Search This Blog

1.4.09

"தி.மு.க." வை "தி.க." ஆதரிப்பது ஏன்?


மதச்சார்பின்மை ஆட்சியே நாட்டுக்குத் தேவை!

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நேற்று (31.3.2009) நிறைவேற்றப்பட்ட - 15 ஆவது மக்களவைத் தேர்தல் பற்றிய தீர்மானம் தன்னிலை விளக்கம் கொண்டதாகும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசே மீண்டும் மத்தியில் ஏன் வரவேண்டும் என்பதற்கான அனைத்துக் காரணங்களும் அத்தீர்மானத்தில் விளக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மதச்சார்பின்மை, சமூகநீதி என்ற இரண்டும் நம் மக்களின் இரு கண்கள் போன்றவையாகும். எந்த ஆட்சி மத்தியில் அமைவதாக இருந்தாலும் இந்த இரு பிரச்சினைகள் என்னும் உரைகல்லில் தீட்டிதான் தீர்மானிக்கப்படவேண்டும்.

இந்த இரண்டும் மக்களின் சமதர்ம சுக வாழ்வுக்கு மிகவும் தேவையானதாகும். இந்தியா என்பது ஒரு நாடல்ல; பல இனங்கள், மொழிகள், பண்பாடுகள், மதங்கள், மதங்களற்ற மக்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டமாகும்.

இத்தகைய ஒரு துணைக் கண்டத்தில் மதச்சார்பின்மை என்ற கோட்பாடுதான் ஆட்சியைப் பொறுத்து அமையவேண்டும். பக்கத்தில் உள்ள பாகிஸ்தானும் சரி, வங்காளதேசமும் இலங்கையும் மதச்சார்பு கொண்ட நாடுகளாகும். அந்தத் தன்மை இந்தியத் துணைக் கண்டத்துக்குப் பொருந்திவரக் கூடியதல்ல.

நீண்ட காலமாக இந்து மதத்தின் அடிப்படையில் வருண பேதத்தைத் திணித்து சமூக ஆதிக்கத்தின் பிடியைத் தம் கையில் வைத்துக்கொண்டிருந்த பார்ப்பனர்கள், அந்த நிலை நீடிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தில் இந்திய துணைக் கண்டத்தை ஒரு இந்து நாடாக மாற்றவேண்டும் என்பதிலே வெறி பிடித்துக் காணப்படுகிறார்கள்.

உலகிலேயே இந்து நாடு என்று இருந்த ஒரே ஒரு நாடான நேபாளமும் மாவோயிஸ்டுகளின் கையில் போய்விட்டது.

இந்து நாடாக இந்தியாவை ஆக்கவேண்டும் என்று கருதுகின்ற அமைப்புகள்தான் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட சங் பரிவார்க் கூட்டமும், பாரதிய ஜனதா கட்சி என்ற அரசியல் கட்சியுமாகும்.

இந்தக் கூட்டத்தின் கைகளில் சில மாநில ஆட்சிகள் இப் பொழுதும் இருக்கின்றன. மத்திய ஆட்சியும் இருந்த துண்டு. இவர்களின் ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்குரிய வாழ்வுரிமை பறிக்கப்பட்டு விட்டது. மதச்சார்பற்றதன்மை வேரோடு வீழ்த்தப்பட்டது. கல்விக் கூடங்கள் காவிகளின் கூடாரங்களாக ஆக்கும் திட்டமும் உரு வாக்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற கோட்பாட்டைக் குழிதோண்டிப் புதைக்கும் தன்மையில் சோதிடம் போன்ற மூட நம்பிக்கைகள் பல்கலைக் கழகங்களின் பாடத் திட்டங்களில் சேர்க்கப்பட்டன. வரலாறுகள் திரித்துக் கூறப்பட்டன. இது பாசிஸ்டுகளின் பார்வையும், வழிமுறையுமாகும்.

அதுவும் குஜராத் என்கிற மாநிலம் பா.ஜ.க. ஆட்சியில் எந்த அளவு உருக்குலைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான முசுலிம்கள் அரசப் பயங்கரவாதக் கண்ணோட்டத்தோடு கொன்று குவிக்கப்பட்டனர் என்பதை எண்ணினால் எந்த விலை கொடுத்தாவது இந்து மதவாத ஆட்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும்.


மதச்சார்பற்ற தன்மையில் தெளிந்த நீரோடை போன்ற வராக விளங்கிய ஜவகர்லால் நேருவின் கொள்ளுப் பேர னான வருண்காந்தி - பாரதிய ஜனதா என்னும் இந்து மத வாதக் கட்சியில் தன்னை ஒப்படைத்துக்கொண்ட நிலை யில், ஒரு பொதுக்கூட்டத்தில் எந்த அளவுக்குக் காட்டு விலங் காண்டியாய் பேசினார் என்பதை வைத்துக் கொண்டே, மதவாதத்தின் ஆபத்தை அறிந்துகொள்ளலாம்.

பாரதிய ஜனதாவில் மூத்த தலைவர்களாக இருக்கக் கூடியவர்களே - இன்னும் சொல்லப்போனால், அக்கட்சி யின் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு முன்னிறுத்தப்பட்டுள்ள அத்வானிதான் - 500 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலிம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியைத் தலைமையேற்று அடித்து நொறுக்கினார் என்றால், வேறு யாரை மனதிற்கொண்டு அக்கட்சியைப்பற்றி மதிப்பிட முடியும்?

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையி லான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதன் மூலமே இந்துத்துவா வாதிகளின் பேராபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும்.

அறிவியல், பகுத்தறிவு, மனிதநேயம் சிந்தனை களைக் கொண்ட திராவிடர் கழகம் இவற்றையெல்லாம் சீர்தூக்கி ஆய்ந்த நிலையில்தான் இந்தியாவுக்குத் தேவை மதச் சார்பின்மை; அதனை நிலைநாட்டக் கூடிய ஆற்றலும், மனப்பான்மையும் கொண்டது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தான் என்ற முடிவுக்கு வந்து இத்தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.

சமுதாயப்புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்திற்கு எத்தகைய ஆட்சி அமையவேண்டும் என்ற பொறுப் புணர்ச்சியும், அந்த வகையில் மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய கடமை உணர்ச்சியும் நிச்சயமாக இருக்கிறது.

அதன் அடிப்படையில்தான் நடக்கவிருக்கும் மக்கள வைத் தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டும் என்று கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. தீர்மானத்தை ஊன்றிப் படித்து உண்மையை உணர்ந்து செயல்படவேண்டும் என்று தமிழக வாக்காளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

--------------------நன்றி;-"விடுதலை" தலையங்கம்

5 comments:

Unknown said...

சில வருடங்கள் முன் கி. வீரமணி அவர்கள் ஜெயலிதா உடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? நீங்கள் இறைவன் இல்லை என்று சொல்வது இந்துக்கள் மற்றும் அன்றி இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்துவர்களுக்கும் பொருந்துமா?

கரிகாலன் said...

எந்த விலை கொடுத்தாவது இந்தியாவில் மதச்சார்பின்மையையும், சமூகநீதியையும் காக்கவேண்டும். இந்த உயர்ந்த இலட்சியத்தை அடைய இந்திய அரசு 35 இலட்சம் ஈழத்தமிழர்களை அணுகுண்டு வீசி கொன்றாலும் பராவியல்லை...

பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம் ஏன் ஒரே நாடாக இருக்க வேண்டும்? மன்னிக்கவும், பெரியார் தொண்டர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கக்கூடாது என்பதை மறந்து விட்டேன்!

தமிழ்நாட்டை மட்டும் ஆட்சி செய்தால் “அலைக்கற்றை” ஒதுக்குவதில் உங்களுடைய இளவலுக்கு 60 ஆயிரம் கோடி கிடைக்குமா?

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை என்றால் அனைத்து மதக் கடவுளும் இல்லை என்று தான் பொருள்.
ஒரு முறை இந்த வலைப் பதிவில் உள்ல பதிவுகளை ஒரு முறை படித்துவிடவும். மண்டையன். முடிந்தால் உங்கள் பெயரை மாற்றவும்.
நன்றி

இரா.சுகுமாரன் said...

நல்ல தோழர் "தமிழ் ஓவியா" வீரமணிக்கும் வக்காலத்து வாங்க வேண்டியுள்ளது பாருங்கள்.

அதான் கட்சியில் இருந்தால் அந்த கட்சிகள் செய்யும் தவறுகளையும் நாம் நியாயப்படுத்த வேண்டியிருக்கு பாருங்கள்.

என்னவோ தோழா!!

கருணாநிதியுடன் ஆதரவு என்பது இப்போதைக்கு சரியில்லை.

அப்போ செயலலிதா

அதுவும் தான் இவர்கள் எப்போதும் தமிழின விரோதிகள் தான்.

இவர்களுக்கு எப்போதும் வக்காலாத்து வாங்குவது சரியல்ல.

தமிழ் ஓவியா said...

என்னைப்பற்றிய தங்களின் மதிப்பீட்டுக்கு மிக்க நன்றி தோழர்.இரா.சுகுமாரன்.

ஜெயலலிதா பி.ஜே.பி யுடன் கூட்டணி வைத்திருந்த போது வீரமணி எதிர்த்தார்.

அதே தவறை அதாவது பி.ஜே.பி யுடன் கலைஞர் கூட்டணி வைத்த போது வீரமணி எதிர்த்தார்.

வீரமணி எப்போதும் கொள்கை அடிப்படையில் தான் முடிவு எடுக்கிறார்.

இப்போது கலைஞரை ஆதரிப்பதும் அந்த கொள்கை அடிப்படையில் தான்.


காங்கிரசுடன் கூட்டணி வைத்தது சரியில்லை என்பது தங்களின் நிலைப்பாடு. அது சரியா தவறா? என்று விவாதிப்போம்.

அதற்கு முன் உங்கள் சிந்தனைக்காக கீழ் கண்ட கருத்தை முன் வைக்கிரேன். நடு நிலையுடன் சிந்திக்க வேண்டுகிரேன்.

"ஈழப்பிரச்சினையில் கலைஞர் அவர்கள் முதல்வராக இருக்கும் போதுதான் இவ்வளவு ஆதரவுச் சக்திகளை உருவாக்க முடிந்திருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஈழப்பிரச்சினை பற்றி பொதுக் கூட்டத்தில் கூட பேச முடியாதநிலை எல்லாம் இருந்ததே. ஏன் இப்போது கூட சு.ப. தமிழ்செல்வனுக்காக கலைஞர் இரங்கல் கவிதை எழுதியபோது நிகழ்ந்த நிகழ்வுகளை ஒரு கணம் சிந்தியுங்கள்

காங்கிரசை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் மாற்றுக் கட்சியை குறிப்பாக ஜெயலலிதா அங்கம் வகிக்கும் கட்சிகளை ஆதரிப்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்."

வீரமணி அவர்களும் தி.க.வும் அன்றிலிருந்து இன்று வரை கொள்கைப் பார்வையில்தான் நடந்து வருகிறது என்பது எனது தாழ்மையான கருத்து.

விவாதிப்போம் தோழர்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர்.