Search This Blog

2.11.14

ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், ஆதிதிராவிடர் இரத்தம் என்ற பிரிவு உண்டா?

ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், ஆதிதிராவிடர் இரத்தம் என்ற பிரிவு உண்டா?
திருப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவார்ந்த வினா

சென்னை, நவ. 1- ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம் ஆதிதிரா விடர் இரத்தம் என்ற பிரிவு உண்டா? என்ற வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், 4.10.2014 அன்று திருப்பூரில் நடைபெற்ற பெரியார் மேளாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
இந்தியாவையே உலுக்கிய ஒரு நிகழ்ச்சி உத்தரப்பிரதேச பெரியார் மேளாவாகும்!
மிகுந்த எழுச்சியோடு இந்தத் திருப்பூர் மாநகரிலே ஒரு புதிய அத்தியாயம் படைக்கப்பட்டிருக்கிறது என்கிற பெருமையை உருவாக்கி இருக்கிற பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த அருமைத் தோழர்கள், மிகச் சிறப்பான வகையில், எந்த நேரத்தில், எந்தத் தலைவரை அடையாளம் காட்டி இந்த நாட்டில் பெருகி வரக்கூடிய தீமையைத் தடுக்கவேண்டுமோ அந்த மிகப்பெரிய ஒரு பணியை இந்திய நாட்டிற்கே வழிகாட்டக் கூடிய அளவிற்கு, மீண்டும் ஒரு அற்புதமான வாய்ப்பாக, அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை, என்றென்றைக்கும் நம்முடைய நினைவில் நீங்கா இடம்பெற்றவராக இருக்கக் கூடிய, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் அத்துணை பேருமே எழுச்சி நாயகராக நம்முடைய தலைமுறையில் வாழ்ந்து, உத்தரப்பிரதேச வரலாற்றிலேயே இப்படி ஒரு நிகழ்ச்சி கிடையாது; இந்தியாவையே உலுக்கிய ஒரு நிகழ்ச்சி உண்டு என்று சொன்னால், அது பெரியார் மேளா  என்பதை உத்தரப் பிரதேசத்தில் உருவாக்கிய மாமேதை கான்ஷிராம் அவர்களு டைய அற்புதமான முயற்சி; அங்கே நடைபெற்ற நிலையில், அதுவும் செல்வி மாயாவதி அம்மையார் அவர்கள் முதல்வராக, ஆற்றல் வாய்ந்த முதல்வராக, துணிச்சல் வாய்ந்த முதல்வராக, கொள்கை, லட்சியத்தில் உறுதிபடைத்த முதல்வராக அவரால் அடையாளம் காட்டப்பட்டு, உருவாக்கப்பட்டு, அவர் பதவிக்குப் போகாமல், அம்மையாரை நிறுத்தி, அந்த நேரத்தில் மிகப்பெரிய அளவிற்கு பி.ஜே.பி.யோடு கூட்டு என்ற அளவில் ஒரு ஒப்பந்தம் என்ற முறையில் இருந்த நேரத்திலும்கூட, ஆட்சி போனால் அதைப்பற்றி பரவாயில்லை, கொள்கைதான் மிக முக்கியம் என்பதை, மிகத் தெளிவாக பெரியார் மேளா என்பதை உருவாக்கி நடத்தக்கூடிய அந்த அற்புதமான முயற்சியை அங்கு செய்தார்கள். சரியான நேரத்தில், இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிற்று. அதற்காக அவர்கள் எதை எதையோ தேடிக் கண்டுபிடித்தார்கள். அதைப்பற்றி பின்னால் சொல்கிறேன்; அதிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை. எதிரிகளாலே, இன எதிரிகளாலே, குறிப்பாக பார்ப்பனர்களாலே, ஆதிக்க சக்திகளாலே. அதேபோன்ற ஒரு நிலையை இன்றைக்கு திருப்பூரில் நீங்கள் கால்கோள் விழா நடத்தியிருக்கிறீர்கள்.
திராவிடர் கழகத்தின் சார்பில் எங்களைத்தான் அழைத்திருந்தார்
இந்த நேரத்தில், சரியான ஒரு விழாவை எடுத்திருக் கிறார்கள். அதேபோலத்தான் கான்ஷிராம் அவர்கள் மிகத் தெளிவாக பெரியார் மேளாவை இந்தியா முழுவதும், எட்டு ரயில்கள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் லக்னோவை நோக்கி போயிற்று. எல்லா ரயில்களிலும் ஆயிரக்கணக்கானோர் சென்றார்கள். ஏனென்றால், அதற்குப் பிறகு வந்த இளைஞர்கள் இப்பொழுது இருப்பார்கள். அன்றைய நிகழ்ச்சிக்கு அவர் பிரதானமான சிறப்பு விருந்தினர்களாக திராவிடர் கழகத்தின் சார்பில் எங்களைத்தான் அழைத்திருந்தார். அவ்வளவு பெரிய நிகழ்ச்சி அது. காரணம் என்னவென்று சொன்னால், நம்மு டைய தந்தை பெரியார் அவர்களும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்; ஒருவருடைய கருத்து, இன்னொருவருடைய கருத்து என்று மாறுபாடே கிடையாது.

ஒரே ஒரு வேறுபாடு உண்டென்றால், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், அரசியலுக்குப் போனார்கள்; பெரியார் கடைசிவரையில் அரசியலுக்குப் போகவில்லை. இதுதான் வேறுபாடே தவிர, வேறொன்றும் கிடையாது.

இரண்டு பேருடைய கருத்தையும் ஒரே இடத்தில் போட்டு, பெரியாருடைய கருத்தில் இருக்கும் பெயரை எடுத்து பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் என்று போட்டாலும், அதே போல், அண்ணல் அம்பேத்கர் கருத்தில் இருக்கும் பெயரை எடுத்து, பெரியார் என்று போட்டாலும் மாறுபாடு இருக்காது.
அய்ந்து பேரை அடையாளம் காட்டிய கான்ஷிராம்!
காரணம், அந்த இரு தலைவர்களும், புரட்சிக்காக, சமுதாயப் புரட்சிக்காக இந்த நாட்டில் அறிவாயுதத்தைத் தூக்கச் சொல்லி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகப் பெரிய புரட்சியைக் கொடுத்தார். ஆனால், இந்தப் புரட்சி, எவ்வளவு பெரிய நீண்ட வரலாற்றைப் படைத்தது என்று காட்டி, இந்தியாவிலேயே அய்ந்து சமுதாயப் புரட்சியாளர்களைக் காட்டிய பெருமை, இந்திய வரலாற்றிலேயே என்றென்றைக்கும் நான் போற்ற வேண்டிய திரு.கான்ஷிராம் அவர்களைத்தான் சாரும். அவர்கள்தான் அய்ந்து பேரை அடையாளம் காட்டினார்கள்.

ஜோதிபாபுலே அவர்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு, 18, 19 ஆம் நூற்றாண்டிலேயே, மராட்டிய மண்டலத்திலேயே அவர்தான் இந்த உணர்வுக்கு அடிப்படையாக இருந்தவர்கள்; சிந்தித்தவர்கள். அதை அப்படியே எடுத்துக்கொண்டு வந்து, அந்தப் பண்பாட்டுப் புரட்சியை நாம் செய்தாகவேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.
எனவே, இந்த பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இந்த விழாவினை இங்கே கொண்டாடுவது என்பது, அவர்கள் எதைச் செய்தார்களோ, அந்தப் பாதையில் இருந்து நாங்கள் நழுவமாட்டோம்; அந்தப் பாதையே எங்களுக்கு உறுதியான பாதை. அந்தப் பாதை வேறு, ஈரோட்டுப் பாதை வேறு அல்ல. எல்லாப் பாதைகளும் ஒன்றுதான் என்று சொல்லக்கூடிய அளவில், மிகத் தெளிவாக செய்திருக்கிறீர்கள்.

அதற்கு உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், இளைஞர்களுக்குச் சொல்கிறேன், ஏனென்றால், நம்முடைய தோழர்கள் நிறைய படிக்கவேண்டும். கான்ஷிராம் அவர் களைப்பற்றி பத்திரிநாராயணன் அவர்கள், Kanshiram: Leadership of the Dalit என்ற நூலை எழுதி, அதிலே வரலாற்றை எழுதியிருக்கிறார்கள்.

கான்ஷிராம் எடுத்துச் சென்ற இரும்புப் பெட்டி
அந்த வரலாற்றை எழுதும்பொழுது, இரண்டு இடத்தில் அவர்கள் சொல்கின்ற குறிப்பு இருக்கிறதே, அதிலே அவர்கள் இந்தியா முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தினார்கள், எல்லாப் பகுதிகளிலும். முதலில் பாம்சத்திலே தொடங்கி, பிறகு ஒரு அமைப்பாக, அரசியல் ரீதியாக இதனை உருவாக்கவேண்டும் என்று நினைத்துப் பல நேரங்களில் சொன்னபொழுது, எப்படிப்பட்ட எழுச்சிக்கு யாரைப் பயன்படுத்தினார்கள் என்று சொல்கிறபொழுது, ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்.

ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே மொழி பெயர்த்து உங்களுக்குச் சொல்கிறேன்.

கான்ஷிராம் அவர்கள் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்கள். அப்படிப் போகும்பொழுது, ஒரு டிரங்க் பெட் டியை எடுத்துச் செல்வார்கள். அந்த இரும்புப் பெட்டிக்குள் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர், ரவிதாஸ், ஜோதிபாபுலே, பெரியார் ஆகியோருடைய படங்களை வைத்திருப்பார். அப்பொழுதெல்லாம் இவர்களுக்கெல்லாம் சிலைகளையோ, பொம்மைகளையே எடுத்துச் செல்ல முடியாது. ஆகவேதான், அவர்களுடைய படங்களை எடுத்துக்கொண்டு போய், அங்கே மிகத்தெளிவாக இதனை எடுத்துக்காட்டி, இவர்கள்தான் இந்தியாவிலே சமூகப் புரட்சியை விதைத்தவர்கள். இவர்கள் வழியை நாம் பின்பற்றியாகவேண்டும். நாம் எழுச்சி பெற்றாகவேண்டும் என்று சொன்னார்கள்.

அது வளர்ந்த பிறகுதான், பெரியார் மேளாவிற்கு ஏற்பாடு செய்தார். தமிழ்நாட்டிற்கு வந்த நண்பர்களுக்குத் தெரியும். திராவிடர் கழகத்தைக் கலந்தாலோசிக்காமல், தமிழ்நாட்டில் அவர்களுடைய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதே கிடையாது. எந்தக் கிளர்ச்சியாக இருந்தாலும், கன்னியாகுமரி யில் இருந்து தொடங்கி, பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதாக இருந்தாலும், எங்களுடன் கலந்து, திட்டமிட்டுத்தான் செய்வார் கள். அந்த நிலையில், அவர்கள் வந்தபொழுது ஒரு முறை சொன்னார், ஆட்சியைப்பற்றி கவலையில்லை. பெரியாரை மிகச் சிறப்பாக அடையாளம் காட்டினால்தான், அதற்குரிய பலன் கிடைக்கும் என்று சொல்லி, மிகப் பிரம்மாண்ட அளவில், செய்துகாட்டிய முதலமைச்சர்தான் இன்றைக்கும் பகுஜன் சமாஜ் கட்சியை வழிநடத்தக் கூடிய செல்வி மாயாவதி அம்மையார் அவர்கள்.

பார்ப்பனர்கள் பெரியார் மேளாவை எதிர்த்தார்கள்
அவர்கள் அந்த நிலையில், மிகப்பெரிய அளவிற்கு, இந்தியா முழுவதிலுமுள்ள நம்முடைய தோழர்களை, ஒத்தக் கருத்துள்ளவர்களையெல்லாம் அழைத்தார்கள். பெரிய அளவிற்கு இது ஒரு எழுச்சியை உருவாக்கிற்று. உத்தரப் பிரதேசத்தில் இருந்த பார்ப்பனர்கள், அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், இதனை எதிர்த்தார்கள்.
நமக்குத்தான் இங்கே நண்பர்கள் சொன்னதுபோல, கருத்தரங்கத்தில் சொன்னதுபோல, எந்த மக்களுக்கு இந்தத் தலைவர்கள் பாடுபடுகிறார்களோ, அந்த மக்களுக்கே அவர்களை அடையாளம் தெரியாது. யாருக்காக பாடுபடுகிறார் களோ, அவர்கள்தான் எதிரிகளாக இருப்பார்கள். இந்த மக்கள், இந்த சமூகம் மிகப்பெரிய அளவிற்குப் பலன் பெறாமல் இருப்பதற்கு செய்யப்பட்ட சூழ்ச்சிகளில் அது ஒன்று. எனவே, அதில் பலிகடாக்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால், அங்கே பார்ப்பனர்கள் அத்துணை பேரும் சேர்ந்துகொண்டு, பெரியாருக்கு என்னய்யா, உத்தரப்பிர தேசத்தில் விழா. அதுவும் எங்களுடைய ஆதரவில் ஆட்சியி லிருக்கிறார்களே, நாங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுப் போமா? விலக்கிக்கொள்வோம் என்றார்கள்.

நீங்கள் எங்களுக்குக் கொடுக்கின்ற ஆதரவை விலக்கிக் கொண்டாலும்,  மக்களுடைய ஆதரவு எங்களுக்கு உண்டு. மீண்டும் வருகிறோமா, இல்லையா பாருங்கள்! என்று அறைகூவல் விட்டு, அவர் அந்தப் பணியைச் செய்தார்.
அந்த நிகழ்ச்சி நடைபெற்று ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் காலகட்டத்தில், இந்தியாவே எதிர்பார்க்க வில்லை; அவ்வளவு பெரிய கூட்டம் லக்னோவில். பெரியாரு டைய சிலையை அமைப்போம். பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பூங்காக்களை அமைப்போம் என்றெல்லாம் சொல்லி, இரண்டு, மூன்று நாட்கள் விழா நடைபெற்றது. விழா கோலாகலமாக நடைபெற்றது.

அதில் அவர்கள் ஒரு விளக்கம் சொன்னார், ஜோதிபாபுலே முதல்முறையாக சொல்லும்பொழுது, பண்பாட்டுப் புரட்சியை சொல்லும்பொழுது, நாம் ராமனைக் கண்டிக்கின்றோம்; மற்றவர்களைக் கண்டிக்கின்றோம் என்று சொன்னால், அதற்கு மாற்றாக, நம்முடைய தலைவர்களின் பிறந்த நாள்களை தத்துவ ரீதியாக நாம் கொண்டாடவேண்டும். அவர்களை நம்முடைய மக்களுக்கு அடையாளம் காட்டவேண்டும். அதற்காகத்தான் நாம் பெரியார் மேளா என்ற விழாவிற்கு ஏற்பாடு செய்தோம்.

அதற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் கும்ப மேளாவைத் தான் பார்த்திருப்பார்கள். கும்பமேளாவைப் பார்த்த இடத்தில், பெரியார் மேளாவை நடத்திக் காட்டிய பெருமை, பகுஜன் சமாஜ் கட்சிக்கு, அதனுடைய நிறுவனருக்கு, அதற்கு வழிகாட்டி உருவாக்கியவருக்கு உண்டு. இது வரலாற்றில் மறைக்கப்பட முடியாத வைர வரிகள்.
ஆகவே, இதனை இந்தியா முழுவதும் எதிர்த்துப் பார்த்தார் கள். ஆனால், அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை.


நாங்கள் உங்களுடைய ஆட்சியை கவிழ்ப்போம் என்று சொன்னார்கள். தாராளமாக, கவிழ்த்துப் பாருங்கள் என்று துணிச்சலோடு சொல்லி, அந்த விழாவினை நடத்தினார்கள்.


கான்ஷிராம் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்திய இயக்கம்தான் திராவிடர் கழகம்!

அதற்காகவே, திராவிடர் கழகத்தின் சார்பில் நாங்கள் சொன்னோம், அம்மையார் அவர்களே, கான்ஷிராம் ஜி அவர்களே, நீங்கள் தமிழ்நாட்டிற்கு தேதி கொடுத்து வாருங் கள்; திருச்சியில் உங்களுக்கு ஒரு பெரிய பாராட்டு விழாவினை லட்சோப லட்ச மக்களை அழைத்து நடத்துகின்றோம் உங்கள் துணிச்சலுக்காக என்று, ஒரு பத்து நாள்களுக்குள் திருச்சியில் மிகப்பெரிய பாராட்டு விழா நடத்திய இயக்கம்தான் திராவிடர் கழகம் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு நிலையில், என்ன நடந்தது என்று சொன்னால், இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இது பழைய செய்திதான். நம் மக்களுக்குத் தெரிந்த செய்தியாக இருந்தாலும், மறதி அதிகம். பொது வாழ்க்கையில் பல பேர் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமே, பொதுமக்களின் மறதியையொட்டித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவேதான், அதை நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.


பார்ப்பனத் தந்திரங்கள் இருக்கிறதே, சூழ்ச்சி இருக்கிறதே அது சாதாரணமானதல்ல;  அதைப் புரிந்துகொள்வதற்கே ஒரு அறிவு வேண்டும்; அதற்கே    ஒரு கண்ணாடி போடவேண்டும்; பெரியாருடைய கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான் மிகச் சரியாகத் தெரியும்.

அந்தக் கண்ணாடி நீண்ட காலமாகத் தயாரித்த கண்ணாடி. அதுதான் அம்பேத்கர் போட்டுப் பார்த்த கண்ணாடி; அதுதான் ஜோதிபாபுலே போட்டுப் பார்த்த கண்ணாடி; அதுதான் சாகுமகராஜ் அவர்கள் போட்டுப் பார்த்த கண்ணாடி; அதுதான் நாராயண குரு போட்டு பார்த்த கண்ணாடி.
பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று வதந்தியைப் பரப்பினார்கள்!
உடனே, பத்திரிகையில் ஒரு செய்தியைப் பரப்பினார்கள். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று.
லட்சோபலட்ச மக்கள் லக்னோவில் கூடினார்கள்; எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை. பெரியார் மேளா மிகப்பெரிய அளவிற்கு நடைபெற்றது என்கிற செய்திகள் வருவதற்கு முன்பாக, பிள்ளையார் பால் குடிக்கிறார் என்கிற செய்தியைப் பரப்பினார்கள்.

பிள்ளையார் சிலை முன் பாலை ஸ்பூனில் கொண்டு சென்றால், அவர் குடிக்கிறார், குடிக்கிறார் என்று. உடனே விஞ்ஞானிகள் அதற்கு விளக்கம் சொன்னார்கள், சாதாரண மாக பச்சையாக களிமண் பொம்மையிடம் பாலைக் கொண்டு சென்றால், கொஞ்சம் பால் குறையும்; அது சாதாரணமானது தான். பிள்ளையார் ஒன்றும் பால் குடிக்கவில்லை என்று சொன்னார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் பெரியார் மேளாவில் மிகப்பெரிய அளவிற்கு பெரியாருக்கு விழா எடுத்தார்கள் என்கிற செய்தி இந்தியா முழுவதும் பரவினால், மிகப்பெரிய ஆபத்து, தங்களுடைய ஆதிக்கத்தினுடைய வேரில், வெந்நீரை ஊற்றியதாகிவிடுமே என்பதற்காக, மிகத்தெளிவாக, அதனை மாற்றுவதற்காக, திசை திருப்புவதற்காக பிள்ளையார் பால் குடிக்கிறார், பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று சொன்னார்கள். பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு லிட்டர் பால் 200 ரூபாய்க்கு விற்றது. அப்படியொரு செயற்கையான தட்டுப்பாட்டினை உருவாக்கினார்கள்.

பிறகு, அதனை எதிர்த்து நாங்கள் பிரச்சாரம் செய்தோம். நானே அண்ணா சாலையில் உள்ள எல்.அய்.சி. கட்டடத்திற்கு முன்பாக,  தமுக்கடித்துக் கொண்டு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று சொன்னோம்.
பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று சொல்கிறவர்களிடம் பிள்ளையார் சிலையை இங்கே வைக்கிறோம்; பாலையும் வைக்கிறோம். எங்கள் முன்பாகப் பிள்ளையார் பால் குடிக்க வேண்டும்; அப்படி பிள்ளையார் பால் குடித்தால், ஒரு லட்ச ரூபாயினை திராவிடர் கழகத்திலிருந்து கொடுக்கிறோம் என்று நாங்கள் சவால் விட்டோம். அதற்குப் பிறகு தானாக அடங்கி விட்டார்கள்.

எதற்காக இதனைச் சொல்கிறோம் என்றால், ஆரியத்தினு டைய சூழ்ச்சி என்பது இருக்கிறதே அது சாதாரணமானதல்ல. ஏனென்றால், பெரியாருக்கு விழா நடத்திவிட்டார்களே, அதுவும் உத்தரப்பிரதேசத்தில் நடத்திவிட்டார்களே! உத்தரப்பிரதேசம் என்றால், பார்ப்பனர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு மாநிலம். அதற்காகத்தான் அவர்கள் தனியாகப் பிரிந்து செல்கிறோம் என்று உத்தரகாண்ட் என்கிற மாநிலத்தைப் பிரித்தார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்தத் தத்துவத்தைக் கண்டு அவர்கள் அவ்வளவு அஞ்சி, நேரடியாக எதிர்க்க முடியா விட்டால், வேறு வகையில் அதனை திசை திருப்பவேண்டும் என்று சொல்லக்கூடிய வகையில் இருந்தார்கள்.

இன்றைக்கும் இருக்கக்கூடிய மோடி அரசு என்று சொன்னாலும், அதை இயக்குவது பச்சையாக இந்துத்துவத் தையே வைத்துக்கொண்டு, ஆரியத்தினுடைய மறுமலர்ச்சியை உருவாக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ்.சினுடைய அமைப்புதான், அந்த பொம்மலாட்டத்தில் ஆடக்கூடிய பொம்மையாக மோடி இருக்கிறார்; அவர்கள் கயிற்றைப் பிடித்து ஆட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு சரியான பதிலடி கொடுக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தால், அதற்கு சரியான விடை; அவர்கள் வேறு எதை எடுத்தாலும், அம்பேத்கரையே கொண்டுவந்து உள்ளே சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். அம்பேத்கர் எங்களைப் பாராட்டினார் என்று சொல்கிறார்கள். வரலாறே தெரியாமல்.

சரியான நேரத்தில், இதுதான் சரியான விடை!

இன்னும் வராத ஒரு இடம் இருக்கிறது என்றால், அது பெரியார் திடல்தான். அதனைத் திருப்பூர் தோழர்கள் அடையாளம் கண்டு, பெரியார்தான் அதற்குச் சரியான விடை; ஆம்ஸ்ட்ராங் இங்கே சொன்னதுபோல், சரியான விடை, சரியான நேரத்தில், இதுதான் சரியான விடை என்று. ஆகவே, அதனை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ஜாதிக் கொடுமையைப்பற்றி சொன்னார்களே, சமத்துவம் என்று சொல்லும்பொழுது, அந்த சமத்துவ உணர்வு என்பது  இருக்கிறதே, அதை யாருக்காவது அடையாளம் தெரிகிறதா? யாராவது சொல்லட்டுமே! இயற்கையில் இந்த மாதிரி அடையா ளம் இருந்தால், இந்த ஜாதிக்காரன் என்று சொல்ல முடியுமா?

பெரியார்தான் கேட்டார், ஏன்டா, நாயைக் கொண்டு வந்து காட்டினால், இது ராஜபாளையம் நாய், இது கோம்பை நாய், அந்த நாய், இந்த நாய் என்று பிரித்துக் காட்டுகிறார்கள். அதுபோல், மனிதனைப் பிரித்துக் காட்ட முடியுமா? என்று கேட்டார்.

எனவேதான், தந்தை பெரியாருடைய விழாவினை நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்று சொன்னால், எனக்கு முன்பாக பேசியவர்கள் சொன்னார்கள்; பல தலைவர்கள் வேறு எந்த முதலீடும் இல்லை என்றவுடன், ஜாதியை ஆயுதமாகத் தூக்கிக் கொள்கிறார்கள். தத்துவ ரீதியாக ஜாதியை யாராவது நியாயப்படுத்தி சொல்லட்டும்; அறிவியல் ரீதியாக ஜாதிக்கு என்ன அடையாளம்? என்ன மூலாதாரம் என்று எடுத்துச் சொல்லட்டுமே! இன்றைக்குக்கூட ஈரோட்டில் இருந்து ஒரு மனிதநேய செய்தி வந்திருக்கிறது. இன்று காலையில் தொலைக்காட்சியில் நான் பார்த்தேன்.


உறுப்புகளைக் கொடையாக அளிக்கும் மனிதநேய உணர்வுகள்!

அது என்ன செய்தி என்றால், ஒரு இளைஞன்; அந்த இளைஞனுக்கு மூளைச்சாவு ஏற்படுகிறது. உடனே அவருடைய பெற்றோர்கள் அந்த இளைஞருடைய உறுப்புகளை கொடையாக அளிக்க ஒப்புதல் கொடுக்கிறார்கள். இப்பொழுது அந்த மனிதநேய உணர்வுகள் எப்பேர்ப்பட்ட பெற்றோர் களுக்கும் பரவிக் கொண்டு வருகிறது.

கொஞ்ச நாள்களுக்கு முன்பாக பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின்  இதயம், சென்னையிலுள்ள ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்குப் பொருத்தினார் கள் என்ற செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

நம்முடைய இளைஞர்கள் நிறைய பேர் குருதிக் கொடை அளிக்கிறார்கள்; இறந்து போனவர்கள் விழிக்கொடையை அளிக்கிறார்கள். உடலுறுப்புக் கொடை இப்பொழுது எங்கும் பரவலாகப் பரவிக் கொண்டிருக்கிறதே. ஜாதிக்கு ஆதாரம் இருந்தால் இவையெல்லாம் நடைபெறுமா?

நாள்தாறும் விபத்து நடக்காத நாளே கிடையாது; செய்தித் தாள்களையும், தொலைக்காட்சிகளையும் பார்த்தால் அங்கே விபத்து, இங்கே விபத்து என்ற செய்திகள்தான் நிறைய இடம்பெறுகின்றன. நான் அடிக்கடி சொல்கின்ற உதாரணத் தையே இங்கும் சொல்கிறேன்.

நான் பெரியார் கட்சியில் சேர்ந்து வெகுநாளாயிற்றே!

உதாரணத்திற்கு, ஒரு அய்யங்கார் அடிபட்டுவிட்டார். அடிபட்ட அய்யங்காருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; ரத்தம் தேவைப்படுகிறது.  அய்யங்காரிடம் டாக்டர் சொல்கிறார், உங்களுடைய ரத்த வகை ஏ1 பாசிட்டிவ்.  உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றால் இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்படும் என்று. அதற்காக விளம்பரம் கொடுத்துள்ளோம் என்று சொல்கிறார்.
டாக்டரிடம் அய்யங்கார் சொல்கிறார், நான் தான் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சொல்லிவிட்டேனே, இன்னும் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்.
உடனே டாக்டர் அய்யங்காரிடம் சொல்கிறார், நாம் விளம்பரம் கொடுத்ததைப் பார்த்து ஒரு இளைஞர் உங்களுக்கு ரத்தம் கொடுக்க முன் வந்திருக்கிறார். அந்த ரத்தத்தை உங்களுக்குச் செலுத்தினால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சொல்கிறார்.

அய்யங்காரோ, அப்புறம் என்ன டாக்டர் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டியதுதானே என்று.

டாக்டர் அய்யங்காரிடம், நீங்களோ அய்யங்கார், ரத்தம் கொடுக்க வந்துள்ள இளைஞரோ ஆதிதிராவிடர். அவர்களைத் தொட்டாலே நீங்கள் குளிக்கவேண்டும் என்று சொல்வீர்களே, அவருடைய ரத்தத்தை உங்களுடைய உடம்பில் ஏற்றவேண் டும் என்றால், உங்களுடைய அனுமதி வேண்டும் அல்லவா? நாளைக்கு நீங்க விஷயம் தெரிந்ததும், என்னைக் கண்டிக்க மாட்டீர்களா? என்று சொல்கிறார்.

இப்படி டாக்டர் சொன்னால், அந்த பேஷண்ட்டான அய் யங்கார் என்ன சொல்வார், அய்யய்யோ அவருடைய ரத்தம் வேண்டவே வேண்டாம்; நான் செத்தாலும் பரவாயில்லை என்று சொல்வாரா? என்ன டாக்டர் நீங்க, நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று. என்ன நீங்க இன்னும் தயக்கம் காட்டுகிறீர்கள். உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்; அந்தத் தாழ்த்தப்பட்டவருடைய ரத்தத்தை எனக்குச் செலுத்துங்கள் என்பார்.
அப்படியென்றால், இவரைக் காப்பாற்றுவதற்கு, தாழ்த்தப் பட்டவருடைய ரத்தம் தேவை; இந்த சமுதாயம் வளர்வதற்கு தாழ்த்தப்பட்டவர்களுடைய உழைப்பு தேவை. ஆனால், ஜாதி இருக்கவேண்டும் என்று சொன்னால், இது செயற்கையானது அல்லவா? இது உள்ளே புகுத்தப்பட்டது அல்லவா? இயற்கை யானது அல்ல என்பதுதானே உண்மை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

அதேபோல், உடல் உறுப்பு என்று சொல்லும்பொழுது, அந்தந்த ஜாதிக்காரனுக்கு அந்தந்த ஜாதிக்காரனுடைய உடலுறுப்பையா கொண்டு பொருத்துகிறார்கள். முதலியார் கண்களை முதலியாருக்குப் பொருத்து. வன்னியருடைய இதயத்தை வன்னியருக்கே பொருத்து என்றா பொருத்து கிறார்கள்? கிடையவே கிடையாது.

           ----------------------- (தொடரும்)--"விடுதலை” 1-11-2014
Read more: http://viduthalai.in/page-4/90364.html#ixzz3Hpb3LALW
 **********************************************************************************

நமஸ்காரம் என்று தூரத்தில் நின்று கும்பிடும் ஏற்பாடு ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்ற தீண்டாமையால்தான்!
திருப்பூர் விழாவில் தமிழர் தலைவர் உரை


சென்னை, நவ. 2- நமஸ்காரம் என்று தூரத்தில் நின்று கும்பிடும் ஏற்பாடு ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்ற தீண்டாமையால்தான்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், 4.10.2014 அன்று திருப்பூரில் நடைபெற்ற பெரியார் மேளாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


ஜாதி என்பதற்கு எந்த அடிப்படையும் கிடையாது!


எனவேதான், பொருத்தம் எங்கு ஏற்படுகிறதோ, உடற்கூறுபடி அதனைச் செய்கிறார்கள் என்கிறபோது, இதில் ஒன்றிலிருந்தே இளைஞர்களே தெரிந்துகொள்ளுங்கள், மற்றவர்களும் கேளுங்கள், ஜாதி என்பதற்கு எந்த அடிப்படையும் கிடையாது; அது முழுக்க முழுக்க  ஆரிய கற்பனையும், நம்மை அடிமைகளாக்குவதற்காக, நம் தலையில் சுமத்தப்பட்ட ஒரு பழி, இழிவு; அதனைத் தூக்கி எறியக்கூடிய ஆட்சிதான் நமக்குவேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.


சுதந்திரம் அடைந்த இந்த நாட்டில், இப்பொழுதுகூட தருமபுரியில் நடவடிக்கை எடுத்ததாக சில நாள்களுக்கு முன்பு செய்தி வந்தது. இன்னும் கிராமங்களில் இரட்டைக் குவளை வைத்திருக்கிறார்களே அது என்ன கொடுமை! தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை வைத்திருக்கிறீர்களே, டாஸ்மாக் கடையில் இரட்டைக் குவளை வைத்திருக்கிறார்களா? சாராயக் கடையில் இரட்டைக் குவளை முறையை வைத்திருக்கிறார்களா?


நமக்கே வெட்கமாக இல்லையா! என்னங்க, நாம் செய்யும் ஜாதி ஒழிப்பிற்கு இல்லாத சக்தி, ஒரு கிளாஸ் சாராயத்திற்கு இருக்கிறது. இதைவிட வேதனை, இதைவிட வெட்ககரமானது வேறு உண்டா? ஒரு சுதந்திரம் அடைந்த நாட்டில் நாம் வாழ்கிறோமா? இதற்குப் பெயர் சுயராஜ்ஜியமா? இதைத்தான் தந்தை பெரியார் கேட்டார், இதைத்தான் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் கேட்டார்கள்; ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கிக் காட்டவேண்டும் என்று நினைத்தார்கள்.


திருப்பூரில் 1962 இல் தந்தை பெரியார் ஆற்றிய உரை!


இங்கே பேசிய ரஜினிகாந்த் சொன்னார், திருப்பூரில் 1922 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வை சொன்னார், அப்பொழுது அய்யா பேசும்பொழுது, காங்கிரஸ்காரராக இருக்கும்பொழுது பேசுகிறார் பொதுக்கூட்டத்தில். 92 ஆண்டுகளுக்கு முன்னால்,
ராஜகோபாலாச்சாரியார் பக்கத்தில் உட்கார்ந்து கொண் டிருக்கிறார்; எல்லா தலைவர்களும் உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். அப்பொழுது பெரியார் பேசுகிறார், பார்ப்பான் உயர்ந்தவன் என்று சொன்னால், அதைப்பற்றி மனு தர்மத்தில் எழுதியிருக்கிறான். ஜாதியை, தீண்டாமையைக் கண்டிக்கிறோம் என்று சொன்னால் போதுமா? அதற்கு யார் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களை ஒழித்தால்தானே அவை ஒழியும். அதுதானே மிக முக்கியம் என்று தந்தை பெரியார் சொன்னார். அதற்குக் காரணமான ராமன், ராமனை முதலில் ஒழிக்கவேண்டும்; ராமாயணத்தை ஒழிக்கவேண்டும் என்று இதே திருப்பூரில், நம்மைப் போன்ற பலர் பிறக்காத காலத்தில், தந்தை பெரியார் அவர்கள் சொல்லியிருக்கிறார்.


பெரியாரைப் பார்த்து ராஜாஜி கேட்டார்!

பெரியார் அய்யா பல கூட்டங்களிலும் சொல்லியிருக்கிறார்; அவை பதிவாகியிருக்கின்றன. கூட்டம் முடிந்து எல்லோரும் சாப்பிடுவதற்காக செல்கிறார்கள். கூட்டத்தில் பெரியார் கடுமையாகப் பேசியிருக்கிறார். ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் திரும்பி, என்ன நாயக்கர்வாள், இன்றைக்கு இந்தப் போடு போட்டுவிட்டீர்களே, மிக வேகமாக! என்றார்.
உடனே அய்யா அவர்கள், என்ன சொல்கிறீர்கள் என்றார்.

ராமாயணத்தைக் கொளுத்தவேண்டும்; மனுதர்மத்தைக் கொளுத்தவேண்டும் என்று  ரொம்ப அதிகமாக ஸ்ட்ராங் டோசாக இருக்கிறதே, இதனை நீங்கள் கொஞ்சம் குறைத்துக் கொள்ளவேண்டும். நம் அரசியல் கூட்டத்தில், காங்கிரஸ் கூட்டத்தில், இவ்வளவு ஸ்ட்ராங் டோஸ் இருக்கலாமா என்று கேட்டார்.

ஸ்ட்ராங் டோசாவாது, லேசான டோசாவது...

உடனே பெரியார் அவர்கள் சொல்கிறார், ஆச்சாரியாரே, ஸ்ட்ராங் டோசாவாது, லேசான டோசாவது, முட்டாள் பசங்களுக்கு இதைவிட வேகமாக அல்லவா சொல்லவேண்டும் என்று சொன்னார். நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும் நீங்கள். இந்த மென்மை, தன்மை இவையெல்லாம் பிறகு.

ஒரே நாணயத்தினுடைய இரண்டு பக்கங்கள் என்று சொல்லுவது அதற்குத்தான். அதேபோல், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒருமுறை முகச்சவரம் செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர், எனக்கும் நன்றாகப் பழக்கமானவர். முன்பு பம்பாய் என்றிருந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் டெபுடி சேர்மேனாக இருந்தார். அப்பொழுது நான் இளைஞன், மாணவன். நான் அவரிடம் கேட்டேன்,  பிளேடைக் கொண்டு மரத்தை வெட்ட முடியுமா?


என்னங்க, பாபா சாகேப், ஒரு சிறிய சந்தேகம் எனக்கு.  என்னவென்றால், நீங்கள் பார்ப்பனர்கள், கீதை, ராமாயணம் பற்றி கடுமையாகப் பேசுகிறீர்களே என்று கேட்டார்.

முகச்சவரம் செய்துகொண்டிருந்த அம்பேத்கர் அவர்கள் உடனே அவரிடம் திரும்பி, இது என்ன? என்று கேட்டார்.

உடனே, அவர் தெரியுதுங்க, இது பிளேடு என்றார்.

நான் முகச்சவரம் எதைக்கொண்டு செய்கிறேன் என்றார் அம்பேத்கர்.
பிளேடு என்றார் அவர்.

அம்பேத்கர் உடனே, இந்த பிளேடைக் கொண்டு மரத்தை வெட்ட முடியுமா? என்று கேட்டார்.

மரத்தை வெட்டவேண்டுமானால், கோடாலியை அல்லவா நான் எடுக்கவேண்டும். வளர்ந்து போன விஷ விருட்சம், அதை வெட்டவேண்டும் என்றால், நான் பிளேடால் வெட்ட முடியுமா? என்று கேட்டார்.

எனவே, தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு கடுமையாக இருந்தார்களோ, அதே கடுமையான கருத்துகளை மிகவும் ஆழமாகச் சொல்லி புரிய வைத்தவர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். எனவே, பல செய்திகளில், இதுபோன்ற ஒற்றுமைகளும், மற்றவைகளும் தெளிவாக இருக்கும்.
ஏனென்றால், அடிப்படை. வெறும் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால், அம்பேத்கர் சொன்னாரே, 1937 ஆம் ஆண்டு ஜாதியை ஒழிக்க வழி என்ன என்று பஞ்சாபில் ஜாதி ஒழிப்பு அமைப்பினர் மாநாடு ஒன்றை நடத்துவதற்காக அண்ணல் அம்பேத்கர் அவர்களை அழைக்கிறார்கள்.

அதற்காக, நீங்கள் எழுதி அனுப்புங்கள், அதை புத்தகமாக அச்சடிக்கவேண்டும் என்கிறார்கள். பேச்சை எழுதி அனுப்புகிறார். ஜாதி ஒழிப்பு சங்கமான ஜாக்பட் தோரக் மண்டல் என்று அந்த அமைப்புக்குப் பெயர் பஞ்சாப் மொழியில்.

 Annihilation of Caste

இவர் எழுதி அனுப்பியதைப் பார்த்தார்கள்; அதைப் பார்த்தவுடன் அவர்களுக்கு செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை. கடவுளை ஒழிக்கவேண்டும்; பார்ப்பனர்களை ஒழிக்கவேண்டும்; இந்து மதத்தை ஒழிக்கவேண்டும்; ஜாதிக்கு எவை எவை ஆதாரமோ அதையெல்லாம் ஒழிக்கவில்லை யானால், ஜாதியை ஒழிக்கமுடியாது. இவையெல்லாம்தான் அடிப்படையானது என்று அம்பேத்கர் அவர்கள் அந்தப் புத்தகத்தில் ஜாதி ஒழிப்பு என்பதைப்பற்றி Annihilation of Caste  என்று தலைப்புப் போட்டு வந்த புத்தகத்தில், அவருடைய தலைமை உரை அது. அதைப் பார்த்தவுடன், அவர்கள் சொல்கிறார்கள், இவையெல்லாம் மிகவும் எதிர்ப்பை உண்டாக்கும். அதனால், இந்த இந்தப் பகுதிகளையெல்லாம் நீங்கள் எடுத்துவிடவேண்டும். உங்களைத்தான் மாநாட்டிற்குத் தலைவராகப் போட்டிருக்கிறோம். நாங்கள் வேண்டுமானால் அதை வெட்டி எடுத்துவிடுகிறோம். நீங்கள் வந்து உரையாற் றுங்கள்; உங்களுக்குத்தான் சிறப்பு இடம் கொடுத்திருக்கிறோம் என்றார்கள். அந்த சங்கத்திற்குப் பெயர் என்ன? ஜாதி ஒழிப்பு சங்கம்.


நம்மாட்களில் பல பேர் சாதாரண விளம்பர வியாதி உள்ளவன் என்றால் என்ன நினைத்திருப்பார்கள். நீ எதை வேண்டுமானாலும் வெட்டிக் கொள்ளுங்கள்; எனக்குத் தலைமைப் பதவி கொடுத்தால் போதும் என்று சொல்லியிருப் பார்கள்.

ஆனால், அம்பேத்கர் அவர்கள் எப்படிப்பட்ட கொள்கை வாதி; எவ்வளவு பெரிய லட்சியவாதி என்பதற்கு அடையாளம், அவர் உடனே சொன்னார், என்னுடைய கருத்தை, நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக இருந்தால், நான் அந்த மாநாட்டிற்கு வருவேன். இல்லையென்றால், நான் அந்த மாநாட்டிற்கு வந்து உரையை நிகழ்த்துவதற்குத் தயாராக இல்லை. உங்களுடைய அழைப்பை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்ன கொள்கை உறுதியாளர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.


அதைத் தெரிந்துகொண்ட தந்தை பெரியார் அவர்கள், அம்பேத்கர் அவர்களுக்கு நேரிடையாக அறிமுகம் கிடையாது. உடனே அம்பேத்கர் அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அந்த ஆங்கில உரையை குடியரசுப் பதிப்பகத்திற்கு அனுப்புங்கள் என்று சொல்லி, அதை தமிழில் மொழி பெயர்த்து, நாலணா விற்கு போட்டார். ஜாதியை ஒழிக்க வழி! என்ற நூலாகும். இப்பொழுது அதை பல பேர் வெளியிட்டிருக்கிறார்கள்.


காந்தியாருக்கு மறுப்பு!


காந்தியார் அதற்கு சமாதானம் எழுதினார், அவருடைய பத்திரிகையில்.  வருணாசிரம தருமம் வேறு; அது இருக்க வேண்டியது அவசியம் என்று.
காந்தியாருக்குப் பதிலை சுடச்சுட எழுதினார் அம்பேத்கர் அவர்கள். The legend of the Gandhi Reply to Ambedkarஎன்று எழுதினார்.

காந்தியாருக்கு மறுப்பு என்ற நூலில் அவையெல்லாம் இருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு பெரிய சமூகப் புரட்சியாளராக இருக்கக்கூடிய அம்பேத்கரை, அவர் எந்த சிந்தனையில் உருவாக்கினார்களோ, அதை அப்படியே கொண்டு வந்து, பார்ப்பனர்களின் மேலாண்மை இருக்கக்கூடிய ஒரு மாநிலம் என்று சொல்லக்கூடிய உத்தரப்பிரதேசத்தில், அதை செய்த பெருமை, ஆட்சியில் அமர்ந்து செய்த பெருமை, பகுஜன் சமாஜ் கட்சி என்று சொல்லக்கூடிய கட்சியை கான்ஷிராம் அவர்கள் உருவாக்கி, அந்த நிலையை செல்வி மாயாவதி அவர்கள் இன்னமும் முன்னெடுத்துச் செல்கிறார்.
1922 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை இங்கே சொன்னார் களே,
காலையில் காங்கிரஸ் கமிட்டி நடைபெறுகிறது. அந்தக் கமிட்டிக்கு ஒரு தீர்மானத்தைக் கொண்டு செல்கிறார் பெரியார்.

அந்தத் தீர்மானம் என்னவென்று சொன்னால், கோவில் களில் யாரும் முழுக்க முழுக்க அதாவது தீண்டப்படாதவர்கள் என்று சொல்லக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே வரக்கூடாது என்று சொல்லக்கூடாது; கோவில்களைத் திறந்துவிடவேண்டும். அவர்கள் எல்லாம் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்கிற தீர்மானத்தை பெரியார் கொண்டு செல்கிறார்.
திரு.வி.க. அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கிறார். ஆனால், மதுரை வைத்தியநாத அய்யரும், இன்னொரு அய்யரும் சேர்ந்து அந்தத் தீர்மானத்தை எதிர்க்கிறார்கள்.


இந்த நிகழ்விற்கு ஆதாரத்தை யாராவது தெரிந்துகொள்ள வேண்டுமானால், திரு.வி.க.வினுடைய வாழ்க்கைக் குறிப்பு களைப்பற்றி திரு.வி.க. அவர்களே எழுதியிருக்கிறார்.


பிறகு, அதே வைத்தியநாத அய்யர் அவர்கள், பின்னாளில் கருத்து செல்வாக்கு வந்தவுடன், நான்தான் முதல் ஆளாக இருப்பேன்; கோவிலைத் திறப்பதற்கு என்று சொல்லி, பிறகு அவர் மாறினார். கொள்கை உணர்வுதான் நமக்கு அறிவாயுதம்!


எனவே, இந்தத் திருப்பூருக்குப் பெரிய வரலாறு உண்டு. திருப்பூரில் இந்தப் பகுதியில் இந்த பெரியார் மேளா நடத்துவது இருக்கிறதே, பிள்ளையார் ஊர்வலத்திற்குப் பிறகு, பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று சொன்னதற்குப் பிறகு, அதற்கு மாற்றாக, இந்த நிகழ்வை நீங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் என்றால், இந்தக் காலகட்டத்தில், அதுவும் இந்துத்துவா மீண்டும் தலையெடுத்துக்கொண்டு, நாட்டில் யாராக இருந் தாலும் இருக்கலாம்; ஆனால், இந்துத்துவாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாகியிருக்கக் கூடிய இந்த கட்டத்தில் நீங்கள் மறுபடியும் இந்த உணர்வைப் பெறவேண்டும்.  இந்த விழாவை நடத்துவதோடு முடிந்துவிடக் கூடாது; இளைஞர் களை நீங்கள் கொள்கை ரீதியாக உருவாக்கவேண்டும். எனக்கு மிகவும் மகிழ்ச்சி, இங்கே நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேசிய தோழியரும் சரி, தோழரும் சரி, நல்ல கொள்கை உணர்வோடு பேசினார்கள். அந்தக் கொள்கை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் நமக்கு அறிவாயுதம். நாம் வேறு ஆயுதங்களைத் தூக்கவேண்டிய அவசியம் இல்லை. அறிவாயுதத்தைத் தூக்கினால், எதிரிகள் மிரண்டு ஓடுவார்கள்; ஏனென்றால், அவர்களுடைய சரக்குப் போலி சரக்கு; விளம்பரப்படுத்தப்பட்ட சரக்கு அவ்வளவுதான்.


நம்முடையது அப்படியல்ல; சமத்துவம் தேவை என்றார். அய்யா அவர்களைப்போல, மனிதநேயத்தைப்பற்றி சொன்ன கருத்துகளை, பயிற்சி வகுப்பு நடத்தி, இந்தக் கருத்துகளைச் சொல்லுங்கள். அதுதான் மிக முக்கியம்.
அந்த அய்ந்து தலைவர்களும், தங்களுடைய கருத்துகளை எப்படி இந்தியா முழுவதும் கொண்டு செலுத்தினார்கள்?


அரசியல், பதவி என்பது வரும், போகும்; அது மிக முக்கியமல்ல. அவையெல்லாவற்றையும்விட மிக முக்கியம், நம் இளைஞர்கள் ஒரு அமைப்பில் இருந்தால், கொள்கை ரீதியான தெளிவுள்ளவர்களாக இருக்கவேண்டும்.


அதைத்தான் பெரியார் பிறந்த நாள் விழாவில், ஒவ்வொரு இளைஞரும் நீங்கள் செய்யவேண்டிய பணியாகும்.


நான் இங்கே வந்திருக்கிறேன் என்பதற்கு, நீங்கள் மகிழ்ந்தீர்கள். அது ஒன்றும் அதிசயமல்ல. நாங்கள் இயல்பாக இருக்கக்கூடியவர்கள்; கொள்கை ரீதியாக இருக்கக்கூடிய வர்கள் நம்மைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?
அதுமட்டுமல்ல, பொதுவாகவே நமக்கு ஒரு தெளிவு வேண்டும். யார் நம்முடைய எதிரிகள்; யார் நம்முடைய நண்பர் கள் என்பதை சரியாக அடையாளப்படுத்தக் கூடியதுதான்; அதுவே போரில் முதல் வெற்றிக்கான அடையாளம். நண்பனை எதிரியாகக் கருதக்கூடாது; எதிரியை நண்பனாக நம்பி ஏமாறக்கூடாது.


இவையெல்லாவற்றையும்விட, தந்தை பெரியார் சொன்ன தத்துவம், எது நம்மை இணைக்கிறதோ அதை நாம் உறுதிப்படுத்துவதோடு, அகலப்படுத்தவேண்டும் என்று.


புத்தரை ஏன் பின்பற்றினார்கள், சொன்னதை நம்பாதே என்று புத்தர்தானே சொன்னார், யார் சொன்னாலும் நம்பாதே, உன் அறிவு என்ன சொல்கிறதோ, அதன்படி நட என்று. ஜாதிக்கு இடமில்லை; பெண்ணடிமைக்கு இடமில்லை என்று மிகப்பெரிய அளவிற்குச் சொன்ன அதே பாரம்பரியம்தானே இன்றைக்கு வரையில் வந்துகொண்டிருக்கிறது.


எனவே, இரண்டு பெரிய தத்துவங்களுக்கு இடையே நடைபெறுகின்ற போர்; இந்துத்துவா என்பது சமத்துவம் என்பதற்கு நேர் எதிரானது; சம வாய்ப்பு நேர் எதிரானது; மனிதத் தன்மைக்கு நேர் எதிரானது.

தேசபக்தியைவிட., மனித பக்திதான் எனக்கு முக்கியம்!

பெரியார் சொன்ன புரட்சிக் கருத்து சாதாரணமானதல்ல; அவருக்கு தேச பக்தி எல்லாம் கிடையாது. மற்றவர்கள் தேச பக்தியைப்பற்றி சொல்லும்பொழுது, அய்யா அவர்கள் சொன்னார்கள், தேசப் பக்தியைப் பற்றி பேசுவது அப்புறம் இருக்கட்டும்; முதலில் நான் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லுங்கள் என்றார். முதலில் எனக்கு மனித பக்திதான் முக்கியம், தேசபக்தியைவிட. அதற்கு ஒரு உதாரணம் சொல் கிறேன், என் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவன் இருக்கிறான்; நான் வெளியில் வந்தால், அவன் கதவை சாத்திக்கொண்டு உள்ளே போய்விடுகிறான். என்னைப் பார்த்தால் தீட்டாகிவிடும் என்று. அதுமட்டுமல்ல, கிட்ட வந்தால், நான் தவறிப் போய் தொட்டுவிட்டால், உச்சந்தலைமுதல், உள்ளங்கால் வரையில் தண்ணீர் ஊற்றி கழுவவேண்டும், குளிக்கவேண்டும் என்று நினைக்கிறான் பக்கத்து வீட்டுக்காரன்.


பெரியாரின் கேள்விக்கு இதுவரை யாரும் சரியான பதிலைச் சொல்லவில்லை!

பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து ஒருவன் வந்திருக்கிறான், அவன் என்னுடன் ஹலோ என்று கைகுலுக்குகிறான். என்னுடன் கைக்குலுக்குகிறவன் எனக்கு அந்நியனா? என்னைப் பார்த்ததும் கதவை சாத்திக் கொண்டு போய்விடுகிறானே, அவன் எனக்கு அந்நியனா? என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கு இதுவரை யாரும் சரியான பதில் சொல்லவில்லை.
இந்து மதம் என்பதில் உள்ள முறைகளை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும். கும்பிடுகிறார்கள் பாருங்கள், கும்பிடும் முறையை ஏன் உருவாக்கினார்கள். அதுகூட மதத்திற்கு மதம் வேறுபடுகிறது.
வெள்ளைக்காரன், கிறித்துவ மதத்துக்காரன் ஹலோ என்று சொல்லி, கையைக் குலுக்குவான்.

ஆனால், நம்மூரில் கும்பிடுவதோடு சரி. அவ்வளவுதான்.
ஆனால், இஸ்லாமிய சகோதரர்கள் என்ன செய்வார்கள், அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொள்வார்கள்.


இவர்களுக்கு மனிதத் தன்மை இருக்கிறதா? அல்லது கைக்குலுக்குகிறானே கிறித்துவன் அவனிடம் மனிதத் தன்மை இருக்கிறதா? அல்லது எட்டி நில், கிட்டே வந்துவிடாதே என்று கும்பிடுகிறானே அவனிடம் மனிதத் தன்மை இருக்கிறதா? என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.


முதலில் கும்பிடும் பழக்கத்தை ஒழிக்கவேண்டும். எல்லோரும் கைகுலுக்குவதற்குப் பழகவேண்டும். இதைப் பழகினால், அப்புறம் கலப்புத் திருமணம் தானாகவே வரும்; யாராலும் தடுக்கமுடியாது. கவுரவக் கொலைகள் என்று யாரும் சொல்லமுடியாது; அக்கிரமக் கொலைகள் என்று அதற்குப் பெயர் வைக்கவேண்டும்.


எனவேதான், ஜாதி என்ற பெயராலே, மீண்டும் ஒரு பழைமையைக் கொண்டுவந்து நிலை நிறுத்தலாம் என்று  நினைத்தால், அந்தக் காட்டுமிராண்டிகளுக்கு இனிமேல் இந்த நாகரிக உலகத்தில், மனிதநேய உலகத்தில் இடமில்லை என்று காட்டுவதற்கு நாம் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்.


தந்தை பெரியார் அவர்கள், கடைசி நேரத்தில்கூட,  ஆதிதிராவிடனாக இருக்கின்ற என் சகோதரன் படித்தான், அய்.ஏ.எஸ். அதிகாரியாக வந்துவிட்டான். அய்க்கோர்ட் ஜட்ஜாக வந்துவிட்டான். மிகப்பெரிய அளவிற்கு வந்தாயிற்று. இவ்வளவு பெரிய சமூகப் புரட்சி ஏற்பட்டுவிட்டது. நான் ஆரம்பத்தில் இருந்து பாடுபடுகிறேன்; ஆனால், அர்ச்சகர் ஆவதற்கு அதைவிட அறிவு வேண்டுமா? அர்ச்சகர் ஆவதற்கு என்ன திறமை வேண்டும்; மணியைத் தூக்கிக் கொண்டு ஆட்டவேண்டும். அதைவிட பெரிய மணியை நம்மாளிடம் கொடுத்து அடிக்கச் சொல்லிவிட்டான். இவன் வெளியில் சட்டையைக் கழட்டி போட்டுவிட்டு அடிக்கவேண்டும்.


அவன் கெட்டிக்காரத்தனமாக சின்ன மணியை ஆட்டிக்கொண்டு நோகாமல் போகிறான்.


பெரியார் கேட்டார், சின்ன மணியை அவனிடம் கொடு; பெரிய மணியை நீ வைத்துக்கொள் என்றார்.

அதுதானே மாற்றம்; அதுதானே பெரியார் விழா!

இளைஞர்கள் ஒரு உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்று கலைஞர் கொண்டு வந்த சட்டம் இருக்கிறதே, அதனால் என்ன கேடு வந்தது? இன்றைக்கும் அதைத் தடுத்துக்கொண்டு நிற்கிறார்களே, சட்டப்படி தடுக்கமுடியவில்லை என்றவுடன், அதற்கு வேறு தந்திரங்களைச் செய்கிறார்கள்!
ஆகவே, நண்பர்களே, ஜாதி ஒழிப்பு என்பதை இளைஞர்கள் சிந்திக்கவேண்டும். அவர்கள் ஒரு உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.


இனிமேல் நான் சொந்த ஜாதியில் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று.
மன்றல் விழாக்களை நாங்கள் ஊர் ஊருக்கு நடத்து கின்றோமே, அதில் என்ன பார்க்கிறோம் நாங்கள்.


வயது சரியாக இருக்கிறதா?

உடல்நலம் சரியாக இருக்கிறதா? என்று பார்க்கிறோம்.
இப்பொழுது இதைப்பற்றி நீதிமன்றமே சொல்ல ஆரம் பித்துவிட்டது.
ஜாதகப் பொருத்தம் என்று சொல்லி, முட்டாள் பயல்கள் போகிறார்கள். ராசி பலன் என்று சொல்கிறார்கள்.


நாளைக்கு வரக்கூடிய ஒரு நான்கு, அய்ந்து நாளிதழ்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் போடப்பட்டிருக்கும் ராசி பலன்கள் ஒன்றாகப் போடப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்; ஒருவன் வரவு; இன்னொருவன் செலவு; ஒருவன் துன்பம்; இன்னொருவன் இன்பம் என்று போட்டிருப்பான்.
இதைவிட  முட்டாள்தனம் வேறு உண்டா? அவனுக்குக் காசு பலன்; நமக்கு ராசி பலன், இவ்வளவுதானே தவிர வேறு இல்லை.


இளைஞர்களைக் கொள்கைப் பாதையில் அழைத்து வாருங்கள்!
எனவேதான், மூட நம்பிக்கைகளை ஒழித்து, பகுத்தறிவை வளர்த்து, ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவதுதான், நம்முடைய தலைவருக்கு, அவர்கள் காட்டிய வழியில் இன்றைக்கு நடக்கிறோம் என்று பொருள்.


பெரியார் மேளா என்பது வெறும் விழா அல்ல; இது ஒரு கொள்கைபூர்வமாக நாம் சூளுரைத்து, நம்மை அர்ப்பணித்துக் கொள்கிற மிகப்பெரிய உறுதி.
அதைத்தான் நம்முடைய வழிகாட்டிகளாக இருந்து, இந்தியாவிலேயே என்றென்றைக்கும் நம்முடைய வாழ்நாளில் மிகப்பெரிய புரட்சியை கான்ஷிராம் செய்துகொண்டிருந்தார். அதை அரசியல் ரீதியாக உத்தரப்பிரதேசத்தில் ஆயிரம் சவால் களுக்கிடையே அம்மையார் செல்வி மாயாவதி செய்துகொண் டிருந்தார். எங்களைப் பொறுத்தவரையில், யாருக்கு, எப்பொழுது  எந்த அளவிற்கு ஆதரவு கொடுக்கிறோமோ, அது கொள்கை வழிதான் இருக்கும் என்பது உங்களுக்கெல்லாம் தெளிவாகத் தெரியும். அந்த வகையில், இளைஞர்களுக்கு கொள்கையை நீங்கள் கற்றுகொடுங்கள். கொள்கைப் பாதையில் அவர்களை அழைத்து வாருங்கள், தானே மற்றவர்கள் உங்கள் பின்னாலே வருவார்கள். நீங்கள் யாருக்கும் மனு போட வேண்டிய அவசியமே கிடையாது.


உறுதியெடுங்கள், ஒரு ஆயிரம் இளைஞர்களைத் தயார் செய்யுங்கள்; நாங்கள் எங்களை அர்ப்பணித்துக் கொண்டு ஜாதியை ஒழிப்போம்; எங்கள் மனிதத் தன்மையை நிலை நாட்டுவோம்; அனைவருக்கும் அனைத்தும் என்ற சமுதா யத்தை உருவாக்குவோம்  என்று; அதையே பெரியார் பிறந்த நாள் விழாவான இந்த நாளில் சூளுரையாக எடுத்துக் கொள் வோம் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வணக்கம்!

வாழ்க பெரியார்! வாழ்க பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர்! வளர்க பகுத்தறிவு!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

                                          -------------------”விடுதலை”  2-11-2014
Read more: http://viduthalai.in/page-4/90392.html#ixzz3Hv1QdYC7

20 comments:

தமிழ் ஓவியா said...

ஒன்றுமே இல்லை

பார்ப்பனரின் பதவிக் கொள்கை யெல்லாம், எல்லாம் தனக்கே வரவேண்டும். தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக் கூடாது - கீழே கொட்டிவிடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என் பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
(விடுதலை, 17.10.1954)

Read more: http://viduthalai.in/page-2/90470.html#ixzz3I14YgJTt

தமிழ் ஓவியா said...

சபாஷ் - வரவேற்கத் தகுந்தது!


மூன்றாம் பாலினத்தவர் ஆட்டோ ஓட்டுநர் - செய்தி வாசிப்பாளர்! மூன்றாம் பாலினத்தவர்கள் சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் ஒதுக்கப்பட்டுவந்த நிலையில், அவர்களின் அயராத முயற்சியால், தடைகளைக் கடந்து பலதுறைகளி லும் துணிந்து அடி எடுத்து வைத் துள்ளார்கள்.

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந் தவரான வைஷ்ணவி, வட சென் னைப் பகுதியைச் சேர்ந்தவர். தன் னுழைப்பால் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர்.

சென்னையில் உள்ள தாய்-வி.எச்.எஸ் அமைப்பில் இணைந்து மூன்றாம் பாலினத்தவர் மத்தியில் எச்.அய்.வி தடுப்புப் பணி மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் பொரு ளாதார மேம்பாட்டுப் பணிகளை செய்து வந்துள்ளார். இந்தியாவின் முதல் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட் டுநராக இருக் கும் வைஷ்ணவி "சில மக்கள், ஆட்டோ ஏற வந்து விட்டு, நான் திரு நங்கை என தெரிந்தவுடன் ஆட்டோவில் கூட ஏறாமல் சென்று விடு வதும், சில சமயம் சந்திக்கும் கேலி, கிண்டல்கள்தான் மன வருத்தமாக இருக்கிறது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உழைக்க வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால், உழைக்க வந்தால், இப்படி கேலி கிண்டல் இருக்கிறது. ஆனாலும் என் தொழிலை நான் விட மாட்டேன். இந்தத் தொழிலை இன்னும் விரிவுபடுத்துவேன் என நம் பிக்கையுடன் கூறுகிறார் வைஷ்ணவி.

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ் தமிழகத்தில் இயங்கக் கூடிய தனியார் தொலைக் காட்சியில் செய்தி வாசிப் பாளராக திருநங்கையான பத்மினி பிரகாஷ் பணியாற்றுகிறார்.

ஏற்கெனவே, மூன்றாம் பாலினத் தவரான ரோஸ், தனியார் தொலைக் காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப் பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தின் மேற்கு மாவட் டமான கோயம்புத்தூரைச் சேர்ந்த பத்மினி பிரகாஷ், கல்லூரியில் வணிகவியல் துறையில் சேர்ந்து முத லாம் ஆண்டோடு படிப்பை நிறுத் தியவர்.

'ஊடகங்கள் மூலம் செய்திகள் மட்டும் போய்ச் சேருவதில்லை. செய்திகளைக் கொண்டு சேர்ப்பவர் களும் மக்களை எட்டுகிறார்கள். ஆகவே தான், ஊடகத் துறையை விரும்பினேன்' என்கிறார் பத்மினி.

மூன்றாம் பாலினத்தவர்களின் நலனைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பல நல்வாழ்வுத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரிவினருக்கென நல வாரி யமும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள் வழங்கல் அட்டைகளில் (குடும்ப அட்டை), வாக்காளர் அடையாள அட்டைகளில் மூன்றாம் பாலினமாக குறிப்பிடப்படுகிறார்கள். கல்லூரி களிலும் தனிப் பிரிவினராக அங்கீ கரிக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மூன்றாம் பாலினம் என் கிற அங்கீகாரத்தை வழங்கி உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/90475.html#ixzz3I14pevn9

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணம் நிறைந்த மிளகு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் தோன்றுகின்ற வாயுவையும் நீக்கி, உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது.

இது காரமும், மணமும் உடையது. உணவை செரிக்கவைக்க உதவுகிறது. விட்டுவிட்டு வருகின்ற முறை காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் நாள்தோறும் இரண்டுவேளை சாப்பிடவேண்டும்.

பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்துத் தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை சாப்பிட்டால் நல்ல பலன் தரும். சிலருக்குத் தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும்.

இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அருகம் புல்லையும், பத்து மிளகையும் பொடியாக இடித்து கசாயம் போட்டு அருந்தி வந்தால் எல்லாவித விஷக்கடிகளும் முறியும்.

சாதாரண காய்ச்சலுக் கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒருவேளை சாப்பிட்டுவர நல்ல பலன் தரும். சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.

மிளகுத் தூளும், சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல் வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 23 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும். 100 கிராம் வில்வ இலை சூரணத்துடன், 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு ஆண்டில் ஆஸ்துமா குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

வெற்றிலை உலர்ந்த வேரையும், மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட, கருகலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும். அரை கிராம் மிளகுப் பொடியுடன் ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

Read more: http://viduthalai.in/page-7/90446.html#ixzz3I15roVgo

தமிழ் ஓவியா said...

நார்ச்சத்து உணவுகளை சாப்பிட்டால் மாரடைப்பு வராது


நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம் என மருத்துவத்துறை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள், முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த ஆய்வுகளை ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின், சுகாதாரப் பிரிவு விஞ்ஞானிகள் நடத்தினர்.

மாரடைப்பால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கும் அபாயம் உள்ளவர்கள் மற்றும் சாதாரண மனிதர்கள் என 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் பல தரப்பட்ட ஆய்வுகளை நடத்தினர்.

அவர்களின் உணவு முறை, பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை வைத்து இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர்களும் அதிக நாள்கள் உயிர்வாழ ஏதுவான காரணிகள் நார்ச்சத்துள்ள உணவுப்பொருள்களில் இருந்தது. பொதுவாகவே நார்ச்சத்து அதிகமாக காணப்படும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவை மனித குடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

ஆனால், பெரும்பாலான மனிதர்கள் சுவை விரும்பி களாக உள்ளதால் இவ்வுணவுகளை அதிகம் உட்கொள்வது கிடையாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மாரடைப்பு நோய் பாதிப்புள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் அவர்கள் பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியிருக்கும்.

இது குறித்தும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்து வர்களின் ஆலோசனைப்படி நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை அளவாக எடுத்துக்கொள்வதின்மூலம் மாரடைப்பு நோய் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-7/90447.html#ixzz3I15xjKAC

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை!


மூடநம்பிக்கை, பெண் ணடிமைத்தனம் பற்றி யெல்லாம் படித்திருப் போம். ஆனால் இராக் - சிரியாவில் இரண்டும் இணைந்த ஒரு கலவை யாக உள்ளது.

அய்.எஸ். தீவிரவாதி களாக இருக்கக் கூடிய வர்கள் அஞ்சி நடுங்கி ஓடக் கூடிய ஓர் இடம் இருக் கிறது என்றால் ஆச்சரி யம்தானே!

குர்திப் படைப் பிரிவில் உள்ள பெண் வீராங்கனை களைக் கண்டால் அந்த அய்.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் பிடிக்கிறார்களாம். என்ன காரணம் தெரியுமா?

பெண்கள் கையால் (துப்பாக்கிப் பிரயோகத் தால்) ஆண்கள் உயிரிழந் தால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாதாம்!

எப்படி இருக்கிறது? தங்கள் உயிரையே திரண மாக மதித்துத் தீவிர வேலைகளில் ஈடுபடும் ஆண்கள்கூட இப்படி இருக்கிறார்கள் என்றால் இதன்பொருள் என்ன? உடல் வலிமை இருந்தாலும் மூளையில் குடியேறிய மத மூடநம்பிக்கை அவர் களைக் கோழைகளாக்கி விடுகிறதே!

இன்னொரு செய்தி ஈரானிலிருந்து வெளி வந்துள்ளது. ரேஹானே என்ற பெண்மணி தன் னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற ஒரு புலனாய்வுத்துறை அதிகா ரியைக் கொலை செய்து விட்டார் அந்தப் பெண்மணி.

அந்தப் பெண்ணின் நோக்கம் அந்த அதி காரியைக் கொலை செய் வதல்ல; தன்மீது பாலியல் வன்முறையை மேற் கொண்ட பொழுதுதான் அந்தக் கொலை நடந்திருக் கிறது. (கொலையும் செய் வாள் பத்தினி என்பது நம் நாட்டுப்பழமொழி!) ஆனால் ஈரானில் தீர்ப்பு என்ன தெரியுமா? அந்தப் பெண் குற்றவாளியாக்கப் பட்டுத் தூக்குத் தண்டனை யும் விதிக்கப்பட்டுள்ளார் என்னே கொடுமை!

அந்தப் பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

தாயே உனக்கு என் னைப் பற்றி நன்கு தெரியும். நான் ஒரு கொசுவைக் கூடக் கொன்றதில்லை. கரப்பான் பூச்சிகளைப் பிடித்து மெதுவாகத்தான் வெளியேற்றியிருக்கிறேன். தற்போது நான் திட்டமிட்ட கொலைகாரியாக இருக் கிறேன். இறப்பதற்கு முன் ஒரு வேண்டுகோள்.

தூக்குத் தண்டனைக் குப் பிறகு என் உடல் மண் ணுக்கு இரையாக வேண் டாம்; எனது உடலிலிருந்து பிறருக்குப் பயன்படும் அனைத்து உறுப்புகளை யும் அகற்றி அவற்றைத் தேவைப்படுபவர்களுக்குப் பரிசாக அளித்து விடுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள் கிறேன். எனது உறுப்பு களைப் பெற்றவர்களுக்கு நான் என்பதோ, என் பெயரோ எதுவும் தெரிய வேண்டாம்.

எனக்குப் பூச்செண்டும் கொடுக்க வேண்டாம். பிரார்த்தனை யும் செய்ய வேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் அந்த ஈரானியப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
ஒருபக்கம் மத மூட நம்பிக்கை இன்னொரு பக்கம் அதையும் கடந்த மனிதத் தன்மை! அசை போட்டுப் பாருங்கள் புரியும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/90433.html#ixzz3I16HqPTo

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனே நீக்குக


விடுதலைப்புலிகள் அமைப்பு ஒன்றும் பயங்கரவாத ஒன்றல்ல; எனவே, பயங்கரவாத அமைப்புப் பட்டியலி-லிருந்து நீக்கி அந்த அமைப்பை விடுதலை செய்ய வேண்டும் என்று அய்ரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்திய அரசும் முடிவை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ்நாட்டில் முன் வைக்கப்படுகிறது.

நம்மைப் பொறுத்தவரையில் இந்தியாவில் விடுதலைப்-புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது நீக்கப்பட வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட்டோம் (7.10.2010) அந்த அறிக்கை வருமாறு:

இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்பதே மனிதநேயம் உள்ள அனைத்து மக்களின் தலையாய கடமையாகும். இன்னமும் அங்குள்ள நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள், தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்பட முள்வேலிக்குள் பல முகாம்களில் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கும் நிலையிலிருந்து அவர்களுக்கு விடிவு ஏற்படவில்லை.

சிங்கள ராஜபக்சே ஆட்சியின் மனித உரிமைப் பறிப்புகள் பற்றி, அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், வெளிப்படையாகவே கூறியுள்ளார். உலகப் போர் நெறிமுறைகளை மீறி தவறாக ராஜபக்சே நடந்துகொண்ட குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும், விடுதலைப்புலிகள் என்றும் இலங்கை சிறையில் மனித உரிமைகளைப் புறந்தள்ளிவிட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ள பல்லாயிரவர் பற்றி அய்க்கிய நாட்டு அமைப்புகளின் 60 சட்ட வல்லுநர்கள் கண்டனம் உள்பட சில நாள்களுக்குமுன் உலக ஏடுகளில் செய்தியாக வந்தது.

இந்நிலையில், அவதிப்படும் ஈழத் தமிழர்களுக்கென பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இந்திய அரசு (தமிழக அரசின் உதவியும் இணைத்து) இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அந்நிதி உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பயன்பட்டதாகவோ, படுவதாகவோ தெரியவில்லை.

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை சிங்களக் குடியேற்றங்-களாக்கப்-படும் கொடுமை தொடர்கதையாகி வருகின்றது!

இந்நிலையில், கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்னும் பழமொழிக்கொப்ப, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இங்குள்ள தடையை மீண்டும் இந்திய அரசு நீடிப்பது, உலகத் தமிழர்களின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாக்கிவிடும்!

இலங்கை அரசே இங்கே விடுதலைப்-புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், நம் நாட்டில் மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை நீடிக்கும் சடங்கு சம்பிரதாய சட்டத்தைத் தொடருவது எந்த நியாயத்தின் அடிப்படை-யிலோ என்று நமக்குப் புரியவில்லை.
காஷ்மீரிலும் சரி, மற்ற நக்சலைட்கள் பெருகிய பல வடமாநிலங்களிலும் சரி, அவர்களை மத்திய அரசும், நம் பிரதமரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பேசி சுமுகத் தீர்வு காணும் நல்லெண்ண முயற்சிகளை மேற்-கொள்வது அறிவிப்பது நல்ல அணுகுமுறையே!

அதே அரசு, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் மீண்டும் தடையை நீடித்துக் கொண்டே போவது சரிதானா? ஈழ அகதிகளாகி, அகதியாக, வாழ்க்கையை தமிழ்நாட்டிலும், வேறு சில இடங்களிலும் வாழும் ஈழத் தமிழர்கள் இளைஞர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் நிம்மதியற்ற வாழ்வினைத் (அவர்களுக்கு) தரத்தான் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, மத்திய அரசு இதுபற்றி மனிதநேய அடிப்படையில் பிரச்சினையை ஈர மனதுடன் அணுக வேண்டும். நிர்ப்பந்தப்படுத்தப்பட வேண்டிய இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உதவிட வேண்டும் _ முன்னுரிமை அதற்குத் தான் தரப்பட வேண்டும் என்று இன்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தோம்.

இந்த நியாயத்தை, சட்டப்படியான நிலையை இந்திய அரசு கவனம் செலுத்தத் தவறினாலும், அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றம் உணர்ந்து தீர்ப்பளித்திருப்பது _- வரவேற்கத்தக்க-தாகும்.

இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் அமைப்பின்மீது தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதால், அந்த அமைப்பைப்பற்றி தவறான புரிதல் இருந்திருக்குமேயானால், அதிலிருந்தும் விடுபட இத்தீர்ப்புப் பெரிதும் பயன்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

விடுதலைப்புலிகள் திடீரென்று ஒரு நாள் காலையில் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுவிடவில்லை.

ஈழத் தமிழினமே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து இனப்படுகொலையில் ஈடுபட்டது சிங்கள அரசு.

தமிழீழப் பெண்களைக் கதறக் கதறப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்களே சிங்கள இனக் காடையர்கள்! தமிழன் மாமிசம் கிடைக்கும் என்று விளம்பரப் பலகைகளைத் தொங்க விடவில்லையா சிங்கள வெறியர்கள்?

தந்தையின் முன் மகளையும், அண்ணன் முன் தங்கையையும், மகன் முன் தாயையும் நிர்வாணப்-படுத்தி வன்புணர்ச்சிகளில் ஈடுபட்டதைப் பார்த்த பிறகும் மானமுள்ள எந்த மனிதன்தான் ஆயுதம் தூக்காமல் அமைதியாய் -_ சோற்றாலடித்த பிண்டமாய் இருப்பான்? அதுதானே ஈழத்தில் நடந்தது!

காலங் கடந்தாலும் விடுதலைப்புலிகளின் உண்மையான போராட்டம் என்ன என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே!

இந்த நேரத்தில் இந்திய அதிகாரிகள் வர்க்கம்பற்றி அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது -_ சரியானது!

விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிரான மோதல் பிரச்சினையில் இந்திய அதிகாரிகளின் பாகுபாடான நிலைப்பாடு காரணமாக இந்தியத் தரப்பிலான தகவல்கள் நம்பத் தகுந்ததாகக் கருத முடியாது என்ற அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றத்தின் கருத்தும், கணிப்பும் சாதாரண-மானதல்ல!

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான மதிப்பு எந்த வகையில் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் என்று சொல்லத் தேவை-யில்லை.

அந்தத் தவறுகளுக்குப் பரிகாரமாக, இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகு-முறையில் புதிய மாற்றம் வருமேயானால் அது மிகவும் வரவேற்கத்தக்கதாகவே இருக்கும்.

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...


பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக, சணல் பொருட்களின் பயன்-பாட்டை அதிகரிக்க வேண்டும். வங்க தேசத்தில் சணல் உற்பத்தி அதிகம் உள்ளது. இந்தியாவில் சணல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. எனவே, இரண்டு நாடுகளும் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், சணல் உற்பத்தியை அதிகரிக்க முடியும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும்.

- அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்

-----------

பா.ஜ. தலைவர்கள் தங்களின் பல்வேறு நெட்ஒர்க்குகள் மூலம் எதிர்த் தரப்பினைக் குறிவைத்து, நாகரிக-மற்ற வார்த்தைகளில் விமர்சிக்-கின்றனர். தனிநபர் தாக்குதலும் அதிகரித்துவிட்டது. அவர்களின் இதுபோன்ற நடவடிக்கைக்கு பெண்கள்கூட தப்பவில்லை. இதைப் பார்க்கும்போது அவசரநிலைக் காலம்போல் இருக்கிறது.

- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர்

-----------

தமிழகத்தில் நீலகிரியில் நடுவட்டம், கூடலூரில் புல்வெளியில் அரிதாகக் காணப்-படும் பூச்சி உண்ணி தாவரங்கள் கோடையில் ஏற்படும் வனத் தீ காரணமாக அழிந்து வருகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள இவற்றைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுந்தரேசன், கூடலூர் தாவர ஆய்வாளர்

-----------

பெற்றோர் வாங்கும் மிகக் குறைந்த கடன்களுக்காக குழந்தைகள் கொத்தடிமை-களாக்கப்படுவது இப்போது பரவலாகி வருகிறது. இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஏராளமான சட்டங்கள் இயற்றப்-பட்டுள்ளன. ஆனால், அவை கடுமையான நடைமுறைப்படுத்தப் படும்போது-மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முழுமை-யாகக் கட்டுப்படுத்த முடியும்.

- டி.முருகேசன், மேனாள் தலைமை நீதிபதி, டில்லி உயர் நீதிமன்றம்

-------

ஆதிதிராவிடப் பெண் பேராசிரியைகள் தங்கள் துறையில் முக்கியப் பொறுப்புகளை ஏற்கவும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும் தங்களது தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணியாற்றும் இடங்களில் பெண் உரிமைகள் மறுக்கப்படலாம். பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கும் உள்ளாகலாம். அக்கால கட்டத்தில் பெண் உரிமைக்காகப் போராடும் அமைப்புகளை நாடத் தயங்கக் கூடாது. மேலும், இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள அப்பெண் பேராசிரியைகளுக்கு சட்ட விழிப்புணர்வும் அவசியம்.

- ராமாத்தாள், தமிழ்நாடு மகளிர் ஆணைய மேனாள் தலைவி

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க!

தமிழ்த் தேசிய கூட்டணியும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் தமிழ் ஈழம் என்ற பிரிவினைவாதக் கோரிக்கையைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால், தற்போதுள்ள அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருக்கிறேன்.

- மகிந்த ராஜபக்ஷே, இலங்கை அதிபர்

----------

ராஜபக்ஷே செல்கின்ற பாதை முழுமையாக சட்டத்துக்கு விரோதமானது. உச்சகட்ட ஊழல் நடக்கின்றது. ஒப்பந்தங்களில் எந்தளவுக்கு பணம் கொள்ளை அடிக்கப்-படுகின்றது என்பது எனக்குத் தெரியும். தங்களின் குடும்பத்தை வளர்த்துவிடுகிறார்கள். அதற்காக பொதுச் சொத்துகள் சுரண்டப்-படுகின்றன. அன்று ஊழல் குற்றச்சாட்டில் அவரைச் சிறையில் அடைக்காமல் விட்டதற்காக நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசமைப்புச் சட்டப்படி தகுதியை இழந்துவிட்டார்.

- சரத் என்.சில்வா, இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

-----------

சொல்றேங்க!

ஓ... இது தான் மேட்டரா? திரும்ப அதிபராக முடியாது. ஆக, அதிபருக்கு அதிகாரத்தைக் குறைத்துவிட்டால், பிரதமராக அதிகாரம் பெறலாமல்லவா?

ராஜபக்சே ஏன் கழுத்துத் துண்டைக் கழற்றிப் போடுறான்னு தெரியுதா?

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்ட சிறுவனைத் தலையில் அடித்த பூசாரி

பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் உள்ள ஜெயநகரில் வசிப்பவர் ராஜ்குமார். இவர் செருப்புத் தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறார். சந்தோஷ் அங்குள்ள ருத்ரேஸ்வரா கோவில் பூசாரியால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து, தனது நண்பர்களுடன் கோவிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்றபோது கோவிலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த-தாகவும், அதனை வாங்கச் சென்றபோது, பூசாரி இவர்களைத் தடியால் அடித்த-தாகவும், நண்பர்கள் தப்பியோடிய நிலையில் தான் மட்டும் மாட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார் சந்தோஷ். மேலும், வெயிலில் முழங்கால் போட வைத்து தலையில் அடித்தபோது இரத்தம் வந்தவுடன், இனி கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று கூறி திட்டி அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

சந்தோசின் அம்மா, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற-போது, உன்னுடைய மகன் கோவிலில் திருட வந்தான். அதனைப் பூசாரி தடுக்க முற்பட்ட-போது, அவனே தூணில் இடித்துக்கொண்டு மண்டை உடைந்து-விட்டது. அதுபற்றி நாங்கள் புகார் கொடுத்தால் உங்கள் குடும்பத்தையே சிறையில் போட்டு-விடுவார்கள். நாங்கள் புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் என்றால் பேப்பரில் கையெழுத்துப் போட வேண்டும் என கோவில் நிர்வாகிகள் சிலர் மிரட்டி-யுள்ளனர். போலீஸார் சிலரும், சந்தோஷின் சிகிச்சைக்காக ரூ. 2 ஆயிரம் வாங்கித் தருகிறோம் எனக் கூறி வெற்றுப் பேப்பரில் கைநாட்டு வாங்கியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஜீவகாருண்யம் படும்பாடு!

ஊருக்குள் வந்து உறக்கத்தைக் கெடுக்கும் புலியைப் பிடிக்க திறந்த கூண்டொன்று தயாரானது! கவிச்சி இறைச்சி வேண்டுமே, அதற்கு ஆட்டுக்குட்டி ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டது. காருண்ய சீலர்களின் கவனமும் கவலையும் அதன்பக்கம் திரும்பியது. உயிர்வதை இது, ஒருகணமும் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

மாற்றுத் தீனி ஒன்று வேண்டுமே, இரத்த வாடையும் இருக்க வேண்டுமே, நம் வீட்டுக் குப்பையைக் கிளறிவிடும் கோழி அகப்பட்டது. தோலுரித்துத் தொங்கவிட்டால் புலிக்கு மூக்கு வேர்க்காமலா போகும்?

அது நடந்தது, அருகிலுள்ள காட்டில்!

காட்டிற்குச் சளைத்ததா நம் நாடு?

காத்துக்கு கருப்புக்கு கடாவெட்டி பொங்கித் தின்பதெல்லாம் உயிர்வதை என்று உளறக் கூடாது, பெற்ற மகளையே நரபலி கொடுக்கத் துணிந்தானே ஒரு தகப்பன் துறையூரில்... அதுவல்லவோ உயிர் வதை!

சிரிப்பாய் சிரிக்கும் ஜீவகாருண்யம்!

- சிவகாசி மணியம்

தமிழ் ஓவியா said...

நம்பிக்கைகளின் அடிப்படையில்....


நம்பிக்கைகள் பிறக்கின்றன
நம்பிக்கைகள் சாகின்றன
நம்பிக்கைகளைப் பிடித்துத் தொங்குகின்றோம்

ஒரு நம்பிக்கை ஒருவனைச் சாட்டையால் அடிக்கிறது
இன்னொருவனின் நம்பிக்கை
ஒருவனின் கழுத்தை அறுக்கிறது
ஒரு நம்பிக்கை
அசுரனைக் கொல்கிறது
இன்னொன்று அந்தணன் கொன்றால்
அவனைத் தண்டிக்காதே பிரமஹத்தி தோஷம் வருமென்கிறது

நம்பிக்கைகளுக்காகச் சண்டையிடுகிறோம்
அவைகளுக்குப் பெயரிடுகிறோம்
ஒரு நம்பிக்கையின் பெயர் ஜாதி
இன்னொன்றின் பெயர் கட்சி
நம்பிக்கை மதமாகிறது
சில நம்பிக்கைகள் நம் கண்முன்னே சாகின்றன
சில தன்னை மாற்றிக்கொள்கின்றன

கண்டால் தீட்டெனச் சொன்ன நம்பிக்கை
செத்து சுண்ணாம்பாகிவிட்டது
கணவன் சிதையில் மனைவிகளைத் தூக்கியெறிந்த நம்பிக்கையின்மேல் புல் முளைத்துவிட்டது
ஈயத்தைக் காதில் ஊற்றச் சொன்ன நம்பிக்கை
உலகத்தை விட்டு ஓடிவிட்டது
என்றோ ஒரு நாள் சாகப்போகும் நம்பிக்கைகளின் பெயரில் நேற்றும் ஒருவனை அல்லது ஒருத்தியைக் கொன்றோம் இன்றைக்கும் வளர்கின்றன நம்பிக்கைகள்
அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு!

நேரம் கிடைத்தால் நம்பிக்கைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்
அதன்அடியில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள்
இன்னொரு நம்பிக்கையின் அடியில் இருப்பவர்கள்மீது கல்லெறிந்து கொண்டிருப்பதை
எளியமனிதர்களைச் சுரண்டிக் கொண்டிருப்பதை
உங்களைத் தேடுங்கள் நீங்கள் எந்தப்பக்கம் இருக்கிறீர்கள்...?

- கோசின்ரா

தமிழ் ஓவியா said...

வீடியோ தானே எடுத்தாங்க ரேப்பா பண்ணிட்டாங்க...

காஞ்சி சங்கர மடக் கல்லூரியின் பாலியல் திமிர்ப் பேச்சு

காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மாணவிகளுடன் பேசக் கூடாது, இப்படித்தான் உடை அணிய வேண்டும், மாணவர்களை அடிப்பது, நாள்தோறும் முகச்சவரம் செய்ய வேண்டும்... என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள இப்பல்கலைக்-கழகத்தின் உள்ளே நடைபெறுவதைக் கேட்டால் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

மாணவிகள் தங்கிப் படிக்கும் இப்பல்-கலைக்கழக பெண்கள் விடுதி குளிக்கும் அறையில் கேமராக்கள் பொருத்தப்-பட்டுள்ளனவாம். மாணவிகள் புகார் கொடுத்தும் நிர்வாகத்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெளியில் சொன்னால் அவமானம் என நினைத்த மாணவிகளும் கடந்த 2 ஆண்டுகளாக அமைதி காத்து வந்துள்ளார்கள்.

கடந்த 10 நாள்களாக கேமரா விவகாரம் குறித்து விடுதிக் காப்பாளரிடம் (வார்டன்) புகார் கொடுத்தும் எந்தப் பதிலும் இல்லாததால் உடன் பயிலும் மாணவர்களிடம் கூறியுள்ளனர். வெகுண்டெழுந்த மாணவர்கள் இந்தச் செயலைச் செய்தது அங்கு மின்சார வேலை(எல்க்ட்ரீசியன்) பார்ப்பவர் என்பதைக் கண்டுபிடித்து விடுதியின் தலைமைக் காப்பாளரிடம் கூறியதுடன், கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் எந்தப் பலனும் ஏற்படாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட 400 மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். அங்கோ 2 மணி நேரமாக ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் (மீட்டிங்) இருப்பதாகவே பதில் வந்துள்ளது.

விடுதிக் காப்பாளர், பல இடத்தில் நடக்குறதுதானே, ரொம்பப் பிரச்சினை செய்தா மெமரி கார்டில இருப்பதை இணையதளத்தில் அப்லோடு செஞ்சிடுவேன்

என்றதும், கோபமடைந்த மாணவர்கள் கல்லூரியினுள் சென்று டீனிடம் முறையிட்டுள்ளனர். டீனோ, நாகரிகமாக நடந்துகொள்ளும்படிக் கூறியதுடன் பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று அறிவுரையும் கூறியுள்ளார்.

இத்தகு பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டிருந்த வேளையில், கல்லூரி நிர்வாகத்தினைச் சேர்ந்த ஒருவர், வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க என்றதும் மாணவர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் கூறியதும் மாணவர்கள் அமைதி காத்துள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் காலை முதல் தண்ணீர்கூடக் குடிக்காமல் சோர்வுடன் இருந்ததன் விளைவு, இரவு 7.30 மணிக்கு கல்லூரியின் விளக்குகள் அணைக்கப்பட்டு, காவல்துறையின் உதவியால் மாணவர்களைச் சித்ரவதை செய்து களிப்படைந்துள்ளது நிர்வாகம்.

சங்கரமடம் என்பது கொலைக்கூடாரம். பல்லாண்டுகளாக உழைக்கும் மக்களைக் கொன்றொழித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டை. அதன் ஒவ்வொரு செங்கல்லும் கொலைகளின் கதைகளையும் பாலியல் வன்புணர்ச்சியின் கதறல்களையும் சொல்லும். இந்தச் சத்தங்களை மறைக்க வேதங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றனவோ?

நன்றி: வினவு

தமிழ் ஓவியா said...



என்றும் பெரியார்தான் தலைவர்

{இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மலரும் நினைவுகள்}

வீர வணக்கம்!

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகரும், சீரிய பகுத்தறிவாளரும், திராவிட இயக்க அரசியலில் பங்காற்றியவருமான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தமது 84ஆம் வயதில் (24.10.2014) காலமானார்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை நான் தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே, நானே சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். எனது தந்தையாருக்கு இரண்டு மனைவியர். இருவரும் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள். சிறுவயதிலேயே நாடகம் பார்ப்பதில் ஆர்வம் உண்டு. அதனால் அப்போது நடக்கும் புராண நாடகங்களெல்லாம் பார்ப்பேன். அதில் கிருஷ்ணன் கதை நாடகமும் பார்த்துள்ளேன்.

கிருஷ்ணனுக்கு இரு மனைவிகள். பாமா, ருக்மணி. கிருஷ்ணனுடன் ருக்மணி சேர்ந்து பாமா வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் பாமா கதவைச் சாத்திவிடுவாள். அப்பொழுது கிருஷ்ணன் பாடுவார் சத்யபாமா கதவைத் திறவாய் என்று. இந்தக் காட்சிகளையெல்லாம் நாடகத்தில் பார்த்துள்ளேன். ஆனால் எங்கள் வீட்டில் உள்ள எனது தந்தையாரின் இரு மனைவியரும் ஒற்றுமையாக இருப்பார்கள். எங்க அம்மாவும், சின்னம்மாவும் வித்தியாசம் பார்க்காமல் எங்களிடம் பாசம் காட்டுவார்கள். கடவுளுடைய யோக்கியதை இப்படி மோசமாகவுள்ளதே. நம்ம வீட்டில் எவ்வளவோ நன்றாக உள்ளதே என்று சிந்தனை செய்யத் தொடங்கினேன்.

இது டி.கே.எஸ். கம்பெனியில் இருந்தபோது பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு அடித்தளமாக இருந்தது. அங்கு வரும் பெரியாரின் பத்திரிகைகளையெல்லாம் படிப்பேன். விவாதங்கள் செய்வேன். நாடகக் கம்பெனி ஊர் ஊராகச் செல்லும்போது கும்பகோணம் சென்றோம். அங்கு கே.கே.நீலமேகத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வீட்டில் அய்யாவின் படம் இருக்கும். அய்யா நூல்களைப்பற்றி சொல்லுவார். அதுவரை அய்யா அவர்களை நான் பார்த்ததில்லை. அப்படியே ஒவ்வொரு ஊராகச் சென்றோம்.

*****

பெரியார் அவர்களைச் சந்தித்தேன். அடிக்கடி சந்தித்தேன். அவருடன் பேசினேன். சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பேன். சில சமயங்களில், விவாதமே செய்வேன். அது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சின்னப் பையன்தானே என என்னை நினைக்காமல், பொறுமையோடு, நிதானமாகப் பதில் சொல்வார். தந்தை பெரியாரும் சில சமயங்களில் எங்கள் நாடகங்களைக் காண வருவார். அங்குள்ள திராவிடர் கழக நண்பர்களுடன் எனக்குப் பழக்கமேற்பட்டது.

அங்கு அய்யா அவர்கள் பண்பாட்டைக் கண்டு வியந்தேன். சிறு வயதினனான என்னை வாங்க... போங்க... என்று அழைத்தார். அப்போது நான் துருதுருவென துடிப்புடன் இருப்பேன். ஏராளமாகக் கேள்விகள் கேட்டேன். பொறுமையுடன் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல பதில் சொல்வார்.

*****

சம்பூர்ண இராமாயணம் திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். ஏன் நடிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சொன்னேன், எனக்கென்று ஒரு கொள்கை உண்டு. அது பெரியார் கொள்கை. நான் முதலில் கழகத்துக்காரன். இரண்டாவதுதான் தொழில் என்று சொன்னேன். இதனால்தான் என்னை அண்ணா அவர்கள் இலட்சிய நடிகர் என்று அழைத்தார்கள். அதுவே எனக்குப் பட்டமாயிற்று. யார் யாரோ இன்று வேஷம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் ராஜேந்திரன் ஒரு கொள்கையுள்ள நடிகர். எனக்குக்கூட ஆசைதான். ராஜேந்திரன் நடிக்க மறுக்கும் வேடங்களில் வேறு யாராவது நடித்து பணம் வாங்கிச் சென்று விடுவார்களே, இவரே நடிக்கலாமே என்று. அதனால் பல லட்சங்கள் அவருக்கு இழப்புதானே? ஆனால் அவரைப் பாராட்டுகிறேன் என்று அய்யா அவர்களே என்னைப் பாராட்டினார்கள்.

*****

மூட நம்பிக்கைகளை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அய்யா கருதினார். எங்கெல்லாம் தவறு இருக்கிறதோ அதை வெளிப்படையாகத் தட்டிக்கேட்டவர் தந்தை பெரியார். அவருக்கு முன்பு அப்படி ஒரு தலைவர் தோன்றியதில்லை. இறுதியில் தந்தை பெரியாரின் கொள்கைதான் நிற்கும்.

தந்தை பெரியார் அவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப்பேச மாட்டார்கள். மதவாதிகளையோ, அரசியல் வாதிகளையோ, பிற்போக்குவாதிகளையோ அவர்களின் கொள்கைகளைத்தான் கண்டித்துப் பேசுவார்.

*****

என்றைக்கும் எனக்கு அய்யா ஒருவர்தான் தலைவர். அவர் கொள்கையைத்தான் நான் இன்றும் கடைப்பிடிக்கிறேன்.

நேர்காணல்: மணிமகன்
தந்தை பெரியார் 125ஆம் பிறந்த நாள் மலர் (2003)

தமிழ் ஓவியா said...

சட்டத்தால் மட்டுமே மூடநம்பிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரமுடியாது

அமைச்சர் உமாசிறீ

துமக்குரு, நவ.4- கர் நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உமாசிறீ சட்டத்தால் மட் டுமே மூடநம்பிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று கூறினார்.

அவர் கூறும்போது, மகப்பேறுபெற்ற பெண் கள், மாதவிலக்கு உள்ள பெண்கள் வீட்டைவிட்டு வெளியே இருக்க வேண் டும் என்கிற மனிதத் தன் மையற்ற, மூடநம்பிக்கை செயல்கள் கடுகொல்லா வகுப்பினரிடையே இருப் பதை சட்டத்தால் மட் டுமே முடிவுக்குக் கொண்டு வரமுடியாது என்று கூறினார்.

2.11.2014 அன்று செய் தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் உமா சிறீ கூறும்போது, கல் வியும், விழிப்புணர்வும் மட்டுமே மக்களிடமுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கைகளிலிருந்து மாற்றங்களைக் கொண்டு வரும். மூட நம்பிக்கை களைத் திணித்து அதை வளர்ப்பவர்கள்மீது கடு மையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடுகொல்லா வகுப் பினரின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சி தேவை யான அளவீடுகளை மாநில அரசு எடுக்கும் என அமைச்சர் உமாசிறீ உறுதி கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, லம்பானி தாண் டாஸ், வத்தாரா தாண் டாஸ் மற்றும் கொல்லார ஹட்டிஸ் ஆகியவை வருவாய் கிராமங்களாக உயர்த்தப்படும் என்றார்.

துமக்குரு மாவட்டத் தில் குனிகல் வட்டத்தில் டி.ஹோசஹள்ளி, கொல் லாரஹட்டி ஆகிய பகுதிகளில் மகப்பேற்றை பெற்ற தாய்மார்கள் வீட் டுக்கு வெளியே ஒரு குடி சையில் தங்கியிருந்ததை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/90497.html#ixzz3I6i0cy14

தமிழ் ஓவியா said...

யார் பொறுப்பு?



கிருட்டினகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த கண்ணதாசன் (வயது 23) அர்மேனியாவில் மருத் துவக் கல்லூரியில் படித்து வந்தார். முதலாண்டுக்கான கல்விக் கட்டணம் நிலத்தை விற்று சரி செய்யப்பட்டது.

இரண்டாம் ஆண்டுக் கட் டணத்தைக் கட்ட முடியாத நெருக்கடி. ஒன்றரை ஆண் டுக்குமுன் போச்சம்பள்ளி யில் உள்ள இந்தியன் வங்கியில் கல்விக் கடன் கேட்டாராம். வங்கி விண்ணப்பமே தரவில்லையாம். உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ரூ.20 லட்சம் கடன் தர நீதிமன்றம் உத்தர விட்டும் கடன் தராததால், மாணவன் கண்ணதாசன் அர்மேனி யாவிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

இந்தப் பரிதாப நிலைக்கு யார் பொறுப்பு? பெரும் பண முதலைகள் வாங்கிய கட னைத் திருப்பிக் கொடுப்ப தில்லை; தள்ளுபடி செய்யும் வங்கி கல்விக் கடனைக் கொடுப்பதில் மட்டும் ஏன் அலட்சியம்?

Read more: http://viduthalai.in/e-paper/90496.html#ixzz3I6iJ6u3p

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைகளை ஊடகங்கள் பரப்பக் கூடாது கருநாடக முதல்வர் வேண்டுகோள்

பெங்களூரு, நவ.4- கருநாடக மாநில முதல் வர் சித்தராமையா ஊட கங்கள் மூடநம்பிக்கை களைப் பரப்பக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மின்னணு ஊடகங்கள் பல்வேறு வகையிலான மூடநம்பிக்கைகளைப் பரப் புவதிலிருந்து விலகியே இருக்க வேண்டும்.

டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் சார்பில் விஜய கருநாடகா 15ஆம் ஆண்டு விழாவில் கரு நாடக முதல்வர் சித்தா ராமையா கலந்துகொண்டு பேசும்போது, ஊட கங்கள் பகுத்தறிவு மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புவதில் கவனம் கொள்ளவேண்டும் என்று பேசினார்.

கெட்ட வாய்ப்பாக பல தொலைக்காட்சி அலைவரிசைகள் ஜோதி டம் மற்றும் வாஸ்து, அற்பமான குடும்பப் பூசல் கள் குறித்த நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக ஒளி பரப்பிக் கொண்டிருக்கின் றன. இடைக்காலத்தில் நவீன, அறிவியல் காலத்தை நோக்கிய பார்வை ஊட கங்களுக்கு இருக்க வேண் டும் என்றார்.

அவர் கூறும்போது, குறைந்தது ஒரு மணி நேரம் முக்கிய செய்தித் தாள்களை வாசிப்பதிலி ருந்தே அந்த நாளுக்குரிய பணிகளைதான் தொடங் குவதாகக் கூறினார். உண்மையான பிரச்சி னைகளில் ஊடகங்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். பொறுப்புணர்ச்சி மற்றும் முதிர்ச்சியுடன் வளரும் உணர்வு மற்றும் தங் களையே உள்ளாய்வு செய்துகொள்ளவும் வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/90495.html#ixzz3I6idz700

தமிழ் ஓவியா said...

கூட்டு முயற்சியாம்

இலங்கை - இந்தியா இராணுவங்களுக்கிடையே கூட்டு இராணுவ பயிற்சி இலங்கையில் யுவா - குடோயா ராணுவ முகாமில் தொடங்கியது. நவம்பர் 22 வரை நடைபெறுமாம்.

இந்தியாவில் நடந்தால் எதிர்ப்பு வரும் என்று இலங்கையில் இந்தப் பயிற்சி நடந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். இலங்கைக்குச் செய்யப்படும் தூசி அளவு உதவியாக இருந்தாலும் அது ஈழத் தமிழர் ஒழிப்புக்கே பயன்படும் என்பது மட்டும் உறுதி. இந்தப் பயிற்சியையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

-----------

விளையாட்டைப் பார்ப்பது குற்றமா?

இரானில் வாழும் கலானி என்ற பெண்மணி, இரானில் உள்ள ஆஸாதி விளையாட்டரங்கில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியைக் காணச் சென்றதற்காகக் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளார்.
கைப்பந்துப் போட்டியை ஒரு பெண் பார்ப்பது கூடக் குற்றமா? இதில்கூடவா மதம்?

-----------

தந்திரம்!

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ஒரே ஒரு முஸ்லிமைக் கூட வேட்பாளராக நிறுத்தாத பி.ஜே.பி. காஷ்மீர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மட்டும் 11 முசுலிம் வேட்பாளர்களை நிறுத்துகிறதாம். வேறு வழியில்லை என்கிற பட்சத்தில்தான் இந்த முடிவு என்பதை மறந்து விடக் கூடாது.

Read more: http://viduthalai.in/e-paper/90499.html#ixzz3I6inRVKX

தமிழ் ஓவியா said...

நெடும் தூக்கத்தில் இருக்கும் நிவாரணப் பணிகள்


தமிழ்நாட்டில் இவ்வாண்டு அதிக மழை பெய்திருக்கிறது. கடந்த பல ஆண்டுக் காலமாக தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலை. இவ்வாண்டு மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டாலும், தண்ணீர் கடைமடை போய்ச் சேரவில்லை என்று டெல்டா பகுதி விவசாயிகள் வேதனைக் குரலை வெளிப்படுத்தினர்.

ஆறு, வாய்க்கால்கள் தூர் வாரப்படாதது தான் இதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பாக பொதுப் பணித்துறை மீது விவசாயிகள் ஒரு மனதாகக் குற்றஞ்சாட்டினார்கள்.

விவசாயம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான துறையாக இருக்கும் பொழுது, அதற்கான முன் கூட்டியே செய்யப்பட வேண்டிய ஆயத்தப்பணி களைச் செய்வதைவிட அரசுக்கு வேறு என்ன வேலைதான் இருக்க முடியும்? அதுவும் அதற்கென்றே ஒருதுறை இருக்கும் பொழுது திட்டமிட்ட வகையில் செயல்பாடு இல்லை என்பது எந்த வகையிலும் மன்னிக் கப்படவே முடியாத குற்றமாகும். அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே இந்தக் குறைபாடு சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் ஏன் உறக்கமோ தெரியவில்லை.

காலந் தாழ்ந்து விவசாயப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு அறுவடை செய்யப்படும் கால கட்டத்திலோ கன மழை பொழிந்து பயிர்கள் நீரில் மிதந்து அழுகும் நிலைக்கு ஆளாகி விட்டன. போதிய வடிகால் வசதி இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார்கள் விவசாயப் பெருங்குடிமக்கள். இந்த விவசாயத் தொழில் என்ன பாவம் செய்ததோ என்று விவசாயிகள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் புலம்பி வருகின்றனர்.

கருநாடக மாநிலம் காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை. அதனால் விவசாய தொழில் தமிழ்நாட் டில் நசிந்து விட்டது என்று நியாயமான குற்றச்சாட்டை முன் வைக்கின்றோம். ஆனால், தமிழ்நாடு அரசோ, அந்த விவசாயம் நிமிர்ந்து நிற்பதற்கான வழிமுறை களை, திட்டங்களைச் செயல்படுத்துவதில்லையே இதற்கு எங்கே போய் முட்டிக் கொள்ளுவது?

ஒன்று காஞ்சி கெடுக்கும் அல்லது பெய்து கெடுக் கும் இயற்கை என்ற பழமொழி தஞ்சை மாவட்டத்தில் அதிகமாகச் சொல்லப்படும் ஒன்றாகும்.

விவசாயத்தையே தம் வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கு இயற்கையின் உற்பவத்தின்மீது இத்தகு நேரத்தில் கோபம் கொள்வதைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். நமது கவலையெல்லாம் பருவ காலச் சூழலுக்கு ஏற்ப அரசால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் ஏன் சோம்பிப் போயின என்பதுதான்!

இது ஒருபுறம் இருந்தால், கன மழை காரணமாக எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் அவலம் - குறிப்பாக தலைநகரமாகிய சென்னையோ அவலத் தின் உச்சமாகும். இலட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் ஒரு தலைநகரம் தொடர்ந்து 24 மணி நேரம் மழை பெய்தால் அதனைத் தாக்குப் பிடிக்கும் வலுவில் இல்லை; பள்ளிகளுக்குத் தொடர்ந்து விடுமுறை அறிவிப்பு!

எப்படியோ சமாளித்து பிள்ளைகள் பள்ளிகளுக்குச் சென்றாலும் பள்ளிகளைச் சுற்றியே குளம் மாதிரி தண்ணீர்த் தேக்கம்.

வீடுகளுக்குள்ளேயே தண்ணீர் புகுந்து ஏழை எளிய மக்கள் அல்லாடும் அவலத்தைத் தொலைக் காட்சிகளில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

பாம்புகளும், விஷப்பூச்சிகளும் வீட்டுக்குள் விருந் தினர்களாக வரும் கொடுமை! வறுமைதான் எவ்வளவு பெரிய கொடிய நோய்!

தண்ணீர் ஆங்காங்கே தேங்கிக் கிடப்பதால் கொசுக்கள் அதன் காரணமாக தொற்று நோய்கள், டெங்குக் காய்ச்சல் பரவி வருவதாக அபாய அறிவிப்பு. மாநகராட்சி நடத்தும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பஞ்சம் என்ற நிலைமை.

கிபீமீஹ் கிமீரீஹ்ஜீவீ வகைக் கொசுக்களால் டெங்கு பரவுகிறது வீட்டைச் சுற்றி நீர் தேக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். ஏடுகளிலும் அந்த அறிவிப்பு வந்து கொண்டுதானிருக்கிறது.

வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்குவதற்கு அங்கு குடியிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களா பொறுப்பு? அவர்களால் என்னதான் செய்ய முடியும்? தேங்கிய தண்ணீரை இறைக்கும் வேலையையும் மாநகராட்சி தானே செய்ய வேண்டும்?

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளில் முதன்மையான இடம் கோயில்களுக்குதான் ஆக்கிர மிப்புகளால் வடிகால் அடைபட்டுப் போகும் நிலையில் தண்ணீர் வெளியேற வாய்ப்பு எங்கே இருக்கிறது? இதைப்பற்றி எல்லாம் அரசு அதிகாரிகள் சிந்திக்க வேண்டாமா?

ஓர் ஆண்டு ஏற்படும் அவலங்களைக் கவனத்தில் கொண்டு, அடுத்த ஆண்டிலாவது அந்தக் குறை பாடுகள் ஏற்படாமல் தவிர்த்திட முன் கூட்டியே திட்டமிட்டு தேவையான பணிகளைச் செய்து முடிக்க வேண்டாமா?

கடும் மழையால் மக்கள் பாதிப்புக்கு ஆளான நிலை யில் கடுமையான பணிகளைப் போர்க்கால அடிப் படையில் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசோ சொந்த கட்சிப் பிரச்சினை என்னும் சூழலில் சிக்கிச் செயலிழந்து கிடக்கிறது!

எத்தனை நாட்கள் தான் துக்கத்தை அனுசரித்துக் கொண்டு இருக்க முடியும்? அதிலிருந்து விடுபட்டு, அரசு தன் கடமையைச் செய்ய முன் வர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கிய வேண்டுகோள்!

Read more: http://viduthalai.in/page-2/90503.html#ixzz3I6j0CFb6

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். ஷாகா பஞ்சாபில் எதிர்ப்பு


சண்டிகர், நவ. 4- காங்கிரசு கட்சியின் மக்களவைத் துணைத்தலைவர் அமரீந்தர்சிங் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஷாகாக்கள் பயிற்சி நடைபெறுவதன்மூலம் மதவெறிக்கே இடம் ஏற்படும். அதன் எதிர்விளைவாக சில இடங் களிலும் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என்று கூறியுள்ளார்.
கேப்டன் சிங் தொகுதியான அமிர்தசரசில் தொண்டர்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆர்.எஸ்.எஸ். தலைமையில் உள்ளவர்கள் ஷாகாக் களை கிராமப்புறங்களில் நடத்த முடிவு செய்து உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். பயிற்சியான ஷாகாக்கள் நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அகாலிதளம் மற்றும் பாஜகவினரிடையே உள்ள வேற்றுமைகள்குறித்து கேப்டன் சிங் கூறும்போது, பஞ்சாப் மக்கள் பாஜகவிடம் எந்த அளவில் ஏமாற்றமடைந்தார்களோ அதே அளவில் அகாலி தளம் கட்சியிடமும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாஜக அல்லது அகாலிதளம் சேர்ந்தோ அல்லது தனித்தோ களம்காண்பார்களா என்பது முக்கிய மல்ல. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்றார்.

மேலும் கேப்டன் சிங் கூறும்போது, பஞ்சாபில் உள்ள பாஜக இப்போதுள்ள நிலையில் அகாலி தளத்துடன் இணைந்திருக்கிறது. அதன் பங்காக குற்றங்களிலும் கூட்டாக இருப்பதிலிருந்து விடுபட முயன்றாலும், அதன் பயனை அனுபவிப்பதாக இருந்தாலும் பாஜக இந்த காலகட்டத்தில் அகாலி தளத்துடனான உறவிலிருந்து விடுபட முடியாது. ஆளும் அரசில் கூட்டணியாக இருப்பதிலிருந்து மூட்டைகட்டிக்கொண்டு செல்ல வேண்டியதுதான். பஞ்சாபில் ஊழல்குற்றத்தில் அதிகம் உள்ளவர் களாக அதன் அரசும், அதன் தலைவர்களும் உள்ளனர். 1984ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத் தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சம் நிவாரணம் என்னும்போது, பஞ்சாபில் தீவிரவாத வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர் களுக்கும் சம அளவில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கேப்டன் சிங் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/90516.html#ixzz3I6kr95Dm