Search This Blog

18.3.09

ஆன்மீகம் அறிவை வளர்க்குமா? அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமா?

ஆன்மீகத்தின் அடிப்படையில் தேர்தலா?

"பாரதம் ஒரு ஆன்மீக நாடு. ஆன்மீகத்துக்கு எதிரான எந்த ஒரு முயற்சியையும் இந்த நாடு இறுதியில் நிராகரித்துவிடும். இந்த நாட்டின் ஆதாரமாக விளங்கும் பண்பாட்டினை அழித்திட எத்தனையோ அன்னிய சக்திகள் முயற்சித்தும் வெற்றி பெறவில்லை. ஆனால், நாடு விடுதலை பெற்ற பிறகு மதச்சார்பின்மை என்கின்ற போர்வையில் இந்த நாட்டின் பண்பாட்டினை அழிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போலி மதச்சார்பற்ற வாதிகளின் பிடியிலிருந்து நாட்டை விடுவித்து இந்த நாட்டின் பண்பாட்டினையும், அடையாளத்தையும் பாதுகாக்க, வரும் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உண்மையில் பண்பாட்டைப் பாதுகாக்க விரும்பும் ஆன்மீகவாதிகளை விரும்புகிறேன்."

- இவ்வாறு பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் திரு.இல. கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் நடக்க இருக்கும் 15 ஆவது மக்களவைத் தேர்தலை ஆன்மீகம் என்பதை மய்யப்படுத்தி பா.ஜ.க. சந்திக்க இருப்பதாகத் தெரிகிறது.

இதைவிட மக்கள் நலனில் அக்கறையில்லாத - மதவாதத்தை முன்னிறுத்தும் பிற்போக்குத்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

ஆன்மீகம் - ஆன்மீகம் அற்ற தன்மை, பக்தி - பக்தியற்ற தன்மை என்பது தனிமனிதனின் அறிவையும், நம்பிக்கையையும் பொறுத்தது.

அது ஒரு வீட்டின் நான்கு சுவர்களுக்குள் சம்பந்தப்பட்ட விவகாரம். அதனை வெளியில் கொண்டு வந்து அசிங்கப்படுத்தியவர்கள்தான் இல.கணேசன் சார்ந்துள்ள பா.ஜ.க. - சங் பரிவார்க் கூட்டத்தார்.

இவர்கள் சொல்லும் ஆன்மீகம் கூட இந்து மதம் என்ற ஒன்றை மட்டுமே சார்ந்ததாகும். மற்ற மதக்காரர்களின் ஆன்மீகத்தை நிராகரிக்கக் கூடியதாகும். பொதுவாக ஆன்மீகத்தை நேசிப்பவர்களாக இவர்கள் இருந்திருந்தால், இன்னொரு மதக்காரர்களின் ஆன்மீகம் சம்பந்தப் பட்ட வழிபாட்டுத் தலத்தை இடித்துத் தள்ளியிருப்பார்களா?

ஆட்சியை அமைப்பது என்பது நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது - நாட்டு வளத்தைப் பெருக்குவது - மக்கள் நலனைப் பாதுகாப்பது - மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பது, இல்லாமை, கல்லாமையை நீக்குவது, ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவது என்கிற திசையில் பயணிப்பதற்கே யாகும்.

மாறாக பஜனை செய்வது, கோயில் கட்டுவது, யாகம் நடத்துவது என்பதற்காக ஒரு அரசு வரவேண்டும் என்று சொல்லி பொதுமக்கள் வாக்களிப்பதில்லை.


ஆன்மீகம் பரவவேண்டும் என்று கருதுகின்றவர்கள் சன்னியாசிகளாகக் காட்டுப் பக்கம் போய் கந்த மூலங்களைப் புசித்துத் திரியட்டும் - நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை.


மனித வாழ்க்கை என்பதே அநித்தியம் என்று சொல்வதற்கா ஆட்சிக் கட்டிலில் ஏறவேண்டும்? மழை பெய்ய வருண பகவானுக்குப் பூஜை செய்யுங்கள்; கல்வி வளர சரஸ்வதி தேவிக்கு வேண்டுதல் செய்யுங்கள்; செல்வம் பெருக லட்சுமி தேவிக்குப் படையல் போடுங்கள்; ஈசனிடம் சரணாகதி அடையுங்கள்; அனைத்தும் கிடைக்கும் என்று இதோபதேசம் செய்யும் ஆன்மீகத்தைப் பரப்புவதற்குத்தான் மக்களிடம் வாக்குக் கேட்கப் போகிறார்களா?

ஆன்மீகம் மக்களுக்குச் சோறு போடுமா? அறிவை வளர்க்குமா? அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமா?

1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் இப்படித்தான் ஆன்மீகத்தை - ஆத்திகத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தார்கள். சேலத்தில் ராமனை திராவிடர் கழகத்தினர் செருப்பாலடித்துவிட்டார்கள் என்று ராமனை முன்வைத்தார்கள்.

அந்தத் தேர்தலின் முடிவு என்ன? 1967 தேர்தலில் 138 இடங்களில் வென்ற தி.மு.க. 1971 தேர்தலில் 183 இடங் களில் வெற்றி பெற்று ஆன்மீகத்துக்கு மரண சாசனம் எழுதினார்கள்.


தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அப்பொழுது குறள்போல ஒரு வாசகத்தைச் சொன்னார்.

இன்றைய ஆஸ்திகம் என்பது உயர்ஜாதியினரின் நலம்; இன்றைய நாஸ்திகம் என்பது பெருவாரியான மக் களின் நலம். உங்களுக்கு எது வேண்டும்? என்று கேட்டார்.

தமிழ்நாட்டு மக்கள் நாஸ்திகம் வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். ராஜாஜி அவர்களோ, இந்த முடிவைத் தொடர்ந்து, இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது என்று ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டு அறிக்கையினை வெளியிட்டார்.

இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் தமிழக பா.ஜ.க. தலைவர் திருவாளர் இல. கணேசன் அய்யர்வாள் அறிக்கை விடுவது பரிதாபமே!

--------------------நன்றி:-"விடுதலை" 18-3-2009

6 comments:

Unknown said...

//ஆட்சியை அமைப்பது என்பது நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது - நாட்டு வளத்தைப் பெருக்குவது - மக்கள் நலனைப் பாதுகாப்பது - மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பது, இல்லாமை, கல்லாமையை நீக்குவது, ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவது என்கிற திசையில் பயணிப்பதற்கே யாகும்.

மாறாக பஜனை செய்வது, கோயில் கட்டுவது, யாகம் நடத்துவது என்பதற்காக ஒரு அரசு வரவேண்டும் என்று சொல்லி பொதுமக்கள் வாக்களிப்பதில்லை.

ஆன்மீகம் பரவவேண்டும் என்று கருதுகின்றவர்கள் சன்னியாசிகளாகக் காட்டுப் பக்கம் போய் கந்த மூலங்களைப் புசித்துத் திரியட்டும் - நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை.//

வழிமொழிகிறேன்

Sivamjothi said...

இவர்கள் ஓட்டுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள்.

ஆனால்

நல்ல சன்னியாசிகளால்(தியாகம்) தான் மக்கள் நலமாக உள்ளனர்.

அவர்கள் நாட்டுக்கு தேவை இல்லை என்பது அறியாமை.

நீங்கள்

1.சுதர்சன க்ரியா - வாழும் கலை பயிர்ச்சி
2.நித்ய தியானம் - நித்யானந்த் பரமஹம்சர்
3.ஈசா யோகா
4.மன வளகலை

இதில் எதோ ஒரு பயிர்ச்சி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை எவ்வளவு மாற்றம் அளிக்கிறது என்று
பாருங்கள்.

இதனால் பல லட்சம் மக்கள் பயன்
அடைந்து உள்ளனர்.

உடல் வலிமை இருக்கும் வரை ஆன்மீகத்தை கேவளப்படுத்தி விட்டு
ஏதோ ஒரு நோய் வந்த பிறகு சாமி சாமி என்று ஓடுவது தான் அதிகமாக நடக்கிறது.

If you suffer from
Stress(Common in IT Field)
Blood presssure
any other disease

Attend above courses and get benefit from it.

சாணக்கியன் said...

இன்றுதான் ஜெயமோகனின் வலைத்தளத்தில்(http://jeyamohan.in/?p=2118) படித்தேன்.

/*தொண்ணூறுகளில் ஆன்மீகம் என்றால் உடனே சாமிகும்பிடுதல் என்று புரிந்துகொள்ளும் ‘அரசியல்’ வாசகர்கள் இருந்தார்கள். இன்று அவர்கள் இல்லை. */

ஆனால், மாறாக நீங்கள் ஆன்மீகம் என்பதை பற்றி பழைய புரிதல்களிலேயே இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

Unknown said...

//தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அப்பொழுது குறள்போல ஒரு வாசகத்தைச் சொன்னார்.

இன்றைய ஆஸ்திகம் என்பது உயர்ஜாதியினரின் நலம்; இன்றைய நாஸ்திகம் என்பது பெருவாரியான மக் களின் நலம். உங்களுக்கு எது வேண்டும்? என்று கேட்டார்.//


பெருவாரியான மக்களின் நலம் தான் எங்களுக்கு வேண்டும்

Unknown said...

//தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அப்பொழுது குறள்போல ஒரு வாசகத்தைச் சொன்னார்.

இன்றைய ஆஸ்திகம் என்பது உயர்ஜாதியினரின் நலம்; இன்றைய நாஸ்திகம் என்பது பெருவாரியான மக்களின் நலம். உங்களுக்கு எது வேண்டும்? என்று கேட்டார்.//


பெருவாரியான மக்களின் நலம் தான் எங்களுக்கு வேண்டும்

நம்பி said...

Yaro Balu Natarjan எழுதியது//நீங்கள்

1.சுதர்சன க்ரியா - வாழும் கலை பயிர்ச்சி
2.நித்ய தியானம் - நித்யானந்த் பரமஹம்சர்
3.ஈசா யோகா
4.மன வளகலை

இதில் எதோ ஒரு பயிர்ச்சி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை எவ்வளவு மாற்றம் அளிக்கிறது என்று
பாருங்கள்.

இதனால் பல லட்சம் மக்கள் பயன்
அடைந்து உள்ளனர்.//

இதை எல்லாம் நன்றாக உழைக்கும் உழைப்பாளிக்கு தேவையில்லை...நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தும் அளவுக்கு உழைக்கும் உழைப்பாளிகளுக்கு தேவையே இல்லை...அவன் உழைப்பே அவனுக்கு உடற்பயிற்சி..(நமக்கு சோறு போடும் விவசாயிகளின் உழைப்பு சாதரணமானதா...கூலிகள்..நகரசுத்தி தொழிலாளிகள்...கடின உழைப்பாளிகள்...).தன்னம்பிக்கையுடன் உழைப்பவனுக்கு இதெல்லாம் தேவையேயில்லை..(அவர்கள் தியாகத்தை பற்றி நித்தம் நினைத்தாலே அதிக நாள் உயிர் வாழலாம்) .

நீங்கள் குறிப்பிட்டவைகள் எல்லாம் செய்தாலும் ஒரு நாள் சாகத்தான் வேண்டும்...இதை எல்லாம் செய்யாவிட்டாலும் ஒரு நாள் சாகத்தான் வேண்டும்..என்ன செய்தாலும் மரணம் நிச்சயம்....அனுமதிக்கும் காலம் வரை என்ன? செய்யவேண்டும்...? எப்படி வாழ வேண்டும், எப்படி? இந்த நாட்டுக்கு உபயோகமாக இருக்கமுடியும்? என்பதை பற்றி சிந்திப்பது தான் முக்கியம்,,,,அதன்படி செயல்படுவதுதான் முக்கியம்...

விவேகானந்தர் சொல்லியது....

கடவுள் இருக்கு இருக்கு என்று சொல்லி கொண்டு மனிதநேயமில்லாமல் பிறருக்கு உதவாமல் இருப்பவனை விட கடவுள் இல்லை இல்லை என்று மறுத்து பிறருக்கு உதவும் மனப்பான்மையுடனும், தொண்டுள்ளத்துடன் வாழ்கிறானே! அவனே மேலானவன் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டும்?