Search This Blog

23.12.14

நம் பாதை பெரியார் பாதை - பெரியார் பாதை உலகப் பாதை



இவ்வாண்டு தந்தை பெரியார் நினைவு நாள் தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிவிப்பு ஒன்றினைக் கொடுத்துள்ளார்.


தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று சென்னை பெரியார் பாலம் சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, அங்கிருந்து சிந்தாதிரிப் பேட்டை வழியாக பெரியார் திடலுக்கு அமைதி ஊர்வலமாக வந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத் திலும் மலர் வளையம் வைக்கப்படும் என்பதுதான் அவ்வறிவிப்பு!


வாய்ப்புள்ள பிற மாவட்டங்களிலும், பகுதிகளிலும் - இதே முறையைப் பின்பற்றுமாறு கழகத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த அய்யா பிறந்த நாளில் தமிழ் நாடெங்கும் அய்யா படத்தை அலங்கரித்து பொது மக்களின் பேராதரவோடு ஊர்வலம் நடத்தப்பட்டது. அது பிறந்த நாள் ஊர்வலம் என்றால் இப்பொழுது வருவது அவரின் நினைவு நாள் என்பதால் அமைதிப் பேரணி நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


இது ஒரு சிறந்ததோர் அறிவிப்பாகும். தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து 41 ஆண்டுகள் (1973 டிசம்பர் 24) உருண்டோடி விட்டன என்றாலும் அவர் நினைக்கப்படாத, சிந்திக்கப்படாத நாள் இல்லை என்பது கல்லுப் போன்ற உண்மையாகும்.


அதற்கான காரணமும் மிகவே இருக்கத்தான் செய்கிறது. காரணம் சமுதாய மாற்றம் என்பதுதான் - மனிதப் பிறவியில் ஏற்றத் தாழ்வு இல்லை என்பதுதான் - சமத்துவ சமநிலை என்பதுதான் - மதமற்ற மானிட சகோதரத்துவம் என்பதுதான் சமூகநீதி சகல மட்டத் திலும் என்பதுதான் - பாலியல் நீதி  நடைமுறையில் வந்தாக வேண்டும் என்பதுதான் - சமதர்மம் தழைத் தோங்க வேண்டும் என்பதுதான் - எதிலும் பகுத்தறிவுக் கணணோட்டமும், அறிவியல் அணுகுமுறையும் தேவை -என்பது தான்.  ஜாதி ஆணி வேரோடு ஒழிக்கப்பட்டு ஓர் ஒப்புரவு சமுதாயம் பூத்துக் குலுங்க வேண்டும் என்பதுதான் - எல்லார்க்கும் எல்லாமும் என்ற நிலைப்பாடுதான்.  தந்தை பெரியார் அவர்களின் கோட்பாட்டுடன் கலந்த இலட்சியமாக இருந்து வந்திருக்கிறது. அதற்காகப் பிரச்சாரப் பெரு வெள்ளத்தை நாடெங்கும் பாய்ச்சியவர் அவர்.


இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை தவிர்க்கவே முடியாத வெள்ளிமணி ஓசையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. மண்டைச் சுரப்பை உலகு தொழும்! என்று தந்தை பெரியார் அவர்களைபற்றிப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1957ஆம் ஆண்டிலேயே வருணித்தார். அந்த நிலை இன்றைக்கு எட்டியுள்ளதால் தந்தை பெரியார் அலசப்படுகிறார். அணுஅணுவாக ஆய்வு செய்யப் பட்டு  வெகு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறார்.


ஆனாலும், சவால்கள் இன்னொருபுறத்தில் எழுந்து கொண்டு தானிருக்கின்றன. இளைஞர் சமூகம் தறிகெட்டு களியாட்டம் நோக்கித் தாவும் நிலையையும் கணக்கில் கொண்டு, கருஞ்சட்டையின் தலைமை புதிய யுக்திகளைக் கையாண்டு. இது பெரியார் அவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட மண் என்பதை நிலை நிறுத்தக் கடமைப்பட்டுள்ளோம். எனவே, தோழர்களே முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்;  திட்டமிடுங்கள்; கழகக் குடும்பத்தினரை ஒன்று சேருங்கள்  - ஓரணியாக அமைதி ஊர்வலமாக அணி வகுப்போம் வாரீர்!


தந்தை பெரியாருக்குப்பிறகு, அன்னை மணியம் மையார் மறைவுக்கு பிறகு, கழகம் உயிரோட்டமாக முன்னிலும் வீறு கொண்ட எழுச்சியோடு அரிமா சேனையாகவே பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை உலகுக்குக் காட்டுவோம் வாரீர்! திசை தெரியாமல் திக்குமுக்காடும் திராவிடர் மாணவர் இளைஞர்களை இந்த இயக்கத்தின் - தத்துவத்தின் திசையில் கண் பார்வை, கருத்துப் பார்வையை ஈர்த்திட இந்த அமைதி ஊர்வலம் கண்டிப்பாகப் பயன்படும் என்பதில் அய்யமில்லை.


சென்னை  - அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள கழகக் குடும்பத்தினர் உற்றார், உறவினர், பகுத்தறிவாளர்கள் இனவுணர்வாளர்கள், மொழி உணர்வாளர்கள், இலக்கியப் பிரியர்கள் எழுத் தாளர்கள், கல்வியாளர்கள், பொது நல விரும்பிகள், தந்தை பெரியார் அவர்களால் பெரும் பலன் பெற்ற அலுவலர்கள், வணிகப் பெரு மக்கள் என்று, கட்சி களுக்கு அப்பாற்பட்ட தமிழர்கள் என்ற மனப் பான்மையோடு அமைதி ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டுமாய் அழைக்கின்றோம்.


குறிப்பாக, மகளிர் இதில் பெரும் எண்ணிக்கையில் குறிப்பிடத்தகுந்த வெகு மக்களாய்ப் பங்கேற்பதுதான் மிகப் பொருத்தமான ஒன்றாக இருக்க முடியும்.


இயக்க வீராங்கனை சுயமரியாதைச் சுடரொளி ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையார் அவர்களின் இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் வெகு சரியாக, செறிவாக எடுத்துக் கூறியதுபோல; நம் பாதை பெரியார் பாதை - பெரியார் பாதை உலகப் பாதை - அந்தப் பாதையில் நம் பணிகள் தொடரும் என்பதற்கு அடையாளமாக தமிழர்கள் பல திசைகளில் பிரிந்து கிடந்தாலும், தந்தை பெரியார் என்று வரும் பொழுது, அதுதான் ஒட்டு மொத்த சமுதாயத்தின் மய்யப் புள்ளி - அதையே அச்சாகக் கொண்டு சுழலக் கூடியவர்கள் எம் மக்கள் என்பதை நிரூபிப்போம் - வாரீர்!


ஜாதியில்லை - மதமில்லை;  நாம் மனிதர்கள்; ஒன்றுபட்ட சகோதரர்கள் - சமத்துவ விரும்பிகள் - எல்லார்க்கும் எல்லாமும் என்ற இலக்கு நோக்கி நடை போடும் ஒரு சாலைப் பயணிகள் என்பதை மெய்ப் பிப்போம், வாரீர்! வாரீர்!!


தோழர்களே மறவாதீர் டிசம்பர் 24 காலை 8.30 மணிக்கு நீங்கள் இருக்க வேண்டிய இடம் சென்னை அண்ணாசாலை பெரியார் பாலம் (சிம்சன்) அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை; மறவாதீர்! மறவாதீர்!!

                           ------------------------------”விடுதலை” தலையங்கம் 23-12-2014

24 comments:

தமிழ் ஓவியா said...

தச்சார்பற்ற - சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற - ஜாதி, தீண்டாமையை ஒழிக்கின்ற அணியை உருவாக்குவோம்!

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு


சென்னை, டிச.23- சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சமூக நல்லிணக்கத்திற்கு அச் சுறுத்தலாக உள்ள ஆர்.எஸ்.எஸ்.-பாஜக இந்துத்துவ மதவெறி ஃபாசிசப் போக்குகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமா வளவன் தலைமையில் இன்று (23.12.2014) நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ் மய்யம் நிறுவனர் ஜெகத் கஸ்பார், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உஸ்மான் அலி, பேராசிரியர்கள் அருணன், அ.மார்க்ஸ், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாறன், எஸ்டிபிஅய் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு உள்பட ஏராள மானவர்கள் பல்வேறு அமைப்புகளிலிருந்தும் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டதாவது:

சரியான நேரத்தில்

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி. ஏதோ விடுதலை சிறுத்தைகள் மட்டும் இயங்குகிறார்கள் என்று யாரும் கருத வேண்டாம். இந்த மேடையிலே உயர்த்தப் பட்ட கைகள் எப்போதும் தாழாது, எப்போதும் ஓயாது. எப் போதும் வீழாது. இந்தக்கைகள் பதவிக்காக உயர்த்தப்பட்ட கைகள் அல்ல. மாறாக கொள்கைக்காக, இலட்சியத்துக்காக, இந்த நாட்டின் மனிதநேயத்துக்காக, நல்லிணக்கத்துக்காக, ஒரு புது உலகத்தை உருவாக்குவதற்காக, அதோடு பாய்ந்து வரக்கூடிய கொடுமைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவ தற்காக இந்தக் கைகள் எந்த நேரத்திலும் எந்தக் கருவி களை வேண்டுமானாலும் ஏந்தக்கூடிய கைகளாகவும் ஆகும் என்பதுதான் மிக முக்கியம்.

தமிழகத்திலே அமைதிப்பூங்காவாக இருக்கிற இந்த இடத்திலே இருந்து கிளம்ப வேண்டும். தமிழகம்தான் இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டும். தமிழகத்தையே பெரியார் மண்ணாக இருக்கக்கூடிய இந்த மண்ணை பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களுடைய கொள்கைக்கு இதுதான் தலைசிறந்த விளைநிலம் என்று சொல்லக் கூடிய இந்த மண்ணை, அதுபோலவே புரட்சியாளர்களுக்கெல்லாம் இதுதான் தலைசிறந்த மண் என்று சொல்லக்கூடிய இந்த மண்ணை காவி மண்ணாக்க வேண்டும் என்ற முயற்சிகள் ஒருபக்கத்திலே தீவிரமாக பல வடநாட்டுத்தலைவர்களைக் கொண்டுவந்து, இறக்குமதி செய்து, இங்கே யாராவது கிடைப்பார்களா என்று தேடித்தேடிப்பார்த்து, யார் கிடைப்பார்கள் என்று ஓடிப்பார்த்து அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மத்தியிலே அவர்கள் ஆட்சியிலே அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். நாம் இங்கிருக்கக்கூடிய அணியினர் அன்றைக்கே எச்சரித்தோம். ஆனாலும் ஏமாந்தார்கள். ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலி வேஷம் போட்டு ஆடுகிறான்; புல் அளவேனும் பொதுமக்களுக்கு மதிப்பேனும் தருகின் க்ஷறானா? என்று புரட்சிக் கவிஞர் கேட்டார். 6 மாதத்தில் அவர்களின் மறைமுகத் திட்டங்களை வெளிப்படையாகச் செய்வதற்குத் திட்டமிட்டு செய்கிறார்கள்.

மத சார்பற்ற புதிய அணி

திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் போன்ற அமைப்புகள், இடது சாரிகள், முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்கின்ற மற்ற சிறு பான்மை மக்கள் அத்தனைப்பேரையும் ஒருங்கிணைத்து மதசார்புக்கு அப்பாற்பட்ட மதசார்பற்ற ஒரு அணி, மத வெறியை மாய்த்து மனித நேயத்தைக் காக்கக்கூடியவகையிலே ஒரு சிறப்பான Secular, Social Justice, Caste and Untouchability Eradication Front
என்று சொல்லக் கூடிய மதச்சார்பற்ற, சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற ஜாதியை தீண்டாமையை ஒழிக்கின்ற ஒரு மகத்தான அணி ஒன்றை விரைவில் ஏற்படுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதைக் கூட்டு வதற்குத் தயாராக இருக்கிறோம். அதற்காக அச்சாரமாகத்தான் இங்கே நம்முடைய தலைவர்கள் கைகளை உயர்த்தி இருக்கிறார்கள்.

உயர்த்தப்பட்ட இந்தக் கைகள் உரிமைகள் கோரும் கைகளாக மாறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. கோரிக்கைகள் ஒன்று தான். கோடி கைகள் பலவாக இருந்தாலும்!

இந்தக்கூட்டம் ஓர் எச்சரிக்கை மணி அடிக்கும் கூட்டம். - இவ்வாறு தமிழர் தலைவர் தம் பேச்சில் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/93358.html#ixzz3MjJlLrzG

தமிழ் ஓவியா said...

மீண்டும் இந்தி மொழித் திணிப்பா? கட்டாய மதமாற்றச் சட்டமா?


மீண்டும் இந்தி மொழித் திணிப்பா? கட்டாய மதமாற்றச் சட்டமா?

தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம்


சென்னை, டிச.23_ மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்படும் என்றும், இந்தித் திணிப்புக் குறித்தும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிப்பிரிவு பொதுத் துறை வங்கிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பணப் பரிவர்த்தனைகளுக் காக வாடிக்கையாளர் களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், செல் போன் குறுந்தகவல்கள் இந்தி மொழியில் இருப் பதை உறுதி செய்யுமாறு அந்தக் கடிதத்தில் அறி வுறுத்தப்பட்டிருப்பதாக ஏடுகளில் செய்தி வந் துள்ளன. இது போலவே ஏ.டி.எம். இயந்திரங்களில் வழங் கப்படும் ஸ்லிப்களிலும் இந்தி மொழியைப் பயன் படுத்த வேண்டுமென்று வங்கிகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தி ருக்கிறது. மேலும் வங்கி களின் இணையதளங்கள் மற்றும் மொபைல் விண் ணப்பங்களிலும் இந்தி மொழியைப் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகச் செய்தி வந்துள்ளது. நாம் எத் தனை முறை கண்டனம் தெரிவித்த போதிலும், சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதில் பா.ஜ.க. அரசுதொடர்ந்து இதுபோன்ற நடவடிக் கைகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

மத மாற்றம்

மேலும் கேரளாவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த கிறித்தவர்களை விசுவ இந்து பரிஷத் அமைப் பினர் இந்து மதத்திற்கு மாற்றியதாக செய்தி வந் துள்ளது.

குஜராத், உத் தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் உள்ள ஏழையெளிய இஸ்லாமி யர்களையும், கிறித்தவர் களையும் இந்துக்களாக மத மாற்றம் செய்யும் முயற்சியிலே சங் பரிவார் அமைப்புகள் ஈடுபட்டுள் ளன. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான திரு. வெங்கைய நாயுடு கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் தயாராக இருப்பதாகப் பயமுறுத் தியிருக்கிறார். இதே கருத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர் களும் கொல்கத்தாவில் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க.வின் தலைவரான அமித்ஷா அவர்களும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை தேசிய அளவில் கொண்டு வர பா.ஜ.க. தயாராக இருப் பதாகக் கூறியிருக்கிறார்.

பொதுத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. மக்களிடம் கொடுத்த உறுதிமொ ழிக்கு மாறாக தற்போது பல வகைகளிலும் நடந்து கொள்வது நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப் தியை ஏற்படுத்துகின்றது. இதனை பிரதமர் மோடி அவர்களும், மத்திய அர சும் கண்டும் காணாமல் இருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித் துக் கொள்வதோடு, மத் திய அரசு இப்படிப்பட்ட செயல்களை இனியாவது திருத்திக் கொள்ள வேண் டுமென்று வலியுறுத்து கிறேன். இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93360.html#ixzz3MjKA0KWq

தமிழ் ஓவியா said...

கருநாடகத்தில் கோயில் நுழைவு வெற்றி


பெங்களூர், டிச.23-_ கருநாடகத்தில், மாநில அர்சின் அறநிலையத் துறையின் (முஜ்ராய் துறை) கட்டுப்பாட்டில் உள்ள சில கோயில்களில் கூடத் தாழ்த்தப்பட்டோர் நுழையமுடியாத நிலை இன்றும் நீடித்துவருகின் றது. ஆங்காங்கே தாழ்த் தப்பட்டோர் கிளர்ந் தெழுந்து கோயில் நுழை வுப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோலார் மாவட்டத் தில் உள்ள முல்பாகல் வட்டத்தில் கதனஹள்ளி என்னும் ஊர் உள்ளது. கோலார் நகரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள் ளது.அந்த ஊரில் உள்ளசிறி சவுடேசுவரி கோயில் அறநிலயத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரையில் இந்தக் கோயிலுக்குள் செல்லத் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதியில்லை.

கருநாடகத்தில் இயங்கிவரும் தலித்தர க்ருஹப்ரவேச ராஜ்ய சமிதி (மாநில தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு சங்கம்)என்னும் அமைப்பு, தீண்டாமை இல்லாத இந்தியாவை நோக்கி நடையிடுவோம் என்னும் முழக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் ஏற் பாட்டின் கீழ் அந்தப் பகுதியைச் சேர்ந்த தாழ்த் தப்பட்டோர் பலர் 21_12_2014 ஞாயிறன்று மேற்சொன்ன கோயிலுக் குள் நுழைந்தனர்.

பாராட்டத்தக்கச் செய்தியாக, இந்த கோயில் நுழைவுப் போராட்டத் திற்கு அரசின் ஆதரவு கிடைத்துள்ளது. அற நிலையத்துறையின் துணை ஆணையர் கே.வி. திரிலோக்சந்திரா உட்பட பல அதிகாரிகளும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.என். சீனிவாசாச்சார்யா, கருநாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.என். நாகமோகன் தாஸ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

75 அகவை நிரம்பிய நாராயணம்மா என்பார் தன்னுடைய வாழ்நாளில் முதல் முறையாக இந்தக் கோயிலில் நுழைந்திருப்ப தாகவும் இது அறநிலையத் துறை துணைஆணை யரின் ஆணையினால் தான் சாத்தியமாயிற்று என்றும் கூறியுள்ளார். இந்த அம்மையாரும் அந் தப் பகுதியின் பஜனை மற்றும் கோலாட்டக்குழு கலைஞர் என்பது குறிப் பிடத்தக்கது.

இந்தக் கோயில் நுழைவு மட்டுமே அந்தப் பகுதி தாழ்த்தப்பட்டோர் எதிர்கொள்ளும் சிக்கல் களுக்குத் தீர்வாகிவிடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு துறைகளில் மிகப் பெரிய அறிவியல் சாதனைகளைப் படைத் திருந்தாலும் பல துறை களில் முன்னேற்றம் கண்டி ருந்தாலும் நாட்டில் தீண்டாமைக் கொடுமை இன்னும் நிலவுவது மிக வும் வேதனைக்குரியது என்றும் சமூகக் கொடு மைகளுக்கு வெறும் சட் டங்களால் மட்டுமே தீர்வு கண்டுவிட முடியாது என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி நாக மோகன்தாஸ் கூறினார்.. மக்கள் மனதில் இதற் குரிய மாற்றம் வர வேண்டும் என்றும் கல் வியும் அறிவியல் மனப் பான்மையுமே புத்தர், பசவேசுவரா போன்றவர் களின் கனவுகளை நன வாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93361.html#ixzz3MjKO84Vt

தமிழ் ஓவியா said...

முடிந்த பாடில்லை...

மேனாட்டார் புதிது புதிதான விஞ்ஞான ரகசியங்களையும், இயந்திரங்களையும் கண்டுபிடிப்பதில் ஊக்கங் காட்டி வருகின்றனர். நம் நாட்டிலே புல்லிலும், பூண்டிலும் கடவுளைத் தேடி அவற்றின்பால் பக்தி செலுத்தும் வேலையும் மோட்ச வழி ஆராய்வதும் இன்னும் முடிந்தபாடில்லை.
(விடுதலை, 7.8.1950)

Read more: http://viduthalai.in/page-2/93341.html#ixzz3MjKnKpLw

தமிழ் ஓவியா said...

எங்கள் பாதை உலகப் பாதை - உலகப் பாதை பெரியார் பாதை


எங்கள் பாதை உலகப் பாதை - உலகப் பாதை பெரியார் பாதை
அந்த வெற்றிப் பாதையில் நம் பயணத்தைத் தொடர்வோம்
கழக வீராங்கனை மனோரஞ்சிதம் இரங்கல் கூட்டத்தில் சூளுரை ஏற்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் அரிய இரங்கல் உரை


சென்னை, டிச. 23- உலகப் பாதை பெரியார் பாதை - அந்தப் பாதையில் நம் பணி தொடர்வோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.12.2014) சென்னைப் பெரியார் திடலில நடைபெற்ற ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையாரின் இரங்கல் கூட்டத்தில் ஆசிரியர் ஆற்றிய இரங்கலுரை வருமாறு:-

மிகுந்த வேதனையோடு நாம் அனைவரும் கூடியிருக்கக் கூடிய சுயமரியாதை வீராங்கனை ஏபிஜே மனோரஞ்சிதம் அவர்களுடைய உடலைஇறுதியாக மருத்துவமனைக்கு அளிக்கின்ற நிகழ்வாக அமைந்து ஒரு எடுத்துக்காட்டாக நடைபெறுகின்ற படத்திறப்பிலே கலந்துகொண்டு அவருக்கு வீரவணக்கம் செலுத்தி நமக்கெல்லாம் ஆறுதல் சொல்லி யிருக்கக்கூடிய அறிஞர் பெருமக்களே, தாய்மார்களே, பெரியோர்களே, நேரடியாக தங்களுடைய பாட்டியை இழந்து சொல்லொணாத துயரத்துக்கு ஆளாகியிருக்கக்கூடிய அருமைப் பேரக்குழந்தைகளே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் வணக்கம்.

துணைத்தலைவர் அவர்கள் சுட்டிக்காட்டியதுபோல பல்வேறு மன இறுக்கங்களை உள்ளேயே வைத்துக்கொண்டு, இயக்கத்துக்கு தொண்டனுக்குத் தொண்டனாக, தோழனாக நடக்கவேண்டிய பொறுப்பிலே இருக்கக்கூடிய எங்களைப் போன்றவர்களுக்கு இப்படிப்பட்ட இழப்புகள் என்பது மிகப்பெரிய இழப்பாகும். அதுவும் அறிவு ஆசான் தலைவர் தந்தைபெரியார் அவர்கள் உடலால் மறைந்து 41 ஆண்டுகள் ஓடியிருக்கின்றன. இன்னும் இரண்டு நாளில் 24ஆம் தேதி அன்று கணக்குப்போட்டால் 41 ஆண்டுகளிலே இந்த இயக்கம் இருக்குமா? என்று முதலில் கேட்டவர்கள் உண்டு. இருக்கக் கூடாது என்று எண்ணியவர்கள் நம் எதிரிகள்.

தமிழ் ஓவியா said...


பெரியாருக்குப் பின்னாலும் கழகம் பீடுநடை!

அப்படிப்பட்ட நிலையிலே பெரியாரோடு இந்த இயக்கம் தீர்ந்து விட்டது. இனிமேல் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்ட நேரத்தில் எத்தனையோ தோழர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் கொள்கை வீராங்கனைகளாக, கொள்கை வீரர்களாக, இலட்சியத்துக்காகத் தங்களை ஒப்படைத்துக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது இருக்கிறதே, இதுதான் அறிவு ஆசான் நம்மை ஆளாக்கியதனுடைய பெருமை, விழுமியம். அதுதான் ரொம்ப முக்கியம். அந்த அடிப்படையிலே மிகப் பெரிய அளவிலே அருமைத் தோழியர் ஏபிஜே மனோரஞ்சிதம் அவர்களுடைய இழப்பு என்பதில் அவர்களைப் பொருத்த வரையிலே எல்லா வீரர்களும் நாம் நினைப்பதைப்போல மரணத்தைக் கண்டு நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சுயமரியாதைக்காரர்கள் யாருக்குமே மரணபயம் என்பது கிடையாது. வைதீகர்களுக்குத்தான் மரண பயம் இருக்கும். வைதீகர்கள் மரண பயத்தின்காரணமாக அவர்கள் மிகப்பெரிய அளவிலே தங்களை மோட்சத்துக்கோ, அல்லது பயத்துக்கோ ஆளாக்கிக்கொள்வார்கள்.

தமிழ் ஓவியா said...

நமது தொடர் பணி

ஆனால், நம்மைப் பொருத்தவரையிலே நாம் மனித நேயத்துக்குமட்டுமே தலைவணங்கக் கூடியவரகள். அந்த வகையிலே நம்முடைய பணி என்பது இருக்கிறதே அது எப்படிப்பட்ட பணி என்று சொன்னால் தொடர் பணி, பெரியார் விட்டுச்சென்ற பணி. எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாத பணி என்று உறுதி எடுத்துக்கொண்ட நேரத்தில், அந்த உறுதிக்கு இலக்கணங்கள், இலக்கியங்கள் யார் என்று சொன்னால், இதோ படமாக மட்டுமல்லாமல், நமக்குப் பாடமாகவும் அமைந்திருக்கிறார்களே அருமைத் தோழியர் ஏபிஜே மனோரஞ்சிதம் போன்றவர்கள் ஆவார்கள்.

அண்மைக் காலத்திலே எத்தனையோ இழப்புகள், அதை எண்ணிஎண்ணி நான் மனவேதனையை கடந்த இரண்டு நாட்களாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஓர் அமைப்பிலே பொறுப்பிலே இருக்கக்கூடிய யாரும் மனம் தளர்ந்து இருக்கக் கூடாது. ஏனென்றால், நாம அனைவரும் போர்க்களத்திலே நின்று கொண்டிருக்கிறோம். வாய்மைப்போர் என்று புரட்சிக்கவிஞர் அவர்கள்சொன்னார்களே, வயதில் அறிவில் முதியார், வாய்மைப்போருக்கு என்றும் இளையார் என்று அய்யா அவர்களைப்பற்றிச் சொல்லுகிற நேரத்தில் குறிப் பிட்டார்களே, அந்த வாய்மைப்போர் பெரியாரோடு முடிந்து விடவேண்டும் என்று நினைத்தார்கள். பெரியாருக்குப் பிறகு தான் அது இன்னும் வேகமாக நடைபெறும் பல தளங்களில் என்று சொல்லுகிறபோது இத்தகைய வீராங்கனையின் இழப்பு என்பது பெரிதும் நம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய இழப்பு ஆகாது. அவர் 81 வயது வாழ்ந்திருக்கிறார். ஆனால், எத்தனை ஆண்டுகள் ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல. வாழ்ந்த காலத்தில் எதைச் சாதித்தார் என்ற அளவுதான் முக்கியம். அப்படிப்பார்க்கும்போது எவ்வளவு பெரிய கொள்கை வீராங்கனையாக இருந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் எதைப் பேசினார்களோ, அதை நடத்தினார்கள். எப்படி நடந்துகொண்டார்களோ, அதைத்தான் பேசினார்கள். இரட்டை வேடம், இரட்டை நாக்கு, இரட்டைக் குரல் சுய மரியாதைக்காரர்களுக்கு என்றைக்குமே கிடையாது. வேண்டுமானால் வைதீகபுரியினருக்கு உண்டே தவிர, நமக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது. அதைத்தான் இந்த இறப்பு நிகழ்ச்சி காட்டுகிறது. எவ்வளவு பெரிய கொள்கைப்பற்று,

தமிழ் ஓவியா said...

இறப்பிலும் பாடம்

அவருடைய இறப்பு என்கிற நேரத்திலே, இறப்பிலேகூட படமாக மட்டுமல்லாமல் பாடமாகக் கொள்கைப் போதித்துக் கொண்டிருக்கிற நிகழ்ச்சி, கொள்கை பரப்பும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. மாலை போடாதீர்கள், தேவை இல்லை, அது வெறும் சாதாரண நாராக மாறிவிடும். அதை போடுவதினாலே என்ன லாபம்?

எனக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று விரும் பினால், எனக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்று விரும்பினால் பெரியார் அவர்கள் ஆரம்பித்த, அன்னை மணியம்மையார் ஆரம்பித்த அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லம் இருக்கிறதே, அந்தக் குழந்தைகளுக்காக உண்டியலை என் உடலின் பக்கத்திலே வைத்து அதில் மாலைக்காக செலவு செய்யும் தொகையைப் போடுங்கள் என்று அவர்கள் அறிவித்தார்கள். இன்றைக்கு அது நடந்தது. தன்னுடைய உடல் மறைந்த பிற்பாடும், அது மருத்துவக் கல்லூரிக்குப் பயன்பட வேண்டும் என்று அவர்கள் எழுதிய மரண சாசனம் இருக்கிறதே, இவர்கள் எந்தளவுக்கு கொள்கைத் தெளிவு உள்ளவர்கள் என்று நினைத்துப்பாருங்கள். பெரியாருக்குப்பிறகு இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள். இயக்கம் இருக்கிறது என்பது மட்டுமல்ல. உறுதி, வலிமையோடு இருக்கும். அகில உலகமும் இந்தக் கொள்கையை ஏற்கக் கூடியதாக இருக்கும் என்று காட்டக்கூடிய அந்தத் துணிவு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இருக்கிறது.

துன்பகரமான நிகழ்ச்சியிலும் கொள்கை

மகிழ்ச்சியான நிகழ்ச்சியிலும் கொள்கைப் பிரச்சாரம். துயரமான, துன்பமான நிகழ்ச்சியிலும் கொள்கை வாழ்வு, கொள்கைப் பிரச்சாரம். இதுதான் சுயமரியாதைக்காரனுடைய மிகத் தனித்தன்மை. மகிழ்ச்சியான நேரத்திலே மட்டும் கொள்கைப்பிரச்சாரம் அல்ல. துக்கத்திலும்கூட கொள்கைப் பிரச்சாரம். எந்த இயக்கம் உலகத்தில் இப்படிப்பட்ட ஓர் அரிய பாடத்தைத் தந்திருக்கிறது? எந்தத் தலைவர் இப்படிப்பட்ட அரிய வழிகாட்டியாக இருந்திருக்கிறார்? எண்ணிப்பாருங்கள் அருமைத் தோழர்களே, தோழியர்களே. ஆகவே, ஒரு அற்புதமான வாழ்க்கை அம்மையார் வாழ்ந்தார்.

தமிழ் ஓவியா said...

டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் நாங்கள் மாணவர் பருவத்தில் இருந்தகாலத்திலே, அந்தக் காலத்தில் எம்.ஏ என்று சொன்னால் வாய்பிளந்து பார்க்கக் கூடிய, எந்த எம்ஏவும் நம்முடைய இயக்கத்துக்கு வந்தது கிடையாது. அப்படிப்பட்ட காலத்தில்தான் நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஏ., டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனன் எம்.ஏ., பேராசிரியர் அன்பழகன் எம்.ஏ., இவர்களெல்லாம் எம்ஏ என்று சொல்லுகிறபோது, ஓகோ, இவர்களிடத்திலும் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கக்கூடிய அந்தக் காலக்கட்டத்திலே, டார்பிடோ அவர்கள் மிக வேகமாக யாரையும் பேசுவார்கள். அவருக்குப் பெயரே டார்பிடோ என்று வைத்ததுடைய அடிப்படை மிகப்பெரிய அளவிற்கு சப்-மெரைன்களையெல்லாம்கூட தாக்கக்கூடிய சக்தி டார்பீடோவுக்கு உண்டு என்று சொல்லக் கூடியவராக, சிறப்பான வகையிலேஅவர்கள் கொள்கை நெறிக்கு வந்தார்கள். அவருக்கு அற்புதமான ஒரு வாழ்க்கை இணைய ராக நம்முடைய அம்மையார் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்கள் அமைந்ததார்கள்.

நாங்கள் எல்லாம் மாணவராக இருந்தபோது அவர் திராவிடர் மாணவர் கழகத்தின் தலைவர். நாங்கள் திராவிடர் மாணவர் கழகத்தின் செயலாளர். நாங்கள் ஒரு தீர்மானம் போட்டோம். ஜாதி மறுப்புத் திருமணம்தான் செய்து கொள்ள வேண்டும். அய்யா அவர்கள் கூட எங்களை அழைத்துக் கேட்டார்கள். இவ்வளவு தீவிரமாக தீர்மானங்கள் போடுகிறீர் களே, நீங்கள் இளைஞர்கள். உங்கள் எதிர்காலத்திலே எப்படி ஆகும் என்று தெரியாது. தீர்மானம் போட்டுவிட்டு நீங்கள் நடக்காவிட்டால், கொள்கைக்கு அல்லவா இழுக்கு? ஆகவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன் தீவிரமாக இப்படித் தீர்மானம் போடவேண்டும்? நடைமுறையிலே காட்டுங்கள். அதுவேறு செய்தி. ஆனால், தீர்மானம் போட வேண்டுமா என்று அய்யா அவர்கள் கேட்டார்கள்.

நாங்கள் ஏபிஜே உட்பட தோழர்கள் மூன்று நான்கு பேர் சென்று, அய்யா உங்கள் தலைமையிலே ஜாதி மறுப்புத் திருமணத்தை செய்வோமே தவிர வேறு வகையில் நாங்கள் போக மாட்டோம். இந்த உறுதியை உங்களுக்கு அளிக்கின் றோம். எனவே, தீர்மானத்தை நாங்கள் உறுதியாக முடிவெடுத் துத்தான் நிறைவேற்றியிருக்கிறோம் என்று மாணவர்கள் சொன்னோம். அப்போது அய்யா அவர்கள் வியந்தார். அதேபோலத்தான் அவருடைய வாழ்க்கை ஒப்பந்த விழாவை அய்யா அவர்களே திருச்சியிலே நடத்திவைத்தார்கள்.

மனோரஞ்சிதம் அம்மையாரின் தந்தையார்

ஏபிஜே மனோரஞ்சிதம் அவர்களை கொண்டுவந்தவர் அவர் தந்தையார் கேளம்பாக்கம் பொன்னுசாமி ஆவார். அவர் தாடி வளர்த்து; இளைய வயதிலே அம்மையாரைக் கூட்டிக் கொண்டு வரும் போது பார்த்தால், அவரே தந்தை பெரியாருடைய உருவத்தைப் பெற்றவராக இருப்பார். மேடையிலே ஏறி, ஒரு பெண் பேச்சாளர் சிறப்பாக பேசுகிறார் என்று அந்தக் காலத்தில் எல்லோரும் வியப்பாக பார்ப்பார்கள். எத்தனையோ பெண் பேச்சாளர்கள் இயக்கத்துக்கு வந்திருக் கிறார்கள். திருமணம் என்று சொன்னால் அதற்குப்பிறகு அவர்கள் வாழ்க்கையோடு மறைந்து போனவர்கள், வாழ்க் கையைத் தொலைத்தவர்கள் உண்டு.

ஆனால், இவர் அதற்குப்பிறகும் கொள்கை வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தார். இன்னும் ஒரு சிறப்பான தனித்தன்மை அம்மையாருக்கு உண்டு என்று சொன்னால், நண்பர் ஏபிஜே அவர்கள் எங்களுக்கெல்லாம் எப்போதும் ரொம்ப நெருக்க மானவர். அவர்கள் என்னவோ காரணத்துக்காக அரசியலுக்கு போனார்கள். அரசியல் கட்சிக்கு மாறுதலடைந்தார். அப்படி அரசியல் கட்சிக்கு போன பிற்பாடு, அவருடைய வழியிலேயே நானும் செல்கிறேன் என்று சொல்ல அம்மையார் அவர்கள் மறுத்தார்கள்.

பெரியார் பாதையை விட்டு என்றும் விலகாதவர் டார்பிடோ ஜனார்த்தனம்

அதேநேரத்திலே அவருடைய வாழ்க்கைத்துணை ஒப்பந்தம் செய்துகொண்ட நிலையிலே, வாழ்விணையராக ஒரு நல்ல துணைவியராக அவருக்கு அமைந்தார்கள். ஆனால், பெரியார் பாதையைவிட்டு அவர்கள் என்றைக்கும் நகர வில்லை. அன்றைக்கும், என்றைக்கும் சுயமரியாதைச் செல்வி யாக வளர்ந்தார்களோ, அதேபோலத்தான் சுயமரியாதை வீராங்கனையாகவும் அவர்கள் தம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். அவர்கள் அதற்குப்பிறகு அரசியல் கட்டுப்பாடு காரணமாக திராவிடர்கழகத்தோடு நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை இருந்தது.

ஏனென்றால், குடும்பத்தில் அவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் நாங்களே கூட அதைத்தான் விரும்பினோம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலே, ஏபிஜே அவர்கள் மறைந்தபிற்பாடு, நேரடியாகவே கவிஞர் சொன்ன தைப்போல, அவர்கள் பெரியார் திடலுக்கு வந்து முழுக்க முழுக்க தம்முடைய பழைய தொடர்பை புதுப்பித்துக்கொண்டு தொடர்ந்தார்கள். இறுதி மூச்சுவரையிலே; அவர் இன்றைக்கும் பெரியார் திடலோடு அய்க்கியம் ஆகிவிட்டார்கள்!

தமிழ் ஓவியா said...


தளபதிகளையும் வீராங்கனைகளையும் இழக்கிறோமே!

எனவே, அவரைப்பற்றி எத்தனையோ செய்திகளைச் சொல்ல முடியும். அவர்களுடைய கொள்கை உணர்வு, அவர்களுடைய பண்பட்ட நெறி இவைகளெல்லாம் அதிலும் இன்றைய காலக்கட்டத்திலே ஒருபக்கம் ஜாதி வெறி, இன் னொருபக்கம் மதவெறி, இன்னொரு பக்கம் மூடநம்பிக்கைகள் இவைகளெல்லாம் வேகவேகமாக விசிறி விடப்பட்டு பரவுகின்ற இந்தக் காலக்கட்டத்திலே, தொற்று நோயைவிட வேகமாக பரவும் ஒரு காலக்கட்டத்திலே, ஆட்சியும், அதிகாரமும் தங்க ளிடம் சிக்கிவிட்டது என்பதற்காக மிக வேகமாக நடத்துகிற இந்தக் காலக்கட்டத்திலே நல்ல தளபதிகளை, நல்ல வீராங் கனைகளை நாம் இழக்கிறோம் என்று சொல்லும்போது, அந்தப்போரை நடத்தக்கூடியவர்களுக்கு எவ்வளவு பெரிய சங்கடம் இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

என்றாலும் மனந்தளராமல் பலர் அவர்களாக உருவாகு வோம். இங்கே இருக்கக்கூடிய இளம் தலைமுறையினர், அவர்களுடைய பேத்தி, மற்றவர்கள் எல்லோரும் இந்தக் கொள்கையிலே மலரவேண்டும். இந்தக் கொள்கைக்காக அல்ல. நம்முடைய மான வாழ்வுக்காக, நம்முடைய உரிமை வாழ்வுக்காக, நம்முடைய எதிர்காலம் சிறப்பதற்காக மிகப் பெரிய அளவிலே பெரியாருடைய கொள்கை என்பது இருக் கிறதே இன்றைக்கு உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக் கின்ற ஒரு கொள்கை.

அந்தக் கொள்கைக்கு இவர்கள் படமாக மட்டுமல்ல, பாடமாக என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருப்பார்கள் என்ற உணர்வோடு அவரை வழியனுப்பி வைக்கப் போகின்றோம். அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வு இருக்கிறதே, வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்! நாம் பிறக்கும்போது சுயமரியாதைக்காரராக பிறந்தோமா, இல்லையா என்பது முக்கியமல்ல. இறக்கும்போது சுயமரியாதைத் தோழர்கள் சுயமரியாதைக்காரர்களாக இறப்பதுதான் முக்கியம், அவர்கள் இறந்தார்களே தவிர, அவர்கள் பின்பற்றிய கொள்கைகள் ஒருபோதும் இறக்காது. அது எப்போதும் வாழும். வளரும். முன்னேறும். வேகமாகத் தாக்கும் என்று சொல்லக்கூடிய உணர்வைப் பெற வேண்டும். அதற்குத்தான் அவர் வழி காட்டியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

கொள்கை உள்ளம்

அந்த நிலையிலேதான், இதோ என்னுடைய கொள்கை, உடலைக் கொடுங்கள். உடலை எரிக்க வேண்டாம். உடலைப் புதைக்க வேண்டாம். மருத்துவமனைக்குக் கொடுங்கள் என்று கொடுத்திருக்கிறார். நாம் நீண்ட காலத்துக்கு முன்னாலேயே பெரியார் உடல் உறுப்புக் கொடைக் கழகம் என்று உருவாக்கி இருக்கிறோம். இரத்ததானம், கண் தானம் என்பது மட்டுமல்ல. உடல் உறுப்பு கொடை. உடலையேக் கொடுப்பது என்பது நமது இயக் கத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் ஊடகங்கள் மறைக்கின்றன.



எத்தனைப் பேருக்கு இந்தத் துணிச்சல் வரும்?


இது எவ்வளவு பெரிய செய்தி. சாதாரண விஷயமா? எத்தனைப்பேருக்கு இந்தத் துணிச்சல் இருக்கும்? சுய மரியாதைக்காரர்களைத் தவிர, எத்தனைப் பேருக்கு இந்தத் துணிச்சல் இருக்கும்? ஆழ்ந்த பகுத்தறிவாளர்களுக்கு ஒரு வேளை இந்தத் துணிச்சல் வரலாம். ஆனால், அதில் குடும் பத்தார் எத்தனைபேர் அனுமதிப்பார்கள். எத்தனையோபேர் எழுதி இருக்கிறார்கள்!


ஆனால், பல குடும்பங்கள் அதற்கு இடையூறாக இருக் கின்ற காரணத்தால் அதைச் செய்ய இயலவில்லை. ஆனால், இந்த செல்வங்கள் முழுக்க, முழுக்க அவர்கள் பாட்டி என்ன நினைத்தார்களோ அப்படித்தான் நடைபெற வேண்டும் என்று சொன்னார்கள். இங்கேகூட ஒரு சிறு அழுகைகூட இல்லையே! எல்லோருக்கும் அழுகையும், ஆற்றொணா துயரமும் இருக்கிறது. ஆனால், அம்மையார் அவர்கள் எழுதி இருக் கிறார்கள். எனக்கு இறுதி மரியாதை செலுத்தும்போது யாரும் அழ வேண்டாம். எனக்கு யாரும் மாலை போட வேண்டாம். என்னுடைய உடல் மருத்துவமனை ஆய்வுக்கு பயன்படட்டும் என்று.
சூளுரை ஏற்போம்!

இப்படி எத்தனைப் பேர்! அண்மைக்காலத்திலே சேலத்திலே வேள்நம்பி, அதேபோல அண்மையிலே நம்முடைய மணப்பாறையில் ஆசிரியர் முருகசடாட்சரம் இப்படி வரிசையாக நீங்கள் பார்த்துக்கொண்டீர்களானால் ஏராள மானபேர் மருத்துவக் கல்லூரிக்கு தம்முடைய உடலையே கொடுக்கக்கூடிய அளவுக்கு பக்குவமாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல. தங்கள் குடும்பங்களை அவர்கள் கொள்கை உணர்வோடு தயாரித்திருக்கிறார்கள் என்று சொன்னால் இந்தக்கொள்கை ஆயிரம் காலத்துப்பயிர் இதனை அசைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது! எவ்வளவு பெரிய சவால்கள் வந்தாலும், நாங்கள் சந்திப்போம் என்பதைத்தான் இந்த நேரத்தில் வெறும் படத்திறப்பு செய்தியாகச் சொல்ல வில்லை, சூளுரையாக எடுத்துக்கொள்கிறோம்! அதுதான் அந்த அம்மையாருக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய வீரவணக்கம் என்று சொன்னால், இந்தப்பாதை எங்கள் பாதை, எங்கள் பாதை உலகப்பாதை, உலகப்பாதை பெரியார் பாதை, வெற்றிப் பாதை என்று சொல்லி முடிக்கிறேன் நன்றி வணக்கம். வீரவணக்கம். வீர வணக்கம்.


-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரங்கல் உரையில் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-4/93331.html#ixzz3MjLo0SYw

தமிழ் ஓவியா said...

'சாதி வேற்றுமையெல்லாம் இப்போ ரொம்பக் குறைஞ்சுபோச்சு. முப்பது வருஷங்களுக்கு முன்னாலே பிராமணர்கள் யாராவது உங்க வீட்டில் இந்த மாதிரி வந்து சாப்பிட்டிருக்காங்களா?'' - இவ்வாறு நான் கேட்டதும் பெரியார் ஒரு கணம் என்னை உற்றுப் பார்க்கிறார்.

''வெங்காயம்! அதுக்கு இத்தனை வருஷமா நான் செய்துக்கிட்டு வர்ற பிரசாரம்தான் காரணம். இன்னும் ரொம்ப மாறணும். புத்தனுக்கு அப்புறம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்றவன் யாரு? நான் ஒருத்தன்தானே!'' -

உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் பெரியாரின் கைகள், தளர்ந்துவிட்ட வேட்டியின் முடிகளைத் தாமாகவே இறுக்கிக் கட்டுகின்றன.

''அந்தக் காலத்துல எங்க வீட்டுக்கு ஒரு ஐயர் வருவார். எங்க அம்மா ரொம்ப ஆசாரம். ஒருநாள் அந்த ஐயர் தாகத்துக்குத் தண்ணி வேணும்னு கேட்டார். குடுத்தோம். அந்த தண்ணியைக் குடிக்க வேண்டியதுதானே? கொஞ்சம் மோர் இருக்குமானு கேட்டார். மோர் கொண்டுவந்து கொடுத்தோம். அந்தத் தண்ணியிலே கொஞ்சம் மோரை ஊத்திக் குடிச்சாரு. அந்த மோர், அந்தத் தண்ணியைச் சுத்தப்படுத்திட்டுதாம். அதெப்படி சுத்தப்படுத்தும்? தண்ணி எங்க வூட்டுது. மோரும் எங்க வூட்டுது. எங்க வூட்டு மோர், எங்க வூட்டுத் தண்ணியைச் சுத்தப்படுத்திடுமா?'' - சிரிக்கிறார் பெரியார்

( 4-4-1965)ஆனந்த விகடனுக்காக சாவி - மணியன்
திருச்சி பெரியார் மாளிகையில் எடுத்த பேட்டியிலிருந்து .

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் நினைவு நாளில் சூளுரைப்போம்!

விதைத்தீர்கள், அறுக்கவில்லை;
நெய்தீர்கள், உடுக்கவில்லை;
உழைத்தீர்கள், அனுபவிக்கவில்லை;
இனி வாளையும், கேடயத்தையும்
உங்களுக்காக உருவாக்குங்கள்
வீறு கொண்ட உரிமைக் குரல்
வெளியெங்கும் சிதறட்டும்!
அடக்குமுறைச் சிம்மாசனங்கள்
அடிமைகளால் சிதையட்டும்!
இது கவிஞன் ஷெல்லியின் சிந்தனை உறைவாளிலிருந்து சிதறிய ஒளிமுத்துகள்.

முழங்கால் சேற்றினில்
முக்கி விதைத்தவன்
மூடச் சகோதரன்
பள்ளப் பயல் - அதை
மூக்குக்கும், நாக்குக்கும்
தண்ணீர் காட்டித் தின்னும்
மோசக்காரன் மேலா தோழர்களே!
இது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் குமுறல்!

எப்படியோ பல மதங்கள், பல தெய்வங்கள், பல வேதங்கள், பல சமயங்கள் கற்பிக்கப்பட்டாகி விட்டன. இவை ஒவ்வொன்றினாலும் மக்களை அடிமைப்படுத்தியாகி விட்டது. குரங்குப் பிடியாய் இவற்றைப் பிடித்துக்கொண்டு சமய ஞானம் பேசுகின்றவர்களிடம் காலத்தைக் கழிப்பது வீண்வேலை யாகும். மக்கள் மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண் டிருக்கிறார்கள். மண்ணையும், சாம்பலையும் குழைத்துப் பூசுவதே சமயமாய் விட்டது.

பார்ப்பானுக்குப் பாழாண்டிக்கும் அழுவதே தர்மமாகி விட்டது.

ஒழுக்கத்தினிடத்திலும், சத்தியத்தினிடத்திலும் மக்களுக் குள்ள கவலை அடியோடு போய்விட்டது. பணக்காரன், ஏழைகளை அடிமைப்படுத்துவது முறையாய் விட்டது.

வலிவுள்ளவன் வலுவில்லாதவனை இம்சிப்பது ஆட்சியாய் விட்டது. தந்திரசாலிகள் சாதுக்களை ஏமாற்றுவது வழக்கமாய் விட்டது.

வலிவுள்ளவனோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடமே இல்லாமல் போய்விட்டது.

இவற்றைச் சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? திருந்தினால் திருந்தட்டும், இல்லாவிட்டால் அழியட்டும் என்கிற இரண்டிலொன்றான கொள்கையிலே இறங்கி இருக்கிறோம். மானங்கெட்ட மத்திய வாழ்வு இனி வேண்டுவதில்லை (குடிஅரசு, 4.5.1930, பக்கம் 8).

இது தந்தை பெரியாரின் போர்க்குரல்!

இந்தச் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கிற அனைத்துத் திசுக்களையும் ஊடுருவிப் பார்த்து உண்மை நிலையை அப்பட்டமாகத் தோலுரித்துள்ளார் பகுத்தறிவுப் பகலவன்.

சுதந்திர நாட்டில் பிராமணன் - சூத்திரன் இருக்கிறான் என்றால், அது எப்படி சுதந்திர நாடாக இருக்க முடியும்?

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம்தான் இருக்க முடியுமா? என்று தந்தை பெரியார் அவர்களின் கேள்விக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. உலக வரலாறு எழுதிய ஜவகர்லால் நேரு முதல் எத்தனையோ பேர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்தாலும் உண்மையான சுதந்திரம் வந்த பாடில்லை.

ஆனால், ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 அன்று சுதந்திர நாள் கொண்டாடி பிள்ளைகளுக்கு மிட்டாய்க் கொடுத்துத்தான் வருகிறோம்.

அதிர்ச்சி வைத்தியம்கூடக் கொடுத்துப் பார்த்தார் தந்தை பெரியார். மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தையும் பகிரங்கமாகவே நடத்திக் காட்டினார்.


தமிழ் ஓவியா said...

ஒருவர், இருவர் அல்ல; பத்தாயிரம் பேர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனையை ஏற்றனர் கருஞ்சட்டைத் தோழர்கள்.

அந்தக் கடுமையான விலையைக் கொடுத்த பிறகும்கூட, ஆட்சிக்கு வந்தவர்கள், அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள ஜாதி பாதுகாப்புப் பிரிவை மாற்ற முன்வரவில்லை.

அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இன்றுவரை இந்து மதத்தில் உள்ள குறிப்பிட்ட பார்ப்பனர்கள் மட்டும் கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் உரிமையைப் பெற்றுள்ளனர். அதே மதத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அவ்வுரிமை வேண்டும் என்று போராடினால், ஏன், சட்டமே செய்தாலும்கூட அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லக்கூடிய பார்ப்பனர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சாதக மான தீர்ப்பையும் வழங்கும் அவல நிலைதான் இன்றைக்கும்.

அதற்குச் சொல்லப்படும் காரணம் என்ன தெரியுமா? பார்ப்பனர்களைத் தவிர, அந்த மதத்தில் உள்ள மற்ற பிரிவினர் அர்ச்சகரானால் சாமி சிலை தீட்டுப்பட்டு விடும், தோஷம் ஏற்பட்டு விடும் என்று ஆகமங்களை ஆதாரப்படுத்திக் காட்டுகின்றனர். தீட்டைக் கழிப்பதற்குப் பலவித பிராயச்சித்தங்களைச் செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள். அதனை ஏதோ ஒரு வகையில் உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, பார்ப்பனர் அல்லாத மக்கள் மீதான இழிவு சட்டப்படி, நீதிமன்றத் தீர்ப்புப்படி நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறதா, இல்லையா?

தந்தை பெரியார் இந்த இழிநிலையை ஒழித்துக்கட்டும் போர்க்களத்தில்தான் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

அந்தக் களத்தில் நின்றபடியே தான் தனது இறுதி மூச்சைத் துறந்தார்கள். தனது இறுதிப் பேருரையில்கூட உங்களை எல்லாம் சூத்திரர்களாக விட்டுவிட்டுப் போகிறேனே! என்ற ஆதங்கத்தை மரண சாசனமாக முழங்கினார்களே! அதனை தந்தை பெரியார் அவர்களின் 41 ஆம் ஆண்டு நினைவு நாளில் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

உச்சநீதிமன்றத்திலே தீர்ப்புக்காக இந்தச் சட்டம் காத்திருக்கிறது. இந்த நேரத்தில், திராவிடர் கழகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு - தம்மைச் சூத்திரர்கள் என்று ஒப்புக்கொள்ளாத அனைவரும் தோள் கொடுப்பார்களாக!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/93405.html#ixzz3Moigfcwz

தமிழ் ஓவியா said...

சூத்திரப் பட்டம் ஒழிய...

பறையன் பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுகின்றீர்களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள்.
_ (குடிஅரசு, 11.10.1931)

Read more: http://viduthalai.in/page-2/93400.html#ixzz3Mok5T3ea

தமிழ் ஓவியா said...

மனிதன் ஆடம்பரத்தை விரும்புவதேன்?


வாழ்வியலில் அனைவரும் கற்றுக் கொண்டு வாழவேண்டிய அம்சங்கள் பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியாரிடம் எளிமை - ஆடம்பர வெறுப்பு - சிக்கனம் ஆகியவை முக்கிய மாகும்.

அய்யா பெரியார் அவர்கள் அவரு டைய செல்வச் செழிப்பிற்கு எப்படிப் பட்ட அரண்மனை வாழ்வு, ஆடம்பர வாழ்வு வாழ முழுத் தகுதியானவர்!

என்றாலும், அவர் தனது மைனர் வாழ்க்கை, வாணிபம், பதவி அந்தஸ்து வாழ்க்கையை விட்டு, பொது வாழ்வுக்கு என்று வந்தார்களோ, அன்று முதலே அவரது எளிமை இயல்பானது ஆகும்!

இது அவரின் தனி வாழ்க்கைகூட, தனித்த பண்பாக எளிமை இயல்பாகவும் அமைந்த ஒன்று!

அவர் சிறுபிள்ளையாக இருந்த போதே, இந்த உணர்வு அவரைத் தொத்திக் கொண்டது!

சூரைத் தேங்காய், திருஷ்டி கழித்து வீதியில் எறியப்படும் தேங்காய் முத லிய தின்பண்டங்களை அவர் எடுத்து, துடைத்தோ, கழுவியோ உண்ணும் பழக்கத்தை உடையவரானார்!

எங்களிடத்தில் அய்யா சொல்லியி ருக்கிறார்:

நான் மண்டியை (ஈரோட்டில்) மூடி விட்டு இரவு வீட்டுக்குப் புறப்படும் போது, பக்கத்தில், பக்கோடா முதலிய பலகாரங்கள் செய்து விற்பனை செய்யும் கடைக்காரரிடம் சென்று காசு கொடுத்து ஒரு பக்கோடா பொட்டலம் வாங்கு வேன். நானே சென்று வாங்குவதால், அவர் கூடுதலாகவே அக்கடைக்காரர் பெருமிதத்துடன் வழங்குவார்!

அதைத் தின்றுகொண்டே பொடி நடையாக நான் எங்கள் வீட்டிற்கு வந்து, அதன் பிறகு இரவு விருந்தை, நாகம்மையார் பரிமாறி சாப்பிடுவது வழக்கம் என்றார்!

வெட்கப்படுதல் என்பது அவர் அகராதியிலேயே கிடையாது!

பொதுக்கூட்டங்களில் சில நண்பர் கள், அய்யாவுக்குப் பிடிக்கும் என்பதால், பிரியாணிகூட பொட்டலங்களாகக் கொடுப்பார்கள். அவர்கள் எதிரிலேயே, பிரித்து - அவ்வளவு மக்களும் பார்க்கும் நிலையிலும் - சாப்பிட ஆரம்பிப்பார்! ஒருமுறை பி அண்ட் சி மில் அருகில் கான்ரான்ஸ்மித் நகர் - திடல் பொதுக் கூட்டத்தில் இது நடைபெற்றது! உடனே உதவியாளர் புலவர் கோ.இமயவரம் பன், சங்கடப்பட்டு அவர் கையில் இருந்த பிரிக்கப்பட்ட பிரியாணி பொட்டலத்தை வெடுக்கென்று அய்யா கையிலிருந்து பிடுங்கிக் கொண்டார்!

அய்யாவின் அச்செயல் சாப்பிடு வதில் காட்டிய ஆர்வத்தைவிட, கொண்டு வந்து கொடுத்த தொண்டர் மனம் குளிரவேண்டும்; அவர் மகிழ்ந் தால் தனக்கும் மகிழ்ச்சியே என்ற தத்துவ அடிப்படையில்தான்! இது பலருக்குப் புரிவதில்லை. அருகில் இருந்த எங்களுக்கேகூட புரிய, சில காலம் ஆயிற்று! மலைவாழைப் பழம் - அவர் விரும்பிச் சாப்பிடுவார்.

அதன் விலை சற்று கூடுதல் என்று கேட்டவுடன், பட்டென்று சாப்பிடு வதற்காக எடுத்த மலைப் பழங்கள் இரண்டை அப்படியே கீழே போட்டு விட்டார்.

அப்புறம் அன்னை மணியம்மையார் அவர்கள், அய்யாவிடம், உரிமையுடன், அந்தப் பழத்திற்காகக் காசு கொடுக் கப்பட்டு விட்டதே, இதை நீங்கள் சாப்பிடாவிட்டால் வீணாகத்தானே போகும் என்று செல்லமாகக் கடிந்து கொண்டபோது, உடனே சிறு குழந்தை போல், குறுநகைப்போடு எடுத்து உண்ட காட்சி இன்னமும் நம் கண்களை விட்டு அகலவில்லை!

மதிய சாப்பாடு பெரியார் மாளிகை யிலோ, சென்னை பெரியார் திடல் இல்லத்திலோ அன்னையார் சமையல் மூலம் என்பதில் மிக எளிமையான உணவுதான்!

பல காய்கறிகளோ அல்லது இறைச்சி, முட்டை பல வகையறாக் களோ இருக்காது!

ஒரு குழம்பு, ஒரு காய்கறி அல்லது கறுப்பு மிளகு போட்டு மணியம்மை யாரின் தனிச்சுவையான மருத்துவப் பக்குவம் உள்ள ஆட்டுக்கறிதான் ஒரே பக்கவாத்தியம் - அடுக்கிய உணவில் அவருக்கு விருப்பம் கிடையாது!

உணவில் மட்டுமா? உடையிலும் கூடதான் - கடைசி காலங்களில் உடுத் திய வெள்ளைக் கைலிகள் அடிக்கடி அழுக்காகின்றது என்று அம்மா அதைத் துவைத்து, பெட்டி போடுகிறார் என் பதற்காக, அய்யா அவர்கள், வெள் ளைக் கைலிகளைக் கட்டிடும் பழக் கத்தை மாற்றினார்!

தெருவோர இட்லிக்கடை வித வைத் தாய்மார்களின் சிறந்த புரவல ராகவே அய்யா இறுதிவரை திகழ்ந்தார்!

ஆடம்பரத்தை வெறுத்த அவர், அதில் எவ்வளவு தெளிவாக இருந்தார் என்பதற்கு அய்யாவின் அரிய தத்துவ அறிவுரையைக் கேளீர்:

மனிதன் ஆடம்பரம் செய்துகொள்கிறான் என்றால், அது அவனது மனக்குறைவினாலேயேயாகும்.

ஆடம்பரம் என்பது மனக்குறைதான்!

தனக்குள்ள தகுதியைக் குறைத்துக் கொண்டால், மனிதன் மனக் குறையில்லாமல் இருக்க முடியும்.
- தந்தை பெரியார்

இதனைப் பின்பற்றி உயருங்கள் வாழ்வில்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/93407.html#ixzz3MokHrRjk

தமிழ் ஓவியா said...

வாழ்வார்; வாழ்வார் என்று வாழ்த்துகின்றேன்: கலைஞர்


சென்னை, டிச.24_ தந்தை பெரியார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (24.12.2014) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள கடிதம் வருமாறு:_ நம்முடைய அறிவு ஆசான், தந்தை பெரியார் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! என்னுடைய நினைவுகள் 41ஆண்டுகளுக்கு முன் செல்கிறது. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் உட்பட நம்முடைய அரசியல் ஆசானும், சுயமரியாதை இயக்கத்தின் தந்தையும், இந்தி ஒழிப்புப் போரின் முதல் தளபதியும், பைந்தமிழ் நாட்டில் பகுத்தறிவுச் சுடர் பரப்பியவரும், கௌதம புத்தருக்குப் பின் வந்த சமுதாயச் சீர்திருத்தப் புரட்சியாளரும், தென்னகத்தில் முதன் முதலாக சமதர்மக் கருத்துகளை அறிமுகம் செய்தவரும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் பாதுகாவலராக இருந்தவரும், திராவிடக்கழகத்தின் ஒப்பற்றத் தலை வருமான, பகுத்தறிவுச் சிங்கம், சமுதாயப் பணியாற்றிய சரித்திர நாயகன், நமக்கெல்லாம் தன்மானம் கற்பித்த தங்கம், தமிழ் இனத்தின் வழிகாட்டி, தந்தை பெரியார் அவர்கள் 1973ஆம் ஆண்டு, டிசம்பர் 24ஆம் நாள், காலை 7.40 மணிக்கு வேலூர் மருத்துவ மனையில் இயற்கை எய்தினார். செய்தி பரவி இயக்கத் தோழர்களும், தாய்மார் களும் நடக்கக் கூடாதது, நடந்து விட்டதே; சீர்திருத்தப் போரின் தளநாயகனது புரட்சி வாழ்வு முடிந்து விட்டதே என்று கதறினர். செய்தி அறிந்ததும் எனக்கு என்ன செய்வ தென்றே புரிய வில்லை. பெரியாருடைய நான் பழகிய நாள்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக என் கண்களிலே நிழலாடின. அப்போது முதலமைச்சராக நான் இருந்ததால், முதலமைச்சர் என்ற முறையில் என்னை வளர்த்த அந்த அறிவு ஆசானுக்கு நான் செய்ய வேண்டிய நன்றிக் கடன் என்று யோசித்தேன். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிப் பயணம் செய்திட விரும்பி, தலைமைச் செயலாளரை அழைத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், பெரியாரின் உடலை பொது மக்கள் பார்த்து அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கவும் ஏற்பாடுகளைக் கவனிக்கக் கூறினேன். பெரியார் அவர்கள் அரசுப் பொறுப் பில் எதிலும் இல்லாத காரணத்தால், அரசு மரியாதை செய்வதற்கு விதிமுறைகள்படி வழியில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் நான் கூறினேன். நாம் விரும்பியபடி தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட்டே ஆக வேண்டும், அதனால் தி.மு. கழக அரசு கலைக்கப்படக் கூடிய நிலை தோன்று மேயானால், அதைவிட பெரிய பேறு எனக்கு இருக்க முடியாது. எனவே விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், நடக்க வேண்டியதைக் கவனியுங்கள் என்றேன். அவ்வாறே ஏற்பாடுகள் நடைபெற்றன. பெரியாரின் உடலை உடனடியாகச் சென்னைக்கு எடுத்து வரச்செய்து, ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

பெரியாரின் இறுதி ஊர்வலத்தில் பல இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் நானும், அமைச்சர்களும், பெருந்தலைவர் காமராஜர், இளவல் வீரமணி, அன்னை மணியம்மையார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., மற்றும் தமிழகத் தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டோம். பெருந்தலைவர் காமராஜர் என்னை அரவணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார். பெரியாருடன் பழகிய பல்வேறு நினைவுகள் அடுக்கடுக்கான என் நினைவுகளில் அப்போதும் வந்தது, இப்போதும் வருகிறது.

புதுவையில் கழக மாநாடு நடத்திய போது, என்னைக் குண்டர்கள் தாக்கி, இறந்து விட்டதாகக் கருதி, சாக்கடையோரத்தில் போட்டு விட்டுச் சென்ற போது, தந்தை பெரியாரும், அண்ணாவும் என்னைக் காணாமல் தேடி, விடியற்காலை 4 மணி அளவில் நான் அவர்கள் இருந்த இடத்திற்குக் கொண்டு போய் சேர்க்கப்பட்ட போது, தந்தை பெரியார் அவருடைய கையால் என் காயங்களுக்கு மருந்திட்ட நிகழ்வு மறக்கக்கூடியதா? அதன் பிறகு என்னுடன் வா, போகலாம் என்று ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று பெரியாரின் குடியரசுஅலுவலகத்திலே துணையாசிரியனாகப் பணி புரிந்த நிகழ்ச்சியைத் தான் நான் மறக்க முடியுமா? அப்போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற தலைப்பிலும், தீட்டாயிடுத்து என்ற தலைப்பிலும் எழுதிய கட்டுரைகளை பெரியார் பெரிதும் பாராட்டினாரே, அதைத் தான் என்னால் மறக்க முடியுமா? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், திருச்சியில் பெரியார் கலந்து கொண்ட நாளில், நானும் அங்கே போராட்டத்தில் கலந்து கொண்டதை மறக்க முடியுமா? 1967இல் தி.மு.கழகம் பொதுத் தேர்தலில் கழகம் வெற்றி பெற்றவுடன், அண்ணாவும் நாங்களும் திருச்சிக்குச் சென்று பெரியாரைப் பார்த்தோமே, அதைத் தான் மறக்க முடியுமா? பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்; ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம் என்று நான் அப்போது எழுதினேனே, அதை மறக்க முடியுமா? இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்! அந்தப் பெருமகனின் 41ஆவது ஆண்டு நினைவு நாளில் வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு

செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண்
சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில்
சாகும் வரை ஒளி உண்டு!
பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றியபின் - இவரோ
படுகிழமாய்ப் போன பின்னும் பம்பரமாய்ச் சுற்றி வந்தார்;
எரிமலையாய்ச் சுடுதழலாய்
இயற்கைக் கூத்தாய்
எதிர்ப்புகளை நடுங்க வைக்கும் இடி ஒலியாய் இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
இழிவுகளைத் தீர்த்துக் கட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதென்சு நகர் சாக்ரடீசாய்
ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்
எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார், இப்போதோ
இறப்பின் மடியினிலே வீழ்ந்திட்டார்.
என்று நான் 1974ஆம் ஆண்டு சேலம் கவியரங்கில் எழுதியதையும் நினைவு கூர்கிறேன். அவர் நம் நினைவில் என்றென்றும் வாழ்வார், வாழ்வார் என்று வாழ்த்து கின்றேன்.

Read more: http://viduthalai.in/page-3/93415.html#ixzz3Mol6sxs3

தமிழ் ஓவியா said...

போராட்டமே வாழ்க்கை!

சிலருக்கு வாழ்க்கையே போராட்டம் பல காரணங்களால்! மாட மாளிகையுடன் செல்வச் செழிப்பில் வாழவேண்டிய வாழ்வை உதறிவிட்டுப் போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியவர் நமது ஈடு இணையற்றத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

எனது மக்கள் மானமும் அறிவும் உள்ளவர்களாக வாழவேண்டும். எவ்வளவோ படித்த அறிஞர்கள் இருந்தும் யாரும் முன் வரவில்லை என்ற ஒரே தகுதி தான் எனக்கு. கொள்கைகள் மிகவும் கடினமானவை, யாரும் வரமாட்டார்கள் என்று நெருங்கிய நண்பர்களே சொன்னபோது அதைப்பற்றிக் கவலையில்லை என்று சொன்ன துணிச்சல்காரர். சொன்னது அனைத்தையும் செய்து காட்டிய வெற்றி வீரர்.

உடலைப் பற்றிக் கவலைப்பட வில்லை. கடும் எதிர்ப்பு ,நண்பர்களின் துரோகம், இழப்பு கண்டு தளரவில்லை. ஒவ்வொரு மணித்துளியையும், ஒவ் வொரு காசையும் தன் இனத்திற்கான அடித்தளமாக் கியவர். அந்த அடித்தளம் நன்றாக அமைந்ததின் வெளிப்பாடுதான் அன்னை மணியம்மையாரும் அதன் பின்னர் நமது ஈடில்லா ஆசிரியப் பெருந்த கையும். கருஞ்சட்டைப் படை என்றாலே தமிழ், தமிழினம் அதற்கான அறவழிப் போராட்டம் என்பது தான் மக்களின் கண் முன்னரே வருமாறு தொடர்ச்சி யானப் போராட்டங்கள் தான். அறிவு ஆசான் வழியிலேயே தலைமை! உடலைப்பற்றிய கவலை இல்லை! உள்ளமெல்லாம் தொண்டர்களின் உற்சாகம்! பெரியார் தொண்டு செய்யாத மணித்துளி வீண்! இளைஞர் படையின் உற்சாகம். உள்ளத்தில் இளமை யுடன் உற்சாகமாகப் பங்கேற்கும் என்பதும் தொன் னூறும் கண்ட பெரியார் பெருந்தொண்டர்கள்! பல்துறை வல்லுநரின் பங்கேற்பு! தமிழரின் போர்க்க வசமாகத் திகழும் கருஞ்சட்டைப் படையின் நன்றியோ, பதவியோ, புகழோ தேடாத ஒரே முழக்கம் "போராட் டமே வாழ்க்கை!"

ஆம்! ஜாதி ஒழிய வேண்டும். மதங்கள் மாய வேண்டும். மனித இனம் பகுத்தறிவுடன் தன்மானத் துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்! அதற்கு இன்றைய கணினி வழி எளிய சிறந்த வழி. அனைவரும் கற்று செயல் பட வேண்டிய வழி. கற்போம். செயல் படுவோம்.
தந்தை பெரியாரின் தொண்டன், ஆசிரியரின் மாணவன், போராட்டமே எங்கள் வாழ்க்கை என்ற உறுதியுடன் உழைப்போம். உலகே பெரியார் வழி வாழ்ந்து மகிழட்டும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- சோம.இளங்கோவன்

Read more: http://viduthalai.in/page-3/93417.html#ixzz3MoljPygY

தமிழ் ஓவியா said...



மோடி வித்தை என்ற ஆர்.எஸ்.எஸ். அரசியல் பொம்மலாட்ட வித்தையின் மவுசு குறைகிறது!

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் அரசுத் திட்டங்களை அறிவிப்பது எவ்வகையில் ஜனநாயகம் ஆகும்?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை



நடந்து முடிந்த காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் மூலம், மோடி வித்தை என்ற ஆர்.எஸ்.எஸ். அரசியல் பொம்மலாட்ட வித்தை யின் மவுசு குறைகிறது. ஆர்.எஸ்.எஸ். தலை வர்கள் பெயரில் அரசுத் திட்டங்களை அறிவிப்பது எவ்வகையில் ஜனநாயகம் ஆகும்? என திரா விடர் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

மோடி வித்தை என்ற ஆர்.எஸ்.எஸ். அரசியல் பொம்மலாட்ட வித்தையின் மவுசு குறைகிறது; நாளும் மங்கி வருகிறது. பிரச்சாரப் புகைமூட்டத்தால் மூடப்பட்ட உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத் துவங்கும் நிலை - நாம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே நாட்டில் நடந்து கொண்டுள்ளது!

எப்போதுமே வித்தைகள் சில நேரங்கள் வரைதான் பார்க்க ரசனையாக இருக்கும். அந்த மேஜிக் 24 மணி நேரம் நீடித்தால் அதன் குட்டு உடைந்துவிடும் அல்லவா? அதுபோலத்தான் இதுவும்!

நடந்து முடிந்த தேர்தலில், காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் தனித்த ஆட்சியாக அமைக்காது என்பது அடிப்படையில் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய நிலை!

- இத்தனைக்கும் அங்கே தேர்தலில் சண்டமாருதப் பிரசங்கங்கள் செய்த பா.ஜ.க. பிரதமர் மோடியும் அவரது கட்சியும், இந்துத்துவா கருத்துக்களை அழுத்தமாக - இராமனுக்குக் கோயில் கட்டுவோம் - 370ஆவது பிரிவு - காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து தரும் பிரிவை ரத்து செய் வோம் என்பது போன்ற பிரச்சாரங்களை அங்கு செய்யவில்லை. வாக்கு வங்கி எதிர்பார்ப்பு காரணமாக.

9 சதவிகித வாக்குகள் சரிவு

அப்படியிருந்தும் முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் (2014) பா.ஜ.க. பெற்ற வாக்குகளைவிட 9 சதவிகித வாக்கு களை இழந்து, சரிவை நோக்கியுள்ளது!

ஜம்மு - காஷ்மீர் என்பதில், ஜம்மு பகுதியில்தான் தாங்கள் பெற்ற அனைத்து இடங்களும் உள்ளதே தவிர, இஸ்லாமியர்கள் வாழும் மற்ற பகுதியில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, இஸ்லாமியர்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று இவர்கள் அப்பகுதி தோல்விக்கு சமாதானம் கூற முற்படலாம். ஜார்க்கண்ட், மாநிலத்தில் அதிகம் ஹிந்துக்கள் தானே உள்ளனர்? அங்கேயும் 20 தொகுதிகளை இழந்து 10 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது. பொதுத் தேர்தலுக்கு அடுத்தபடி நடைபெற்ற இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற வில்லையே - (இதை நாடு மறந்திருக்கலாம்)

சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்

ஹிந்துத்துவ அஜெண்டாக்களை அவசர அவசரமாக நிறைவேற்றும் வகையில், சமஸ்கிருதப் பண்பாட்டை நாடு தழுவிய அளவில் திணிக்கவும், ஹிந்தி மொழி ஆதிக்கத்தையும், மத மாற்றம் என்ற சிறுபான்மையினரை அச்சுறுத்தல் தந்திரங்களையும், ஆர்.எஸ்.எஸ். முன்பு போட்ட தீர்மானமான பண்டிட் மதன்மோகன் மாளவியா போன்ற இந்து மஹாசபை தலைவருக்கு புதை பொருள் கண்டெடுப்பு போல பாரத ரத்னா பட்டம் தருவது, ஆர். எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் அரசுத் திட்டங்களை அறிவிப்பது எவ்வகையில் ஜனநாயகம் ஆகும்?

காங்கிரசை எந்தக் காரணம் கூறி, குறை கூறி குற்றம் சுமத்தினார்களோ, அதைத் தானே இப்போது கூச்ச நாச்சமின்றி அவசர அவசரமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் கள் பெயர் சூட்டல் முதல் பல முறைகளில் செய்கின்றனர்.

நல்ல ஆளுமை என்பது இதுதானா?

பண வீக்கம் குறைந்துள்ளது என்பது மோடி ஆட்சியின் சாதனையா? உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் (Crude oil) விலை மளமளவென்று வீழ்ச்சி அடைந்ததன் இயல்பான விளைவுதானே அது? மறுக்க முடியுமா?

உண்மை ஒரு நாள் வெளியாகும்

மோடியின் ‘Make in India’ என்ற உற்பத்தித் திட்டம் வெற்றியாக அமையாது; என்று ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் கூறியுள்ளாரே அதற்கு என்ன பதில்?

காங்கிரஸ் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு சரிந்ததை நாங்கள் வந்து சரிக் கட்டுவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னார்களே! இன்று நடந்ததா ஒரு டாலருக்கு 63.8 ரூபாய் என்ற நிலைதானே!

கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு புதிய திட்டங்கள் துவக்கப்படுகிறது.

சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் நலவாழ்வு - சுகாதாரத் துறையில் மோடி அரசு குறைத்துள்ளது என்று இன்று செய்திவந்துள்ளதே!

உண்மை ஒரு நாள் வெளியாகும் ஊருக்கு எல்லாம் தெளிவாகும் என்ற நிலை விரைந்து வருகிறது!

சிலரைச் சில காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரை யும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பது வரலாறு.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
25-12-2014

Read more: http://viduthalai.in/e-paper/93440.html#ixzz3MuOpThYp

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


சும்மா ஆடுமா வைத்திகளின் குடுமிகள்

தினமணி 24.12.2014

ஓ, பகுத்தறிவுன்னாலே குமட்டிக் கொண்டு வருகிறதோ! எந்தப் பண்டிகையையும் திராவிடர் கழகம் கொண்டாடுவதில்லை.

தினமணிக்கு ஒரே ஒரு கேள்வி. கிருத்தவர்களோ, முசுலிம்களோ தங்கள் மக்களில் ஒருபகுதியினரை சூத்திரன் (வேசிமகன்) என்று சொல்லுவதில்லை.

ஆனால் உன் கொழுப்புத் திமிர் ஏறிய இந்து மதம் தானே பார்ப்பனர்களைத் தவிர மற்ற வர்களை (நடைமுறையில்) சூத்திரன் என்று எழுதி வைத்திருக்கிறது சொல்லு கிறது.

உன் பண்டிகையைத் கொண்டாடி வேசிமகன் என்ற பட்டத்தை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா? சும்மா ஆடுமா வைத்திகளின் குடுமிகள்?

Read more: http://viduthalai.in/e-paper/93438.html#ixzz3MuP9mQbe

தமிழ் ஓவியா said...

சாமானியனுக்காக எழுதியவர் பெரியார்: இராமகிருஷ்ணன்


கலையை மதத்திலிருந்து பிரித்தவர் பெரியார்: டிராஸ்கி மருது
பெண்களின் உரிமைக்கு வேர் பெரியார்: வெண்ணிலா
சாமானியனுக்காக எழுதியவர் பெரியார்: இராமகிருஷ்ணன்
என் தாத்தாவின் கருத்துக்கள் இன்றைக்கும் தேவை: சுகிதா

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையுரை

சென்னை, டிச.25- சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (24.12.2014) தந்தை பெரியார் 41ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பல திசைகளில் தந்தை பெரியாரின் முத்திரை எனும் தலைப்பில் கருத் தரங்கம் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் இணைப்புரை வழங்கினார்.

தொடக்க உரையாக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி பேசினார்.

கலைஞர்களின் பெரியார் எனும் தலைப் பில் ஓவியர் டிராட்ஸ்கி மருது, பெரியார் என்ற எழுத்தாளர் எனும் தலைப்பில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், பெண்ணியத்தின் முன் னோடி பெரியார் எனும் தலைப்பில் கவிஞர் எழுத் தாளர் அ.வெண்ணிலா, பேச வைத்த பெரியார் எனும் தலைப்பில் ஊடக வியலாளர் சுகிதா ஆகி யோர் உரையாற்றினார் கள். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை உரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலை மையுரையில் பேசும் போது,

தாத்தாவின் கருத்துக் களைப் பேசிய சுகிதா, பெரியாரைப்பற்றி ஓவியம் தீட்டிய டிராஸ்கி மருது, பெண்ணியத்தின் முன் னோடி பெரியார் என்று அமாவாசையில் பெரியார் திடலில் வெண்ணிலா, பெரியார் சிறந்த எழுத்தாளர் என்று ஆய்வரங்கமாக எழுத்தாளர் இராமகிருஷ்ணன் பேசி னார்கள்.

தந்தை பெரியார் 41 ஆவது ஆண்டு நினைவு நாள் ஒரு கணக்கு பார்க் கும் நாளாக உள்ளது. எழுச்சியும், ஏற்றமும், சிந்தனையும், துணிவும் பெற வேண்டும்.

மானமும், அறிவும் உள்ள மக்களாக மாற்ற கருவிகளாக எழுத்து, பேச்சு இருந்தன.

பச்சை அட்டை குடியரசுமூலம் பல பேர் எழுத்தாளர்களாக, கருத் தாளர்களாக உருவானார் கள். படிப்பவர்கள் 7 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்ந்தனர்.

சென்னை வானொலி யில் பெரியாரும் பெண் ணியமும் எனும் தலைப் பில் நான் பேசிய போது என்னிடம், பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலில் ஆண்தானே பெரியார் எப்படி எழுதினார் என்று கேட்டார்கள். நல்ல பெயர் வருமா? கெட்ட பெயர் வருமா என்று கருதாமல் மனி தனாகத்தான் பேசினார். எழுதினார். பெரியார் அளவுக்கு பெண்ணிய சிந்தனையில் வேறு எவரும் கிடையாது. பல பேருக்கு அதிர்ச்சி ஊட் டக்கூடிய சிந்தனைகளாக இருந்தன.
பெண்களுக்கான பாது காப்பு சட்டங்கள் குறித்து பெண்கள் எத்தனைப் பேர் தெரிந்து வைத்துள் ளார்கள்? பெண்ணை ஒரு பொருளாக கருதி னான். அலங்கார பொம் மைகளா? என்று கேட் டார். பொன் விலங்கு அடிமைப்படுத்துபவர்கள் பெண்களை ஏமாற்றுவ தற்கு பொன்னைக் காட்டு கிறார்கள். பல துறைகள் வளர்ந்திருக்கிறது.

அதிகாரமும், ஆட்சி யும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால், தந்திரத்தால் தானே தவிர, வீரம், விவேகத்தால் அல்ல. மோடி வித்தை காட்டு கிறார். மத மாற்றம் குறித்து ஆதரித்தோ, எதிர்ப்பு தெரிவித்தோ எதுவும் பேசவில்லை. எங்கே பேச வேண்டுமோ, அங்கே பேசாமல், வானொலியில் பேசுகிறார்.

ஜார்கண்ட் முடிவு, காஷ்மீர் முடிவு மக்கள் விழிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் பெற்ற வாக்குகளை விட 10 விழுக்காடு வாக் குகள் குறைந்திருக்கின்றன. காஷ்மீருக்கான பிரிவு 370 ரத்து செய்வோம் என்று பேசியவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்களா?

தந்தை பெரியார் சிந்தனைகளை கேட் பவர்கள் முதலில் மறுப் பார்கள். முதலில் கலிலி யோவைக் கொண்டாடி னார்களா? பிறகு மதம் மண்டியிட்டது.

பெரியார் கொள்கை கள் விஞ்ஞானக் கருத் துகள். அறிவாயுதம் முனை மழுங்காது. காலம் தோறும் அது வளர்ந்து கொண்டே இருக்கும்.

-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமை உரையில் பேசும் போது குறிப்பிட்டார்கள்.

பேச வைத்த பெரியார்

ஊடகவியலாளர் சுகிதா பேச வைத்த பெரி யார் எனும் தலைப்பில் பேசும்போது, பேத்தி யாகவே பேசினார். உறவோடு உரிமையோடு

Read more: http://viduthalai.in/e-paper/93443.html#ixzz3MuPY0eHV

தமிழ் ஓவியா said...

புலி வேட்டை


பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடாகும். ஆதலால், நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியது தான்.
(விடுதலை, 20.10.1960)

Read more: http://viduthalai.in/page-2/93431.html#ixzz3MuQKfG2F

தமிழ் ஓவியா said...

நமக்கு ஏராளமான பணிகள் இருக்கின்றன


அன்புள்ள தோழர் அ. ரவிச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம் 15.12.2014 அன்றைய விடுதலை நாளிதழில் 4 மற்றும் 5-ம் பக்கங்களில் திராவிடர் கழகத் தலைவர் அய்யா கி. வீரமணி அவர்கள் பேசிய ஒரு அருமையான சொற்பொழிவு இடம் பெற்றுள்ளது. விஜய பாரதத்தின் திரிபு வாதம் என்ற தலைப்பில் அதனை துண்டு பிரசுரமாக / ஆறு பக்க நூலாக அச்சடித்து வெளியிட வேண்டுமென்று விரும்புகின்றேன். அதில் நாம் படிக்க வேண்டிய ஏராளமான விசயங்கள் இருக்கிறது. நாம் செய்யவேண்டிய பணிகளும் ஏராளம் இருக்கிறது என்பதை அந்த உரை நம்மக்கு உணர்த்துகிறது. குரங்கின் கைபட்ட பூமாலை போல் நம்நாடு சின்னா பின்னமாக சிதைவதை தடுத்தாக வேண்டும். ஏற்கெனவே அய்யா எஸ்.எஸ். அன்பழகன் அவர்களோடு இணைந்து 17.04.2013 அன்று விடு தலையில் வெளிவந்த அய்யா கி. வீரமணி அவர்களின் கட்டுரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் களோடு கூட்டாக அச்சடித்து பொது மக்களுக்கு விநியோகித்ததைப் போல் இதனையும் விநியோகிக்க வேண்டும் . அதற்கான செலவுகளை நாம் பகிர்ந்து கொள்ளுவோம்.

தோழமையுள்ள
- ஞான. அய்யாபிள்ளை,
மும்பை கவுன்சில் உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Read more: http://viduthalai.in/page-2/93435.html#ixzz3MuR2lTdZ