![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvfscz8y5_qFod7-MmejDYDZxu68tSKbyf5kAiQ8eE5_2YQVl20wdbTMzh6nL9DowhmyAhJTB0_VtlaSsBcZ5fVDGw7kY_aPjBFAPxadZ5VBKErIKE_vzb0-CNcAuZvUnFPFasVHPTQ7E/s400/sphoto01.jpg)
ஜெர்மன் நாஜித் தலைவர் அடால்ஃப் ஹிட்லரையும் விஞ்சும் அளவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கொடுஞ்செயல்கள் அமைந்துவிட்டன.
அதுவும் கடந்த ஒரு வாரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை பன்னாட்டு அரங்கில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (Cluster Bombs) வீசி அழித்து முடித்திருக்கிறான். குவிந்து கிடக்கும் தமிழர்களின் பிணங்களை அகற்ற முடியாத அளவுக்கு சாவு எண்ணிக்கை அளவு கடந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
பல்லாயிரக்கணக்கில் மாண்டவர்கள் போக காயங்களுடன் எந்தவித உதவியுமின்றி, மருந்து, உணவு, குடிநீரின்றிக் கதறுவோர் கணக்கற்றவர்கள்! இப்படியொரு கொடுமை உலகின் எந்தப் பகுதியில் நடந்திருக்கிறது என்று கற்பனை செய்வதுகூட கடினம்தான்.
பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட தமிழர்களை குருவிகளைச் சுடுவதுபோல சிங்கள இராணுவம் தீர்த்துக் கட்டியதால், இந்தக் கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விடுதலைப்புலிகள் தரப்பில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.
சர்வதேச அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அப்பாவித் தமிழர்களை வெளியேற்றுவது தொடர்பாக இலங்கை இராணுவத்துடன் பேசப்பட்டு இருக்கிறது என்றும், அவர்களுடன் போர் நிறுத்தம் குறித்துப் பேச தலைவர்கள் பத்திரமாகச் செல்லலாம் என்றும் கூறப் பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு ஆயுதம் ஏதுமின்றி வெள்ளைக்கொடி பிடித்து பேச்சு வார்த்தைக்கு வரலாமென்று இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிஷன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அதன்படி விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பி. நடேசன் மற்றும் பூலித்தேவன் ஆகியோர் ஆயுதமின்றி வெள்ளைக்கொடியைப் பிடித்தவாறு இலங்கை இராணுவத்தை நோக்கிச் சென்றுள்ளனர்.
ஆனால் என்ன நடந்தது? ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள யுத்த தருமத்திற்கு விரோதமாக அவ்விருவரையும் கொன்றது இலங்கை இராணுவம் என்பது எவ்வளவு வெட்கக்கேடானது - கோழைத்தனமானது!
இதுபோன்று ஏராளமான குற்றங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதன்மூலம் நிச்சயமாக ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடம் இல்லை.
திராவிடர் கழகத்தின் சார்பில், கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்கூட தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் ராஜபக்சே நிறுத்தப்படவேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டுள்ளார். அதற்கு முந்தைய அறிக்கையில் நூரம்பர்க் விசாரணைபோல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தீவில் சிங்களர்கள் எப்படி தமிழர்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவிக்கிறார்களோ, அது போல, ஜெர்மானிய நாஜிகள் யூதர்களைக் கொன்று குவித்தனர்.
பாதுகாப்பு வலயத்துக்குள் ஈழத் தமிழர்களைக் கொண்டு வந்து சேர்த்து அவர்களை சுட்டுக் கொன்றனர் என்றால், அன்று மரண முகாம்களை அமைத்து யூதர்களைப் பல்லாயிரக்கணக்கில் கொன்றவர்கள்தான் நாஜிகள். கொல்லப்பட்ட உடலில் தங்கப் பல்லிருந்தால் அதனை உடைத்து எடுத்துக்கொண்டார்கள். தங்க மோதி ரங்களைப் பறித்துக் கொண்டார்கள்; மீதி உடலை சோப் தயாரிக்கப் பயன்படுத்தினர்.
யூதர்களின் சுதந்திரம் என்பது கட்டுப்படுத்தப்பட்ட ஒன்று; அவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களே! வட அய்ரோப்பிய வெள்ளையர்கள் மட்டுமே ஜெர்மன் நாட்டுக்குரியவர்கள் என்ற சித்தாந்தத்தோடு அன்று ஹிட்லர் ஆட்டம் போட்டான்; கடைசியில் தற்கொலை செய்துகொண்டு மாண்டான்.
ஜெர்மனியின் நூரம்பர்க் என்னும் இடத்தில் நாஜிகள் மீது விசாரணை நடத்தப்பட்டது. இந்தக் குற்றவாளிகளுக்குச் சற்றும் குறையாத கொடுங்கோலனான மகிந்த ராஜபக்சே உலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப் படவேண்டியவன் ஆவான்.
அய்ரோப்பிய யூனியன் நாடுகளும் இதனை வலியுறுத்தியுள்ளன. அய்.நா. செயல்படட்டும்!
---------------நன்றி:-"விடுதலை"தலையங்கம் 21-5-2009
1 comments:
பிரபாகரனும் புலிகளும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலமும் : இனியொரு»
www.inioru.com
Post a Comment