Search This Blog

15.5.14

பார்ப்பனரல்லாதார்களில் அயோக்கியர்களைக் கண்டுபிடிக்க ஏதாவது தர்மா மீட்டர் இருக்கிறதா?

கேள்வியும் உத்தரமும்
தம்பிக்கும் அண்ணனுக்கும்
தம்பிக்கும் வாசக்காரிக்கும் சம்பாஷணை


தம்பி: அடே அண்ணா உன்னை சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை, தயவு செய்து பதில் சொல்லுகிறாயா? அப்புறம் மார்க்கு தருகிறேன்.

அண்ணன்: அய்யா தம்பி கேள் பார்ப்போம். ஒரு கை பார்க்கிறேன்.

தம்பி: அடேய் அண்ணா பார்ப்பனரல்லாதார்களில் அயோக்கியர்களைக் கண்டுபிடிப்பதற்கு ஏதாவது தர்மா மீட்டர் இருக்கிறதா?

அண்ணன்: இது தானா பெரிய கேள்வி இதற்கு பதில் நம்ம வீட்டு வாசக்காரி அம்மா சொல்லி விடுவார்களே.

தம்பி: எனக்குத் தெரியவில்லையே.

அண்ணன்: சொல்லச் சொல்லுகிறேன் கேள். அம்மா வாசக்காரி தம்பிக்கு சில கேள்விகளுக்குப் பதில் வேண்டுமாம் சொல்லுகிறாயா?

வாசக்காரி: தெரிஞ்ச வரையில் சொல்லுகிறேன்.

அண்ணன்: தம்பி பார்ப்பனரல்லாதார்களில் அயோக்கியர்களைக் கண்டுபிடிக்க ஏதாவது தர்மா மீட்டர் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு பதில் சொல்லம்மா பார்ப்போம்.

வாசக்காரி: இதுதானா ஒரு பிரமாதமான கேள்வி? சொல்லுகிறேன் கேளுங்கோ தம்பி! எந்த எந்தப் பார்ப்பனரல்லாதாரைப் பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள், இந்து முதல் ஆனந்த விகடன் வரை புகழ்ந்து பேசு கின்றனவோ அந்தப் பார்ப்பனரல்லாதார்களும் சி. இராஜகோபாலாச்சாரியார் முதல் சத்தியமூர்த்தியார் வரை எந்த எந்தப் பார்ப்பனரல்லாதாரை புகழ்ந்து பேசுகிறார்களோ அந்த பார்ப்பனரல்லாதாரும் முதல் நெம்பர் வடிகட்டின விபூஷணாள்வார்கள் ஆஞ்சனேய ஆழ்வார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்த இருவர்களும் சகோதரத் துரோகி, குலத் துரோகி, காட்டிக் கொடுப்பவர், சுயநலத்துக்கு எவ்வளவு இழிவான காரியமும் செய்பவர்கள், என்றெல்லாம் ஆன பின்பு தானே "ராம பிரானால்" (ஆரியக் கதைகளில்) ஆழ்வார்களாக சீரஞ்சீவிகளாக கூறப்பட்டிருக்கிறது. ஆதலால் அந்த விபூஷணர், அனுமார் ஆகியவர்களைவிட 100 மடங்காவது அதிகமான...........வர்களாய் இல்லாவிட்டால் எந்தப் பார்ப்பனரல்லா தாரையாவது பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பனர்களுமான இந்தக் காலம் ராமாயணம் ராமபிரான் ஆகியவைகள் பார்ப்பனரல்லாதார்களைப் புகழ்ந்து கூறுமா? இது தெரியாமல் போயிற்றே உங்களுக்கு?

தம்பி: எல்லாரையும் அப்படி சொல்லிவிட முடியுமா?

வாசக்காரி: முடியாது என்று காணப்பட்டால் அப்படிப்பட்டவர்களை (பார்ப்பனர்களால் புகழ்ந்து கூறப்பட்டவர்களை) முட்டாள்கள், முழு மூடர்கள் என்கின்ற கலத்திலாவது போட்டுத்தான் ஆக வேண்டும். அயோக்கியர்கள் என்பதிலிருந்து (உதுஞுட்ணீtடிணிண) எக்ஸ்செம்ஷன் செய்து விடலாம்.

தம்பி: இவ்வளவு பரந்த உலகில் எவ்வளவோ பெருமை பெற்றதாக சரித்திரத்தில் கூறிக் கொள்ளும் தமிழ் மக்களில் சிலராவது இவ்வளவு இழிவான நிலையை அடைவானேன்?

வாசக்காரி: சிலருக்கு பிழைப்புக்கு வேறு மார்க்கமில்லை; சிலருக்கு உத்தியோகத்துக்கு வேறு மார்க்கமில்லை; சிலருக்கு விளம்பரத்துக்கு வேறு மார்க்கமில்லை; சிலருக்கு "இன்னது இன்னது கெட்டால் இன்ன இன்ன இடம் தான் போய்ச் சேர வேண்டும்" என்று ஒரு பழமொழி உண்டு. அந்த மாதிரி பார்ப்பனரல்லாத சமூகக் குழுவாகிய தங்கள் இனத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கு இந்நாட்டில் பார்ப்பனக் குழுவில்லாமல் வேறு புகல் இடம் இல்லாமல் போய்விட்டதல்லவா? ஆகையால் தான்.

தம்பி: உண்மையிலேயே நல்ல நிலைமையில் நல்ல எண்ணத்தோடு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் யாருமில்லையா?

வாசக்காரி: நீங்கள் தான் சொல்லுங்களேன் பார்க்கலாம். ஒரு பார்ப்பனரல்லாதார் பெயரையாவது. தோழர்கள் சி.ஆர். ரெட்டியார் முதல் அ.கு. முதலியார் வரை உள்ள கூட்டங்களை பார்ப்பனரல்லாதார் சமூக இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்குமானால், அவர்கள் தேவைகளை அரைகுறையாகவாவது கவனிக்கப்பட்டிருக்குமானால் அவைகள் பார்ப்பனர்கள் பின்னால் வால்களை ஆட்டிக் கொண்டு திரியுமா? நேரில் சென்று ரகசியமாய் கேட்டால் இந்தப் பிழைப்பு பிழைக்கிறதற்கு அவர்கள் அடையும் வெட்கம் இன்னது என்பது விளங்கும்.

தம்பி: அப்படியா! இந்த இழிவான நிலை எப்பொழுது மாறும்?

வாசக்காரி: அந்த ராமாயண காலத்திலேயே இருந்து ஆரம்பித்த காரியம் இந்த ராமாயணம் பொப்பிலி அயனம் ஆகிய காலத்தில் மாற்றப்பட்டுவிட முடியுமா? தமிழ் மக்களில் அனேகருடைய ரத்தத்தையே அடியோடு சிரிஞ்சு செய்து எடுத்துவிட்டு நல்ல சுத்த ரத்தத்தை இஞ்ஜக்ட் செய்ய வேண்டும். அப்படி சுத்தப்படுத்த இன்னும் குறைந்தது 2, 3 ராமாயணம், பொப்பிலி அயனமாவது ஆய்தான் தீர வேண்டும்.

தம்பி: சரி அப்புறம் இன்னொரு கேள்வி.

இந்தப் பார்ப்பனர்களும் அவர்களுடைய பத்திரிகைகளும் பார்ப்பன ரல்லாதார் தலைவர்களை ராக்ஷதர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் படம் போட்டு வைகின்றனவே. இதற்கெல்லாம் கேள்வி முறை இல்லையா? மற்றும் ஒரு தலைவரை, "அவர் ஜாதிப் புத்தியைக் காட்டிவிட்டார்" என்று ஜனங்களுக்கு சொல்லாமல் சொல்லிக் காட்ட செக்கு போட்டுக் காட்டி இழிவுபடுத்தினதன்றோ அதற்கும் ஒன்றும் கேள்வி முறை இல்லையா? மற்றும் பல பார்ப்பனப் பத்திரிகைகள் பார்ப்பனரல்லாத தலைவர்களை குலாம், தாசர், அடிமை, தேசத் துரோகி, பாவி என்றும் இன்னும் சில பார்ப்பனர்கள் பொப்பிலி ராஜா, ஷண்முகம் செட்டியார், ராமசாமி முதலியார் முதலியவர்களை அவன், இவன், அயோக்கியன் என்றெல்லாம் வெட்டவெளியாய்க் கூட்டங்களில் பேசுகிறார்களே, மற்றும் ஒரு பார்ப்பனப் பெண், கடலூர் ஜில்லாவில் பேசும் பொழுது அந்த ஜில்லா போர்டு மெம்பராய் இருக்கும் பெண்களைப் பற்றி இழிவாகச் சொல்லிற்றாம். இதற்கெல்லாம் கேள்வி முறை இல்லையா? நமது பொருமைக்கு எல்லை வேண்டாமா? அவ்வளவு அநாகரிக கேள்வி கேட்பாரற்ற ராஜ்ய பாரத்திலா நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

வாசக்காரி: அப்படி ஒன்றும் இல்லை. "குட்டி நாய் குறைத்ததற்கு ஆக பட்டி நாய்களை உதைப்பது அழகா" என்றபடி சிறிது நிதானித்தோம். நாம் நிதானித்ததைப் பார்த்து பட்டி நாய்கள் நம்மை பயங்காளிகள் என்று நினைத்துக் கொண்டு பரிகாசம் செய்தன. இப்போது பட்டி நாயுக்கும் குட்டி நாயுக்கும் சேர்ந்து புத்தி கற்பிப்பதுபோல வைதவர்களுக்கும், வையத் தூண்டி வைவதைப் பார்த்து சிரித்தவர்களுக்கும், புத்தி வரும்படியும் நல்ல பிள்ளைகளாகும்படியும் நம்மால் ஆனதைச் செய்யத் தொடங்கி இருக்கிறோம். சீக்கிரம் அடங்கிவிடக் கூடும். தோழர் சுந்திராம்பாள் நடிப்பையும், பாட்டையும் பற்றி தங்கள் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கவில்லையே என்கின்ற ஆத்திரத்துக்கு ஆகவும், ஒரு பார்ப்பனரல்லாத பெண் பிரபல மாகிவிடுமே என்கின்ற துஷ்டப் புத்தியாலும் இழித்துப் பழித்துக் கூறின பத்திரிகைகளுக்கு புத்தி வரும்படி செய்யவில்லையா? (அவர்கள் தோல் மொத்தமானதால் அவ்வளவு சீக்கிரம் புத்தி வராது) அதுபோலவே சுவாமி வேதாசலம் அவர்கள் புத்தகத்தைப் பற்றி பொறாமையும், ஆத்திரமும் கொண்டு செய்த சூழ்ச்சிக்கு தமிழ் மக்கள் தக்க புத்தி கற்பிக்க ஆரம்பித்தவுடன் "பிச்சை போடாவிட்டாலும் நாயைப் பிடித்துக் கட்டுங்கள்" என்பது போலவும், "உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும்" என்பது போலவும் இப்பொழுது பார்ப்பனர்கள் "இன்னம் இரண்டு புஸ்தகத்தை வேண்டுமானாலும் பாடப் புத்தகமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஆக இன்னமும் புத்தி கற்பிக்காதீர்கள்" என்று கெஞ்சும்படியான நிலைக்கு வந்து விடவில்லையா? அதுபோல் நாம் முன்னமேயே கவனிக்க ஆரம்பித்து இருந்தால் பார்ப்பனர் களும், அவர்களது பத்திரிகைகளும், அவர்களது கூலிகளும் வெகு நாளிலேயே அடங்கி இருக்கும்.

தம்பி: ஏன் பார்ப்பனரல்லாதார் அவ்வப்பொழுது முயற்சி எடுத்து தானே வந்திருக்கிறார்கள்.

வாசக்காரி: எங்கு எடுத்து வந்திருக்கிறார்கள்? "குடி அரசு" பொது உடமையில் புகுதாமல் இருந்திருந்து, "திராவிடன்" நாட்டுக் கொட்டை செட்டியார் கைக்குப் போய் பார்ப்பனர் தயவுக்கு அஞ்சி ஒழியாமல் இருந்திருக்குமானால் இந்த 3 வருஷத்தில் எவ்வளவோ காரியம் ஆயிருக்கும் என்பதோடு பார்ப்பனர்களுக்கு இவ்வளவு வாலும் வளர்ந்திருக்காது. அவர்களுடைய பத்திரிகைகளுக்கு இவ்வளவு திமிரும் ஏற்பட்டிருக்காது என்பது மாத்திரமல்லாமல் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு பார்ப்பனரல்லாத கூலிகளும், காலிகளும் கிடைத்து இவ்வளவு அயோக்கியத்தனமாக குறைக்கவும் முன் வந்திருக்க மாட்டார்கள்.

சாதாரணமாக தோழர் ஆர்.கே. ஷண்முகம் அவர்களைப் பற்றி ஆனந்த விகடன் செக்கு போட்டு ஓட்டுகிற மாதிரி படம் போட்ட காலத்தில் தக்கதொரு கிளர்ச்சி செய்திருந்தால் இத்தனை நாள் அது தேய்ந்து மாய்ந்து ஒழிந்து போய் இருக்கும். சர்க்காருக்கு எடுத்துக்காட்டி இருந்தாலும் அடங்கி இருக்கும். அப்பொழுது "குடி அரசு" சிறிது வீரம் பேசி விட்டு அடங்கி விட்டது. அதிலிருந்து அதற்கு (ஆனந்த விகடனுக்கு) தைரியம் அதிகமாய் விட்டது. இப்போது அது பார்ப்பனர்களுக்கு தலைசிறந்த ஆயுதமாக விளங்குகிறது.

அதாவது, பார்ப்பனரல்லாத வகுப்பு தாசிகள், பார்ப்பனரிடம் சினேகம் இருப்பதாய் சொல்லிக் கொள்ளுவதில் பெருமை அடையும் அற்ப புத்தி போல் நமது குழந்தைகளும் பெண்மணிகளும் ஆனந்தவிகடன் படிக்கவும் ஆசைபடவும் அனுமதிப்பது போன்ற அற்ப காரியங்கள் செய்து வருகிறோம். தமிழ் மக்களின் ரத்த பரிக்ஷைக்கு ஆனந்த விகடன் படிப்பது என்கின்ற மானமற்ற தன்மையே தர்மாமீட்டர் ஆகும் என்பதுதான் என் அபிப்பிராயம்.

"சூதாடுவதற்காக அதை வாங்கினோமே ஒழிய படிப்பதற்காக அதை யாரும் வாங்குவதில்லை" என்று சில சிகாமணிகள் சமாதானம் சொல்லக்கூடும். அதுதான் எப்படி யோக்கியமான பதிலாகும்?

ஒரு மனிதன் சூதாட்டம் ஆட வேண்டும் என்றால் பார்ப்பான் இடம் போய்தானா ஆட வேண்டும். மோக்ஷத்திற்குப் பார்ப்பானிடம் திரவுகோல் இருப்பதுபோல் அந்தப் பார்ப்பானிடம் தானா சூதுக்கும் திரவுகோல் இருக்க வேண்டும்? அந்தப் பணங்களையும் பார்ப்பான் தானா திங்க வேண்டும்? அதிலும் நம்மை கீழ் ஜாதி என்றும், ராக்ஷதன் என்றும் சொல்லுபவனா திங்க வேண்டும்? பார்ப்பனரல்லாதாரிலும் அதுபோலவே சிலர் ஆயத்துரை (சூதாடு தொழில்) வைத்து நடத்துகிறார்களே அதில் போய்ச் சேருவதுதானே. அவர்கள் பார்ப்பனர்கள் போல் இவ்வளவு கேவலமாகவும், இவ்வளவு இழிவாகவும் வைய மாட்டார்களே, இதையாவது கவனிக்க வேண்டாமா? பார்ப்பான் நமது ஜனங்களை, போதை வேண்டுமானால் கள்ளுக் குடியுங்கள், சீமைச் சாராயம் குடிக்காதீர் என்கிறானே அதன் அர்த்தம் என்ன? அதுபோல் சூதாட பார்ப்பானிடம் போகாதீர்கள் என்று சொல்லுகிறேன்.

வாசக்காரி: தம்பியாரே இன்னும் கேளுங்கள். எந்தப் பார்ப்பானாவது பார்ப்பானைத் திட்டுகிறானா? பார்ப்பானை திட்டுகிற பத்திரிகையைப் படிக்கிறானா? இதைப் பார்த்தாவது நமக்குப் புத்தி வர வேண்டாமா?

சத்தியமூர்த்தியாரிடம் என்ன குணம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? அவர் "தமிழ்நாட்டுத் தலைவர்" ஆனதினால் நான் ஒன்றும் சொல்லக் கூடாது என்றாலும், உதாரணத்துக்குத் தானே சொல்லுகிறேன். அவரைப் பற்றி அவர் முதல் முதல் சீமைக்கு போனது முதல் நாளது வரை நடந்ததை, எந்தப் பார்ப்பானாவது எந்தப் பத்திரிகையாவது ஏதாவது மூச்சு காட்டி எழுதுகின்றனவா? பேசுகின்றார்களா? ஒரே அடியாய் விளம்பரம் செய்து ஆகாயத்தில் தூக்கி வைத்து அவரை "ஒரு நாளாவது மந்திரி ஆக்கிப் பார்க்காமல் இருப்பதில்லை" என்று விரதம் எடுத்துக் கொண்டு இருப்பதோடு, அனேக பார்ப்பன அம்மாமார்களும் அதுவரை தலை முடிவதில்லை என்று சபதம் கூறி இருக்கிறார்கள். அது தான் கிடக்கட்டும் தோழர் சர்.ஆர்.கே. ஷண்முகத்தைப் பற்றி அனேக பார்ப்பனரல்லாத கூலிகளும், காலிகளும் குரைக்கின்றனவே அவரிடம் சொந்த நடவடிக்கைகளில் தனிப்பட்ட ஒழுக்கங்களில் சமூக கௌரவங்களில் எவ்வித கெட்ட நடத்தையும் இல்லை என்பதை நம்மிடம் ஒப்புக் கொண்டு, பார்ப்பனர்களிடம் போய் கூலிகள் பெற்று பல பார்ப்பனரல்லாத காலிகள் குரைக்கின்றனவே. ஆனால் தோழர் சர்.சி.பி. ராமசாமி அய்யர்வாள் அவர்களைப் பற்றி எந்தப் பார்ப்பனனாவது எந்தப் பார்ப்பனப் பத்திரிகையாவது மூச்சு பேச்சு காட்டுகின்றனவா? எவ்வளவு கீழான மாமா பார்ப்பானாவது பேசுகிறானா? அவரும் ஒரு சமஸ்தானத்துக்கு ஒரு வேலை இல்லாத உத்யோகஸ்தர் ஆக N 4000, 5000 சம்பாதித்தார். அதுவும் போதாது என்று இன்னும் பெரிய உத்தியோகம் பெறப் பார்க்கிறார். "லார்டு வில்லிங்டன் துரை மகனாருக்கு ரொம்ப வேண்டியவர்" என்கின்ற சேதி அடிபடுகின்றது. லார்டு வில்லிங்டன் துரையிடம் ஆக வேண்டிய காரியங்களுக்கு இவரே பூசாரி என்கின்றார்கள். இன்னமும் சி.பி. அவர்களைப் பற்றி என்ன என்னமோ மார்க்கட்டு, நாடகக் கொட்டகை எல்லாம் கத்தரிக்காய் கடை முதல் தப்பட்டை அடிக்கப்படுகிறது. அதைப் பற்றி படமா கேலியா.......... ஒன்றும் இல்லாமல் காப்பிக் கடையிலும், வக்கீல் குமாஸ்தா அரைகளிலும், "பிறந்தால் சர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்களுக்கு கை, கால்களாகவாவது பிறந்த சுகம் அனுபவிக்க வேண்டும்" என்று தானே புகழ்ந்து கூறி மகிழ்ச்சி அடைகின்றார்கள். இதிலிருந்து யார் கெட்டிக்காரர்கள்? யார் புத்திசாலிகள்? யார் மடையர்கள்? யார் சமூகத் துரோகிகள்? யார் வயிற்றுப் பிழைப்புக் கூலிகள்? என்பதையாவது உணர்ந்து பாருங்கள்.

சரி. பொப்பிலி ராஜாவை எதற்காக ராக்ஷதர் என்று சொல்ல வேண்டும்? ராவணனாவது ராமர் பெண்டாட்டியைத் தூக்கிக் கொண்டு போய் என்ன என்னமோ செய்தான் என்பதாக சொல்லி அதனால் ராக்ஷதன் என்று சொன்னார்கள். பொப்பிலி ராஜா யார் பெண்டாட்டியை அடித்துக் கொண்டு போனார்? என்ன செய்தார்? ஏன் அவரை ராக்ஷதர் என்று சொல்ல வேண்டும்? இனி மேலாவது, எந்தப் பார்ப்பானாவது பொப்பிலியை ராக்ஷதன் என்று சொன்னாலும் படம் போட்டாலும் சரி உடனே நம்ம ஆள் ஒருத்தர் அந்தப் பார்ப்பான் வீட்டுக்கு ஓடிப் போய் பார்த்து அவன் பெண்டாட்டி வீட்டில் இருக்கிறார்களா? இல்லையா என்று தெரிந்து விட்டு வந்து அந்தப் பார்ப்பானை "அட மடையா உன் பெண்டாட்டி உன் வீட்டில் தான் இருக்கிறார்கள். இப்பொழுதுதான் நான் பார்த்துவிட்டு வந்தேன். எவனோ ஒரு ஏகாலி பேச்சைக் கேட்டுக் கொண்டு பொப்பிலி மீது சந்தேகப்பட்டு அவரை ராக்ஷதன் என்று சொல்லுகிறாயே உனக்கு புத்தியில்லையா" என்று கேட்பதோடு அதுபோலவே எழுதுவதோ ஆகிய காரியம் வைத்துக் கொண்டால் இனி எவனும் அந்த மாதிரி காரியம் செய்யவே மாட்டான்.

தம்பி: அப்படியெல்லாம் கேட்பது நல்லதா? நாய் கடித்தால் நாமும் அதைக் கடிக்கலாமா?

வாசக்காரி: கடிக்க வேண்டாம். தடி எடுத்து விரட்டியாவது துறத்த வேண்டாமா? "நாய்ச் சாமிக்கு மலைக் கொழுக்கட்டை ஆராதனை" என்பதுபோல் அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டியது மனிதத் தன்மை மாத்திரமல்லாமல் அறிவாளியான வீரன் செயலுமாகும்.

நல்ல குதிரைக்கு சவுக்கு ஆட்டினால் போதும். தோல் மொத்தமாய் இருக்கிற மந்தி குதிரை அல்லது எருமைக் கிடாவை மொத்தமான தொண்ணைக் கம்பால் இருக்கினால் தான் நகரும்.

அதுபோல் நம்ம தற்காப்பைப் பொருத்த வரையாவது, "பதிலுக்குப் பதில் செய்யத் தயாராய் இருக்கிறோம் எங்களால் முடியும்" என்றாவது காட்டிக் கொள்ளாமல்கூட இருப்பதென்றால் நம்மை நாம் மனிதர் என்று சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம்கூட இல்லை.

அன்றியும், அப்படி இருந்ததாலேயேதான் எச்சைக்கலைப் பார்ப்பான்கூட நம்மை ராக்ஷதன் என்கிறான்.

தம்பி: இந்தப்படியெல்லாம் நாம் நடந்தால் பாமர மூடஜனங்களுக்கு நம்மிடம் இன்னும் அதிக வெறுப்பு ஏற்படும்படியாக இந்தப் பார்ப்பனர்கள் செய்துவிட மாட்டார்களா?

வாசக்காரி: செய்து விட்டுப் போகட்டுமே அதனால் என்ன முழுகிப் போகும்?

தம்பி: நம்மவர்களுக்கு மந்திரி வேலை போய் விடாதா?

வாசக்காரி: போய்த்தான் தொலையட்டுமே பார்ப்பான் மந்திரியாய் வந்துவிட்டால் உலகமே முழுகிப் போய்விடுமா?

"ஒரு வண்டி செங்கல்லும் பிடாரி ஆனது" என்பது போல், எல்லாப் பார்ப்பானுமே மந்திரிகளாய் விடட்டுமே நம்மை இனி என்ன அசைத்து விட முடியுமா?

மந்திரி அதிகாரம் நம்மை விட்டுத் துலைந்தால் நமது நிலை என்ன தான் ஆகிவிடும் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படவாவது மந்திரி உத்தியோகம் நம்மை விட்டுத்தான் ஒரு தடவையாவது தொலை யட்டுமே. பாமர ஜனங்களுக்குப் புத்தி வர ஒரு சந்தர்ப்பமாவது கொடுக்கலாமே?

இப்பொழுது "பார்ப்பனர்கள் மந்திரிகளாய் விட்டால் பரிசம் இல்லாமல் பெண் கிடைக்கும். ஆளுக்கு 2, 3 கூடக் கிடைக்கும்" என்று நினைத்துக் கொண்டிருக்கிற முட்டாள் பயல்களுக்கு அவனவன் வீட்டிலுள்ளதையாவது காப்பாற்ற முடிகின்றதா அல்லது மனுநீதிபோல் நடக்க வேண்டி வருமா என்பதையாவது தெரிந்து கொள்ளட்டுமே.

தம்பி: அப்படியானால் இப்போது ஏன், "மந்திரி வேலை நம்ம கையை விட்டுப் போகக் கூடாது" என்று கருதுகின்றவர்களுடன் கூடிக் கொண்டு என்னையும் பாடுபடச் சொல்லுகிறாய்.

வாசக்காரி: இது கூடவா தம்பி உங்களுக்கு தெரியவில்லை?

தம்பி: தெரியவில்லை.

வாசக்காரி: பார்ப்பான் சங்கதி வெளியாக்குவதற்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டாமா? அதற்காக வேண்டி நானும் கூட்டத்தில் கோவிந்தாப் போடுகின்றேன்.

நான் கூப்பாடு போடாவிட்டாலும், நீ கூப்பாடு போடாவிட்டாலும் மந்திரி வேலை நம்ம ஆளுகள் கையை விட்டு ஒரு நாளும் போய்விடப் போவதில்லை.

ஆனாலும் நம்ம பிரசார சங்கதி நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டாமா? அன்றியும் நம்ம ஆளுகளை இந்தப் பார்ப்பனர்கள் இவ்வளவு அயோக்கியத்தனமாய் தாக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டா இருப்பது? அதற்காகத்தான்.

தம்பி: சரி இன்னம் ஒரு நாளைக்கு சந்திக்கலாம். நான் போய் வருகிறேன்.

                ------------------- தந்தைபெரியார் - “குடி அரசு” உரையாடல் 08.09.1935

13 comments:

தமிழ் ஓவியா said...

அடடே, என்னே ஞானோதயம்!

தமிழ்நாட்டில் மக்கள வைத் தேர்தல் அமைதியாக நடக்க பொது மக்கள் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தனர். அதே போல பணம் வாங்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

- பிரவீன்குமார், தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு

அடடே!, என்ன ஞானோ தயம்! புத்தர் பூர்ணிமாவை யொட்டி உதிர்த்த ஒளி முத்து இது! மக்கள் எல்லா ரும் நல்லபடியாக நடப்பார் களேயானால் இந்தத் தேர் தல் ஆணையம், காவல் துறை ஏன் அரசும்கூட தேவையில்லையே!

Read more: http://viduthalai.in/e-paper/80311.html#ixzz31px6OxT1

தமிழ் ஓவியா said...


பாலாபிஷேகம் ஒரு கேடா?


சித்ரா பவுர்ணமியையொட்டி மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் பெண்கள் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். (மாலைமலர் 14.5.2014)

ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டே குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா?

Read more: http://viduthalai.in/e-paper/80308.html#ixzz31pxNkttX

தமிழ் ஓவியா said...


சிந்திக்க முடிந்தது


புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்க வேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.

(விடுதலை, 23.1.1968)

Read more: http://viduthalai.in/page-2/80316.html#ixzz31pxjVNAZ

தமிழ் ஓவியா said...

கோவில் விழாவில் தகராறு

வலங்கைமான். மே. 15- வலங்கைமான் அருகே ஆண்டாங்கோவில் கிராமத் தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த தேர்த் திரு விழா நடந்தது. அப்போது ஆண்டாங்கோவில் கடை வீதியில் வெடி வெடித்த போது அங்கிருந்த ஒரு கட்சி கொடி மேடை சேதம் அடைந் ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாஞ் சேரி பகுதியினருக்கும் ஆண் டாங்கோவில் பகுதியில் வசிப்போருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற் பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் பேசி சமாதானம் ஆகினர்.

இந்நிலையில் நேற்று இரவு கோவில் சார்பில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அப்போது கட்சி மேடை சேதம் அடைந்தது தொடர்பாக பேசிய போது இருதரப்பினரிடையே தக ராறு ஏற்பட்டது. இதில் மாஞ்சேரி பகுதியை சேர்ந்த பிரபு (வயது 30), அன்பரசு (30) ஆகிய இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப் பட்டனர்.

இதனை தொடர்ந்து இப் பகுதியில் பதற்றம் ஏற்பட் டது. அப்பகுதியில் மேலும் அசம்பாவித சம்பவம் ஏற் படாதவாறு பாப நாசம் டி.எஸ்.பி. சிவாஜி அருட் செல்வன் தலைமை யில் ஏராளமான காவல் துறை யினர் குவிக்கப்பட்டு நிலை மையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வலங்கைமான் தாசில்தார் வெங்கட்ராமன், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேஷ், மகேஷ், தங்க துரை உட்பட வருவாய் துறை அலுவலர் கள் சம்பவ இடத்தில் விசா ரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர் பாக வலங்கைமான போலீ சார் ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்தி, ரகு, ஆறுமுகம், சதீஸ், மற்றொரு ஆறுமுகம், விவேக், சேட்டு, மகேந் திரன், சரவணன் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விவாரணை மேற் கொண்டு உள்ளனர். இச் சம்பவத்தால் ஆண்டாங் கோவில் மற்றும் மாஞ் சேரியில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோயில் உண்டியல் கொள்ளை

தண்டையார்பேட்டை, மே 15- வண்ணாரப் பேட்டை, எம்சிஎம் கார் டன், முதல் தெருவில் சிறீ வேங் கட முடையான் கிருஷ்ணன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பூஜை முடிந்ததும், பூசாரி ரவி கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று காலை கோயிலை திறக்க வந்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த 2 உண் டியல்களை உடைத்து அதி லிருந்த பணம், பூஜை அறையில் இருந்த வெள்ளி மற்றும் பித்தளை குத்து விளக்குகள் ஆகியவற்றை சிலர் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதுகுறித்து தண்டை யார்பேட்டை காவல் நிலை யத்தில் ரவி புகார் செய்தார். காவல் நிலைய ஆய்வாளர் தெய்வேந்திரன் சம்பவ இடத் துக்கு சென்று விசாரித்தார். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின் றனர்.

Read more: http://viduthalai.in/page-3/80291.html#ixzz31pzGhQlu

தமிழ் ஓவியா said...

கோவில் விழாவில் பயங்கர மோதல்!

பழனி அருகே உள்ள இந்திராநகர் நாயக்கர் தோட்டம் பகுதியில் பிள் ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வுக்காக வரிவசூல் செய்த போது பிரபாகரன்(29) என்பவர் சென்ற வரு டத்தை விட இந்த வருடம் அதிகமாக வரி கேட் கிறீர்கள்.

எனவே நான் சென்ற வருடம் கொடுத்த வரிதான் கொடுப்பேன் என்றார். ஆனால் அவர்கள் வரி வாங் காமல் சென்று விட்டனர்.

இந்த நிலையில் கோவில் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடந்த போது பிரபாகரன் தனது நண்பர்கள் ராஜா, பெரிய சாமி, சுரேஷ், முனி யாண்டி, நிலவாழன், காளீஸ்வரன் ஆகியோரு டன் சென்றார். அப்போது அவர்கள் குடி போதையில் கலை நிகழ்ச் சியை நடத்த விடாமலும், மைக்செட் மற்றும் டியூப் லைட்களை உடைத்த தாகவும் கூறப்படுகிறது.

இதனை ஆனந்தகுமார், வேலப்பன், செந்தில், ஆனந்தம், நடராஜ், குமார், மகுடீஸ் வரன் ஆகியோர் தட்டிக்கேட்ட போது அவர்களுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பிரபாகரன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையை சிகிச் சைக்காக சேர்க்கப்பட்ட னர். இதுகுறித்து பிரபா கரன் மற்றும் ஆனந்த குமார் ஆகியோர் தனித் தனியாக பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்து லெட்சுமி வழக் குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்

Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vm5uFb6

தமிழ் ஓவியா said...

அழகரை தரிசிக்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!

மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் நேற்று காலை இறங்கினார். அழகரை தரிசிக்க மதுரை மற்றும் விருதுநகர், சிவ கங்கை, போன்ற மாவட் டங்களில் இருந்து பல்லா யிரக் கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர்.

தல்லாகுளம் வந்த போது ஆத்திக்குளத்தை சேர்ந்த பாண்டியராஜன் மனைவி, சூரியா (32) என்பவர் அழகரை தரிசிக்க சென்றார். அப்போது கூட் டத்தைப் பயன்படுத்தி யாரோ ஒரு ஆசாமி அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு சென்று விட்டான். இது குறித்து சூரியா காவல்துறை யில் புகார் செய்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vmCYeXc

தமிழ் ஓவியா said...


பார்ப்பன சாதி


பார்ப்பன சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும். - (விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/80348.html#ixzz31vmOnuX8

தமிழ் ஓவியா said...


விடுதலை செய்தி எதிரொலி: நாகர்கோயில் டவுன் ரயில் நிலையப் பணிகள் ஆரம்பம்!


விடுதலை செய்தி எதிரொலி:

நாகர்கோயில் டவுன் ரயில் நிலையப் பணிகள் ஆரம்பம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில் அடங்கியுள்ள தமிழ்நாட்டி லுள்ள ரயில் நிலையங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குமுறிக் கொண்டிருந்தனர்; பல போராட்டங்களையும் நடத்தினர். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம். அதனால் சமூக ஆர்வலர்கள் பலர் திராவிடர் கழகத்தை அணுகினர். இது சம்பந்தமாக விடுதலை (27.3.2013) குறிப்பிட்டிருந்ததாவது:

விடுதலையின் பெருமையை - திராவிடர் கழகத்தின் பணிகளை அறிந்த கன்னியாகுமரி மாவட்ட மக்கள், திரு வனந்தபுரம் ரயில்வே கோட்டத்தால் புறக்கணிக்கப்படும் தமிழ்நாட்டிலுள்ள தொடர் வண்டி நிலையங்களைப் பற்றி அந்தக் கோட்டத்தின் கவனத்துக்குக் கொண்டு வரும்படி வேண்டுகோள் விடுத் தார்கள். முதலில் நாம் நாகர்கோயில் டவுன் (Nagercoil Town) ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத் தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக் கின்றோம்.

குமரி மாவட்டத்தின் தலைநகரமான நாகர்கோயிலின் மய்யப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் உள்ளது. ஆனால், இங்கே எந்த அடிப் படை வசதிகளும் இல்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சிமெண்ட் பல கையில் ஓய்வெடுக்கின்ற நிலையை இங்கே காணலாம்.

திருநெல்வேலி தொடர்வண்டி நிலையத்திலிருந்து புறப்படுகின்ற ஹப்பா, பிலாஸ்பூர் விரைவு வண்டிகள் நாகர் கோயில் சந்திப்பு நிலையத்துக்குச் செல்லாமல் இந்த நிலையம் வழியாகவே சென்று வருகின்றன. இத்தகைய முக் கியத்துவம் இருந்தும் இங்கே எவரும் பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்வதே இல்லை என்று அந்த நிலைய நிரு வாகமே சொல்கின்றது.

இந்த நிலையத்திலுள்ள குறை பாடுகளை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தபோது, உடனே உரிய முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு குறைகள் நீக்கப்படும் என்று தெரிவித்தார், இணை இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்புப்பாதை அமைப்பதற்கான அடிக் கல் நாட்டப்பட்டு 40 ஆண்டுகள் தான் ஆகின்றது. ரயில்கள் ஓடத்துவங்கிய பின் 30 ஆண்டுகளாகக் கவனிப்பாரற்ற நிலையில் இருந்த நாகர்கோயில் டவுன் ரயில் நிலையத்தின்மீது தெற்கு ரயில்வே தலைமையின் பார்வை விடுதலையின் பணியால் விழுந்தது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார்.

அந்தக் கட்டத்தில் கன்னியாகுமரியி லும் பெரும் குறைபாடு காணப்பட்டது. பயணிகளுக்கு கழிவறை இல்லை என்பதே அது. பொது மேலாளர் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு, பூட்டப் பட்டிருந்த காத்திருப்போர் அறையை திறக்க வைத்தார். இதன் விளைவாக பயணிகள் நிம்மதியான மூச்சை விட்டனர். மேலும், நாகர்கோயில் டவுன் நிலையம் மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்தார், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள்.

தொடர்ந்து, நாகர்கோயில் டவுன் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் நபர் மாற்றப்பட்டார். காண்ட்ராக்ட் பணிகள் விரைவாகவே நடந்தன. இங்கே ரயில்வே கிராசிங் வசதி, பயணிகள் காத்திருக்கும் அறை, பயணச்சீட்டு வழங்குமிடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி என ரூ. 2 கோடி செலவில் மேம் பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் நடைபெறுகின்றன. முதற்கட்டமாக பாலம் கட்டும் பணி நடைபெறுகின்றது. ஜனவரி 31 ஆம் நாள் திருவனந்தபுரம் கோட்ட புதிய மேலாளர் சுனில் பாஜ்பாய், கோட்ட ரயில்வே பொறியாளர் சிறீகுமார், கோட்ட உதவிப்பொறியாளர் ஆனந்த் ஆகி யோர் நாகர்கோயில் டவுன் நிலையத் துக்கு வருகைபுரிந்து ஆய்வு செய் தார்கள்.

முப்பது ஆண்டுகளாக கவனிப்பாரற்ற நிலையில் இருந்த ஒரு நிலையம், திராவிடர் கழகத்தின் தலையீட்டால் விரைவாக மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்ற நிலையைப் பார்த்த பொதுமக்கள், திராவிடர் கழகத்துக்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றார்கள்.

- த.அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page-2/80351.html#ixzz31vmmfht1

தமிழ் ஓவியா said...


கடவுள் இல்லை!


ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத்திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே.
- பெர்னாட்சா

கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை
- காண்டேகர்

கடவுளை யாரும் கண்டதில்லை.
- குருசேவ் (அய்.நா. சபையில்)

மனிதனுக்கு கேவலம் ஒரு புழுவை படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான கடவுளைப் படைக்கத் தெரியும்.
- ஒரு மேநாட்டறிஞன்

உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே
- வால்விச்மன்

கடவுள் என்பது திருடர்களின் இரதத்திற்காக செய்யப்பட்ட கடையாணி போன்றது.
- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31voXQLUs

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி...

சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகை கூறுகிறது.

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம். தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.

அந்தப் பாடல்: ஆரியம் நன்று தமிழ்
தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டானைச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா

திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டு மிராண்டிகள் (Barbarians) எனப் பொருள் கூறப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31vojo1cu

தமிழ் ஓவியா said...


ஏழு மொழிகள்


1. தேசீயம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.
- ம.சிங்காரவேலர்

2. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
- ரட்சார்ட் கிப்லீவ்

3. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.
-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்

4. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
- பகத்சிங்

5. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.

6. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்

7. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித் தின்ன அரசியல்
- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vozv6Uj

தமிழ் ஓவியா said...

சாத்தாணியின் புரோகிதம்

நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.



அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு



Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vpEPqnP

தமிழ் ஓவியா said...

இராவணனுக்குப் பிறந்த பிள்ளை

இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும் போதே அவள் கர்ப்பிணி!

இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்கு மணனை விட்டு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்குமணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.

இராமனால் விடப்பட்ட குதிரை இலவனால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் சுட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின் றான். அவனையும் கொன்று விடுகிறான்.

இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்த பிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!

-புரட்சிக் கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vpVZwGW