Search This Blog

31.5.14

சுயமரியாதை இயக்கத் தத்துவம் கடவுள் மத ஆபாசங்கள்




தோழர்களே!

இந்த நாமக்கல் கொஞ்சகாலமாகவே காங்கரஸ் கோட்டை என்று சொல்லப்படுவதாகும். எனினும் நமது சுயமரியாதை இயக்கத் தோழர்கள் சிலர் இங்கு எப்படியோ ஒரு மகாநாடு கூட்டிவிட்டார்கள். நாங்கள் வரும் போது உண்மையிலேயே சற்று பயத்துடனேயே வந்தோம். சு.ம. மகாநாடு அவ்வளவு திருப்திகரமாய் நடக்காது என்றும், காங்கரசின் காலித்தனத்திற்கு முகம் கொடுக்க வேண்டி வருமென்றும் உள்ளூர் பொது ஜனங்கள் ஆதரவு சரியாய் இருக்காதென்றும் கருதினோம். ஆனால் இங்கு வந்த பிறகு எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும்படியான நிலையில் இம்மகாநாடு நடந்திருக்கிறது. எங்களுக்கு நீங்கள் அளித்த ஆடம்பரமான வரவேற்பும் காட்டிய உற்சாகமும், அன்பும் உண்மையிலேயே எங்களை நாங்களே பாராட்டிக் கொள்ளும் மாதிரியாக ஏற்படுத்தி விட்டது.

கண்டறியா அருங்குணம்

தவிரவும் எனது பொது வாழ்வில் காங்கரசுகாரரிடம் இவ்வளவு நாளும் கண்டறியாத ஒரு அருங்குணத்தைப் பார்த்ததில் நிஜமாகவே நான் மெய்மறக்கும்படி மயக்கம் ஏற்பட்டு விட்டது. என்னவெனில் எங்கள் கூட்டங்களுக்கு காங்கரஸ்காரர்கள் போகக் கூடாது என்றும், போனாலும் எவ்வித கேள்வி கேட்பதோ, கலவரம் ஏற்படும்படி செய்வதோ ஆகிய காரியம் கண்டிப்பாய் நடத்தக் கூடாது என்றும் புத்தி புகட்டப்பட்ட ஒரு துண்டு நோட்டீஸ் காங்கரஸ்காரர்களால் வினியோகிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். இந்தப்புத்தி காங்கரசுக்காரர்களுக்கு எப்படி வந்தது, ஏன் வந்தது என்கின்ற காரியம் எனக்கு ஒரு யுக்திகணக்கு போட்டி பரிசு மாதிரியாகவே இருக்கிறது. சென்ற வருஷம் வந்தபோது கழுதை கழுத்தில் அட்டை கட்டி அதில் எங்களைப் பற்றி கேவலமாய் எழுதி விரட்டி விட்டார்கள். போன மாதத்தில் வந்த போதும் கூட்டத்தில் காலித்தனம் செய்தார்கள். அவற்றையெல்லாம் நாங்கள் ஒரு வழியில் சமாளித்தோம் என்றாலும் இப்போது இந்த புத்தி வந்தது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எப்படி இருந்தாலும் அரசியலிலோ சமுதாயத்திலோ எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராயம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நான் யாருக்கும் விரோதியில்லை, யாரிடமும் துவேஷமில்லை. மனிதர்கள் எல்லோரும் ஒரே அபிப்பிராயம் கொள்ள முடியாது. சரியாகவோ தப்பாகவோ அபிப்பிராய பேதம் ஏற்படுவது மனிதனுக்கு இயற்கையேயாகும். ஒருவருக்கொருவர் அபிப்பிராயத்தை மதிக்காவிட்டாலும் ஏற்காவிட்டாலும் வெளியிலெடுத்துச் சொல்ல இடம் கொடுக்க வேண்டியதானது மானத்திலும் மனிதத் தன்மையிலும் கவலையுடையவனின் கடமையாகும்.

உதாரணமாக ஈரோட்டில் எங்கள் எதிரிகள் யாராவது எப்படிக் கத்தினாலும் நாங்கள் கீச்சு மூச்சு சத்தம் ஏற்படக்கூட இடம் கொடுப்பதில்லை.

எனினும் ஒரு விஷமம்

ஆனால் காங்கரஸ்காரர்களுக்கு அந்தப் புத்தி இருந்ததை நான் இதுவரை ஒரு ஊரில் கூடப் பார்த்ததில்லை. இன்று இந்த ஊரில் பார்க்கிறேன் என்றாலும் இதிலும் ஒரு விஷமத்தை காண்கின்றேன். என்னவெனில் இன்று இங்கு சு.ம. மகாநாடு நடப்பதும் இந்த பொதுக்கூட்டம் இன்று ஏற்பாடு செய்திருப்பதும் 15 நாட்களுக்கு முன்பிருந்தே தெரிந்திருந்தும் இந்த ஊர் காங்கரஸ்காரர்கள் இன்றைய தினத்திலேயே வேறு ஒரு மீட்டிங்கு ஏற்பாடு செய்து அதில் "அநேக காங்கரஸ் தலைவர்கள் வருகிறார்கள்" என்று நோட்டீசு ஏராளமாய் வினியோகிக்கப் பட்டிருக்கிறது. நாளைக்கு அந்த கூட்டம் போட்டால் என்ன முழுகிப் போகும். உண்மையிலேயே நோட்டீசில் வெளியிட்ட அத்தனை "தலைவர்களும்" வரப்போகிறார்களா? வேண்டுமென்றே விஷமத்துக்கு அதாவது இந்த கூட்டத்துக்கு ஆட்கள் வராமல் இருக்க வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணம் தவிர இதுவேறு எதுவாய் இருக்க முடியும்? அப்படி இருந்தும் நீங்கள் இவ்வளவு பேர் - 3000 பேர் இங்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மேலும் காங்கரஸ்காரர்கள் இங்கு வினியோகித்த துண்டு நோட்டீசில் "காங்கரசு ஒன்றுதான் மக்களுக்கு சுதந்தரமும் விடுதலையும் அளிக்கும்" என்று பெரிய எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதை இவர்கள் நாங்கள் சொல்வதையும் கேட்டு விட்டு நாளைக்கு சொன்னால் என்ன? இன்றைக்கே சொல்லுவானேன்? இருந்த போதிலும் நாளைக்கும் அவர்கள் கூட்டம் ஒன்று உண்டு என்றும் தெரிகிறது. சுவர் விளம்பரமும் ஒட்டப்பட்டிருக்கிறது. ஆதலால் இன்று நீங்கள் நான் சொல்வதையும் கேட்டு விட்டு நாளைக்கு அவர்கள் சொல்லுவதையும் கவலையுடனும் பொறுமையுடனும் கேளுங்கள். பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள்.

பொதுக்கூட்டம் ஒரு சர்வகலாசாலை

அதிலும் எவ்வித குழப்பமும் மீட்டிங்கு ஒழுக்கத்துக்கு விரோதமான காரியமும் செய்யாதீர்கள். இன்று உலகம் உள்ள நிலைமையில் நாட்டுக்கு இப்படிப்பட்ட கூட்டங்கள் மாறி மாறி நடக்க வேண்டியதும் நீங்கள் கேட்க வேண்டியதும் மிக்க அவசியமாகும். உங்களுக்கு இக்கூட்டங்கள் ஒரு சர்வகலாசாலை போன்றதாகும். உலக நடப்பையும் மக்கள் யோக்கியதையையும் கண்டறிய ஒரு பரீஒை கருவியாகும். பள்ளிக் கூடத்தில் இவைகளைப் படித்து விட முடியாது. பெரிய கலாசாலை பட்டம் பெற்று விடுவதினாலும் இந்தப் படிப்பு வந்து விடாது. உலக கல்வி வேறு, பகுத்தறிவு வேறு, பட்டம் வேறு. பெரிய டாக்டராய் இருப்பான், ஆனால் அவனும் மூத்திரமும் சாணியும் சாப்பிட்டால் ஒருவன் மோட்சத்துக்கு போகலாம் என்று நினைப்பான். பெரிய வானசாஸ்திர நிபுணனாய் இருப்பான், அவனும் பார்ப்பான் மூலம் தன் மாஜி தந்தைக்கு அரிசி பருப்பு காய்கறி செருப்பு அனுப்புவான். ஒருவன் பெரிய உடற்கூறு சாஸ்திர நிபுணனாய் இருப்பான், அவனும் தன் மனைவியையும் மகளையும் வீட்டுக்கு தூரமென்று வீதி திண்ணை அறையில் தள்ளி மூடிவைத்து விட்டு உள்ளே தாழ் போட்டுத் தூங்குவான். ஆகையால் மனிதனுக்கு பகுத்தறிவும் உலக கல்வியும் அறிய பள்ளிக்கூடமும் பட்டமுமே போதுமானதாகிவிடாது.

நீங்கள் நான் சொல்லுவதைக் கேளுங்கள். ஆனால் உடனே நம்பி விடாதீர்கள். நாளை நமது எதிர் அபிப்பிராயக்காரர்கள் வருவார்கள். அவர்கள் சொல்வதையும் கேளுங்கள். பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். இதுதான் எங்கள் ஆரம்பப் பிரார்த்தனை - எங்கள் முதல் வேண்டுகோள்.

சுயமரியாதை இயக்கம்

இன்று சுயமரியாதை இயக்கம் பற்றியும் காங்கரஸ் பற்றியும் பேசுகிறேன். முதலில் நாங்கள் யார்? வயிற்றுப் பிழைப்பு பிரசாரகரல்ல. சுய நலத்துக்கு பதவி மோகத்தால் பிரசாரம் பண்ணுகிறவர்கள் அல்ல. என்னைப் பொறுத்தவரை எனக்கு பிரசாரத்தில் வயிறுவளர்க்க வேண்டிய அவசியமில்லை. பட்டம் பதவி எனக்கு மிகவும் தூரமானதல்ல. நான் ஒரு வியாபாரியாய் இருந்தவன். கெளரவ பதவிகளில் முனிசிபல் சேர்மெனாய் ஜி.போ., தா.போ. மெம்பராய் மற்றும் பல பதவியிலிருந்து ஒரே கடுதாசியில் 5, 6 பதவிகளை ராஜிநாமாச் செய்துவிட்டு காங்கரசில் சேர்ந்தவன். நானும் கனம் ராஜகோபாலாச்சாரியாரும் 18 வருஷங்களுக்கு முன் ஒருவருக்கொருவர் பேசியே இருவரும் சேர்மென் பதவிகளை ஏக காலத்தில் ராஜிநாமாச் செய்தோம். அப்பொழுது எனக்கு 27 கெளரவ பதவிகள் இருந்தன. அந்தக்காலத்தில் சேர்மென் வேலைக்கு இருந்த மதிப்பும் கெளரவமும் இந்தக் காலத்தில் மந்திரி வேலைக்குக் கூட இல்லை. இப்போது எவ்வளவு சாதாரண மனிதனும் மந்திரியாகலாம். மந்திரிவேலைக்கு நாணயமோ, செல்வாக்கோ எதுவும் வேண்டியதில்லை என்பதை நீங்கள் பிரத்தியட்சத்திலேயே பார்க்கிறீர்கள். ஆதலால் நான் பதவி வேண்டுமானால் அதற்காக இவ்வளவு பாடுபட வேண்டியதில்லை. நிற்க, நானும் காங்கரசில் கொஞ்ச காலம் இருந்து தேச பக்த - தேசீயவீர பரீஒையில் முதல் வகுப்பில் தேறியவன்தான். நான் காங்கரசை விட்டு வரும்போது காங்கரசில் மாகாண காரியதரிசி, தலைவர் ஆகிய பெருமையுள்ள பதவியில் இருந்து வந்தவன். பலபேர் என்னை வருந்தி வருந்தி கூப்பிடக் கூப்பிட திமிறிக்கொண்டு காங்கரசை விட்டு வெளி வந்தவன். இன்றைய தோழர் கனம் ராமநாதனும் மற்றும் பலரும் என் பின் என்னைத் தொடர்ந்து வெளியில் வந்து கொண்டிருக்கிற நிலையில் வெளியானவர்.

திருப்பூர் காதிவஸ்திராலயத்தையும், புதுப்பாளையம் காந்தி ஆஸ்ரமத்தையும், இதே நாமக்கல் கதர்க்கடையையும் இந்தக் கையாலேயே திறந்து வைத்தவன் நான் தான். நான் காங்கரசை விட்டு வெளிவரும்போது "உங்கள் காங்கரஸ் புரட்டுகளை உணர்ந்தே நான் வெளியில் போகிறேன். வெளியில் போய் உங்கள் வண்டவாளங்களை வெளியாக்குகிறேன்" என்று சொல்லிவிட்டே வெளியில் வந்தவன். நான் இந்தப்படி சொல்லி வெளியில் வந்து விட்டபிறகும் என்னை மாகாணக் காங்கரஸ் கமிட்டி நிர்வாக சபையில் தெரிந்தெடுத்தார்கள். கதர் சங்கங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள். சட்ட சபைக்கு காங்கரஸ் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் நிற்கும்படி கனம் ஆச்சாரியாரே வந்து பலதடவை கூப்பிட்டு இருக்கிறார். கனம் ராமநாதன் அவர்கள்தான் என்னை தடுத்து மறுபடியும் காங்கரசுக்கு போகக்கூடாது என்று சொன்னவர். இவை எல்லாம் மாஜி பதிவிரதை கதையல்ல அல்லது மாஜி விவசாரிகளாய் குச்சுக்காரிகளாய் இருந்து கிழடு பாய்ந்து இப்போது கிராக்கி வராது என்று கருதி பதிவிரதை ஆன கதையும் அல்ல. நான் யாரை பதிவிரதைகள் என்று நம்பினேனோ அவர்கள் தாம்பிர நாணய குச்சுக்காரிகள் என்று கண்டு விலகி வந்து பிறகு இங்கு வந்து நின்று பேசும் கதையாகும். இவற்றை தோழர்கள் ராஜ கோபாலாச்சாரியார், கல்யாணசுந்தர முதலியார், எஸ். சீநிவாசய்யங்கார் ஆகியவர்களைக் கேட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவற்றை ஏன் சொல்லுகிறேன் என்றால் காங்கரஸ் எச்சிலைகளுக்கு நியாயமாகப் பேசி நான் சொல்லும் விஷயங்களை மறுக்க யோக்கியதை இல்லாமல் அயோக்கியதனமாய் தன்னைப் பெற்ற தாயாருக்கு பண வரும் படிக்கு மாப்பிள்ளை தேட முச்சந்தியில் நிற்கும் மாஜி குச்சிக்காரிகள் பிள்ளைகள் போல் கன்னா பின்னா என்று நம்மை வசைபாடுவதன் மூலம் உங்களை ஏய்க்கப் பார்ப்பார்கள். நான் காங்கரசால் தள்ளப்பட்டேன் என்றும் பணம் எடுத்துக் கொண்டேன் என்றும் அதனால் காங்கரசை குறை கூறுகிறேன் என்றும் மாஜி பதிவிரதை என்றும் இப்படி பேசுவார்கள். அந்தப் படியே இதே மேடையில் சிலர் பேசினார்களாம். அதற்கு ஆகவே இதை சொல்லுகிறேன். இவையெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.

இனி சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? காங்கரசு என்றால் என்ன? என்பதை பற்றி தலைவர் கட்டளைப்படி சிறிது பேசுகிறேன்.

சுயமரியாதை இயக்கம்

நான் ஆரம்பத்தில் கூறியபடி முதலில் சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? அது ஏன்? என்பதைப்பற்றி பேசிவிட்டு பிறகு காங்கரஸ் என்பதைப் பற்றிப் பேசுகிறேன்.

சுயமரியாதை இயக்கம் இந்நாட்டு மக்களுக்கு முதலில் மான உணர்ச்சி ஏற்படவும் எல்லா மக்களையும் சமூகம் பொருளாதாரம் ஆகியவற்றில் சமப்படுத்தி ஒன்று சேர்க்கவும் ஏற்பட்டதாகும். மற்றும் பல கொள்கைகளை அது கொண்டிருந்தாலும் மற்றபடி அது நம் எதிரிகள் சொல்லுவது போல் மதங்களையும் கடவுள்களையும் எதிர்ப்பதற்கு என்றே ஏற்பட்டதல்ல.

நமது நாட்டு மக்களுக்கு மான உணர்ச்சி இல்லாமல் போனதற்கும் ஒற்றுமையும் சமத்துவமும் இல்லாமல் போனதற்கும் ஏற்பட்டுள்ள தடைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டுமென்று சொல்லுவதிலும் அவைகளை ஒழிக்க முயற்சிப்பதிலும் உண்மையிலேயே சு.ம. இயக்கம் சிறிதும் ஒளிமறைவில்லாமல் பாடுபடுகிறது.

இந்தக் காரியங்கள் செய்வதில் கடவுள்களோ, மதங்களோ வேறு எவைகளானாலும் சரி, அத்தொண்டிற்குத் தடையாயிருந்தால் அவற்றையும் ஒழிப்பதில் சு.ம. இயக்கம் சிறிதும் பின் வாங்காது. இதைப்பற்றிப் பேசும்போது முதலில் மதம் என்று சொல்லப்படுவது எது? கடவுள்கள் என்று சொல்லப்படுபவை எவை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

மதம் என்பது என்ன?

"மதம் என்பது மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கும், அதற்கேற்ற ஒழுக்கத்துக்கும் ஏற்றவிதிகளைக் கொண்டதேயாகும்" என்று சொல்லப் படுமானால் அம்மாதிரி மதங்களைப் பற்றி சு.ம. இயக்கம் அதிக கவலைப்படுவது கிடையாது. அதற்கு சுயமரியாதை இயக்கம் அவசியமானால் உதவியும் செய்யும். மற்றும் "மனிதனின் ஆத்மா என்பது கடவுள் என்பதை அடைவதற்கு ஆக மதம் ஏற்பட்டது" என்றால் அதைப் பற்றியும் சு.ம. இயக்கம் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட அபிப்பிராயக்காரனும் அவனுடைய மதமும் இப்போது எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடும். ஏனெனில் அது தனிப்பட்ட மனிதனைப் பொறுத்த காரியம். அதைப்பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் மனித சமூகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும் தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யவும் மக்களைப் பிரித்து வைத்து உயர்வு தாழ்வு கற்பித்து மனித சமூக ஒற்றுமையைக் கெடுத்து பொது முன்னேற்றத்தையும் சுதந்தரத்தையும் தடுக்கும்படியான மதம் எதுவானாலும் அதை ஒழிக்க சுயமரியாதை இயக்கம் பாடுபட்டுத்தான் வந்திருக்கிறது. இன்று அனுபவத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான பல மதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுள் அந்நிய மதம் அந்நியர்கள் மதம் என்பதைப்பற்றி நாம் இப்பொழுது பேச வேண்டாம். "நம்முடைய மதம்" என்று இந்துக்கள் என்பவர்களால் சொல்லப்படுகிற இந்து மதம் என்பதையே எடுத்துக் கொள்வோம்.

இந்து மதம்

இந்தியர்களாகிய நாம் இவ்வளவு பிரிவினர்களாக இருப்பதற்கு இந்த இந்து மதமல்லாமல் வேறு எது காரணம்? பொதுவாக இந்துக்கள் இத்தனை ஜாதியாக அவற்றிலும் உயர்வு தாழ்வாக பார்ப்பான் பறையன் என்பதாக பிரிவுபடுத்தப்பட்டிருப்பதற்கும் இந்து மதமல்லாமல் வேறு என்ன காரணம்? இந்த 20-வது நூற்றாண்டில் - நேற்று சென்னையில் மகா மேதாவிகளான பி.ஏ.பி.எல் . சாஸ்திரிகள், மகா பண்டித சாஸ்திரிகள் ஒன்று கூடிக்கொண்டு "கீழ் ஜாதியானை மேல் ஜாதியான் தொடுவது என்பது அதாவது தீண்டாமை ஒழிவது என்பது செத்தால் தான் போகுமே ஒழிய இந்த ஜன்மத்தில் ஜாதி பேதம் போக்கடிக்கப்பட முடியாது" என்று பேசியிருக்கிறார்கள். இதற்கு ஆதாரம் இந்து மத சாஸ்திரமும், வேதமும் தான் என்று பேசி இருக்கிறார்கள். ஆகவே இந்த நிலையில் இம்மாதிரி மதம், சாஸ்திரம், வேதம் என்பவைகள் ஒழிக்கப்படாமல் தீண்டாமையும் ஜாதி பேதமும் போக்கடிக்கப்பட முடியுமா? இதுவரையும் இந்து மதம் விட்டு வேறு மதம் முக்கியமாக முஸ்லீம் ஆகாத எந்த பார்ப்பனரல்லாதாருக்காவது தங்களது சமூகத்தில் தீண்டாமை போயிருக்கிறதா என்று யோசித்து பாருங்கள். மற்றும் பார்ப்பனருக்குள்ள சவுகரியமும் சுதந்தரமும் சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மற்ற வகுப்பாருக்கு இருந்து வருகிறதா என்றும் யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட மதம் ஒழிக்கப்பட வேண்டியது தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? மதம் என்ற உடன் ஒருவித வெறி ஏற்பட்டு விடுகிறதாய் இருக்கிறதே ஒழிய மதம் மக்களுக்கு செய்துவரும் நன்மை என்ன? அதனால் மக்கள் அடையும் பயன் என்ன? என்பதை மதவெறியர்கள் சிந்திப்பதேயில்லை. கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. கள்ளு குடித்தவனை கெடுக்கிறது, மதம் மனதில் நினைத்தவனையே கெடுக்கிறது.

சோம்பேறி வாழ்வுக்கு மதந்தானே காரணம்?

சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது மாத்திரமல்லாமல் மதம் பொருளாதாரத்தில் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மூலகாரணமாய் இருக்கிறது. உண்மையில் நீங்கள் யோசித்துப்பாருங்கள். உடல் வலிக்கப் பாடுபட ஒரு ஜாதியும் நோகாமல் உட்கார்ந்துகொண்டு சாப்பிட ஒரு ஜாதியும் மதம் சிருஷ்டிக்க வில்லையா? உலக செல்வமும் போக போக்கியமும் சரீரப் பாடுபடும் மக்களுக்கு இல்லாமல் போகவும் சோம்பேறி வாழ்க்கை யாருக்கும் சரீரப்பாடுபடாதவர்களுக்கும் போய்ச் சேரவும் காரணம் மதக் கொள்கை அல்லாமல் வேறு என்ன? பாட்டாளிகள் தரித்திரர்களாகவும் வயிற்றுச் சோற்று அடிமையாகவும் கீழ் ஜாதியாராகவும் கீழ் மக்களாகவும் இருக்கவும் பாடுபடுவதும் சரீர உழைப்பு உழைப்பதும் தோஷம் என்று ஏற்படுத்திக் கொண்டவர்கள் கவலையற்ற வாழ்வு வாழவும் செல்வம் பெருக்கிக்கொள்ளவும் மற்றவர்களை அடக்கி ஆளவும் மதம் அல்லாமல் வேறு காரணம் என்ன?

பகுத்தறிவற்ற பச மிருகம் பூச்சி புழுக்கள் தங்களுக்குள் ஜாதி பேதம், மேல் கீழ் நிலை, அடிமைப்படுத்தும் உணர்ச்சி ஆகியவை இல்லாமல் இருக்கும்போது பகுத்தறிவுள்ள மனிதனுக்குள் ஜாதி பேதம், உயர்வு தாழ்வு எஜமான் அடிமை உணர்ச்சி ஏற்படக் காரணம் என்ன?

மிருகங்களுக்கு ஜாதி வித்தியாச முண்டா?

கழுதையில், நாயில், குரங்கில், எருமையில் பறக் கழுதை, பற நாய், பறக் குரங்கு, பற எருமை என்றும் பார்ப்பாரக் கழுதை, பார்ப்பார நாய், பார்ப்பாரக் குரங்கு, பார்ப்பார எருமை என்றும் இருக்கிறதா? மனிதனில் மாத்திரம் இப்படி இருப்பதற்குக் காரணம் மதம் அல்லாமல் வேறு என்ன? இந்த மதம் ஏற்பட்டு எத்தனை காலம் ஆயிற்று? இதுவரை மனித சமூகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? கடவுள் அவதாரமான ராமனது ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்த கீழ் ஜாதியும் சத்தியகீர்த்தி அரிச்சந்திரன் ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்து வந்த சுடுகாட்டுப் பறையனும் பெண்ஜாதி விற்பனையும் பதினாயிரக் கணக்கான வருஷங்கள் ஆகியும் இன்னமும் ஒழியவில்லை என்றால் மதத்தினால் மக்கள் முன்னேறுகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

மதம் கற்பிக்கும் முட்டாள் தனம்

மதம் மனிதனுக்கு எவ்வளவு முட்டாள் தனத்தைக் கற்பிக்கிறது பாருங்கள். செத்துப் பொசுக்கப்பட்டு அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து விடப்பட்ட மனிதனுக்கு பசி தீரவும் சுகமடையவும் அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு பார்ப்பான் மூலம் மேல் லோகத்துக்கு அனுப்பிக் கொடுப்பதென்றால் மனிதனுக்கு சிறிதாவது பகுத்தறிவு இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்களா? பெற்றோர்களை - இறந்து போனவர்களை மதிக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. அதற்காக பார்ப்பானுக்கு ஏன் அழுக வேண்டும்? அவன் காலில் ஏன் விழவேண்டும்? அவன் கால் கழுவின தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும்? மாட்டுச் சாணியும் மூத்திரமும் கலக்கி ஏன் குடிக்கவேண்டும்? இது மதக்கட்டளை, மத தத்துவம் என்றால் இப்படிப்பட்ட மதம் ஒழிய வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

கல்யாணம் கருமாதி கல்லெடுப்பு முதலிய சடங்குகள் பார்ப்பானுக்கு அழுகவே கற்பிக்கப்பட்டிருக்கின்றனவே ஒழிய அவற்றினால் வேறு பலன் என்ன இருக்கிறது?

வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

மற்ற மதக்காரரும் உலகில் உள்ள மற்ற நாட்டு மக்களும் இப்படியா நடந்து கொள்ளுகிறார்கள்? நமக்குப் புத்தியும் இல்லை வெட்கமும் இல்லை என்றால் கண்ணும் இல்லை காதும் இல்லை என்று தானே அர்த்தம்? இதற்குப் பேர் மாம்சபிண்டம் என்று தானே சொல்ல வேண்டும்? எங்கள் மீது கோபித்து என்ன பிரயோஜனம்? எங்களை மதவிரோதிகள் என்று வைவதில் என்ன பிரயோஜனம்? மனிதனுக்கு இன்று இருக்கும் கேவல நிலைக்கு காரணம் மதமா? அரசாங்கமா? என்று சிந்திக்க வேண்டுமென்பதற்காகவே இதை சொல்லுகிறேன்.

மதத்தால் மக்களைச் சுரண்டிக்கொள்ளை அடித்து நோகாமல் வயிறு வளர்த்து போக போக்கிய மனுபவிக்கும் சோம்பேறி அயோக்கியக் கூட்டம் நம்மை மதத்தை பற்றி சிந்தித்து திருத்துப்பாடு செய்து கொள்ளுவதற்குக் கூட இடம் கொடாமல் நம் ஈன நிலைமைக்கு அரசாங்கத்தை - வெள்ளையரைக் கைகாட்டி விட்டு தப்பித்துக்கொள்ளுகிறது. இது சாமர்த்தியமுள்ள திருடன் திருடிவிட்டு அதோ திருடன் ஓடுகிறான் என்று வேறு ஒருவனைக் கைகாட்டி தப்பித்துக்கொள்ளுவது போலவே இருக்கிறது. நான் சொல்லுவது உங்களில் சிலருக்கு புதிதாய் இருக்கலாம். நீங்கள் இதற்குமுன் இவ்விஷயங்களைப் பற்றி சரியாய் சிந்தித்து இருக்கமாட்டீர்கள் என்றே இவ்வளவு பேசினேன். ஆகவே நாங்கள் ஏன் மதத்தைப் பற்றி பேசுகிறோம்? எந்த மதத்தைப்பற்றி பேசுகிறோம் என்பதை சிந்தித்துப் பார்த்து உங்கள் இஷ்டப்படி நடவுங்கள்.

இனி நமது கடவுள்கள் என்பதைப்பற்றியும் சிறிது பேசிவிட்டு அரசியலைப்பற்றிப் பேசுகிறேன்.

நமது கடவுள்கள்

இந்த விஞ்ஞானப் பெருக்கமுள்ள நாளில் நாம் இன்னமும் கடவுள்களைப் பற்றியும் அவைகளின் திருவிளையாடல்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பது உண்மையிலேயே ஒரு காட்டு மிராண்டித்தனமேயாகும் என்றாலும் நமது எதிரிகள் நம்மீது வேறு எவ்வித குற்றமும் சுமத்த யோக்கியதையற்றுப் போனதால் நம்மை நாஸ்திகர்கள் என்று விஷமத்தனமாய் கெட்ட எண்ணத்துடன் பிரசாரம் செய்து வருவதால் அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது.

கடவுள் தன்மை

கடவுள்களைப் பற்றிய அபிப்பிராயத்தில் பழையகால அதாவது காட்டு மனிதன் காலத்தைவிட கிறிஸ்தவர்களில் ஒரு சாராரும் முகமதியர்களும் எவ்வளவோ சீர்திருத்தத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள் ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும் என்றும், அக்கடவுள் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதது என்றும் அது பெயரும் குணமும் உருவமும் இணையும் இல்லாதது என்றும் மனிதரில் நன்மையான காரியங்கள் செய்தவர்களுக்கு நன்மையும், தீமையான காரியம் செய்தவர்களுக்கு தீமையும் அளிக்கக்கூடியது என்றும் சொல்லி குணம் கற்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி இப்பொழுது நாம் விவகாரம் பேசவேண்டிய அவசியம் இல்லை. இக்கருத்துடன் உணர்ந்திருக்கும் கடவுளால் மனிதன் தீமை செய்யப் பயப்படுவான் என்றும் நன்மை செய்ய ஆசைப்படுவான் என்றும் அது சமுதாய வாழ்விற்கு மிக்க பயனளிக்கும் என்றும் பல அறிஞர்களும் அதை ஒப்புக்கொண்டு காரணம் சொல்லுகிறார்கள். ஆகையால் இன்றைய தினம் இந்துக்கள் என்பார்களுடைய சிறப்பாக பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடவுள்களை எடுத்துக் கொள்ளுவோம். இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள் ஏன்? அவை எப்படி வந்தன? பல்லாயிரக் கடவுள்கள் தவிர மற்றும் என்னவெல்லாம் கடவுள்களாகி இருக்கின்றன பாருங்கள். மாட்டு மலம் முதல் மாடு, குதிரை, எருமை, குரங்கு, பெருச்சாளி, கழுகு, காக்காய், பாம்பு, மரம், செடி, கல், மண், உலோகம், காகிதம் முதலியவைகளும் மற்றும் பல ஆபாச உருவங்களும் கடவுளாக வணங்கப்படுகின்றன. காசியில் ஒரு கோவிலில் 2 உயிருள்ள நாய்கள் படுத்திருக்கின்றன. அவைகளுக்கும் பூசை போட்டு வணங்குவதை நேரில் பார்த்தேன். இப்படிச் செய்வதற்கு பண்டிதர்களால் தத்துவார்த்தம் சொல்லப்படுகிறது. இவ்வளவோடு இல்லாமல் இக்கடவுள்களுக்கு பெண்டு பிள்ளைகள் வைப்பாட்டி தாசி விபசாரித்தனம் ஆகாரம் உறக்கம் புணர்ச்சி முதலியவைகளும் கற்பிக்கப்படுகின்றன. மற்றும் இக்கடவுள்களுக்கு கல்யாணம், சாவு முதலியனவும் கூட கற்பிக்கப்படுகின்றன.

திருவிழா ஆபாசம்

கற்பிக்கப்படுவதோடு தொலைந்து போனாலும் பரவாயில்லை. செய்கையில் செய்து காட்டி அதாவது கடவுள் விபசாரிதனம் செய்வதாகவும், தாசிவீட்டுக்குப் போவதாகவும் மற்றவர்கள் வீட்டுப் பெண்களை அடித்துக் கொண்டு போவதாகவும் உற்சவங்கள் செய்துகாட்டி அவைகளுக்காக பல கோடிக்கணக்கான ரூபாய்களும் மனிதனின் விலை உயர்ந்த நேரமும் ஊக்கமும் உணர்ச்சியும் பாழாக்கப்படுகின்றன. இக்காரியங்கள் இந்த 20-வது நூற்றாண்டில் செய்யக்கூடியதா என்பதை யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி கடவுள்களை கற்பித்துக்கொண்டு அவைகள் மேல்கண்ட மாதிரியான காரியங்கள் செய்ததாக புராணங்களையும் இதிகாசங்களையும் கற்பித்துக் கொண்டு அக்காரியங்களை நாமும் கடவுள்கள் பேரால் செய்து கொண்டு திரிவது பற்றி மனிதனுக்கு வெட்கம் வரவேண்டாமா என்று கேட்கின்றேன். இதைச் சொன்னால் எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுவது யோக்கியமும் நாணயமுமான பேச்சாகுமா என்று கேட்கின்றேன். கடவுள் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி இருப்பதை கடவுள் என்று அறிவுடையவன் ஒப்புக் கொள்வானா? இன்று நாம் இம்மாதிரி கடவுள்களுக்காக செய்கிற பூஜையும், படையல்களும், கல்யாணம் முதலிய உற்சவங்களும் கடவுளுக்கு எதற்கு? எந்தக்கடவுளாவது ஏற்றுக்கொள்கிறதா? கடவுள்களை பொம்மைகள் மாதிரி வைத்து வருஷா வருஷமும் சில கடவுள்களுக்கு வருஷத்தில் இரண்டு தரம் 3 தரமும் கல்யாணங்கள் செய்கின்றோமே அவை எதற்கு? சாமிக்கு உண்மையிலேயே பெண்ஜாதி வேண்டியிருந்தால் போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று? என்று கேட்க வேண்டாமா? விவாக விடுதலை ஆகிவிட்டதா? அல்லது தள்ளி வைக்கப்பட்டு விட்டதா? அல்லது ஓடிப்போய்விட்டதா? அல்லது முடிவெய்தி விட்டதா? என்று கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? எதற்காக வருஷா வருஷம் கல்யாணம்? அக் கல்யாணத்துக்கு கொட்டு மொழக்கு ஆடம்பரம் பணச்செலவு ஏன்? சாமி கல்யாண சமாராதனை சாப்பாட்டை எந்த ஜாதியார் சாப்பிடுகிறார்கள் தெரியுமா? கண்டபடி பதார்த்தங்களை பாழாக்குவதேன்? இந்தப்படி வருஷம் எத்தனை உற்சவம்? எங்கெங்கு உற்சவம்? இவைகளால் இதுவரை அடைந்த பலன் என்ன? நம் மக்கள் படிப்பு விஷயத்தில் 100க்கு 95 பேர்கள் தற்குறி, நமது உலகத்திலேயே மிக்க ஏழ்மை நாடு என்கின்றோம். ஒருமனிதனுக்கு தினம் சராசரி 2 அணா படி கூட இல்லை என்று சொல்லுகிறோம். இப்படிப்பட்ட நாம் கடவுள்களுக்கு என்று எவ்வளவு செல்வங்களை பாழாக்குகிறோம் என்று யோசிக்கின்றோமா?

படையல் யார் வயிற்றில் போகிறது

ஒரு கடவுளுக்கு தினம் எத்தனை தடவை பூஜை படையல்? ஒவ்வொரு பூஜை படையலுக்கு எத்தனை படி அரிசி பருப்பு சாமான்கள்? இவைகள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்கு கல்வி இல்லை, தொழில் இல்லை, சாப்பாடு இல்லை என்று புறம் சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரி செல்வம் பாழாக்கப்படுவதென்றால் யோக்கியன் எப்படி சகித்திருக்க முடியும்? தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். வைகுண்ட ஏகாதசிக்கும் ஆருத்திரா தரிசனத்துக்கும் தை பூசத்துக்கும் கார்த்திகை தீபத்துக்கும் திருப்பதிக் குடைக்கும் திருச்சந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷாவருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்து செலவு, மெனக்கேடு செலவு உடல் கேடு ஒழுக்கக்கேடு ஆகிய காரியம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் இக்கடவுள்களால் மக்களுக்கு நன்மையா தீமையா என்று கேட்கின்றேன். இச்செலவுகளைத் தடுத்து அச்செல்வங்களை வேறு வழிக்கு பயன்படுத்த முயற்சி செய்தால் வரியே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தக் கூடிய பணம் மீதியாகாதா? நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களை கைப்பற்றி தொழில் சாலைகள் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தினால் வேலை இல்லாத் திண்டாட்டமும் தற்குறித்தன்மையும் அந்நிய நாட்டார் வியாபாரத்தின் பேரால் சுரண்டுதலும் இந்நாட்டில் அரை நிமிஷமாவது இருக்க முடியுமா? என்று கேட்கின்றேன். ஏதோ ஒரு கூட்டங்கள் சோம்பேறியாய் இருந்து வயிறு வளர்க்க வேண்டி மற்ற மக்கள் தாங்கள் பாடுபட்டு தேடிய செல்வத்தை பாழாக்கி இவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுவதா? என்று கேட்கின்றேன்.

மற்றும் கடவுள் பேரைச் சொல்லிக்கொண்டு பக்தியின் காரணம் காட்டிக்கொண்டு எவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுகிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். காவடி எடுத்துக்கொண்டு கூத்தாடுவதும், மஞ்சள் துணி கட்டிக்கொண்டு வீதியில் கிடந்து புரளுவதும் மொட்டை அடித்துக்கொள்ளுவதும், பட்டை பட்டையாய் மண்ணையும் சாம்பலையும் அடித்துக்கொள்ளுவதும், உடம்பில் கம்பிகளையும் கத்திகளையும் குத்திக்கொள்ளுவதும் அழுக்குத் தண்ணீரில் குளிப்பதும் ஆனகாரியங்கள் எதற்கு என்று சிந்திக்கிறோமா?

கோவில்கள் எதற்கு?

மற்றும் மக்கள் சாப்பிடக்கூடிய பால், நெய், தயிர், தேன், பழச்சத்து முதலியவைகளை கல்லின் தலையில் குடம் குடமாய் கொட்டி சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? இந்தச் சாமிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டு பீதாம்பர துணிகள் எதற்கு? லக்ஷம் 10 லக்ஷம் கோடி பெறும்படியான ஆறு மதில் ஏழு மதில்கள் உள்ள பெரும் மதில்கள் கட்டிடங்கள் கோபுரங்கள் எதற்கு? தங்கம் வெள்ளி வாகனங்கள் எதற்கு? இவைகள் எல்லாம் நாட்டு பொது செல்வங்கள் அல்லவா? இவைகளை கல்லுகளுக்கு அழுது விட்டு சோம்பேறி சூழ்ச்சிக்கான பார்ப்பன வயிற்றை நிரப்பி அவன் மக்களை ஐ.சி.எஸ்., ஹைகோர்ட் ஜட்ஜி திவான்களாக ஆக்கி விட்டு இதுதான் கடவுள் தொண்டு என்றால் இந்தக் கடவுள்கள் இருக்க வேண்டுமா? என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட கடவுள்களையும் கடவுள் தொண்டு களையும் முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அல்லது இந்து பகுத்தறிவுவாதிகளாவது ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்று கேட்கிறேன்.

உண்மை பேசுகிறவன் நாஸ்திகனா?

இனி எப்பொழுது தான் நமக்கு புத்தி வருவது. இதைச் சொன்னால் பார்ப்பான் நம்மை நாஸ்திகன் என்கிறான். அவன் பேச்சையும் அவனது எச்சிலைத் தின்று வயிறு வளர்க்கும் கூலிகள் பேச்சையும் கேட்டுக்கொண்டு முட்டாள் ஜனங்கள் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கூப்பாடு போடு கிறார்கள். அப்படியானால் இந்த கடவுள்களை ஒப்புக்கொண்டு இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமாய் கூத்தாடுவது தானா ஆஸ்திகம்? இல்லாவிட்டால் நாஸ்திகரா? அப்படியானால் அப்படிப்பட்ட நாஸ்திகத்தைப்பற்றி எங்களுக்கு சிறிதும் கவலையில்லை. அந்தப் பூச்சாண்டிக்கு நாங்கள் பயப்படமாட்டோம். ஏதோ எங்களுக்கு தோன்றியதை - நாங்கள் சரி என்று நம்புவதை அதாவது நம்நாட்டுக்கு மேற்கூறிய மதமும் கடவுள்களும் கொடிய வியாதியாய் இருக்கின்றனவென்றும் இவை ஒழிந்தாலொழிய நாடும் மனித சமூகமும் அறிவும் ஆற்றலும் முற்போக்கடையாது என்றும் கருதுவதை உங்களிடம் விண்ணப்பித்துக்கொள்ளுகிறோம். பொறுமையாய் கேட்டு பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள் என்று தான் சொல்லுகிறோமே ஒழிய பார்ப்பனர்கள் போல் நாங்கள் சொல்வதை எல்லாம் நம்புங்கள் என்றோ நம்பினால்தான் மோக்ஷம். நம்பாவிட்டால் நரகம் என்றோ சொல்லுவதில்லை.

(தொடர்ச்சி 26.12.1937 குடி அரசு "காங்கரசும் அரசியலும்")

-------------------------------------குறிப்பு: 12.12.1937 ஆம் நாள் நாமக்கல் திரையரங்கில் நடைபெற்ற நாமக்கல் வட்ட சுயமரியாதை மாநாட்டிலும் அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ஆற்றிய உரை."குடி அரசு" - சொற்பொழிவு - 19.12.1937
 ************************************************************************************
காங்கரசும் - அரசியலும்

தோழர்களே! நான் இது வரை சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? அது ஏன் ஆரம்பிக்கப்பட்டது? மதம் கடவுள் சமூகம் சம்பந்தமாக அதன் கருத்து என்ன? என்பது பற்றியும் அதைப்பற்றி எதிரிகள் செய்யும் விஷமப்பிரசாரத்துக்கு சமாதானமும் சொன்னேன். இனி காங்கரசின் அரசியல் தன்மையைப்பற்றி சிறிது பேசுகிறேன்.

காங்கரசின் அரசியல் கொள்கைப்படி சுயமரியாதைக்காரர்கள் தேசத் துரோகிகள் என்றும் தேசத்தை அந்நியருக்குக் காட்டிக் கொடுக்கும் நபர்கள் என்றும் மற்றும் பலவாறாக காங்கரஸ் கூலிகளும், காலிகளும் கூப்பாடு போடுகிறார்கள். ஆதலால் அவர்கள் வண்டவாளம் வெளிப்படுத்த வேண்டியதாகிறது.

காங்கரஸ் வண்டவாளம்

ஆனால் சில காங்கரஸ்காரர்கள் என்பவர்கள் சுயமரியாதைக்காரர்கள் சொல்வதெல்லாம் சரிதான்; ஆனால் சுயராஜ்யம் பெற்ற பிறகே சுயமரியாதை அடைய முடியும் என்கிறார்கள். சுயமரியாதைக்காரர்கள் காங்கரசைப்பற்றி சொல்லுவது என்னவென்றால் அது ஒரு பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனம் என்றும் சமுதாயத்துறையில் மதிப்பும் செல்வாக்கும் இழந்த பார்ப்பனர்கள் அரசியல் வேஷம் போட்டு பாமர மக்களை ஏய்க்க ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்றும், அதனால் மக்களுக்கு பல கெடுதிகள் ஏற்பட்டதல்லாமல் யாதொரு நன்மையும் ஏற்பட்டதில்லை என்றும், நாட்டுக்கோ மனித சமூகத்துக்கோ ஏதாவது நன்மை ஏற்பட வேண்டுமானால் இந்த பார்ப்பன ஆதிக்க சபை ஒழிய வேண்டும் என்றும் சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறது. காங்கரஸ்காரருக்குத் தேசம் என்பது பார்ப்பன சமூகமேயாகும். சுயராஜ்யம் என்பது பார்ப்பன ஆதிக்கம் ஏற்படுத்துவதேயாகும். இதைத் தவிர காங்கரசுக்கும் சுயராஜ்யத்துக்கும் வேறு கருத்து கிடையாது. இதை நான் அனுபவத்தின் மீதே கூறுகிறேன்.

பார்ப்பனரல்லாதாருக்கு காங்கரசில் மதிப்புண்டா?

உதாரணமாக இன்று காங்கரசில் பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு யாராவது உண்மையான தலைவர்களாகவும், அதிகாரக்காரர்களாகவும் இருக்கிறார்களா என்பதைப்பற்றி சற்று நடுநிலையில் இருந்து சிந்தித்துப்பாருங்கள். தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி ஆகியவர்களே இந்த பத்து வருஷகாலமாக காங்கரஸ் ஸ்தாபனத் தலைவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் இப்பார்ப்பனர்களது தலைமை பதவிக்கு ஆசி கூறிக்கொண்டும் அடிமைத்துவ பாட்டு பாடிக்கொண்டும் இருந்து சிலர் வயிறு வளர்க்கிறார்கள். சிலர் அவர்கள் கொடுக்கும் ஏதாவது பதவி எலும்பைக் கவ்விக்கடித்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதல்லாமல் சுதந்தரத்தோடு சொந்த புத்தியோடு தன் அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்லி வலியுறுத்தத் தக்க மனிதத்தன்மையுடன் பார்ப்பனரல்லாதார்களில் யாராவது காங்கரசில் இருக்கிறார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

முத்துரங்கம் நிலைமை

தோழர் முத்துரங்க முதலியார் காங்கரஸ்கமிட்டி தலைவரல்லவா என்று கேட்கலாம். ஆம், அவர் காங்கரஸ் கமிட்டித் தலைவர்தான். ஆனால் அவருக்கு உள்ள அதிகாரமும் அந்தஸ்தும் என்ன என்று பாருங்கள். மந்திரிகளில், கனம் தோழர் ராமநாதனுக்கு எப்படி விளம்பர மந்திரி பதவியோ அப்படி காங்கரஸ் தலைவர்களில் தோழர் முத்துரங்க முதலியார் விளம்பர தலைவர் பதவி தான் வகிக்கிறார். அதாவது பார்ப்பனத் தலைவர்கள் செய்யும் காரியத்தை - போடும் உத்திரவை விளம்பரம் செய்பவர். காங்கரஸ் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமமான காரியங்களுக்கும் சூழ்ச்சியான காரியங்களுக்கும் பொறுப்பு ஏற்றுக்கொண்டு அவர்கள் மீது "கல்"விழாமல் தடுக்கும் கவசங்களாக இருப்பவர். இவையல்லாமல் மற்றபடி தோழர் முத்துரங்க முதலியார் அவர்கள் இந்த 10 15 வருஷ காலமாக தன் சுதாவாக எடுத்துச் சொன்ன காரியமோ செய்த காரியமோ கொண்டு வந்த தீர்மானமோ அல்லது பார்ப்பனத் தலைவர்கள் அபிப்பிராயங்களை தட்டிச்சொன்ன காரியமோ ஏதாவது ஒன்றை எடுத்துக்காட்டுங்கள். தோழர் எஸ். ÿ நிவாசய்யங்கார் காங்கரஸ் தலைவராயிருக்கும்வரை அவருக்கு பிரதம சிஷ்யராய் இருந்தார். அவர் மாறி கனம் ராஜகோபாலாச்சாரியார் தலைவராக வந்தது முதல் அவருக்கு ஆஞ்சநேயராக இருந்து வருகிறார். இனி யாரைப்பற்றி சொல்லப் போகிறீர்கள்? தோழர்கள் உபயதுல்லா, குப்புசாமி, அண்ணாமலை, சுப்பையா கம்பெனியைப் பற்றி சொல்லுகிறீர்களா? அல்லது வேறு தோழர்கள் தேவர், ராமலிங்கஞ் செட்டியார், நாடிமுத்துப் பிள்ளை, டாக்டர் சுப்பராயன், வெள்ளியங்கிரி கவுண்டர் போன்றவர்களைப் பற்றி சொல்லுகிறீர்களா? இவர்களின் சொந்த யோக்கியதை எவ்வளவு பெரிதாயிருந்தாலும் காங்கரசில் இவர்களுக்கு உள்ள மதிப்பும், செல்வாக்கும் யாருக்குத் தெரியாது? அரசியல் உலகில் இவர்களை யார் சட்டை செய்கிறார்கள்.

என் அநுபவம்

இவர்கள் சொந்தப் புத்தியை நம்மை வைவதற்கும் ஜஸ்டிஸ் கட்சியை வைவதற்கும் உபயோகப்படுத்துவதல்லாமல் பார்ப்பனரிடமோ காங்கரசினிடமோ உள்ள அபிப்பிராய பேதத்தை தெரிவிப்பதற்கு உபயோகப்படுத்தா விட்டாலும் அது விஷயத்தில் சொந்தப்புத்தி இருப்பதாகவாவது எப்போதாவது காட்டிக் கொண்டிருக்கிறார்களா? இதை நான் இன்று நேற்று சொல்லவில்லை. இந்த 10, 15 வருஷ காலமாகவே சொல்லி வருகிறேன். நான் காங்கரசில் இருந்து பலதடவை ஜெயிலுக்குப் போய் பல தலைமைப்பதவி வகித்து "சர்வாதிகாரி" பதவியில் இருந்து வந்த அனுபவத்தையே எடுத்துச் சொல்லிவருகிறேன். இது ஒரு புறமிருக்கட்டும்.

வரிகள் பெருகியதற்கு காங்கரசே காரணம்

காங்கரசுக்கு இன்று வயது 50 வருஷத்துக்கு மேலாகிறது. இந்த ஐம்பது வருஷ வாழ்வில் காங்கரஸ் 2-வித பருவத்தன்மை அடைந்திருக்கிறது. அதாவது முதல் முப்பது வருஷகாலம் சர்க்காருக்கு ராஜபக்தி, ராஜவிசுவாசம் காட்டி அதற்கு கூலியாக தங்களது தேவைகளுக்கு விண்ணப்பம் போடுவது ஒன்று. இந்த பருவத்தில் தான் உத்தியோகங்கள் பெருகினதும், சம்பளங்கள் பெருகினதுமாகும். வெள்ளையாய்ச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனர்கள் அரசியலில் உத்தியோகங்களில் பெரும் பெரும் பகற்கொள்ளை போன்ற பதவிகளில் 100க்கு 100 பேராய் கைப்பற்றி பூரண ஆதிக்கத்திற்கு வந்த காலமாகும். அதனால்தான் நமது வரிகளும் அதாவது காங்கரஸ் ஆரம்பிப்பதற்கு முன் இருந்ததை விட இரட்டிப்பு மூன்று பங்கு ஆக பெருக வேண்டியதாயிற்று. சம்பளமும் உத்தியோகமும் எவ்வளவுக்கெவ்வளவு காங்கரசினால் பெருக்கமடைந்ததோ அதுபோலவே வரியும் பெருகிற்று.

சட்டமறுப்புச் சூழ்ச்சி

இந்த உத்தியோகங்களிலும் சம்பளக் கொள்ளையிலும் தங்களுக்கும் ஒருபங்கு வேண்டுமென்று கேட்பதற்கு ஆகத்தான் முஸ்லீம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் சங்கமும் ஏற்பட்டதாகும். இதைக் கொடுக்காமல் ஏமாற்றவே காங்கரஸ் ஒரு பல்டி அடித்தது. அந்தப் பல்டிதான் இந்த 20 வருஷகாலமாக நடந்து வரும் இரண்டாவது பருவத்தன்மை. அதாவது சர்க்காரோடு போராடுவதாகவும் அதற்காக சர்க்காரோடு ஒத்துழைக்கக் கூடாதென்றும் உத்தியோகம், பதவி, சம்பளம் ஆகியவை அற்பமென்றும் அது தேசத்துரோகமென்றும் அந்நிய ஆட்சியே கூடாதென்றும் பேசி சட்டம் மீறி ஜெயிலுக்குப் போய் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வெளிவந்து சரணாகதி அடைந்து பதவி பெற்ற தன்மை. இதில் சிறிதும் நாணயமில்லை என்பதே எனது அபிப்பிராயம். இது பார்ப்பனர்களுடைய வஞ்சகப் புத்தியே ஒழிய இப்பேச்சுகளில் செய்கையில் கொஞ்சமும் உண்மை கிடையாது. மற்றென்ன இருக்கிறது என்றால் தங்கள் கைக்கு பதவிகள் வரக்கூடிய சமயம் ஏற்படும்வரை இப்படியே சொல்லிக்கொண்டு இருந்து சந்தர்ப்பம் கிடைத்த உடன் திடீரென்று நுழைந்து கொள்ளலாம் என்கின்ற தந்திர புத்தியேயாகும். அதற்கு இணங்கவே தான் பொதுமக்கள் ஏமாறுந்தன்மை அடையும் வரை ஒத்துழையாமை - பஹிஷ்காரம் - சட்ட மறுப்பு முதலியவை பேசிக்கொண்டு இருந்து பதவி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்ட உடன் சட்டப்படி நடப்பதாக வாக்குறுதி கொடுத்து ராஜவிசுவாசப் பிரமாணமும் ராஜபக்தி பிரமாணமும் சட்டத்தை ஒழுங்காய் கட்டுப்பட்டு நடத்திக் கொடுக்கும் பிரமாணமும் ஒரே மூச்சில் செய்து இன்று பதவிக்கு வந்து இருக்கிறார்கள்.

பதவி அடைந்த 6, 7 மாகாணங்களிலும் பார்ப்பனர்களே அதாவது சென்னையில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் போலவே 6, 7 மாகாணங்களிலும் பார்ப்பனர்களே தலைவர்களாய் இருந்து மந்திரி சபை நடத்துகிறார்கள். பம்பாயில் ஒரு பார்ப்பனரல்லாதாருக்கு உரிமை இருந்ததையும் அதாவது நரிமனை திடீரென்று கவிழ்த்து விட்டு அங்கும் ஒரு பார்ப்பனரையே தலைவராக ஏற்படுத்திக்கொண்டார்கள். அதாவது எவ்வளவு மானம் கெட்ட பார்ப்பனரல்லாதாராய் இருந்தாலும் ஏதாவது ஒரு சமயத்தில் மோசம் செய்து விடுவான் என்று பார்ப்பனர்கள் சந்தேகப்பட்டும் ஒரு மாகாணத்தில் ஒருவன் ஏதாவது சொந்த புத்தியோடு காரியம் செய்தால் அது மற்ற மந்திரிகளையும் கவிழ்த்துவிட நேருமோ என்று பயந்தும் ஒருவன் சொல்லுகிறபடியே எல்லா மாகாண மந்திரிகளும் ஆடத்தகுந்த மாதிரி எல்லா மாகாணத் தலைவர்களையும் முதல் மந்திரிகளையும் பார்ப்பனர்களாகவே வைத்துக் கொண்டார்கள். உதாரணமாக தீண்டாமை விலக்க வேண்டும் என்று ஒரு மந்திரி ஒரு மாகாணத்தில் சட்டம் செய்து விட்டால் மற்ற மந்திரிகளும் செய்ய வேண்டி வந்துவிடும். பிறகு அது பார்ப்பன சமூகத்தின் ஆதிக்கத்தையும் உயர்வையும் அடியோடு ஒழித்து விடும். ஆதலால் தீண்டாமை ஒழிக்கிறோம், ஒழிக்கிறோம் என்று தீண்டாமை ஒழிக்கப்படாத முறையிலேயே பேசி ஒழியாத மாதிரியிலேயே காரியம் செய்யவேண்டும். இதற்கு பார்ப்பனரல்லாதார் ஒருவராவது கடைசிவரை உள் ஆளாய் இருப்பாரா என்பது பார்ப்பனர்களுக்கு சந்தேகம். ஆதலால்தான் எந்த மாகாணத்திலும் பார்ப்பனரல்லாதார்களை அவர்கள் நம்புவதில்லை.

ஆகவே காங்கரஸ் பார்ப்பன ஆதிக்கமுள்ளது என்பதற்கும் பார்ப்பன ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொள்ளவே ஏற்பட்டதென்பதற்கும் அதற்கு அனுகூலமாக காரியங்கள் பிரத்தியக்ஷத்தில் இருந்து வருவதையும் எடுத்துச் சொன்னேன். இனி காங்கரஸ் ராஜவிசுவாசப் பிரமாணம் செய்து பதவிக்கு வந்து சர்வாதிகாரம் செய்யக்கூடிய பலத்துடன் பதவி ஏற்று இன்று கணக்குக்கு கிட்டத்தட்ட 6 மாதம் ஆகப்போகிறது. இந்த 6 மாத கணக்கை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

காங்கரசுக்காரர் பதவி ஏற்று இன்றைக்கு கிட்டத்தட்ட 6 மாத காலமாகப் போகின்றது. இந்த ஆறு மாதத்திய வரவு செலவு கணக்கு என்ன என்று பார்ப்போம். காங்கரசின் வேலைத்திட்டம் என்னவென்றால் அவர்கள் தேர்தல் காலங்களில் ஓட்டர்களுக்குச் சொன்னவைகளும் கராச்சித் திட்டமுமேயாகும். இந்தக் காரியங்களில் அவர்கள் எதை செய்திருக்கிறார்கள்? எதைச் செய்ய முயற்சிக்கிறார்கள்? என்பதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

மொத்தத்தில் சொல்ல வேண்டுமானால் காங்கரசுக்காரர்கள் காங்கரசால் மக்களை ஏமாற்றி எலக்ஷன்களில் வெற்றி பெறுவது என்பதல்லாமல் அவர்கள் இந்த 15, 20 வருஷகாலமாகவே அவர்களது சகல திட்டங்களிலும் சகல வாக்குத்தத்தங்களிலும் தோல்வியே அடைந்து வந்திருக்கிறார்கள். அதாவது காங்கரஸ்காரர்கள் பதவி ஏற்காமல் வெளியில் இருந்துகொண்டு ஒத்துழையாமை, சட்டமறுப்பு, நிர்மாணத்திட்டம் ஆகிய காரியங்களிலும் தோல்வியே அடைந்து வந்திருக்கிறார்கள்.

எல்லாம் தோல்வி

அவர்களது பஹிஷ்காரத் திட்டங்கள் எல்லாவற்றிலுமே தோல்வி அடைந்தார்கள். தோல்வி அடைந்தது மாத்திரமல்லாமல் பஹிஷ்காரத் திட்டத்தை மீறி காங்கரஸ் கட்டளைக்கு விரோதமாய் தேர்தல் முதலியவை களில் மாறு வேஷத்துடன் பிரவேசித்து அதிலும் ஒன்றும் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தார்கள்.

சட்ட சபைகளில் இருந்து வெளியேறும் நாடகம் நடத்தி அவற்றிலும் படுதோல்வி அடைந்து மறுபடியும் உள்ளே போனார்கள்.

சட்டசபைகளை ஸ்தம்பிக்கச் செய்ய, முட்டுக்கட்டை போட சட்டசபைக்குப் போனார்கள். அங்கு போய் பதவி ஏற்றார்கள், சம்பளம் பெற்றார்கள்.

சைமன் கமிஷன் பஹிஷ்காரம் செய்தவர்கள் சைமன் கமிட்டிக்கு நேரு திட்டம் சமர்ப்பித்தார்கள்; அதிலும் தோல்வி அடைந்தார்கள்.

உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார்கள்; அதிலும் தோல்வி அடைந்தார்கள்.

வட்டமேஜை மகாநாடு பஹிஷ்காரம் செய்தார்கள்; அதிலும் தோல்வி அடைந்து வட்ட மேஜைக்கு வாரண்டு வந்து பிடித்துக் கொண்டு போனது போல் போய்ச் சேர்ந்தார்கள்.

வட்ட மேஜைக்குப் போயும் அங்கும் தோல்வி அடைந்து திரும்பி வந்தார்கள்.

திரும்பி வந்ததும் சட்ட மறுப்பு, மறியல் முதலியவைகள் செய்தார்கள். அவற்றில் அடியோடு மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று.

இவ்வளவு தோல்விகள் அடைந்த பின் ஒத்துழையாமை, சட்ட மறுப்பு, பகிஷ்காரம் ஆகியவைகள் கைவிடப்பட்டன என்று காங்கரசிலேயே தீர்மானம் போட்டதுடன் இனி சட்டங்களை மீறுவதில்லை, மறியல்கள் செய்வதில்லை என்று சர்க்காருக்கு காந்தியார் எழுதிக்கொடுத்து ஜெயிலில் இருந்து வெளிவந்து தேர்தல் பிரசாரம் நடத்தினார்கள்.

இந்திய சட்டசபை

இந்திய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அங்கு போய் காங்கரசுக்கு மெஜாரிட்டி இருந்தும் காங்கரசுக்காரர்கள் போக்குவரத்துப் பிரயாணப்படி வாங்கியதைத் தவிர சர்க்கார் தீர்மானங்கள் சிலவற்றை தோற்கடிக்கும் நாடகம் நடத்தியதைத்தவிர இவர்களால் சர்க்காரின் ஒரு சிறு திட்டத்தையோ தீர்மானத்தையோ நடைபெறாமல் நிறுத்திவிடவில்லை.

மற்றும் தற்கால சாந்தியாய் ஏற்பட்ட அடக்கு முறை சட்டங்கள் முதலியவற்றிற்கு பூரண ஆயுள் கொடுத்தார்கள்.

வரிகள் உயர்த்தப்பட்டனவே ஒழிய ஸ்டாம்பு முதலிய எந்த விஷயத்திலும் ஒரு சின்ன காசு அளவு குறைக்கப்படவில்லை.

சட்டசபை ஓட்டு கேட்கும் போது தங்கள் காரியங்கள் நடைபெற வில்லையானால் ராஜிநாமா செய்து விட்டு வெளியில் வந்துவிடுவோம் என்று சொன்னவர்கள் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை என்று தெரிந்தும் இன்னமும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அங்கு தொழிலாளிகள் சம்மந்தமாக வந்த சட்டங்களில் தொழிலாளர் களுக்கு துரோகம் செய்தார்கள். மற்றும் வேறு பல கம்பனிச்சட்டங்கள், இன்ஷுரன்ஸ் சட்டங்கள், ரயில்வே சம்மந்தமான விஷயங்கள் முதலியவைகள் வந்த காலத்தில் முதலாளிகளுக்கு அனுகூலமாகவே இருந்தார்கள். இவற்றில் பலவற்றில் பெருந்தொகையாக பிரதிப்பிரயோஜனம் கூட உண்டு என்கின்ற பழிப்புக்கு இடம் செய்து கொண்டார்கள்.

சென்னை சட்டசபை

சில தனிப்பட்டவர்களின் இன்றைய நிலைமையைப் பார்த்தால் இந்த மாதிரி காரியத்தால் அல்லாமல் வேறு வகையில் இவர்களுக்கு இவ்வளவு பணம் ஏது? என்று சந்தேகப்படும்படியாகவே இருக்கிறது.

இது நிற்க, சென்னை சட்டசபை நிலைமை என்ன என்று பார்ப்போம். இன்று சென்னை சட்டசபையில் காங்கரசுக்கு பெருமித மெஜாரிட்டி இருந்து வருகிறது. எதிர்க்கட்சிக்காரர்கள் எல்லாம் பலவித சூழ்ச்சியால் விலைக்கு வாங்கப்பட்டு எதிர்ப்பே இல்லாமல் செய்து கொள்ளப்பட்டாய் விட்டது.

மேல் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சர். உஸ்மான் அவர்கள் ஆச்சாரியாரைப் பற்றி புகழ்மாலை சாற்றிய வண்ணமாய் இருக்கிறார்.

கீழ்ச் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் குமாரராஜா அவர்கள் ஆச்சாரியாருக்கு பூமாலை சூட்டிய வண்ணமாய் இருக்கிறார். இனி காங்கரஸ்காரர் இஷ்டத்திற்கு மாறு பேசுகிறவர்கள் யாருமே இல்லை. இருந்தாலும் அவை காரியத்துக்கு உதவாதவைகள் தான். ஆகவே காங்கரஸ்காரர்கள் இந்த தனி அரசு காலத்தில் என்ன செய்தார்கள் என்று பாருங்கள். காங்கரஸ் திட்டத்தில் எதை நடத்தி வைத்தார்கள் என்று பாருங்கள்.

காங்கரஸ் திட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் தீண்டாமை விலக்கும் முக்கியமானவை. இவைகளில் என்ன செய்திருக்கிறார்கள்? காங்கரஸ் தனி அரசு ஆட்சியில் இந்து முஸ்லீம் வேற்றுமை அதிகப்பட்டுவிட்டது. தீண்டாமைவிலக்குக்கு சட்டம் செய்வது கூடாது என்று தீர்மானிக்கப்பட்டு தீண்டாமையை சட்ட மூலம் ஒழித்த வேறு அரசாங்கங்களை பாராட்டுவதுடன் நின்றுவிட்டது. தேசீயக் கல்வித்திட்டம் ஹிந்தி கட்டாயப்பாடமாகவும் பழங்கால கைத்தொழில் பயில்வதே கல்வித் திட்டமாகவும் ஆகிவிட்டது.

காங்கரசில் ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளதான பாஷாவாரியாக மாகாணங்களை அரசியலிலும் பிரிப்பது என்பதைச் செய்ய இஷ்டமில்லாமல் சூழ்ச்சிகள் செய்து அம்முயற்சி அடக்கப் பட்டு வருகிறது.

மதுவிலக்குப் புரளி

மதுவிலக்கு சட்ட ரீதியாகவோ திட்ட ரீதியாகவோ இல்லாமல் விளையாட்டுப் பிள்ளை மண் கொழிக்கும் மாதிரி விளம்பரத்தில் செய்து கொண்டு அக்கம் பக்கத்தில் போய் குடிப்பதற்கு செளகரியமும் வைத்துக்கொண்டு தினமும் சில்லறை சிப்பந்திகள் மடி நிறையும்படி கேசு செய்து எண்ணிக்கை காட்டுவதே மது விலக்கு முயற்சியாய் இருக்கிறது. மதுவிலக்கு பண நஷ்டத்திற்கு யாதொரு பரிகாரமும் தேடாமல் கல்வி, சுகாதாரம், வைத்தியம் ஆகியவைகள் தலையில் தைரியமாய் கை வைக்கப்பட்டு வருகிறது.

கதர் விஷயம் பயன்படாது என்று தெரிந்தும் கதரை ஆதரிக்க "கதர் காட்டுமிராண்டித் திட்டம்" என்ற தோழர் ராமநாதனை விலைக்கு வாங்கி அவரைக் கொண்டு கதரின் பேரால் சில ஆட்களை கட்சிப் பிரசாரத்துக்கு வைத்திருப்பதற்கு ஆக பொது மக்கள் வரிப்பணத்தில் 2 லக்ஷ ரூபாய் கிராண்டு கொடுத்து விட்டு அதைச் சரிக்கட்ட ஜவுளி வியாபாரிகளுக்குப் புது வரி போடப்பட்டாய் விட்டது.

தேசீயக் கடனை ஏன் ஒழிக்கவில்லை

தேசியக் கடன்களை கேன்சில் செய்வதாக காங்கரசில் செய்த தீர்மானங்கள் வண்டி வண்டியாய் இருக்க அவைகளை காற்றில் பறக்கவிட்டு, பழைய கடனை ஒப்புக்கொண்டு - ஆதரிக்கச் செய்தும் பயன்படாமல், புதுக்கடனும் வாங்கியாய் விட்டது.

மாகாண சட்டசபைகளில் செய்யக்கூடிய அதிகாரத்தைக் கொண்டு அடக்குமுறைச் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டியதற்கு பதிலாக அடக்குமுறைச் சட்டப்படி காங்கரஸ்காரர்கள் மீதே நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட்டு வருகிறது. முன்பு இல்லாத மாதிரியில் பத்திரிகைகளுக்கு ஜாமீன் கேட்கப்படுகிறது. நீதி நிர்வாக இலாகாக்களை பிரிவினை செய்யவேண்டும் என்னும் கோரிக்கையானது காங்கரசின் 30, 40 வருஷ திட்டமாயும் கோரிக்கையாயும் இருந்துகூட இப்போது காங்கரஸ் பதவிக்கு வந்தவுடன் கவர்னருக்கு சரணாகதி அடைந்து நீதி நிர்வாக இலாகா பிரிக்க முடியாதது என்று தீர்மானிக்கப்படக்கூடியதாக ஆகிவிட்டது.

வரிகுறைப்பு எங்கே?

பொதுவாக வரி குறைப்பது என்பது புதுவரி போடும் வேலையில் கவலை செலுத்தப்படுகிறது. சம்பளங்கள் குறைப்பு என்பதும் சம்பளம் தவிர வீட்டு வாடகை, சர்க்கார் செலவில் மோட்டார் கார் வாங்கிக் கொடுத்தல், மோட்டார் கார் அலவன்சு கொடுத்தல் ஆகியவைகளில் புதுப்புது செலவினங்கள் ஏற்படுத்தப்படுகிறது. அரசியல் உத்தியோகத்தில் வெள்ளையர்- இந்தியர் வித்தியாசங்களை ஒழிப்பது என்பதும் இப்போது வெளிப்படையாய் வெள்ளைக்கார உத்தியோகஸ்தர்களுக்கு தனி மரியாதை இருக்க வேண்டியது தான் என்று ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. காங்கரஸ்காரர்களிடம் உள்ள ஜனநாயகம் என்பது பொது ஜனங்களைப் பார்த்து "நான் அப்படித்தான் செய்வேன், வேண்டுமானால் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்" என்கின்ற எதேச்சாதிகாரமாக மாறி விட்டது.

ஸ்தல ஸ்தாபன வெற்றியானது சூழ்ச்சியால் வெற்றி அடையப்பார்க்க வேண்டியதாய் விட்டதே ஒழிய நேர் வழியில் முயற்சித்த இடங்களில் எல்லாம் தோல்வியே கிடைத்திருக்கிறது.

பிரித்த ஜில்லா போர்டுகளை ஒன்று சேர்த்தல் என்பது கட்சி நலனுக்கு கவனிக்கப்பட்டு நபருக்கு தகுந்தாற்போல் தனித்தனி முறை கையாளப்பட்டு வருகிறது.

ஸ்தல ஸ்தாபனங்களில் லஞ்சமும் கண்டிறாக்ட்டு ராஜ்யமும் ஒழிக்கப் போவதாக கூறி ஓட்டுப் பெற்றவர்கள் காங்கரஸ் மெம்பர்களே லஞ்சம் வாங்கி வருவதையும் கண்டிறாக்ட்டு பெற்று வருவதையும் பெயர் விபரம் புள்ளிவிபரம் ஆகியவையுடன் காங்கரஸ் பத்திரிகைகளே எடுத்துக்காட்டி வருகின்றன.

ஜில்லா போர்டுகளை இணைக்காததேன்?

ஜில்லா போர்டுகளை எடுத்து விடுவதாய்ச் சொன்னதையும் ஜில்லா போர்டுகளுக்கு ஸ்பெஷல் ஆபீஸர்கள் அல்லது நிர்வாக ஆபீஸர்கள் போடுவதாய்ச் சொன்னதையும் இப்போது காற்றில் பறக்கவிட்டு அவை செய்யாமல் இருப்பதற்கு மெம்பர்களிடம் தலைவர்களிடம் வியாபாரம் பேசப்படுகிறது. சில பேர்களில் காங்கரசுக்கும் காங்கரசில் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் பணம் கொடுத்து பிரிவினையை ஒன்று சேர்க்காமல் தப்பித்துக் கொள்ளவும், நிர்வாக அதிகாரி போடாமல் பார்த்துக்கொள்ளவும் முயற்சி நடந்து வருகிறது.

கடன் வாய்தா மசோதா ஒழிந்ததேன்?

காங்கரஸ் கொண்டு வருவதாய் சொன்ன சட்டங்கள் கொண்டு வரப்படாமல் நிறுத்திக் கொள்ள வேண்டியதாய் விட்டன. கொண்டு வந்த சட்டங்களும் தலைமேலடிக்கப்படுகின்றன. சட்டங்கள் செய்யும் விஷயத்தில் காங்கரசுக்கு புத்தியும் இல்லை; அனுபவமும் இல்லை; நாணையமும் இல்லை; உறுதியும் இல்லை; வெட்கமும் இல்லை என்று மெய்ப்பிக்கப்பட்டு விட்டது.

அவசரப்பட்டு இன்ன சட்டம் செய்வதாகச் சொல்லுவதும் முதலாளிமார்களோ பார்ப்பனர்களோ தங்கள் சுயநலத்துக்கு விரோதமாய் இருக்கிறது என்று கூப்பாடு போட்டால் அல்லது காங்கரஸ் தலைவர்களை சரிப்படுத்திக் கொண்டால் அதைத் தந்திரமாக கைநழுவ விட்டுவிட்டு உப்பு சப்பற்ற - வெறும் வேஷத்துக்கும் ஏய்ப்பதற்கும் மாத்திரம் பயன்பட்ட போலிச் சட்டங்களை விளம்பரப்படுத்திக்கொண்டு தங்களுக்குள்ளாகவே நாலுபேர்களை வெளிவேஷத்துக்கு எதிர்க்கும்படி செய்து ஏதோ வெகு பிரயாசையின் மீது மகா பிரமாதமான சட்டத்தை செய்து விட்டதாக கூலிப் பத்திரிகைகளை விட்டு விளம்பரம் செய்யச் செய்வதுமான தந்திரத்தில் முடிவடைந்து விடுகிறது.

சமதர்ம விஷயமும் சமதர்மக்காரர்களால் ஓட்டுப் பிரசாரம் செய்து கொண்டதல்லாமல் இன்று காங்கரசுக்கு ஓட்டுப்பிச்சை வாங்கிக் கொடுத்த சமதர்மக்காரர்கள் முக்காடு போட்டுக் கொண்டு திரியும்படியான வெட்கங்கெட்ட நிலையில் வைக்கப்பட்டு விட்டார்கள்.

மந்திரிகளுக்குள் ஒற்றுமையுண்டா?

மந்திரிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் ஆளுக்கு ஒருவிதம் பேசுவதும் காங்கரஸ்காரர்களே மந்திரிகளை குறை கூறுவதும் தோழர் சத்தியமூர்த்தி அவர்களே காங்கரஸ் மந்திரிகள் செய்வது ஒழுங்கில்லை என்று சொல்லுவதுமான நிலையில் இருப்பதோடு உள்ளுக்குள் கட்சிப்பிளவுகளும் மனஸ்தாபங்களும் வலுத்து வருகின்றன.

காங்கரஸ் கட்டுப்பாடும் ஒழுங்கு நடவடிக்கையும் பத்திரிகையில் எழுதுவதுடன் சரியே ஒழிய காரியத்தில் யாரும் கட்டுப்படுவதில்லை.

ஒழுங்கு நடவடிக்கைப் பலன்

ஒழுங்கு நடவடிக்கையின் பேரால் தண்டிக்கப்பட்ட ஆட்கள் 100க்கு 90 பேர்கள் விஷயத்தில் எவரும் கீழ்ப்படியவே இல்லை. தண்டனை நிறைவேற்றப் படவேயில்லை. ஆகவே வெறும் வேஷத்தில் பலமற்ற அப்பாவிகளை மிரட்டி பணம் வாங்கவே ஒழுங்கும் கட்டுப் பாடும் நடவடிக்கையும் இருந்து வருகின்றன.

காங்கரசில் சேர்ந்த முஸ்லீம்களுக்கு முஸ்லீம்களிடமும் நாட்டுப் பொது மக்களிடமும் செல்வாக்கோ நம்பிக்கையோ கிடையாது என்பதோடு முஸ்லீம்கள் மந்திரி, காரியதரிசி தவிர மற்ற யாவரும் காங்கரசுக்கு விரோதமாகவே இருந்து வருகிறார்கள்.

ஆதிதிராவிடர்களும் காங்கரசை எதிர்க்கிறார்கள். ஆதிதிராவிட மந்திரிக்கு ஆதிதிராவிட சமூகத்திலேயே செல்வாக்கும் நம்பிக்கையும் இல்லை.

ஆகவே இன்று காங்கரஸ் வெறும் பத்திரிகை பிரசாரத்திலும் பொதுஜனங்கள் வரிப்பணத்தில் மந்திரி கோஷ்டியும் காரியதரிசி கோஷ்டியும் ஊர் ஊராய் சென்று ஏமாற்றுப் பிரசாரம் செய்து ஏய்ப்பதிலும் உயிர் வைத்திருக்கிறதே ஒழிய உண்மையில் காங்கரஸ் தனது கொள்கையில் வெற்றியோ அல்லது மக்களுக்கு அதனால் பலனோ ஏற்பட்டதென்று எவரும் சொல்ல முடியாது.

வேலையற்ற - வயிறு வளர்ப்புக்கு வேறு வகையற்ற - பதவிக்கு வீங்கிய கூட்டம் காங்கரசை நடத்திக்கொண்டிருப்பதாலேயே அது பொதுஜனங்களுக்கு பயனளிக்கத்தக்கதாயிருக்கிறது என்று யாரும் எண்ணிவிட முடியாது.

காங்கரஸ்காரர் யோக்கியதை

உண்மையில் காங்கரசுத் தலைவர்கள் என்பவர்கள் வெளியில் இருந்து பொறுப்பில்லாமல் அனுபவ ஞானமில்லாமல் பாமர மக்கள் மகிழும்படி ஏமாறும்படி பேசிப் பழக்கமும் ஞானமும் உள்ளவர்களே ஒழிய அவர்களுக்கு நிர்வாக அனுபவமும் அரசியல் ஞானமும் இல்லை என்கிற யோக்கிதையும், பார்ப்பன சமூக நன்மையே அரசியல் திட்டம் என்கின்ற கொள்கையும் உடையவர்களாயிருப்பதால் அவர்களிடம் இதற்கு மேல் வேறு எதுவும் எதிர்பார்க்கவும் முடியாது. இதிலிருந்தாவது மக்கள் அறிவு பெற்று இனி புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ளுவார்கள் என்று கருதுகிறேன்.

தோழர்களே! காங்கரஸ் என்பது பற்றியும் அவர்களது கொள்கை திட்டம், இந்த ஆறுமாத காலவேலை, அதனால் ஏற்பட்ட பலன் என்பதைப் பற்றி எனது அபிப்பிராயத்தைத் தெரிவித்து விட்டேன். இதை நீங்கள் தயவு செய்து நிதானமாய் யோசித்து பார்த்தும் நாளைக்கு இங்கு வரும் காங்கரஸ் தலைவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார்கள் என்பதைப் பொறுமையோடு கேட்டும் பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.

------------------------------------------------------(19.12.1937 குடி அரசு - நாமக்கல் சுயமரியாதை மாநாட்டு சொற்பொழிவு "சுயமரியாதை இயக்கத் தத்துவம்" தொடர்ச்சி)"குடி அரசு" - சொற்பொழிவு - 26.12.1937

36 comments:

தமிழ் ஓவியா said...


பல்கலைக் கழகங்களின் அழைப்புகளையேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஜெர்மன் பயணம்


பெரியாரியல், திராவிட இயக்கம் குறித்து ஆய்வுரை நிகழ்த்துகிறார்

சுயமரியாதைத் திருமணத்தையும் செய்து வைக்கிறார்!

சென்னை, மே 30- திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தருமான டாக்டர் கி.வீரமணி அவர்கள் பல்கலைக் கழகங்களின் அழைப்பினை ஏற்று சிறப்புரையாற்ற ஜெர்மன் செல்லு கிறார் அங்கு சுயமரியாதைத் திருமணத்தையும் நடத்தி வைக்கிறார். ஜெர்மனியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் அழைப்பை ஏற்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழ் ஆசிரியருமாகிய டாக்டர் கி.வீரமணி அவர்கள் ஜெர்மனி நாட்டுக்கு பயணமாகிறார்.

ஜெர் மனியில் பொது இடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் பல்வேறு தலைப்புகளில் உரை ஆற்ற உள்ளார். தந்தை பெரியாரின் மிகப்பெரிய சமூகப் புரட்சிக் கருத்துக்கள், மனித நேய சிந்தனைகள் ஆகியவைகுறித்து ஆய் வுரைகள் நிகழ்த்துகிறார். மேலும், கல்வியில் தேவைப்படும் வளர்ச்சிக்கான செயல்திட்டங்கள்குறித்தும் பேசுகிறார். ஜெர்மனி கொலோன் பகுதியில் நான்கு நாட்கள் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

ஜூன் மாதம் மூன்றாம் தேதி அன்று பொதுமக்களி டையே திராவிட இயக் கமும், பெரியாரின் பகுத்தறி வுக் கொள்கைகளும் என் னும் தலைப்பில் கொலோன் பகுதியின் மய்யப்பகுதியில் நியூமார்கட் ஜோயெஸ்ட் அருங்காட்சியகம், ராடென்ஸ்ட்ராட்ச் பகுதியில் பேசுகிறார். பொதுமக்களும் பகுத்தறிவாளர்களும் பங்கேற்கிறார்கள். ஜூன் நான்காம் தேதி அன்று இந்தி எதிர்ப்பு இயக்கம் என்னும் தலைப்பில் கொலோன் பல்கலைக்கழத்தில் உரை ஆற்றுகிறார்.

ஜூன் அய்ந்தாம் தேதி அன்று வட்ட மேசை விவாதத் தில் திராவிட இயக்கமும் பகுத்தறிவு வாதங்களும் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகளும் என்கிற தலைப்பில் நடைபெறும் விவாதத்தில் கொலோன் பல்கலைக்கழகத்தில் தத்துவஇயல் துறை மற்றும் அரசியல் அறிவியல்துறை மாணவர்களுடன் விளக்க உரை ஆற்றுகிறார். ஆகேன் பல்கலைக் கழகத்தில் வரவேற்பு அரங்கத்தில் உரையாற்றுகிறார்.

ஜெர்மனியில் இருக்கும்போது, டாக்டர் கி.வீரமணி பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை சந்திக்கிறார். மேலும் மாணவர்களுடனான கலந்துரையாடல்களில் பங்கேற்கிறார். ஜெர்மனி பயணத்தில் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணியுடன் துணை வேந்தர் கர்னல் டாக்டர் என்.இராமச்சந்திரனும் உடன் செல்கிறார். ஜூன் ஆறாம் தேதி அன்று ஹெய்டில்பர்க் பல்கலைக் கழகத்தில் உலகமயமாதல் காலக்கட்டத்தில் தமிழ்த் தேசியம் என்கிற தலைப்பில் உரை ஆற்றுகிறார்.

சுயமரியாதைத் திருமணத்தையும் நடத்துகிறார்

பெரியார் பகுத்தறிவு சிந்தனைகள் ஜெர்மனியில் பலருக்கும் அறிமுகமாகி பகுத்தறிவாளர்களாக பலரும் அங்கு உள்ளனர். டாக்டர் கி.வீரமணி ஜெர்மனியில் இருக்கும்போது மதத்துக்கு தொடர்பில்லாத சுயமரியாதைத் திருமணத்தையும் நடத்தி வைக்கிறார்.

ஜூன் ஒன்பதாம் தேதி அன்று சென்னைக்கு திரும்புகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/81217.html#ixzz33FTZWxuO

தமிழ் ஓவியா said...


திருமணத்திற்கு ரூ.5 லட்சத்துக்குமேல் செலவு செய்தால் வரி விதிக்கப்படும் கருநாடக அரசு


பெங்களூரு, மே 30-ஐந்து லட்சம் ரூபாய் அல் லது அதற்குமேல் செலவு செய்து ஆடம்பரமாக திரு மணம் செய்பவர்களிடம் வரி வசூலிக்கும் புதிய சட்டம் விரைவில் அமலாக் கப்படும் என்று கர்நாடக அமைச்சர் ஜெயசந்திரா தெரிவித்தார். சட்டத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் டி.பி. ஜெயசந்திரா நேற்று அளித்த நேர்காணல் கர்நாட காவில் கோடிக்கணக்கில் செலவு செய்து தேவையில் லாமல் ஆடம்பர திரு மணம் செய்கின்றனர். இதனால், யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.

கவு ரவத்திற்காக ஆடம்பரமாக கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்வதை தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.

ஆடம்பர திருமணம் செய்வதை தடுக்கும் வகை யில் புதிய சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஆயிரம் பேர்கள் சேரும் திருமணம் மற்றும் ரூ.5லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக செலவு செய்து திருமணம் செய்ப வர்கள் அரசுக்கு கட்டாயம் வரி செலுத்த வேண்டும். இந்த வரிப்பணம், வறு மையில் உள்ளவர்களின் திருமணத்திற்கு பயன்படுத் தப்படும். இதற்கு மாங் கல்ய நிதி என்று பெய ரிடப்பட்டுள்ளது.

இதே திட்டத்தின் கீழ், கலப்பு திருமணம் செய் வோருக்கும் இந்த நிதி வினியோகிக்கப்படும். இந்து திருமண சட்டம் 1976-ன் படி ஆடம்பர திருமணம் செய்வோரிடம் வரி வசூ லிக்கும் புதிய சட்டம் விரைவில் அமல்படுத்தப் படும் என்று அமைச்சர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/81213.html#ixzz33FTrSHGS

தமிழ் ஓவியா said...

வரதட்சணை வாங்கினால் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் முகநூலில் கேரள முதல்வர் தகவல்

திருவனந்தபுரம், மே 30-கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு அதிகாரபூர்வ முகநூல் கணக்கு உள்ளது. இதில் நேற்று அவர் சில கருத்துக்களை வெளி யிட்டிருந்தார். நாட்டில் வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடுகிறது.

அரசு ஊழியர்களுக்குத் தான் எப்போதும் திருமண சந்தையில் மதிப்பு அதிக மாக உள்ளது. இவர்களுக்கு கேட்ட தொகை வரதட் சணையாக கிடைக்கும். எனவே வரதட்சணைக் கொடுமையை நிறுத்த வேண்டுமென்றால் முத லில் அரசு ஊழியர்களுக்குத் தான் மூக்குக் கயிறு போடவேண்டும். வரதட் சணை வாங்குபவர்களைத் தண்டிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்கி திரு மணம் செய்தால் அவர் களின் வேலை பறிபோகும் ஆபத்தும் உள்ளது. எனவே திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் தங்களது துறை தலைவருக்கு, தான் வரதட் சணை வாங்கவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும்.

மேலும் அரசு ஊழியரின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோர் அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்து போடவேண்டும். இவ் வாறு அவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/81213.html#ixzz33FU3c6bq

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த நாத்திக மாணவிக்கு தண்டனையா? அமெரிக்க மனித நேய அமைப்பு எதிர்ப்பு

நியூயார்க், மே30- அமெரிக்காவில் நியூ யார்க்கை அடுத்த எல்மிரா சிட்டி பள்ளியில் கடவு ளுக்குக் கீழாக என்கிற சொற்பதத்தை சொல்ல மறுத்த மாணவிக்குத் தண் டனை வழங்கப்படுவதாக பள்ளி ஆசிரியை மிரட்டி உள்ளார்.

பள்ளியில் பிரார்த் தனைப்பாடலை மனப் பாடம் செய்து ஒப்பிக்கக் கட்டாயப்படுத்திய ஆசிரியையிடம் மறுப்பு தெரிவித்த மாணவியைத் தண்டிப்பதாக மிரட்டிய ஆசிரியை குறித்து அந்த மாணவி அந்த பகுதியில் செயல்பட்டுவரும் பகுத் தறிவாளர்களுக்கான அமைப்பாகிய அமெரிக் கன் மனித நேய அமைப் பிடம் சென்று புகார் கொடுத்துள்ளார்.

அந்த அமைப்பின் சட்டப்பிரிவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், மாவட் டத்தின் அலுவலருக்கு ஆசிரியையின் செயலுக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித் துள்ளனர்.

இளங்கலை பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு பயிலும் அந்த மாணவி ஒரு கடவுள், மத மறுப்பாளர் ஆவார். எந்த நிலையிலும் அவர் பிரார்த் தனைக் கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்புவ தில்லை. ஏனென்றால், கட வுளுக்கு கீழாக என்று சொல்வதை அவர் எதிர்த்து வந்துள்ளார். அது போலவே, அன்றும் வெகு இயல்பாக இருப்பதுபோல் அமர்ந்து இருந்துள்ளார்.

அதைக் கவனித்த ஆசிரியை எழுந்து நிற்குமாறு கூறி உள்ளார். அதற்கு அம் மாணவி மறுத்திருந்தால் ஒழுங்கின்மை என்று கூறி தண்டனை வழங்கும் நிலை யும் உள்ளது. இதற்கெல் லாம் மேலாக, அனைத்து வகுப்புத் தோழியர்கள் முன்னிலையில் அந்த மாண வியிடம் ஆசிரியை கூறும் போது, பிரார்த்தனைக் கூட்டங்களில் எழுந்து நிற்காமல் போனால், அமெரிக் காவை இழிவுபடுத்திய தாகும் என்றும், அதுவும் இரா ணுவத்தை தனிப்பட்ட வகையில் மரியாதை செலுத்த தவறியதாகவும் கருதப் படும் என்றும், மேலும் தேசத்தின்மீது உள்ள பற்று, தேசத்தின் மீதான விசுவாசம் ஆகியவை வெளிப்படையா கவே கேள்விக்குரியதாகி விடும் என்றும் அந்த மாண வியிடம் ஆசிரியை கூறி உள்ளார்.

அமெரிக்கள் மனிதநேய அமைப்பின்சார்பில் மோனிகா மில்லர் அனுப்பி கடிதத்தில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவியின் தேசப்பற்று பற்றி கேள்வி எழுப்புவது என்பது அவருக்கு அரசியல மைப்பு அளிக்கும் உரிமை களை மீறுவதாகும். பிரார்த் தனைக் கூட்டத்தில் பங்கேற் காமல் இருக்க அவருக்கு அரசியலமைப்பு சட்டம் உரிமை அளித்துள்ளது.

அமெரிக்கன் மனித நேய அமைப்பின் சட்டப்பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளி நிர்வாகம் 21 நாட்களில் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பள்ளி நிர்வாகம் இந்த விவகாரத்தில் ஆசிரி யையின் செயல்குறித்து கருத்து எதுவும் கூறாமல் மவுனமாகவே இருந்து வருகிறது.

அமெரிக்கப் பள்ளிகளில் பிரார்த்தனைக் கூட்டங் களில் பங்கேற்பதுகுறித்த பிரச்சினையால் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர் களிடையே பிரிவினைகளை வளர்ந்து வருகின்றன.

அதி லும் குறிப்பாக கடவுளுக்கு கீழாக என்கிற சொல்வது குறித்தும், பல கடவுள் களைக் கொண்டுள்ள மதங் களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் கடவுள், மதங்களை மறுக்கும் நாத்திகர்களுக்கு பிரார்த்தனைக் கூட்டங்க ளில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண் டும்.

Read more: http://viduthalai.in/e-paper/81212.html#ixzz33FUL6uqm

தமிழ் ஓவியா said...


சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மை பற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் பற்றியோ கவலை சிறிதும் இராது.

- (விடுதலை, 10.6.1968)

Read more: http://viduthalai.in/page-2/81208.html#ixzz33FUYCo7p

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கைகளின் மோசமான விளைவுகள்!


கடவுள் நம்பிக்கை என்பது மனிதனின் தன்னம்பிக் கையைத் தகர்க்கிறது என்பது மட்டுமல்ல; அது மூடநம்பிக்கையாக மாறி பெற்ற பிள்ளையையும், கட்டிய மனைவியையும் கூட நரபலி கொடுக்கக் கூடிய அளவுக்குக் கொலை வெறியை ஊட்டக் கூடியதாக இருக்கிறதே!

தன் குடும்பக் கஷ்டங்களுக்குப்பிள்ளை பிறந்த நேரம் சரியில்லை என்று தந்தையே தன் பிள்ளையைக் கொன்ற சம்பவங்களைப் பார்த்த பிறகும் இவற்றை எப்படி நியாயப்படுத்துவார்கள்?

தமிழ்நாட்டில் துறையூரை அடுத்த உப்பலியாபுரம் காவல் துறை சரகத்தைச் சார்ந்தது கோனேரிப்பட்டி, அந்தவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மனைவி ராணி ஆகியோர் உள்ளனர். லாரி ஓட்டுநரான ரவிச்சந்தி ரனின் முதல் மனைவிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகளுக்குத் திருமணம் நடந்து விட்டது. இரண்டாவது மகள் பானுப்பிரியா உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கிறார்.

இதற்கிடையில் முசிறியையடுத்த கொளக்குடியைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் அமாவாசையன்று நடு வீட்டில் சொந்த மகளை நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும்; செல்வங்கள் கிடைக்கும் என்று கூறவே, ஓட்டுநர் ரவிச்சந்திரன் தன் மகள் பானுப்பரியாவை நரபலி கொடுக்கத் திட்டமிட்டுள்ளான். அவனுக்கு இரண்டாவது மனைவியும், மனைவியின் தந்தையும் உடந்தையாம்.

நிலைமையைப் புரிந்து கொண்ட பானுப்ரியா வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்து கூக்குரல் போட்டுள்ளார். ஊர் திரண்டு வந்து பார்த்தபோது வீட்டின் நடுவில் குழி தோண்டப்பட்டு இருந்ததாம்; அங்கு தேங்காய், பழம், வெற்றிலை வகையறாக்கள் கிடந்தன; புதிய நபர்கள் சிலர் அங்கு அமர்ந்து கொண்டு பூஜைக்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததும் தெரிந்தது.

பிரச்சினை காவல் நிலையத்திற்குச் செல்லவே காவல்துறையினர் விரைந்து வந்து அங்குள்ளவர் களைக் கைது செய்தனர். மந்திரவாதி தப்பி ஓடி விட்டான் - காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்று செய்தி வெளி வந்துள்ளது.

இந்தக் கொலை முயற்சியை என்னவென்று சொல் லுவது! இதுதான் பக்தியா? இதுதான் மூடச் சடங்குகள் காட்டும் நல்வழியா?
ஆன்மீக இதழ்களைப் பக்கம் பக்கமாக வெளி யிடும் பத்திரிகை முதலாளிகள்தான் இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு - கொலைகார சிந்தனை களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

நாட்டில் திரியும் நரபலி சாமியார்கள், மந்திர வாதிகளை அடையாளம் கண்டு, காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

செங்கற்பட்டு மாவட்டத்தில் நரபலி சாமியார் ஒருவருக்கு மாவட்ட நீதிபதியாக இருந்த கே.ஆர். சத்தியேந்திரன் தூக்குத் தண்டனையே கொடுத்தார் என்பது இங்கு நினைவூட்டத் தக்கதாகும். தூக்குத் தண்டனை இல்லாவிட்டாலும் கடும் தண்டனை விதிக்க வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விசால நகரில் ஒரு சம்பவம்; எண்ணெய் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவருக்குத் தீராத முதுகு வலி! மருத்துவமனை களுக்குச் சென்றும் பலன் கிட்டவில்லை.

வைத்தியத்தில் குணம் ஆகவில்லையென்றால் அடுத்து மாந்திரிகம் - தாந்திரிகம் தானே! ராம் சேவக் திவாரி என்ற ஒரு மந்திரவாதி குறுக்கே வந்தான். பூஜைகள் செய்தால் சரியாகி விடும் என்ற அவன் பேச்சைக் கேட்டு ஏமாந்ததுண்டு. மந்திரவாதிக்கு ஆனந்தகுமாரி, லலித்குமாரி, பூஜா திவாரி என்பவர்கள் எடுபிடிகள்!

கணவனின் நோய் எப்படியாவது குணமாக வேண் டும் என்பதில் குறியாக இருந்த மனைவி பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கேட்ட பணத்தையெல்லாம் வாரி வாரிக் கொடுத்துள்ளார். செலவான தொகை மட்டும் ரூ.1.21 கோடியாம்!

இதற்கிடையில் அந்த மந்திரவாதி இரவுப் பூஜை செய்ய வேண்டும் என்று கூறினானாம்; அதற்கும் நோயாளியின் மனைவி சம்மதித்தார். விளைவு அந்தப் பெண்ணை தம் காமவெறிக்குப் பலியாக்கினான் மந்திரவாதி. அதற்குமேல் பொறுமை காட்டாத அந்த பெண் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.

மந்திரவாதியும், அவனின் எடுபிடிகளான மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர். இந்தியத் தண் டனைச் சட்டம் 376, 420, 384 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நியாயமாக மத்திய, மாநில அரசுகள் மந்திரம் மாந்திரிகம், ஜோதிடம் என்பனவற்றை அதிகாரப் பூர்வமாக தடை செய்ய வேண்டும்.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று சட்டத்தில் எழுதி வைத்திருந்தால் மட்டும் போதாது; அதனைச் செயல்படுத்தும் பொழுது, விஞ்ஞானத் தன்மைக்கு எதிரான - மாறான இத்தகைய தீய விளைவுகளுக்குக் காரணமான முறைகளைத் தடை செய்தாக வேண்டும்.

முதற் கட்டமாக இந்த மந்திரவாதிகளை - ஓரிடத்திற்கு வரவழைத்து அவர்களின் செயல்பாடு களை நிரூபித்துக் காட்ட ஒரு வாய்ப்புக்கூட அளித்துப் பார்க்கலாம்;

அப்படி நிரூபிக்க இயலாத பட்சத்தில், அத்தகு செயலில் ஈடுபடக் கூடாது என்று முதற்கட்ட மாக எச்சரித்து, அனுப்பலாம்; அதையும் மீறி அவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைக் கூடமாகத்தான் இருக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page-2/81207.html#ixzz33FUgpxsw

தமிழ் ஓவியா said...


மண்ணுக்கும் கேடாய் மதித்தீரா பெண்ணினத்தை?


ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டில் உள்ள பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தது ஆகும். ஆனால் நம் பாரத புண்ணிய பூமியில் அதற்கு நேர்மாறாக அடுப்பூதும் பெண் களுக்கு படிப்பு எதற்கு? பொட்டபுள்ள படிச்சு என்ன செய்யப் போகிறாள்? என்று பெண்களை ஏளனமாகவும், அலட்சிய மாகவும் பேசி அவர்களை கல்வி கற்க விடாமல் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்தனர் நமது முன்னோர்கள்.

இக்கொடுமையினைக் கண்டு எரி மலையாய் கொதித்தெழுந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், ஆண் களுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வி கற்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று இரவு - பகல் பாராமல் இடை விடாது மக்களிடையே தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும், தந்தை பெரியார் அவர்களால் 1929-ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட் டில் மத்திய - மாநில அரசுகள் பெண் களுக்கு கல்வி - வேலை வாய்ப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை வார்த்தெடுத்து உலகையே உற்று நோக்க வைத்தார்.

அதன் பயனாய்; அறியாமையிலும், பழமையிலும், மூடநம்பிக்கையிலும் மூழ்கிக் கிடந்த நமது இன மக்கள் மெல்ல மெல்ல விழிப்புணர்வு பெற்று தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க ஆர்வமுடன் முன்வந்தனர்.

இதன் விளைவாக, தற்போது பெண்கள் படித்து பட்டம் பெற்று பல்வேறு துறை களில் வேலை வாய்ப்பினை மட்டுமின்றி ஆட்சி அதிகாரத்தையும் எட்டிப் பிடித்துள்ளனர் என்பது வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இவ்வாறு வீட்டிற்குள் சிறைப் பறவைகளாய் இருந்த பெண்களை, வெளி உலகிற்கு சுதந்திரப் பறவைகளாய்க் கொண்டு வந்தவர் பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியார் அவர்களே ஆவர்.


தமிழ் ஓவியா said...

ஆனாலும், இன்றைய நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் என்ன தான் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் வேலை வாய்ப்பின் மூலம் அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டிருந்தாலும், ஆட்சி - அதிகாரத்தை அடைந்திருந் தாலும் கூட, சமூகத்தில் இன்றளவும் அவர்களுக்கு பாலியல் கொடுமை, பலாத்காரம், வன்கொடுமை, வரதட் சணைக் கொடுமை மற்றும் ஜாதி மறுப்பு - மத மறுப்புத் திருமணம் செய்பவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்து வது,

அவர்களை ஊரை விட்டே விரட்டி அடிப்பது அல்லது ஒதுக்கி வைப்பது, உயிரோடு தீயிட்டு எரிப்பது, கொலை செய்வது, தற்கொலைக்குத் தூண்டுவது போன்ற எண்ணற்ற கொடுமைகள் பெண்களுக்கு எதிராக நாளும் நடந்த வண்ணம் உள்ளன என்பது ஓர் கசப்பான உண்மை நிலையாகும்.

எடுத்துக்காட்டாக கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால், அவர் உறவினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார் என்கின்ற கொடுமையான செய்தியினை அண்மையில் (26.04.2014) நாளேட்டினை நோக்கியபோது அறிய முடிந்தது.

இத்தகைய மனித நேயமற்ற கொடுஞ்செயலை நாளிதழின் வாயிலாக அறிந்த சமூக நல ஆர்வலர்கள், பகுத்தறி வாளர்கள், மனித நேயப் பண்பாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், நடு நிலையாளர்கள், மகளிர் அமைப்பினர், மாதர் சங்கங்கள், இளைஞர்கள் - மாணவர்கள் என அனைவரும் அணி திரண்டு ஆர்ப்பரித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தங்களது கண்டனக்குரலை ஓங்கி ஒலித்தனர்.

வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்பட வேண்டிய அத்தகைய இளம்பெண், உறவினர்களின் ஜாதி வெறியால் ஜாதித் தீக்கு இரையாக்கப்பட்ட கொடுமை யினை நாளும் நினைத்து, நினைத்து பெண்ணியவாதிகள், நடுநிலையாளர்கள், மகளிர் அமைப்பினர், மாதர் சங்கங்கள் ஆகியோர் சொல்லொண்ணாத் துயரத் தில் மூழ்கினர்.

இத்தகைய வேதனை மிகுந்த சூழலில் தான், பாதிக்கப்பட்ட அப் பெண்ணின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் மேலும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கித் தருவதாகவும் மாநில அமைச்சர் உறுதிபடக் கூறியதை அடுத்து மகளிர் அமைப்பினர் மாதர் சங்கங்கள், சமுதாய நல விரும்பிகள் ஆகியோர் சற்றே ஆறுதல் அடைந்தனர்.

ஆயினும் பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடுமைகள் இனிமேல் இந்தியாவில் வேறு எங்கும் நடை பெறாமல் தடுத்து நிறுத்திடும் உயரிய நோக்கில் இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் அமைப்பினர், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மகளிர் மாண்பினையும், பெண்ணினத் தின் பெருமைகளையும், பெண்ணி னத்தை மண்ணுக்கும் கேடாய் மதிக்கின்ற ஆணாதிக்கத்தின் அநாகரிகப் போக் கினையும், ஜாதி வெறியால், மதவெறி யால் விளையும் கேடுகளைப் பற்றியும் சமுதாய மக்களிடையே எடுத்து இயம்பும் வகையில் நகரங்கள் முதல் குக்கிரா மங்கள் வரை மாபெரும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள ஆயத்தமாகி விட்டனர்.

ஆகவே பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஜாதி ஒழிப்பு, ஜாதி மறுப்பு - மத மறுப்புத் திருமணம் ஆகிய வற்றைப் பற்றி மக்களிடையே எடுத் துக்கூறி அவர்களிடம் போதிய விழிப் புணர்வையும், புதிய எழுச்சியையும் ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள இளைஞர்கள் - மாணவர்கள், மகளிர் அமைப்பினர், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரை வாழ்த்தி வரவேற்பதோடு மட்டுமின்றி, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நாம் தோளோடு தோளாகத் துணை நின்று.

ஜாதி ஒழிப்பு வீரர் தந்தை பெரியார் காண விரும்பிய ஜாதி பேதமற்ற - ஆண் பெண் பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்று பட்டு உறுதியேற்போம்! மலரட்டும் மனிதநேயம்! மடியட்டும் மதவெறி - ஜாதி வெறி!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- சீ. இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45

Read more: http://viduthalai.in/page-2/81211.html#ixzz33FUptLwZ

தமிழ் ஓவியா said...


பூசணிக்காய் மகத்துவம்


புராணத்திலே கூறப்பட்டுள்ள கடவுள்கள் எப்படித் தோன்றினர் என்ற செய்திகளை நாம் படிக்க நேரிடும் போது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மக்களின் அறிவின்மையும் முட்டாள்தனமும் அவர்களுடைய விபரீதமான கற்பனையும் நமக்கு நன்கு தெளிவாகின்றது. அது - விஞ்ஞானம் வளராத காலம்.

மக்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் இருந்த காலம்.

அவ்வாறு அவர்களை சிந்திக்க விடாமல் அந்த கடவுளைக் கற்பித்தவர்கள் மக்களை முட்டாள்களாக்கி விட்டிருந்த காலம்.

அவரவர் வசதி, கற்பனைக்கு ஏற்றவாறு கடவுளை கற்பனை செய்து பரப்பியவர் களும் அதை நம்பி ஏமாந்தவர்களும் வாழ்ந்த காலம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் மக்களுடைய சிந்தனை, அறிவு இரண்டுமே இன்னும் புதுப்புதுக் கடவுள்களைக் கற்பிப்பதில்தான் ஈடுபட்டு இருக்கிறது. உண்மையைச் சிந்திக்க மறுப்பதோடு தங்கள் கற்பனையைத்தான் வளர்த்து வருகின்றார்கள்.

கல்லைக் கடவுள் என்றார்கள் - அதை வணங்கினார்கள். அதற்குப் பால் அபிசேகம், நெய் அபிசேகம் நடத்தினார்கள். எண்ணெய்க் காப்பு சாத்தினார்கள். சாணிக்கு பொட்டிட்டார்கள் - சாமி என்றார்கள். கடவுளின் பெயரால் காலத்தையும் செல்வத்தையும் தங்கள் சக்தியையும் வீணாக்கினார்கள்.

இன்று இதோ ஒரு புதுக் கற்பனை!

திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள பல் குலங்கரா என்ற ஊரில் பூசணிக்காய்ப் பொட்டிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு ஊதுபத்தி கற்பூர ஆரத்தி காட்டி இருக்கிறார்கள். பால், நெய் என்றும் இன்னோரன்ன நைவேத்தியம் படைத்து இருக்கிறார்கள்.

இத்தனையும் செடியிலே பந்து போல் குண்டாகக் காய்க்காமல் நீள் வடிவத்திலே பாம்புபோல் காய்த்துள்ள பூசணிக்காய்க்கு அடித்த சான்ஸ். தினமும் பக்த கோடிகள் ஆயிரக்கணக்கில் அந்த பூசணிக்காயைக் கும்பிட விஜயம் செய்கின்றனர்.

வளைந்து காய்ந்த பூசணிக்காயைக் கடவுள் என்று வணங்கும் பக்தர்களே! கடவுள் உண்மையில் இருப்பாரேயானால் அந்தச் செடியிலே காய்த்துள்ள அந்த பூசணிக்காய் இன்னும் குறைந்தபட்சம் ஆறு மாதமாவது காய்ந்துப் போகாமல் இருக்குமா?

ஒரு பூசணிக்காய் இயற்கைக்கு மாறாக வளைந்து காய்த்ததைக் கடவுள் என்று வணங்குகிறீர்களே...! உலகத்தில் இயற்கையாக பிறவாமல் வளைந்த முதுகோடு (கூன்) பிறக்கிறார்களே அவர்கள் எல்லாம் கடவுள்களா? அல்லது பிறவிக் கோளாறுகளோடு பிறக்கிறார்களே அவர்களெல்லாம் கடவுள்களா? அவர்களுக்கு பாலாபிசேகமும், நெய்யாபிசேகமும் செய்தீர்களா? அல்லது செய்ய முன் வருவீர்களா?

இன்னுமொரு சுவையான செய்தி... இந்தப் பெயரைச் சொல்லி பண்ட் கலெக்சன் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம். இது என்ன நீங்கள் செய்கின்ற விபரீதமான கற்பனைக்கு கூலியா?

ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு, நாள்: 26.5.1978

Read more: http://viduthalai.in/page-7/81239.html#ixzz33FVQXq7B

தமிழ் ஓவியா said...


கடவுள் எங்கே இருக்கிறான்?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெபமாலை உருட்டுவதை விடு, அத்துடன் பாட்டையும், மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத் திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயிகளிடமும் கடவுள் இருக்கிறான்.

அவர்களுடன் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் அவர்களுடைய ஆடையில் தூசி படிந்திருப்பதை பார். ஆகவே, நீயுங்கூட உன் காஷாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதை விடச் சுலபமான வழியும் கிடையாது

குறிப்பு: கோயிலில் கடவுள் இருக்கிறார் என்பதை மறுக்கிறார், அந்தக்கால சீர்திருத்தக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த பெருங்கோயில் பல
ஜாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய்
நீதிஅறம் அழித்து வரல்
நிர்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத்தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

- திரு.வி.க.

Read more: http://viduthalai.in/page-7/81240.html#ixzz33FVbZhC7

தமிழ் ஓவியா said...

புத்தரின் ஆத்மா மறுப்பு

புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த போது, ஒரு பார்ப்பனர் ஆத்மா (உயிர்) பற்றி உங்கள் கருத்தென்ன? என்று வினவினார்.

ஆத்மா (உயிர்) எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்ளுங்கள்? கண்களைத் தோண்டி விட்டால், அந்த ஆத்மாவால் (உயிரால்) பார்க்கமுடியுமா? காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்கமுடியுமா? மூக்கை எடுத்துவிட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா?

நாக்கை அறுத்துவிட்டால் ருசி அறிய, பேச ஆத்மாவால் (உயிரால்) முடியுமா? என்று கேட்டுவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகள் இவையென்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்.

Read more: http://viduthalai.in/page-7/81240.html#ixzz33FVk45ze

தமிழ் ஓவியா said...


பக்திப் பண்டாரங்களின் பார்வைக்கு!


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், எழும்பூர் ரயில் நிலையத்திலும் வந்திறங்கிய பயணிகளிடம் ரிக்ஷாக்காரர்கள் எப்படி போட்டி போட்டுக் கொண்டு ஆள் பிடிப்பார்கள் என்பது சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருப்பவர்களுக்கு தெரியும். அதைப் போல, பூரி கோயிலில் பக்தர்களை இழுத்துப் பிடிக்கிறார்கள்.

பண்டாக்கள் எனப்படும் பார்ப்பன அர்ச்சகர்கள். இது பற்றி இவ்வார சண்டே (மே 28) ஏட்டில் ஒரு தம்பதிகள் பெற்ற அனுபவம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தப் பெண் கீழ்க்கண்டவாறு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-

கடந்த கோடை விடுமுறையின் போது நாங்கள் பூரிக்கு செல்ல நேரிட்டது. ஒரு நாள் சைக்கிள் ரிக்ஷா ஒன்றில் நானும் என் கணவரும் ஏறிக்கொண்டு பூரி ஜெகநாதன் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றோம். கோயிலை நோக்கிச் செல்லும் மய்ய வீதி வந்ததும் கிடு கிடு என்று எங்களை நோக்கி பண்டாக்கள் எனப்படும் அர்ச்சகர்கள் ஓடி வந்தார்கள். எங்களை சூழ்ந்தது ஒரே அர்ச்சகர்கள் கூட்டம் எங்களுக்கு முக்தி அளிப்பதில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம்!

நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு நின்றது அந்தக் கூட்டம். ஒரு வயதான பல் எல்லாம் போன அர்ச்சகர் ஒருவர் எங்கள் ரிக்ஷாவுக்கு முன் வந்து நின்று கொண்டு இப்படியே வாருங்கள் என்று வழிகாட்டி அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். கூட்டத்திலிருந்து எல்லா பண்டாக்களையும் பிடித்து தள்ளிவிட்டு முன்னே ஓடி வந்தார். அவசர அவசரமாக எங்களுக்கு உத்தரவிட ஆரம்பித்தார். இதற்கு மற்றொரு இளம் பார்ப்பன அர்ச்சகர் எதிர்ப்பு தெரிவித்தார்.

அட முட்டாளே, என்ன விளையாடறே, இது என் கிராக்கி என்று உனக்கு தெரியாதா? ஒவ்வொரு வருஷமும் இவா பூரிக்கு வருவா ஒவ்வொரு முறையும் நான்தான் கோயிலுக்கு அழைத்துச் செல்வேன் தெரியுமா? என்று சத்தம் போட ஆரம்பித்தார்.

அடப்பாவி, என்ன அபாண்டமாகப் புளுகுகிறானே, என்று நான் எதிர்ப்பைத் தெரிவிக்க நினைத்துக் கொண்டிருக்கும்போது, இந்த அர்ச்சகன் என்னை பேச விடாது, வலது கையை தூக்குங்கள் என்றான்.

உடனே கையில் இரண்டு இலையை எடுத்து தன் கையிலிருந்த பாத்திரத்திலிருந்து 2 சொட்டுத் தண்ணீரை விட்டு வாங்கோ, இப்போ நீங்கள் தரிசனத்துக்கு ரெடியாயிட்டேள் என்றான். இதுதான் சமயம் என்று என் கணவர் குறுக்கிட்டுப் பேசினார். ரொம்ப நன்றி நாங்கள் இந்தக் கோயிலுக்கு நாங்களாகவே போய்க் கொள்கிறோம். எங்களை விடுங்களேன் என்றார்.

அர்ச்சகர்கள்தான் பகவானிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சாஸ்திரங்களே கூறுகிறதே, தெரியாதோ? என்றான் அந்தப் பூசாரி. எனக்கு அதெல்லாம் தெரியும். வழிவிட போகிறீங்களா, இல்லையா? என்று ஆத்திரத்துடன் கேட்டார் என் கணவர்.

நீங்கள் இந்துக்கள்தானா? என்று சந்தேகத்துடன் கேட்டான் ஒரு பூசாரி. ஆமாம் என்று சொன்னதுதான் தாமதம் அப்படியானால், உள்ளே பகவானைச் சென்று பார்க்காமல் உங்களை விடமாட்டோம் என்று மிரட்ட ஆரம்பித்தனர். ஒருவன் ஓடி வந்து காதில் ரகசியமாக உள்ளே இருக்கும் விசேஷ அர்ச்சகரை எனக்கு நன்றாகத் தெரியும்.

10 ரூபாய் கொடுத்தால் போதும், விசேஷ பூஜை நடத்துவார். நிச்சயமாக சொர்க்கத்தில் உங்களுக்கு இடம் கிடைத்து விடும் வாங்கோ என்றான். நாங்கள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. சரி, ஏன் பேச்சை வளர்த்திக் கொண்டு 8 ரூபாய் மட்டும் கொடுங்கள், எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் ஜாதி என்ன சொல்லுங்கோ என்று ஆரம்பித்தான்.

இப்போது எங்களைச்சுற்றி வேடிக்கைப் பார்க்கும் கூட்டம் இன்னும் அதிகரித்து விட்டது. இதுதான் சந்தர்ப்பம் என்று என் கணவர் சொன்னார் என்ன, எங்கள் ஜாதிதானே உங்களுக்கு தெரியவேண்டும்? நாங்கள் அரிஜன்! அவ்வளவுதான். இதைச் சொல்லியதுதான் தாமதம். மின்சாரம் பாய்ந்தது போல் அவர்களுக்கு அதிர்ச்சி! எல்லா அர்ச்சகர்களும் முணுமுணுத்துக் கொண்டனர். கிசுகிசு என்று ரகசியம். ஷாந்தம் பாபம் என்று எல்லோரும் ஒரே சத்தம் போட்டனர்.

எந்தத் தொல்லையும் இடையூறும் இல்லாமல் நாங்கள் கோயிலுக்குச் சென்றோம். நல்ல காரியத்துக்காகப் பொய் சொல்வதில் தவறில்லையே, மகா பாரதத்தில் அரசன் யுதிஷ்திரதா கூட நல்ல காரியத்திற்காகப் பொய் சொல்லியிருக்கிறான்.
இவ்வாறு அந்த பக்தை எழுதியிருக்கிறார்.

- சண்டே, 28.5.1978

Read more: http://viduthalai.in/page-7/81241.html#ixzz33FVr3xRc

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டதா வது:

இந்த மணவிழாவிலே நான் கலந்து கொள்வது என்பது அதிசயமானதல்ல. உரிமை, உறவின் பாற்பட் டது என மிக சிறப்பாக கூற வேண்டும். தந்தை பெரி யார் இருந்தவரையிலே அவர்கள் தலைமை தாங் குவார்கள் - அடுத்து அன்னை மணியம்மையார் இயக் கத்திற்கு தலைமை தாங் கியதால் அவர்கள் இந்த பணியை செய்திருப்பார் கள். அதே போல இந்த பணியை செய்வதற்கு என்னை எப்போதும் உரி மையோடு அம்மையார் வசந்தா, மண்டோதரி போன்றோர்கள் எந்த மண விழாவாக இருந்தாலும் இதற்கு முன்பு நடந்த மணவிழாவாக இருந்தா லும், எல்லா மணவிழாக் களிலும் வந்து நேரிலே அழைத்து சண்டை போட்டு தேதி வாங்கிக் கொண்டு செல்வார்கள்.

வேறு நிகழ்ச்சிகள் அடுக்க டுக்காக இருந்த நேரத்தில் ஒரு முறை தஞ்சை பாலி டெக்னிக்கிலே அவர்கள் வந்து சந்தித்தபோது வரு வதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது, சுற்று பயண நெருக்கடி இருக்கிறது. உடல் நிலை இப்படி இருக் கிறது என்றெல்லாம் சொன்னபோது கூட அம் மையார் ஏற்க தயாராக இல்லை. அதுவும் கல் யாணி மறைவுக்கு பின் னாலே. மிக வேகமாக என் னிடம் உரிமையோடு கோபித்து கொண்டார்கள்.

அப்படியானால் நீங்கள் எப்போது தேதி கொடுக் கிறீர்களோ அப்போதே திருமணத்தை வைத்து கொள்கிறோம். வேறு யாரையும் அழைத்து நடத்த நான் விரும்பவில்லை என கட் அண்டு ரைட்டாக மிக வேகமாக சொல்லிவிட்டு கொஞ்சம் கோபமாக வெளியே வந்தார். எல்லோ ருக்கும் வியப்பு. நான் உடனே அழைத்து நீங்கள் கேட்கிற தேதியிலேயே கட் டாயம் வருகிறேன் என சொல்லி மற்றவர்களுக்கு நான் சமாதானத்தை சொல்லி அந்த தேதியை கூட மாற்றி வைத்துவிட்டு இந்த திருமணத்திற்கு வந் தேன்.

எனவே இவ்வளவு நெருக்கமான உறவு கருப்பு சட்டைகாரர்களுக்கு தான் உண்டு. கொள்கை உறவு தான் கருப்பு சட்டைகாரர் களிடத்திலே இருக்கக் கூடிய தீவிரமான உறவா கும். எங்களுடைய உண் மையான உறவுக்காரர்கள், கழக உறவுதான் மிக முக்கியமானதாகும்.

தோழர் கணபதி, சிவா னந்தம் ஆகியோர் கல்யாணி அவர்களோடு என்றைக் கும் சேர்ந்திருப்பார்கள். நரசிங்கம் பேட்டை முத்து கிருட்டிணனை பார்க்க முடியாத சூழ்நிலை. பெரி யார் இயக்கத்திலிருந்து பணிகளை தீவிரமாக செய்ய கூடியவர்கள். எனவே இது எங்கள் குடும்பத்து மண விழா. எனவே மிகுந்த மகிழ்ச்சியோடு இதிலே பங்கேற்கிறேன். மண மக்கள் சுபா (எ) கல்யாணி - மனோகரன் இருவருமே நன்கு படித்த பொறியா ளர்கள்.

அதுதான் பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றி, இதைவிட பொருத்தமான மணமக் களைத் தேடி கண்டுபிடிக்க முடியாது, மணமகன் கத் தாரிலே பணியாற்றுவதை அழைப்பிதழிலே காண்கி றோம். சுபா பெரியார் மணியம்மை பல்கலை கழக மாணவி ஆவார். இது எங்களுடைய பல்கலை கழக மாணவி என்ற உரி மையும் உள்ளது.

சுபா திரு மணத்தை நானே தலைமை ஏற்று நடத்தக் கூடிய வாய்ப்பு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி, அவர்கள் இப்போது எம்பிஏ படிப்பது மிகுந்த பாராட் டுக்குரியது என மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்து கூறினார்

Read more: http://viduthalai.in/page-4/81243.html#ixzz33FWbLXye

தமிழ் ஓவியா said...


நல்ல குடும்பம்


நல்ல குடும்பம் எனப்படுவது வரவுக்கு மிஞ்சிய செலவு செய்யாமல் இருப்பதாகும். தமது வாழ்க்கைச் செலவை வரவுக்கு உள்பட்டே அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குடும்பம் தான் கண்ணியமான குடும்பமாகும்.

- (விடுதலை,2.11.1961)

Read more: http://viduthalai.in/page-2/81324.html#ixzz33L8imY5r

தமிழ் ஓவியா said...


அவாளால் தகர்க்கப்பட்ட தகுதி, திறமை மாய்மாலம்?

- குடந்தை கருணா

நாம் இடஒதுக்கீடு கேட்டு போராடினால், தகுதி திறமை போய் விடும் என அங்கலாய்த்த பார்ப் பனர்கள், நமக்கு எதிராக, வட நாட்டில் போராட்டம் நடத்தினார்கள்; உச்ச நீதி மன்றம் சென்று, வழக்குப் போட்டார்கள்.

இட ஒதுக்கீடு அளிப்பதால், தகுதி திறமை ஒருபோதும் குறையாது; வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்திற்கு, அந்த உரிமை தரப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடி, இந்த தடை களையெல்லாம் உடைத்துத் தான், ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்கு முன்னேறி வருகிறார்கள்.

இன்றைய கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பத்தாவது கூட படிக்க வில்லை, என சிலர் குற்றஞ்சாட்டிய தும் அப்படி கூறலாமா? ஒருவரது படிப்பை வைத்து, அவரது திற மையை எடைபோடலாமா? அவருக் குக் கல்வித்துறையில் முன் அனுபவம் இருக்கிறதா என்று கேட்கலாமா? முதலில் அவர் அந்த பணியைச் செய் யட்டும்;

அதில் எவ்வாறு செயல்படு கிறார் என்று பார்த்து அப்புறம்தான் மதிப்பீடு அளிக்கவேண்டும் என இப்போது பார்ப்பனர்கள், நாம் வைக் கும் அதே வாதத்தை வைக்கிறார்கள். நம்மூர் தொலைக்காட்சியில், ராகவன் எனும் பார்ப்பனர், காமராசர் என்ன படித்தவரா? எனக் கேட்கிறார். கல்விப் புரட்சி ஏற்படுத்திய காமராசரும், ஸ்மிரிதி இரானியும் ஒரே நிலையில் வைத்து நாம் பார்க்க முடியாது.

ஆயினும், நாமும் ஸ்மிரிதி ஜுபின் இரானி மீது வீசப்படும் இந்த குற்றச் சாட்டை ஆதரிக்கவில்லை; கல்வித் துறை அமைச்சராவதற்கு, இந்த படிப்புதான் வேண்டும் என நியதி எதுவும் கிடையாது.

இதற்கு முன்னர் பாஜக ஆட்சியில் இருந்தபோது, இதே துறையை நிர்வகித்த மெத்தப்படித்த டாக்டர் முரளி மனோகர் ஜோஷி என்ன சாதனை செய்தார்? இந்தியாவில் ஒரு ஆயிரம் பேர்கூட பேசாத சமஸ்கிருத மொழியை, செம்மொழி என அறிவித்து, அதன் மேம்பாட்டுக்காக, ரூ.100 கோடி ஒதுக்கச் செய்தார்;

ஜோஸ்யத்தை, வேத அறிவியல் என கூறி, அதனை பாடத் திட்டத்தில் சேர்த்திட முனைந்தார்; இந்த துறையில் இயங்கும், இந்திய வரலாற்று ஆய்வு குழுமத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை நியமனம் செய்தார். இதைத் தவிர, அவர் சாதித்தது ஒன்றும் இல்லை;

உடம்பெல்லாம் மூளை என வர்ணிக்கப்பட்ட ராஜாஜி, தமிழ் நாட்டின் முதலமைச்சராகி, ஆயிரக் கணக்கான பள்ளிக்கூடங்களை இழுத்து மூடினார்; எஞ்சிய பள்ளிகளில் படிக்கும் நம் வீட்டுக் குழந்தைகள், பாதி நேரம் படிப்பு, மீதி நேரம் அவரவர் அப்பன் செய்யும் தொழிலை செய்ய வேண்டும் என்கிற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

நம் தந்தை பெரியார், வெகுண்டெழுந்து, ராஜாஜியை முதல்வர் பதவியிலிருந்து விரட்டி, அந்த இடத்தில், அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராசர், முதல்வராக வருவதற்குக் காரணமா யிருந்தார்; குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டு, மேலும் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டு, தமிழ் நாட்டில் கல்விப்புரட்சி ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள், கல்வி பெற வாய்ப்பு அதிகமாக உருவானது.

இப்போது, பார்ப்பனர்கள், தாங்கள் இது நாள்வரை கூறி வந்த தகுதி, திறமை என்பதை வாபஸ் வாங்கி, பேசுவதற்கான காரணம் என்ன? பார்ப்பனர்கள் இவ்வாறு பேசுவது ஸ்மிரிதி இரானி மீது அக்கறையால் அல்ல; ஸ்மிரிதி இரானி ஒரு பார்ப்பன பெண்மணியும் அல்ல; அவர் பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவர் இந்த துறையில், ஆர்.எஸ்.எஸ் சொல்லும்பணியை செவ்வனே செய்துமுடிக்க, ஆர்.எஸ். எஸால் அனுப்பப்பட்ட மோடி அமைச்சரவையில் ஒரு அமைச்சர். ஸ்மிரிதி இரானி, சமஸ்கிருதத்தை உயர்த்திப்பிடிப்பார்;

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார் என பார்ப் பனர்கள் கருதுகிறார்கள். அதற்குத் தடையாக, தகுதி, திறமை வருமானால், அதனை தகர்க்கவும் அவாள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் இப்போது, ஸ்மிரிதி இரானிக்கு வக்காலத்து வாங்கும் இந்த போக்கு.

Read more: http://viduthalai.in/page-2/81322.html#ixzz33L8rWrWo

தமிழ் ஓவியா said...


சென்னை மந்திரிகளைப் பின்பற்றுதல்

சென்னை மாகாண சுகாதார மந்திரி திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் மதுவிலக்கு விஷயமாய் கவர்ன் மெண்டாரின் கொள்கையை திட்டப்படுத்தவும், மக்களுக்கு மதுவிலக்கில் அதிக முயற்சி உண்டாக்கவும், வருஷம் ஒன்றுக்கு நாலு லட்ச ரூபாய் போல் செலவு செய்து நாட்டில் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்தது யாவருக்கும் தெரிந்த தாகும்.

அதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் கண்டு உண்மையில் நமது நாட்டில் மதுவிலக்கு ஏற்பட்டுவிட்டால் எங்கு அதனால் பிழைக்கும் தங்களது உத்தியோகத் தொழிலும், வக்கீல் தொழிலும் மற்றும் மதுபானத்தின் பலனாய் ஏற்படும் பலவிதத் தொழிலும் நின்றுவிடுமோ எனக்கருதி பலவித தந்திரத்தாலும், மந்திரி கனம் முத்தையா முதலியாருக்குக் கெட்ட எண்ணம் கற்பித்தும், கவர்ன்மெண்டை தூண்டி முத்தையா முதலியாரின் கொள்கையை ஒப்புக் கொள்ளாமல் இருக்கச் செய்ய முயற்சித்தும் பயன்படாமல் போய் இப்போது சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு பிரச்சாரம் நடைபெறுவதும் யாவருக்கும் தெரிந்ததாகும்.

தவிர, காந்தி மடத்தின் சட்டாம்பிள்ளையாகிய திரு. இராஜகோபாலாச்சாரியார் தினமும் இந்தக் கொள்கையையும், பிரச்சாரத்தையும் தூற்றிக் கொண்டு வருவதும் யாவருக்கும் தெரிந்ததாகும். மந்திரி கனம் முத்தையா முதலியார் அவர்களின் இந்தக் கொள்கையை இப்போது இந்தியாவில் பல பாகங்களிலும், மேல்நாடுகளில் பல பக்கம் பின்பற்ற துவங்கிவிட்டன.

அதாவது, அய்க்கிய மாகாணமாகிய அலகாபாத் மாகாண அரசாங்கத்தார் இந்தக் கொள்கையைப் பின்பற்றி அந்த மாகாணம் முழுவதும் இப்பிரச்சாரம் செய்யத் துவங்கிவிட்டார்கள். மைசூர் அரசாங்கத்தாரும் இக்கொள்கையை பின்பற்றி பல ஆயிரம் ரூபாய்கள் ஒதுக்கிவைத்து பிரச்சாரம் துவக்கி விட்டார்கள். அமெரிக்கா அரசாங்கத்தார் இதைப் பின்பற்றி அய்ம்பதாயிரம் டாலர்கள் ஒதுக்கிவைத்து பிரச்சாரம் துவக்கி விட்டார்கள்.

நியூசிலெண்ட் தீவு அரசாங்கத்தாரும் இதே முறையில் மதுவிலக்குப் பிரச்சாரம் துவக்கி விட்டார்கள். இவ்வளவு பேர்கள் ஒப்புக் கொண்டாலும் நமது நாட்டு பார்ப்பனர்களுக்கும். அவர்கள் சிஷ்யர்களுக்கும், காந்தி சிஷ்யர்களுக்கும் மாத்திரம் இது பிடிக்க வில்லையாம் ஏன்? மதுவிலக்குப் பிரச்சாரத்தின் பெயர் சொல்லி பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க முடியாமல் போனதும், மதுபானத்தால் பிழைக்கும் பார்ப்பனர்களின் வயிற்றில் மண் விழுவதாலும் தான்.

ஆகவே, இனியாவது ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பொது மக்கள் இந்த அருமையான சந்தர்ப் பத்தை விட்டுவிட்டாமல் மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு வேண்டிய உதவி புரிந்து கூட்டம் கூட்டியும் மற்றும் பல விதத்திலும் பிரச்சாரம் செய்வதற்கு வேண்டிய ஆதரவளிக்க வேண்டுவ துடன் ஜில்லா தாலுகா போர்டு தலைவர்களும் முனிசிபல் சேர்மென்களும், ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் திரு.சவுந்தரபாண்டியன் அவர்களை பின்பற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட அங்கத்தினர்களும் இந்த பிரச்சாரத்துடன் ஒத்துழைத்து ஆதரவு செய்து கொடுக்க வேண்டுகின்றோம்.

- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 24.11.1929

Read more: http://viduthalai.in/page-7/81292.html#ixzz33LB9yz7m

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை


ராமனாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார் சகோதரர்களின் நிர்வாகத்திலும் அவர்களது பொதுப் பணத்திலும், வெகுகாலமாக ஒரு உயர்தரப் பாடசாலை நடந்துவரும் விவரம் அனேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அப்பள்ளியில் இதுவரை ஆதிதிராவிடர் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை என்ற நிர்ப்பந்தம் இருந்து வந்ததுடன் அந்தப் படிக்கே சேர்க்காமலும் இருந்துவந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு திரு. சவுந்திரபாண்டியன் அவர்களுக்கு ஜில்லா போர்ட் தலைவர் பதவி கிடைத்ததற்காக அருப்புக்கோட்டை மகாஜனங்களும் மற்றும் பல தனித் தனி வகுப்பாரும் அவரைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அருப்புக் கோட்டை நாடார் சமூகத்தாரும் ஒரு தனியான விருந்தும் பாராட்டுக் கூட்டமும் செய்து உபச்சாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்தார்கள்.

அவ்வுபச்சாரப் பத்திரங்களுக்குத் திரு.சவுந்திரபாண்டியன் பதிலளிக்கையில் மனித சமூகத்தில் சில வகுப்பாரைத் தாழ்த்தி கொடுமைப்படுத்தி வரப்படுவதை அடியோடு ஒழிக்க வேண்டியதே, இது சமயம் மனிதனின் முதல் கடமை என்றும் அந்த வேலைக்கே பெரிதும் தனது எல்லாப் பதவிகளையும் உபயோகிக்கப் போவதாயும், ஆனால் அதில் தனக்கு சில கஷ்டங்கள் நாடார் சமுகத்தாராலேயே இருப்பதாகவும் சொல்லி உதாரணமாக அருப்புக் கோட்டையில் உள்ள நாடார் ஹைஸ்கூலில் ஆதிதிராவிடப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளுவதில்லை என்கின்ற நிர்ப்பந்தமிருப்பதேதான் முக்கியமான தடையென்றும் கூறி, அதனால் தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் தன்னுடைய சமூகத்திலேயே இவ்விதக் கொடுமையிருந்தால் தன்னுடைய உத்தியோக ஓதாவில் மற்ற சமூகத்தாருக்குள் இருக்கும் கொடுமைகளை நீக்கும் படி சொல்ல தனக்கு எப்படி தைரிய முண்டாகுமென்றும், ஆகவே எவ்வளவுக் கெவ்வளவு சீக்கிரத்தில் இவ்வருப்புக் கோட்டை பள்ளிக்கூடத்தில் இக்கொடுமை நீக்கப்படுகின்றதோ, அவ்வள வுக்கு அவ்வளவு தனது வேலை சுலபமாகுமென்றும் அவசியம் செய்ய வேண்டும் என்றும் தனது சமுகத்தலைவரை அடிப்பணிந்து கேட்டுக் கொள்ளுவ தாகவும் சொன்னார்.

அதற்கிசைய அன்று அப்பள்ளிக்கூட நிர்வாகிகள் அவ்வித நிர்ப்பந்தத்தை நீக்கிவிட்டு ஆதிதிராவிட மக்களை அந்தப் பள்ளிகூடத்தில் சேர்த்துக் கொண்டார்கள் . இது நமது நாட்டில் உள்ள தீண்டாமையும் உயர்வு தாழ்வும் ஒழிய ஒரு பெரிய அறிகுறியாகும் என்றே சொல்ல வேண்டும். இவ்வித அரிய காரியத்தைச் செய்த அருப்புக் கோட்டை நாடார் தலைவர்களை மனமாரப் பாராட்டுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 29.09.1929



Read more: http://viduthalai.in/page-7/81294.html#ixzz33LBQN6Zv

தமிழ் ஓவியா said...


மதமாற்றம்: விவேகானந்தர்


வட இந்தியாவில்தான் முகமதியர் படையெடுப்புகள் நடைபெற்றன. ஆனால் கேரளா, தமிழகம் போன்று மலேசியா, ஜாவா, சுமத்ரா, போர்னியோ இன்னும்பிலிப்பைன்ஸ், சீனத்தில்கூட எந்த படையெடுப்புமில்லாமல் கோடிக் கணக்கில் மக்கள் இஸ்லாமைத் தழு வியது ஏன்?

ஆட்சிகள் மூலம்தான் மதமாற்றங் கள் ஏற்பட்டன என்பது உண்மையா னால் ஸ்பெயின் நாட்டை அரபு முஸ் லிம்கள் 700 ஆண்டுகள் ஆண்டார்கள். ஆனால் மதமாற்றம் ஏற்படவில்லை.

இந்தியாவின் சில பகுதிகளை எட்டாம் நூற்றாண்டிலிருந்து முகமதியர் ஆண்டு வந்த போதிலும் ஐந்தில் ஒருவரே இஸ் லாமுக்கு மாறினர். கிறிஸ்தவ ஆங்கி லேயர் இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்டனர். ஆனால், 2-3 விழுக்காடு தான் கிறிஸ்தவர்களாகினர்.

இன்று உலகின் ஜனத்தொகையில் நான்காவது பெரிய நாடு இந்தோனே சியா. இன்றைய மக்கள் தொகை 24 கோடி. 13,500 சிறிய பெரிய தீவுகளைக் கொண்ட நாடு.

5,000 கி.மீ. நீளமுள்ள சமுத்திரத்தில் பரவியுள்ள நாடு. இன்றைய மக்கள் தொகையில் 88 விழுக்காடு இஸ்லாமியர்கள். இந்து மன்னர்களின் விஜயசாம்ராஜ்யம் 7 முதல் 13ஆம் நூற்றாண்டு வரை விரிவாகப் பரவி இருந்தது. ஆனால் இன்று 2 விழுக்காடு தான் இந்துக்கள்.

இந்த நாட்டை 16ஆம் நூற்றாண் டிலிருந்து போர்ச்சுகீஸ், பிரிட்டிஷ் பிரான்சு, டச்சு முதலாளிகளின் கம் பெனிகள் (டச்சு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி 1602 - 1798) பல்வேறு பகுதி களைக் கைப்பற்றிக் கொண்டனர். 1922லிருந்து இந்தோனேசியா முழு மையாக டச்சு சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.

இன்றைய இந்தோனேசியா 1949இல் தான் விடுதலை பெற்றது. சுமார் 500 ஆண்டு களுக்கு மேல் கிறிஸ்தவ ஐரோப்பியரின் ஆளுகை. ஆனால் இன்று 8 விழுக் காடுதான் கிறிஸ்தவர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஏழை- எளிய மக்களுக்கும், முகமதியர் படை யெடுத்துப் பிடித்தது ஒரு விடுதலையாக அமைந்தது. ஆதலால் தான் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் முகமதியர்களாக மாறினர். இதை சாதித்தது வாளால் தான் என்பதற்கில்லை.

வாளாலும், நெருப்பி னாலும் தான் இவையெல்லாம் சாதிக்கப் பட்டது என்பது மதி கேட்டின் உச்ச நிலையாகும் என்கிறார் விவேகானந்தர்.

Read more: http://viduthalai.in/page4/81269.html#ixzz33LCxjs5S

தமிழ் ஓவியா said...


ஸ்ரீலஸ்ரீகளே! பிள்ளையார் சிலை உடைப்பு கிளர்ச்சி நடந்த நாள் (27.05.1953)


இன்று!

பிள்ளையார் சிலை உடைப்பு கிளர்ச்சி நடந்த நாள் (27.05.1953)

''பிள்ளையார் சிலை உடைப்புப் பற்றி தந்தை பெரியார்''

'பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை தயங்கவேண்டிய தில்லை.

பிள்ளையார் சதுர்த்தி பண்டி கையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள்.

அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண் ணோடு மண்ணாக ஆகி விடுவ தில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்ல வில்லை; தொடவில்லை.

நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல!

வேத சாஸ்திர ஆதாரம் என்பதன் படியும் அது - கணபதி கடவுளல்ல!

கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறி வும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.

கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள - மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் - தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங் கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண் டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங் களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை - செம்பை- மண்ணை - அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டு மிராண்டி களான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன். இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப் பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசஞ்சி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டண்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்ப வர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ் வரர்களே, புலவர்களே, பிரபுக் களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக் களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல் லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக் கிறேன்.'

----------------------7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை.

(முகநூலிலிருந்து குடந்தை கோ. கருணாநிதி)

Read more: http://viduthalai.in/page4/81271.html#ixzz33LDAbqji

தமிழ் ஓவியா said...


என்ன நடக்கிறது நாட்டில்?

முக நூலில் இருந்து: ' . 2012 - எழுதப் பட்ட இந்தக் கட்டுரை பிஜேபி- இலங்கை அரசின் பொருத்தப்பாடுகளை எப்படி கணித்திருக்கிறது பாருங்கள் யார் இந்த ஷர்மிளா..?

ஆசியாவின் ஹிட்லர் ராஜ பக்க்ஷே வுக்கும், இந்தியாவின் சுஷ்மா உள்ளிட்ட பாரதிய ஜனதா கும்பலுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஆழமான உறவுக்கும் ,திட்டமிட்டு பின்னப்பட்டுவரும் சதி வலைகளுக்கும் இடையில் ஒரு இணைப் புப் பாலமாக இயங்கிக் கொண்டிருக் கிறார் இலங்கையில் வசிக்கும் ஷர்மிளா என்ற இந்திய பெண்மணி...!

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரம் பொருந்திய மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்காவின் ஒரே மகள்தான் இந்த ஷர்மிளா.

ஷர்மிளாவின் கணவர் அசோக் குமார் காந்தாதான் இலங்கைக்கான இந்திய தூதர்..!

இந்திய தூதரும் அவரது குடும்பமும் இலங்கையில் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது உங்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கும்..?

இந்திய அரசின் செலவில் இலங் கையில் சொகுசான வாழ்க்கை வாழும்

இந்த ஷர்மிளாதான் சுஷ்மா உள்ளிட்ட பாஜகவினரையும் வட இந்திய பாஜக தலைவர்களையும் இலங்கை அரசுக்கும் ராஜபக்ஷேவிற்கும் ஆதரவாளர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்..

புத்தரின் பெயரால் தற்போது நிகழும் ராஜபக்ஷேயின் மத்திய பிரதேச விஜயத் திற்கு ஏற்பாடு செய்ததும் இதே கும்பல் தான்....!

பிகு:தற்போது இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆண்டாலும் மத்திய அரசு இலங் கைக்கு அனுப்பிய குழுவிற்கு சுஷ்மாவை தலைவராகப் போட்டதும், பாஜக இலங்கை அரசுடன் நெருங்கி வருவதும் இலங்கை அரசின் ராஜ தந்திர நடவ டிக்கைகளின் ஒரு அங்கமே ..

இலங்கை அரசின் குறிப்பறிந்து அதற்கேற்ப ஒத்து ஊதுகிறது கொழும்பில் இயங்கும் இந்திய தூதரகம் ..

அதாவது நாளை காங்கிரஸ் போய் பாஜக இந்தியாவில் ஆட்சிக்கு வந்தாலும் இந்திய அரசு இலங்கையிடம் அனுசரணையுடன் நடந்து கொள்ளவே இந்த ஏற்பாடு ..

ஷர்மிளாவும் அவரது சகாக்களும் தங்கள் கஜானாவை நிரப்ப வேண்டி தமிழ் மகக்ளுக்கு எதிராக செய்துவரும் இத் தகைய மோசடித்தனங்களை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்...

Read more: http://viduthalai.in/page4/81270.html#ixzz33LDNWt3I

தமிழ் ஓவியா said...


இவர்தான் மோடி


குஜராத்தில், குஜராத்தி மொழியை அந்த மாநில மக்களிடம் இருந்து அகற்றி குஜராத் மக்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை நீக்கி, இந்துத்துவா மாநிலமாக மாற்றி இந்தியைத் திணித்த பெருமை, தற்போதைய மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடியையே சாரும்.

தன் தாய்மொழி மீது அளவு கடந்த பற்றுக் கொண்டு குஜராத்தியில் கையொப்பமிட்டு அதன் மூலம் தாய்மொழிப் பற்றை மக்களிடம் ஊக்குவித்த காந்திக்கு கிடைத்த பரிசு. காலப்போக்கில் இப்படிப்பட்ட விசத்தை கலந்தது கூட அந்த மக்களுக்கு தெரியாது. தங்களது தாய்மொழி இந்தி தான் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படி பட்ட ஒரு தந்திரக்காரர் தான் மோடி. இந்த மோடித்துவா பற்றி தான் முற்போக்காளர்கள் கூறுகிறார்கள். மோடித்துவா மெல்ல மெல்ல தான் தன் வேலையை காட்ட ஆரம்பிக்கும். அதை உணரமுடியாது போனால் நமக்கும் அதே கதிதான். புரிந்துகொண்டவர்கள் தப்பித்துகொள்வார்கள்.

- பரணீதரன் கரியபெருமாள்

Read more: http://viduthalai.in/page5/81273.html#ixzz33LDyu0QF

தமிழ் ஓவியா said...


சர்க்கரை வியாதிக்கு இயற்கை தரும் நிவாரணம்


இரண்டாம் ரக சர்க்கரைவியாதி மற்றும் இன்சுலின் தடுப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒமேகா - 3 என்ற கொழுப்பு அமிலத்தில் இருந்து பெறப்படும் மூலக்கூறு ஒன்று பெரும் உதவி புரியக்கூடும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த மூலக்கூறு சர்க்கரை வியாதிஉடையவர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர்கள் ஏற்கனவே இறங்கிவிட்டனர். இந்தஇயற்கை மூலக்கூறுக்கு அவர்கள்டிஎக்ஸ்(பிடிஎக்ஸ்) என்று பெயரிட்டுள்ளனர்.

மனித தசைஉயிரணுக்களில் இண்டர்லூகின் 6 (ஐஎல்-6) எனப்படும் வேதியல் பொருளை உற்பத்தி செய்து வெளியில் பரவவிடுவது இதன் முக்கிய செயல்களில்ஒன்றாக இருக்கும். இந்த ஐஎல்- 6 உற்பத்தி அதிகரிப்பு முக்கியமானதாகும்.

இது ரத்த ஓட்டத்தில் கலந்தால், ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவைக் கட்டுப்படுத்த இரண்டு வழிகளில் உதவி புரிகிறது.முதலாவதாக, குளுகோஸ் உற்பத்தியைக் குறைக்குமாறு இது கல்லீரலுக்கு உத்தரவிடுகிறது.

இரண்டாவதாக தசை உயிரணுக்கள் பயன்படுத்தும் குளுகோஸின் அளவை அதிகரிக்க வேண்டுமென்று நேரடியாக தசை உயிரணுக்களுக்கு கட்டளையிடுகிறது. இந்த இரண்டும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றுநிறைவேற்றப்பட்டால், ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவுகுறைந்து விடும்.

இது இரண்டாம் ரக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும். உடற்பயிற்சியால் உருவாகும் விளைவுகளை இந்த இயற்கை மூலக்கூறு உருவாக்குகிறது என்ற போதும், உடற்பயிற்சிக்கு இது பதிலியாகவோ, மாற்றாகவோ இருக்க முடியாது என்று பேராசிரியர் ஆண்ட்ரே மாரெட் கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page6/81274.html#ixzz33LEc1XEc

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களின் அகங்காரம் அடங்கி விட்டதா?

The Times of India (28.8.2010) ஒரு தலைப்புச் செய்தியை வெளியிட்டு இருந்தது. Ignored by Political Parties and Denies Welfare, Large sections of a Traditconally Elite in Poverty Brahmins on the Margins, Fight for survival என்று தலைப்பிட்டிருந்தது.

படித்தவர்கள் என்று கருதப்படக் கூடிய பார்ப்பனர்கள் இன்றைக்கு ஏழ்மையில் உழலுகிறார்கள். அரசியல் கட்சிகளால் உதாசினப்படுத்தப்படு கிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

இதுபற்றி திருவாளர் சோ ராமசாமி யிடம் கேள்வி எழுப்பிய போது Brahmins are not wanted in Tamilnadu Beyond that I Do not want to comment என்று ஆதங்கத் தில் வெறும் போதிய சொற்களால் பதில் சொன்னார்.

பார்ப்பனர்கள் தமிழ் நாட் மக்களால் விரும்பப்பட்டவில்லை; இதற்குமேல் எதையும் சொல்ல நான் விரும்பவில்லை என்று சலித்துக் கொண்டார்.

தன் பக்கம் நியாயம் ஏதாவது இருந்தால் எகிறிப் பேசி இருப்பார்கள். இந்தப் பிரத்தியட்ச நிலையைத் தன் சாமர்த்தியமான லியாக்கியானத்தால் தூக்கி நிறுத்தக் கூடியவர்தான் ஆனாலும் அதற்குரிய நியாயமான அறிவுப் பூர்வ மான சங்கதிகள் சரக்குகள் அவர் வசம் இல்லை. எனவே தான் அவ்வாறு அவர் கூற நேர்ந்தது.

சோவின் இந்தப் பதிலைப்பற்றி வாச கர் ஒருவர் கல்கிக்கு எழுதிக் கேட்டார்.

கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்று துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி.

கல்கி பதில்: பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது.

சமுதாய நீரோட்டத் தில் தங்களையும் அவர்கள் இணைத்துக் கொண்ட நிலையில் அவர்களை ஒதுக்கு வதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுத தோன்றியிரு ப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப் பிரிவினை ஆபத்து.
(கல்கி 19.9.2010 பக்கம் 30)

சோவின் பதிலுக்கும் கல்கியின் பதிலுக்கு இடையில் நெளியும் வேறு பாட்டைக் கவனிக்கவேண்டும்.

பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் விரும்பப்படவில்லை என்பது சோவின் அருள்வாக்கு. என்றால் அப்படியெல்லாம் அவர் வெறுக்கப்படவில்லை; அவர் களின் அங்காரம் என்றோ மறைந்து விட் டது என்று கல்கி மிகவும் விழிப்பாகப் பதில் கூறுகிறது.

பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப் பட்டு விட்டனர் என்று சொன்னால் அதனுடைய பார தூர விளைவு வேறு விதமாப் போய் விடுமே!

அதே நேரத்தில் கல்கிக்கு நமது கேள்விகள் உண்டு. பார்ப்பனர்கள் உயர் ஜாதியிரன் என்ற அகங்காரம் மறைந்து விட்டது உண்மையா?

அனைத்து ஜாதியினக்கும் அர்ச்சகர் உரிமையுண்டு என்று ஒரு சட்டமன்றம் ஒரு மனதாகத் தீர்மானம் செய்தால் சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லுகிறார்களே பார்ப் பனர்கள் இதுதான் அவர்கள் ஜாதி ஆணவத்திலிருந்து அகன்று விட்டனர் என்பதற்காக அடையாளமா?

சென்னை நாரதகானா சபையில் தாம்ப் ராஸ் எனப்படும் பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந் தது என்ன? ஆண்டவனுக்கு மேல் பிரா மணர் என்று பேசினாரா இல்லையா?

ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி அவிட் டம் என்ற பெயரால் பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதன் தாத்பரியம் என்ன? தங்களை தூர ஜாதி - இரு பிறவியாளர்கள் என்று வெளிப்படுத்திக் கொள்வது தானே!

திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ எடையில் பூணூல் செய்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அணிவித்தாரே - இது கடவுளேயே தங்கள் பிராமணர் ஜாதிக்குள் அடைக்கும் ஆவ ணம் அல்லவா டி.எம். கிருஷ்ணா இந்து ஏட்டில் குறிப்பிட்டு இருப்பதை வரவேற் கிறோம் - ஏன் பாராட்டவும்கூடச் செய்வோம்.

Read more: http://viduthalai.in/page7/81277.html#ixzz33LEsjNYc

தமிழ் ஓவியா said...


அபாயம்தலைக்குமேலே!


மேற்கு அண்டார்க்டிக்கா பனிப்படுகைகள் நொறுங்கி வருகின்றன. அபாயம் வெகு தொலை வில் இல்லை. 1973 முதல் இந்த கேள்வி எழுப்பப் பட்டு வருகிறது. மேற்கு அண்டார்க்டிக்காவில் உள்ள பனிப்பாறைகளின் தொடர்ச்சி சிதைகிறதா என்ற கேள்வியை ஜியோபிசிக்கல் ரிசர்ச் இதழ் இந்த கேள்வியைஎழுப்பியது.

இது பற்றி ஆராய்ச் சியாளர்களிடம் முணுமுணுப்பு இருந்தது. அண்மையில் வெளியான இரு ஆய்வு அறிக் கைகள் இந்த கேள்விக்கு திட்டமாக ஆம் சிதைகிறது என்று கூறியுள்ளன. இவர்கள் ஆறு பனிப்படிவங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்.

இவை ஒட்டு மொத்தமாக உருகி விட்டால் கடல்மட்டத்தின் உயரம் சுமார் 1.2 மீட்டர்கள் உயரும் என்றும் அந்த அறிக்கையில் கூறுகிறது. 2100ஆம் ஆண்டில் கடல்மட்ட உயர்வு குறித்து சர்வதேச பருவநிலைமாற்றகுழு நிர்ணயித்த அளவைக்காட்டிலும் இது இரண்டு மடங்காகும்.

இது போன்ற அபாயமான விளைவுகளை இந்த அறிக்கை கூறவில்லை என்ற போதும், அவர்கள் கூறும்தகவல் கவலை அளிப்பதாகும். பைன் தீவுகள் பனிப்படிவம் கடலடி பனிப்பாறைகளோடு ஒன்றியிருந்த பகுதி கடலுக்குள் 1992 முதல் 2011ம் ஆண்டுக்குள் 31 கி.மீ. சுருங்கி விட்டது என்றும் த்வைட்ஸ் பனிப்படிவங்கள் 14 கிலோமீட்டர் பின் வாங்கியுள்ளன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. தரையோடு இணையும் பகுதி சுருங்குகிறது என்றால் அவை ஒரு தொடர் நிகழ்வாகவே இருக்கும்.

இப்பனிப்படிவங்கள் திரும்பப்பெற முடியாத இழப்பு என்று பனிப்படிவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இது இழப்பு மட்டும் அல்ல. எதிர்காலத்துக்கு விடுக்கப்படும் அபாயமணி என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page7/81276.html#ixzz33LF0lKWI

தமிழ் ஓவியா said...


எங்க முத்து மாரியம்மா...


- இரா. கண்ணிமை

மாரியம்மனை தமிழ்நாட்டின் கிராம தேவியாக்கி - அவளின் வரலாறு தெரியா விட்டாலும், ஆடிப்பாடி ஆர்ப்பாட்டமாக அவளுக்கு விழா கொண்டாடி வருவதை எங்கும் காணலாம்.

மாரியம்மாளின் வரலாற்றை பல் வேறாக சொல்வதில் இதுவும் ஒன்று.

கருவூர் பெரும் பறையன் மகள் ஆதி என்பவளை பேராழி முனியின் மகனான பகவன் என்பான் மனைவியாக்கிக் கொண் டானாம். பகவன் - சாதியில் பார்ப்பானாம், ஆதி என்பவள் பறைச்சி யுமாதலால் - இவ்விருவரும் மற்றவர் களால் புறக் கணிக்கப்பட்டு ஊரிலே பிச்சையிரந் துண்டு நாட்டிலே வாழ்ந்தார்களாம். இவர்களுக்கு நான்கு பெண்களும், மூன்று ஆண்களும் பிறந்தார்கள் இவர்கள் உப்பை, உறுவை அவ்வை, வள்ளி, அதிக மான், கபிலர், வள்ளுவர் என்றழைக்க பட்டனர்.

உப்பை: ஊற்றுக்காட்டிலே வண்ணார் வளர்த்தனர். இவளே எங்கும் கிராம தேவதையாய் போற்றி வணங்கப்படும் தற்கால மாரியம்மன்.

உறுவை: இவளை சாணார் வளர்த் தனர். அவ்வை: இவள் நரப்புச் சேரியில் அல்லது சேரி நரப்பில் நரப்புக் கருவி யோர் சேரி பாணரிடத்தில் வளர்ந்தாள்.

வள்ளி: இவள் மலைச்சாரலில் குறவனிடத்தில் வளர்ந்தாள்.

அதிகமான்: ஆரூரிலே அரசனாயிருந்த அதிகமான் வீட்டில் வளர்ந்தான்.

கபிலன்: ஆரூரிலே பார்ப்பனர் வீட்டில் வளர்ந்தான்.

வள்ளுவர்: தொண்டை மண்டலத்து மயிலாப்பூரில் - பறையரிடத்தில் வளர்க் கப்பட்டான்.

இவ்வேழு பேரில் ஆதி என்னும் பறைச்சி வயிற்றில் முதல் பிறந்ததும் வண்ணார் வீட்டில் வளர்ந்தவளுமான உப்பை என்பவள் பறைச்சி வயிற்றில் பிறந்ததால் வெட்டியாரப் பறையனுக்கே மணமுடித்து கொடுத்தார்.

அக்காலத்தில் உப்பைக்கு வைசூரி நோய் கண்டு உடலெங்கும் புண்ணாகி நாற்றமெடுத்து ஈக்கள் மொய்த்தன.

அவளின் கணவனான வெட்டியான் வறிய நிலையில் இருந்ததால் கட்ட ஆடைகூட இல்லாதவளாய் வேப்பந் தழைகளை அவளுக்குக் கீழே பரப்பி - அதையே போர்வையாய் மூடி - பாது காத்து ஊர் ஊராய் சுற்றி பிச்சையெடுத்து வாழ்ந்தான்.

அவளின் நோய் தெளிந்த பின் இருவ ரும் பிச்சைக்குப் போகும் போது இவள் புண்களில் மொய்க்கிற ஈக்களின் தொல்லை தாங்காமல் வேப்பந் தழை களாலேயே அவற்றை ஓட்டி - விசிறிக் கொண்டே வீடு வீடாகப் பிச்சையெடுத்து காலத்தைக் கழித்தனர். பிறகு அந்நோ யாலேயே அவள் இறந்து போனாள். ஊரார் அவளை அம்மை நோய் கண்ட வளானதால், உப்பை என்னும் பெயரை மாற்றி மாரியம்மன் என்ற பெயரைச் சூட்டி சமாதி கட்டி வைத்து கிராம தேவதையாக வணங்கி னார்கள். இப் பழக்கம் எனும் நோய் இன்றைய வரையில் தொடர்கிறது.

உப்பை என்ற மாரியம்மனின் வரலாறு உண்மையென்றால் நோய் வாய்ப்பட்டு முடிந்து போன ஒரு மனித பிறவியை தேவியாக்கி வணங்குவதால் எந்த நன்மையாவது கிடைக்குமா? இதில் என்ன நியாயம் உண்டு? இது அறியாமையும் அஞ்ஞானமும் அல்லவா?

கடந்த காலங்களில் மனிதர்க்குள் கண்ட கொடிய நோய்களையும் எல்லாம் கடவுளா கவே நம்பி - பின்னும் வராமலிருக்க வணங்கினார்கள் வாந்தி, பேதி, காலரா நோய்கள் அனைத்தும் காளிதேவி என நம்பினார்கள். ஆங்கில மருத்துவத்தில் ஆத்தா வார்த்தது அல்ல, ஆத்தா ஊத்தியது அல்ல என்பதுதெளிவாகி விட்டதே.

இந்த மாரியம்மன் அல்லாமல் பரமேஸ்வரி- மகேஸ்வரன் மனைவி, மனோன்மணி - சதாசிவன் மனைவி,

ருக்மணி - கிருஷ்ணன் மனைவி,

சீதை - ராமன் மனைவி,

ராதை - கிருஷ்ணன் வைப்பாட்டி,

காமாட்சி - ஏகாம்பரன் மனைவி,

விசாலாட்சி - விசுவநாதன் மனைவி,

அழகம்மை - கச்சாயை மனைவி,

உண்ணாமுலை - அருணாசலம் மனைவி,

மீனாட்சி - சொக்கநாதன் மனைவி,

தயிலி - வைத்தி மனைவி,

அலமேலு - வெங்கடாசலம் மனைவி,

பெருந்தேவி - வரதராசன் மனைவி,

கனகவல்லி - வீரராகவன் மனைவி,

ஆகியோரும் பொன்னி, குள்ளி, சங்தி, ஷீரி, நாகி, காளி, பாலி, கோலி, சீயான் முதலிய புது தேவதைகளையும் கன்னிமார் என்னும் தேவியர்களையும் - மக்கள் கண்மூடித்தனமாய் வணங்குகிறார்கள்.

இதைப்பற்றி அகத்தியர் சொல்வதைக் காணுங்கள்.

முகிவாகச் செய்துவிட்டேன்
மைந்தா, மைந்தா!
முப்பதுக்குள் ளடக்கிவிட்டேன்
முன்னூல் பார்த்து
அகிலமதில் விரித்துவிட்டேன்
இந்த நூலை;
யார்தானு மெந்தனைப்போ
லறைய மாட்டார்
பகிரதியுங் கலைமகளும்
வாணி தானும்
பார்வதியு மறுமுகனும்
பல பேர் தானும்
சகியாத மூர்த்திகளா
யிவர்க டானும்
சக்திசிவ விருப்பிடமோ
சாற்று வீரே!

மேற்கூறிய தேவர்களும் தேவியர் களும் வணக்கத்திற்குரியவர்கள். கடவு ளர்கள் அல்ல என்கிறார் அகத்தியர்.

சூத்திரச்சி மாரியம்மாளின் சுயமரி யாதை சொல்லி விட்டோம். இதைக்கேட்ட பிறகு எங்க முத்து மாரியம்மா! முத்து மாரியம்மா! எனப்பாடிப் பாடி -மாரியம் மனுக்கு கூழ் ஊற்றப் போகிறீர்களா?

Read more: http://viduthalai.in/page8/81278.html#ixzz33LFP0RUT

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி கந்தலாகிறது! சாமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் உள்பட 3 பேர் பலி


செஞ்சி, மே 31-செஞ்சியை அடுத்த ஜெயங் கொண்டான் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கோவிலில் 3 நாள் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் 2ஆவது நாளான நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர்.

திருவிழாவையொட்டி இரவில் மாட்டு வண்டியில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை வைத்து சாமி ஊர்வலம் நடந்தது. அந்த வண்டியில் மாடுகள் பூட்டப்படாமல், இரும்பு கம்பியை மாட்டி அதனை பக்தர்கள் இழுத்து சென் றனர். மேல் எடையாளம் செல்லும் வழியில் சாலை யின் குறுக்கே 3 உயர் மின் னழுத்த கம்பிகள் சென்றன. எனவே சாமி ஊர்வலத்தின் முன்பு சென்றவர்கள், நீண்ட தடுப்பு கம்புகளை வைத்து அந்த மின்கம்பி களை உயரே தூக்கி சிலை வந்த தேரை முன்னே இழுத்தனர்.

ஆனால், எதிர்பாராத விதமாக ஒரு மின்கம்பி சிலை தேரின் உச்சியின் மீது பட்டது. மறுவிநாடியில் சாமி தேரில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தேரை இழுத்து சென்ற அதே பகுதியை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர்கள் யோகேஷ் (வயது 13), ஒட்டுநர் ராசு (32), கல்லூரி மாணவர்கள் சதீஷ், பிரபா கரன் ஆகியோர் மீது மின் சாரம் பாய்ந்தது.

விபரீதத்தை உணர்ந்த பக்தர்கள் சிலர் மரக்கட் டையால் தட்டிவிட்டு காப் பாற்ற முயன்றனர். எனி னும் யோகேஷ், ராசு, சதீஷ், பிரபாகரன் ஆகிய 4 பேரும் உடல் கருகினர். சதீசின் ஒரு கால் துண்டானது. மின் சாரம் தாக்கியதை அறிந்த வுடன் தேருக்கு அருகில் சென்ற பக்தர்கள் அலறிய வாறு ஓட்டம் பிடித்தனர். இதனால் ஊர்வலத்தில் கூச்சல்குழப்பம் உருவாகி பரபரப்பு ஏற்பட்டது.

உடல் கருகிய 4 பேரையும் பிற பக்தர்கள் மீட்டு செஞ்சி அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழி யிலேயே பள்ளி மாணவன் யோகேஷ் பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள 3 பேரும் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். ஆனால் தீவிர சிகிச்சையளித் தும் பலனின்றி ராசு உயிரி ழந்தார்.

பின்னர் சதீசையும், பிரபாகரனையும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கள் 2 பேருக்கும் மருத்து வர்கள் தீவிர சிகிச்சையளித் தனர். எனினும் பலனின்றி அவர்களில் ஒரு மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் விவரம் இன்னமும் ஊர்ஜிதப் படுத்தப்படவில்லை.

மின்சாரம் தாக்கி பலி யான ராசுவுக்கு வருகிற 2ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் பற்றி அறிந்த வுடன் செஞ்சி துணை காவல்துறைக் கண்காணிப் பாளர் முரளிதரன், செஞ்சி காவல்துறைக் ஆய்வாளர் மருது மற்றும் காவல் துறையினர் ஜெயங்கொண் டான் கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத் தினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சாமி ஊர்வலத்தில் நடந்த அசம்பாவிதத்தால் திருவிழா பாதியுடன் நின் றது. திருவிழாவில் 3 பேர் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Read more: http://viduthalai.in/e-paper/81326.html#ixzz33LFjy0Cm

தமிழ் ஓவியா said...

108 ஆம்புலன்ஸ் வந்தது எப்படி?

25.2.2011 அன்று கோவையிலுள்ள கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் எனும் சிறந்த விருதினை மருத்துவர் பக்தவத்சலம் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

அதே விழாவில் இன்னொரு அறிஞருக்கும் விருது வழங்கப்பட்டது.



அவருடைய பெயர் டாக்டர் வெங்கட் செங்கவல்லி. அய்தராபாத்தைச் சேர்ந்த இவர் நெருக்கடியான ஒரு நேரத்தில் அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றி ஆராய்ந்து பல பட்டங்களைப் பெற்றவர். அய்தராபாத்தில் “Emergency Management And Research Institute” என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து திறம்படப் பணியாற்றி வருகிறார்.

அவ்விழாவில் பேசிய வெங்கட் செங்கவல்லி, நான் அய்தராபாத்தில் நெருக்கடி நிலையில் நம் ஆளுமைத் திறன் _ ஆராய்ச்சி என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருங்காலத்தில் எனக்கு, ஆம்புலன்சு வண்டிகளை நெருக்கடி நிலையில் எப்படி விரைவாகப் பயன்படுத்திக் கொள்வது, உயிருக்குப் போராடுபவர்களைப் பாதுகாப்பாக உடனடியாக எப்படி மருத்துவமனைகளில் கொண்டு சேர்ப்பது என்பதை ஆராய வேண்டும் என்று தோன்றியது. தீயணைப்பு நிலையத்திற்கு நிலையான ஒரு தொலைப்பேசி எண் இருப்பதைப் போல, அவசர போலீஸ் உதவிக்கு ஒரு எண் இருப்பதைப் போல ஆம்புலன்சுக்கும் ஒரு நிலையான எண் வேண்டுமே என்று சிந்தித்தேன். அது இந்தியா முழுமைக்குமான ஒரு பொது எண்ணாக இருக்க வேண்டும். 108 என்ற எண் பொருத்தமானதாக எனக்குத் தோன்றியது. 108 என்ற இந்த எண்ணை அழைத்தால் அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்சு வண்டி முதலுதவி வசதிகளுடன் வந்து நிற்க வேண்டும்.

இது தனியார் துறையில் இடம்பெற இயலாது. தீயணைப்புத் துறையைப் போல அரசாங்கம்தான் இதனை ஏற்று நடத்த வேண்டும். என்று தோன்றியது என்றும் சொல்லும் அவர், திட்டத்தைச் செம்மையாக வரையறைப்படுத்திக் கொண்டு முதலில் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியைப் போய்ப் பார்த்தார். திட்டத்தை நன்கு படித்துப் பார்த்த ஆந்திர முதலமைச்சர், அதனை நடைமுறைப் படுத்துவதென்று முடிவு செய்தார். அடுத்தவாரம் வந்து தம்மைச் சந்திக்குமாறு வெங்கட் செங்கவல்லியிடம் ஆந்திர முதலமைச்சர் கூறியனுப்பி விட்டார். அடுத்த நாள் செங்கவல்லிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டி விமான விபத்தில் காலமாகிவிட்டார்.

மனந்தளராமல் தமது 108 ஆம்புலன்சு திட்டத்தை மராட்டிய முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தார். சில நாட்களிலேயே மராட்டிய முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தது. மராட்டிய முதலமைச்சரின் மனம் ஏற்குமாறு நல்ல முறையில் விளக்கமளித்துவிட்டு வெற்றிப் புன்னகையோடு வெளியில் வந்தார். இன்னும் சில நாட்களில் மராட்டிய மாநிலத்தில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழப் போகிறது என்று ஆவலோடு காத்திருந்தார் வெங்கட் செங்கவல்லி. ஆனால் அவர் எதிர்பார்த்த மாற்றம் வரவில்லை; மாறாக மராட்டிய முதலமைச்சரையே அங்கு மாற்றிவிட்டார்கள்! இப்போது புதிய முதலமைச்சர்!

மனம் உடைந்துபோன மருத்துவர் எவ்வளவு அருமையான திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறோம்; நடைமுறைக்கு வராமல் காலம் தள்ளிக் கொண்டே போகிறதே என்று வருந்தினார்.

கடைசியாக, இனி நாம் பார்க்க வேண்டிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிதான் என்று எண்ணிய வெங்கட் செங்கவல்லி, அவரிடம் விளக்கியுரைத்துவிட்டால் 108 எனும் இத்திட்டம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்ற நன்னம்பிக்கையோடு கலைஞரைப் பார்த்தார். கலைஞரைக் கவர்ந்தது 108! வெங்கட் செங்கவல்லி வெற்றி பெற்றார்.

கலைஞர் ஆட்சியில், தமிழ்நாட்டில் எண்ணற்றோர் உயிரைக் காப்பாற்றி ஒளியூட்டிய 108 ஆம்புலன்ஸ் வந்தது இப்படித்தான்.

- பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து

தமிழ் ஓவியா said...

அணைத்துக் கொண்டு அல்ல; அணைத்துவிட்டுப் படுங்கள்

நவீன திறன்பேசிகள், குளிகைகள், கையடக்கக் கணினிகள் இன்று பெருகிப் போயுள்ளன. பகலெல்லாம் கட்டிக் கொண்டும், தூக்கிக் கொண்டும் அலைந்தாலும், இரவிலும் அவற்றை அணைத்தே பலர் உறங்குகின்றனர். படுக்கைக்கு அருகிலேயே வைத்து உறங்கும் பழக்கமும் இருக்கிறது. குறுஞ்செய்திக்காகவோ, அல்லது வேறு ஏதேனும் நினைவுறுத்தலுக்காகவோ அடிக்கடி ஒளியைப் பாய்ச்சும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும் என்கிறது ஓர் ஆய்வு.

இரவா, பகலா என்று அனிச்சையாக நாம் உணர்வதில் வெளிச்சத்தின் பங்கு முக்கியமானது. பொதுவாகவே, மாலை நேரம் ஆகஆக புறச்சூழலில் சிவப்பு நிறம் அதிகரிக்கிறது. கண்ணின் ஆழப்பகுதியில் இருக்கும் செல்களில் உள்ள மெலனாப்சின் என்ற புரோட்டீன் மீது இந்த சிவப்பு நிறம் விழும்போது, பொழுது போய்விட்டது. படுக்கப் போ என்று அந்த செல்கள், மூளைக்கு உத்தரவிடுகின்றன. ஆக, இரவு நேரம் என்றால் கண்ணில் சிவப்பு நிற ஒளிதான் படவேண்டும்.

இந்த அமைப்பை திறன்பேசிகள் குளறுபடி செய்கின்றன. அவற்றில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி தொடர்ந்து கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தால் இன்னும் இரவு நேரம் வரவில்லை என்ற தவறான தகவலைத்தான் கண் செல்கள், மூளைக்குக் கடத்தும். ஏனென்றால், நீலநிறம் என்பது அதிகாலை நேரத்துக்கானது. தூங்கியது போதும் என்று படுக்கையில் இருந்து நம்மை எழுப்பிவிடுவதற்கானது.

எனவே, தொந்தரவு இல்லாத ஆழ்ந்த உறக்கம் கிடைக்க வேண்டும் என்றால் திறன்பேசிகளையும், குளிகைகளையும் அணைத்துவிட்டுப் படுங்கள். இல்லாவிட்டால் கண்ணில் படாமல் தொலைவிலாவது வைத்துவிட்டுப் படுங்கள் என்கிறார் இதுகுறித்து ஆய்வு நடத்திய அமெரிக்க வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த பிரையன் ஸோல்டோவ்ஸ்கி.
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகள்

அமெரிக்க மண்ணிலே சிகாகோவிலே 1988லே தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வந்திருந்த தமிழ் ஆசிரியை சிறப்பாகச் சொல்லிக் கொடுத்தார்.

தமிழ் என்றால் முடியாது என்ற வார்த்தையையே அறியாத அமெரிக்கத் தமிழ் நெப்போலியன் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் பாபு அவர்களின் அயராத உழைப்பால் இன்று நானூறுக்கும் மேற்பட்ட ஏழு பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன. அன்றிருந்த ஆசிரியைகள் கலைச்செல்வி கோபாலன், கண்ணகி விசுவநாதன், சரோ இளங்கோவன் போன்றோரின் ஆர்வத்தாலும், அன்பாலும் குழந்தைகள் மழலைத் தமிழ் பேசிய நிலை மாறி, இன்று அழகிய தமிழ் உச்சரிப்புடன், ஆர்வத்துடன் பேசி, பாடி, நடித்து, பல போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சி பொங்குகின்றது. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த அய்ந்து வயது சிறுவன் நூறு திருக்குறள்களை ஒப்புவிக்கின்றான். பல சிறுவர்கள், சிறுமியர்கள் 200, 300, 700 என்று ஒப்புவிக்கின்றனர். அவர்களாகவே திருக்குறள் பற்றிக் கதைகள் சொல்கின்றனர்.

இன்று நடந்த ஆண்டு விழாவிலே பல போட்டிகள். முழுவதும் தமிழிலேயே ஆங்கிலம் கலக்காமல் கதை, வார்த்தைகள், பழமொழிப் போட்டிகள், கிராமிய கலை, பண்பாட்டுப் பாடல்கள், பொங்கலின் சிறப்புகள் என்று குழு குழுவாக அவர்கள் அளித்த நிகழ்ச்சிகள் பாராட்டின் உச்சத்தைத் தொட்டன.

இது இல்லினாய் மாநிலத்தின் கல்வித் திட்டத்தில் குழந்தைகள் படிப்புத் தேவையில் இணைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகின்றது.

இன்று பல தமிழ்ச் சங்கங்களும் அமெரிக்காவின் அத்துனைப் பெரு நகரங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் சனி, ஞாயிறுகளில் நடப்பதும், குழந்தைகளின் தமிழ் அறிவும், தவறில்லா உச்சரிப்பும் தாத்தா பாட்டிகளைப் பெருமையில் ஆழ்த்தி விடுகின்றன.

- மருத்துவர் சோம.இளங்கோவன்

தமிழ் ஓவியா said...

நாடகம் ஆரம்பம்


தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு ஒரு நாளைக்கு பல முறை உடைமாற்றுவதும், அந்தந்த பகுதிக்கேற்ற தொப்பிகள், உடைகள், வண்ணங்கள் பூசிக் கொண்டு தோன்றி, அடிப்படையே இல்லாத உணர்ச்சிப்பூர்வ வசனங்களாகப் பேசி வென்றுவிட்ட மோடியின் நாடகம் அடுத்த காட்சிக்குச் சென்றுள்ளது. காட்சியின் திரைவிலகியதும், நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறார் ராஜபார்ட் மோடி. முதல் அடி வைப்பதற்குள் கீழே விழுகிறார். ஏதும் சறுக்கிவிட்டதா என்று எல்லோரும் பதற்றத்துடன் பார்க்க, நாடாளுமன்றப் படிகளை விழுந்து வணங்குகிறார் மோடி. அத்தனை கேமராக்களும் சுற்றி சுற்றிப் படமெடுக்க, அவற்றின் பிளாஷ் ஒளியில் காட்சி முடிந்து, நாடாளுமன்ற மைய மண்டபத்துக்குள் தொடர்கிறது அடுத்த காட்சி. கண்ணீரும் கம்பலையுமாக மோடி தொடங்கிய நாடகத்தில் வாழ்ந்து கெட்ட துணை கதாபாத்திரமான அத்வானியும் சேர்ந்து கொள்ள 1960 களில் அழுவாச்சி படம் பார்த்த எபெக்டில் ஒட்டுமொத்த இந்தியாவும் கைக்குட்டை தேடுகிறது.

இது ஒருபுறம் என்றால், பக்கத்து செட் நாடகத்தில் ராஜபார்ட்டான ராஜபக்சேவுக்கு, மோடி விடுத்த அழைப்பிற்கு தமிழ்நாடெங்கும் எதிர்ப்பு கிளம்ப, நாங்கள் விடுத்த அழைப்பு நெய்யில் பொறித்தது என்று விளக்கம் கொடுத்தார் பா.ஜ.க.வின் ஒரே தமிழ்நாட்டு எம்.பி. நாடகத்த்தில் தன் பங்கைச் சிறப்பாகச் செய்து பேர் வாங்க வேண்டும் என்ற துடிப்பு ராஜபக்சேவுக்கு இருக்காதா? உடனடியாக சிறையில் உள்ள இந்திய மீனவர்களையெல்லாம் விடுதலை செய்யப் போவதாக அவரும் அறிவித்துள்ளார். அதற்காக ஓநாய் சைவமாகிவிட்டது என்று பொருளல்ல. அப்புறம் அடுத்த முறை இந்தியா வரும்போது நல்லெண்ணத்துக்காக விடுவிக்க ஆள் வேண்டுமே! மீண்டும் கைதுகள் நடக்கும்; துப்பாக்கிச் சூடுகள் நடக்கும். கைது செய்யப்பட்டோர் விடுவிக்கப்படலாம். ஆனால், கொன்றவர்களை என்ன செய்வார்? சொல்லமுடியாது சூப்பர்மேனாக கேதர்நாத்தில் குஜராத்திகளை மட்டும் மோடி காப்பாற்றிய காட்சி போல், சிங்களர்களால் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களை மட்டும் சாவித்திரியாக வேடமேற்று மீட்டுவந்தாலும் வரலாம். யார்கண்டா? இந்த அய்ந்தாண்டில் இன்னும் என்னென்ன காட்சிகள் அரங்கேற இருக்கின்றவோ?

தமிழ் ஓவியா said...

நாடாளுமன்றத்தில் பெண்கள்


அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 61 பெண்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

543 உறுப்பினர்ககளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் 15 தேர்தல்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் தேர்வாகியுள்ளனர்.

சுதந்திரத்திற்குப் பின் நடைபெற்ற முதல் தேர்தலில் (1952) 5 விழுக்காடு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த 2009 தேர்தலில் 59 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

2014இல் தான் அதிகளவாக 11.3 விழுக்காடு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

33 விழுக்காட்டை நெருங்குவதற்கு இன்னும் எவ்வளவு காலமாகுமோ?

தமிழ் ஓவியா said...

பாராட்டத்தக்க பீகார்!
பாராட்டத்தக்க பீகார்!


மக்களவைத் தேர்தலில் பீகாரில் அய்க்கிய ஜனதா தளம் 2 இடங்கள் மட்டும் பெற்றமைக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவித்தார். எனினும் சட்டசபையைக் கலைக்கு அவர் கோரவில்லை. பதவி விலகல் முடிவைட் திரும்பப் பெற வேண்டும் என்று கட்சிக்குள் பலரும் கோரினாலும், அதில் உறுதியாக இருந்தார் நிதிஷ்.

தொடர்ந்து நடைபெற்ற அய்க்கிய ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான ஜிதன் ராம் மஞ்சி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவரான ஜிதன் ராம் மஞ்சி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. மொத்தம் 243 பேரைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் 117 இடங்களைப் பெற்றுள்ள அய்க்கிய ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் - 4, கம்யூனிஸ்டுகள்-1, சுயேட்சை-2 என நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற போதுமான இடங்களை மஞ்சி தலைமையிலான அரசு பெறும் என்றாலும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒரு முதல்வர் என்பதாலும், மதவாத சக்திகளை வீழ்த்தி, சமூகநீதியைக் காப்பாற்றவும் எங்களின் 21 சட்டப்பேரவை உறுப்பினர்களும் மஞ்சி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று அறிவித்த லாலு தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் சொன்னபடியே வாக்களித்து மொத்தம் 145 வாக்குகளுடன் நம்பிக்கை அளித்துள்ளது. இதை எதிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது பாரதிய ஜனதா. எதிரெதிர் திசைகளில் இருந்த லாலுவும், நிதிஷும் சமூக நீதித் தளத்தில் மறைமுகமாவேனும் கைகோர்த்திருப்பது நம்பிக்கைக் கீற்றைக் காட்டுவதாகக் கருதுகிறார்கள் சமூகநீதியாளர்கள்! இதைத்தான் நாடும் எதிர்பார்க்கிறது.

தமிழ் ஓவியா said...

மதத்தை மறுப்பதா? கர்ப்பிணிக்கு மரணதண்டனை தந்த மதம்


இங்கல்ல... சூடானில்!

மதத்தை மறுப்பதா?

கர்ப்பிணிக்கு மரணதண்டனை தந்த மதம்


சூடானில் மரியம் யாஹ்யா இப்ராகிம் (வயது 27) என்பவருக்கு 20 மாத வயதுள்ள ஆண்குழந்தை உள்ளது. தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆனால், அப்பெண்ணின் தந்தை குழந்தைப் பருவத்திலேயே பிரிந்துவிட்டார். தனக்குத் தெரிந்தவரை தான் ஒரு கிறித்தவர் என்றே கருதி வந்துள்ளார்.



அவர் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டார். இதனால், அவர் மதத்தை மறுத்தவராகக் குற்றம் சுமத்தப்பட்டார். மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துகொண்டதைச் செல்லாது என்று விபச்சாரக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு மீண்டும் அவருடைய மதத்துக்குத் திரும்புவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்தது. ஆனால் அவர் கிறித்தவர் என்று தன்னைக் கூறிவிட்டார். அவர் தந்தை ஓர் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அப்பெண்ணையும் இஸ்லாமியர் என்று நீதிமன்றம் கூறுகிறது.

சர்வதேச பொது மன்னிப்பு சபையின் சூடான் ஆராய்ச்சியாளர் மானர் அய்ட்ரிஸ் கூறும்போது, உண்மை என்னவென்றால், தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்பெண் அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப மதத்தைத் தேர்வு செய்துள்ளார். அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதால் மதத்தை மறுத்தார் என்று கூறியும், விபச்சாரம் செய்ததாகக் கூறியும் தண்டனைக்கு உள்ளாகி உள்ளார். மதத்தை மறுப்பது, விபச்சாரம் ஆகியவற்றைக் குற்றச் செயல்களாகக் கருதக்கூடாது. இச்செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் விதிகளை மீறி உள்ளது வெளிப்படையாகி உள்ளது என்று கூறுகிறார்.

மேலும் அவர் கூறும்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மரியத்தின் மனதளவிலான மத நம்பிக்கை, மத அடையாளத்தைக் கூறுவதால் மட்டுமே அவர் தண்டிக்கப்படக் கூடாது. நிபந்தனைகளின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே சர்வதேச பொது மன்னிப்பு சபையின் விருப்பமாகும். மனசாட்சிப்படி அவருடைய நம்பிக்கையை, மதத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் கருத்துச் சுதந்திரத்தைக் காண முடியவில்லை. இவை எட்டமுடியாத தொலைவில் உள்ளது. தனிப்பட்டவர் மீதான தண்டனை, அதுவும் மதம், நம்பிக்கைமீது தண்டனை இவை போன்ற அனைத்திலும் கருத்துச் சுதந்திரத்தை உள்ளடக்கியே இருக்கிறது என்றார்.
நீதிபதி அப்பாஸ் அல் கலீஃபா குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணான மரியம் யாஹ்யா இப்ராகிமிடம் இசுலாம் மதத்துக்குத் திரும்புகிறாயா என்று கேட்டபோது, நான் கிறித்தவர் என்று பதில் அளித்துள்ளார். அதன்பிறகே மரியத்துக்கு மதத்தை மறுக்கும் குற்றத்துக்கு மரண தண்டனையும், வேறு மதத்தவரைச் திருமணம் செய்துகொண்டதைச் செல்லாது என்று அறிவித்து, அதனால் விபச்சாரக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு நூறு கசை அடி தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானதை நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டு மதச் சுதந்திரத்தைக் கோரும் பதாகைகளுடன் முழக்கமிட்டவர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில வாரங்களாகவே அதிக சுதந்திரமும், சமுதாயம், பொருளாதார முன்னேற்றங்கள் வேண்டும் என்று கர்த்தூம் பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டு தொடர்ந்து போராட்டங்களைச் செய்து வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் சூடானிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், மனித உரிமை நசுக்கப்படுவதைக் கண்டித்தும் இசுலாமியத்தை முன்னெடுக்கும் அரசு நம்பிக்கையின்மீதான சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சூடான் அரசுக்குக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் தளபதி ஏ.டி.பி.

திராவிடர் இயக் கத்தைப் பற்றி குறை சொல் வதைச்சிலர் தொழிலாக்கிக் கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில அதிகப் பிர சங்கிகள், கேரளாவில் அதிகம் படித்து இருக் கிறார்களே. அதற்கெல்லாம் திராவிடர் இயக்கம் தானா காரணம்? என்று அதி மேதாவித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறியும் வருகின்றனர்.

ஒவ்வொரு மாநிலத் திலும் ஒவ்வொரு வகை யான சூழல் உண்டு. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கல்வி உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் யார்? போராடியவர்கள் யார்?

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக் கீடுக்கான ஆணைகளைப் பிறப்பித்தவர்கள் யார்? குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற முதல் அமைச்சர் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) வருணாசிரம நோக்கத்தை ஒழித்துக் கட்டிய தலைவர் யார்? இயக்கம் எது? என்று அடுக்கடுக்கான கேள்வி கள் உண்டு.

அரசு அமைந்தால் பள்ளிகளைத் திறப்பார்கள் - ஆனால் ராஜாஜி இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் 1937களில் 6000 கிராமப் பள்ளிகளையும் 1952இல் 8000 பள்ளி களையும் மூடினாரே - இது கேரளாவில் நடந்ததா? தமிழ்நாட்டில் தானே நடந் தது? அதனை எதிர்த் ததோடு - அதனைக் கொண்டு வந்த ஆச்சாரி யாரையே பதவியை விட்டு விரட்டினோமே - வரலாறு புரியாமல் உளறலாமா?

இன்று திராவிடர் தள பதி ஏ.டி. பன்னீர்செல்வம் பிறந்த நாள் (1888) அவர் தஞ்சாவூர் மாவட்டக் கழகத் தலைவராக (டிஸ் டிரிக்ட் போர்டு பிரசிடன்ட் 1924-1930) இருந்தபோது எத்தகைய கல்விச் சாத னைகளை முத்திரையாகப் பொறித்தார்?

உரத்தநாடு, இராசா மடம் ஆகிய இடங்களில் மன்னர்களால் கட்டப்பட்டு இருந்த சத்திரங்கள் முழுக்க முழக்கப் பார்ப்பன சிறு வர்களுக்குப் பயன்பட் டதை மாற்றி அமைத்தவர் அவர் தானே?.

திருவையாற்றில் ஒரு கல்லூரி - சமஸ்கிருத கல் லூரியாக மட்டும் இருந் ததை மாற்றி - தமிழ்ப் புலவர் பட்டப்படிப்புக்கும் வழி வகுத்து சமஸ்கிருதக் கல்லூரி என்றிருந்த பெயரை மாற்றி அரசர் கல்லூரி என்று புதுப் பெயர் சூட்டினாரே!

பார்ப்பனர்களுக்கு மட்டும் இருந்த விடுதியை அனைவருக்கும் பொது வானதாக மாற்றினாரே!

இதுதான் தமிழ் நாட் டுச் சூழல் - வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று உளற வேண்டாம்.

- மயிலாடன்

Read more: http://www.viduthalai.in/e-paper/81385.html#ixzz33RCrfZgl

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு றீரயில் கட்டணம் உயர்கிறது ,டீசலும் விலை ஏற்றம்


பழைய கள் புதிய மொந்தை!

தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு றீரயில் கட்டணம் உயர்கிறது
டீசலும் விலை ஏற்றம்

புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்

புதுடில்லி, ஜூன் 1- காங்கிரஸ் தலைமையி லான அய்க்கிய முற்போக் குக் கூட்டணியின் ஆட்சி மீது கூறப்பட்ட அத் தனைக் குற்றச்சாற்றுகளை யும், பிஜேபி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் தொடர்ந்து செய்யத் தொடங்கி விட் டது.

குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைச்பிடிப்பு; டீசல் விலையேற்றம், ரயில் கட்டண உயர்வு அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கி விட்டனவே!

25 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு!

தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்து அட்டூழியத்தை மீண்டும் காட்டியுள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை, பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதம ருக்கு அழைப்பு விடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது.

இதனால் நல்லெண்ண நடவடிக்கையாக 151 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதைப் பார்த்து இலங்கை அதிபர் ராஜபக் சேவும் தங்களது நாட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப் போம் என்று அறிவித்ததார். அதேபோல் இந்தியாவும் ஆந்திரா, ஒடிசா மாநில சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு அளித்த வாக் குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத் தியிருந்தார் என்றும் கூறப் பட்டது.

இந்த நிலையில் மீன் பிடித் தடைக் காலம் முடிந்த பின்னர் நேற்றுதான் மீனவர்கள் கடலுக்கு சென் றனர். பாக் ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற் படை திடீரென சுற்றி வளைத்து தாக்கியது. தமி ழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்து வீசி யது. மேலும் 25 மீனவர் களையும் கைது செய்து அவர்களது 6 விசைப் படகு களையும் சிறைப்பிடித்து சென்றுள்ளது ராஜபக்சே வின் கடற்படை.

ரயில் கட்டணம் உயர்வு

ரயிலில் அபாயச் சங்கிலி உண்டு - ஆபத்து காலத்தில் இழுத்து ரயிலை நிறுத்த லாம். ஆனால், ரயில் கட்டணத்தை உயர்த்தும் அபாயம் அல்லவா ஏற் பட்டு விட்டது? எதைப் பிடித்து இழுப்பது?

பிஜேபியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா - ரயில் கட்டணம் உயரும் என்று அறிவிப்புக் கொடுத்துள் ளார். பழைய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்த தவறி விட்டதாம் - அத னால் இந்த ஆட்சியில் கட்டண உயர்வாம்! ரயில் கட்டணத்தை உயர்த்தாதது பழைய ஆட்சியின் தவறாம் - எப்படி இருக்கிறது?

டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு

டீசல் விலை லிட்ட ருக்கு 50 காசுகள் உயர்த் தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சனிக் கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

மாநிலங்கள் விதிக்கும் வரிகள் சேர்க்கப்படாததால் இந்த விலை உயர்வு, மாநில வாரியாக வேறுபடும். எண் ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டது.

டீசலுக்கு அளிக்கப் படும் மானியத்தால் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பை குறைப்பதற்காக கடந்த காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு மாதந் தோறும் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தும் திட்டத்தை 2013ஆம் ஆண்டு கொண்டு வந்தது.

அந்தத் திட்டத்தின் அடிப்படையில், மத்தியில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசும் இந்த விலை உயர்வை மேற் கொண்டுள்ளது. இதனால் மாதந்தோறும் டீசல் விலை உயர்வுத் திட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த ஆண்டு ஜன வரி மாதம் முதல் 15 முறை டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது. அதன் மூலம் லிட்டருக்கு இதுவரை ரூ. 9.55 காசுகள் உயர்ந்துள்ளது.

Read more: http://www.viduthalai.in/e-paper/81389.html#ixzz33RD5P2U0

தமிழ் ஓவியா said...

சீமாந்திராவுக்கு அடிக்கிறது லாட்டரி சீட்!

திருப்பூர், ஜூன் 1- திருப்பதி ஏழுமலையான் என்ற கல் முதலாளிக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் சொத்துள்ளது. 11 டன் தங்க நகைகளும் உள்ளன. 4000 ஏக்கர் நிலமும் உள்ளது.

ஆந்திராவிலிருந்து தெலங்கானா, சீமாந்தரா பிரிந்து விட்டதால், அந்தக் கோயிலும் சொத்தும் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை ஏற்பட்டது. இச்சொத்துக்கள் தேவஸ்தானத்துக்கும், கோயில் அமைந்துள்ள சீமாந்திரா வுக்குமே சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொத்துக்கள் முடங்கிக் கிடக்கின்றனவே தவிர, பொது மக் களுக்கு எள் மூக்கு முனை அளவுகூடப் பயன் கிடையாது.

Read more: http://www.viduthalai.in/e-paper/81381.html#ixzz33RDXEzl8