Search This Blog

1.4.09

"கொள்கையைச் செயல்படுத்த பதவி ஒரு வாய்ப்பு"




"கொள்கையைச் செயல்படுத்த பதவி ஒரு வாய்ப்பு"

அண்ணா கருத்தைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் பேச்சு


பதவி என்பது - தான் ஏற்றுக் கொண்ட கொள்கையைச் செயல்படுத்துவதற்குரிய ஒருவாய்ப்பு என்று கருதியவர் அண்ணா என்று திராவிடர்கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னைப்பல்கலைக் கழகத்தில் - ஈரோடு முதல் காஞ்சி வரை என்ற தலைப்பில் அண்ணா நினைவுநாளில் 3.2.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

எந்தக் குறிப்பு எழுத வேண்டுமானாலும், அந்த தபால் உரையின் உட்பகுதியை எழுதுவ தற்குப் பயன்படுத்துவார் அய்யா அவர்கள்.

அதேபோல அண்ணா அவர்களும், வெள்ளைத் தாளில் தான் எழுதுவார்கள் என்பதல்ல. ஒரு பக்கத்திலே ஏதாவது எழுதப் பட்ட தாளாக இருந்தாலும் அதை ஒரு கோடு போட்டு அடித்துவிட்டு, பக்கம் பக்கமாக எழுதி அவர்போட்டுக் கொண்டேயிருப்பார்.


ஆகவே அப்படிப்பட்ட அவர் அய்யா அவர்களைப் போலவே ரொம்ப எளிமையானவர்.

தலையைக் கூட ஒழுங்காக வாராதவர். தனக்கு நல்ல உடை உடுத்த வேண்டும் அல்லது தலையை நன்றாக சீவி வாரிக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதவர்.

ஆனால் அவர் முதலமைச்சரான பிற்பாடு வெளியிலே பலபேரைச் சந்திக்க வேண்டும். குறிப் பிட்ட நேரத்திற்குச் சென்று சந்திக்க வேண்டும். காலையிலே சந்திக்க வேண்டும். அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். இதை எல்லாம் பார்த்தீர்களேயானால் அவருடைய இயல்பையே மாற்றி விடக் கூடிய அளவிற்குத்தான் வந்தது.

அதனால் தான் அவர் ஒரு முறை சொல்லும் பொழுது சூழ்நிலைக் கைதியானேன் என்று சொன்னார்.

முதலமைச்சர் அண்ணா, பதவியை எவ்வளவு சாதாரணமாக நினைத்தார் - பதவியை கொள் கையை நிறைவேற்றச் செய்வதற்கு ஒரு வாய்ப்பு என்று கருதிய பெருமை அண்ணா அவர்களுக்கு உண்டு.

அண்ணா அவர்கள் முதலமைச்சரான நிலையிலே அண்ணா அவர்கள் ஆற்றிய உரையைக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இன்னும் என்னுடைய காதுகளிலே ஒலித்துக் கொண்டிக் கிறது. ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. நம்முடைய பேராசிரியர் அவர்கள் இங்கே சுட்டிக் காட்டியதைப்போல, மருத்துவமனையிலே இருந்து வந்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டுகின்ற அந்த நிகழ்ச்சியிலே அவர்கள் கலந்து கொண்டு சொல்லும் பொழுது என்னுடைய தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கூடிய இந்த நேரத்திலே இந்த விழா விலே கலந்து கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் மறுத்தார்கள். ஓய்வெடுக்க வேண்டும் போகக் கூடாது என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

ஆனால் என்னுடைய தாய் நாட்டிற்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்டக்கூடிய இந்த நிகழ்ச் சிக்கு - இந்த விழாவிற்கு நான் வராமல் இருப்பதைவிட கொடுமை வேறு இருக்க முடியாது, இந்த விழாவிற்கு வராமல் இருந்து இந்த உடல் இருந்து என்ன பயன்? என்று அண்ணா அவர் களே சொன்னார்கள்.


அண்ணா அவர்கள் இந்த வார்த்தையைச் சொல்லிவிட்டு ஒரு அழகான விளக்கத்தைச் சொன்னார்கள். அதிலே அண்ணாவினுடைய செயல்கள், பெரியாருடைய தத்துவங்களை உள்ளடக்கியதாக இருக் கக்கூடியது என்பது கவனிக்கத்தக்கது.

நான் மருத்துவமனையிலே இருந்த பொழுது கேள்விப்பட்டேன். நாங்கள் ஆட்சிக்கு வந்து முப் பெரும் சாதனைகளை நாங்கள் செய்திருக்கின்றோம் ஒன்று. சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம் கொடுத்தது.

இரண்டு இங்கே பேராசிரியர் ரெங்கசாமி அவர்கள் சொன்னார்களே - தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தது.

மூன்றாவது இரு மொழிக் கொள்கை. தமிழ் - ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை. இந்த மூன்று கொள்கை களையும் ஓராண்டு காலத்திலே நாங்கள் சாதித்தோம்.

நாங்கள் இவைகளைச் செய்திருக்கிறோம் என்பதிலே எனக்கு மகிழ்ச்சி. ஆனால் அதே நேரத்தில் நான் கேள்விப்பட்டேன். எங்களுடைய ஆட்சியை நிலைக்க விடக்கூடாதென்று நினைக்கிறார்கள் பலர்.

அதற்கு வேண்டிய முயற்சிகள் அப்பொழுதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன- இப்பொழுதல்ல. இது ஒரு தொடர்கதை. எனவே அப்பொழுது முயற்சி செய்தவர்கள் இப்பொழுதும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

பாத்திரங்கள் மாறியிருக்கின்றன. செயல்கள் மாறவில்லை. வேறொன்றும் இல்லை. எனவே ஒரு நாடகத்திலே பாத்திரங்கள் மாறுவதுண்டு - கதை அதே போல இருக்கும். அது மாதிரி தான் இப்பொழுது அரசியல் கூட இருந்து கொண்டிருக்கக் கூடிய நிலை.

இதைச் சொல்லி விட்டு அண்ணா அவர்கள் சொன்னார்கள். அவருக்கே உரிய ஆழமான அரசியல் தத்துவத்தைச் சொன்னார்.

இதைச் செய்ய முடியுமா? என்று நான் சவால் விட்டுக் கேட்க மாட்டேன்.

செய்ய முடியும்! அதிகாரமிருக்கிறது. டெல்லியை அவர்கள் மனதிலே வைத்துக்கொண்டு சொன்னார்கள். செய்ய முடியும் அதிகாரமிருக்கிறது. ஆனால் எங்களை இந்த தி.மு.க ஆட்சியை மாற்றி விட்டு, வேறு யாராவது வந்து அமருகின்ற நேரத்திலே ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த வுடனே உங்களுக்கு ஒரு கோபம் வரும். அண்ணாதுரை ஆட்சியில் அல்லவா? இதை எல்லாம் செய்தார். சுயமரியாதைத் திருமணம் தாய்திரு நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர். அதே தமிழ், ஆங்கிலம் மட்டும் என்ற இருமொழிக் கொள்கை இவைகளை எல்லாம் செய்தார்.

இவைகளை எல்லாம் மாற்றிவிட வேண்டாமா? என்று நினைக்கின்ற பொழுது அடுத்து ஒரு சிந்தனை உங்களை அறியாமலேயே உங்களை அழுத்தம். அண்ணாதுரை செய்த மாற்றங் களை செய்தால் நம்மால் நீடிக்க முடியுமா? என்ற பயம் ஒரு அச்சம் உங்களை உலுக்கும் ஆட்சிக்கு வருகின்றவர்கள் யாராக இருந்தாலும் அந்த அச்சம் உங்களுக்கு எவ்வளவு காலத்திற்கு இருக்கிறதோ அவ்வளவு காலமும் இந்த நாட்டை இந்த அண்ணாதுரை தான் ஆளுகிறான் என்று பொருள் என்று நேராகச் சொன்னார் அண்ணா அவர்கள்.

இது ஒரு அரசியல் தத்துவம் இது அண்ணா என்ற ஒரு தனிமனிதருடைய தத்துவம் அல்ல.

எனவே இது ஒரு சமுதாயப் புரட்சி இயக்கம். இதே கருத்து சாதி ஒழிப்பு சட்டத்திற்கும் வரும். அனைத்து சாதியினர் அர்ச்சகர் என்ற சட்டத்தைக் கலைஞர் அவர்கள் கொண்டு வந் தார்கள் இதை மாற்றி விட்டு இன்னொரு ஆட்சி செய்யலாம் என்கின்ற துணிவு வருமா?


கட்சிகள் மாறலாம். ஆட்சிகள் மாறும் - சனநாயகத்திலே - அது இயற்கையும் கூட . ஆனால் இந்தத் தத்துவத்திலே கை வைக்கக் கூடிய துணிவு யாருக்காவது உண்டா? இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு வரக் கூடியவர்கள் என்று சொன்னால் கூட மாற்ற முடியாது.

காரணம் அங்கேதான் பெரியார் வெற்றி பெற்றார். அண்ணா வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்று அதற்குப் பொருள். ஆகவே தோன் ரொம்ப ஆழமாக சிந்திக்க வேண்டிய மிகப்பெரிய ஒரு வெற்றியை அவர்கள் குவித்திருக்கின்றார்கள். இங்கே சொன்னார்களே மகிழ்ச்சியோடு. இன்றைக்கு அண்ணா நினைவு நாளிலே அண்ணா அவர்களுடைய கொள்கை வெற்றிகள் மலருகின்ற நேரத்திலே நான் இறுதியிலே இதைப் பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

பேராசிரியர் அரங்கசாமி அவர்கள் எடுத்தவுடனே அதை ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள். தில்லை வாழ் அந்தணர்க்கும் அடியார்க்கும் அடியார் என்று சொல்லி சிதம்பரம் நடராஜன் கோவில் மூவா யிரம் தீட்சதர்களுக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடினார்கள்.

பராந்தக சோழன் பொனேடு வேய்ந்தான். அதுவும் நம்முடைய அரசர்கள் சாதாரண ஓட்டு போடவில்லை. பென்னாலேயே ஓட்டு போட்டிருக்கின்றான். இந்த அரசர்கள் எல்லாம் எவ்வளவு புத்திசாலி களாக இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.

அந்த நடராசரைப் பற்றி அண்ணா அவர்கள் எவ்வளவு அற்புதமாகச் சிந்தித்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில் அண்ணா அவர்களுடைய நினைவு நாளான இன்றைக்கு சொல்வது பொருத்தம்.

நேற்று ஒரு அற்புதமான செயல் நடை பெற்றிருக்கின்றது. அண்ணா அவர்களுடைய கொள்கை வெற்றி பெற்றிருக்கின்றது.

சிதம்பரம் நடராசர் கோவில் 150 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு நம்முடைய அரசாங்கத்தினுடைய பொறுப்பிலே இருக்கிறது.

யார் யாரோ சிண்டு போட்டிருக்கின்றார்கள். முண்டியிருக்கின்றார்கள். ஆனால் சிண்டும், முண்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. (பலத்த கைத்தட்டல்) என்று சொல்லக்கூடிய அள விற்கு, இன்றைக்கு இந்த வாய்ப்பு ஏற்பட்டிருக் கின்றது. முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் - முருகப் பெருமான் என் றெல்லாம் பாடுவாரே தமிழ்த் திரு. முருக இருபானந்தவாரியார் அவர்கள். அவரை உள்ளே தாக்கியவர்கள் தீட்சிதர்கள். எவ்வளவு நல்ல காரியங்கள் நடந்திருக்கின்றன? நடராசர் கோவில் தனிமையில் இருந்த போது என்பதற்கு இது தான் அடையாளம்.

வர்ணாசிரம நோட்டீஸ் கொடுக்கப்பட்ட தற்காக ஏன் கலைஞர் அவர்களையே தாக்கப் படக்கூடிய அளவுக்கு சூழ்நிலைகள் ஏற்பட்டன. முரசொலி ஏடுகையே டாகக் கொடுக்கப்பட்ட பொழுது அத்தகைய சூழ் நிலை ஏற்பட்டது.

நாங்கள் மாணவப் பருவத்திலே கூட்டம் போட்ட பொழுது அங்கே இருந்திருக்கின்றோம்.

திரு.முருககிருபானந்த வாரியார் பக்தி உடையவர். அவர் நாத்திகரல்ல. வாரியாரை விட தமிழுக்கு சேவை செய்தவர் வேறுயாரும் இருக்க முடியாது.

இன்னும் கேட்டால் எத்தனை கோவில்களுக்கு அவர் திருப்பணி நடத்தியிருப்பார். எத்தனை கோபுரங்களை அவர் நிமிர்த்தி வைத்திருப்பார்.

அப்பேர்பட்டவர் உள்ளே போய் தமிழ் பேசியதற்காக விரட்டப் பட்டார் என்று நினைக்கின்ற நேரத்தில் வரலாறு இன்றைக்குப் பழி தீர்த்துக் கொள்ளுகின்ற முறையிலே இது வரை ஆதிக்கம் செலுத்துகிறவர்களுக்கு - நியாய அடி விழுந்தது.

சிதம்பரம் நடராசர் கோவில் தீட்சிதர்களுக்கு உரியதல்ல அது பொது கோயில் அது அரசாங் கத்தின் கீழ் வரக்கூடிய கோவில் என்று தீர்ப்புக் கொடுத்த அந்த நீதிபதி இருக்கின்ற திசை நோக்கி நாம் எல்லோரும் நன்றியைச் செலுத்த வேண்டும். (பலத்த கைத்தட்டல்)

பெண்களுக்குத்தான் அத்தகைய துணிச்சல் உண்டு. ஆண்களுக்குக் கூட கொஞ்சம் தடுமாற் றம் ஏற்படும். பெண்கள் முடிவு செய்துவிட்டால் அதிலே எப்பொழுதுமே உறுதியாக இருப்பார்கள் என்பதற்கு அடையாளம் தான். வழிகாட்டியாக இருக்கக் கூடிய ஒரு முக்கியமான வரலாற்றுச் சிறப்புக்குரிய தீர்ப்பு. மேல் அப்பீல் போவார்களா? அங்கே போவார்களா?

-------------------தொடரும்...."விடுதலை" 1-4-2009

0 comments: