Search This Blog

13.7.14

சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் ஏன் செய்கின்றோம்?


சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் ஏன் செய்கின்றோம்?

அக்கிராசனரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!

 எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி செலுத்துகிறோமாயினும் எங்கள் வரவைப்பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய்திருப்பதாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று பிரயாசைப்பட்டு இம்மகாநாட்டிற்கு அனுமதி பெற்றதாகவும் தெரிகின்றது. எந்த இயக்கமானாலும் எதிர்க் கிளர்ச்சி இருந்தால்தான் ஒழுங்காகவும், பலமான அமைப்பாகவும் விளக்கமாகவும் முன்னேற்றமடையும்.

உதாரணமாக இவ்வளவு கிளர்ச்சியாவது இங்கு நடத்திருக்கா விட்டால் அதிசயமாகத் தகுந்த இவ்வளவு பெரிய கூட்டம் இங்குக் கூடியிருக்க முடியுமா? எங்கள் வரவில் இவ்வூர் பொது ஜனங்களுக்கு இவ்வளவு கவனம் ஏற்பட முடியுமா? என்று பாருங்கள்.  அநேகமாக நாங்கள் போகின்ற ஊர்களில் எல்லாம் எதிர்க்கிளர்ச்சியே எங்கள் பிரச்சாரத்திற்கு மொத்த அனுகூலமளித்து வருகின்றது.


நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்கு எங்களுக்காக செய்யப்படும் மரியாதைகளில் முதலாவது அங்குள்ள கோவில்களை, அடைத்துப் போலீஸ் காவல் போடுவதும் நாஸ்திகர்கள் வருகிறார்கள் என்று ஊருக்குள் பிரச்சாரம் செய்து  எங்கள் கூட்டத்தை நடத்த விடக்கூடாதென்று அரசாங்கத்திற்கு மனுச் செய்து கொள்ளுவதுமேயாகும்.


இந்தக் காரியங்கள் செய்யப் படுவதால் நாங்கள் வரும் விஷயங்கள் தானாகவே பரவி பொது ஜனங்கள் அப்படிப்பட்ட ஆட்கள் அதாவது நாஸ்திகர்கள்  என்பவர்கள் எப்படியிருப்பார்கள்? அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பார்க்கலாம், கேட்கலாம் என்பதாகவே அநேகர் வந்து எங்களைப் பார்க்கவும் நாங்கள் சொல் வதைக் கேட்கவும் ஏற்பட்டு விடுகின்றது.  இந்தக் காரணங்களால் எதிர்க்கிளர்ச்சிக் காரர்களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.


உதாரணமாக, மலேயா நாட்டுக்கு நாங்கள் எவ்வளவோ இரகசியமாகப் போயும் அங்குள்ள எதிர்க் கிளர்ச்சிக்காரர் களின் செய்கைகளின் பயனாய் மலேயா வில் இதுவரை பிரச்சாரம் செய்ய எந்த இந்தியருக்கும் ஏற்பட்டிராத பெரிய சௌகரியங்கள் எங்களுக்கு ஏற்பட்டது.


அங்கு சுமார் 150 பேர்கள் ஒரு மகஜருடன் போலீஸ் இலாகா தலைமை அதிகாரியைப் போய்ப் பார்த்து ஈரோடு இராமசாமியையும் அவர்கள் கோஷ்டியாரையும், மலாய் நாட்டுக்குள் விட்டால் பெரிய கலகங்கள் நடந்து விடுமென்று தெரிவித்தார்களாம்.  அதற்கவ்வதிகாரியானவர் அவ்வளவு பெரிய கலகங்கள் நடக்கும் படியாக அவர்கள் என்ன விதத்தில் அவ்வளவு கெட்டகாரியம் செய்வார்கள்? என்று கேட்டாராம்.


அதற்கவர்கள் எங்கள் சீதையைக் குற்றம் சொல்லுகிறார்கள் என்று சொன்னார்களாம், அதற்கவ்வதிகாரி சீதை என்றால் என்ன? என்று கேட்டாராம், அதற்கவர்கள் சீதையென்றால் எங்கள் கடவுளின் மனைவி என்று சொன்னார் களாம். அதற்கு அவ்வதிகாரி எங்களிலும் சிலர் இயேசுநாதரின் தாயாராகிய மரியம் மாளைச் குறித்துப் பேசுவதில் சிலர் பலவித சந்தேகத்தைக் கிளப்பி விடுகின்றார்கள்.


அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? வரு பவர்கள் சீதையைக் குற்றம் சொன்னால் நீங்கள் ஒரு கூட்டம் போட்டு அவர்கள் சொல்லுகிறபடி சீதை குற்றவாளி அல்ல வென்று சொல்லுங்கள்.  அதற்கு தைரிய மும் ஆதாரமும் இருந்தால் பயப்படத் தேவையில்லை என்று சொல்லி வருகின்ற வர்களின் சுற்றுப்பிரயாணத்தை நடத்திக் கொடுக்க வேண்டிய வேலை தங்களு டையது என்றுச் சொல்லி மகஜர்காரர்களை எச்சரிக்கை செய்தனுப்பினாராம்.
ஆகவே, அதுபோலவே இங்கும் எங்கள் பிரச்சாரத் திற்கு சில மக்கள் பயந்து விட்டது  ஆச்சரிய மாக இருக்கின்றது. 

 நிற்க, சகோதரர்களே, என் வார்த்தைகளையெல்லாம் நிராகரித்து விட உங்களுக்குப் பூரண சுதந்திரமுண்டு. அதை மறுத்துப் பேசவும் உங்களுக்குச் சுதந்திரமுண்டு.  ஒருவருடைய அபிப்பிரா யத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது நியாயமாகாது.  என்பதும் எனக்குத் தெரியும்.
ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல எனக்கு சுதந்திரமுண்டு என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும்.  அதைத் தடுப்பது என்பது ஒருக்காலும் மனித தர்மத்தில் சேர்ந்ததாகாது.  நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்ற வர்கள். சுதந்திரத்தைக் கெடுப்பது என்று தான் பலர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்.  இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகாது.


எங்களுக்காக ஏன் ஒருவர் பயப்படவேண்டும்? நாங்களும் மனிதர்கள் தானே? எந்த மனிதனுடைய, எந்த அரசாங்கத்தினுடைய தனிப்பட்ட காரியங்கள் எதிலும் நாங்கள் பிரவேசிப் பதில்லையே. பொதுப்பட்ட காரியங்களில், பொது ஜனங்கள், நன்மை தீமைகளில் மற்ற எல்லோருக்கும் உள்ளது போன்ற உரிமை எங்களுக்கும் உண்டு என்பதில் நாங்கள் சிறிதும் விட்டுக்கொடுக்க இசையோம்.


எங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறுபட்ட வர்கள் தக்க பதிலையும், ஆதாரத்தையும் உடையவர்களானால் நாங்கள் பேசுவதைத் தடுக்கவோ, எங்கள் மீது ஆத்திரப்படவோ சற்றும் அவசியம் ஏற்படாது.  ஆதாரமற்ற வர்கள் தந்திரத்தில் வாழ்பவர்கள்.


அமட் டலிலும் மிரட்டலிலும் மக்களை ஏமாற்றி காலம் கழிப்பவர்கள் முதலானவர்களுக்குத் தான் எங்களைப்பற்றிய பயம் ஏற்படக் கூடும். கோபமும் ஆத்திரமும் வரக்கூடும். ஆனால் அதற்காக நாங்கள் என்ன செய் வது? அஸ்திவாரமற்றவைகளும் புரட்டு களும் என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்குச் சாய்ந்து விழுந்துதான் தீரும்.


அன்றியும் அதைக் காப்பாற்ற முயற்சிக் கும் நாளெல்லாம் வீண் நாளாகத்தான் முடியும். வெகு நாளைப்புரட்டு என்பதா லேயே அல்லது அதிகக் கோபக்காரர்கள், முரடர்கள், தந்திர சாலிகள் ஆதரிக்கிற அபிப்பிராயங்கள் என்பதாலேயே எதுவும் நிலைத்திருக்க முடியாது.


அவையெல்லாம் இனிப் பலிக்கவும் பலிக்காது.  சுதந்திர உணர்ச்சி என்பது இந்த தேசத்தில் இல்லையானாலும் சுற்றுப் பக்க தேசங்களில் இருந்து வந்து புகுந்து விட்டது. இனி அதை வெளியில் தள்ளி விடமுடியாது.  ஆதலால் தடைப்படுத்த முயற்சிப் பதிலோ, கோபிப் பதிலோ பயனில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


சகோதரர்களே, நாங்கள் இங்கு எந்த விதமான மதப்பிரச்சாரம் செய்யவோ, ஏதாவது ஒரு மதத்தைச் குற்றம் சொல் லவோ ஒரு தனி மதத்தை ஸ்தாபிக்கவோ வரவில்லை. அதுபோலே கடவுள் விஷயத் திலும் கடவுள் உண்டு.  இல்லை என்று சொல்லவோ அதன் குணத்தில், சக்தியில், விவகாரம் செய்யவோ, அதற்கும், மக்க ளுக்கும் மதக்காரர்களுக்கு முள்ள சம்பந்தத்தைப் பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் விவாதிக்கவோ நாங்கள் இங்கு வரவில்லை.


மக்களுக்கு அறிவு என்பது உண்டு அல்லவா அதன் பயன் என்ன? சக்தி என்ன? வாழ்க்கையின் சம்பவங் களையும் உலகத் தோற்றங்களையும் அந்நியர் உபதேசங்களையும் பற்றி உங்கள் அனுபவமும் அறிவும் என்ன சொல்லு கின்றது? உங்கள் சொந்த பகுத்தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து எதையும் பரீட்சித்துப் பாருங்கள் என்று சொல்லத்தான் வந்திருக்கின்றோம்.
இதில் என்ன பிசகு ஏற்பட்டு விடக் கூடும் என்பதும் எங் களுக்கு விளங்கவில்லை.  இதற்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும் என்பதும் விளங்கவில்லை.  உங்கள் சொந்த அறி வுக்கு மதிப்புக் கொடுக்கவும். அதற்கு சுதந்திரம் கொடுக்கவும் பயந்தால் மிருகராசிகளை விட மனிதராசி உயர்ந்தது என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? மக்களை முட்டாள்தனமும், முரட்டுப் பலமும் ஆட்சி செய்யப்பட வேண்டுமா? அல்லது அறிவு நியாயமும் ஆட்சி செய்ய வேண்டுமா? என்பதுதான் எங்கள் கேள்வி.
மனிதனின் அறிவுக்கு மேற்பட்ட தொன்று உண்டு என்று ஒன்றைக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க இடம் கொடுக்காமல் நம்பித் தானாக வேண்டும் என்று வலியுறுத்தி அறிவைக் கட்டிப் போட்டு நாசமாக்கி, மனித சமுகம் முழுவதையுமே அடிமைப்படுத்திவிட்டதாலேயே இன்று மனித சமுகம் இவ்வளவு தொல்லைக்கும், கவலைக்கும் ஆளாகி ஆகாரத்திற்கே திண்டாட வேண்டிய நிலைமையேற்பட்டு விட்டது.


சகோதரர்களே! அசரீரி சொல்லிற்று, அருள் சொல்லிற்று ஆகாய வாணி சொன்னாள், ஆண்டவன் சொன்னான் என்று ஏதோ ஒன்றைக் கற்பித்து எழுதி வைத்துக்கொண்டு அதன்படி நடந்தாக வேண்டும் என்று மக்களைக் கட்டாயப் படுத்திக் கொண்டு இருப்பதும் அவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றியாவது சந்தேகப் பட்டு விவரம் கேட்டால் அவர் மீது கோபிப்பதும், வைவதும், பழி சுமத்துவதும், கலகமாகி விடுமென்று மிரட்டுவதுமான காரி யங்கள் எப்படி மனிதத் தன்மையானதும் நியாயமானதுமானவைகள் ஆகும்.
ஆண்டவன் சொன்னதானால், அருள் சொன்னதானால், அசரீரி சொன்னதானால். ஆகாய வாணி சொன்னதானால் அதற்குப் புஸ்தகம் எதற்கு? ஒருவருக்கு மற்றொருவர் சொல்லுவதெதற்கு? காதில் உபதேசிப்ப தெதற்கு? தத்துவார்த்தங்கள் எதற்கு? அறிமுகப்படுத்துவதெதற்கு? என்பவை களை மக்கள் சிறிதும் யோசிப்பதில்லை.  ஏதாவது ஒன்றை ஒருவன் ஆண்டவன் சொன்னான் என்று சொல்லி விட்டால், ஆண்டவன் எப்படி சொன்னான். ஆண்ட வன் சொன்னதாக யார் சொன்னார் என்று கூடக் கேட்கப் படாதென்கிறார்கள்.


தப்பித் தவறி யாராவது கேட்டு விட்டால், வசவும், பழியும், மிரட்டலும்தான் பதிலாகயிருக்கின் றனவேயொழிய சமாதானமான திருப்தி யான பதிலென்பதே கிடையாது. ஆகவே மனிதர்கள் முதலாவதாக இந்த இடத்தில் தங்களது அறிவைப் பயன்படுத்த சுதந்திரம் பெற்றாலல்லது ஒரு நாளும் மனித சமுகம் முற்போக்கடைவதற்கே இடமில்லாது போய்விடும். ஏனெனில் உலகத்தில் பலரைச் சிலர் ஏமாற்றஆதிக்கம் செலுத்த தங்கள் தங்கள் புரட்டுகளையும், பித்தலாட் டங்களையும் ஆரம்பித்த இடமே இந்த இடம்தான் என்று நாம் காணுவதால் அந்தப் புரட்டை முதலில் வெளியாக்கி விட வேண் டும் என்று அபிப்பிராயப்படுகின்றோம்.


ஆதலால் தான் அந்த இடத்தை நன்றாய் பரீட்சிக்க வேண்டுமென்று மேலும் மேலும் வலியுறுத்துகின்றோம்.  இன்று உலகத்தி லுள்ள பெரும்பான்மை மதக்காரர்கள் தங்கள் தங்களுக்குத் தனித்தனியாக பற்பல விதமான கொள்கைகளையும், வாசகங் களையும் வைத்துக் கொண்டு அவர்கள் அத்தனைப் பேரும் தங்கள் தங்கள் கொள் கைகளையும், வாசகங்களையும் ஆண்ட வன் சொன்னான் என்றே சொல்லி சாதித்துக்கொண்டு அவற்றை பாமர மக்களுக்குள் பலவந்தமாக செலுத்தி விட்டார்கள். அதனாலேயே மக்களுக்குள்  பற்பல பிரிவுகளும், மனப்பான்மைகளும், அபிப்பிராயங்களும் காணப்படுகின்றன.


இவ்வபிப்பிராய பேதங்கள் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதோடு ஒருவரை யொருவர் சந்தேகிக்கவும், வெறுக்கவும் அலட்சியமாய்க் கருதவும், எதிர்க்கவும், வஞ்சிக்கவும், அடக்கி ஆளவும் பயன் படுகின்றன.  எந்த மார்க்கமாக என்று பார்த்தால் ஒவ்வொரு மதக்காரனும் தன்தன் மதத்தைச் சேர்ந்த அவதாரத்தின் மூலம், தூதனின் மூலம், ஜோதியின் மூலம் தங்கள் ஆண்டவன் சொல்லியது தான் மேலானதென்றும், சத்தியமான தென்றும் சொல்லிக்  கொண்டு அதை நிலை நிறுத்த மற்றவர்களை நம்பும்படி கட்டாயப்படுத்த முயற்சிப்பதன் மூலமேயாகும்.


இந்த உணர்ச்சியையும் செய்கையையும் உலகத் தில் செல்வாக்குப் பெற்றிருக்க இடம் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை மனித சமுகத்திற்குள் ஒரு வித பொதுவான  ஒற் றுமையும் ஓய்வும் ஏற்படுவதற்கு இடமே இல்லை.  ஆகையால் தான் இந்த இடத் திலேயே மனிதன் முதன் முதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமா னது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.


நாம் இப்போது எந்த மதக்காரர்களு டைய கொள்கைகளையும் உபதேச வாசகங்களையும் எடுத்துக் கொண்டு அவை சரியா? தப்பா? என்பதாகவோ ஆண்டவன் சொல்லா என்பதாகவோ வாதாட வரவில்லை. நம்முடைய வேலை யும் கவலையும் அவையல்ல, மற்றென்ன வெனில் எல்லா மதக்காரர்களும் பெரிதும் ஒரே ஆண்டவன்தான் உண்டென்று ஒப்புக் கொள்ளுகின்றவர்களானதால்  ஒவ்வொரு வரும் தங்கள் தங்கள் கொள் கைகளையும், உபதேச வாசகங்களையும் அந்த ஆண்ட வனே சொன்னான் என்று சொல்லுவதால் இவர்களுக்குள் எந்த மதக்காரர்கள் சொல்லுவது உண்மை யென்றும், எந்த அவதாரப் புருஷர்கள் எந்த தூதர்கள் முத லானவர்கள்  சொன்னது உண்மையாகியி ருக்கக் கூடியது என்றும் கண்டுபிடிப்பது எப்படி? இதற்கு என்ன பரீட்சை என்ப வையேயாகும்.
மேலும் இவைகளை எல்லாம் ஆண் டவன் சொன்னான் என்று நம்பும்படி கட்டாயப்படுத்துவதால் ஆண்டவன் எந்த ரூபத்தில் எந்த நிலையில் எங்கு இருந்து கொண்டு என்ன பாஷையில் சொன்னார் என்பதில் எந்த மதக்காரர் உண்மை சொல் லுகின்றார்கள் என்று கண்டு பிடிப்பதற்குமே யாகும்.
மேலும் ஒரு ஆண்டவன் என்பவர் தான் சொல்ல வேண்டுமென்கின்ற கொள்கையையோ, உபதேசத்தையோ மற்றும் ஏதோ ஒன் றையோ தானே ஒருவர் மூலம் சொல்லி பிறகு மற்றவர்களால் எடுத்துக் சொல்லும்படி செய்த பிறகு அவை விவாதத்திற்கும் உள்ளாயிருப்பதைப் பார்க்கும் போது உண்மையிலேயே அவை ஆண்டவனால், சொல்லப்பட்டிருந்தால் அவைகள் ஒவ்வொரு மனிதனுடைய காதிலும் விழும்படியாகவோ அல்லது மனதிலும் பதியும் படியாகவோ அல்லது இப்பொழுதாவது அவைகளை ஆண் டவன் தான் சொன்னான் என்று கருதும் படியாகவோ அல்லது குறைந்தளவு விவாதமாவதில்லாதபடியாகவோ ஏன் அந்த ஆண்டவனால் செய்யமுடிய வில்லை? என்று இது ஆண்டவனால் முடியாத காரியமா என்றும் யோசிக்கப் புகுந்தால் அதிலிருந்தே அவைகள் எல்லாம் ஆண்டவனால் சொல்லப் பட்டது என்று சொல்லப்படுவது உண்மையாயிருக்க முடியுமா என்னும் சந்தேகங்கள் தோன்று வதற்கு என்ன சமாதானம் சொல்லுவது என்பதேயாகும். அன்றியும் இவற்றை யெல்லாம் ஆண்டவன் சொன்னார் என்று கண்மூடித் தனமாய் நம்புவது அவசியமா? அல்லது ஆண்டவன் சொல்லி இருந்தால் நமக்கு ஏன் தெரிந்திருக்கக் கூடாது என்று எண்ணி ஆராய்ந்து பார்ப்பது அவசியமா என்பதுமாகும்.


நிற்க. இப்படிப்பட்ட ஒரு ஆண்டவன் ஏன் மனிதனின் அறிவுக்கு எட்டாதவனாகி விட்டான்? என்பதற்கு இதுவரை யார் என்ன சமாதானம் சொன்னார்கள்? சர்வசக்தியும், சர்வ வியாபகமும் உள்ள ஆண்டவன் ஒரு மனிதனின் அறிவுக்கும், மனதிற்கும், கண்ணிற்கும் தென்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யார் யோசித்துப் பார்த்து சமாதானம் கூறுகிறார்கள்? ஏதோ ஒரு ஆண்டவன் இருக்கின்றான் என்று மக்களை நம்பச் செய்ய வேண்டுமென்பதற்காகவோ, ஒரு வாசகத்தை ஆண்டவன் சொன்னான் என்று நம்பச் செய்வதற்காகவோ உலகத் திலுள்ள மக்களின் அறிவையும், ஆராய்ச் சியையும், சுதந்திரத்தையும், இம்மாதிரி தடைப்படுத்தி விடுவதா? என்று கேட் கின்றோம்.


இதற்காக மனிதனின் இயற்கை ஞானத்தை தலை எடுக்க வொட்டாமல் அழுத்திவைத்து விடுவதா? என்றும் கேட்கின்றோம்.


மனிதர்கள் சுதந்திரமுடையவர்களாக வேண்டுமானால் அவரவர்களுடைய அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்.  பிறகு அவரவர்கள் அபிப்பிராயத்தைத் தாராள மாய் வெளியிலெடுத்துச் சொல்ல இட மளிக்க வேண்டும்.  தனக்கே விளங்காத தையும், மற்றொருவனுக்கு விளங்கவைக்க முடியாததையும் நம்பும்படியோ, ஒப்புக் கொள்ளும் படியோ எதிர்ப்பார்ப்பதும் யாரையும் நிர்ப்பந்தப்படுத்துவதும் கண்டிப்பாய் கூடவே கூடாத  காரியமாகும்.


அது போலவே உலக மனிதர்கள் ஒற்றுமைப்பட்டு சகோதரப் பாவம் அடைய வேண்டுமானால் முதலில் ஆண்டவர்கள் தொல்லையும், மதக்காரர்களின் தொல் லையும் அவர்களின் உபதேசங்களின் தொல்லையும் ஒழிந்தாக வேண்டும் .  இதற்கு ஒரு மார்க்கம் செய்தாக வேண்டும்.  இது செய்யப்படாத வரை மனிதன் காட்டு மிராண்டித் தனத்திலிருந்து மனிதத் தன் மைக்கு ஒருக்காலமும் திரும்பமாட்டான்.


                   -------------------01.03.1931 புதுச்சேரியில் சுயமரியாதை மகாநாட்டில்- தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு - "குடிஅரசு" - சொற்பொழிவு - 08.03.1931

4 comments:

தமிழ் ஓவியா said...


பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் யாரும் தாழ்ந்து விடவில்லை, வீழ்ந்துவிடவில்லை, பயப்பட வேண்டிய அவசியம் இல்லை


மா.தமிழரசி- சு.அரவிந்தன் மணவிழாவை நடத்தி வைத்து தமிழர் தலைவர் வாழ்த்துரை

சென்னை, ஜூலை 13- திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பின் வடக்கு மண்டலச் செயலாளர் மு.மாறன் - ஹேமலதா இல்லத்திருமண விழாவாகிய மா.தமிழரசி- சு.அரவிந்தன் ஆகியோரின் மணவிழாவை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கனி மாடசாமி மாளிகையில் 10-7-2014 மாலையில் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி நடத்திவைத்து சிறப்புரை ஆற்றினார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வரவேற்புரை ஆற்றி, விழாவை ஒருங்கிணைத்து சிறப்பாக வழங்கினார். விழாவில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அவைத் தலைவர் கயல்.தினகரன், திரைப்பட இயக்குநர் சுப.முத்து ராமன், திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மேனாள் மேயர் மா.சுப்பிரமணியன், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். பூ.விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

மணமக்கள் உறுதிமொழி

மணமக்கள் உறுதிமொழி ஏற்கவைத்து, சுயமரியாதைத் திருமணத்தைத் தமிழர் தலைவர், திராவிடர்கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் வடக்கு மண்டலச் செயலாளர் மு.மாறன் நன்றி கூறினார்.

மணவிழாவில் பேசியவர்களில் கயல்.தினகரன், இயக்குநர் சுப.முத்துராமன், திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் என்று அனைவருமே சுயமரியா தைத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்று பெரு மிதத்துடன் தந்தை பெரியாரின் கொள்கை வெற்றியை பறைசாற்றினார்கள்.

எப்போதுமே பேச்சாளராக இருந்தா லும், தோழமையுணர்வில் சளைத்தவர் இல்லை என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தம் இல்லத்து விழாவாக எண்ணி தமிழர் தலைவர் ஆசிரியர் உள்ளிட்ட அனை வரையும் வரவேற்று மகிழ்ந்தார். கயல்.தினகரன் தம் முடைய பேச்சில் அரசியல் இன்றி வாழ்த்துக்களுடன் பேசுமாறு கேட்டுக்கொண்டார்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

ஆனால், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது, தந்தைபெரியார் கூறும்போது, வாழ்த்துவது அல்லது வசைபாடுவது என்பதால் ஏதும் ஆகிவிடாது. அப்படிப்பார்த்தால் என்னை எல்லோரும் வசைபாடித்தான் வருகிறார்கள் என்பார். ஆகவே, பகுத்தறிவை வளர்ப்பதற்கு இதுபோன்ற மேடைகளில் பெரியார் மூன்று மணிநேரத்துக்கும் மேலாகப் பேசி உள்ளார்.

திரைப்படங்களில் சமுதாயப்புரட்சிக்கருத்துக்கள், இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்கள் முன்பெல்லாம் காட்சிகளில் இருக்கும் ஆனால், இப்போது வருகின்ற படங்களில் திருமணக்காட்சிகளில் வைதிகத் திருமணக் காட்சிகளே உள்ளன.

1934ஆம் ஆண்டில் நடைபெற்ற திருமணத்தில் முதல் தாரத்துக்கான வாரிசு போட்ட வழக்கில் சடங்குகள் இல்லாத திருமணம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு இருந்தது. கடந்த ஆண்டில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் நீதிபதி திருமணத்துக்கும், சடங்குகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றுதீர்ப்பு கூறி உள்ளார் என்று தன் பேச்சில் குறிப்பிட்டபோது, பெண்களிடமிருந்து வந்த பலத்த கரவொலி மண்டபத்தை அதிரச்செய்தது.

திமுக மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் சேகர்பாபு பேசும்போது, தமிழர் தலைவர் திராவிடர்கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறித்த நேரத்தில் வந்துவிடுவார் என்பதாலேயே முன்னதாகவே தானும், மேனாள் மேயரும் மண்டபத்துக்கு வந்துவிட்டதாகக் கூறினார். மேனாள் மேயர் மா.சுப்பிர மணியன் பேசும்போது,

சென்னை மாநகராட்சியில் தம்முடைய காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் தங்க மோதிரம் 5500 குழந்தைகளுக்கு அளித்ததாகவும், அதிமுக சட்டடமன்ற உறுப்பினர் சட்டசபையில் எதிர்ப்பு தெரிவித்தபோது, பேராசிரியர் க.அன்பழகன் கூறும்போது, தமிழில் பெயர் சூட்டினால் ஒரு மோதிரம் என்ன ஏழு மோதிரம்கூட கொடுக்கலாம் என்று சட்டசபையில் கூறியதைக்குறிப்பிட்ட அவர் மேலும் கூறும்போது,

அப்போதே ஆயிரம் மோதிரங்களை இருப்பு வைத்துவிட்டு வந்ததாகவும் கூறிய அவர், தற்போது தமிழுக்கு ஒதுக்கப்பட்ட மோதிரங்கள் குப்பைகளைப் பிரிக்கும் செயலுக்கு வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, திரைத் தொழில்நுட்பத்துடன் வாழ்க்கையை இணைத்து ஒலியும், படக்காட்சியும்போல் இணைந்து இருந்தால்தான் வாழ்வு நலமாக இருக்கும். மேலும், சேமிப்பு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது பெண்கள் சுயமரியாதை காக்கவே சுயமரியாதைத்திருமணம் என்று விளக்கமாகப் பேசினார். மணமக்களை உறுதிமொழி ஏற்கச்செய்து மணவிழாவை நடத்திவைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

அவர் பேசும்போது, மாறன்-ஹேமலதா அவர்களு டைய இல்லத்து மணவிழாவை முறைப்படி வரவேற்பாள ராக இருந்து, நம்முடைய பேராசிரியர் சுபவீ அவர்கள் சிறப்பான இணைப்புரைகளோடு நடத்திக்கொண்டிருக் கிறார்கள். நான் இங்கு வரும்போது சுபவீ அவர்கள் வாயி லில் அமைக்கப்பட்டுள்ள பிளெக்ஸ் போர்டை காட்டினார்.

பொதுவாகவே எங்கு பார்த்தாலும் பிளெக்ஸ் பேனர்கள் இருப்பதால் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், சுபவீ குறிப்பிடும்போது அதில் செய்தி இருக்கும் என்று நின்று பார்த்தேன்.

அதில் இப்போது மணமகளாக உள்ள தமிழரசி குழந்தையாக இருந்தபோது நான் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். குழந்தையாக இருந்த தமிழரசியை இப்போது பொறியாளராக, மணவிழாவில் அரவிந்தன் இணையராக பொறுப்பாளியாக, கூட்டாளியாக உள்ளதைப்பார்க்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் அந்தக்குழந்தையையும் பார்க்கிறேன்.

இந்த உருவத்தையும் பார்க்கிறேன். எவ்வளவு பெரிய வளர்ச்சி. அவர்கள் வளர்ந்தமாதிரியே கொள்கையிலும் மாறன் தம்பதியர் வளர்ந்திருக்கிறார்கள். பாராட்டுகிறோம். பலபேர் நாளாகநாளாகக் கொள்கையில் தேய்ந்திருப்பார்கள். ஆனால், இவர்கள் கொள்கையிலே இன்னும் உரமேற்றி இருக்கிறார்கள். இதுதான் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டு.

மாலையில் திருமணம்

இந்தக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் யாரும் தாழ்ந்துவிடவில்லை. வீழ்ந்துவிடவில்லை. யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களுக்காகச் சொல்லுகிறேன். மாலை நேரத்திலே நடத்துகிறார்களே, இப்படிப் பேசுகிறார்களே என்று நினைக்க வேண்டாம். மற்றவர்களை உதாரணம் காட்டுவதைவிட நாங்கள் எங்கள் நிகழ்வுகளை எடுத்துச் சொல்கிறோம்.

என்னுடைய திருமணத்தை தந்தை பெரியாரும், அன்னை மணியம் மையார் அவர்களும், புரட்சிக்கவிஞர் அவர்கள் முன்னி லையிலே நடிகவேள் ராதா போன்றவர்கள் கலந்து கொண்ட நிலையிலே திருச்சியிலே பெரியார் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அய்ந்தரை மணியில்தான் நடத்தினார்கள். காலையில் கிடையாது.

தமிழ் ஓவியா said...


இங்கேயும் பார்த்தீர்கள் என்றால் புரட்சிகரமாக செய்திருக்கிறார்கள். இங்கு பெண்ணுக்கு போட்டது டாலர்தான். இது அற்புத மான, சிறப்பான, புரட்சிகரமான ஒரு நிகழ்ச்சியாகும். இந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் யாரும் வீழ்ந்துவிட மாட்டார்கள்.

பெரியாருடைய தத்துவங்கள் ஒரு வாழ்வியல். சிக்கனம். வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும். பெரியார் அவர்களுடைய அந்த வழிமுறையே சிக்கனத்தோடு வாழுங்கள். எளிமையோடு வாழுங்கள். மற்றவர்கள் பின்பற்றும் அளவுக்கு உங்கள் வாழ்க்கை முறை அமைய வேண்டும் என்று சொன்னார்கள். திருமணத்துக்கு செலவு செய்வதற்குக்கூட ஒரு உச்சவரம்பு வைத்தார். பலபேருக்குத் தெரியாது. பத்துநாள் வருவாய்க்குமேலே திருமண செலவு இருக்கக் கூடாது.

இன்றைக்கு அந்த எண்ணங்கள் வளரவேண்டும். அப்படி இருக்கும்போது, மாறன் ஏன் இவ்வளவு செலவு செய்கிறார் என்று கேட்பீர்கள். ஏனென்றால், நாங்கள் மற்றவர்களை விட எந்தவகையிலும் வீழ்ந்துவிடவில்லை. நாங்களும் வளர்ந்திருக்கிறோம் என்று மற்றவர்கள் புரிந்துகொள் ளுங்கள் என்பது ஒன்று. இரண்டாவது எங்களுக்கு வேறு விழாக்கள் கிடையாது. எல்லாருக்கும் ஒரு சாப்பாடு போட வேண்டும், விருந்து வைக்கவேண்டும் என்பதற்கு இது ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.

இனிமேல் அடுத்தடுத்து இவர்கள் பிள்ளைகள் எல்லாம் இணையத்திலேயே திருமணம் செய்துகொள்வார்கள். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. சிக்கனமாகவும், எளிமையாகவும் நடத்துவார்கள். நாங்கள்தான் நடத்த வேண்டும் என்பதில்லை. தமிழர் இல்லத்து விழாக்களை தமிழர்களே நடத்த வேண்டும். அதுதான் மிக முக்கியம். இந்த மணவிழாவுக்குத் தலைமை ஏற்பதிலே மகிழ்ச்சி அடைகின்றேன்.

தாய்க்கழகம்

மணமகளின் தந்தை மாறன் அவர்கள் திராவிடர் கழகத்திலே இருந்துதான் பல அமைப்புகளுக்கு எல்லாம் சென்றவர். பொதுவாகவே, பலகட்சிகளிலே இன்றைக்கு இருப்பவர்களுக்கு நாள்தோறும் பயிற்றுவிப்பது (daily services) திராவிடர்கழகம்தான். அதிலே ஒன்றும் சந்தேகமே இல்லை.

அப்படி மாறன்அவர்களும் கொள்கைக்கான அர்ப்பணிப்புடன் (mean service) இருப்பவர். அதனால்தான் தாய்க்கழகத்தை அழைத்து சிறப்பாக நடத்தவேண்டும் என்று பிடிவாதமாக இருந்து இதைச் செய்திருக்கிறார். கொள்கை உள்ளத்தோடு இந்த மணவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்காகப் பாராட்டுகள்.

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். இந்த மணமக்களுக்கு மட்டுமல்ல. மாறன் தம்பதிகளுக்கும் சேர்த்துதான். இந்த மணவிழா எப்படி மற்ற மணவிழாக் களைவிட மாறுபட்டது என்று சொல்லும்போது, மாலை நேரத்திலே இந்த மணவிழா நடைபெறுகின்றது. தேதி என்னிடம் கேட்டபோதுகூட எனக்கு வசதியான நாளைக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பல திருமணங்களிலே புரோகிதர், ஜோசியர்களிடம் சென்று திருமண தேதி என்று வாங்கிவிட்டு அப்புறம் எங்களை நெருக்குவார்கள். எங்களுக்கு அதில் சிக்கல்கள் வரும். மாறன் கொள்கைப் பூர்வமாகவே இதைச் செய் திருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது. மாலையிலே திருமணம் நடத்துவது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை. சென்னையைத் தாண்டினால், ஆந்திராவிலே நடக்கக் கூடிய வைதீகத் திருமணம் உட்பட எல்லாமே அங்கு இரவு நேரத்திருமணம்தான். டில்லியில் இரவு பன்னிரண்டு மணிக்கு திருமணம் நடத்துகிறார்கள். ஆகவே, இதைப் பார்த்து பயப்படக்கூடிய சூழ்நிலை இல்லை. இந்தக் குடும்பம் கொள்கைக்குடும்பம்.

தமிழரசி-அரவிந்தன் எடுத்துக்காட்டாக வாழுங்கள். வாழ்க்கைபூராவும் பகுத்தறி வாளராக வாழுங்கள். மூடநம்பிக்கைக்கு எதிரானது தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை இருக்குமிடத்தில் மூடநம்பிக்கை இருக்காது. சுயமரியாதைத் திருமணம் தந்தைபெரியார் உருவாக்கினார்கள். செல்லாது என்ற அந்த நிலையை மாற்றி பேரறிஞர் அண்ணா அதைச் சட்டப்படி செல்லும் என்று ஆக்கினார். அந்தப்பெருமை பேரறிஞர் பெருந்தகை அண்ணாவையே சாரும்.

திமுக ஆட்சி அமைத்ததும் அந்த அமைச்சரவையையே தந்தைபெரியார் அவர்களுக் குக் காணிக்கை என்று சட்டமன்றத்திலே அண்ணா அவர்கள் பிரகடனப்படுத்தி, அவர் இந்த சுயமரியாதைத் திருமணங் களையெல்லாம் நடந்தவைகள், நடக்கின்றவைகள், இனியும் நடக்க இருப்பவை என்று எல்லாத் திருமணங்களும் செல் லும் என்று சட்டம் இயற்றினார்கள். இந்தத் திருமணத்தைப் புகுத்திய பெரியார், சட்டவடிவம் அளித்த அண்ணா ஆகிய இரு தலைவர்களுக்கும் வீர வணக்கம் செலுத்துவோம். -இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசினார்.

Read more: http://viduthalai.in/page-4/83979.html#ixzz37LsFlvqO

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவாளர்கள் என்றும் வெற்றியாளர்கள்....!


ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பெர்ன் நகரத்தினைச் சார்ந்த தோழர் பகுத்தறிவாளர் செல்வபாண்டியன் அவர்தம் குடும்பத்தினர் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் எமரால்ட் ஒளிவண்ணன் அவர்கள் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் உடன் இருந்தார் (9.7.2014, இரவு 8 மணி).

செல்வபாண்டியன் அவர்கள் உலகப் புகழ் பெற்ற மெல்பெர்ன் ஸிமிவிஜி பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பேராசிரியராக பணி புரிகிறார். சமீபத்தில் இப்பல்கலைக்கழகம், சிறந்த பேராசிரியர்கள் என்ற வகையில் செல்வபாண்டியன் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தது.

அவரது மகன் எழிலன் பொறி யியல் துறை மற்றும் மேலாண்மை துறை இவற்றில் ஒரே நேரத்தில் பயின்று பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவ ராக தேர்ச்சிப் பெற்று விருது வாங்கியவர். செல்வ பாண்டியன் அவர்களது வாழ்விணையர் சங்கமித்திரை கணிதப் பேராசிரியராக ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். மகன் எழிலன் அவர்தம் வாழ்விணையர் சாருபிரபா இருவரும் சமீபத்தில் புதுச்சேரியில் மிக எளிமையான முறையில் சுயமரியாதைத் திருமணம் செய்துக் கொண்டனர்.

செல்வபாண்டியன் அவர்களது தந்தையார் திரு. சே.ப.வெங்கடேசன் அவர்கள் வேலூரில், அன்னை ஈ..ரா.மணியம்மையாரிடம் பெரியார் பெருந் தொண்டர் பட்டம் பெற்றவர். மூன்று தலைமுறையாக தந்தை பெரியார்தம் கொள்கைகளைப் போற்றி பின்பற்றி வரும் இக்குடும்பத்தினர் நம் பாராட்டுக்குரியவர்கள்.

பெரியார் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள் என்றும் சோடை போனவர்கள் அல்லர், பெரும் சாதனை யாளர்கள் என்பதற்கு இவர்தம் குடும்பம் இன்னொரு எடுத்துக் காட்டு.
ஆசிரியர், வாழ்த்துகளை தெரிவித்தார். சிறிது நேரம் ஆசிரியரிடம் உரையாடிச் சென்றனர்.

Read more: http://viduthalai.in/page-7/83970.html#ixzz37LtKmExJ