Search This Blog

16.11.14

பானை வனைவது போல என்னை வனைந்தவர் தமிழர் தலைவர் கி.வீரமணி

பவழவிழா நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பெருமிதம்!
பெரியார் கொள்கையை ஒருவர் உண்மையாக ஏற்றுக்கொண்டால், சோதனைகளைக் கூட சாதனைகளாக - சரித்திர சாதனைகளாக மாற்றிக் காட்ட முடியும் எடுத்துக்காட்டு பவழ விழா நாயகர்  சு.அறிவுக்கரவே

பவழவிழா நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பெருமிதம்!

கடலூர். நவ. 15- பெரியார் கொள்கையை ஒருவர் உண்மையாக ஏற்றுக்கொண்டால், சோதனைகளைக்கூட சாதனைகளாக - சரித்திர சாதனைகளாக மாற்றிக் காட்ட முடியும் என்று 8.11.2014 அன்று கடலூர் டவுன்ஹால் நூலக அரங்கத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் செயல வைத் தலைவர் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பெரியார் கொள்கையின் சிறப்பைக் குறிப்பிட்டுப் பேசினார்.

பவழவிழா மலர் வெளியீடு

விழா நாயகர் சு.அறிவுக்கரசு அவர்களின் பவழவிழா மலரை தமிழர் தலைவர் வெளியிட, என்.ஜி.ஜி.ஓ.சங்க முன்னாள் தலைமை நிலைய செயலாளர் சின்னமனூர் சோமசுந்தரம் பெற்றுக் கொண்டார். பிறகு வாழ்த்துரையை செயலவைத் தலைவரின் மகன் மணிநிலவன் தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வாழ்த்திப் பேசினார். அறிவுக்கரசுவும், சுயமரியாதைத் சுடரொளியாகிய சிவ. இளங்கோவும் கழக மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்பித்ததையும், பணி ஓய்வு பெற்ற பிறகு இயக்கத்தில் முழுநேரப் பணியாளராக இருந்து வருவதை யும் குறிப்பிட்டுப் பாராட்டினார். அதுமட்டுமல்ல, காஞ்சி மாவட்டத் தலைவராக இருந்த சி.பி. ராஜமாணிக்கம் கொடுத்த தகவலின் பேரில் தானே நேரிடையாகச் சென்று காஞ்சி மடத்தில் பார்த்ததையும், அங்கு ஓய்வு பெற்ற பார்ப் பனர்கள், தனது இனத்திற்கான தலைவருக்கு நன்றி காட்டு வதையும் சுட்டிக்காட்டி, அதுபோல நம்மினத்தில் நன்றி காட்டத் தெரிந்த பெரியார் தொண்டர்தான் நமது செயலவைத் தலைவர் என்று அறிவுக்கரசுவின் தொண்டின் ஆழத்தை உணர்த்தினார்.

நெருக்கடி காலத்திலும் நிலை குலையாத கொள்கை வீரர் சு.அறிவுக்கரசு!

அவருடைய கொள்கைப் பற்றை சுட்டிக்காட்டுவதற்கு ஒரு சம்பவத்தைச் சொன்னார். அதாவது, நெருக்கடி காலத்தில், இவர் வருவாய்த் துறையில் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த சமயம்; ஒரு காவல் துறை அதிகாரி இவர் மீதுள்ள அக்கறையால், விடுதலை, முரசொலி வீட்டுக்கு வருவதையும், கல்வெட்டில் தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவம் இருப்பதையும் சுட்டிக்காட்டி இவைகளைத் தவிர்த்தால் நல்லது என்று கூறியிருக்கிறார். 

இவரோ, 1949 இலிருந்து இவற்றைக் கடைப்பிடித்து வருவதாகவும்; இவை மாறாது என்றும் சொல்லி விடுகிறார். அதுவும் எப்படிப்பட்ட காலம் அது என் வினாவெழுப்பி, விடுதலையில்  பெரியாரை தந்தை என்ற முன்னொட்டோடு போடக்கூடாது என்று தடுத்த காலம் என்று விடையும் சொல்லி, சு.அறிவுக்கரசுவின் கொள்கை உறுதியை நிறுவினார். 

அதன்பிறகு, பவழ விழா நிகழ்ச்சி யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெயக் குமார், செயலவைத் தலைவரின் மகன் மணிநிலவன் தமிழர் தலைவருக்கு சிறப்பு செய்தனர். திராவிடர் கழகத்தின் முன்னாள் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை அவர்களின் நினைவாக அவரது குடும்பத்தினர் சார்பில் குழந்தை தமிழரசன் தமிழர் தலைவருக்கும், விழா நாயக ருக்கும் ஆடை அணிவித்து சிறப்பு செய்தார். தொடர்ந்து மேடையில் இருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டு நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து பவழ விழா நாயகரை வரிசையாகச் சென்று இயக்கத் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

 வாழ்த்தரங்கம்

தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான இலக்கணத்தை வகுத்துக் கொடுத்தவர் அறிவுக்கரசு என்று செயலவைத் தலைவருடன் பணிபுரிந்த கோவிந்தராஜன் வாழ்த்திப் பேசினார். அதைத் தொடர்ந்து கவிஞர் கருப்பையா வாழ்த்திப் பேசினார். அவரைத் தொடர்ந்து மறுமலர்ச்சி தி.மு.க வின் வெளியீட்டு பிரிவுச் செயலாளர் வந்தியத் தேவன் பேசும் போது, திராவிடத்தால் எழுந்தோம்; திராவிடத்தால் உயர்ந்தோம்; திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்த மேடைதான் என்று குறிப்பாக இந்த கொள்கையை கடைபிடித்த செயலவைத் தலைவரைச் சுட்டிக்காட்டினார். அரங்கத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் அதை கையொலி எழுப்பி ஆதரித்தனர். தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு, மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சியைத் சேர்ந்த தனசேகரன், தி.மு.க மாணவரணித் தலைவராக இருக்கக்கூடிய கடலூர் இள. புகழேந்தி வாழ்த் திப் பேசினர். அவர் தனது வாழ்த்தை, முத்தமிழறிஞர் கலை ஞரின் வாழ்த்தாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறினார்.
 

இந்து முன்னணியினர் பெற்ற புத்திக் கொள்முதல்!

தொடர்ந்து பேசிய இள. புகழேந்தி ஒரு சுவையான குறிப்பைச் சுட்டிக்காட்டினார். அதாவது, சு. அறிவுக்கரசு என்பதிலிருக்கும் முதலெழுத்து சு என்பது சுயமரியாதை என்பதையும் குறிக்கும். இயல்பாகவே சுயமரியாதைக்கார ராக அவர் இருந்து வருகிறார் என்றார். அருப்புக்கோட்டை யில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவுக்கரசு பேசியதைக் கேட்ட இந்து முன்னணியினர்  இருவர், அறிவுக்கரசு போல இருவர் வந்து பேசிவிட்டுச் சென்றால் நாங்கள் இந்து முன்னணி அமைப்பைக் கலைத்துவிட்டு திராவிடர் கழகத்தில் சேர்ந்துவிடுவோம் போலிருக்கிறதே என்று வியப்போடு குறிப்பிட்டதை, கடலூர் இள. புகழேந்தி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் பேசும் போது, அறிவுக்கரசுவின் நினை வாற்றல், பேச்சாற்றல், செயலாற்றல் ஆகியவை அரசுத் துறையிலும், திராவிடர் கழகத்திலும்  நாம் நேரில் கண்டு வருவதைக் குறிப்பிட்டார். அனைவரும் செயலவைத் தலைவர் பல்லாண்டு வாழ வாழ்த்தினர்.
விளிப்பே வியப்புதான்!

விழா நாயகர் சு.அறிவுக்கரசு அவர்கள் ஏற்புரையில் தனது  பவழவிழா என்ற பெயரில் நடைபெறுகின்ற இந்த விழாவில் என்றுதான் தொடங்கினார். இதுவும் ஒரு பிரச் சாரக்களம் தான் என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் மேடையில் இருப்பவர்களை குறிப்பிட் டதே கூட சுவையாக இருந்தது. முதலில், 12 வயதிலிருந்து என்னை அடித்துத் திருத்துபவராக விளங்கிக் கொண்டி ருக்கும் ஆசிரியர் அவர்களே! என்று தமிழர் தலைவர் அவர்களை குறிப்பிட்டுவிட்டு, கலைஞர்தாசன் சின்னம னூர் சோம சுந்தரம் அவர்களே! என்று விழா மலரை ஆசிரியரிட மிருந்து பெற்றுக் கொண்டவரை விளித்தார். தொடர்ந்து,  துப்பாக்கிக்கு பிறந்த பீரங்கி, புகழேந்தியின் மகன் இள. புகழேந்தி அவர்களே! என்றார். கவிஞரை விளிக்கும் போது, இயக்கமே ஒரே சிந்தனையாக இருந்து, என்னையும் எப்போது இயக்கத்திற்கு வருகிறீர்கள் என்று ஓயாமல் அரித்துக் கொண்டிருந்த கவிஞர் அவர்களே! என்றார்.


அடுத்து, தந்தை பெரியாரின் கொள்கைக்கும், தமிழுக்கும் எதிராக யார் எழுதியிருந்தாலும் அதை நான் வெளியிட மாட்டேன் என்று உறுதியோடு இருக்கும் கவுரா ராஜ சேகரன் அவர்களே! என்று இப்படியே ஒவ்வொரு வரையும் விளித்தார்.

பானை வனைவது போல என்னை வனைந்தவர் தமிழர் தலைவர்!

இந்த விழாவில் வெளியிடப்பட்ட அதற்கு வயது இது அன்று என்ற புத்தகத்தைப் பற்றி குறிப்பிடும் போது, இந்த புத்தகத்தை எழுதப் பணித்தவர் தமிழர் தலைவர்தான் என்று கூறிவிட்டு, நான் பணியில் இருந்தபோது, கொள் கைக்கு எதிரான தடைகள் வந்து என் மீது மோதி அந்தத் தடைகளதான் உடைந்து சிதறியது. அது எப்படி என்பது தான் இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து சற்று உணர்வு வயப்பட்ட நிலையில், விடுதலை யில் இதைப்பற்றி விரிவாக தமிழர் தலைவர் எழுதியிருக் கிறார். அதற்கு தான் எப்படி நன்றி சொல்வது என்று தவித்தார். அதைத்தொடர்ந்து தனக்கும் தலைவருக்கும் உள்ள உறவை ஒரு உவமை மூலம் சுட்டிக்காட்டினார். அதாவது, பானை வனைபவர் பானையை வனைந்து முடித்த பிறகு, கட்டையால் அதைத் தட்டித் தட்டி செம்மைப்படுத்துவார், அதுபோல தமிழர் தலைவர் என்னைத் தட்டித் தட்டி செம்மைப்படுத்தியிருக்கிறார் என்று கூறினார். என்னைப் பொறுத்த வரையில் எல்லா வற்றுக்கும் காரணம் தமிழர் தலைவர் என்று கூறிவிட்டு, இதற்கு நான் எப்படி நன்றி சொல்வது, தொடர்ந்து இறுதி வரையிலும் பெரியார் வழியில் இருப்பதைத் தவிர வேறு எப்படி நன்றி செலுத்திவிட முடியும் என்று உணர்வுகளை அடக்கிக் கொண்டு பேசினார். அந்த கம்பீரமான உருவம் உணர்வு வயப்பட்டதே வியப்பாயிருந்தது. தந்தை பெரியாரின் கொள்கை வழியும், தமிழர் தலைவரின் அரவணைப்பும்தான் இதற்கு காரணம் என்பதை அறியும் போது எண்ணுவதற்கே கூட நமக்கு வியப்பாக இருக்கிறது.

பெரியார் பன்முகச் சிந்தனை!

தொடர்ந்து பேசிய அவர், தனது குடும்பத்தில் கொள்கை வழியில் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இங்கே நாகம்மையார் இல்லத்திற்கு உண்டியல் கொடுத்தார்கள். அதேபோல அய்ந்தாம் தலைமுறையும் இந்தக் கொள்கையோடுதான் இருப்பார்கள் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார். மேலும் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நன்கொடையாகக் கொடுத்த தொகையில் 1,11,000 த்தில் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் உள்ள பெரியார் சிந்தனை மய்யத்தில் ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்கு ஒரு எண்டோவ் மெண்டும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பெரியார் பன்முகச் சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்த 1,00,000த்தில் ஒரு எண்டோவ்மெண்டும் உருவாக்குவதற்காக என்று கூறி, அதற்கான காசோலையை தமிழர் தலைவரிடம் கொடுத்தார். தொடர்ந்து வாழையடி வாழையாக பெரியார் கொள்கைப்படி பணியை செய்துகொண்டே இருப்போம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

தம்பியுடையான் பெற்ற தனித்ததோர் மகிழ்ச்சி

செயலவைத் தலைவரைத் தொடர்ந்து பேசிய தமிழர் தலைவர், தமது தலைமையுரையில் எடுத்த எடுப்பிலேயே பெரியார் கொள்கையை ஒருவர் உண்மையாக ஏற்றுக் கொண்டால், சோதனைகளைக்கூட சாதனைகளாக - சரித்திர சாதனைகளாக மாற்றிக் காட்ட முடியும் என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த நிகழ்ச்சி என்று பெருமிதத்தோடு கூறிவிட்டு, தன் உடன் பிறந்தவர்களை நினைவு கூர்ந்து, தனக்கு உடன் பிறந்தவர்கள் எல்லாமே மூத்தவர்கள்தான். ஆகையால் யாரையும் தம்பி என்றழைக்கும் வாய்ப்பு தனக்கு இல்லை. அதனால்தான் நேற்று எழுதிய வாழ்வியல் சிந்தனைகளில் அறிவுக்கரசு எழுதிய புத்தகத்தைப்பற்றி எழுதி, அதற்கு தம்பியுடையான் பெற்ற தனித்ததோர் மகிழ்ச்சி என்று தலைப்பிட்டிருந்தேன் என்று கூடியிருந்த வர்களை சற்று உணர்ச்சிக்குள்ளாக்கினார். அதே வாழ் வியல் சிந்தனைகளில், அதற்கு வயது இது அன்று என்ற தலைப்பே விசித்திரமானது என்று சுட்டிக்காட்டி விட்டு, அந்த புத்தகத்திற்கு, அவன் இன்றி இவன் இல்லை என்று தானும் ஒரு தலைப்பைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.


உறவு என்பது குருதியைப் பொறுத்தல்ல கொள்கையைப் பொறுத்தது! 

தொடர்ந்து பேசிய அவர், பெரியாரையும் நாகம்மையா ரையும் நினைவு கூர்ந்து ஒரு தகவல் சொன்னார். பெரியார், நாகம்மையார் தலைமையில் ஒரு திருமணத்தை நடத்தி வைக்கும் போது, தோழர் நாகம்மையார் இத்திருமணத்தை தலைமையேற்று நடத்தித் தருவார் என்று கூறியதைக் குறிப்பிட்டு, தோழர் என்ற வார்த்தையின் சிறப்பைச் சுட்டிக்காட்டி, அதையும் தாண்டி தம்பி என்று அறிவுக்கரசு அவர்களை உரிமை கொண்டாடினார். அதனால்தான், 75 ஆவது வயது காணும் அன்பிற்கும், வற்றாத பாசத்திற்கும் உரிய என்று செயலவைத் தலைவரை விளிக்கும் போது குறிப்பிட்டார். தோழர் என்ற வார்த்தையின் சிறப்பைச் சுட்டிக்காட்டிய பிறகும் தம்பி என்று விளிக்க நேர்ந்ததைத் தொடர்ந்து, உறவு என்பது குருதியைப் பொறுத்ததல்ல; கொள்கையைப் பொறுத்தது என்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

தமிழர் தலைவர் சட்டென்று உணர்வு வயப்பட்ட நிலை யிலிருந்து மாறி, பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் வந்திருப்பதை பார்க்கும் போது, அடுத்த மாதம் சேலத்தில் நடைபெறவுள்ள பொதுக்குழுவை இங்கேயே கூட்டியிருந் தால், தோழர்களுக்கு இரண்டு செலவுகள் ஏற்பட்டிருக்காது; உணவுச் செலவும் ஏற்பட்டிருக்காது. அதையும் இந்த விழாக் குழுவினரே செய்திருப்பார்கள் என்று தந்தை பெரியாரின் சிக்கன வழியில் பேசி தொண்டர்களையும் உணர்வு வயப்பட்டிருந்த நிலையிலிருந்து கலகலப்புக்கு மாற்றினார்.

அரசு ஊழியர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு ஆவணம்!

மீண்டும் அதற்கு வயது இது அன்று என்ற புத்தகத்திற்கு வந்த தமிழர் தலைவர், அரசு ஊழியராக இருந்தாலும் யாருக்கு நேர்மையும், கொள்கை உறுதியும் இருக்கின்றதோ அவர்கள் யாரும் அஞ்சவேண்டியதில்லை. அதற்கான ஆவணம்தான் இந்தப்புத்தகம். இதற்காகத்தான் இதை எழுதும்படி அறிவுக்கரசுவை பணித்தேன் என்று கூறிவிட்டு, நெருக்கடி காலத்தில் இருந்த பெரியார் தொண்டர் பொறியாளர் குமாரசாமியை நினைவு கூர்ந்து, செயவைத் தலைவரின் கொள்கை உறுதிக்கு சான்று வழங்கினார். அதற்கு தந்தை பெரியார், தனது தந்தையின் பெயரில் தான் கையெழுத்திட்டு பொய் சொல்லாமல் நேர்மையாக இருந்து உண்மையைக் கூறி, நீதிபதியிடம் பாராட்டோடு விடுதலை யும் பெற்ற சம்பவத்தையும் நினைவுகூர்ந்து அறிவுக்கரசு வின் கொள்கை நேர்மைக்கு வலு சேர்த்தார்.

பவழ விழா நாயகர் அறிவுக்கரசு அவர்களின் நண்பர் சின்னமனூர் சோமசுந்தரம் பெரியார் உலகத்திற்கு ரூ. 5 ஆயிரம் நன்கொடையாக தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார்.

தொடர்ந்து பல்வேறு கருத்துகளைக்கூறி, ஓய்வு என்பது அரசுப்பணிக் குத்தானே தவிர, தொண்டறத்துக்கல்ல. ஆகவே, பெரியா ரின் கருத்துகளை தொடர்ந்து எடுத்துச் செல்வதற்கு அறி வுக்கரசு தேவைப்படுகிறார். இந்த இயக்கத்தின் தடைகளை தகர்த்தெறிவதற்கு அவரின் தடந்தோள்கள் தேவைப்படு கின்றன. அவரது பணி தொடரட்டும் என்று கூறி தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

 அதைத் தொடர்ந்து செயலவைத் தலைவரின் மகன் மணிநிலவன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் இணைப் புரை வழங்கி சிறப்பித்தார். அமைப்புச் செயலாளர்கள் த.சண்முகம், வெ. ஞானசேகரன், வே. செல்வம் மற்றும் மாநில இளைஞரணிச் செயலாளர் திருப்பதி, மாநில மாணவரணிச் செயலாளர் பெரியார் என்னாரெசு பெரியார், மாணவரணி இணை செயலாளர் இளந்திரையன் மற்றும் மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி, முனைவர் அதிரடி அன்பழகன், தலைமை நிலைய பேச்சாளர் இராம. அன்பழகன், மற்றும் முத்துகதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் க.பார் வதி, திருமகள், சட்டத்துறைச் செயலாளர் இன்பலாதன், புதுச்சேரி திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி  மற்றும் ஏராளமான இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

                             ---------------------------"விடுதலை” 15-11-2014

22 comments:

தமிழ் ஓவியா said...

ஆரியக் கலாச்சாரத் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழக மாணவரணி சார்பில் நவம்பர் 20இல் ஆர்ப்பாட்டம்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டாம்!

ஆரியக் கலாச்சாரத் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழக மாணவரணி சார்பில் நவம்பர் 20இல் ஆர்ப்பாட்டம்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்று மத்தியக் கல்வித்துறை அறிவித் திருப்பதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நவம்பர் 20ஆம் தேதி திராவிடர் கழக மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் சார்பில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (KVS) மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்று மத்தியக் கல்வித்துறை அறிவிப்பதோடு, சில பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியைக் கற்க விருப்பம் தெரிவித்திருந்த மாணவர்களுக்கு அவ்வாய்ப்பு - மறுக்கப்படுவதோடு அவர்கள் விரும்பினால், ஜெர்மன் மொழியையோ அல்லது ஸ்பானிஷ், பிரெஞ்சு, மாண்டரின் - சீனமொழியையே (4ஆவது மொழியாக) படித்துக் கொள்ளலாம் என்பது போன்ற ஒரு கூற்று வேடிக்கை யானது.

ஏற்கெனவே ஜெர்மன் அரசோடு மத்தியக் கல்வித் துறையின் சார்பில், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது கூட ஏற்கத்தக்கது அல்ல என்று மத்தியக் கல்வி அமைச்சர் கூறியுள்ளதோடு, மற்றொரு உறுதி செய்யப்படாத தகவலும்கூட செய்தியாக வந்துள்ளது.

அதன்படி இந்த ஜெர்மன் அரசோடு ஜெர்மன் மொழி சம்பந்தமாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளுக்கான கமிஷனர் அவினாஷ் தீட்சித் என்பவரை விடுமுறையில் செல்லுமாறு பணித்துள்ளார்கள் என்றும்கூட கூறப்படுகிறது.

மத்தியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கும் பிரதமர் மோடி தலைமையில் உள்ள ஆட்சி பொறுப்பேற்ற இந்த 5,6 மாதங்களில் சமஸ்கிருத மொழிக்கே முன்னுரிமை தந்து அதனை எப்படியும் சிம்மாசனத்தில் அமர்த்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விடாப் பிடியாக உள்ளது.

சமஸ்கிருத வாரம்

அதனால்தான் சமஸ்கிருத வாரம் என்று கொண்டாட வேண்டும் என்று கூறிய திணிப்பு முயற்சியை, தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக எதிர்த்து நின்றதால், கூடாரத்துக்குள் நுழைந்து தலையை நீட்டி, பிறகு முழுவதும் உள்ளே வந்து, கூடார உரிமையாளனைத் துரத்திய கதைபோல முயற்சிகள் அவ்வப்போது தொடர் முயற்சியாக நடைபெற்று வருகிறது!
1938இல் ஆச்சாரியார்கூட, முதலில் ஹிந்தி கட்டாயம் என்று துவங்கி, சமஸ்கிருதம் என்றால் ஆரிய ஆதிக்கம் என்பது பளிச் சென்று தமிழ் நாட்டு மக்களுக்குப் புரியும் என்று கருதியே ஹிந்தி மூலம் - முதற்படியாக அதனைச் செய்யும் நிலை இருந்தது. இப்போது நேரடியாகவே இதனை வாய்ப்பு நேரும் போதெல்லாம், புற்றுக்குள்ளிருந்து பாம்பு தலை நீட்டுவதும், எதிர்ப்புக் குரல் - என்ற தடியைக் கண்டதும், தலையைப் பின் வாங்கிக் கொள்வதுமான ஆதிக்கப் போரில் ஈடுபட்டுள்ளனர்!

இது ஒரு வெறும் மொழிப் படிப்புப் பிரச்சினை அல்ல; பண்பாட்டுப் படையெடுப்பின் ஒரு முக்கிய கட்டம்; ஆரியக் கலாச்சாரத் திணிப்பிற்கு அப்பட்டமான முகவுரை நுழைவு வாயில்.
இப்படி கல்வியில் மத்திய ஆட்சி அடிக்கடி பல்வேறு சமஸ்கிருத சித்து வேலைகளில் ஈடுபடுவதை மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு, கைகட்டி, வாய் பொத்தி இருக்கக் கூடாது. நிரந்தரத் தீர்வு மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டுக் கொண்டு வருதலேயாகும்.

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களும், பெற்றோர்களும் தங்கள் உரிமையைக் காப்பாற்ற அறவழியில் போராடுவது அவசரம் - அவசியம்!

இதற்காக திராவிடர் கழக மாணவரணி சார்பில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பு ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை 20ஆம் தேதி காலை மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், இணைச் செயலாளர்கள் இளந்திரையன், அஜீத்தன் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
15-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/91158.html#ixzz3JC03aftl

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இரு முடி

விரதம் இருப்பவர்கள் மட்டுமே இரு முடி அணிந்தவர்கள் மட்டுமே பதினெட்டுப்படி ஏறித் தரிசிக்க வேண்டும். அப்படி இருமுடி அணி யாமலேயே அய்யப் பனைத் தரிசிக்கலாம்; பக்க வழியில் சென்று தரிசிக்கலாம். கார்த்திகை யில் மாலை அணிந்து சென்றுதான் தரிசிக்க வேண்டும் என்பதில்லை நடை எப்பொழுது திறந் திருக்குமோ அப்பொழு தெல்லாம் சென்று தரி சிக்கலாமாம் - எப்படி இருக்கு? எல்லாவற்றுக் கும் ஆகமம், சம்பிரதா யம், சாஸ்திரம் என்று அடுக்குவார்கள் - இதில் மட்டும் ஏன் விதிகள் கறாராக இல்லை?

எப்படியோ உண்டி யல் நிரம்பினால் சரி அதற்குத்தான் இந்த நழுவல்கள்!

Read more: http://viduthalai.in/e-paper/91162.html#ixzz3JC0G9g6d

தமிழ் ஓவியா said...

சீவப் பிராணிகள்!


மனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ் சியும் வாழும் சீவப் பிராணிகளேயாகும்.
(குடிஅரசு, 23.10.1943)

Read more: http://viduthalai.in/page-2/91167.html#ixzz3JC0PCjQE

தமிழ் ஓவியா said...

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்கள்!

மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பொருளாதாரப் பார்வை மிகவும் பிற்போக்குத் தன்மை வாய்ந்ததாகவும், வெளி நாடுகளிலிருந்து முதலீடுகளைக் குவிக்கிறோம் என்ற போர்வையில், அந்நிய முதலாளிகளுக்கு தடபுடலான சலுகைகளை வாரி இறைப்பதில் அதிமும்முரம் காட்டுகிறார் பிரதமர் நரேந்திரமோடி.

ஏராளமான தொழிற்சாலைகள் வந்து குவியப் போகின்றன; உற்பத்திகள் கிடுகிடு என்று உயரப் போகின்றன, ஏராள வேலை வாய்ப்புகள் குவியப் போகின்றன என்பது போன்ற ஒரு பிரச்சாரத்தைத் தண்டோரா போட்டு அறிவிப்பது போல செய்து வருகிறது.

இந்தத் தாராளச் சலுகைகள் என்ன என்பதுதான் மிக முக்கியமானது. இதற்கு முன் குஜராத் முதல் அமைச்சராக அவர் இருந்தபோது முதலாளிகளுக்கு அவர் கொட்டிக் கொடுத்த சலுகைகள் அசாதாரண மானவை. அம்பானிக்கு ஆயிரம் ஏக்கர், டாடாவுக்கு 1100 ஏக்கர், சந்தை விலையைவிட அடி மட்ட விலைக்குத் தூக்கிக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி 0.1 சதவீதம்தான் 20 ஆண்டுகளுக்குப்பின் கடனைத் திருப்பி செலுத்தினால் போதும். விற்பனை வரி கிடையாது, தண்ணீர் வரி குறைவு, மின்சாரக் கட்டணச் சலுகை.

ஆன்லைனிலேயே 1000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை டாட்டாவுக்கு அளித்த புண்ணியவான் தான் மோடி. ரூ.2900 கோடி முதலீட்டுத் திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கடன் எவ்வளவு தெரியுமா? ரூ.9570 கோடியாம். வெங்காய விவசாயிகளிடமிருந்து 15,000 ஏக்கர் நிலங்களைப் பிடுங்கி நிர்மா என்ற நிறுவனத்துக்குத் தூக்கிக் கொடுத்தார்.

முதல் அமைச்சராக இருந்த அன்று குஜராத்தில் செய்ததையே, இந்தியாவின் பிரதமராக இருந்து அந்நிய நிறுவனங்களுக்குச் செய்யப் போகிறார் அவ்வளவுதான்.

இந்தியாவின் தொழில் சம்மேளனங்களும், தொழில் கூட்டமைப்புகளும் தொழிலாளர் நலச் சட்டங்களில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளன.

பல சட்டங்கள் 40 தொழிலாளர்களுக்குக் குறை வாக உள்ள நிறுவனங்களுக்குப் பொருந்தாதவை என்று ஆக்கப்படும்.

240 நாள்கள் வரை பணியாற்றினால் அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது தான் இப்பொழு துள்ள சட்டம். ஒரு மாத முன் அறிவிப்புடன் தொழிலாளர்களை வெளியேற்றலாம் என்ற சரத்து சேர்க்கப்பட உள்ளது.

தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நேரமும் அதிகரிக்கப்படும். தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை என்று போராடிப் பெற்ற உரிமைக்கும் வேட்டு வைக்கப்பட உள்ளது. அது பத்தரை மணி நேரம் ஆக்கப்படுமாம்.

நூறு பணியாளர்கள் பணியாற்றும் ஆலையையோ, தொழிற்சாலையோ மூட வேண்டுமானால், அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது இப்பொழுது நடைமுறையில் உள்ள சட்டமாகும். இது 300 தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனம் என்று மாற்றப்பட உள்ளது. இதன் காரணமாக 77 சதவீத நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கழுத்துகளுக்கு மேல் கொலை வாள் தொங்குகிறது.

தொழிலாளர் துறை ஆய்வாளர் திடீர் பார்வை செய்து தொழிலாளர் சட்டங்கள் சரி வரப் பாதுகாக்கப் படுகின்றனவா என்று சரி பார்க்கும் நிலை இருந்தது; இனிமேல் அந்த அதிகாரத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் விதி முறைகள் திணிக்கப்பட உள்ளன.

இன்னும் ஒரு பெரிய ஆபத்து - அரசுத்துறைகளும், பொதுத் துறைகளும், கூட்டுறவுத் துறைகளும் அருகி தனியார்த்துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பெருகிப் பிரவாகிக்கும் நிலையில் இடஒதுக்கீடுதான் முதல் பலி என்பதை மறந்து விடக் கூடாது.

நாடாளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னதாகவே பிஜேபி ஆளும் ராஜஸ்தான், மத்திய பிரதேசங்களில் முன்னோட்டமாக தொழிலாளர்களின் கழுத்தறுக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன.
மதவாதமும், முதலாளித்துவமும் கைகோர்த்துக் கொண்டு இந்தியத் துணைக் கண்டத்தைத் துவம்சம் செய்தே தீருவது என்ற வெறியில் ஓர் ஆட்சி இறங்கி விட்டது.

உப்புத் தின்ற அளவுக்குத் தண்ணீர் குடித்தே தீர வேண்டும் என்பது போல, வாக்களித்த மக்கள் அதன் பலா பலனை அனுபவிக்கட்டும் என்று பொறுப்பு வாய்ந்த பொது நலக்காரர்கள் கண்களை மூடிக் கொண்டு இருக்க முடியாது.

எல்லா மன்றங்களையும்விட அதிக சக்தி வாய்ந்தது - மக்கள் மன்றமே! மக்களைச் சந்திப்போம். மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தோலுரித்துக் காட்டி, மக்களை, குறிப்பாக இளைஞர்களைத் தயாரிப்போம்.

மாற்றம் வரும் என்று ஏமாந்த புதிய வாக்காளர் களான இருபால் இளைஞர்கள் உண்மையைப் புரிந்து கொண்டு களமாடத் தயாராக வேண்டும் - நாட்டை தாக்க இருக்கும் புயலைத் தடுத்து நிறுத்த இதுதான் சரியான வழி!

Read more: http://viduthalai.in/page-2/91168.html#ixzz3JC0YTE4l

தமிழ் ஓவியா said...

விழிப்புணர்வு இயக்கம் தேவை! தேவை!!

மக்களது நல்வாழ்வு - நல வாழ்வாக அமைவது என்பது மிக மிக அவசியமாகும்.

பெறற்கரிய செல்வம், நோயற்ற வாழ்வுதான்! வாழ்க்கையில் யார் எவ்வளவு பெரும் பதவிகளிலோ, பெரும் அறிவு ஜீவியாகவோ இருக் கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர் களது உடல் நலம் செம்மையாக, செழு மையாக - உள்ளதா என்பதே முக்கியம். அதிலும் குறிப்பாக, பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களது உடல் நலம் பொதுச் சொத்தாகக் கருதப்படல் வேண்டும்; உண்மையான தொண்டறத் தில் ஈடுபட்டுள்ள அவர்களது ஆற்றல், அனுபவம், உழைப்பு - இவைமூலம் சமூக மாற்றம், வளர்ச்சி ஏற்பட வேண்டிய நிலையில், அவர்களது நீண்ட கால நலவாழ்வுதான் அதற்கு அடிப்படையாகும்!

ஆண்டுதோறும் வயது 50க்கு கீழே உள்ளவர்கள், உடல் மருத்துவப் பரிசோ தனைகளை நடத்தி, தத்தம் மருத்து வர்களின் அறிவுரையை ஏற்று உடல் நலம் பேணி வாழ வேண்டும். இப்போ துள்ள வேக உணவு (Fast Foods)ப் பழக்கம் காரணமாக, இளைஞர்களுக்கு கூட, சர்க்கரை நோய், உடற்பருமன், மாரடைப்பு போன்ற நோய்கள் வரும் ஆபத்து உள்ளது. வயதான முதியவர்கள் ஆண்டுக்கு இரு முறையாவது தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

அரசு பொது மருத்துவமனைகளில்கூட கட்டாயம் இலவசமாகவோ, அல்லது குறைந்த கட்டணத்தினைச் செலுத்தியோ, மருத்துவப் பரிசோதனை செய்து கொள் ளும் வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.

நன்கு படித்த உயர் பொறுப்பில் உள்ளவர்கள்கூட தங்களது உடற்பரி சோதனையை நடத்திக் கொள்ளாது அலட்சியப்படுத்தி வருகின்றனர். அதன் விளைவு இள வயதிலேயே மறைந்து விடும் கொடுமைக்கு ஆளாகி விடும் அபாயம் உள்ளது!

மருத்துவமும் அதில் இணைந்த தொழில் நுட்பமும் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத் தில், மருத்துவப் பரிசோதனைகள் மூலம் நோய் நாடி - நோய் முதல் நாடி அதற் கேற்ற மருத்துவமும் செய்து கொண்டு மேலும் நம் வாழ்நாளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

முதியவர்கள் (Senior Citizens) தொகை மிகவும் அதிகம் பெருகும் என்பதே பல நாடுகளின் சமூகப் பிரச் சினை - நிதித் தட்டுப்பாடு பிரச்சினை என்றாலும் மனிதநேய அடிப்படையில், நோயற்ற வாழ்வுடன்கூடிய மக்கள் தானே மிகப் பெரிய, அரிய செல்வம் ஒரு நாட்டிற்கு!

எனவே மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.

இளம் வயதில் இளையர்கள் நோய்களால் தாக்கப்பட்டு, உயிரிழப் புக்கு ஆளாகி வீணே தங்களின் வாழ்வைக் குறுக்கிக் கொள்ளுதலை விடக் கொடுமை - குறிப்பாக அவர் தம் பெற்றோர்களுக்கு வேறு உண்டா? இல்லையே!
எனவே

உணவுப் பழக்கம்
மருத்துவப் பரிசோதனையின்மை
புகைத்தல், மதுகுடித்தல்
புகையிலைப் பயன்பாடு
ஆகிய தீமைகளை எதிர்த்து நாம் அனைவரும் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை நாடு தழுவிய அளவில் நடத்திட இதுவே சரியான தருணம்.

நல்ல சமயம் இது - அதை நழுவ விடக் கூடாது. என்பதைப் புரிந்து ஊருக்கு ஊர் விழிப்புணர்வுப் பிரச் சாரம் செய்வோமாக!

தமிழ் ஓவியா said...

விருதுநகர் விருந்து

கனவான்களே!

திரு.வி.வி. இராமசாமி அவர்கள் சுயமரியாதைக் காரர்கள் தேவஸ்தானக் கமிட்டிக்குப் போகலாமா எனக் கேட்பது ஒரு நல்ல கேள்வியாகும்.

நான் சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு 4.5 வருடம் தேவஸ்தான கமிட்டியில் பிரசிடெண்டாகவும், வைஸ் பிரசிடெண்டாகவும், இருந்தேன். தேவஸ்தானச் செல் வங்களைப் பொது நலத்திற்குப் பயன்படும்படி செய்யக் கூடுமானால். அது நல்ல வேலைதான், அங்கு போக வேண்டியதும் அவசியந்தான் என்று கருதியே அங்கு இருந்தேன். இந்த எண்ணத்தின் மீதே தேவஸ்தான சட்டத்தையும் ஆதரித்தேன். ஆனால், அவை சரியான பலனைக் கொடுக்கவில்லை.

ஆகவே நான் இராஜினாமாச் செய்தேன். எனது சகபாடிகள் எனது இராஜினாமாவை ஒப்பாமல் எனது அபிப்பிராயத்தை ஆதரிப்பதாயும் ஆனால் பொது ஜனங்கள் அபிப்பிராயம் விரோதமென்றும் சொன் னார்கள். ஆனாலும், நான் வேறு வேலையில் இந்தக் கவனம் செலுத்தலாம் என்று ஒதுங்கிக் கொண்டேன். தகுந்த சகபாடிகள் இருந்தால் அதை நல்வழிப்படுத்தலாம் என்பதும் ஒரு அளவுக்கு உண்மைதான்.

இராமனாதபுரம் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்டு திரு.இராமச்சந்திரன் அவர்கள் நல்ல முயற்சிகள் எடுத்து இருக்கின்றார்கள். அது கைகூடுவதற்கு நமது இராமசாமி போன்றவர்கள் உதவி மிக நல்லதாகும். வெறும் சாமி பூஜைகளையும், உற் சவங்களையும் நடத்திக் கொடுப்பதற்குச் சுயமரியாதைக் காரர் அங்கு போவது அவசியமற்ற காரியமாகும்.

ஆதலால், கோவில்களின் பேரால் இருக்கும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்கவும், கோவில்களின் பேராலுள்ள செல்வங்களெல்லாம் மக்கள் நலத்திற்கு உதவவும் வேலை செய்ய வேண்டியது முக்கிய அவசியமாகும். அந்தப் பணங்களில் நமக்குச் சம்பந்தம் இல்லை என்று நாம் சும்மா இருந்துவிட்டால் அவர்களுக்கு நன்மையே யொழிய நட்டம் ஒன்றும் இல்லை.

ஆகையால் இந்த வித அபிப்பிராயமுள்ள திரு. இராமசாமியைத் தெரிந்தெடுத்த வர்களும் இதே அபிப்பிராயத்தோடுதான் தெரிந்தெடுத் திருப்பார்கள். ஏனென்றால் திரு. வி.வி. இராமசாமி அபிப்பிராயம் யாரும் தெரிந்ததேயாகும். ஆதலால் அப்படிப்பட்டவர்களின் விருப்பத்திற்கு இணங்கிய திரு. இராமசாமி தனது கடமைகளைச் செய்வார் என்பதில் சந்தேகமில்லை.

இது போலவே, கல்வி இலாகாவுக்கும் திரு.கந்தநாடார் பி.ஏ.பி.எல் அவர்களைத் தெரிந்தெடுக்கப்பட்டது நமக்கு, இலாபமேயாகும் கல்வி இலாகா பார்ப்பனியமயமாய் இருக்கின்றது. கல்வி வருணாசிரமக் கல்வியாய் இருக் கின்றது. பாடப் புத்தகங்கள் புராணப் புத்தகங்களாக இருக் கின்றன. இத்துறையில் புகுந்து அவற்றைப் பகுத்தறிவுக்குப் பயன்படும்படி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இன்று இந்தியாவின் இழிநிலைமைக்குக் காரணம் மதமும், கல்வியுமே யாகும். பழைய கால கல்வியைச் சங்கத்தின் மூலம் அடக்கி வைத்து பார்ப்பனியத்திற்கு எதிரான எதற்கும் இடம் இல்லாமல் செய்து விட்டார்கள். புத்தகங்களை அரங்கேற்றுவது என்பதே கட்டுப்பாடாகும் என்பதுதான் அர்த்தம் இப்போதைய யூனிவர்சிட்டி என்பது அக்கால சங்கமாகவும், அரங்கேற்றுவது டெக்ஸ்ட்புக் கமிட்டியில் பாசாக வேண்டியதாகவுமே இருக்கின்றது.

அந்தக் கமிட்டியில் மதம் இல்லாதவர்களும், கடவுள் பைத்தியம் இல்லாதவர்களுமான பகுத்தறிவாளர்கள் இருக்க வேண்டும். நமது யூனிவர்சிட்டி படிப்பு மூடநம்பிக்கையைப் பலப்படுத்துவ தாகும். இதிலிருந்து யாரும் அறிவு பெற்று விட முடியாது. வேண்டுமானால் கிராமபோன் ஆகலாம். ஆதலால், அத்துறைகளில் சுயமரியாதைக்காரர்கள் புகுந்து முதலாவது உபாத்தியாயர்களை வகுப்புவாரிப் பிரதி நிதித்துவப்படி நியமிக்க வேண்டும்.

உபாத்தியாயர்களுக்கு நல்ல படிப்பு கொடுக்க வேண்டும். அறிவுக்கு ஆதாரமாக புத்தகங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படவேண்டும் . இது முதலிய காரியங்கள் கல்வித்துறையில் செய்ய வேண்டி யிருப்பதால் அதற்கேற்றவர்கள் போக நேரிடுவது நன்மையேயாகும். ஆதலால் நீங்கள் இந்தக் கருத்தின் மீதே தெரிந்தெடுத்துப் போற்றுகின்றீர்கள் என்று நினைக் கின்றேன்.

(06.07.1931 ஆம் தேதி விருதுநகர் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 19.07.1931

Read more: http://viduthalai.in/page-7/91191.html#ixzz3JC1qhFOK

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு சொத்துரிமை


மைசூர் அரசாங்கத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கச்சட்டம்

1931 வருடம் அக்டோபர் மாதம் 22 தேதி நடைபெற விருக்கும் சட்டசபையில் இந்து லா என்னும் இந்துக்கள் சட்ட சம்பந்தமான விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2 சட்டசபைகளில் மேற்படி விஷயங்கள் சம்பந்தமான பொதுக் கொள்கைகள் யாவும் ஒப்புக்கொள்ளப்பட்டாய் விட்டன. அதன்மீது ஏற்பாடு செய்திருக்கும் திட்டங்கள் வரப்போகும் சட்டசபையின் விவாதத்திற்குக்கொண்டு வரப்படும்.

அவையாவன:- பெண்களுக்குத் தாங்கள் பெண்களாகப் பிறந்தகாரணத்தாலோ, அல்லது அவர்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதற்கு மதசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்கின்ற காரணத்தாலோ அவர்களது வாரிசு சொத்துரிமை மறுக்கப்படக் கூடாது. ஒரு பாகம் பிரியாத குடும்பத்தில் உள்ள ஒருவர் தான் சுயராஜிதமாக சம்பாதித்து வைத்திருக்கும் சொத்திலும் பெண் சந்ததிகளுக்கு உரிமை உண்டு.

ஒவ்வொரு விதவைக்கும் தானாகவே தத்து எடுத்துக்கொள்ள உரிமையுண்டு. புருஷன் கண்டிப்பாய் தத்து எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஏற்பாடு செய்திருந்தால் விதவைக்குத் தத்து எடுத்துக் கொள்ள உரிமை இல்லை.

பெண் பிள்ளைகளுக்கு இப்போது கிடைத்துவரும் வாரிசு உரிமைகளிலும்கூட சொத்துக்களின் வரும்படிகளை அனுபவிக்க மாத்திரம் உரிமை இருக்கின்றதே தவிர, மற்றபடி அவர்கள் அதைத் தங்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரமாய் அனுபோகிக்கவும், வினியோகிக்கவும் உரிமை இல்லாமல் இருக்கின்றார்கள்; ஆதலால் இந்தக்குறையும் நீங்கும்படியாக அதாவது அவர்களுக்கு கிடைக்கும் வாரிசு உரிமை சொத்துக்களை தங்கள் இஷ்டப்படி சர்வசுதந்திரமாய் அனுபவிக்கவும், வினியோகிக்கவும் இந்தப் புதிய சட்டத்தில் அனுமதிக்கப்படுகின்றது.

பாகம் பிரியாத குடும்பத்தில் கணவன் இறந்துவிட்டால் பெண் ஜாதிக்குக்குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும் குடும்பசொத்தில் கணவனுக்குள்ளபாகம் சர்வ சுதந்திரமாய் பெண்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். குடும்ப சொத்துக்கள் பல வழிகளில் துர்வினியோகம் செய்யப்பட்ட காலங்களிலும் அச்சொத்துகளின்மீது பெண்களுக்கு ஜீவனாம்சத்திற்கு உரிமையுண்டு என்பதாகும்.

- குடிஅரசு செய்திக் கட்டுரை 04.10.1931

Read more: http://viduthalai.in/page-7/91192.html#ixzz3JC26eDVz

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் அரசர்கள்தான் பார்ப்பனர்களுக்கு அக்கிரகாரங்களை ஏற்படுத்தித் தந்து பார்ப்பனர்களை ஆலோசகர்களாகவும் தளகர்த்தர்களாகவும் நியமித்துக் கொண்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கருத்து

முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் விவாதம் இல்லாமல் பார்லிமெண்டில் நிறைவேற்றப்படுவது சரியல்ல. நிதி மசோதா போன்ற முக்கியமான மசோதாக்கள் மீது அதிக நேரம் விவாதம் நடப்பதற்கான வழிமுறைகளை மக்களவை அவைத்தலைவர் சபாநாயகர் கண்டறிய வேண்டும். திட்டங்களுக்குப் பணத்தை ஒதுக்கும்போது, வரிகள் விதிக்கும்போது குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கி விவாதிப்பது அவசியம்.

- பிரணாப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்

--------------

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி. ஆனால், பதவியேற்பு விழாவில் சாமியார்கள், துறவிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்கள் வரிசையாக அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இது மூடநம்பிக்கை இல்லையா? இதை எப்படி ஏற்க முடியும்? பா.ஜ. தலைவர்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

- அசோக் சவான், காங்கிரஸ் மூத்த தலைவர்

--------------

புதிய எழுத்தாளர்கள் தங்களது எழுத்துகளில் உளவியலைக் கொண்டுவர வேண்டும். மனிதனுக்குள் இருக்கும் மன ஓட்டங்களை எழுத்தைத் தவிர வேறு எதிலும் பதிவு செய்துவிட முடியாது. வாழ்வில் வெளிச்சம் படாத பக்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை வெளியில் கொண்டு வருவது எழுத்தாளனின் கடமை.

- கவிப்பேரரசு வைரமுத்து

--------------

ஆந்திரத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 54 விழுக்காடு தெலங்-கானாவுக்குத் தரப்பட வேண்டும். அதைத் தர ஆந்திர முதல்வர் மறுக்கிறார். இது தெலங்கானா மக்களுக்கு சந்திரபாபு நாயுடு இழைக்கும் அநீதியாகும்.

- சந்திரசேகர் ராவ்,
தெலங்கானா முதல் அமைச்சர்

--------------

கடந்த காலத்தை விடவும் வடக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு இடையிலான உறவுப் பாலம் வலுவடைந்-துள்ளது. வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்கும் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்னரே மண்சரிவு குறித்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன் பின்னரே, வாக்கு சேகரிக்கச் சென்ற அரசியல்வாதிகள் சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது மக்கள் நலனிலும் அக்கறை கொண்டிருந்தால் இப்படிப்பட்ட உயிர்ப் பலிகளைத் தடுத்திருக்க முடியும்.

- விக்னேஸ்வரன், முதல் அமைச்சர், இலங்கை வடமாகாணம்

தமிழ் ஓவியா said...

காட்டிக் கொடுக்கும் புளூ-டூத்

மழை, வெயில் இரண்டுக்கும் பாதுகாப்புத் தருவது குடை என்றாலும், மழை பெய்யும்போதுதான் பெரும்பாலோர் குடையைப் பயன்படுத்துகிறோம். நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கோ அல்லது வெளியிடங்களுக்கோ செல்லும்போது மழை பெய்தால் எடுத்துச் செல்லப்படும் குடை, அங்கிருந்து திரும்பும்போது மழை பெய்யவில்லை என்றால் குடையை எடுத்துவர நிறையப் பேர் மறந்து விடுவ துண்டு. அப்படி மறந்துபோன குடையை அல்லது பிறரால் திருடப்படும் குடை இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கும் கருவியினை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்க நிறுவனத்தாள் குடையில் செல்பேசியில் பயன்படுவதைப் போல நவீன புளு_டூத் கருவி ஒன்று இணைக்கப்-பட்டிருக்கும். இது ஸ்மார்ட் போனுடன் இணைந்திருக்கும். குடை திருடப்-பட்டிருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ நுட்பமான வரைபடத்தின் மூலம் குடை இருக்கும் இடத்தினை இந்தக் கருவி காட்டிக் கொடுத்துவிடுமாம்.

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க!


பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச விரும்புகிறதா அல்லது இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுடன் பேச விரும்புகிறதா? இதுபற்றிய தெளிவான முடிவை எடுக்காதவரை அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை.

- அருண் ஜெட்லி, மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்

காஷ்மீர் மக்கள் இந்தியப் பிரிவினைவாதிகள் அல்ல. தங்கள் உரிமைக்காகப் போராடும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள். மக்கள் தங்கள் சுயமான முடிவுகளை எடுப்பது என்பது அய்.நா.தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்-பட்டது. இந்தப் பிரச்சினையில் பாகிஸ்தான் ஒருதரப்புவாதி. எனவே, இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

- தஸ்னிம் அஸ்லாம், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்

சொல்றேங்க....!

நீங்க ரெண்டு பேரு சொல்றதைவிட காஷ்மீர் மக்கள் என்ன விரும்புறாங்கங்கறது தான் முக்கியம்.

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


சூரிய சக்தியில் இயங்கும் சோலார் இம்பல்ஸ்2 (எஸ்அய்2) என்ற விமானம் தயாரிக்கப்பட்டு 2015 மார்ச் அபுதாபியிலிருந்து புறப்பட்டு உலகைச் சுற்றிவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

மூளைப் புற்று நோயைக் குணப்படுத்தும் குருத்தணுவை (ஸ்டெம் செல்) இந்திய_அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் காலித் ஷா தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது.

பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்-திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் ஆளில்லா சரக்கு ராக்கெட் அண்டாரெஸ் கிளம்பிய சில வினாடிகளில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

வங்க தேசத்தின் அரசியல் தலைவர் ரஹ்மான் நிசாமி போர்க் குற்றம் புரிந்ததாக அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சசேனா அக்டோபர் 29 அன்று பொறுப்பேற்றுள்ளார்.

அய்.நா. சபையில் கொண்டுவரப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான வரைவு தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.

காணாமல் போன நபர்கள் குறித்து உடனடியாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கேள்விகள் இடம் பெறும் வகையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள் வரும் கல்வியாண்டு முதல் மாற்றப்பட உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 3 அன்று நிராகரித்தது.

தந்தை மரணத்திற்குப் பின் விவாகரத்துப் பெற்ற மகளுக்கு தந்தையின் வேலையை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பகவான் பிரசாதம் (லட்டு) தொடர்பான விளம்பரத்தில் மறைத்தது ஏன்?

திருப்பதி கோவில் அண்மையில் லட்டு விளம்பரமொன்றைச் செய்தது. திருப்பதி லட்டிற்கு புவிசார் காப்பீடு பெறுவதற்காக உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஆதரவினைத் தரவேண்டுமாம். அதாவது, 300 ஆண்டு பாரம்பரியமிக்க திருப்பதி லட்டு காப்பீடு பெறுவதற்கு உங்களது ஆதரவு தேவை.

100 கிலோ மைதா மற்றும் கடலை மாவு, பத்து டன் அஸ்கா(சீனி), 700 கிலோ முந்திரிப்பருப்பு, 180 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் பசும்நெய், 500 கிலோ கற்கண்டு, 540 கிலோ உலர் திராட்சை மற்றும் 150 லிட்டர் வாசனைப் பன்னீர் மற்றும் ரோஜாச்சாறு சேர்க்கப்படுகிறதாம். இவை அனைத்தும் ஒரு நாளில் தயார் செய்து உங்கள் கைக்கு பகவானின் பிரசாதமாக கொடுக்கிறோம் என்கிறது அந்த விளம்பரம்.

அது சரி, இவற்றுடன் கல், நட்போல்ட், பறவைக் கழிவு, இரும்புத்துரு, தலைமுடி, நகத்துண்டு இவையெல்லாம் எத்தனை கிலோ எத்தனை டன் சேர்ப்பீர்கள் என்று கூறவில்லையே! (சில நேரங்களில் வேறு சில உயிரினங்களும் வறுவலாக சேர்க்கப்-படுகிறது என்றும் சொல்கிறார்களே(?).

- சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

பெண்ணடிமை

ஈரான் நாட்டில் பெண்கள் கைப்பந்து (வாலிபால்) விளையாட கடந்த 2012ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. பெண்கள் கைப்பந்து விளையாடினால் அவர்களை அநாகரிகமாக நடந்துகொள்ளும் ஆண் பார்வையாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது என ஈரான் அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஜூன் 20ஆம் நாள் ஈரானில் அந்நாட்டு அணியுடன் இத்தாலி அணி மோதிய ஆண்கள் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியைக் காண இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஷெபர்ட்ஸ் புஷ் பகுதியைச் சேர்ந்த இங்கிலாந்து_ஈரானிய சமூக ஆர்வலர் கோன்சே கவாமி ஒரு குழுவாகச் சென்றார். அந்தக் குழுவினரைக் காவல் துறையினர் அடித்து கைது செய்து விடுவித்தனர்.

கோன்சே கவாமி மட்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைப்பந்துப் போட்டியைக் காண முயன்றதற்காக கவாமிக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பன்னாட்டு அளவில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கவாமியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் இணையதளக் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

கைப்பந்துக்குத் தடை போட்டது ஈரான். அந்த தொந்தரவெல்லாம் எதற்கு? கண்ணிருந்தால் தானே கண்டதையும் பார்ப்பதற்கு! போடு தடை கண்களுக்கு என்று ஒருபடி மேலே (?!) சென்றிருக்கிறது சவுதி அரேபியா. பெண்களின் கண்களைக் காவியங்-களில் வர்ணித்த்திருக்கிறார்கள். இன்றைக்கும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். போதாக்-குறைக்கு, இந்தப் பொண்ணுங்களே இப்படித்-தான் புரிஞ்சு போச்சுடா.. அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா என்கிறார்கள் திரைப்படக் கவிஞர்கள்.

அப்படிப்பட்ட கல்லறையே பெண்களின் கவர்ந்திழுக்கும் கண்கள் என்று யோசித்து இதுவரை புர்காவில் கண் மட்டும் தானே தெரிந்தது. அதையும் தடை செய்துவிடலாமே என்று முடிவு செய்திருக்கிறது சவுதி அரேபியா. சபலத்தைத் தூண்டும் கண்களை உடையவர்கள் அவற்றை மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். நாங்கள் அவர்களின் கண்களை மறைக்கச் சொல்லி வலியுறுத்து-வோம். அப்படிச் சொல்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது என்கிறார் ஒழுக்கத்தை வளர்த்தல் மற்றும் தீயொழுக்கத்தைத் தடுக்கும் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஷேக் மோட்லப் அல் நபெத். அது என்ன சபலத்தைத் தூண்டும் கண் என்றால் எது?

அதற்கென்ன அளவுகோல் என்று கேட்டால், அதற்கான ஸ்கேலையும் கையில் வைத்திருக்கிறார்கள் இந்த ஒழுக்க வாத்தியார்கள். மூடப்படாத அழகான வடிவம் கொண்ட, ஒப்பனை செய்யப்பட்ட கண்கள், ஒப்பனை செய்யப்படாவிடினும் அழகான கண்கள் என்கிறது அந்த ஸ்கேல். சவுதியின் தற்போதைய மன்னர் அப்துல்லா-வுக்குப் பிறகு ஆட்சிக்கு வர இருக்கும் இளவரசர் நயிஃப் காலத்திலாவது இத்தகைய நிலை மாறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூடுதலாக ஏமாந்திருக்கிறார்கள்.

அவர், இது இஸ்லா-மின் தூண்களுள் ஒன்று. இந்தச் சட்டத்தை அனைத்து முஸ்லிம்களும் ஆதரிக்க வேண்டும் என்கிறார். எதற்கு பாஸ், பெண்களிடம் தலையை மூடு, காலை மூடு, கையை மூடு, வாயை மூடு, முகத்தை மூடு, கண்ணை மூடு என்று பார்ட் பார்ட்டாக தடை செய்கிறீர்கள்? மொத்தமாக பெண்களையே தடை செய்துவிட்டால் ஒரே வேலையா முடிஞ்சுடுமே! அவங்களையெல்லாம் விரட்டி வெளியில அனுப்பிட்டா ஒரேடியா ஒழுக்கம் நட்டுக்கிட்டு நிற்கும். தீயொழுக்கம் இல்லாமல் போகும். அவ்வளவு சிரமப்பட்டுக்கிட்டு எதுக்கு அவங்களை நாட்டுல வச்சிக்கணும்? அடுத்தடுத்த தலைமுறை இல்லாமல், நீங்களும் அழிஞ்சிடு-வீங்க... நாடாவது நல்லா இருக்குமே! என்று பொங்கி எழுந்துவிட்டார்கள் குறைந்தபட்ச மனிதநேயம் உள்ளவர்கள்!

தமிழ் ஓவியா said...

ராஜம் கிருஷ்ணன்


ஒரு பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனிடம் ஒரு பேட்டியின்போது கேட்கப்பட,

அவள் தன் மதத்தைவிட்டு வெளியேற வேண்டும். எல்லா காலகட்டங்களிலும் ஒரு பெண்ணை மதத்தின் கோட்பாடுகள் அடிமையாகவே வைத்திருக்கின்றன (அவள் விகடன்) என்றவர் அவர். தனது எழுத்துகளில் புதுமைக் கருத்துகளைப் புகுத்தி, பெண்ணுரிமைக் காகக் குரல்கொடுத்தவர். கடந்த மாதம் அவர் தனியார் முதியோர் காப்பகம் ஒன்றில் மறைவுற்றார் என்ற செய்தி மூலம் கவனத்தில் கொள்ளவேண்டிய சமூகப் பிரச்சினை ஒன்றை தன் வாழ்க்கை மூலம் எழுதிச் சென்றுள்ளார்.

தமிழ் ஓவியா said...

லண்டன் தய்மார்கள் நடத்திய வித்தியாசமான தோள்சீலைப் போராட்டம்

உலகைச் சுற்றி....

லண்டன் தய்மார்கள் நடத்திய வித்தியாசமான தோள்சீலைப் போராட்டம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட ஜாதிப் பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, தங்களின் மேலாடை அணியும் உரிமையைப் பெற்றார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடந்த பெண்ணுரிமைக்கான போராட்டம் அது. அதுவே பரவலாக தோள்சீலைப் போராட்டம் என்று அறியப்படுகிறது.



இதோ 21 ஆம் நூற்றாண்டில் லண்டனில் இருக்கும் தாய்மார்கள் சிலர் வித்தியாசமான-தொரு போராட்டம் ஒன்றை நடத்தியிருக்-கிறார்கள். ஒருவகையில் இதுவும் தோள்சீலைப் போராட்டம் தான். இந்தியாவின் தமிழ்நாட்டுப் பெண்கள் மார்புகளை மறைக்க தோள்சீலையை அணிவதற்காக போராட்டம் நடத்தினார்கள் என்றால், லண்டன் தாய்மார்களோ பொது இடங்களில் தங்களின் மார்பு தெரிய குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதற்கு தமக்கு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதற்காக இந்த வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார்கள்.

லண்டன் புறநகர்ப்பகுதியில் இருக்கும் ஒரு பப்பில் (உணவுடன் கூடிய மதுபானச்சாலை) தன் குழந்தைக்குப் பால் கொடுத்த ஒரு தாய் தனது மார்புகளை மூடவில்லை என்று அந்தக் கடையின் பணியாள் அந்தப் பெண்ணிடம் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக அந்தத் தாய் புகார் தெரிவித்திருக்கிறார். கடையில் இருந்த ஒரு (அழுக்கு துடைக்கும்) துணியைக் கொண்டுவந்து தன்னிடம் கொடுத்து மார்புகளை மூடச்-சொல்லி அந்தப் பணியாள் வலியுறுத்திய செயல் தன்னை அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாகவும் அந்தத் தாயார் தெரிவித்துள்ளார்.

அந்தப் பணியாளரின் வார்த்தைகளும் அவர் அழுக்குத்துணியைக் கொண்டுவந்து தன்னிடம் கொடுத்த செயலும், ஒரு தாய் என்கிற முறையில் தனது பால் கொடுக்கும் உரிமையையும், பெண் என்கிற முறையில் தனது சுயமரியாதையையும் பாதித்ததாக அந்தத் தாயார் உள்ளூர் பத்திரிகையில் புகார் செய்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு நடந்ததைக் கேள்விப்பட்ட உள்ளூர்த் தாய்மார்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து அந்த பப்புக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட நாளை அறிவித்துவிட்டு, அந்த நாளில் தத்தம் குழந்தைகளுடன் அந்த பப்புக்கு வந்த தாய்மார்கள் எல்லோரும் தங்களின் குழந்தைகளுக்கு மார்பு மூடாமல் பாலூட்டியுள்ளனர். அந்தத் தாய்மார்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் முகமாக குழந்தை இல்லாத பெண்களும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர்.

இந்தச் செய்தியின் முழுமையான தகவல்-களை கீழ்கண்ட இணைப்புகளில் சென்று நீங்கள் வாசித்துக் கொள்ளலாம்.

இந்தப் போராட்டத்தை ஆதரித்த பெண் ஒருவர் தெரிவித்த காட்டமான கருத்து இது: Barbara Tanner, 76, also from Bexleyheath added: "Most of the men in this pub have seen breasts before, they’re groping them all the time".

தமிழ்நாட்டுக்கும் லண்டனுக்கும் இடையில் எத்தனையோ ஆயிரம் மைல் இடைவெளி இருக்கிறது. தமிழ்நாட்டின் தோள்சீலைப் போராட்டத்துக்கும் லண்டனில் நடந்த இந்தப் போராட்டத்துக்கும் இடையில் 200 ஆண்டு கால வித்தியாசமும் இருக்கிறது. ஒன்று, இந்தியாவின் ஜாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும்கூட. மற்றதின் பின்னணியில் வர்க்கப்பார்வையும் இருக்கக்கூடும். ஒன்று, தமது மார்புகளை மறைக்க உரிமை கோரி நடந்த போராட்டம். மற்றது, மார்புகளைத் திறந்து காட்டியபடி பாலூட்ட நடந்த போராட்டம்.

இத்தனை வித்தியாசங்கள் இருந்தும் இரண்டிலும் வெளிப்பட்ட குரல் ஒன்றே. அது பெண்ணியக் குரல். பெண்ணின் உடல் என்பது அடிப்படையில் அவளுடைய உடைமையே தவிர ஆணின் உடைமை அல்ல என்கிற அடிப்படை உரிமைக்கான குரல். பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று கே. ஜே. ஜேசுதாஸ் போன்றவர்கள் பேசும் காலகட்டத்தில், தங்கள் உடலின் எந்தப் பகுதியும் வெளியில் தெரியலாம் அல்லது தெரியக்கூடாது என்கிற மிகச்சிறிய உரிமைக்காகக்கூட பெண்கள் இன்னமும் போராட வேண்டியிருக்கிறது என்பதற்கான மற்றும் ஓர் எடுத்துக்காட்டே லண்டனில் நடந்த இந்த வித்தியாசமான 'boob and bottle feed-in'என்கிற 21 நூற்றாண்டின் தோள்சீலைப் போராட்டம்.

- ஜெகதீசன்

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இரு முடி என்பது என்ன?

சபரிமலை செல்லும் அய்யப்ப மார்கள் தலையில் சுமந்து செல்லும் பொருட்களை இருமுடியாகக் கட்டி சுமந்து செல்வார்கள். இரண்டு முடிகளில் முன்முடி புண்ணியம், பின்முடி பாவம் என்பதைக் குறிக்கும், புண்ணியம், பாவம் ஆகிய இரண்டையும் இரு முடிகளாக் கித் தலையில் சுமந்து செல்வதாக அய்தீகம்.

அய்யப்பனைத் தரிசித்துப் பின் இல்லம் திரும்புகையில், பாவம் எனும் பின் முடியை விட்டு விட்டுப் புண்ணியம் எனும் அய்யப்பனின் பிரசாதம் நிரம்பிய ஒரு முடியோடு திரும்பு கிறோம். முன் முடியில் உள்ள தேங்காயில் எடுத்துச் செல்லப்படும் நெய்யே அய்யப்பனுக்கு அபிஷேகம் ஆகிறது. தேங்காய் சிவபெருமான் எனவும் நெய் திருமாலாக வும் கருதப் பெறுகிறது என்று கூறு கிறார்கள்.

இந்த முன்முடி, பின் முடி வியாபாரம் இப்பொழுது மற்ற கோயில்களையும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. எல்லாம் பிசினஸ்தான் அதுசரி, முன்முடி புண்ணியம் பின் முடி பாவம் என்று கதை விட்டவர்கள் யார்? எந்தக் காலத்திலோ எந்த ஒரு கிறுக்கனோ உளறியது எல்லாம் பக்தியாகி விட்டது என்பது தானே உண்மை?

பாவத்தை இறக்கி வைத்துத் திரும்பும் அய்யப்பப் பக்தர்கள் சாலை விபத்து களில் பலியாவது ஏன்? இது புண் ணியமா? அல்லது பாவமா?

Read more: http://viduthalai.in/e-paper/91322.html#ixzz3JKrRTYPO

தமிழ் ஓவியா said...

மெய்ப்பிக்க முடியும்!


புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப்பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி, முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய்யப்பட்ட கதைகளேயாகும். இவை களை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும். - (விடுதலை, 17.3.1961)

Read more: http://viduthalai.in/page-2/91302.html#ixzz3JKryAtu8

தமிழ் ஓவியா said...

செத்தவர் - பிழைத்தார்! அலட்சிய நீக்கத்தால்!

செத்தவர் பிழைப்பரோ என்று ஒரு சித்தர் பாடல் உண்டு. ஆனால் இப்போது செத்தவர் பிழைக்கவும் செய்கின்றனர் என்பது அதிசயமான செய்தி அல்லவா? இன்று ஒரு நாளேட்டில் (17.11.2014) வந்துள்ள செய்தியைப் படியுங்கள்.

11 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் எழுந்த பாட்டி

இறந்து விட்டதாக அறிவிக்கப் பட்டு, பிணவறையில் வைக்கப்பட்ட 91 வயது பாட்டி, 11 மணி நேரத்திற்கு பின், எழுந்து டீ கேட்டதால், பிண வறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலந்து நாட்டின், ஆஸ்டிரோ லுபெலஸ்கி நகரை சேர்ந்த ஜெனினா கோல்கிவிஸ் 91. கடந்த 6ஆம் தேதி காலை, ஜெனினாவின் இல்லத்தில், அவரை பரிசோதித்த டாக்டர் வைஸ்லாவா, அவர் இறந்து விட்டதாக சந்தேகமடைந்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பினார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவமனை டாக்டர்கள், ஜெனினா இறந்து விட்டதாக அறிவித்ததையடுத்து, அவரது உடலை ஒரு பையில் வைத்து மூடிய ஊழியர்கள், பிண வறையில் வைத்தனர்.

ஏறக்குறைய, 11 மணி நேரத்திற்குப் பின், மற் றொரு உடலை, பிணவ றையில் வைப்பதற்காக வந்த ஊழியர்கள், ஜெனி னாவின் உடல் அசை வதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, பையை திறந்து பார்த்தனர்.

இவர்களைப் பார்த்ததும், எழுந்து அமர்ந்த ஜெனினா, குடிப்பதற்கு சூடாக டீ கேட்டார்.

இதுகுறித்து, தகவலறிந்து மருத்துவ மனை டாக்டர்கள், ஜெனினா நலமுடன் இருப்பதை உறுதி செய்து, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

- இப்படியும் நடைபெறுகிறது. சாகாதவரைச் சரியாகக் கண்டுபிடிக்கத் தெரியாத மருத்துவர்களின் அலட்சியப் போக்கே இதற்கான முக்கிய காரணமாகும்!

முதல் டாக்டருக்கு சந்தேகம் வந்ததால் தான் அவர் அந்த 91 வயது பாட்டியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்; ஆனால் அந்த மருத்துவ மனை டாக்டர் பொறுப் புணர்ச்சியுடன் தனது கடமையைச் செய்ய வில்லை என்பது புரிகிறது!

பையில் வைத்து மூடப்பட்டு 11 மணி நேர வாசம் பிணங்களுடன் - பிணவறையில் வாழ்ந்துள்ளார் அந்த வார்சா- போலந்து பாட்டி!

கால் அசைவைக் கண்டு அறிந்த பிணவறை ஊழியர் கவனம் பாராட்டத் தகுந்தது! அவர் அலட்சியம் காட்டி யிருந்தால், இந்த வார்சா பாட்டி திரும்பி இந்த பூவுலகத்திற்கு புறப்பட்டிருக்க முடியாதே!

சில டாக்டர்களின் அலட்சியத்தால் இப்படி பலப்பல நேர்ந்து விடுகிறது!

அறுவை சிகிச்சை செய்து கத்தியையோ, கத்திரிக்கோலையோகூட உடலுக்குள்ளேயே வைத்து தைத்து விட்ட மறதி நாயகர்களும் உண்டே! மறதியில்லை என்றால் அலட்சியம் தானே காரணம்! இப்படிப்பட்டவர் களை மன்னிக்கக் கூடாது. தண்டனை வழங்கவே செய்ய வேண்டும்.

மாரடைப்பால் இறந்தவரைக்கூட மீண்டும் உயிர்த்து எழ, மார்பில் குத்திக் குத்தி, அல்லது வாயில் வாயை வைத்து மூச்சுக் கொடுத்து முயற்சிகள் செய்வதும், அதன் மூலம் நின்று போன இதயத் துடிப்பு மீண்டும் இயங்கத் தொடங்குவதும் (10 ஆயிரத்தில் ஒன்றுதான் என்றாலும் கூட) மருத்துவர்களின் தொண்டற மாகக் கருதப்படும் நிலையில், இப் படியும் சில அலட்சியங்கள் அக்கிர மங்கள் நடைபெறவே செய்கின்றன

இதனைத் தடுக்க அத்தகைய டாக்டர்களை சில ஆண்டு காலம் மருத்துவத் தொழில் புரியாமல் தடுத்து வைத்து தண்டனை தந்தே ஆக வேண்டும்.

எற்றென்று இரங்குவ செய்யற்க - செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று - குறள் (655)



- ஆசிரியர் கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/91304.html#ixzz3JKsA0j4g

தமிழ் ஓவியா said...

அரசு வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகளை யார் பயன்படுத்தலாம்?

சென்னை, நவ.17:தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ள உத்தரவு: சுழலும் சிவப்பு விளக்குளை மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவை தலைவர், மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய 6 பேர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சுழலும் வகையில் இல்லாமல் சாதாரண சிவப்பு விளக்குகளை சட்டப்பேரவை துணை தலைவர், தலைமை செயலாளர், ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப் பினர், மாநில ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத் தின் தலைவர், மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், மாநில சட்ட ஆணையத் தின் தலைவர், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர், மாநில தேர்தல் ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞர், மாநில திட்ட ஆணையத் தின் துணை தலை வர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஆகிய 14 பேர் மட்டுமே பயன்படுத் தலாம்.

இதே போல நீல நிற சுழலும் விளக்குகளை காவல்துறை டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பிக்கள், அய்.ஜி.க்கள், டி.அய்.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாநகர கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், கான்வாய்க்கு முன் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்கள், கூடுதல் ஆணையர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் (சட்டம், ஒழுங்கு) பயன்படுத்திக் கொள்ளலாம்.

சில அதிகாரிகள் பணி காரணமாக சாலை வழியாக செல்லும் போது அவர்கள் தடுக்கப்படாமல் இருக்க நீல வண்ணம் கொண்ட சுழலும் விளக் குகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சி யர்கள், மாநகராட்சி ஆணையர்கள், பொது துறை நிறுவனங்கள், வாரியங் களின் தலைவர்கள், மாவட்ட நீதி பதிகள், பெருநகர முதன்மை நீதிபதி கள், உயர்நீதிமன்ற பதிவாளர்கள், கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை கலெக்டர்கள், வருவாய் கோட்டாட்சியர், மாநக ராட்சி மேயர்கள், மாவட்ட பஞ் சாயத்து தலைவர்கள் ஆகிய 11 பேர் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் அவசர காலங்களில் இயக்கக்கூடிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வாகனங்கள், போக்குவரத்து துறையின் அமலாக்கப் பிரிவு வாகனங்கள், காவல்துறையின் ரோந்து வாகனங்கள் ஆகியவை சிவப்பு, நீலம், வெள்ளை என்ற மூன்று வகையான நிறங்களில் எதையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதே சமயம் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஊதா நிற கண்ணாடியை கொண்ட ஒளிரும் சிவப்பு விளக்குகளுடன் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/91305.html#ixzz3JKsZhFpB

தமிழ் ஓவியா said...

உடல் எடையை குறைக்கும் பழச்சாறு

உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பழச்சாறுகள் மூலம் எடையை குறைப்பது. அது எப்படி ஜூஸ் குடிப்பதன் மூலம் எடையை குறைக்க முடியும் என கேட்கிறீர்களா.

உண்மையிலேயே பழச்சாறு குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட் களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

எலுமிச்சை சாறு: பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை சாறில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

தக்காளி சாறு: ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.

அவகேடோ சாறு: அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

திராட்சை சாறு: திராட்சைப் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை சாறு எடுத்து குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

கொய்யாப்பழச் சாறு: கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதில் சாறு எடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்

ஆரஞ்சு பழச்சாறு: ஆரஞ்சு பழ ஜூஸை குடித் தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழச் சாறில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

அன்னாசி பழச்சாறு: அன்னாசியை மட்டும் அரைத் தால், அது கெட்டியாக சாறு போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.

Read more: http://viduthalai.in/page-7/91346.html#ixzz3JKtrZKPJ

தமிழ் ஓவியா said...

நோய்களை குணப்படுத்தும் வெங்காயம்


நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

* வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

* வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.

* வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.

* வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

* மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

* வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் டி.பி நோய் குணமாகும்.

கண் வெப்பம் குறைய

வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் வெப்பம் குறையும்.

கண் நோய்கள் குறைய

புளியம் பூவை அம்மியில் வைத்து அரைத்துக் தலையில் பற்றுப் போட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.

மூக்கடைப்பு குறைய

லவங்கப்பட்டைத் தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

Read more: http://viduthalai.in/page-7/91348.html#ixzz3JKu0Qruf