Search This Blog

18.5.14

ஜமீன்தாரல்லாதார்மகாநாட்டில் பணநாயகம் பற்றி பெரியார் உரை

ஜமீன்தாரல்லாதார்மகாநாட்டில் பணநாயகம்பற்றி தந்தை பெரியார் உரை

தோழர்களே! மொத்த விஸ்தீரணத்தில் மூன்றிலொரு பாக பரப்புக்குமேல் ஜமீன் முறை ஆட்சியிலிருக்கும் இந்த சேலம் ஜில்லாவில் முதல் முதலாக இன்று இங்கு ஜமீன்தாரல்லாதார் மகாநாடு ஒன்று கூட்டப்பட்டதானது எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும்.

நாம் உலக பொது ஜனங்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம் இம்மாதிரியாக பல அல்லாதார்கள் மகாநாடுகள் கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில்தான் பெரிதும் அடங்கியிருக்கின்றது. இன்னும் இதுபோலவே பல மகாநாடுகள் கூட்டவேண்டியிருக்கிறது. சுயமரியாதை மகாநாடுகள் கூட்டப்படும் இடங்களில் இம்மாதிரி மகா நாடுகள் அடிக்கடி கூட்டப்படுமென்று எதிர்ப்பார்க்கிறேன்.

உதாரணமாக லேவாதேவிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, முதலாளிகள் அல்லாதார் மகாநாடு, தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, வீடுகளின் சொந்தக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, நிலச்சுவான்தார் அல்லாதார் மகாநாடு மேல்ஜாதிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, பணக்காரர்கள் அல்லாதார் மகாநாடு என்பது போன்ற பல மகாநாடுகள் கூட்டி இவர்களின் அக்கிர மங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும், பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி அவைகளை ஒழிக்கச் செய்யவேண்டியது நமது கடமையாகும்.

உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த தன்மைகளால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும் சமத்துவத்திற்கும், முற் போக்குகளுக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத் துக்கும் முட்டுக் கட்டைகளும் இருக்கின்றனவோ.
அவைகளெல்லாம் அழிந்தொழித்து என்றும் தலை தூக்காமலும், இல்லாமலும் போகும்படி செய்யவேண்டியது தான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லட்சியமாகும். மனித சமூகத்துக்கு உள்ள தரித்திரத்திற்குக் காரணம் செல்வவான்களேயாகும். செல்வவான்கள் இல்லாவிட்டால்  தரித்திரவான்களே  இருக்க மாட்டார்கள், மேல் வகுப்பார் இல்லாவிட்டால் கீழ்வகுப்பார் இருக்கவே மாட்டார்கள். ஆதலால்தான் இம்மாதிரி அல்லாதவர்கள் மகாநாடு கூட்டவேண்டுமென்கின்றோம்.

இன்று ஏன் முதன் முதலாக ஜமீன்தார் அல்லாதார் மகாநாடு கூட்டினோமென்றால் இன்றைய உலக ஆதிக்கம் அவர்கள் கையிலேயே இருந்து வருகின்றது. இதற்குமுன் இந்நாட்டு ஆதிக்கம் பார்ப்பனர்கள் கையிலேயே இருந்தது.  அதற்காகவே நமது இயக்கம் பல பார்ப்பனர் அல்லாதார் ஸ்தாபனங்களும், மகாநாடுகளும், வாலிபசங் கங்களும், புதியமுறையில் தோற்றுவித்தும் கூட்டுவித்தும் பார்ப்பனக் கொடுமைகளையும் மோசங்களையும் ஒருவாறு பாமரமக்களுக்கு விளக்குவதில் முனைந்து நின்று வேலைசெய்ததின் பயனாய் ஒரு அளவுக்குப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதில் வெற்றி பெற்றோம்.

ஆனால், அந்தப் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது என்கின்ற சந்தோஷத்தை அடைவதற்குள் அதற்குப்பதிலாக அதுபோன்ற கொடுமையும் மோசமுமான ஜமீன்தார் ஆதிக்கம் தலைதூக்கி தாண்டவமாட ஏற்பட்டுவிட்டது. முன்பிருந்தகெடுதியும் தொல்லையுமே பார்ப்பன ஆதிக்கம் என்னும் பேரால் இல்லாமல் ஜமீன்தார் ஆதிக்கம் என்னும் பேரால் இருந்துவருகின்றன.
பார்ப்பனர்களைப்போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரணமாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் இன்றைய ஆட்சி முறைக்கு தூண்கள் போலவும் இருந்து வருகின்றவர் களாவார்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத்துக்கு வேண்டாதவர்களும், உலக மக்கள் கஷ்டங்களுக்கெல்லாம் காரணமாயிருப்பவர்களு மாவார்கள்.

இந்த ஜமீன்தார்கள் எப்படி ஏற்பட்டார்கள்? எப்படி யிருந்து வருகின்றார்கள்? இவர்களது செல்வமும், மேன்மையும் எதற்குப் பயன்படுகின்றன? என்பவைகளை யோசித்துப் பார்த்தால் இவர்கள் உலகுக்கு வேண்டாத வர்கள் என்பதும், ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.
இன்றைய தினம் சாதாரணமாய் ஜமீன்தார்கள் என்றால் என்ன? என்று பார்ப்போமானால் ஒரு விஸ்தீரணமுள்ள பிரதேசத்தை சொந்தமாக உடையவர்கள் என்றும், அந்த விஸ்தீரணத்திலுள்ள பூமிகளுக்கு உள்ள வரி (கிஸ்தி) இந்த ஜமீன்தார்களுக்கே சேர்ந்தது என்றும் அதில் ஏதோ ஒரு பாகம் சர்க்காருக்குச் செலுத்திவிட்டு பாக்கியை தாங்களே அனுபவிப்பவர்கள் என்றும் தான் அருத்தமாய் இருந்து வருகின்றது.

பொதுவாக பூமிகளுக்குக் கிஸ்தி அதாவது நிலவரி கொடுப்பது என்பது எதற்காக வழக்கத்திலிருந்து வருகின்றது என்றால் பயிரிடும் மக்களின் நன்மைக்கும் பத்திரத்திற்குமான காரியங்களைச் செய்யவே பயிரில் ஒரு பங்கு கொடுக்கப்படுவதாகும். அது போலவே சர்க்கார் வாங்கும் நிலவரிகளுக்கும் மற்றபடியான வரிகளுக்கும் சரியாகவோ, தப்பாகவோ ஒரு வரவு செலவுத்திட்டம் காட்டி அதன்படி படிப்பு, சுகாதாரம், நீதி, பத்திரம், போக்குவரவு சாதனம் முதலிய காரியங்களுக்குப் பயன்படுத்தி வருவதாய்ச் சொல்லியும், கணக்கு காட்டியும் வருகிறார்கள், ஆனால் இந்த ஜமீன் தார்களால் குடிகளிடமிருந்து வாங்கும் நில வரிக்கும், வாரத்துக்கும் இது போல் குடிஜனங்களுக்கு என்ன பிரதிபிரயோஜனம்  இருந்து வருகின்றது? என்பதை நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டும்.

ஜமீன்தார்கள் தங்கள் வரும்படியில் சர்காருக்கு ஏதோ ஒரு சிறு பாகம் கொடுப்பதாய்ச் சொல்லப்படுவதெல் லாம் குடிகளிடமிருந்து வரியை எப்படியாவது வசூலிப்ப தற்கும், ஜமீன்தார்கள் என்ன அக்கிரமம் செய்தாலும் குடிகளால் ஜமீன்தாரர்களுக்கு ஆபத்து இல்லாமல் இருப்பதற்கும் கூலியாகவே ஒழிய மற்றபடி ஜமீன் குடிகளுடைய நன்மைக்கு என்பதாக எண்ணங் கொண் டல்ல என்பதே எனதபிப்பிராயம்.

இந்த ஜமீன்தார்களுக்கு இந்தப்பதவி வந்ததற்கு காரணம் எல்லாம் ஆதியில் அந்நிய சர்க்கார் இத்தேசத்துக்கு வந்தபோது அவர்களுக்கு வேண்டிய சவுகரியம் செய்து கொடுத்தும், இங்குள்ள எதிர்ப்புகளை அடக்கி ஒடுக்க உதவி செய்ததுமான காட்டிக் கொடுத்த காரியங்களுக்குத்தான் சன்மானமாய் (லஞ்சமாய்) கொடுக்கப்பட்டதேயொழிய வேறில்லை.

இப்படிப்பட்ட இந்த ஜமீன்தார்களின் யோக்கியதையை நான் உங்களுக்கு அதிகமாய் சொல்லிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய அருங்குணங்களில் எல்லாம் குடிப்பதும், கூத்திமார்கள் வைப்பதும், பந்தயம் சூது ஆடுவதும் தலை சிறந்த குணங்களாகும். மேலும் இப்பொழுது சிறிதுகாலமாய் அதாவது பார்ப்பன ஆதிக்கம் ஒடுங்க ஆரம்பித்த பின்பு அரசியல் தேர்தல்களை பணத்தின் மூலம் வியாபார முறையில் நடத்தி வெற்றி பெற்று ஆதிக்கமடைந்து பெருமை அடைவதையும், பணம் சம்பாதிப்பதையும் மற்றொரு அருங்குணமாய் கொண்டி ருக்கிறார்கள்.

மற்றபடி இவர்களிடம் என்னயோக்கியதை இருக்கிறது? இவர்களால் தேசத்துக்கோ, மனித சமூகத்துக்கோ என்ன பயன்? என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்பது தெற்றென விளங்கும். இன்றைய ஜமீன்முறை நாளடைவில் எல்லா பூமியும் அவர்கள் கைக்கே போய்ச்சேரும் படியானதாகவும், எல்லா அதிகாரமும், பதவியும் அவர்கள் கைக்கேபோய்ச் சேரும்படியான மாதிரியிலும் தான் இருந்து வருகின்றது.

ஏனெனில் வரி கொடுக்க முடியாத பூமிகளும், வரி கொடுக்கவும், செலவுக்கும் வரும்படி போதாமல் இருந்துவரும் குடியானவனுடைய பூமிகள் முழுவதும் பணக்காரர்களாயிருக்கின்ற ஜமீன்தாரர்களுக்குத் தான் நாளாவட்டத்தில் போய்ச் சேருகின்றதாய் இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் ஒவ்வொரு ஜமீன்தார் களுக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் பூமிகள் இருந்து வருகின்றன.

இதுபோலவே தேர்தல்களிலும், அது எப்படிப்பட்ட தேர்தலாய் இருந்தாலும் ஜமீன்தாரர்கள் தாராளமாய் 40,000, 50,000, ஒரு லட்சம், இரண்டு லட்சம், என்கின்ற கணக்கில் ரூபாய்களை வாரி இறைத்து எலக்ஷன்களில் வெற்றி பெற் றும், மற்றும் வேறு இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு 1000, 5000 என்கின்ற கணக்கில் ரூபாய்களை கொடுத்து அவர்களை தங்கள் அடிமையாக்கியும் சகல பதவி களையும் அதிகாரங்களையும் சுவாதீனப்படுத்திக் கொள்ளவும் முடிகின்றது.

இந்த மாதிரி விலை கொடுத்து தங்களின் செல்வத்தின் பயனாயும் செல்வாக்கின் பயனாயும் பெற்ற பதவியும் அதிகாரமும் ஆதிக்கமும் எந்தவழியில் உபயோகப்படுத்தினாலும் கேள்வி கேட்பாடு இல்லாமல் செலாவாணியாகி வருகின்றதைப் பார்க்கின்றோம்.

ஜமீன்தாரர்களின் நடவடிக்கைகளை நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இன்று யாரும் இல்லை என்றே நினைக்கின்றேன். சில ஜமீன்தாரர்கள் அவர்கள் எல்லைக்குள்பட்ட விஸ்தீரணத்தில் எந்தப் பெண் ருதுவானாலும் அவர்களே தான் முதலில் சாந்தி முகூர்த்தம் செய்யவேண்டும் என்கின்ற (எழுதாத) சட்டம் அமலில் இருந்து வருவது எனக்குத் தெரியும். இதில் ஒன்றும் அதிசயம் இருப்பதாக யாரும் நினைக்க வேண்டிய தில்லை.
இந்தச் சட்டம் சில மதகுருக்கள்மாருக்கும் இருந்துவருவது எனக்குத் தெரியும். இது தவிர தனது குடிஜனங்களிடம் இருக்கும் நல்லபெண், நல்லமாடு, குதிரை முதலியவைகள் ஜமீன்தார்களுக்கே சொந்தமானது என்கின்ற முறையும் சில இடங்களில் இருந்து வருவது எனக்குத் தெரியும்.

மற்றும் பல ஜமீன்தாரர்கள் சுகவாசமும், வெளிநாடு சுற்றுப்பிராயணமும், 100, 200 கணக்கான மனைவிகளும், வைப்பாட்டிகளும், ஆயிரம் இரண்டாயிரக்கணக்கான தாசிகள் விபச்சாரிகள் ஆகியவர்கள் சம்பந்தமும் வைத்துக் கொண்டிருப்பதுடன் 40, 50, 100, 200 குதிரைகளும் 10, 20, 30, மோட்டார்கார்களும், 10, 20, அய்யர்கள் என்று பெயர்வழங்கும் மாமாக்களையும் உடையவர்களாக இருந்துகொண்டு நெல், மரத்தில் காய்க்கின்றதா? கொடியில் காய்க்கின்றதா? செடியில் காய்க்கின்றதா? என்றுக்கூட தெரியாதவர்களும் வேஷ்டிகள் செடியில் காய்க்கின்றதா? அல்லது தறியில் நெய்யப் படுகின்றதா? என்று தெரியாதவர்களும் ஏராளமாய் இருக்கிறார்கள்.

இவர்கள் வாழ்க்கை நிலையை அவர்களது பள்ளிக்கூட வாழ்வில் இருந்தே கவனித்தால் பெரும்பாலும் ஒவ்வொருவர் களுடைய யோக்கியதையும் விளங்கும். சாதாரணமாக சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டோமேயானால் வருஷமொன்றுக்கு ஜமீன்தாரர்களுக்கு குடிகளிடமிருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் வரையில் கிஸ்தி (நிலவரி) கிடைக்கின்றது.

இதில் அரைக்கோடி ரூபாய் மாத்திரமே இவர்கள் சர்க்காருக்குச் செலுத்திவிட்டு பாக்கி இரண்டு கோடி ரூபாய்களை இந்த ஜமீன்தார்கள் அனுபவித்து வருகின்றார்கள், இந்த  இரண்டு கோடி ரூபாயில் 100க்கு 90 பாகம் ரூபாய்கள்  நான் மேல் குறிப்பிட்ட வழியிலேயே பாழாக்கப்படுகின்றன.
இந்த நிலவரியானது சென்னை அரசாங்கத்தாருக்கு மாகாணம் பூராவிலும் கிடைக்கும் நிலவரிக்கு 3இல் ஒரு பங்குக்கு மேலானதென்றே சொல்லுவேன் இந்தப்படி விளைவின் பயனாய் உண்டான செல்வம் அதுவும் எத்தனை ஏழைக்குடியானவன், விவசாயக்கூலிக்காரன் ஆகியவர்கள் பெண்டு பிள்ளைகள் சகிதம் தங்கள் சரீரங்களை தினம் 8 மணி முதல் 15 மணிவரையில் வியர்வைப் பிழிந்து சொட்டு சொட்டாய் சேர்த்த ரத்தத்திற்கு சமானமான செல்வத்தை, ஒரு கஷ்டமும், ஒரு விபரமும் அறியாதவர்களும், ஒரு பொறுப்பும் இல்லாதவர்களுமான ஜமீன்தார்கள் சர்க்காரில் லைசென்சு பெற்ற கொள்ளைக் கூட்டத்தார்கள் போல் இருந்து கொண்டு மக்கள் பதறப்பதற வயிறு, வாய் எரிய எரிய, கைப்பற்றி பாழாக்குவதென்றால் இப்படிப்பட்ட ஒரு கூட்டம் உலகில் இருக்க வேண்டுமா? என்றும் இவர்களின்  தன்மையையும், ஆதிக்கத்தையும் இன்னும் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜனசமுகம் சுயமரியாதையை உணர்ந்த  ஜன சமூகமாகுமா? என்பதைப்பற்றியும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

சாதாரணமாக ஜமீன் என்கின்ற மேற்கண்ட தன்மை, நாட்டில் அடியோடு இல்லாமல் இந்த லாபங்களையும் அதாவது இந்த 2 கோடி ரூபாய்களையும் சர்க்காரே நேராய் அடைவதாய் இருந்தால் அதனால் மக்களுக்கு எவ்வளவு பயன் ஏற்படுத்தலாம் என்பதையும் யோசிக்க வேண்டுகின்றேன்.

ஆதலால் மேல்ஜாதி, கீழ்ஜாதி முறை கூடாதென்றும், குருக்கள் முறைக் கூடாதென்றும் எப்படி நாம் பல துறைகளில் வேலை செய்கின்றோமோ அதுபோலவேதான் ஜமீன்தாரன் குடிகள் என்கின்றத் தன்மையும், முறையும் கூடாதென்று வேலை செய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம் என்று இச்சிறு வார்த்தைகளோடு இந்தத் தீர்மானத்தை நான் 
பிரேரேபிக்கின்றேன் என்று பேசினார்.

தீர்மானங்கள்

1. உலக செல்வத்தை ஒரே பக்கம் சேர்க்கும் முறையை ஒழிப்பதற்கும், உலகப் பொருளாதார சமத்துவத்துக்கும்,  பாடுபடுகிற மக்கள் அதன் பயனை சரிவர அடைய வேண்டும் என்பதற்கும், ஜமீன்தார் முறையானது பெருத்த கெடுதியாகவும், தடையாகவும் இருந்துவருவதால் ஜமீன்தார் தன்மையை அடியோடு ஒழிக்கப் பகுத்தறிவுக்கு  ஏற்றவழியிலும், பொருளாதார சமத்துவ நியாயவழியிலும் சுயமரியாதை இயக்கம் பாடுபடவேண்டுமென்று இம் மகாநாடு தீர்மானிக்கிறது. 

பிரேரேபித்தவர்:-ஈ. வெ. ராமசாமி, ஆமோதித்தவர்: கே.வி.அழகர்சாமி.

2. இந்திய நாட்டு தேசியக் கிளர்ச்சி என்பதானது சுயராஜ்யம், சுயஆட்சி, ஜனநாயக ஆட்சி என்பவைகளின் பெயரால் சுமார் 50 வருஷகாலமாச் செய்து வந்த வேலைகளின் பயனெல்லாம் ஜமீன்தாரர்களுக்கே அனுகூலமாயிருப்பதால்.இந்திய ஸ்தல ஸ்தாபனம், சுயஆட்சி அரசாங்கம்  ஜனநாயக ஆட்சி ஆகிய நிர்வாகமெல்லாம் பொது ஜன விரோதிகளான ஜமீன் தாரர்கள் வசமும் அவர்கள் போன்ற செல்வ வான்களிடமே போய்ச்சேருவதாயிருப்பதாலும் இனி அந்தப்படி நேராமல் அதாவது ஜமீன்தாரர்களும் செல்வவான்களும் பொறுப்பற்றவர்களாகிய படித்த கூட்டத்தார் என்பவர்களும் கைப்பற்றாமல் இருக்கும்படி சகல முயற்சிகளும் செய்து அவை ஏழைப் பாட்டாளி மக்கள் கைக்கே வரும்படியான மார்க்கத்துக்கு சுயமரியாதை இயக்கம் மும்முரமாய் உழைக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது. 

 பிரேரே பித்தவர்: ப. ஜீவானந்தம், ஆமோதித்தவர்: நடேசன்

3. ஜமீன்தார்கள் நிலைத்திருப்பதற்கும், அதிகரிப் பதற்கும் அனுகூலமாயிருந்து வரும் சட்டங்களையும் முறைகளையும் ரத்து செய்துவிட வேணுமாய் கிளர்ச்சி செய்யச் சட்டசபைகளின்  மூலம்  அச்சட்டங்கள் ரத்தாக வேலை செய்யவேண்டும் என்றும் இம்மகாநாடு தீர் மானிக்கிறது. (எ) இக்காரியங்களை நடைபெறச் செய்யவும் ஜமீன் குடிகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்ற தீவிர முயற்சிகள் செய்யவும் கீழ்க்கண்டவர்களடங்கிய கமிட்டி ஒன்றை நியமிக்கிறது.

தோழர்கள்: ஈ.வெ. ராமசாமி, சி. நடராஜன், கே.எம். பாலசுப்பிரமணியம்  பி.ஏ., பி.எல்., கே.வி. அழகர்சாமி, வி. பார்த்தசாரதி, 

பிரேரேபித்தவர்:  எஸ்.வி. லிங்கம், ஆமோதித்தவர்: கோவை கிஸன் முதலிய சுமார் 20, 30 தோழர்களாகும்.

-----------------------தந்தை பெரியார் " குடிஅரசு" - சொற்பொழிவு - 27.08.1933

22 comments:

தமிழ் ஓவியா said...



திருவாய் மலரும் திருவாளர்!

மக்களாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் தேர்லின் போது பணப்பட்டுவா டாவை தடுத்து நிறுத்த முடி யாது என்கிறார் தமிழ் நாட்டின் தலைமைத் தேர் தல் அதிகாரி பிரவீன்குமார் (மக்கள் வரிப் பணத்தில் வாழும் அதிகாரிகள் மக்கள் மீதே பழி போடும் விசித் திரம்) மக்கள் திருந்த வில்லை என்பதற்காகத் தானே அதிகாரம் ஆட்சி என்பதெல்லாம்?


இவர்கள் படித்தவர்கள்?

சேலம் மக்களவைத் தேர்தலில் அரசுப் பணியா ளர்களின் தபால் வாக்களிப் பில் செல்லாதவை 466.

பி.ஜே.பி.யும் முஸ்லீம்களும்

பி.ஜே.பி. சார்பாக 7 தொகுதிகளில் முஸ்லீம்கள் நிற்க வைக்கப்பட்டும் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. மூன்று முறை வெற்றி பெற்ற ஷானவாஸ் ஹுசேன் பீகார் மாநிலம் பாகல்பூரில் 9485 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

ஜம்மு காஷ்மீர் பாமுல்லா தொகுதியில் பிஜேபி சார்பில் நிறுத்தப்பட்ட குலாம் முகமதுபீர் - ஆறாம் இடத்திற்கும், சிறீநகர் தொகுதியில் முஷ்டாக் அகமது மாலிக் 4ஆம் இடத்துக்கும் தள்ளப்பட்டனர். மே. வங்கத்தில் தம்லுக் தொகுதியில் பாதுஷா சலாம் நான்காம் இடம் பிடித்தார். லட்சத் தீவிலோ சையது முகம்மது கோயாவுக்கு 5ஆம் இடம்,6 இடங்களில் 3 தொகுதிகள் ஜம்மு காஷ்மீரில் என்பதுகூட வேறு வழியில்லாத காரணமே!



அட பைத்தியசாமிகளே!

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணப்பட்ட போது தொடக்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னணியில் இருந்தார். செய்தி கேள்விபட்டு முதல் அமைச்சர் என். ரெங்கசாமி அப்பா பைத்தியசாமி படத்தை வைத்து - அதற்கு முன்னால் உட்கார்ந்து உற்றுப் பார்த்தபடி இருந்தாராம். சிறிது நேரத்தில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இவர் வெற்றி பெற்றவுடன் கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலுக்கு சென்று கும்பிடு போட்டாராம். (வாக்குப் பதிவு இயந்திரத் தில் அப்பா பைத்தியசாமி தில்லுமுல்லு செய்திருப்பாரோ!) அட பைத்தியங்களே!

Read more: http://viduthalai.in/e-paper/80575.html#ixzz32DH8GtOi

தமிழ் ஓவியா said...


நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரி பழம்

முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப் படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.

ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப் பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் அய்ந்து மடங்கு அதிகமுள்ளது.

வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின் றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குண மாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸி டன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DHqHz3B

தமிழ் ஓவியா said...

நீரிழிவு நோயை தடுக்கும் உணவுகள்

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோய் இந்த சர்க்கரை நோயே. அதிகம் பசி உண்டாகும். நாவறட்சி அடிக்கடி ஏற்படும். உடல் சோர் வாகவே இருக்கும். அடிக்கடி சிறுநீர் பிரியும்.

கை, கால் மரத்துப் போகும். சில நேரங்களில் தடித்துப் போகும். கண் பார்வை மங்கல் உண்டாகும். பாதங்கள் உணர்வற்ற தன்மை உண்டாகும். திடீரென உடல் எடை குறைதல், கூடுதல் போன்றவை உண்டாகும். அதிக கோபம், மன எரிச்சல், மன உளைச்சல் ஏற்படும். உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டால் அது வெகு நாட்களுக்கு ஆறாமல் இருக்கும்

நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய சில காய்கறிகள்

வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப் பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அவரைப் பிஞ்சு. இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாக வும் செய்து அருந்தலாம்.

காம்பு நீக்கி, சுத்தம் செய்து அரிந்த கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, பூண்டு, சாம்பார் வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து 1 டம்ளர் அளவு வந்தவுடன் அருந்தலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், அய்ஸ்கிரீம், வெல்லம், உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள். கேரட், பீட்ரூட் குறைந்த அளவு மாதம் இருமுறை சாப்பிடலாம். சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தாலே நடைப் பயிற்சி மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்தில் 20 நிமிடம் நடந்தால் போதும். பின்னாளில் நேரத்தை சற்று அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DICgRKU

தமிழ் ஓவியா said...


கருவுற்ற பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்


கருவுற்றவர்கள் உண்ணும் சில உணவுகளில் கருச் சிதைவையோ அல்லது கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்தும் கிருமிகளும் பாக்டீரியாக்களும் அதிகளவில் காணப்படுகின்றன. ஆகையால், கருவுற்றவர்கள் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்று ஒரு பட்டியலை குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மீன்கள்: ஆற்று மீன்களையோ, குளத்து மீன்களையோ அல்லது அய்ஸ் வைத்த பதப்படுத்தப்பட்ட மீன்களையோ சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிகள் இந்த மாதிரியான மீன்களை உண்பதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரித்து கருவுற்ற நேரத்தில் அவர்களது உடலில் இருக்கவேண்டிய தண்ணீரின் அளவும் குறைந்துவிடும்.

அசைவ உணவுகள்: ஆட்டுக்கறி, கோழிக்கறி, மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை & பால் பொருட்கள் ஆகிய உணவுகளை பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது. பாதிவேக்காட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா இருப்பதால், அது, கருவின் வளர்ச்சியை பாதிப்படைச்செய்கிறது. மேலும் லிஸ்டீரியா என்னும் பாக்டீரியா வகையும் அதில் காணப் படுவதால், கருச்சிதைவும் ஏற்படும் அபாயம் உண்டு.

துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்: துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பால் பொருட்களை சாப்பிடக்கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதி ப்பை ஏற்படுத்தும்.

பழங்கள்: அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளிப்பழம் ஆகிய இரண்டு பழ வகைகளை சாப்பிடக்கூடாது. இந்த பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால், அவர்கள் உடலில் உள்ள வெப்பத்தின் அளவு அதிகமாகி கருச்சிதைவிற்கு காரணமாகி விடும்.

காய்கறிகள்: சுத்தம் செய்யப்பட்ட காய்கறிகளை (முட்டை கோஸ், காலி ஃபிளவர் போன்றவற்றை வெந்நீரில் கழுவிய பின் சமையலுக்கு பயன்படுத்தலாம்) சமைத்து உண்ண வேண்டும். கருவில் இருக்கும் சிசுவை பாதிக்கும். பதப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்கள் காலாவதியாகியிருந்தால் அவற்றை குடிக்கக் கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Read more: http://viduthalai.in/page-7/80559.html#ixzz32DIT735g

தமிழ் ஓவியா said...

தோல் நோய்களை நீக்கும் தகரை

அழகை விரும்பாத மனிதனே கிடையாது என்று கூறலாம். பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தங்களை அழகு படுத்தி கொள்ளும் காலம் இது. கரிய நிறமாகட்டும் சிவந்த நிறமாகட்டும் பார்த்தவுடன் அழகை வெளிப் படுத்துவது தோல் தான். அது பளபளப்பாகவும் நோய் இல்லாமல் இருந்தால்தான் சிறப்பு. தோலில் பாதிப்பு ஏற்பட்டால் வேதனை படாதவர்கள் மிகவும் குறைவு. அத்தகைய தோலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை நீக்கும் மூலிகை தகரை.

தகரை, கருந்தகரை வெண் தகரை, ஊசித் தகரை என பல்வேறு வகை தகரைகள் உள்ளன. அனைத்தும் ஒரே வகையான பண்புகளை கொண்டிருந்தாலும் கை வைத் தியம் என்ற மருத்துவ முறை தெரிந்தவர்களால் தகரையும் ஊசித்தகரையும் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தகரையானது நீண்ட கூரிய வடிவத்தில் கரும்பச்சை நிறத்தில் எதிரெடுக்கில் அமைந்த இலைகள் கொண்டது.

வெருட்டல் மணமும், மஞ்சள் நிற பூக்களையும் உடைய குறுஞ்செடி. இதன் காய் உருண்டை வடிவத்தில் பயிறு போல நீண்டிருக்கும். தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும். பெண்கள் அணியும் பாவாடையை இறுக்கமாக கட்டினால் இடுப்பு பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து படை உண்டாகும். அரிப்புடன் கூடிய இந்த படையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு சிகிச்சை பார்க்காமல் அதிகரிக்க செய்து விடுவார்கள்.

படர் தாமரை எனப்படும் இந்த நோய், ஆண்களிலும் சிலருக்கு வருவதுண்டு. தகரை இலையை பறித்து சிறிது எலுமிச்சை சாறு விட்டு மென்மையாக அரைத்து வைத்துக் கொண்டு குளிப்பதற்கு சில மணிநேரம் முன் படர்தாமரை உள்ள இடத்தில் பூசி விட்டு பிறகு குளித்தால் சில நாட்களில் இது தீரும். தடவும் போது சிறிது எரிச்சல் கொடுத்தாலும், நோய் நீங்கி மகிழ்ச்சி கொடுக்கும்.

மண், அழுக்கு, புழுதியில் விளையாடும் சிறுவர்களுக்கு தொற்றாலும், உடல் சூட்டாலும் சிரங்கு வரும். அரிப்புடன் கூடிய சிறிய கொப்பளமாக தோன்றி ஆறாத சிரங்காக மாறுவதும் உண்டு. பெரும்பாலும் கோடை தொடங்கும் காலத்தில் வரும் இந்த பிரச்சினைக்கு தகரையின் இலையை பறித்து கொதிக்க வைத்து அந்த நீரைக் கொண்டு சொறி மற்றும் சிரங்கை கழுவி விட்டு இலையுடன் மஞ்சள் அரைத்து பற்றிட்டால் பறந்து போகும்.



தமிழ் ஓவியா said...


உங்களுக்குச் சொத்துப் பிரச்சினையா?


உங்களுக்குச் சொத்துப் பிரச்சினையா? வயல் எஸ்டேட் தொழிலில் சிக்கலா? போர்வெல் அமைக்க வேண்டுமா?

கவலைப்படாதீர்கள். காவல் நிலையம் போகா தீர்கள் - நீதிமன்றம் போகாதீர்கள்! மண்ணச்சநல்லூரில் இருக்கும் பூமிநாத சாமியைச் சென்று தரிசியுங்கள் - காரியம் கைக் கூடும்! என்று தினமணி வெள்ளி மணி கூறுகிறது! வெட்கக் கேடு!

சக்தி கொடு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிஜேபி சார்பில் போட்டியிட்டார் அருண்ஜெட்லி. அவர் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீக்கியர்களின் 10ஆம் மதக் குருவான குருகோவிந்தசிங் எழுதிய நூலிலி ருந்து ஒரு பாடலைப் பாடினார்.

கூட்டத்தில் உள்ளவர் களையும் திருப்பிப் பாடச் சொன்னார். கடவுளே எனக்குச் சக்தி கொடு நல்ல விஷயங்களைச் செய்வதற்குப் பலம் கொடு. எனது எதிரியை எதிர் கொள்ள அச்சப்படாமல் இருக்கச் செய்!

நியாயமான வெற்றி என் பக்கம் இருக்கட்டும் என்ற வரியில் நிச்சயமான வெற்றி அருண்ஜெட்லி பக்கமாகவே இருக்கட்டும் என்று மாற்றிப் பாடச் சொன்னார் - பாடினார்கள். ஆனால் முடிவு தேர்தலில் தோற்று விட்டாரே! கடவுள் கதை கந்தையாகி விட்டதே!

Read more: http://viduthalai.in/page1/80540.html#ixzz32DJZTyM4

தமிழ் ஓவியா said...


16ஆம் மக்களவைத் தேர்தலின் அதிர்ச்சி தரும் தகவல் 13 சதவீதம் உள்ள முஸ்லிம்களுக்குக் கிடைத்த இடம் 4 சதவீதமே! பி.ஜே.பி.யில் நிறுத்தப்பட்ட 5 முஸ்லிம்களும் தோல்வியே!

புதுடில்லி, மே 18- 16ஆம் மக்களவைத் தேர் தலில் சிறுபான்மை மக் களான இஸ்லாமியர்களுக்கு 22 இடங்களே கிடைத் துள்ளன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது வீழ்ச்சியாகக் கருதப்படு கிறது. மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி என்ற நிலையில் சிறுபான்மை மக்களைப் பல வகைகளிலும் சிந்திக்க வைத்துள்ளது.

16ஆம் மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, நாட்டில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் பேர் உள்ளனர். இந்நிலையில் புதிய மக் களவைக்கு சுமார் 4 சதவீத முஸ்லிம்களே (22 உறுப் பினர்கள்) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட முஸ் லிம் உறுப்பினர்கள் மக்க ளவையில் இடம் பெற்றி ருந்தனர். கடந்த 20 ஆண் டுகள் என்று கணக்கிட்டால் 25க்கும் மேற்பட்டவர் களும், 1980-89க்கு இடைப் பட்ட காலத்தில் 40-க்கும் மேற்பட்டவர்களும் மக்க ளவையில் இடம் பெற் றிருந்தனர்.

தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடு முழு வதும் 5 முஸ்லிம் வேட்பா ளர்களை மட்டுமே களத் தில் நிறுத்தியது. இந்த 5 பேரும் தோல்வி அடைந்து விட்டனர். பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி சார்பில் மட்டும், பீகாரின் காகரியா தொகுதியில் இருந்து ஒரு முஸ்லீம் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அய்க்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் 16ஆம் மக்களவைக்கு 8 முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இவர் களில் 4 பேர் காங்கிரஸ் சார்பிலும், 2 பேர் தேசிய வாத காங்கிரஸ் சார்பிலும் ஒருவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பிலும் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.

மக்களவையில் முஸ் லிம் உறுப்பினர் எண் ணிக்கை குறைந்துள்ளதற்கு முஸ்லிம் சமூகத் தலை வர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் இமுஷாவரத் அமைப்பின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் கூறுகையில்: தேசிய அரசி யலில் பா.ஜ.க. மிகப் பெரிய சக்தியாக உருவெ டுத்துள்ள நிலையில் மிக விரைவில் முஸ்லிம் இப் பதவிக்கு பொருத்தமற்ற வர்களாக ஆக்கப்படுவார் கள் என்றார்.

பெண் உறுப்பினர்கள் உயர்வு

மக்களவையில் பெண் உறுப்பினர்கள் எண் ணிக்கை தொடர்ந்து போதிய அளவில் இல்லாமல் இருந்தாலும், 16ஆம் மக்களவையில் இவர்களின் எண்ணிக்கை 62 ஆக (சுமார் 11 சதவீதம்) உயர்ந்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவாகும். இதற்கு முன் 2009 மக்களவையில் 61 பெண் உறுப்பினர் தேர்ந் தெடுக்கப்பட்டதே அதிக பட்ச அளவாக இருந்தது.

தற்போதைய மக்கள வைக்கு பா.ஜ.க. சார்பில் அதிகபட்சமாக 28 பெண் உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி மக்கள வைக்கு 3 பெண் உறுப் பினர்களை மட்டுமே அனுப்புகிறது. ஆம் ஆத்மி சார்பில் 4 பேர் போட்டி யிட்டாலும் யாரும் வெற்றி பெறவில்லை. நாடு முழுவதும் போட்டியிட்ட 8,163 வேட்பாளர்களில் 636 பேர் பெண்கள்.

Read more: http://viduthalai.in/page1/80544.html#ixzz32DK9L8Hw

தமிழ் ஓவியா said...


அயோத்திதாசப் பண்டிதர்


ஒடுக்கப்பட்ட மக்களால் என்றென்றைக்கும் மறக்கப்பட முடியாத பெயர்.

பவுத்த நெறிக்குப் புதுக் குருதியைப் பாய்ச்சியவர் பூர்வ காலத்தில் பவுத்தர்களாய் இருந்தவர்கள் ஆதி திராவிடர்கள் என்று நிறுவியவர்.

அவர் கள் இந்துக்கள் அல்லர் என்றும் உறுதியாகக் கூறியவர்.

அண்ணல் அம்பேத்கர் பவுத்த மார்க்கத்தைத் தழுவியதற்கு ஒரு வகையில் முன்னோடியாக இருந்த வர் என்று கூடச் சொல் லலாம்.

திராவிடக் கழகம் என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவி நடத்தி வந்த ஜான்ரத்தினம் அவர் களுடன் இணைந்து திரா விடப் பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கிவர் (1882).

1907 ஜூன் முதல் தேதியன்று அவர் தொடங் கிய மற்றொரு இதழ் ஒரு பைசா தமிழன் அவருக்குப் பிறகு அவரின் மகன் பட்டாபிராமன் 14 மாதங்கள் இவ்விதழை நடத்தினார்; அதற்குப்பிறகு ஒரு பைசா தமிழன் இதழை கோலார் தங்க வயல் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார் நடத் தினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அந்தக் கால கட்டத் தில் இதழ்நடத்துவதற்கு மரண தைரியம் இருந் திருக்க வேண்டும்.

1881இல் இந்தியக் குடிமக்கள் கணக்கெடுப்பு முதன் முதலாக நடந்த போது, சாதியற்ற திராவிடர்கள், அல்லது ஆதித் தமிழர்கள் என்று பதிவு செய்யுமாறு தாழ்த் தப்பட்ட மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

திராவிடர் என்ற சொல்லாக்கத்தை பெரியார் தான் கண்டுபிடித்தது போலவும், அந்தப் பெயரால் தமிழ் உணர்வு குன்றி விட்டது போலவும் குறுக்குச் சால் ஓட்டும் குறுக்குப் புத்திக்காரர்களின் காதுகளைத் திருகும் வகையில், சாதியற்ற திராவிடர்கள் அல்லது ஆதித் தமிழர்கள் என்று மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் குறிப்பிட்ட தன் மூலம் இரண்டும் வேறுபாடுடையதல்ல என்று ஆணி அடித்தது போலவே அறைய வில்லையா?

திராவிட மகாசபை என்று ஏன் இந்தப் பெயரில் அமைப்பைத் தொடங்கினார் என்பதையும் தமிழ்த் தேசிய தீரர்கள் தெரிந்து கொள்வார்களாக!

காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்டவர் அயோத்திதாச பண்டித ரிடம் கல்வி கற்றதால் இப்பெயரை ஏற்றார்.

இன்று அவர் பிறந்த நாள் (1845) மறைவு 1914 மே 5.

வாழ்க அயோத்திதாசர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/80613.html#ixzz32J5C3HWf

தமிழ் ஓவியா said...




சபாஷ்! பீகார் வழிகாட்டுகிறது!

பீகார் முதல்வராகிறார் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ராம் மன்ஜி

பாட்னா, மே 20- பதவி விலகிய பிறகு மீண்டும் முதல்வர் பதவியை ஏற்க முடியாது என பிடிவாதமாக கூறிய நிதிஷ் குமார், தனது நெருங்கிய நண்பரான ஜிதன் ராம் மன்ஜியை பீகாரின் புதிய முதல்வராக தேர்வு செய்துள்ளார். இதனால், பீகார் அரசியலில் 2 நாளாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

மக்களவை தேர்தலில், பீகாரில் ஆளும் அய்க்கிய ஜனதா தளம் படுதோல் வியை சந்தித்தது. 40 தொகுதி களில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று, நிதிஷ் குமார் முதல்வர் பதவியி லிருந்து விலகினார். கட்சி தலை வர் சரத் யாதவ்வின் நிர்பந்தத்தினால்தான் பதவி விலகியதாகவும் சர்ச்சை கிளம்பியது.

நிதிஷ்குமார் பதவி வில கியதைத் தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய் வதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று முன்தினம் பாட்னாவில் நடந்தது. இதில், பெரும்பாலான எம்எல்ஏக்களும் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக வேண்டும், தனது பதவி விலகல் முடிவை அவர் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்த, நிதிஷ்குமார், ஒருநாள் அவகாசம் வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, நேற்று காலை பேட்டியளித்த கட்சி தலைவர் சரத் யாதவ், நிதிஷ்குமார் பதவி விலகியதுதான் இறுதி முடிவு. அதில் மாற்றமே கிடையாது. புதிய முதல்வர் தான் தேர்வு செய்யப்படு வார் என திட்டவட்டமாக அறிவித்தார். அதே போல, மதியம் நடந்த எம்எல் ஏக்கள் குழு கூட்டத்தில் நிதிஷ்குமாரும் தனது முடிவை மாற்றிக் கொள்ள சம்மதிக்கவில்லை. இதனால், புதிய முதல்வரை நிதிஷ்குமாரே தேர்வு செய்ய வேண்டுமென எம்எல் ஏக்கள் வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து, ஆளுநரை சந்தித்த நிதிஷ் குமார், மாலையில் புதிய முதல்வராக தனது நெருங் கிய நண்பரான ஜிதன் ராம் மன்ஜியை தேர்வு செய்து அறிவித்தார். இதற்கு, கட்சி தலைவர் சரத் யாதவ், பீகார் மாநில தலைவர் பசிஸ்தா நாராயணன் சிங் உட்பட அனைத்து தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

68 வயதாகும் ஜிதன் ராம் மன்ஜி, நிதிஷ்குமார் அமைச் சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

தலித் சமூகத்தை சேர்ந் தவர். இதைத்தொடர்ந்து, அய்க்கிய ஜனதா தளம் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய முதல்வர் தேர்வு செய்யப் பட்டதால், பீகார் அரசிய லில் 2 நாளாக நீடித்த வந்த குழப்பம் முடிவுக்கு வந் துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/80620.html#ixzz32J5WDFDH

தமிழ் ஓவியா said...


இலங்கைப் போர் குற்றச் செயல்கள் விசாரணைக்கு இலங்கை அரசு இடமளித்தே ஆக வேண்டும்!


இலங்கைப் போர் குற்றச் செயல்கள் விசாரணைக்கு இலங்கை அரசு இடமளித்தே ஆக வேண்டும்!

மனித உரிமை கண்காணிப்பகம் உறுதி!

ஜெனீவா, மே 20- இலங்கையின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர் பிலான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் இடமளிக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப் பகம் மீண்டும் வலியு றுத்தியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்த தீர்மானத்திற்கு அமைவாக விசாரணை களை நடாத்த இலங்கை அரசாங்கம் அனுமதி யளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

யுத்தக் குற்றச் செயல் கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர் பில் விசாரணை நடாத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறு அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையா ளர் நவநீதம்பிள்ளை யிடம் தீர்மானத்தில் கோரப்பட் டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை யின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிரகாரித்துள் ளதாக மனித உரிமைப் பேரவையின் ஆசிய பிராந் தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யுத்தம் நிறை வடைந்து அய்ந்து ஆண்டு கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் குற்றச்சாட் டுக்கள் தொடர்பில் நம்பக மானதும் பக்கச் சார்பற்றது மான விசாரணைகள் நடத் தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைப் பேர வையின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு விசா ரணைகளுக்கு இடமளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக் கப்பட்டவர்கள் நியாயத் திற்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் இலங்கையில் நீடித்து வருவ தாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள், ஊடகவி யலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டா ளர்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறைகள் பிரயோ கிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் அபிலாஷை களை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் கரிசனை காட்ட வில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தத்தில் உயிர் நீத்த வர்களுக்கு அஞ்சலி செலுத் தவும் இலங்கை அரசாங் கம் அனுமதி மறுத்திருந்த தாகத் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80617.html#ixzz32J5kq3pW

தமிழ் ஓவியா said...


அருந்ததிய மக்கள் ஊர் திரும்ப நடவடிக்கை தேவை


மதுரை, மே 20- மேல்மங் கலம் கிராமத்தில் ஜாதி ஆதிக்கவாதிகளால் பாதிக் கப்பட்டு வெளியூர் சென்று விட்ட அருந்ததிய மக்கள் மீண்டும் ஊர் திரும்ப உரிய நடவடிக்கையை தமிழக அரசுமேற்கொள்ள வேண் டும் என்று உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது.

மதுரை, உத்தப்புரம் பகுதியில் நடைபெற்ற தீண் டாமைக்கொடுமைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்று வந்த உண்மை அறி யும் குழுவின் உறுப்பினர் வழக்குரைஞர் ரஜினி மது ரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தலித் மக் கள் பாதிக்கப்பட்ட பகுதிக ளுக்குச் சென்று நடைபெற்ற வன்முறைகள் குறித்து உண்மை அறிய தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வரு வது ஜனநாயக மறுப்பின் மறு வடிவம் தான். ஏற் கெனவே, உத்தப்புரத்தில் தலித் மக் கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை யென தெரிந்து அவ்வூருக்கு உண்மை அறியச்சென்ற போது அனுமதி மறுத்தார் கள்.

உயர்நீதிமன்ற உத்தரவு பெற்று தான் அந்த ஊருக் குச் சென்று வந்தோம். தருமபுரி மாவட்டத்தில் நடைபெற் றது போலவே, தேனி மாவட் டம் மேல்மங்கலம் கிராமத் திலும் அருந்ததிய மக்கள் மீது திட்டமிட்டு வன்முறை நிகழ்த் தப்பட்டுள்ளது.

6 வீடுகள் முற்றிலும் எரிக் கப்பட்டுள்ளன. ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரை கிராமத்தை விட்டு வெளி யேறிய அருந்ததிய சமுதாய மக்கள் ஊர் திரும்ப வில்லை. தாக்குதல் நடத்திய வர்கள் என 20 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட் டது. ஆனால், அவர்கள் பிணையில் வெளி யே வந்து விட்டனர்.

இதே நேரத்தில் பாதிக்கப்பட்ட அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த முருகுபாண்டி என் பவர் மீது பிணையில் வெளி வரமுடி யாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுசிறை யில்அடைக்கப் பட்டுள்ளார். பாதிக்கப்பட் டவர்களுக்கு வன்கொடுமைத்தடுப்பு சட்டத்தின் படி நிவாரணம் வழங்கப் படவில்லை.

அரசு அவர் களுக்கு வீடுகளையும் கட்டித்தரவில்லை. அருந்த திய மக்கள் வசிக்கும் பகுதி யில் நிரந்தரமாக காவல் துறையினரின் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும். வன்கொடுமைக் குக் காரணமானவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

அவர்கள் மீது வன்கொடு மைத் தடுப்புச் சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண் டும். உத்தப்புரம் பகுதியில் தொடர்ந்து தலித் மக்கள் கோவில் வழிபாட்டு உரி மைமறுக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பான தெளி வான ஆணையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை வெளி யிட்டிருந்தும் அதை அமல் படுத்த மறுக்கிறார்கள்.

முத் தாலம்மன் கோவில் அற நிலையத்துறையின் நிர்வா கத்தின் கீழ் கொண்டு வரப் பட வேண்டும். உத்தப்புரத் தில் இடிக்கப்பட்ட இடத்தை அகலப்படுத்தி வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-8/80654.html#ixzz32J7lGhrw

தமிழ் ஓவியா said...

அஞ்சல் பெட்டித் தமிழர்கள்


அஞ்சல் பெட்டியே!
உன் திறந்த வாயில்
திணித்த எதையும்...
நீ செரித்துக் கொண்டதில்லை.

உன் வயிற்றைத் துடைக்க
மீண்டும் மீண்டும்
வெற்றுப் பெட்டியாய்
நிற்கிறாய்
எம் தமிழர்களைப் போல.

தாய்மொழிப் பற்று
பகுத்தறிவு
இனமானம்
தன்மானம் என
எல்லாம்தான் போட்டோம்
தமிழன் மண்டையில் பாரேன்
உன்னைப் போலவே
வெற்றுப் பெட்டியாய் நிற்கிறான்
எதையும் செரித்துக் கொள்ளாமல்.

நீ திறந்தவாய் மூடமாட்டாய்
கடிதங்களுக்காக.
எம் தமிழர்களும்
பொருளுக்காக
பதவிக்காக
வீணரைப் புகழ்வதற்காக
வாய் திறந்தே இருக்கிறார்கள்.

உனக்குக் கண் இல்லை
காதும் மூக்குமில்லை
வாயும்
நேரம் காட்டும்
வெளியும்தான்.

தமிழனுக்கோ
அய்ம்பொறியும் உண்டு
ஆறறிவும் உண்டு
ஆனாலும்
உன்னைப் போலவே
வாயும்
வெளியும்
உள்ள பெட்டியாய் நிற்கிறான்.

அஞ்சல் பெட்டியா நீ?
வெடிகுண்டை உன் வாயில் இட்டாலும்
அஞ்சாமல்
வாய் திறந்தே நிற்கும்
நீயா அஞ்சல் பெட்டி

கல்லுக்கும்
உலோக, மரபொம்மைக்கும்
மாட்டுச் சாணிக்கும் அஞ்சி கும்பிட்டுக் கூத்தாடும் மனிதர்களே
முழுமூட அஞ்சல் பட்டிகள்



- பொன்.இராமசந்திரன், பம்மல்

தமிழ் ஓவியா said...

அணிய வேண்டிய ஆடை!


ஜாதி, சமயமற்ற
சமுதாயம் படைப்பது
திராவிடம்!

ஜாதி, மதவெறிக்கு
மகுடம் சூட்டுவது
தமிழ்த் தேசியம்!

அம்மணமாயிருக்கும்
என்னுயிர்த் தமிழா!
ஆடையாய் நீ
அணிய வேண்டியது -
திராவிடமா?
தமிழ்த் தேசியமா?

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


கோயில்களில் - மடங்களில் இருந்த நகைகள் எல்லாம் ஓமந்தூரார் ஆட்சியில்தான் மாற்றுப் பார்த்து விலை மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் பதியப்பட்டது என்பதும் அதற்கு முன் கொள்ளை அடித்துவந்த பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

குறுங்கதை : சுயமரியாதை


- க.அருள்மொழி

காஞ்சனாவின் வீட்டிலிருந்து கையைத் துடைத்தபடி வெளியே வந்த சரசுவை ஏய் சரசு இங்க கொஞ்சம் வாடி என்று கூப்பிட்டாள் பார்வதி. என்னக்கா என்று கேட்டபடியே பார்வதியின் அருகில் போனாள் சரசு.

என்னடி, நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீயும் முடியாதுன்னே சொல்லிக்கிட்டிருக்கே? இவ்வளவு தூரம் காஞ்சனா வீட்டு வரைக்கும் வர்றே... அப்படியே என் வீட்டிலும் வேலை செய்து கொடுத்திட்டுப் போன்னா முடியாதுன்னு சொல்றியே? அவள் மட்டும் என்ன அதிகமான சம்பளமா கொடுத்திடுறா? என்றாள் பார்வதி.

இல்லைக்கா என்னால முடியாது என்று சொல்லிவிட்டு விருட்டெனக் கிளம்பிவிட்டாள் சரசு.

பார்வதிக்கு முகத்தில் அடித்ததுபோல் இருந்தது. அப்படி என்னதான் சொக்குப் பொடி போடுகிறாள் இந்தக் காஞ்சனா? நாலைந்து வருஷமாக காஞ்சனா வீட்டில் தொடர்ந்து வேலை செய்கிறாள் சரசு. பார்வதிக்கோ இரண்டு மாதம் கூட தொடர்ந்தாற்போல் யாரும் வேலை செய்வதில்லை.

காஞ்சனா வீட்டில் வேலை செய்துவிட்டு எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வேலைக்குப் போகும் சரசு, பார்வதியின் வீட்டுக்குப் போகமாட்டேன்கிறாள் என்பது புதிராகவே இருந்தது.

அடுத்தநாள் சரசு, காஞ்சனாவின் வீட்டுக்குள் போனதும் பார்வதியும் போனாள்.

பார்வதியை வரவேற்று உட்காரச் சொன்ன காஞ்சனா, சரசுவிற்கு வேலைகளைச் சொன்னாள். சரசு, இங்க பாருங்க, இதையெல்லாம் சுத்தம் செய்து விட்டு, இதையெல்லாம் வெளியே போட்டுடுங்க.

அந்தப் பாத்திரங்களையெல்லாம் அங்கே அடுக்கிடுங்க. காபி போட்டு உங்களுக்கு எடுத்துக்கிட்டு எங்களுக்கும் கொடுங்க என்றதும், சரிங்கம்மா சரிங்கம்மா என்று சொல்லிவிட்டு, சொன்னதையெல்லாம் வேகமாகச் செய்துவிட்டு வெளியேறினாள்.

பார்வதிக்குப் புரிந்துவிட்டது. காஞ்சனா போட்டது மரியாதைச் சொக்குப் பொடி என்று. சுயமரியாதை என்பது, தான் எதிர்பார்ப்பதையே மற்றவர்களுக்கும் தருவது.

தமிழ் ஓவியா said...

கைமேல் பலன்?


காசிக்குச் சென்று
கங்கையில் நீராடி
கங்கை நீர் கொண்டு
ராமநாதருக்கு
அபிஷேகம் செய்ய
ராமேஸ்வரம் சென்றவர்
குடும்பத்தோடு மாண்டார்
சாலை விபத்தில்!

தெய்வத்தின் திருவருள்
முன்னோர்களின் நல்லாசி
உடனே கிட்டியது
கைமேல் பலன் என்பது
இதுதானோ?

_நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

தமிழ் ஓவியா said...

புதுப்பா : யாராலே?....


மான மிழந்தோம் ஆரியத்தால்
மதி யிழந்தோம் ஆரியத்தால்
உரிமை யிழந்தோம் ஆரியத்தால்
உணர்வை இழந்தோம் ஆரியத்தால்

சாத்திரத்திற்கும் அடிமை யானோம்
கோத்திரத்திற்கும் அடிமை யானோம்
மந்திரத்திற்கும் அடிமை யானோம்
மதத்திற்கும் அடிமை யானோம்

அண்டிப் பிழைத்தது ஆரியக் கூட்டம்
மண்டிக் கிடந்தது மக்கள் கூட்டம்
தன்மானம் இன மானம்
காத்தது எம் திராவிடமே

குலக் கல்வித் திட்டத்தைக்
கொண்டு வந்தது ஆரியமே
ஆரிய நஞ்சின் ஆணவத்தை
அழித் தொழித்தது திராவிடமே

இடுப்புத் துண்டு தோளுக்கு
இடம் மாறியது திராவிடத்தால்
இட ஒதுக்கீடும் இன்றளவும்
இத மானது திராவிடத்தால்

சூத்திரன் என்றுனைச் சொன்னாலே
ஆத்திரம் கொண்டு அடிப்பாயே
சொன்னது சொன்னது யாரது?
எம் தந்தை பெரியாரே!

பெண் குலத்தைக் கோவிலுக்கு
நேர்ந்து விட்டது கொடுமையடா!
பொட்டுக் கட்டும் தேவதாசிமுறை
ஒழிந்தது திராவிடத்தால்

கோவில் நுழைவு திராவிடத்தால்
காலுக்கு செருப்பு திராவிடத்தால்
பெண்ணுக்கு உரிமை திராவிடத்தால்
பெண் கல்வியும் திராவிடத்தால்

ஆணும் பெண்ணும் சமம்
திராவிடத் தாலே திராவிடத்தால்
அச்ச மென்பது இனியில்லை
திராவிடத் தாலே திராவிடத்தால்

அம்மி மிதிக்கல அக்னியில்லை
அடிமைச் சின்னமும் பெண்ணுக்கில்லை
மணி விழா மணவிழா
யாராலே திராவிடத் தாலே

திராவிடத்தால் உயிர் பெற்றோம்!
திராவிடத்தால் எழுந் திட்டோம்!
திராவிடத்தால் வாழ்ந் திடுவோம்!
திராவிடத்தால் வீழ்ச்சி இனியில்லை!

- குடியாத்தம் ந.தேன்மொழி

தமிழ் ஓவியா said...


பணம் கொடுத்து செய்திகளை வெளியிடச் செய்வதா?


பூனைக்குட்டி வெளியில் வருகிறது!

பணம் கொடுத்து செய்திகளை வெளியிடச் செய்வதா?

தடுத்திட சட்டம் தேவை என்கிறார் தேர்தல் ஆணையர் சம்பத்

புதுடில்லி, மே 21- தேர் தலின்போது, வேட்பாளர் கள் பணம் கொடுத்து, ஊட கங்களில் செய்தி வெளி யிடச் செய்வது, அபாயகர மானது. ஆனாலும், சட்டத் தில் உள்ள ஓட்டைகளால், அந்த அபாயத்தை தடுக்க முடியவில்லை. எனவே, கடுமையான சட்ட விதி களை உருவாக்க வேண்டி யது அவசியம் என, தலை மைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறினார்.

செய்தி நிறுவனம் ஒன் றுக்கு நேர்காணலில் தலை மைத் தேர்தல் ஆணையர், சம்பத் கூறியதாவது:

நாட்டின், 16 ஆவது மக்களவைத் தேர்தலை, தேர்தல் ஆணையம் வெற்றி கரமாக நடத்தி முடித்துள் ளது. அதனால், நாம் நிம் மதி அடைந்துள்ளோம். இந்த தேர்தலின் போது, அரசியல் தலைவர்கள் சிலர், மக்களிடையே விரோ தத்தையும், வெறுப்பையும் தூண்டும் வகையில் பேசிய தால், அவர்களுக்கு எதிராக, முதன்முதலாக நடவ டிக்கை எடுக்க வேண்டி நேரிட்டது.

வாக்காளர்கள் பலரை, கடைசி நேரத்தில் வாக் காளர்கள் பட்டியலில் சேர்த் தது, தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என, வாக்காளர்கள் மத்தி யில், விழிப்புணர்வு பிரச் சாரம் செய்தது போன்ற வற்றால், இதுவரை இல் லாத வகையில், இந்த தேர்தலில், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.

ஊடகங்களுக்குப் பணம்

தேர்தல் நேரத்தில், ஊட கங்களுக்கு பணம் கொடுத்து, செய்தி வெளி யிடச் செய்வது, அபாய கரமான ஒன்றாக அதி கரித்து வருகிறது. சட்ட ரீதியாக, இதைக் கையாள முடியவில்லை. அதனால், பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்வதை, மக்கள் பிரதிநிதித்துவச் சட் டப்படி, தேர்தல் குற்ற மாக்க வேண்டியது அவசி யம்.

இந்த தேர்தலின் போது, பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்வதை தடுக்க, தேர்தல் ஆணையம் முடிந்தவரை, பல நடவ டிக்கைகளை எடுத்தது. இந்த பிரச்சினையை கண் காணிக்க, மாவட்ட அள விலும், மாநில அளவிலும் குழுக்களை நியமித்தது.

பணம் கொடுத்து, 7,000 செய்திகள் வெளியிடப் பட்டது என்று உறுதி செய்யப் பட்டது. அதில், 3,000 செய் திகள் தொடர்பாக, சம்பந் தப்பட்டவர்களுக்கு, அறி விக்கை அனுப்பப்பட்டன.

இருந்தாலும், சட்டத் தில் உள்ள ஓட்டைகள் காரணமாக, இந்தப் பிரச் சினையை கடுமையான முறையில் கையாள முடிய வில்லை. பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய் வதை, வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கும் வகையிலேயே, ஆணை யத்தால் நடவடிக்கை எடுக்க முடிகிறது.

மக்களவைத் தேர்த லின்போது, வாக்குச்சாவடி களுக்கு, ஒன்பது லட்சம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சேர்ப்பதும், பின், அவற்றை வாக்கு எண்ணும் மய்யங் களுக்கு எடுத்துச் செல்வ தும் சிரமமான பணியாகும்.

அத்துடன், தேர்தல் பணியில் ஈடுபடும், 70 லட் சம் ஊழியர்களை கையாள் வதும், மத்திய, மாநில காவல் படையினரை வழிநடத்துவதும், மிகப் பெரிய வேலையாகும். ஆனாலும், அவற்றை எல் லாம், தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலும், ஒவ்வொரு விதமாக உள் ளது. ஒவ்வொரு தேர்தலின் போது, பல விதமான பிரச் சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அத்து டன், வாக்காளர்கள் எண் ணிக்கை அதிகரிப்பதும், பிரச்சினைகள் அதிகரிக்க காரணமாகும் என்று சமா தானம் கூறினார் தேர்தல் ஆணையர் சம்பத்.

Read more: http://viduthalai.in/e-paper/80681.html#ixzz32PD5tZuL

தமிழ் ஓவியா said...


எது மேலான சுதந்தரம்?


சுயமரியாதைக்காரனின் சுதந்தரம் எல்லாவற்றிலும் சுதந்தரம் இருக்கத்தக்கதாய் இருக்கும். சுதந்தரக்காரனின் சுதந்தரமோ அவனுக்கே புரியாது; புரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பொறுத்ததாக மாத்திரம் இருக்கும். - (குடிஅரசு, 18.7.1937)

Read more: http://viduthalai.in/page-2/80686.html#ixzz32PDpNUTr

தமிழ் ஓவியா said...


இலங்கை விவகாரத்தில் காங்கிரசை அப்படியே பின்பற்றும் பாரதீய ஜனதா


சென்னை, மே 22- இலங்கை விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்னமாதிரியான கொள்கைகளை கடை பிடித்ததோ அதை அப் படியே பின்பற்றத் தொடங் கியுள்ளது பாரதீய ஜனதா. முந்தைய மத்திய அரசு இலங்கையை தமது மதிப் புக்குரிய நேச சக்தியாக நட்பு நாடாக பார்த்தது. இந்திய நாட்டு மீனவர்கள் 700 பேர் படுகொலை செய் யப்பட்ட நிலையிலும் கூட ஒரு கண்டனத்தைக் கூட முந்தைய காங்கிரஸ் அரசு தெரிவிக்கவில்லை. இந்தி யாவின் ஒரு மாநிலமாக இருக்கிற தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகள் வாழும் இலங்கையின் வட பகுதியில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படு கொலை செய்யப்பட்ட போது அதைத் தடுக்க மறுத் ததுடன் இனப்படுகொலைக்கே துணை நின்றது முந்தைய மத்திய அரசு.

சொத்தை காரணங்கள் இலங்கையிடம் இத் தனை பரிவு ஏன் என்ற கேள் விக்கு இந்திய துணை கண்டத்து புவிசார் அரசி யல் காலங்காலமாக கடைபிடித்து வரும் வெளி யுறவுக் கொள்கை என் றெல்லாம் காங்கிரஸ் பேரி யக்கம் சப்பைக் கட்டிக் கட்டியது. இந்த சப்பைக் கட்டுகளுக்கு தமிழகம் சம்மட்டி அடி கொடுத்து மக்களவை தேர்தலில் சவக் குழிக்கே அனுப்பி வைத்தது. காங்கிரசை சவக் குழிக்கு அனுப்பி வைத்த போது தமிழர் உரிமை பிரச்சினைகளில் ஈழத் தமிழர் பிரச்சனைகளில் நாங்கள் பாதுகாவலராக இருப்போம் என்று ரட்சக ரகர்களைப் போல பேசி யது பாரதீய ஜனதா. தமிழக மக்களுக்கு பாரதீய ஜனதா மீது நம்பிக்கை வரும் வகையில் காலங்காலமாக ஈழத் தமிழர் துயர் தீர்க்க போராடி வரும் வைகோ போன்றவர்கள் பிரச்சாரம் செய்தார்.

மகிழ்ச்சி கூத்தில் இலங்கை காங்கிரஸ் போய் பாஜக ஆட்சிக்கு வந்தது.. பாஜக வெற்றி பெற்றத் தொடங் கியபோதே இலங்கையில் மகிழ்ச்சிக் கூத்துகள் உச் சத்தை எட்டின.. பாஜகவின் மோடிக்கு வெற்றிக்கு முதல் வாழ்த்து மகிந்த ராஜபக்சேவிடம் இருந்து வருகிறது..

டில்லிக்கு ராஜபக்சே இப்போது உச்சமாக ராஜபக்சேவையே டில்லி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கிறது பாஜக அரசு. கேட்டால் அன்று காங் கிரஸ் சொன்ன அதே பழைய வேதாந்தமான காலம்காலமாக கடை பிடிக்கும் வெளியுறவு கொள்கை இந்தியாவின் புவிசார் அரசியல் நலன் அண்டை நாடுகளுட னான நல்லுறவு போன்ற வியாக்கியானங்களைத்தான் கொடுத்துக் கொண்டிருக் கிறது.

உ.பி., ம.பிக்காக

பாரதீய ஜனதாவைப் பொறுத்தவரையில் அது ஹிந்தி பெல்ட் மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்ற கட்சி. அதாவது உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநி லங்களில்.. ஏகோபித்த ஆதரவு பெற்ற கட்சி.. இந்த மாநிலங்கள்தான் சிங்கள வர் மூதாதையர் உலாவிய பூமியாக சிலாகித்துக் கொள்கிறார்கள்..

சிங்களவர் தாய்வீடு

அதனால்தான் ம.பி.க் கும் உ.பி.க்கும் சிங்கள வர்கள் தாய்வீட்டுக்கு வந்து போவதைப் போல சகஜ மாக வருகிறார்கள்.. ராஜ பக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பு தருகிறார்கள்.. அப்படிப்பட்டவர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற பாரதீய ஜனதா அரசு ராஜபக்சேவுக்கு செங்கம் பளம் விரிக்கத்தான் செய்யும்.. இதை தமிழகம் வேதனை யோடும் வெறுப்போடும் பார்க்கத்தான் வேண்டும் என்பது விதியாகிப் போனது.

அன்று காங்கிரஸ், இன்று பாஜக. அன்று காங்கிரஸ் ஏதோ ஏதோ காரணங்களுக்காக இலங்கைத் தமிழர்கள் படு கொலையை அரங்கேற்றி யது.. போர்க்குற்றவாளி களுக்கு பாதுகாப்பு கொடுத் தது.. இன்று பாரதீய ஜனதாவும் ஏதோ ஏதோ காரணங்களுக்காக அதே போர்க்குற்றவாளிகளுக்கு பதாகை விரித்து வரவேற்பு கொடுக்கிறது.. அதாவது இரண்டும் ஒரே குட்டை யில் ஊறிய மட்டைகள் என்பதை வரலாற்றில் பதிவு செய்து கொண்டிருக்கின் றன.. அதற்கு வரலாறும் தக்க பதிலடி கொடுத்திருக் கிறது என்பதை அரசியல் நிகழ்வுகள் நிரூபித்திருக் கின்றன என்பதே யதார்த்தம்.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

Read more: http://viduthalai.in/e-paper/80761.html#ixzz32Uw8rthN

தமிழ் ஓவியா said...


கட்டப்பட்டிருக்கின்றன


உலகில் உள்ள மதங்கள் எல்லாம், குருட்டு நம்பிக்கை என்ற பூமியின்மீதே கட்டப்பட்டிருக்கின்றன.

- (விடுதலை, 12.10.1962)

Read more: http://viduthalai.in/page-2/80730.html#ixzz32UwTpLT6

தமிழ் ஓவியா said...


கோவில் சொத்துக்களைக் காப்பது யார்?

கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் மிகப்பெரிய அளவில் மதிப்பிட முடியாத அளவுக்கு சொத்துக்கள் இருப்பது வெளி உலகுக்கு தெரியவந்தது. தற்போது மீண்டும் அனைவரின் கவனத்துக்கும் மோசமான தகவல்களுடன் வந்துள்ளது. நீதிமன்றத்தால் கோவிலில் உள்ள சொத்துக்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டது. 35 நாட்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் விலைமதிப்பில்லாத தங்கங்கள் திருடப்பட்டுவருவதையும், பொருட்களை கையாள்வதில் முறை கேடுகள் நடப்பதையும் குழு அறிக்கை வெளிக்கொணர்ந்தது. கோவில் நிர்வாகத்தினரையும், கேரள மாநில அரசையும் இவ்விவகாரத்தில் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் கேட்டது. அப்போது தங்கப் புதையல்குறித்த ஆய்வுக்கு போதுமான அளவில் ஒத் துழைக்காமல் கோவில் நிர்வாகம் முட்டுக்கட்டை போட்டது. உச்சநீதிமன்றம் மீண்டும் புதிய குழுவை அமைத்து, இடைக்கால ஏற்பாடாக கோவில் நிர் வாகத்தை எடுத்து நடத்த அறிவுறுத்தியது. இந்த முடிவால் மிகவும் கவலைப்படும் சூழல் ஏற்பட்டது. இடைக்கால நிர்வாகம் மற்றும் பொருளாதாரப் பொறுப்பாளர் களை திட்டமிட்டுத் திருடுபவர்களைக் காட்டிலும் கீழ்த்தரமாக கோவில் நிர்வாகத்தினராலேயே மிரட்டும் நிலை ஏற்பட்டது.

சில நேரங்களில் பத்மநாபசாமிக் கோவில் நிர்வாகத்தைச் சுற்றியே கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. நீண்டகால சட்டப்போராட்டத்தில் பொதுமக்களையும் இணைத்து, 2011இல் உச்ச நீதிமன்றம் குழு அமைத்தது. இந்தக்குழு கோவிலுக்குள் உள்ள ஆறு பாதாள அறைகளில் அய்ந்து பாதாள அறைகளை சோதனை செய்ததில் எண் ணிலடங்கா பழமையான தங்க ஆபரணங் கள் இருந்துள்ளதை முதன்முதலாக பொதுமக்கள் கவனத்துக்கு வெளியு லகுக்கு வந்தது. தங்கப்புதையல் குறித்து கணக்கெடுத்து ஆவணப்படுத்தும்பணி நடைபெற்றவண்ணம் உள்ளது.

இந்த வழக்கில் 2012இல் முன்னாள் அரசு வழக்குரைஞரான கோபால் சுப்பிரமணியம் என்பவர் நீதிமன்றத்தால் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற ஆலோ சகராக (amicus curiae) நியமிக்கப் பட்டார்.

அவருடைய இரண்டாம் அறிக் கையில், கோவிலில் தங்க ஆபரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதைக் கணக்கிடுவதில், தற்போதைய கோவில் நிர்வாகம் திருவாங்கூர் அரச குடும்பத்தினரையும் ஈடுபடுத்திட வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. கோவிலின் சொத்துக்களை எப்படிக் காப்பது என்றும், அரசின் அறநிலையத் துறை பொதுநோக்கில் உள்ளவர்கள் பத்மநாபசாமிக் கோவில் விவகாரம் மட்டுமின்றி இதர பிற விவகாரங்களிலும் சந்திக்கின்ற சவால்களையும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பாக திருமலையில் சிறீ வெங்கடேசுவரா கோவிலில் உள்ள கண்ணைக்கவரும் ஆபரணங்கள்குறித்த சரியான தகவல்களை ஆந்திரப்பிரதேச நீதிமன்றம் கேட்டிருந்தது. கோவில் சொத்துக்கள் என்று இருப்பதால் அவ்வப் போது வரக்கூடிய வரவுகள் கணக்கில் கொள்வது மிகக் குறைவாகவே உள்ளது. கோவில் சொத்துக்களுக்கு வரவேண்டிய வற்றை விட்டுவிடாமல் மீட்கவேண்டும். கெட்ட வாய்ப்பாக, கோவிலை நிர்வாகம் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் இதுபோன்றவற்றில் அதிக கவனத்தைச் செலுத்துவதில்லை இதன்மூலம் வழிபடக் கூடிய பொதுமக்கள் மீண்டும் வருவதை உறுதிசெய்யவும் தவறுகிறார்கள்.சில கோவில் நிர்வாகிகள் காலத்துக்கேற்ற மாற்றங்களை செய்வதற்கு மாறாக, நிர் வாகத்தில் சீர்திருத்தங்கள் ஏற்பட்டு விடாமல் காத்துவருகின்றனர். அவர்கள் மத நடைமுறைகளில் தலையிடுவதாகப் பார்க்கிறார்கள்.

விதிகளின்படி மதசார்பற்ற விழாக் களும் கோவிலில் நடத்தலாம். கோவில் பொதுவான செயல்பாடுகளுக்கு திறந்து விடப்பட வேண்டும். சிலைகளின் பெயரில் சொத்துக்களை உரிமையாக்கிவைப்பதன் பின்னணி என்ன வென்றால், அறங்காவல் குழுவில் உள்ளவர்கள், நிர்வாகிகள் கோவில் சொத்துக்களை அவர்கள் பெயருக்கு மாற்றாமல் இருப்பதற்காகவும், சொத்துக் களைத் தவறானமுறையில் கையாளாமல் இருப்பதற்காகவே ஆகும். கோவில்கள் தனியார் நிறுவனம் அல்ல. பொதுவான வழிபடுவதற்கான இடமாகும். முறையான மத ரீதியிலான கண்காணிப்புகளில் தலையீடுகள் இருக்கக் கூடாது. மதத்துக்கு அப்பால் கோவில்களில் நிர்வாகத்தில் பொதுவானவர்கள் இருக்க வேண்டும்.

-தி ஹிந்து ஆங்கில நாளிதழ், தலையங்கம் 29-4-2014

Read more: http://viduthalai.in/page-2/80747.html#ixzz32UwcfLsb