறேன்.

    அதே வேளையில தந்தை பெரியாரை உலகம் அறிய செய்யும் பெரும் முயற்சி எடுத்துள்ள (பெரியார் உலகம்) தங்களது பணியில் நானும் எனது குடும்பமும் ஒரு துளி அளவாவது பங்கு பெற நினைத்து (12.4.2014) இன்றைய தினம் எங்கள் ஊருக்கு (தேர்தல் பரப்புரை) வருகை தந்துள்ள தங்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கான எனது கடமையை செய்ய நினைத்தபோது பணம் என்னிடம் இல்லை. எனது மனைவி தந்த தங்க செயினை வங்கியில் அடமானம் வைத்து, முதல் தவணையாக ரூ.15,000 தற்போது அளிக்கிறேன். மீதம் உள்ள 10,000 விரைவில் தந்து எனது கடமையை நிறைவேற்றுவேன்.
    மண்ணைவிட கேவலமாக இருந்த இந்த மக்களை மானமும், அறிவும் உள்ள மனிதனாக மாற்றிய தந்தை பெரியார் சிலை விண்ணில் உயர்ந்து நிற்க வேண்டும். அதற்கு நன்றி உள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை பெரியார் உலகத்திற்கு செய்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    - டி. பாலகிருட்டிணன், ஓசூர்

    Read more: http://viduthalai.in/page-1/80480.html#ixzz32ajb29lZ

    தமிழ் ஓவியா said...


    வறட்டு இருமல் குணமாக...


    மாதுளம்பழச் சாறுடன் சமமாக இஞ்சி சாறு கலந்து, இத்துடன் தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும். றீ நன்றாகப் பழுத்த அரை நேந் திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும்.
    சிறுநீரகக் கற்களால் பாதிக்கப் பட்டவர்கள் தினமும் ஒரு ஆப்பிள், அல்லது வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் வாழைத்தண்டு ஜூஸ் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் நல்லதல்ல.
    மழைக்காலங்களில் கால் விரல்களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப் புண் குணமாக மஞ்சள் தூளுடன் தேனைக் கலந்து களிம்பு போல பூசலாம். இரண்டு டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
    மஞ்சள்காமாலையால் பாதிக்கப் பட்டவர்கள் கீழாநெல்லியை வேரோடு பிடுங்கி நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து 9 நாள் குடித்து வர நோய் குண மாகும்.

    தினமும் சப்போட்டா பழ ஜூஸ் பருகி வர முடி நன்றாக வளரும். முடி உதிர்வது நிற்கும். பதினைந்து வில்வ இலையை கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்துக் குடித்தால் வயிற்றுப்புண் குணமாகும். மோரில் இஞ்சியை நறுக்கிப் போட்டு, கொத்தமல்லி இலையைக் கிள்ளிப் போட்டு குடித்தால் நன்றாகப் பசி எடுக் கும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதனு டன் தேன் கலந்து சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

    வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகப் பருக்கள் நீங்கி புத் துணர்ச்சி பொங்கும். தண்டுக்கீரைச் சாற்றைத் தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்; முடி உதிர்வதும் குறையும். றீ மன அழுத்தத்துக்கு மக்னீசியம் சத்து குறைபாடும் ஒரு காரணம். பசலைக் கீரையில் அதிக மக்னீசிய சத்து உண்டு. வாரத்துக்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்தால் மன அழுத்தம் போயே போச்சு.

    மாதுளைச் சாறை 40 நாள் தொடர்ந்து அருந்தி வந்தால் பெண்களின் மாதாந்திரப் பிரச்சினைகள் நீங்கும். ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு அதிகரிக்கும்.


    Read more: http://viduthalai.in/page-1/80484.html#ixzz32akEWMrd

    தமிழ் ஓவியா said...

    கலிலீயோ

    உலக வடிவை உணராதவர்களுக்கு அது உருண்டை என்னும் உண்மையை உரைத்து வதைபட்டார் - கலிலீயோ

    பழைமையை வற்புறுத்திய வைதிகத்தின் மடமையைத் தமது வாதத்தினால் வாட்டினார் - நாட்டை விட்டே ஓட்டினார் - வால்டேர்

    மக்களின் ஒருமுகப்பட்ட ஒப்புதல் உடன்பாட்டுப் பயனே ஆட்சியாவதால் மக்கள் மன்றத்திற்கு உரிய மதிப்புத் தர வேண்டினார் - ரூசோ

    அமெரிக்கக் கறுப்பர்கள் - பூட்டப்பட்டிருந்த விலங்கொடித்து அந்த அடிமைகளை விடுவித்தார் - ஆபிரகாம் லிங்கன்

    முதலாளிகளின் கொடுமைகளை எடுத்துரைத்து - சமதருமச் சமுதாயம் காண அறை கூவினார் - காரல்மார்க்ஸ்

    முதலாளித்துவ ஜார் மன்னர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வெற்றி பெற்றார் - மாவீரர் இலெனின்

    Read more: http://viduthalai.in/page-1/80485.html#ixzz32akMgOeW

    தமிழ் ஓவியா said...


    சென்னை புத்தகச் சங்கமத்தில் நடத்தப்பட்ட பொம்மலாட்டம் குறித்து தினத்தந்தி குடும்பமலர்


    பிற இதழிலிருந்து...

    சென்னை புத்தகச் சங்கமத்தில் நடத்தப்பட்ட பொம்மலாட்டம் குறித்து தினத்தந்தி குடும்பமலர் (4.5.2014)

    தமிழ்நாட்டில் பாரம்பரிய கலை களுள் ஒன்றாக இருந்த பொம்மலாட்டம் கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னையும் மாற்றிக்கொண்டிருக்கிறது. மக்களின் மாறிவரும் பொழுதுபோக்கு ரசனைக்கு ஏற்ப பொம்மலாட்டமும் தன் ரூபத்தை மாற்றிக்கொண்டாலும் தனித்தன்மையை தக்க வைக்கத் தவறவில்லை. கட்டைகளில் பொம்மைகளை வைத்து இயக்கும் கட்டை பொம்ம லாட்டம், திரைக்குப் பின்னால் கயிறு களை வைத்து ஆட்டுவிக்கும் கயிறு பொம்மலாட்டம், கை விரல்கள் மூலம் பொம்மைகளை அசையவைக்கும் கையுறை பொம்மலாட்டம் இப்படி பல வகைகள் உள்ளன. புராணக் கதைகளே பொம்மலாட்டத்தின் பிரதானமான கதைக்களமாக இருந்த காலம் மெல்ல மாறி, சமூக சீர்த்திருத்த அக்கறை சார்ந்த கருத்துக்களை மய்யப்படுத்தியும் பொம் மலாட்டம் ஆட்டுவிக்கப்படுகிறது. அப்படி ஒரு நிகழ்வு சென்னையில் அரங்கேறியது. சென்னை புத்தக சங்கமம் நடத்திய புத்தக கண்காட்சியில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் கருத்துக்களை முதன்மைப் படுத்தி இந்த பொம்மலாட்டத்தின் மய்யக் கருத்து அமைந்திருந்தது. கையுறை பொம்மலாட்ட ரகத்தை சேர்ந்ததாக இருந்ததால் பொம்மைகள் காட்சிகள் மூலம் கதை பேசின. பொம்ம லாட்டக் கலைஞர்கள் திரையின் கீழ்ப் பகுதியில் மறைந்திருந்து கைவிரல்கள் மூலம் பொம்மைகளை உயர்த்திப் பிடித்து சைகைகள் மூலம் பொம்மை களை ஆட்டுவித்து அசத்தினர். கதை சொல்லப்போகும் சூழலுக்கு ஏற்ப திரை யில் ஓவியங்கள் வடிக்கப்பட்டு இருந்தன. அத்திரைக்கு முன்பு பொம்மைகள் அங்கும் இங்கும் நகர்ந்து பின்னணியில் ஒலிக்கும் ஒலிக்கு ஏற்ப உடல் அசை வுகளை வெளிப்படுத்தியவாறு பேசி காட்சிகளை விவரித்தன. கிராமப்புற மக்கள் நூலகங்களை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறார்கள் என் பதை முதல் காட்சி விளக்கியது. புத்தக வாசிப்பு மீது அதீத பிரியம் கொண்ட பொம்மை தன் மனைவியை அழைத்த படி வீட்டுக்குள் நுழைகிறது. வீட்டில் நிசப்தம் நிலவ, சிறிது நேரத்தில் மனைவி வீட்டுக்குள் வருகிறாள்.

    தமிழ் ஓவியா said...


    எங்கே போயிருந் தாய் என்ற கேள்விக்கு நூலகத்துக்கு சென்றதாக மனைவி கூறும் பதில் கேட்டு ஆனந்தம் அடைகிறார் கணவர். அங்கு புத்தகம் எதுவும் படித்தாயா? என்று கேட்க மனைவியோ, நான் படிச்சு என்ன செய்யப்போறேன். கல்லூரியில் படிக்கும் பக்கத்து வீட்டு பானு, ஏதோ புத்தகம் எடுக்கணும்னு கூப்பிட்டதால நான் துணைக்கு போனேன் என்கிறாள். நீயும் அங்கே புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டியது தானே என்று கணவர் கேட்க, அந்த பொண்ணு ஏதோ ஒரு கார்டை காண்பிச்சு புத்தகம் எடுத்துது. நாம எப்படி எடுக்க முடியும்? நமக்கும் கார்டு வேணுமில்லே. அப்பத்தானே புத்தகத்தை எடுக்க, படிக்க விடுவாங்க? என்று கேட்கிறாள் மனைவி.

    அதற்கு கணவர், வீட்டுக்கு புத்தகத்தை எடுத்து கொண்டு வந்து படிப்பதற்குத் தான் உறுப்பினரா சேரணும். அதுக்கு பத்து, இருபது ரூபாய்க்குள்ள பணம் செலவாகும். அந்த கார்டை வைச்சு புத்தகங்களை மாத்தி, மாத்தி எடுத்து வந்து படிக்கலாம். மற்றபடி நூலகத்தின் முகப்பில் உள்ள நோட்டில் கையெழுத்து போட்டுவிட்டு நாம் எந்த புத்தகத்தை வேணும்னாலும் அங்கேயே இருந்து படிக்கலாம். அதுக்கு யாரும் காசு கேட்க மாட்டாங்க என்கிறார். அப்படியா? எனக்கு இது தெரியாம போச்சே! என்று மனைவி கூற, அங்க பலவகையான புத்தகங்கள் இருக்கு. ஓய்வு நேரத்தை புத்தகங்களை படிச்சு பயனுள்ள வகையிலே செலவிடலாம். புத்தகத்தை படிக்கப் படிக்க அறிவு மேம்படும் என்று காட்சிகளால் கருத்துக் களை பதிவு செய்கிறார் கணவர். கிராமப் புற, நகர்ப்புற நூலகங்கள் திறந்திருக்கும் நேரம், உறுப்பினராக சேருவதற்கு ஆகும் தொகையையும் பட்டியலிடுகிறார்.

    தமிழ் ஓவியா said...

    கணவர் பொம்மையும், மனைவி பொம்மையும் பின்னணியில் ஒலிக்கும் குரலுக்கு ஏற்ப இசைந்து கொடுத்து தாங்கள் பேசுவது போல சைகைகளை வெளிப்படுத்திய விதம் நிகழ்ச்சியை பார்த்தவர்களை காட்சிகளுடன் ஒன்றச் செய்ததோடு கரகோஷத்தையும் எழுப்ப செய்தது. இன்னொரு காட்சி பள்ளி செல்லும் சிறுவர்கள் நூலகத்துக்கு சென்றும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற கருத்தை விதைத்தது. பள்ளியில்எடுக்கும் மதிப்பெண் மட்டும் மதிப்புக்கு உரியது ஆகிவிடாது. அது அடுத்த கட்ட படிப் புக்கு உதவும். ஆனால் பாடபுத்தகத்துடன் நூலக புத்தகங்களை படிப்பது கல்வி அறிவு வளர்ச்சிக்கு துணைபுரியும். வாழ்க்கையும் மேம்படும் என்று எடுத்துக்கூறியது. நல்ல புத்தகம் நானே.. என்னை எடுத்து படித்தால் போதும். ஏற்றம் தந்திடுவேனே என்று ஒலித்த பாடலில் அறிவுக்களஞ்சியமாக நான் (புத்தகம்) இருப்பேன். அகந்தை கொள்ளா நெஞ்சி னில் நிலைத்திருப்பேன். மனக்கவலை களைக் குறைத்திடுவேன். மண்ணில் மதிப்பு மிகுந்ததொரு வாழ்வளிப்பேன். கையில் பிடித்தால் காகிதம். எடுத்து படித்தால் நான் தான் அறிவு தரும் ஆயுதம். புத்தகங்களை படித்தவர் எதிலும் தோற்ப தில்லை என்பது போன்ற கருத்தாழம் மிக்க வரிகள் இடம்பெற்றிருந்தன. அறிவார்ந்த புத்தகங்களைப் படித்தால் அறியாமையை விரட்டிவிட முடியும். எல்லாரும் படித்து எல்லாருக்கும் எல் லாம் தெரியும் என்ற நிலை வந்தால் யாரும், யாரையும் ஏமாற்ற முடியாது என புத்தகங்களின் பெருமைகளை பறை சாற்றும் வரிகள் காட்சிகளில் கலந்திருந் தன. இந்த கலை நிகழ்ச்சியை கலை அறப் பேரவை கலைவாணன் பொம்மலாட்டக் குழு அரங்கேற்றியது. இக் குழுவை வழி நடத்தும் கலைவாணன் என்ன சொல்கிறார் என்று கேட்போமா?

    கடந்த 37 ஆண்டு களாக பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம். எனது தந்தை முத்து கூத்தன் சினிமா பாடலா சிரியராக இருந்தவர். அவர் பொம்ம லாட்டத்தையும் ஆர்வமுடன் வழிநடத்தி வந்தார். அவரது மறைவுக்கு பின்னர் நான் நடத்தி வருகிறேன். இக்கலை நலி வடைந்து வருவதாக கூறப்பட்டாலும் இதையே முழுநேர தொழிலாக செய்து வருமானம் ஈட்டி வருகிறேன். இன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு எது தேவையோ அதை சரியான கலை வடிவத்துடன் காட்சிப்படுத்தி கருத்துக்களை சொன்னால் கலை என்றென்றும் நிலைத்து நிற்கும். அறிவியலுக்கு ஈடுகொடுத்து போனால் கலை நிலைக்கும் என்கிறார். சுற்றுச்சூழல், சுகாதாரம், நலவாழ்வு, கல்வி, பேரிடர் மேலாண்மை, தற்கொலை களை தடுத்தல், முதியோர்களை பாது காத்தல் உள்ளிட்ட சமூகம் சார்ந்த பிரச் சினைகளை மையப்படுத்தியே பொம்ம லாட்டக்காட்சிகள் உருவாக்கப்படுகின் றன. சென்னையை அடுத்த காட்டாங் குளத்தூரில் வசித்து வரும் இவரின் குடும் பமும் பொம்மலாட்டக் கலையுடன் தொடர்பில் இருக்கிறது. இவருடைய மகன்கள் பகல வன், முத்தரசன் ஆகியோர் கலைக்குழுவின் அங்கத் தினர். பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பின்னணி இசை கோர்ப்பு பணியில் ஈடுபட்டு பொம்மைகளையும் ஆட்டுவிப்பவர்கள். தாய் தயமந்தி பொம்மைகளுக்கு ஆடை வடிவமைப்பு செய்கிறார்.

    Read more: http://viduthalai.in/page-1/80486.html#ixzz32akdSrab

    தமிழ் ஓவியா said...


    பக்தியும் - சோதிடமும்


    - முனைவர் பேராசிரியர்
    ந.க.மங்களமுருகேசன்

    பகுத்தறிவாளர்கள் பக்தியையும் அதாவது இறை நம்பிக்கையையும், கடவுள் வழிபாட்டையும் ஏற்காததோடு, சோதிடம் என்பது புரட்டு கவைக்கு உதவாதது என்று உறுதியாக எடுத்துப் பரப்புரை செய்து வருபவர்கள்.

    பக்திமான் என் போரில் ஒரு பகுதியினர் சோதிடத்தை நம்பாதவர்கள் மட்டுமல் லாது, சோதிடம் தனை இகழ்பவர்கள். அதிலும் பாரதி போன்றவர்கள், ராஜாஜி மாதிரி ராமபக்தர்கள் சோதிடத்தையே ஏற்காதவர்கள்.

    இந்நிலையில் பக்தியில் மிக்கார்கள். தீவிரச் சிவனடியாளர்கள் சோதிடத்தை ஏற்காததோடு, இறைவன் அருளைப் பற்றினால் போதும் சோதிடம் ஒன்றும் செய்து விடாது என்று கூறியவர்கள். இது இன்றல்ல ஆயிரத்து முந்நூறு ஆண்டு களுக்கு முன்பே நிலவிய நிலை.

    எது எப்படியோ, பகுத்தறிவாளர்கள் இரண்டு கருத்துக்களில் ஒன்றான சோதிடம் என்பதற்கும் புரட்டு என்பதற்குப் பக்தி யாளர்களின் கருத்திலேயே ஆதாரம் கிடைக்கிறது. அது குறித்த தகவல்கள் பல உள்ளன.

    சோதிடத்தைப் பொறுத்தவரையில் நாள், நட்சத்திரம் ஆகியவற்றில் நல்லன உள்ளன. கெட்டன உள்ளன என்றும், நல்லவை நாடி வரும் போதுதான் எந்த நற்செயலையும் செய்ய வேண்டும் என்பது சோதிட நம்பிக்கை. இந்த அடிப்படை யிலேதான் நாள், நட்சத்திரம் பார்த்து நல்லன செய்ய வேண்டும் என்று நம்பிச் செயல் செய்தனர்.

    ஆனால், தேவார முதலிகள் மூவரில் ஒருவரான திருஞான சம்பந்தர் அவ்வாறு நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, நல்ல வேளையா என்றெல்லாம் பார்த்துச் செயல் புரியவில்லை என்பதை அவருடைய வாழ்க்கை வழி தெரிகிறோம்.

    திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரச ரும் திருமறைக்காடு எனும் வேதாரண்யத் தில் தங்கி இருந்தனர். அவ்வேளையில் மதுரையிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பை விடுத்தவர்கள் மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் ஆவர். அவர்கள் பாண்டிய நாட்டில் செல்வாக்குடன் திகழ்ந்த சமணர்களை நீக்கிச் சைவத்தைக் காக்க மதுரை வருமாறு சம்பந்தரை அழைத்து இருந்தனர்.

    அப்போது சம்பந்தருடன் இருந்த திருநாவுக்கரசர், அழைப்பை ஏற்று மதுரை செல்ல ஆயத்தமாய் இருந்த சம்பந்தரிடம் அந்தச் சமணர்களின் வஞ்சனைக்கு ஓர் அளவு இல்லை அவற்றை எல்லாம் நேரில் கண்டும், அவர்களால் துன்புறுத்தப் பெற் றும் வருந்தியவன் யான். மேலும் இப் போது கோள் நிலைகளும், தீயவையாய் உள்ளன (அதாவது சோதிடக் குறிப்பு களின்படி சம்பந்தர் செல்ல விடுத்த நேரம் சரியில்லை) என்று கூறி மதுரைக்குப் போக வேண்டாம் என்று தடுத்தார். சம்பந்தரோ பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுதணையாது என்று கூறி, அதாவது சிவபெருமானின் திருவடி தொழுவோரைத் தீயவை அணுகாது என்று சொல்லிக் கோளாறு பதிகம் பாடினார்.


    தமிழ் ஓவியா said...

    அப்படியானால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் சோதிடம் பார்க்க வேண்டும்? கடவுள் பார்த்துப்பார் என்று எல்லாச் செயல்களுக்கு சோதிடம் பார்க்கக் கூடாது என்பதுதானே பொருள். கடவுள் பார்த்துக் கொள்வாரோ, பார்த்துக் கொள்ள மாட்டாரோ, கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கடவுளை நம்பிச் சோதிடம் ஏன் பார்க்க வேண்டும்?

    எல்லாக் கிழமைகளும் நல்ல கிழமை கள் தாம் என்று ஞான சம்பந்தரே கூறுகிறார். ஆனால், நம்மவர்களோ சனிக்கிழமை கெட்டகிழமை, செவ்வாய்க்கிழமை கெட்டகிழமை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

    ஞாயிறு,திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி பாம்பு இரண் டுடனே ஆசறுநல்ல நல்ல அவை நல்ல என்கிறார்.

    அதைப்போலவே 27 நட்சத்திரங்களில் திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி,கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரண்டும் கெட்ட நட்சத்திரங்கள் என்று கூறி, இவை ஆட்சியில் இருக்கும் போது கடன் வாங்கியவர்கள் திருப்பித் தர மாட்டார்கள். பயணம் போனவர்கள் திரும்பிவாரார் நோயிற் படுத்தவர்கள் நலம் பெற மாட்டார்கள், இவர்கள் பாம் பின் வாயில் அகப்பட்ட தவளை போல் துன்பமடைவார்கள் என்று சோதிடம் கூறுவதாகக் கூறுவர். ஆனால் திருஞானசம்பந்தரோ இந்தச் சோதிடக் குறிப்பையும் புறந்தள்ளி விடு கிறார். இதில் வேடிக்கை திருநாவுக்கரசர் பார்ப்பனர் அல்லாதவர். ஆனால்இவரோ? நானும் கோளும் நட்சத்திரமும் பார்க்கிறார் திருஞானசம்பந்தரோ பார்ப்பனர் அவரோ அது எதையும் ஏற்கவில்லை அவர்.

    ஒன்பது ஒன்றோடு ஏழு பதினெட் டோடு ஆறும் உடனாய் நாள்கள் அவை தாம் அன்பொடு நல்லநல்ல அவை நல்ல நல்ல என்கிறார்.

    அதாவது ஒன்பதாவது நட்சத்திரமான ஆயில்யம், ஒன்பதோடு ஒன்று பத்து - அதாவது பத்தாவது நட்சத்திரமான மகம், ஒன்பதோடு ஏழு - பதினாறு - அதாவது பதினாறாவது நட்சத்திரமான கேட்டை, ஆறு- ஆறாவது நட்சத்திரமான திருவா திரை என்று சம்பந்தர் குறிப்பிட்டதோடு நாள் நட்சத்திரம் எதுவும் பார்க்காமலே மதுரைக்குப் புறப்பட்டுப் போனார் என்கிறது வரலாறு கோள் நிலைகள் தீயவாய் உள்ளன என்று திருநாவுக்கரசர் கூறியதைக் கேட்டுத் தம் பயணத்தைத் தள்ளி வைக்க வில்லையே.

    பயணத்தை மேற்கொள்ளத் தானே செய்தார். ஆகத் திருஞானசம்பந்தரே எந்த ஒரு செயலையும் நாள் நட்சத்திரம் பார்க்காமல் செய்யலாம் என்று கூறினார் என்றால் என்ன பொருள்? அவர் கூடுத லாகச் செய்தது இறைவனை வணங்கிப் பயணத்தை மேற் கொண்டதே.

    தமிழ் ஓவியா said...


    சோதிடத்தின்படி பார்த்தால், நட்சத் திரம் தீயவையாய் இருந்தன. சம்பந்தர் என்ன செய்தார்? மதுரைக்குப் புறப்பட்டுப் போனார். அங்கே போனவருக்கு என்ன ஆகியிருக்க வேண்டும்? தோல்வி கிடைத் திருக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்டு இருக்க வேண்டும். தோல்வி ஏற்படவில் லையே! மாறாகப் பல வெற்றிகளையே அவர் பெற்றார்.

    அது மட்டுமல்லாது பாண்டிய மன்னன் வெப்பு நோயைத் தீர்த்தாராம். பாண்டிய மன்னனை மட்டுமல்லாது பாண்டிய நாட்டையே சைவமாக்கினாராம். அனல் வாதம், புனல்வாதத்திலாவது தோற்றாரா? அதிலும்கூட வெற்றி பெற்றார் என்றுதானே கூறுகின்றனர். கோள் நிலைகள் தீயவை என்பது ஒன்றும் பாதிக்கவில்லையே. பக்தர்கள் வேண்டுமானல் கூறிக் கொள்ள லாம். என்னவென்றால் சாதகமாகக் கோள் நிலைகள் இல்லாதபோதும் இறைவனை நம்பினார் எனவே வெற்றி பெற்றார் என்று.

    சோதிடம் பார்த்து நாள், நட்சத்திரம் பார்த்து, நல்லவை வரட்டும் என்று பார்த்து இருந்து, காத்து இருந்து செய்யும்போது கால விரயம் ஏற்படுகிறது.

    இவ்வாறு கால விரயம் ஏற்படுகிறது என்று நாம் சொன்னால்கூட ஏற்கத் தயங்க லாம். பாட்டுக்கொரு புலவனாளவு பாரதி, பார்ப்பனரான பாரதியே கால விரயம்பற்றி இவ்வாறு கூறுகிறார். திருஞானசம்பந்தர் கதையாவது என்றோ எப்பொழுதோ நடைபெற்றது. பாரதி நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மானிடம் நாயன்மாரும் இல்லை. சிவனடியாரும் இல்லை எனவே பாரதி சொல்வதை முதலில் கேட்போம்.

    நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடை யாது. இந்த மூட பக்திகளிலேயே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள், நட்சத்திரம், லக்னம் முதலிய பார்த்தல், சவரம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்றால் அதற்குக்கூட நம்மவர் மாசப் பொருத்தம், நாள் பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டி இருக்கிறது. சவரத்துக்குக்கூட இப்படி என்றால், இனி கல்யாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கியக் காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத் திற்கும் பொருள் விரயத்திற்கும் வரம்பே கிடையாது

    இறையருள் பெற்ற அருளாளர் என்று கருதப் பெற்ற சம்பந்தர், நாள், நட்சத்திரம் பார்க்காமல் செயல் புரிந்தார் என்பதற்காகச் சாதாரண மனிதராகிய நாமும் நாள், கோள், நட்சத்திரம் ஆகியன பார்க்காமல் செயல் படலாமா என்று சிலர் கேட்கக் கூடும்.

    இவ்வாறு கேட்பார்கள் என்று உணர்ந்துதான் சம்பந்தரே, அன்றே, அவர் வாழ்ந்த காலத்திலேயே சத்தியம் செய்து, ஆணையிட்டு இவ்வாறு கூறுகிறார்.

    மறை ஞான ஞான முனிவன்
    தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
    நலியாத வண்ணம் உரைசெய்
    ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
    அரசாள்வர் ஆணை நமதே என்றார்.

    அதாவது நாளும் கோளும் அடியாரை வந்து துன்புறுத்தாதவாறு கோளறு பதிகம் பாடப் பெற்றுள்ளது. இதை ஓதுவோர் நாள், கோள் ஆகியவற்றால் ஏற்படும் துன்பத்திலிருந்து நீங்கி வீடு பேற்றையும் அடைவார்கள் இது நமது ஆணை என்றார்.

    நாள், கோள் என்பவையெல்லாம் நலிந் தோர்க்கு இல்லை எனும் பழமொழியை யும் நினைவு கூர்ந்தால் நன்றாக இருக்கும். கால விரயம் ஏற்படுத்தும் சோதிட வழி வேண்டாம் என்பதே பொதுக் கருத்து.

    Read more: http://viduthalai.in/page-1/80487.html#ixzz32aktBPck

    தமிழ் ஓவியா said...


    குட்டிக் கதை கூறுவதென்ன?

    - சிவகாசிமணியம்

    நாங்களும் திராவிட பாரம் பரியம்தான் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு கனிவுடன் ஒன்றை நினைவுபடுத்துவது நமது கடமையாகிறது. கடவுள் மறுப்பு என்பது திராவிட இயக்கத்தின் அடிநாதம் மட்டுமல்ல, அடையாளமும் அதுதான்!

    சென்னையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கேக் வெட்டி முதல்வர் ஜெயலலிதா பேசியதை இதழ்கள் வெளியிட்டுள்ளன. அதே மேடையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர்களும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்களும் அமர்ந்திருந்து அம்மை யாரின் உரை வீச்சைக் கேட்டு ரசித்து கை தட்டியதுதான் காலத்தின் கொடுமை!

    அன்பின் உறைவிடமாக விளங் கியவர் ஏசுபிரான். சிலுவையில் அறைந் தது எதிரிகள் துன்புறுத்தியபோதும் பிதாவே அவர்களை மன்னியும் என்றும் கூறியவர். அமைதி, நம்பிக்கை, மகிழ்ச்சி, ஈகைத் தன்மை ஆகியவற்றை எல்லோ ருக்கும் தருகின்ற விழாவாக விளங்குகிறது. ஒரு லட்சியத்தை அடைய வேண்டு மானால் உழைப்பு, எதையும் தாங்கும் இதயம் லட்சியக் கனவு ஆகியவை தேவைப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக நமக்குத் தேவைப்படுவது அசைக்க முடியாத நம்பிக்கை! இறை நம்பிக்கை மேலானது. நன்மைகள் தரக் கூடியது. துன்பங்களைத் தாங்கும் வலிமையை அளிக்கக் கூடியது. தான் எனும் அகந்தையை அழிக்க வல்லது. அனைவரையும் சமமாகப் பாவிக்கும் தன்மையுடையது என்றார்.


    தமிழ் ஓவியா said...

    மாண்புமிகு முதலமைச்சரே சொல்லி விட்டார். அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்று பார்த்தால் என்றோ படித்த திருக்குறளில் ஒன்று நம் நினைவில் வந்து நிற்கிறது. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று எச் சரிக்கிறது. ஆறறிவில் ஓர் அறிவு இருக் கிறதே பகுத்தறிவு அதுவும் விழித்துக் கொண்டது. அடுத்து வருவது ஏன்? எதற்கு? எப்படி என்ற கேள்விகள் தான்.

    கிறிஸ்துவுக்குப் பெருமை சேர்க்கும் விழாவில் கலந்து கொண்டால் திருவரங்க தூங்கு மூஞ்சிக் கடவுள் கோபித்துக் கொள்ளவா போகிறார் என்ற தைரியம் போலும்! இருக்கிற கடவுள்கள் போதாதா? கிறிஸ்துவக் கடவுளிடம் ஏன் வர வேண்டும்? எல்லாக் கடவுள் களையும் விட பெரிதெனக் கருதுவது தேர்தல், ஓட்டு, பதவி இவற்றைத்தான் என்பது யாருக்குத்தான் தெரியாது? இயேசுவை அவ்வளவு சுலபத்தில் நம்பி விடுவாரா என்ன? தன்னை சிலுவையில் அறைந்த எதிரிகளை மன்னிக்கும்படி இன்னொரு கடவுளை அல்லவா அவர் வேண்டுகிறார். கடவுளுக்கும் ஒரு கடவுளா? அந்தோ பரிதாபம்!

    தமிழ் ஓவியா said...


    தான் எனும் அகந்தையை அழிக்க வல்லது இறை நம்பிக்கை என்கிறார் அம்மையார். இறை நம்பிக்கை உள்ள இவருக்கு அப்படி நேர்ந்திருக்கிறதா? முதல்வரின் பேச்சில் அடிக்கடி நான் எனது என்று வந்து போகிறதே, அதெல் லாம் அகந்தை அழிந்து விட்டதற்கான அடையாளம்தானா? குட்டிக் கதை ஒன்றையும் சொல்லியிருக்கிறார்.

    ஒரு பார்வையற்றவர். இன்னொருவர் கால்கள் ஊனமுற்றவர். மற்றொருவர் அழகில்லாதவர். மூவரும் தங்கள் குறைகள் நீங்க, பாதிரியார் ஒருவரின் யோசனைப்படி கரையில் நின்றபடி நூற்றுக்கணக்கானோர் தினமும் மூழ்கி எழுகின்றனர். அவர்களின் துன்பங்கள் அகன்று விட்டனவா? என்று சிந்தித்தார். ஆனாலும் மூவரும் நதியில் மூழ்கி எழுந்து கரை சேர்ந்தனர். பார்வையற்றவருக்குப் பார்வை கிடைத்தது. அழகற்றவர் அழ கானார். ஊனமுற்றவருக்கு மட்டும் கால் கள் மட்டும் புதிதாய் மாறின. ஊனமுற்ற வருக்கு இறை நம்பிக்கை இல்லாதது தான் காரணம் என்று முடிகிறது கதை. பகுத்தறிவின் பாய்ச்சல் இதோ: அந்த மூன்று பேரும் பிறக்கும் போதே குறைகளுடன் பிறந்தவர்தானே? அதற்கு யார் காரணம்? எல்லாம் அவன் செயல்தானே? சக்கர நாற்காலிக்கு புதிய கால்கள் முளைத்ததே ஏன்? நாற்காலிக்கு இறை நம்பிக்கை இருக்க முடியுமா? ஜோர்டான் நதி இன்றைக்கும் இருக்கிறது. அதில் மூழ்கி எழுகிற அத்தனை பேருக்கும் துன்ப நிவர்த்தி கிடைப்பது உண்மையானால் நதியின் இரு கரைகளிலும் இன்று உலகமே உரசிக் கொண்டு நிற்காதா? அது சாத்தியமில்லை என்கிறபோது அப்படி ஒரு சக்தி அந்த நதிக்கு இல்லை என்றாகிறது. அதில் மூழ்கி எழுந்தவர்கள் அனைவரும் இறை நம்பிக்கை அற்றவர்கள் என்றும் ஆகிறது. இங்கிருந்து எவரும் அந்தப் புண்ணிய நதி நோக்கி படை எடுத்ததாகத் தெரிய வில்லையே ஏன்? இங்குள்ள பாதிரிமார் களுக்கு இந்த ரகசியம் தெரியாதோ என்னவோ?

    தமிழ் ஓவியா said...

    இந்த இரண்டரை ஆண்டு கால அம் மையாரின் ஆட்சியில் 14 முறை அமைச் சர்கள் பதவி பறிப்பு நிகழ்ந்திருக்கிறது. பதவி இழந்தவர்களும், பதவி உயர்வுக்காக காத்துக் கிடப்பவர்களும் இறை நம்பிக்கை அற்றவர்களா? இதே இரண்டரை ஆண்டில் தமிழ்நாட்டில் 3231 கொலைகளும், 1170 கொள்ளைகளும், 691 வழிப்பறி மோசடிகளும், 652 செயின் பறிப்புகளும் நடைபெற்றுள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறதே, பாதிக்கப் பட்ட அனைவரும் நாத்திகர்களா? மேற்கண்ட கிறிஸ்துமஸ் விழாவை விலா வாரியாக வெளியிட்ட பக்கத்திலேயே கீழ்க்கண்ட செய்தியையும் வெளியிட் டிருக்கிறது தினமணி.

    திரைப்பட நடிகர் விஜய் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோவிலுக்கு சனிக் கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்தார். நளன் குளத்தில் நீராடிய அவர் தர்பாரண் யேசுவரன், பிரணாம்பிகை சன்னதிகளில் வழிபாடு செய்தார். தொடர்ந்து சனீஸ்வரர் சன்னதி அருகே நடைபெற்ற நவகிரக ஹோமத்தில் கலந்துகொண்ட பின்னர் சனீஸ்வரனை வழிபட்டார். 4 மணியள வில் கோவிலினுள்ளிருந்து வெளியே வந் தார். பிறர் அடையாளம் கண்டு கொள் ளாதபடி விஜய் தலையில்குல்லா அணிந் திருந்தார். அவரது வருகை, கோவில் நிர்வாக அதிகாரி, ஹோமம் நடத்திய சிவாச்சாரியார் தவிர வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

    திருநள்ளாறு கோவில் சனிக்கிழமை தவிர்த்த மற்ற நாட்களில் காலை 6 மணிக்கும் அதிகாலை 4 மணிக்கும் (சனிக்கிழமை மட்டும்) திறக்கப்படுவது வழக்கம் விஜய் வருகையையொட்டி அதிகாலை 3 மணிக்கு முன்னதாகவே கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. நடை திறப்பு, நடை சாத்தலுக்கென குறிப்பிட்ட நேரமும், விதிமுறைகளும் உள்ள நிலை யில் ஆகம விதிகளுக்கு முரணாக கோயில் நிர்வாகம் செயல்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விஜய்க்காக சனிக்கிழமை முன்னதாகவே நடை திறக்கப்பட்டது உண்மைதான். க்ஷி.மி.றி. கள் கூட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் தரிசனம் செய்ய விரும்பினால் அதற்கான கட் டணத்தை செலுத்தி விட வேண்டும். அதன் அடிப்படையிலேயே நடைதிறப்பு முன்னதாகவே செய்யப்பட்டது என்கிறார் கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராச்சாமி!

    பக்தர்களிலும் க்ஷி.மி.றி., க்ஷி.க்ஷி.மி.றி.க்கள் உண்டா? ஊழல் ஊற்றெடுக்க இது ஒன்று போதுமே. காசு இருந்தால் ஆகம விதிகளா வது புடலங்காயாவது! கடைக்கோடி மக்கள் மட்டுமே கூட்ட நெரிசலில் சிக்கிச் சிதைய வேண்டுமா? இறைவனின் சன் னதியில் எல்லோரும் சமம் என்பதெல் லாம் ஏமாற்றுவித்தைதானா? கோவில் நிர்வாக அதிகாரியும், ஹோமம் நடத்திய சிவாச்சாரியாரும் பேசிய பேரம் என்ன? பேரம் படிய நடிகர் விஜய் சுரண்டல் தொழிற்சாலை என்பது உலகறிந்த ரகசியம் ஆயிற்றே.

    பக்தியும் மூடநம்பிக்கைகளும் கை கோத்துக் கொண்டால் அறிவுக்கு வேலை இருக்காது. என்ன பேசுகிறோம். எங்கே போகிறோம் என்பதும் தெரியாது!

    Read more: http://viduthalai.in/page-1/80481.html#ixzz32alSeImF

    தமிழ் ஓவியா said...

    கிரீமியா: மூன்றாவது உலகப்போர் மூளுமா?


    - க.திருநாவுக்கரசு

    இரஷியாவுக்கே கிரீமியா என்ற முழக்கத்தை மாஸ்கோவின் செஞ்சதுக் கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அந்நாட்டின் தேசியக் கொடிகளை அசைத்து முழக்கமிட்டனர். அன்று தான் 2014 மார்ச் 3-ஆம் தேதி கிரீமியா நாடா ளுமன்றத்தில் இரஷியாவுடன் இணைவ தற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து கிரீமியாவில் மார்ச் 16 ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு அமெ ரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறது. ஐ.நா.கண்டனம் செய்து இருக்கிறது. அதே நேரத்த்தில் இவ்விவகாரத்தில் அய்ரோப் பிய கவுன்சில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது.

    கிரீமியா கருங்கடல் பகுதியில் உள்ள தீபகற்ப நாடு, உக்ரைனின் தன்னாட்சிப் பகுதிக்குட்பட்டது. உக்ரைனில் ரஷிய மொழி பேசுவோர் சுமார் 60% வாழ்ந்து வருகின்றனர். கிரீமியாவிலும் இரஷி யர்கள் கணிசமான அளவுக்கு இருக்கின் றனர். உக்ரைன் ஆட்சியாளர்கள் அவர் களின் ஆட்சிப் பகுதியை அய்ரோப்பிய ஒன்றியத்தில் - (யூனியனில்) இணைத்து விட முடிவு எடுத்து இருந்தனர். ஆனால் இரஷியாவுக்கு அதில் விருப்பமில்லை.

    1) 1919 ஆம் ஆண்டு மாவீரர் லெனின் ரஷியாவுடன் பல மாநிலங்களை மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒருங்கிணைத்தார். அப்படி ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலங் கள் வரலாற்று ரீதியாக உக்ரைனுக்கு உரியனவல்ல. அதாவது அவை இன்றைய தெற்கு, கிழக்குப் பகுதி மாநிலங்கள். 1954 ஆம் ஆண்டு குருஷேவ் உக்ரைனுக்குக் கிரீமியாவைத் தானமாக வழங்கினார். இக்கருத்துகள் எல்லாம் நோபல்பரிசு பெற்ற அலெக்சாண்டர் சோலின்ஸ்டைன் கூறியனவாகும்.

    2) பொருளாதாரப் பலன்களைப் பெறுவதற்காக உக்ரைனிய புதிய அரசு இரஷிய மொழி ஆட்சி மொழியாய் இருப்பதை ரத்து செய்தது. பிறகு அதை உறுதி செய்தனர். இது அவர்கள் தரப்பில் நிகழ்ந்த தவறு ஆகும்.

    3) இரஷிய அரசர்கள் துருக்கியோடு மூன்று மாபெரும் போர்களை கிரீமியா விற்காக நடத்தி இருக்கிறார்கள். மகா காதரைன் காலத்தில்தான் கிரீமியா முழு வதும் கிரீமியாவின் ஆளுகைக்கு வந்தது. மூன்று போர்களில் இலட்சக்கணக்கான ரஷியர்கள் கொல்லப்பட்டார்கள், ஸ்வேஸ்டாபோல் கல்லறையில் 150 இரஷியர்க்ள புதைக்கப்பட்டார்கள்.

    வரலாற்றில் கிரீமியாவின் மீது இரஷி யாவிற்கு இவ்வளவு பாத்தியதைகள் இருக்கின்றன. இப்போது ஆளுகிறவர்கள் கிரீமியாவிலும் உக்ரைனிலும் இருக்கிற இலட்சகணக்கான இரஷியர்களைப் புறக்கணிக்கிறார்கள். சோவியத் யூனியன் உடைந்ததற்குப் பிறகு கிரீமியா மக்களின் தேவைகளைக் கவனிப்பதில்லை. இன்னும் சொல்வதானால் 1954க்கு முன்பு ஸ்வேஸ்டா போல் துறைமுகம் இரஷியா விற்கான கருங்கடல் பகுதி கடற்படைத் தளமாக இருந்தது. இப்போது மீண்டும் அந்தக் கருங்கடல் பகுதி கடற்படைத் தளத்தை இரஷியா புதுப்பித்துக் கொள்ள லாம்; பலப்படுத்தலாம்.

    மார்ச் 16 ஆம் தேதி வாக்கெடுப்பு கிரீமியாவில் நடத்துவதென்று முடிவு எடுத்ததற்குப்பிறகு மேற்கத்திய நாடுகள் - இரஷியா இடையிலான பதற்றம் அதி கரித்தது. இரஷிய இராணுவம் கிரீமியா வுக்குள் புகத்தொடங்கினர். உக்ரைனின் இடைக்காலப் பிரதமர் ஆர்செனை யாட்சென்க் தலைநகர் தீவில் தனது ஆதரவாளர்களிடையே பேசுகிறபோது உக்ரைன் நிலப்பரப்பில் ஒரு அங்கு லத்தைக் கூட இரஷியாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்தார். இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்காவின் வெளியு றவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியை மாஸ்கோ வரும்படி ரஷியா அழைத்தது. இப்படிச் செய்திகள் வெளியாகி கொண் டிருக்கும்போதே மார்ச் 11 ஆம் தேதி கிரீமியாவின் நாடாளுமன்றத்தில் சுதந் திரத் தீர்மானம் நிறைவேறியது. மொத்த முள்ள 81 பேரில் 78 பேர் இரஷியாவுடன் கிரீமியாவை இணைப்பதற்கான தீர்மானத் திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இத்தீர் மானத்தை வரவேற்று இரஷிய ஆதரவு கட்சிகள் கிரீமியாவை குடி அரசு நாடு என்றும் கிரீமியா மக்களின் உணர்வு களுக்கு மதிப்பு அளிப்பதாகவும் தெரி வித்துக் கொண்டன.

    தமிழ் ஓவியா said...


    அய்ரோப்பிய நாடுகள் உக்ரைன் விவ காரத்திற்கு ஒரு திட்டத்தை முன் வைக்க விரும்புகிறது என்றும் அத்திட்டத்தை இரஷியா ஏற்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தன. இல்லையென்றால் இரஷியாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க நேரும் என்று எச்சரிக்கை விடுத்தன். மார்ச் 12 ஆம் தேதி நிலைமை இன்னும் ஒரு முன் நகர்வை ஏற்படுத் தியது. உக்ரைனை ரஷியா துண்டாடுவதை ஜி-7 நாடுகள் எச்சரித்தன. கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கி லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். கிரீமியாவை மாற்றுகிற எல்லா முயற்சிகளையும் உடனடியாக கைவிடுமாறு கேட்டுக் கொண்டன. அப்படி இல்லையெனில் நடவடிக் கையை எதிர்கொள்ள நேரும் என்று அந்தக் கூட்டறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    உக்ரைன் ஏற்கனவே உள்நாட்டுப் பிரச்சினையால் பாதிப்புக்கு ஆளாகி இருந்தது. இரஷியா ஆதரவாளராக இருந்த விக்டர் யாணு கோவிச் இரஷியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கே இப்போது இருப்பவர் இடைக்கால பிரதமர் - ஆர்சென்ன யாட் சென்யுக்கை அமெரிக்கா சென்று ஒபாமாவைச் சந்தித்து பேசினார். ஒபாமா சென்யுக்கை அழைத்துப் பேசி னார் என்று தான்சொல்ல வேண்டும். இதற்கிடையே நேச நாடுகளின் கூட்டுப் படை (நேட்டோ) சேர்ந்த இரு விமானங் கள் உக்ரைனைக் கண்காணிக்க தொடங் கின. மார்ச் 14 ஆம் தேதி இரஷிய - அமெ ரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இலண்டனில் நடத்திய கிரீமியாவுக்கான சமாதான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

    அய்ரோப்பிய நாடுகளுக்கு உக் ரைனை அய்ரோப்பிய யூனியனில் சேர்த் துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். இரஷியாவுக்கு இதில் விருப்பம் இல்லை. ஆகவே இரஷிய ஆதரவாளராகத் திகழ்ந்த விக்டர் யானு கோவிச் அய்ரோப்பிய யூனியனில் இணைப்பதற்கான ஒப்பந்தத் தில் கையெழுத்திட மறுத்தார். இதனால் பதவி விலகக்கோரி மூன்று மாதங்களாக எதிர்ப்பாளர்கள் அங்கே போராட்டங்கள் நடத்தினர். போலீசார் நடத்திய துப்ப க்கிச் சூட்டில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந் தனர். இறுதியில் விக்டர் யானு கோவிச்கி ரஷியா தப்பிச் செல்லும்படி ஆயிற்று. இதனால் இரஷியா கடுங்கோபம் அடைந்தது.

    தமிழ் ஓவியா said...

    உக்ரைனில் நடந்த குழப்பத்தால் அங்கே அதிபர் தேர்தல் வேறு நடைபெற இருக்கிறது. இப்போது அங்கே இடைக் கால அரசு தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இரஷியா கிரீமியாவை இணைக்கப் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று ஒபாமா பதினோர் முறை தொலைபேசியில் பேசியதும் எந்தப் பலனையும் அளித்துவிடவில்லை.

    இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையே மார்ச் 16 ஆம் தேதி கிரீமியாவை இரஷியா வுடன் இணைப்பது குறித்த பொது வாக் கெடுப்பு நடத்தப்பட்டது. பொது வாக்கெடுப்பு முடிவுகளை நாங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை என்று புதிய அரசும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்து இருக்கின்றன. இரஷிய வம்சாவளியினர் பெரும்பாலும் வசிக்கும் கிரீமியாவில் 15 இலட்சம் பேர் பங்கேற்று இருக்கின் றனர். 97% வாக்களித்து இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் தலைநகரான இம்ஃ மெரோபோல், கடற்படைத் தளமான ஸ்வஸ்டோபோல், பக்சிசாரே ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். ஒரு பக்கம் வாக்கெடுப்பு நடந்து கொண்டி ருந்த போதே ஸ்வஸ்டோபோல் வீதி களில் இரஷியக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன.

    இந்த வாக்கெடுப்பு நடைபெறு வதற்கு முன்பாகவே ஐநா பாதுகாப்பு கவுன்சில் மார்ச் 15 ஆம் தேதியன்று இரஷியாவுடன் கிரீமியாவை இணைப் பது குறித்த வாக்கெடுப்பு செல்லாது என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானத்தை இரஷியா தனது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு நிரா கரித்துவிட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. சீனா இதில் பங்கேற்கவில்லை.

    கிரீமியாவின் வாக்கெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிலிருந்து சுதந்திரம் பெற்று விட்டோம் என்று அந்நாடு பிரகடனம் செய்துவிட்டது. ஆனால் உக்ரைனில் வந்துள்ள புதிய ஆட்சியினரோ, கிரீமியா வில் நடந்துள்ள வாக்கெடுப்பு துப்பாக்கி முனையில் ரஷியா அரங்கேற்றிய நாட கம் என்று கூறியிருக்கிறது. விளாதிமிர் புதினை தொலைபேசியில் அழைத்த ஒபாமா, இந்தப் பொதுவாக்கெடுப்பை சர்வதேச சமுதாயம் ஒரு போதும் ஒப்புக்கொள்ளாது. இது உக்ரைனின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய செயல்மட்டுமல்ல இரஷிய இராணு வத்தால் ஏற்பட்ட நிகழ்வாகும் என்று கருத்துத்தெரிவித்தார். கிரீமியாவின் நாடாளுமன்றமோ ஐநாவுக்கும் உலக நாடுகளுக்கும் கிரீமியாவை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மார்ச் 17 ஆம் தேதி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரஷியா மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.

    அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய மும் பொருளாதாரத்தடை விதித்த அன்றே இரஷிய நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் விளாடிமிர் புதின் பேசினார். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் கிரீமியா நிபுணர்களால் சீரமைக்கப்பட்டுவிடும். கிரீமியாவில் வசிக்கும் ஓய்வூதியர்களுக்கு பணம் இரஷியாவில் வழங்கப்படுவதை விட இரண்டு, மூன்று மடங்கு உயர்த்தி வழங்கப்படும். கருங்கடுல் பகுதியில் இரஷியாவிற்கான கடற்படை தளம் கட்டமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதோடு அவர் மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டு களை மறுத்தார். இரஷியாவுடன் கிரீமியா முறையாக இணைத்துக் கொள்ளப்பட்ட தற்கான ஒப்பந்தத்தில் மார்ச் 18 ஆம் தேதி விளாடிமிர் புதின் கையெழுத்திட்டார். இரஷிய நாடாளுமன்றமும் இணைப்பை ஏற்றுக்கொண்டது இந்நிலையில் ஜப் பானும் இரஷியாவின் நடவடிக்கை களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

    தமிழ் ஓவியா said...

    ஜி 8 நாடுகளில் இரஷியாவும் ஓர் உறுப்பு நாடாகும். இரஷியாவை நீக்கி விட்டதாக பிரான்சு அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஜூன் 6 ஆம் தேதி பிரான்சில் நடைபெறவுள்ள படை வீரர்கள் நினைவு தின நிகழ்ச்சிக்கு புதி னுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இரஷியாவின் மீது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை இந்தியா ஏற்கவில்லை. அதோடு உக்ரைன் விவ காரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், இரஷி யாவுக்கு அப்பகுதியில் சட்டரீதியிலான உரிமைகள் உள்ளன. எனவே இப்பிரச் சினைக்குப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும் எனத் தெரிவித்து இருந்தார். ஆனால் உக்ரைனைத் தன் பிடியில் வைத்திருக்க விரும்பும் அய்ரோப்பிய நாடுகள் மார்ச் 19 ஆம் தேதி ஈரோக்களில் உதவிகளை வழங்க உறுதிகளை அள்ளி வழங்கியுள்ளன.

    இரஷியாவின் நாடாளுமன்றம் கிரீமி யாவின் இணைப்பிற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட அதே நேரத்தில் உக்ரைன் அந்தப் பகுதியைக் கைப்பற்றிய ஆட்சிப் பகுதி எனப்பிரகடனப்படுத்தி இருக் கிறது. கைப்பற்றியவர்களிடமிருந்து கிரீமி யாவை மீட்கும் உக்ரைனிய மக்களின் சுதந்திரப் போராட்டம் எந்தச் சூழ் நிலையிலேயும் நிற்காது என்று அப்பி ரகடனம் தெரிவிக்கிறது. ஸ்வெட்டா போலில் கடற்படை தளம் அமைப்பதில் ரஷியா பேரார்வம் காட்டுகிறது. கிரீமியா பிரச்சினை குறித்து பான்-கீ-முன் ஐ.நா. பொதுச்செயலாளர் புதினோடு பேசினார். எந்தப்பலனும் ஏற்படவில்லை இரஷியா மிகக்கடுமையான உறுதியினை இப் பிரச்சினையில் கடைப்பிடிக்கிறது.

    அமெரிக்கா இராணுவ தலையீடு இல்லாமல் பிரச்சினையை முடிக்க எண்ணுகிறது. இரஷியாவுக்குப் பொரு ளாதாரத் தடையை ஏற்படுத்துவதன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச் சினையை சுமூகமாக முடிக்க முடியும் என்றாலூம் கிரீமியாவை இரஷியா விடமிருந்து மீட்க முடியாது என்று உறுதியாகத் தெரிகிறது. அடுத்து கிழக்கு உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை இல்லை என்று ரஷியா அமெரிக்காவிடம் உறுதி அளித்து இருக்கிறது. இதுவன்றி இரஷியா தனது நடவடிக்கைகளை மேலும் நீட்டித்துக் கொள்ளாமல் இருப்ப தற்கான அடையாளமாக ஜப்பான் ரூ. 6000/- கோடி உக்ரைனுக்கு நிதியுதவி செய்வதாக திட்டமிட்டு அறிவித்து இருக்கிறது.

    மார்ச் 23 ஆம் தேதி நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் அணுசக்தி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அம்மா நாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ், கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் உக்ரைன் குறித்து விவாதிக்கப்பட்டது.

    தமிழ் ஓவியா said...

    பிறகு ஜி 7 நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் உக்ரைன் விவகாரத் தில் இரஷியா தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாத வரையில் அந்த நாட்டின் கோச்சி நகரில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி-8 மாநாட்டில் நாங்கள் பங்கு கொள்ளமாட்டோம். அந்த மாநாட்டில் அர்த்தமுள்ள வகையில் எத்தகைய ஆலோசனையும் நடை பெறுவதற்கான சூழ்நிலை இல்லை. எனவே அதற்கு பதிலாக அதே ஜூன் மாதத்தில் ஜி-7 நாடுகளின் மாநாட்டைக் கூட்டி விவாதிப்போம்.
    மேலும் இரஷியாவில் கூட்டப் பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எங்கள் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மிரட்டலுக்கு எல்லாம் இரஷியா அஞ்சப்போவதில்லை என் பதைத் தீர்மானமாக தெரிவித்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லாவற்றையும் பின்னின்று இயக்கி வருகிற அமெரிக்கா - இரஷியாவின் கருத்தை அச்சுறுத்தல் அல்ல என்று கூறுகிறது. அவர்களை விட நாங்கள் தான் பலம் வாய்ந்தவர்கள் என கூறுகிறது.

    இரஷியா பலவீனத்தின் காரணமாகத்தான் அச்சுறுத்துகிறது என்று கூறுகிறது. இன்றும் சில நாடுகளுக்கு இரஷியா பழைய சோவியத் கட்டமைப்பைக் கொண்டு வர முயற்சிக்கிறது என்கிற பயமும் இருக்கிறது. மார்ச் 26 ஆம் தேதி உக்ரைனின் இராணுவத்தை இரஷியா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. கிரீமியா தீபகற்பம் முழுவதும் இரஷியக் கொடிகள் அனைத்து இடங் களிலும் பறக்கத் தொடங்கிவிட்டன. அதாவது தொடர்ந்து கருங்கடல் பகுதியில் இரஷியாவின் நடவடிக்கைகள் நாளும் ஒரு முன் நகர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

    ஏப்ரல் மாதத்தில் கிடைத்த செய்தி களில் அமெரிக்காவும் அய்ரோப்பிய நாடுகளும் எப்படியாவது இரஷியாவை ஒரு வழிக்கு கொண்டு வந்துவிட வேண் டும் என்பதற்காக படாதபாடுகளாய் படுகின்றன. இதற்கிடையே உக்ரைனில் இரஷியா ஆதரவாளர்கள் மீது நடத்திய இராணுவத்தாக்குதலில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 13 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். இதனால் இரஷிய மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் எந்த நேரத்திலும் உள்நாட்டுப்போர் மூளும் நிலை உருவாகி இருக்கிறது. ஏப்ரல் 17 ஆம் தேதியன்று ஜெனிவாவில் கூடி இரஷிய மொழி பேசும் பகுதிக்கு கூடுதல் அதி காரம் வழங்கலாமா? என்றும் யோசிக்கப் பட்டது. இக்கூட்டத்தில் இரஷிய தூத ரும்கலந்து கொண்டார்.

    தமிழ் ஓவியா said...

    நம்மைப் பொறுத்தவரை இரஷியா வின் நடவடிக்கைகளுக்கு இரண்டு காரணங்களைத்தான் சொல்ல முடியும். 1) உக்ரைன் அய்ரோப்பிய யூனியனோடு சேருவதை இரஷியா விரும்பவில்லை. அமெரிக்காவோ அது அந்தந்த நாட்டின் விருப்பம் என்று கூறுகிறது. அதாவது உக்ரைன் அய்ரோப்பிய யூனியனோடு சேருவதை அமெரிக்கா விரும்புகிறது. இரஷிய மொழி பேசுகிறவர்கள் உக் ரைனில் இருக்கிறபோது இப்படிப்பட்ட அரசியல் முடிவை இரஷியா புறக் கணிக்கச் செய்வதால் பிரச்சினை எழு கிறது.

    2) கிரீமியா மீது இரஷியாவுக்கு நீண்டகால உறவுகளும் ஏற்கனவே இரஷி யாவின் பகுதியாக இருந்து தானம் கொடுக் கப்பட்ட பகுதியாகவும் அது விளங்கி வருகிறது. இரஷியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இப்பகுதியை இரஷியா வோடு இணைப்பதால் கருங்கடல் பகுதியில் ஒரு வலுவான கடற்பபடைத் தளத்தை உருவாக்கலாம். இந்த இரண்டு காரணங்களுக்குக்காகத்தான் உக்ரைனின் மீது இரஷியாவின் நடவடிக்கைகள் அமைந்து இருக்கின்றன.

    2014 ஏப்ரல் கடைசி வாரத்தில் வருகிற செய்திகளைப் பார்த்தால் நிலைமை மிக மோசமாக மாறும் என்று தெரிகிறது. நேட்டோவின் கண்காணிப்பு அய்ரோப் பிய நாடுகளின் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு, அமெரிக்காவின் தாதா மனப்பான்மை, அமெரிக்கா இணைந்த ஜி-7 நாடுகளின் தீர்மானங்கள், மிரட் டல்கள் இரஷியாவின் மீது பொருளாதாரத் தடைகள், உக்ரைனுக்கு ஜப்பானின் தாராளமாக செய்யப் போகும் உதவிகளின் அறிவிப்புகள், அய்ரோப்பிய நாடுகளின் உதவிகளின் அறிவிப்புகள் இரஷியாவைத் தனிமைப்படுத்தி விடுகின்றன. இவை யெல்லாம் மூன்றாம் உலகப்போர் மூளும் எனச் சொல்லாமல் சொல் கின்றன. செய்திகளும் அவ்வாறு வந்து கொண்டு இருக்கின்றன.

    நமக்கு என்ன வியப்பாக இருக்கிறது என்றால் எந்த ஒரு நாட்டிற்கும் நாடு பிடிக்கும் நோக்கம் இனி இருக்காது என்பதற்கு மாறாக இரஷியா நடந்து கொள்வது ஏன்? தானம் கொடுத்த ஒரு நாட்டைத் திரும்ப பெற இரஷியா நடவடிக்கைகளில் இறங்குவது எதற்காக? இரஷியமொழி பேசுவோர் அதிகம் இருக்கிறார்கள் என்பதால் இந்த நட வடிக்கை உலகம் தழுவியதாக ஆகு மானால் வரவேற்கலாமா? சுமார் 300 ஆண்டுகளாக இரஷியர்கள் அங்கு வசித்து வரக்கூடும். ஆனால் பூர்வக்குடிகளாக இருக்கும் பிறமொழியாளர்கள் ஆதிக்க சக்திகளால் நசுக்கப்படும்போது - போரால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படும்போது - அந்தப் பூர்வக் குடிகளைக் காப்பாற்ற இராணுவ நட வடிக்கை எடுத்து ஆதிக்க சக்திகளிட மிருந்து அவர்களை மீட்டு ஒரு சுட்டை உருவாக்கலாம் அல்லவா? அங்கும் பொதுவாக்கெடுப்பை நடத்தலாம் தானே!

    தமிழ் ஓவியா said...

    இரஷியாவை பிறநாடுகள் மிரட்டும் மூன்றாம் உலகப்போர் சாத்தியமானால் நாம் கூறும் கச்சத்தீவு மீட்புக்கும் ஈழ தனிநாட்டு பொதுவாக்கெடுப்புக்கும் அப்போர் சாத்தியமானது ஆகாதா? நிபுணர்கள் குடி தண்ணீரால்தான் மூன் றாம் உலகப்போர் வரக்கூடும் என்று கூறிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இரஷியாவின் கிரீமியா பிரச்சினைக்காக போர் மூளுமா? அப்படி ஒரு மிரட்டலை அமெரிக்கா ஆதரவு நாடுகள் விட்டு பார்க் கின்றனவா? என்று நமக்கு தெரியவில்லை.

    Read more: http://viduthalai.in/page-1/80489.html#ixzz32aljQrTr

    தமிழ் ஓவியா said...


    மூட்டுவலிக்குவைத்தியம்


    மூட்டு வலியினால் அவதிப்படுபவர்கள் மொசைக் தரையிலோ, வெறும் தரையிலோ, பளிங்கு கல் தரையிலோ படுத்துத் தூங்கக் கூடாது.

    நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மூட்டுவலி அதிகமாகும். ஆகவே நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கு சிறந்த மருந்து ராகிக் கஞ்சி குடிப்பதுதான்!
    மூட்டுவலி உள்ளவர்கள் காரத்தைக் குறைக்க வேண்டும்; குறிப்பாக பச்சைமிளகாய் கூடாது. சாதாரண காப்பிக்கு பதில் சுக்குக் காப்பி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.

    குளிர்ச்சி அதிகம் சேர்ந்தால் மூட்டுவலி அதிகரிக்கும். இதனால் மூட்டுவலி உள்ளவர்கள் ஈரத் தரையில் வெறும் காலால் நடக்கவும் கூடாது.

    உளுந்து எண்ணெயை மூட்டுவலி உள்ள இடத்தில் சூடேறும்படி தேய்த்துவிட்டால் மூட்டுவலி குறையும்.

    வாயுத்தொல்லை உள்ளவர்கள் அடிக்கடி முருங்கைக்காய், முருங்கைக் கீரையை உணவில் சேர்க்கக் கூடாது. * சித்தரத்தையை இடித்து தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்து காலை, மாலை சாப்பாட்டுக்குப் பின்பு தொடர்ந்து 48 நாள்கள் குடித்து வந்தால் மூட்டு வலிக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

    டாக்டர் எஸ்.என்.முரளீதர் எழுதிய மூட்டுவலிக்கு வைத்தியம்' என்ற நூலிலிருந்து.

    Read more: http://viduthalai.in/page-1/80490.html#ixzz32amKuai3

    தமிழ் ஓவியா said...


    இவர்தான் ராஜ்நாத்சிங் ராஜ்நாத் சிங்


    உத்திரப்பிரதேசம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள பஹன்புரா என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் ராம்பதன் சிங். தயார் குஜராத்தி தேவி. விவ சாயக்குடும்பத்தில் பிறந்த இவர் உள்ளூரிலேயே பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் வென்றார். தன்னுடைய தந்தையாரின் சகோதரர் தீவிர ஆர்.எஸ்.எஸ் தொண்டர் அவர் மூலம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    மிர்ஷாபூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஆதரவு கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். 1974-ஆம் ஆண்டு மிர்சாப்பூர் கிளை பாரதீய ஜனசங்கத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பில் அமர்ந்தார். இங்கிருந்து ராஜ்நாத் சிங்கின் அரசியல் பயணம் தொடங்கியது. 1991-ஆம் ஆண்டும் உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றிய போது கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார்.

    அப்போது அவர் உத்திரப்பிரதேசத்தின் பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்திய வரலாறு தொடர்பான பாடங்களில் இந்துத்துவ அமைப்புகளின் ஆசைகளுக்கு இணங்க மாற்றம் கொண்டு வந்தார். வேதக்கணிதம் என்ற இல்லாத ஒரு கணித பாடத்தை பள்ளிகளில் கணிதப்பாடமாக சேர்க்கப்பட்டது.

    2004-களுக்கு பிறகு பாஜக கட்சி தொடர் சரிவைக்கண்டு வந்தது, ஆட்சியை இழந்தது, பிரமோத் மகாஜன் கொலை, தேர்தல் தோல்வி, வாஜ்பாயின் அரசியல் சந்நியாசம் லால்கிருஷ்ண அத்வானியின் ராஜினாமா மிரட்டல் என பல பக்கங்களில் இருந்தும் கட்சிக்கு நெருக்குதல் வர பாஜக கட்சியின் தேசியத்தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். கட்சியை வளர்க்கும் கட்டாயத்தில் இருந்த ராஜ்நாத் சிங் கட்சி இதுவரை மேம்போக்காக கூறிவந்த இராமர் கோவில் பிரச்சினையில் தீவிரமாக இறங்கினார். ஆங்கில வழிக்கல்வியை எதிர்த்த பழமைவாத தலைவர்களுள் இவரும் ஒருவர். இந்திய பாடத்திட்டத்தில் பழமைவாத கருத்துக்கள் தேவை என்று கூறி பாஜக ஆளும் மாநிலங்களின் இந்தியவரலாற்றை மாற்றி எழுதவும் இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

    Read more: http://viduthalai.in/page2/80902.html#ixzz32gSPgHhI

    தமிழ் ஓவியா said...


    மே மாத நினைவுகள்!



    ஓடுமாற்றின்
    மணல்மேலே கல்லையிட்டு - அது
    கணத்தோடு இறங்க
    புணல் மேலே பொறியியலின் பாடம் சொன்ன
    நம்
    பாட்டனும் - சர் ஆர்தர்
    காட்டனும் காட்டிய வழியில்
    காவிரியின் தீரம்
    சுமக்கிறது ஈரம்!
    உண்ணும் உணவெல்லாம்
    எண்ணும் உணர்வெல்லாம்
    தந்த மகன் வாழ்க!

    - சர் ஆர்தர் காட்டனு பிறந்த நாள் - 15/05

    சிலர் தமிழின்
    உண்மையையும்
    தொன்மையையும்
    தோண்டிப் புதைத்தபோது - மதத்தையும்
    தாண்டி, பதைத்து போய் ஒருவன்
    வெளிக்கொணர்ந்தான் - நாம்
    களிக்கின்ற கன்னித்தமிழ் அவனின் கொடை
    கால்டுவெல் என்னும் கனவான் வாழ்க!

    - ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாள் - 07/05


    உழைத்து
    வேர்வையில் நனைந்த மக்களின்
    பார்வையில் ஒரு பகலவன்!
    கீழ்த்தட்டு மக்களுக்கு ஏங்கியவன் - அதனாலந்த
    மேல்தட்டு வசவுகளைத் தாங்கியவன்!
    மார்க்ஸ் எனும் மேதை வாழ்க!

    -காரல்மார்க்ஸ் பிறந்த நாள் 05/05

    தன்
    விழுதுகளுக்காக - இன்னும்
    அழுது சுமக்கும் ஆலமரங்கள்!
    நமக்காக
    தன்பால் அன்பிலாவிடினும்
    தன்பால் குடித்தவன்
    உயர நினைக்கும்
    உயிராம் அன்னையர் வாழ்க!

    - அன்னையர் தினம் 11/05

    எத்தனை காலம் பொறுத்தும் - அந்த எத்தனை எதுவும் செய்ய முடியாமல்
    நாமிருந்தோம்
    பென்னியெனும்
    கண்ணிய வானின் கனவாக - நம்
    பாசன உயர்வுக்காக - அரசியல்
    சாசன அமர்வு
    அளித்தது தீர்ப்பு அல்ல
    தமிழர்க்கான உயிர்ப்பு!
    அந்த
    உயிர்ப்பை மீட்டுத் தந்தோரை -நம்
    உயிர் பை நிறைந்து வாழ்த்துவோம்! வாழ்க!

    பொறியாளர், தி.த. சண்முகவடிவேல், தஞ்சாவூர்

    Read more: http://viduthalai.in/page4/80906.html#ixzz32gTAbfGN

    தமிழ் ஓவியா said...


    பாகிஸ்தானின் தீப்பொறி

    பஞ்சாயத்து கூடியது. அவள் வீட்டுக்கு எதிரே 400 பேர் கூடி குசுகுசுவென்று பேசிக் கொண்டேயிருந்தார்கள். அவள் வீட்டுக்கும் விஷயம் அரசல்புரசலாக தெரிந்துதான் இருந்தது. காரணம், சிம்பிள். அவளுடைய சகோதரன் எதிர் கும்பலை சேர்ந்த ஒரு பெண்ணோடு ஓடி விட்டான். அதற்கு என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கதான் பஞ்சாயத்து கூடியிருந்தது.

    அவளும் அப்பாவும் சமாதானம் பேச கிளம்பினார்கள். மாலை ஆரம்பித் திருந்தது. கூட்டமும் குறைந்திருந்தது. அப்பா பேச ஆரம்பித்தார். அவர் பேச்சினை சட்டை செய்யலாமல் அந்த நாலு பேரும் அவளை அவர் கண் முன்னாலேயே தூக்கி, குடிசைக்குள் நுழைந்தார்கள்.

    அப்பாவின் கதறலும் அவளின் கூக்குரலும் ஊர் முழக்க எதிரொலித்தது. கந்தலான துணி போல வெளியே வந்தாள். அவருடைய சல்வார் கமீஸ் கிழிந்திருந்தது. ஊரின் மானத்தை காத்து விட்டோம் என்று அந்த நான்கு ஓநாய்களும் காவலுக்கு நின்றிருந்த மற்றவர்களும் எக்காளமிட் டனர். வெளியே வந்த அவளை அந்த கூட்டம் நிர்வாணப்படுத்தியது. அப் பாவின் முன் நிர்வாணமாகவும், ரத்தம் கசியவும் நின்றாள். தன்னிடமிருந்த ஒரு துண்டினை அவள் உடம்பில் போர்த்தி கண்ணீர் விடுவதை தவிர எதையும் செய்ய இயலாத அவளுடைய அப்பா கைத் தாங்கலாக அழைத்துச் சென்றார். உடலும் உள்ளமும் அனலாய் கொதித்தது. வீட்டின் கதவை மூடுமுன் அவள் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வை பாகிஸ்தானை உலுக்கியது. அவள் முக்தாரன்பீவி அல்லது முக்தாரன் மாய், பாகிஸ்தானில் ஒரு சின்ன கிராமமான மீராவலாவில் வசித்தவர்.

    முக்தாரன் சும்மா விடவில்லை. ஊடகங்களுக்கு போனார். பெண்ணு ரிமைகளை பேச ஆரம்பித்தார். பாகிஸ் தான் ஜெனரல் முஷ்ரப்பின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. அமெரிக்க, பிரிட்டிஷ் செய்தியாளர்களுக்கு மூக்கு வேர்த்து, மோப்பம் பிடிக்க ஆரம்பித்தார்கள். வெளிநாட்டு ஊடகங்கள் பரபரப் பானது. வெளிநாடுகளிலிருந்து பாகிஸ்தானில் பெண்களின் நிலைப்பற்றி பேச அழைப்பு வந்தது.

    முஷ்ரப்புக்கோ தலைவலி, பாகிஸ் தானில் பெண்களின் நிலை இதுதான் என்று மேற்கு நாடுகள் நினைத்தால் தன்னை காலி செய்து விடுவார்கள் என்று பயந்தார். இவரின் பாஸ்போர்ட்டினை முடக்கினார். முக்தாரன் அதையும் தைரியமாக எதிர்கொண்டார். வெளிநாடுகளில் வசித்த பாகிஸ்தானியர்கள் பொங்கி எழுந்தார்கள். பாகிஸ்தானின் ஊடகங்கள், பொது மக்கள், அரசு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் என பெருங்கூட்டமே முக்தாரனுக்கு பின்னால் எழுந்து நின்றது.

    ஆனாலும், பாகிஸ்தான் நீதிமன்றங்கள் அரசியல் பேசின. வன்புணர்வுக்கு துணை நின்ற நான்கு பேர்மீது போதிய சாட்சியங்கள் இல்லை என்று விடுதலை செய்தன. ஆனால், ஒரு வன்புணர்வு ஆயுத மாக மாறி பாகிஸ்தானிய மனசாட்சியை நெறிக்க ஆரம்பித்திருந்தது.

    முக்தாரன் மாய் பாகிஸ்தானிய பெண் குரலுக்கான முகமாக மாறியிருந்தார். 2005-இல் பாத்திமா ஜின்னா தங்க விருது கிடைத்தது. கிளாமர் வார இதழ் அதே வருடம் வுமன் ஆஃப் தி இயர் விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது.

    பிரிட்டிஷ் செய்தியாளர் இவரோடு பேசி எழுதிய நினைவலைகள் தேஷ்னூரி ஆங்கிலத்தில் ‘Oh! Edition’ என்று வெளியாகி உலகமெங்கும் அதிர்வினை கிளப்பியது. 2006-இல் அய்.நா.வின் பேசினார். 2006-இல் பாகிஸ்தானின் கீழ் சபை வன்புணர்வுக்கான சட்டங்களை மாற்ற முன்மொழிந்தது. 2010-இல் கனடிய பல்கலைக் கழகம் கவுரவ முனை வர் விருது கொடுத்தது.

    வெந்து தணிய காட்டுக்கு ஒரே ஒரு தீப்பொறி போதும். பாகிஸ்தானில் முக்தாரன் மாய் அந்த தீப்பொறி. - நரேன்

    (தினகரன் வசந்த மலர் 18.5.2014

    Read more: http://viduthalai.in/page5/80909.html#ixzz32gTZIYcv

    தமிழ் ஓவியா said...


    100 டன் எடையுள்ள டைனோசர்


    தென் அமெரிக்காவில் அர்ஜென்டி னாவில் அறிவியலாளர்கள் பெஸ்க்ராங்கங் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியில் இதுவரையிலும் எவரும் கண்டறியாத வகையில் மிகப்பெரியதும், மிகவும் பழமையானதுமான டைனோசர் உயிரினத்தின் முழு அளவிலான உடற் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

    பாலியன்டாலஜி ஈஜிடியோ ஃபெருக் லியோ அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சி யாளர் குழு செய்துள்ள ஆய்வின்முடிவில் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்ன தாக வாழ்ந்த உயிரினத்தின் (டைனோசர் விலங்கின்) எச்சங்களாக கிடைத்துள்ளது. அந்த ஆய்வின்படி கிடைத்துள்ளவற்றை பாதுகாப்பதுகூட சவாலாகவே உள்ளது. சற்றும் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு அளவிலும், எடையிலும் மிக அதிக அளவில் உள்ளதே அதற்கு காரணமாகும். பட்டாகோனியா பகுதியின் தொலைதூரத்தில் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. உயிரியல் அகழ்வாராய்ச்சி யாளர்கள் கூறும்போது, டைனோசர் என்று கூறப்படும் நீண்ட கழுத்தும், நீண்ட வால் பகுதியுடனும் உள்ள நான்கு கால்களைக்கொண்ட தாவர உண்ணியான இந்த விலங்கின் புவியியல் காலம் என்பது சுமார் 95 மில்லியன் காலத்துக்கு முந்தைய தாக இருக்கும் என்று அறிவியலா ளர்களால் கணிக்கப்படுகிறது. அந்த விலங்கின் முழு எடையானது 14ஆப்பிரிக்க யானைகளின் எடைக்கு சமமாக இருக்கும் அல்லது நூறு டன் எடை உள்ளதாக இருக்கும் என்றும் , இந்த கண்டுபிடிப்பு உயிரியல் ஆய்வில் ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்றும், இதற்கு முன்னர் ஆய்வுகளில் கிடைத்த பழமையான உயிரினங்களின் காலம் குறைந்ததாகவும், அவ்வுயிரிகளின் உடற் பாகங்கள் சிதைந்து சிறிதளவே கிடைத்தன என்றும் ஆராய்ச்சிக்குழுவின் சார்பில் தெற்கு அர்ஜென்டினா டிரிலீவ் நகரின் ஈஜிடியோ ஃபெருக்லியோ அருங்காட்சிய கத்தின் உயிரியல் ஆராய்ச்சியாளர் ஜோஸ் லூயிஸ் கர்பல்லிடோ கூறுகிறார்.

    அருங்காட்சியகத்தின் இயக்குநர் ரூபன் கியூனியோ கூறும்போது, உலகி லேயே பெரிதாக கிடைத்துள்ள மாதிரியாக, முழு அளவில் கிடைத்துள்ள டைனோசர் கண்டுபிடிப்பாக இது உள்ளது என்றார்.

    2011இல் அர்ஜென்டினாவில் உள்ள விவசாயி ஒருவர் எதேச்சையாக தெரிவித்த தகவலின்படிதான் தலைநகரான புவனெஸ் அய்ரெஸ் நகருக்கு தென் பகுதியில் சுமார் ஆயிரத்து முந்நூறு கி.மீ (800மைல்) தொலைவில் உள்ள பட்டகோனியாவில் சுபுட் நிலப்பகுதியில் 200 புதையுண்ட படிமங்கள் கண்டறிப் பட்டன. தற்போதைய கண்டுபிடிப்பு இதற்குமுன் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு டைனோசர், மாமிச உண்ணிகளின் உடைந்த பற்கள் உள்ளிட்ட அனைத் தையும் பின்னுக்கு தள்ளிவிட்டது.

    -ராய்ட்டர்ஸ், 18-5-2014

    Read more: http://viduthalai.in/page5/80908.html#ixzz32gTn6KIt

    தமிழ் ஓவியா said...


    வாழ்க அண்ணா நாமம்!


    உடல் நலம் சிறக்க இந்து மதம் கூறும் வழிகள்
    யாகம் செய்வதன் பலன்
    பஞ்ச பூதங்களை வென்றவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்
    கணபதியின் திருநாமங்கள்
    மறுபிறப்பு எடுக்க வேண்டிய அவசியம்
    அரச மரத்தடி விநாயகர் அதிக சக்தி வாய்ந்தவரா?

    இவை எல்லாம் ஆர்.எஸ்.எஸின் ஏடான விஜயபாரதத்தில் வெளிவந்த தலைப்புகள் அல்ல - செய்திகளும் அல்ல ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள ராமகிருஷ்ண விஜயத்தில் வெளி வந்தவையும் அல்ல! பின் வேறு என்னவாம்! அண்ணா பெயரைக் கட்சியிலும் அண்ணா உருவத்தை கொடியிலும் பொறித்து வைத்துள்ள திராவிட என்ற இனக் கலாச்சாரப் பெயரையும் இணைத்துக் கொள்ளும் அண்ணா திமுகவின் அதிகாரப் பூர்வ ஏடான ஞிக்ஷீ. நமது எம்.ஜி.ஆரில் வெளி வந்தவைதான் (19.5.2014) இவை! வாழ்க அண்ணா நாமம்!

    Read more: http://viduthalai.in/page6/80911.html#ixzz32gUKuiNO

    தமிழ் ஓவியா said...


    வெள்ளைப் பூண்டு


    பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப் பூண்டு. ஆலியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப் பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சட்டைவம்.
    வெள்ளைப் பூண்டில் மரபுரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்ட மின்கள், நோய் எதிர்ப்புப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்புப்பொருட்கள் உள்ளன.
    தயோ சல்பினேட் எனும் உயிர்ப்பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர் மூலக்கூறுகளுடன் இணைந்து ஆலிசின் எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.
    கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உற்பத்தியை தடுக்கும் ஆற்றல் ஆலிசின் மூலக்கூறுகளுக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரி விக்கின்றன.
    ரத்தத் தட்டுக்கள் உறைந்துவிடாமல் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் ஆலிசின் உதவுவதாக தெரியவந்துள்ளது. ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும், உருவான ரத்தக்கட்டிகளை நீக்குவதிலும் பங்கெடுக்கிறது. இச்செயலால் கரோனரி தமனி பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய பாதிப்புகள், முடக்குவாதம், பி.வி.டி. போன்ற வியாதிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது..

    இரப்பைப் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நோய்த்தொற்று நுண் கிருமிகளை ஒடுக்கும் ஆற்றலுடைய நோய் எதிர்ப்புப்பொருட்கள் வெள்ளைப் பூண்டில் உள்ளது. ஆலிசின் சிறந்த நோய் எதிர்ப்புப் பொருளாகும்


    Read more: http://viduthalai.in/page6/80912.html#ixzz32gUXFMwz

    தமிழ் ஓவியா said...


    சீரடிக்குச் செல்வோர் கவனமாக இருங்கள்...

    சீரடிக்கு பாபாவை தரிசிக்கும் ஆவலில், அவர் அழைப்புக்காகக் காத் திருக்கும் பக்தர்கள், குறிப்பாகத் தமிழக பக்தர்கள் சீரடிக்குச் சென்று பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள்.

    சீரடியில் தற்போது வழிப்பறிகளும், ஆள் கடத்தல் நிகழ்வுகளும் அதிகளவில் நடக்கின்றன. காவல் துறையில் புகார் தெரிவிக்கவோ, தெரிவித்தால் அதன்மீது அவர்கள் நடவடிக்கை எடுக்கவோ முடியாத சூழல் நிலவுகிறது. வெளி யூர்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருவதால், புகார் கொடுத்த, நிலவரத்தை அறிந்து கொள்ள முடியாத நிலை தொடருகிறது.

    கடந்த மாதம் நாங்கள் சீரடியில் காலிகா நகர் மெயின் ரோட்டில் நீம் பேலஸ் ஓட்டலில் தங்கியிருந்தோம். ஓட்டல் வாசலிலேயே கும்ப கோணத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை தாக்கி தாலியைப் பறித்துச் சென்று விட்டார்கள். அடுத்த அய்ந்தாவது நிமி டத்தில் என்னோடு வந்த கோதண்டபாணி அவர்கள் மனைவியைத் தாக்கி தாலியைப் பறித்துச் சென்று விட்டார்கள்.

    ஹோட்டல் நிர்வாகம் இதற்கு பொறுப் பேற்க மறுத்து, உள்ளே நடந்தால் சொல்லுங்கள் என்கிறார்கள். மற்றவர்கள் இதைப்பற்றி கூறும்போது, பல ஓட்டல் முதலாளிகள், காவல்துறையைச் சேர்ந்த சிலர், கடத்தல்காரர்கள், பிக்பாக்கெட் பேர் வழிகள் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதால், இங்கு எல்லாம் சர்வ சுதந்திரமாக நடக்கிறது என்கிறார்கள். நமக்கு பாதிப்பு தரும் நீம் பேலஸ் ஓட்டலில் தமிழர்கள் யாரும் தங்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

    சீரடிக்குச் செல்வோர், தயவு செய்து விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து செல்ல வேண்டாம்.

    உடமைக்கும் உயிருக்கும் உத்தர வாதம் இல்லாத நிலையில், தனியாகச் செல்வது, கழுத்தில் நகை தெரிய நடப்பது, பெண்கள் கூட்டமாக செல்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இதேபோல, ரயிலில் பறக்கும் படை யினரின் (ஸ்கோட்) அடாவடிகளும், அத்துமீறல்களும் அதிகம். அவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள் மட்டும் குறி வைத்து ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி, அபராதம் விதித்து பணம் பறிக் கிறார்கள். குறிப்பாக சீரடி செல்வோரிடம் இவர்கள் இப்படி பறிப்பது அதிகம்.
    இருக்கைக்காக முன்பதிவு செய்து, காத்திருந்து பயணம் செய்கிறோம். பாதி வழியிலேயே ரிசர்வ் செய்யாதவர்கள் நமது இருக்கையை ஆக்கிரமித்து அமர்ந்து விடுகிறார்கள்.

    ஸ்கோட் போன்றவர்கள் இவர்களை அப்புறப்படுத்தவோ, இவர்களிடம் அப ராதம் வசூலிக்கவோ முன்வருவதில்லை. மாறாக, உங்கள் டிக்கெட்டில் பெயரில் ஒரு எழுத்துப் பிழையிருக்கிறது. இந்த வயது முடிய ஒரு நாள் இருக்கிறது, அடையாளக் கார்டு கசங்கியிருக்கிறது என்றெல்லாம் காரணம் கூறி, நம்மிடம் எப்படியும் பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள்.

    இதைப்பற்றி அவர்கள் கூறும்போது, வடநாட்டுக்காரர்களிடம் இப்படி கேட்டால், தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும், தமிழர்களிடம் மட்டும் இப்படி அபராதம் வசூலிக்குமாறு மேலிடத்திலிருந்து வாய்மொழி உத்தரவு இருப்பதாகவும் கூறுகிறார்கள். தமிழர்கள் மூலமாகத்தான் ரயில்வேக்கு வருவாய் அதிகமாக வருவதாகக் கூறுகிறார்கள்.

    வட ரயில்வே துறை, தமிழர்களுக்கு, தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இல்லா விட்டால் சீரடி செல்வது கஷ்டமாகி விடும். ஆனால், அவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள்.

    மும்பை மெயில், சென்னை மெயில் ஆகியவற்றில் வருவோர் இறுதி வரை திருடர்கள், வழிப்பறியாளர்களிடம் சிக்கித் திணற வேண்டியிருக்கிறது. நமத உடைமைக்கு நாம்தான் பொறுப்பு. நாம் கவனத்தோடு உரிய எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நமக்கு நல்லது.

    ஸ்ரீசாயி தரிசனம், ஏப்ரல் 2014
    தகவல்: காசி விசுவநாதன், மதுரை

    குறிப்பு: சீரடி சாயிபாபா தன்னை நாடிவரும் பக்தர்களின் மேற்கண்ட இடர்ப்பாடுகளைக்கூட களைய முடிய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more: http://viduthalai.in/page7/80913.html#ixzz32gUkzTjL

    தமிழ் ஓவியா said...


    தேவை பெரியார் இயக்கம்


    புதுச்சேரி மாநில அமைப்பு ரீதியான திராவிடர் கழகம் 3.5.2014இல் தங்களால் அமைக்கப்பட்டு, புதுவையிலே ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளீர்கள் என்ற சேதி, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல தித்திப்பாக இனிக்கிறது.

    இன்றைக்கு உலக நாடுகள் பலவற் றிலே இனவெறி, மதவெறி, நிறவெறி, பதவி வெறி, தீவிரவாதம் போன்ற தீய சக்திகளால் - உலக மனித சமுதாயம் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றன. மனிதாபிமானமற்ற இலங்கை ராஜபக்சே அரசு இன்று வரை தமிழர்களை அழிப்பதையே, குறியாகக் கொண்டு, தமிழர்களை கொன்று குவித்து வருகின்றது - இது ராஜபக்சே அரசின் இன வெறி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள் யூதர்கள் - இது மதவெறி.

    இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னதால், காந்தியை 1948-லே சுட்டுக் கொன்றது - பார்ப்பன - ஆரிய மதவெறி.

    ஒடிசாவில் பழங்குடி மக்களின் தொழு நோயைப் போக்கும் தொண்டறத்தைச் செய்து கொண்டிருந்த, ஆஸ்திரேலியா டாக்டர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு குழந்தைகளையும் - 1999-லே ஜீப்பில் வைத்துக் கொளுத்திக் கொன் றார்களே இந்துத்துவா பஜ்ரங்தள் கும்பல் - இது இந்து மதவெறி.

    இன்றைக்கு இந்தியாவில் 93 கோடி மக்கள் சேரிப் பகுதிகளில் ஒதுக்குப்புற மாக தள்ளப்பட்டு, வாழ்ந்து கொண்டிருக் கிறார்களே. இது இந்து மதத்தின் சாதி வெறி. நெல்சன் மண்டேலாவும் அவரது தோழர்களும் கருப்பினத்தைச் சேர்ந்த வர்கள் என்பதால் வெளிச்சத்தைப் பார்க்கக் கூடாது - இருட்டிய பிறகுதான் வெளியே வர வேண்டும் என்ற நீதிபதியின் உத்தர வின்படி 5 ஆண்டுகள் இந்தக் கொடு மையை அனுபவித்தனர். இது தென் ஆப் பிரிக்க வெள்ளையர் அரசாங்கத்தின் நிற வெறி. எங்கள் மாநிலத்தின் விவசாயிகள் காரில் செல்கிறார்கள் என்று மோடி ஒரு முறை சொன்னார். ஆனால் 20.03.2012 கால கட்டத்தில் குஜராத்தில் 641 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். (ஜூனியர் விகடன் 13.4.2014) இப்படி மோடி உண்மைக்கு மாறாகக் கூற வேண்டிய தன் அவசியமென்ன? இதுதான் பதவி வெறி!

    சீனாவில் உள்ள சின்ஜியாங் மாகா ணத்தை தனியாகப் பிரித்து தந்து இஸ் லாமிய நாடாக அறிவிக்க வேண்டும் என போராடி வரும் வீகர் எனப்படும் தீவிர வாதக் குழுவினர் - யுன்னான் மாகாணத்தின் குன்மிங் ரயில் நிலையத்துக்குள் கத்தியுடன் நுழைந்து கண்ணில் தென்பட்டவர்களை யெல்லாம் வெட்டிச் சாய்த்தனர். இந்த கொலைவெறி தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 28 பேர் பலியாகினர். இது ஒரு பயங்கரவாத தாக்குதலாகும் (2.3.2014) இது தீவிரவாதம்.

    இப்படி காலங்காலமாக உயிர்ச் சேதங்களும், பொருளாதார அழிவுகளும், பெண்கள் பாலியல் வன்கொடுமை களுக்கு ஆளாக்கப்படுவதும் நடை பெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. இவை களையெல்லாம் மாற்றியமைக்கின்ற வழிமுறைகள் பற்றி எத்தனை நாட்டுத் தலைவர்கள் சிந்தித்து இருக்கின்றார்கள்? சிந்தித்து செயல்பட்டு இருக்கின்றார்கள் என்பதைப்பற்றி நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    பட்டம், பதவிக்காகவும், கோடி கோடி யாகக் கொள்ளையடித்து சொத்துக்களை குவிப்பதற்காகவும், தாங்கள் பெற்ற பதவி களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தங்களுக்குச் சாதகமான - தீய வழி முறையாக இருந்தாலும் - கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் - அதன்படி நடக் கவே சித்தமாக உள்ளார்கள். அது முதல்வராக இருந்தாலும் சரி, அல்லது அமைச்சர்களாக இருந்தாலும் சரி.

    பணம் பதுக்கி வைப்பதற்கென்றே ஒரு சுவிஸ் வங்கி வேறு. இப்படி பல கோணங்களிலே ஏராளமான களைகள் உலகளவிலே முளைத்து துளிர் விட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகளை யெல்லாம் வெட்டி, கெல்லி எறிகின்ற ஒரே களைவெட்டி - பெரியாரிசம் தான்.

    இன்றைய உலகிற்கு மிகவும் தேவை மனிதநேயம். அந்த மனிதநேயத்தைப் பரப்புரை செய்கின்ற ஒரே இயக்கம் திராவிடர் கழகமும் அதன் தலைவர் கி. வீரமணியும் ஆவார்கள். உலகெங்கும் திராவிட இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம். புதியதோர் உலகம் செய்வோம். அதில் மாந்தர்களை மட்டுமே காண்போம்.
    கா.நா. பாலு, எடப்பாடி

    Read more: http://viduthalai.in/page7/80914.html#ixzz32gUurGWC

    தமிழ் ஓவியா said...


    சூரிய ஒளிபட்டு மின்னிய சனிக்கோள் வளையங்கள்


    சனிக்கோளின் வளையங்களில் இதுவரை கண்ணுக்கு புலப்படாத பகுதி முதல் முதலாக சூரிய ஒளியை உள்வாங்கி பிரகாசித்தது. இந்தக் காட்சியை சனிக்கோளை ஆய்வு செய்ய அனுப்பிய கசினி விண்கலம் படமெடுத்து அனுப்பியுள்ளது. சனிக்கோளின் கடுமையான ஈர்ப்புவிசை மற்றும் அதன் வேகம் காரணமாக சனியின் நடுக்கோட் டுப்பகுதியில் பலலட்சம் கிலோமீட்டர் தூரம் வரை அழகிய வளையங்கள் உருவாகியுள்ளது. சுமார் 500 கோடி ஆண்டுகளாக சனிக்கோளை சுற்றி வரும் வளையங்களை பல பகுதிகளாக பிரித்து அதற்கு ஆங்கிய எழுத்து ஏ முதல் எப் வரை பெயர் சூட்டி யுள்ளனர். இதில் சுமார் 12 லட்சம் கிலோ மீட்டர் வரையிலான வளையப்பகுதி இருட்டிலேயே உள்ளது. இந்தப் பகுதிக்கு பி என்று பெயர் சூட்டி அழைத்துவந்தனர். அடர்த்தியான தூசுகள் சூழ்ந்துள்ளதால் இப்பகுதி ஒளியிழந்து காணப்படுகிறது. சூரியனைச் சுற்றி வரும் சனிக்கோள் 43 டிகிரி கோணத்தில் தற்போது சூரியனை நெருங்கிச் சுற்றுகிறது, இதன் காரணமாக பி வளையம் முழுவதிலும் நன்றாக சூரிய ஒளிபட்டு அந்த வளையப்பகுதி மிகவும் பிரகாசமாகத்தோற்றம் அளிக் கிறது, இதனை கசினி விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

    கசினி அனுப்பிய படம் குறித்து நாசா மற்றும் அய்ரோப்பிய விண் வெளி ஆய்வு மய்யம் மற்றும் இத்தாலி விண்வெளி கழகம் மூன்றும் இணைந்து ஆய்வு செய்துவருகிறது. இதுவரை தொலைநோக்கி மூல மாகவும் விண்கலன்களின் புகைப்படக் கருவிக்கும் புலனாகாத பி வளையம் தற்போது ஆய்விற்கு உகந்த சூழ் நிலையில் சூரியஒளியை உள்வாங்கி எதிரொளித்துக்கொண்டுள்ளது. இதை வைத்து வியாழனுக்கும், சனிக்கும் இடையில் சுற்றும் விண்கற்களின் பாதையில் ஏற்படும் மாற்றம் குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசாவில் சூரியக்குடும்பம் குறித்து ஆய்வு செய்யும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள்

    Read more: http://viduthalai.in/page7/80915.html#ixzz32gV41SVl

    தமிழ் ஓவியா said...


    அதிசயம் ஆனால் உண்மை புற்றுநோய்க்கு மாற்று தட்டம்மைத் தடுப்பூசி

    அமெரிக்காவின் மின்னசேட்டா மாநிலம் பீக்வட் லேக்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஸ்டாஸி எர்ஹேல்ட்ஸ் (50). மல்டிபிள் மயலேமா என்ற புற்றுநோயால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்தார். எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களில் ஏற்படுவதுதான் மயலேமா புற்றுநோய். எலும்பு புற்றுநோய் என்றும் அழைக் கப்படுகிறது. ரத்தப் புற்றுநோயின் ஒரு வகைதான் இது. மல்டிபிள் மயலேமா பாதிப்பால் தண்டுவடம், விலா எலும்பில் கடுமையான வலி ஏற்படும். நோய் முற்றினால் நகர முடியாமல் முடக்கிப் போட்டுவிடும். ரத்தசோகை உண்டாகும். சிறுநீரகம் பாதிக்கப்படும். நுரையீரல் தொற்று ஏற்படும். நரம்பு மண்டலம் செயலிழக்கும்.

    மேற்கண்ட அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டு, ஏறக்குறைய இறக்கும் நிலைக்குப் போய்விட்ட ஸ்டாஸி, ரேசஸ் டர் நகரில் உள்ள மயே கிளினிக்குக்கு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டார். சோதனை முயற்சியாக அவருக்கு ஆன் கேலிடிக் வைரேதெரபி சிகிச்சை முறையை மருத்துவர்கள் மேற் கொண்டனர். 6 மாத சிகிச்சைக்குப் பிறகு, மயலேமா புற்றுநோயில் இருந்து அவர் பூரணமாக குணமடைந்துள்ளார்.

    இந்த வெற்றிகரமான சிகிச்சையை அளித்திருப்பது டாக்டர் ஸ்டீபன் ரஸல் தலைமையிலான மருத்துவக் குழுவினர். இதுபற்றி அவர்கள் கூறியிருப்பதாவது:
    மிகவும் மோசமான நிலையில் இருக் கும் புற்றுநோயாளிகள் தட்டம்மை போன்ற வைரஸ் நோயால் பாதிக்கப்படும்போது, அவர்களது உடல்நிலையில் ஓரளவு முன் னேற்றம் ஏற்படும். வைரஸை விரட்டுவ தற்காக இயற்கையாகவே உடலில் புரோட்டீன்கள் உற்பத்தியாவதே இதற்கு காரணம். இன்டர்ஃபெரான் புரோட்டீன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். டியூமர் நெக்ரேசிஸ் ஃபேக்டர் புரோட்டீன், தீய செல்களை அழிக்கும். புற்றுநோய் செல்கள் அழிந்து, உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் அவர்களது உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது.
    வைரஸ் நோய்க்கு பதிலாக, வைரஸ் கிருமிகளை நேரடியாக ஊசி மூலம் உடலில் செலுத்துவதுதான் ஆன்கேலிடிக் வைரேதெரபி சிகிச்சை. இதுகூட பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருப்பதுதான். புற்றுநோய் தீவிரமான நோயாளிகளுக்கு எந்த வகை சிகிச்சையும் பலனளிக்காத நிலையில், கடைசியாக இந்த சிகிச்சை அளிக்கப்படும்.

    1 கோடி தடுப்பூசியில் உள்ள கிருமி

    ஸ்டாஸிக்கும் இந்த சிகிச்சைதான் அளிக்கப்பட்டது. தட்டம்மை தடுப் பூசிக்கு பயன்படுத்தப்படும் அதே தட்டம்மை வைரஸ் கிருமிதான் அவரது உடலில் செலுத்தப்பட்டது. 1 கோடி பேருக்கு தட்டம்மை தடுப்பூசி போடுவ தற்கு எந்த அளவு தட்டம்மை வைரஸ் கிருமி தேவைப்படுமே, அந்த அளவுக்கு வீரியான கிருமிகளை அவரது உடலில் ஊசி மூலம் செலுத்தினோம். இதன் காரண மாக அவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. வாந்தி, மூச்சுத் திணறலும் இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்ததில், இந்த பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன. அத்துடன், அவரது உடலில் இருந்த புற்றுநோய்க் கட்டிகளும் மறைந்து விட்டன. இருந்த சிற்சில கட்டிகளும் கதிர்வீச்சு மூலம் அகற்றப்பட்டுவிட்டன.

    இதேபோல, தட்டம்மை கிருமியைப் பயன்படுத்தி ஆன்கேலிடிக் வைரேதெரபி சிகிச்சை அளித்ததில் இன்னொரு மயலேமா நோயாளியும் புற்றுநோயில் இருந்து ஓரளவு விடுபட்டுள்ளார்.

    ஆன்கேலிடிக் வைரேதெரபி சிகிச்சை யால் பூரணமாக குணமான முதல் நோயாளி ஸ்டாஸி என்று செல்லலாம். சம்பந்தப் பட்ட இரண்டு நோயாளிகளையும் பெருத்தவரை எங்கள் ஆராய்ச்சி வெற்றி கரமாக முடிந்துள்ளது. புற்றுநோயாளிகள் அனைவருக்கும் இந்த வகை சிகிச் சையைப் பயன்படுத்த முடியுமா, தட் டம்மை வைரஸ் கிருமியை மருந்தாகப் பயன்படுத்தி புற்றுநோயை விரட்ட முடியுமா என்பதை நிரூபிக்க இன்னும் அதிக ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்.

    இவ்வாறு மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். இத்தகவல் மயே கிளினிக் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சராசரியாக ஆண்டு தோறும் 16 ஆயிரம் பேர் மல்டிபிள் மய லேமா வகை புற்றுநோயால் பாதிக்கப் படுவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், வி.பி.சிங் இருவருமே மல்டிபிள் மயலேமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more: http://viduthalai.in/page8/80917.html#ixzz32gVIF1HU

    தமிழ் ஓவியா said...


    கீதா உபதேசமாம்?


    எது நடந்ததோ
    அது நன்றாகவே நடந்தது;
    எது நடக்க வேண்டுமோ
    அது நன்றாகவே
    நடக்கிறது -
    நடக்கும்
    இதை கேதார்நாத்தில்
    போய் கூற முடியுமா?
    ஒரு பெண்
    இரு காமவெறியர்களால்
    கற்பிழந்தாள்!
    அவளிடம் போய்
    நீ எதைக் கொண்டு
    வந்தாய்? இழப்பதற்கு?
    என்று கேட்க முடியுமா?

    - கவிஞர் கணக்கப்பா

    Read more: http://viduthalai.in/page8/80918.html#ixzz32gVfogXC

    தமிழ் ஓவியா said...


    இன்றைய ஆன்மீகம்?


    இராமேசுவரத்தில் 24 புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கினால் பலவிதமான சாபங்கள், தோஷங்கள் இறைவன் அருளால் நீங்கும் என்பது அய்தீகம் என்கிறது ஓர் ஏடு!

    அது என்ன அய்தீகம் அதையும் விளக்கலாமே?

    தான் தப்பித்துக் கொள்ள அய்தீகத்தின்மீது பழியா?

    24 புண்ணிய தீர்த் தங்கள் இருக்கும் இராமேசுவரத்தில் மருத்துவமனைகள் ஏன்?

    இழுத்து மூடி விடலாமா?

    Read more: http://viduthalai.in/e-paper/80867.html#ixzz32gW658BN

    தமிழ் ஓவியா said...


    ஆட்டுக் கல்லான அறிவு!


    குமாரபாளையம், மே 24- நாமக்கல் மாவட் டம் குமாரபாளையம் பகுதியில் கொச்சி பெங் களூர் தேசிய நெடுஞ் சாலையில் பல இடங் களில் ஆட்டுக்கல், அம் மிக்கல், குழவி கல் போன் றவை நேற்றுமுன்தினம் திடீ ரென கொட்டப்பட்டிருந் தன. இந்த கற்கள் எப்படி நெடுஞ்சாலைக்கு வந்தது என்பது பலர் புரியாமல் தவித்தனர். மழை வேண்டி மக்கள் இப்படி செய்தது தெரிய வந்தது. குமார பாளையம் கிராமங்களில் மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவும் போது, கல் கொடும்பாவி கொட்டுதல் என்ற வினோத வழிபாடு மக்கள் மத்தியில் உள்ளதாம். மழை பெய்யாத கிராமங் களை சேர்ந்தவர்கள், தங்கள் பகுதிகளில் பயன் படாத கல் உரல், ஆட் டுக்கல், அம்மி குழவி போன்றவற்றை வண்டி யில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள கிராமங்களில் இர வோடு, இரவாக கொட் டுவார்கள். இதனால் தங்கள் கிராமங்களில் உள்ள பீடைகள் நீங்கி, மழை கொட்டும் என நம்புகின் றனராம் குமார பாளையம் தேசிய நெடுஞ் சாலையில் நேற்று முன் தினம் (20ஆம் தேதி) இரவு 3 இடங்களில் இது போல் கல் கொடும் பாவி கொட் டப்பட்டுள்ளது. இதற் கிடையில், கற்கள் கொட் டப்பட்ட பகுதியில் மழை பொய்த்து போகுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    Read more: http://viduthalai.in/e-paper/80861.html#ixzz32gWrUvD7

    தமிழ் ஓவியா said...

    கல்வி வெள்ளம் கரை புரள்கிறது!


    தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளி வந்துவிட்டன.

    இதில் 90.7 சதவீத இருபால் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

    முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் எண்ணிக்கை 400-க்கும் மேல் என்பது - எந்த அளவுக்கு நம் மக்களிடையே கல்வியின் செழிப்பு வளர்ந் திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

    சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கி வைத்த சமூகத்தில், இப்படி கல்விப் பயிர் செழித்துக் குலுங்குகிறது என்பதை எண்ணும் பொழுது உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன.

    இதற்காக உழைத்த தந்தை பெரியார் அவர்களையும் அவர் கண்ட இயக்கத்தையும் நீதிக் கட்சித் தலைவர்களையும், திராவிடர் இயக்கத்தையும், கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் முயற்சியையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்ப்போம்! நெஞ்சம் நிறைந்த பூரித்த நன்றிவுணர்வால் அவர்களை நனைப்போம்.

    சமூக புரட்சியாளரான தந்தை பெரியார் அவர்கள், தாம் கண்ட அறக்கட்டளையின் சார்பில் சில கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்; நடத்தினார்; அன்னை மணியம்மையார் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்.

    தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் ஒப்பிட முடியாத முயற்சியாலும், கண் துஞ்சாப் பணியாலும் கூர்த்த சிந்தனையாலும், அறிவார்ந்த திட்டங்களாலும், அக்கல்வி நிறுவ னங்களை மேலும் மேலும் (எத்தனை மேலும் என்றும் போட்டுக் கொள்ளலாம்) வளர்த்தார் - வளர்த்துக் கொண்டும் உள்ளார்; ஒரு பல்கலைக் கழகம் என்கிற அளவுக்குப் பெரியார் விதைத்த அந்தக் கல்வி வித்தினை வளர்த்து ஆளாக்கி விட்டாரே!

    அழுக்காறு அற்ற நெஞ்சங்கள் வாழ்த்துகின்றன - பூரிக்கின்றன - பாராட்டுகின்றன. பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் உலகெங்கும் பரவிப் பணியாற்றுகின்றனர். இந்திய இராணுவத் துறையிலும்கூட முத்திரை பதிக்கின்றனர் என்று எண்ணும்போது நம் தலைவர் அடையும் மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லை.

    உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, உலகளாவிய அளவில் தந்தை பெரியார் பெயரைக் கொண்டு சென்ற அந்தப் பெற்றிதான் என்னே!

    பெரியார் கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் அனைவரின் கவனத்தையும், கருத்துகளையும் ஈர்த்துள்ளன.

    எட்டு ஆண்டுகளுக்கு முன் 217 மாணவர்களுடன் பெரியார் அறக்கட்டளையால் கையகப்படுத்தப்பட்ட ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் குலேசன் பள்ளியில், இப்பொழுது படிக்கும் இருபால் மாணவர்களின் எண்ணிக்கை எத்தனைத் தெரியுமா 2500; 217 எங்கே 2500 எங்கே!

    பத்து மடங்கு அதிகமாக மிகவும் பின் தங்கிய ஒரு பகுதியில் ஒரு பள்ளியில் மாணவர்கள் படையெடுக் கிறார்கள் என்றால் அதன் தன்மையின் ஆழத்தை, அதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பரப் பினை எண்ணினால் மிகவும் பிரமிப்பாகவே உள்ளது.

    நேற்று வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றதில் மூன்றாவது இடத்துக்கு வந்த மாணவன் (கி. நவீன்ராஜ் 497/500). ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவன் என்று நினைக்கிறபோது, அந்த மாணவனின் பெற்றோர்களைவிட நமது தலைவரும், பள்ளி ஆசிரியர்களும், கழகத்தவர்களும் பூரிப்படைகின்றனர் - பெருமிதம் கொள்கின்றனர்.

    வெட்டிக்காடு என்னும் குக்கிராமம் உரத்தநாடு அருகில்; படிக்க வாய்ப்பற்றுக் கிடந்த அந்தப் பகுதியில் ஆறு ஆண்டுகளுக்கு முன் பெரியார் அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் துவக்கினார்.

    தமிழ் ஓவியா said...

    இவ்வாண்டு ஆறுபேர் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி அத்தனை மாணவர்களும் வெற்றி பெற் றுள்ளனர். அந்த ஆறு பேரில் மூவர் 400-க்கும் மேலாக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    நாகம்மையார் இல்லத்துப்பிள்ளைகளின் நூறு சதவீத வெற்றி பெருமிதமாக இருக்கிறது.

    படிப்பு பார்ப்பனர்களுக்குத்தான் வரும்; சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் வரவே வராது என்று ஆக்கி வைக்கப்பட்ட மனுதர்ம காட்டை அழித்து, சமூகப் புரட்சி இந்த நாட்டில் உருவாக் கப்பட்டுள்ளது என்பதற்கு இவை எல்லாம் ஈடில்லா எடுத்துக்காட்டுகள்.

    தாழ்த்தப்பட்டவர்களைப் பள்ளியில் சேர்க்கா விட்டால் மான்யம் நிறுத்தப்படும் என்று ஆணை பிறப்பித்த நீதிக்கட்சியை நெஞ்சார இந்த நேரத்தில் நினைப்போமாக!

    பெரியார் கல்வி நிறுவனங்களை நிறுவி, அடி கோலிட்ட அய்யாவையும், அன்னை மணியம்மை யாரையும், நாகம்மை இல்லத்துப் பிள்ளைகளின் அண்ணனாக இருந்த அருமைப் புலவர் கோ. இமயவரம்பன் அவர்களையும் எண்ணுவோம்.

    இன்று பெரும் அளவு வளர்த்த எல்லோரையும் ஆச்சரியரித்தோடு திரும்பிப் பார்க்க செய்துள்ள நமது தலைவர் ஆசிரியர் அவர்களை மானசீகமாகக் கை குலுக்குவோம்! பெரியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உரமாக இருந்து உழைக்கும் ஒருங்கிணைப்பாளர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனை வரையும் பாராட்டுவோம் - நன்றியும் கூறுவோம்! வாழ்க பெரியார்!

    Read more: http://viduthalai.in/page-2/80888.html#ixzz32gXiHsTi

    தமிழ் ஓவியா said...


    வரலாறுதிரும்பும்!


    - கி.தளபதிராஜ்


    "மோடியும் லிபரல்களின் தோல்வி யும்" என்கிற ஒரு கட்டுரையை தமிழ் இந்து நாளிதழ் (23.5.14) வெளியிட்டி ருக்கிறது. இந்தத்தேர்தலில் சுதந்திரப் போக்காளர்கள் (லிபரல்கள்) ஏன் தோற்றுப்போனார்கள் என்பதற்காண காரணமாக "இடதுசாரி அறிவுஜீவிகளும் அவர்களையொத்த சுதந்திரப் போக் காளர்களும் ஒரு கூட்டமைப்புபோலச் செயல்பட்டார்கள். மதச்சார்பின்மைதான் மிக மேன்மையானது என்பதுபோல நடந்துகொண்டார்கள். மூட நம்பிக் கைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிராக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று முழங்கினார்கள்.

    அறிவியல் விஞ்ஞானி, ராகுகாலம் கழிந்த பிறகு வருவதுகூட விமர்சனத் துக்கு உள்ளாயிற்று. அடக்கு முறையா கவே மாறியது" என்று சொல்லும் கட் டுரையாளர்

    "பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த, மதநம்பிக்கையுள்ளவர்களின் மனக் குறையை மோடி நன்கு புரிந்து கொண்டார். மதச்சார்பின்மை வெறும் பொய்வேடம் என்பதை அம்பலப்படுத் தினார்.அதனால் அவர் வெற்றிபெற்றார்" என எழுதுகிறார்

    மோடி பெரும்பான்மை சமுதாயமான இந்து சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாக்குகளை பெற்றிருக்கிறாரா? வெறும் 31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் மோடி. அதுவும் ஊழல் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக காங்கிரஸ் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை அறுவடை செய்திருக்கிறார் மோடி என்பதே உண்மை. நிலைமை இப்படியிருக்க இதை மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரான வெற்றியாக சித்தரிக்க முயல்வது ஆதிக்க சமூகத்தின் ஆழ்மனதையே வெளிக் காட்டுகிறது. "அய்ரோப்பாவின் பல பகுதிகளில் இப்போது மதம் என்றாலே வெறுக்கிறார்கள். ஹாலந்து நாட்டில் மிகவும் அழகான பல தேவாலயங்கள் மக்களுடைய வருகை குறைந்ததால் அஞ்சல் அலுவலகங்களாக மாற்றப்பட்டு விட்டன" என புலம்புகிறார் கட்டுரை யாளர். அவை மானுட சமூகத்தின் அறிவு முதிர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்!

    நாத்திகர்களாலோ, மதச்சார்பின்மை கொள்கையாளர்களாலோ எந்த வழிபாட்டுத்தலங்களுக்காவது வன்முறை யால் கேடு விளைவிக்கப்பட்டிருக்கிறதா?. ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களால் இந்தி யாவில் உள்ள மசூதிகளுக்கும் தேவாலயங்களுக்கும் மோடி ஆட்சியில் தீங்கு ஏற்படாமல் காப்பாற்றப்படட்டும் முதலில்!
    நம் நாட்டில் நடைபெறும் அறிவியல் மாநாடுகளே சிறிய கும்பமேளா போலத் தான் திருவிழாக் கோலமாக இருக்குமாம்.

    அசிங்கப்படுத்தப்படவேண்டிய செய்திகளையெல்லாம் அதிசயிக்கிறது கட்டுரை!.

    நம்முடைய மதம் அறிவியலுக்கு எதிராக எப்போதும் இருந்ததில்லை யாமே! அப்படியா? அரசமரத்தை சுற்றினால் அடிவயிறு பெறுக்கும் என்பது தான் அறிவியலா? கழுதைகளுக்கு கல்யாணம் செய்தால் கனமழை என்பது எந்த வகை அறிவு? மதச்சார்பின்மைக்கு எதிரான வெற்றி என்றால் மோடி முதலில் தமிழ்நாட்டில் அல்லவா வெற்றி பெற்றிருக்க வேண்டும்?

    பெரும்பான்மை இடங்களில் பிஜேபி கூட்டணி டெபாசிட்டையே இழந்தது பெரியார் மண் என்பதால்தானே? ஆச்சாரியார் குலக்கல்வித்திட்டத்தை கொண்டுவந்தபோது கிளர்ந்த எதிர்ப்பில் "ஆளை விடுங்கோ! உதவின்றபேர்ல உபத்திரம் பண்ணின்டு இருக்காதேள்!" னு அக்கிரஹாரமே கூடி ஆச்சாரியாரிடம் எச்சரித்ததெல்லாம் இந்துக்குழுமத்துக்கு மறந்து போயிடுத்தோ? இராமனுக்கு விபீஷ்ணனும், அனுமனும் கிடைத்தது போல் இன்று உங்களுக்கு மோடி கிடைத் திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் கனவு ஒரு போதும் பலிக்காது!

    Read more: http://viduthalai.in/page-2/80889.html#ixzz32gXqJpjU

    தமிழ் ஓவியா said...


    கலாச்சாரப்படி...


    பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
    (விடுதலை, 24.2.1954)

    Read more: http://viduthalai.in/page-2/80887.html#ixzz32gYZrnmG

    தமிழ் ஓவியா said...




    தமிழ்நாடு மாகாண மகாநாடு

    தமிழ்நாடு மாகாண மகாநாடு வேதாரண்யத்தில் கூடுவதாக இரண்டு மூன்று மாதமாக பத்திரிகைகளில் பெருத்த விளம்பரங்களும் ஆடம் பரங்களும் நடைபெற்றன. தமிழ்நாடு மாகாண மகாநாடு சென்னையில் 1926இல், கோகலே ஹாலில் நடந்த பிறகு 27லும் 28லும் நடைபெற முடியாமலே போய்விட்டது, வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் இந்த வருஷம் தேர்தல் வரக்கூடும் என்று கருதி, அதுவும் கனம் திரு.முத்தையா முதலியார் அவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது தனியாகவே பார்ப்பனர்களால் வேதாரண்யத்தில் மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகக் கூலிகளை விட்டும் எவ்வளவோ பிரச்சாரமும் செய்யப்பட்டது என்றாலும் அந்த மகாநாட்டுத் தலைமைப் பதவியை ஏதாவது ஒரு பார்ப்ப னரல்லாதார் தலைமை வகிக்க ஏற்பட்டுவிட்டால் தங்கள் ஜில்லாவின் பெருமைக்கு ஹானி வந்துவிடும் என்றும், அவர்களால் ஏதாவது வகுப்பு விஷமம் புகுத்தப்பட்டு விடுமென்றும் கருதி ஒரு பார்ப்பனரைத் தலைவராக்கக் காங்கிரசு ஆபீஸ் சிப்பந்திகளும், காங்கிரசு பார்ப்பனத் தலைவர்களும் ஊர் ஊராய்ச் சென்று விஷமப் பிரச்சாரம் செய்து திரு. சத்யமூர்த்தியைத் தேர்ந்தெடுத்தாய் விட்டதாக ஏற்பாடு செய்தாய் விட்டது. ஆனால் இந்த செய்தியை இன்னும் இரகசியமாக வைத்திருக்கின்றார்கள்.

    வரமுடியாத ஒருவர் பெயரை முதலில் சொல்லி பொது ஜனங்களை ஏமாற்றி பிறகு திரு.மூர்த்தியின் பெயரை வெளியிடுவார்கள். திரு.வரதராஜுலுவைத் தெரிந்தெடுக்க சில பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தொண்டர்களும் சில பொது ஜனங்களும் பாடுபட்டார்கள் ஆனால், பார்ப்பனர்களும் காங்கிரஸ், ஆபீசுகளும், சிப்பந்திகளும் யோக்கியமாய் தங்கள் பிரச்சாரத்தைச் செய்திருந்தால் திரு.வரதராஜுலுவே தெரிந்து எடுக்கப்பட்டிருப்பார். ஆனால் பார்ப்பன சூழ்ச்சியால் அவர் பெயர் இரண்டொரு கமிட்டி தேர்ந்தெடுத்தும், திருப்பி அனுப்பி, திரு.சத்தியமூர்த்தியைத் தெரிந்தெடுக்க வேண்டியதாயிற்று. இதன் பலனாய் மகாநாட்டின் போது பெருத்த கலகமேற்படும் போல் தெரியவருகின்றது. ஆனால் இருதிறத்தாரும் கலகத்திற்குக் காரணம் சுயமரியாதைக் கட்சியார்கள் என்று சொன்னாலும் சொல்லக்கூடும். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. யார் பேரில் வந்தாலும் சரி, எப்படியும் காங்கிரசுக்குத் தமிழ் நாட்டில் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதும், அதில் உள்ள நாணயம் எவ்வளவு என்பதும், அதில் எவ்வளவு தூரம் வகுப்புவாதம் இல்லை என்பதும் ஆகியவைகளை மாத்திரம் பொதுஜனங்கள் இனியும் அறிந்து கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் காட்டுகின்றோம்.
    - குடிஅரசு - துணைத் தலையங்கம் - 14.07.1929

    Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZHeI7v

    தமிழ் ஓவியா said...

    சைவப் பெரியார் மகாநாடு

    திருநெல்வேலியிலும் திருப்பாப்புலியூரிலும், சமீபத்தில் கூட்டப்பட்ட சைவப் பெரியார்கள் மகாநாடு என்பதானது திருவாளர். அண்ணாமலைப் பிள்ளை, சாமிநாதசெட்டியார், திரு.வி.கல்யாண சுந்தரமுதலியார். கிருஷ்ணசாமிப்பாவலர் என்பவர்களுக்கு மகாநாட்டில் கலந்து கொள்ளவும், மகாநாட்டு மேடைமேல் ஏறி அவர்கள் யோக்கியதைக்குத் தகுந்தபடி பேசவும் மகாநாட்டுத் தீர்மானங்களுக்கு ஓட்டு கொடுக்கவும் தாராளமாய் இடமளித்து, திருவாளர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை, பூவாளூர். செல்வக்கணபதியார் ஆகியவர்களுக்கும் மற்றும் சில சைவசமாஜப் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்க மறுத்ததிலிருந்தும், சைவப் பெரியார்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும், அம்மகாநாடு எந்தப் பிரச்சாரத்திற்காகக் கூட்டப்பட்டது என்பதையும், அதைப்பற்றி நாம் முன்பு எழுதி வந்தவைகள் எல்லாம் உண்மையா? அல்லவா? என்பதையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள அம்மகாநாடானது ஒரு அளவு கருவியாகப் பயன்பட்டமைக்கு நாம் மகிழ்ச்சியுடன், மகாநாட்டைக் கூட்டிய பிரமுகர்களுக்கும் நன்றி செலுத்துகின்றோம்.

    குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02-06-1929

    Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZP3bju

    தமிழ் ஓவியா said...

    பாலிய விதவையின் பரிதாபம்

    இந்து தருமத்தின் மகிமை

    17.07.1929ஆம் தேதி அலகாபாத் ஹைகோர்ட்டில் நீதிபதிகள் எங்,பெனட் ஆகிய இருவர் முன்னிலையிலும் ஒரு அப்பீல் வழக்கு வாதிக்கப்பட்டது.

    தீதுவானி கிராமம் நாராயணசிங்கர் மகள் இருபத்திரண்டு வயதுள்ள பீபியா என்னும் ஒரு பெண்ணுக்கு 5ஆவது வயதிலேயே மணம் முடிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் புருஷன் இறந்து போனான். இவளுடைய ஜாதியில் விதவாவிவாக அனுமதி இல்லாமையால் பீபியா மரணப் பரியந்தம் விதவையாகவே காலம் கழிக்கும்படி நேரிட்டது. அவள் தன்னுடைய புருஷன் குடும்பத்திலேயே வாழ்ந்து வந்தாள். சென்ற ஆண்டில் கருத்தரித்துவிட்டாள். இவள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது பிரசவ வேதனை கண்டு குழந்தையைப் பெற்றுக் குழி தோண்டிப் புதைத்துவிட்டாள். மாடு மேய்ப்பவர்கள் மூலம் பரவின செய்தி போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் பீபியாவை சிசுக் கொலை செய்ததாக நீதிபதி முன்பாக நிறுத்தினார்கள்.

    பீபியாவுக்கு நீதிபதிகள் தீவாந்திர திட்சை விதித்து மாகாண அரசாங்கத்தார் கருணைக்கும் சிபாரிசு செய்திருக்கின்றனர். இந்து தருமத்தின் மகிமையே மகிமை!

    - குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 11.08.1929

    Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZVED88

    தமிழ் ஓவியா said...

    காங்கிரசுக் கட்டுப்பாடு

    சட்டசபை தேர்தல் காலாவதியை சர்க்கார் ஒத்திப் போட்டுவிட்டதினால் காங்கிரசுக் காரர்கள் தங்களது சுயமரியாதையையும், அதிருப்தியையும் காட்டுவதற்கு அறிகுறியாய் இனிமேல் கூட்டப்படப் போகும் சட்டசபை மீட்டிங்களுக்கு மறு தேர்தல் வரை யாரும் போகக் கூடாது என்று எல்லா இந்திய காங்கிரசுக் கமிட்டியார் திரு.காந்தியவர்கள் யோசனைப்படி தீர்மானம் செய்து எல்லா மாகாணங்களுக்கும் சார்பு செய்தாய்விட்டது. அதை எல்லோரும் ஒப்புக் கொண்டதாகவும் பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டது. ஆனால் சென்னை மாகாண தமிழ்நாட்டு காங்கிரசுக்காரர்களான பார்ப்பனர்கள் அக்கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட முடியாதென்றும் தாங்கள் எல்லா இந்திய காங்கிர கட்டளையை மீறி சட்டசபைக்குப் போகப் போவதாகவும் இரகசியமாய் தீர்மானித்து இருக்கிறார்கள். காங்கிர சட்டசபைக்குப் போகும்படி கட்டளைஇட்டால் வெகு பக்தியாய் அக்கட்டளையை நிறைவேற்றுவார்கள். வேண்டாமென்றால் கட்டுப் பாட்டை மீறுவார்கள். நமது பார்ப்பனர்களின் காங்கிர பக்தி நமது ஆஞ்சநேய ஆழ்வாருக்குக் கூட கிடையாதென்றே சொல்லலாம்.

    -குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 16-06-1929

    Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZaeGfn

    தமிழ் ஓவியா said...

    வைதிகர்களின் இறக்கம்

    பெண்களுக்குக் கல்வி கற்பிக்கக்கூடாது. ஒரு பெண் தனது கணவனையே தெய்வமாக மதித்துக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். அவர்களுக்குச் சுதந்தரமே கிடையாது, என்று சனாதன தருமத்தின் பேராலும் சாஸ்திரத்தின் பேராலும் கடவுளின் பேராலும், இதுவரை கண்மூடித்தனமாக கூச்சல் போட்டுவந்த வைதிகர்களுக்கு இப்போதுதான் சிறிது சிறிதாக புத்தி உதயம் ஆகி வருவதாகத் தெரிகிறது. நமது சுயமரியாதை இயக்கத்தை பார்ப்பனர்களும் அவர்களுடைய கூலிகளும். நாஸ்திக இயக்கம் என்று கூறி பாமர மக்களை ஏமாற்றி வந்தாலும், நமது கொள்கைகளும், தீர்மானங்களும், பிரச்சாரமும் அவர்களை நேர் வழியில் நடக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன என்பதிற் சந்தேக மில்லை. நாம் ஒவ்வொரு கூட்டத்திலும் மகாநாட்டிலும் பெண் மக்களின் பொருளாதார உரிமை, பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலிய நியாயமான உரிமைகட்காக பேசியும் தீர்மானங்கள் செய்தும் போராடி வருவது எல்லோருக்கும் தெரியும். சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியில் பெரிய பெரிய சாஸ்திரிகள் என்பவர்களும் பண்டிதர் என்பவர்களும் ஒன்று கூடிப் பெண்மக்கள் முன்னேற்றத் திற்கான சில தீர்மானங்கள் செய்திருக்கின்றனர் அவையாவன:

    1. அவிபக்தமாகவோ, விபக்தமாகவோ உள்ள நமது இந்துக் குடும்பங்களில் சாஸ்திரியமாக விவாகம் செய்யப்பட்ட பெண்களுக்கு விவாக சமயத்திலிருந்து புருஷனது குடும்பச் சொத்திலும் அவனது சம்பாதனத்திலும் அப்படியே ஸ்திரிகளின் சொத்திலும் அவர்களின் சம்பாதனத்திலும் புருஷர்களுக்குச் சமபாகமும், ஏற்படுத்து வதற்கு வேண்டிய முறையை நமது ஆரியர்கள் யாவரும் சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

    2. சாஸ்திரீயமாக விவாகம் செய்து கொண்ட பெண்ணைத் தகுந்த காரணமின்றித் தள்ளிவிட்டும் மறு விவாகம் செய்பவரைச் சமூகப் பகிஷ்காரம் செய்வதற்கு வேண்டிய கட்டுப்பாட்டை அமைத்துக் கொள்ளுவது அவசியம்.

    3. ஒரு குடும்பத்தில் புருஷர்களுக்குப் போலவே ஸ்திரீகளுக்கும் குடும்பச் சொத்தில் பாகம் கிடைக்குமாறு வழி தேட வேண்டும்.

    4. ஒரு குடும்பத்தில் ஒரு பிதாவுக்கு ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்து பெண்ணுக்குக் கல்யாணமாகி புத்திரனுக்குக் கல்யாண மாவதற்குள் பிதா முதலியோர் இறந்த சில நாளைக்கெல்லாம் அந்த ஆண் பிள்ளை இறப்பானானால் பிதா மூலம் கிடைத்த அவனது சொத்தும் ஸ்வார்ஜித சொத்தும் அவனது தாயாதிகள் அடைவது என்ற கெட்ட முறையை மாற்றி அவனது சகோதரியும், அவளது குழந்தைகளும் அனுபவிக்கும் படிக்கான முறையை ஏற்படுத்தி அதை அனுபவத்தில் கொண்டு வர வேண்டும்.

    ஆகவே இவ்வழியை ஆரியர் யாவரும் சமூகக் கட்டுப்பாடு மூலம் ஏற்படுத்திக் கொள்ளத் தவறினால் அதன் மூலம் ஸ்திரீகளுக்கு நேரும் கஷ்டங்களைப் போக்க வேண்டி நமது காருண்யக் கவர்ன்மெண்டாரை அவ்வழியில் கடுமையான சட்டமியற்றி அதை உடனே அனுஷ்டானத்துக்குக் கொண்டுவந்து ஸ்திரீகளைக் காக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானங்களேயாகும்.

    குறுகிய கால அளவில் இவ்வளவு தூரம் பெண் மக்கள் விஷயத்தில் வைதிகர்களின் விடாப்பிடியைத் தளரச் செய்த நமது சுயமரியாதை இயக்கம் இன்னும் கூடிய விரைவில், பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலியவற்றிற்கும் எவ்வித எதிர்ப்பும் நாட்டில் இல்லாமற் செய்து தக்க ஆதரவு தேடிவிடும் என்று உறுதி கூறுகின்றோம்.

    - குடிஅரசு - கட்டுரை - 11.08.1929

    Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZo8abG

    தமிழ் ஓவியா said...

    கால்டுவெல் பெயரில் மூன்று கல்வி உதவித் தொகை திட்டங்கள்!
    சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

    சென்னை, மே 24- தமிழறிஞர் ராபர்ட் கால்டு வெல்லுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரு டைய பெயரில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூன்று துறைகளின் கீழ் மூன்று கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.தாண் டவன் கூறினார்.

    கால்டுவெல் 200ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னைப் பல்கலைக்கழகத் தில் கொண்டாடப்பட்டது இதில் துணைவேந்தர் ஆர். தாண் டவன் பேசியதாவது:

    தமிழறிஞர் பேராசிரியர் ராபர்ட் கால்டுவெல் தனது 24 வயதில் லண்டன் மிஷனரி சொசைட்டி என்ற கிறிஸ்தவ மத பிரசாரக் குழுவினருடன் சேர்ந்து மதத்தைப் பரப்புவ தற்காக இந்தியா வந்தார்.

    இவரைப் போன்று கிறிஸ்தவ மதத்தைப் பரப்பு வதற்காக இந்தியா வந்த பலரும் அந்தந்தப் பகுதி மொழியை அறிந்து அதன் மூலமாகப் பேசி, மதத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்ட னர். இவர்களிடமிருந்து கால்டுவெல் வேறுபட்டு இருந்தார்.

    மற்றவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு மட்டுமே, இங்குள்ள மொழி களை கற்றறிந்தனர். ஆனால், கால்டுவெல் தமிழ் மொழியை அறிந்து அதன் பெருமைகளை உணர்ந்து அதன் மீது பற்றும் கொண்டார். அவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப் பிலக்கணம் எனும் நூல் உலகெங்கும் அவருக்கு புகழை ஈட்டித்தந்தது.

    தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி களுக்கு தாய் மொழி தமிழே. இந்த மொழிகள் அனைத்தும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தியவரும் அவரே.
    இப்படிப்பட்ட மாமனி தரின் நூலை கடந்த 1913இல் சென்னைப் பல்கலைக் கழகம் இரண்டாவது முறை யாகப் பதிப்பித்தது.அவருக்கு மீண்டும் பெருமை சேர்க்கும் வகையில் கடந்த 1913இல் பல்கலைக்கழகம் பதிப்பித்த அவருடைய நூல் இப்போது மறு பதிப்பு செய்யப்படும். மேலும் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறை, தமிழ் இலக்கியத்துறை மற்றும் திருக்குறள் துறை ஆகிய மூன்று துறைகளுக்கும் கால்டுவெல் பெயரில் மூன்று கல்வி உதவித்தொகைத் திட் டங்கள் அறிமுகம் செய்யப் படும்.

    அதோடு, சென்னைப் பல் கலைக்கழகத்தில் ஆரம்ப காலங்களில் தமிழ்த் துறை யில் பணியாற்றிய தமிழ் மொழி வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியவர்களின் நினை வாக சங்கப்பாதை என்ற ஓர் இருக்கை உருவாக்கப்பட்டு வாரம் அல்லது மாதம் ஒரு முறை தமிழறிஞர்கள் மற் றும் பிற மொழி அறிஞர்கள் வரவழைக்கப்பட்டு கருத்தரங் குகள் நடத்தப்படும்.
    இவ்வாறு அவர் பேசி னார்.

    Read more: http://viduthalai.in/page-7/80884.html#ixzz32gZzTHsg

    தமிழ் ஓவியா said...


    இன்றைய ஆன்மீகம்?



    குல தெய்வ வழி பாட்டுடன் முருகப் பெரு மானை செவ்வாய் கிழமைகளில் அரளிப்பூ வைத்து வழிபட்டால் உங்கள் கடன் தீரும் என்று ஓர் ஏடு தெரிவித் துள்ளது.

    தனி நபர் கடன் தீர இந்த எளிய வழியென்றால் இந்தியாவின் கடன் சுமை தீர பரங்கிப் பூ வைத்துப் படைக்கலாமா?

    Read more: http://viduthalai.in/e-paper/80935.html#ixzz32mOYYeGk

    தமிழ் ஓவியா said...


    ஆரம்பமாகிவிட்டது மத வெறியர்களின் ஆட்டம்


    பாட்னா, மே 25- டில்லியில் உள்ள ராம் லால் ஆனந்த் கல்லூரியில் பேரா சிரியராக பணியாற்றிவரு பவர் ஜி.என்.சாய்பாபா அவருக்கும் மாவாயிஸ்ட் டுகளுக்கும் தொடர்பு உள்ள தாகக் கூறி 9-5-2014 அன்று மகாராட்டிரக் காவல்துறை யினர் கைது செய்தனர். பாட்னாவில் உள்ள ஏஎன்சின்கா சமூக கல்வி நிறுவனம் சார்பில் பேரா சியர் கைது குறித்து கல்வி யாளர்களின் கருத்தரங்கு கூட்டம் நடத்த ஏற்பாடா னது.

    கூட்டம் நடக்கும் போது, வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் என்று முழக் கங்களை எழுப்பியபடி கல்வி நிறுவனத்தின் பொருட் களை சேதப்படுத்தியது. மேலும், கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தவர் களை விரட்டி அடித்து வன்முறை வெறியாட்டத் திலும் ஈடுபட்டது. வன் முறையில் ஈடுபட்டவர்கள் பாஜகவின் மாணவர் அமைப் பான அகில பாரதீய வித் யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) என்கிற அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. வன்முறை வெறியாட் டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும், விரைவில் வன்முறையில் ஈடுபட்ட வர்கள்மீது நடவடிக்கை யும் எடுக்கப்படும் என்று காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் மனு மகராஜ் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் தீவிர வாதிகளுடன் தொடர்பு என்றாலே எவ்வித விவாத மும் நடத்தவே கூடாது என்று வன்முறையாட் டத்தை ஏபிவிபியினர் நடத்தி உள்ளனர்.

    Read more: http://viduthalai.in/e-paper/80934.html#ixzz32mOfYWbk

    தமிழ் ஓவியா said...


    நவாஸ் ஷெரிப்போடு சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா?


    பாகிஸ்தான் அதிபரோடு மன்மோகன் சிங் பிரியாணி சாப்பிடலமா என மோடி கேட்டது அப்போ; தேர்தலுக்கு முன்.

    பாகிஸ்தான் அதிபரோடு நான் பிரியாணி சாப்பிடப் போறேன்; அவரோடு, ராஜபக்சேவும் சேர்ந்துக்குவார் என மோடி சொல்றது இப்போ; தேர்தலுக்குப் பின்.

    ராணுவ வீரர்களின் தலையை பாகிஸ்தான் வீரர்கள் துண்டிப்பது, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைக் கொன்று குவிப்பது என்று சம்பவங்கள் நடக்கும் போது நமது நாட்டின் பிரதமர், பாகிஸ்தான் பிரதமரோடு பேசுவேன் என்று கூறி சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார் என்றால் இது எல்லாம் எந்த தைரியத்தில் நடக்கிறது.

    அடுத்ததாக மோடி மீனவர்கள் விஷயத்தைக் கையிலெடுத்தார்.

    இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களையும், பாகிஸ்தான் இராணுவம் குஜராத் மீனவர்களையும் பிடித்துச் செல்கின்றது.

    இதற்குக் காரணம் மத்திய அரசுதான் என்று மோடி குற்றம் சாட்டினார்.

    இப்படிப் பேசியவர் வேறு யாருமல்ல; சாட்சாத் நம்ம நரேந்திர பாய் மோடி தான்.
    எங்கே?

    நம்மூர் திருச்சியில் தான்.

    இப்படி ஆக்ரோஷமாக, விஜயகாந்த் திரைப்படத்தில் நெஞ்சை நிமிர்த்தி, கண்களை உருட்டிப், பேசுவாரே, அதை மிஞ்சும் அளவிற்குப் பேசினார் மோடி.

    உடனே கூடியிருந்த மக்கள் பலத்த கையொலி எழுப்பினார்கள்.

    ஆகா, பார், நாம் எதிர்பார்த்த ஹீரோ வந்துவிட்டார் என்று.

    ஆனால், அதெல்லாம் தேர்தல் நேரத்தில் பேசும் பேச்சு என அந்த மக்களுக்கும் தெரியவில்லை; மோடிக்கு காவடி தூக்கிய நம்மூர் வைகோ அண்ட் கோவினர்க்கும் புரியவில்லை.

    இப்போது வெற்றி பெற்றதும் என்ன ஆனது?

    அதே பாகிஸ்தான் நவாஸ் ஷெரிப், அழைக்கப் படுகிறார்; இலங்கையின் ராஜபக்சேவிற்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.

    இப்போது என்ன காரணம் பாஜகவால் சொல்லப்படுகிறது. அண்டை நாடுகளுடன் நட்பு உருவாக்கிட மோடி மகத்தான ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

    இதை அரசியல் ஆக்கக்கூடாது என்கிறார்கள்.

    ஏனய்யா இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் தாக்கும்போது நவாஸ் ஷெரிப்போடு மன்மோகன்சிங் சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா? எனக் கேட்டீரே எனக் கேட்டால், அது அப்போ, தேர்தலுக்கு முன்.

    இப்ப, நீங்க நவாஸ் ஷெரிப்போடு சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா? எனக் கேட்டால், இது இப்போ, தேர்தலுக்குப் பின் என்கிறார்கள் மோடி பரிவாரத்தினர்.

    - குடந்தை கருணா

    Read more: http://viduthalai.in/page-2/80930.html#ixzz32mOx2PPA

    தமிழ் ஓவியா said...


    யாரால் யார் கெட்டது?


    நாயர் பிடித்த புலிவால் என்பார்கள்; பி.ஜே.பி. இன்று அந்த நிலையைத்தான் எட்டியுள்ளது. பதவிப் பிரமாணம் எடுப்பதற்கு முன்னதாகவே வீண் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டது அந்தக் கட்சி.

    அந்தக் காலத்தில் மன்னர்கள் முடி சூட்டிக் கொள்ளும்போது மற்ற நாட்டு அரசர்களையும், சிற்றரசர்களையும் அழைத்து சாங்கோ பாங்கமாக நாடே கிடு கிடுக்கும் அளவுக்கு விழா நடத்துவார்கள். ஜனநாயக நாட்டிலோ எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள்தாம். இந்த நிலையில் பிற நாட்டு ஆட்சித் தலைவர்களை எதற்காக அழைக்க வேண்டும்?

    இவர்களுக்கெல்லாம் வழிகாட்டி என்று கூறி இன்றளவும் பெருமையாகப் பேசப்படுகின்ற அடல் பிஹாரி வாஜ்பேயி மூன்று முறை பிரதமருக்கான பதவிப் பிரமாணம் எடுத்தாரே அப்பொழுதெல்லாம் எந்த சார்க் நாட்டுப் பிரதிநிதிகளை அழைத்தார்?

    அதுவும் இலங்கை அதிபர் ராஜபக்சே என்கிறபோது - உலக நாடுகளின் மத்தியில் இனப்படுகொலையாளி என்ற விமர்சனத்துக்குச் சொந்தக்காரர்.

    இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் செல்லக் கூடாது என்று குரல் உயர்த்தியவர்களுள் பிஜேபியினரும் உண்டே! அப்பொழுதெல்லாம் இந்த ராஜ தந்திரம் முக்காடு போட்டுக் கொண்டிருந்ததா? பக்கத்து நாட்டோடு உறவு என்பதெல்லாம் ஆட்சி நாற்காலியில் உட்கார்ந்தபோதுதான் அசரிரி சொல் லிற்றோ! பாகிஸ்தான் பிரதமருக்கும் அழைப்புக் கொடுக்கப் பட்டது. நேற்று வரை பாகிஸ்தான் பற்றி பி.ஜே.பி. வட்டாரத்தின் மதிப்பீடு என்ன?

    காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் நன்றாகத்தான் நாக்கைப் பிடுங்குமாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

    2013ஆம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரபுக்கு கோழி பிரியாணி பரிமாறி உபசரிப்பதாக மோடி குற்றஞ் சாட்டியிருந்தார் அல்லவா! இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இரு இந்திய இராணுவ வீரர்கள் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் இது போன்ற செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இந்தியாவுக்குத் தனிப்பட்ட முறையில் வந்த பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் அஷ்ரபுக்கு காங்கிரஸ் அரசாங்கம், கோழி பிரியாணி விருந்தளித்துக் கொண்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டிப் பேசினார் நரேந்திர மோடி.

    இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது குறித்து சசிதரூர் தனது ட்டுவிட்டர் சமூக இணைய தளத்தில் நவாஸுக்கு, மோடி பிரியாணி பரிமாறுவார் என எதிர்பார்க்கலாம் என்று நச்சென்று கிண்டல் அடித்துள்ளார்.

    இதில் என்ன வேடிக்கை என்றால், மோடி வந்தால் ஈழத் தமிழர் பிரச்சினையில் விடியல் முளைக்கும் என்று வீரப்பிரதாபம் பேசிக் கொண்டிருந்த - பிஜேபியோடு கூட்டணி சேர்ந்திருந்த வைகோ போன்றவர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது!

    தொடக்கமே சரியில்லையே! முகத்தைத் தொங்கப் போடும் நிலைதானே! கண்ணீரும் கம்பலையுமாகக் கும்பிட்டக் கையோடு அல்லவா மோடிக்கு விண் ணப்பம் போடுகிறார்.
    இவராவது பரவாயில்லை. பா.ம.க. நிறுவனர் மருத்துவரும், தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்தும் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதையே கண்டு கொள்ளவில்லையே!

    மத்திய அமைச்சர் நாற்காலியை நோக்கி சிறகை அசைத்துக் கொண்டிருக்கும் பொழுது கொள்கை யாவது - மண்ணாங் கட்டியாவது!

    தொடக்கத்திலிருந்து நாம் சொல்லிக் கொண்டு வந்ததுதான்; அயல் உறவுக் கொள்கையிலும் சரி, பொருளாதாரக் கொள்கையிலும் சரி காங்கிரசும், பிஜேபியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான் என்று சொன்னபொழுது எகிறிக் குதித்தவர்கள், காலங் கடந்தாவது இந்த உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    ஜெனிவாவில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த கால கட்டத்தில், இந்திய நாடாளுமன்றத்திலும் இலங்கை குறித்துத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவது பற்றிக் கூட்டப் பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதற்கு முட்டுக்கட்டை போட்டது பிஜேபி என்று காங்கிரஸ் சொன்னதே! பிகாரில் பவுத்தப் பல்கலைக் கழக விழாவுக்கு ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்ததும் பிஜேபி தானே - அதில் முன்னோடும் பெண்ணாக ஓங்கி நின்றவர் சுஷ்மா சுவராஜ்தானே!

    இது என்ன? இன்னும் போகப் போக இருக்கிறது - காட்சிகள் மாறி மாறி வரும்! உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று கூறி ஒருவர் காதை இன்னொருவர் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடும் காணரும் காட்சியைக் காணத் தயாராக இருங்கள்!

    Read more: http://viduthalai.in/page-2/80995.html#ixzz32sHJAHN2

    தமிழ் ஓவியா said...


    சிறிதும் இராது


    பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மை பற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் பற்றியோ கவலை சிறிதும் இராது. - (விடுதலை, 10.6.1968)

    Read more: http://viduthalai.in/page-2/80993.html#ixzz32sHT0q12

    தமிழ் ஓவியா said...


    பெரும்பான்மையின வாதமும், சார்க் மாநாடு அழைப்பும்


    - குடந்தை கருணா

    மோடி பிரதமர் பதவி ஏற்கும் விழாவுக்கு ராஜபக்சே உள்ளிட்ட சார்க் அமைப்பு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ராஜபக்சே வருவதற்கு தமிழ் நாட்டிலும், நவாஸ் ஷெரிப் இந்தியா வருவதற்கு சிவ சேனாவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்டை நாடுகளுடன் நட்பு வளர்வதற்கு மோடி எடுத்துள்ள சிறப்பான முயற்சி இது என பாஜக வினர் தம்பட்டம் அடிக்கின்றனர்.

    இதே அண்டை நாடுகளுடன் பேச்சு வார்த்தையை மன்மோகன் சிங் அரசு எடுத்தபோது அதை மோடியும், பாஜகவினரும் கடுமையாகச் சாடினர். இப்போது வெற்றி பெற்றதும், நட்பு, உறவு, அண்டை நாடு என மோடி பரிவாரங்கள் பேசுகின்றன.

    தேர்தல் நேரத்தில் மோடி எப்படி எல்லாம் பேசினார்? நான் வெற்றி பெற்றால் மாநில அரசுக்கு உரிய மதிப்பு அளிப்பேன் என்று சொன்னார். அந்த அடிப்படையில் ராஜபக்சேவை அழைப்பதற்கு முன், தமிழக அரசோடு கலந்து பேசியிருக்க வேண் டாமா?

    ஏறத்தாழ ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப் படுவதற்கு காரணமான ராஜபக்சே மீது போர் குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என பல நாடுகள் முயன்று வரும் நிலையில், தமிழக மக்கள் அதற்காக வலியுறுத்தும் நிலையில், ராஜபக் சேவை அழைக்க வேண்டிய அவசி யம் என்ன? குஜராத்தை சேர்ந்த ஒரு லட்சம் மக்கள், வேண்டாம், ஒரு நூறு பேர் பாகிஸ்தானில் தாக்கப்பட்டிருந்தால், மோடியின் நிலைப்பாடு இப்படித் தான் இருக்குமா? அதெல்லாம் இருக்கட்டும். பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறிய மோடி, வெற்றி பெற்றதும் சொன்னாரே, சார்க் அமைப்பு உறுப்பினர்களை அழைப்பதற்கு முன், அவரது கூட்டணியில் இருபத்தேழு கட்சிகள் இருக்கின்றனவே, அதில் தொடர் புடைய மாநிலக் கட்சிகளோடு ஏதாவது ஆலோசனை நடத்தியிருக்க வேண்டுமா? வேண் டாமா? தொடர்புடைய மாநிலக் கட்சி களோடும் பேசவில்லை; தொடர் புடைய மாநில அரசோடும் பேச வில்லை.

    அப்படி என்றால் இப் போது அமைய உள்ள ஆட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அல்ல; மாறாக, இது அவர்கள் முதலில் சொன்னதுபோல், மோடி சர்க்கார் தான் என்பதை, வாக்களித்த மக்கள் மட்டுமல்ல; கூட்டணியில் உள்ள கட்சிகளும் புரிந்து கொள்ள வேண் டும். பதவி ஏற்கும் விழாவிற்கு சார்க் அமைப்பு உறுப்பினர்களை அழைக் கும் வழக்கம் ஏதும் இதற்கு முன்னர் எப்போதும் கிடையாது. இப்போது மோடி அரசால் ஆர்எஸ்எஸ் வழி காட்டுதலில் இந்த அழைப்பு அனுப் பப்பட்டுள்ளது என்றால், இதன் நோக்கம், பாஜகவின் பெரும்பான் மையினவாதத்தை அண்டை நாடு களுக்கு காட்டுவதற்குத்தான் எனக் கருத வேண்டியுள்ளது.

    Read more: http://viduthalai.in/page-2/81003.html#ixzz32sHauayB

    தமிழ் ஓவியா said...


    சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

    கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைவால் சர்க்கரை நோய் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், குடும்ப பாரம்பரியம் நமது வாழ்க்கை நடைமுறை ஆகியவையும் முக்கிய காரணிகளாக உள்ளன. சர்க்கரையின் அளவை கணக் கிட்டு அதற்கேற்ப மாத்திரைகள் வழங்கப்படும். சிலருக்கு சர்க்கரை அளவு ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கும். அதற்கேற்ப வீரியமிக்க மாத்திரைகள் வழங்கப்படும். மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாத போது, இன்சுலின் செலுத்தப்படும்.

    அறிகுறிகள்: அதிக தாகம் எடுத்தல், எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலின் மெல்லிய பாகங்களில் வெடிப்பு ஏற்படுதல் (ஆணுறுப்பு, விரல் நுனிகளில் வெடிப்பு, ஊறல் இருக்கும்), தலை சுற்றல் போன்றவை இருக்கும்.

    ரத்தபரிசோதனை: பொதுவாக 35 வயதிற்கு மேல் ஆண்டிற்கு ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்வது நல்லது. சர்க்கரை நோய் பாதிப்புடையவர்கள் ஆரம்பத்தில் சர்க்கரை அளவை துல்லியமாக அறிய தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். உடல் பருமன் உடையவர்கள், குடும்ப பாரம்பரியமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் 25 வயது முதலே சோதனை செய்யலாம். சர்க்கரை நோய் நரம்புகளையும் வலுவிழக்க செய்யும். மேலும் சிறிய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதால் சிறிய ரத்த குழாய் மற்றும் பெரிய ரத்த குழாய் பாதிப்பு ஏற்படும். பெரிய ரத்த குழாய் பாதிப்பால் கால்கள், இதயம் போன்றவவை பாதிக்கபடும். இதனால் மாரடைப்பு, கால்களில் உணர்ச்சியற்று போதல் ஏற்படும். நோயை கண்டு கொள்ளாவிட்டால் சுயநினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும். சிறிய ரத்தக்குழாய் பாதிப்பால் கண்கள், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். எனவே சர்க்கரை நோயாளிகள் கொலஸ்டிரால், பிரஷர், கிரியாட்டினின், ஆல்பமின்(உப்பு) போன்ற நோய்களுக்கான பரிசோதனையும் மேற் கொள்வது அவசியம். மேலும் கண்களையும் ஆண்டிற்கு ஒரு முறை பரிசோதிப்பதால் கண்களில் திரையில் உள்ள நரம்புகளில் பாதிப்பை கண்டறிந்து லேசர் சிகிச்சை மூலம் பார்வை இழப்பைத் தடுக்க முடியும்.

    Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIEsRbH

    தமிழ் ஓவியா said...

    உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் பார்லி

    பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், அப்படி மறந்து ஒதுக்க முடியாத அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு பொருள் பார்லி. குறைந்த கலோரி கொண்ட உணவான பார்லி, இயற்கையான எடைக் குறைப்புக்கு உதவுகிறது. அரிசியுடன் ஒப்பிடும் போது இதில் மாவுச்சத்து குறைவு. உடல்நலம் சரியில்லாத போது, நார்ச்சத்து குறைவான உணவுகளையே உட்கொள்ளச் சொல்வார்கள் மருத்துவர்கள். அதற்குப் பொருத்தமான உணவு பார்லி. எளிதில் செரிமானமாகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டான புண்களை ஆற்றும். அதனால்தான் காய்ச்சலில் படுத்தவர்களுக்கு பார்லி கஞ்சி கொடுக்கும் பழக்கம் அந்தக் காலத்தில இருந்திருக்கிறது. இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான ஒரு உணவு. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், இது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதனால்தான் இதய நோயாளிகளுக்கு பார்லி நல்லது. பார்லியில் பீட்டாக்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட் ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டாக்ளூக்கோனானது, பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும்.

    அதனால், இதய நோயாளிகளுக்கு அரிசி உணவுகளுக்குப் பதில் பார்லி அதிகம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்ற வல்லதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பார்லியில் நயாசின் என்கிற பி வைட்டமின் அதிகம். மேலும் இதிலுள்ள லிப்போ புரோட்டீன் (புரதமும் கொழுப்பும் கலந்த ஒரு சத்து) மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு அந்தப் பருவத்தில் இயல்பாக எகிறக் கூடிய எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறையும். அதனால் உடலில் தண்ணீர் தேக்கம் அதிகமிருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் முகமெல்லாம் வீங்கிக் காணப்படும். அந்தப் பிரச்சினைக்கு பார்லி எடுத்துக் கொள்வது பலனளிக்கும்

    Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIVBdx4

    தமிழ் ஓவியா said...


    ஹிட்லருக்கு இணையாக ஒப்பிடவேண்டிய மோடியை ஏழைகளின் காப்பாளர் என்று தூக்கிப் பிடித்தது சரியா?


    ஹிட்லருக்கு இணையாக ஒப்பிடவேண்டிய மோடியை ஏழைகளின் காப்பாளர் என்று தூக்கிப் பிடித்தது சரியா?

    ஊடகங்களுக்கு அச்சுதானந்தன் கேள்வி

    திருச்சூர்,மே 26- ஜன நாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப் படும் ஊடகங்கள், கார்ப் பரேட்மயமாக்கலின் ஆர வாரங்களுக்கு இடையே தங்களின் முகத்தை இழந்துகொண்டிருக்கின்றன என்று கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.

    திருச்சூரில் சீனியர் ஜெர் னலிஸ்ட் ஃபாரம் (மூத்த பத்திரிகையாளர்கள் சங் கம்) மாநில மாநாட்டை யொட்டி ஊடகங்களின் நம்பகத்தன்மை வீழ்ச்சி யடைகிறதா? என்ற தலைப் பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங் கிற்கு அனுப்பிய துவக்க உரையில் அச்சுதானந்தன் மேலும் கூறியதாவது: சர்வதேச-தேசிய-மாநில சூழ்நிலைமைகளில் ஊடக அமைப்புகள் முதலாளித் துவ-கார்ப்பரேட் நலன் களுக்கு அடிபணிந்து செயல் படுகின்ற நிலைமை உள் ளது நாட்டில் உள்ள முக் கியமான சுமார் 40 பத்திரி கைகளும் அவற்றின் துணை வெளியீடுகளும் டாடா, பிர்லா மற்றும் பெனெட், கோல்மேன் உள்ளிட்ட நான்கைந்து பெரும் ஏக போக முதலாளிகளுக்குச் சொந்தமானதாக உள்ளன. கேரளத்திலும் பிரபல பத் திரிகைகள் இவர்களின் நலன்களைத்தான் பாதுகாக் கின்றன.

    சமூக வாழ்க்கையில் நிலவும் அநீதிகளை கண்ட றியவும், அவற்றை அகற்றி வாழ்க்கையை ஒழுங்குப் படுத்தவும், மாற்றி அமைக் கவும் ஊடகங்கள் கட மைப்பட்டவையாகும். ஆனால், ஊடகங்கள் இன்று பணம் வாங்கிக் கொண்டு செய்திகளை வெளியிடுவதாகவும் பிரை வேட் ட்ரீட்ஜெர்ன லிசம் (தனியார் அணுகி தனக்கா னதை சாதித்துக் கொள்ளும் இதழியல்) என்றும் குற்றச் சாட்டுக்கு ஆளாகின்றன. திருவனந்தபுரத்தில் அர சின் குடியிருப்புத்திட்டத் தில் வீடு வழங்கப்பட்ட 54 பத்திரிகையாளர்கள் ஆண் டுகள் பலவாகியும் ஒரு பைசாக் கூட கட்டவில்லை என்றுசில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளி யானது.

    எல்லாவற்றையும் விமர்சிக்கின்ற நான்காவது தூண்என்று அழைக்கப் படும் பத்திரிகைகளை யார் விமர்சிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. கேரளத் தில் இரண்டு பிரபல பத்தி ரிகைகளுக்கு, மற்ற பத்திரி கைகளுக்கு வழங்கப்படு வதைவிட மூன்று மடங்கு கூடுதல் கட்டணத்தில் அரசு விளம்பரம் அளித்தது என்று தகவல் உரிமை சட் டத்தின்படி கிடைத்த தக வல் கூறுகிறது. ஊடகங் களின் பிரச்சாரங்கள் மூலம் நரேந்திரமோடி பாரதத்தின் ரட்சகர் என்று வர்ணிக்கப் பட்டார். இதுபற்றி ஊட கங்கள் மேலும் ஆய்வு செய்வது அவசியமாகும்.

    குஜராத் இனப்படு கொலையின் பேரில் ஹிட் லருடன் ஒப்பிடும் அள வுக்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மோடியை ஊட கங்கள் எளிமையானவர் என்றும் இரக்கம் உள்ளவர் என்றும் ஏழைகளின் காப் பாளர் என்றும் வர்ணித்தன. ஊடகங்களையும் ஊடகங் களின் போக்குகளையும் விமர்சனரீதியாக பார்க் கின்ற ஒரு சமூகத்தை உரு வாக்கவேண்டும். அதுதான் ஊடகங்களின் நம்பகத்தன் மையை மீட்டெடுப்பதற் கான முக்கியமான முதல் படியாகும். இவ்வாறு அதில் அச்சு தானந்தன் கூறியுள்ளார்.

    Read more: http://viduthalai.in/page-8/81019.html#ixzz32sItyzJm