Search This Blog

12.5.09

நாத்திகம் என்பது நம்பிக்கையா? மாடர்ன் டிரஸ் சாமியாரின் ஆன்மீக மோசடி






வாசுதேவன் என்றொருவர். ஜக்கி வாசுதேவ் எனத் தன்னை அழைத்துக் கொள்பவர். சத்குரு (சத்தியமான குரு) என்று இவரை அழைக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டவர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய துணைவி திடீர் என இறந்து போனது பற்றிப் பலப்பல செய்திகளும் உலா வந்தன. நமக்கு அதைப்பற்றி அக்கறையில்லை.
மாடர்ன் ஆக உடை உடுத்திப் பேசி வரும் சமயப் பிரச்சாரகர். சமயம் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை என்றும் சத்தியமான செய்திகளைச் சொல்லி வருவதாகவும் சொல்லிக் கொள்பவர். இது உண்மையா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். உலகிலேயே உயரமான லிங்கம் என்னுடைய ஈஷா லிங்கம் தான் என்று பெருமை பேசிக் கொள்பவர், சைவ சமயப் பிரச்சாரகர் அல்லாது வேறு எவர்? உடையில் இருக்கும் நாகரிகம் நடையில் (செயலில்) இருக்காது.

இவரையெல்லாம் பெரிய ஆள்கள் என்று சிலர் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கேற்ப சில ஏடுகள் இவர்களை வைத்துச் சில பகுதிகளைத் தயாரித்து அச்சிடுகிறார்கள். வணிகம் பெருகவேண்டும் என்பதற்காகச் செய்கிறார்கள் என்பதற்காக இதனைச் சகித்துக் கொள்ளலாம். ஆனால் எழுதும் எழுத்துகளைச் சகித்துக் கொள்ள இயலாது.

கேள்வி பதில் இதுதான்

அப்படிச் சில எழுத்துக்களை ஏடொன்றில் பார்க்க நேரிட்டு விட்டது. இவரிடம் ஒருவர் கேள்வி கேட்கிறார். (கேள்வி - பதில் எப்படிக் கேட்கப்படுகிறது, எப்படி எழுதப்படுகிறது என்பது எங்களுக்கும் தெரியும் என்று அறிஞர் அண்ணா ஒரு முறை எழுதினார்) இவர் பதில் கூறுகிறார். கேள்வி நாத்திகர்கள் பற்றி உங்களது கருத்து என்ன? என்பது.

இவர் பதில் சொல்லும்போது, ஆத்திகர்கள் கடவுள் உண்டு என்று நம்புகிறாகள். நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று நம்புகிறார்கள். இரண்டு மேருமே தங்களுக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி ஏதோ ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்று எழுதுகிறார். ஆத்திகர்கள், நாத்திகர்கள் இருவருமே ஒருவிதமான மூடத்தனத்தில்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் தங்களுக்குத் தெரியாததை, தெரியாது என்று ஏற்கிற மனப்பான்மை அவர்களுக்கு இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

தெரியாததை மட்டுமல்ல, இல்லாததை இருக்கிறது என ஒருவன் கூறும்போது இல்லை எனக் கூற ஒருவனுக்கு உரிமை உண்டுதானே! தந்தை பெரியார் சொன்னார்: கடவுள் உண்டு என்று எந்த முட்டாளும் கூறிவிட முடியும். ஆனால் இல்லை என்பதைக் கூறிடப் பெரிதும் அறிவும் ஆராய்ச்சியும் தேவை என்றார். அப்படிப்பட்ட அ, ஆ இல்லாத இவரைப் போன்றவர்கள்தான் உண்டு என்று கூறிக் கொண்டு திரிகிறார்கள்.

விஞ்ஞான அறிவு இல்லையே

அணுவைப் பிரித்துப் பார்த்துவிட்டது விஞ்ஞானம் என்கிறார். அதுதான் மிகச் சிறியது அதற்கும் சின்னதாக அதை உடைக்க முடியாது என நம்பப்பட்டது. ஆனால் தொடர்ந்த முயற்சியும் ஆராய்ச்சியும் அணுவையும் பிளந்து பார்த்துக் கூறிவிட்டது. கடவுளின் இருப்பு பற்றி ஏதாவது இம்மாதிரிச் செய்யப்பட்டதா?

அணுவை இரண்டாகப் பிரித்த விஞ்ஞானம் உயிரின் மூலம் எதுவென்று அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கிண்டல் செய்கிறார்? அணுவை இரண்டாக அல்ல, மூன்றாகவே பிளந்துவிட்டது விஞ்ஞானம் எலெக்ட்ரான், புரோட்டின், நியூட்ரான் என்று தெரிந்து கொள்ளட்டும். உயிர் என்று எதைக் கூறுகிறார்? அது தெரிவித்தால் அல்லவா அதன் மூலம் பற்றிப் பேசலாம்! ஜக்கி பிறப்பதற்கு முன்பு தந்தை பெரியார் லாகூர் போயிருந்தார். அவர் பேசுவதற்கு முன்பு ஒரு முந்திரிக்கொட்டை எழுந்து நின்று கடவுள் இல்லை என்று பேசுவதற்குத்தானே வந்திருக்கிறீர்கள்? எனக் கேட்டதாம். தந்தை பெரியார் அவரிடம் ஒரு வெள்ளைத் தாளைக் கொடுத்து, கடவுள் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள், அதை எழுதிக் கொடுங்கள், அதன்பிறகு நான் என் கருத்தைச் சொல்கிறேன் என்றார். தாளை வாங்கிக் கொண்ட முந்திரிக் கொட்டை முழித்ததாம். அவர் நண்பர் கேட்டாராம். நீதானே வாயைக் கொடுத்துப் புண் ஆக்கிக் கொண்டாய் என்றாராம். அதைப்போல, உயிர் என்று எதை இவர் கூறுகிறார்?

உயிர் என்றால் என்ன?

மனிதனும் மற்றைய உயிர்களும் இறந்து போகின்ற, இயங்காமல் இருந்து விடுகின்ற தன்மையைப் பாமர மொழியில் உயிர் பிரிந்து விட்டது என்கிறார்கள். அப்படிப் பிரிந்த உயிரைப் பற்றிக் கேட்கிறாரா? தந்தை பெரியார் சொன்னார், உடம்பிலுள்ள சத்துப் போய்விட்டதைத் தான் செத்துப் போய்விட்டது என்கிறார்கள் என்று கூறிவிட்டுப் பின் விளக்கம் தந்தார். ஏன் இறந்த நிலை, இயங்காத நிலை, உயிர் பிரிந்த நிலை ஏற்படுகிறது? இயங்கிக் கொண்டே இருக்கும் செல்கள் இயக்கத்தால் தேய்ந்து, அழிந்து, புதிதாகத் தேன்றிக் கொண்டிருக்கும் செயல்கள் முதுமையின் காரணமாகப் புதுப்பிக்கும் ஆற்றலை மெல்ல இழந்து, பின் இயக்கத்தைப் படிப்படியாக இழந்து கடைசியில் முற்றுமாக நிறுத்திக் கெள்வதைத்தான் இறப்பு என்று சொல்கிறது விஞ்ஞானம்.

இது பற்றி ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. செல்களைப் புதுப்பிக்கலாம், மாற்றலாம், நோய்களைத் தடுக்கலாம், இறப்பை 120 ஆண்டுகள் வரை தள்ளிப் போடலாம் என்பது பற்றிய ஆராய்ச்சியைச் செய்து கொண்டு வருகிறார்கள். முடிவும் பலனும் 10 ஆண்டுகளில் கிடைக்கலாம், அல்லது 50 ஆண்டுகளில் கிடைக்கலாம். அல்லது இரண்டு ஆண்டுகளில் கூடத் தெரிய வரலாம். அவசரக் குடுக்கை போல எதையாவது உளறுவது ஆன்மீகத்தில் நடக்கும், விஞ்ஞானத்தில் நடக்காது. எனவே ஆன்மிகத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் வித்தியாசம் இல்லை என அவர் கூறுவது ஏமாற்று வேலை, பித்தலாட்டம், இரண்டுக்கும் வேறுபாடு கிடையாது என்பதல்ல. முரண்பாடுகளே நிறைய உண்டு.

ஆன்மீக மோசடி

ஆன்மீகம் எனும் மோசடி வேலையின் முட்டாள் தனங்களை மக்கள் தெரிந்து கொண்டார்கள். தெளிவடைந்துவிட்டார்கள் என்கிற நிலைமை. பகுத்தறிவுப் பிரச்சாரத்தால் ஏற்பட்டு விட்டதைக் கண்டு, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஆன்மீகத்தோடு ஒத்துப் போகின்றன என்கிற பொய்ப்பித்தலாட்டப் பிரச்சாரத்தைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். வேட்டி கட்டிய ஆன்மீக வாதிகளைவிட பாண்ட், டிசட்டை போட்டவர்களின் மோசடித் தனம் அதிகம்.

பிரபஞ்சம் என்கிறார், எங்கே தொடங்குகிறது எங்கே முடிகிறது என்று தெரியவில்லை என்பதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது என்கிறார். இதனை வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகள் பயணித்தாலும் சென்று அடைய முடியாத பால்வெளிகள் ஏராளமாக உள்ளன என்பதை விஞ்ஞானம் விளக்கியுள்ளது. இவர் கூறும் அல்லது இவர் நம்பும் மேலேழு, கீழேழு ஆகப் பதினான்கு உலகங்கள் எந்தப் பால் வெளியில் உள்ளன என்பதை இவரது பரமசிவன் தெரிவித்திருக்கிறானா? இவராவது கூற முடியுமா? இந்த நிலையில் இவருக்கு ஏன் வாய் நீளம்?

உபதேசம் செய்யத் தகுதி உண்டா?

ஆத்திகர்களும் நாத்திகர்களும் உண்மையைத் தேட வேண்டும் என்று உபதேசம் செய்கிறார், உரிமை தனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு! இவர் ஏன் தனியே நின்று கொண்டு இரண்டு பிரிவுகளைப் பற்றிப் பேசுகிறார்? ஆன்மீகப் பிரிவைச் சேர்ந்த ஆள்தானே இவர்? இல்லையென்று சொல்வாரா?

இன்னொரு கேள்விக்குப் பதில் கூறும்போது இந்துக் கலாச்சாரம் என்று இல்லாத ஒரு கலாச்சாரத்தைப் பற்றி எழுதுகிறார். தீமிதித்தலின் பெருமை பேசுகிறார். பொருந்தாத பழக்கங்களாக இருந்தாலும் மாற்ற நினைக்காதீர்கள் என்றும் உபதேசம் செய்கிறார்.
ஆனால், ஆன்மீகவாதி அல்லாதவர் போல வேடம் போடுகிறார். என்னே பித்தலாட்டம்?

சாம்பலின் மகத்துவம்

நெற்றியில் சாம்பல் பூசிக் கொள்வதற்கு விசித்திர வியாக்யானம் கூறுகிறவர் ஆன்மீகவாதி இல்லை என்றால் பின்பக்கப் பொறியால் சிரிக்க நேரிடுமா இல்லையா? அதற்கு விஞ்ஞானபூர்வமான காரணங்கள் உண்டு என்கிறார். கடுமையான கோபம் வருகிறது. கடவுளைப் பற்றி, லிங்கத்தைப் பற்றி எதையாவது உளறட்டும் நமக்குக் கவலையில்லை, விஞ்ஞானத்தைப் பற்றி என்ன தெரியும்? ஏன் பேசுகிறார்? வாழ்க்கையைச் சிரிக்கச் சாம்பல் பூசுவது என்கிறார். புதிய வியாக்யானம், எப்படி என்று விளக்குவாரா? டீக்கடை பாய்லரில் பூசும் திருநீறு, தண்ணீர் அண்டாவில் பூசும் திருநீறு, மிலேச்ச மேல் நாட்டுக்காரன் கண்டுபிடித்த எந்திரங்கள் கணினிகள் ஆகியவற்றில் பூசும் திருநீறு எதைக் கிரகிக்கப்ப பூசப்படுகின்றன? அறிவு நாணயத்தோடு பதில் தருவாரா?

எனவே ஆன்மீகவாதியல்லாதவர் போல நடிக்கும் பசப்புத்தனத்தைக் கைவிட்டு, எத்தனையோ ஏமாற்றுக்காரர்களில் தானும் ஒருவனே என ஒத்துக் கொள்ளும் நேர்மை அவருக்கு வரவேண்டும். அது வராத வரை சத்குரு பட்டம் போலி டாக்டர் பட்டம் தான்!

அண்ணா அன்றே கூறினார்

நம் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் பலன், மூடநம்பிக்கைகளுக்கு விஞ்ஞானப் பூச்சு பூசி விளக்கம் தரச் செய்துவிட்டது என்கிறார் அறிஞர் அண்ணா. அதற்குப் பிரத்யட்ச உதாரணம் ஜக்கி வாசுதேவ்?

இறுதியாக, நாஸ்திகம் என்பது தமிழ்ச் சொல் அல்ல. நாத்திகம் என எழுதுவதால், தமிழாகி விடாது, நாஸ்திகம் என்ற சொல்லுக்குக் கடவுளை நம்பாதவன் என்று பொருள் கொண்டு பாமரத் தனமாகப் பதில் எழுதியிருக்கிறார். வேதங்களையும் உபநிஷத்துகளையும் எதிர்த்துக் கடவுளை நம்பாமல் இருப்பவன் நாஸ்திகன் என்று அந்தச் சொல்லை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள். வேதமும், உபநிஷத்களும் கடவுளும் தமிழர்க்கு அந்நியமானவை. இல்லாவிட்டால், கடவுள் இல்லை என்பதைக் குறிப்பதற்கோ, இருக்கிறது என்பவர்களைக் குறிப்பதற்கோ சொற்கள் தமிழில் இருந்திருக்கும்.

அதுபோலவே ஆத்மா என்பது தமிழ்ச் சொல் அல்ல. ஆன்மா என்று எழுதுவதால், தமிழாகி விடாது. எனவே ஆன்மீகம், ஆன்மீகவாதி என்பவை தமிழுக்கு அந்நியம். இதற்கு எதிர்மறையான கொள்கையைக் கொண்டவர்களுக்குச் சுட்டப்படும், சொல்லும் தமிழில் கிடையாது. எனவே தமிழ்க் கலாச்சாரத்துக்குத் தொடர்பில்லாத செய்திகளைத் தமிழர்க்குச் சுமத்திப் பித்தலாட்டம் செய்யும் பார்ப்பனச் செயலைச் சூத்திரப் பண்டாரங்களும் செய்வது சகித்துக் கொள்ள முடியாதது. அந்த வகையில் ஜக்கி வாசுதேவின் எழுத்துகளையும் சகித்துக் கொள்ள முடியாது. அவர் கூறியதைப் போலவே அவருக்குத் தெரியாத பல விசயங்களில் விஞ்ஞானமும் பகுத்தறிவும் அடக்கம். அதில் மூக்கை நுழைக்காமல் இருப்பது அவர் முகத்திற்கு அழகு தரும்.

--------------- சார்வாகன் அவர்கள் "உண்மை" மே 16-31 2008 இதழில் எழுதிய கட்டுரை

5 comments:

அறம் செய விரும்பு said...

///கேள்வி - பதில் எப்படிக் கேட்கப்படுகிறது, எப்படி எழுதப்படுகிறது என்பது எங்களுக்கும் தெரியும் என்று அறிஞர் அண்ணா ஒரு முறை எழுதினார்///


அப்போ கருணாநிதி அவர்களும் கேள்வி - பதில் வடிவில் செய்திகள் தருகிறாரே!!! இதுவும் அண்ணா சொன்னது போல தானா !!!

மணிகண்டன் said...

நல்ல கட்டுரை. இதில் பட்டம் வேறு ! சத்குரு, ஜகத்குரு என்று !

ஆனால் ஒருவரின் கருத்தை எதிர்க்கும் போது, அதை மட்டுமே செய்ய வேண்டும்.

"அவருடைய துணைவி திடீர் என இறந்து போனது பற்றிப் பலப்பல செய்திகளும் உலா வந்தன. நமக்கு அதைப்பற்றி அக்கறையில்லை."

இது அவர் கருத்தை எதிர்க்க முடியாமல் அவர் மீது சேற்றை வாரி எரிப்பது போன்றது. இதை எழுதாமல் விட்டு இருக்கலாம்.

shan said...

சார்வாகன் ungal arai vekadu thanmana vemarsanam matrum aaduthavari mathika theriatha keeltharamana ennam mutumea ethil therikerathu enntha karuthukum mulumaiyana ethirpun ungaledam ellai vimarsanam pannum mun mulmaiyaga therinthukondu pannavum. நாத்திகம் என்பது நம்பிக்கையா? ammam

shan said...

சார்வாகன் ungal arai vekadu thanmana vemarsanam matrum aaduthavari mathika theriatha keeltharamana ennam mutumea ethil therikerathu enntha karuthukum mulumaiyana ethirpun ungaledam ellai vimarsanam pannum mun mulmaiyaga therinthukondu pannavum. நாத்திகம் என்பது நம்பிக்கையா? ammam

Arun said...

நீங்கள் கூறியதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது! தந்தை பெரியார் என்ன கடவுளா? அவர் கடவுள் என்று சொன்னால் நீ நம்பி விடுவாயா?

"நான்கு பக்கம் துயரம் வந்தால் நாத்திகர்க்கும் கடவுள் உண்டு; காண்பதெல்லாம் துயரம் என்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு!!"