Search This Blog

5.12.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 46

இதுதான் வால்மீகி இராமாயணம்

இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.

பதினொன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி

இராமன் உண்மையில் தெய்வத் தன்மையுடைய வனேயாயின் அப்பார்ப்பனச் சிறுவன் உயிர்பெற்றெழச் செய்திருக்கலாமே? அதைவிடுத்து அவன் ஓர் உயிர்க்கொலை - அதுவும் உலகப்பற்றை ஒழித்து இறைவழி நின்று தவமுதிர்வெய்திய ஓர் உயிர்க்கொலை செய்தனனாம். அதனால் பார்ப்பனச் சிறுவன் உயிர் பெற்றனனாம். இது அறிவுடைய நன்மக்கள் கூற்றாமா? மனிதரனைவரும் கடவுளுடைய மக்களேயாக அவர் முன் குலவேறுபாடும் அக்குலங்களிலும் ஒரு குலத்துக்கு ஒரு நீதியுமா? என்னே அநியாயம்! இக்கொலை பாதகனாகிய இராமனையும் தெய்வமாக வழிபடுகின் றனரே


பாவம்! பாவம்! ஆனால், இக்காலத்தில் இவ்வாரி யருள் ஒரே ஒரு குலம்தான் இருக்கிறது. அது பார்ப்பன வகுப்பே. ஏனைய சத்திரிய, வைசிய, சூத்திர வகுப் பெல்லாம் அழிந்தொழிந்தன. இப்பார்ப்பனரோ தமிழ் மக்களுடன் நெருங்கிப் பழகித் தாம் உயர்ந்த வகுப்பின ரென்றும், தம்மின் வேறான தமிழ் மக்களாகிய மற்றை யோரனைவரும் சூத்திரர்களென்றம் கூறுவாராயினர். இதனைத் தமிழ் மக்களாற் பெரும்பாலோர் உண்மை யென நம்புவாராயினர். ஆரியருக்கும் தமிழருக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. தமிழ் மக்களுக்கு வெள்ளைக்காரர்கள் எப்படி வேறுபட்ட வகுப்பினரோ அதைப்போலவே ஆரியப் பார்ப்பனரும் வேறுபட்ட வகுப்பினரே. ஆதலின் தமிழ் மக்களைனைவரும் இப்பார்ப்பனர் தம்மைச் சூத்திரரெனக் கூறுவதைக் கேட்டிருத்தல் பரிதாபமே. தமிழ் மக்கள் பண்டைக் காலத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு பெரும் பகுதியினராயிருந்தனரெனவும், அவர்கள் தம்முள் தொழில்முறையில் வேறுபாட்டைத் தவிர வேறு கொள்வினை, கொடுப்பினை, உடனுறைவு, உடனுணவு இவையெல்லாவற்றிலும் வேறுபாடில்லாமல் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போலவே வாழ்ந்து வந்தன ரெனவுமே பண்டைத் தமிழ் நூல்களறிவிக்கின்றன. ஆதலின் தமிழ் மக்களே தம்முள் பிறருடைய முயற்சியால் அமைந்து பதிந்து கிடக்கும் வேறுபாடுகளை ஒழித்து ஒன்று படவேண்டும். ஒன்று பட்டாலே வாழ் வுண்டு, ஒன்று படாதவரை தாழ்வே. ஆதலின் தமிழ் மக்களனைவரும். வேறுபாடுகளையொழித்து விரைவில் ஒன்றுபட்டுப் பெருவாழ்வடைய முன்வரவேண்டும். பிறர் தம்மைச் சூத்திரர் என்ற இழிபெயராலழையாமலிருக்கப் பார்த்துக்கொள்ள வேண்டும். சில சமயப் பிரசங்கிகள் பிரசங்க மேடையேறியோ அல்லது சந்திகளில் நின்று கொண்டோ தம்முன் நிற்கும் அந்நிய சமயத்தினரை நோக்கி, அஞ்ஞானிகளே! நீங்கள் ஞான மார்க்கமாகிய எங்கள் மதத்தில் வந்து சேருங்கள் என்று பிரசங்கமி யற்றுவதையும், அதை அவர் முன் நிற்போர் கேட்ப தையும் பின் அப்பிரசங்கம் செய்தவருடன் பழகும்போது, நாங்கள் அஞ்ஞானிகள் என்று கூறி அவர் கூற்றுக்கு உடன்படுவதையும், நாம் கண்கூடாகக் காண்கின்றோம். அஞ்ஞானி என்றால் அறிவில்லாதவன் என்பது பொருள். ஆனால்,  இப்பொருளைத் தெரிந்த எவனாவது தன்னை மற்றொருவன் அஞ்ஞானியென்று கூறவோ தானும் தன்னையே அஞ்ஞானியென்று கூறிக்கொள்ளவோ செய்வானா? உண்மையில் அஞ்ஞானியாயிருப்பவன் கூட இத்தகைய இழி செயலுக்கு உடன்படான். இதைப் போலவே ஆரியப்பார்ப்பனர் தமிழ் மக்களனைவரையும் சூத்திரரென்றே அழைக்கின்றனர். இவர்களும் அவர்கள் முன்னிலையில் நாங்கள் சூத்திரர் தொட்டு விடாதீர்கள் என்று கூறி விலகியும் போகின்றனர். ஆரியரைத் தொடுவதோ அல்லது அவர்கள் உண்ணு வதைப் பார்ப்பதோ பாபமெனவும் சிலர் தவறுதலாக நம்புகின்றனர். ஆனால் சூத்திரன் என்ற சொல்லுக்குப் பொருளை இவர்கள் அறிவரேல், பிறர் தம்மை அப்பெயரிட்டழைக்க உடன்படார் என்பது திண்ணம். சூத்திரன் என்றால் வைப்பாட்டி மகன், அடிமை என்று பொருள். உண்மையில் தப்பான நடையுடையவள் மகன் கூடத் தன்னைப் பிறர் அவ்வாறழைக்க உடன்படானே! அவ்வாறிருக்க மிக மேலான வடுப்படாக் குலத்தினரான தமிழ் மக்கள் பிறர் தம்மைச் சூத்திரன் என மிகக் கேவலமான பெயரிட்டழைக்கக் கேட்டிருப்பது மிகவும் விந்தையே! ஆதலின் இனியேனும் இத்தவறு நடைபெறா தென்பது தற்காலத்தில் ஒவ்வொருவருவர் சுயமரியாதை உணர்ச்சி பெற்று விளங்குவதிலிருந்து தெளிவாகிறது. மிக உயர்ந்த நிலையும் நல்லறிவும் தமிழ் மக்களிடைத் தோன்றுவதாக.


ஆயின் ஆரியர் தம்முள்ளமமைந்திருந்த நான்கு சாதியுள்ளே தற்போது காணப்படும் பார்ப்பன வகுப்பைத் தவிர ஏனைய சத்திரிய வைசிய சூத்திர வகுப்புகள் எங்கு மறைந்தன, எவ்வாறு மறைந்தன? என்றால், மக்கள் அன்னிய நாட்டுக்குப் போய்த் தனித்தனியே வசிக்கத் துணிந்தபோது அவ்வகுப்பு வேறுபாடு தானே ஒழிந்துவிடுமென்பது திண்ணம். இப்போது ரங்கூன், பினாங்கு முதலிய கண்காணா தேசங்களில் போய் வாழும் நம் நாட்டினர் நம் நாட்டில் வாழும் காலத்துத் தம்முன் கொள்ளும் சாதி வேறுபாட்டை அந்நாடுகளில் வாழும்போது காட்டுவதில்லையென்பது உலகமறிந்த உண்மை. அதைப்போலவே இங்கிலாந்து முதலிய பிறநாடுகளுக்கும் போயிருப்பவரும், பல வகுப்பின ரேனும் அந்நாடுகளில் ஒன்றுபட்டே வாழ இன்றியமை யாததாகிறது. இப்போது நம் நாட்டில் வாழும் ஆங்கி லேயரும் தம்முன் ஒற்றுமை காட்டியே வாழ்கின்றனர். இதைப்போலவே ஆரிய மக்களும் நம் நாட்டில் தனித்தனியே அங்கங்கே புகுந்து வாழத்தொடங்கிய போது அவர்களிடையேயிருந்த சாதி வேறுபாடு நாளடைவிலொழிவதாயிற்று. அதனால் அவர்கள் அனைவரும் தம்முன் உயர்ந்த வகுப்பாகிய பார்ப்பன வகுப்பினரெனவே காட்டி வாழத்தொடங்கினர். அதிலி ருந்து அவர்களனைவரும் நாளடைவில் ஒன்றுபட்டு பார்ப்பனரெனத் தம்மை அழைத்ததோடு நில்லாமல் தமிழ் மக்களையும் இழியராகிய சூத்திரரென அழைக் கவும் தலைப்பட்டனர். இதுவே ஆரியருளிருந்த நான்கு வகுப்புள் பார்ப்பன வகுப்பொன்றே காணப்படுவதற்கும் ஏனைய வகுப்புகள் மறைந்ததற்கும் காரணமாம். இக்கம்பர் புரளியைக் காண்போம்.
குகன் தனது படகோட்டியை ஏவி இராமன் முதலியோரை கங்கையின் தென்கரையில் விடுமாறு செய்து அவர்கள் போவதை வடகரையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான் என வால்மீகிக் கூற, கம்பர் குகனே படகோட்டிச்சென்று அக்கரையடைந்தவுடன் தன்னையும் உடனழைத்தேகுமாறு வேண்டுகின்றனன் எனக்கூறுகின்றார். மேலும் குகன் சுமந்தரனைத் தன்னுடன் வைத்திருந்து தன் தூதரையனுப்பி இராமன், சித்திரக்கூடம் வரையிற் போனதையறிந்து கொண்டு அச்செய்திகளைச் சுமந்திர னிடம் கூறுகின்றனன். இராமன் முதலியோர் அயோத்தி யிலிருந்து புறப்பட்ட அன்று தமசா நதிக்கரையில் தங்கி மறுநாள் மாலையில் கங்கைக் கரையையடைந்தனர். அதனால் அயோத்தி யிலிருந்து கங்கைக் கரையை யடைய இரண்டு நாட்களாயிற்று. பின் இராமன் மறுநாள் கங்கையைத் தாண்டி மத்ச நாட்டிலுள்ள காடுகளில் தங்கி, மறுநாள் பரத்துவாசராசிரமத்தில் தங்கி, மறுநாள் யமுனைக் கரையில் இறங்கி, மறுநாள் சித்திரக்கூட மடைகின்றனன். 


 இதனால் கங்கையிலிருந்து புறப்பட்ட நான்காம் நாள் அவன் சித்திரகூடமடைகிறான். இவ்வாறு இராமன் சித்திரகூடமடைந்த நிகழ்ச்சியை ஒற்றர் குகனிடம் கூறுசின்றனர். நான்குநாள் நிகழ்ச்சிகளையும் கண்டு அவர்கள் ஓட்டமாக வந்து கூறுவதற்குக்கூட ஒரு நாளேனும் வேண்டும். அன்றி அன்றே வந்தனரெனினும் நான்காம்நாள் மாலையிலேயே அவர்கள் குகனை யடைந்தவராவர். அவர்கள் செய்தி கேட்டறிந்துதான் சுமந்திரன் புறப்பட்டானாதலால், அய்ந்தாம் நாள் காலையிலேயே அவன் சிருங்க பேரபுரத்தை விட்டுப் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவன் மூன்று நாள் அங்கே தங்கி நான்காம்நாளே புறப்பட்டானென வால்மீகி கூறுகிறார். இது எவ்வாறு பொருந்துமோ? மேலும், சுமந்திரன் சிருங்கபேரபுரத்தைவிட்டு அயோத்தியை அடைய மூன்று நாட்களாயின எனக்கூறுகிறார் வால்மீகி. ஆனால், அயோத்தியிலிருந்து மறுநாளே இராமன் முதலியோர் கங்கையை அடைந்தனரென அவர் முன்னர்க் கூறியது எவ்வாறு பொருந்தும்? அன்றி சுமந்திரன் பொய்ம்மையாளனானதால் தாமதமாகத் தங்கித் தங்கி வந்தவனாதல் வேண்டும். குறைந்தது இராமன் அயோத்தியை விட்டு நீங்கிய ஒன்பதாம் நாள் மாலையிலேயே சுமந்திரன் அயோத்தியையடைந்து இராமன் வனம் புகுந்ததைத் தசரதனிடம் கூறியவனாதல் வேண்டும். ஆனால் வால்மீகி அந்நாளை இராமன் வனமேகிய அய்ந்தாம் நாளென, சருக்கம் அறுபத்திரண்டிலும் பின் அறுபத்து மூன்றாம் சருக்கத்தில் அது ஆறாம் நாளெனவும் கூறுகிறார். இதனால் வால்மீகி முன்னுக்குப் பின் முரணாகக் கணக்கின்றிக் கூறுபவராவார். இஃதிவ்வாறாகக் கம்பரோ மிகவும் வேடிக்கையாகக் கூறுகிறார். அதாவது இராமன் அயோத்தியை விட்டுப்போன அன்றிரவே சுமந்திரன் இராமனைப் பிரிந்து அயோத்தியையடைந்து விட்டன னெனக் கூறுகிறார். அத்துடன் தசரதனும் அன்றிரவே மடிந்தனனெனக் கூறுகிறார். வால்மீகி கணக்குப்படி உண்மையில் தசரதன் இராமன் பிரிந்த ஒன்பதாம் நாள் மாண்டனன். ஆனால் வால்மீகி பின் ஓரிடத்தில் அய்ந்தென்றும் மற்றோரிடத் தில் ஆறென்றும் கூறுகிறார். இஃதிவ்விதமிருக்கக் கம்பர் தசரதனை அன்றிரவே மடிந்தனனெனக் கூறுகிறார். இவ்வளவு சீக்கிரமாக அவனை முடியச்செய்யத் தசரதன் அவருக்கு என்ன கேடுசெய்தான்? ஒன்பது நாட்களுக்கு பிறகு இறந்த மன்னனை அன்றே இறந்தனென்கிறாரே?

                  ---------------------------தொடரும்--"விடுதலை” 5-12-2014

52 comments:

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவருக்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் வாழ்த்து



அன்புள்ள நண்பருக்கு..

வணக்கம். நலம். நலமே நாடுகிறேன். 82ஆம் ஆண்டில் தாங்கள் அடியெடுத்து வைத்துள்ளதை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். பெரியார் அவர்களின் பெருந்தொண்டினைத் தொடர்ந்து செய்து வரும் தங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு கூறி வாழ்த்துகிறேன்.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு

அய்ந்துசால்பு ஊன்றிய தூண்

அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் அய்ந்து பண்புகளும் நிறைந்துள்ள தாங்கள் வள்ளுவர் கூறியதுபோல சால்பு என்பதை தாங்கி நிற்கும் தூணாக திகழ்கிறீர்கள். மீண்டும் தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more: http://viduthalai.in/e-paper/92399.html#ixzz3L20ZDjnU

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உயிரற்றதற்கு ஏது உணர்வு?

புழுவானாலும், பறவையானாலும், கொசு, மரம் என்றாலும், உயிரற் றதாக இருந்தாலும், நீர், நிலம் என எங்கும் வாழ் கின்ற அனைத்து உயிர் களும், மனிதர்களும், யாரானாலும், எதுவானா லும் இந்த தீப ஒளியைப் பார்த்து விட்டால் அந்த உயிரின் சகல பாவத்தை யும் போக்கி இன்னொரு பிறவி எடுக்காமல் நிலை யான இன்பத்தில் சென்று சேரட்டும்'' என்பதாகும்.

விளக்கேற்றி இந்த ஸ்லோகத்தை சொல்லி வணங்கிய பின், "அண்ணாமலையாருக்கு அரோஹரா'' என்று மூன்று முறை சொல்லி திருவண்ணாமலை தீபத்தை மனதார நினைத்து வணங்க வேண்டும். இவ் வாறு செய்தால் அண்ணா மலை மகாதீபத்தை நேரில் தரிசித்த பலன் உண்டாகும். என்கிறது தினமலர் ஆன்மிக மலர்.

உயிரற்றதாக இருந்தா லும் கொசுவானாலும் பிறவி எடுக்காமல் நிலை யான இன்பத்தைப் பெறு மாம்?

வாயால் சிரிக்க முடி யுமா? உயிரற்றதற்கு ஏது உணர்வு?

Read more: http://viduthalai.in/e-paper/92401.html#ixzz3L20lf1pB

தமிழ் ஓவியா said...

மூன்று நாள் சட்டமன்றமா?

ஆறு மாத இடைவெளியில் சட்டப் பேரவை நடத்தப்பட வேண்டும் என்பது விதி - மரபும்கூட! நிதி நிலை அறிக்கையைத் தொடர்ந்து குளிர்கால கூட்டத் தொடர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மாதக் கணக்கில்கூட நடத்தப்படுவதுண்டு.

தமிழ்நாடு சட்டமன்றம் என்பது புகழ் பெற்ற ஒன்றாகும். திராவிட இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட சட்டமன்றத்தைப் பார்ப்பதற்கு வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் வருவார்களாம்.

அவ்வாறு நேர்த்தியாக, நாகரிகமாக சட்டமன்றத்தை நடத்திக் காட்டியது நீதிக்கட்சி. இவ்வளவுக்கும் தறுதலையாகப் பேசும் வாயாடி சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர்கள்கூட எதிர்க்கட்சியாக இருந்து சண்ட மாருதம் செய்யக் கூடியவர்கள்தான்; எந்த நிலையிலும் அவை தரம் தாழ்ந்து போனது கிடையாது.

தேவதாசி ஒழிப்பு மசோதா வந்தபோது, இது மத விடயத்தில் அரசு தலையிடுவதாகும்; தேவதாசிகளாக இப்பிறவியில் இருந்து தொண்டு செய்தால், அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் என்று சத்திய மூர்த்தி அய்யர் சொன்னபோது டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சரியான பதிலடி அறிவுப் பூர்வமாகக் கொடுத்தார். இதுவரை எங்கள் பரம்பரை தேவதாசி களாக இருந்து மோட்சம் போனார்கள். இனி மேல் சத்தியமூர்த்தி அய்யர் பரம்பரை தேவதாசிகளாக இருந்து மோட்சத்திற்குப் போகலாமே என்று அறிவுப் பூர்வமாக - நயமாகப் பேசிய சட்டமன்றம் தமிழ்நாடு சட்டப் பேரவை.

அத்தகைய சட்டமன்றம், நீதிமன்றத்தால் குற்றஞ் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் ஒருவரைப் புகழ்பாடும் மன்றமாக ஆனது அவலமே.

ஒரு முதுபெரும் தலைவர் சட்டமன்றத்தில் அமரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுகோள் விடுத்தும், அதனைக்கூட மதிக்காத பண்பு - தமிழ்நாடு சட்டசபைக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது.

இந்தக் குளிர் கால சட்டசபைகூட முறைப்படி அரசு தரப்பில் கூட்டப்படவில்லை. எதிர்க்கட்சிகள் குறிப்பாக திமுக தலைவர் பல அறிக்கைகளை வெளியிட்ட பின்புதான் ஆளும் கட்சியின் தரப்பு மனம் திறந்தது.

இரண்டு நாட்கள் மட்டுமே கூட்டுவதாக இருந் தார்களாம். எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதன் காரணமாக போனால் போகிறது என்று ஒரு நாள் கூட்டி மூன்று நாட்கள் சட்டசபை நடைபெறுகிறதாம்.

இன்றைய சூழலில் நாட்டை எதிர்நோக்கும் பிரச்சினைகளின் நீண்ட பட்டியலை அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவிருந்த கலைஞர் அவர்கள் வெளியிட்டுள்ளார். மற்ற கட்சிகளும் இந்த வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளன.

தமிழ் ஓவியா said...

மக்கள் பிரச்சினையை சட்டமன்றத்தில்தானே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் பேச வேண்டும். அந்தச் சட்டமன்றத்தையே கூட்டவில்லை என்றால் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையைச் செய்யத் தடுக்கப்படுகிறார்கள் என்று பொருளாகும்.

ஆளும் கட்சியின் சார்பில், சட்டசபைக்குள் இல்லாத தலைவர்களைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசலாம்; அவை, அவைக் குறிப்பில் ஏறும், எதிர்க் கட்சிகள் அதற்குப் பதில் கூறினால் அவை அவைக் குறிப்பில் ஏறாது என்றால், இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா?

தமிழ்நாடு அரசுமீது தலைவர்கள் வெளியில் சில ஊழல் குற்றச்சாற்றைக் கூட எடுத்து வைத்துள்ளனர். மடியில் கனம் இல்லையானால் அந்தக் குற்றச் சாட்டுகளை சட்டசபையிலும் சொல்ல எதிர்க்கட்சி களுக்கு வாய்ப்புக் கொடுத்து, அதற்கான பதில் ஆளும் தரப்பில் இருந்தால், விளக்கமாகக் கூறலாமே; அதன் மூலம் அரசின்மீது சொல்லப்படும் ஊழல் குற்றச்சாற்றும் இருந்த இடம் இல்லாமல் போய் விடுமே.

நாடாளுமன்றத்தில் எவ்வளவு ரகளை நடந் தாலும்கூட அவைக் காவலர்களை அழைத்து உறுப் பினர்களை வெளியேற்றச் சொல்லுவதில்லை. தமிழ் நாட்டில் என்னடா என்றால் எதிர்க்கட்சி உறுப்பினர் களைக் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியேற்றுவது என்பது அன்றாடச் செயலாகி விட்டது.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது தாங்கள் செய்வது எல்லாம் சரியே என்ற மனப் போதை இருக்கும். ஆனால் வெளியில் மக்கள் எடை போட்டுக் கொண்டு தானிருப்பார்கள்; வாய்ப்புக் கிடைக்கும் பொழுது காட்ட வேண்டிய நேரத்தில் முத்திரைப் பதிப்பார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

கவுரவக் கொலை தொடர்பான மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு விரும்பும் நிலையில், மாநில அரசுகளின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லையாம்.

எந்த நிலையில் தமிழ்நாட்டு அரசின் நிருவாகம் இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே.

வேறு எந்தக் கால கட்டத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் ஆட்சி ஒன்று இருக்கிறதா என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு நிலைகுலைந்து போயிருக்கிறது என்பதுதான் உண்மை.
உண்மையைச் சொல்லப் போனால் ஊடகங்கள் முட்டுக் கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றன.

நீண்ட காலத்திற்கு இந்த நிலை எடுபடாது ஒரு கட்டத்தில் ஊடகங்கள் தங்களின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள உண்மை நிலையை வெளிப் படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடும்.

தூக்கி விட்ட பூனை, எலியைப் பிடிக்காது; என்பது நம் நாட்டுப் பழமொழி என்பதை நினைவுபடுத்துவது நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் கடமை என்கிற முறையில் இதனை நினைவூட்டுகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/92403.html#ixzz3L20zR6LP

தமிழ் ஓவியா said...

நெல்சன் மண்டேலா மறையவில்லை - நிறைந்து விட்டார்!

இன்று (5.12.2014) மாபெரும் மனிதகுலப் போராளி நெல்சன் மண்டேலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்!

அண்மையில் பாலி - (இந்தோ னேஷியாவின் பகுதி) - சென்று சிங்கப் பூருக்குத் திரும்பினோம். விமான நிலையப் புத்தகக் கடையில், நெல்சன் மண்டேலா பற்றிய அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் அரிய மாயா ஆங்கேலூ (Maya Angelou) என்ற பிரபலமான பெண் கவிஞர் - எழுத் தாளர் இயக்குநர், ஆசிரியர், செயல் வீராங்கனை என்ற பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட அம்மையார் இவர் - எழுதிய அமெரிக்க அரசின் வேண்டு கோளுக்கிணங்க எழுதி அஞ்சலி வீர வணக்கம் செலுத்திய ஆங்கிலக் கவிதை நூல் ஒன்று வாங் கினேன்.

விமான நிலையத்திலேயே - நேரம் இருந்ததால் படித்து முடித்தேன். சுவைத்தேன்.

நெல்சன் மண்டேலாவின் அரிய கருத்தாக அவ்வெளியீட்டில் முன்னுரிமை கொடுத்து வெளியிடப்பட்ட கருத்து - அறிவுரை இதுதான்.

“Education is the most powerful weapon you can use to change the World”
- Nelson Mandela

உலகை நீங்கள் மாற்றிடுவதற்கு கல்வி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை விட வேறு சிறந்தது எதுவுமில்லை - நெல்சன் மண்டேலா என்பதே அதன் கருத்து.

இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் ஆன தந்தை பெரியார் சமுதாய மாற்றத்திற்கு கல்விதான் சிறந்த ஆயுதம் ஆகும் என்றார்.

பெரிய சிந்தனையாளர்கள் எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா!

நெல்சன் மண்டேலா (1918-2013) ஒரு யுகப் புரட்சியாளர்.

உறுதிகொண்ட நெஞ்சத்தவர். 27 ஆண்டுகள் ரோபன் தனிமைத் தீவு அறை சிறை - அவரது உறுதியை மேலும் பலமாக்கியதே தவிர, தன் விடுதலைபற்றி எண்ணாது, தன் சமுதாய மக்களின் அடிமை வாழ்வுக்கு எப்போது விடுதலை என்றே ஏங்கினார்; சிந்தித்தார்; செயல் பட்டார்! வென்றார்!

அடக்குமுறைகள் அவரை மேலும் மேலும் தலை நிமிரச் செய்தனவே தவிர கூனிக்குறுகி, மண்டியிடும் மனோ நிலைக்குத் தள்ளவே இல்லை.

தணலில் இட்ட தங்கம் கரைந்தா விடும்?

தகத்தகாய ஒளியுடன் அல்லவா பிரகாசிக்கும்!
உணர்ச்சியூட்டும் அவரை
வழியனுப்பி இறுதி மரியாதை
செய்தஅவ் வீரமும்
உணர்வும் கொப்பளித்த
ஆங்கிலக் கவிதை வரிகளில் சில.
(முழுவதும்கூட பிறகு வெளிவரும்)

“We will not forget you
We will not dishonor you
We will remember and be glad
That you lived among us.’’

உங்களை ஒரு போதும் மறக்க மாட்டோம்
உங்களை என்றும் நினைவில் நிறுத்தி மகிழ்வோம் (மறவோம்)
நீங்கள் எங்களுடன் வாழ்ந்தவர்!

“That you taught us
And
That you loved us
All!”

நீங்கள் எங்களின் ஆசானாக இருந்து போதித்தீர்!

மேலும்
நீங்கள் எங்களை எல்லாம் நேசித்தீர்!

நமது உணர்வுகள்:

(எங்களுக்காகவே நீங்கள் வாழ்ந்தீர் - விடுதலை துறந்தீர்) என்பதே அவர்தம் உள்ள விழைவு அல்லவா!

நெல்சன் மண்டேலா மறைய வில்லை! மறையவில்லை!!

நிறைந்து விட்டீர், நிறைந்து விட்டீர்! உலக மக்களின் உரிமைப் போராட்ட உணர்வில் உறைந்து கிடக்கிறீர்! என்றும் நின் பணி தொடர்வோம். - நம் உணர்வு இது.
veeramani
Read more: http://viduthalai.in/page-2/92404.html#ixzz3L21HNyxT

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படை எங்கே போகிறது? - இந்து ஏட்டின் சிறப்புக் கட்டுரை


ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படை எங்கே போகிறது?

இந்து ஏட்டின் சிறப்புக் கட்டுரை

ஆர்.எஸ்.எஸ்.

சங்பரிவாரம் வலியுறுத்தி வரும் சுதேசி மனப்பான்மையும், எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதும், நரேந்திர மோடியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான வையாக இருந்தாலும், பரவலாக நாடு முழுவதிலும் தங்களின் செல்வாக்கை விரிவுபடுத்தும் மாபெரும் இலக்கை எட்டவேண்டிய தேவை பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளது.

அமைப்பை விரிவுபடுத்தும் ஆர்.எஸ். எஸ்.சின் செயல் திட்டப் பணிகளின் தலைமைப் பொறுப்பில் டில்லியில் உள்ள 45 வயதாகும் ராஜீவ் டுலியை சந்தியுங்கள். அவரது அலுவலகத்துத் தொலைபேசி சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது; தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப் பில் எவ்வாறு சேர்வது என்று கேட் கின்றனர். ஆன்லைனில் தான் அனுப்பிய விண்ணப்பத்தின் நிலை என்ன என்று தொழில் நுட்பப் பொறியாளர் ஒருவர் கேட்கிறார். அவரது பின்னணியைப் பற்றி அறிந்து கொள்ளவும், சங்கத்திற்குப் பணியாற்றுவது பற்றி அவர் கொண்டி ருக்கும் உறுதியைப் பற்றியும் டுலி அவரை சில கேள்விகள் கேட்கிறார். சங்கத்தில் முக்கிய சடங்காகக் கருதப் படும், தவறாமல் நடக்கும் சாகா என்னும் உடற்பயிற்சி வகுப்பு, கூட்டு வழிபாடு, அதன் நிறுவனரான கேசவ் பாலிராம் ஹெட்கேவார் மற்றும் அவரின் அடுத்த தலைவராக வந்த கோல்வால்கர் ஆகியோரின் கருத்துகள் மற்றும் பிரச்சார உத்திகள் பற்றி நடத்தப்படும் கூட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அவரது வீட்டுக் கதவை தினந்தோறும் விடியற்காலையில் தட்டு வார்கள் என்று டுலி அவரை எச்சரிக் கிறார். அதன் பின்னர் தெற்கு டில்லி மாளவியா நகரில் உள்ள சாகாவிற்குச் சென்று தொடர்பு கொள்ளுமாறு அவ ருக்கு டுலி வழிகாட்டுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் அங்கமான பா.ஜ.க. மத்திய ஆட்சி அதிகாரத்தில் இல்லாத 2012 ஜூலை மாதத்தில் மாதந்தோறும் 200 க்கும் குறைவான மக்களே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேருவதற்காக விண்ணப் பித்து வந்தனர். ஆர்.எஸ்.எஸ். தங்கள் உறுப்பினர்கள் பற்றிய பதிவேடு எத னையும் வைத்துக் கொள்வதில்லை. எனவே நாட்டில் உள்ள சாகாக்களின் எண்ணிக்கை அது பரவியுள்ள பகுதி களைக் கொண்டு அளவிடப்படுவதுதான். ஜூலை 2014 லிருந்து சாகாக்களின் எண்ணிக்கை 39,000 லிருந்து 42,000 மாக அதாவது 10 விழுக்காடு உயர்ந்துள்ளது.

உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம்

நம் முன் உள்ள சவாலே, எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, அடுத்த அய்ந்து ஆண்டுகளில் நமது உறுப்பினர் எண்ணிக்கையை இரண்டு மடங்காக ஆக்குவது என்பதுதான் என்று டுலி கூறுகிறார். அடுத்த அய்ந்து ஆண்டு காலத்தில் ஒரு லட்சம் சாகாக்களையும், ஒரு கோடி தொண்டர்களையும் உரு வாக்கும் இலக்கை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் ஆக்ராவில் நவம்பர் தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு மூன்று நாள் இளைஞர் முகாமில் பேசும் போது நிர்ணயித்தார். இந்த இலக்கை எட்டுவதற்கு சங்கம் கடுமையாகப் பணியாற்றி வருகிறது. பெருநகரங்களில் உள்ள தொழில் நுட்ப, நிர்வாக மற்றும் இதர தொழில் புரிவோர்களுக்காக வாரம்தோறும் நடைபெறும் அய்.டி. மிலான் என்னும் சாகாக்கள் புதிதாக உருவாகியுள்ளன. டில்லியில் இது போன்ற 36 தொழில்நுட்ப சாகாக்களும், பெங்களூருவில் 100 சாகாக்களும் உள்ளன. சங்கம் மற்றும் அதன் கிளை அமைப்புகள் கணிசமான கணினி ஆன்லைன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. சாகாவின் செயல்பாடு மற்றும் அதைப் பற்றிய விவரங்கள் அலைபேசியில் கேட்கப்பட்டாலும் அளிக்கப்படுகின்றன.

எங்களது இறுதி லட்சியம் ஹிந்து ராஷ்டிரா. இந்த இலக்கை எட்டுவதற்கும், ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகங் களை மனநிறைவடையச் செய்வதைத் தடுப்பதற்குமான வழிமுறைகளில் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் எனப்படும் சிறுபான்மையினருக்கான ஆர்.எஸ். எஸ்.சின் பிரிவுப் பொறுப்பாளர் வீரக் பச்போர் கூறுகிறார்.


தமிழ் ஓவியா said...

அரசில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்பு

நரேந்திரமோடி அரசு மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது முதல், தங்கள் அமைப்பின் லட்சியம், செயல் பாடுகள் பற்றிய கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதற்கு, பெரும்பாலும் அரசின் உதவியுடன், ஆர்.எஸ்.எஸ். ஒரு பல முனை அணுகுமுறை மற்றும் திட்டத்தை வகுத்துப் பின்பற்றி வருகிறது. அக்டோபர் 4 ஆம் தேதியன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவரின் விஜயதசமி பேச்சை அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடி ஒளி பரப்பு செய்ததை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். இந்த அமைப்பின் மிகமிக முக்கியமான நிகழ்ச்சியாகக் கருதப்படும் அமைப்பின் தலைவர் ஆண்டுதோறும் நிகழ்த்தும் இந்த விஜய தசமி பேச்சு தொண்டர்களுக்கு வழி காட்டுவதற்காக மேற்கொள்ளப்படுவ தாகும். ஆனால் இந்த முறை தூர்தர்ஷன் மேடை கிடைத்ததால், மோகன் பகவத் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கான உரையை ஆற்றினார்.

ஜூலை 2014 க்குப் பிறகு நாடு முழுவ திலும் உள்ள சாகாக்களின் எண்ணிக்கை 39,000 லிருந்து 42,000 மாக 10 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது.

சிலவாரங்கள் கழித்து, ஆர்.எஸ். எஸ்.சுக்கு மிக நெருக்கமானவர் என்று கருதப்படும் சூர்யபிரகாசை அரசு அமைப்பான பிரசார் பாரதியின் தலைவ ராக மத்திய அரசு நியமித்தது. இதற்கு முன், இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனத்தின் தலைவராக ஒய்.எஸ்.ராவை அரசு நியமித்தது. வரலாற்றை காவி மயமாக்கும் பா.ஜ.க.யின் முயற்சி பற்றிய விவாதத்தை இது மறுபடியும் துவக்கி வைத்துள்ளது.

அரசு அமைப்புகள், நிறுவனங்களில் செய்யப்படும் நியமனங்கள் சங்கத்தின் செல்வாக்கை வளர்ப்பதற்கான திறவு கோல்களாகும். அரசு மாற்றத்திற்குப் பிறகும் தங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் திறன்படைத்தவர்களைக் கொண்டு, இந்து வலதுசாரிக் கொள் கைக்கு அரசை செலுத்துவதுதான் எங்களது திட்டத்தின் மய்யக் கருத்தாகும். பாதுகாப்பு மற்றும் கல்வி பற்றிய நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்த ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது என்று டில்லி பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறைத் தலைவர் பிரதீப் தத்தா கூறுகிறார்.

தமிழ் ஓவியா said...

ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப் பட்ட கல்வி முறையில் மாற்றங்களை சரஸ்வதி சிசு மந்திர் மூலமாகக் கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளதாக விஸ்வ சம்வாத் கேந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகளில் மொழிப் பாடங்கள் கற்பிக்கப்படுவதில் சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் ஒருவர், ஒட்டுமொத்த இந்தியாவையும் சமஸ்கிருதத்தால் இணைத்துவிட இயலும் என்பதால் அதனைப் பரப்புவதை நாம் வலியுறுத்தவேண்டியது அவசியம். இது பற்றிய மக்களின் மனநிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு அர சுடன் இணைந்து ஆர்.எஸ்.எஸ். பணி யாற்றி வருகிறது என்று கூறுகிறார்.

தான் இளைஞராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். சாகா ஒன்றின் தலைவராக இந்தியாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கார் இருந்துள்ளார். பா.ஜ.கட்சியில் பணியாற்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ்.சினால் அனுப்பப்பட்ட பிரசாரகர்தான் இன்றைய பிரதமர் நரேந்திரமோடி. கடந்த தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சியில் நேர்ந்தது போல ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அரசும் எந்த விஷயத்தைப் பற்றியும் மாறுபட்ட கருத்துகளை வெளியிடக்கூடாது என்ப தற்காக மட்டுமே இத்தகைய சந்திப்புகள் நடந்தன என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறினாலும், மோடி அரசின் அமைச்சர் களுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பல முறை சந்தித்து, பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளனர். தனது நீண்ட கால இலக்கை எட்டு வதற்காக, மோடி அரசின் தீவிரமான தாராளமயமாக்கல் கொள்கையில் கூட சமரசம் செய்து கொண்டு, கண்டு கொள்ளாமல் இருக்க ஆர்.எஸ்.எஸ். தயாராக உள்ளது. சங்பரிவாரம் வலி யுறுத்தி வரும் சுதேசி மனப்பான்மையும், எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதும், நரேந்திர மோடியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவையாக இருப்பவை என்றாலும், ஆர்.எஸ்.எஸ். தோன்றி நூறு ஆண்டுகள் முடிய இருக்கும் 2025 ஆம் ஆண்டுக்குள் பரவலாக நாடு முழுவ திலும் தங்களின் செல்வாக்கை விரிவு படுத்தும் மாபெரும் இலக்கை எட்டுவதில் ஆர்.எஸ்.எஸ். நாட்டம் கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆட்சி அதிகார அரசு எதுவும் தேவையில்லை. அதற்கு அதன் கோட்பாடே மிகமிக முக்கிய மானது. அதனுடைய நீட்சி, செல்வாக்கு, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றல் ஆகியவை 2025 ஆம் ஆண்டில் போதுமான அளவில் மெய்ப்பிக்கப்பட்டி ருக்கும் என்று அண்மையில் பா.ஜ. கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து அனுப் பப்பட்ட பா.ஜ.க.யின் பொதுச் செயலாளர் முரளிதர்ராவ் கூறுகிறார். பா.ஜ.க. ஆட்சி யில் இல்லாத மாநிலங்களின் தேர்தல் களில் இக்கட்சி வெற்றி பெற்று அரசு அமைப்பதற்கு எவையெல்லாம் தேவையோ அவற்றை எல்லாம் கட்சி செய்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சின் மூத்த தலைவர் ஒருவர் தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ்.சின் விருப்பப் பட்டியல் மிக நீண்டதும், முரண்பாடுகள் மிக்கதுமாகும். அரசமைப்பு சட்ட 370 ஆவது பிரிவை நீக்குவது, அனைத்து மத மக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை உருவாக்குதல், வடகிழக்குப் பிராந்தியத்திற்கு விசேட சலுகைகளும், கூடுதல் அதிகாரங்களும் அளிக்கும் அரசமைப்பு சட்டத்தின் ஆறாவது அட்டவணையை நீக்குவது போன்ற சட்டப் பணிகளை, மக்களவையில் மட்டுமல்லாமல், மாநிலங்கள் அவை களிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்டிருக்கும் மிருகத்தனமான பெரும்பான்மையின் அடிப்படையில் மட்டுமே செய்ய இயலும்.

டில்லியில் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு மோடிக்கு, பகவத் தலைமை யிலான ஆர்.எஸ்.எஸ். தனது தொண்டர் களின் பலத்தை அளித்து உதவியது. தற்போது பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அதிகாரத்தில இருக்கும் நிலையில், மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் டில்லி பயணங்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. அங்கு பா.ஜ.க. அலுவலகம் உள்ள சிறு கட்டிடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் 10 அடுக்கு நவீன அலு வலகக் கட்டடம் ஒன்று கட்ட ஆர். எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. 90 ஆண்டு கால அடித்தளத்தில் வேர்கொண்டு நிலைப்பதற்கு ஏற்றவாறு ஆர்.எஸ்.எஸ். தன்னை எதிர்காலத்துக்குத் தயார்படுத்திக் கொள்கிறது.

- நன்றி: தி ஹிந்து 30-11-2014 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page-2/92405.html#ixzz3L21Uv2oB

தமிழ் ஓவியா said...

மனுதர்ம நூலை அம்பேத்கர் எரிக்கச் சொல்கிறார்


சிலவற்றைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே மனுஸ்மிருதி.

அநீதிகளைச் செய்தாவது சிலவற்றை அழிக்கா விட்டால் பார்ப்பன இனம் அழிந்து போகும் என்றெண்ணி, அதற்காகச் சிதறி - ஒற்றுமையின்றிக் கிடந்த பார்ப்பனர்களை ஒன்று திரட்டி, சதி வேலைகளை நரித் தந்திரத்தின் மூலம் செய்து முடிப்பதற்காக விடப்பட்ட அறைகூவல் தான் மனுஸ்மிருதி.

சிதைந்த ஒற்றுமையை மீட்க அவ்வப்போது இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுவது வரலாற்று உண்மை. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற பழமொழிக்கேற்ப, மிக மிக முயன்று, புதிய கொடுமையான பார்ப்பன (அ)நீதியை உருவாக்கியவன் மனு.

இந்த மனுஸ்மிருதி, நீதியும் நேர்மை மிக்க தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அப்படிப்பட்ட நீதி நூலை உருவாக்குமளவுக்கு அவன் (மனு) ஒரு சமூகவியல் அறிஞனும் அல்ல. அவன் ஒரு அயோக்கியன்.

ஒரு குலத்துக்கொரு நீதி வழங்கும் இந்த மனுஸ்மிருதி தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டும். மீளமுடியாக் கொடுமைச் சேற்றில் எங்களை புதைக்க எண்ணிய மனுஸ்மிருதியை, உயிரைப் பணயம் வைத்தாவது ஒழித்துக் கட்டியே தீர வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்தது இதனால் தான்.

அம்பேத்கர் சிந்தனைகள் என்ற நூலிலிருந்து

Read more: http://viduthalai.in/page-7/92383.html#ixzz3L23Fk42A

தமிழ் ஓவியா said...

திருடியவன் யார்?

ஒருவர்: அய்யா சாமியாரே! என் வீட்டில் ஒரு மாடு திருட்டு போய்விட்டது. அது இப்பொழுது எங்கே இருக்கிறது என்று சரியாக சொல்லமுடியுமா?

சாமியார்: அப்பனே எல்லாம் இறைவன் செயல். இதை எப்படி நான் சரியாகச் சொல்லமுடியும்?

ஒருவர்: அப்படியானால் என் மாட்டைத் திருடிக் கொண்டு போனது உங்கள் இறைவன்தானா?

-எம்.ஆர்.ஓம்பிரகாஷ், சி.மெய்யூர்

Read more: http://viduthalai.in/page-7/92383.html#ixzz3L23NrCVZ

தமிழ் ஓவியா said...

கோயிலில் தமிழில்லை! புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற் கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.

பெரியார்:

சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்

தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்

பெரியார்:
கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?

தமிழன்:
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!

பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?

தமிழன்:
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?

பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?

தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!

பெரியார்:
தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?

தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?

பெரியார்:
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.

தமிழன்:
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!

பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!

குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)

Read more: http://viduthalai.in/page-7/92385.html#ixzz3L23VYbuN

தமிழ் ஓவியா said...

கலைகள் - ஓவியங்கள்


சிலர் சீர்திருத்தம் செய்வதன் மூலம், பழைய சின்னங்களையும் - ஓவியங்களையும் - கலை களையும் அழித்து விடாதீர்கள் என்கிறார்கள். இந்தக் கூட்டத்தார் எந்தப் பழைய சின்னம், ஓவியம், கலை முதலியவைகளை மனதில் நினைத்துக் கொண்டு சொல்கின்றார்கள் என்று நான் கண்ணியமாய் நினைக் கின்றேனோ அந்தச் சின்னமும்,

ஓவியமும், கலை களுமேதான், நம்மையும், நம் மக்க ளையும் நமது நாட்டையும் பாழாக்கியதுடன் ஒவ்வொரு அறிவாளி மனதிலும் சமுதாய சீர்திருத்தம் செய்து தீர வேண்டும். இல்லையேல் வேறு எந்த விதத் திலும் நமக்கு கதிமோட்சமில்லை என்று நினைக்கும் படியான நிலைக்குக் கொண்டு வந்து விட்டன.

- தந்தை பெரியார், விடுதலை 30.1.1974

Read more: http://viduthalai.in/page-7/92388.html#ixzz3L24o14Xi

தமிழ் ஓவியா said...

ஜீவாவின் பாடல்

கொள்ளைச் சிரிப்பு வந்ததே - குப்பன்
குழவிக்கல் சாமியென்று கும்பிட்டபோது
பிள்ளைவரம் பெற்றிட வென்று - வள்ளி
பேரரசு வேப்பமரம் சுற்றியபோது
கள்ளை மொந்தையாக குடித்து - சுப்பன்
காட்டேரி ஆடுதென்று கத்தியபோது
சள்ளைதரும் பாவம் தொலைக்க - பொன்னி
சாக்கடையே தீர்த்தமென்று மூழ்கியபோது
-கொள்ளைச் சிரிப்பு
கொள்ளைச் சிரிப்பு வந்ததே - ராமன்
கோவிலுக் கழுதுபாப்ப ராகியபோது
எள்ளும் நீரும் வாரியிறைத்து - கண்ணன்
எத்துவாளிப் பார்ப்பானை வந்தித்தபோது
புள்ளினக் கருடனைக் கண்டு- சீதை
பூமியில் விழுந்து கிருஷ்ணா என்றிட்ட போது
கள்ளக்காவி வேடதாரிக்கே - லீலா
கடவுள் பணிவிடைகள் செய்திட்ட போது
-கொள்ளைச்சிரிப்பு

ப.ஜீவானந்தம்
ஆதாரம்: ஜீவாவின் பாடல்கள்

Read more: http://viduthalai.in/page-7/92388.html#ixzz3L24xLrDp

தமிழ் ஓவியா said...

அறிவுச்செல்வி.... அன்புச்செல்வன்...


அண்மையில் சென்னையில் நடைபெற்ற தலையங்க விமர்சனம் நூறாவது வார அமர்வு நிகழ்ச்சியில் பங்குபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தோழர் வேல்சாமி-ரேகா ஆகியோர் தன் இரட்டைக் குழந்தைகளுக்குப் பெயரிடச் சொல்லி வேண்ட, தலைவரும் பெண் குழந்தைக்கு அறிவுச்செல்வி என்றும், ஆண் குழந்தைக்கு அன்புச்செல்வன் என்றும் பெயரிட்டு மகிழ்ந்தார். உடனே அங்கு அமர்ந்திருந்த கருஞ்சட்டைத் தோழர்களிட-மிருந்து பலத்த கரவொலி எழுந்தது. அருகில் அமர்ந்திருந்த தோழர் ஒருவர் இந்த மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பிற்குக் காரணம் என்ன என்று வினவினார்.

அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என்றும், அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் என்றும், ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே என்றும் ஏதோ பெண் என்பவள் அறிவு என்பதற்குச் சற்றும் தொடர்பில்லாதவள் போன்றும், அன்பினைத் தருவது மட்டும்தான் அவள் கடமை என்பது போன்றும், ஆண் என்றால் அறிவினைத் தருபவர் என்றும், அன்பு செலுத்துவது என்பது அவனுக்குத் தொடர்-பில்லாத துறை என்பது போன்றுமே சொல்லப்பட்டு வந்த, இன்றும் பெரும்பகுதி மக்களால் எண்ணப்படுதல் காணலாம். பெண்குழந்தைக்கு அறிவுச்செல்வி என்றும், ஆண் குழந்தைக்கு அன்புச்செல்வன் என்றும் பெயர் சூட்டலின் மூலம் மாற்றியமை பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியார் அவர்களின் அடியொற்றி, அவர் சிந்தனைகளி-லிருந்து சிறிதும் பிறழாத திராவிடர் கழகத் தலைவரின் சிந்தனையினைத் தெள்ளத்-தெளிவாகக் காட்டியது.

மேலும், அங்கு நிகழ்ந்த சமூக மாற்றமும், ஊடகங்களும் என்ற கருத்தரங்கத்தில் பல்வேறு ஊடகங்களிலும் பணிபுரியும் வாய்ப்பு பெற்ற நம் இளைஞர்கள் கலந்துகொண்டு திராவிட இயக்கங்களின் வளர்ச்சி, தேக்கநிலை, செயல்கள், ஊடகங்களின் புறக்கணிப்பு போன்றவை குறித்து கவலை தெரிவித்து பேசியவற்றிற்குப் பதில் அளிக்கும்விதமாக அவர் உரையில் திராவிடர் கழகம் ஊடகங்களை நம்பி இல்லை. எந்தவொரு ஊடகமும் ஆதரவு தராதபோதும் தனியாக நின்று சமுதாயப் பணிகளை எந்தத் தொய்வும் இல்லாமல் செய்து முடிக்கும் என்று முழங்கியபோது எதிர்ப்பைத் தாண்டி, புறக்கணிப்புகளை மீறி, ஊடக மறைப்புகளைக் கடந்து வளர்ந்த இயக்கம் இது; எல்லாவற்றையும் கடந்து மக்களிடம் நேரடியாகத் தொடர்புள்ள இயக்கம் இது. அதைத் தொடர்ந்து செய்வோம் என்று சொன்ன துணிச்சல், தந்தை பெரியாரை நம் கண்முன்னே நிறுத்துவதாக இருந்தது.

- இறைவி

தமிழ் ஓவியா said...

ஆறறிவுப் போர்வாள்!


மாணவர்களை உருவாக்குபவர் ஆசிரியர்!
நீங்களோ பேராசிரியர்களை
உருவாக்கும் ஆசிரியர்!

தன் முதுகெலும்பை
பெரியாரின்
கைத்தடியாய்க் கொண்டவர்!

உடலுக்குள் இருக்கும் உயிர்போல
திடலுக்குள் இருக்கும்
அய்யாவின் கொள்கைக்காகக்
கொடி பிடிப்பவர்!

வெய்யிலிலும், மழையிலும்
தமிழர்களைக் காக்க
பெரியாரின்
கருப்புச் சட்டையில்
குடை பிடிப்பவர்!

சூத்திரனுக்குச் சூரியனாய்
பஞ்சமனுக்குப் பகலவனாய் இருந்து அவன் வீட்டுக்கு
வெளிச்சம் கொடுப்பவர்!

இனத் தொழிலை எதிர்க்கும் இளம் பெரியார்!
அவாளுக்குச் சவால் விடும்
ஆறறிவுப் போர்வாள்!
ஆத்திக நெறிகளை
விரட்டிட வந்த
பகுத்தறிவுப் பறை இசை!
கர்ம வினைகளுக்கு
எதிரான உயர்திணை!
காவித் துணியைப்
போகிக்குக் கொளுத்திய
கருப்பு நெருப்பு!
அம்பேத்கர் ஈன்ற
இடஒதுக்கீட்டுக் குழந்தையை
ஓர் தாயாய் இருந்து
தாலாட்டுபவர்!
எல்லோரும் தாயின்
தொப்புள் கொடியில்தான்
பிறந்தவர்கள்!
நீங்களோ தந்தையின்
தொப்புள் கொடியில்
பிறந்தவர்!
கருவை, காதலை கலைக்கும் மருத்துவர்களிடையே
ஜாதி வெறி எதிர்த்து
நீதி நெறி காக்கும்
உண்மையான மருத்துவர்!
நீங்கள் தான்
சமூகநீதி மருத்துவர்!
வாழ்க பல்லாண்டு!

- வன்னிஅரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

தமிழ் ஓவியா said...

இவ்விடம் அரசியல் பேசலாம்



கேமராக்காரன் எங்கப்பா?

போட்டோ எடுத்தாச்சா...?

"தோழரே என்னது நம்ம தெருவுல வெடிச்சத்தமெல்லாம் காதைக் கிழிக்குது? எதும் அரசியல் கட்சி மீட்டிங்கா?" என்று கேட்டபடியே சலூனிற்குள் நுழைந்தார் தோழர் மகேந்திரன்.

"இந்த க்ளீன் இந்தியா திட்டத்துக்காக இன்னைக்கு பி.ஜே.பி. கட்சியிலிருந்து யாரோ ஒரு வி..அய்.பி. இந்தத் தெருவைச் சுத்தம் பண்ண வர்றாராம்! அவருக்கு வரவேற்புதான்!"



"நம்ம தெரு ஏற்கெனவே சுத்தமாத்தான இருந்துச்சு? இப்ப தெருவெல்லாம் வெடிக்குப்பை மட்டும் தான் இருக்கு!"

"அதேதான் தோழர்! ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் மாதிரி இந்தக் குப்பைய அந்த வி.அய்.பி.யே பெருக்கப் போறாரு!"

"இதெல்லாம் ஒரு பொழப்பா?!"

"குப்பையே இல்லாத இடத்துல குப்பையைக் கொட்டுறதும், அதை புது விளக்குமாறால கூட்டுற மாதிரி போஸ் கொடுக்குறதுமாத்தான் கூத்தடிக்கிறாங்க தோழரே! வாழ்க்கையில ஒரே ஒரு தடவை வௌக்கமாத்தைப் புடிச்சுக்கிட்டு இம்புட்டு சீன் போடுறாங்களே, நான் ஒவ்வொரு வாடிக்கையாளர் வந்துட்டுப் போன பிறகும் கூட்டிப் பெருக்கிட்டுதான் இருக்கேன்! இதெல்லாம் இவங்களுக்குத் தெரியுமா?"

"அருமை! இப்படி உங்களை மாதிரி ஆளாளுக்குக் கேள்வி கேட்டால்தான் இவங்க கேமராவுக்கு முன்னால நடிக்கிறதை நிறுத்துவாங்க!"

"பின்ன என்ன சார், தூய்மை இந்தியா தூய்மை இந்தியான்னு சொல்றாங்களே, ஒருத்தராவது சாக்கடையை அள்ளுறாங்களா? அல்லது உண்மையிலேயே குப்பைக்காடா கிடக்குற இடத்துல போயி வேலை செய்யறாங்களா? நம்ம மக்களையெல்லாம் அடிமுட்டாள்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க தோழரே!

"சரியா சொன்னிங்க! கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு இவங்க சாக்கடைக்குள்ள இறங்குனால் சாக்கடையே கொந்தளிச்சு சுனாமி வந்திடும் போங்க!"

"ஹ! ஹ! ஹ! நம்ம மக்களையெல்லாம் இப்படி வௌக்கமாத்தைக் காட்டியே ஏமாத்திட்டு, சைக்கிள் கேப்புல ஆஸ்திரேலியாவுல போயி ஒப்பந்தம் போட்டுட்டார்னு பேசிக்கிறாங்களே தோழரே... அது என்ன விஷயம்?"

"நீங்க கேள்விப்பட்டது உண்மைதான். காங்கிரஸைக் குத்தம் சொல்லி ஆட்சிக்கு வந்த சூட்டோட ஆர்.எஸ்.எ.ஸ். கொள்கையைப் புகுத்துறதிலும், மோடியோ தொழிலதிபர் நண்பர்களைப் பாதுகாக்கிறதிலும்தான் அக்கறையா இருக்காங்க!"

"ஓகோ! அப்போ ஆஸ்திரேலியா போனது நம்ம நாட்டு மக்களுக்காக இல்லையா?"

"அதெல்லாம் வெறும் கண்துடைப்புதான் தோழர். உண்மையில மோடியோட நண்பர் அதானிக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு வியாபாரத்தைப் பேசி முடிக்கிறதுக்காகத்தான் போனதே!"

"அதுக்காக அம்புட்டு தூரம் இவரு போகணுமா என்ன?"

"பின்ன, இதென்ன பத்தாயிரம் இருபதாயிரம் ரூபாய் விஷயமா? ஒரு பில்லியன் டாலர் வியாபாரமாச்சே! நம்ம ஊர் மதிப்புக்கு 6,500 கோடி ரூபாய்! அதுவும் ஆஸ்திரேலியாவுல அதானி தொழில் தொடங்குறதுக்கு நம்மூரு ஸ்டேட் பேங்குதான் கடனுதவி பண்ணுது!"

"அடங்கொய்யால! நம்ம மக்கள் அஞ்சு பத்துன்னு கல்விக்கடன் வாங்கிட்டுக் கட்டலைன்னாலே திருடுன மாதிரி போட்டோவைப் போட்டு அசிங்கப்-படுத்துவாங்க. இதுவே அதானி, அம்பானின்னா மட்டும் "ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே" மாதிரி அள்ளிக் கொடுக்குறாங்களா?! அநியாயமா இருக்கே தோழர்!"

"அநியாயம்தான் பண்றாங்க! தெரிஞ்சேதான் பண்றாங்க! இவங்களுக்குத்தான் தெரியுமே, மகாபாரதத்துலதான் அநியாயத்தத் தட்டிக் கேட்க கிருஷ்ணர் வருவாரு, ஆனால் உண்மையில எந்த கிருஷ்ணாவும் வரப்போற-தில்லைன்னு!

தோழரோடு பேசிக்கொண்டே முடி வெட்டி முடிந்ததும் இன்னொரு வாடிக்கையாளர் வருகிறார். அவர் பார்ப்பதற்கு சாமியார் போல முடி வளர்த்தும் காவி உடுத்தியும் இருக்கிறார். "பார்க்கறதுக்கு சாமியார் மாதிரி இருக்கீங்க உங்களுக்குக் கட்டிங்கா? இல்ல ஷேவிங்கா?" என சந்தானம் கேட்க,

தமிழ் ஓவியா said...


"எனக்கு கட்டிங் ஷேவிங் ரெண்டும் தான்!" என்றவர், தொடர்ந்து, "நான் சாமியார்லாம் இல்லப்பா. இந்த சீசன்ல காவி கட்டுனாத்தான் மதிப்பா பார்ப்பானுங்கன்னு காவியில இருக்கேன்! அதுசரி, சாமியார்னாலே தாடிதான் வச்சிருக்கணுமா என்ன? அந்த ராம்பால்னு ஒரு சாமியார் கட்டிங்லாம் பண்ணி தொழிலதிபர் மாதிரியில்ல இருக்காரு!" என்று அவர் சொல்லவும், அவருக்குக் கட்டிங்கைப் பார்த்தபடியே சந்தானம் பேசத் தொடங்கினார்.

"இவர் சொன்ன மாதிரியே தான் தோழர் எனக்கும் டவுட்டா இருந்துச்சு! அப்படியே தொழிலதிபராட்டம்ல இருக்காரு!"

"அவரு உண்மையிலேயே தொழிலதிபர்தான் தோழர். ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியா இருந்ததாலதான் அந்த மாநில அரசாங்கமே அவர் மேல நடவடிக்கை எடுக்கத் தயங்குச்சு! இப்பல்லாம் எந்தச் சாமியார்தான் பூஜை பண்றதுல குறியா இருக்கானுங்க? உண்டியலைக் குறி வச்சுதானே சாமியாராகுறதே! நம்ம கறுப்புப் பணமெல்லாம் வெளி-நாட்டுல இருக்குங்கறதே பொய்யான பேச்சுதான். அம்புட்டும் இந்த மாதிரி கார்ப்பரேட் சாமியார்கள் கையிலதான் இருக்கு!"

"அப்படித்தான் தெரியுது தோழர்! அது-மட்டுமா? ஒன்னாம் நம்பர் கூலிப்படையால்ல இருக்கானுங்க! துப்பாக்கியால சுட வேண்டிய போலீசு கம்முன்னு இருக்கு, அந்தச் சாமியாரோட அடியாளுங்க துப்பாக்கியால போலீசைச் சுடுறானுங்க! ஒரு கொலைக்காக விசாரிக்கப் போயி அங்க ரெண்டு மூனு கொலை விழுந்திருக்குது போல! அவன்லாம் என் கையில சிக்குனான்னா ஒன்லி கட்டிங்தான் தோழர்!"

"இந்தச் சாமியார் போலீஸுக்கெதிரா துப்பாக்கியத் தூக்கினால், இன்னொரு சாமியார் பாபா ராம்தேவுக்கு துப்பாக்கி ஏந்திய இசட் பிரிவு பாதுகாப்புக் குடுக்குறானுங்க! என்ன கொடுமை பார்த்திங்களா தோழர்?"


தமிழ் ஓவியா said...

"அந்த ராம்தேவ் இன்னொரு கறுப்புப்பண தொழிலதிபர்! எப்பப் பார்த்தாலும் சில்க் ஸ்மிதா மாதிரி கவர்ச்சி காட்டிக்கிட்டுத் திரிவான்! அவனுக்கெல்லாம் இசட் பிரிவு இல்ல, "ஏ" பிரிவு பாதுகாப்புதான் கொடுக்கணும்!"

"ஹஹஹ! சாமியார்னு சொன்னதும் தான் இன்னொன்னு ஞாபகத்துக்கு வருது, கோவிலில் பூசாரியா அவா மட்டும்தான் இருக்கணும், மத்தவாளுக்கு சாஸ்திர சம்பிரதாயமெல்லாம் தெரியாதுன்னு சொல்றாங்க, பின்ன எதுக்கு தெய்வபாஷை சமஸ்கிருதத்தை நாமளும் கத்துக்கணும்னு இந்தத் திணி திணிக்கிறானுங்க தோழர்?"

"இது வேறயா? ஏற்கெனவே இந்தியத்தான திணிச்சுக்கிட்டிருந்தானுங்க? செத்துப்போன சமஸ்கிருதத்தை எதுக்குத் திரும்பவும் திணிக்கிறானுங்க? அவாளுங்களி-லேயே பாதிப் பேருக்கு சமஸ்கிருதம் தெரியாதே!"

"அதேதான்! அதுவும் ஜெர்மன் மொழிக்குப் பதிலா சமஸ்கிருதத்தைத் திணிக்கப் பார்க்குறாங்க!"

"மொழின்னா என்ன தலைக்கு வச்சுத் தூங்குற தலகாணியில பஞ்சடைக்கிறதுன்னு நினைச்சுக்கிட்டாங்களா? கண்டதையும் இப்படித் திணிச்சா கடைசியில பேதி வந்த மாதிரி பாதியிலேயே ஆட்சியை விட்டுட்டு ஓடுற நிலமைதான் வரும்! நீங்க வேணா பாருங்க தோழர்!"

"இவங்க எங்க சுயமா ஆட்சி நடத்துறாங்க? எல்லாம் காங்கிரஸோட பார்ட் 2 தான நடக்குது! அவங்க கொண்டு வந்தப்ப எதையெல்லாம் எதிர்த்தாங்களோ அதை-யெல்லாம்தான் இப்பக் கொண்டு வர்றாங்க! ஆதார் அட்டையை கிண்டல் பண்ணாங்க! இப்போ அதையும் தூசி தட்டுறாங்க! சிலிண்டர் மானியத்தை காங்கிரஸ் சொன்ன மாதிரியே பேங்க்ல டெபாசிட் பண்ணப்போறாங்க!"

"அதான! பிரதமர் பதவின்னா வெளிநாடு சுத்துறதும், கேமராக்காரன் எங்கயிருக்குறான்னு கரெக்டா பார்த்து போஸ் குடுக்குறதும்தான்னு நினைச்சுக்கிட்டார் போல!"

"ஆட்சிக்கு வந்த சில மாதத்திலேயே இம்புட்டு வெறுப்பைச் சம்பாதிக்கிறதுக்குப் பதிலா அந்தப் பதவியை வேற யாருக்காவது குடுத்துட்டு இவரோட வாழறதுக்குத் தயாரா இருக்குற இவரோட முன்னாள் மனைவி-யோடயாவது சேர்ந்து வாழலாம்ல!"

"அதுசரி, ஊருக்குத்தானே கலாச்சாரம், கம்னாட்டியெல்லாம்! சீதையைத் தீக்குளிக்கச் சொன்ன ராமனோட வழித்தோன்றல் என்னைக்குப் பெண்ணோட மனசைப் புரிஞ்சு நடக்கும்?

"அதுசரி, முத்தப் போராட்டத்துக்கு எதிரா காறிக் காறித் துப்பும் போராட்டம்னு கலாச்சாரக் காவலர்கள் அறிவிச்சாங்களாமே? என்னாச்சாம்?"

"போராட்டமெல்லாம் நடத்திட்டாங்க!"

"அப்போ அப்படியே "க்ளீன் இந்தியா" திட்டத்தால துப்புனதையெல்லாம் அவங்-களையே துடைக்கச் சொல்லியிருக்கலாம்ல?!"

"ஹஹஹஹ! அதுவும் சரிதான் தோழர்!"



- கல்வெட்டான்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயின்ற +2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னர், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது வழமை. அதை மாற்றி சி.பி.எஸ்.இ முடிவுகளைத் தள்ளிவைத்து, தமிழக மாணவர்களின் மதிப்பெண்ணை விடக் கூடுதலாக மதிப்பெண் வழங்கி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் இடங்களைப் பறிக்க முனைந்த சதிச் செயலைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் போராடி சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிய உண்மையை வெளிக்கொணர்ந்து அந்தச் சதியை உடனடியாக முறியடித்தவர் தமிழர் தலைவர் கி.வீரமணி என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

உலகம் இருளில் மூழ்குமா?

- சரவணா ராஜேந்திரன்

அமெரிக்க வானியல் ஆய்வுத்துறையான நாசா கூறியதாக அவ்வப்போது கட்டுக்கதைகளை உலகெங்கிலும் உள்ள சில மதவாதிகள் பரப்பிவிடுவதுண்டு. அதுவும் நாசாவின் இணையதளத்தில் இருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உலகை நம்ப வைப்பது தற்போது ஓர் ஏமாற்றுக் கலையாகப் போய்விட்டது.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதோ ராமர் பாலம் நாசாவே உறுதிசெய்த படம் என்று கூறி இந்து மத அமைப்புகள் பரபரப்பை உண்டாக்கின. இதற்கு நாசாவே மறுப்புத் தெரிவித்தும் இன்றும் ஒரு கூட்டம் இதை நம்புகிறது. சிதம்பரம் கோவிலுக்கு நேர் எதிரே வானவெளியில் இருந்து படம் எடுத்தால் அது வெண்மையாகத் தெரியும் என்பதும் நாசா பெயரில் வந்த கட்டுக்கதை. திருநள்ளாறுக்கு நேர் எதிராக வான்வெளியில் கடக்கும் எல்லா செயற்கைக் கோள்களும் சில வினாடிகள் செயலிழந்துவிடுமாம். இவை போன்ற மூடநம்பிக்கைகள் நாசாவின் பெயரால் பரப்பப்படுவதால் நாசா அவ்வப்போது மறுப்பு வெளியிட்டு வந்துள்ளது. இப்போது மேலும் ஒரு புரளி
"2014 டிசம்பர் மாதம் உலகம் இருளில் மூழ்கப் போகிறதாம்?

கிறித்தவ மதத்தின் சில பிரிவினர் இதோ தேவ மைந்தனின் இரண்டாம் வருகை என்று அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தற்போது தங்களின் வியாபாரத்திற்கு நாசாவையும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். 'உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும். அப்போது இறைவனுக்கு எதிரானவர்கள் அழிக்கப்-படுவார்கள்' என்பது கிறித்தவ மதத்தில் ஒரு பிரிவினரது நம்பிக்கை ஆகும். அவர்கள் தற்போது புதிய கட்டுக்கதையை விட்டு மக்களைக் குழப்பி இருக்கிறார்கள்.

அதற்கேற்ப, வரும் டிசம்பர் 2014 இல் உலகம் ஆறு நாட்கள் இருளில் மூழ்க இருப்பதாகவும், சூரியனில் ஏற்படும் காந்தப்புயலே இதற்குக் காரணம் என நாசா கூறிவிட்டது என்ற அறிவியல் கதையை விட்டுக் குழப்பியுள்ளார்கள்.

எப்போதும் போல் இது போன்ற மடமைத்தனமான செய்திகள் மேலும் பரவிவிடாமல் இருக்க நாசா முன்-னெச்சரிக்கை-யாக மறுப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் மாதம் 6 நாள்கள் உலகம் இருளில் மூழ்கி இருக்கும் என்ற கட்டுக்-கதைகள் நாசாவின் பெயரால் பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மையல்ல. அறிவுள்ள அனைவருக்கும் தெரியும், உலகம் பாதி நாள் இருளிலும் பாதி. நாள் பகலிலும் உள்ளது.

இருளை மனித இனம் விளக்குகளின் வெளிச்சத்தில் வென்றுவிட்டது. தற்போது சிலரால் பரப்பப்படும் கட்டுக்கதைகளின்படி மின்சாரம் தடைபட்டால்தான் இருளில் மூழ்க வாய்ப்புள்ளது. சூரியப்புயல் மட்டு-மல்ல, எந்த ஒரு இயற்கைக் காரணத்தாலும் மனிதனால் செயற்கையாகத் தயாரிக்கப்படும் மின்சாரத்தைத் தடைசெய்ய முடியாது. பருவநிலை மாற்றங்களான மழை, வெள்ளம், புயல் போன்ற நேரங்களில் மின்சாரம் தடைப்படுவது அந்த அந்தப்பகுதியில் மாத்திரமே நிகழும். அதுவும் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். ஆகவே உலகம் இனி வரும் காலத்தில் மேலும் அதீத அறிவியல் வளர்ச்சி பெற்று முன்னேறுமே தவிர இப்படி பொய்யான கதைகள் போன்று இருளில் மூழ்காது. மேலும், அந்தப் பொய்யான இணைய-தளத்தில் சிலர் தொலைக்காட்சியில் உரையாடுவது போன்ற நிகழ்ச்சி, அதன் பின்புலத்தில் நாசாவின் அடையாளம் எல்லாம் பொய்யாகத் தயாரிக்கப்பட்டவை.

சூரியப்புயல் என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புவியின் மேற்பரப்புவரை வந்து செல்கிறது. இதை, புவியின் மேலடுக்கில் உள்ள வளிமண்டலம் தடுத்து மீண்டும் வானவெளிக்கே அனுப்பிவிடும். இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று நாசா வெளியிட்டுள்ள மறுப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மூடநம்பிக்கையைப் பரப்ப நினைக்கும் மதவாதிகளும், இதைக் கடவுள் வந்து சொன்னார் என்று சொல்வதில்லை. உலகம் இருளில் மூழ்கும் என்று கடவுள் சொன்னதாகச் செய்தி பரப்பினால், கக்கத்தில் கைவைத்து கேலிச் சிரிப்பே பரிசாகக் கிடைக்குமென்பதால் அறிவியல் மய்யமான நாசாவைப் பயன்படுத்துகிறார்கள் நாசக்கார மதவாதிகள். ஆனால் பொய்கள் பரவும் வேகத்தில் நாசாவின் உண்மை பரவுவ-தில்லை. ஊடகங்களும் பொய்க்குத் தரும் முக்கியத்துவத்தை உண்மைக்குத் தருவதில்லை.

தமிழ் ஓவியா said...

கருஞ்சட்டை தபால்காரர்


பகுத்தறிவு பரப்பும்
தொடர் ஓட்டத்தில்...
அய்யாவும் அம்மாவும்
ஏந்திய சுடர்
இப்போது ஆசிரியர் கையில்! இச் சுடரோடு
வெகுகாலம் தொடர்கிறது
இவரின்
ஓய்வற்ற பயணம்! ஆரிய நரிகளின்
ஆதிக்க ஊளைகளுக்கு...
அவ்வப்போது இருக்கும்
இவரின் பதிலடி!
அவையத்தனையும் தடாலடி! ** **
வயது ஏற ஏற
இவரின் சுறுசுறுப்பு
ஏறிக் கொண்டேயிருக்கிறது
உடலியல் இயல்பின் விதிவிலக்காய்! புத்தக வாசிப்பும்
மானுட நேசிப்பும்
வைத்திருக்கிறது இவரை
இன்னும் இளமையாய்! ** **
இன்று தஞ்சை
நாளை மராட்டியம்
நாளை மறுநாள் மலேசியா
ஒளியின் வேகத்தை விஞ்சும்
இவரின் தொடர் பயணங்கள்! ** **
மேடையிலே
இவர் முழங்குகையில்
நாகரிகம் தங்கியிருக்கும்
ஆதாரம் பொங்கியிருக்கும்! ** **
அய்யாவின் சிந்தனைகளை
அகிலம் எங்கும்
கொண்டு சேர்க்கும்
கருஞ்சட்டை தபால்காரர் சொந்தபுத்தி தேவையில்லை
அய்யா தந்தபுத்தி போதுமென
சுய அடையாளம் தேடாத
கடலூர் கருப்பு மெழுகுவர்த்தி சரி, யாரை ஏற்பது
பெரியாருக்குப் பின் என
வாடிக் கிடந்தவர்க்கு - காலம்
தேடித் தந்தது சரியாரை!

பெரியாரைக் கண்டிராத
என் வயதொத்தோர்
காண்கிறோம் இவர் உருவில்
தாடி- தடியற்ற பெரியாரை!

- பாசு ஓவியச்செல்வன்

தமிழ் ஓவியா said...

கருத்து


பாதிக்கப்பட்டவர்கள் அய்.நா.விசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் அளிப்பதை இலங்கை அரசு தடுக்கிறது. விசாரணையைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் எதற்காக விசாரணைக்கு இடையூறு செய்ய வேண்டும்.

- சையத் அல் ஹுசைன், தலைவர், அய்.நா.மனித உரிமைகள் கவுன்சில்

உயர் வகுப்பினர் எல்லோருமே அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள். அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். நம்மிடையே உள்ள பழங்குடியினர் மற்றும் தலித்களும்-தான் மண்ணின் மைந்தர்கள். அவர்களாகவே கல்வி, அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். அவர்கள் பிகாரில் அரசுகளை அமைப்பதற்கு முக்கியப் பங்காற்றுவார்கள்.

- ஜிதன்ராம் மாஞ்சி, முதல் அமைச்சர், பிகார்

குரல் ஓட்டு மூலம் நம்பிக்கை ஓட்டில் பா.ஜ. வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்-பட்டுள்ளதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை பா.ஜ. அரசு நசுக்கியுள்ளது. சட்ட-விதிகளின்படியும் ஜனநாயகத்தின் அடிப்படையிலும் ஓட்டெடுப்பு நடக்கவில்லை.

- ஏக்நாத் ஷிண்டே, எதிர்கட்சித் தலைவர், சிவசேனா

ஒருவர் மற்றொருவரின் உயிரைப் பறிக்கும் விதமாக அவரைக் கொலை செய்கிறார். அதற்கு ஈடாக அரசு அவரை மரண தண்டனை என்ற பெயரில் கொலை செய்வது ஆபத்தானது மட்டுமல்ல; அது எந்த வகையிலும் அறிவுப்பூர்வமானது அல்ல. மரண தண்டனை என்பது அடிப்படையிலேயே தவறான கருத்தியலாகும்.

- அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்

தமிழ் ஓவியா said...

எது தமிழ்த் திருமணம் - 9


கார் மாடல் போல கல்யாண முறைகள்

பெரியாரின் தொலைநோக்கு

சுயமரியாதைத் திருமணத்தைப் போன்றே மதச் சடங்குகள் அற்ற கிறித்துவர்களின் திருமணம் மனிதநேயத் திருமணம் (Legal Humanist Marriage) எனும் பெயரில் இங்கிலாந்து நாட்டில் எடின்பர்க் நகரில் 1975இல் நடந்த செய்தி நாளேடுகளில் வந்துள்ளது. மனிதநேய சங்கத்தார் இத்தகைய திருமணங்களை நடத்தி வைக்கும் அதிகாரம் பெற்றவர்கள் என அந்நாட்டு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.



தந்தை பெரியாரின் தொலைநோக்கு அறிவு 1928இல் செயல்படுத்திக் காட்டியதை 47 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இங்கிலாந்து நாடு கடைப்பிடிக்கிறது. பெரியாரைத் தீர்க்கதரிசி என்று பாராட்டியது பொருத்தம்தானே!

பார்ப்பனப் புரோகிதர் இல்லாமல் திருமணங்கள் தமிழ்நாட்டில் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்த செய்தியினைக் குடிஅரசு ஏட்டில் பெரியார் வெளியிட்டுள்ளார். அதன்படி 19.8.1926இல் நாகப்பட்டினத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. சேலம் பிரபல காங்கிரசுத் தலைவர் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் உறவினரின் திருமணச் செய்தியை குடிஅரசு 28.9.1926இல் வெளியிட்டிருக்கிறது. சேலம் மாவட்டம் தாதம்பட்டி எனும் ஊரில் நடைபெற்ற மூன்று திருமணங்கள் பற்றிய செய்தி குடிஅரசு 21.11.1926இல் வெளிவந்துள்ளது.

என்றாலும் தந்தை பெரியார் அவர்கள் 1928இல் நடத்திவைத்து, அதன் பின்னர் நாடு முழுக்க நடத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள்தான் பெருத்த விழிப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தின. சட்டப்பூர்வ திருமணம் என்கிற நிலையைப் பெற்றுத் தந்தன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளிலும் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

வகுப்பு - அறிவு உணர்ச்சிகள்

ஆனால் தமிழ்த் திருமணம் என்பதன் நிலை என்ன? பெரியார் சொன்னதுபோல, தமிழ்த் திருமணம் என்பது வகுப்பு உணர்ச்சி காரணமாய் ஏற்பட்டது. இதன்மூலம் பார்ப்பனப் புரோகிதர் விலக்கப்படுகிறார். பார்ப்பனரின் புரோகித முறைச் சடங்குகள் விலக்கப்படுகின்றனவா? விநாயகன் வழிபாடு, திருவிளக்கு பூஜை, பாலிகை இடுதல், விபூதி பூசுதல், காப்பு இடுதல், ஆடை உடுத்தல், பஞ்சகவ்யம், அய்ந்தெழுத்து பாதபூஜை, திருத்தாலி வழிபாடு, தாலி கட்டுதல், பட்டங்கட்டுதல், மாலை மாற்றுதல், மிஞ்சி இடுதல், அறு கெடுத்தல், வாழ்த்துக் கூறல் எனும் தலைப்புகளில் சமக்கிருதத்திற்குப் பதில் தமிழ்ப் பாடல்கள் என்று எல்லாமும் இடம் பெறுகின்றன.

தமிழ் ஓவியா said...

மூஷிக வாகன, மோதக ஹஸ்தனே என்பதற்குப் பதில் ஆனைமுகத்தானைக் கூப்புவர் தம்கை எனப் பாடுகிறார்கள். ஆலவாயான் திருநீறே, வேதியர் குழாமும் திருத்தொண்டரும் ஆறு சூடினார் என்றுதானே பாடுகிறார்கள். கயிலை மலையானே என்றும் ஆரூரானை என்றும் உமையவளொடு இருந்தவனே என்றும் கூப்பிடுகிறார்கள். நாகேஸ்வரனே என்றும் பிரமபுரக்காவலனே என்றும் அழைத்து ஆரியக் கற்பனைக்குக் காவலராக அலுவல் பார்க்கின்றனரே!

பழந்தமிழரிடையே ஆனைமுகத்தானோ, வேதியர் குழாமோ உண்டா? எனவே, இவை தமிழ்மொழியில் நடக்கும் ஆரியப் புரோகித மூடநம்பிக்கைப் பெண்ணடிமைத் திருமணம் என்றுதான் சொல்லவேண்டுமே தவிர தமிழ்த் திருமணம் என்று கூறமுடியாது, கூறக்கூடாது. பசு மாட்டின் கழிவுகளான சாணி, மூத்திரம் ஆகியவற்றுடன் பால், தயிர், நெய் கலந்து பஞ்சகவ்யம் என்று சமஸ்கிருதப் பேரிட்டுப் புசிக்கும் பழக்கத்தை வைத்திருக்கும் திருமண முறை எப்படித் தமிழர் திருமணம் ஆகும்!

இந்த அய்ந்தின் கலவையைத் தமிழில் ஆனைந்து என்கிறார்களே அதையாவது சொல்லித் தொலைக்காத இந்த முறைத் திருமணம் எப்படித் தமிழ்த் திருமணம் ஆகும்?
தாலி வரலாமா?

தாலியை மங்கல அணி என்றால் தமிழ்த் திருமணம் ஆகிவிடுமா? அகநானூறு பாடல் 54இல் புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலியும், புறநானூறு பாடல் 374இல் வரும் புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் என்பதும் ஆண்கள் அணிந்த அணி தானே! இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவு கோத்து என பெரிய புராணம் பாடுவதும்கூட இந்த ஆண் தாலியைத் தானே! இப்போதைய சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சாரத்தாலி, மண்டைத் தாலி, நாணல்தாலி (ஞாழல் தாலி), பார்ப்பாரத் தாலி, பொட்டுத்தாலி என்பவையெல்லாம் மகளிர் கழுத்தில் மாட்டும் தாலிகள். இவை கட்டப்பட்ட சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் இல்லையே!

ஆரியப் புரோகிதத் திருமணத்தில் காப்புக் கட்டும் சடங்கில் புரோகிதர் கட்டுகிறார். மாலையோ அல்லது மறுநாளோ வண்ணார், மருத்துவர் போன்றவரே காப்பை அறுக்கின்றனர். ஒரு காலத்தில் இவர்கள் செய்து வைத்த திருமணச் சடங்குகளை நாயக்க மன்னர்கள் காலத்தில் அவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பூணூல் அணிந்த பார்ப்பனர் முன்னுக்கு வந்து நடத்திடும் நிலை வந்துள்ளதை ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் தெரிவித்த பின்னும் திருந்த வேண்டாவா? புரோகிதனை மட்டும் நீக்கி மீதமுள்ள புரோகித முறைகளைச் செய்வது என்ன தமிழ்த் திருமணம்? எப்படித் தமிழர் திருமணம்?

ஜாதிக்கொரு தாலி உள்ளது. தாலி செய்யும் பொற்கொல்லர் மணமக்களின் ஜாதியைத் தெரிந்து அந்த ஜாதிக்குரிய தாலியைச் செய்து தருகிறார். முன்னமே தயாரிக்கப்பட்டு விற்கப்படும் தாலிகள் ஒரே மாதிரியாக இல்லாமல் ஜாதிவாரியாக இருப்பதை நகைக் கடைகளில் காணலாம். கருவறையில் மட்டுமன்றி கல்யாணத் தாலியிலும் ஜாதி பதுங்கித் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஜாதி தமிழ் அல்ல. தமிழர்க்குரியதும் அல்ல. அதன் அடிப்படையில் அமைந்த தாலி மட்டும் எப்படித் தமிழர்க்காகும்? இதனைக் கட்டிச் செய்யப்படுவது எப்படி தமிழர்க்கான திருமணம் ஆகும்?

தமிழ் ஓவியா said...

நாடறி நன்மணம் எனக் குறிஞ்சிப் பாட்டு (பாடல் 232) கூறிய வகையில் நடைபெறும் மணவிழாக்களில் உறவினருடன் அமர்ந்து விருந்துண்டு மகிழ்தல் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள்தாம். சங்ககாலத்திலிருந்தே இப்பழக்கம் தொடர்வதை தன்அமர் ஆயமொடு நன்மணம் மற்றும் தமர்மணன் அயரவும் போன்ற சங்கப் பாடல் அடிகள் எண்பிக்கின்றன. அத்தகையச் சிறப்புமிக்க தமிழர் விழாக்களில் ஆரியம் கலக்கலாமா? புகலாமா? புகுத்தப்படலாமா? அக்னி சாட்சியாகவும் ஆகாசவாணி சாட்சியாகவும் சடங்குகள் நடத்தப்படலாமா? (ஆகாசவாணி என்றால் வானம் _ வானொலி அல்ல) மண்ணையும் நீரையும் கொண்டாடுவதுதான் இந்த மண்ணின் பண்பாடு. வானத்தையும் நெருப்பையும் கொண்டாடுவது ஆரியர் பழக்கம். அந்த ஆரியர் பழக்கம் இடம்பெறும் முறை எப்படித் தமிழர் திருமணமாகும்?

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே என்று தொல்காப்பியர் கூறியவாறு மிகப் பெரும்பான்மையராகிய கீழோர் செய்துகொள்ளும் திருமணச் சடங்குகள் நான்கு வருணப் பிரிவை உறுதிப்படுத்துகின்றன. இன்னும் சொன்னால், பிறவியிலேயே பேதம் கற்பிக்கும் கீழ்_மேல் எனும் சமநிலை அற்ற சமுதாயத்தைப் பிரதிபலிக்கிறதே!

சமூக உயர்வு தாழ்வு கற்பிக்கும் நிறுவனம் எனக் கூறத்தக்க வகையில்தானே தமிழர் திருமணம் அமைந்துள்ளது?

தமிழ் ஓவியா said...


முதல் இந்தி எதிர்ப்புப் போரைப் பெரியார் 1937இல் தொடங்கியபோது கூட்டுப் பணியாளர்களாக -_ சக போராளிகளாக விளங்கிய மறைமலை அடிகள், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், சரவண ஆறுமுக முதலியார் ஆகியோர் நடத்திய தமிழர் திருமண மாநாடு எடுத்த முடிவுகளின்படியே தமிழர் திருமணங்கள் நடத்தப் பெறுகின்றன எனலாம். இந்தி எதிர்ப்பு என்பது பார்ப்பன எதிர்ப்பாக உருப்பெற்ற அக்காலத்தில் பார்ப்பனப் புரோகிதரை நீக்கவும், சமஸ்கிருத மந்திரங்களை விலக்குவதும் ஆகிய முடிவுகள் (பெரியார் சொல்வதைப் போல) வகுப்பு உணர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்டன. தாலி கட்டல், தீவலம் வருதல், அம்மி மிதித்தல் போன்ற எல்லாமே தமிழர்க்கு உரிய சடங்குகள் என்றே மறைமலை அடிகள் அடித்துப் பேசிவிட்டார். காதலிலுமா தமிழன் மானங்கெட்டு, புரோகிதனை அழைப்பது? எனும் வினாவே முதன்மையாக எழுப்பப்பட்டதால், பார்ப்பன எதிர்ப்பு மேலோங்கி முடிவுகள் எடுக்கப்பட்டன. அரைக் கிணறு தாண்டிய நிலைதான்! தமிழ்ப் பெரியார்கள் இதனை உணரவில்லை, இன்றளவும்!

பேராசிரியர் ச.மாடசாமி கூறுவதுபோல, மேற்கத்திய பாணியில் கோட் அணிந்து, புரோகித பாணியில் நெருப்பு வளர்த்து, தொல்குடி மரபில் உப்பும் நீரும் மணப் பரிமாற்றம் செய்து, தன் பூர்வீகத்தின் குலக்குறியை (Totem) மணவறையில் பக்கத்தில் வைத்து, அரசியல் வெற்றி போல சிவகாசி வேட்டு வெடித்து, என்று இப்படி எல்லாம் கலந்த கலவையாக தமிழர் திருமணம் நடக்கிறது எனக் கவலைப் படவேண்டிய நிலை, இன்று!

தமிழர் பண்பாட்டை _ பழந்தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் தமிழர் இல்ல மணவிழாக்கள் அமைக்கப்பட வேண்டும். தமிழ் அடையாளம் எதுவுமே இல்லாத தமிழர் திருமணங்கள் மாற்றப்பட வேண்டும். மனித நேய அடையாளங்களாவது இருக்க வேண்டும். கொடிய ஜாதிய நாய் குரைக்குமுன்னே நடந்து வா அன்னமே என்று புரட்சிக்கவிஞர் விரும்பியதுபோல மணமகளை அழைக்கும் மணமுறை இருக்க வேண்டும். இவையெல்லாம் அடங்கியதாக இருக்கும் மணமுறை சுயமரியாதைத் திருமணம் மட்டுமே!

கல்யாண முறைகள் கார் மாடல் போலத்தான் என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்! அறிஞர்களும் தமிழர்களும் சிந்திப்பார்களாக!

- சு.அறிவுக்கரசு

தமிழ் ஓவியா said...



சாக்ரடீசுக்கொரு பிளாட்டோ....
பெரியாருக்கொரு வீரமணி!

சமூகநீதிக்கான கி.வீரமணி விருது பெற்ற ஒரிசா பேராசிரியர் பெருமிதம்

ஒடிசா மாநில பகுத்தறிவாளர் சங்கத் தலைவரும், தத்துவப் பேராசிரியருமான தானேஸ்வர் சாகு அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் சமூக நீதிக்கான வீரமணி விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் பேராசிரியர் முனைவர் இலக்குவன் தமிழ் வழங்கினார். (ஒடிசா, புவனேசுவரம், 23.11.2014)

1951-52ஆம் ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் வகுப்புவாரி உரிமைகள் குப்பைக் கூடையில் வீசி எறியப்பட்டன. அந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்று இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு ஆதரவு கொடுத்தனர்.



அதனால் 1951இல் நேரு காலத்தில் ஏற்பட்டதுதான் இந்திய அரசமைப்பின் முதல் சட்டத் திருத்தம்.

இருந்தாலும் இன்னும் நிறைவேற வேண்டிய கோரிக்கைகள் பல இருந்தன. சமூகநீதி என்பது இடஒதுக்கீடு மட்டும் அல்ல. இன்னும் பல உரிமைகள் இந்தச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே.

அனைவரும் சம உரிமை பெறுவது _ ஆண்களும் பெண்களும் சமமான உரிமை பெறுவதுதான் சமூக நீதியாகும். அந்த நிலையை இன்னும் இந்தச் சமுதாயம் அடையவில்லை.

உழைக்கின்ற மக்களை ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் கேவலப்படுத்தி அவர்களைக் கொடுமைப்படுத்தினர். இக்கொடுமைகளை ஒழிக்க தந்தை பெரியார், பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர், ஜோதிபாபூலே, சாகுமகராஜ், நாராயணகுரு போன்ற தலைவர்கள் சமூக சீர்திருத்தத்திற்காகப் போராடினார்கள்.

மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும் சகோதரத்துவமும் தோன்ற வேண்டும். ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகல வேண்டும்; உலகுயிர் அனைத்தும் ஒன்றென்னும் எண்ணம் உதிக்க வேண்டும். வகுப்புச் சண்டைகள், ஜாதிச் சண்டைகள் மறைய வேண்டும். (குடிஅரசு- 9.4.1933) சமூகநீதிக்கான இந்தப் போராட்டத்தின் ஒரு படி தான் இடஒதுக்கீடு. அந்தப் படியை அடைவதற்கே எத்தனைப் போராட்டங்கள்! தம் இறுதிக் காலம் வரை உழைத்த தலைவர் பெரியாருக்குப் பிறகு சமூகநீதிக்கான குரலை உரத்து எழுப்பியவர் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.

மண்டல் குழு பரிந்துரையை வெளிக் கொண்டுவர போராட்டங்கள், அதனை அமல்படுத்த பிரச்சாரம், போராட்டம், மாநாடு என தொடர்ந்து களம் கண்டவர். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பொருளாதார அளவுகோலைக் கொண்டுவந்து குறுக்குசால் போட முனைந்தவர்களின் முதுகெலும்பை முறித்த மதி நுட்பம். தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவெங்கும் சிதறியிருந்த சமூக நீதி உணர்வாளர்களை பெரியார் என்னும் பெருங்குடையின் கீழ்க் கொணர்ந்து, நாடு தழுவிய சமூகநீதிப் போராட்டத்தைக் கட்டியெழுப்பிய வினைத்திட்பம். எந்த வகுப்புவாரி உரிமைக்காக பெரியார் காங்கிரசை விட்டு வெளியில் வந்தாரோ, அதே உரிமையை 69 விழுக்காடாக உயர்த்தி, அதே காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருந்த போதே, முதல்வர், பிரதமர், குடியரசுத் தலைவர் என மூன்று பொறுப்புகளிலும் வீற்றிருந்த பார்ப்பனர்களைக் கொண்டே நிறைவேற்றிக் காட்டிய ஆற்றல். சமூகநீதிக்கு இவரே அத்தாட்சி என சட்டப் புத்தகம் படித்தவர் முதல் சட்டப் புத்தகம் சமைப்பவர் வரை தெளியும் வகையில் சமூகநீதிக்காக நுணுகிப் படர்ந்த அருமருந்து. பெரியார் காலத்திலிருந்த இடஒதுக்கீட்டு உரிமையை இரட்டிப்பாக்கிய இமாலயச் சாதனை. எங்கேனும் சமூகநீதிக்கு ஆபத்து வந்தால், சரியாய்க் கண்டறிந்து ஆபத்தகற்றிட உதவும் ஈரோட்டுக் கண்ணாடி.

இப்படி தந்தை பெரியார் தம் இயக்கத்தால், தமிழர் தலைவர் கி.வீரமணியின் உழைப்பால் பலன்பெற்ற கோடிக்கணக்கான மக்களில், நன்றிப்பெருக்குடைய பெருமக்களால், பெரியாரை உலகமயமாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பு தான் பெரியார் பன்னாட்டமைப்பு. தந்தை பெரியாரின் கருத்துகளை உலகம் முழுவதும் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற நோக்கத்தால் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 13.11.1994இல் பெரியார் பன்னாட்டமைப்பு (Periyar International) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் பொறுப்பாளர்களாக அமெரிக்கா வாழ் தமிழர்களான டாக்டர் சோம. இளங்கோவன், பேராசிரியர் இலக்குவன் தமிழ் ஆகியோர் இருந்து பணிகளைச் செய்தனர்.

தமிழ் ஓவியா said...

தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சமூக நீதி மய்யத்தின் தலைவர் திரு.சந்திரஜித் யாதவ் மற்றும் அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரக அலுவலரான சின்காவும் விழாவில் கலந்துகொண்டனர்.-

இதன் முதன்மைப் பணிகளுள் ஒன்றாக, சமூகநீதிக்காக உழைப்பவர்களுக்கும், பெரியாரியலைப் பரப்புவோருக்கும் சிறப்பு செய்யும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு,

முதன்முதலில் பெரியார் பன்னாட்டமைப்-பினர் சமூகநீதியை நிலைநாட்ட தன் ஆட்சியை இழந்த மேனாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) அவர்களுக்கு வழங்க முடிவு செய்து 24.12.1996 அன்று சென்னை பெரியா திடலில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது அளிக்கும் விழா வை நடத்தினர். மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் உடல் நலிவு காரணமாக வர இயலாவிட்டாலும் அவரது கட்சியின் பிரதிநிதியான தமிழக ஜனதா தள முன்னணி வீரர் திரு.கா.ஜெகவீர பாண்டியன் அதனைப் பெற்றுக் கொண்டார்.

முதல் விருதைப் பெரும் மாமனிதரான மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள், மண்ணுக்குள் புதைக்கப்பட்டதாகக் கருதப்பட்ட மண்டல் குழுப் பரிந்துரையைச் சட்டரீதியாக அமல்-படுத்திக் காட்டியவர் திரு.வி.பி.சிங் அவர்கள். அதற்காக ஆட்சியையும் இழந்தவர்! சமூக நீதிக்காக எத்தனை நாற்காலிகளையும் இழக்கத் தயார் என்று குரல் கொடுத்த இலட்சிய வீரராக அவர் காட்சி அளித்தார்.

இரண்டாவதாக, விருதுபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திரு.சீதாராம் கேசரி அவர்கள் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்றுக்கொண்டு அவர்கள் வழங்கிய உரையில், இணையற்ற தலைவராகிய பெரியாரைப் பின்பற்றுவோரிடமிருந்து சமூக நீதிக்கான விருதினைப் பெற்றுள்ள இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் பெருமிதமும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாகும். குறிப்பாக மகிழ்ச்சி அடைவது எதற்காக என்றால், பெரியாரின் மிகச் சிறந்த சீடரும் என்னுடைய நெடுநாளைய நண்பருமாகிய திரு.வீரமணி பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது என்பதற்காகத்தான் என்றார்.

இதே போன்று, பல்வேறு மாநிலத்திலும், பல்வேறு நாடுகளிலும் சமூக நீதிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரை வழங்கப்பட்ட விருது பெற்றவர்களின் பட்டியலைப் பாருங்கள்.

பெரியார் பன்னாட்டு அமைப்பு வழங்கிய சமூக நிதிக்கான கி.வீரமணி விருது பெற்றவர்கள் பட்டியல் :
1. வி.பி.சிங் - முன்னாள் பிரதமர் -_ இந்தியா- 1996

தமிழ் ஓவியா said...

2. சீதாராம் கேசரி - காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் - இந்தியா _- 1997

3. சந்திரஜித் - முன்னாள் மத்திய அமைச்சர் - இந்தியா -_ 1998

4. மாயாவதி - முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் -_ இந்தியா -_ 2000

5. எஸ்.டி.மூர்த்தி - பெரியார் பெருந்தொண்டர் -_ சிங்கப்பூர் -_ 2002

6. ஜி.கே.மூப்பனார் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் _- இந்தியா _- 2003

7. பி.எஸ்.ஏ.சாமி - உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி - ஆந்திரப் பிரதேசம் _- இந்தியா _- 2005

8. வீரா.முனுசாமி - மியான்மர் _- யாங்கூன் -_ 2006

9. டாக்டர் கலைஞர் - தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்வர் - தமிழ்நாடு _- இந்தியா _- 2008

10. பேரா.ரவிவர்மகுமார் -_ அட்வகேட் ஜெனரல் கர்நாடகா - இந்தியா _- 2009

11. செல்லபெருமாள் _- சமூகத் தொண்டர் - குவைத் -_ 2010

12. கோ.கருணாநிதி -பொதுச் செயலாளர் - - (All India OBC) _- 2011

13. கலைச்செல்வம் _- தலைவர் -_ பெரியார் சமூகச் சேவை மன்ற -_ சிங்கப்பூர் -_ 2011

14. அனுமந்த்ராவ் எம்.பி _- அமைப்பாளர் பிற்படுத்தப்பட்ட எம்.பி.க்கள் அமைப்பு _- இந்தியா _- 2012

15. ஜகன் சி.புஜ்பால் - மராட்டிய மாநில முன்னாள அமைச்சர் - மகாராஷ்டிரா -_ இந்தியா _ 2013

தமிழ் ஓவியா said...


2014ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசு வரத்தில் 23.11.2014 அன்று நடைபெற்றது. ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவரும், சமூகநீதியை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வருபவருமான தத்துவப் பேராசிரியர், தானேஸ்வர் சாகு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவிற்கு ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் துணைத் தலைவர் உளவியல் பேராசிரியர் முனைவர் பிரதாப் குமார் நாத் தலைமை வகித்தார். சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை பேராசிரியர் தானேஸ்வர் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் முனைவர் இலக்குவன் தமிழ் வழங்கினார். விருது பட்டயமும், விருது தொகையான ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் விருது நாயகருக்கு வழங்கப்பட்டது விருது வழங்கும் நிகழ்வு தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்றது. விருது நாயகரைப் பாராட்டி, சிறப்புச் செய்து தமிழர் தலைவர் சமூக நீதி பற்றிய சிறப்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியின் நன்றியுரையினை ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் செயலாளர் தேவேந்திர சுதார் வழங்கினார்.

சமூகநீதி விருது நாயகர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு தமது ஏற்புரையில், சமூக நீதிக்கு அரும்பணி ஆற்றிய சமூக புரட்சியாளர் தந்தை பெரியாரின் பங்கு மகத்தானது. தந்தை பெரியா ரது கொள்கைச் சீடர் டாக்டர் கி.வீரமணியின் பெயரில் சமூக நீதி விருது பெற்றது எனக்குப் பெருமையாக உள் ளது. சாதி மறுப்புத் திருமணம் செய்து, தாழ்த்தப்பட்ட சமு தாயத்தை சார்ந்தவரை துணை வியாக ஏற்றுக் கொண்டதால் சமுதாயத்தில் உறவினர்களாலும், எனது சமுதாய மக்களாலும் புறக்கணிக்கப்-பட்டவன் நான். இருப்பினும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறேன். சாக்ரடீசின் கொள்கைகளுக்கு இறவாப் புகழைச் சேர்ந்தவர் பிளாட்டோ. அதுபோல பெரியாரின் பகுத்தறி வுக் கொள்கைகளை உலகளாவிய அளவில் பரப்புரை செய்து வருபவர் டாக்டர் கி.வீரமணி. அவர் அளித்த ஊக்கத்தில் தந்தை பெரியாரது கொள்கைகளை ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று வழங்கப்பட்ட விருதினைப் பெற்று எஞ்சிய வாழ்நாளையும் சமூக நீதிக் கொள்கைகள் நடைமுறை காண, பரந்துபட பாடுபடுவேன். என்று குறிப்பிட்டார்.

- தொகுப்பு: கோவிந்தன்

தமிழ் ஓவியா said...



டிச.2 : தமிழர் தலைவர் பிறந்த நாள் சிந்தனை :

“பெரியார் உலகம்” படைக்கும் பகுத்தறிவுச் சிற்பியே!

அய்யாவின் கொள்கைகளை
அடுத்த தலைமுறைக்கும்
அப்படியே கொண்டுசெல்லும்
அய்யாவின் தத்துப் பிள்ளை அல்ல;
அவரது தத்துவப் பிள்ளை நீ!

உன் கையளவு இதயத்தில்
உலகளவு விரியும்;
வழியும் சிந்தனையால்
விழிமூட மறக்கின்றோம்!
தத்துவம் முகிழ்க்கும்
புத்தாக்கப் புதுஉலகில்...

அறிவியல் கண்காட்சி
ஆய்வரங்கம்
கோளரங்கம்
மெழுகுச் சிலையரங்கம்
மாநாட்டு மண்டபம்
மழலையர் பூங்கா

மண்ணில் மனிதம் தழைக்க
தன்னையழித்துக் கொண்ட
தலைவனின் இணையில்லாப் புகழை
இளைய தலைமுறையும்
இன்புற்றுக் காணவேண்டி
உலகமகா புருஷரின்
உன்னத வாழ்க்கையை
ஒலி-ஒளி காட்சியாய்
அகலத்திரையில் விரியும் மாட்சி!

சிந்துச் சமவெளியின்
சிம்மாசனமாயிருந்த
திராவிடத் தமிழினத்தை
பெரியாருக்கு முன் -
பெரியாருக்குப் பின் என
வகைப்படுத்தும்
வண்ணமிகு
எண்ணக் குவியல்கள்!

வேடந்தாங்கல் பறவையாய்
வந்து குவியும்
வெளிநாட்டுப் பயணியரின்
சிந்தையைக் குளிர்விக்கும்
சங்கதிகள் நிறைந்திருக்கும்!
நிறைகுடமாய் உந்தனுழைப்பும்
உறைந்திருக்கும்; கலந்திருக்கும்!

விழிமலரின் பாவைகளை
விரியவைக்கும் பிரமிப்பு!
குருதியின் உயிரணுக்களை
உசுப்பிவிடும் பரவசம்!
இப்படியொரு அதிசயமா?
இதுவும் சாத்தியமா!
எப்படி முடியும் - இது
யாரால் நடக்கும்!

வெண்மேகங்கள் விளையாடும்
வானத்தைத் தொட்டுவிடும்
பிரமாண்டத்தின் எல்லையாய்
புத்தருக்கும், ஏசுவுக்கும்
பேருருவச் சிலைகளைப் படைத்து
புகழேணியின் உச்சியில்
அரச குடும்பத்தினரும்; ஆட்சியாளர்களும்
அயல்நாட்டில்!

மரபுவழி ஆட்சிகளே - இந்த
மண்ணை ஆண்டுவந்தும் - தமிழ்
மண்ணை மணந்த
மணாளரின் மாப்புகழை
விண்ணும் மண்ணுமாய்
நீடித்து நிலைத்திருக்க;
நிலையான நினைவுபோற்ற
மனமில்லையோ மார்க்கம் தேட!

சாமானியன் உன் கரம்பட்டே
சாசுவதமாகப் போவுது
பெரியார் புது உலகம்
உருபெற்று; மாசுமருவற்று!
சாதனைச் சரிதம் காணும்
வரலாறாய் மாறினாய்!
மாரிக்காலத்து
மழைமேகமாய் நீ ஆனாய்!

அய்யாவின் மண்டைச் சுரப்பை
அகிலம் தொழச் செய்யும்
உந்தன் மண்டைச் சுரப்பால்
உலகத் தமிழரெல்லாம்
உன்னிடம் புகலிடம்!

எண்ணியதை எண்ணியாங்கு
திண்ணியமாய் செய்துமுடிக்கும்
தேனீயொத்த தொண்டர்களைத்
தன்னகத்தே கொண்டவரே!
செவ்வாயில் கால்பதித்தாலும்
அய்யாவைப் பரப்பத்தான்
செல்வாய் நீ!

நாளைய உலகின்
வரலாறு சொல்லும்
பொன்னேட்டில்
உன் பெயரும்
வைரமாய் மின்னும்!
இப்புவியில் பெரியார் புகழ்
இருக்கும் மட்டும்
இணைந்து நீயும்
இறவாமல் இருந்திடுவாய்!

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

ராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குச் சூட்டப்பட்ட புகழ்மாலைகளில் சில...
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குச் சூட்டப்பட்ட புகழ்மாலைகளில் சில...


1. 1944 - திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என அண்ணாவின் பாராட்டு.

2. 1950 - இளம் பேச்சாளி பொதுமக்கள் பாராட்டு.

3. 1969 - குருவுக்கேற்ற சீடர்தான் வீரமணி என்ற தந்தை பெரியார் பாராட்டு.

4. 1993 - நாகையில் திராவிடர் பெண்கள் மாநாட்டில் இனமானப் போராளி பட்டம் அளிக்கப்பட்டது.

5. 1996 - தந்தை பெரியார் சமூக நீதி விருது தமிழக அரசு (ஜெ.ஜெயலலிதா) வழங்கியது.

6. 2000 - புதுதில்லி குளோபல் பொருளாதார கவுன்சில் பாரத் ஜோதி விருது வழங்கியது.

7. 2003 - மியான்மரில் பேரளிவாளர் விருது வழங்கியது.

8. 2003 - ஆக்சுபோர்டு தமிழ்ச் சங்கம், ஆக்சுபோர்டு தமிழ் விருது வழங்கி பாராட்டியது.

9. 2010 - விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் பெரியார் ஒளி விருது.

10. 2010 - கோவை கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது அளிக்கப்பட்டது.

11. 2011 - ஆந்திர மாநிலத்தில் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருது வழங்கப்பட்டது.

12. சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு மய்யம் சமூகத் துறையில் தொண்டாற்றியமைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.

13. 2003 - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

14. மலேசிய திராவிடர் கழகம் கருத்துக்கனல் என்ற பட்டத்தை வழங்கியது.

15. 2009 - சென்னையில் முரசொலி அறக்கட்டளை 2008ஆம் ஆண்டுக்கான கலைஞர் விருதினை வழங்கியது.

16. 2009 - காஞ்சியில் தி.மு.க. சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவில தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

பதவி விலகுவாரா போப்?


- மருத்துவர் கணேஷ் வேலுச்சாமி

உயிரினத் தோற்ற வளர்ச்சிக் கோட்பாட்டுக்கோ, பெருவெடிப்புக் கோட்-பாட்டுக்கோ ஒப்புதல் தருவதற்கு போப் யார்? அவரைக் கேட்பதைவிட ஒரு பிச்சைக்காரரையோ, ஒரு குழாய்ப் பணியாளரையோ, பெருக்கிச் சுத்தம் செய்யும் ஒரு பணியாளரையோ அல்லது ஒரு ஜோதிடரையோ நீங்கள் கேட்டிருக்கலாம்.



எப்போதுமே அறிவியலைத் தோற்கடிப்-பதற்காக தங்களால் இயன்ற அனைத்தையும் கிறித்தவ தேவாலய அமைப்புகள் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கின்றன.

பைபிளைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று சொல்வதுடன் போப் நிறுத்திக் கொள்ள வேண்டும்; அறிவியலைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று அவர் கூறத் தேவையில்லை; அந்த வேலை அவருடையதும் அல்ல. தியோடிசி என்று நகைச்சுவையாக அழைக்கப்படும் சமய ஆய்வியல் என்ற அவருக்கே உரித்தான பொருளைத் தாண்டி மற்ற எந்த ஒரு பொருளைப் பற்றியும் பேசுவதற்கு அவருக்குத் தகுதி இல்லை; அவர் பேசக்கூடாது.

தமிழ் ஓவியா said...

அவர் ஏற்றுக் கொள்வதால் மட்டுமே எந்த ஒரு அறிவியல் கோட்பாடும் மிகச் சரியானதாக ஆகிவிடப்போவதில்லை. உயிரினத் தோற்ற வளர்ச்சி மற்றும் பெருவெடிப்பு ஆகிய கோட்பாடுகளை அவர் ஏற்றுக் கொண்ட போதிலும், படைப்பாளி கடவுள் என்ற காலாவதியாகிப் போன கருத்தை அவர் இன்னமும் முற்றிலுமாகக் கைவிட்டுவிட-வில்லை. இந்த இரு கோட்பாட்டு நடைமுறை-களையும் தொடங்கி வைத்ததாகக் கருதப்படும் கற்பனைப் படைப்பாளியான கடவுள் இவற்றுக்குத் தேவை என்றே இன்னமும் அவர் வலியுறுத்தி வருகிறார். இது எப்படி இருக்கிறது என்றால், கோல் கம்பங்களை இடம் மாற்றி வைப்பது போலவும், ஒக்காமின் சவரக் கத்தியால் அறுத்து சரிசெய்யப்பட வேண்டியது போலவும் இருக்கிறது.

ஆனால் உண்மையிலேயே போப் பிரான்சிசின் கருத்துகள், உயிரினத் தோற்ற வளர்ச்சி என்ற கருத்துக்கான கதவைத் திறந்தவரும், பெருவெடிப்புக் கோட்பாட்டை ஆர்வத்துடன் 1996இல் வரவேற்றவருமான பயஸ் 12ஆம் போப்பின் முன்னேற்றப் பணிகளை ஒட்டியே அமைந்துள்ளன; ஜான் பால் 2ஆவது போப் ஒரு படி மேலே சென்று உயிரினத் தோற்ற வளர்ச்சிக் கோட்பாடு ஒரு கருதுகோள் என்பதைவிட உயர்ந்தது என்றும் நிறைந்த பயனளிக்கும் வகையில் மெய்ப்பிக்கப்-பட்ட உண்மை என்றும் தெரிவித்துள்ளார்.

அறிவியலைப் பொறுத்தவரை, அவர் என்ன கூறுகிறார், நான் என்ன கூறுகிறேன், நீ என்ன கூறுகிறாய், அதிகாரம் பெற்ற எவர் ஒருவரும் (அது டார்வினாக இருந்தாலும் சரி, அய்ன்ஸ்டீனாக இருந்தாலும் சரி அல்லது வேறு எவராக இருந்தாலும் சரி) என்ன சொல்கிறார் என்பதோ, முக்கியமானதோ அல்ல. இதில் முக்கியமானது என்னவென்றால், சான்றுகளும், ஆதாரங்களும் என்ன காட்டுகின்றன என்பதும் எதன் அடிப்படையில் அவர்கள் கூறுகிறார்கள் என்பதும்தான்.

தமிழ் ஓவியா said...

உயிரினத் தோற்ற வளர்ச்சிக் கோட்பாட்டுக்கான சான்றுகளும், ஆதாரங்களும் ஏராளமாக இருக்கின்றன. நல்ல நிலையில் உள்ள மனம் கொண்ட எவர் ஒருவராலும் அதனை மறுக்க இயலாது. வட்டமான ஒரு ஓட்டையில் சதுரமான ஆப்பு ஒன்றினை அடிக்கவே போப் முயல்கிறார். அறிவியலின் சாதனைகளைப் பறித்துக் கொள்ள போப் முயல்கிறார். தங்களின் நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையே எந்தவிதப் பிணக்கும் இல்லை என்று தன்னைப் பின்பற்றுபவர்கள் நினைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையே எந்தவித ஒத்திசைவின்மையும் இல்லாமல் இருப்பது போன்று நடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இதுவே ஒரு மாபெரும் தவறாகும். மதமும் அறிவியலும் எதிர்எதிர் துருவங்களாகும். அவை சந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை. அறைகுறை அறிவு ஆபத்தானது என்பதை நாமனைவரும் அறிவோம். இப்போது சற்று கற்பனை செய்து பாருங்கள். அறைகுறை அறிவே இவ்வளவு ஆபத்து நிறைந்தது என்றால், அறியாமை என்பது எவ்வளவு பேராபத்தானதாக இருக்கும்? அறிவியல் = மாற்றமுடியாத 100 விழுக்காடு சான்றுகளும் ஆதாரங்களும் கொண்டது; எப்போதுமே திறந்த மனம் கொண்டது; தவறு என மெய்ப்பிக்கப்பட்டால் மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பது; விமர்சனங்களைத் தாங்கிக் கொள்வது; தன்னைத் தானே திருத்திக் கொள்ள இயன்றது.

மதம் = எந்தவித சான்றுகளோ ஆதாரமோ இல்லாத நிலையிலும், 100 விழுக்காடு முட்டாள்தனமான, கட்டுக் கதைகளை உண்மையெனக் கூறுவது; எதைப் பற்றியும் கேள்வி கேட்க அனுமதிக்காதது; எப்போதுமே மூடிய மனம் கொண்டது; விமர்சனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாதது.

தமிழ் ஓவியா said...

சாதாரணமான பொதுஅறிவின்படி பார்த்தாலும், உயிரினத் தோற்ற வளர்ச்சி நிகழ்ந்தது என்றால், அப்போது கடவுள்தான் அனைத்து உயிர்களையும் படைத்தார் என்ற கோட்பாட்டை அது பொய்யானது என்று மெய்ப்பித்துவிடுகிறது; அதனால் ஆதாம், ஏவாள் கோட்பாடும் மறுக்கப்பட்டுவிடுகிறது. ஆதாமும் ஏவாளும் இல்லாமல் போனால் முதல் பாவம் என்பதோ, பிறப்புமூலம் என்பதோ இல்லை. சிலுவையில் அறையப்படுவதற்கான ஒரு பலி ஆடு தேவையில்லை! தலைமுறை தலை-முறையாக நிலைத்து தொடர்ந்து வரும் சில பாவங்களில் இருந்து மன்னிப்பு அளித்து மீட்கப்படுவதற்கான தேவையும் இல்லை! ஒட்டுமொத்த மதம் என்னும் மாபெரும் கட்டமைப்பு சீட்டுக் கட்டினால் கட்டப்பட்ட கோபுரம் போல் சரிந்துவிடுகிறது! அது ஒட்டு மொத்த கிறித்தவ மதத்தையும் மற்றும் ஆப்ரகாமைப் பின்பற்றும் இதர மத நம்பிக்கையாளர்களையும் தேவைப்படாததாக ஆக்கிவிடுகிறது. பிறப்புமூலம் என்னும் கருத்து எப்போது ஓர் உருவகக் கதையாக ஆகிவிடு-கிறதோ, பின்னர் பைபிளில் உள்ள எதனை உண்மையென்று கருதமுடியும்? பைபிளில் உள்ள அனைத்தையும் உருவக, கற்பனைக் கதை என எடுத்துக் கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களை ஏன் அவர்கள் சகித்துக் கொண்டு நேசிக்கக்-கூடாது? குடும்பக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு, கருக்கலைப்புக்கு பெண்களுக்கு ஏன் உரிமை அளிக்கப்படக்கூடாது? கதைப் புத்தகங்களுக்குப் பதிலாக ஆப்பிரிக்க நாடுகளில் ஏன் கருத்தடை சாதனங்களை விநியோகிக்கக்-கூடாது? மாதவிலக்கு ஆகும் பெண்களை பாதிரியார்களாகவும் போப்புகளாகவும் ஏன் நியமிக்கக்கூடாது?

அறிவியலும் மதமும் எப்போதுமே ஒன்றுக்கு ஒன்று எதிரானதாக, முரண்பட்டதாக இருப்பவையாகும். உயிரினத் தோற்ற வளர்ச்சி மற்றும் பெருவெடிப்புக் கோட்பாடுகள் பற்றிய அவரது அறிக்கையை போப் மனப்பூர்வமாக வெளியிட்டிருந்தாரானால், அவர் தனது போப்பாண்டவர் பதவியைத் துறக்க வேண்டும்; அந்தப் பதவிக்கான சலுகைகளை, வசதிகளை அவர் துறக்க வேண்டும்.

மதம் எப்போதெல்லாம் அறிவியலை எதிர்கொள்ளுகிறதோ, அப்போதெல்லாம் இறுதி வெற்றி அறிவியலுக்கே கிடைக்கிறது. அதனால் ஏற்படும் அவமானங்களை மதங்கள் அமைதியாக விழுங்கிக் கொண்டு, அறிவியல்-தான் சரியானது என்று தயக்கத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதன் பிறகு, இரண்டாம் நிலைப் பகுத்தறிவு மற்றும் உள்நோக்கம் கொண்ட காரண காரிய விளக்கங்களினால், அறிவியலுக்கும் மதத்துக்கும் இடையே வேறுபாடு இல்லை, முரண்பாடு இல்லை என்று கூறி மக்களை எவ்வாறாவது ஏமாற்றவே அவர்கள் முனைகின்றனர்.
இறுதியாக ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். நாம் எங்கிருந்து வந்தோம் என்பதைப் பற்றி மதங்கள் கூறுவது தவறாக இருக்கும் நிலையில், இறப்புக்குப் பிறகு எங்கே நாம் போகப்போகிறோம் என்பதைப் பற்றி அவர்கள் கூறும் அடிப்படை ஆதாரமற்ற கதைகளை நாம் ஏன் நம்ப வேண்டும்?

- தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழ் ஓவியா said...

புராணங்களில் அறிவியலைத் தேடலாமா?

வீரமணி

தற்போதுள்ள பா.ஜ.க. ஆட்சியை முழுமையாக வழிநடத்தும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்ற ஆரியக் கலாச்சாரப் போர்வையில் அரசியல் நடத்தும் ஏற்பாட்டாளர்கள் ஆவார்கள்.

அவர்களது கொள்கையைத் திணித்து, மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம் என்ற தத்துவங்களை கரையான்கள் எப்படிப் புகுந்து அமைதியாகவே புத்தகங்களை அரித்துத் தின்று விடுகின்றவோ அதேபோல், பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

புல்லட் ரயில் வேகத்தில் செய்துவிட ஆங்காங்கே முக்கியப் பதவிகளில் எல்லாம் அமைச்சரவை தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். மயமாகி அதன்மூலம் பச்சையாக ஹிந்துத்துவாவை ஆட்சிப் பீடமேற்றிட ஆலாய்ப் பறக்கின்றனர்!

ஹிந்துத்வா என்பதை உருவாக்கிய வி.டி.சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் முக்கியமான கோல்வால்கர் போன்றவர்களின் தத்துவங்களை ஆட்சியின்மூலம் அமலாக்கிட அதிவேக அவசரம் காட்டுகின்றனர்.

அதற்கான முன்னேற்பாடாக, முக்கிய அறிவியல், வரலாறு, கல்வி போன்ற அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கொணர்ந்து அமர்த்தி, அதை நிறைவேற்றிட துடியாய்த் துடிக்கின்றனர்.

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் என்ற அமைப்பிற்கு வி.சுதர்சனராவ் என்ற ஒரு பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரரை நியமனம் செய்து அவர் புராணங்கள், இதிகாசங்கள் இவைகளை, வரலாறுகளாக மாற்றிடத் திட்டமிட்டு, பிரச்சார திட்டத்தைச் செயல்படுத்துகிறார்.

வரலாற்றுப் பாடப் புத்தகங்களையே புரட்டிப் போட்டு ஹிந்துத்வாவின் கையேடுகளாக்கிட முனைப்புடன் செயலாற்றி முனைந்து நிற்கின்றனர்.

நாட்டின் பிரபல வரலாற்றுப் பேராசிரியர்களான ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப் போன்றவர்களுக்கு மார்க்சிய இடதுசாரி முத்திரை குத்திவிட்டு, தமது கருத்துகளை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் முயற்சியில் கூச்சநாச்சமின்றி ஈடுபட்டுள்ளனர்!

ஹிந்துத்துவா கருத்தியலையும் சொல்லையும் உருவாக்கிய வி.டி.சாவர்க்கர் அவரது நூலில் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார்.

‘Hinduise Military
Militarise Hindus’

இராணுவத்தை ஹிந்து மயமாக்கு
ஹிந்துக்களை இராணுவமாக்கு
என்பதே அவ்விரு கட்டளைகள். அதுபோலத்தான் இப்போது,
வரலாற்றைக் காவிமயமாக்கு

காவி(இந்து)_புராண இதிகாசங்களை வரலாறாக்கு என்ற முயற்சியோடு முன்பு வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் முயன்றதைத் தொடருகிறார்கள்.

அதிகப் பெரும்பான்மை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அதற்குமேல் ஒருபடி சென்று, இப்போது, ஹிந்துத்துவ புராண, இதிகாச கற்பனைப் புரட்டுகளை அறிவியலுக்கு முன்னோடி என்ற ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுதர்சன ராவ் போன்றவர்களும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள்வரை கட்டவிழ்த்துவிட்டு நடத்தி வருகின்றனர்.
இராமாயணம் நடந்த கதை என்கிறார்கள்.

மரபணு ஆராய்ச்சி மஹாபாரதத்திலேயே உள்ளது.

பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோடி - (Transplantation) உறுப்பை வெட்டி இணைத்தல் வினாயகர் கதை மூலம் நமது பரமசிவனே செய்துள்ளார்.

ராக்கெட்டுகளுக்கு முன்பே புஷ்பக விமானம் _ இராமாயணத்திலேயே உள்ளது என்று கூறி கொயபெல்ஸின் குருநாதர்களாக ஆகியுள்ளன!.

இதை எதிர்த்து கரன் தாப்பர் போன்ற விமர்சகர்கள் கேள்வி கேட்கத் துவங்கியுள்ளனர்.

ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் இதனை மறுத்துக் கூறுகின்றனர்.

இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றாளர்களுக்கே அதிக அறிமுகமில்லாத ஆர்.எஸ்.எஸ். நபரான ஆந்திரத்து சுதர்சனராவ் என்பவர் பொறுப்பேற்றதிலிருந்து, தாப்பர் போன்றோர்மீது மார்க்சிஸ்டுகள் என்று சாயம் பூசுவதோடு, வெள்ளைக்காரர்கள் புராணங்களை கட்டுக் கதைகள் என்று கூறிவிட்டனர். இதனை மாற்றி 'விணீளீமீ வீஸீ மிஸீபீவீணீ' இந்தியாவின் வரலாறு இதிகாச புராணங்களிலிருந்து உருவாக வேண்டும் என்று மனம் போனபடி பேசியுள்ளார். எப்படி இனி செய்யப் போகிறார்கள் என்பதற்கான மணியோசை இது. இதனை அத்தனை முற்போக்கு சக்திகளும் ஒன்று திரண்டு எதிர்த்தாக வேண்டும். இந்த பத்தாம் பசலித்தன புதுப்பித்தலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஆங்காங்கு கருத்தரங்கங்களை நடத்திட முன்வர வேண்டும்.

இந்நாட்டு அறிவியலாளர்கள் (Scientists) ஏன் மறுத்து அறிக்கைகள் விடவில்லை என்றுகூட கரன் தாப்பர் போன்றவர்கள் கேட்கின்றனர்.

அதற்கு விடை வெளிப்படையானது. பெரும்பாலான விஞ்ஞானிகள் மத்திய அரசு ஊழியர்கள். பிரதமரும் உள்துறை அமைச்சரும் இப்படி அபத்தமான கருத்துகளைக் கூறும்போது அவர்களால் மறுத்துப் பேச முடியாதே; தனியார் துறை விஞ்ஞானிகளும்கூட, பல முதலாளிகளின் அமைப்புகளில் அல்லவா பணிபுரிகிறார்கள்? இவர்கள் அதனால் வாய்மூடி மவுனத்தில் புழுங்கிக் கொண்டிருப்பவர்களாகவே உள்ளார்கள் என்பதே யதார்த்த நிலையாகும்!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சியும் துயரமும்


வீரமணி

கேள்வி : தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியில் திளைத்த தருணம் எது? துயரத்தில் துவண்டுபோன தருணம் எது? - - நா.இராமண்ணா, சென்னை

பதில்: மகிழ்ச்சியில் திளைத்த நேரம். அறக்கட்டளை என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை, வருமான வரித்துறை டிரிபியூனல் அறிவித்து, 80 லட்ச ரூபாய் அறியா வரியைத் தள்ளுபடி செய்து அறிவித்ததைக் கேட்ட-போது.

துன்பம், நம் அய்யா - அம்மா மறைவின்போது.

தமிழ் ஓவியா said...

1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து மதத்திலிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட தோழர்களும் பவுத்தம் தழுவியபோது அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும், மற்றவர்களும் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள் இதோ:

1. பிரம்மனையோ, விஷ்ணுவையோ, சிவனையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

2. இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

3. இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

4. கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.

5. பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப்பிரச்சாரம் செய்வது விஷமத்தன மானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

6. சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.

7. பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.

8. பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட் டேன்.

9. அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.

10. சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.

11. பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.

12. தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.

13. எல்லா உயிர்ப் பிராணிகளிடத்தும் நான் கருணை காட்டுவேன்; அவைகளைக் காக்க முயலுவேன்.

14. நான் பொய் சொல்லமாட்டேன்.

15. நான் திருட மாட்டேன்.

16. காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட்டேன்.

17. போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.

18. ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இணங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.

19. பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும், சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக் கொள்ளுகிறேன்

20. புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

21. இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.

22. புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னவர் தம் வாழ்நாளில் அதனைச் சாதித்துக் காட்டினார்.

- “விடுதலை” 16-2-2012

தமிழ் ஓவியா said...

இந்த நினைவு நாளில்...

அண்ணல் அம்பேத்கர் பிம்பமல்ல பின்பற்றப்பட வேண்டியவர்!

சமூகப் புரட்சியா ளரும், தலைசிறந்த சிந்தனையாளருமான அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று. வரலாற்றுச் சுவடான இந்த நாளைத்தான். சங்பரிவாரக் கும்பல், 450 ஆண்டு பழைமை வாய்ந்த பாபர் மசூதியை, இராமன் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டலாமா? என்று பொய்யுரை புகன்று, அன்றைய மத்திய - மாநில ஆட்சிகளின் கண் ஜாடையோடு, இடித்து, இந்தியாவில் மதக் கலவரத்திற்கு வித்தூன்றினர்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நடந்த அந்தக் குற்றத்தினைச் செய்தவர்கள் இன்றும் மார்தட்டி நிற்கின்றனர். சட்டம் ஊமையாக, ஆமையாக உள்ளது!

எத்தனையோ கமிஷன்களும், வழக்குகளும் மவுன ராகங்கள் வாசிக்கின்றன! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற அறிவுரைகள் ஒரு புறம் - இந்த லட்சணத்தில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை (டிச.6) அவர்கள் தேர்வு செய்ததே, அவரின் நினைவை திசை திருப்பவே.

இன்றோ அதே கூட்டம் அம்பேத்கரையும் முகத்திரையாக வாக்கு அறுவடைக்குப் பயன்படுத்த திட்டமிடுகின்றனர்!

இந்துமதம்தான் ஜாதி - தீண்டாமையின் ஊற்று - பாதுகாவல் அரண் என்ற அவரது கருத்துக்கு நேர் எதிரானவர்கள் அவரைத் தங்கள் முகபடாமாக அணிந்து பவனி வந்து அப்பாவி தாழ்த்தப்பட்டோரை ஏமாற்றிட முயலுகின்றனர்!

சில இளைஞர்களை - அவர்தம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று பசப்பு மொழிகளால் ஈர்க்க முயலும் கொடுமை, பக்தி மயக்க மருந்து மூலம் நடைபெறுகிறது.

ஒடுக்கப்பட்டோர் உரிமை அமைப்புகள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய முக்கிய தருணம் இது!

இராமனையும், கிருஷ்ணனையும், மனு தர்மத்தையும், ஏற்காதவர் அம்பேத்கர்.

அவரை வெறும் படமாக்கி - பிம்பமாக்கி - பெருத்தமாலைகள் சிலைகளின் முகத்தை மறைப்பது போல், அணிவித்து, போலிப் பாராட்டுகளால் அவரது கொள்கையை மறைத்து அழித்து விட முயலு கிறார்கள்!

அண்ணல் அம்பேத்கர் வெறும் சிலை அல்ல. சீலத்தைத் தந்தவர் அவர் பிம்பமல்ல - பின்பற்றப்பட வேண்டியவர்!

மறவாதீர்!


சென்னை
6-12-2014

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/92474.html#ixzz3L83SUfgU

தமிழ் ஓவியா said...

பிஜேபியின் ஒழுக்கம் - பாரீர்!


டில்லியில் ஆளப் போவது ராமன் மகனா - முறை கேடாகப் பிறந்தவரின் மகனா?

என்று பேசிய மத்திய பிஜேபி அமைச்சர் நிரஞ்ஜன் ஜோதி பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பிபுள்ள நிலையில், அந்த மத்திய அமைச்சர் நிரஞ்ஜன் ஜோதி தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் - அவர் பிரச்சாரத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இட மில்லை என்று பிஜேபி அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகிறார்.

இதன் பொருள் என்ன? இதைவிட மோசமாகப் பேசுக என்று தூண்டி விடுவதுதானே! இது தான் பிஜேபியின் ஒழுக்கமா!

Read more: http://viduthalai.in/e-paper/92468.html#ixzz3L83tonzA

தமிழ் ஓவியா said...

மருந்து, மாத்திரை களின் பெயர்களை புரியும் படியும், தலைப்பு எழுத்து களிலும் எழுத வேண் டும் என்று மருத்துவர் களுக்கு உத்தரவிடும் வகையில், இந்திய மருத் துவக் கவுன்சில் விதி முறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித் துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/92468.html#ixzz3L846iYY6

தமிழ் ஓவியா said...

சூழ்நிலை


பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச் சார்பு, பழக்க வழக்கங்களால்தான் மனிதன் அயோக்கிய னாகவும், மடையனாகவும் ஆகின்றான்.

(விடுதலை, 11.11.1968)

Read more: http://viduthalai.in/page-2/92465.html#ixzz3L877F5gM

தமிழ் ஓவியா said...

பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்- டிசம்பர் 6


அண்மையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியின் தலை வரும், பால் தாக்கரேயின் தம்பியின் மகனுமான ராஜ்தாக் கரேயின் மகள் ஊர்வசி தாக்கரே, தனது டிவிட்டரில் பாபாசாகிப் அம்பேத்கரைச் சிறுமைபடுத்தி, கருத்து தெரிவித்திருந்தார்.

தாழ்த் தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பங்கி அதாவது தோட்டி சமுதாயத்தைச் சேர்ந்த அம்பேத்கருக்கு நினைவகம் இருக்கும்போது, பால் தாக்கரே போன்ற மிகப்பெரிய தலைவருக்கு ஏன் நினைவகம் அமைக்கக்கூடாது எனக் கூறியிருந்தார்.

இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அம்பேத் கரை, சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரை, பொருளாதாரத் துறையில் எனது தந்தை என நோபல் பரிசு பெற்ற அமர்தயா சென்னால் போற்றப்பட்ட அம்பேத்கரை, பழமைவாதிகளான ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் பேச்சைக் கேட்டு, இந்து சட்ட திருத்த மசோதாவை அம்பேத்கர் விரும்பியபடி கொண்டு வர மறுத்த நேரு அமைச்சரவையிலிருந்து கொள்கைக்காக விலகிய அம்பேத்கரை, 1935இ-ல் உருவான ரிசர்வ் வங்கி அமைவதற்கு காரணமான அம்பேத்காரை, தாமோதர் பள்ளத்தாக்கு, ஹிராகுட் திட்டம் அமைவதற்கு அடித்தளம் இட்ட அம்பேத்காரை, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேர வேலை என மாற்றப் படுவதற்குக் காரணமான அம்பேத்கரை விட, மக்களிடையே மத வெறியைத் தூண்டி அரசியல் செய்த பால் தாக்கரே சிறந்த தலைவர் என மராட் டியத்தில் இன்று கூற முடிகிறது என்றால், மதவெறி ஆட்சிகள் அமைந்தது தானே காரணம்.

ஆனால், அம்பேத்கர் மறைவு குறித்து, தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையில் அம்பேத்கரின் சிறப்புகளை எவ்விதம் கூறியுள்ளார் என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரின் அறிக்கை 8.12.1956-இல் விடுதலையில் வெளியானது. அந்த அறிக்கையில், இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும், ஏராளாமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்தி விட்டார் என்று செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்.

உண்மையில் சொல்ல வேண்டு மானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது எந்தவிதத்திலும் சரி செய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங் கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத்தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.

உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை, வெகு சாதாரணமாக மதித்த தோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னா பின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார்.

இந்துமதம் என்பதான ஆரிய ஆத்திக மதக்கோட்பாடுகளை வெகு அலட்சி யமாகவும், ஆபாசமாகவும், அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாகப் பேசியும், எழுதியும் வந்தார்.

உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம்பசலி, பிற்போக்குவாதி என்றும், அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டுவந்த கீதையை, முட்டாள்களின் உளறல்கள் என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும், இராமாயணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி, பல்லாயிரக் கணக்கான மக்களிடையில் இராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார்.

இந்துமதம் உள்ளவரையிலும் தீண்டாமையும் சாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுண ரும், சீர்திருத்தப் புரட்சிவீரருமான டாக்டர் அம் பேத்கர் முடிவு எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த் தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.

அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலாமென்று கருதுகிறேன். அதாவது, காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும், அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கர் மரணத்துக்கும் இருக்கக் கூடும் என்பதே ஆகும். அண்ணல் அம்பேத்கரின் மறைவு நாளில், பெரியார் சுட்டிக்காட்டியபடி, பாசிச இந்துக் கும்பல் குறித்து அம்பேத்கரின் கருத்துக்களை நெஞ்சில் ஏந்தி போராட உறுதி ஏற்போம்.

-_-குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-3/92439.html#ixzz3L87JBL51

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம் சொத்து உரிமை


மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்குச் சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும், சொத்துக்களை வைத்து, சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள். கல்யாண ரத்து

பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.

அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணே 7வருஷ காலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதால் இஷ்ட மில்லாவிட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3 வருஷ காலம், ஒற்றுமை யின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களாயிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள்ள வர்களாக இருந்தாலோ ஆகிய காரணங்களால் துன்பப் படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங்களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம்.

மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம், ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப்படாதவர்கள் தன்னைக் கல்யாணப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள்ளலாம். இந்தப்படி விலக்கிக்கொண்ட 6 மாதம் பொறுத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.

மைசூரில் கல்யாண வயது

மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடாயிருக்கிறது.

செங்கல்பட்டு தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் - ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட சுயமரியாதை இயக்கம், மத சமூகத்தைக் கட்டுத்திட்டமில்லாமல் செய்கின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருதுகின்றோம்.

குடிஅரசு - செய்திக்கட்டுரை - 21.06.1931

Read more: http://viduthalai.in/page-7/92443.html#ixzz3L87d8bd1

தமிழ் ஓவியா said...

"என் வாழ்வு - மூச்சு - சர்வமும் என் இன மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள், முன்னேற முடியாமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்கள் மனிதத் தன்மை அடையவேண்டும்; மானம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பதைத் தவிர வேறு சுயநலம் என்ன?"

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/92443.html#ixzz3L87r6xWj

தமிழ் ஓவியா said...

யார் செயல்? யாருக்கு நன்றி!

காங்கிரசில் உள்ள பார்ப்பனர்கள் அனைவரும், வருணாசிரம தருமத்தையும், மதத்தையும், கடவுளையும், வேதங்களையும், புராணங்களையும் பிரசாரம் புரிந்து, நமது இயக்கத்தால் சிறிது கண்திறந்து வருகின்ற பாமர மக்களை மீண்டும் மூட நம்பிக்கையில் கட்டுப்படுத்தி வைக்கவே காங்கிரசை உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்று நாம் அடிக்கடி கூறிவருவதில் சிறிதும் தவறில்லையென்பதற்கு மற்றொரு உதாரணம் கிடைத்திருக்கிறது.

தென்னாட்டுக் காந்தி எனக் காங்கிர கூலிகளால் கொண்டாடப்படும் திரு.சி. இராஜகோபாலாச்சாரியார் அவர் களைப் பற்றி நாம் ஒன்றும் அதிககமாகக் கூற வேண்டியதில்லை. அவர் ஒரு பழுத்த வருணாசிரம தருமவாதியாகிய கடவுள் பக்தர் ஆக விளங்குகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். குடுகுடுப்பைக்காரன் போகுமிடந்தோறும், தனது குடுகுடுப்பை யையும், தன் தோளின் மேல் ஒரு மூட்டைக் கந்தைத்துணியையும் சுமந்து கொண்டு போவதைப்போல, திரு. ராஜகோபாலாச்சாரி யாரவர்களும் எங்கே போனாலும் புராணங்களையும், கடவுளையும் சுமந்தே தான் செல்லுவார். அவர் எந்த அறிக்கை வெளியிட்டாலும், எங்கே என்னென்ன பேசினாலும், கடவுளைப் பற்றியும் புராணங்களைப்பற்றியும் பேசாமல் விடவே மாட்டார். அவருடைய அரசியல் பிரச்சாரத்துடன் கூடவே கடவுள் பிரச்சாரமும், புராணப்பிரசாரமும் நடந்து தான் தீரும். அவருடைய சகாக்களாகிய மற்ற அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார்களும் இம்மாதிரியே பிரச்சாரம் பண்ணிக்கொண்டே வருகின்றனர். இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் அவர் வெளிட்டிருக்கும் ஒரு அறிக்கையைக் கவனிக்க வேண்டுகிறோம். அவ்வறிக்கை வருமாறு:-

நாளது டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மகாத்மா காந்தி பம்பாய் வந்து சேருவார். அன்றையதினத்தைத் தமிழ்நாடெங்கும் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளு கிறேன். அன்று மாலை ஜாதி, மத கட்சி பேதங்கள் எல்லா வற்றையும் மறந்து, தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் பொதுக் கூட்டத்தில் கூட வேண்டும். நமது ஒப்பற்ற தலைவர் அளவில்லாத தேக சிரமங்களுக்கு உள்ளாகியும், சௌக்கியமாகத் திரும்பி வந்ததைக் குறித்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்யவேண்டும். அன்றைய தினம் நமது மகிழ்ச்சிக்கு அறிகுறியாகச் சொந்த வீடுகள், பொதுக்கட்டடங்கள் எல்லாவற்றிலும் தேசியக்கொடி பறக்க விடண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். (இந்தியா) என்பது அவ்வறிக்கையாகும். இந்த அறிக்கையின் சுருக்கமான கருத்து, திரு. காந்தியவர்கள் பிரயாணஞ் செய்த காலத்தில் உடம்பு சௌக்கியமாக இருந்தது ஒன்று, பிரயாணஞ் செய்து திரும்பி வந்தது ஒன்று, ஆகிய இந்த இரண்டு காரியங்களைச் செய்து விட்டார். இதற்காக ஆண்டவன் என்பவனுக்கு நன்றியும் பிரார்த்தனையும் செய்வது ஒன்று, தேசியக்கொடி பறக்க விடுவது ஒன்று. ஆகிய இந்த இரண்டு காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதாகும்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

ஜாதியின் பேரால் உயர்வு தாழ்வு, மதத்தின் பேரால் வேற்றுமை உணர்ச்சி, தேசத்தின் பேரால் குரோதத் தன்மை முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும், கடவுளின் பேரால் மேல் - கீழ் நிலை முதலாகிய அயோக்கியத் தன்மைகள் மனித ஜீவனிடமே உண்டு. பகுத்தறிவின் காரணமாக மனித ஜீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட, தீய, இழிவான, அயோக்கியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறிவில்லா ஜீவராசிகளைவிட மனித ஜீவன் மூளை விஷேசம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட ஜீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில், எவ்விதத்திலும் மனித ஜீவன் மற்ற ஜீவப் பிராணிகளை விட உயர்ந்த தல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜாதியின் பேரால் உயர்வு தாழ்வு, மதத்தின் பேரால் வேற்றுமை உணர்ச்சி, தேசத்தின் பேரால் குரோதத் தன்மை முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும், கடவுளின் பேரால் மேல் - கீழ் நிலை முதலாகிய அயோக்கியத் தன்மைகள் மனித ஜீவனிடமே உண்டு.

பகுத்தறிவின் காரணமாக மனித ஜீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட, தீய, இழிவான, அயோக்கியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறிவில்லா ஜீவராசிகளைவிட மனித ஜீவன் மூளை விஷேசம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட ஜீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில், எவ்விதத்திலும் மனித ஜீவன் மற்ற ஜீவப் பிராணிகளை விட உயர்ந்த தல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/92445.html#ixzz3L88d2hmu

தமிழ் ஓவியா said...

பெரியார் - அண்ணா மண்ணில் மதவாதம் எடுபடாது கோவையில் வைகோ பேச்சு

கோவை, டிச.6_ தந்தை பெரியார் _அறிஞர் அண்ணா மண்ணில் உங்கள் மத வாதம் செல்லாது என்று ஆவேசமாக பேசினார் மதிமுக பொதுச் செய லாளர் வைகோ.
மதிமுக சார்பில் பினாங்கு (மலேசியா) பிரகடன விளக்கப் பொதுக் கூட்டம் கோவை, பீளமேடு புதூரில் 2.12.2014 செவ்வாய் மாலை 5.30 மணியளவில் துவங்கி நடைபெற்றது.

சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசும் போது இலங்கையில் நடை பெறவிருக்கிற அதிபர் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

120 கோடி இந்திய மக்களின் பிரதிநிதி ஒரு இனப்படுகொலையாள னுக்கு வாழ்த்துத் தெரி விப்பதா? என்று கண்டனம் தெரிவித்தேன். பிரதமர் பதவியையே தாழ்த்தி விட்டீர்கள் என்று சொன் னேன்.

எதற்கு வாழ்த்து? தமிழின அழிப்பை வேக மாக செய்வதற்கா? தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்க வா? கோயில்களை இடிக் கவா? தமிழர்களின் நிலங் களைப் பறிக்கவா? நெஞ்சம் கொதித்துத்தான் பேசு கிறேன். பெயரைச் சொன் னால் ஒருமையா?

தூசிக்குச் சமமானவர் களுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன். நான் மதயானைக் கூட்டத்தைக் கண்டுபிடித்து அடிப்பவன். பாரத ரத்னா விருது இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு வழங்கப் பட வேண்டும் என்று சொல்லுமளவுக்கு சுப்பிரமணியசாமிக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இவர்கள் நாளை, காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கும் விருது கொடுக்கச் சொல்வார்கள். இது நாதி இல்லா நாடா? தமிழர்களுக்கு நாதி இல் லையா?

நான் இரண்டு நாட்டு ராணுவத்துக்குள் போய் வந்தவன்! என்னை வீட்டுக்கு திரும்ப முடியாது என்று சொல்வதா? இதைக் கட்சி மாச்சரியங் களுக்கு அப்பாற்பட்டு கண்டித்த வர்களுக்கு நன்றி! நன்றி! இவன் தமிழினத்திற்கு தேவை என்று நினைக்கும் அளவுக்கு நான் தலைவர் களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ்.ன் கொள் கைகள் அடங்கிய புராணப் பாடத்திட்டத்தை குஜராத் தில் கொண்டு வந்துவிட் டார்கள். இந்தியாவின் பல இடங்களுக்கும் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக் கிறார்கள். இந்த ஆக்டோ பஸ் முயற்சிதான் பெரியார், அறிஞர் அண்ணா மண் ணான தமிழ்நாட்டில் நடக்காது.

கூட்டுக் குற்றவாளிகள்

ராஜபக்சேவுடன் உறவு கொள்ளும் ஏற்பாடு எதற்கு எதிர்காலத்தில் நீங்களும் இனப்படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாக மாறப்போகிறீர்களா? மோடி அவர்களே நட வடிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள்.

இலட்சியத்தைக் காக்க வாருங்கள் என்று இளை ஞர்களை அழைப்பேன். உலக மக்களிடையே பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி தனி ஈழ ஆதரவைத் திரட்டுவேன். ஈழப்பிரச் சனையில் நியாயம் நம்மிடம் இருக்கிறது. பொது வாக் கெடுப்பை யாரும் கூடாது என்று சொல்ல முடியாது. இளைஞர்களே சிந்தி யுங்கள்! மாணவர்களே சிந்தியுங்கள்! என்று பேசிய தோடு, பினாங்கில் தான் கலந்து கொண்ட கூட்டத் தின் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-7/92446.html#ixzz3L88kFp3p

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் வாழிய நீடு!


அய்யா அடிச்சுவடே ஆயுளுக்கும் நெஞ்சினிலே
பொய்யா அரிச்சுவடி என்றிட்டீர்! - மெய்ம்மை
வகுத்த நெறிகளை வாழ்விக்க வந்த
பகுத்தறிவே! வாழிய நீடு!
திருவள் ளுவரின் குறள்போல் புவியில்
பெரியார் குரலாய் ஒலித்தீர் - வரிப்புலியுன்
வேட்டையில் வீழும் விலங்காய் மடமையிருள்
ஓட்டிடவே வாழிய நீடு!
சுமையாம் மடத்தைச் சுடும்நின் அறிவே;
இமய மனமும் இறங்கும் - உமதாம்
அறிவுச் சுரங்கத்தை ஆளுகின்ற தந்தை
பெரியார் ஒளிவாழி நீடு!
மண்ணையும் மண்ணின் மொழியையும் காத்திடும்
திண்தோள் தமிழர் தலைவரே! - கண்ணை
இமையெனக் காக்கும் இனமானச் சிங்கத்
தமிழுணர்வே! வாழிய நீடு!
அறிவுலக மேதை பெரியார் தமக்குப்
பெரியார் உலகமொன்று கண்டீர்! - நிறைநிலா
மண்வந் திறங்கி மதிஒளி தந்து வாழ்த்தும்
நின்பெயர் நிற்கும் நிலைத்து

Read more: http://viduthalai.in/page3/92418.html#ixzz3L8A1BvLC

தமிழ் ஓவியா said...

புராணம் என்றால் புருடா என்று பொருள்


860,00,00,000 (860 கோடி) ஆண்டு களுக்கு ஒரு முறை எந்த நோக்கத் திற்காக பகவான் சிறீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறாரோ அந்த நோக்கத்திற்கு சிறைப்பட்ட ஜீவாத்மாவை வழி நடத்துவதற்காக, பகவத் கீதையை உள்ளது உள்ளபடி அளிப்பதே எமது ஒரே லட்சியமாகும்.- இந்த செய்தி, பகவத் கீதை உண்மை யுருவில் என்ற; பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட; அ. ச. பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ் கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்த 1971 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூலில் (முன்னுரையில்) உள்ளது. சத்ய யுகம் 172800ஆண்டுகள் திரேதாயுகம் 1296000ஆண்டுகள் துவாபரயுகம் 864000ஆண்டுகள் கலியுகம் 4,32,000 ஆண்டுகள் மொத்தம் 43,20,000 ஆண்டுகள்தான். எனும்போது, நமது 860,00,00,000 (860 கோடி) ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறார் என்பது எப்படி சரியாகும்?

கடவுள் கதை என்றால் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்று சொல்லி விடுவதால் யாரும் யோசிப்பதில்லை. ஆனால் நாம் யோசிப்போமே?!

- க.அருள்மொழி குடியாத்தம்

Read more: http://viduthalai.in/page3/92419.html#ixzz3L8A9fihR

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். பற்றி காமராஜர்

குறிப்பாக அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுக்கு) பயம் என்னைப் பற்றித்தான். இந்த காம ராஜ்தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல் கின்றான். அவன்தான் அதிலே தீவிர மாக இருக்கின்றான் என்று நினை கின்றார்கள். என் வீட்டுக்கு தீ வைக் கின்றான். ஆனால் நான் இதற்கெல் லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன்....

- 11.12.1966 சேலம் பேருரையிலிருந்து நவசக்தி - 15.12.1966

Read more: http://viduthalai.in/page3/92420.html#ixzz3L8AJ2BSt