Search This Blog

5.12.14

வை.கோ,தமிழருவி மணியன்,நிலைப்பாடு சரியா?

(கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் -"உண்மை” ஏப்ரல் 01-15 - 2014 இதழில் எழுதிய கட்டுரை ,இப்போதைய நிலையையும் தோழர்கள் ஒப்பிட்டு பார்த்து முடிவுக்கு வரவும்.--தமிழ் ஓவியா)



மத வெறிக்கு மகுடி வாசிப்போர் எச்சரிக்கை! எச்சரிக்கை!!


    1. பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன? நடக்கவிருக்கும் தேர்தலில் மதச்சார்பின்மையில் அதன் தற்போதைய முடிவு யாது?

    சில எடுத்துக்காட்டுகள் மூலம் இதற்குப் பதில் சொல்லிவிடலாம்.
    RAM TEMPLE, UNIFORM CIVIL CODE NON NEGOTIABLE - B.J.P.
    The BJP has made it known that its core issues —abrogation of Article 370, construction of a Ram temple and enforcement of a uniform civil code — will be non-negotiable in its manifesto for the general election.

    இராமன் கோவில் கட்டுதல், நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டம், ஜம்மு_காஷ்மீர் மாநிலத்திற்கென்றுள்ள பிரத்தியேக சலுகைகள் அளிக்கப்படும் 370ஆவது பிரிவு நீக்கம் இவற்றில் பி.ஜே.பி. உறுதியாக இருக்கும்; தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறும்; இவற்றில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று  பி.ஜே.பி.க்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறினார். (ஆதாரம்: தி. இந்து 19.10.2013)

    முரளி மனோகர் ஜோஷி இப்படிக் கூறுகிறார் என்றால் பி.ஜே.பி.யின் மாநிலங்களவைத் தலைவரான அருண்ஜெட்லி என்ன கூறுகிறார்?

    Question: There was no reference to the Ram temple in Modi’s speech. Have you kept Ram Mandir out of your agenda this time?
    Answer: No, no. We will announce our manifesto. You will have to wait for it to find out what is in the agenda and what is not. Our commitment to our basic issues is always there. Whether each of them becomes an election issue or not is a separate subject. Mandir has always been in our agenda. Wait for our manifesto.

    இதன் தமிழாக்கம் வருமாறு:

    கேள்வி: மோடியின் உரைகளில் ராமன் கோவில்பற்றி எதுவும் இடம்பெறுவதில்லையே, ஏன்?

    அருண்ஜெட்லி (மாநிலங்களவை பி.ஜே.பி. தலைவர்) பதில்: தேர்தல் அறிக்கையில், ராமன் கோவில் கட்டப்படுவது குறித்த அறிவிப்பு வெளிவரும். எங்கள் அஜண்டாவில் என்ன இருக்கிறது என்பதைத் தேர்தல் அறிக்கை வெளிவரும்வரை பொறுத்திருக்க வேண்டும்; எங்களுடைய அடிப்படை நோக்கம், குறிப்பாக ராமன் கோவில் கட்டுவது என்பதில் மாற்றம் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் காணப் போகிறீர்கள். (Economic Times, dated 22.1.2014)

    பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர மோடி என்ன சொல்லுகிறார்?

    ராமர் கோவில் கட்டுவது குறித்து உறுதியளிக்கும் கட்சிக்கே விசுவ ஹிந்து பரிஷத் ஆதரவு அளிக்கும். ராமர் கோவில் கட்டுவது குறித்து பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும். எங்கள் ஆதரவை விரும்பினால் இந்த விஷயத்தில் மோடி தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் பிரச்சாரங்களில் ராமர் கோவில் குறித்த விவரங்களை மோடி பேசாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது -

    பிரவீண் தொகாடியா, தலைவர், விசுவ ஹிந்து பரிஷத் செய்தியாளர்களிடம் பேட்டியில் (‘FREE PRESS JOURNAL’ 20.2.2014)

    நரேந்திர மோடி வாய் திறந்தார்

    இதற்குப் பதில் கூறும் வகையில் நரேந்திர மோடி வாரணாசியில் (21.2.2014) பேசினார்.

    மத்தியில் சரியான அரசு அமையாததற்கு  உத்தரப்பிரதேச மக்களின் பங்களிப்பில் ஏற்பட்ட குறைதான் காரணம். (உ.பி.யில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 80) நீங்கள் ஒருநாள் சரியான அரசைத் தேர்வு செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படித் தேர்வு செய்வீர்கள் என்றால் அன்றுதான் ராமராஜ்யம் நடைமுறைக்கு வரும் என்றார் மோடி.
    - (‘Economic Times’ 22.2.2014)

    இதன்மூலம் பி.ஜே.பி. தன் ஹிந்துத்துவா வெறியில் திட்டவட்டமாக ஒளிவு மறைவின்றி இருக்கிறது என்பது வெளிப்படை.



    (2)    இந்த நிலையில் ம.தி.மு.க. எடுத்துள்ள நிலைப்பாடு சரியா?

    ம.தி.மு.க. தனது 2014 _ மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் நான்காவது அம்சமாக பக்கம் 15இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

    இந்தியத் துணைக் கண்டத்தில் சிறுபான்மை மக்களின் நலன்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும். அனைத்துச் சமயங்களுக்கும் சம உரிமை வழங்கும் விதத்தில் மதச்சார்பின்மை நிலைநாட்டப்படவும், சமய நல்லிணக்கம் தழைக்கவும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வகுத்த திராவிட இயக்க இலட்சியப் பாதையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
    தேர்தல் அறிக்கையில் மட்டுமா? தோழர் வை.கோ. அவர்கள் போட்டியிடப்போகும் விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் என்ன பேசியுள்ளார்?
    தற்போது  பா.ஜ.க. கூட்டணி புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

    நாட்டை வழிநடத்தும் சுயநலமற்ற, தொலைநோக்குச் சிந்தனை உள்ள தலைவராக நரேந்திர மோடி கருதப்படுகிறார்.

    ...... நரேந்திர மோடியும் மதச்சார்பற்ற கொள்கையுடன் மாநில சுயசார்பைக் காத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைக் காப்பார்.
    குஜராத் வதோரா நகரில் அமைதிப் பேரணி நிறைவில் எனது பேச்சை அப்போதும் முதல்வராக இருந்த மோடிதான் மொழிபெயர்த்தார். ஆகவே தமிழக, தமிழர்நலன் காக்கப்பட பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும்

    (மாலை முரசு 20.3.2014 பக்கம் 3) என்று பேசியிருப்பவர் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ..


    பி.ஜே.பி தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷியும், பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடியும் மிகவும் வெளிப்படையாக ராமன் கோவில் கட்டுதல், ராம ராஜ்ஜியம் உருவாக்குதல் உள்ளிட்ட ஹிந்துத்துவா கொள்கையில் மிகவும் வெளிப்படையாக இருக்கும் நிலையில் வைகோ அவர்கள் இப்படி எல்லாம் கூறுவது யாரை ஏமாற்ற? சிறுபான்மை மக்களும், வாக்காளர் பெருமக்களும், வைகோ அவர்கள் சுட்டிக் காட்டும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இலட்சியத்தை ஏற்றவர்களும் பரம முட்டாள்கள் என்று வைகோ நினைக்கிறாரா?

    இதே வைகோ பாபர் மசூதி இடிக்கப் பட்டபோது எப்படி முழங்கினார்?

    பாபர் மசூதியை இடித்து, தகர்த்துத் தரை மட்டமாக்கிய செயல் இந்தியாவின் மதச்சார்பின்மையின் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலாகும். பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். இயக்கம், விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்பு இவை அனைத்தையும் பரிபாலனம் செய்யும் சங் பரிவார் எனும் மதவெறிக் கூடாரத்தின் உத்தரவுகளை அமல்படுத்தக் கூடிய குற்றவாளிகள் என்று எல்.கே.அத்வானியையும், முரளி மனோகர் ஜோஷியையும் குற்றம் சாட்டுகிறேன்.

    பாபர் மசூதியின் மூன்று விதானங்களும் உடைக்கப்பட்டபோது எழுந்த சத்தம், காந்தியடிகளின் மெலிந்த தேகத்தில் பாய்ந்த மூன்று தோட்டாக்களின் ஓசையை நினைவூட்டியது (தினகரன் 25.12.1992) என்று எழுப்பிய வைகோவின் அந்த ஓசை வைகோவைப் பார்த்து இன்று கேலியாகச் சிரிக்காதா?
    பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது _ இப்போது வைகோ தூக்கிச் சுமக்கும் நல்லிணக்கக் கதாநாயகன் கூறியது என்ன?

    இந்துக்கள் அலிகள் அல்ல; ஆண்மை உள்ளவர்கள்  என்று நிரூபித்துவிட்டனர் என்று சொல்லவில்லையா?

    காந்தியாரின் மரணவோலம் நரேந்திர மோடி மூலம் தென்றலிசையாகத் தித்திக்கிறதா?

    மனிதனுக்கு எந்த நோயும் வந்தாலும் வரலாம்  ஆனால் இந்தப் பதவி வெறி நோய் மட்டும் வரவே கூடாது. இந்த நோய்க்குப் பலியாகலாமா? இதில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வகுத்த திராவிட இயக்க இலட்சியப் பாதையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் செல்லுவதாக தேர்தல் அறிக்கையில் வாசகங்கள் வேறு.

    தயவுசெய்து மறைந்த தலைவர்களை அவமரியாதை செய்ய வேண்டாம் என்பதுதான் நமது அன்பான வேண்டுகோள்! தே.மு.தி.க.வானாலும் சரி, பா.ம.க.வானாலும் சரி... மோடி மதச்சார்பின்மையைக் காப்பார் என்று இவர்கள் நம்புவார்களேயானால் வைகோவுக்குச் சொன்ன பதில்தான் இவர்களுக்கும்.
    இதே விஜயகாந்த் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது சொன்னது என்ன?
    பாபர் மசூதியை இடித்தது காட்டுமிராண்டித்தனம், அநாகரிகச் செயல். கலைஞர் சொன்னது மாதிரி.. ஆதிகாலத்துக்குப் போய்விட்டது போல இருக்கு


    (ஆதாரம்: சினிமா இதழ் ஹீரோ _ 1993 ஜனவரி இதழ்)
    மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை ஆகியவற்றிற்குத் தீர்வு காணவும் பா.ஜ.க. உறுதி அளித்துள்ளது என்கிறார் பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

    (சென்னை, தினமணி,  21.3.2014 பக்கம் 5)

    பி.ஜே.பி தலைமையகமான கமலாலயத்தில் மார்ச் 23ஆம் தேதி பி.ஜே.பி.யின் மூத்த தலைவர்களுள் ஒருவரான வெங்கையா நாயுடு இவர்களின் மூக்கை எல்லாம் நறுக்கென்றே வெட்டிவிட்டார். இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமாக தனி ஈழம் என்பதை பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளாது (தினத்தந்தி 24.3.2014 பக்கம் 8) என்று கூறிவிட்டாரே. என்ன முடிவு எடுக்கப் போவதாக உத்தேசம்.

    வெகு நாட்களுக்கு முன்புகூடப் போகவேண்டாம். மத்தியப் பிரதேசம் சாஞ்சியில் புத்தப் பல்கலைக்கழகத் திறப்பு விழாவுக்கு ரத்தக்கறையோடு வந்த ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்றது பி.ஜே.பி. ஆளும் மத்தியப் பிரதேச அரசுதான் என்பதை மறந்திட வேண்டாம்.
    வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளைச்  செய்யவில்லையா? இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கவில்லையா?

    2000ஆம் ஆண்டில் இலங்கைக்குச் சுகன்யா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை வழங்கியது அன்றைய வாஜ்பேயி அரசு என்பதை வசதியாக மறந்துவிடலாமா? வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரசுக்கும் பி.ஜே.பி.க்கும் என்ன வேறுபாடு? விரல்நீட்டிச் சொல்ல முடியுமா?

    (3)    பி.ஜே.பி. தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்காக வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினாரே திருவாளர் தமிழருவி மணியன். அவரின் நிலைப்பாடு என்ன?
    சிறுபான்மையோர் நம்பிக்கையை முழுமையாகப் பெறவேண்டும் என்றால் மோடியும், பா.ஜ.க.வும் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அயோத்தியைக் குறிவைத்து அரசியல் செய்யக் கூடாது. பாபர் மசூதியைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும். அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்ற கோஷத்தைக் கைவிடச் செய்தும், காஷ்மீருக்கு விசேச சலுகைகளை அளிக்கும் அரசியல் சட்டம் 370 பிரிவின்மீது கை வைக்கக் கூடாது. இதுபோன்ற சிறுபான்மையோரின் உணர்வை மதித்து நடந்தால் காங்கிரசின் போலி மதச்சார்பின்மை கோஷம் எடுபடாது. ஆனால், இப்படி நடக்க ஆர்.எஸ்.எஸ். விட்டுவைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. - தமிழருவி மணியன், கல்கி (29.9.2013 பக்கம் 6)

    ராமர் கோவில் பிரச்சினை, அனைவருக்கும் பொதுவான சிவில் கோடு, காஷ்மீருக்கென உள்ள அரசியல் சட்டம் 370இன் மீது கை வைக்கக் கூடாது _ என்று (கல்கியில் 29.9.2013) வரிந்து வரிந்து எழுதிய திருவாளர் தமிழருவி மணியன் அதில் உறுதியாக நின்றால் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது.

    இந்த மூன்றிலும் பி.ஜே.பி. உறுதியாக இருக்கும் _ தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறும் என்று தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லியும் கறாராகக் கூறிவிட்டார்கள். பெரும்பான்மையைத் தாருங்கள் _ ராமராஜ்ஜியத்தை உண்டாக்குகிறேன் என்று இவர்களின் அபிமான கதாநாயகர் நரேந்திர மோடியும் வாரணாசியில்  (21.2.2014) மனந்திறந்துவிட்டார்.

    இதற்குப் பிறகு இந்த வகையறாக்கள் வாயைத் திறக்கலாமா?
    மதுரை மீனாட்சியிடம் நான் வைத்த பிரார்த்தனை வென்றுள்ளது என்று (மாலைமலர் 21.3.2014 பக்கம் 2) மறுபடியும் களத்தில் குதிக்கிறாரே, இது அநாகரிகம் அல்லவா?

    மதுரை மீனாட்சி கிருபையால்தான் எதுவும் நடக்குமா? இதற்குப் பெயர்தான் அறிவார்ந்த அரசியலா? விமர்சனம் என்பது இதைச் சார்ந்ததா?


    பாமரத்தனமான நம்பிக்கைவாதிகள் விமர்சனக் கர்த்தாக்கள், ஆனால் அதன் கதி இதுதான் என்பது தெரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றே!

    இப்படி இந்த மூன்று பிரச்சினைகளில் சமாதானத்துக்கே  (NON-NEGOTIABLE) இடமில்லை என்று பி.ஜே.பி. தரப்பில் அறுதியிட்டுக் கறாராகச் சொன்ன பிறகு இவர் என்ன செய்ய வேண்டும்? எதிர்த்துக் குரல் கொடுக்க  வேண்டாமா?
    களம் இறங்க வேண்டாமா? உண்மையாகவே இவர்களுக்கு மதச்சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை இருந்தால் அறிவு நாணயத்தோடு நடந்து கொள்ள வேண்டாமா? முன்பின் நடந்ததெல்லாம் மக்களுக்கு எங்கே தெரியப்போகிறது என்ற தப்புக் கணக்கா?

    அப்படி அறிவு நாணயத்தோடு இவர்கள் நடந்துகொள்ளாத பட்சத்தில் இவர்கள் மீது விதவிதமான வண்ணத்தில் சந்தேகக் கறைகள் படியாதா? அது ஒருபுறம் இருக்கட்டும்!

    வெளிப்படையாக தங்கள் ஹிந்துத்துவா உணர்வை வெளிப்படுத்திக் கொண்டவர்களுக்கு வெண்சாமரம் வீசுபவர்கள் _ அந்தக் கூட்டத்தை விட ஆபத்தானவர்கள் _ மாற்றுடையில் திரியும் மதவெறியர்கள் - சிறுபான்மையினரை நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் அரசியல்வாதிகள் என்று அடையாளம் காண வேண்டாமா?

    ------------------- கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் -"உண்மை” ஏப்ரல் 01-15 - 2014 இதழில் எழுதிய கட்டுரை

    34 comments:

    தமிழ் ஓவியா said...

    தமிழர் தலைவருக்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் வாழ்த்து



    அன்புள்ள நண்பருக்கு..

    வணக்கம். நலம். நலமே நாடுகிறேன். 82ஆம் ஆண்டில் தாங்கள் அடியெடுத்து வைத்துள்ளதை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். பெரியார் அவர்களின் பெருந்தொண்டினைத் தொடர்ந்து செய்து வரும் தங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு கூறி வாழ்த்துகிறேன்.

    அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு

    அய்ந்துசால்பு ஊன்றிய தூண்

    அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் அய்ந்து பண்புகளும் நிறைந்துள்ள தாங்கள் வள்ளுவர் கூறியதுபோல சால்பு என்பதை தாங்கி நிற்கும் தூணாக திகழ்கிறீர்கள். மீண்டும் தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Read more: http://viduthalai.in/e-paper/92399.html#ixzz3L20ZDjnU

    தமிழ் ஓவியா said...

    நமது பணி...

    மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர் களாக ஆக்குவதே நமது முக்கிய வேலை.
    (விடுதலை, 2.4.1973)

    Read more: http://viduthalai.in/page-2/92402.html#ixzz3L218ht2X

    தமிழ் ஓவியா said...

    நெல்சன் மண்டேலா மறையவில்லை - நிறைந்து விட்டார்!

    இன்று (5.12.2014) மாபெரும் மனிதகுலப் போராளி நெல்சன் மண்டேலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்!

    அண்மையில் பாலி - (இந்தோ னேஷியாவின் பகுதி) - சென்று சிங்கப் பூருக்குத் திரும்பினோம். விமான நிலையப் புத்தகக் கடையில், நெல்சன் மண்டேலா பற்றிய அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் அரிய மாயா ஆங்கேலூ (Maya Angelou) என்ற பிரபலமான பெண் கவிஞர் - எழுத் தாளர் இயக்குநர், ஆசிரியர், செயல் வீராங்கனை என்ற பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட அம்மையார் இவர் - எழுதிய அமெரிக்க அரசின் வேண்டு கோளுக்கிணங்க எழுதி அஞ்சலி வீர வணக்கம் செலுத்திய ஆங்கிலக் கவிதை நூல் ஒன்று வாங் கினேன்.

    விமான நிலையத்திலேயே - நேரம் இருந்ததால் படித்து முடித்தேன். சுவைத்தேன்.

    நெல்சன் மண்டேலாவின் அரிய கருத்தாக அவ்வெளியீட்டில் முன்னுரிமை கொடுத்து வெளியிடப்பட்ட கருத்து - அறிவுரை இதுதான்.

    “Education is the most powerful weapon you can use to change the World”
    - Nelson Mandela

    உலகை நீங்கள் மாற்றிடுவதற்கு கல்வி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை விட வேறு சிறந்தது எதுவுமில்லை - நெல்சன் மண்டேலா என்பதே அதன் கருத்து.

    இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் ஆன தந்தை பெரியார் சமுதாய மாற்றத்திற்கு கல்விதான் சிறந்த ஆயுதம் ஆகும் என்றார்.

    பெரிய சிந்தனையாளர்கள் எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா!

    நெல்சன் மண்டேலா (1918-2013) ஒரு யுகப் புரட்சியாளர்.

    உறுதிகொண்ட நெஞ்சத்தவர். 27 ஆண்டுகள் ரோபன் தனிமைத் தீவு அறை சிறை - அவரது உறுதியை மேலும் பலமாக்கியதே தவிர, தன் விடுதலைபற்றி எண்ணாது, தன் சமுதாய மக்களின் அடிமை வாழ்வுக்கு எப்போது விடுதலை என்றே ஏங்கினார்; சிந்தித்தார்; செயல் பட்டார்! வென்றார்!

    அடக்குமுறைகள் அவரை மேலும் மேலும் தலை நிமிரச் செய்தனவே தவிர கூனிக்குறுகி, மண்டியிடும் மனோ நிலைக்குத் தள்ளவே இல்லை.

    தணலில் இட்ட தங்கம் கரைந்தா விடும்?

    தகத்தகாய ஒளியுடன் அல்லவா பிரகாசிக்கும்!
    உணர்ச்சியூட்டும் அவரை
    வழியனுப்பி இறுதி மரியாதை
    செய்தஅவ் வீரமும்
    உணர்வும் கொப்பளித்த
    ஆங்கிலக் கவிதை வரிகளில் சில.
    (முழுவதும்கூட பிறகு வெளிவரும்)

    “We will not forget you
    We will not dishonor you
    We will remember and be glad
    That you lived among us.’’

    உங்களை ஒரு போதும் மறக்க மாட்டோம்
    உங்களை என்றும் நினைவில் நிறுத்தி மகிழ்வோம் (மறவோம்)
    நீங்கள் எங்களுடன் வாழ்ந்தவர்!

    “That you taught us
    And
    That you loved us
    All!”

    நீங்கள் எங்களின் ஆசானாக இருந்து போதித்தீர்!

    மேலும்
    நீங்கள் எங்களை எல்லாம் நேசித்தீர்!

    நமது உணர்வுகள்:

    (எங்களுக்காகவே நீங்கள் வாழ்ந்தீர் - விடுதலை துறந்தீர்) என்பதே அவர்தம் உள்ள விழைவு அல்லவா!

    நெல்சன் மண்டேலா மறைய வில்லை! மறையவில்லை!!

    நிறைந்து விட்டீர், நிறைந்து விட்டீர்! உலக மக்களின் உரிமைப் போராட்ட உணர்வில் உறைந்து கிடக்கிறீர்! என்றும் நின் பணி தொடர்வோம். - நம் உணர்வு இது.
    veeramani
    Read more: http://viduthalai.in/page-2/92404.html#ixzz3L21HNyxT

    தமிழ் ஓவியா said...

    மனுதர்ம நூலை அம்பேத்கர் எரிக்கச் சொல்கிறார்


    சிலவற்றைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே மனுஸ்மிருதி.

    அநீதிகளைச் செய்தாவது சிலவற்றை அழிக்கா விட்டால் பார்ப்பன இனம் அழிந்து போகும் என்றெண்ணி, அதற்காகச் சிதறி - ஒற்றுமையின்றிக் கிடந்த பார்ப்பனர்களை ஒன்று திரட்டி, சதி வேலைகளை நரித் தந்திரத்தின் மூலம் செய்து முடிப்பதற்காக விடப்பட்ட அறைகூவல் தான் மனுஸ்மிருதி.

    சிதைந்த ஒற்றுமையை மீட்க அவ்வப்போது இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுவது வரலாற்று உண்மை. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற பழமொழிக்கேற்ப, மிக மிக முயன்று, புதிய கொடுமையான பார்ப்பன (அ)நீதியை உருவாக்கியவன் மனு.

    இந்த மனுஸ்மிருதி, நீதியும் நேர்மை மிக்க தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அப்படிப்பட்ட நீதி நூலை உருவாக்குமளவுக்கு அவன் (மனு) ஒரு சமூகவியல் அறிஞனும் அல்ல. அவன் ஒரு அயோக்கியன்.

    ஒரு குலத்துக்கொரு நீதி வழங்கும் இந்த மனுஸ்மிருதி தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டும். மீளமுடியாக் கொடுமைச் சேற்றில் எங்களை புதைக்க எண்ணிய மனுஸ்மிருதியை, உயிரைப் பணயம் வைத்தாவது ஒழித்துக் கட்டியே தீர வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்தது இதனால் தான்.

    அம்பேத்கர் சிந்தனைகள் என்ற நூலிலிருந்து

    Read more: http://viduthalai.in/page-7/92383.html#ixzz3L23Fk42A

    தமிழ் ஓவியா said...

    திருடியவன் யார்?

    ஒருவர்: அய்யா சாமியாரே! என் வீட்டில் ஒரு மாடு திருட்டு போய்விட்டது. அது இப்பொழுது எங்கே இருக்கிறது என்று சரியாக சொல்லமுடியுமா?

    சாமியார்: அப்பனே எல்லாம் இறைவன் செயல். இதை எப்படி நான் சரியாகச் சொல்லமுடியும்?

    ஒருவர்: அப்படியானால் என் மாட்டைத் திருடிக் கொண்டு போனது உங்கள் இறைவன்தானா?

    -எம்.ஆர்.ஓம்பிரகாஷ், சி.மெய்யூர்

    Read more: http://viduthalai.in/page-7/92383.html#ixzz3L23NrCVZ

    தமிழ் ஓவியா said...

    கோயிலில் தமிழில்லை! புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

    தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற் கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.

    பெரியார்:

    சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
    இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்

    தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
    எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்

    பெரியார்:
    கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
    என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?

    தமிழன்:
    சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
    சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!

    பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
    பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?

    தமிழன்:
    பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
    சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?

    பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
    அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?

    தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
    அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!

    பெரியார்:
    தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
    நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?

    தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
    நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?

    பெரியார்:
    தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
    நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.

    தமிழன்:
    சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
    தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!

    பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
    சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
    சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
    தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!

    குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)

    Read more: http://viduthalai.in/page-7/92385.html#ixzz3L23VYbuN

    தமிழ் ஓவியா said...

    சாமி ரெண்டு! ஆ-சாமி ரெண்டு!!

    இன்னிசை இளவல் இளையராஜா, கவிஞர். கங்கை அமரன் அண்ணன் பாவலர் வரதராசன் மேடை இசைக் கலையில் வல்லவர். அவர் நடத்தும் இசைக்கலை நிகழ்ச்சிகள் உரையும், பாட்டுமாகத் தொடர்ந்து வரும்.

    பகுத்தறிவு மணங்கமழ பல குட்டிக் கதைகளும் சொல்வார். சிந்தனையைக் கிளறும் கீழ்க்காணும் கதை அவற்றுள் ஒன்று.

    திருப்பனந்தாள் சிவபெருமான், சீரங்கநாதன், மதுரைக் கள்ளழகன், காஞ்சி காமாட்சி, மாங்காடு மாரியம்மன், அன்னை அபிராமி... சாமிகள் பணக்கார சாமிகள்? ஆறுகாலப் பூஜை... புனஸ்காரம்.. ஆரத்தி.. தேரோட்டம்... திருவிழா... பொண்டாட்டி, புள்ளைக்குட்டி, வைப்பாட்டி, கள்ளப்புருஷன் இவைகளுக்குண்டு.

    காடன், மாடன், மதுரைவீரன், பேச்சி, சடைச்சி, பத்ரகாளி சேரிச்சாமிகள்... ஊரின் ஒதுக்குப் புறத்திலே... சுடுகாட்டுக்குப் பக்கத்திலே குடியிருக்கும் இந்த ஏழைச்சாமிகளுக்கு நாள்தோறும் நாய் அபிஷேகம் நடத்தும். காக்கை எச்சமிட்டு நைவேத்தியம் செய்யும். ஆக, சாமிகளும் ரெண்டு! ஆ-சாமிகளும் ரெண்டு!!

    தகவல்: சங்கை வேலவன்

    Read more: http://viduthalai.in/page-7/92385.html#ixzz3L24ghVlZ

    தமிழ் ஓவியா said...

    கலைகள் - ஓவியங்கள்


    சிலர் சீர்திருத்தம் செய்வதன் மூலம், பழைய சின்னங்களையும் - ஓவியங்களையும் - கலை களையும் அழித்து விடாதீர்கள் என்கிறார்கள். இந்தக் கூட்டத்தார் எந்தப் பழைய சின்னம், ஓவியம், கலை முதலியவைகளை மனதில் நினைத்துக் கொண்டு சொல்கின்றார்கள் என்று நான் கண்ணியமாய் நினைக் கின்றேனோ அந்தச் சின்னமும்,

    ஓவியமும், கலை களுமேதான், நம்மையும், நம் மக்க ளையும் நமது நாட்டையும் பாழாக்கியதுடன் ஒவ்வொரு அறிவாளி மனதிலும் சமுதாய சீர்திருத்தம் செய்து தீர வேண்டும். இல்லையேல் வேறு எந்த விதத் திலும் நமக்கு கதிமோட்சமில்லை என்று நினைக்கும் படியான நிலைக்குக் கொண்டு வந்து விட்டன.

    - தந்தை பெரியார், விடுதலை 30.1.1974

    Read more: http://viduthalai.in/page-7/92388.html#ixzz3L24o14Xi

    தமிழ் ஓவியா said...

    ஜஸ்டீஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவு கழகத் தலைவர் இரங்கல்


    கடந்த 20 நாள்களுக்கு முன் 100 வயது நிறைவடைந்த புகழ் வாய்ந்த நீதிபதியான ஜஸ்டீஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் நேற்று (4.12.2014) கேரளாவில் காலமானார் என்பது மிகவும் துயரம் தரும் செய்தியாகும்.

    சிறந்த நீதிபதியாக அவர் கேரள உயர் நீதிமன்றத்திலும், பிறகு உச்சநீதி மன்றத்திலும் அவர் தந்த தீர்ப்புகள் வரலாற்றுப் புகழ் வாய்ந்தவை. சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அவர் அளித்த முதல் தீர்ப்பு - 50 விழுக்காட்டிற்கு மேலும் இட ஒதுக்கீடு இருக்கலாம்; அரசியல் சட்டத்தில் உச்சவரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்ற முக்கியத் தீர்ப்பாகும்.

    அதுபோலவே, நெருக்கடி காலத்தில் அவர் துணிச்சலுடன் தந்தை பெரியார் எழுதிய உண்மை இராமாயணம் - சச்சி இராமாயண் என்ற வால்மீகி இராமாயணம்பற்றி இந்தி மொழி பெயர்ப்பு நூலுக்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்ததை எதிர்த்து, வெளியீட்டாளர் தொடர்ந்த வழக்கில் (1976 இல்) அத்தடை செல்லாது என்றும், இராமாயணங்கள் பல உள்ள நிலையில், தந்தை பெரியார் அவர்களுடைய மாறுபட்ட சிந்தனை - ஆய்வு தவறு அல்ல; ஆயிரம் எண்ணங்கள் மலரட்டும் என்று ஒரு தீர்ப்பு வழங்கினார் (அதை மற்ற சட்ட ஊடகங்கள் - Law Reports
    இல் பதிவு செய்யாது இருட்டடித்தனர்).

    சுதந்திரம் நள்ளிரவில் - ஆகஸ்டு 15 அன்று நடுநிசியில் பதவியேற்றது ஜோதிடர் குறித்தது என்று கூறி, மூட நம்பிக்கையோடு இந்த நாட்டின் சுதந்திரம் பிறந்தது; இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை எதிர்த்து திராவிடர் கழகம் போன்ற சமூக அமைப்புகள் தொடர் பிரச்சாரம் செய்வது பாராட்டத்தகுந்தது என்று சில கட்டுரைகளில் எழுதி, அது மதச்சார்பின்மை தலைப்பில் வெளிவந்துள்ளது.

    அத்தகைய சமூகநீதிப் பார்வையுள்ள முற்போக்குச் சிந்தனையாளர் மறைவு சட்ட உலகத்திற்கு மட்டுமல்ல, சமூகநீதிக்காகப் போராடும் உலகினருக்கும் மிகப்பெரும் இழப்பாகும்.

    அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



    5.12.2014

    கி.வீரமணி
    தலைவர்,திராவிடர் கழகம்.

    Read more: http://viduthalai.in/page-8/92396.html#ixzz3L25C8BrX

    தமிழ் ஓவியா said...

    அறிவுச்செல்வி.... அன்புச்செல்வன்...


    அண்மையில் சென்னையில் நடைபெற்ற தலையங்க விமர்சனம் நூறாவது வார அமர்வு நிகழ்ச்சியில் பங்குபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தோழர் வேல்சாமி-ரேகா ஆகியோர் தன் இரட்டைக் குழந்தைகளுக்குப் பெயரிடச் சொல்லி வேண்ட, தலைவரும் பெண் குழந்தைக்கு அறிவுச்செல்வி என்றும், ஆண் குழந்தைக்கு அன்புச்செல்வன் என்றும் பெயரிட்டு மகிழ்ந்தார். உடனே அங்கு அமர்ந்திருந்த கருஞ்சட்டைத் தோழர்களிட-மிருந்து பலத்த கரவொலி எழுந்தது. அருகில் அமர்ந்திருந்த தோழர் ஒருவர் இந்த மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பிற்குக் காரணம் என்ன என்று வினவினார்.

    அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என்றும், அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் என்றும், ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே என்றும் ஏதோ பெண் என்பவள் அறிவு என்பதற்குச் சற்றும் தொடர்பில்லாதவள் போன்றும், அன்பினைத் தருவது மட்டும்தான் அவள் கடமை என்பது போன்றும், ஆண் என்றால் அறிவினைத் தருபவர் என்றும், அன்பு செலுத்துவது என்பது அவனுக்குத் தொடர்-பில்லாத துறை என்பது போன்றுமே சொல்லப்பட்டு வந்த, இன்றும் பெரும்பகுதி மக்களால் எண்ணப்படுதல் காணலாம். பெண்குழந்தைக்கு அறிவுச்செல்வி என்றும், ஆண் குழந்தைக்கு அன்புச்செல்வன் என்றும் பெயர் சூட்டலின் மூலம் மாற்றியமை பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியார் அவர்களின் அடியொற்றி, அவர் சிந்தனைகளி-லிருந்து சிறிதும் பிறழாத திராவிடர் கழகத் தலைவரின் சிந்தனையினைத் தெள்ளத்-தெளிவாகக் காட்டியது.

    மேலும், அங்கு நிகழ்ந்த சமூக மாற்றமும், ஊடகங்களும் என்ற கருத்தரங்கத்தில் பல்வேறு ஊடகங்களிலும் பணிபுரியும் வாய்ப்பு பெற்ற நம் இளைஞர்கள் கலந்துகொண்டு திராவிட இயக்கங்களின் வளர்ச்சி, தேக்கநிலை, செயல்கள், ஊடகங்களின் புறக்கணிப்பு போன்றவை குறித்து கவலை தெரிவித்து பேசியவற்றிற்குப் பதில் அளிக்கும்விதமாக அவர் உரையில் திராவிடர் கழகம் ஊடகங்களை நம்பி இல்லை. எந்தவொரு ஊடகமும் ஆதரவு தராதபோதும் தனியாக நின்று சமுதாயப் பணிகளை எந்தத் தொய்வும் இல்லாமல் செய்து முடிக்கும் என்று முழங்கியபோது எதிர்ப்பைத் தாண்டி, புறக்கணிப்புகளை மீறி, ஊடக மறைப்புகளைக் கடந்து வளர்ந்த இயக்கம் இது; எல்லாவற்றையும் கடந்து மக்களிடம் நேரடியாகத் தொடர்புள்ள இயக்கம் இது. அதைத் தொடர்ந்து செய்வோம் என்று சொன்ன துணிச்சல், தந்தை பெரியாரை நம் கண்முன்னே நிறுத்துவதாக இருந்தது.

    - இறைவி

    தமிழ் ஓவியா said...

    ஆறறிவுப் போர்வாள்!


    மாணவர்களை உருவாக்குபவர் ஆசிரியர்!
    நீங்களோ பேராசிரியர்களை
    உருவாக்கும் ஆசிரியர்!

    தன் முதுகெலும்பை
    பெரியாரின்
    கைத்தடியாய்க் கொண்டவர்!

    உடலுக்குள் இருக்கும் உயிர்போல
    திடலுக்குள் இருக்கும்
    அய்யாவின் கொள்கைக்காகக்
    கொடி பிடிப்பவர்!

    வெய்யிலிலும், மழையிலும்
    தமிழர்களைக் காக்க
    பெரியாரின்
    கருப்புச் சட்டையில்
    குடை பிடிப்பவர்!

    சூத்திரனுக்குச் சூரியனாய்
    பஞ்சமனுக்குப் பகலவனாய் இருந்து அவன் வீட்டுக்கு
    வெளிச்சம் கொடுப்பவர்!

    இனத் தொழிலை எதிர்க்கும் இளம் பெரியார்!
    அவாளுக்குச் சவால் விடும்
    ஆறறிவுப் போர்வாள்!
    ஆத்திக நெறிகளை
    விரட்டிட வந்த
    பகுத்தறிவுப் பறை இசை!
    கர்ம வினைகளுக்கு
    எதிரான உயர்திணை!
    காவித் துணியைப்
    போகிக்குக் கொளுத்திய
    கருப்பு நெருப்பு!
    அம்பேத்கர் ஈன்ற
    இடஒதுக்கீட்டுக் குழந்தையை
    ஓர் தாயாய் இருந்து
    தாலாட்டுபவர்!
    எல்லோரும் தாயின்
    தொப்புள் கொடியில்தான்
    பிறந்தவர்கள்!
    நீங்களோ தந்தையின்
    தொப்புள் கொடியில்
    பிறந்தவர்!
    கருவை, காதலை கலைக்கும் மருத்துவர்களிடையே
    ஜாதி வெறி எதிர்த்து
    நீதி நெறி காக்கும்
    உண்மையான மருத்துவர்!
    நீங்கள் தான்
    சமூகநீதி மருத்துவர்!
    வாழ்க பல்லாண்டு!

    - வன்னிஅரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

    தமிழ் ஓவியா said...

    உங்களுக்குத் தெரியுமா?


    தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயின்ற +2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னர், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது வழமை. அதை மாற்றி சி.பி.எஸ்.இ முடிவுகளைத் தள்ளிவைத்து, தமிழக மாணவர்களின் மதிப்பெண்ணை விடக் கூடுதலாக மதிப்பெண் வழங்கி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் இடங்களைப் பறிக்க முனைந்த சதிச் செயலைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் போராடி சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிய உண்மையை வெளிக்கொணர்ந்து அந்தச் சதியை உடனடியாக முறியடித்தவர் தமிழர் தலைவர் கி.வீரமணி என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

    தமிழ் ஓவியா said...

    உலகம் இருளில் மூழ்குமா?

    - சரவணா ராஜேந்திரன்

    அமெரிக்க வானியல் ஆய்வுத்துறையான நாசா கூறியதாக அவ்வப்போது கட்டுக்கதைகளை உலகெங்கிலும் உள்ள சில மதவாதிகள் பரப்பிவிடுவதுண்டு. அதுவும் நாசாவின் இணையதளத்தில் இருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உலகை நம்ப வைப்பது தற்போது ஓர் ஏமாற்றுக் கலையாகப் போய்விட்டது.

    உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதோ ராமர் பாலம் நாசாவே உறுதிசெய்த படம் என்று கூறி இந்து மத அமைப்புகள் பரபரப்பை உண்டாக்கின. இதற்கு நாசாவே மறுப்புத் தெரிவித்தும் இன்றும் ஒரு கூட்டம் இதை நம்புகிறது. சிதம்பரம் கோவிலுக்கு நேர் எதிரே வானவெளியில் இருந்து படம் எடுத்தால் அது வெண்மையாகத் தெரியும் என்பதும் நாசா பெயரில் வந்த கட்டுக்கதை. திருநள்ளாறுக்கு நேர் எதிராக வான்வெளியில் கடக்கும் எல்லா செயற்கைக் கோள்களும் சில வினாடிகள் செயலிழந்துவிடுமாம். இவை போன்ற மூடநம்பிக்கைகள் நாசாவின் பெயரால் பரப்பப்படுவதால் நாசா அவ்வப்போது மறுப்பு வெளியிட்டு வந்துள்ளது. இப்போது மேலும் ஒரு புரளி
    "2014 டிசம்பர் மாதம் உலகம் இருளில் மூழ்கப் போகிறதாம்?

    கிறித்தவ மதத்தின் சில பிரிவினர் இதோ தேவ மைந்தனின் இரண்டாம் வருகை என்று அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தற்போது தங்களின் வியாபாரத்திற்கு நாசாவையும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். 'உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும். அப்போது இறைவனுக்கு எதிரானவர்கள் அழிக்கப்-படுவார்கள்' என்பது கிறித்தவ மதத்தில் ஒரு பிரிவினரது நம்பிக்கை ஆகும். அவர்கள் தற்போது புதிய கட்டுக்கதையை விட்டு மக்களைக் குழப்பி இருக்கிறார்கள்.

    அதற்கேற்ப, வரும் டிசம்பர் 2014 இல் உலகம் ஆறு நாட்கள் இருளில் மூழ்க இருப்பதாகவும், சூரியனில் ஏற்படும் காந்தப்புயலே இதற்குக் காரணம் என நாசா கூறிவிட்டது என்ற அறிவியல் கதையை விட்டுக் குழப்பியுள்ளார்கள்.

    எப்போதும் போல் இது போன்ற மடமைத்தனமான செய்திகள் மேலும் பரவிவிடாமல் இருக்க நாசா முன்-னெச்சரிக்கை-யாக மறுப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் மாதம் 6 நாள்கள் உலகம் இருளில் மூழ்கி இருக்கும் என்ற கட்டுக்-கதைகள் நாசாவின் பெயரால் பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மையல்ல. அறிவுள்ள அனைவருக்கும் தெரியும், உலகம் பாதி நாள் இருளிலும் பாதி. நாள் பகலிலும் உள்ளது.

    இருளை மனித இனம் விளக்குகளின் வெளிச்சத்தில் வென்றுவிட்டது. தற்போது சிலரால் பரப்பப்படும் கட்டுக்கதைகளின்படி மின்சாரம் தடைபட்டால்தான் இருளில் மூழ்க வாய்ப்புள்ளது. சூரியப்புயல் மட்டு-மல்ல, எந்த ஒரு இயற்கைக் காரணத்தாலும் மனிதனால் செயற்கையாகத் தயாரிக்கப்படும் மின்சாரத்தைத் தடைசெய்ய முடியாது. பருவநிலை மாற்றங்களான மழை, வெள்ளம், புயல் போன்ற நேரங்களில் மின்சாரம் தடைப்படுவது அந்த அந்தப்பகுதியில் மாத்திரமே நிகழும். அதுவும் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். ஆகவே உலகம் இனி வரும் காலத்தில் மேலும் அதீத அறிவியல் வளர்ச்சி பெற்று முன்னேறுமே தவிர இப்படி பொய்யான கதைகள் போன்று இருளில் மூழ்காது. மேலும், அந்தப் பொய்யான இணைய-தளத்தில் சிலர் தொலைக்காட்சியில் உரையாடுவது போன்ற நிகழ்ச்சி, அதன் பின்புலத்தில் நாசாவின் அடையாளம் எல்லாம் பொய்யாகத் தயாரிக்கப்பட்டவை.

    சூரியப்புயல் என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புவியின் மேற்பரப்புவரை வந்து செல்கிறது. இதை, புவியின் மேலடுக்கில் உள்ள வளிமண்டலம் தடுத்து மீண்டும் வானவெளிக்கே அனுப்பிவிடும். இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று நாசா வெளியிட்டுள்ள மறுப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மூடநம்பிக்கையைப் பரப்ப நினைக்கும் மதவாதிகளும், இதைக் கடவுள் வந்து சொன்னார் என்று சொல்வதில்லை. உலகம் இருளில் மூழ்கும் என்று கடவுள் சொன்னதாகச் செய்தி பரப்பினால், கக்கத்தில் கைவைத்து கேலிச் சிரிப்பே பரிசாகக் கிடைக்குமென்பதால் அறிவியல் மய்யமான நாசாவைப் பயன்படுத்துகிறார்கள் நாசக்கார மதவாதிகள். ஆனால் பொய்கள் பரவும் வேகத்தில் நாசாவின் உண்மை பரவுவ-தில்லை. ஊடகங்களும் பொய்க்குத் தரும் முக்கியத்துவத்தை உண்மைக்குத் தருவதில்லை.

    தமிழ் ஓவியா said...

    கருஞ்சட்டை தபால்காரர்


    பகுத்தறிவு பரப்பும்
    தொடர் ஓட்டத்தில்...
    அய்யாவும் அம்மாவும்
    ஏந்திய சுடர்
    இப்போது ஆசிரியர் கையில்! இச் சுடரோடு
    வெகுகாலம் தொடர்கிறது
    இவரின்
    ஓய்வற்ற பயணம்! ஆரிய நரிகளின்
    ஆதிக்க ஊளைகளுக்கு...
    அவ்வப்போது இருக்கும்
    இவரின் பதிலடி!
    அவையத்தனையும் தடாலடி! ** **
    வயது ஏற ஏற
    இவரின் சுறுசுறுப்பு
    ஏறிக் கொண்டேயிருக்கிறது
    உடலியல் இயல்பின் விதிவிலக்காய்! புத்தக வாசிப்பும்
    மானுட நேசிப்பும்
    வைத்திருக்கிறது இவரை
    இன்னும் இளமையாய்! ** **
    இன்று தஞ்சை
    நாளை மராட்டியம்
    நாளை மறுநாள் மலேசியா
    ஒளியின் வேகத்தை விஞ்சும்
    இவரின் தொடர் பயணங்கள்! ** **
    மேடையிலே
    இவர் முழங்குகையில்
    நாகரிகம் தங்கியிருக்கும்
    ஆதாரம் பொங்கியிருக்கும்! ** **
    அய்யாவின் சிந்தனைகளை
    அகிலம் எங்கும்
    கொண்டு சேர்க்கும்
    கருஞ்சட்டை தபால்காரர் சொந்தபுத்தி தேவையில்லை
    அய்யா தந்தபுத்தி போதுமென
    சுய அடையாளம் தேடாத
    கடலூர் கருப்பு மெழுகுவர்த்தி சரி, யாரை ஏற்பது
    பெரியாருக்குப் பின் என
    வாடிக் கிடந்தவர்க்கு - காலம்
    தேடித் தந்தது சரியாரை!

    பெரியாரைக் கண்டிராத
    என் வயதொத்தோர்
    காண்கிறோம் இவர் உருவில்
    தாடி- தடியற்ற பெரியாரை!

    - பாசு ஓவியச்செல்வன்

    தமிழ் ஓவியா said...

    கருத்து


    பாதிக்கப்பட்டவர்கள் அய்.நா.விசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் அளிப்பதை இலங்கை அரசு தடுக்கிறது. விசாரணையைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் எதற்காக விசாரணைக்கு இடையூறு செய்ய வேண்டும்.

    - சையத் அல் ஹுசைன், தலைவர், அய்.நா.மனித உரிமைகள் கவுன்சில்

    உயர் வகுப்பினர் எல்லோருமே அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள். அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். நம்மிடையே உள்ள பழங்குடியினர் மற்றும் தலித்களும்-தான் மண்ணின் மைந்தர்கள். அவர்களாகவே கல்வி, அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். அவர்கள் பிகாரில் அரசுகளை அமைப்பதற்கு முக்கியப் பங்காற்றுவார்கள்.

    - ஜிதன்ராம் மாஞ்சி, முதல் அமைச்சர், பிகார்

    குரல் ஓட்டு மூலம் நம்பிக்கை ஓட்டில் பா.ஜ. வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்-பட்டுள்ளதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை பா.ஜ. அரசு நசுக்கியுள்ளது. சட்ட-விதிகளின்படியும் ஜனநாயகத்தின் அடிப்படையிலும் ஓட்டெடுப்பு நடக்கவில்லை.

    - ஏக்நாத் ஷிண்டே, எதிர்கட்சித் தலைவர், சிவசேனா

    ஒருவர் மற்றொருவரின் உயிரைப் பறிக்கும் விதமாக அவரைக் கொலை செய்கிறார். அதற்கு ஈடாக அரசு அவரை மரண தண்டனை என்ற பெயரில் கொலை செய்வது ஆபத்தானது மட்டுமல்ல; அது எந்த வகையிலும் அறிவுப்பூர்வமானது அல்ல. மரண தண்டனை என்பது அடிப்படையிலேயே தவறான கருத்தியலாகும்.

    - அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்

    தமிழ் ஓவியா said...



    டிச.2 : தமிழர் தலைவர் பிறந்த நாள் சிந்தனை :

    “பெரியார் உலகம்” படைக்கும் பகுத்தறிவுச் சிற்பியே!

    அய்யாவின் கொள்கைகளை
    அடுத்த தலைமுறைக்கும்
    அப்படியே கொண்டுசெல்லும்
    அய்யாவின் தத்துப் பிள்ளை அல்ல;
    அவரது தத்துவப் பிள்ளை நீ!

    உன் கையளவு இதயத்தில்
    உலகளவு விரியும்;
    வழியும் சிந்தனையால்
    விழிமூட மறக்கின்றோம்!
    தத்துவம் முகிழ்க்கும்
    புத்தாக்கப் புதுஉலகில்...

    அறிவியல் கண்காட்சி
    ஆய்வரங்கம்
    கோளரங்கம்
    மெழுகுச் சிலையரங்கம்
    மாநாட்டு மண்டபம்
    மழலையர் பூங்கா

    மண்ணில் மனிதம் தழைக்க
    தன்னையழித்துக் கொண்ட
    தலைவனின் இணையில்லாப் புகழை
    இளைய தலைமுறையும்
    இன்புற்றுக் காணவேண்டி
    உலகமகா புருஷரின்
    உன்னத வாழ்க்கையை
    ஒலி-ஒளி காட்சியாய்
    அகலத்திரையில் விரியும் மாட்சி!

    சிந்துச் சமவெளியின்
    சிம்மாசனமாயிருந்த
    திராவிடத் தமிழினத்தை
    பெரியாருக்கு முன் -
    பெரியாருக்குப் பின் என
    வகைப்படுத்தும்
    வண்ணமிகு
    எண்ணக் குவியல்கள்!

    வேடந்தாங்கல் பறவையாய்
    வந்து குவியும்
    வெளிநாட்டுப் பயணியரின்
    சிந்தையைக் குளிர்விக்கும்
    சங்கதிகள் நிறைந்திருக்கும்!
    நிறைகுடமாய் உந்தனுழைப்பும்
    உறைந்திருக்கும்; கலந்திருக்கும்!

    விழிமலரின் பாவைகளை
    விரியவைக்கும் பிரமிப்பு!
    குருதியின் உயிரணுக்களை
    உசுப்பிவிடும் பரவசம்!
    இப்படியொரு அதிசயமா?
    இதுவும் சாத்தியமா!
    எப்படி முடியும் - இது
    யாரால் நடக்கும்!

    வெண்மேகங்கள் விளையாடும்
    வானத்தைத் தொட்டுவிடும்
    பிரமாண்டத்தின் எல்லையாய்
    புத்தருக்கும், ஏசுவுக்கும்
    பேருருவச் சிலைகளைப் படைத்து
    புகழேணியின் உச்சியில்
    அரச குடும்பத்தினரும்; ஆட்சியாளர்களும்
    அயல்நாட்டில்!

    மரபுவழி ஆட்சிகளே - இந்த
    மண்ணை ஆண்டுவந்தும் - தமிழ்
    மண்ணை மணந்த
    மணாளரின் மாப்புகழை
    விண்ணும் மண்ணுமாய்
    நீடித்து நிலைத்திருக்க;
    நிலையான நினைவுபோற்ற
    மனமில்லையோ மார்க்கம் தேட!

    சாமானியன் உன் கரம்பட்டே
    சாசுவதமாகப் போவுது
    பெரியார் புது உலகம்
    உருபெற்று; மாசுமருவற்று!
    சாதனைச் சரிதம் காணும்
    வரலாறாய் மாறினாய்!
    மாரிக்காலத்து
    மழைமேகமாய் நீ ஆனாய்!

    அய்யாவின் மண்டைச் சுரப்பை
    அகிலம் தொழச் செய்யும்
    உந்தன் மண்டைச் சுரப்பால்
    உலகத் தமிழரெல்லாம்
    உன்னிடம் புகலிடம்!

    எண்ணியதை எண்ணியாங்கு
    திண்ணியமாய் செய்துமுடிக்கும்
    தேனீயொத்த தொண்டர்களைத்
    தன்னகத்தே கொண்டவரே!
    செவ்வாயில் கால்பதித்தாலும்
    அய்யாவைப் பரப்பத்தான்
    செல்வாய் நீ!

    நாளைய உலகின்
    வரலாறு சொல்லும்
    பொன்னேட்டில்
    உன் பெயரும்
    வைரமாய் மின்னும்!
    இப்புவியில் பெரியார் புகழ்
    இருக்கும் மட்டும்
    இணைந்து நீயும்
    இறவாமல் இருந்திடுவாய்!

    - சீர்காழி கு.நா.இராமண்ணா

    தமிழ் ஓவியா said...

    ராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குச் சூட்டப்பட்ட புகழ்மாலைகளில் சில...
    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குச் சூட்டப்பட்ட புகழ்மாலைகளில் சில...


    1. 1944 - திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என அண்ணாவின் பாராட்டு.

    2. 1950 - இளம் பேச்சாளி பொதுமக்கள் பாராட்டு.

    3. 1969 - குருவுக்கேற்ற சீடர்தான் வீரமணி என்ற தந்தை பெரியார் பாராட்டு.

    4. 1993 - நாகையில் திராவிடர் பெண்கள் மாநாட்டில் இனமானப் போராளி பட்டம் அளிக்கப்பட்டது.

    5. 1996 - தந்தை பெரியார் சமூக நீதி விருது தமிழக அரசு (ஜெ.ஜெயலலிதா) வழங்கியது.

    6. 2000 - புதுதில்லி குளோபல் பொருளாதார கவுன்சில் பாரத் ஜோதி விருது வழங்கியது.

    7. 2003 - மியான்மரில் பேரளிவாளர் விருது வழங்கியது.

    8. 2003 - ஆக்சுபோர்டு தமிழ்ச் சங்கம், ஆக்சுபோர்டு தமிழ் விருது வழங்கி பாராட்டியது.

    9. 2010 - விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் பெரியார் ஒளி விருது.

    10. 2010 - கோவை கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது அளிக்கப்பட்டது.

    11. 2011 - ஆந்திர மாநிலத்தில் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருது வழங்கப்பட்டது.

    12. சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு மய்யம் சமூகத் துறையில் தொண்டாற்றியமைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.

    13. 2003 - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

    14. மலேசிய திராவிடர் கழகம் கருத்துக்கனல் என்ற பட்டத்தை வழங்கியது.

    15. 2009 - சென்னையில் முரசொலி அறக்கட்டளை 2008ஆம் ஆண்டுக்கான கலைஞர் விருதினை வழங்கியது.

    16. 2009 - காஞ்சியில் தி.மு.க. சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவில தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.

    தமிழ் ஓவியா said...

    புராணங்களில் அறிவியலைத் தேடலாமா?
    வீரமணி

    தற்போதுள்ள பா.ஜ.க. ஆட்சியை முழுமையாக வழிநடத்தும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்ற ஆரியக் கலாச்சாரப் போர்வையில் அரசியல் நடத்தும் ஏற்பாட்டாளர்கள் ஆவார்கள்.

    அவர்களது கொள்கையைத் திணித்து, மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம் என்ற தத்துவங்களை கரையான்கள் எப்படிப் புகுந்து அமைதியாகவே புத்தகங்களை அரித்துத் தின்று விடுகின்றவோ அதேபோல், பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    புல்லட் ரயில் வேகத்தில் செய்துவிட ஆங்காங்கே முக்கியப் பதவிகளில் எல்லாம் அமைச்சரவை தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். மயமாகி அதன்மூலம் பச்சையாக ஹிந்துத்துவாவை ஆட்சிப் பீடமேற்றிட ஆலாய்ப் பறக்கின்றனர்!

    ஹிந்துத்வா என்பதை உருவாக்கிய வி.டி.சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் முக்கியமான கோல்வால்கர் போன்றவர்களின் தத்துவங்களை ஆட்சியின்மூலம் அமலாக்கிட அதிவேக அவசரம் காட்டுகின்றனர்.

    அதற்கான முன்னேற்பாடாக, முக்கிய அறிவியல், வரலாறு, கல்வி போன்ற அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கொணர்ந்து அமர்த்தி, அதை நிறைவேற்றிட துடியாய்த் துடிக்கின்றனர்.

    இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் என்ற அமைப்பிற்கு வி.சுதர்சனராவ் என்ற ஒரு பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரரை நியமனம் செய்து அவர் புராணங்கள், இதிகாசங்கள் இவைகளை, வரலாறுகளாக மாற்றிடத் திட்டமிட்டு, பிரச்சார திட்டத்தைச் செயல்படுத்துகிறார்.

    வரலாற்றுப் பாடப் புத்தகங்களையே புரட்டிப் போட்டு ஹிந்துத்வாவின் கையேடுகளாக்கிட முனைப்புடன் செயலாற்றி முனைந்து நிற்கின்றனர்.

    நாட்டின் பிரபல வரலாற்றுப் பேராசிரியர்களான ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப் போன்றவர்களுக்கு மார்க்சிய இடதுசாரி முத்திரை குத்திவிட்டு, தமது கருத்துகளை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் முயற்சியில் கூச்சநாச்சமின்றி ஈடுபட்டுள்ளனர்!

    ஹிந்துத்துவா கருத்தியலையும் சொல்லையும் உருவாக்கிய வி.டி.சாவர்க்கர் அவரது நூலில் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார்.

    ‘Hinduise Military
    Militarise Hindus’

    இராணுவத்தை ஹிந்து மயமாக்கு
    ஹிந்துக்களை இராணுவமாக்கு
    என்பதே அவ்விரு கட்டளைகள். அதுபோலத்தான் இப்போது,
    வரலாற்றைக் காவிமயமாக்கு

    காவி(இந்து)_புராண இதிகாசங்களை வரலாறாக்கு என்ற முயற்சியோடு முன்பு வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் முயன்றதைத் தொடருகிறார்கள்.

    அதிகப் பெரும்பான்மை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அதற்குமேல் ஒருபடி சென்று, இப்போது, ஹிந்துத்துவ புராண, இதிகாச கற்பனைப் புரட்டுகளை அறிவியலுக்கு முன்னோடி என்ற ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுதர்சன ராவ் போன்றவர்களும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள்வரை கட்டவிழ்த்துவிட்டு நடத்தி வருகின்றனர்.
    இராமாயணம் நடந்த கதை என்கிறார்கள்.

    மரபணு ஆராய்ச்சி மஹாபாரதத்திலேயே உள்ளது.

    பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோடி - (Transplantation) உறுப்பை வெட்டி இணைத்தல் வினாயகர் கதை மூலம் நமது பரமசிவனே செய்துள்ளார்.

    ராக்கெட்டுகளுக்கு முன்பே புஷ்பக விமானம் _ இராமாயணத்திலேயே உள்ளது என்று கூறி கொயபெல்ஸின் குருநாதர்களாக ஆகியுள்ளன!.

    இதை எதிர்த்து கரன் தாப்பர் போன்ற விமர்சகர்கள் கேள்வி கேட்கத் துவங்கியுள்ளனர்.

    ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் இதனை மறுத்துக் கூறுகின்றனர்.

    இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றாளர்களுக்கே அதிக அறிமுகமில்லாத ஆர்.எஸ்.எஸ். நபரான ஆந்திரத்து சுதர்சனராவ் என்பவர் பொறுப்பேற்றதிலிருந்து, தாப்பர் போன்றோர்மீது மார்க்சிஸ்டுகள் என்று சாயம் பூசுவதோடு, வெள்ளைக்காரர்கள் புராணங்களை கட்டுக் கதைகள் என்று கூறிவிட்டனர். இதனை மாற்றி 'விணீளீமீ வீஸீ மிஸீபீவீணீ' இந்தியாவின் வரலாறு இதிகாச புராணங்களிலிருந்து உருவாக வேண்டும் என்று மனம் போனபடி பேசியுள்ளார். எப்படி இனி செய்யப் போகிறார்கள் என்பதற்கான மணியோசை இது. இதனை அத்தனை முற்போக்கு சக்திகளும் ஒன்று திரண்டு எதிர்த்தாக வேண்டும். இந்த பத்தாம் பசலித்தன புதுப்பித்தலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஆங்காங்கு கருத்தரங்கங்களை நடத்திட முன்வர வேண்டும்.

    இந்நாட்டு அறிவியலாளர்கள் (Scientists) ஏன் மறுத்து அறிக்கைகள் விடவில்லை என்றுகூட கரன் தாப்பர் போன்றவர்கள் கேட்கின்றனர்.

    அதற்கு விடை வெளிப்படையானது. பெரும்பாலான விஞ்ஞானிகள் மத்திய அரசு ஊழியர்கள். பிரதமரும் உள்துறை அமைச்சரும் இப்படி அபத்தமான கருத்துகளைக் கூறும்போது அவர்களால் மறுத்துப் பேச முடியாதே; தனியார் துறை விஞ்ஞானிகளும்கூட, பல முதலாளிகளின் அமைப்புகளில் அல்லவா பணிபுரிகிறார்கள்? இவர்கள் அதனால் வாய்மூடி மவுனத்தில் புழுங்கிக் கொண்டிருப்பவர்களாகவே உள்ளார்கள் என்பதே யதார்த்த நிலையாகும்!

    கி.வீரமணி,
    ஆசிரியர்

    தமிழ் ஓவியா said...

    மகிழ்ச்சியும் துயரமும்
    மகிழ்ச்சியும் துயரமும்

    Print
    Email

    வீரமணி

    கேள்வி : தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியில் திளைத்த தருணம் எது? துயரத்தில் துவண்டுபோன தருணம் எது? - - நா.இராமண்ணா, சென்னை

    பதில்: மகிழ்ச்சியில் திளைத்த நேரம். அறக்கட்டளை என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை, வருமான வரித்துறை டிரிபியூனல் அறிவித்து, 80 லட்ச ரூபாய் அறியா வரியைத் தள்ளுபடி செய்து அறிவித்ததைக் கேட்ட-போது.

    துன்பம், நம் அய்யா - அம்மா மறைவின்போது.

    தமிழ் ஓவியா said...

    1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து மதத்திலிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட தோழர்களும் பவுத்தம் தழுவியபோது அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும், மற்றவர்களும் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள் இதோ:

    1. பிரம்மனையோ, விஷ்ணுவையோ, சிவனையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

    2. இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

    3. இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

    4. கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.

    5. பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப்பிரச்சாரம் செய்வது விஷமத்தன மானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    6. சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.

    7. பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.

    8. பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட் டேன்.

    9. அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.

    10. சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.

    11. பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.

    12. தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.

    13. எல்லா உயிர்ப் பிராணிகளிடத்தும் நான் கருணை காட்டுவேன்; அவைகளைக் காக்க முயலுவேன்.

    14. நான் பொய் சொல்லமாட்டேன்.

    15. நான் திருட மாட்டேன்.

    16. காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட்டேன்.

    17. போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.

    18. ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இணங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.

    19. பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும், சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக் கொள்ளுகிறேன்

    20. புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    21. இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.

    22. புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

    நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னவர் தம் வாழ்நாளில் அதனைச் சாதித்துக் காட்டினார்.

    - “விடுதலை” 16-2-2012

    தமிழ் ஓவியா said...

    1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து மதத்திலிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட தோழர்களும் பவுத்தம் தழுவியபோது அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும், மற்றவர்களும் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள் இதோ:

    1. பிரம்மனையோ, விஷ்ணுவையோ, சிவனையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

    2. இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

    3. இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

    4. கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.

    5. பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப்பிரச்சாரம் செய்வது விஷமத்தன மானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    6. சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.

    7. பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.

    8. பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட் டேன்.

    9. அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.

    10. சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.

    11. பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.

    12. தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.

    13. எல்லா உயிர்ப் பிராணிகளிடத்தும் நான் கருணை காட்டுவேன்; அவைகளைக் காக்க முயலுவேன்.

    14. நான் பொய் சொல்லமாட்டேன்.

    15. நான் திருட மாட்டேன்.

    16. காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட்டேன்.

    17. போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.

    18. ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இணங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.

    19. பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும், சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக் கொள்ளுகிறேன்

    20. புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    21. இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.

    22. புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

    நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னவர் தம் வாழ்நாளில் அதனைச் சாதித்துக் காட்டினார்.

    - “விடுதலை” 16-2-2012

    தமிழ் ஓவியா said...

    பிஜேபியின் ஒழுக்கம் - பாரீர்!


    டில்லியில் ஆளப் போவது ராமன் மகனா - முறை கேடாகப் பிறந்தவரின் மகனா?

    என்று பேசிய மத்திய பிஜேபி அமைச்சர் நிரஞ்ஜன் ஜோதி பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பிபுள்ள நிலையில், அந்த மத்திய அமைச்சர் நிரஞ்ஜன் ஜோதி தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் - அவர் பிரச்சாரத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இட மில்லை என்று பிஜேபி அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகிறார்.

    இதன் பொருள் என்ன? இதைவிட மோசமாகப் பேசுக என்று தூண்டி விடுவதுதானே! இது தான் பிஜேபியின் ஒழுக்கமா!

    Read more: http://viduthalai.in/e-paper/92468.html#ixzz3L83tonzA

    தமிழ் ஓவியா said...

    மருந்து, மாத்திரை களின் பெயர்களை புரியும் படியும், தலைப்பு எழுத்து களிலும் எழுத வேண் டும் என்று மருத்துவர் களுக்கு உத்தரவிடும் வகையில், இந்திய மருத் துவக் கவுன்சில் விதி முறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித் துள்ளது.

    Read more: http://viduthalai.in/e-paper/92468.html#ixzz3L846iYY6

    தமிழ் ஓவியா said...

    சூழ்நிலை


    பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச் சார்பு, பழக்க வழக்கங்களால்தான் மனிதன் அயோக்கிய னாகவும், மடையனாகவும் ஆகின்றான்.

    (விடுதலை, 11.11.1968)

    Read more: http://viduthalai.in/page-2/92465.html#ixzz3L877F5gM

    தமிழ் ஓவியா said...

    பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்- டிசம்பர் 6


    அண்மையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியின் தலை வரும், பால் தாக்கரேயின் தம்பியின் மகனுமான ராஜ்தாக் கரேயின் மகள் ஊர்வசி தாக்கரே, தனது டிவிட்டரில் பாபாசாகிப் அம்பேத்கரைச் சிறுமைபடுத்தி, கருத்து தெரிவித்திருந்தார்.

    தாழ்த் தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பங்கி அதாவது தோட்டி சமுதாயத்தைச் சேர்ந்த அம்பேத்கருக்கு நினைவகம் இருக்கும்போது, பால் தாக்கரே போன்ற மிகப்பெரிய தலைவருக்கு ஏன் நினைவகம் அமைக்கக்கூடாது எனக் கூறியிருந்தார்.

    இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அம்பேத் கரை, சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரை, பொருளாதாரத் துறையில் எனது தந்தை என நோபல் பரிசு பெற்ற அமர்தயா சென்னால் போற்றப்பட்ட அம்பேத்கரை, பழமைவாதிகளான ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் பேச்சைக் கேட்டு, இந்து சட்ட திருத்த மசோதாவை அம்பேத்கர் விரும்பியபடி கொண்டு வர மறுத்த நேரு அமைச்சரவையிலிருந்து கொள்கைக்காக விலகிய அம்பேத்கரை, 1935இ-ல் உருவான ரிசர்வ் வங்கி அமைவதற்கு காரணமான அம்பேத்காரை, தாமோதர் பள்ளத்தாக்கு, ஹிராகுட் திட்டம் அமைவதற்கு அடித்தளம் இட்ட அம்பேத்காரை, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேர வேலை என மாற்றப் படுவதற்குக் காரணமான அம்பேத்கரை விட, மக்களிடையே மத வெறியைத் தூண்டி அரசியல் செய்த பால் தாக்கரே சிறந்த தலைவர் என மராட் டியத்தில் இன்று கூற முடிகிறது என்றால், மதவெறி ஆட்சிகள் அமைந்தது தானே காரணம்.

    ஆனால், அம்பேத்கர் மறைவு குறித்து, தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையில் அம்பேத்கரின் சிறப்புகளை எவ்விதம் கூறியுள்ளார் என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.

    பெரியாரின் அறிக்கை 8.12.1956-இல் விடுதலையில் வெளியானது. அந்த அறிக்கையில், இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும், ஏராளாமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்தி விட்டார் என்று செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்.

    உண்மையில் சொல்ல வேண்டு மானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது எந்தவிதத்திலும் சரி செய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங் கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத்தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.

    உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை, வெகு சாதாரணமாக மதித்த தோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னா பின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார்.

    இந்துமதம் என்பதான ஆரிய ஆத்திக மதக்கோட்பாடுகளை வெகு அலட்சி யமாகவும், ஆபாசமாகவும், அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாகப் பேசியும், எழுதியும் வந்தார்.

    உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம்பசலி, பிற்போக்குவாதி என்றும், அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டுவந்த கீதையை, முட்டாள்களின் உளறல்கள் என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும், இராமாயணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி, பல்லாயிரக் கணக்கான மக்களிடையில் இராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார்.

    இந்துமதம் உள்ளவரையிலும் தீண்டாமையும் சாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுண ரும், சீர்திருத்தப் புரட்சிவீரருமான டாக்டர் அம் பேத்கர் முடிவு எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த் தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.

    அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலாமென்று கருதுகிறேன். அதாவது, காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும், அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கர் மரணத்துக்கும் இருக்கக் கூடும் என்பதே ஆகும். அண்ணல் அம்பேத்கரின் மறைவு நாளில், பெரியார் சுட்டிக்காட்டியபடி, பாசிச இந்துக் கும்பல் குறித்து அம்பேத்கரின் கருத்துக்களை நெஞ்சில் ஏந்தி போராட உறுதி ஏற்போம்.

    -_-குடந்தை கருணா

    Read more: http://viduthalai.in/page-3/92439.html#ixzz3L87JBL51

    தமிழ் ஓவியா said...

    சுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம் சொத்து உரிமை


    மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்குச் சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும், சொத்துக்களை வைத்து, சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள். கல்யாண ரத்து

    பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.

    அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணே 7வருஷ காலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதால் இஷ்ட மில்லாவிட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3 வருஷ காலம், ஒற்றுமை யின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களாயிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள்ள வர்களாக இருந்தாலோ ஆகிய காரணங்களால் துன்பப் படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங்களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம்.

    மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம், ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப்படாதவர்கள் தன்னைக் கல்யாணப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள்ளலாம். இந்தப்படி விலக்கிக்கொண்ட 6 மாதம் பொறுத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.

    மைசூரில் கல்யாண வயது

    மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடாயிருக்கிறது.

    செங்கல்பட்டு தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் - ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட சுயமரியாதை இயக்கம், மத சமூகத்தைக் கட்டுத்திட்டமில்லாமல் செய்கின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருதுகின்றோம்.

    குடிஅரசு - செய்திக்கட்டுரை - 21.06.1931

    Read more: http://viduthalai.in/page-7/92443.html#ixzz3L87d8bd1

    தமிழ் ஓவியா said...

    "என் வாழ்வு - மூச்சு - சர்வமும் என் இன மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள், முன்னேற முடியாமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்கள் மனிதத் தன்மை அடையவேண்டும்; மானம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பதைத் தவிர வேறு சுயநலம் என்ன?"

    - தந்தை பெரியார்

    Read more: http://viduthalai.in/page-7/92443.html#ixzz3L87r6xWj

    தமிழ் ஓவியா said...

    யார் செயல்? யாருக்கு நன்றி!

    காங்கிரசில் உள்ள பார்ப்பனர்கள் அனைவரும், வருணாசிரம தருமத்தையும், மதத்தையும், கடவுளையும், வேதங்களையும், புராணங்களையும் பிரசாரம் புரிந்து, நமது இயக்கத்தால் சிறிது கண்திறந்து வருகின்ற பாமர மக்களை மீண்டும் மூட நம்பிக்கையில் கட்டுப்படுத்தி வைக்கவே காங்கிரசை உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்று நாம் அடிக்கடி கூறிவருவதில் சிறிதும் தவறில்லையென்பதற்கு மற்றொரு உதாரணம் கிடைத்திருக்கிறது.

    தென்னாட்டுக் காந்தி எனக் காங்கிர கூலிகளால் கொண்டாடப்படும் திரு.சி. இராஜகோபாலாச்சாரியார் அவர் களைப் பற்றி நாம் ஒன்றும் அதிககமாகக் கூற வேண்டியதில்லை. அவர் ஒரு பழுத்த வருணாசிரம தருமவாதியாகிய கடவுள் பக்தர் ஆக விளங்குகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். குடுகுடுப்பைக்காரன் போகுமிடந்தோறும், தனது குடுகுடுப்பை யையும், தன் தோளின் மேல் ஒரு மூட்டைக் கந்தைத்துணியையும் சுமந்து கொண்டு போவதைப்போல, திரு. ராஜகோபாலாச்சாரி யாரவர்களும் எங்கே போனாலும் புராணங்களையும், கடவுளையும் சுமந்தே தான் செல்லுவார். அவர் எந்த அறிக்கை வெளியிட்டாலும், எங்கே என்னென்ன பேசினாலும், கடவுளைப் பற்றியும் புராணங்களைப்பற்றியும் பேசாமல் விடவே மாட்டார். அவருடைய அரசியல் பிரச்சாரத்துடன் கூடவே கடவுள் பிரச்சாரமும், புராணப்பிரசாரமும் நடந்து தான் தீரும். அவருடைய சகாக்களாகிய மற்ற அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார்களும் இம்மாதிரியே பிரச்சாரம் பண்ணிக்கொண்டே வருகின்றனர். இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் அவர் வெளிட்டிருக்கும் ஒரு அறிக்கையைக் கவனிக்க வேண்டுகிறோம். அவ்வறிக்கை வருமாறு:-

    நாளது டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மகாத்மா காந்தி பம்பாய் வந்து சேருவார். அன்றையதினத்தைத் தமிழ்நாடெங்கும் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளு கிறேன். அன்று மாலை ஜாதி, மத கட்சி பேதங்கள் எல்லா வற்றையும் மறந்து, தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் பொதுக் கூட்டத்தில் கூட வேண்டும். நமது ஒப்பற்ற தலைவர் அளவில்லாத தேக சிரமங்களுக்கு உள்ளாகியும், சௌக்கியமாகத் திரும்பி வந்ததைக் குறித்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்யவேண்டும். அன்றைய தினம் நமது மகிழ்ச்சிக்கு அறிகுறியாகச் சொந்த வீடுகள், பொதுக்கட்டடங்கள் எல்லாவற்றிலும் தேசியக்கொடி பறக்க விடண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். (இந்தியா) என்பது அவ்வறிக்கையாகும். இந்த அறிக்கையின் சுருக்கமான கருத்து, திரு. காந்தியவர்கள் பிரயாணஞ் செய்த காலத்தில் உடம்பு சௌக்கியமாக இருந்தது ஒன்று, பிரயாணஞ் செய்து திரும்பி வந்தது ஒன்று, ஆகிய இந்த இரண்டு காரியங்களைச் செய்து விட்டார். இதற்காக ஆண்டவன் என்பவனுக்கு நன்றியும் பிரார்த்தனையும் செய்வது ஒன்று, தேசியக்கொடி பறக்க விடுவது ஒன்று. ஆகிய இந்த இரண்டு காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதாகும்.

    உண்மையிலேயே திரு. காந்தியவர்களுக்கு ஒருவித ஆபத்தும் உண்டாகாமல் இருந்ததற்குக்காரணம் ஆட்டுப்பாலும் பேரீச் சம்பழங்களும், நிலக்கடலைகளும், டாக்டர்களும், ஆங்கில அரசாங்கத்தார் அவருக்கெனத் தனியாகப் பாதுகாப்புக் கென ஏற்படுத்தியிருந்த போலீசுமேயாகும்.

    இரண்டாவது, குறிப்பிட்ட இடங்களுக்குப் பிரயாணம் செய்து குறிப்பிட்ட இடத்திற்குத் திரும்பி வந்ததற்குக்காரணம் ரயில், கப்பல், மோட்டார் முதலியவைகளேயாகும்.

    ஆகவே திரு. காந்தி அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணஞ் செய்து திரும்பியதற்காக நன்றி செலுத்த வேண்டுமானால் ஆங்கில அரசாங்கத்தார் போலீஸ்காரர்கள், ரயில்வே அதிகாரிகள், கப்பல் அதிகாரிகள், மோட்டார் ஓட்டிகள் ஆகிய இவர்களுக்கும், அவருக்குப்பால் சப்ளை செய்த ஆடுகளுக்கும், பேரீச்ச மரங்களுக்கும், நிலக்கடலைகளுக்குமே நன்றி செலுத்த வேண்டும், இதுதான் உண்மையும், அறிவுடைமையுமாகும். இதை விட்டு விட்டு ஒன்றுமில்லாத ஏதோ ஒன்றைச்சொல்லி அதற்காக நன்றி செலுத்துங்கள்; பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுவதும், தேசியக்கொடி பறக்கவிடுங்கள், என்று சொல்லுவதும் மக்களை மூட நம்பிக்கையில் முழுகவைக்கவா? அல்லவா? என்றுதான் கேட்கின்றோம்.

    தமிழ் ஓவியா said...

    தேசியக்கொடி பறக்கவிடுவதில் ஒரு குறும்புத்தனமான விஷயமும் அடங்கி யிருப்பதையும் எடுத்துக்காட்ட விரும்பு கிறோம். சொந்த வீடுகளில் தேசியக்கொடி பறக்கவிடுவதைப் பற்றி யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். ஆனால் பொது இடங்களில் பறக்க விடுவதைப்பற்றி தான் மக்களுக்குள் மனவேற்று மைகளும், தகராறுகளும், விரோதங்களும் விளையக்கூடும். ஆகவே இவ்விஷயத்தின் மூலம் சிறிது கிளர்ச்சியும் உண்டாகக்கூடும் என்பதும் நிச்சயம்.

    அன்றியும் இம்மாதிரி பிரார்த்தனை செய்வது, நன்றி செலுத்துவது, தேசியக்கொடி பறக்க விடுவது என்பவைகளின் மூலம் இதுவும் ஒரு பண்டிகையாகவும், திரு விழாவாகவும், கொண்டாடப்பட வேண்டுமென்பதும் திரு. ராஜகோபாலாச் சாரியார் அவர்களின் கருத்தாகும். நாம் திருவிழாக்களும், பண்டிகைகளுமே ஒழிய வேண்டுமென்று பிரசாரஞ் செய்து வருகின்ற காலத்தில் காங்கிர பார்ப்பனர்கள் இம்மாதிரி அரசியலின் பேரால், திரு. காந்தியின் பெயரால் - காங்கிரசின் பெயரால் புதுப்புதுப் பண்டிகைகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதைக்காட்டவே இதை எழுதினோம். ஆகையால் இவைபோன்ற முட்டாள்தனமான செயல்களுக்கு ஏமாறாம லிருக்குமாறு பொது ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

    - குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.12.1931

    Read more: http://viduthalai.in/page-7/92444.html#ixzz3L881Kdrg

    தமிழ் ஓவியா said...

    தந்தை பெரியார் பொன்மொழி

    ஜாதியின் பேரால் உயர்வு தாழ்வு, மதத்தின் பேரால் வேற்றுமை உணர்ச்சி, தேசத்தின் பேரால் குரோதத் தன்மை முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும், கடவுளின் பேரால் மேல் - கீழ் நிலை முதலாகிய அயோக்கியத் தன்மைகள் மனித ஜீவனிடமே உண்டு. பகுத்தறிவின் காரணமாக மனித ஜீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட, தீய, இழிவான, அயோக்கியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறிவில்லா ஜீவராசிகளைவிட மனித ஜீவன் மூளை விஷேசம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட ஜீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில், எவ்விதத்திலும் மனித ஜீவன் மற்ற ஜீவப் பிராணிகளை விட உயர்ந்த தல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜாதியின் பேரால் உயர்வு தாழ்வு, மதத்தின் பேரால் வேற்றுமை உணர்ச்சி, தேசத்தின் பேரால் குரோதத் தன்மை முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும், கடவுளின் பேரால் மேல் - கீழ் நிலை முதலாகிய அயோக்கியத் தன்மைகள் மனித ஜீவனிடமே உண்டு.

    பகுத்தறிவின் காரணமாக மனித ஜீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட, தீய, இழிவான, அயோக்கியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறிவில்லா ஜீவராசிகளைவிட மனித ஜீவன் மூளை விஷேசம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட ஜீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில், எவ்விதத்திலும் மனித ஜீவன் மற்ற ஜீவப் பிராணிகளை விட உயர்ந்த தல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.

    Read more: http://viduthalai.in/page-7/92445.html#ixzz3L88d2hmu

    தமிழ் ஓவியா said...

    பெரியார் - அண்ணா மண்ணில் மதவாதம் எடுபடாது கோவையில் வைகோ பேச்சு

    கோவை, டிச.6_ தந்தை பெரியார் _அறிஞர் அண்ணா மண்ணில் உங்கள் மத வாதம் செல்லாது என்று ஆவேசமாக பேசினார் மதிமுக பொதுச் செய லாளர் வைகோ.
    மதிமுக சார்பில் பினாங்கு (மலேசியா) பிரகடன விளக்கப் பொதுக் கூட்டம் கோவை, பீளமேடு புதூரில் 2.12.2014 செவ்வாய் மாலை 5.30 மணியளவில் துவங்கி நடைபெற்றது.

    சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசும் போது இலங்கையில் நடை பெறவிருக்கிற அதிபர் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

    120 கோடி இந்திய மக்களின் பிரதிநிதி ஒரு இனப்படுகொலையாள னுக்கு வாழ்த்துத் தெரி விப்பதா? என்று கண்டனம் தெரிவித்தேன். பிரதமர் பதவியையே தாழ்த்தி விட்டீர்கள் என்று சொன் னேன்.

    எதற்கு வாழ்த்து? தமிழின அழிப்பை வேக மாக செய்வதற்கா? தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்க வா? கோயில்களை இடிக் கவா? தமிழர்களின் நிலங் களைப் பறிக்கவா? நெஞ்சம் கொதித்துத்தான் பேசு கிறேன். பெயரைச் சொன் னால் ஒருமையா?

    தூசிக்குச் சமமானவர் களுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன். நான் மதயானைக் கூட்டத்தைக் கண்டுபிடித்து அடிப்பவன். பாரத ரத்னா விருது இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு வழங்கப் பட வேண்டும் என்று சொல்லுமளவுக்கு சுப்பிரமணியசாமிக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இவர்கள் நாளை, காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கும் விருது கொடுக்கச் சொல்வார்கள். இது நாதி இல்லா நாடா? தமிழர்களுக்கு நாதி இல் லையா?

    நான் இரண்டு நாட்டு ராணுவத்துக்குள் போய் வந்தவன்! என்னை வீட்டுக்கு திரும்ப முடியாது என்று சொல்வதா? இதைக் கட்சி மாச்சரியங் களுக்கு அப்பாற்பட்டு கண்டித்த வர்களுக்கு நன்றி! நன்றி! இவன் தமிழினத்திற்கு தேவை என்று நினைக்கும் அளவுக்கு நான் தலைவர் களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன்.

    ஆர்.எஸ்.எஸ்.ன் கொள் கைகள் அடங்கிய புராணப் பாடத்திட்டத்தை குஜராத் தில் கொண்டு வந்துவிட் டார்கள். இந்தியாவின் பல இடங்களுக்கும் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக் கிறார்கள். இந்த ஆக்டோ பஸ் முயற்சிதான் பெரியார், அறிஞர் அண்ணா மண் ணான தமிழ்நாட்டில் நடக்காது.

    கூட்டுக் குற்றவாளிகள்

    ராஜபக்சேவுடன் உறவு கொள்ளும் ஏற்பாடு எதற்கு எதிர்காலத்தில் நீங்களும் இனப்படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாக மாறப்போகிறீர்களா? மோடி அவர்களே நட வடிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள்.

    இலட்சியத்தைக் காக்க வாருங்கள் என்று இளை ஞர்களை அழைப்பேன். உலக மக்களிடையே பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி தனி ஈழ ஆதரவைத் திரட்டுவேன். ஈழப்பிரச் சனையில் நியாயம் நம்மிடம் இருக்கிறது. பொது வாக் கெடுப்பை யாரும் கூடாது என்று சொல்ல முடியாது. இளைஞர்களே சிந்தி யுங்கள்! மாணவர்களே சிந்தியுங்கள்! என்று பேசிய தோடு, பினாங்கில் தான் கலந்து கொண்ட கூட்டத் தின் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார்.

    Read more: http://viduthalai.in/page-7/92446.html#ixzz3L88kFp3p

    தமிழ் ஓவியா said...

    தமிழர் தலைவர் வாழிய நீடு!


    அய்யா அடிச்சுவடே ஆயுளுக்கும் நெஞ்சினிலே
    பொய்யா அரிச்சுவடி என்றிட்டீர்! - மெய்ம்மை
    வகுத்த நெறிகளை வாழ்விக்க வந்த
    பகுத்தறிவே! வாழிய நீடு!
    திருவள் ளுவரின் குறள்போல் புவியில்
    பெரியார் குரலாய் ஒலித்தீர் - வரிப்புலியுன்
    வேட்டையில் வீழும் விலங்காய் மடமையிருள்
    ஓட்டிடவே வாழிய நீடு!
    சுமையாம் மடத்தைச் சுடும்நின் அறிவே;
    இமய மனமும் இறங்கும் - உமதாம்
    அறிவுச் சுரங்கத்தை ஆளுகின்ற தந்தை
    பெரியார் ஒளிவாழி நீடு!
    மண்ணையும் மண்ணின் மொழியையும் காத்திடும்
    திண்தோள் தமிழர் தலைவரே! - கண்ணை
    இமையெனக் காக்கும் இனமானச் சிங்கத்
    தமிழுணர்வே! வாழிய நீடு!
    அறிவுலக மேதை பெரியார் தமக்குப்
    பெரியார் உலகமொன்று கண்டீர்! - நிறைநிலா
    மண்வந் திறங்கி மதிஒளி தந்து வாழ்த்தும்
    நின்பெயர் நிற்கும் நிலைத்து

    Read more: http://viduthalai.in/page3/92418.html#ixzz3L8A1BvLC

    தமிழ் ஓவியா said...

    புராணம் என்றால் புருடா என்று பொருள்


    860,00,00,000 (860 கோடி) ஆண்டு களுக்கு ஒரு முறை எந்த நோக்கத் திற்காக பகவான் சிறீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறாரோ அந்த நோக்கத்திற்கு சிறைப்பட்ட ஜீவாத்மாவை வழி நடத்துவதற்காக, பகவத் கீதையை உள்ளது உள்ளபடி அளிப்பதே எமது ஒரே லட்சியமாகும்.- இந்த செய்தி, பகவத் கீதை உண்மை யுருவில் என்ற; பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட; அ. ச. பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ் கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்த 1971 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூலில் (முன்னுரையில்) உள்ளது. சத்ய யுகம் 172800ஆண்டுகள் திரேதாயுகம் 1296000ஆண்டுகள் துவாபரயுகம் 864000ஆண்டுகள் கலியுகம் 4,32,000 ஆண்டுகள் மொத்தம் 43,20,000 ஆண்டுகள்தான். எனும்போது, நமது 860,00,00,000 (860 கோடி) ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறார் என்பது எப்படி சரியாகும்?

    கடவுள் கதை என்றால் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்று சொல்லி விடுவதால் யாரும் யோசிப்பதில்லை. ஆனால் நாம் யோசிப்போமே?!

    - க.அருள்மொழி குடியாத்தம்

    Read more: http://viduthalai.in/page3/92419.html#ixzz3L8A9fihR

    தமிழ் ஓவியா said...

    ஆர்.எஸ்.எஸ். பற்றி காமராஜர்

    குறிப்பாக அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுக்கு) பயம் என்னைப் பற்றித்தான். இந்த காம ராஜ்தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல் கின்றான். அவன்தான் அதிலே தீவிர மாக இருக்கின்றான் என்று நினை கின்றார்கள். என் வீட்டுக்கு தீ வைக் கின்றான். ஆனால் நான் இதற்கெல் லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன்....

    - 11.12.1966 சேலம் பேருரையிலிருந்து நவசக்தி - 15.12.1966

    Read more: http://viduthalai.in/page3/92420.html#ixzz3L8AJ2BSt