Search This Blog

13.3.09

பெண்கள் முன்னேற்றமடைய விவாகரத்து அவசியம் தேவையா?



கல்யாண விடுதலை

ஆண், பெண் கல்யாண விஷயத்தில் அதாவது, புருஷன் - மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டில் உள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாணத் தத்துவம் எல்லாம் சுருக்கமாய்ப் பார்த்தால், பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர, வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ்வடிமைத்தனத்தை மறைத்துப் பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவைகள் செய்யப்படுவதோடு, அவ்விதக் கல்யாணத்திற்குத் தெய்வீகக் கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்ற போலிப் பெயரையும் கொடுத்துப் பெண்களை வஞ்சிக்கின்றோம்.

பொதுவாகக் கவனித்தால், நமது நாடு மாத்திரமல்லாமல், உலகத்திலேயே அநேகமாய்க் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிகக் கொடுமையாயும், இயற்கைக்கு விரோதமான நிர்ப்பந்தமாயும் நடத்தப்படுகிறார்கள் என்பதையும் நடுநிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது. ஆனால், நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும்விட மிக்க மோசமாகவே இருந்து வருகிறது.

இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலை பெற்று வருமானால், சொற்ப காலத்திற்குள்ளாக அதாவது, ஒரு அரை நூற்றாண்டுக்குள்ளாக கல்யாணச் சடங்கும், சொந்தமும் உலகத்தில் அநேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாய்ச் சொல்லலாம். இதை அறிந்தே மற்ற நாடுகளில் அறிஞர்கள் பெண்கள் கொடுமையை நாளுக்கு நாள் தளர்த்திக் கொண்டு வருகின்றார்கள். நம் நாடு மாத்திரம் குரங்குப் பிடியாய்ப் பழைய கருப்பனாகவே இருந்து வருகின்றது. ஆதலால் தலைகீழ் முறையான பெண்கள் கிளர்ச்சி ஒன்று நமது நாட்டில்தான் அவசரமாய் ஏற்பட வேண்டியிருக்கின்றது.

செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில், பெண்களுக்கும், ஆண்களுக்கும் கல்யாண விடுதலை செய்து கொள்ள உரிமையிருக்க வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் செய்யப்பட்டவுடனும், பின்னர் சென்னையில் கூடிய பெண்கள் மாநாட்டில் கல்யாணத்துக்கு ஒரு சட்டம் வேண்டுமென்று தீர்மானித்தவுடனும் உலகமே முழுகி விட்டதாகச் சீர்திருத்தவாதிகளென்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் உள்படப் பலர் கூக்குரலிட்டார்கள். ஆனால், செங்கற்பட்டுத் தீர்மானத்திற்குப் பிறகு வெளிநாட்டிலும், இந்தியாவிலும் பல இடங்களில் கல்யாண ரத்துச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ருசியாவில் கல்யாணமே தினசரி ஒப்பந்தம் போல் பாவிக்கப்பட்டு வருகின்றது. ஜெர்மனியில் புருஷனுக்கும் பெண் சாதிக்கும் இஷ்டமில்லையானால் உடனே காரணம் சொல்லாமலே கல்யாணத்தை ரத்து செய்து கொள்ளலாமென்பதாகச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். சமீபத்தில் பரோடா அரசாங்கத்தாரும் கல்யாண ரத்துக்கு சட்டசபையில் சட்டம் நிறைவேற்றி விட்டார்கள். மற்றும் பல மேல்நாடுகளிலும் இவ்விதச் சட்டங்கள் இருந்தே வருகின்றன. நமது நாட்டில் மாத்திரம் இவ்விஷயமாய் சட்டம் செய்வதைப் பற்றிக் கவலைப்படாமலிருந்து வருகின்றதானது மிகவும் கவலையளிக்கும் காரியமென்றே சொல்ல வேண்டும். சாதாரணமாகத் தென்னாட்டில் அநேகப் புருஷர்கள் தங்களது பெண்சாதிகளின் நடவடிக்கைகளில் சந்தேகங் கொண்டு கொலைகள் செய்ததாகத் தினம் பத்திரிகைகள் மூலம் செய்திகள் வெளியாவதைப் பார்த்து வருகின்றோம்.

சில சமயங்களில் ஒரு பெண் சாதியின் நடவடிக்கையில் சந்தேகத்திற்காகப் பல கொலைகள் நடந்ததாகவும் பார்க்கின்றோம். தெய்வீக சம்பந்தமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன்? என்பதைப்பற்றித் தெய்வீகத்தில் பிடிவாதமுள்ள எவருக்குமே யோசிக்கப் புத்தியில்லை. பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவர்களுக்கும் மனிதத் தன்மையும், மனித உரிமையும், சுயமரியாதையும் ஏற்பட வேண்டுமானால் - ஆண்களுக்குத் திருப்தியும் இன்பமும், உண்மையான காதலும் ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால், கல்யாண ரத்திற்கு இடம் அளிக்கப்பட வேண்டியது முக்கியமான காரியமாகும். அப்படி இல்லாதவரை ஆண் பெண் இருவருக்கும் உண்மை இன்பத்திற்கும், சுதந்திர வாழ்க்கைக்கும் இடமே இல்லாமல் போய்விடும்.

நமது சீர்திருத்தவாதிகள் பலர், ஒரு மனிதன் இரண்டு பெண்டாட்டிகளைக் கட்டிக் கொள்வதைப்பற்றி மாத்திரம் குடிமுழுகிப் போய்விட்டதாகக் கூச்சல் போடுகின்றார்கள். இவர்கள் எதை உத்தேசித்து இப்படிக் கூச்சல் போடுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. மதத்தை உத்தேசித்தா? அல்லது பகுத்தறிவை உத்தேசித்தா? என்பது நமக்குச் சிறிதும் விளங்கவில்லை. அல்லது மனித ஒழுக்கத்தை உத்தேசித்து இப்படிப் பேசுகின்றார்களா என்பதும் விளங்கவில்லை. இதைப்பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.

நிற்க, ஒரு பெண்சாதிக்குமேல் மனிதன் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்று சொல்லுபவர்களை நாம் ஒன்று கேட்கிறோம் -அதென்னவெனில், கல்யாணம் சடங்குக்காகவா? என்று கேட்பதோடு இஷ்டமில்லாத, ஒற்றுமைக்கு இசையாத, கலவிக்கு உதவாத ஒரு பெண் எந்தக் காரணத்தினாலோ ஒருவனுக்குப் பெண்சாதியாக நேர்ந்து விட்டால் அப்போது புருஷனுடைய கடமை என்ன? என்று கேட்கின்றோம். அதுபோலவே, ஒரு பெண்ணுக்கும் அப்படிப்பட்ட புருஷன் அமைந்து விட்டால் அப்பெண்ணின் கதி என்ன என்றுதான் கேட்கின்றோம். கல்யாணம் என்பது தெய்வீகமாகவோ, பிரிக்க முடியாததாகவோ உண்மையில் இருக்குமாயின் அதில் இவ்விதக் குறைகளும் குற்றங்களும் ஏற்பட முடியுமா? என்பதை யோசித்தாலே, தெய்வீகம் என்பது முழுப் புரட்டு என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் புரியாமற் போகாது.

ஆகவே, நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பது போன்ற கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின், கல்யாண மறுப்புப் பிரச்சாரமும், கல்யாணம் ஆன புருஷர்களுக்கும் பெண்களுக்கும் பலதாரப் பிரச்சாரமும்தான் செய்ய வேண்டியது வரும். அன்றியும், இதுசமயம் ஒற்றுமைக்கும் திருப்திக்கும் இன்பத்திற்கும் உதவாத பெண்களுடைய புருஷர்கள் கண்டிப்பாக தைரியமாக முன் வந்து தங்களுக்கு இஷ்டமான பெண்களைத் திரும்பவும் மணம் செய்து கொள்ளத் துணிய வேண்டும் என்றும் தூண்டுகிறோம். ஏனெனில், அப்படி ஏற்பட்டால்தான் தெய்வீகம் என்கின்ற பெயரைச் சொல்லிக் கொண்டு புருஷர்களுக்கும் பெண்களுக்கும் சம்மதமும், முன்பின் அறிமுகமும் இல்லாமல் செய்யப்பட்டு வரும் கல்யாணங்களினால் மணமக்களடையும் துன்பமும் ஒழிபட முடியும். மனிதன் ஏன் பிறந்தானோ, ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். ஆதலால், அது ஒருபுறமிருந்தாலும் மனிதன் இருக்கும்வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும். இதற்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கியச் சாதனமாகும்.


அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட தொல்லைக்கும் துன்பத்திற்குமிடமான இடையூறு இருக்குமானால், அதை முதலில் களைந்தெறிய வேண்டியது ஆறறிவுள்ள மனிதனின் முதல் கடமையாகும். மனித ஜீவகாருண்யத்திற்கும், திருப்திக்கும், இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதை முதலில் செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ கல்யாணம் என்பதாக ஒன்றைச் செய்து கொண்டோமே, செய்தாய்விட்டதே, அது எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதானே இருக்க வேண்டும் என்று கருதி, துன்பத்தையும் அதிருப்தியையும் அனுபவித்துக் கொண்டிருப்பதும் அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்வதும், மனிதத் தன்மையும், சுயமரியாதையுமற்ற காரியமாகுமேயல்லாமல் ஒரு நாளும் அறிவுடைமையாகாது என்பதே நமது அபிப்பிராயமாகும்.

----------- 17-8-1930 "குடிஅரசு" இதழில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் - நூல்:- "பெரியார் களஞ்சியம்" அய்ந்தாம் தொகுதி -பக்கம் 106-110

4 comments:

Unknown said...

//தென்னாட்டில் அநேகப் புருஷர்கள் தங்களது பெண்சாதிகளின் நடவடிக்கைகளில் சந்தேகங் கொண்டு கொலைகள் செய்ததாகத் தினம் பத்திரிகைகள் மூலம் செய்திகள் வெளியாவதைப் பார்த்து வருகின்றோம்.

சில சமயங்களில் ஒரு பெண் சாதியின் நடவடிக்கையில் சந்தேகத்திற்காகப் பல கொலைகள் நடந்ததாகவும் பார்க்கின்றோம். தெய்வீக சம்பந்தமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன்? என்பதைப்பற்றித் தெய்வீகத்தில் பிடிவாதமுள்ள எவருக்குமே யோசிக்கப் புத்தியில்லை.//


பெரியாரின் கேட்ட கேள்வி பொட்டில் அறைந்ததுபோல் சரியான கேள்விதான்.

நானும் இதை வழிமொழிகிறேன்

"பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவர்களுக்கும் மனிதத் தன்மையும், மனித உரிமையும், சுயமரியாதையும் ஏற்பட வேண்டுமானால் - ஆண்களுக்குத் திருப்தியும் இன்பமும், உண்மையான காதலும் ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால், கல்யாண ரத்திற்கு இடம் அளிக்கப்பட வேண்டியது முக்கியமான காரியமாகும். அப்படி இல்லாதவரை ஆண் பெண் இருவருக்கும் உண்மை இன்பத்திற்கும், சுதந்திர வாழ்க்கைக்கும் இடமே இல்லாமல் போய்விடும்.//

மேற்கண்ட கொலைகளைத் தவிர்க்க இதுதான் சரியான ஆலோசனை, சரியான வழி.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு

Anonymous said...

http://blogisdummy.blogspot.in/2012/06/simple-html-code-for-icon-type.html

Anonymous said...

http://blogisdummy.blogspot.in/2012/06/simple-html-code-for-icon-type.html