Search This Blog

3.3.09

பெரியார் நூல்கள் நாட்டுடைமை: யாரும் கவலைப்படத் தேவையில்லை








தந்தை பெரியார் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதித் தாருங்கள். தினமணி வெளியிடுகிறதா என்று பார்ப்போம். அதே நேரத்தில் பெரியார் கண்ட இயக்கத்தையும் தந்தை பெரியாரால் அடையாளங் காட்டப்பட்ட தலைவரைக் குறித்தும் வேண்டுமென்றே கெட்ட நோக்கத்தோடு யாரேனும் ஒருவர் கட்டுரை எழுதினால்,அதனை எடுப்பாக வெளியிட தினமணி தயாராக இருக்கிறது.

பார்ப்பனர்களைப்பற்றியும், பார்ப்பனர்களுக்குத் துணை போகக் கூடிய நபர்களைப் பற்றியும் இதன் மூலம் நன்றாகவே அடையாளம் காண முடியும்.

திரு எஸ்.வி. ராஜதுரைஎன்பார் எழுதிய கட்டுரை இந்த வகையில்தான் தினமணியில் (26.2.2009) வெளியிடப்பட்டுள்ளது.

பெரியார்: நாட்டுடைமையாக்குதலின் அரசியல் - என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. தலைப்பே குழப்பமாக உள்ளது; உள்ளடக்கத்தைக் கேட்கவும் வேண்டுமா?

பெரியாரின் பேச்சுகள் காலவரிசைப்படி வெளியிடப்பட வேண்டுமா? தலைப்பு வாரியாக வெளியிடப்பட வேண்டுமா என்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

காலவரிசைப்படி என்று கூறி ஆயிரம் ஆயிரம் பக்கங்களில் பெரிய பெரிய தொகுதிகளாக அதிக விலை போட்டு வெளியிட்டால் அது கண்டிப்பாக அலமாரியில் தான் தூங்கிக் கொண்டிருக்கும்!

ஏதோ அறிவு ஜீவிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேண்டுமானால் பயன்படக் கூடும். ஆனால் வெகு மக்களுக்குத் தந்தை பெரியார் அவர்களின் கருத்து போய்ச் சேராது.

தலைப்பு வாரியாகப் போட்டு, 300 பக்கங்களுக்கு மிகைப்படாமல் மலிவு விலையில் வெளியிடும்போதுதான் கடைகோடி பொது மக்களுக்கும் போய்ச் சேர முடியும்.

திராவிடர் கழகம், பெரியார் கொள்கைகள் மக்களுக்குப் போய் சேருவதைப்பற்றி கவலை கொண்டுள்ள இயக்கமாகும். வேறு சிலருக்கோ பெரியார் கொள்கை பொது மக்களுக்குப் போய் சேர்ந்துவிடக் கூடாது; அது அலமாரிகளில் முடக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது அல்லது போதிய புரிதல் இல்லாமல் அப்படி கூறிக் கொண்டிருக்கின்றனர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரியாரைப்பற்றி கவலைப்படுவதுபோல காட்டிக் கொள்ளும் இவர்கள், தந்தை பெரியார் காலத்தில் உயிருடன் உலவவில்லையா? அந்தக் கால கட்டத்தில் காதொடிந்த ஊசி முனை அளவுக்காவது உதவிகரமாக இருந்தவர்கள் தானா? இப்பொழுது என்ன திடீர் பக்தி பீறிட்டுக் கிளம்புகிறது என்று தெரியவில்லை.

அதுவும் இவர் யார் என்றால், பெரியார் திடலில் உள்ள நூலகம் - ஆய்வகத்தை முழுமையாகப் பயன்படுத்தி நூல் எழுதி முடித்து, விற்பனையாக்கி அந்த நூலகத்தையே குறைகூறும், தலை சிறந்த நன்றிக்குரிய பெரும்பண்பு படைத்தவர்! இவருக்குத் தோழி யார் என்றால் ஒரு பார்ப்பன அம்மையார். இதுதான் இவர் பெரியாரின் கொள்கையை உள்வாங்கிக் கொண்ட தன்மையின் இலட்சணம்!

பெரியார் கொள்கையை அது பிறந்தகத்திடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று அந்தப் பார்ப்பன அம்மையார் எழுதுகிறார்.

பெரியார் கொள்கைக்காக அந்த அம்மையார் அரும்பாடுபட்டு உழைத்திருக்கின்றார் என்று நம்புவோமாக! நாளைக்கே பெரியாரின் கொள்கைகளை மீட்டு பட்டிதொட்டி எங்கும் பெரியார் கொள்கையைப் பரப்பிட அபாரத் திட்டங்களையும் தூக்க முடியாமல் கழுத்து வலிக்க சுமந்து கொண்டு நிற்கிறார் என்று கூட நம்புவோமாக! போராட்டங்களை முன்னெடுத்து சிறைச்சாலைக்குக்கூட சிரித்தமுகத்துடன் கிளம்ப இவர்கள் தயாராக இருப்பதாகவும் நம்புவோமாக!

எப்படிப்பட்டவர்கள் எல்லாம் பெரியார் கண்ட இயக்கத்தையும், அதன் தலைவரையும் விமர்சனம் செய்யப் புறப்பட்டு இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

பெரியார் எழுத்துகளை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

இவர்கள் எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள்? முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் அதன் தலைவர் வீரமணி எப்படியெல்லாம் செயல்பட்டு வருகிறார் என்பதைத் தெளிவாகச் சொன்ன பிறகும் எதற்கு இவர்களுக்கு இந்த வீண் வேலை?

2008 பிப்ரவரி 18-ஆம் நாள் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80-ஆம் ஆண்டு விழாவில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களே - திராவிடர் கழகம் பெரியார் நூல்களை - கருத்துகளை வெளியிட்டு வருவது குறித்து தெளிவாகக் கூறினாரே!

உலகத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப்பற்றியும் சொல்ல வேண்டுமேயானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களை சேகரித்து வைத்து, அதை எதிர்காலத்துக்குத் தரக்கூடிய இந்த ஆற்றல் நம்முடைய வீரமணியாருக்கு இருப்பதைப் போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் - இதற்காகப் பாடம் படிக்க வேண்டும் - என்று கூறி விட்டாரே!

இவ்வளவு தெளிவாக இருக்கக்கூடிய ஒரு முதலமைச்சரிடம் இவர்கள் வேண்டுகோள் வைப்பது - அவர்களின் அறியாமையைத்தான் வெளிப்படுத்தும்.

கால வரிசை கால வரிசை என்று கிளிப்பிள்ளைபோல பாடம் படிக்கிறார்களே, கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி தீண்டாமை போன்ற தலைப்பில் வெளியிடப்படும் தொகுதிகளில் அடங்கியுள்ள கட்டுரைகள் எல்லாமே கால வரிசைப்படி தொகுக்கப்பட்டவைதான் என்பதை மறைக்கப் பார்ப்பது - ஏன்?

இன்னொன்றையும் சொல்கிறார்கள் - பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் ஆகிய அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும்; அதுவும் காலவரிசைப்படியான தொகுப்புகளாக என்பதுதானேயன்றி பெரியாரின் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்பதல்ல - என்று எழுதுகிறார் திருவாளர் ராஜதுரை. இந்த வகையைச் சார்ந்தவர்களுக்குள்ளேயே ஏகப்பட்ட முரண்பாடா?

பெரியாரின் நூல்களில் அவரின் எழுத்துகள்; பேச்சுகள் இல்லையா? இதுவரை 31 தொகுதிகளை வெளியிட்டுள்ளோமே எல்லாம் பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு இருக்கவில்லையா?

எதையோ நினைத்துக் கொண்டு - அவலை நினைத்து உரலை இடித்த கதையாக கதைக்கிறார்களே தவிர அவற்றில் நியாயமோ, தர்க்கமோ, கொள்கை நோக்கோ, உண்மையோ அறவே கிடையாது.

பெரியார் என்ற முழுப் புரட்சியாளரின் ஒவ்வொரு எழுத்தும் மிக முக்கியமானவை, ஒரு அரைப்புள்ளிகூட முக்கியத்துவம் வாய்ந்தது.

தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்த இன எதிரிகளோ நாணயமற்றவர்கள்; எதையும் திரித்து வெளியிடும் திரிநூலர்கள்; அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க சிலர் புறப்பட்டுள்ளார்களோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

சேலத்தில் 1971-இல் தந்தை பெரியார் அவர்களால் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பெண்ணுரிமைபற்றிய புரட்சிகரமான தீர்மானத்தை இந்து தினமணி துக்ளக் உட்பட எப்படியெல்லாம் திரித்து வெளியிட்டன!

தந்தை பெரியார் உயிரோடு இருக்கும்போதே இந்த வேலையைச் செய்தவர்கள், பெரியாரின் எழுத்துகளை, பேச்சுகளை யாரும் வெளியிடலாம் என்று திறந்து விட்டால் சகட்டுமேனிக்குத் திரிபு வேலையைச் செய்திட உரிமம் அளித்ததுபோல ஆகிவிடாதா? அப்படி திரித்து வெளியிட்டால் மறுத்து எழுதுவதுதானே நமது வேலை என்று தங்கள் விவாதத்துக்கு முட்டுக்கால் கொடுக்கிறார்கள் - எந்தெந்த இடங்களில் எல்லாம் இவை நடக்கின்றன என்று, அறிவது சாத்தியப்படக் கூடியதுதானா? பட்டுப்புடவையை இரவல் கொடுத்து சீமாட்டி செல்லும் இடமெல்லாம் பாயைத் தூக்கிக் கொண்டு அலைந்த கதை என்று தந்தை பெரியார் சொன்னதுதான் இங்கு நினைவிற்கு வருகிறது.

இந்து போன்ற ஏடுகள் தந்தை பெரியாரின் தீர்மானத்தை திரித்து வெளியிட்ட போது இவர்கள் எல்லாம் உயிரோடு இல்லையா? அல்லது பிறக்கவேயில்லையா? எந்தவகையில் தந்தை பெரியாருக்குத் துணையாக நின்றவர்கள் இவர்கள்? தமிழர் தலைவர்தான் நீதிமன்றம் வரை சென்று இந்துவை மன்னிப்பு வாங்கச் செய்தார் என்ற வரலாறெல்லாம் தெரியுமா?

ஏதோ இந்து ஏடு கண்ணுக்குத் தெரிந்து எழுதியது - எதிர்த்தோம் முடிந்தது; மூலைமுடுக்கில் நடக்கும் எத்துவேலைகள் எல்லாம் நம் கவனத்துக்கு வருமா?


பாரதியார் அப்படி ஒன்றும் புரட்சிவாதியல்ல; அப்படியிருந்தும் பாரதியார் நூல்களை வெளியிடுபவர்கள் பாரதியார் கருத்துகளைத் திரித்து வெளியிட்டுள்ளதாக, பாரதியாரின் பெயர்த்தி விஜயபாரதி என்பவர் குமுறியுள்ளாரே! தஞ்சைப் பல்கலைக் கழகம் 1970-இல் பதிப்பித்து வெளியிட்டுள்ள பாரதி பாடல்கள் - ஆய்வுப் பதிப்பு எனும் நூலில் பாரதி எழுதாத படைப்புகள் அவர் எழுதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல்களைக் கூறியுள்ளாரே! (Sunday Express) - 18.1.2009)

இதற்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள் ராஜதுரைகள்? நம் கண் முன்னே காணும் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

பெரியார் வாழ்ந்த காலத்திலேயே பெரியார் பொன் மொழிகள் என்ற ஒரு நூலை திருச்சியில் தனியார் பதிப்பகத்தார் வெளியிட்டனர். அந்த நூலில் இடம் பெற்ற கருத்துகளுக்காக தந்தை பெரியார் தண்டனை விதிக்கப்பட்டாரே! சிறை சென்றாரே! அந்த நூலில் இடம் பெற்ற கருத்துகள் தமது ஒப்புதலைப் பெற்றவையில்லை - சரியானவை என்றும் கூற முடியாது - அவர்களாகவே வெளியிட்டது என்று தந்தை பெரியார் கூறிடவில்லையா?

பகுத்தறிவுவாதியான புத்தர் கருத்துகளையே பாட பேதம் செய்துள்ளனரே - இந்த வரலாற்றுப் பாடத்தைத் தெரிந்து கொண்டவர்கள் மாபெரும் புரட்சியாளரான தந்தை பெரியார் கருத்துகளை வெளியிடும்போது போதிய பாதுகாப்பும், விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் பெற்றிருக்க வேண்டாமா?

தந்தை பெரியார் நூல்களை விற்பதால் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்தா பேசுகிறோம்? இன்னும் சொல்லப் போனால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகள் போல மலிவான விலையில் நூல்களை வெளியிடுவோர் யார்? வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசிவிடலாமா? எழுதிவிடலாமா?

தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம். அந்த நிறுவனத்திலிருந்து பெரியார் இட்ட கட்டளைப்படி நூல்கள் முறையாக வெளியிடப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் கொண்டு செல்ல செறிவான ஏற்பாடுகளும் இருந்து வருகின்றன.

பல தலைவர்களுக்கு இந்த வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியிருக்கலாம். தந்தை பெரியார் அவர்களுக்கு அந்த நிலை ஏற்படவில்லை - காரணம் தொலைநோக்கோடு தந்தை பெரியார் ஏற்பாடுகளைச் செவ்வனே செய்து வைத்துள்ளார். அதற்கேற்றவர்களையும் தயாரித்துஅறிமுகப்படுத்தியும் இருந்தார். அதன்படி செயல்பாடுகளும் நடந்து வருகின்றன.


எனவே, இந்த வகையில் யாருடைய அறிவுரையும் எங்களுக்குத் தேவைப்படவில்லை.

இடைஇடையே இது போல் வந்து போகும் குறும்புகளையும், குறுக்குச் சால்களையும் கடந்துதான் இந்த இயக்கமும், இயக்கத் தலைமையும் இலட்சியப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன.

எதை எந்த நேரத்தில் எப்படிசெய்ய வேண்டும் என்ற எண்ணமும், திட்டமும் இயக்கத்திடம் நிரம்பவே இருக்கின்றன. எங்கள் பயணம் தொடரும். பெரியார் கருத்து நாட்டு மக்களுக்கு உரியதுதான். அந்தக் கருத்துகளை நாட்டு மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். அதுபற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை.

எத்தனையோ விளக்கங்களை எடுத்துக் கூறியிருந்தும் வீம்புக்காக இந்தப் பிரச்சனையை சிலர் கூறிக் கொண்டிருப்பதும், அதற்குப் பார்ப்பன ஊடகங்கள் மூக்கைச் சொரிந்து விடுவதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதில் அய்யமில்லை.


------------- மின்சாரம் அவர்கள் 3-2-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

5 comments:

Unknown said...

//தந்தை பெரியார் நூல்களை விற்பதால் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்தா பேசுகிறோம்? இன்னும் சொல்லப் போனால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகள் போல மலிவான விலையில் நூல்களை வெளியிடுவோர் யார்? வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசிவிடலாமா? எழுதிவிடலாமா?

தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம். அந்த நிறுவனத்திலிருந்து பெரியார் இட்ட கட்டளைப்படி நூல்கள் முறையாக வெளியிடப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் கொண்டு செல்ல செறிவான ஏற்பாடுகளும் இருந்து வருகின்றன.

பல தலைவர்களுக்கு இந்த வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியிருக்கலாம். தந்தை பெரியார் அவர்களுக்கு அந்த நிலை ஏற்படவில்லை - காரணம் தொலைநோக்கோடு தந்தை பெரியார் ஏற்பாடுகளைச் செவ்வனே செய்து வைத்துள்ளார். அதற்கேற்றவர்களையும் தயாரித்துஅறிமுகப்படுத்தியும் இருந்தார். அதன்படி செயல்பாடுகளும் நடந்து வருகின்றன.//


இது நியாயமான வாதமாகவே படுகிறது. நூல்கள் பட்டியலை ஏற்கனவே படித்துள்ளேன். பல நூல்களையும் வாங்கியுள்ளேன்.
விலையும் குறைவாகவே இருக்கிறது.

Unknown said...

பெரியார் நூல்களை வெளியிட ஏற்பாடுகள் செய்து விட்டு போய் ஊள்ளதாக சொல்லும் நிலையில் நாட்டுடமை தேவையில்லை என்பது சரிதான்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு

Unknown said...

பதிப்புரிமை என்பதும் காலவரம்பிற்குட்பட்டதுதான்.1973ல் பெரியார் இறந்தார்.அன்றிலிருந்து 60 ஆண்டுகள் முடிந்த உடன் பதிப்புரிமை
காலவதியாகிவிடும்.பெரியாரின் எழுத்துக்கள் 2033ல் நாட்டுடமையாக்க வேண்டிய தேவையின்றியே யார் வேண்டுமானாலும் வெளியிடும் நிலை வருமே.அப்போது தி.கவினர்
என்ன செய்வார்கள்?.

வீரமணி சொல்லும் காரணங்கள் அபத்தமானவை.பெரியார் திடல் நூலகத்தை யாரவது பயன்படுத்தினால்
அவர்கள் தி.கவை விமர்சிக்கக் கூடாது
என்பதுதான் அவரது ‘பகுத்தறிவு'.
தி.கவில் ராஜதுரை, வ.கீதா போன்றவர்கள் கிடையாது, இருக்கவும்
முடியாது.

Unknown said...

http://www.keetru.com/periyarmuzhakkam/mar09/svr.php
பெரியார்: நாட்டுடைமையாக்குதலின் அரசியல்
எஸ்.வி. ராஜதுரை

(கட்டுரையாளர் பெரியாரிய சிந்தனையாளர். பெரியாரியம் தொடர்பான பல ஆய்வு நூல்களை எழுதியவர். திருச்சி பாரதிதாசன் பல்கலையின் பெரியார் உயராய்வு மய்யத்தின் தலைவராக செயலாற்றியவர்.)

தமிழக அரசு, பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் நாட்டுடைமை ஆக்காமல் இருப்பதற்கான காரணங்களைத் தமிழக முதல்வர் நேரடியாகக் கூறாமல், மூத்த பத்திரிகையாளரும், சமூகவியல் அறிஞருமான சின்ன குத்தூசி மூலம் இப்படி எழுத வைத்திருக்கிறார்:

“பெரியார் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமா என்பது பற்றிய வழக்கு உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆகவே, அது பற்றி இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை.”

“பெரியார் உயிரோடு இருந்த காலத்தில் அவருடைய நூல்களையும் இயக்கப் பிரச்சார நூல்களையும் வெளியிடுவதற்காக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை தொடங்கினார். 1920-களிலிருந்து அவர் ஆற்றிய பேருரைகள், எழுதிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் அந்த நிறுவனமே தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அது மட்டுமல்ல, அவரது நூல்களையும் அவர் கண்ட பகுத்தறிவு இயக்கத்தின் நூல்களையும் நகர்வுப் புத்தகக் காட்சி அமைத்து ஆண்டு முழுவதும் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று மக்களிடம் சேர்ப்பித்து வருகிறோம்” என்கிறார்கள் பெரியார் கண்ட திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் படையினர்.”

முதலாவதாக, உயர்நீதிமன்ற விசாரணையில் இருப்பது பெரியார் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமா, கூடாதா என்பது பற்றிய வழக்கு அல்ல. மாறாக, 1925 முதல் 1938 வரை ‘குடிஅரசு’ ஏட்டில் வெளிவந்த பெரியாரின் பேச்சுகள், எழுத்துகள் ஆகியவற்றைத் தொகுத்துப் பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிடுவதைத் தடுக்கும்படியும், தனக்கு இழப்பீடாக 15 லட்சம் ரூபாய் வழங்கும்படியும் ஆணையிடுமாறு உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடுத்த வழக்குதான்.

இரண்டாவதாக, பெரியாரின் நூல்கள் என வெளியிடப்பட்டு வருபவை ‘மதம்’, ‘சாதி - தீண்டாமை’, கடவுள்’, ‘பெண்ணுரிமை’, ‘பகுத்தறிவு’, ‘ஏன், எதற்காக’ போன்ற தனித்தனிப் பகுதிகளாக, பல இடங்களில் பெரியார் தந்த தலைப்புகளை மாற்றிப்போட்டு - வெளியிடப்படும் கட்டுரைத் தொகுப்புகள் தாம். பெரியாரின் சிந்தனையில் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு, பொருளாதார சமதர்மம் ஆகியன ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. மேலும், அது அவர் வாழ்ந்த சமூக, அரசியல், பண்பாட்டுப் பின்புலத்தில் விளைந்ததேயன்றி சுத்த சுயம்புவாக அல்ல.

மூன்றாவதாக, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், தற்போது மேற்கொண்டுள்ள வெளியீட்டு முறையால் பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் முழுமையாக வெளியிட முடியாது. அந்த நிறுவனத்திடம் பெரியாரின் எழுத்துகளும், பேச்சுகளும் முழுமையாக இல்லை.

நான்காவதாக, பெரியாரின் கொள்கைகளை வீரமணி துணிந்து திரித்து வருவது தொடர்பாக எனது ‘பெரியார்: மரபும் திரிபும்’ நூல் உள்பட, தமிழகத்தில் ஏராளமான கட்டுரைகள் அசைக்க முடியாத சான்றாதாரங்களுடன் வெளிவந்துள்ளன. எப்படி இருப்பினும், பெரியாரின் எழுத்துகளுக்கும், பேச்சுகளுக்கும் வீரமணி சட்டரீதியான மரபுரிமையர் அல்லர் என்பதைத்தான் முதல்வர் இங்கு மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

வீரமணி கொண்டாடும் மரபுரிமை என்னும் விஷயத்திற்குப் போகும்முன் வேறொன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்திலுள்ள பல்வேறு தரப்பினரால் நீண்டகாலமாக அரசாங்கத்திடம் முன் வைக்கப்படும் கோரிக்கை, பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும்; அதுவும் கால வரிசைப்படியான தொகுப்புகளாக என்பதுதானேயன்றி பெரியாரின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்பதல்ல.

பெரியாரின் நூல்கள் என இதுவரை வெளி வந்துள்ளவற்றில் பெரியாரின் ஆக்கங்கள் பத்து சதவிகிதம் கூடத் தேறாது. காந்தி, பாரதியார், மார்க்ஸ், லெனின் போன்றோரது ஆக்கங்களைப் போலவே பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் காலவரிசைப்படி தொகுத்து வெளியிட்டால்தான் அவரது சிந்தனையிலும் செயலிலும் ஏற்பட்ட பரிணாமத்தையும் அவற்றுக்கான சமூக, அரசியல் பின்னணிகளையும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், வீரமணியோ, ‘ஆனந்த விகடன்’ ஏட்டிற்கு கொடுத்த பேட்டியில், “மொத்தமாகப் பதிப்பிக்கும்போது, கொள்கைக் குழப்பங்கள் ஏற்படும்” என்னும் விநோதமான கருத்தைக் கூறியிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குக்கான மனுவில் (26.8.2008) “தீவிர முயற்சிகள் மேற்கொண்டு, குடிஅரசு, ஜஸ்டிஸ், ரிவோல்ட், மாடர்ன் ரேஷனலிஸ்ட் முதலிய ஏடுகளில் பிரசுரிக்கப்பட்ட பெரியாரின் பேச்சுகள், எழுத்துகள், பேட்டிகள், இதர விஷயங்கள் ஆகிய அனைத்தையும் திரட்டி வைத்துள்ளதாக” வீரமணி கூறியுள்ளார். ஆனால், 20.12.2008-ம் தேதிய ‘விடுதலை’ இதழில் தன்னிடம் இல்லாத ‘குடி அரசு’ முதலிய ஏடுகள் பற்றிய நீண்ட பட்டியலை வெளியிட்டு, அவற்றைத் தனது இயக்க நூலகத்துக்குத் தந்துதவுமாறு ‘கழகத் தோழர்கள் மற்றும் கழகப் பற்றாளர்களுக்கு’ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரிடம் இல்லாதவைகளில் ஏறத்தாழ எட்டாண்டு கால ‘குடிஅரசு’, இரண்டாண்டு கால ‘விடுதலை’ ஆகியனவும் அடங்கும். 1989, 1990-ம் ஆண்டு ‘விடுதலை’ இதழ்கள்கூட அவரிடம் இல்லை! பெரியார் தன்னிடம் விட்டுச் சென்றதை வீரமணி உரிமை கொண்டாடும் ‘அறிவுசார் சொத்து’ அவரால் இப்படித்தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பெரியாரைத் தலைவராகக் கொண்டு நிறுவப்பட்டதும் 1952-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதுமான ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’ என்னும் நிறுவனத்தின் தற்போதைய செயலர் என்னும் முறையில் அந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களில் கூறப்பட்டுள்ள கடமைகளையும், சொத்துகளையும் நிர்வகிக்கும் உரிமை வீரமணிக்கு மட்டுமே உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. அந்த சட்ட திட்டங்கள் பிரிவு 2 (b) (iஎ) மற்றும் (எ) ஆகியன.

மேற்சொன்ன நிறுவனத்தின் குறிக்கோள்களை எய்யும் பொருட்டு செய்தித்தாள்கள், ஏடுகள் ஆகியவற்றை நடத்துவதும் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றைப் பிரசுரித்து சுற்றுக்கு விடுவதும் இது போன்ற இதர நிர்மாணப் பணிகளைச் செய்வதும் ஆகும் எனக் கூறுகின்றன. ஆதரவற்றவர்களுக்கும், கணவரை இழந்தோர்க்கும் இல்லங்களும், கல்வி நிறுவனங்களும் கட்டுவது இந்த நிறுவனத்தின் பணிகளில் ஒன்று என மற்றொரு துணைப் பிரிவு கூறுகிறது. ஆனால், கல்வியை வணிக ரீதியாக்க வேண்டும் என்று எந்தப் பிரிவும் கூறுவதில்லை.

பெரியாரின் வாழ்வும், சிந்தனையும் இந்த நிறுவனத்தையும் கடந்து அரசியல், பண்பாட்டு, சமூகத் தளங்களில் இயங்கின. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களையும், கடமைகளையும் நிறைவேற்றுவதற்குத் தேவையான செலவுகளுக்காகப் பெரியாரும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பிறரும் சில சொத்துக்களை வாங்கினர். இது குறித்து மேற்சொன்ன சட்டதிட்டப் பிரிவு 22 கூறுகிறது.

“பெரியார் ஈ.வெ.ராமசாமியால், சுயமரியாதை சங்கத்திற்காக அதன் நிதிகளில் இருந்து அச்சங்கத்தின் தலைவர் என்னும் முறையில் அவர் பெயரிலும் அவரது சொந்தப் பெயரிலும், நிறுவனத்தின் தலைவர் பெரியார் ஈ.வெ.ராமசாமியால் ஏற்கனவே வாங்கப்பட்ட சொத்துக்களுக்கும், நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் ஆயுள்கால உறுப்பினர்களே அறங்காவலர்களாக இருப்பர்.”

தற்போது இந்த நிறுவனத்தின் செயலராக இருக்கும் வீரமணி, இதனுடைய சொத்துக்களுக்கான மரபுரிமை கொண்டாடுவது சட்டப்படி சரியானதே! ஆனால், இந்த சொத்துக்களில், பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் ஆகியவற்றுக்கான பதிப்புரிமையும் அடங்கும் என்னும் அவரது கூற்று விவாதத்திற்குரியது. இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக அமெரிக்க நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பொன்றில் ‘சொத்து’ என்பதற்குத் தரப்பட்டுள்ள விளக்கமொன்றினைக் கூறுகிறார். இந்த விளக்கத்தின்படி, ‘சொத்து’ என்பது ‘கண்ணுக்குப் புலப்படுகிற, புலப்படாத, தொட்டுணரக்கூடிய, தொட்டுணர முடியாதது என்பது அவரது விளக்கம்.

இந்தத் தீர்ப்பு, சொத்து பற்றிய வேறு சில வரையறைகளையும் குறிப்பிடுகிறது. “ஏற்கெனவே உள்ள செல்வத்தைப் பெருக்கும் தன்மையுடையது; பரிவர்த்தனை மதிப்புடையது” என்பன இந்த வரையறைகளில் அடங்கும். அதாவது, வீரமணி உரிமை கொண்டாடும் பெரியாரின் அறிவுசார் சொத்து, அவரிடம் ஏற்கெனவே உள்ள செல்வத்தைப் பெருக்கும். பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டிருக்கும். ‘அறிவுசார் சொத்துரிமை’ கொண்டாடும் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தைத் துணைக்கு அழைப்பதில் ஆச்சரியமில்லை!

சொத்துரிமை தொடர்பான இந்திய சட்டங்களின்படி இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் சாத்தியப்பாடு உண்டு என்பதை வாதத்திற்காக நாம் ஒப்புக் கொண்டாலும், வேறு சில சிக்கல்களை வீரமணி எதிர்கொண்டாக வேண்டும். மேற்சொன்ன நிறுவனத்தின் சட்டதிட்டங்கள் பிரிவு 22, ‘பெரியாரால் ஏற்கனவே வாங்கப்பட்ட சொத்துகள்’ பற்றிக் கூறுகின்றது. அவை பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் ஆகியவற்றுக்கான பதிப்புரிமையையும் உள்ளடக்கும் என்னும் வீரமணியின் வாதத்தைப் பின்பற்றினால், பெரியார் தனது எழுத்துகளையும், பேச்சுகளையும் தானே விலை கொடுத்து வாங்கினார் என்பதுதான் தர்க்கரீதியான அர்த்தமாக இருக்க முடியும்! இந்த அபத்தத்தைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வீரமணி விரும்புகிறார் போலும்!

மேற்சொன்ன பிரிவு 22, “சுயமரியாதை சங்கத்திற்காக, சுயமரியாதை சங்கத்தின் நிதியிலிருந்து பெரியார் வாங்கிய சொத்துகள்” என்று தான் கூறுகிறது. பெரியார் கட்டுரைகள் எழுதி வந்த ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’, ‘விடுதலை’, ‘ரிவோல்ட்’, ‘ஜஸ்டிஸ்’ முதலிய ஏடுகள் ஏதும் ‘சுயமரியாதை சங்கத்தால்’ வெளியிடப்பட்டவை அல்ல; அந்த சுயமரியாதை சங்கம் பதிவு செய்யப்பட்ட சங்கமும் அல்ல.

வீரமணி தற்போது செயலாளராக இருக்கும் நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளுக்கோ, தனி நபர்களுக்கோ பெரியார் விட்டுச் சென்றவை தவிர வேறு ஏதேனும் சொத்துகள் இருக்குமேயானால், அவை சட்டப்படி அவரது துணைவியார் மணி அம்மையாருடைய ரத்த உறவுகளில் யாரேனும் ஒருவருக்குத்தான் போய்ச் சேரும்.

தவிரவும், இந்தியப் பதிப்புரிமைச் சட்டத்தின் படி, ஒருவர் தனது எழுத்துகளுக்கும் (அச்சில் வந்தவை, வராதவை) பேச்சுகளுக்கும் (அச்சில் வந்தவை) வேறு யாருக்கேனும் பதிப்புரிமை வழங்குவதாக இருந்தால் அது அவராலோ, அவரது அத்தாட்சி பெற்ற பிரநிதியாலோ, எழுத்துப்பூர்வமாகத் தரப்பட்ட ஒப்புதலாக இருக்க வேண்டும். பெரியார், தனது எழுத்துகளுக்கும், பேச்சுகளுக்கும் வீரமணிக்குப் பதிப்புரிமை வழங்க எழுத்துப்பூர்வமான ஒப்புதலைத் தந்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை. அம்பேத்கரின் பேச்சுகளும், எழுத்துகளும் இந்தியாவில் நூற்றுக்கணக்கானோரால் பதிப்பிக்கப்படுகின்றன. எனினும், காலவரிசைப்படி இல்லாவிட்டாலும் அவற்றை முழுமையாகத் தொகுத்து மலிவு விலையில் வெளியிடும் பணியை மகாராஷ்டிரா அரசாங்கம்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

எனவே, பெரியாரின் பேச்சுகளும் எழுத்துகளும் அவர் இறந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகாவது முழுமையாக அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள்.

(‘தினமணி’ நாளேடு 26.2.2009-ல் வெளியிட்ட கட்டுரை)