Search This Blog

13.11.14

புதிய கொள்கை ஏன்? - பெரியார்

புதுச்சேரியில் சுயமரியாதை மகாநாடு
அக்கிராசனரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!

எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப்பத்திரங்கள் வாசித்துக் கொடுத்ததற்கு நன்றி செலுத்துகிறோமாயினும், எங்கள் வரவைப் பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய்திருப்ப தாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று பிரயாசைப்பட்டு இம் மகா நாட்டிற்கு அனுமதி பெற்றதாகவும் தெரிகின்றது. எந்த இயக்கமானாலும் எதிர்க்கிளர்ச்சி இருந்தால்தான் ஒழுங்காகவும், பலமான அமைப்பாகவும் விளக்கமாகவும் முன்னேற்றமடையும்.

உதாரணமாக, இவ்வளவு கிளர்ச்சியாவது இங்கு நடந்திருக்கா விட் டால் அதிசயமாகத்தகுந்த இவ்வளவு பெரிய கூட்டம் இங்குக் கூடியிருக்க முடியுமா? எங்கள் வரவில் இவ்வூர் பொது ஜனங்களுக்கு இவ்வளவு கவனம் ஏற்பட முடியுமா? என்று பாருங்கள். அநேகமாக நாங்கள் போகின்ற ஊர் களில் எல்லாம் எதிர்க்கிளர்ச்சியே எங்கள் பிரசாரத்திற்கு மெத்த அனுகூல மளித்து வருகின்றது. நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்கு எங்களுக் காகச் செய்யப்படும் மரியாதைகளில் முதலாவது அங்குள்ள கோவில்களை அடைத்துப் போலீஸ் காவல் போடுவதும், “நாஸ்திகர்கள் வருகிறார்கள்” என்று ஊருக்குள் பிரசாரம் செய்து எங்கள் கூட்டத்தை நடத்த விடக் கூடா தென்று அரசாங்கத்திற்கு மனுச் செய்து கொள்ளுவதுமேயாகும். இந்தக் காரியங்கள் செய்யப்படுவதால் நாங்கள் வரும் விஷயங்கள் தானாகவே பரவி, பொதுஜனங்கள் அப்படிப்பட்ட ஆட்கள் அதாவது நாஸ்திகர்கள் என்பவர்கள் எப்படியிருப்பார்கள், அவர்கள் என்னசொல்லுவார்கள் என்பதை பார்க்கலாம், கேட்கலாம் என்பதாகவே அநேகர் வந்து எங்களைப் பார்க்கவும், நாங்கள் சொல்வதைக் கேட்கவும் ஏற்பட்டுவிடு கின்றது. இந்தக் காரணங்களால் எதிர்க் கிளர்ச்சிக்காரர்களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

உதாரணமாக, மலேயா நாட்டுக்கு நாங்கள் எவ்வளவோ இரகசிய மாகப் போயும் அங்குள்ள எதிர்க்கிளர்ச்சிக்காரர்களின் செய்கைகளின் பயனாய் மலேயாவில் இதுவரை பிரசாரம் செய்ய எந்த இந்தியருக்கும் ஏற்பட்டிராத பெரிய சௌகரியங்கள் எங்களுக்கு ஏற்பட்டது. அங்கு சுமார் 150 பேர்கள் ஒரு மகஜருடன் போலீஸ் இலாக்காதலைமை அதிகாரியைப் போய்ப் பார்த்து ஈரோடு இராமசாமியையும் அவர்கள் கோஷ்டியாரையும். மலாய் நாட்டுக்குள் விட்டால் பெரிய கலகங்கள் நடந்து விடுமென்று தெரிவித் தார்களாம். அதற்கவ்வதிகாரியானவர் அவ்வளவு பெரிய கலகங்கள் நடக்கும் படியாக அவர்கள் என்ன விதத்தில் அவ்வளவு கெட்ட காரியம் செய்வார்கள் என்று கேட்டாராம். அதற்கவர்கள் எங்கள் சீதையைக் குற்றம் சொல்லுகிறார் கள் என்று சொன்னார்களாம். அதற்கவ்வதிகாரி சீதை யென்றால் என்ன என்று கேட்டாராம். அதற்கவர்கள் சீதையென்றால் எங்கள் கடவுளின் மனைவி என்று சொன்னார்களாம். அதற்கு அவ்வதிகாரி எங்களிலும் சிலர் இயேசு நாதரின் தாயாராகிய மரியம்மாளைக் குறித்துப் பேசுவதில் சிலர் பலவித சந்தேகத்தைக் கிளப்பி விடுகின்றார்கள். அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? வருபவர்கள் சீதையைக் குற்றம் சொன்னால் நீங்கள் ஒரு கூட்டம் போட்டு அவர்கள் சொல்லுகிறபடி சீதை குற்றவாளி அல்லவென்று சொல்லுங்கள். அதற்கு தைரியமும் ஆதாரமும் இருந்தால் பயப்படதேவையில்லை என்று சொல்லி வருகின்றவர்களின் சுற்றுப் பிரயாணத்தை நடத்திக் கொடுக்க வேண்டிய வேலை தங்களுடையது என்று சொல்லி மகஜர்காரர்களை எச்சரிக்கை செய்தனுப்பினாராம்.

ஆகவே அது போலவே இங்கும் எங்கள் பிரசாரத்திற்கு சில மக்கள் பயந்து விட்டது ஆச்சரியமாக இருக்கின்றது.

நிற்க, சகோதரர்களே, என் வார்த்தைகளை யெல்லாம் நிராகரித்து விட உங்களுக்குப் பூரண சுதந்திரமுண்டு. அதை மறுத்துப் பேசவும் உங்களுக்குச் சுதந்திரமுண்டு. ஒருவருடைய அபிப்பிராயத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பது நியாயமாகாது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல எனக்கு சுதந்திர முண்டு என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும். அதைத் தடுப்பது என்பது ஒரு காலும் மனிததர்மத்தில் சேர்ந்ததாகாது. நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்திரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகாது. எங்களுக்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும்? நாங்களும் மனிதர்கள்தானே? எந்த மனிதனுடைய, எந்த அரசாங்கத்தினுடைய தனிப் பட்ட காரியங்கள் எதிலும் நாங்கள் பிரவேசிப்பதில்லையே. பொதுப்பட்ட காரியங்களில் பொது ஜனங்கள், நன்மை தீமைகளில் மற்ற எல்லாருக்கும் உள்ளது போன்ற உரிமை எங்க ளுக்கும் உண்டு என்பதில் நாங்கள் சிறிதும் விட்டுக் கொடுக்க இசையோம். எங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறு பட்ட வர்கள் தக்கப் பதிலையும் ஆதாரத்தையும் உடையவர்களானால் நாங்கள் பேசுவதைத் தடுக்கவோ எங்கள் மீது ஆத்திரப்படவோ சற்றும் அவசியம் ஏற்படாது. ஆதார மற்றவர்கள், தந்திரத்தில் வாழ்பவர்கள், அமட்டலிலும் மிரட்டலிலும் மக்களை ஏமாற்றி காலம் கழிப்பவர்கள் முதலானவர்களுக்குத் தான் எங்களைப்பற்றி பயம் ஏற்படக்கூடும் கோபமும் ஆத்திரமும் வரக் கூடும். ஆனால் அதற்காக நாங்கள் என்ன செய்வது? அஸ்திவாரமற்றவை களும், புரட்டுகளும் என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்கு சாய்ந்து விழுந்து தான் தீரும்.

அன்றியும் அதைக் காப்பாற்ற முயற்சிக்கும் நாளெல்லாம் வீண் நாளாகத்தான் முடியும். வெகு நாளையப் புரட்டு என்பதாலேயே அல்லது அதிகக் கோபக்காரர்கள் முரடர்கள் தந்திரசாலிகள் ஆதரிக்கிற அபிப்பிரா யங்கள் என்பதாலேயே எதுவும் நிலைத்திருக்க முடியாது. அவையெல்லாம் இனிப் பலிக்கவும் பலிக்காது. சுதந்திர உணர்ச்சி என்பது இந்த தேசத்தில் இல்லையானாலும் சுற்றுப்பக்க தேசங்களில் இருந்து வந்து புகுந்து விட்டது. இனி அதை வெளியில் தள்ளிவிட முடியாது. ஆதலால் தடைப்படுத்த முயற்சிப்பதிலோ, கோபிப்பதிலோ பயனில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சகோதரர்களே! நாங்கள் இங்கு எந்தவிதமான மதப்பிரசாரம் செய் யவோ, ஏதாவது ஒரு மதத்தைக் குற்றம் சொல்லவோ ஒரு தனி மதத்தை ஸ்தாபிக்கவோ வரவில்லை; அதுபோலவே கடவுள் விஷயத்திலும் கடவுள் உண்டு இல்லை என்று சொல்லவோ அதன் குணத்தில், சக்தியில், விவகாரம் செய்யவோ, அதற்கும், மக்களுக்கும், மதக்காரர்களுக்குமுள்ள சம்மந்தத் தைப்பற்றியும் சுதந்திரத்தைப்பற்றியும் விவாதிக்கவோ நாங்கள் இங்கு வர வில்லை. மக்களுக்கு அறிவு என்பது உண்டு அல்லவா அதன் பயன் என்ன? அதன் சக்தி என்ன? வாழ்க்கையின் சம்பவங்களையும், உலகத் தோற்றங் களையும் அன்னியர் உபதேசங்களையும் பற்றி உங்கள் அனுபவமும் அறிவும் என்ன சொல்லுகின்றது? உங்கள் சொந்த பகுத்தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து எதையும் பரிக்ஷித்துப் பாருங்கள் என்று சொல்லத்தான் வந்திருக்கின்றோம். இதில் என்ன பிசகு ஏற்பட்டு விடக் கூடும் என்பது எங்களுக்கு விளங்கவில்லை. இதற்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும் என்பதும் விளங்கவில்லை. உங்கள் சொந்த அறிவுக்கு மதிப்புக் கொடுக் கவும். அதற்கு சுதந்திரம் கொடுக்கவும் பயந்தால் மிருக ராசிகளை விட மனிதராசி உயர்ந்தது என்று எப்படிச் சொல்லிக் கொள்ளமுடியும்? மக்களை முட்டாள் தனமும் முரட்டுப்பலமும் ஆட்சி செய்யப்பட வேண்டுமா? அல்லது அறிவும் நியாயமும் ஆட்சி செய்ய வேண்டுமா? என்பதுதான் எங்கள் கேள்வி.

மனிதனின் அறிவுக்கு மேற்பட்டதொன்று உண்டு என்று ஒன்றைக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அறிவைக்கொண்டு ஆராய்ந்து பார்க்க இடம் கொடுக்காமல் “நம்பித்தானாக வேண்டும்” என்று வலியுறுத்தி அறிவைக் கட்டிப்போட்டு நாசமாக்கி மனித சமூகம் முழுவதையுமே அடிமைப்படுத்தி விட்டதாலேயே இன்று மனித சமூகம் இவ்வளவு தொல்லைக்கும், கவலைக் கும் ஆளாகி ஆகாரத்திற்கே திண்டாட வேண்டிய நிலைமை யேற்பட்டு விட்டது.

சகோதரர்களே! அசரீரி சொல்லிற்று, அருள் சொல்லிற்று, ஆகாய வாணி சொன்னாள், ஆண்டவன் சொன்னான் என்று ஏதோ ஒன்றைக்கற்பித்து எழுதி வைத்துக்கொண்டு அதன்படி நடந்தாக வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்திக் கொண்டு இருப்பதும், அவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றியாவது சந்தேகப்பட்டு விவரம் கேட்டால் அவர் மீது கோபிப்பதும், வைவதும், பழி சுமத்துவதும், கலகமாகி விடுமென்று மிரட்டுவதுமான காரியங்கள் எப்படி மனிதத் தன்மையானதும் நியாய மானதுமானவைகள் ஆகும்?

ஆண்டவன் சொன்னதானால், அருள் சொன்னதானால், அசரீரி சொன்னதானால், ஆகாயவாணி சொன்னதானால் அதற்குப் புஸ்தகம் எதற்கு? ஒருவருக்கு மற்றொருவர் சொல்லுவதெதற்கு? காதில் உபதேசிப் பதெதற்கு? தத்துவார்த்தங்கள் எதற்கு? அறிமுகப்படுத்துவதெதற்கு? என்பவைகளை மக்கள் சிறிதும் யோசிப்பதில்லை. ஏதாவது ஒன்றை ஒருவன் ஆண்டவன் சொன்னான் என்று சொல்லிவிட்டால், ஆண்டவன் எப்படி சொன்னான்? ஆண்டவன் சொன்னதாக யார் சொன்னார் என்று கூடக் கேட்கப்படாதென் கிறார்கள். தப்பித்தவறி யாராவது கேட்டுவிட்டால், வசவும், பழியும், மிரட்டலும்தான் பதிலாகயிருக்கின்றனவே யொழிய சமாதானமான திருப்தி யான பதிலென்பதே கிடையாது. ஆகவே மனிதர்கள் முதலாவதாக இந்த இடத்தில் தங்களது அறிவைப் பயன்படுத்த சுதந்திரம் பெற்றாலல்லது ஒரு நாளும் மனித சமூகம் முற்போக்கடைவதற்கே இட மில்லாது போய்விடும். ஏனெனில் உலகத்தில் பலரை சிலர் ஏமாற்ற ஆதிக்கம் செலுத்த தங்கள் தங்கள் புரட்டுகளையும் பித்தலாட்டங்களையும் ஆரம்பித்த இடமே இந்த இடம் தான் என்று நாம் காணுவதால் அந்தப் புரட்டை முதலில் வெளியாக்கி விடவேண்டும் என்று அபிப்பிராயப் படுகின்றோம். ஆதலால் தான் அந்த இடத்தை நன்றாய் பரீக்ஷிக்க வேண்டுமென்று மேலும் மேலும் வலியுறுத்து கின்றோம். இன்று உலகத்திலுள்ள பெரும்பான்மை மதக்காரர்கள் தங்கள் தங்களுக்கு தனித்தனியாக பற்பல விதமான கொள்கைகளையும் வாசகங்க ளையும் வைத்துக்கொண்டு அவர் கள் அத்தனைப் பேரும் தங்கள் தங்கள் கொள்கைகளையும் வாசகங்களை யும் ஆண்டவன் சொன்னான் என்றே சொல்லி சாதித்துக்கொண்டு அவற்றைப் பாமர மக்களுக்குள் பலவந்தமாக செலுத்திவிட்டார்கள். அதனாலேயே மக்களுக்குள் பற்பல பிரிவுகளும், மனப்பான்மைகளும், அபிப்பி ராயங்களும் காணப்படுகின்றன. இவ்வபிப் பிராய பேதங்கள் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதோடு ஒருவரை யொருவர் சந்தேகிக்கவும், வெறுக் கவும் அலட்சியமாய்க் கருதவும், எதிர்க் கவும், வஞ்சிக்கவும், அடக்கி ஆளவும் பயன்படுகின்றன. எந்த மார்க்கமாக என்று பார்த்தால் ஒவ்வொரு மதக்காரனும் தன்தன் மதத்தைச் சேர்ந்த அவதாரத்தின் மூலம், தூதனின் மூலம், ஜோதியின் மூலம் தங்கள் ஆண்டவன் சொல்லியதுதான் மேலான தென்றும், சத்தியமான தென்றும் சொல்லிக் கொண்டு அதை நிலை நிறுத்த மற்றவர்களை நம்பும்படி கட்டாயப்படுத்த முயற்சிப்பதன் மூலமே யாகும். இந்த `உணர்ச்சியையும் செய்கையையும் உலகத்தில் செல்வாக்குப் பெற்றிருக்க இடம் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை மனித சமூகத்திற்குள் ஒருவித பொதுவான ஒற்றுமையும் ஓய்வும் ஏற்படுவதற்கு இடமே இல்லை. ஆகையால்தான் இந்த இடத்திலேயே மனிதன் முதல் முதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.

நாம் இப்போது எந்த மதக்காரர்களுடைய கொள்கைகளையும் உபதேச வாசகங்களையும் எடுத்துக் கொண்டு அவை சரியா? தப்பா? என்ப தாகவோ ஆண்டவன் சொல்லா என்பதாகவோ வாதாட வரவில்லை. நம்மு டைய வேலையும் கவலையும் அவையல்ல, மற்றென்னவெனில் எல்லா மதக் காரர்களும் பெரிதும் ஒரே ஆண்டவன்தான் உண்டென்று ஒப்புக்கொள்ளு கின்றவர்களானதால் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கொள்கைகளையும் உபதேச வாசகங்களையும் அந்த ஆண்டவனே சொன்னான் என்று சொல்லு வதால் இவர்களுக்குள் எந்த மதக்காரர்கள் சொல்லுவது உண்மை யென்றும் எந்த அவதார புருஷர்கள் எந்த தூதர்கள் முதலானவர்கள் சொன்னது உண்மையாயிருக்கக்கூடியது என்றும் கண்டுபிடிப்பது எப்படி? இதற்கு என்ன பரீக்ஷை என்பவையே யாகும்:-

மேலும் இவைகளை எல்லாம் ஆண்டவன் சொன்னான் என்று நம்பும்படி கட்டாயப்படுத்துவதால் ஆண்டவன் எந்த ரூபத்தில் எந்த நிலை யில் எங்கு இருந்துகொண்டு என்ன பாஷையில் சொன்னார் என்பதில் எந்த மதக்காரர் உண்மை சொல்லுகின்றார்கள் என்று கண்டுபிடிப்பதற்குமே யாகும். மேலும் ஒரு ஆண்டவன் என்பவர் தான் சொல்லவேண்டுமென் கின்ற கொள்கையையோ, உபதேசத்தையோ மற்றும் ஏதோ ஒன்றையோ தானே ஒருவர் மூலம் சொல்லி பிறகு மற்றவர்களால் எடுத்துச் சொல்லும்படி செய்த பிறகு அவை விவாதத்திற்கும் உள்ளாயிருப்பதைப் பார்க்கும் போது உண்மை யிலேயே அவை ஆண்டவனால், சொல்லப்பட்டிருந்தால் அவைகள் ஒவ் வொரு மனிதனுடைய காதிலும் விழும்படியாகவோ அல்லது மனதிலும் பதியும்படியாகவோ அல்லது இப்பொழுதாவது அவை களை ஆண்டவன் தான் சொன்னான் என்று கருதும்படியாகவோ அல்லது குறைந்த அளவு விவாதமாவதில்லாதபடியாகவோ ஏன் அந்த ஆண்ட வனால் செய்யமுடிய வில்லை என்றும் இது ஆண்டவனால் முடியாத காரியமா என்றும் யோசிக்கப் புகுந்தால் அதிலிருந்தே அவைகள் எல்லாம் ஆண்டவனால் சொல்லப் பட்டது என்று சொல்லப்படுவது உண்மையாயிருக்க முடியுமா என்னும் சந்தே கங்கள் தோன்றுவதற்கு என்ன சமாதானம் சொல்லுவது என்பதேயாகும்.

அன்றியும் இவற்றையெல்லாம் ஆண்டவன் சொன்னார் என்று கண் மூடித்தனமாய் நம்புவது அவசியமா அல்லது ஆண்டவன் சொல்லி இருந் தால் நமக்கு ஏன் தெரிந்திருக்கக் கூடாது என்று எண்ணி ஆராய்ந்து பார்ப்பது அவசியமா என்பதுமாகும்.

நிற்க, இப்படிப்பட்ட ஒரு ஆண்டவன் ஏன் மனிதனின் அறிவுக்கு எட்டாதவனாகி விட்டான்? என்பதற்கு இதுவரை யார் என்ன சமாதானம் சொன்னார்கள்? சர்வசக்தியும், சர்வ வியாபகமும் உள்ள ஆண்டவன் ஒரு மனிதனின் அறிவுக்கும், மனதிற்கும், கண்ணிற்கும் தென்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யார் யோசித்துப்பார்த்து சமாதானம் கூறுகிறார் கள்? ஏதோ ஒரு ஆண்டவன் இருக்கின்றான் என்று மக்களை நம்பச்செய்ய வேண்டுமென்பதற்காகவோ ஒரு வாசகத்தை ஆண்டவன் சொன்னான் என்று நம்பச் செய்வதற்காகவோ உலகத்திலுள்ள மக்களின் அறிவையும், ஆராய்ச்சி யையும், சுதந்திரத்தையும் இம்மாதிரி தடைப்படுத்தி விடுவதா என்று கேட் கின்றோம். இதற்காக மனிதனின் இயற்கை ஞானத்தை தலை எடுக்கவொட் டாமல் அழுத்திவைத்து விடுவதா என்றும் கேட்கின்றோம்.

மனிதர்கள் சுதந்திரமுடையவர்களாக வேண்டுமானால் அவரவர் களுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். பிறகு அவரவர்கள் அபிப்பிராயத்தை தாராளமாய் வெளியி லெடுத்துச் சொல்ல இடமளிக்க வேண்டும். தனக்கே விளங்காததையும் மற்றொருவனுக்கு விளங்கவைக்க முடியாததையும் நம்பும்படியோ, ஒப்புக் கொள்ளும்படியோ எதிர்பார்ப்பதும் யாரையும் நிர்பந்தப்படுத்துவதும் கண்டிப்பாய் கூடவே கூடாத காரியமாகும். அது போலவே உலக மனிதர்கள் ஒற்றுமைப்பட்டு சகோதரப் பாவம் அடைய வேண்டுமானால் முதலில் ஆண்டவர்கள் தொல்லையும், மதக்காரர்களின் தொல்லையும் அவர்களின் உபதேசங்களின் தொல்லையும் ஒழிந்தாகவேண்டும் . இதற்கு ஒரு மார்க்கம் செய்தாக வேண்டும். இது செய்யப்படாதவரை மனிதன் காட்டு மிராண்டித் தனத்திலிருந்து மனிதத் தன்மைக்கு ஒருக்காலமும் திரும்பமாட்டான். 

(இதன் தொடர்ச்சி 15.03.1931 குடி அரசு) (தொடரும்)

---------------------------------- புதுச்சேரி ஜெப்ளே தியேட்டரில் 01.03.1931 அன்று நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார்ஆற்றிய உரை.குடி அரசு - சொற்பொழிவு - 08.03.1931

**************************************************************************************
                                          
            புதிய கொள்கை ஏன்?



(புதுச்சேரியில் 01.03.1931 அன்று நடைபெற்ற மாநாட்டுரையின் தொடர்ச்சி.)

சகோதரர்களே! புதிய கொள்கைகள் ஏன் என்கின்ற விஷயத்தைப் பேசுவேன் என்பதாகத் தலைவரவர்கள் குறிப்பிட்டார்கள்.

புதிய கொள்கைகள் ஏன் என்பது ஒரு கேள்வியேயாகும். அதற்குப் பதில் என்னவென்றால் நமது முன்னேற்றத்திற்குப் பழைய கொள்கைகள் பயன்படவில்லை என்பதோடு, பழைய கொள்கைகளின் பயனாய் நாம் மிகுதியும் பின்னடைந்து விட்டோம். நம்மைப் போன்ற மற்ற நாடுகள் எல்லாம் புதிய கொள்கைகளாலேயே வெகு வேகமாக முற்போக்கடைந்து வருகின்றன. புதிய கொள்கைகளின் பயனாக மக்கள் எவ்வளவோ முற்போக்கடைந்து வருகின்றார்கள்.

நம்மிடம் வேறு எந்தவிதமான நல்ல காரியங்களில் உறுதியான குணம் இல்லாவிட்டாலும், பழைய கொள்கைகளைக் குரங்குப்பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பதிலும், புதிய கொள்கைகளிடம் துவேஷமும், வெறுப்பும் காட்டுவதிலும் உலகத்தில் தாமே தலைசிறந்து விளங்குபவர்களாய் இருக் கின்றோம். ஒரு காலத்தில் காட்டிமிராண்டிகளாய் இருந்ததாகச் சொல்லப்படும் ஐரோப்பிய வெள்ளைக்காரர்கள் இன்று உலக சமூகத்தில் தலைசிறந்து விளங்கி வருவதற்குக் காரணம் புதுக்கொள்கைகளை ஏற்கத் தாராளமாய் முன்வந்து பழையக் கொள்கைகளைக் கைவிடுவதில் சிறிதும் தயக்கங் காட்டாததேயாகும்.

எவ்வளவு கீழான நிலைமையில் இருந்த ஜப்பானியர்கள் இன்று ஒரு அரை நூற்றாண்டுகளுக்குள் மிகவும் மேன்மையாய் மதித்கத் தகுந்தவர்களா கவும், மற்றவர்கள் பார்த்து அவர்களைப் பின்பற்றும்படியாகவும் ஆன தற்குக் காரணம் அவர்கள் மற்றெல்லாவற்றையும் புறக்கணித்து முன்னேற் றத்தையே தலைமையாய் வைத்துச் சிறிதும் தயங்காமல் முன்னேற்ற வழிகளைக் கைக் கொள்ளப் பல புதிய கொள்கைகளைக் கைப்பற்றி பழைய கொள்கைகளைக் கைவிட்டதேயாகும்.

ருஷியா தேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு அநாகரி கமாவும், கொடுங்கோன்மையாகவும் ஆளப்பட்டு வந்ததாக ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்சொல்லப்பட்ட தேசம், இன்று சமதர்மம், பொதுவு டைமையாகிய உண்மை ஜீவகாருண்யத்துறையில் எவ்வளவு முற்போக் கடைந்து உலகமே பிரமிக்கும்படியாகச் செய்து வருகின்றது என்பதைக் கவனியுங்கள். இதற்குக் காரணம் என்ன? அது பழைய கொள்கைகளைக் கை விடுவதிலும் புதிய கொள்கைகளைக் கைப்பற்றுவதிலும், காட்டின துணிகர மான வீரமல்லவா என்று கேட்கின்றேன்.

அது போலவே துருக்கி தேசத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அரைக்கால் நூற்றாண்டுக்குமுன் அதன் கதி எப்படி இருந்தது? ஐரோப்பா வால் எவ்வளவு வெறுக்கப்பட்டும், பயப்படுத்தப்பட்டும் இருந்து கொண்டு எவ்வளவு கவலையில் ஆழ்ந்திருந்தது. அப்படிப்பட்ட நாடு இன்று அந்த ஐரோப்பியர்களையே திகிலடையச் செய்து கொண்டிருப் பதற்குக் காரணம் என்ன? பழையக் கொள்கைகளை விடவோ, மாற்றவோ துணிந்த துணிச்சலும், புதிய கொள்கைகளைப் புகுத்த எடுத்துக்கொண்ட முயற்சியால் அடைந்த வெற்றியுமல்லவாயென்று கேட்கிறேன்.

அதுபோலவே சைனாவை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு கால் நூற்றாண்டுக் குள்ளாகவே எவ்வளவு முன்னேற்ற மடைந்திருக்கின்றது. இப் போது ஒரு வீசம் நூற்றாண்டுகளுக்குள்ளாக எவ்வளவு பெரிய காரியம் செய்யத் துணிந்து, ருஷியாவைப் பின்பற்ற ஆசை கொண்டிருக்கின்றது என்பதை யோசித்துப் பாருங்கள். இதற்கு காரணம் என்ன? பழைய கொள்கை களைப் பலிகொடுத்துப் புதிய கொள்கைகளுக்கு ஆக்கம் கொடுத்த பலன் அல்லவா என்று கேட்கின்றேன். அதிக தூரம் போவானேன்? இந்தப் பிரஞ்சு தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிரஞ்சு ரெவலூயூஷன் என்னும் உலகத் திற்கே பெரிய முதல் கிளர்ச்சியானது புதிய கொள்கைகளை அஸ்திவார மாகக்கொண்டுதானே துவக்கப்பட்டது. அதனால்தானே இன்று அது குடி அரசு ராஜ்யம் என்று சொல்லிக் கொள்ள இடமேற்பட்டது.

புதிய கொள்கைகளின் அவசியத்திற்கு இன்னும் என்ன காரணமும், உதாரணமும் கேட்கிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.

சகோதரர்களே! நமது இந்தியா தேசம் என்பது மேற்கண்ட நாடு களைப் போன்றதுதானே? சில விஷயங்களில் அவைகளைவிடச் சிறந்த தும், பெரியதும், பூர்வீகமானது மென்றுகூட நாம் சொல்லிக் கொள்ளு கின்றோமா? இல்லையா? இந்த நிலையில் நாம் அடைந்த முற்போக் கென்ன என்பதை யோசித்துப் பாருங்கள். பழைய கொள்கையைக் காப்பாற்றுவதிலும் அவை தானாகவே ஏதாவது இறந்து போய்க்கிடந்தால்கூட அவைகளை உயிர்ப் பிப்பதிலும்தானே கவலை கொண்டிருக்கின்றோம் என்று நான் சொல்வதற்கு நீங்கள் வருத்தப்படக்கூடாது என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.

நம்முடைய சனாதன தர்மப் பிரசாரமெல்லாம் பழைய கொள்கை பிரசாரமல்லாமல் வேறு என்ன பிரசாரம் என்று எண்ணுகின்றீர்கள்? நம் முடைய தொல்காப்பியப் பிரசாரமெல்லாம் பழைய கொள்கை பிரசார மல்லாமல் வேறு என்ன பிரசாரம் என்று கருதுகிறீர்கள்? நம்முடைய சமயப் பிரசாரங்கள் என்பவைகள் எல்லாம் பழைய கொள்கைப்பிரசாரங்கள் அல்லா மல் வேறு என்ன பிரசாரங்கள் என்று சொல்ல வருகிறீர்கள் என்று கேட் கின்றேன்.

மற்றும் பொதுமக்கள் பெரிதும் கவலை கொண்டு நடத்திவரும் கோவில், குளம், உற்சவம், வேதம், தேவாரம், பாடசாலை, புராணம், சாஸ்திரம், காலnக்ஷபம், ராம ராஜ்யம், அரிச்சந்திர ராஜ்யம் ஸ்தாபிக்கும் முயற்சி ஆகியவைகள் எல்லாம் பழைய கொள்கைப் பிரசாரமல்லாமல் வேறு என்ன மாய் இருக்கின்றது என்பதை யோசித்துப் பாருங்கள்.

மற்றும் ஆரிய தர்மம், பிராமண தர்மம், வர்ணாசிரம தர்மம், ஆகிய பிரசாரமெல்லாம் பழைய கொள்கைப்பிரசாரமல்லவா என்பதை நீங்களே சொல்லுங்கள். இந்த நிலைமையில் அதாவது பழைய கொள்கைகளில் இவ்வளவு தடிப்பு ஏறி இருக்கின்ற மக்களாகிய நம்மை யெல்லாம் உடைய தேசம் எப்படி மற்ற தேசங்களைப்போல் அதாவது பழைய கொள்கைகளைப் புதைத்து புதிய கொள்கைகளை விதைத்த நாட்டின் நிலையை அடைய முடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பழங் கொள்கைகளால் பயனில்லை யென்று கண்டவர்களும், புதிய கொள்கைகளால் மற்ற மக்கள் பயனடைந்து வருவதைப் பார்ப்பவர்களும் கண்டிப்பாய் பழைய கொள்கைகளை ஒழிக்கப் பாடுபட்டுத்தான் தீருவார்கள். அதைப்பார்க்கும் பழைய கொள்கைக்காரர்கள் ஆத்திரம் கொண்டு கோபித்து துவேஷித்து தங்களால் ஆன கெடுதியைச் செய்ய முன்வந்து தான் தீருவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவ் வெதிர்ப்பைச் சமாளிக்கும் குணங்கள் புதிய கொள்கைக்காரர்களுக்கு இருந்தால் தான் புதிய கொள்கைகள் வெற்றி பெற்று நாட்டையும் சமூகத் தையும் முன்னுக்குக்கொண்டுவரச்செய்ய முடியும். இல்லாதவரை இந்த நிலைமையிலேயே இருக்க வேண்டியதுதான். ஆகையால் தான் நாங்கள் எங்களால் கூடிய அளவு புதிய கொள்கைகளுக்காகப் போராட நினைத்திருக் கின்றோம். இதிலுள்ள கஷ்டங்களை நாங்கள் உணராமல் இல்லை.

நண்பர்களே! பழைய கொள்கைகள் பயனளிக்கவில்லையென்று சொல்லுவதில் நீங்கள் உண்மையான பழைய கொள்கை எது என்று பார்த்தீர்க ளானால் நமது நாட்டில் உள்ள பழங்கொள்கைகளில் எல்லாவற்றிலும் பழமை யாயிருப்பது மதசம்பந்தமான கொள்கைகளேயாகும்.

அன்றியும் நான் மேலே சொல்லப்பட்ட எல்லா நாட்டாரும் தங்களு டைய பழங்கொள்கைகள் என்பதை மாற்றி, புதிய கொள்கைகளைப் புகுத்திய தில் பழமையான தென்பதும், மதசம்மந்தமானவைகளேயாகும்.

ஆகவே அந்தக் கருத்தைக்கொண்டே நம்நாட்டுப் பழங்கொள்கை களைப்பற்றிப் பேசி புதுக்கொள்கைகள் ஏன் என்பதைப் பற்றி பிரஸ்தாபிப் பதில் மதத்தையே அடிப்படையாய் வைத்துச் சொல்லவேண்டியிருக் கின்றது. ஏனெனில் மனிதனுடைய அபிலாஷைகளும், எண்ணங்களும், நடவடிக்கை களும், மதத்துடன் பிணைக்கப்பட்டதாகவே இருப்பதால் மனிதனிடத்தில் அவனது ஆசை, எண்ணம், நடவடிக்கை ஆகியவைகளிடத்தில் எவ்வித ஒருசிறிய மாறுதலை எதிர்பார்த்தாலும் அதை மதத்திலும் மாறுபடக் காண முடிந்தால்தான் முடியும். அப்படிக்கில்லாமல் மனிதனின் நடப்புக்கு ஆதார மான பழைய மதக்கொள்கைகளை வைத்துக்கொண்டு மாறுதலை எதிர்பார்ப்ப தென்பது அடியற்ற பாத்திரத்தில் தண்ணீர் மொள்ளுவதாகவே முடியும்.

உதாரணமாக உண்மையிலேயே பழைய மதக்கொள்கைகள் என்ப வைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்காமல் இருக்குமானால் முன் சொல்லப்பட்ட ஐரோப்பா, பிரான்சு, ஜப்பான், துருக்கி, ருஷியா, சைனா முதலிய பெரிய பெரிய தேசங்களும், சமூகங்களும் இவ்வளவு பெரிய மாறுதலையும் முற்போக்கையும் அடைந்திருக்க முடியுமா என்பதை நீங்களே சற்று நிதான மாய் யோசித்துப்பாருங்கள். அதிலிருந்து புதுக்கொள்கைகள் ஏன்? என்பதற் குரிய காரணங்கள் விளங்காமல் போகாது. (தொடரும்)


--------------------------- தந்தை பெரியார்- “குடி அரசு” - சொற்பொழிவு - 15.03.1931




38 comments:

தமிழ் ஓவியா said...

ஆரியர்கள் அந்நியர்களே! பழங்குடியினர்தான் பூர்விகக் குடிகள் பிகார் முதல்வர் கருத்து


பாட்னா, நவ.13- உயர் வகுப்பினர் அனைவரும் அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள் என்று பிகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி கூறியுள்ளார்.

பிகாரில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், உயர் வகுப்பினர் எல்லாருமே அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். நம்மிடையே உள்ள பழங் குடியினர் மற்றும் தலித்களும்தான் மண்ணின் மைந் தர்கள். அவர்களாகவே கல்வி, அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். அவர்கள் பிகாரில் அரசுகளை அமைப்பதற்கு மிக முக்கியப் பங்காற்றுவர்கள் என்றார். இவரின் இந்தக் கருத்துக்கு பிகாரின் முன்னாள் துணை முதல்வர் கஷல்குமார் மோடி கூறும்போது, இவரின் இந்தக் கருத்தால் பிகாரின் வன்முறைகள் நேரிடலாம் என்றாராம்.

Read more: http://viduthalai.in/e-paper/91050.html#ixzz3IyIcOYXe

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் - கருநாடக, கேரள மாநில அரசுகள்

அரசியல் கண்ணோட்டமின்றி அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்துத் தமிழ்நாடு அரசு செயல்படட்டும்!
கட்சி அரசியல் கண்ணோட்டம் இதில்கூடாது பொது நோக்கே முக்கியம்


நவம்பர் 19இல் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

கருநாடக மாநிலத்திலும், கேரளாவிலும் சட்ட விரோதமாக அணைகளைக் கட்டுவதால் தமிழ்நாடு பெரும் அளவில் பாதிக்கப்படும் என்பதால், தமிழ்நாடு அரசு அரசியல் கண்ணோட்டமின்றி, அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து உரிய முறையில் செயல்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வரும் 19ஆம் தேதி தஞ்சையில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காவிரி நீர்ப் பிரச்சினையில் எல்லா வகைகளிலும் தமிழ்நாட்டுக்குச் சட்ட விரோதமாகவும், நியாய விரோதமாகவும் முட்டுக்கட்டை போட்டு வந்த கருநாடக மாநில அரசு, நீதிமன்ற வாயிலாகவும் பெரு முயற்சி செய்து பார்த்தது. தாம் எதிர்பார்த்த அளவுக்குத் தீர்ப்பு கிடைக்கவில்லை என்ற கோபம் ஒரு பக்கத்தில்.

தந்திரமான வழிமுறைகள்

இந்த நிலையில், வேறு தந்திரமான முறையை மேற் கொள்ளும் ஒரு வேலையில் கருநாடகம் ஈடுபட்டுள்ளது. சில மூத்த வழக்கறிஞர்களின் துர் ஆலோசனையோடு செயல்படத் தொடங்கியுள்ளது.

காவிரியின் குறுக்கே தடுப்பணை எனப்படும் நீர்த் தேக்க அணைகள் கர்நாடகத்தில் முக்கியமாக காவிரியின் குறுக்கே 20க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தடுப்பணை கோடை காலங்களில் தமிழக எல்லை யோடு காவிரியை நிறுத்திவிடும் தன்மை கொண்டது.

40 விழுக்காடு பாதிப்பு!

கர்நாடகம் குடிநீர்த் தேவை என்று கூறி கட்டிக் கொண்ட தடுப்பணைகளால் கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் விவசாயம் 40 விழுக்காடு குறைந்து விட்டது. மழைக் காலங்களில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதும் உபரி நீர் இந்த தடுப்பணைகளைத் தாண்டி தமிழகத்திற்கு வந்து சேர்ந்த பிறகு மேட்டூர் அணை நிரம்புகிறது.

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாத போது நீர்வரத்து குறைகிறது. கர்நாடகம்குடிநீர்த் தேவைக்காக திறந்து விடும் நீர் இந்தத் தடுப்பணைகளால் தடுத்து நிறுத்தப்பட்டு விடுகிறது.

மேலும் இரு அணைகள்

இந்த நிலையில் மேலும் இரண்டு தடுப்பணைகள் 48 டி.எம்.சி. நீரைத் தேக்கும் வகையில் எல்லை மாவட்ட மான மாண்டியாவில் மேகதாத் எனும் இடத்தில் கட்டும் முடிவு, மழைக் காலங்களில் தமிழகத்திற்குள் வரும் காவிரி நீரையும் தடுத்துவிடும். இவ்வளவுக்கும் காவிரி நீர்ப் பாசனம் தமிழ்நாட்டில் 34 சதவீதம்; கருநாடகத்திலோ வெறும் 18 சதவீதம்தான் என்றாலும் அடாவடித்தனமாக கருநாடகம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.

கருநாடகாவில் காவிரியின் ஒட்டம் 320 கி.மீ. இதற்குள் இரு பெரிய அணைகள் (கிருஷ்ணராஜ சாகர், கபினி) 20க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் தமிழ்நாட்டிலோ காவிரி யின் நீரோட்டம் 416 கி.மீட்டர்; கணக்குப்படி பார்த்தாலும் அதிக உரிமை தமிழ்நாட்டுக்குத்தான் என்பது வெளிப்படை.

தமிழ் ஓவியா said...

ஜப்பான் உதவியோடு காவிரியின் குறுக்கே இரண்டு தடுப்பணைகளைக் கட்ட முயற்சி மேற்கொண்டிருக்கும் கர்நாடக அரசு தற்போது இரண்டு தடுப்பணைகளில் ஒன்றை பெரிய அணையாக கட்டத்திட்டமிட்டுள்ளது. இது குறித்து கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் பாட்டில் கூறியதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பெங்களூர் நகரின் விரிவாக்கத்திற்கு ஏற்ப குடிநீர்த்தேவையை தீர்த்து வைக்கவும், மாண்டியா மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்களின் குடிநீர் தேவைக்காகவும் காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் என்கிறது கருநாடகம். அதில் ஒன்று தடுப்பணை மற்றொன்று கபினி போன்ற பெரிய அணை கட்டப்பட உள்ளது, கபினி போன்ற பெரிய அணை முக்கியமாக ஆடுதாண்டும் காவிரிப் பகுதியில் பிலிகுண்டா என்ற இட த்தில் இவ்வணை கட்டப்பட உள்ளதாகவும், இந்த அணை கட்ட இடம் தேர்வு செய்யப் பட்டுவிட்டதாகவும், இவ்வணையின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பம் மற்றும் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து வெகுதொலைவு குடிநீர் கொண்டு செல்ல நவீன தொழில் நுட்பம் குறித்து ஆய்வு செய்ய ஜப்பானிய நிறுவனம் ஒன்றின் உதவியை நாடியுள்ளதாகவும் கூறினார்.

சர்வ சாதாரணமாக கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பட்டீல் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரைக் கொடுத்து விடுவோம் என்றும் கூறுகிறார். இவர்கள் எந்தக் காலத்தில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றியிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா?

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் வறட்சி நிலவும் போது இரண்டு பெரிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் போன்ற அணைகளில் பெரிய அளவிற்கு நீர் தேக்கி வைக்கப்படுகிறது. அவ்வப்போது கர்நாடக தேவைக்கு மாத்திரம் நீர் திறந்து விடப்படுகிறது. அதுவும் தடுப்பணைகளை வந்தடைந்த உடன் அணைகளின் மதகுகள் அடைக்கப்பட்டு விடுகின்றன.

இதுதான் இந்தியத் தேசியம்

தற்போது மேலும் இரண்டு தடுப்பணைகள் ஜப்பான் துணையோடு, தொழில் நுட்பத்தோடு கட்டப்படுவதால் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடுமையான மழை பெய்தால் மாத்திரமே காவிரி நீர் கர்நாடக எல்லையைத் தாண்டும். இப்படி அணைகளைக் கட்டுவதற்குச் சட்ட ரீதியான உரிமை கருநாடகத்திற்கு உண்டா? இது நடுவர் மன்ற தீர்ப்பை மீறிய செயல் அல்லவா! புனல் மின் திட்டம் போன்றவை தொடர்பான தமிழக அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலை யில், கருநாடக அரசு மீறிச் செயல்படுவது சரியானது தானா?

இப்படி சட்ட விரோதமாக அணை கட்டுவது - கருநாடக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல; 1971இல் கருநாடக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தபோது சட்ட விரோதமாக அணைகளைக் கட்டத் தொடங்கினர். அந்தச் சட்ட விரோத செயலுக்கு மத்திய அரசும் எட்டரைக் கோடிரூபாயையும் ஒதுக்கியது என்பது வெட்கக்கேடாகும். இந்திய தேசியம் இந்தளவில் தான் உள்ளது.

நதி நீர்ப் பிரச்சினையில் அரசியல் பார்வை என்பது மிகவும் ஆபத்தானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சட்டப்படியான நீரை வற்புறுத்தி வருகிறது. கருநாடக அரசோ சட்ட விரோதமான வகையில் தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நீரைக் கொடுக்காமல் தடுத்து வருகிறது.

கேரள அரசும் சட்டம் மீறும் நிலை

கருநாடக அரசு இப்படியென்றால்

தமிழ் ஓவியா said...

கேரள அரசும் தன் பங்குக்குத் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது; முல்லைப் பெரியாறு அணையில் மூக்கை நீட்டி தோல்வி அடைந்த நிலையில் கேரள மாநிலம் பாம்பாற்றில் தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள பட்டிசேரி என்னும் இடத்தில் ரூ.26 கோடி செலவில் ஒரு புதிய தடுப் பணையைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓடும் அமராவதியாற்றுக்கு வரும் நீர் தடுக்கப்பட்டு விடும்.

தடையில்லாச் சான்று பெறவில்லை

அணை கட்டுவதற்கான ஒப்புதலை காவிரி நதி நீர் ஆணையம், சுற்றுச் சூழல் துறை, நீர்வளம், மின்சாரத்துறை ஆகியவைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறாத நிலையில், இந்த அடாவடித்தனத்தில் கேரள அரசு இறங்கி யுள்ளது. இந்தத் துறைகள் ஏன் தலையிடவில்லை என்பதும் மிகவும் முக்கியமான கேள்வியாகும்.

60 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்படும்

இந்த அணை கட்டப்பட்டால் திருப்பூர், கரூர் மாவட்டங் களில் 60 ஆயிரம் ஏக்கர் பாசனப்பகுதி முற்றிலும் பாதிக்கப் பட்டு விடும்! சுருக்கமாகச் சொன்னால் பாலைவனமாகவே ஆகி விடும்; அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இழுத்து மூடப்படும் அபாயம் ஒரு பக்கம்; திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 40 லட்சம் மக்கள் அமராவதி நீரையே நம்பி வாழ்கின்றனர். கோவை மற்றும் திண்டுக்கல் மாவட் டங்களில் 30 லட்சம் பேர் குடிநீர் உட்பட இதர தேவைக்கு அமராவதியை எதிர்பார்த்து வாழும் நிலை.

தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இதற்கு காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்ப்பைக் காட்டும் வகையிலும், மத்திய - மாநில அரசுகளின் வேக தடுப்பு நடவடிக்கைகளை வற்புறுத்தியும், 19-11-2014 அன்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மானமிகு ராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் தலைமை யில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரசுகளே சட்டத்தை மீறுவதும், நீதிமன்ற தீர்ப்புகளை உதாசீனம் செய்வதும் மக்கள் மத்தியில் சட்டத்தையும், நீதி மன்ற ஆணைகளையும் அவமதிக்கும், - மீறும் நிலைக்குத் தான் கொண்டு செல்லும். இவற்றின் மரியாதை காற்றில் பறக்க ஆரம்பித்தால் சட்ட ஆட்சி என்பது கேள்விக் குறியாகி விடும்.

மத்திய அரசு பெயருக்கேற்ப மத்தியமாக இருந்து பிரச்சினைகளைத் தீர்க்க முன் வர வேண்டும். தமிழ்நாடு அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை மரியாதை குறைவாக விமர்சனம் செய்வதை விட்டு விட்டு, அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவர்களின் கருத்துக்களையும் கேட்டு செயல்பட வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.


கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
13-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/91048.html#ixzz3IyIlb8Zq

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ரேணுகாதேவி

சென்னை தங்க சாலையில் ரேணுகா தேவி கோயிலில்; இந்தத் தேவியின் தலை மட்டும் பூமிக்கு மேல் இருக் குமாம். எலுமிச்சம் பழத் துடன் மிளகாயைச் சேர்த் துக் கட்டிய மாலையை சாத்தி தேவியைப் பூஜிக்க பூர்வ ஜென்ம வினை, தோஷங்கள் தீய ஆவிகள் அனைத்தும் ஓடி விடுமாம்.

கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள் அந்தக் கோயில் அர்ச்சகர் பக்கத்தில் பினாமியாக ஓர் ஆளை நியமித்து, எலுமிச்சம் பழம், மிளகாய் வியா பாரம் செய்ய ஏற்பாடு செய்திருப்பார்.

Read more: http://viduthalai.in/e-paper/91057.html#ixzz3IyJ82e9Z

தமிழ் ஓவியா said...

தொல்லை

வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள். - (குடிஅரசு, 19.9.1937)

Read more: http://viduthalai.in/page-2/91038.html#ixzz3IyJJXurx

தமிழ் ஓவியா said...

குஜராத் முதல்வர் மோடியும் தணிக்கைத்துறை அறிக்கையும்

மோடி முதல்வராக இருந்தபோது குஜராத்தில் நிர்மல் கிராம் புரஸ்கார் திட்டத்தில் செய்ய வேண் டியதை செய்யாமல் இன்று தூய்மை பாரதம் என பெயரை மாற்றியுள்ள மோசடியை பொதுக் கணக்குத் தணிக்கைத்துறையின் அறிக்கை தோலுரித்துள்ளது.

பொதுக்கணக்குத் தணிக்கைத்துறையின் சார்பில் அறிக்கை 10.11.2014 அன்று குஜராத் மாநில சட்டசபையில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான அங்கன்வாடி மய்யங்களில் கடந்த ஆண்டுவரையிலும் கழிப்பிட வசதி அமைக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.

2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, நிர்மல் கிராம் புரஸ்கார் எனும் மத்திய அரசின் திட்டத்தின்படி, முழுசுகாதாரத் திட்டத்தை அம்மாநிலத்தில் சரிவர நடைமுறைப் படுத்தவில்லை என்று பொதுக்கணக்குத் தணிக்கைத்துறை அறிக்கை கூறுகிறது.

பொதுக்கணக்குத்துறையின் சார்பில் குஜராத் மாநிலத்தில் முழு சுகாதாரத்திட்டம் செயல்பாடு குறித்து 2008ஆம் ஆண்டிலிருந்து 2013ஆண்டு வரையில் உள்ள காலத்தில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போதைய மத்திய அரசால் 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிர்மல் கிராம் புரஸ்கார் எனும் அத்திட்டம் 2012ஆம் ஆண்டில் நிர்மல் பாரத் அபியான் என்று பெயர் மாற்றப்பட்டது.

குஜராத்தில் ஊரகப்பகுதிகளில் முழு சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏராளமான பற்றாக்குறை இருந்துள்ளது.

இத்திட்டத்தின்மூலம் அரசு நடத்தும் அங்கன்வாடி மய்யங்கள் அல்லது ஆரம்ப பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்படவேண்டும். அதன்படி குஜராத்தில் 22,505 அங்கன்வாடிகளில் கழிவறைகள் 2009ஆம் ஆண்டில் கட்டப்பட்டன. பின்னர் 30,516 ஆக ஏப்ரல் 2012இல் இருந்துள்ளது.

குஜராத் மாநில அரசின் செயல்களின்மீதான பொதுக்கணக்குத் துறை அறிக்கையில்,30,516 அங்கன்வாடி மய்யங்களுக்கான கழிவறைகள் கட்டும் இலக்கில் 25,422 (83%) மார்ச் 2013ஆம் ஆண்டில் எட்டப்பட்டது. ஜாம் நகரில் (47 விழுக்காடு) குறைந்த அளவில் எட்டப்பட்டுள்ளது. அதனால், அங்கன் வாடிகளில் உள்ள குழந்தைகள் அடிப்படை வசதிகளை இழந்துள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் குஜராத் சட்டமன்றத்தில் வீடுதோறும் கழிவறைகள், அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும்வகையில் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்றால் கழிப்பிடம் போட் டியிடுபவரின் வீட்டில் இருந்தால்தான் போட்டியிட முடியும் என்று சட்ட முன்வரைவை நிறைவேற்றி உள்ளது.

குஜராத்தில் முழு சுகாதாரம்குறித்து தணிக்கைத் துறை அறிக்கையில் குறிப்பிடும்போது, தடுக்கப்பட்ட ஒன்றான மனித மலத்தை மனிதன் அகற்றுவது குஜராத் மாநிலத்தில் நடைமுறையில் உள்ளதாக குறிப் பிடப்பட்டுள்ளது.

உலர் கழிப்பிடம் மற்றும் மனித மலத்தை அகற்றுவதில் மனிதர்களை ஈடுபடுத்துவதைத் தடுக்கும் 1993ஆம் ஆண்டு சட்டம் இருந்தபோதிலும், குஜராத் மாநிலத்தில் 2011ஆம் ஆண்டின் புள்ளிவிவர அறிக்கையின்படி, மாநிலத்தில் மனித மலத்தை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என முழு சுகா தாரத் திட்டம்குறித்த பொதுக்கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு சுகாதாராத் திட்டம் உலர் கழிப்பிடங்களை மாற்றவும் வலியுறுத்தி உள்ளது. ஆனாலும், குஜராத் மாநிலத்தில் மனிதக்கழிவை மனிதர்களே அகற்றுவது குறித்து 1,408 புகார்கள் பதிவாகி உள்ளன. எரு மற்றும் உரங்களுக்காக மனிதக்கழிவுகளை மனிதர்கள்மூலம் இரவு நேரங்களில் அகற்றியதாக 2,593 புகார்கள் பதி வாகி உள்ளன. மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை சமுதாயத்தின் தீமை என்று அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

மனித மலத்தை மனிதன் சுமப்பது தெய்வீக சேவை - கர்மயோக் என்று நூல் எழுதியவர்தான் அன்றைய குஜராத் முதல்வர் மோடி - அதனை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியதும் இங்கு நினைவூட்டத் தக்கதாகும்.

2012ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மற்றும் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் சார்பில் குஜராத் மாநில அரசுக்கு இதுபோன்ற செயல்பாடுகளில் தம்முடைய கவலைகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளது என்பதை யும் பொதுக்கணக்குத் தணிக்கைத்துறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஊழலை ஒழிப்பதாக தோள் தட்டும் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற ஊழல் சரித்திரம் இது!

Read more: http://viduthalai.in/page-2/91039.html#ixzz3IyJTO1yM

தமிழ் ஓவியா said...

நேருவின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை
நேருவின் புத்தாக்கச் சிந்தனைகளை முன்னெடுப்போம்!

மாநிலங்களின் கூட்டமைப்புதான் இந்தியா (Union of States)
ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய தத்துவங்களைக் குறிக்கோளாகக் கொண்ட முழு உரிமை - (இறையாண்மை) உள்ள ஜனநாயகக் குடி அரசாகத் திகழ்வதற்கு மூலகாரணம் - 1947க்கு முன்பிருந்தே சிறந்த முற்போக்காளராகத் திகழ்ந்த ஜவகர்லால் நேருவும் அவரின் ஆட்சித் திறனும், தலைமையுமே ஆகும்.

நேருவின் பல்வேறு கொள்கை, அணுகுமுறைகளில் மாறுபடும் நம் போன்றவர்களுக்கும்கூட, நேருவின் தலைமை அத்தருணத்தில் கிடைத்திருக்காவிட்டால், இந்நாட்டில் மதச் சார்பின்மை இருந்திருக்காது என்ற கருத்தில் மாறுபாடு கிடையாது. சம தர்மத்தில் நம்பிக்கை உடைய, அறிவியல் மனப்பான்மை நாட்டில் பரவலாக ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய புதுமைச் சித்தர் அவர்!

மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்த சிறந்த ஜனநாயக வாதி, அவருக்குப்பின் எத்தனையோ சோதனைகள், அறைகூவல்களுக்குப் பின்னரும், இந்திய ஜனநாயகம் - அதில் பல்வேறு குறைகள் இருந்தபோதிலும் நிலைத்திருப்பதற்கு அவர் இட்ட அடித்தளமே காரணம்.

நாட்டில் அய்ந்தாண்டுத் திட்டங்கள் மூலம் அணைகள், அறிவியல் சாதனங்கள், அறிவியல் கல்வி, பெண் கல்வி இவற்றிற்குத் தம் ஆட்சியில் முன்னுரிமை அளித்தார் நேரு.

சமூக நீதிப் பிரச்சினையில், சட்டச் சிக்கல், ஏற்பட்டபோது வகுப்புவாரி உரிமைகள் செல்லாது என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தந்தை பெரியார்தம் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தை அவரே டாக்டர் அம்பேத்கரின் அரிய துணையோடு - நிறைவேற்றி சமூகநீதிக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்தார்!

வெளி உறவுக் கொள்கையில் கோஷ்டி சேராக் கொள்கையைக் கடைப்பிடித்தார்; பொதுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்கப்படுத்தினார். தனியார் துறை இருந்தது என்றாலும், எல்லாவற்றையும் அதில் கொண்டு சேர்க்க முனையவில்லை; நரசிம்மராவ், மன்மோகன்சிங் , வாஜ்பேய், மோடி அனைவரும் அவற்றை தலைகீழாக மாற்றும் புதிய பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்தி, நாட்டை திசை திருப்பி வருகின்றனர்.

மதச் சார்பின்மை (செக்யூலர்) என்பதை உளப்பூர்வமாக மதித்தவர் அன்றைய பிரதமர் நேரு.

அவரில்லையேல் இந்தியா சில ஆப்பிரிக்க நாடுகள் போலத்தான் இருந்திருக்கும்.
ஜாதி, மத மூடநம்பிக்கை, மதவெறி, பெண்ணடிமை இவை களை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தயங்காத மிகப் பெரிய பகுத்தறிவுவாதி அவர்!

அவரது பெயரைத் திட்டமிட்டு மறைக்கும் நோக்கோடு சர்தார் பட்டேலைப் பெரிதாக்கிக் காட்டும் வேலையில் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான பிரதமர் மோடி அரசு இறங்கியுள்ளது.

நேருவை ஒரு கட்சித் தலைவ ராகப் பார்க்காமல், புதுயுகத்தின் சிற்பியாக, அறிவியல் மனப்பான்மைக்கு வழி வகுத்தவராக, பல ஆண்டுகள் சிறையில் வதிந்து, நல்ல இலக்கியங்களைத் தந்த எழுத்தாள ராகப் பார்த்து அவரது 125ஆவது பிறந்த நாளாகிய இன்று அவர்தம் புத்தாக்கச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்வது, மிகவும் இன்றியமையாதது ஆகும்.


தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
14-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/91103.html#ixzz3J3Ozg6at

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பூ சுற்றும் ஏற்பாடு

இறைவனுக்குப் பூக்களைக் கொண்டு பூஜிக் கும் போது அதாவது பூக் களை இறைவன் பாதங் களில் வைக்கும் போது, காம் புப் பகுதி கீழேயும், இதழ் மேலேயும் இருக்க வேண்டு மாம். இலை மற்றும் பழத்துக் கும் இது பொருந்துமாம். எனினும் வில்வ இலை இதற்கு விதி விலக்காம். இப் படியெல்லாம் எழுதிக் குவித் துத் தள்ளியுள்ளார்களே! ஏதாவது காரண காரியம் உண்டா? ஏனிப்படி சற்றும் பொருத்தமில்லாது எழுதி வைத்திருக்கிறார்கள் தெரி யுமா?

காரணம் இல்லா மலா இருக்கும்? சின்ன சின்ன விஷயத்தை எல் லாம் கூட எவ்வளவு நுணுக்கமாக எழுதி வைத்துள்ளார்கள் பார்த்தீர்களா? என்று முட் டாள்தனத்துக்கு ஆணி அடித் துப் பூ சுற்றும் ஏற்பாடே இது.

Read more: http://viduthalai.in/e-paper/91104.html#ixzz3J3PCKoo0

தமிழ் ஓவியா said...

வேண்டும்


பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்றமாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/91094.html#ixzz3J3Pr0Wfj

தமிழ் ஓவியா said...


ஒற்றைப் பத்தி - தமிழர்களுக்கு அது தருமே புத்தி

பேரன்பிற்கினிய கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களுக்கு வணக்கம்

தாங்கள் விடுதலை நாளிதழில் நவம்பர் 1999-இல் இருந்து ஒற்றைப் பத்தி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள் அடங்கிய நான்கு தொகுதிகளையும் படித் தேன், இல்லை கருத்தூன்றிக் கற்றேன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றியும்; பகுத்தறிவை மக்களிடையே பரப்ப உழைத்த பகுத்தறிவாளர் பற்றியும், வகுப்புவாரி உரிமை பற்றியும், வகுப்புவாரி உரிமைத் திட்டத்தை நிறைவேற்றிய அறிஞர்கள் பற்றியும், அந்தத் திட்டங் களைக் கிடப்பில் போட்ட வஞ்சகப் பார்ப்பனர் பற்றியும்;

சாதி, மதம், கோயில், கடவுள், பூசை, பரிகாரம், சோதிடப் புளுகுகள் பற்றியும்;
சங்கராச்சாரிகளின் ரிஷிகளின் இழி தன்மை பற்றியும்;

பார்ப்பனர்களின் தமிழ்மொழி, இன அழிப்பு வேலைகள் பற்றியும், ஈழப் பிரச்சினை பற்றியும், பார்ப்பனர்களின் துரோகம் பற்றியும், பகுத்தறிவு, இனஉணர்வு, தமிழுணர்வு பேசி வளர்ந்த தமிழர்கள் இன்று பார்ப்பனர்களுக்கு தோள் கொடுப்பவர் களாக, பார்ப்பனர்கள் மெச்சும் வகையில் பார்ப்பனர்களையும் மிஞ்சும் வகையில் மூடத்தனத்தைப் பரப்புவது பற்றியும், தாய்த்தமிழ் அழிப்பு வேலை பற்றியும், ஏராளமான அரிய தகவல்களை ஒற்றைப் பத்தியில் தாங்கள் எழுதிய - எழுதும் அருமைன கட்டுரைகள் திராவிட இயக்கத் தோழர்களுக்கு - முதியவர்களுக்கு நினை வூட்டல் கட்டுரைகளாகவும், இளைஞர் களுக்கு - அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அரிய வரலாற்றுப் பெட்ட கமாகவும் திகழ்கின்றன. இன்றைய கல்லூரி மாணவர்கள் ஒற்றைப்பத்தி தொகுதிகளை கருத்தூன்றிப் படித்தார்களேயானால் நல்ல தமிழர்களாக, பகுத்தறிவாளர்கள்களாக மாறுவார்கள். திராவிட இயக்கப் பேச் சாளர்களுக்கு ஒற்றைப்பத்தி ஒரு தகவல் களஞ்சியமாகவே விளங்குகிறது.

பார்ப்பனத் திமிருக்கு, புறம்போக்கு பேச்சுக்கு, திரிபுவாத செயல்களுக்கு, பொய் புளுகுக்கு, செய்திகளைத் திட்டமிட்டுத் திரித்தும், இருட்டடிப்புச் செய்தும் வெளி யிடும் பச்சோந்திச் செயல்களுக்கு அவ்வப் போது தாங்கள் அடித்துள்ள ஆப்பு மிக மிகச் சிறப்பு.

தந்தை பெரியாரால் மனிதர்கள் ஆனார்கள். மான உணர்ச்சி பெற்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்! சிலர் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக் கிறார்கள் என்று மிகச்சரியாக குறிப் பிட்டுள்ளீர்கள் - ஓரிடத்தில் பாராட்டுகள்.

பகுத்தறிவாளர்களாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து இது மூடத்தனம் - மடத்தனம் என்று உணர்ந்தால் அதையாவது நீக்க ஒழிக்க வேண்டாமா? என்ற தங்களின் கேள்வியை தமிழர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் எந்த நிலையில் எந்தத் துறையில் இருந்தாலும் எண்ணிப்பார்த்து இனியாவது திருந்துவார்களா? திருந்த வேண்டும்.

இயக்கத்திற்கு தமிழ் மக்களுக்கு உழைத்த பெருமக்களின் பிறந்த நாள், நினைவு நாள், அவர்கள் செயற்கரிய செய்த நாள்களில் அந்தப் பெருமக்களைப் பற்றிய பல அரிய செய்திகளைத் தாங்கள் எழுதி யுள்ளதைப் படிக்கும்போது எனது உள்ள மும் அந்நன்நாள்களைக் கொண்டாடத் தூண்டுகிறது.

தங்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். தங்கள் ஒற்றைப் பத்தி தொடரட்டும். அது தரும் அரிய தகவல்கள் எளிய முறையில் தமிழர்களின் நெஞ்சில் பதியட்டும். பகுத்தறிவு ஓங்கட்டும். நன்றி.

- பொன்.இராமச்சந்திரன்
பம்மல், சென்னை-75

Read more: http://viduthalai.in/page-2/91099.html#ixzz3J3Q1getH

தமிழ் ஓவியா said...

தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்: அணுத்துகள் ஆய்வாளர் உரை

சென்னை, நவ.14- சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் தமிழக மூதறிஞர் குழுவின்சார்பில் 8.11.2014 அன்று சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. பொறி யாளர் பொன்.ஏழுமலை தலைமையில் தமிழக மூதறிஞர் குழு செயலாளர் மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி அனைவரையும் வரவேற்று, அய்ன்ஸ்டீன் அறிவியல் மன்ற நிர்வாகி யும், அணுத்துகள் ஆய் வாளருமாகிய நி.சித்து முருகானந்தத்துக்கு கழக வெளியீட்டு நூலை வழங்கி சிறப்பு செய்தார்.

அணுத் துகள் ஆய் வாளர் நி.சித்துமுருகானந் தம் விண்மீன்களின் பிறப் பும், இறப்பும் எனும் தலைப் பில் உரையாற்றினார்.

அவர் உரையின்போது, வளர்ச்சி அடைந்த நாடுகள் என்பவை அறிவியலில் வளர்ச்சி அடைந்த நாடு களாக இருக்கின்றன. ஏற்படக்கூடிய பிரச்சினை கள் அனைத்துக்கும் அறி வியலின் அடிப்படையி லேயே தீர்வுகள் காணப் படுகின்றன. ஆகவே, அறி வியல் உணர்வு, அறிவியல் மனப்பான்மை இன்றிய மையாத தேவைகளாக உள்ளன.

அரிஸ்டாட்டில், டெ மாக்ரைடஸ் அறிவியலா ளர்கள் ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக ஆற்றலின் சிப்பக்கொள்கை (குவாண் டம் தியரி--- னிணீஸீனீ லீமீஷீக்ஷீஹ்) இயற்பியலில் அணுத்துகள் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. ஈர்ப்பு விசையும் ஆற்றலும் பிரபஞ்சம் தோன்றுவதற்கு அடிப்படையானவையாக இருந்தன.

கோடிக்கணக்கான கோள்கள் உள்ளன. சூரியன் அதிக அடர்த்தி உள்ள கோளாக இருக்கிறது. கோள்களின் நிறைகுறித்து 70 ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆற்ற லை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. பெருவெடிப்பு என்பது எத்தனைமுறை நிகழ்ந்துள்ளது என்பது தெரியாது என பல தகவல் களை எடுத்துரைத்தார்.

ஃபர்மியான்களாகவும், போசான்களாகவும் உள்ள வைகுறித்து உரையின் போது விளக்கப்பட்டது. சுருங்குதலும், விரிதலும் தத்துவத்தின்படி பெரு வெடிப்பு நிகழ்வதும், 10இன் அடுக்கு 35 கோடி வேகத் தில் பெருவெடிப்பின்போது ஹைட்ரஜன் வெளியா வதும் விளக்கப்பட்டது. புரோட்டான்கள், எலெக்ட் ரான்கள் மற்றும நியூட் ரான்கள் பண்புகள்குறித் தும் அய்சோடோப்புகள் உருவாக்கம் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

புரோட்டான்களின் எண்ணிக்கையில் மாற்றங் கள் ஏற்படும்போது தனி மங்கள் வேறாக இருப்பதை யும், இரும்புக்கு 26, தங்கத் துக்கு 79, பிளாட்டி னத்துக்கு 78, பாதரசத்துக்கு 80 எண்ணிக்கைகளில் புரோட்டான்கள் இருப்பது குறித்து விரிவாக எடுத் துரைத்தார்.

ரசவாதிகள் என்று கூறிக்கொள்வோர் இரும்பைத் தங்கமாக்குவது என்பது பித்தலாட்டம் என் பதற்குரிய விளக்கங்களை யும் எடுத்துரைத்தார்.

மின்புலம் மற்றும் காந்தப்புலம்குறித்தும், அணுத்துகளில் எலெக்ட் ரான்களால் ஏற்படக்கூடிய மின்புலம், அதைத் தொடர்ந்து ஏற்படும் காந் தப்புலம் ஆகியவைகுறித் தும், அணுக்கருவில் மாற் றங்களால் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறுவது குறித்தும் எடுத்துரைத்தார்.

ரெட் ஜயாண்ட் மற்றும் சூரியனில் உள்ள சுழற்படிவங்கள்குறித்தும், ஹைட்ரஜன், ஹீலியம், கார்பன், ஆக்சிஜன், நியான், மெக்னீசியம், சிலிகான் ஆகியவை அணுக்கரு இணைவாக ஆற்றல் உள்ளவையாகவும், இரும்பு சாம்பல் ஆகவும் உள்ளது குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் கார்பன் டேட்டிங் எனும் முறையில் கால அளவை கண்டறிவது குறித்தும் எடுத்துரைத்தார்.

அணுத்துகள் ஆய் வாளரான சித்துமுருகானந் தம் தம் உரையின்போது, பவர்பாயிண்ட் வாயிலாக விளக்கக் காட்சிப் படங் கள்மூலம் விரிவாக பல்வேறு அறிவியல் தகவல்களை விளக்கினார்.

கூட்டத்தில் புலவர் வெற்றியழகன், குரோம் பேட்டை திருக்குறள் மய்யத்தலைவர் தெ.பொ. இளங்கோவன், கவிஞர் கண்மதியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தயாளன் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/91108.html#ixzz3J3QGnacU

தமிழ் ஓவியா said...

ஜீவாவின் பாடல்!


கொள்ளைச் சிரிப்பு வந்ததே - குப்பன்
குழவிக்கல் சாமியென்று கும்பிட்டபோது
பிள்ளைவரம் பெற்றிட வென்று - வள்ளி
பேரரசு வேப்பமரம் சுற்றியபோது
கள்ளை மொந்தையாக குடித்து - சுப்பன்
காட்டேரி ஆடுதென்று கத்தியபோது
சள்ளைதரும் பாவம் தொலைக்க - பொன்னி
சாக்கடையே தீர்த்தமென்று மூழ்கியபோது
-கொள்ளைச் சிரிப்பு
கொள்ளைச் சிரிப்பு வந்ததே - ராமன்
கோவிலுக் கழுதுபாப்ப ராகியபோது
எள்ளும் நீரும் வாரியிறைத்து - கண்ணன்
எத்துவாளிப் பார்ப்பானை வந்தித்தபோது
புள்ளினக் கருடனைக் கண்டு- சீதை
பூமியில் விழுந்து கிருஷ்ணா என்றிட்ட போது
கள்ளக்காவி வேடதாரிக்கே - லீலா
கடவுள் பணிவிடைகள் செய்திட்ட போது
-கொள்ளைச்சிரிப்பு

ப.ஜீவானந்தம்
ஆதாரம்: ஜீவாவின் பாடல்கள்

Read more: http://viduthalai.in/page-7/91139.html#ixzz3J3QzzkQE

தமிழ் ஓவியா said...

உண்மை

உண்மைதான் உலகத்தின் அறிவுச் செல் வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவ தேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்ட டம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான்.

ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவி னாலும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். துணிவு பெற்றவனால் தான் உண்மை யோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும். உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச் சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page-7/91139.html#ixzz3J3R6k2uQ

தமிழ் ஓவியா said...

சமநிலை!


உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஷ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிமகன், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகு பாடுகளை இடித்துத் தள்ளி தரைமட்ட மாக்குங்கள். அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாத தாகிய மனித சமூகம், சம உரிமை - சமநிலை என் கின்ற கட்டடத்தைக் கட்டுங்கள்.

- தந்தை பெரியார் (இலங்கையில் 1-10-1932இல் உரை

Read more: http://viduthalai.in/page-7/91141.html#ixzz3J3RPUDEL

தமிழ் ஓவியா said...

கடனாளியாக்கும் மதநம்பிக்கை

- மு.வி.சோமசுந்தரம்

மருள், மருட்சி, மடமை என்ற தன்மை பூண்ட மக்கும் குப்பைகளாக மனித இனம் அழிந்து போவதைக் கண்டு மனம் புழுங்கியவர் தந்தை பெரியார், பகுத்தறிவு அமுத மழை பொழியாததால் பாளம் பாளமாக வெடித்து வறண்ட நிலமாக காட்சிதரும் மனித நில பரப்பில் தமது தொண்டு கலப்பைக் கொண்டு உழுது தலை சாய்ந்த நெல்கதிர் காட்சி தரும் நிலையை ஏற்படுத்தியவர் வைக்கம் வீரவேளாளர் தந்தை பெரியார். இவரின் தொண்டின் நிழலில் சேர்ந்தோர் நிறைவாழ்வு வாழ்வதில் மகிழ்ச்சியுடன் உள்ளனர். நன்றி காட்டுகின்றனர். இது தமிழகத்தில் நிகழும் நிகழ்வு.
அறியாமையைத் தனது வாழ்க்கை வளத்துக்கு ஏற்ற வணிகப்பொருளாக வைத்துக்கொண்டு அறியாமை வலையில் சிக்கிய ஏனையோரை வறு மையில் வாட்டி, வாய்பூட்டிய பூச்சி களாக வைத்திருப்பவர்கள் பார்ப் பனர்கள். இவர்களின் வலையை அறுத்தெரிந்தவர்கள் தமிழகத்து தந்தை பெரியாரின் சுயமரியாதைக் காற்றை சுவாசிப்பவர்களாகத் தான் இருக்க முடியும். அந்த காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாத பகுதிகளில் இருக்கும் மக்களின் நிலை நம் அனுதாபத்துக்குரிய அபலைகள் அதனை விளக்கும் ஒரு செய்தி.

கட்டடக்கலைப் புகழ்பேசும் தாஜ்மகால் உள்ள நகரம் ஆக்ரா அதற்கு 100 கி.மீ.தூரத்திலுள்ள கிராமம் ஜட்டிபுரா அங்கு குழுமியிருந்தது பெருங்கூட்டம் 10000 மக்கள். அவர்களின் முகத்தில் துக்கத்தின் சாயல், அப்படி என்ன அந்த கிராம மக்களி டையான பிணைப்பு? அப்படி ஏது மில்லை. பாரம்பரிய கிராம வழக்கத்தின் காரணமாக கூடியுள்ளனர். மீருத்திய போஜ என்ற இறந்தவர்களுக்கான உணவு என்ற நிகழ்ச்சிக்காக கூட்டம் கூடியிருந்தது. இந்த கிராமத்தில், ஒருவர் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்தார் 10000 பேருக்கு உணவு கொடுக்க வேண் டும். இந்த வழக்கத்தின் காரணமாக இந்த கிராமத்தில் பல குடும்பங்கள் கடனில் மூழ்கித்தவித்தனர். இதற்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று எண்ணியவருள் ஒருவர், அலிகார் சிறையின் கண்காணிப்பாளர் வீர்ஷிராஜ் சர்மா, இவர் இந்தக் கிராமத்தை சேர்ந்தவர். அந்த கிராமத்து பஞ்சாயத்தார்களிடம் முறையிட்டு இந்த பழக்கத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று கேட்க முயன்றார். இந்த பஞ்சாயத்துக்காரர்கள் தாக்கூர் பார்ப்பனர்கள்.

இதைத்தான் கவனிக்க வேண்டிய செய்தி மக்களை ஏழ்மைப்படுத்தி கடன் தொல்லையில் தள்ளும் பழக்கத்திற்குத் தலைமை தாங்கி வருபவர் பார்ப்பனர்.

தந்தை பெரியார், பிற நாட்டினர் திங்களுக்குச் செய்தியனுப்பிக் கொண்டி ருக்க நாம் சிறந்த தந்தைக்காக பார்ப் பனனிடம் அரிசி, பருப்பு அனுப்பிக் கொண்டிருப்பது அறிவுடமையாகாது, என்றார். இந்த அறியாமை சிந்தனை வழிப்பட்டதே இந்த கிராமத்து பழக்கம்.

குல்தீப்சிங் அந்த கிராமத்து ஏழை விவசாயி. நான்கு குழந்தைகளுக்குத் தந்தை அவரின் தந்தை இறந்து விட்டார். கரும காரியமாக 20000 பேருக்கு சாப்பாடு போட வேண்டு மென்று கட்டாயப்படுத்தப் பட்டார். கிராமத்து பஞ்சாயத்து தலைவரிடம் 1.5 லட்சம் பணம் கடன் வாங்கினார். சடங்குகள் நடத்தினார். திருமணமா காத இரண்டு பெண்களை வீட்டில் வைத்துக்கொண்டு தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

இந்த குல்தீப்சிங்கின் தந்தை இறந்த 13 ஆம் நாள் சடங்கு பற்றி ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அவரின் தந்தை பஞ்சக் என்ற சாஸ்திர கெட்ட நேரத்தில் இறந்தார் என்று பார்ப்பனர் கூறியதால் 151 பார்ப்பனர்களுக்கு துணிமணிகளை வழங்கினார்.

(Times of India 2.10.2014 இதழில் வந்தது செய்தியாகக் கூறப்பட்டுள்ளது).

Read more: http://viduthalai.in/page2/91145.html#ixzz3J9PsPWnP

தமிழ் ஓவியா said...

பூரி சங்கராச்சாரியும் தீண்டாமையும்


மத்தியபிரதேச அரசு பூரி சங்க ராச்சாரியார் மீது தீண்டாமையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ததாக, தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு தொடுத்தது சதுர் வர்ணத்தை ஆதரித்துப் பேசியதன் மூலம் சாதியையும் தீண்டாமையையும் அவர் ஆதரித்தார் என்பதுகுற்றச்சாட்டு, பூரி சங்கராச்சாரியார் சார்பில் நீதிமன்றத்தில், சதுர் வர்ணத்தையும், கர்மாவையும்தான் அவர் பேசினார் என்றும், தீண்டாமையை ஆதரித்துப் பேசவில்லை என்றும் வாதிடப்பட்டது. நீதிபதி இதை ஏற்றுக் கொண்டு, பூரிசங்கராச்சாரியாரை விடுதலை செய்துவிட்டார். இந்தத் தீர்ப்புக்குள் நுழைந்து, நாம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

மதத்துக்கு புதிய வியாக்யானங்களை திரித்துக் கூறுவதற்கு இன்றைக்கு பல வியாக்யான கர்த்தாக்கள் கிளம்பியி ருக்கிறார்கள். மதத்தை நேரடியாகப் பிரச்சாரம் செய்யும் ஆட்களை விட வளைத்து நெளித்து திருத்தி பிரச்சாரம் செய்யப் புறப்பட்டிருக்கும் மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அறிஞர் அண்ணா அவர்கள் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க அண்ணாமலைப் பல் கலைக் கழக பட்டமளிப்பு விழா உரை யில், இத்தகைய மனிதர்களைப்பற்றி சரியான எச்சரிக்கை தந்திருக்கிறார்.

சதுர்வர்ணம் என்பது சாதியைக் குறிக்கவில்லை என்பது கடைந்தெடுத்த மோசடிப் பேச்சாகும்.

சதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம்: குணகர்ம விபாகச என்று பகவத் கீதை கூறுகிறது. நான்குவர்ணங்களும் (பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் முதலியன) என்னால் உண்டாக்கப்பட்டவைகளே அது குணங்களினாலும், கருமங்களினா லும்தான் வேறுபாடேயன்றி, மற்ற வற்றினால் அல்ல என்பது இதன் பொருள்.

இதைப் பார்த்தவுடன், உரிய கருமத்தையும் குணத் தையும் கைக் கொண்டால் எவனும் பிராமணன் ஆகி விடலாமே என்று நினைக் கத் தோன்றும்! ஆனால் ஒருவன் பார்ப்பனத் தன்மை பெற வேண்டும் என்பதற்கு என்ன சொல்கிறார்கள் தெரியுமா? கர்ப்பாதானம் முதல் அந்தியேஷ்டி வரை யினும் உள்ள பதினாறு சமஸ்காரங்கள், வேதம் ஓதுதல், கோத்திரம், நித்திய கருமங்கள் போன்றவை மூலம்தான் இந்த பார்ப்பனத் தன்மையை அடைய முடியும் என்று கூறுகிறார்கள். இதோடு விட்டு விடவில்லை. அஷ்டவர்ஷம் ப்ராஹ்மண முபனயீத், தமத்யா யீத என்று தந்திர மாகக் கூறி வைத்து விட் டார்கள். அதாவது, பார்ப் பனத்தி வயிற்றில் பிறந்த வனுக்கு அவனது எட்டா வது வயதிலேயே பார்ப்பனத் தன்மைக்கான இந்த நச்சுக் கருத்துக்களைச் சொல்லித் தர வேண்டுமாம்!

கருமங்களினாலும், குணங்களினாலும்தான் ஒருவன் உயர்ந்தவனா கிறான் என்று சொல்லி விட்டு, ஆனால் இந்த கருமங்களையும் குணங் களையும் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தவனுக்கு மட்டுமே 8 வயதிலிருந்து சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னனால் இது பச்சையான சாதி அமைப்பு என்பதைத் தவிர வேறு பொருள் என்ன? பகவத் கீதையில் சாதித் தன்மையை இன்னும் வெளிப் படையாகவே இருக்கிறது.

ஸ்ரேயான் ஸ்தர்மோ விகுண.
பாதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்:
ஸ்வதர்மோ நிதனமஸ்ரேய!
பரதர் மோபயாவஹ
(பகவத் கீதையின் அத்தியாயம் 3, பாட்டு 35)

இந்த உளறலுக்குப் பொருள் என்ன தெரியுமா? ஒரு சாதியான மற்றொரு சாதியானுடைய தர்மத்தை எவ்வளவு ஒழுங்காக நடத்தினாலும் அது நன்மையைப் பயக்காது தன் தொழிலைச் செய்யாவிடினும் அவ்வளவாகக் குற்றமில்லை. ஆனால் பிற சாதியார் தொழிலை செய்யவே கூடாது என்பது இதன் பொருள்: இதற்குப் பெயர் என்ன? பச்சை சாதி வெறி அல்லாமல் வேறு என்ன? சாதி அடிப்படை யிலேதான் தொழில் செய்ய வேண்டும் என்று பேசினால், தீண்டத்தகாத சாதி யும், தீண்டாமையும் தானாகவே வந்து விடுகிறதே!

விடுதலை தலையங்கம் 21.7.1978

Read more: http://viduthalai.in/page2/91146.html#ixzz3J9Q0mUV0

தமிழ் ஓவியா said...

கடவுள் சிலையை வணங்குவோரே கருத்தில் கொள்வீர்!


கற்பூரத்தை ஒளியாக்கிக் கண்ணிரண்டில்
நீராக்கி கவலையெல்லாம் வெளிச்சொன்னால்
கேட்கக் கல்லுக்குக் காதுண்டா?
தேங்காயை உடைத்து வைத்து
தேம்பித் தெய்வமே என்றால்
தெளிவு பெறுமா? நெஞ்சம்.
மலையளவு மலர் குவித்து
சிலையருகே நின்று வணங்கினால்
நிலைத்த வாழ்வு உண்டா நவில்வீர்!
மக்களை ஆண்டவன் படைத்தான் என்றால்
மடையரை உடன் ஏன் படைத்து வைத்தான்?
மிக்க பக்தி கொண்டவர் வாழ்வார் என்றால்
மீதமுள்ள அறிஞரும் வாழ்வது ஏனோ சொல்வீர்!

- அன்புமணி, சித்தார்த்தன், சென்றாயன், தருமபுரி

Read more: http://viduthalai.in/page2/91147.html#ixzz3J9QCFOP4

தமிழ் ஓவியா said...

தீபாவளி பின்புலம்

விடுதலை (17.10.2014 பக்.1 திருச்சி பதிப்பு)

நாளிதழில் இன்றைய ஆன்மிகம்? என்னும் பெட்டிச் செய்தியில் ஏனிந்த குழப்பம் -_ என்பது குறித்த தகவலைப் படித்தேன்.

அதில்,தீபாவளிக்கான காரணம் இடத்திற்கு இடம் வேறுபடுவது குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் நினைவு நாளை இருட்டடிப்பு செய்யும் இந்துத்துவாவின் சூழ்ச்சியேயாகும்.

பாவாபுரி அரசனுடைய அரண்மனையில், மகாவீரர் ஒரு நாள் தங்கி, மக்களுக்கு அறிவுரை வழங்கினார். விடியற் காலையில், அரண்மனையிலேயே அவர் உயிர் துறந்தார். சமண சமயத்துறவிகள் மரணமடைவதை அச்சமயம் வீடு பேறு அடைவதாகக் கூறுகிறது. இனி பிறவியில்லை என்பதன் பொருளே வீடு பேறு என்பதாகும்.

மகாவீரரின் இறுதி ஊர்வலத்தின்போது, வீடுதோறும் விளக்குகளை வரிசையாக வைக்குமாறு அரசர் மக்களைக் கேட்டுக் கொண்டார். இதை மகாவீரரின் ஒவ்வொரு நினைவு நாளிலும் பின்பற்றுவதை மக்கள் வழக்கமாகக் கடைப்பிடிக்கலாயினர். விளக்கு = தீபம், வரிசை = ஆவளி என்பது தீபாவளி சொல்லுக்கான இலக்கணமாகும் தமிழர்களிடம் மகாமுனி என்னும் பெயர் சூட்டப்படுவது மகாவீரரைக் குறிப்பதாகும். என் மருமகளின் சொந்த பாட்டியின் பெயர் ஆவளி என்பதும் உணரத்தக்கதாகும்.

(ஆதாரம்: சமணமும் தமிழும் (முதற்பகுதி) பக்.80
ஆசிரியர் திருமயிலை சீனி. வேங்கடசாமி

சமண சமயம் இந்துக்களின் வன்முறையால் வீழ்ச்சியடைந்த பிறகு, அச்சமயத்தினர் உயிர் பிழைக்க இந்துக்களாயினர். என்றாலும் தாங்கள் கொண் டாடி வந்த தீபாவளியைத் தொடர்ந்து கொண்டாடுவதைப் பின்பற்றலாயினர். இதை ஏற்றுக் கொள்ளவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட இந்துக்கள் இதன் உண்மைக் காரணத்தை மறைத்து புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைகள்தான் இடத்திற்கு இடம் வேறுபடுவதற்குக் காரணமாகும்.

இதிலும், ஓர் உள்குத்து என்னவெனில், சமணர்கள் கொண்டாடும் உண்மை தீபாவளிக்கு முதல் நாள்தான் இடத்திற்கு இடம் கட்டுக் கதைக் கட்டிக் கொண்டாடும் இந்துக்களின் தீபாவளியாகும்.

- சி. அன்பழகன், திருச்சி

Read more: http://viduthalai.in/page3/91150.html#ixzz3J9QerLF1

தமிழ் ஓவியா said...

எப்படிப்பட்டவர்கள் எல்லாம் மத்திய அமைச்சர்கள்?

இணையமைச்சர் கிரிராஜ் கிஷோர் சிங்குக்கும் 500க்கும் மேற்பட்ட தலித்துகளை கூட்டமாக வெட்டிக் கொலை செய்த ரன்வீர் சேனாவிற்கும் நேரடித் தொடர்பு.

பிகார் மனித உரிமைகள் கழகத்தின் அதிர்ச்சி அறிக்கை பிரதமர் மோடியின் அமைச்சரவை யில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கிரிராஜ் சிங் என்ற பிகார் மக்களவை உறுப்பினர் யார் தெரியுமா? பிஜ்பூர் மாவட்டத்தில் லக்மிபூர் என்ற தலித்துகள் வாழும் கிராமத்தை தாக்கி 60க்கும் மேற்பட்டோர் ரன்வீர் சேனா என்ற நில உடமையாளர் கைக்கூலி அமைப்பால் வெட்டிக்கொலை செய்யப் பட்டனர் அல்லவா! அந்தக் கொலை காரக் கும்பலான ரன்வீர் சேனாவிற்கும் கிரிராஜ் சிங்கிற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக பிகார் மனித உரிமைக்கழக ஆணையர் தெரிவித்துள்ளார்.

பிகார் மனித உரிமைக்கழக ஆணை யர் எஸ்.பி அமிதாப் தாஷ் மாநில தலைமைக் காவல்துறை ஆணையருக்கு பிகாரில் மனித உரிமைமீறிய செயலில் ஈடுபட்ட ஒரு அமைப்பிற்கு நெருங்கிய தொடர்புள்ள கிரிராஜ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் அதில் எழுதியுள்ள தாவது: ரன்வீர் சேனா அமைப்பு பயங் கரவாத செயல்களில் ஈடுபட்ட ஒன் றாகும், இவ்வமைப்பு நில உடமை யாளர்களின் கூலிப்படை போன்று செயல்பட்டு பிகார் ஜார்கண்ட் மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட தாழ்த் தப்பட்ட ஒடுக்கப்பட்ட கூலித் தொழிலாளர்களை வெட்டிக்கொலை செய்துள்ளது. இதில் ஜஹனாபாத்தில் உள்ள லக்ஷிமிபூர் என்ற தலித்துகள் கிராமத்தை 1997-ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி நள்ளிரவு அன்று 500க்கும் மேற்பட்ட ரன்வீர் சேனா வினர் சூழ்ந்தனர். தூங்கிக்கொண்டு இருந்த அனைவரையும் வெட்ட வெளியில் நிற்கவைத்து கத்தியால் வெட்டியும், ஈட்டிகொண்டு குத்தியும் கொலை செய்தனர். இதில் 16 குழந்தைகள் 27 பெண்கள் மற்றும் 40 ஆண்கள் கொலை செய்யப்பட்டனர். கொலைசெய்யப்பட்ட பெண்களில் 8 பேர் நிறைமாத கர்ப்பிணிகள் ஆவர். இவ்வளவு படுபாதகச் செயலைச் செய்த ரன்வீர் சேனா இதற்குக் கார ணம் கூறும்போது இவர்கள் நக்சலைட் டுகளாக வளருவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் நக்சலைட்டுகளை பெற்று வளர்ப்பார்கள் ஆகையால் அவர்களைக் கொலை செய்தோம் என்று அறிக்கை விடுத்திருந்தனர்."We kill children because they will grow up to become Naxalites. We kill women because they will give birth to Naxalites." மனிதத்தன்மையற்ற இச்செயலைச்செய்த கிரிராஜ் சிங்கிற்கும் இந்த ரன்வீர் சேனாவிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. ரன்வீர் சேனாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கிரிராஜ் சிங் பங்கெடுத்துள்ளார்.

மேலும் இந்திய உளவு நிறுவனமான இண்டலிஜெண்ட் பீரோவிடமும் கிரிராஜ் சிங்கிற்கும் தேசவிரோத நடவடிக்கை பெயரில் தடைசெய்யப்பட்ட ரன்வீர் சேனாவிற்கு முள்ள தொடர்பு குறித்த ஆதாரங்கள் உள்ளன. மேலும் ரன்வீர் சேனா தலைவர் பரமேஷ்வர் சிங்கிற்கான இறுதி இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்வீர் சேனாவிற்கு ஆதரவான பேச்சுக்களைப் பேசினார். இந்த நிலையில் அவர் மத்திய அமைச்சர் ஆனவிவகாரம் ரன்வீர் சேனாவின் நட வடிக்கைகளை மேலும் ஊக்கப்படுத் துவதாகும். ஆகவே இவர் மீது காலதாமதம் செய்யாமல் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக்கடித்ததில் கூறியிருந்தார்.

கிரிராஜ் சிங் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பிரதமர் ஆனால் முஸ்லீம்கள் அனைவரும் பாகிஸ்தான் சென்றுவிடவேண்டும் என்று பேசி பிரபலமானவர். கடந்த ஜூலை மாதம் இவர் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.1.4 கோடி கைப்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ரன்வீர் சேனையால் படுகொலை செய்யப்பட்டோர்:

1996 - 42 பேர்
1997 - 101 பேர்
1999 - 85 பேர்
2000 - 46 பேர்
2003 - 13 பேர்
2004 - 8 பேர்

Read more: http://viduthalai.in/page8/91155.html#ixzz3J9Raozld

தமிழ் ஓவியா said...

ஆரியக் கலாச்சாரத் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழக மாணவரணி சார்பில் நவம்பர் 20இல் ஆர்ப்பாட்டம்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டாம்!

ஆரியக் கலாச்சாரத் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழக மாணவரணி சார்பில் நவம்பர் 20இல் ஆர்ப்பாட்டம்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்று மத்தியக் கல்வித்துறை அறிவித் திருப்பதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நவம்பர் 20ஆம் தேதி திராவிடர் கழக மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் சார்பில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (KVS) மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்று மத்தியக் கல்வித்துறை அறிவிப்பதோடு, சில பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியைக் கற்க விருப்பம் தெரிவித்திருந்த மாணவர்களுக்கு அவ்வாய்ப்பு - மறுக்கப்படுவதோடு அவர்கள் விரும்பினால், ஜெர்மன் மொழியையோ அல்லது ஸ்பானிஷ், பிரெஞ்சு, மாண்டரின் - சீனமொழியையே (4ஆவது மொழியாக) படித்துக் கொள்ளலாம் என்பது போன்ற ஒரு கூற்று வேடிக்கை யானது.

ஏற்கெனவே ஜெர்மன் அரசோடு மத்தியக் கல்வித் துறையின் சார்பில், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது கூட ஏற்கத்தக்கது அல்ல என்று மத்தியக் கல்வி அமைச்சர் கூறியுள்ளதோடு, மற்றொரு உறுதி செய்யப்படாத தகவலும்கூட செய்தியாக வந்துள்ளது.

அதன்படி இந்த ஜெர்மன் அரசோடு ஜெர்மன் மொழி சம்பந்தமாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளுக்கான கமிஷனர் அவினாஷ் தீட்சித் என்பவரை விடுமுறையில் செல்லுமாறு பணித்துள்ளார்கள் என்றும்கூட கூறப்படுகிறது.

மத்தியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கும் பிரதமர் மோடி தலைமையில் உள்ள ஆட்சி பொறுப்பேற்ற இந்த 5,6 மாதங்களில் சமஸ்கிருத மொழிக்கே முன்னுரிமை தந்து அதனை எப்படியும் சிம்மாசனத்தில் அமர்த்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விடாப் பிடியாக உள்ளது.

சமஸ்கிருத வாரம்

அதனால்தான் சமஸ்கிருத வாரம் என்று கொண்டாட வேண்டும் என்று கூறிய திணிப்பு முயற்சியை, தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக எதிர்த்து நின்றதால், கூடாரத்துக்குள் நுழைந்து தலையை நீட்டி, பிறகு முழுவதும் உள்ளே வந்து, கூடார உரிமையாளனைத் துரத்திய கதைபோல முயற்சிகள் அவ்வப்போது தொடர் முயற்சியாக நடைபெற்று வருகிறது!
1938இல் ஆச்சாரியார்கூட, முதலில் ஹிந்தி கட்டாயம் என்று துவங்கி, சமஸ்கிருதம் என்றால் ஆரிய ஆதிக்கம் என்பது பளிச் சென்று தமிழ் நாட்டு மக்களுக்குப் புரியும் என்று கருதியே ஹிந்தி மூலம் - முதற்படியாக அதனைச் செய்யும் நிலை இருந்தது. இப்போது நேரடியாகவே இதனை வாய்ப்பு நேரும் போதெல்லாம், புற்றுக்குள்ளிருந்து பாம்பு தலை நீட்டுவதும், எதிர்ப்புக் குரல் - என்ற தடியைக் கண்டதும், தலையைப் பின் வாங்கிக் கொள்வதுமான ஆதிக்கப் போரில் ஈடுபட்டுள்ளனர்!

இது ஒரு வெறும் மொழிப் படிப்புப் பிரச்சினை அல்ல; பண்பாட்டுப் படையெடுப்பின் ஒரு முக்கிய கட்டம்; ஆரியக் கலாச்சாரத் திணிப்பிற்கு அப்பட்டமான முகவுரை நுழைவு வாயில்.
இப்படி கல்வியில் மத்திய ஆட்சி அடிக்கடி பல்வேறு சமஸ்கிருத சித்து வேலைகளில் ஈடுபடுவதை மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு, கைகட்டி, வாய் பொத்தி இருக்கக் கூடாது. நிரந்தரத் தீர்வு மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டுக் கொண்டு வருதலேயாகும்.

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களும், பெற்றோர்களும் தங்கள் உரிமையைக் காப்பாற்ற அறவழியில் போராடுவது அவசரம் - அவசியம்!

இதற்காக திராவிடர் கழக மாணவரணி சார்பில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பு ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை 20ஆம் தேதி காலை மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், இணைச் செயலாளர்கள் இளந்திரையன், அஜீத்தன் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
15-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/91158.html#ixzz3JC03aftl

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இரு முடி

விரதம் இருப்பவர்கள் மட்டுமே இரு முடி அணிந்தவர்கள் மட்டுமே பதினெட்டுப்படி ஏறித் தரிசிக்க வேண்டும். அப்படி இருமுடி அணி யாமலேயே அய்யப் பனைத் தரிசிக்கலாம்; பக்க வழியில் சென்று தரிசிக்கலாம். கார்த்திகை யில் மாலை அணிந்து சென்றுதான் தரிசிக்க வேண்டும் என்பதில்லை நடை எப்பொழுது திறந் திருக்குமோ அப்பொழு தெல்லாம் சென்று தரி சிக்கலாமாம் - எப்படி இருக்கு? எல்லாவற்றுக் கும் ஆகமம், சம்பிரதா யம், சாஸ்திரம் என்று அடுக்குவார்கள் - இதில் மட்டும் ஏன் விதிகள் கறாராக இல்லை?

எப்படியோ உண்டி யல் நிரம்பினால் சரி அதற்குத்தான் இந்த நழுவல்கள்!

Read more: http://viduthalai.in/e-paper/91162.html#ixzz3JC0G9g6d

தமிழ் ஓவியா said...

சீவப் பிராணிகள்!


மனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ் சியும் வாழும் சீவப் பிராணிகளேயாகும்.
(குடிஅரசு, 23.10.1943)

Read more: http://viduthalai.in/page-2/91167.html#ixzz3JC0PCjQE

தமிழ் ஓவியா said...

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்கள்!

மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பொருளாதாரப் பார்வை மிகவும் பிற்போக்குத் தன்மை வாய்ந்ததாகவும், வெளி நாடுகளிலிருந்து முதலீடுகளைக் குவிக்கிறோம் என்ற போர்வையில், அந்நிய முதலாளிகளுக்கு தடபுடலான சலுகைகளை வாரி இறைப்பதில் அதிமும்முரம் காட்டுகிறார் பிரதமர் நரேந்திரமோடி.

ஏராளமான தொழிற்சாலைகள் வந்து குவியப் போகின்றன; உற்பத்திகள் கிடுகிடு என்று உயரப் போகின்றன, ஏராள வேலை வாய்ப்புகள் குவியப் போகின்றன என்பது போன்ற ஒரு பிரச்சாரத்தைத் தண்டோரா போட்டு அறிவிப்பது போல செய்து வருகிறது.

இந்தத் தாராளச் சலுகைகள் என்ன என்பதுதான் மிக முக்கியமானது. இதற்கு முன் குஜராத் முதல் அமைச்சராக அவர் இருந்தபோது முதலாளிகளுக்கு அவர் கொட்டிக் கொடுத்த சலுகைகள் அசாதாரண மானவை. அம்பானிக்கு ஆயிரம் ஏக்கர், டாடாவுக்கு 1100 ஏக்கர், சந்தை விலையைவிட அடி மட்ட விலைக்குத் தூக்கிக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி 0.1 சதவீதம்தான் 20 ஆண்டுகளுக்குப்பின் கடனைத் திருப்பி செலுத்தினால் போதும். விற்பனை வரி கிடையாது, தண்ணீர் வரி குறைவு, மின்சாரக் கட்டணச் சலுகை.

ஆன்லைனிலேயே 1000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை டாட்டாவுக்கு அளித்த புண்ணியவான் தான் மோடி. ரூ.2900 கோடி முதலீட்டுத் திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கடன் எவ்வளவு தெரியுமா? ரூ.9570 கோடியாம். வெங்காய விவசாயிகளிடமிருந்து 15,000 ஏக்கர் நிலங்களைப் பிடுங்கி நிர்மா என்ற நிறுவனத்துக்குத் தூக்கிக் கொடுத்தார்.

முதல் அமைச்சராக இருந்த அன்று குஜராத்தில் செய்ததையே, இந்தியாவின் பிரதமராக இருந்து அந்நிய நிறுவனங்களுக்குச் செய்யப் போகிறார் அவ்வளவுதான்.

இந்தியாவின் தொழில் சம்மேளனங்களும், தொழில் கூட்டமைப்புகளும் தொழிலாளர் நலச் சட்டங்களில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளன.

பல சட்டங்கள் 40 தொழிலாளர்களுக்குக் குறை வாக உள்ள நிறுவனங்களுக்குப் பொருந்தாதவை என்று ஆக்கப்படும்.

240 நாள்கள் வரை பணியாற்றினால் அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது தான் இப்பொழு துள்ள சட்டம். ஒரு மாத முன் அறிவிப்புடன் தொழிலாளர்களை வெளியேற்றலாம் என்ற சரத்து சேர்க்கப்பட உள்ளது.

தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நேரமும் அதிகரிக்கப்படும். தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை என்று போராடிப் பெற்ற உரிமைக்கும் வேட்டு வைக்கப்பட உள்ளது. அது பத்தரை மணி நேரம் ஆக்கப்படுமாம்.

நூறு பணியாளர்கள் பணியாற்றும் ஆலையையோ, தொழிற்சாலையோ மூட வேண்டுமானால், அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது இப்பொழுது நடைமுறையில் உள்ள சட்டமாகும். இது 300 தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனம் என்று மாற்றப்பட உள்ளது. இதன் காரணமாக 77 சதவீத நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கழுத்துகளுக்கு மேல் கொலை வாள் தொங்குகிறது.

தொழிலாளர் துறை ஆய்வாளர் திடீர் பார்வை செய்து தொழிலாளர் சட்டங்கள் சரி வரப் பாதுகாக்கப் படுகின்றனவா என்று சரி பார்க்கும் நிலை இருந்தது; இனிமேல் அந்த அதிகாரத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் விதி முறைகள் திணிக்கப்பட உள்ளன.

இன்னும் ஒரு பெரிய ஆபத்து - அரசுத்துறைகளும், பொதுத் துறைகளும், கூட்டுறவுத் துறைகளும் அருகி தனியார்த்துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பெருகிப் பிரவாகிக்கும் நிலையில் இடஒதுக்கீடுதான் முதல் பலி என்பதை மறந்து விடக் கூடாது.

நாடாளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னதாகவே பிஜேபி ஆளும் ராஜஸ்தான், மத்திய பிரதேசங்களில் முன்னோட்டமாக தொழிலாளர்களின் கழுத்தறுக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன.
மதவாதமும், முதலாளித்துவமும் கைகோர்த்துக் கொண்டு இந்தியத் துணைக் கண்டத்தைத் துவம்சம் செய்தே தீருவது என்ற வெறியில் ஓர் ஆட்சி இறங்கி விட்டது.

உப்புத் தின்ற அளவுக்குத் தண்ணீர் குடித்தே தீர வேண்டும் என்பது போல, வாக்களித்த மக்கள் அதன் பலா பலனை அனுபவிக்கட்டும் என்று பொறுப்பு வாய்ந்த பொது நலக்காரர்கள் கண்களை மூடிக் கொண்டு இருக்க முடியாது.

எல்லா மன்றங்களையும்விட அதிக சக்தி வாய்ந்தது - மக்கள் மன்றமே! மக்களைச் சந்திப்போம். மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தோலுரித்துக் காட்டி, மக்களை, குறிப்பாக இளைஞர்களைத் தயாரிப்போம்.

மாற்றம் வரும் என்று ஏமாந்த புதிய வாக்காளர் களான இருபால் இளைஞர்கள் உண்மையைப் புரிந்து கொண்டு களமாடத் தயாராக வேண்டும் - நாட்டை தாக்க இருக்கும் புயலைத் தடுத்து நிறுத்த இதுதான் சரியான வழி!

Read more: http://viduthalai.in/page-2/91168.html#ixzz3JC0YTE4l

தமிழ் ஓவியா said...

விழிப்புணர்வு இயக்கம் தேவை! தேவை!!

மக்களது நல்வாழ்வு - நல வாழ்வாக அமைவது என்பது மிக மிக அவசியமாகும்.

பெறற்கரிய செல்வம், நோயற்ற வாழ்வுதான்! வாழ்க்கையில் யார் எவ்வளவு பெரும் பதவிகளிலோ, பெரும் அறிவு ஜீவியாகவோ இருக் கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர் களது உடல் நலம் செம்மையாக, செழு மையாக - உள்ளதா என்பதே முக்கியம். அதிலும் குறிப்பாக, பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களது உடல் நலம் பொதுச் சொத்தாகக் கருதப்படல் வேண்டும்; உண்மையான தொண்டறத் தில் ஈடுபட்டுள்ள அவர்களது ஆற்றல், அனுபவம், உழைப்பு - இவைமூலம் சமூக மாற்றம், வளர்ச்சி ஏற்பட வேண்டிய நிலையில், அவர்களது நீண்ட கால நலவாழ்வுதான் அதற்கு அடிப்படையாகும்!

ஆண்டுதோறும் வயது 50க்கு கீழே உள்ளவர்கள், உடல் மருத்துவப் பரிசோ தனைகளை நடத்தி, தத்தம் மருத்து வர்களின் அறிவுரையை ஏற்று உடல் நலம் பேணி வாழ வேண்டும். இப்போ துள்ள வேக உணவு (Fast Foods)ப் பழக்கம் காரணமாக, இளைஞர்களுக்கு கூட, சர்க்கரை நோய், உடற்பருமன், மாரடைப்பு போன்ற நோய்கள் வரும் ஆபத்து உள்ளது. வயதான முதியவர்கள் ஆண்டுக்கு இரு முறையாவது தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

அரசு பொது மருத்துவமனைகளில்கூட கட்டாயம் இலவசமாகவோ, அல்லது குறைந்த கட்டணத்தினைச் செலுத்தியோ, மருத்துவப் பரிசோதனை செய்து கொள் ளும் வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.

நன்கு படித்த உயர் பொறுப்பில் உள்ளவர்கள்கூட தங்களது உடற்பரி சோதனையை நடத்திக் கொள்ளாது அலட்சியப்படுத்தி வருகின்றனர். அதன் விளைவு இள வயதிலேயே மறைந்து விடும் கொடுமைக்கு ஆளாகி விடும் அபாயம் உள்ளது!

மருத்துவமும் அதில் இணைந்த தொழில் நுட்பமும் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத் தில், மருத்துவப் பரிசோதனைகள் மூலம் நோய் நாடி - நோய் முதல் நாடி அதற் கேற்ற மருத்துவமும் செய்து கொண்டு மேலும் நம் வாழ்நாளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

முதியவர்கள் (Senior Citizens) தொகை மிகவும் அதிகம் பெருகும் என்பதே பல நாடுகளின் சமூகப் பிரச் சினை - நிதித் தட்டுப்பாடு பிரச்சினை என்றாலும் மனிதநேய அடிப்படையில், நோயற்ற வாழ்வுடன்கூடிய மக்கள் தானே மிகப் பெரிய, அரிய செல்வம் ஒரு நாட்டிற்கு!

எனவே மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.

இளம் வயதில் இளையர்கள் நோய்களால் தாக்கப்பட்டு, உயிரிழப் புக்கு ஆளாகி வீணே தங்களின் வாழ்வைக் குறுக்கிக் கொள்ளுதலை விடக் கொடுமை - குறிப்பாக அவர் தம் பெற்றோர்களுக்கு வேறு உண்டா? இல்லையே!
எனவே

உணவுப் பழக்கம்
மருத்துவப் பரிசோதனையின்மை
புகைத்தல், மதுகுடித்தல்
புகையிலைப் பயன்பாடு
ஆகிய தீமைகளை எதிர்த்து நாம் அனைவரும் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை நாடு தழுவிய அளவில் நடத்திட இதுவே சரியான தருணம்.

நல்ல சமயம் இது - அதை நழுவ விடக் கூடாது. என்பதைப் புரிந்து ஊருக்கு ஊர் விழிப்புணர்வுப் பிரச் சாரம் செய்வோமாக!

தமிழ் ஓவியா said...

விருதுநகர் விருந்து

கனவான்களே!

திரு.வி.வி. இராமசாமி அவர்கள் சுயமரியாதைக் காரர்கள் தேவஸ்தானக் கமிட்டிக்குப் போகலாமா எனக் கேட்பது ஒரு நல்ல கேள்வியாகும்.

நான் சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு 4.5 வருடம் தேவஸ்தான கமிட்டியில் பிரசிடெண்டாகவும், வைஸ் பிரசிடெண்டாகவும், இருந்தேன். தேவஸ்தானச் செல் வங்களைப் பொது நலத்திற்குப் பயன்படும்படி செய்யக் கூடுமானால். அது நல்ல வேலைதான், அங்கு போக வேண்டியதும் அவசியந்தான் என்று கருதியே அங்கு இருந்தேன். இந்த எண்ணத்தின் மீதே தேவஸ்தான சட்டத்தையும் ஆதரித்தேன். ஆனால், அவை சரியான பலனைக் கொடுக்கவில்லை.

ஆகவே நான் இராஜினாமாச் செய்தேன். எனது சகபாடிகள் எனது இராஜினாமாவை ஒப்பாமல் எனது அபிப்பிராயத்தை ஆதரிப்பதாயும் ஆனால் பொது ஜனங்கள் அபிப்பிராயம் விரோதமென்றும் சொன் னார்கள். ஆனாலும், நான் வேறு வேலையில் இந்தக் கவனம் செலுத்தலாம் என்று ஒதுங்கிக் கொண்டேன். தகுந்த சகபாடிகள் இருந்தால் அதை நல்வழிப்படுத்தலாம் என்பதும் ஒரு அளவுக்கு உண்மைதான்.

இராமனாதபுரம் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்டு திரு.இராமச்சந்திரன் அவர்கள் நல்ல முயற்சிகள் எடுத்து இருக்கின்றார்கள். அது கைகூடுவதற்கு நமது இராமசாமி போன்றவர்கள் உதவி மிக நல்லதாகும். வெறும் சாமி பூஜைகளையும், உற் சவங்களையும் நடத்திக் கொடுப்பதற்குச் சுயமரியாதைக் காரர் அங்கு போவது அவசியமற்ற காரியமாகும்.

ஆதலால், கோவில்களின் பேரால் இருக்கும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்கவும், கோவில்களின் பேராலுள்ள செல்வங்களெல்லாம் மக்கள் நலத்திற்கு உதவவும் வேலை செய்ய வேண்டியது முக்கிய அவசியமாகும். அந்தப் பணங்களில் நமக்குச் சம்பந்தம் இல்லை என்று நாம் சும்மா இருந்துவிட்டால் அவர்களுக்கு நன்மையே யொழிய நட்டம் ஒன்றும் இல்லை.

ஆகையால் இந்த வித அபிப்பிராயமுள்ள திரு. இராமசாமியைத் தெரிந்தெடுத்த வர்களும் இதே அபிப்பிராயத்தோடுதான் தெரிந்தெடுத் திருப்பார்கள். ஏனென்றால் திரு. வி.வி. இராமசாமி அபிப்பிராயம் யாரும் தெரிந்ததேயாகும். ஆதலால் அப்படிப்பட்டவர்களின் விருப்பத்திற்கு இணங்கிய திரு. இராமசாமி தனது கடமைகளைச் செய்வார் என்பதில் சந்தேகமில்லை.

இது போலவே, கல்வி இலாகாவுக்கும் திரு.கந்தநாடார் பி.ஏ.பி.எல் அவர்களைத் தெரிந்தெடுக்கப்பட்டது நமக்கு, இலாபமேயாகும் கல்வி இலாகா பார்ப்பனியமயமாய் இருக்கின்றது. கல்வி வருணாசிரமக் கல்வியாய் இருக் கின்றது. பாடப் புத்தகங்கள் புராணப் புத்தகங்களாக இருக் கின்றன. இத்துறையில் புகுந்து அவற்றைப் பகுத்தறிவுக்குப் பயன்படும்படி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இன்று இந்தியாவின் இழிநிலைமைக்குக் காரணம் மதமும், கல்வியுமே யாகும். பழைய கால கல்வியைச் சங்கத்தின் மூலம் அடக்கி வைத்து பார்ப்பனியத்திற்கு எதிரான எதற்கும் இடம் இல்லாமல் செய்து விட்டார்கள். புத்தகங்களை அரங்கேற்றுவது என்பதே கட்டுப்பாடாகும் என்பதுதான் அர்த்தம் இப்போதைய யூனிவர்சிட்டி என்பது அக்கால சங்கமாகவும், அரங்கேற்றுவது டெக்ஸ்ட்புக் கமிட்டியில் பாசாக வேண்டியதாகவுமே இருக்கின்றது.

அந்தக் கமிட்டியில் மதம் இல்லாதவர்களும், கடவுள் பைத்தியம் இல்லாதவர்களுமான பகுத்தறிவாளர்கள் இருக்க வேண்டும். நமது யூனிவர்சிட்டி படிப்பு மூடநம்பிக்கையைப் பலப்படுத்துவ தாகும். இதிலிருந்து யாரும் அறிவு பெற்று விட முடியாது. வேண்டுமானால் கிராமபோன் ஆகலாம். ஆதலால், அத்துறைகளில் சுயமரியாதைக்காரர்கள் புகுந்து முதலாவது உபாத்தியாயர்களை வகுப்புவாரிப் பிரதி நிதித்துவப்படி நியமிக்க வேண்டும்.

உபாத்தியாயர்களுக்கு நல்ல படிப்பு கொடுக்க வேண்டும். அறிவுக்கு ஆதாரமாக புத்தகங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படவேண்டும் . இது முதலிய காரியங்கள் கல்வித்துறையில் செய்ய வேண்டி யிருப்பதால் அதற்கேற்றவர்கள் போக நேரிடுவது நன்மையேயாகும். ஆதலால் நீங்கள் இந்தக் கருத்தின் மீதே தெரிந்தெடுத்துப் போற்றுகின்றீர்கள் என்று நினைக் கின்றேன்.

(06.07.1931 ஆம் தேதி விருதுநகர் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 19.07.1931

Read more: http://viduthalai.in/page-7/91191.html#ixzz3JC1qhFOK

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு சொத்துரிமை


மைசூர் அரசாங்கத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கச்சட்டம்

1931 வருடம் அக்டோபர் மாதம் 22 தேதி நடைபெற விருக்கும் சட்டசபையில் இந்து லா என்னும் இந்துக்கள் சட்ட சம்பந்தமான விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2 சட்டசபைகளில் மேற்படி விஷயங்கள் சம்பந்தமான பொதுக் கொள்கைகள் யாவும் ஒப்புக்கொள்ளப்பட்டாய் விட்டன. அதன்மீது ஏற்பாடு செய்திருக்கும் திட்டங்கள் வரப்போகும் சட்டசபையின் விவாதத்திற்குக்கொண்டு வரப்படும்.

அவையாவன:- பெண்களுக்குத் தாங்கள் பெண்களாகப் பிறந்தகாரணத்தாலோ, அல்லது அவர்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதற்கு மதசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்கின்ற காரணத்தாலோ அவர்களது வாரிசு சொத்துரிமை மறுக்கப்படக் கூடாது. ஒரு பாகம் பிரியாத குடும்பத்தில் உள்ள ஒருவர் தான் சுயராஜிதமாக சம்பாதித்து வைத்திருக்கும் சொத்திலும் பெண் சந்ததிகளுக்கு உரிமை உண்டு.

ஒவ்வொரு விதவைக்கும் தானாகவே தத்து எடுத்துக்கொள்ள உரிமையுண்டு. புருஷன் கண்டிப்பாய் தத்து எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஏற்பாடு செய்திருந்தால் விதவைக்குத் தத்து எடுத்துக் கொள்ள உரிமை இல்லை.

பெண் பிள்ளைகளுக்கு இப்போது கிடைத்துவரும் வாரிசு உரிமைகளிலும்கூட சொத்துக்களின் வரும்படிகளை அனுபவிக்க மாத்திரம் உரிமை இருக்கின்றதே தவிர, மற்றபடி அவர்கள் அதைத் தங்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரமாய் அனுபோகிக்கவும், வினியோகிக்கவும் உரிமை இல்லாமல் இருக்கின்றார்கள்; ஆதலால் இந்தக்குறையும் நீங்கும்படியாக அதாவது அவர்களுக்கு கிடைக்கும் வாரிசு உரிமை சொத்துக்களை தங்கள் இஷ்டப்படி சர்வசுதந்திரமாய் அனுபவிக்கவும், வினியோகிக்கவும் இந்தப் புதிய சட்டத்தில் அனுமதிக்கப்படுகின்றது.

பாகம் பிரியாத குடும்பத்தில் கணவன் இறந்துவிட்டால் பெண் ஜாதிக்குக்குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும் குடும்பசொத்தில் கணவனுக்குள்ளபாகம் சர்வ சுதந்திரமாய் பெண்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். குடும்ப சொத்துக்கள் பல வழிகளில் துர்வினியோகம் செய்யப்பட்ட காலங்களிலும் அச்சொத்துகளின்மீது பெண்களுக்கு ஜீவனாம்சத்திற்கு உரிமையுண்டு என்பதாகும்.

- குடிஅரசு செய்திக் கட்டுரை 04.10.1931

Read more: http://viduthalai.in/page-7/91192.html#ixzz3JC26eDVz

தமிழ் ஓவியா said...

குத்தும், கொலை முயற்சியும் பம்பாய் கவர்னர் சுடப்பட்டார்

இவ்வாரத்தில் அரசியல் சம்பந்தமாய் குத்தும், கொலைமுயற்சியும் கலகமும் நடைபெற்றிருப்பதாகப் பல இடங்களிலிருந்து செய்திகள் கிடைத்திருக்கின்றன. பம்பாய் கவர்னரைப் பூனாவில் ஒரு வாலிபன் ஒரு புத்தக சாலையைப் பார்வையிடும்போது அவரைக் கொல்லக் கருதி துப்பாக்கியால் சுட்டிருக்கின்றான். ஆனால், அக்கவர்னர் அதிசயமாய் தப்பித்துக்கொண்டிருக்கின்றார்.

அதாவது அவரது சட்டைப் பையில் இருந்த ஒரு தினக்குறிப்புப் புத்தகத்தின் மூடிப் பொத்தானின் பேரில் அக்குண்டு பட்டதால் அது உடலில் பாயாமல் சட்டைப் பையிலேயே அக்குண்டு தாங்கிவிட்டது.

மற்றொரு தரம் சுட்டும் அது அவர்மீதுபடவில்லையாம். ஏனெனில், அவன் குறி பார்க்கும்போதே கவர்னர் அந்த வாலிபனைப் பிடிக்கப் போனதால் வாலிபனின் குறி தவறி குண்டு அவர் மேலே படாமல் போய் விட்டது. பிறகும் கவர்னரேதான் அந்த வாலிபனை எட்டிப் பிடித்தாராம்.

இந்த மாதிரி மற்றவர்களுக்கு நேர்ந்திருந்தால் கடவுளே அந்தச்சட்டப் பைக்குள் வந்து இருந்து கொண்டு குண்டைப் பிடித்து கொண்டார் என்று தான் சொல்லுவார்கள். ஆன போதிலும் இந்தக் கவர்னருடைய தைரியத்தையும் அவருடைய மன உறுதியையும் நாம் மிகவும் பாராட்டுகின்றோம். அவர் தப்பித்துக் கொண்டதைக்கூட நாம் அவ்வளவு பாராட்ட வில்லை.

என்றைக்கிருந்தாலும் ஏதோ ஒருவகையில் செத்துத் தீரவேண்டிய அந்தக் கவர்னர் இந்த வாலிபன் குண்டினால் செத்திருந்தால் உலகம் ஒருபுறம் தாழ்ந்து போய்விடாது. ஆதலால் கவர்னர் தப்பித்துக் கொள்வதும் இறந்துபோவதும் ஒன்று என்றேதான் கருதுகின்றோம். ஆனால் அகிம்சை அகிம்சை என்று பல்லவி பாடுவதின் தத்துவம் என்ன ஆயிற்று என்றுதான் கேட்கின்றோம்.

இதுபோலவே பஞ்சாபிலிருந்து வந்த இரண்டு இராணுவ அதிகாரிகளையும் யாரோ ஒருவன் குத்திவிட்டு ஓடிவிட்டான் என்றும் தெரியவருகின்றது. இவர்களும் இருவரும் கூட பிழைத்துக் கொண்டார்களாம். இதனாலும் நாம் ஒன்றும் மகிழ்ச்சியடைவில்லை. ஆனால் அகிம்சை போரால் விளையும் பயன் என்ன என்பதை மக்கள் அறிய இதையும் ஒரு உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றோம். அபிப்பிராயப் பேதப்பட்டவர்களையும் தங்கள் நன்மைக்கு விரோதமாக இருப்பவர்களையும் கொல்லுவதோ, கொல்ல நினைப்பதோ மனித இயற்கைதானேயொழிய வேறில்லை. கொல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியம்.

அதற்காகத்தான் அரசாங்கம், சட்டம், தண்டணை ஆகியவைகள் இருக்கின்றன. ஆதலால் அதிலும் ஆச்சரியப்பட இடமில்லை என்றாலும் தன் உயிருக்கும் துணிந்த ஒருவன் மற்றவனைக் கொல்ல நினைத்தால் அதற்கு யார்தான் என்ன செய்யமுடியும்? ஆனால் இந்த உணர்ச்சியை தப்பான வழியில் கிளப்பி விடுவது என்பது மாத்திரம் பிசகு என்பதைநாம் ஒப்புக் கொள்கின்றோம். ஏனெனில் இச்சம்பவத்திற்கு அதாவது அவரைச் சுட்டதற்கு அச்சிறுவன் பொறுப்பாளியல்ல.

மற்றபடி, யார் என்றால் அவ்வுணர்ச்சி அவனுக்கு உண்டாகும்படி நடந்து கொண்டவர்களே உண்டாவதற்குக் தகுந்தபடி பிரச்சாரம் செய்தவர்களேதான் பொறுப்பாளியாக வேண்டும். சுடப்பட்ட கவர்னர் இதையறிந்து அந்த வாலிபனைப் பார்த்து இந்த முட்டாள் தனமான காரியம் செய்ய உன்னைத் தூண்டியவர்கள்யார்? என்று கேட்டிருக்கிறார்.

எப்படியிருந்தாலும் இம்முறைகள்தான் எல்லா நிலைகளிலும் சகஜமாக இருக்கப்போகின்றது என்பது மாத்திரம் நமது உறுதி. இந்தப்படி, இனி நடப்பதிற்கில்லாமல் இருக்க வேண்டுமானால் உலக வாழ்க்கைப் பத்தியானது அடியோடு திருத்தியமைக்கப்பட வேண்டும். -

குடிஅரசு - கட்டுரை - 26.07.1931

Read more: http://viduthalai.in/page-7/91190.html#ixzz3JC2K9zUh

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நட்சத்திரங்கள்

27 நட்சத்திரங்களுக் குத் தானே பலன் சொல் லிக் கொண்டு திரிகி றார்கள். மீதி லட்சக்கணக் கான நட்சத்திரங்களுக் குப் பலன்களே கிடை யாதா?

அவர்களுக்கு இருந்த அறிவு அவ்வளவு தான். இன்றைக்கும் அதே 27 நட்சத்திரங்கள் பற்றிப் பலன் சொல்லுவது அடி முட்டாள்தனம்என்றால் நம்புவதோ கோடிக் கோடி பரம முட்டாள்தனமே!

Read more: http://viduthalai.in/e-paper/91241.html#ixzz3JHmGHThq

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் அரசர்கள்தான் பார்ப்பனர்களுக்கு அக்கிரகாரங்களை ஏற்படுத்தித் தந்து பார்ப்பனர்களை ஆலோசகர்களாகவும் தளகர்த்தர்களாகவும் நியமித்துக் கொண்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கருத்து

முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் விவாதம் இல்லாமல் பார்லிமெண்டில் நிறைவேற்றப்படுவது சரியல்ல. நிதி மசோதா போன்ற முக்கியமான மசோதாக்கள் மீது அதிக நேரம் விவாதம் நடப்பதற்கான வழிமுறைகளை மக்களவை அவைத்தலைவர் சபாநாயகர் கண்டறிய வேண்டும். திட்டங்களுக்குப் பணத்தை ஒதுக்கும்போது, வரிகள் விதிக்கும்போது குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கி விவாதிப்பது அவசியம்.

- பிரணாப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்

--------------

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி. ஆனால், பதவியேற்பு விழாவில் சாமியார்கள், துறவிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்கள் வரிசையாக அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இது மூடநம்பிக்கை இல்லையா? இதை எப்படி ஏற்க முடியும்? பா.ஜ. தலைவர்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

- அசோக் சவான், காங்கிரஸ் மூத்த தலைவர்

--------------

புதிய எழுத்தாளர்கள் தங்களது எழுத்துகளில் உளவியலைக் கொண்டுவர வேண்டும். மனிதனுக்குள் இருக்கும் மன ஓட்டங்களை எழுத்தைத் தவிர வேறு எதிலும் பதிவு செய்துவிட முடியாது. வாழ்வில் வெளிச்சம் படாத பக்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை வெளியில் கொண்டு வருவது எழுத்தாளனின் கடமை.

- கவிப்பேரரசு வைரமுத்து

--------------

ஆந்திரத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 54 விழுக்காடு தெலங்-கானாவுக்குத் தரப்பட வேண்டும். அதைத் தர ஆந்திர முதல்வர் மறுக்கிறார். இது தெலங்கானா மக்களுக்கு சந்திரபாபு நாயுடு இழைக்கும் அநீதியாகும்.

- சந்திரசேகர் ராவ்,
தெலங்கானா முதல் அமைச்சர்

--------------

கடந்த காலத்தை விடவும் வடக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு இடையிலான உறவுப் பாலம் வலுவடைந்-துள்ளது. வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்கும் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்னரே மண்சரிவு குறித்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன் பின்னரே, வாக்கு சேகரிக்கச் சென்ற அரசியல்வாதிகள் சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது மக்கள் நலனிலும் அக்கறை கொண்டிருந்தால் இப்படிப்பட்ட உயிர்ப் பலிகளைத் தடுத்திருக்க முடியும்.

- விக்னேஸ்வரன், முதல் அமைச்சர், இலங்கை வடமாகாணம்

தமிழ் ஓவியா said...

காட்டிக் கொடுக்கும் புளூ-டூத்

மழை, வெயில் இரண்டுக்கும் பாதுகாப்புத் தருவது குடை என்றாலும், மழை பெய்யும்போதுதான் பெரும்பாலோர் குடையைப் பயன்படுத்துகிறோம். நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கோ அல்லது வெளியிடங்களுக்கோ செல்லும்போது மழை பெய்தால் எடுத்துச் செல்லப்படும் குடை, அங்கிருந்து திரும்பும்போது மழை பெய்யவில்லை என்றால் குடையை எடுத்துவர நிறையப் பேர் மறந்து விடுவ துண்டு. அப்படி மறந்துபோன குடையை அல்லது பிறரால் திருடப்படும் குடை இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கும் கருவியினை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்க நிறுவனத்தாள் குடையில் செல்பேசியில் பயன்படுவதைப் போல நவீன புளு_டூத் கருவி ஒன்று இணைக்கப்-பட்டிருக்கும். இது ஸ்மார்ட் போனுடன் இணைந்திருக்கும். குடை திருடப்-பட்டிருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ நுட்பமான வரைபடத்தின் மூலம் குடை இருக்கும் இடத்தினை இந்தக் கருவி காட்டிக் கொடுத்துவிடுமாம்.

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க!


பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச விரும்புகிறதா அல்லது இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுடன் பேச விரும்புகிறதா? இதுபற்றிய தெளிவான முடிவை எடுக்காதவரை அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை.

- அருண் ஜெட்லி, மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்

காஷ்மீர் மக்கள் இந்தியப் பிரிவினைவாதிகள் அல்ல. தங்கள் உரிமைக்காகப் போராடும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள். மக்கள் தங்கள் சுயமான முடிவுகளை எடுப்பது என்பது அய்.நா.தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்-பட்டது. இந்தப் பிரச்சினையில் பாகிஸ்தான் ஒருதரப்புவாதி. எனவே, இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

- தஸ்னிம் அஸ்லாம், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்

சொல்றேங்க....!

நீங்க ரெண்டு பேரு சொல்றதைவிட காஷ்மீர் மக்கள் என்ன விரும்புறாங்கங்கறது தான் முக்கியம்.

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


சூரிய சக்தியில் இயங்கும் சோலார் இம்பல்ஸ்2 (எஸ்அய்2) என்ற விமானம் தயாரிக்கப்பட்டு 2015 மார்ச் அபுதாபியிலிருந்து புறப்பட்டு உலகைச் சுற்றிவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

மூளைப் புற்று நோயைக் குணப்படுத்தும் குருத்தணுவை (ஸ்டெம் செல்) இந்திய_அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் காலித் ஷா தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது.

பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்-திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் ஆளில்லா சரக்கு ராக்கெட் அண்டாரெஸ் கிளம்பிய சில வினாடிகளில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

வங்க தேசத்தின் அரசியல் தலைவர் ரஹ்மான் நிசாமி போர்க் குற்றம் புரிந்ததாக அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சசேனா அக்டோபர் 29 அன்று பொறுப்பேற்றுள்ளார்.

அய்.நா. சபையில் கொண்டுவரப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான வரைவு தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.

காணாமல் போன நபர்கள் குறித்து உடனடியாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கேள்விகள் இடம் பெறும் வகையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள் வரும் கல்வியாண்டு முதல் மாற்றப்பட உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 3 அன்று நிராகரித்தது.

தந்தை மரணத்திற்குப் பின் விவாகரத்துப் பெற்ற மகளுக்கு தந்தையின் வேலையை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பகவான் பிரசாதம் (லட்டு) தொடர்பான விளம்பரத்தில் மறைத்தது ஏன்?

திருப்பதி கோவில் அண்மையில் லட்டு விளம்பரமொன்றைச் செய்தது. திருப்பதி லட்டிற்கு புவிசார் காப்பீடு பெறுவதற்காக உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஆதரவினைத் தரவேண்டுமாம். அதாவது, 300 ஆண்டு பாரம்பரியமிக்க திருப்பதி லட்டு காப்பீடு பெறுவதற்கு உங்களது ஆதரவு தேவை.

100 கிலோ மைதா மற்றும் கடலை மாவு, பத்து டன் அஸ்கா(சீனி), 700 கிலோ முந்திரிப்பருப்பு, 180 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் பசும்நெய், 500 கிலோ கற்கண்டு, 540 கிலோ உலர் திராட்சை மற்றும் 150 லிட்டர் வாசனைப் பன்னீர் மற்றும் ரோஜாச்சாறு சேர்க்கப்படுகிறதாம். இவை அனைத்தும் ஒரு நாளில் தயார் செய்து உங்கள் கைக்கு பகவானின் பிரசாதமாக கொடுக்கிறோம் என்கிறது அந்த விளம்பரம்.

அது சரி, இவற்றுடன் கல், நட்போல்ட், பறவைக் கழிவு, இரும்புத்துரு, தலைமுடி, நகத்துண்டு இவையெல்லாம் எத்தனை கிலோ எத்தனை டன் சேர்ப்பீர்கள் என்று கூறவில்லையே! (சில நேரங்களில் வேறு சில உயிரினங்களும் வறுவலாக சேர்க்கப்-படுகிறது என்றும் சொல்கிறார்களே(?).

- சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

பெண்ணடிமை

ஈரான் நாட்டில் பெண்கள் கைப்பந்து (வாலிபால்) விளையாட கடந்த 2012ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. பெண்கள் கைப்பந்து விளையாடினால் அவர்களை அநாகரிகமாக நடந்துகொள்ளும் ஆண் பார்வையாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது என ஈரான் அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஜூன் 20ஆம் நாள் ஈரானில் அந்நாட்டு அணியுடன் இத்தாலி அணி மோதிய ஆண்கள் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியைக் காண இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஷெபர்ட்ஸ் புஷ் பகுதியைச் சேர்ந்த இங்கிலாந்து_ஈரானிய சமூக ஆர்வலர் கோன்சே கவாமி ஒரு குழுவாகச் சென்றார். அந்தக் குழுவினரைக் காவல் துறையினர் அடித்து கைது செய்து விடுவித்தனர்.

கோன்சே கவாமி மட்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைப்பந்துப் போட்டியைக் காண முயன்றதற்காக கவாமிக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பன்னாட்டு அளவில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கவாமியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் இணையதளக் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

கைப்பந்துக்குத் தடை போட்டது ஈரான். அந்த தொந்தரவெல்லாம் எதற்கு? கண்ணிருந்தால் தானே கண்டதையும் பார்ப்பதற்கு! போடு தடை கண்களுக்கு என்று ஒருபடி மேலே (?!) சென்றிருக்கிறது சவுதி அரேபியா. பெண்களின் கண்களைக் காவியங்-களில் வர்ணித்த்திருக்கிறார்கள். இன்றைக்கும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். போதாக்-குறைக்கு, இந்தப் பொண்ணுங்களே இப்படித்-தான் புரிஞ்சு போச்சுடா.. அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா என்கிறார்கள் திரைப்படக் கவிஞர்கள்.

அப்படிப்பட்ட கல்லறையே பெண்களின் கவர்ந்திழுக்கும் கண்கள் என்று யோசித்து இதுவரை புர்காவில் கண் மட்டும் தானே தெரிந்தது. அதையும் தடை செய்துவிடலாமே என்று முடிவு செய்திருக்கிறது சவுதி அரேபியா. சபலத்தைத் தூண்டும் கண்களை உடையவர்கள் அவற்றை மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். நாங்கள் அவர்களின் கண்களை மறைக்கச் சொல்லி வலியுறுத்து-வோம். அப்படிச் சொல்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது என்கிறார் ஒழுக்கத்தை வளர்த்தல் மற்றும் தீயொழுக்கத்தைத் தடுக்கும் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஷேக் மோட்லப் அல் நபெத். அது என்ன சபலத்தைத் தூண்டும் கண் என்றால் எது?

அதற்கென்ன அளவுகோல் என்று கேட்டால், அதற்கான ஸ்கேலையும் கையில் வைத்திருக்கிறார்கள் இந்த ஒழுக்க வாத்தியார்கள். மூடப்படாத அழகான வடிவம் கொண்ட, ஒப்பனை செய்யப்பட்ட கண்கள், ஒப்பனை செய்யப்படாவிடினும் அழகான கண்கள் என்கிறது அந்த ஸ்கேல். சவுதியின் தற்போதைய மன்னர் அப்துல்லா-வுக்குப் பிறகு ஆட்சிக்கு வர இருக்கும் இளவரசர் நயிஃப் காலத்திலாவது இத்தகைய நிலை மாறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூடுதலாக ஏமாந்திருக்கிறார்கள்.

அவர், இது இஸ்லா-மின் தூண்களுள் ஒன்று. இந்தச் சட்டத்தை அனைத்து முஸ்லிம்களும் ஆதரிக்க வேண்டும் என்கிறார். எதற்கு பாஸ், பெண்களிடம் தலையை மூடு, காலை மூடு, கையை மூடு, வாயை மூடு, முகத்தை மூடு, கண்ணை மூடு என்று பார்ட் பார்ட்டாக தடை செய்கிறீர்கள்? மொத்தமாக பெண்களையே தடை செய்துவிட்டால் ஒரே வேலையா முடிஞ்சுடுமே! அவங்களையெல்லாம் விரட்டி வெளியில அனுப்பிட்டா ஒரேடியா ஒழுக்கம் நட்டுக்கிட்டு நிற்கும். தீயொழுக்கம் இல்லாமல் போகும். அவ்வளவு சிரமப்பட்டுக்கிட்டு எதுக்கு அவங்களை நாட்டுல வச்சிக்கணும்? அடுத்தடுத்த தலைமுறை இல்லாமல், நீங்களும் அழிஞ்சிடு-வீங்க... நாடாவது நல்லா இருக்குமே! என்று பொங்கி எழுந்துவிட்டார்கள் குறைந்தபட்ச மனிதநேயம் உள்ளவர்கள்!

தமிழ் ஓவியா said...

ராஜம் கிருஷ்ணன்


ஒரு பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனிடம் ஒரு பேட்டியின்போது கேட்கப்பட,

அவள் தன் மதத்தைவிட்டு வெளியேற வேண்டும். எல்லா காலகட்டங்களிலும் ஒரு பெண்ணை மதத்தின் கோட்பாடுகள் அடிமையாகவே வைத்திருக்கின்றன (அவள் விகடன்) என்றவர் அவர். தனது எழுத்துகளில் புதுமைக் கருத்துகளைப் புகுத்தி, பெண்ணுரிமைக் காகக் குரல்கொடுத்தவர். கடந்த மாதம் அவர் தனியார் முதியோர் காப்பகம் ஒன்றில் மறைவுற்றார் என்ற செய்தி மூலம் கவனத்தில் கொள்ளவேண்டிய சமூகப் பிரச்சினை ஒன்றை தன் வாழ்க்கை மூலம் எழுதிச் சென்றுள்ளார்.

தமிழ் ஓவியா said...

லண்டன் தய்மார்கள் நடத்திய வித்தியாசமான தோள்சீலைப் போராட்டம்

உலகைச் சுற்றி....

லண்டன் தய்மார்கள் நடத்திய வித்தியாசமான தோள்சீலைப் போராட்டம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட ஜாதிப் பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, தங்களின் மேலாடை அணியும் உரிமையைப் பெற்றார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடந்த பெண்ணுரிமைக்கான போராட்டம் அது. அதுவே பரவலாக தோள்சீலைப் போராட்டம் என்று அறியப்படுகிறது.



இதோ 21 ஆம் நூற்றாண்டில் லண்டனில் இருக்கும் தாய்மார்கள் சிலர் வித்தியாசமான-தொரு போராட்டம் ஒன்றை நடத்தியிருக்-கிறார்கள். ஒருவகையில் இதுவும் தோள்சீலைப் போராட்டம் தான். இந்தியாவின் தமிழ்நாட்டுப் பெண்கள் மார்புகளை மறைக்க தோள்சீலையை அணிவதற்காக போராட்டம் நடத்தினார்கள் என்றால், லண்டன் தாய்மார்களோ பொது இடங்களில் தங்களின் மார்பு தெரிய குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதற்கு தமக்கு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதற்காக இந்த வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார்கள்.

லண்டன் புறநகர்ப்பகுதியில் இருக்கும் ஒரு பப்பில் (உணவுடன் கூடிய மதுபானச்சாலை) தன் குழந்தைக்குப் பால் கொடுத்த ஒரு தாய் தனது மார்புகளை மூடவில்லை என்று அந்தக் கடையின் பணியாள் அந்தப் பெண்ணிடம் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக அந்தத் தாய் புகார் தெரிவித்திருக்கிறார். கடையில் இருந்த ஒரு (அழுக்கு துடைக்கும்) துணியைக் கொண்டுவந்து தன்னிடம் கொடுத்து மார்புகளை மூடச்-சொல்லி அந்தப் பணியாள் வலியுறுத்திய செயல் தன்னை அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாகவும் அந்தத் தாயார் தெரிவித்துள்ளார்.

அந்தப் பணியாளரின் வார்த்தைகளும் அவர் அழுக்குத்துணியைக் கொண்டுவந்து தன்னிடம் கொடுத்த செயலும், ஒரு தாய் என்கிற முறையில் தனது பால் கொடுக்கும் உரிமையையும், பெண் என்கிற முறையில் தனது சுயமரியாதையையும் பாதித்ததாக அந்தத் தாயார் உள்ளூர் பத்திரிகையில் புகார் செய்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு நடந்ததைக் கேள்விப்பட்ட உள்ளூர்த் தாய்மார்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து அந்த பப்புக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட நாளை அறிவித்துவிட்டு, அந்த நாளில் தத்தம் குழந்தைகளுடன் அந்த பப்புக்கு வந்த தாய்மார்கள் எல்லோரும் தங்களின் குழந்தைகளுக்கு மார்பு மூடாமல் பாலூட்டியுள்ளனர். அந்தத் தாய்மார்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் முகமாக குழந்தை இல்லாத பெண்களும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர்.

இந்தச் செய்தியின் முழுமையான தகவல்-களை கீழ்கண்ட இணைப்புகளில் சென்று நீங்கள் வாசித்துக் கொள்ளலாம்.

இந்தப் போராட்டத்தை ஆதரித்த பெண் ஒருவர் தெரிவித்த காட்டமான கருத்து இது: Barbara Tanner, 76, also from Bexleyheath added: "Most of the men in this pub have seen breasts before, they’re groping them all the time".

தமிழ்நாட்டுக்கும் லண்டனுக்கும் இடையில் எத்தனையோ ஆயிரம் மைல் இடைவெளி இருக்கிறது. தமிழ்நாட்டின் தோள்சீலைப் போராட்டத்துக்கும் லண்டனில் நடந்த இந்தப் போராட்டத்துக்கும் இடையில் 200 ஆண்டு கால வித்தியாசமும் இருக்கிறது. ஒன்று, இந்தியாவின் ஜாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும்கூட. மற்றதின் பின்னணியில் வர்க்கப்பார்வையும் இருக்கக்கூடும். ஒன்று, தமது மார்புகளை மறைக்க உரிமை கோரி நடந்த போராட்டம். மற்றது, மார்புகளைத் திறந்து காட்டியபடி பாலூட்ட நடந்த போராட்டம்.

இத்தனை வித்தியாசங்கள் இருந்தும் இரண்டிலும் வெளிப்பட்ட குரல் ஒன்றே. அது பெண்ணியக் குரல். பெண்ணின் உடல் என்பது அடிப்படையில் அவளுடைய உடைமையே தவிர ஆணின் உடைமை அல்ல என்கிற அடிப்படை உரிமைக்கான குரல். பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று கே. ஜே. ஜேசுதாஸ் போன்றவர்கள் பேசும் காலகட்டத்தில், தங்கள் உடலின் எந்தப் பகுதியும் வெளியில் தெரியலாம் அல்லது தெரியக்கூடாது என்கிற மிகச்சிறிய உரிமைக்காகக்கூட பெண்கள் இன்னமும் போராட வேண்டியிருக்கிறது என்பதற்கான மற்றும் ஓர் எடுத்துக்காட்டே லண்டனில் நடந்த இந்த வித்தியாசமான 'boob and bottle feed-in'என்கிற 21 நூற்றாண்டின் தோள்சீலைப் போராட்டம்.

- ஜெகதீசன்