Search This Blog

31.7.14

இதுதான் சமஸ்கிருதம் - பெரியார்

இதுதான் சமஸ்கிருதம்

- தந்தை பெரியார்
புரட்டு இமாலயப் புரட்டு! நூலிலிருந்து....
சமஸ்கிருதம் ஒரு மூல மொழியல்ல; அது அந்நிய பல நாட்டுக் கதம்ப மொழி.
அடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே, பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்பதாக ஆயிற்று. அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான டர்கிஸ் (ஜிக்ஷீளீமீ) மொழி, ஈரானிய மொழி - பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீரியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.


மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரியர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்த சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.


இவர்கள் வடமேற்கிந்தியாவில் இரு முறை நுழைந்தனர். முதலாவது கி.மு. 1400 வேதகாலம்; இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க - பாரசீக மொழிக் கலைத் தொடர்புகளின் பலனாக இந்த சமஸ்கிருத மொழி மேற்கண்ட பாரசீக - கிரேக்க மொழிக்கலை இலக்கிய இலக் கணங் களையும் தழுவி மேற்கொண்டு திருத்தப் பெற்றது.


மற்றும், சமஸ்கிருத மொழி இந்தி யாவின்... லத்தீன்... மொழி என்றும் அழைக் கப்பட்டது. ஆல்பன்கெல்ட் மக்கள் மத்திய தரைக்கடல் வட்டாரங்கள் மீது படையெடுத்த போது, இத்தாலிய மக் களிடையே இந்த கெல்ட் மக்கள் திணித்த மொழியே லத்தீன்.

மொழிகளின் பிரிவு

மொழிகள், துரானிய மொழிகள் என்றும், ஆரிய மொழிகளென்றும் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன. சமஸ்கிருதம் ஆரிய மொழியினத்தைச் சேர்ந்தது.

சமஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள், சுத்தப்படுத்தப்பட்டது அல்லது பலவற்றைச் சேர்த்து உருவகப்படுத்தப் பட்டது என்பதாகும்.

மேலும் விளக்க வேண்டுமானால், இது ஹிந்துஸ்தானியில் சான்ஸ்கிரிட் என்று உச்சரிக்கப்படுகிறது. இந்த சமஸ்கிருத மொழியாக்கத்தின் பெரும் பகுதியும், அடிப்படை அமைப்பும் மேற்கு மத்திய ஆசியாவில் வழங்கிய ஆரிய மொழியி லிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும். மற்றும், பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளுடன் தொடர்பு கொண்டதன் பலனாகப் பிறமொழி அம்சங்கள் பலவற்றை இந்த சமஸ்கிருத மொழியுடன் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வந்தனர்.

பொருளுக்கேற்ற பெயர்

வடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள், இடைக் காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிக் கலைப்பகுதிகளையும் இச்சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொண்டனர்.

சமஸ்த = எல்லாம்;
கிருதி = தொகுக்கப்பட்டது

- என்பதே இதன் பொருள்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா என்ற ஆங்கில மொழிப் பேரகராதியின் 13ஆவது தொகுதியில், சமஸ்கிருத மொழி பிறப்பு வரலாறு, டாக்டர் எச்.ஜுலியஸ் எக்லிங் என்பவரால் தரப்பட்டுள்ளது.

சமஸ்கிருத மொழி ஆரிய மொழி களுடன் கொண்டுள்ள தொடர்பையும், பல அம்சங்களில் கிரேக்க மொழியைப் போன்றிருப்பதையும் இவர் விளக்கி யுள்ளார்.

டாக்டர் பிரான்ஸ் பாப் என்பவர், கோதிக் மொழியிலிருந்து பைபிளை வாசித்தபோது கோதிக் மொழியும் சமஸ்கிருத மொழி போன்றே இருப்பதைக் கண்டார். சர். மானியர் வில்லியம் என்பவர் தமது சமஸ்கிருத ஆங்கில அகராதியின் (அச் சிட்டது: காலண்டர் பிரஸ்; ஆக்ஸ்போர்டு - 1899) முகவுரையில், சமஸ்கிருத மொழி; பாக்ட்ரியானா - சாக்டி யானா வட்டாரங்களில் தோன்றியது; புக்காவிலோ, ஆக்ஸ்நதி துவக்க வட்டாரத்திலோ தோன்றியதல்ல என்று கருத்து வெளி யிட்டிருக்கிறார்.
இந்தியாவினுள் நுழைந்த இந்த ஆரியர்கள் கோத்ஸ் (கிதாய்) என்ற நாட்டிலிருந்து வந்தவர்களென்பதும் கோதிக் மொழியைத் தம்முடன் கொண்டு வந்தவர்களென்பதும் பல சரித்திரச் சான்றுகளால் தெளிவுபடுகிறது.

பிறந்த விதம்

இந்த கோதிக் மொழியே இடையில் பல்வேறு மாற்றங்கள் பெற்று சமஸ்கிருத மொழியாக உருவெடுத்தது. ஆரியர்கள் மேற்கிந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது, இந்தக் கலப்பட சமஸ்கிருத மொழியையும் அங்கிருந்த மக்கள் (ஹிந்து) பால் திணித்தனர். வேதகால சமஸ்கிருதத்திற்கும் இக்கால சமஸ்கிருதத் திற்கும் அதிக வேற்றுமைகள் உள்ளன.

பொய்க் கூற்று


எனவே, இந்த சமஸ்கிருத மொழி அனாதிகால மொழியென்றும், இம்மொழி யிலிருந்துதான், இந்தியாவின் பழங்கால மொழிகள் அனைத்தும் உற்பத்தியாயிற் றெனவும் சொல்வது ஆதாரமற்றதாகிறது. ஏனெனில், இந்த மொழி கி.மு. 1500லும் அதற்குப் பின்னரும்தான் உருவாயிற் றென்பது தெளிவாகிறது. இந்தியர்கள் மீது திணிக்கப்பட்ட மொழிகளில் இதுவே கடைசி மொழி. உண்மை இப்படியிருந் தும், தற்கால மொழிகளில் சிலவற்றை இந்த சமஸ்கிருத மொழியிலிருந்து பிறந்ததாகச் சிலர் கூறிக் கொள்கின்றனர்.
இந்த நார்டிக் ஆரியர்களும், ஈரானிய ஆரியர்களும் பல்வேறாகப் பிரிந்து, பல்வேறு திக்குகளில் படர்ந்தனர். இவ் விரு பிரிவினரும் இந்தியாவில் வசித்த இந்தோனேஷியர் சந்ததிகளே என்றும், இவர்களே வடகிழக்கு நாடுகளில் பரவினர் என்றும் சிலர் கூறுகின்றனர்.


ஹிந்துஸ்தானி


இவ்விதம் சென்றவர்களில் இரானிய ஆரியர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பினர். இது வேத சமஸ்கிருத மொழி இந்தியாவில் நுழைக்கப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தது. இந்தியா திரும்பிய இந்த ஈரானியர்கள் தாம், இப்போது மேற்கிந்தியாவில் பேசப்படும் ஹிந்தி (பிராக்கிருதி) (ஹிந்துஸ்தானி) மொழியைக் கொண்டு வந்தவர்கள். இவர்கள் வந்ததும், அவ் வட்டாரங்களில் வசித்து வந்த பழங் குடிகளான இந்தோனேஷியர்களைத் தெற்கில், தக்காணத்துக்கும் கிழக்கில் வங்காளக் குடாக்கடல் வட்டாரத்திற்கும் அதற்கப்பாலும் செல்லச் செய்தனர். இவ்வாறாக நெருக்கித் தள்ளப்பட்ட இந்திய - இந்தோனேஷியர்கள் பசிபிக் தீவுகள் வரையிலுள்ள வட்டாரங்களில் குடியேறினர்.


நார்டிக் இனத்தவரும் இந்தியா திரும்பியபோது தங்கள் மொழியையும் கொண்டு வந்தனர். ஆயினும் ஈரானிய, பர்மீரிய, பாரசீக, கிரேக்க மொழிப் பண்புகள் இம்மொழியில் கலந்திருந்தன. இந்தக் கலப்பு மொழிதான் பின்னர் சமஸ்கிருதமெனப்பட்டது.


இந்த சமஸ்கிருத மொழி, பரம்பரை அனாதிகால மொழியென்றும் (தெய்வ மொழி என்பர் தென்னாட்டுப் பார்ப்பனர்) இலக்கிய வளமிக்கதென்றும் கூறி, அப்போதிருந்து வந்த ஹிந்தி (ஹிந்துஸ் தானி) மொழிகளின் மீது திணிக்கப் பட்டது. இந்தியாவிலிருந்து பழம்பெரும் மொழிகளான இந்தோனேஷிய மொழி யிலிருந்து அடிநாளில் பிறந்த ஹிந்தி (ஹிந்துஸ்தானி)யும், நார்டிக் மொழிகளும் பல்வேறு வட்டாரங்களில் நெடுகப் பேசப்பட்டு பாக்ட்ரியானாவில் சமஸ் கிருதமாக உருமாற்றமும் பெயரும் பெற்றது. மொழி வரலாறுகளில் அறியக் கிடக்கிறது. இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்த சமஸ்கிருதமும், ஹிந்தி (ஹிந்துஸ்தானி)யும் அப்போதிருந்த பற்பல இந்திய மொழிகளில் ஊடுருவி முக்கியமாக வடஇந்தியாவில் வழங்கிய மொழிகளை ஆக்கிரமித்துத் தலைமை யிடம் கொண்டன.
சமஸ்கிருத மொழிக்கும், நார்டிக் மொழிகளுக்கும் முக்கியமாக கோதிக் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு காணப் படுகிறது. ஏனெனில், இந்த சமஸ்கிருத மும் நார்டிக் மொழிகளில் ஒன்றேயாகும் என்று டாக்டர் பாப் சுட்டிக் காட்டுகிறார்.


மற்ற மொழிகளைவிட இந்த சமஸ் கிருத மொழிதான் அதிகமாக அயல் மொழிகளின் கலப்பைக் கொண்டு பெரும் உருமாற்றம் பெற்றிருக்கிறது; இருந்தாலும் இதுவும் நார்டிக் மொழிக் குழுவைச் சேர்ந்ததேயாகும்.


இன மனித உட்பிரிவுகள்


தென்கிழக்கு ஆசிய மக்களின் இனப் பிரிவைத் திட்டவட்டமாகக் கணித்துக் காண்பது கடினமாகவிருந்தாலும் முக்கிய மாக முப்பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை:-


1. இந்தாஃப்ரிக்கர் (கருப்பர்)
2. துரேனியர் (மஞ்சள் - சிவப்பு)
3. ஆரியர் (மாநிற - வெள்ளை)


இப்போது, இவர்களில் இந்தாஃப்ரிக்கர் முக்கியமாகத் தென்மேற்குப் பசிபிக் தீவுகளிலும், மத்தியாஃப்ரிக்காவிலும், தென்னாஃப்ரிக்காவிலும் (அமெரிக்காவில் இருப்பவர் தவிர்த்து), வசிக்கின்றனர்.


துரேனியர்கள் முக்கியமாக கிழக்கு ஆசியாவிலும், மத்திய ஆசியாவிலும், வடக்கு யூரேஷியாவிலும் (அமெரிக்க இந்தியர் தவிர்த்து) வசிக்கின்றனர்.
ஆரியர்கள் முக்கியமாக இந்தியாவி லும், ஈரானிலும் (பாரசீகம்), அய்ரோப்பா விலும், வடக்காஃப்ரிக்காவிலும், தென் னாஃப்பிரிக்காவிலும் வசிக்கின்றனர்.
இந்தாஃப்ரிக்கன் மொழி, துரேனிய மொழி, ஆரிய மொழி, இந்த இனப் பிரிவினையின் அடிப்படையிலே வந் தவை. ஆயினும் பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளன; அடைந்து வருகின்றன. கெதேயில் குடியேறும்வரை அதாவது கி.மு. 2300 வரை நார்டிக் மக்களின் தெற்கிலே மேற்கு துருக்கிஸ்தானத்தில் துரேனியர்களும் (துருக்கியர்) (சுமேரியர்) (கி.மு.4300 வரை) பின்னர் ஹிட்டைட்சும் (கி.மு.2300 வரை) இருந்தனர். நார்டிக் மக்கள் துவக்க காலத்தில் எண்ணிக் கையில் குறைவாகவிருந்ததால், தங்களை விட நாகரிக மக்களான சுமேரியர்களின் சம்பந்தத்தையும் கருத்துக்களையும், பழக்க வழக்கங்களையும் கைக்கொண்டனர்.
நார்டிக்குகளும் ஹிட்டைட்சுகளும் கலந்து வாழ்ந்ததன் விளைவாக துரேனிய மொழி, நார்டிக் மொழி சார்பினதாக மாற்றம் பெற்றது. ஹிட்டைட்ஸ் மொழியி லிருந்தும் பல சொற்கள் சுவீகரிக்கப் பட்டன.

நார்டிக்குகளின் படையெடுப்பு


துரேனியர்கள் தெற்கே பரவியபோது, நார்டிக்குகள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி பாக்ட்ரியானாவில் குடியே றினர். இவ்வட்டார மக்களின் மொழிக் கிணங்க தங்கள் மொழியிலும் மாற்றம் செய்து கொண்டனர். இங்கு வசித்த மக்களின் கலாச்சாரம் இரானிய கலாச் சாரத்தைப் போன்றதே.
இவர்கள் தெற்கு நோக்கிப் படை எடுக்கத் தீர்மானித்தபோது இவர்களு டைய மொழி வேதம் சமஸ்கிருதம். கி.மு.1400இல் வடமேற்கிலிருந்து இந்தி யாவிற்குள் வந்தபோது இந்த வேத சமஸ்கிருத மொழியைத்தான் தங்கள் இலக்கியங்களில் கையாண்டனர். இவர்கள் அடிநாளில் இனங்களாகவும், வகுப்புகளாகவும் பிரிந்திருந்ததாகவும் ஏழு ஆற்று நாட்டில் - (மத்திய ஆசியா) வசித்து வந்ததாகவும் திட்டவட்டமாக அறியக் கிடக்கிறது. இவர்கள் இரு குழுவினராக இருமுறை இந்தியாவில் நுழைந்தனர். இரு குழுவினரும் ஒரே மொழியை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். பின்னவர் மொழியில் பாரசீகம், கிரேக்கக் கலப்படம் அதிகம் இருந்தது. இரண்டாம் படையெடுப்பே பிற்கால வரலாற்றுக்கு முக்கியமானதாகிறது.


கி.மு. 750இல் இவர்கள் காஸ்பியன் கடல் நோக்கி நகர்ந்தனர். பாரசீகத்தில் தடை ஏற்பட்டது. பாரசீகர்கள் தாக்கு தல்கள் வலுக்கவே, இவர்கள் தனித்தனிக் கும்பலாகப் பிரிந்து சென்று, தனித்தனித் தலைவர்கள் தலைமையில் தனி இனங்களாகி விட்டனர்.


இந்தப் பிரிவினர்களில் ஒருவரான காஸ்பி சாதியாரின் பெயரடியாகவே காஸ்பியன் கடல் எனப் பெயரிடப்பட்டது. இவர்களில் பெரும்பகுதி கிழக்கே பாமிர் மலைப்பகுதிகளை நோக்கி நகர்ந்தனர்; அங்கிருந்த பழங்குடிகளையும் சிதைத்து ஒடுக்கினர்.


வடகிழக்கு ஈரானில் குடியேறியவர் களில், குடியேறிய இந்த நார்டிக் சாதியார்களில் முக்கியமானவர்கள் ஆரீ-சோராங்மீ-பாஸியானி ஆகியோர்.
ஆரி சாதியார் முதலில் தங்கிய வட்டாரத்திலிருந்த ஆற்றுக்குத் தங்கள் பெயரடியாக ஆரியஸ் நதி என்று பெயரிட்டனர்.


ஆரியர் என்ற சமஸ்கிருத மொழியி லிருந்துதான் ஆரியன் என்ற சொல் தோன்றிற்று. ஆரியன் என்றால் மேல் மக்கள், ஆளும் இனம் என்று பொருள் ஆகியது.


சிதறிய நார்டிக்குகள்


இந்த நார்டிக் இனத்தார் பிற்காலத்தில் பல்வேறு குழுவினராகச் சிதைந்து பல்வேறு வட்டாரங்களில் பரவிய போது அவர்களுடைய அடிநாள் பொதுப் பெயரும் மறைந்தது! தனிப் பிரிவினராகத் தனித்தனிப் பெயர்களிட்டுக் கொண்டனர். பாமீர் வட்டாரத்தில் பாமிரியர்கள், குஷான்கள் என்று பெயர் கொண்டனர். இதுவே பாக்ட்ரியானா நாடு. இதில் புக்காராவும் சேர்ந்தது. இதன் தலைநகர், இப்போது வட ஆஃப்கானிஸ்தானத் திலுள்ள பால்க் என்பது.
தொக்காரி, குஷான்கள், எப்தா லைட்ஸ், சாக்கே, சாக்கியர் ஊசன் ஆகிய சாதியார் (உட்பிரிவினர்) இணைந்து பெரும் சாம்ராஜ்யத்தை நிர்மாணித்துக் கொண்டனர். இவர்கள் அனைவரும் அடிப்படையில் நார்டிக் மக்களே. பாக்ட்ரியானாவில் குடியேறியவர் வெள்ளை ஹுனர்களெனச் சீனர்களால் அழைக்கப்பட்டனர். இவர்களும் நார்டிக் குகளில் ஒரு பிரிவினரான கோத்திக் இனத்தவர்களேயாவர். இந்தியாவுக்குள் வந்தவர்கள் ஆரிய மொழியினர் என்ப தற்கு பல்வேறு சரித்திர ஆதாரங்கள் உள்ளன.


அலெக்சாண்டர் படைஎடுப்புக்குப் பின்னர், அதாவது கி.மு. 701ஆம் ஆண்டு
வாக்கில் வடமேற்கு இந்தியாவில் வேத சமஸ்கிருத மொழி செல்வாக்கற்றுப் போயிற்று. இப்போதுள்ள சமஸ்கிருத மொழி அப்போது அங்குக் கிடையாது.

இப்போதைய சமஸ்கிருதம்


குஷான் வம்சத்தைச் சேர்ந்த கனிஷ்கரின் ஆட்சி கி.மு. 53இல் துவக்கமாகிறது. இந்தியாவில் விக்ரம சகாப்தத்தைத் தோற்றுவித்தவர் இந்த கனிஷ்கரே. மற்றும், அக்காலத்தில் வடஇந்தியாவில் வழங்கி வந்த கிரேஷிய கலாச்சாரங் களையும், கிரேக்க மொழியையும் ஒழித்து, நார்டிக் மொழியை அடிப்படையாகக் கொண்ட இப்போதைய சமஸ்கிருத மொழியைத் தோற்றுவித்தார். இது பழங்குடி யினர் சொற்களைக் (பிராக்கிருதம்) கொண்டது. எனவே, இப்போது வழங்கப்படும் சமஸ்கிருத மொழி கி.மு.58இல் தோன்றிய தெனலாம்.


கி.பி. 123-153ஆம் ஆண்டுகளில் ஆண்ட இரண்டாவது கனிஷ்கர் பவுத்தர். இவர் காஷ்மீர் வட்டாரங்களில் பவுத்த மதக் கொள்கைகளை தற்கால சமஸ்கிருத மொழியில் எழுதிப் பழங்குடிகளிடையே பரப்பினார். இவற்றை யெல்லாம் கவனிக்குமிடத்து சமஸ்கிருத மொழி எப்போது பிறந்தது? அதன் அடிப்படை மூலம் என்ன? எம்மொழிகளிலிருந்து பிறந்தது? இது இந்தியாவில் எப்போது எவ்விடம் நுழைக்கப்பட்டது? என்பன, சந்தேகமறத் தெளிவுபடுகின்றன.
இந்த சமஸ்கிருத மொழி பாக்ட்ரியானாவிலிருந்துதான் வந்தது என்று தற்கால அறிஞர்கள் பலர் திட்டமாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


இந்திய சமஸ்கிருத மொழி வரலாறு


இந்தியாவில் நுழைக்கப்பட்ட சமஸ்கிருதமொழி வேதகால சமஸ்கிருதமென்றும், தற்கால சமஸ்கிருத மென்றும் இருவகைப் படும் என்பதும், இவற்றின் பிறப்பு வரலாறும் மேலே தெளிவுப்படுத்தப்பட்டது. அதாவது வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் வந்த நார்டிக் ஆரியரால் இறக்குமதி செய்யப்பட்ட மொழி என்பது விளக்கப்பட்டது.
சமஸ்கிருதம் என்ற சொல்லுக்கு, திரட்டித் தொகுத்தது, புதுப்பித்து அமைக்கப்பட்டது



என்று பொருள். பழங்கால மொழிகளுக்கும் இந்தப் புதுமொழிக்கும் வேற்றுமை காணவே இப்பெயரிடப்பட்டது. பிராமணீய இந்தியா காலத்தில் வழங்கப்பட்ட சமஸ்கிருதத்திற்கும் அதற்கு முன்னைய கால சமஸ்கிருதத்திற்கும் பல வகைகளிலும் வேற்றுமை காணப் படுகிறது. வேதகால சமஸ்கிருதம், கலைக்கால சமஸ்கிருதத் திலிருந்து பல வகைகளிலும் மாறுபட்டது.
இந்த சமஸ்கிருத மொழி, இந்தோ ஜெர்மனிய அல்லது ஆரிய மொழியிலிருந்து பிறந்த கீழ்க்கோடி வட்டாரப் பிரிவாகும். இந்து ஆரியர்கள், வடமேற்கிலிருந்து தான் இந்தியாவுக்குள் வந்தனர் என்பது மக்கள் சரித்திரங்களால் உறுதிப்படுகிறது. இந்து ஆரியர்கள் கிழக்கு கபூலிஸ்தான் மலை வட்டாரங்களிலிருந்து பஞ்சாபுக்கும் அதன் பின் யமுனை கங்கை ஆற்று வட்டாரங்களுக்கும் வந்தனர் என்பது அவர்களுடைய பரம்பரை இலக்கிய ஏடுகளிலிருந்தே அறியக் கிடக்கிறது. வேத ஆரியர்கள், ஈரானிய மக்கள் ஆகிய இரு இனத்தவர்களின் மொழி மத நூல்கள் ஆகியவற்றிற்குள்ள இந்த ஜெர்மனிய குடும்ப சந்ததிகளேயெனவும், இருவரும் முன்னர் சேர்ந்திருந்து பின்னர் பிரிந்தவர்களெனவும் தெளிவாகிறது.


சமஸ்கிருதத்தின் முக்கியத்துவம் பற்றிப் பெரும்பாலும் மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன. ஆதித் தாய்மொழியின் கலை மகள் இந்த சமஸ்கிருதம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், இந்த இனத்தைச் சேர்ந்த மற்ற ஆறு மொழிகளான, ஈரானிய ஹெலினிக், இத்தாலிய - செல்டிக் - ட்யூடர்னிக், லெட்டோஸ்லாவிக் மொழிகளில் இலக்கிய வளமின்மையால் இந்த சமஸ்கிருதம் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த இலக்கியவளமும், ஆங்காங்குப் பல நாடுகளி லுள்ள, தொன்மை மொழிப் புலவர்களின் கூட்டுறவால் ஏற்பட்டதேயாகும். கிரேக்க மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் அதிக ஒற்றுமை காணப்படுகிறது.


இந்திய எழுத்துக்களின் பிறப்புப் பற்றிய வரலாறு இன்னும் புலனாகவில்லை. அசோகர் காலத்தில் புத்தமத அறமொழிகள் பாலி மொழியிலே பாறைகளிலே செதுக்கப் பட்டிருக்கின்றன. மவுரிய - ஆந்திரா வரிவடிவங்களுக்கு முன்னைய வரிவடிவம் பற்றி விளக்கம் கிடைக்கவில்லை.


எனவே, பிராமணர்கள் எதையும் எழுதவில்லை என்றும், அவர்களுடைய மொழிக்கு அப்போது வரிவடிவம் (எழுத்து இல்லையென்றும், சமஸ்கிருத வரிவடிவம் பிற்காலத்தில் இந்திய மொழி வரிவடிவங்களிலிருந்து அமைத்துக் கொள்ளப்பட்டதே என்றும் தெளிவுபடுகிறது. ராயல் ஏசியாடிக் சொசைட்டி ஜர்னலின் 14ஆவது பாகத்தில் இந்த மெய்மை தெளி வுறுத்தப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் ஒரு மொழியென்றாலும்கூட இது இந்தி யாவில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி மொழியாக வுமிருந்ததில்லை, பேச்சு மொழியாகவும் இருந்ததில்லை. அக்காலத்தில் ஆண்ட கிரேக்க பாக்ட்ரியானா மன்னர் கியூக்ராடைட்சின் சந்ததியார் நாட்டு மொழியான பிரம்மி மொழியில் தான் நாணயங்களை அச்சிட்டனர். இந்த பிரம்மி எழுத்துக்கள்தான் இப்போது வழங்கப்படும் நகரி - தேவ நகரி எழுத்துக்களுக்குத் தாயாகும். இந்த பிரம்மி மொழியின் அடிநாள் வரலாறு என்ன என்பது இன்னும் கலைஞர்களாலும் கண்டுபிடிக்க இயலவில்லை.


பாக்ட்ரியானாவிலிருந்த இந்த வடக்கத்தித் தலைவர்கள் அடிப்படையில் கிரேக்கர்களேயாகையால், இவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது திருத்தப்பட்ட நார்டிக் மொழியை (சமஸ்கிருதம்) இந்தியாவில் நுழைக்க அதிக அக்கறை கொள்ளவில்லை. கி.மு. 58இல் வட இந்தியாவில் ஆண்ட குஷான் குலத்தினரே இந்த சமஸ்கிருத மொழியை வட இந்தியாவில் பரப்பும் பணியை மேற்கொண்டனர். முதலாவது கனிஷ்கர் வடமேற்கு இந்தியா வட்டாரங் களைப் பிடித்த பின் இந்த சமஸ்கிருதத்தைப் பரப்புவதில் கருத்துச் செலுத்தினார்.


இதற்குமுன், நாட்டு மொழிகளுடன் கிரேக்க மொழி தான் ஆட்சித் துறையில் கைக்கொள்ளப்பட்டிருந்தது. கனிஷ்கர் காலத்தில் கிரேக்க மொழி, நாட்டு மொழி களினிடத்தை சமஸ்கிருதம் பிடித்துக்கொண்டு அரசாங்க மொழியாயிற்று.


பாக்ட்ரியானாவுக்கு வருமுன் நார்டிக் - ஆரிய தொக்காரிகளின் மொழி சமஸ்கிருதமாக இருந்தாலும், பாக்ட்ரியானாவில் அந்நாட்டு மக்கள் மொழிகளைத் தழுவி கி.மு.546-330இல் பெரும் மாற்றம் செய்யப்பட்டது. முக்கியமாக கி.மு. 330-126இல் கிரேக்கர் காலத்தில் அதிக மாறுதல் பெற்று உருமாற்றமடைந்தது, இந்த சமஸ்கிருத மொழி.


எனவே, இப்போது வழங்கப்படும் நவீன சமஸ்கிருதம் அரசுத் துறையில் கி.மு.58ஆம் ஆண்டு வாக்கில்தான் நுழைக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்படுகிறது. இது ஆட்சி ஆதிக்கம் கொண்ட இனத்தவர்களின் மொழியாகவிருந் ததால் ஆளப்பட்ட இந்நாட்டுப் பழங்குடி இலக்கியப் புலவர்கள் இந்த அயல்மொழியை ஏற்றுக் கொள்ள அதிக காலமாயிற்று.
சமஸ்கிருதம் ஒரு தாய்மொழியல்ல


மேலேயுள்ள வரலாறுகளால் விளக்கமாவது என்ன?


வேதகால சமஸ்கிருத மொழியும், நவீன சமஸ்கிருத மொழியும் மேற்கு இந்தியாவில் அந்நிய நாட்டினரால் நுழைக்கப்பட்டவை என்பதும், இவற்றிலிருந்து இப்போது வழக்கிலுள்ள சமஸ்கிருத மொழி இந்தியாவின் பழங்கால மொழிகளுக்குத் தாய்மை மொழியாக இருக்க முடியாது என்பதும், சமஸ்கிருதம் பிறப்பு வகையிலும், இந்தியாவில் இடம்பெற்ற வகையிலும் அண்மைக்காலத்தினதே என்பதும், அதாவது அண்மைக்காலத்தில் பிறந்து அண் மைக் கால இந்தியாவில் இடம்பெற்ற மொழியே என்பதும் (சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்) தெளிவுபடுகிறது.


பர்மிரியாவிலிருந்து இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள், பல புதிய மொழிகளையும் நுழைத்தனர். வடமேற்கில் வழங்கப்படும் ஹிந்தி (இந்துஸ்தானி) மொழியும் இதிலொன்று. இம்மொழி இரானிய (பாரசீக) மொழியி லிருந்து பிறந்தது. மேற்கிலிருந்து இந்தியாவுக்குள் படை எடுத்தவர்கள் அண்மைக்காலத்தில் நுழைத்ததே இம்மொழியும். இதுவும் அண்மைக்கால நுழைவு மொழி என்பதற்குப் பல சரித்திர ஆதாரங்கள் உள்ளன.


இந்த ஆராய்ச்சியில் அறியக்கிடப்பது என்ன வென்றால்:


தற்கால ஆரிய மொழிகள் எல்லாம் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பழங்காலத்தில் வழங்கிய இந்தோனேஷிய மொழியிலிருந்தே பிறந்தவை என்பதும், திராவிட மொழி களுக்கெல்லாம் பிற்பட்டவை என்பதும், திராவிட மொழி களிடையே முன்னணியிலும் பின்னணியிலும் அலைந்து கொண்டிருந்ததென்பதும், படை எடுப்பாளர்களுக்குச் சாதகமாக இருந்ததென்பதும் ஆகும்.


தற்கால புலவர்கள் தீட்டியுள்ள மொழி வரலாற்று நூல்கள் முழு ஆராய்ச்சியின் சித்திரமாக இல்லை. மக்களின் இனம், மொழி, பிறப்பு வளர்ச்சி வரலாறுகளில் ஆழ்ந்த கருத்துச் செலுத்தாமலேயே சரித்திரம் தீட்டி விடுகின்றனர். மக்கள் பிறந்த இடம், வாழ்ந்த இடம், அந்தந்தக்கால பண்புகள் கோட்பாடுகள் அவர்கள் பேசிய வெவ்வேறு மொழிகளின் அடிப்படை வளர்ச்சி வரலாறுகள் அம்மொழிகள் எங்கெங்கே எவ்வெப் போது பேசப்பட்டன; எங்கெங்கே எவ்வெத் துறைகளில் மாற்றங்களடைந்தன; எதனால் அம்மாற்றங்கள் செய்யப்பட்டன முதலிய வரலாறுகளையும் கண்டு தொகுத்திருந்தால், சரித்திர வரலாறுகள் அதிகப் பயனுள்ளதாக இருக்கும். இப்போது இத்துறையில் போதுமான ஆதாரங்கள் இன்மையால் இம்மொழி வரலாற்று ரகசியங்களை அறிவது கடினமாக வுள்ளது.

ஆரிய இனமொழி

ஆரியன் என்ற பெயர் இரானிய இனமான ஆரியை (ஹச) என்பதன் அடிப்படையாக வந்தது; மொழி பழக்க வழக்கங்களும் மேற்படி இனத்தவரதே. இந்த ஆரிய இனமொழியிலிருந்தே சமஸ்கிருதம் வந்தது.
சமஸ்கிருத மொழியின் அடி வரலாற்றைத் திட்டவட்டமாக அறிய பல்வேறு நார்டிக் மக்கள் ஒன்றாக இருந்த அடிநாளி லிருந்து, பின்னர் பல்வேறு காலங்களில் பல்வேறிடங்களில் பேசிய மொழிகளின் வரலாறுகளையும் கவனிக்க வேண்டும்.


இந்தியாவில் வழங்கிய இந்தோனேஷிய மொழியை, ஈரானியர் சுலைமான் மலைகள் வழியாக ஈரானிய பீட பூமிக்குக் கொண்டு சென்றனர். இந்தக்காலம் முதல் அம்மக்களின் வாழ்க்கைத் துறைகளிலும் மொழித் துறைகளிலும் பற்பல மாறுதல்கள் ஏற்படலாயின.


கி.மு. 7700-7500 ஆண்டு வாக்கில் நார்டிக்குகள் துரேனியர் களுடன் தொடர்பு கொண்டு வந்துளர்.


மேற்கு துருக்கிஸ்தானத்தில் கி.மு. 7500ஆம் ஆண்டு வாக்கில், சுமேரியர்கள் காலூன்றிய காலத்தில், நார்டிக்குகள் வடமேற்காகப் படர்ந்து தமது தாயகமான கெத்திக் நாட்டுக்கு மீண்டும் திரும்பினர். அதன்பின் கி.மு. 4300 வரை... அதாவது மேற்கு துருக்கிஸ்தானில் சுமேரியருக்கு பதில் ஹிட்டைட்சுகள் ஆதிக்கம் கொண்டபோது, இரு இனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. மொழி பழக்க வழக்கத் தொடர்புகளே அதிகம் கவனிக்க வேண்டியதாகும். அடுத்து 2000 ஆண்டுகளில் நார்டிக்கு களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தது. எனவே அவர்கள் தனித்தனிக் குழுவினராகப் பிரிந்து பல திக்குகளிலும் பரவினர்.


தற்கால சமஸ்கிருத மொழியிலுள்ள ஈரானிய, பாரசீக, பாமீரிய, கிரேக்க மொழிக் கலப்படங்களை நீக்கிவிட்டால், இது பழங்கால மாஸாகெட்டே அல்லது தேக்காரி மொழியாகும். கி.மு. 1000-750இல் வழங்கிய சாக்கிய மொழியும் இவ்வாறே இருக்கும்.


மொழிகளின் தாயகம்

பல்வேறு ஆரிய மொழிகள் பிறந்த அடிப்படைத் தாய் மொழியும், இந்தாஃப்ரிக்கன் மொழிகளும், துரேனியன் மொழிகளும் பிறந்த தாய்மை மொழியும், வங்காளக் குடாக்கடல் கரையோரத்தை அடுத்த வட்டாரங்களிலும் அல்லது இந்தியாவின் உட்பகுதியிலும் பிறந்தனவேயாகும். மற்றும், இப்போது தக்காணத்தில் வசிக்கும் திராவிட மக்களின் மூதாதைகள் பேசிவந்த தொன்மை மொழியி லிருந்தே, இந்த ஆரிய மொழிகளும் மற்ற மொழிகளும் பிறந்தவையாகும்.


கன்னடம், துளு, குடகு, தோடா, கோட்டா, குருக்ஸ், மால்டோ, தமிழ், மலையாளம், தெலுங்கு, கூயி, கோண்டி ஆகிய திராவிட மொழிகள் பால்-திணை ஆகியவை களுக்காக பல்வேறு குறிகளைச் சேர்த்துக் கொண்டுள்ளன.


ஜாவா, சுமத்திரா, மலேயா வட்டாரங்களிலும், வங்கக் கடல் கரைப்பகுதியிலும், இன்னும்பல தொன்மை மொழிகள் பேசப்படலாம்.
இந்தாஃபிரிக்க இனத்தார் வடமத்திய இந்தியாவிலும், துரேனியர்கள் பர்மாவிலும் அதற்கு வடகிழக்கு வட்டாரங்களிலும், ஆரியர்கள் வடமேற்கு இந்தியாவிலும் இருப்பதாகக் கொள்ளலாம். மற்றும் துரேனிய இனத்தார், திபேத்திய பீடபூமியின் கிழக்குச் சரிவுகளிலும், ஆரிய இனத்தார் சுலபமாக மலைகளைக் கடந்து இரானிய பீடபூமியிலும் இண்டஸ் (சிந்து) ஆற்றின் மேல் படுகை வழியாகக் காஷ்மீரிலும், மேற்குத் திபேத்திலும் (இறுதி குடியேற்றம் கி.மு. 6000) அதற்கு அப்பாலும் குடியேறின ரெனலாம்.


இந்தாஃப்பிரிக்கா இனத்தார். கிழக்கு முகமாக பசிபிக் தீவுகளுக்கும், மேற்கு முகமாகத் தென் அராபியா, ஆஃப்பிரிக்கா மூலமாகவும், இந்தோனேஷிய ஆரியர் களால் விரட்டப்பட்டனர். இந்தோனேஷிய ஆரியர்களும் பனிக் கடுமையால் வட இந்தியாவிலும், தென்முகமாகத் தக்காணத்திலும் பரவ வேண்டியதாயிற்று. இது கி.மு. 5000 வாக்கில் நடந்தது. எனவே, ஆரிய இனத்தைத்தோற்றுவித்தவர்களும், இப்போது தக்காணத்திலுள்ள திராவிட மக்களின் இந்தோனேஷியக் கிளை மூலமாக மூதாதைகளே என்கின்றனர். இந்தாஃபிரிக்கர்கள் வெளியேறியதும் இந்தோனே ஷியர் சிந்து நதி வட்டாரத்தில் குடியேறினர். சுலைமான் மலையைக் கடந்து திரும்பி வந்த இரானியர் (ஹிந்துக்கள்) வட தக்காண திராவிட மக்களிடையே ஊடுருவினர். இந்த ஆராய்ச்சியில் காணும் முடிவுக் கருத்தாவது:-


1. திராவிடருக்கு முற்பட்ட மக்கள்

ஜாவா, சுமத்ரா, மலேயா, இலங்கை, ரோடியர், பெருகு யீச்சுவா, வங்காளக் கடலின் இருமருங்கு கரையோர வட்டார மக்கள்.

2. தக்காண திராவிடர்

கன்னடம், துளு, குடகு, கோடா, கோட்டா, குருக்ஸ் (குறும்பர்), மால்டோ, தமிழ், மலையாளம், தெலுங்கு, கூயி, கோண்டி மொழி பேசுபவர்கள் இவர்கள் நீண்ட தலை மக்கள். இது அடிப்படை முக்கியம்.

3. இந்தோனேஷியர்

இது வடமேற்கில் பரவிய இனம்; திராவிட மொழியில் திருத்தம் செய்து பேசியவர்கள் வங்க மொழியின் அடிப்படையிலும், பசிபிக் தீவிலுள்ள போலினேஷியர் மொழிகளின் அடிப்படையிலும் ஒப்பனை காணலாம். இந்தாஃபிரிக்கன், துரேனிய மொழிகளுடன் இவைகளும் தோன்றியிருக்கலாம். இவர்களும் நீண்ட தலையுடைய மக்களே.

4. ஈரானியர்கள்

(மத்திய தரைக்கடல் வட்டாரத்தினர் - ஹாமைட்கள், ஹிந்துக்கள்):
மத்தியதரை வட்டாரத்தினர் - மொழி வட்டாரங்கள் - கருங்கடலுக்கு தெற்கே ஈரான், அரேபியா, பழங்கால எகிப்து, கீரீட், மத்தியதரை முகத்துவாரப் பகுதிகள், ஹாமைட்கள் வட்டாரங்கள்: மேற்கு இந்தியா, தென் ஈரான், எத்தோபியா (அபிசினியா) பிற்கால எகிப்து.

ஹிந்து - ஈரானிலும் இந்தியாவிலும் ஹிந்தி மொழிகள் பேசும் வட்டாரங்கள்.
அடிநாளில் இவ்வினத்தவர்களும், இந்தோனேஷியர் களிடமிருந்து தோன்றியவர்களே; இவர்களும் நீண்ட தலைகளையுடையவர்களே.

5. செவ்ட்டோ ஸ்லாவ்ஸ்

சிறிய தலையுடையவர்கள்; பாமீரியர், ரஷ்யாவிலுள்ள ஸ்லாவ்கள், பால்கன் முதலிய வட்டார மக்கள், அண்ட்டோலியாஹெலன்கள், கிரீசிலும் சுற்று வட்டாரத்திலும், வசிப்போர், மத்திய அய்ரோப்பிய ஆல்பைன்ஸ் கெல்டல்கள் (இத்தாலி, சய்பீரியன் தீபகற்பம், மத்திய ஃப்ரான்ஸ், கிழக்கு ஃப்ரான்ஸ் ஆகியவைகளில் வசிப்போர் உட்பட) இவர்களும் ஆதி இந்தோனே ஷியரிடமிருந்து உற்பத்தியானவரே.

6. நார்டிக் மக்கள்

உருண்ட தலையர்களான ஆரிய மக்கள், சூவியர் நார்வீஜியர், சுவிடன் மக்கள், பிரிசீயர், ஆங்கிலர், சாக்ஸன்கள், துரிங்கியர், ப்வேரியர், செம்னோனிய அல்லது சுவாபியர், அலிமன்னியர், கிம்மேரியர் - மேதியர், சூர்டுகள், தோரியர், அல்பேனியர், மற்றும் வீசர். வெரா ஆறுகளுக்கு மேற்கிலும் உர்டன் பர்க் தன் பேடன், அல்சாசுக்கு வடக்கிலும் மேற்கு ஃப்ரான்சிலும் வடக்கு ஃப்ரான்சிலும் வசிப்போர் (மத்தியதர வட்டார புருனட்டுகளையும், அல்பைன் கெல்டுகளையும் ஆங்கிலோ சக்ச்களைத் தவிர்த்தும்).
கேதே-சுவிடன், இத்தாலி, ஸ்பெய்ன் ஆகியவற்றிலுள்ள கோத்கள்.
மாஸ்ஸநேத்தே, வடகிழக்கு ஈரான், தோக்கரி, குஷான் பாக்ட்ரியானா, எப்தாலைட்கள்.


சாக்கே:- சாக்யோனியாவில் வசிக்கும் வூசுன்கள் உட்பட இறுதியில் கூறப்பட்ட இரு இனத்தவரில் இந்தி யாவில் சிந்தோ இந்திய சாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர் களின் சந்ததியாருமுளர். இவர்கள் மொழி சமஸ்கிருதம்.
சார்மேதியரான போலந்தியர், உக்ரேனியர், கிம்மேரியர் கெத்தே இனத்தவர்கள் கலப்பட சந்ததியார்.


இவர்கள் கெல்ட்டோஸ்லாவ் இனத்திலிருந்து உற்பத்தியானவர்கள். இயற்கை மாறுதல்களால் நாளடைவில், ஏற்பட்ட உட்பிரிவுகளால் இவர்கள் தனித்தனியாயினர். எனவே, அடிநாள் வரலாற்றைக் கொண்டுதான் இவர்களுடைய அடிநாள் உற்பத்தியையும் இனத்தையும் கணிக்கமுடியும்.
எனவே, மேற்கண்ட ஆராய்ச்சிக் குறிப்புகளில் இருந்து இன்றைய ஆரியர்கள் என்பவர்கள் பல இடங்களில் பராரியாகத் திரிந்த பல கூட்டங்களில் இருந்து இந்தியாவுக்கு வந்து தங்கிப்போன ஒரு கலப்பு இனக்கூட்டம் என்பதும் இவர்கள் இப்போது தங்கள் தாய்மொழியாகவும் மதமொழியாகவும் பாவித்துக் கொண்டு மற்றவர்களுக்கு வேத மொழி என்று கூறி ஏமாற்றுப் பிரச்சாரம் செய்யும் சமஸ்கிருத மொழி என்பதானது, பல பிரிவு மக்கள் பல இடங்களில், பல காலங்களில் பேசிவந்த பல்வேறு மொழிகளின் சேர்ப்பு மொழியே தவிர, ஒரு குறிப்பிட்ட கால குறிப்பான மொழி அல்ல என்பதும், இதில் எவ்விதமான உயர்வுத் தன்மையும் கிடையாது என்பதும், பார்ப்பனர் அதைப்பற்றி உயர்வாக பேசுவதும் பிரசாரம் செய்வதும் தங்கள் சமய-மத கோட்பாடுகளை உயர்த்திக் கொள்ளவும் நமது மொழிகளை இழிவுபடுத்தவுமே ஆகும் என்பதும் நன்றாய் அறியப்படுகின்றன.


(ஆதாரம்: புரட்டு இமாலயப் புரட்டு! - தந்தை பெரியார்)

15 comments:

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு சர்வாதிகாரி! மராட்டிய முதல்வர் சாடுகிறார்


மும்பை, ஜூலை 31_ முக்கிய விவகாரங்களில் பதில் அளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார் என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் குற்றம் சாட்டியுள்ளார். மோடி சர்வாதிகாரி யாக நடந்துகொள்கிறார். ஆரோக்கியமான ஜனநாய கத்துக்கு இது நல்லதல்ல என்றும் அவர் கூறினார். மும்பையில் அவர் கூறிய தாவது:

மோடி அரசால் மக்கள் ஏமாற்றம் அடைந் துள்ளனர். குஜராத் மாநி லத்தில் மோடி சர்வாதி கார ஆட்சியே நடத்தி வந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மத்தியில் சர் வாதிகார ஆட்சிதான் அமையும் என்று நாங்கள் அச்சப்பட்டோம். அது நடந்துவிட்டது.

மத்திய அமைச்சர்கள் நடத்தப்படும் விதம் சரியில்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை. முக்கிய விவகாரங்களில் பிரதமர் தனது நிலையை தெளிவுபடுத்துவதில்லை. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறி வருகிறார்.

தேர்தல் பிரச்சாரத் தின்போதே பல விவகா ரங்களில் மோடி தனது நிலையை தெரிவிக்க வில்லை. வெளியுறவுக் கொள்கை, பொருளா தாரம், சமூகப் பிரச் சினைகள் பற்றியோ ஆர். எஸ்.எஸ். முன்வைக்கும் பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி அளிக்கும் 370ஆ-வது பிரிவு நீக்கம், ராமர் கோயில் பற்றியோ மோடி எதுவும் பேசவில்லை.

மோடி அரசு என்ற கனவை மட்டுமே அவர் விற்பனை செய்தார். பல பிரச்சினைகளில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்களுக்கு கோபம் இருந்தது. இதை மோடி தனக்கு சாதக மாகப் பயன்படுத்திக் கொண்டார். சந்தையில் பொருள் விற்பனை செய் வது போல் தன்னை சிறப் பாக சந்தைப்படுத்தியும் பெருமளவு விளம்பரங்கள் செய்தும் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களுக்கு மரியா தையும், பொறுப்புணர்வும் இருந்தது. அது தற்போது இல்லை. இதை மக்கள் ஒப்பிட்டுப்பார்க்கின்றனர். புதிய அரசிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மக்கள் பெற் றதோ மிகவும் குறைவு. இவ்வாறு பிருத்விராஜ் சவாண் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/85012.html#ixzz396Jqp7It

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்


நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப் படவே வேண்டியவர் களாவார்கள் இந்தப் பார்ப்பனர்கள்.
(விடுதலை, 12.11.1960)

Read more: http://viduthalai.in/page-2/85017.html#ixzz396KJzJwU

தமிழ் ஓவியா said...


80 வயது கடந்த ஓய்வூதியர்களும் - தமிழ்நாடு அரசின் பாரபட்சமும்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

80 வயது கடந்த ஓய்வூதியர்களும் - தமிழ்நாடு அரசின் பாரபட்சமும்

தமிழக அரசுப்பணியிலிருந்து 1.6.1988 முதல் 31.12.1995 வரை உள்ள ஏழு ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு பாரபட்சமாக ஓய்வூதியம் கணக்கீடு செய்து வழங்கப்பட்டது.

இந்த முரண்பாட்டைக் களைந்து இந்த ஏழாண்டுக்கு முன்னும், பின்னும் ஓய்வு பெற்றவர்கட்கு வழங்கியதைப்போல ஓய்வூதியம் கணக்கீடு செய்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியச் சங்கங்கள் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டு பல ஆண்டுகள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் 17.1.2013-இல் ஓய்வூதியர்களின் கோரிக்கை, நியாயத்தின் பால் பட்டதென்றும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் 14 மற்றும் 16ஆவது பிரிவுக்கு விரோதமான தென்றும், ஓய்வூதியர்களுக்குள் பாகுபாடு காட்டக்கூடாதென்றும் தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டது.

தீர்ப்பு கிடைத்து எட்டு மாதங்கள் கழிந்த நிலையில் 23.8.2013இல் அரசு ஆணை 363அய் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அரசாணை நாள் 23.8.2013-இல் ஓய்வூதியர் களில் உயிருடன் இருப்பவர்கட்கு மட்டுமே இந்த அரசாணை பயன்தரும் என குறிக்கப் பட்டதால், ஓய்வூதியர் குடும்பத்தார்க்கு ஓர் பேரிடியாக உணரப்பட்டது. ஏனெனில் ஓய்வூதியர் இறக்கும் நிலையில் அவருக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன் அவர் குடும்பத்தார்க்கு சேரும் என்பதே பொது விதி.

இது ஒரு புறம் இருக்க ஓய்வுபெற்று 20, 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் எஞ்சியுள்ள ஓய்வூதியர்கள் அவர்கள் ஓய்வு பெற்ற அலுவலகங்களுக்கு படையெடுத்து தமது பணிப்பேரேடுகளைத்தேடிப்பிடித்து புதிய ஓய்வூதிய பிரேரணைகளை தயாரிக்கச் செய்து மாநில கணக்காயருக்கு மேற்படி அலுவலகம் மூலம் அனுப்பினர். இதிலும் ஒரு துயரச் செய்தி உண்டு. இந்த ஏழாண்டுகள் என்பது அய்ந்தாவது ஊதியக்குழு நடை முறையில் இருந்த காலமாகும். ஆனால் புதிய பிரேரணை தயாரிக்கப்பட்டதோ 31.5.1988 வரை அமலில் இருந்த நான்காவது ஊதியக்குழுவின் பரிந்துரையில் இருந்த குறைந்த சம்பள விகிதத்தில்!

மாநில கணக்காயர் அலுவலகத்தில் பெறப்பட்ட புதிய ஓய்வூதிய பிரேர ணைகள் பரிசீலிக்கப்பட்டு 31.12.1995 இல் ஓய்வூதியர்க்கான புதிய ஓய்வூதியம் எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்து, அந்த உத்தரவு சம்பந்தப்பட்ட கருவூலங் களுக்கு மாநில கணக்காயரால் அனுப்பப் பட்டு வருகின்றன. அதன் நகலும் ஓய்வூ தியர்களால் பெறப்படுகிறது. ஓய்வு பெறும்போது பெறப்பட்ட ஓய்வூதியத்தை விட புதிய ஓய்வூதியம் 31.12.1995 இல் சற்று கூடுதலாகவே உள்ளது. இதனால் ஓய்வூ தியம் பெறும் தேதியிலிருந்து 31.12.1995 வரை குறைந்த அளவிலேனும் ஓய்வூதிய நிலுவை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

31.12.1995 இல் 5ஆவது ஊதியக்குழு பரிந்துரை முடிவுக்கு வந்து 1.1.1996 முதல் 6ஆவது ஊதியக்குழு பரிந்துரை, சம்பள விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் நடைமுறைக்கு வந்தது. அரசாணை எண் 174/21/4/1998 வெளியிடப்பட்டு அதில் 1.1.1996இல் எந்த அடிப்படையில் ஓய்வூதியங்கள் நிர்ண யிக்கப்பட வேண்டும் என்கிற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப் படையில் 31.12.1995இல் ரூ. 1750 வரை அடிப்படை ஓய்வூதியம் உள்ள ஓய்வூ தியர்கள் 1.1.1996 இல் உள்ள 148 சதவீத அக விலைப்படியை அடிப்படை ஓய்வூதியத் தோடு சேர்த்தும் ரூ.1751-க்கு மேல் அடிப்படை ஓய்வூதியம் பெறுகிறவர்கள் 111 சதவீத அகவிலைப்படியையும் சேர்த் தும் ஓய்வூதியம் பெற வேண்டும். ஆனால் இந்த அரசாணை புறக்கணிக்கப்பட்டு, புதிதாக ஓர் அரசு கடிதம் எண் 61495/4.2.2014 இல் வெளியிடப்பட்டு அகவிலைப் படி இணைப்பதில் குளறுபடி செய்து 1.1.1996 இல் ஏற்கெனவே பெறப்பட்ட ஓய்வூதியத்தைக் காட்டிலும் குறைவாக பெறும்படி செய்துள்ளார்கள். உச்சநீதிமன் றத்தின் தீர்ப்பினை செயலிழக்கச் செய்யும் நிலையில்தான் அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

மக்களாட்சியில் மனிதநேயம் பேணப் பட வேண்டும்! தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட் டிருக்குமா என்ற கருத்து எல்லா ஓய்வூ தியச் சங்க பொறுப்பாளர்கள் முதலமைச் சர் அவர்களை நேரில் சந்தித்துப்பேசி நல்ல முடிவை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை திடமாக இருக்கிறது.

- எம்.கே.கிருஷ்ணமூர்த்தி (கூட்டுறவு சார் பதிவாளர் ஓய்வு) மயிலாடுதுறை

Read more: http://viduthalai.in/page-2/85021.html#ixzz396KSOrNj

தமிழ் ஓவியா said...





செய்குதம்பிப் பாவலர்
தோற்றம்: 31.7.1874- மறைவு: 13.2.1950

மதங்களைக் கடந்தது தமிழ் என நிரூபித்துக் காட்டும் வகையில் வாழ்க் கையை தமிழ்த்தொண்டு சிறக்க வாழ்ந்தவர். பாவலர் என அன்புடன் அனைவ ராலும் அழைக்கப் பெற்றவர் செய்குதம்பிப் பாவலர்.

அக்காலத்து திருவி தாங்கூர் சமஸ்தானமாக வும் இன்றைய நாகர் கோவில் மாவட்டமாகவும் விளங்கக்கூடிய தமிழ கத்தின் தென்கோடிப் பகுதியான கோட்டாறு எனும் ஊரில் இசுலாமிய சமூகத்தில் பிறந்தவர். தந்தை பக்கீர் மீரான் சாகிபு. தாயார் ஆமினா. சிறுவயதில் அரபு மொழி கற்க பள்ளிக்கு அனுப் பப்பட்ட செய்கு தம்பி அங்கிருந்த ஆசிரியர் களைத் தன் இணையற்ற அறிவாற்றலால் வியக்க வைத்தார். திருக்குரானை அவர் கற்ற வேகத்தைக் கண்டு தேர்வில்லாமலேயே அவரை இரண்டாம் வகுப்புக்கு மாற்றினர்.

அதே ஆண்டில் மூன்றாவது வகுப்புக்கும் பின் நான்காம் வகுப்புக்கும் மாற்றப்பட்டார். பின் தமிழின் பால் ஆர்வம் கொண்டு அவ்வூரில் வாழ்ந்த சங்கர நாராயண அண்ணாவி என்பவரிடம் நன்னூல், இலக்கண விளக்கம், வீரசோழியம், தொல் காப்பியம் போன்ற இலக்கண நூல்களைக் கற்றார். தமிழில் தன்னிகரற்ற புலமை பெற்ற பாவலர் சென்னைக்கு வந்தார். கம்பராமாயணம் சீறாப் புராணம் பற்றி அவர் ஆற்றிய சொற் பொழிவுகள் கேட்போர் நெஞ்சில் நெருப்பைப் பற்றவைத்தன.

இச்சமயத்தில்தான் அவர்காலத்தில் வாழ்ந்த அன்பின் திருவுருமான இராமலிங்க அடிகளாரின் பால் ஈர்ப்பு கொண்டு இசுலாமியராக இருந்தும் சைவ நெறி பயின்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க அருட்பா மருட்பா வழக்கில் வள்ளலாருக்கு ஆதர வாக நீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறப்பட்ட பின்னும் அறிஞர்கள் சபையில் அந்த வாதம் தொடர்ந்து கொண்டிருந்தது. வள்ளலார் மற்றும் நாவலர் இறந்த பின்பும் இந்த மோதல் தமிழ் அறிஞர்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டிருந்தது.

திரு.வி.க. மற்றும் கதிரைவேற்பிள்ளை ஆகியோர் ஒரு பொது அரங்கில் அருட்பாவைக் கடுமையாக எதிர்த்து அதில் இலக்கணப் பிழைகள் இருப்பதாகக்கூறி அதனை நிராகரிக்க முற்பட்டப் போது பாவலர் மேடையில் ஏறி தன் நுண்ணிய இலக்கணப் பார்வையைக் கொண்டு ஆய்ந்து அகழ்ந்து வள்ளலார் எழுதியது அருட்பாதான் என விளக்கிக்கூறிய போது அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

அதன் பின்னரே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்து வள்ளலாரை அனைவரும் ஏற்கத் துவங்கினர். இவர் எழுதிய நூல்களில் சம்சுத்தாசின் கோவை, நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, கல்லத்து நாயகம். இன்னிசைப் பாமாலை, திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி, திருநாகூர் திரிபந்தாதி, நீதிவெண்பா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

நினைத்த மாத்திரத்தில் தேர்ந்த கவிபுனையும் ஆற்றல் மிக்கவர். சதாவதானம் எனும் அரிய கலையை அவர் பலமேடைகளில் நிகழ்த்திய காரணத்தால் சதாவதானி செய்குதம்பிப் பாவலர் என்றே அழைக்கப்பட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/85027.html#ixzz396KxwwE6

தமிழ் ஓவியா said...

சமூகநீதியின் சாதனை!

சென்னை, ஆக.1- கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான பொதுப் பிரிவு கலந் தாய்வில் முதல் மாணவராகத் தேர்வு செய்யப் பட்டிருப்பவர் லாரி ஓட்டுநர் மகனாவார்; வி. சரண்குமார் நாமக்கல்லைச் சேர்ந்தவர்; இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த கமலக் கண்ணன்; இவர் விவசாயத் தொழிலாளியின் மகன்; 3ஆம் இடத்தைத் தட்டிச் சென்றவர் மனோஜ்பிரபு நாமக்கல்லைச் சேர்ந்த இவரின் தந்தையார் விசைத்தறித் தொழிலாளி. இதுதான் திராவிட இயக்கத்தின் சமூகநீதிச் சாதனை.

Read more: http://viduthalai.in/e-paper/85064.html#ixzz39CAaT1ic

தமிழ் ஓவியா said...

இது என்ன குழப்பம்?

மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயிரிட்டு சோதனையிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். கூறியது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை செய்தியாளர் கள் கேட்டபோது, இது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று பதிலளித்துள்ளார்; யார் சொல்வது சரி?

Read more: http://viduthalai.in/e-paper/85064.html#ixzz39CAiKVqs

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


ஆண்டாள்

ஆண்டாளின் பக்திக் குப் பெருமையளித்த சிறீரங்கம் ரங்கநாதர் அவளை தன்னுடன் ஏற் றுக் கொண்டார். அதை உணர்த்தும் விதமாக சிறிவில்லிப்புத்தூரில் நடக்கும் ஆடித் திரு விழாவின் 7ஆம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் ரெங்க மன்னார் காட்சி தருவாராம். இந்த அரிய காட்சியைத் தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப் படுமாம்.

ஆண்டாள் என்ற பக்தை கடவுளை கணவ னாகக் கைப்பற்றிடப் பாடிய விரக தாபப் பாடல் கள் ஆபாசமானவை! கடவுளைத் தந்தையாகத் தொழும் நிலை போய் புருஷனாக்கிப் புணரும் ஆசை கொண்ட பாடல்கள் சகிக்க முடியாதவை. இது தான் பக்தி வழிகாட்டும் ஆன்மிகமா? வெட்கக் கேடு!

Read more: http://viduthalai.in/e-paper/85070.html#ixzz39CAyXH00

தமிழ் ஓவியா said...


இவர்கள் யார்? யார்? மக்களவை உறுப்பினர்களின் தொழில்கள் என்ன?



டில்லி, ஆக.1- 16ஆவது மக்களவையில் உள்ள 539 உறுப்பினர்கள் தங்களின் தொழிலாகக் குறிப்பிட் டுள்ள பட்டியல் நாடாளு மன்ற இணையதளத்தில் பதிவாகி உள்ளது. அந்த பட்டியல் ஊடகங்களில் வெளியானதால் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தி ஒரு திட்ட ஆலோசகர் என்று கூறும் அதேநேரத்தில் மோடி சமூகப் பணியாளர் என்று கூறிக்கொள்கிறார்.

மேற்கு வங்கத்தின் காங்கிரசுக் கட்சியின் தலைவராக உள்ள பஹரம்பூர் பகுதியைச் சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி சமுதாய சீர்திருத்த வாதி என்று கூறிக் கொண்டுள்ளார். இவர்மீது ஏராளமான குற்ற வழக் குகள் உள்ளனவாம். ராகுல் காந்தியின் திட்டங்கள் கடந்த தேர்தலில் எடு படாமல் போனது. அவ ருடைய உறுதிமொழி ஆவ ணத்தில் அவர் தன்னை திட்ட ஆலோசகர் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற இணையதளத்தில் மக்களவை உறுப்பினர்கள் அரசியலைக் கடந்து, தங்களின் தொழிலாக அறிவித்துள்ளதை விவசா யம் முதல் கட்டுமானத் தொழில் வரை, மருத் துவப்பணி முதல் கல்விப் பணிவரை, ஆசிரியர்பணி முதல் விளையாட்டு வீரர் கள் வரை, கலைஞர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை மற்றும் மத நிறு வனங்கள் முதல் சமுதாய சீர்திருத்தம்வரையிலும் 33 தொழில்களைக் கொண் டுள்ள பட்டியலை வெளி யிட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பெயர் பத்திரிகையாளர் என்று உள்ளது. இணையத்தில் பிளாக்கில் ஆர்வமுடன் எழுதுபவராக (blogger) உள்ளவர், ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசர் இதழில் அவர் பத்திரிகை யாளர் பணி தொடங்கி யது. மக்களவையில் உள்ள மற்ற நான்கு பத்திரிகை யாளர்களில் பிஜூ ஜனதா தளத்தின் பர்த்ருஹரி மஹ்தாப் மற்றும் தத் தாகதா சத்பதி ஆகியோர் உள்ளனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவ ராஜ், பேரவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகிய இருவரும் வழக்குரைஞர் களாக உள்ளதாகத் தெரி வித்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தன்னை ஓர் ஆசிரியர் என்று கூறி உள்ளார். அதேநேரத்தில் முரளிமனோகர் ஜோஷி பேராசிரியர் என்று பதிவு செய்துகொண்டுள்ளார். முசாபர் நகர் கலவர வழக்கில் தொடர்புள்ளவ ரான சஞ்சய் பாலியான் அவரும் தன்னைப் பேரா சிரியர் என்று கூறி உள்ளார்.

காங்கிரசு கட்சித் தலைவரான சோனியா காந்தி அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் அரசியல் மற்றும் சமூகப்பணியாளர் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரான மேனகா காந்தி தன்னை ஒரு எழுத்தாளர் என்று சில நூல்களை வெளி யிட்டதன்மூலம் கூறியுள் ளார். இந்திய கிரிக்கெட் வீரர் கீர்தி ஆசாத் தன்னை விளையாட்டு வீரர் என்று குறிப்பிட்டுள் ளார். ஒன்பது கலைஞர் கள், ஏழு திரைத் துறைக் கலைஞர்கள் உள்ளனர். முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளவ ரான பூனம் மகாஜன் தன்னை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவராக குறிப் பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரசு சவ்காதா ராய் தன்னை ஒரு கல்வியாள ராகக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக யோகி ஆதித்ய நாத் தன்னை மத நிறு வனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு உள் ளார். சசிதரூர் தன்னை ஒரு இராஜதந்திரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/85069.html#ixzz39CBevJBi

தமிழ் ஓவியா said...


கோரத் தீக்குத் தண்டனை!


பத்து ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நடந்த ஒரு தீ விபத்தில் 94 குழந்தை மொட்டுகள் குரூரமாகக் கொல்லப்பட்டன என்பது இன்னும் நூற்றாண்டு கண்டாலும் மனிதத்தின் குருதியை உறையச் செய்யக் கூடியதுதான்.

இதுபோன்ற கொடுமைகளுக்குத் தண்டனை கூட - தீர்ப்புகூட 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிடைக்கிறது என்பது ஆரோக்கியமானதல்ல - இந்தியாவின் நிர்வாக முறையும், நீதிமுறையும் எப்படி பிறழ்ந்து போயுள்ளன என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய எடுத்துக்காட்டே!

பள்ளியின் உரிமையாளர், தாளாளர், தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையற்காரர் என்று தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளி என்றால் இப்படியெல்லாம் கட்டுமானம் இருக்கவேண்டும்; எத்தனை எத்தனை வசதிகள் இடம் பெற்றிருக்க வேண்டும்; விபத்துக் காலங்களில் உயிர் பிழைக்க முன்னேற்பாட்டு வசதிகள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கான சட்ட திட்டங்கள், விதி முறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

இவை எல்லாம் ஏட்டுச் சுரைக்காயே என்பது - இத்தகு விபத்துகள் விளக்கமளிக்கின்றன.
சத்துணவு சமைக்கும் மய்யம் கீற்றுக் கொட்டகையில் இருப்பதை அனுமதித்தது யார் என்பதுதான் முக்கியமே தவிர, சத்துணவுக் கூடத்தில் பணியாற்றும் ஏழைத் தாய்மார் தலையில் அது விடியலாமா என்பது முக்கிய கேள்வியாகும்.

பள்ளிக்கு அனுமதி அளித்தது - பள்ளியின் வரைபடம், பள்ளியின் கட்டுமானம் - இவை சரியாக இருக்கின்றதா என்பதை ஆய்ந்து சான்று அளிக்கும் அதிகாரிகள், பணம் ஒன்றே குறி என்று கருதி கல்வியையும் காசாக்கும் காரியத்தில் ஈடுபடும் கனவான்கள் இவர்கள்தான் உண்மையிலேயே குற்றவாளிகளின் பட்டியலில் வரவேண்டியவர்கள்.

இதில் இன்னொரு முக்கிய தகவலை காதும் காதும் வைத்தாற்போல கை கழுவப் பார்க்கிறார்களே - அது ஏன்?

அந்தக் கோர விபத்து நடந்த நாள் இந்து மதக் கண்ணோட்டத்தில் மிகவும் புனிதமான நாளாம் - ஆம் ஆடி வெள்ளியாம்! (அத்தகு நாளில்தான் இந்த அநியாயம் அரங்கேறியுள்ளது).

ஆடி வெள்ளியென்றால் கோவிலுக்குப் போக வேண்டுமே - கும்பிடுத் தண்டம் போட வேண்டுமே - அதுவும் ஆசிரியைகள் என்றால் கேட்கவா வேண்டும்?

பக்கத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டு, அதே நேரத்தில் பிள்ளைகள் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற பாதுகாப்பு தொலைநோக்கோடு வெளிக் கதவைப் பூட்டி விட்டுச் சென்றனர்.

ஆசிரியை வகுப்பறையைப் பூட்டி விட்டு கோவிலுக்குச் சென்ற அந்த நேரத்தில்தான் தீ விபத்து நடந்திருக்கிறது; பிள்ளைகளும் உள்ளேயே மாட்டிக் கொண்டு கோர மரணத்தைத் தழுவியுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பெரும்பாலான ஏடுகள் மறைத்தது ஏன்? ஏதோ தப்பித் தவறி தி இந்து (தமிழ்) ஏடு 9ஆம் பக்கத்தில் 16.7.2014 அன்று வெளி யிட்டுள்ளது.

பாழும் பக்தி பச்சிளம் பாலகர்களைப் பலி கொடுக்கச் செய்துவிட்டது என்று எடுத்துக்காட்ட, அதன் வழி விழிப்புணர்வை ஏற்படுத்த விடுதலை யை விட்டால் வேறு நாதியில்லை என்பதுதான் உண்மை.

இதற்குப் பிறகாவது எண்ணிப் பார்க்க வேண் டாமா? அதுவும் ஆடி வெள்ளி, கோவில் - கும்பிடு - இந்தச் சூழலில் இந்த விபத்து!

கடவுள் கருணை உள்ளவர் என்று சொன்னாலும் சரி, சர்வ சக்தி வாய்ந்தவர் என்று வருணித்தாலும் சரி, எங்கும் நிறைந்தவர் என்று உரத்தக் குரலில் பாடித் தொலைத்தாலும் சரி இவையெல்லாம் சுத்தப் பொய், கடைந்தெடுத்த கற்பனை என்பதை இப்படிப்பட்ட காரியம் நடந்ததற்குப் பிறகாவது சிந்திக்க வேண்டாமா?

இதனைச் சுட்டிக்காட்டி மக்களைத் தெளிய வைக்கும் ஒரு அறப் பணிக்கு ஊடகங்கள் முன்வர வேண்டாமா?

என்ன தண்டனையைக் கொடுத்தாலும் மாண்ட மழலைகள் மீளப் போவதில்லை என்றாலும், அரசுக் கென்று ஒரு பொறுப்புணர்ச்சி, கடமை உணர்ச்சி இருக்கிறதே - அதுதான் இழப்பீடு என்னும் கருணை யுள்ளம்; கூடுதல் கருணைத் தொகை கொடுக்க வேண் டும் என்பதில்தமிழ்நாடு அரசு எதற்காக எதிர்நிலை எடுத்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்?

அதுவும் கல்லும் கரையும் இந்தப் பிரச்சினையிலா ஓர் அரசு இப்படி ஒரு நிலையை எடுப்பது? மறுபரி சீலனை செய்க!

Read more: http://viduthalai.in/page-2/85073.html#ixzz39CC52fTZ

தமிழ் ஓவியா said...


உண்மையான உடைமை (சொத்து) எது?

மனிதர்களான நம்மில் பலரும் உடைமை என்றால் செல்வம் என்று பொருள் கொள்ளும்போது, பணத்தைத் தான் செல்வம் என்று குறுபொருள் கொள்கின்றனரே தவிர, அதைவிட விரிவானது - அழியாச் செல்வங்களான பல பண்புகள் என்பதை ஏனோ மறந்து விடுகின்றனர்!

வள்ளுவர் கருத்து எதில் அடங்கியுள்ளது என்று பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு, சிந்திக்கின்ற நேரத்தில், அவரது குறளில் உடைமை என்பவைகளை, மனிதர்க்கு இருக்க வேண்டிய பல பண்பு நலன்களையே (அழியாத செல்வம் - உடைமை என்று கூறுகிறார்!

1. அடக்கம் உடைமை
2. அருள் உடைமை
3. அறிவு உடைமை
4. அன்பு உடைமை
5. ஆள்வினை உடைமை
6. ஊக்கம் உடைமை 7. ஒழுக்கம் உடைமை
8. நாண் உடைமை
9. பண்பு உடைமை
10. பொறை உடைமை

குறளில் 133 அதிகாரங்களில் உள்ள தலைப்பில் உள்ள உடைமைகள் மேலே காட்டப்பட்டுள்ளவை.

ஒரு இலட்சிய மனிதன் - சிறந்த மனிதனின் பண்பு நலன்களில் இந்த பத்தும் இருக்க வேண்டும்; அப்படி இருந் தால் அவனை வெல்லுதல் யார்க்கும் அரிதினும் அரிதாகும்!

மனிதர்களில் எவ்வளவு உயரச் சென்றாலும் - பட்டம், பதவி, புகழ், பணம், பெருமை போன்ற நிலைகளில் - அவர்கள் அவ்வளவுக்கவ்வளவு அடக்கத்தினை அணியாய்க் கொண்டால் அவர்களின் வாழ்வு என்றும் சிறந்த வாழ்வாகும்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் என்பது ஊரறிந்த ஒரு எளிய பழமொழியல்லவா? மனித அறிவுக்குத் தரும் முன்னுரிமை யைவிட அடக்கத்திற்கே வள்ளுவர் முதல் இடம் - முன்னுரிமையைத் தந்துள்ளார் என்பது மனிதர்கள் அறிவால் அளக்கப்படுவதைவிட, அதில் சிறந் தோங்கி அவர்கள் இருந்தபோதிலும் அத்தகையவர்களை அடக்கத்தால் அளக்க வேண்டுமென்று ஒரு அருமை யான வாழ்வியல் நியதியையும் கூறுகிறார்!

சொத்துக்கள் சேர்க்க மாளாது அலைந்து திரிபவர் எவராயினும், அவர் உய்ய, அவர்தம் வாழ்வு உயர சேர்க்க வேண்டிய பெரும் சொத்துகள் மேற்காட் டிய பத்து உடைமைகளே என்பதைப் புரிந்து; அவைகளைச் சேர்த்து, காத்து, பயன் பெற்று உயர்தலே ஒப்பற்ற பெரு வாழ்வு ஆகும்!
அடக்கத்தின் பெருமை, அடங்க அடங்கவே உயரும். எளிமையும், அடக் கமும் எவரிடம் ஏராளம் உள்ளதோ, அவரை வெல்லல் யார்க்கும் அரிது.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது (குறள் 124)

தன் நல்லொழுக்க நிலையிலி ருந்து மாறுபடாமல், அடக்கமாய் நடந்து கொள்பவனுடைய உயர்ந்த தோற்றப் பொலிவு, தன்மை அடிப் படையில் மலையின் உச்சியைக் காட்டிலும் மிகவும் பெரியதாகக் கருதப்படும்

குடும்பம், நிறுவனம், இயக்கம், கல்வி அமைப்புகள், ஆட்சி இவை களில் பெரும் பொறுப்பில் இருப்பவர் களில் பலர் - இதனைக் கடைப் பிடிக்கத் தவறுவதாலேயே - அதாவது அடக்கமின்மை, ஆடம்பரம், அதி காரப் போதை, தன்னை அசைக்க இனி எவராலும் முடியாது என்ற இறுமாப்பு முதலியவை அவர்களை விரைவில் குழியில் தள்ளிவிடும் என்ற நிலையை நம் கண் எதிரிலேயே காண்கிறோமே!, இல்லையா? எனவே அடக்கத்தை, பிரியா உடைமையாகக் கொண்டு வாழுங்கள்.

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/85075.html#ixzz39CCFDkoJ

தமிழ் ஓவியா said...


அவதாரங்கள் அழிவு வேலைக்கே!


கடவுள் அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின! எதற்காகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன! என்பதெல்லாம் தெரியுமா?

அவதாரங்கள் எல்லாம் அழிவு வேலைக்கே தோன்றி யவை என்பது முதலாவது உணரப்பட வேண்டும்!

திராவிடர்களை ஒழிக்க:

அவையாவும் ஆரியத்தை எதிர்த்து நின்ற திராவிடர் களை ஒழிக்கவே எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவே தோன்றியவை! அல்லது தோற்றுவிக்கப்பட்டவை - அல்லது வேண்டுமென்றே கற்பனை செய்யப்பட்டைவை என்பது இரண்டாவதாக உணரப்பட வேண்டியதாகும்.

தசாவதார தத்துவமே அழிவு தத்துவந்தான். திராவிட கலாச்சார அழிவு தத்துவந்தான்! - திராவிட கலாச்சார ஒழிப்பு தத்துவந்தான்.

நம்மையும் ஒழித்திருப்பார்கள்:

மச்சாவதாரம் எடுக்கப்பட்ட காரணம் யாரோ ஒரு ராட்சதன் சாஸ்திரங்களை கொண்டுபோய் சமுத்திரத்தில் மறைத்துக் கொண்டான் என்பதுதான் நரசிம்ம அவ தாரத்துக்குக் காரணம்!

இரணியன் - விஷ்ணுவின் தலைமையில் புகுத்தப்பட்ட ஆரிய கலாச்சாரத்தை ஒப்புக்கொள்ள மறுத்தான். இராமா வதாரத்துக்குக் காரணம் இராவணன் ஆரிய பண்புகளான யாகத்தை தடைசெய்தான் ஆரியர்களின் பரவுதலைத் தடுத்தான் என்பதுதான்! இப்படியாக ஒவ்வோர் அவதாரமும் ஆரிய கலாச்சார எதிர்ப்புகளை ஒழிப்பதற் கென்றே ஏற்பட்டவையாகும்.

அதுபோலவே சிவன், கந்தன், முதலியவர்களும், இவர்களைப் பயன்படுத்தி அவர்களை ஒழித்ததுபோல் நம்மையும் ஒழித்திருப்பார்கள்!

10.1.1950 இல் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு

Read more: http://viduthalai.in/page-7/85061.html#ixzz39CFLWLCn

தமிழ் ஓவியா said...


நகைப்பிற்கு இடமான நவராத்திரி


செப்டம்பர் அல்லது அக்டோபர் தமிழ் மாதங்களில் ஒன்றாக சொல்லப்படுகின்ற புரட்டாசி பெயரிலேயே ஒரு புரட்டு- என்று சொல்லப்படுகின்ற காலத்து மகாளய அமாவாசை என்ற இரவில் நிலா இல்லாத நாளில் அவாள் மொழிப்படி திதியில் மூதேவிகள் - அதாவது துர்கா, சரசுவதி மற்றும் இலட்சுமி ஆகிய இம் மூதேவிகளும் கொலு இருக்கின்றனராம்.

கொலுவிருப்பது ஏனோ?

மகிடாசுரன் என்பவனைக் கொல்ல அனைத்து தேவர்களாலும் ஆகவில்லையாம். மகிடாசுரனுக்கு எருமைத் தலையாம். இவனை ஏன் கொல்ல வேண்டுமென்றால் இவன் தேவர்களுக்கு கொடுமை இழைத்து வந்தனராம். எனவே அவனை தொலைத்துக் கட்ட தேவர்களால் கையாலாகாது போகவே பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய அனைத்து தேவர்களும் மேற்கண்ட இவர்களது மூதேவியரையும் தூண்டி ஏவி விட்டனராம்.

எனவே இவர்கள் அந்த மகிடாசூரனைக் கொல்ல கொலு விருந்தனராம். எல்லாருக்கும் எல்லா வரங்களும் தரும் தேவர்களுக்கு இது கையால் ஆகாமல் போனதேனோ? இதற்காக அவர்களது மூதேவிகளும் கொலுவிருப்பது ஏனோ? அது எப்படியோ இருக்கட்டும்.]

அசுரர் யார்?

முதலில் அசுரர் யாரெனப் பார்ப்போம். திராவிடர் அல்லது தமிழர்தான் அவர்களால் - தேவர்களால் அதாவது ஆரியர்களால் அதாவது பார்ப்பனர்களால் அசுரர் என்றும் இராட்சசர் என்றும் இன்னும் பல பெயர்களாலும் இழிவாக எண்ணி அழைக்கப்பட்டனர்.

இது வரலாற்று ஆதாரமுடையது. ஆரியர்களால் விரும்பி அருந்தி வரப்பட்ட சுராபானம் என்ற மதுவை மறுத்தவர்களே அசுரர் என அழைக்கப்பட்டனர். சுராபானம் என்ற பானத்தை அருந்தியவர்களே சுரர் அதாவது தேவர் - ஆரியர் - பார்ப்பனர்.

மகிடாசுரன் என்ற திராவிட மன்னனுக்கும் ஆரிய மன்னர்களுக்கும் இடையே நடை பெற்ற போராட்டங் களுக்காகவே இந் நவராத்திரி இருக்க வேண்டும். தேவிகளை அதிலும் பெண்களை விட்டே இவர்கள் தங்கள் காரியத்தைச் சாதித்துள்ளனர். தங்கள் போர் வெற்றிக்காக இம் மூதேவிகளும் இரவுகளில் ஒன்பது இரவுகளில் கொலு விருந்தனரென்றால் பகலில் என்ன செய்தனர்; பகலெல்லாம் படுத்து தூங்கினரோ?

ஆரியர்கள் குருக்கள்களாகவும் மற்றும் பல வழிகளிலும் கூட்டிக் கொடுத்தும், மன்னர்களில் ஒருவருக்கொருவரைக் காட்டிக் கொடுத்தும், அடிமைப் படுத்தியும் பணிய வைத்தும், மன்னர் தம் ஆணைகளாலும் குடி மக்களையும் ஒப்புக் கொள்ள வைத்தும் எல்லோரையும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நம்ப வைத்துள்ளனர்.

இந்த மூதேவிகளுக்கும் ஒன்பது இரவுகள் என்றால் மைசூர் மன்னருக்கு ஒரு இரவு சேர்த்து தசரா! இவர் கடைசிநாளில் யானைமேல் அம் பாரியில் படைகள் புடை சூழ எங்கோ ஓர் மூலையில் அம்பு எய்கிறாராம். இன்னும் மற்ற மன்னர்கள் எப்படியோ?

ஆலயங்கள் பலவற்றில் உலா மூர்த்தி சிலையெடுப்புகள். ஊர் கடைசியிலோ எங்கோ ஓர் மூலையில் அம்பு சேர் வைகள் என்ற பெயரால் விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் இன்னொரு அசுரனும் வன்னி யாசுரன் என்ற பெயரால் குட்டி போடப்பட்டு விடு கிறான். வன்னிமரம் என்ற ஒரு மரத்தின் கிளைகளில் ஒன்றோ அல்லது அதன் தழைக் கொத்தோ சிறிது கொண்டு வந்து கட்டி வைக்கப்பட்டு சாமியின் பிரதிநிதி குருக்கள் ஒருவர் அம்பு எய்கிறார். மனிதன் இறந்தால் மீண்டும் வருவதில்லை; ஆனால் இந்த அசுரன்கள் ஆண்டுக்காண்டு சாமிகளுக்கு எதிரிகளாக வந்து கொண்டே இருக்கின்றனர்.

மற்ற தனி வேடிக்கைகள்

மற்றும் இப்புரட்டாசியில் சனி பிடித்தல், காலையில் நாராயணமூர்த்தி என பக்தி பிச்சையெடுத்தல்கள், திருப்பதி போன்ற மலைகளுக்குச் செல்லல், கரூரில் உள்ள தாந்தோணி மலைக்கு பக்தர் படையெடுப்பு! ஏற்ற பேருந்து வசதி இல்லாத காலத்தில் டிக்கெட் இல்லாத வரும் பக்தகோடிகளால் இரயில்வேயிக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் இந்தச் சனிக்கிழமைகளில் மட்டும் நட்டம் ஏற்படும்.

கேட் கதவுகள் எல்லாவற்றையும் முழுதும் திறந்து விட்டு கரூர் இரயில் நிலைய அலுவலர் பக்த கோடிக் கூட்டத்தைக் கண்டு ஒதுங்கிக் கொள்வார். ஆனால் இப்பொழுது எப்படியோ? நாமக்கல்லுக்கருகில் உள்ள நைனாமலைப் படிகள் நெட்டுக்குத்தானவை. தவறி விழுந்தால் வை குண்டம் நிச்சயம்.

படி வாசல்களுக்கு நெடுக டியூப் லைட்டுகள், பந்த நெருப்பெடுத்து பாரெல்லாம் ஒளி காட்டும் பெருமாள் குடி கொண்டுள்ள நைனாமலைப் படிக்கட்டுகளுக்கு டியூப் லைட்டுகள் ஏன்? இன்னும் நவராத்திரி நகைப்பிற் கிடமானவை என்னென்னவோ?

பா.வீ.சாது

Read more: http://viduthalai.in/page-7/85065.html#ixzz39CFUMjGb

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத் தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப் பற்றில்லாத மரம்போல் - கோடாலிக் கொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் - தானாகவே விழுந்துவிடும்.

Read more: http://viduthalai.in/page-7/85065.html#ixzz39CFdeHHc

தமிழ் ஓவியா said...


ஆரியர் - திராவிடர்


சதா காலமும், பார்ப்பனர்களை, நாம் தூஷிப்பதில்லை -அவசிய முமில்லை. ஒருமுறையைக் கண்டிக் கிறோமே தவிர, தனிப்பட்ட நபர் களையல்ல, மார்வாடிக் கடை என்று கூறும்போது எப்படி அதிக வட்டி வாங்கும் அனை வரையும் அந்தச் சொல் குறிக்கிறதோ அதுபோல, பார்ப்பனீயம் என்று கண்டிக்கும் போது பார்ப்பனர் மட்டுமல்ல, வர்ணாசிரம தர்மத்தை ஆதரிக்கும் பார்ப்ப னரல்லாதாரும் அந்தப் பட்டத்துக்கு உரியவர்கள் ஆகிறார் கள். எனவே பார்ப்பனர்களைத் தூஷிக்கிறோம் என்று எண்ணுவது தவறு.

********************

பார்ப்பனரை ஏன் கண்டிக்கிறோம்?

இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை. ஆனால், எவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்தும்கூட, ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை, பாவனை ஆகியவைகளை, மற்றவர் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியும், உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம்.

இந்தப் போக்கைக் கொண்டுதான். ஆரியர் - திராவிடர் என்று கூறுகிறோம்.

- அண்ணா 23.11.47 திராவிட நாடு கேள்வி பதில் பகுதி

Read more: http://viduthalai.in/page-7/85067.html#ixzz39CFnPudE

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன் மொழிகள்

மனிதனுக்கு மானமும் பகுத்தறிவும் இருக்கிறது. அது கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன் படுத்தியே அதிகமான தொல்லைக்குட்பட்டான்.

*********************

கழுதைக்கும் எருமைக்கும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ அதே புத்திதான் இன்றும் உள்ளது. மனிதனோ, பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப் போல் பகுத்தறிவற்றவனாக இருக்கக் காரணம் என்ன? அவனது அறிவு வளர்ச்சியினைத் தடைப்படுத்திச் சாஸ்திரங்களையும், கடவுளையும், மதத்தையும், முன்னோர்கள் நடப்பையும் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள்.

*********************

நமக்கு அறிவில்லை என்று எவரும் சொல்லிவிட முடியாது. தீட்சண்ய புத்தியும், கூர்மையான அறிவுமுடையவர்கள் என்பது நம் பழங்கலைகளையும் அவற்றின் திறனையுங் கண்டாலே தெரியும்.

ஆனால், நம் மக்களின் அறிவு மேலும் மேலும் பண்பட்டு வளர முடியாமல், கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகளின் பேரால் அடக்கப்பட்டு விட்டது; சிந்திக்கும் உரிமையே அற்ற சிறிய மனிதர்களாக நம்மைச் செய்து விட்டது.

இந்தப்படியான சிந்திக்கும் தன்மையற்ற மக்களை மாற்றி அவர்களைச் சிந்திக்கத் தூண்டிச் சிந்தனைப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-7/85067.html#ixzz39CFyc6ei