Search This Blog

24.1.14

சுயமரியாதையும் சுயராஜியமும் - பெரியார்

திருச்சி பார்ப்பனரல்லாத வாலிபசங்க இரண்டாவது ஆண்டு விழா

தலைவர் அவர்களே ! சகோதரர்களே!!

“சுயமரியாதையும் சுயராஜியமும்” என்பதுபற்றி பேசுவது இங்குள்ள சிலருக்கு திருப்தியைக் கொடுக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அந்தப்படி அதிருப்திப்படுபவர்களில் அநேகர் நான் பேசிய விஷயங்கள் முழுவதையும் உணர்ந்த பின்பு ஒரு சமயம் திருப்தி அடையக்கூடும் என்று நம்புகின்றேன்.

சிலர் எந்த விதத்திலும் திருப்தி அடைய மாட்டார்கள் என்றாலும் சுயராஜ்யம் என்பதைப் பற்றி மற்றவர்கள் பேசுபவைகளில் இருந்து நான் அடையும் அதிருப்தி அவ்வளவு அவர்களுக்கு நான் பேசுவதில் ஏற்படாது என்றே நினைக்கின்றேன்.

பொதுவாகவே, சுயராஜ்யம், சுயராஜ்யம் என்கின்ற கூப்பாடு நாட்டில் நிறைந்து அந்த வார்த்தைக்கும் ஒருவித செல்வாக்குண்டாக்கப்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில் அதற்கு விரோதமாக ஒருவர் பேசுவது என்பது சற்று கஷ்டமான வேலை என்பதோடு அளவுக்கு மீறின தைரியம் வேண்டி யிருக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் எனக்கு அது அவ்வளவு கஷ்டமாகவோ, அதிக தைரியம் வேண்டிய காரியமாகவோ தெரிய வில்லை. ஏனெனில் எனது அனுபவத்தில் அது மிக சாதாரண விஷயமாகவே தோன்று கிறது. ஆனால் கேட்பவர்களுக்கு ஏதாவது மன வருத்தம் உண்டாகலாமே என்கின்ற எண்ணம் மாத்திரம் சற்று தயங்கச் செய்கின்றது. இருந்த போதிலும் யாரையும் நான் சொல்லுவதை எல்லாம் அப்படியே ஒப்புக்கொள்ளும்படி கேட்கப்போவதில்லை. அன்றியும், நான் சொல்லுவ தெல்லாம் சரியாகவே இருக்குமென்று கண்மூடித்தனமாய் நம்புங்கள் என்றும் உங்களுக்குச் சொல்லுவதில்லை. என் அபிப்பிராயத்தைச் சொல்லுகிறேன். அதை உங்கள் அபிப்பிராயங்களோடு வைத்து ஒத்துப் பார்த்து சரி எது, தப்பு எது என்பதை உணர்ந்து நீங்கள் உணர்ந்தபடி நடவுங் கள் என்றுதான் சொல்லுகின்றேன்.

ஆதலால் நான் சொல்லுவதில் யாருக்கும் எவ்வித கெடுதி ஏற்படவோ, சங்கடம் ஏற்படவோ இடமிருக்காது. மனிதன் பொதுவாகவே எவ்வித அபிப்பிராயங்களையும் கேட்பதற்கும் தெரிவதற்கும் ஒரு வித ஊக்கம் உடையவனாக இருக்க வேண்டும். இல்லை யானால் மனிதன் உண்மையைக் கண்டு பிடிக்கவோ, அறிவு பெறவோ, முன்னேற்றமடையவோ முடியாது.

அன்றியும் நமது சொந்த அறிவில் நமக்குப் போதிய தைரிய மிருந்தால் யார் என்ன சொன்னாலும் யாரிடம் நாம் எதைக் கேட்டாலும் நமக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடாது. ஆகையால் ஒருவரை பேசாமல் இருக்கச் செய்வது என்பதோ, பேசுவதைக் கூட கேட்காமல் இருக்கச் செய்வது என்பதோ கோழைத்தனமேயாகும்.

ஆகவே நான் சொல்லுவதை விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலை யிலிருந்து கேட்கும்படி கோறுகிறேன்.

சகோதரர்களே! சுயமரியாதை சுயராஜ்யம் என்று சொல்லப்படும் இரண்டு வார்த்தைகளிலும் சுயமரியாதை என்பது நீங்கள் எல்லோரும் பொருள் தெரிந்து அனுபவத்தில் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் பிரயோகித்துவரும் ஒரு உண்மை வார்த்தை என்பதில் உங்கள் யாருக்கும் ஆட்ஷேபணை இருக்காதென்றே கருதுகின்றேன்.

மற்றும் ஒவ்வொரு மனிதனும் அவ்வார்த்தையின் தத்துவத்தை மனதில் பதிய வைத்து தன்னுடைய ஒவ்வொரு எண்ணமும் செய்கையும் அதைப்பொருத்தே இருக்கவேண்டுமென்று கருதுவதையும் உணருகின் றீர்கள். ஆனால் சுயராஜ்யம் என்னும் பதமோ சமீபகாலத்தில் உண்டாக்கப் பட்டதான ஒரு வார்த்தையேயாகும்.

எதுபோலவெனில் இந்து மதம் என்பதாக ஒரு வார்த்தை எப்படி சமீப காலத்தில் கற்பிக்கப்பட்டு அதற்கு ஒரு கருத்தில்லாமலும், அருத்தமில்லா மலும் வார்த்தை அளவில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றதோ அதுபோலவே தான் சுயராஜ்யம் என்னும் ஒரு வார்த்தை கற்பிக்கப்பட்டு அருத்த மில்லா மலும், கருத்தில்லாமலும் வெறும் வாய்வார்த் தையில் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற வார்த்தையாகும். ஆனால் இந்த வார்த்தைக்கு அருத்தமும் கருத்துமில்லாமல் போனாலும் “சுயராஜியமே எனது பிறப்புரிமை” என்று சொல்லப்படுவதிலும் அதற்கே எல்லா முக்கியஸ்தானமும் கொடுக்கப்படு வதிலும் அதாவது மேலே குறிப்பிட்ட இந்து மதத்திற்கு பிரதானம் கொடுப்பது போலவே கொடுக்கப்பட்டு மிகப்பிரமாதப் படுத்தப்பட்டு அதற்காகப் பெரிய கிளர்ச்சியும் செய்யப்பட்டு வருகின்றது. பாமர மக்களுக்கு உலகக்கல்வியும் பகுத்தறிவு ஞானமும் இல்லாத காரணமே சுயராஜ்யம் என்னும் வார்த்தை மோக்ஷம், கைலாயம் என்னும் வார்த்தையைவிட மிக்க விளம்பரமும் மக்களின் கவர்ச்சியும் பெற்று விட்டது. இவ்வளவு மாத்திரம் அல்லாமல் “சுயராஜியம் கடவுள் யெத்தனத்தாலும் கடவுள் சித்தத்தாலும் அடையப் படவேண்டியது” என்றும் அதன் சர்வாதிகாரியான திரு.காந்தி அவர்களால் சொல்லப்படுவதாகி இனி அதற்காக வேறு கடவுள் தயவை எதிர்பார்த்து அர்ச்சனைகள் பிரார்த்தனை கள் செய்யப்பட வேண்டியதாகவுமாய்விட்டது. ஆனால் சுயமரியாதைக்கு அந்தக் கடவுள் தயவு தேவையில்லை என்ப தோடு, அந்தக் கடவுளைப் பற்றிய கவலையும் வேண்டியதில்லை என்று சொல்வதோடு சகலமும் சுய முயற்சியினாலேயே ஆக வேண்டும் என்றும் சொல்லப்படுவதாகும்.

அதுமாத்திரமல்லாமல் சுயமுயற்சியை விட்டு கடவுள் தயவுக்கும், கடவுள் செயலுக்கும் இதுவரை எதிர்பார்த்திருந்ததின் பலனே நமது நாட்டுக்கு இன்று சுயமரியாதை இவ்வளவு இன்றியமையாத அவசியமாய் போய் விட்டதென்றும் அது சொல்லுகின்றது.

நிற்க, இன்றைய தினம் கருத்தில்லாமல் கற்பிக்கப்பட்டிருக்கும் சுயராஜியம் என்னும் போலி வார்த்தைக்கு ஆதாரமாகப் பல காரணங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அவை என்னவெனில்,

“இந்த நாட்டு மக்களுக்கு கல்வியில்லை, செல்வமில்லை, தொழிலில்லை மற்றும் அநேக குறைகளிருக்கின்றன. இதற்கு எல்லாம் காரணம் சுயராஜியமில்லாததே. ஆதலால் சுயராஜியம் சம்பாதிக்க வேண்டும்” என்பதாகச் சொல்லப்பட்டு பாமர மக்களை நம்பச் செய்து பட்டினி கிடப்பவர்களையும் வேலையில்லாமல் திண்டாடுவோரையும் சிறு பிள்ளைகளையும் சோம்பேரிக் கூட்டங்களால் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்யப்படுகின்றது. ஆனால் நான் இவற்றிற்கு அதாவது கல்வி, செல்வம்,தொழில் முதலாகியவை நமது நாட்டில் இல்லை என்பதற்கும் இவை மாத்திரம் இல்லாமல் மற்றும் அறிவு, ஆராய்ச்சி, முற்போக்கு, ஈவு, இரக்கம், ஒழுக்கம், நியாயம், நீதி, மனிதத்தன்மை முதலாகியவைகூட இல்லாமல் போனதற்கும் நமது மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி இல்லா மல் போனதே காரணம் என்று சொல்வதோடு, சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்கி மேல்கண்ட சாதனங்களை மக்கள் அடையச் செய்யும் பாதை களை அடைக்கவே “சுயராஜிய முயற்சி” என்பது புதிதாகக் கற்பிக்கப்பட்டி ருக்கின்றது என்றும் நான் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அன்றியும், சுயராஜிய முயற்சி என்பது வெரும் “வெள்ளைக்காரனைப் பற்றி வசை புராணம் பாடுவதன் மூலமே அவனுக்கு கஷ்டத்தை ஏற்படுத்த வேண்டு மென்பதின் மூலமே நமது கஷ்டமெல்லாம் நீங்கி விடும்” என்று சொல்லப் பட்டு வருவதோடு இதுவரை அப்படியே செய்யப் பட்டும் வரப்படுகிறது.

ஆனால் சுயமரியாதை இயக்கம் சுயராஜிய முயற்சியைப்போல் எல்லாப் பொறுப்பையும் வெள்ளைக்காரன் மீது சுமத்தி அவனைப் பற்றிப் பேசுவதிலேயே காலம் கழித்து அவனுக்குக் கஷ்டம் கொடுப்பதிலேயே நமது ஊக்கத்தையும், முயற்சியையும் செலவழிப்பதில் கவலை கொள்ளு வதில்லை. ஆனால் அவர்களது(வெள்ளைக்காரர்களது) அக்கிரமத்திற் காதாரமானதும், இடங்கொடுப்பதும், கொடுத்துக்கொண்டு இருப்பதானதுமான விஷயம் எது - யாரால்? என்று கண்டுபிடித்து அதாவது அந்த அக்கிரமங் களுக்கு எது தூண்களாய் இருந்து தாங்கிக் கொண்டிருக்கின்றனவோ அவைகளை பரித்துக் கீழே தள்ளும் வேலையில் ஈடுபடச் செய்கின்றது.

ஆகவே நாட்டில் உள்ள குறைகளை ஒப்புக்கொள்ளுவதில் சுயராஜி யத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக வித்தியாசமில்லை. அதற்கு ஆதாரமான காரணங்களை கண்டு பிடிப்பதிலும் காரணஸ்தர்களாகக் கண்டு பிடிக்கப்பட்டவர்களே தாங்கள் தப்பித்துக் கொள்ள அன்னியர் பேரில் பழி சுமத்துவதையும் மாத்திரம் சுயமரியாதை இயக்கம் நம்பி ஏமாந்து போவ தில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

உதாரணம் வேண்டுமானால் பாருங்கள்.

கல்வியில்லை என்பது வாஸ்தவந்தான், ஆனால் யாருக்குக் கல்வி இல்லை? பார்ப்பனர் ஒழிந்த ஏனையோருக்குதான். அதிலும் பள்ளு, பறை என்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், விவசாயம், கைத்தொழில் ஆகிய வைகள் செய்யும் சரீரப் பிரயாசைப்படும் மக்களுக்குத் தான் கல்வியில் லையே யொழிய வேறென்ன?

ஆனால் பாடுபடாத சோம்பேறிக் கூட்டமான பார்ப்பனர்கள் எல்லோருமே நமது நாட்டில் படித்திருக்கின்றார்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியுமா என்று கேட்கிறேன். இதற்கு வெளைக்காரர் காரணமா - சுயராஜியம் இல்லாதது காரணமா? அல்லது மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியும், அதனால் ஏற்படவேண்டிய பகுத்தறிவு இல்லாததும் காரணமா? என்பதை உங்கள் பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பாருங்கள் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

இன்றைய வெள்ளைக்கார அரசாங்கத்தில் அதாவது சுயராஜிய மில்லாத அரசாங்கத்தில் பார்ப்பனர்கள்தான் படிக்கவேண்டுமென்றாவது, அவர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக்கூடாது என்றாவது, எங்காவது சட்ட மிருக்கின்றதா? அல்லது அவர்களது ஆட்சியில் மற்றவர்கள் படிக்க வசதி செய்யப்படாமலாவது, ஏதாவது சட்டபூர்வமான தடைகள் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள்.

தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் 100க்கு கால்பங்கு கூட படித்தவர்கள் இல்லை. பெண் மக்களில் 100க்கு அரைப் பங்கு கூட படித்தவர்கள் இல்லை. விவசாயம், கைத்தொழில் முதலியவை செய்யும் வகுப்பார்களில் 100க்கு ஒருவர் கூட படித்தவர்கள் இல்லை. ஆனால் பார்ப்பனர்களில் 100க்கு 100 பேர்கள் படித்தவர்களாக இருக்கின்றார்களே. இதற்கு என்ன காரணம் சொல்லுகின்றீர்கள்? என்று கேட்கிறேன். இது சுயராஜியமில்லாததாலா? அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை இல்லாததாலா? என்ற கேள்விக்குத் தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

ஒரு சமயம் பணம் இல்லாததால் பார்ப்பனரல்லாதார் படிக்க முடியவில்லை என்று சொல்ல வருவீர்களானால் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் எப்படி பணம் சேர்ந்தது? அவர்கள் உங்களைவிட அதிகமாகப் பாடுபட்டு பணம் சம்பாதிக்கின்றார்களா? அவர்கள்தான் தங்களையே அடிக்கடி தாங்கள் பிச்சை வாங்கி உண்ணும் ஜாதி என்றும், புரோகிதம் செய்தும், மணி யாட்டியும், தட்சணையும், உபதானமும் பெற்று வயிர் வளர்க்கும் ஜாதி யென்றும் பல தடவை அவர்களே தாராளமாய்ச் சொல்லிக்கொண்டிருக் கிறார்களே! இன்றும் அந்தப்படி தான் பலர் இருந்தும் வருகிறார்களே. இதை நீங்கள் அறியாததா? இப்படி இருக்க அவர்கள் மாத்திரம் எப்படி 100க்கு 100 பேர் படித்தார்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். சுயமரியாதை உணர்ச்சி உண்டாகி பகுத்தறிவு உங்களுக்கு ஏற்பட்டுவிடுமானால்தான் இந்த இரகசியத்தை நீங்கள் சுலபத்தில் கண்டுபிடிக்கமுடியும். மற்றபடி உங்களுக்கு விளங்கவே விளங்காது.

சும்மா வாயில் சுயராஜியம், சுயராஜியம் என்று கூறிக்கொண்டு கொடி யைச் சுமந்துகொண்டு வந்தே மாதரம் என்று பிதற்றித்திரிய வேண்டியதுதான் நமது மக்களின் வேலையாகிவிட்டது. ஆனால் இதனால் என்ன பலன் கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும்? என்கின்ற அறிவு பூஜியமாகிவிட்டது. இன்னமும் நிர்தாட்சன்னியமாய் நான் பேசுவது என்றால் சுயராஜியம் என்பது இருந்த காலத்தில் தான் அதாவது அன்னிய ஆட்சி என்பது இல்லாத காலத்தில்தான் இந்திய மக்களில் இன்னும் அதிகமான எண் ணிக்கை உள்ள மக்கள் தற்குறிகளாய் இருந்திருக்கின்றார்கள். அன்னிய ராஜியம் ஏற்பட்ட பின்னரே “பள்ளு, பறை” தொழிலாளி - பெண்கள் ஆகிய எல்லா வகுப் பாரும் படிக்கலாம் என்கின்ற சட்டமும் அனுமதிப்பும் ஏற்பட்டது. அன்னிய அரசாக்ஷியில் ஏற்பட்ட இந்த சட்டமும் அனுமதியும் கூட இன்று சுயராஜியம் கேட்கும் மக்களாலேயே ஆnக்ஷபிக்கப்பட்டு வருகின்றது. அனேக கிராமங்களில் பள்ளு, பறை பிள்ளைகள் படிக்க சர்க்கார் பணமும் இடமும் கொடுத்தாலும், சுயராஜியம் கேட்கின்ற தேசிய வாதிகள், தேச பக்தர்கள், காங்கிரஸ்வாதிகள் ஆகிய ஜனங்களிலேயே பலர் பள்ளிக்கூடத்தில் உட் காரவோ, பள்ளிக்கூடம் இருக்கும் இடத்திற்கு நடந்து போகும் தெருவையோ அனுமதிப்பது கூட இல்லை. தேசீயவாதி களிலேயே கூட தேசபக்தர் களிலேயே கூட இப்படிப்பட்டவர்கள் இருந்தால் மற்ற மக்களின் ஆnக்ஷ பணை எவ்வளவு இருக்கும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டுமா? என்று கேட்கின்றேன்.

இந்தக் கொடுமையை ஒழிக்க சுயராஜியத்தில் வழி யிருக்கின்றதா? அல்லது சுயமரியாதையில் வழி இருக்கின்றதா? என்று இப்போது யோசித்துப் பாருங்கள். முதலாவது முன்னால் இருந்து வந்த நமது சுயராஜிய அரசாங்கத்தில் ஒரு கூட்டத்தார்தான் படிக்கலாம். மற்றக்கூட்டத்தார் படிக்கக்கூடாது என்று சட்டமிருந்தும் இன்னும் அது நமது மத தர்மமாய் இருப்பதும், அன்னிய ராஜியத்தினாலேயே அவை முழுவதுமாய் தலை காட்டச் செய்யாமல் மறைக்கப்பட்டிருப்பதும் அன்னிய ராஜியம் மறைந்த உடன் அவை அதாவது மததர்மம் என்னும் பேரால் மறுபடியும் தலைதூக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியாதா என்று கேட்கின்றேன்.

நாளைய தினம் இந்த திரு.காந்திக்கே சக்கரவர்த்திப்பட்டம் சூட்டினா லும் இந்த மத தர்மங்கள்அழிக்கப்பட முடியுமா என்று உங்களைக் கேட் கின்றேன். அவரைச்சுற்றித் திரிகின்றவர்கள் யார் என்று பாருங்கள். இந்தக் காந்தியும் அவரது இந்தக் கூட்டமும் நாளைக்கு இந்தத்துறைகளில் ஏதாவது நன்மை செய்யக்கூடுமானால் இன்று அவர்கள் செய்வதை யார் தடுக்கின்றார்கள் என்று நான் கேட்கின்றேன்.

செல்வம்

இதுபோலவே செல்வநிலையும் மிக மோசமானதுதான் என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன். ஆனால், யாருடைய செல்வநிலை மோசமா னது? என்பதை யோசித்துப் பாருங்கள். பாடுபட்டு உழைப்பவர்களுடைய வும், யோக்கியமானவர்களுடையவும், செல்வநிலைதான் மோசமாக இருக் கின்றதே தவிர சோம்பேரிகள், சூக்ஷிக்காரர்கள், வஞ்சக்காரர்கள், கல் மன முடையவர்கள் ஆகியவர்களுடைய செல்வநிலை எங்காவது மோசமாக இருக்கின்றதா என்பதை யோசித்துப் பாருங்கள்.

எந்த நாடாவது சோம்பேரிகள் எல்லாம் மூக்குபிடிக்க சாப்பிட்டு அவர்களது பெண்டு பிள்ளைகள் எல்லாம் மோட்டார் சவாரி செய்து கொண்டு மாட மாளிகைகளில் குடிஇருக்கும்படியான மேன்மையில் இருந் தால் அந்தநாடு செல்வநிலையற்ற நாடு ஆகுமா? அல்லது சுயமரியாதை அற்ற மூடர்களையுடைய நாடு ஆகுமா என்று கேட்கின்றேன்.

இந்த மூடத்தனம் ஒழிய சுயராஜியம் வேண்டுமா? சுயமரியாதை வேண்டுமா? என்று யோசித்துப்பாருங்கள். இன்று உங்களுக்கு சுயராஜியம் வேண்டுமென்கிற ஆட்கள் எல்லாம் பெரிதும் நான் மேலே சொன்ன பாடுபடாமல் சோம்பேரியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிர் வளர்க்கும் வஞ்சகர்களும், அவர்களது கூலிகளும் அல்லாமல் ஏதாவது ஒருவர் இரண்டு கூடை மண் வெட்ட தகுதி உடையவரோ அல்லது ஒரு நாலு பரி தண்ணீர் இறைக்கும் அறிவுள்ளவரோ, அல்லது ஒரு மூட்டை தூக்க தகுதி யுடையவரோ அல்லது ஏதாவது ஒரு சரீரத் தொழில் புரிய யோக்கியதை உடையவராகவா இருக்கின்றார்களா என்பதை தேடிப்பார்த்துக் கண்டு பிடித்துச் சொல்லுங்கள் என்று கேட்கின்றேன். மதத்தின் பேரால் காவி கட்டி சன்னியாசிகளாகி மோக்ஷத்திற்குப் பிரசாரம் செய்யும் சோம்பேரிகளுக்குச் சமமாக மற்றொரு வேஷம் போட்டு சுயராஜியப் பிரசாரம் செய்கிறவர்கள் தவிர பாடுபடுவதற்குத் தகுதி உடையவர்கள் எத்தனை பேர் என்று கேட்கின்றேன். மற்றும் ஒவ்வொரு தனி மனிதனின் வரும்படி இந்த நாட்டில் எவ்வளவு வரையில் இருக்கின்றது பாருங்கள். வருஷம்10 லக்ஷம் 8 லக்ஷம் வரும்படி உள்ள தனி மனிதர்கள் எவ்வளவு பேர்கள் இருக்கின்றார்கள். ஆள் ஒன்றுக்கு 1000, 2000, 5000, 10000 ஏக்கராக்கள் நிலமுடையவர்கள் எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள். இந்த யோக்கியதையில் இவர்கள் இருப்பதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதைகள் இருக்கின்றன? நாட்டுக்கு இவர்களால் என்ன நன்மைகள் இருந்து வருகின்றன? என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இவர்களாவது ஒரு வகையில் நகரும் பிராணிகளாக இருக்கின்றார்கள். மற்றபடி நகராத ஜெந்துக்களாகிய கடவுள்களுக்கு - குழவிக்கல்லுக்கு - எடுத்து உட்காரவைக்கும் - தூக்கிச்செல்லும் ஜீவன்களான பண்டார சன்னதிகள் சங்கராச்சாரியார் ஆகிய நகரா ஜெந்துக்களுக்கு இந்த நாட்டில் எவ்வளவு செல்வம் எவ்வளவு வரும்படி இருக்கின்றது என்பதை சற்று கவனித்துப் பாருங்கள்.

இந்தப்படி செல்வமுள்ள நாட்டின் செல்வநிலை போராது என்று ஒருவன் சொன்னால் அவன் மூடன் அல்லது உண்மையை மறைப்பவன் என்று கருதுவீர்களா அல்லது பெரிய தேசபக்தன் தேசியவாதி என்று கருது வீர்களா என்று கேட்கின்றேன். இந்தப்படியான செல்வநிலை மாற சுயராஜி யம் வேண்டுமா, சுயமரியாதை வேண்டுமா என்பதை இப்பொழுதாவது நன்றாய் யோசித்துப்பாருங்கள். கன்னியாகுமரி முதல் கல்லுருவங்களை எடுத்துக்கொள்ளுங்கள். கன்னியாகுமரி அம்மனுக்கு மாதத்திற்கு 3-நாள் வீட்டிற்கு தூரமாகின்ற சடங்குகள்கூட செய்யப்படுகின்றது. அவ்வளவு சக்தியுள்ளசாமி. ஆனால் அந்த சுத்துப்பிரகாரத்துக்குள், காந்தி, லாலா லஜபதி முதலிய எப்பேர்பட்ட மகாத்மாக்களும் தேசபக்தர்களும், தேசீயவாதிகளும் கூட போகக் கூடாது.

இந்த நிலையில் ஒரு கல்லுக்கு இருக்கும் கௌரவம், செல்வம், கட்ட டம், பூஜை, உற்சவம், வீட்டுக்குத்தூரமான சடங்கு ஆகியவற்றிற்கு செலவு எவ்வளவு என்று கருதுகிறீர்கள். அதற்கு 5 மையில் அடுத்தாப்போல் உள்ள சுசீந்திரத்திலுள்ள ஒரு கல்லுக்கு தினம் 10 மூட்டை அரிசி வேகவைத்துப் படைக்கப்படுகின்றது. அந்தக் கல்லு இருக்கும் இடத்திற்கு கால்மைல் தூரத்திற்கு இப்பால் கூட சில மனிதர்கள் நடக்கக்கூடாது. இதற்கு வருஷந் தோரும் கல்யாணம் முதலிய அநேக ஆடம்பரங்கள் இப்படியே. அதற் கடுத்த வானமாமலை, திருநெல்வேலி, திருச்செந்தூர், தென்திருப்போரை, சங்கரன்கோவில், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராமேஸ்வரம், திருப்பரங்குன்றம், மதுரை, பழனி முதலிய இடங்களின் செல்வமும், செலவையும் பார்த்துவிட்டு அவசர அவசரமாகவே ஸ்ரீரங்கத் திற்கு வந்து பாருங்கள். இந்த கோவில் திருபணி கும்பாபிஷேகம் தைலக்காப்பு உற்சவம், பூஜை, சொத்து, நகை, வாகனம், கட்டடம் ஆகிய வைகளை கணக்குப் பாருங்கள். இதுபோன்ற மற்ற தஞ்சை, வடஆற்காடு, செங்கல்பட்டு ஜில்லாக்களையும் கணக்குப் பாருங்கள். மற்றும் ஒவ்வொரு கிராமத்திய கிராமதேவதை பிறகு அவனவனு டைய குலதேவதை குலகுரு வரையிலும் கவனித்துப் பாருங்கள். இந்தச் சொத்தும் செலவும் கணக்குப் போட்டுப் பார்த்தால் நம் நாடு உண்மையிலேயே செல்வமில்லாத நாடா? என்பதை தயவு செய்து நடுநிலைமை யிலிருந்து யோசித்துப்பாருங்கள்.

இந்த செல்வமும் செலவும் மக்களுக்கு பிரயோகிக்கப்பட்டால் இந்த நாட்டிற்கு வேறு என்ன தேவை இருக்கும் என்று கேட்கின்றேன். இதற்கு சுயராஜியம் வேண்டுமா? சுயமரியாதை வேண்டுமா?என்று யோசித்துப் பாருங்கள். இதைத் திருத்துவதற்கு எந்த சுயராஜியத்திலாவது திட்டம் இருக்கின்றதா என்று யோசித்துப்பாருங்கள். சர்வாதிகாரி காந்தி சுயராஜிய திட்டத்தில் ராமராஜியதிட்டம் போட்டாய்விட்டது. அதாவது மத விஷயத் தில் பொதுவில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது. பூரண சுயேச்சைக்கும் மேல்பட்ட போல்ஸ்விக்வீரர் ஜவர்லால் அவர்கள் சுயராஜிய திட்டத்திலோ செத்தவர் எலும்பு கங்கையில் போட்டால்தான் அவரது ஆத்மா மோக்ஷ மடையும் என்கிற திட்டம் போட்டாய்விட்டது காலம் தவறாமல் பிண்டங் களும் போட்டுக்கொண்டு வரப்படுகின்றது.

இந்த நிலையில் இந்தக் கோவில்கள் இடிபடவும் இந்தச் சாமிகள் அழி படவும் இந்த சோம்பேரி மடாதிபதிகள் சங்கராச்சாரிகள் ஏர் உழும்படியும், செய்யப்பட இவர்களது சுயராஜியத்தில் இடம் உண்டா என்று கேட்கின் றேன். இந்த சொத்துக்கள் வரும்படிகள் எல்லாம் பாடுபடும் மக்கள் வயி றார கஞ்சிகுடிக்கவும் ஏமாற்றப்படாமல் இருக்கவும் இவர்களது சுய ராஜியத்தில் இடம் உண்டா என்று கேட்கின்றேன்.

சொத்துக்களையெல்லாம் சிலர் கைவசப்படுத்திக் கொண்டு பாடுபடுப வர்களின் வரும்படிகளையெல்லாம் சோம்பேரிகள் அனுபவித்துகொண்டு பாடுபடுபவனுக்கும் தொழிலாளிக்கும் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச வரும் படியையும் கல்லுக்கும் குட்டிச்சுவற்றிற்கும் அழுகும்படி செய்து கொண்டு இருக்கின்ற ஒரு நாட்டுக்கு சுயமரியாதை வேண்டுமா? அல்லது சுயராஜியம் வேண்டுமா ? என்று யோசித்துப் பாருங்கள்.

சுயராஜியம் வந்தால் இந்த வீண் செலவுகளில் எதையாவது நிறுத்த முடியுமா? இந்தக் கோவில்களில் எதையாவது இடிக்கமுடியுமா? இந்தச் சாமிகளில் எதையாவது ஒழிக்க முடியுமா? என்று பாருங்கள்.

ஒவ்வொரு சாமிக்கும் 7- சுத்து கோட்டைச்சுவர்கள் போன்ற மதில் களும் 5, 6 பிரகாரங்களும் ஆகிய இவைகள் எல்லாம் எதற்கு? இவைகள் இல்லாவிட்டால் சுவாமிகள் ஓடிப்போகுமா? ஓடிப்போனால்தான் என்ன கெடுதி ஏற்பட்டு விடும்? அல்லது சுவாமி என்றால் என்ன? அது ஒரு குற்றவாளியா? அல்லது கைதியா? அல்லது சிறைபிடிக்கப்பட்ட அடிமையா? இந்த மாதிரி அடைப்பட்டுக்கிடக்கும் சிறிதும் சுயமரியாதை இல்லாத சாமியை கும்பிடுகின்ற மக்களுக்கு சுயமரியாதை எப்படி ஏற்படும்? அந்த சாமிகள் ஒழிந்தாலல்லது சுயமரியாதை ஏற்படமார்க்க மில்லை. இந்த மாதிரி சாமிகள் ஒழிய எந்த சுயராஜியத்திலும் திட்டமில்லை என்பது தெரிந்தும் சுயராஜியம், சுயராஜியம் என்று வீணாய் உளறுகின் றோம். இந்த மாதிரி நாட்டையும் ஜன சமூகத்தையும் தேசத்தின் செல்வத் தையும் பாழாக்கும் சாமிகள் முதலில் ஒழிய வேண்டும். ஏழைகளின் - உழைப்பாளிகளின் செல்வத்தை கொள்ளை யடித்த பணக்காரர்கள் “கடவுள் செயலால் பணம் கிடைத்தது” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டிருப்பதும் ஏழைகள் பாடுபட்ட பொருள்களை ஏமாற்றுக்காரர்கள் கொள்ளை கொண்டுவிட்டால் அதை உணராமல் “கடவுள் செயல்” என்று சொல்லிக் கொண்டு பட்டினி கிடப்பதற்கும் ஆதாரமான “கடவுள் செயல்” “தலைவிதி” என்பவைகள் முதலில் ஒழியவேண்டும். இவை ஒழிவதற்கு சுயராஜியத்தில் இடமிருக்கின்றதா? சுயமரியாதை இயக்கத்தில் இடமிருக் கின்றதா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

மற்றும் இதுபோலவே விவசாயம், அறிவு, ஆராய்ச்சி, வலிமை முதலிய பல காரியங்களுக்கும் சுயராஜியத்தில் சிறிதும் இடமில்லை என்றும் சுயமரியாதை ஒன்றினாலேயே தான் இவைகளை சுலபத்தில் அடையலாம்.


-------------------------------------------திருச்சி நகரவை பொதுமண்டபத்தில் 17.05.1931 அன்று  தந்தைபெரியார் ஆற்றிய உரை.”குடி அரசு ”- சொற்பொழிவு - 24.05.1931

39 comments:

தமிழ் ஓவியா said...


சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதைப் பொறுத்ததே உண்மையான ஜனநாயகம்

சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதைப் பொறுத்ததே உண்மையான ஜனநாயகம்

குஜராத்வளர்ச்சிபற்றிநோபல்அறிஞர்அமர்த்தியாசென் கூறுவதைக்கவனத்தில்கொள்வதுஅவசியம்!

இணையதளப் பொய்ப் பிரச்சாரம் கண்டு இளைஞர்கள் ஏமாறக்கூடாது!

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி லோக் புருஷர் என்றும், யுகப் புருஷர் என்றும் திட்டமிட்டு விளம்பரம் செய்வதில் இளைஞர்கள் ஏமாந்துவிடக் கூடாது; பொருளாதார மேதை அமர்த்தியாசென் போன்றவர்கள் கூறும் கருத்துகளைக் கவனிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாட்டில் உள்ள ஊடகங்கள் பெரிதும் உயர்ஜாதி யினரின் ஊதுகுழல்களாகவே இருப்பதால் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியை எவ்வளவு அதிகமாக, பலூனில் காற்றடைப் பதைப்போல ஊதி ஊதிப் பெரிதாகக் காட்ட முடியுமோ அந்தப் பணியை அன்றாடத் திருப்பணியாகவே கருதி செய்கின்றனர்!

இளைஞர்கள் ஏமாறமாட்டார்கள்

18 வயது நிறைந்த புதுவெள்ளம் போன்ற வாக்காளர் களான இளைஞர்களுக்கு, இணைய தளமே பெரிதும் அவர்களின் புழக்கமாக இருப்பதை ஒரு வாய்ப்பாக அமைத்துக் கொண்டு, மோடிபற்றி எவ்வளவு பெரிய படத்தை வரைய முடியுமோ அதை வரைந்து, இளைய தலைமுறையின் வாக்கு வங்கியைப் பறிக்க, திட்டமிட்டே செயலாற்றுகின்றனர்.

ஆனால், நமது புரட்சிகர சிந்தனையுள்ள இளைஞர்கள் இந்த மாய்மாலப் புரட்டை இணையத்தில் உடைத்தெறிந்து, அம்பலப்படுத்தும் பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்! வரவேற்கிறோம்.

காங்கிரசைக் குறைகூறி வரும் பா.ஜ.க. பெரும்பாலான கொள்கைகளில் உருட்டைக்கு நீளம், புளிப்பில் அதற்கப்பன் என்பதாகத்தான் இருக்கும் என்பதைப் பார்த்தாலே புரியும்.

மாற்றமல்ல - ஏமாற்றும் தந்திரம்!

மோடி அண்மைக்காலப் பிரச்சாரத்தில் இராமர் கோவில், சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறித்தவர்களுக்கு எதிராகப் பேசுவதை (தற்காலிகமாக) நிறுத்திவிட்டு, நாட்டின் வளர்ச்சி, Growth & Development பற்றியே பேசி வருகிறார்!

அவரது பேச்சுகளைத் தயாரிக்க ஆர்.எஸ்.எஸ். ஆர்க்கெஸ்ட்ரா ஒன்று, எப்போதும் ஓய்வறியாது பணியாற்றி வருகிறது!

அவர் இராமர் கோவில் கட்டுவதைப்பற்றியோ, சிறுபான்மையினர்பற்றியோ பேசவில்லை என்பதை அவரிடம் வந்துள்ள மாற்றம் என்று எவராவது கருதினால், மிஞ்சுவது ஏமாற்றமேயாகும்!

அது ஒரு வகையான உத்தி; தேர்தல் காலங்களின் சந்தர்ப்பவாத ஒப்பனைகள் அவ்வளவே!

மோடி என்பவர் ஆர்.எஸ்.எஸ். கையில் கிடைத்துள்ள இந்துத்துவாவைப் பரப்புவதற்கான ஒரு கருவியே தவிர வேறில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

எப்போதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஒரு திறந்த திட்டம், மறைந்துள்ள திட்டம் என்ற இரண்டினை வைத்திருப்பது உலகறிந்த ரகசியமாகும்!(Open Agenda and Hidden Agenda).

பா.ஜ.க. முக்கிய தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி பேட்டி ‘Economic Times ஏட்டில் 22.1.2014 அன்று வந்துள்ளதில் அவர் கூறுகிறார். இராமர் கோயில், மைனாரிட்டி பிரச்சினை உள்பட எதையும் நாங்கள் விட்டுவிடவில்லை.

தேர்தல் அறிக்கையினைப் பாருங்கள் என்று ஓங்கி அடித்துக் கூறுகிறாரே!

கறுப்புத் துண்டு போட்டுக் கொண்டு, அய்யா, அண்ணா பெயரை வைத்துள்ளவர்கள் மோடி ராகம் வாசிக்க இப்போதே தொடங்கியது எதனால் - பதவியாசையைத் தவிர?


தமிழ் ஓவியா said...

பொருளாதார மேதை அமர்த்தியாசென் கருத்து

எங்காவது ஓநாய் சைவமாகிவிட்டேன் என்று கூறி னால், நம்பலாமா? அதுபோலத்தான் மோடி ராக மாற்றங்களும்கூட!

குஜராத் வளர்ச்சிப் பாதை - அதை இந்தியாவிற்கே விரிவுபடுத்த இதோ ஒரு பரிசுத்த யோவான் வருகிறார் பராக்... பராக்... என்பவர்களுக்கு, நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையும், அரசியல் பார்வையின்றி, நடுநிலைக் கண்ணோட்டத்தோடு எதிலும் ஆய்வு செய்து கருத்துக் கூறுபவருமான அமர்த்தியாசென் அவர்கள், ஆனந்தவிகடன் வார ஏட்டில் (1.1.2014 அன்று நாளிட்ட இதழில்) ஒரு பேட்டியில், ஒரு கேள்விக்கு மிகத் தெளிவாகவே ஆணி அடித்ததைப்போல மோடி பிரதமராவதுபற்றி கூறியுள்ள கருத்து இதோ:

நரேந்திர மோடி பிரச்சாரம் செய்வதுபோல, குஜராத் உண்மையான வளர்ச்சியை எட்டவில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீர்களே... அது உண்மையா?

நான் முன்னர் சொன்ன கருத்தில் இப்போ தும் உறுதியாக இருக்கிறேன். குஜராத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன. நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள். கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெறு கின்றன.

ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை, இவற்றை மட்டும் வைத்து அளந்துவிட முடியாது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், மருத்துவ வசதி இல்லாமல் அதில் எத்தனைக் குழந்தைகள் குஜராத்தில் இறந்துபோகின்றன(?!) என்பதைப் பாருங்கள். அது கேரளாவைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல, கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளிலும் அது கேரளா, தமிழ்நாடு, ஏன் இமாச்சலப் பிரதேசத்தை விடவும் பின்தங்கி தான் இருக்கிறது.

மோடி பிரதமரானால், சிறுபான்மையி னருக்குப் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். அத்தகைய ஒருவர், நாட்டின் பிரதமராக வருவதை நான் ஏற்கமாட்டேன் என்று கூறியுள்ளது மோடியின்மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பில் அல்ல; நாட்டின் எதிர்காலம்பற்றிய அதிகமான கவலையால்தான்!

‘Pogrom’ என்று பல்லாயிரக்கணக்கில் திட்டமிடும் மோடி அரசில் நடைபெற்ற படுகொலைகளின்போது, வாஜ்பேயி பிரதமர்; இராணுவம் மத்திய அரசாங்கத்தால் அனுப்பப்பட்டபோது, வாஜ்பேயி அவர்களேகூட இராஜதர்மம் குஜராத்தில் இல்லை என்று பகிரங்கமாகக் கூறவில்லையா?

சிறுபான்மை மக்களும் - நாயும்!

அந்த ஒரு மாநிலத்தில் இப்படி நடந்த பிறகும்கூட, இப்போது அதுபற்றி கேட்டால், மோடியின் பதில், வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதாகத்தானே இருந்தது?

காரில் பின் சீட்டில் அமர்ந்து செல்லும் ஒருவருக்கு, ஒரு நாய்க்குட்டி அடிபட்டு இறந்தால் ஏற்படும் அனுதாபம் (அதாவது அதைப் பொருட்படுத்தாமல் வேகப் பயணத்தை நிறுத்தாமல் செல்வேன்) என்றுதானே கூறியுள்ளார்!

இதுதான் மோடியின் உள்ளமும், உருவமும்! மற்றவை தேர்தல் கால ஒப்பனை. அதைப் புரிந்துகொள்ளவேண்டும் இளைய தலைமுறை வாக்காளர்கள்!

யுகப் புருஷரல்ல!

‘Economical Political Weekly என்ற பிரபல அரசியல் பொருளாதார ஆய்வு வார ஆங்கில (28.12.2013) இதழில், சில மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதுகூட மோடி அலையால் அல்ல என்பதை காரண காரியங்களுடன் விளக்கி உள்ளது.

இவர்கள் ஊதிக் காட்டுவதுபோல, மோடி லோக் புருஷரோ, யுகப் புருஷரோ அல்ல.

அளவுக்கு மீறி நம்பிக்கை வைப்பது ஆபத்து என்பதை அத்வானி அவர்கள் மோடிக்கு இடித்துரைத்திருக்கிறார்!

காங்கிரஸ்காரர்கள் மோடிபற்றிய அதிக விமர்சனங் களைச் செய்யாமல், அவரைத் தங்கு தடையின்றி பேச விட்டாலே, மோடியை மக்கள் புரிந்துகொள்ள, மோடி ராகம் எவ்வளவு மாறினாலும்கூட, அவரது நாக்கும், வாக்குமே வாக்காளர்கள் புரிந்துகொள்ள உதவக்கூடும்.

எது ஜனநாயகம்?

எந்த ஒரு ஜனநாயகத்திலும் சிறுபான்மையினர் எப்படி மதிக்கப்பட்டு நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே, அதன் வெற்றி, தோல்வி அமையும் என்பது உலகம் கண்டறிந்துள்ளது!

மதவாத, ஜாதீய வாத சக்திகளின் வித்தைகளைப் புரிய வைக்கவேண்டியது, நடுநிலையான முற்போக்காளர் களின் கடமையாகும்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை 23.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/73958.html#ixzz2rGtP5VAq

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களின் முக்கிய கவனத்துக்கு நாளை ஆர்ப்பாட்டம் நிறுத்தி வைப்பு!


சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமனம் செய்யப்பட வேண்டிய 12 நீதிபதிகளுக்கான பட்டியலில் மூன்று பார்ப்பனர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 பார்ப்பன நீதிபதிகள் இருக்கிறார்கள்.

மேலும் வழக்குரைஞர் தொழிலில் போதிய அனுபவமும்கூட இல்லாதவர்கள் எல்லாம் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் இதுவரை நீதித்துறையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினர் ஏராளம் உள்ளனர்; (தாழ்த்தப் பட்டவர் ஒருவர்கூட இல்லை) அவர்களுக்கெல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்டு, மேலும் மேலும் பார்ப்பன ஆதிக்கம் நீதித்துறையில் இடம் பெற்று வருவதை எதிர்த்தும், கண்டித்தும் திராவிடர் கழகம் தொடர்ந்து போராடி வந்திருக்கிறது.

கடந்த 16.12.2013 அன்றுகூட சென்னையிலும், மதுரையிலும் இதற்கான ஆர்ப்பாட்டத்தைக் கழகம் நடத்தியுள்ளது. தற்போது சென்னை உயர்நீதிமன்ற இரு பால் வழக்குரைஞர்களும் சமூக அநீதியை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதி மன்ற நீதிபதியாக உள்ள உயர்திரு சி.எஸ். கர்ணன் அவர்களே தானாக முன்வந்து இந்தப் பிரச்சினையில் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழக் குரைஞர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் நேற்று (22.1.2014) மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு. கபில்சிபல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உயர்திரு ப. சதாசிவம் மற்றும் சில நீதிபதிகள் சந்தித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவிக் காகப் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் உள்ள குறை பாடுகள் மற்றும் சமூக அநீதி பற்றி எடுத்துரைத்தனர். மத்திய சட்ட அமைச்சரும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இந்தப் பிரச்சினையில் மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொண்டு வழக்குரைஞர்களும் தங்கள் போராட்டத்தைக் கை விட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் நாளை (24.1.2014) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது. தேவைப்பட்டால் அந்தப் போராட்டம் மீண்டும் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை 23.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/73959.html#ixzz2rGte8Axv

தமிழ் ஓவியா said...


அருண்ஜேட்லி சொல்லுவதைக் கவனியுங்கள்! கவனியுங்கள்!!


450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மையின மக்களான முசுலிம் மக்களின் அயோத்தி பாபர் மசூதியை இடித்த குற்றவாளி கள், அந்த இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் என்றும், அந்தத் திட்டம் எங்களின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும் பி.ஜே.பி.யின் முன்னணி தலைவர்களுள் ஒருவரும், பிஜேபியின் மாநிலங் களவைத் தலைவருமான அருண்ஜேட்லி பச்சை யாக, கொஞ்சமும் ஒளிவு மறைவு இல்லாமல் பேட்டி கொடுத்துள்ளார். (Economic Times Dated 22.1.2014) என்றால் இதனை எந்தத் தரத்தில் வைத்து எடை போடுவது?

பிஜேபியின் மக்களவைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்திலேயே என்ன பேசினார்?

பாபர் மசூதியை இடித்தது பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் அமைப்புகள்தான் - இதைச் செய் ததற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம் (தினமலர் 9.12.2009) என்று சொல்ல வில்லையா?

இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்லர்; எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், உமாபாரதி போன்ற பிஜேபியின் பெருந் தலைவர்கள்.

21 ஆண்டுகள் ஓடி விட்டன. இதற்குப்பிறகும் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை; இன்னும் சொல்லப் போனால் இந்தக் குற்றத்தைச் செய்த பிறகு இந்தியாவின் துணைப் பிரதமராக அத்வானி வந்தார், முரளி மனோகர் ஜோஷி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரானார். உமாபாரதி மத்தியப் பிரதேசத் தில் முதல் அமைச்சராக வந்தார் என்றால், இந்தக் கேவலத்தை எந்த வார்த்தைகளால் எடுத்துச் சொல்லுவது?

இந்த இழி செயலைச் செய்ததன் மூலம் இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையை இடித்து நொறுக்கினர். இந்திய அரசமைப்புச் சட்டத்தை கிழித்து எறிந்தனர். இந்நாட்டுக் குடி மக்களான சிறுபான்மை மக்களுக்குப் பாது காப்பற்ற ஒரு பயங்கரத் தன்மையை ஏற்படுத்தி விட்டனர்.

இப்பொழுது அடுத்த கட்டமாக பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் - அதனைக் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே இடம் பெறச் செய்வோம் என்று சொல்லுகிற அளவுக்கு தங்களின் இழி குணத்தை, காட்டு விலங்காண்டித்தனத்தை பேட்டியாகக் கொடுக்கிறார்கள் என்றால், இந்திய நாட்டு மக்கள் மிகவும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

இதன் மூலம் பயங்கரவாதத்தை, வன் முறையை தங்களின் கொள்கையாகக் கொண் டவர்கள், அணுகுமுறையாகக் கொண்டவர்கள் நாட்டை ஆளத் துடிதுடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த நிலை உள்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்ல; உலக நாடுகள் மத்தியிலும் எத்தகைய அதிர்வை ஏற்படுத்தும் என்பதைச் சிந்திக்க வேண்டும். பொய்ப் பிரச்சாரத்தில் புத்தியைப் பறி கொடுத்தால் அதன் ஒட்டு மொத்தமான விபரீதத்தை நாட்டு மக்கள்தான் அனுபவிக்க நேரிடும் என்பதை மறந்துவிடக் கூடாது!

அதுவும் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள 2000 சிறுபான்மை மக்களை நர வேட்டையாடிக் கொன்ற நரேந்திரமோடி, பிரதமர் நாற்காலியில் அமர்வார் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை; நாடு காடாகி விடுவதற்கு நாட்டு மக்களே துணை போய்விடக் கூடாது என்பதுதான் நல்லோர் களின் கவலையாகும்.

மோடி பிரதமர் ஆனால் நாடே குஜராத்தாக மாறும் - மதவெறியின் கோரத்தாண்டவம் நடக் கும்; அதன் விளைவாக மனித ரத்த ஆறு தான் ஓடும் - மீண்டும் மீண்டும் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/73966.html#ixzz2rGu8ctAa

தமிழ் ஓவியா said...


போகாதே!

அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா? ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!

- விடுதலை, 20.11.1969

Read more: http://viduthalai.in/page-2/73963.html#ixzz2rGuHZAEz

தமிழ் ஓவியா said...

குஜராத் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான முன் மாதிரியா? (2)

நரேந்திரமோடி விகாஷ் புருஷ் எனும் வளர்ச்சியின் நாயகனா?

குஜராத் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான முன் மாதிரியா? (2)

- முனைவர் பேராசிரியர் ந.க மங்களமுருகேசன்


வேலை வாய்ப்பு, கூலி

பொருளாதாரத்தின் அடிப்படையில் பார்த்தால் கார்ப்பொரேட் சீர்திருத்தக் கொள்கைகளை மோடி ஊக்கப்படுத்தி வருகிறார் என்பதுதான் உண்மை. மோடி அரசு தன் பெரும்பான்மையினால் சிறப்பு உற்பத்தி மண்டலப் பகுதிகளில் ஏறக் குறைய கலைத்து தொழிற் சங்கச் செயல்பாடுகளையும் தடை செய்துள்ளது.

திட்டக்குழுவின் அறிக்கையின்படி 2010-11 ஆம் ஆண்டு குஜராத்தின் தனிநபர் வருமானம் என்பது முன்னணி மாநிலங்களுக்கு மத்தியில் எட்டாவது இடத்தில் உள்ளது. உயர் வளர்ச்சி குஜராத்தில் வேலை வாய்ப்பு என்பது முறை சாராத்துறையில் தான் இருக் கிறது. இதில் 89 விழுக்காடு ஆடவரும், 98 விழுக்காடு மகளிரும் எந்த ஒரு குறைந்த அளவுக்கூலி முடிவும் அல்லது சட்டப் பாதுகாப்பும் இல்லாமல் ஒருங் கிணைக்கப் படாமல் இருக்கிறார்கள். துடிப்பான குஜராத் வளர்ச்சி குஜராத் தில் உழைக்கும் மக்களின் வேலை வாய்ப்புத் தரத்தை மாற்றியமைக்காத போது வளர்ச்சி என்றுகூறுவது எப்படி?

கூலி விகிதாச்சாரங்களைப் பொறுத்த வரை இந்தியாவின் முதன்மை 20 மாநிலங்களில் குஜராத்தின் இடம் மிகவும் மோசமாக உள்ளது. கிராம புறத்தைச் சேர்ந்த தற்காலிக ஆண் தொழிலாளி ஒரு நாளைக்கும் பெறும் கூலி சராசரியாக ரூ. 61. இதில் குஜராத் தின் தர வரிசை 14 கிராமப்புறத் தற் காலிகப் பெண் தொழிலாளர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக ரூ. 56 தான் கூலியாகப் பெறுகின்றனர். இதில் குஜ ராத்தின் தர வரிசை ஒன்பது கிராமப்புறத் தொழிலாளர்களில் ஆண்களுக்கான கூலி 152, தர வரிசை 17, பெண்களுக் கான கூலி ரூ. 108 தரவரிசை 9.

நகர்ப்புறத்தைச் சேர்ந்த தற்காலிக ஆண் தொழிலாளர்கள் ஒரு நாளைக் குச் சராசரியாக 108 கூலியாகப் பெறு வதோடு தரவரிசை 7 பெண்களின் தர வரிசை 14. 18ஆவது தர வரிசையில் இருக்கும் தினசரி தொழிலாளர்கள் நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஆண்களின் கூலி ரூ. 205, பெண்களின் தினக்கூலி ரூ. 182, தர வரிசை 15 குஜராத்தில் உழ வர்கள் தற்கொலை இல்லை என்று பொய்யாக பி.ஜே.பி பீற்றிக் கொண்டு தகவல் உரிமைச் சட்டத்தின்படி பெறப் பட்ட தகவலின்படி ஆகஸ்டு, டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு இடையில் மட்டும் 40 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் எனும் அதிர்ச்சித் தகவல் கிட்டியுள்ளது.

இந்தியாவில் மோடியைப் புகழ்ந்து பாட்டுப்பாடுபவர்கள் முன்னணி தொழில் முதலாளிகள் நிலமல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமாட்டு விலையில் வழங்கினால் புகழாமல் என்ன செய்வார்கள்? வள உரிமைகள் சட் டத்தை வெளிப்படையாக மீறி வள நிலங்களும் கொள்ளை போயுள்ளன.

தமிழ் ஓவியா said...

பட்டா கோரிய பழங்குடியினர் ஒருவரல்லர் இருவரல்லர் 120 இலட்சம் மனுக்கள் எவ்வித விசாரணையுமின்றி அரசால் நிராகரிக்கப்பட்டன. மே 3-ஆம் தேதி குஜராத் உயர்நீதிமன்றம் குட்டு வைத்து இந்த மனுக்களை மறு பரிசீலனை செய்ய ஆணையிட்டுள்ளது.

பகுச்சராஜி பகுதியில் தொழில் முதலைகளுக்கு உதவிட சிறப்பு முதலீட்டு மண்டலம் அமைய மலிவு விலையில் 55,000 ஏக்கர் நிலத்தை வலுக் கட்டாய மாகப் பெற்றுக் கொடுக்கும் முயற்சிக்கு எதிராகப் பெருமளவில் உழவர்கள் இயக்கம் நடைபெற்று வருவது உண்மை. இருப்பினும் மாருதி சுசிக் நிறுவனத்திற்கு 750 எக்டேர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தல், மறு சீரமைப்பு குடியமர்த்தல் சட்டமுன் வரைவில் சொல்லப்பட்டுள்ளதை விட நிவாரணத் தொகை மிகவும் குறைவு; விவசாயிகளும் ஒப்புதல் எதுவும் வழங்குவதில்லை.

சிஏஜி அறிக்கையின்படி குஜராத் அரசு 2011 - 12 நிதியாண்டில் பெரிய நிறு வனங்கள் பயன் பெற சந்தேகத்திற்கிட மான வகையில் ரூ. 1275 கோடியை வாரி வழங்கியது ஊழலுக்கு ஒரு சாம்பிள்.

குஜராத் உஜ்ரா விகாஸ் நிகாம், அதானி பவர் லிமிடெட் ஆகியவற் றிற்கான உடன்படிக்கையை அதானி குழுமம் மீறியது. அதானி நிறுவனத்திற்கு ரூ. 240.08 கோடி அபராதமாக விதிக்கப் பட்டது. அதானி நிறுவனம் வெறும் ரூ. 80.82 கோடியை மட்டும் செலுத்திவிட்டு மீதித் தொகை ரூ. 160 கோடியை செலுத்த விலக்கும் பெற்று விட்டது. இதே நிறு வனத்திற்குக் கடற்கரைப் பகுதியில் மிகக்குறைந்த விலையில் சதுர மீட்டர் ரூ. 1 லிருந்து ரூ. 32 எனும் விலையில் நிலங்கள் அப்போதைய சந்தை மதிப்பு ரூ. 1500 மேல் இருக்கையில் கொடுத்தார்கள் என்றால் புரியும்.

மலிவாக வாங்கிய தொழில் வளர்ச்சி, துறைமுக அபிவிருத்திக்கு வாங்கிய நிலத்தின் ஒரு பகுதியை முறை கேடாக அதானி குழுமம் விற்றது அல்லது குத்தகைக்கு விட்ட சட்ட விரோதச் செயலைச் செய்தது.

ஹஜிரா பகுதியில் எஸ்ஸார் குழுமம் 7,24,687 சதுர மீட்டர் நிலத்தைச் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கத் தாராளப் பிரபு மோடி எஸ்ஸார் குழுமத்திற்கே சிறப்பாக, சலுகை விலையில் அரசுக்கு ரூ. 238.50 கோடி இழப்பு ஏற்பட வழங்கி விட்டது.

இன்னும் இருக்கிறது. அணு ஆற்றல் உற்பத்தி ஆலை அமைக்க குஜராத் மோடி அரசு, லார்சன் டியூரோவிற்கு நிலங்களைச் சலுகை விலையில் வழங்கிய வகையில் அரசுக்கு இழப்பு ரூ. 128.71 கோடி. மேலும் இந்நிறுவனத்திற்குப் பரோடா மாநிலத்தில் நிலம் ஒதுக்கியதற்கும் இந்நிறுவனம் லாபம் பெற்றுள்ளது.

மஹூவா பகுதியில் சிமெண்ட் ஆலை கட்ட நிர்மா சிறப்பு பொருளா தார மண்டலத்திற்கு 208 எக்டேர் நிலம் ஒதுக்கியது. பயிரிடும் நிலத்தை, மேய்ச்சல் நிலைத்தை 15,000 மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்குமாறு செய்தவர் திருவாளர் மோடி தான்.

சந்தை மதிப்பு ரூ. 10,000 சதுர மீட்டருக்கு சந்தை மதிப்பு உள்ள 1100 ஏக்கர் நிலத்தை சதுர மீட்டருக்கு ரூ. 900 வீதம் வழங்கிய சந்தி சிரித்த விவ காரம் உலகம் அறிந்ததே. அந்நிறுவ னத்திற்கு கடன் 0.01 சதவீத வட்டிக்கு வழங்கியுள்ளது. டாடா நிறுவனம் அனுப்பும் ஒவ்வொரு காருக்கும் அரசு மானியம் வழங்கும் ரூ. 60,000.

வேலையின்மை வறுமை நிலை, விளிம்பு நிலை மனிதர்களாக்கப்படும், சமூக நீதியில் சிதறுண்டு போதல் வளர்ச்சி என்றால் மோடி அரசு வளர்ச்சி அரசு.

இப்போது நடுநிலைமையோடு சொல்லுங்கள். இத்தகைய ஒரு மோச மான நிருவாகம் செய்யும் குஜராத் எப்படி இந்தியாவிற்கே முன் மாதிரி யாகும்? இந்திய நாட்டையே பண முதலைகளுக்கு விற்று விடுவார் என்பது மட்டும் நிச்சயம்.

Read more: http://viduthalai.in/page-2/73971.html#ixzz2rGuQvMOO

தமிழ் ஓவியா said...


பண வேட்டையா? மகிழ்ச்சியா? - எது தேவை? - கி.வீரமணி


வாழ்க்கையின் முக்கிய தேவைகள், அடிப்படைத் தேவைகள் - இவைகளுக் காக பணம் (செல்வம்) அவசியம் தேவை. அதனால் துவக்கத்தில் மகிழ்ச்சி ஏற்படும்; கவலைகள் இராது.

ஆனால் அது ஒரு எல்லை வரையில்தான். அது எல்லையைத் தாண்டி விட்டால், மகிழ்ச்சி நாளுக்கு நாள் குறையத் துவங்கும்.

இதை Law of Diminishing Returns என்று பொருளாதாரப் பாடத்தில் கூறுவார்கள். எளிய முறையில் இதை விளக்க வேண்டுமானால் முதலில் நமது தேவையின் உச்சத்தில் நமக்குக் கிடைக்கும் பணத்தின் மதிப்பு நமக்கு மிக அதிகம். அதுவே அதிகமாகி பின்னால் கிடைக்கும்போது, அதே அளவு மகிழ்ச்சியை தருவதாக அது அமையாது; காரணம் முதலில் ஏற்பட்ட நமது நெருக்கடி - தேவை குறையக் குறைய, அடுத்து வரும் பணத்தின் மதிப்பு - நம்மைப் பொறுத்தவரை குறைந்ததாகவே காணப்படும் அல்லது உணரப்படும்.

எடுத்துக்காட்டாக, உங்கள் மகிழ்ச்சிக்கான கனவுத் திட்டமாக வைத்துள்ள நீங்கள் பணம் அதிகம் சம்பாதிக்கும் நிலையில் விலை உயர்ந்த கார் வாங்க எண்ணி, அதனை ஓட்டி மகிழ ஆசைப்பட்டு ஒரு Audi, Ferrari, BMW (ஆடி, பெராரி, பிஎம். டபுள்யூ) போன்ற விலை உயர்ந்த காரை வாங்கியவுடன் அதிக மகிழ்ச்சி கிடைக்கும்தான். அதிலே சிலர் மிதக் கவும் செய்வர்!

ஆனால் முதல் நாள், முதல் வாரம், முதல் மாதம், முதல் ஆண்டு - ஒரே மாதிரியான துவக்க மகிழ்ச்சி நீடிக்குமா? இருக்காதே - பரபரப்பு, இன்ப வேகம் கொஞ்சம் கொஞ்சம் குறைந்துதானே வரும்.

இதை மனோதத்துவ நிபுணர்கள், Hedonic Adaptation என்ற சொற்றொ டரில் கூறுகிறார்கள்.

பிறகு இந்த ஆசை குறைந்து இன்னொரு ஆசை துளிர்த்து அதற்கு மாறிடும், இறுதியில் அந்தப் பிடிப்பு அவ்வளவாக இருக்காது. தானே குறையும் மாறிவரும்.

இந்த சுழலை ‘Hedonic Treadmill’ என்ற சொற்றொடர் மூலம் குறிக் கிறார்கள் மனோதத்துவ துறையில் - உளவியலில் இந்த சுற்றி சுழலும் நிலை ஒரு விசித்திரம்-

செல்வம், அந்தஸ்து, புகழ் - இப்படி தொடரத் தொடர, ஆசை சில நேரங் களில் பெருகிக் கொண்டே இருந்து, உச்ச கட்டத்திற்குப் போனாலும் மகிழ்ச் சியை இறுதியில் தக்க வைக்க முடியாமல் தவிக்கும் நிலை சர்வ சாதாரணம்!

எனவே பண வேட்டையும், குவித் தலும் மகிழ்ச்சியை கொண்டுவந்து சேர்க்காது; மாறாக மனக் கவலை அதிகரிக்கவே செய்யும். நிம்மதி மெல்ல நிதானமாக விடை பெற கதவைத் தட்டும்!

எனவே இதனைத் தடுக்க அளவான பணத்தைச் சேர்ப்பதோடு தேவையான அளவு பணம் ‘Enough money’ தேவை களுக்கு ஓர் எல்லையை வரையறுத்துக் கொண்டால் மகிழ்ச்சி நீடித்து நிலைக்கும்.

மகிழ்ச்சி நம் மனதைப் பொறுத்தது தானே!

1. பொதுவாக பல்வகை அனுபவங்கள் தரும் மகிழ்ச்சி - வெறும் ஆடம்பர நுகர் பொருள்களால் வந்து விடாது.

2. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதைப் படித்தபலரும் நோயற்ற வாழ்வே குறைவற்ற மகிழ்ச்சி என்றும் உணர வேண்டும். எனவே உடல் நலம், உடலில் சக்தியை, ஆற்றலைப் பெருக்கி, தக்க வைத்துக் கொள்ளல் வற்றாத மகிழ்ச்சி ஊற்றாக அமையக் கூடும்.

3. நல்ல நண்பர்களுடன், நல்ல மனிதர்களுடன், நல்ல உறவுகளுடன் கூடிக் கலந்து வாழ்ந்தால், மகிழ்ச்சியின் பரிமாணம் மிகவும் விரிந்து பரந்து நம் வாழ்வைப் பெருக்கும்!

4. தொடர்ந்து எரிச்சல்தரும் நிலைமை களை புத்திசாலித்தனமாக தவிர்த்து விடக் கற்றுக் கொள்ளுங்கள்.

5. கொடுப்பதில் கொள்ளை மகிழ்ச்சி ஏற்படவே செய்யும்!

கடைசி நேரத்தில் எதையும் செய் யாமல், திட்டமிடாமல் இருந்துவிட்டு பிறகு அதற்காக மிகவும் எரிச்சலும், கோபமும் கொண்ட அன்றாட வாழ்க்கை யாக உங்கள் வாழ்க்கை அமைந்தால், நரம்புகள் உடல் ரீதியாக பலவீனம் அடைந்து, நரம்புத் தளர்ச்சியை உரு வாக்கி விடக் கூடும். பிறகு மகிழ்ச்சி ஏற்பட முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். எதையும் திட்டமிட்டு, நிதானித்துச் செய்தால் இந்த எரிச்சல் ஏற்பட வாய்ப்பே வராது அல்லவா?

6. சில ஓய்வு பெற்றவர்கள், அடுத்த நாள் முதலே ஏதோ மிகப் பெரிய இழப்புக்கு ஆளானதுபோல கவலை யில் நரை, திரை மூப்பு அடைந்தவர் களாக காட்சியளிப்பதை நாம் காணு கிறோம்.

இது தேவையற்ற மனோ நிலை யாகும். பணியாற்றினோம்; பெருமை யோடு ஓய்வைச் சுவைப்போம் - பொதுத் தொண்டு, மற்றவர்க்கு உதவுதல், புதுப்புது அனுபவங்களைக் கற்றுக் கொள்ளலாமே!

கற்றுக் கொள்ளுதலுக்கு வயது ஒரு தடையாக இருக்க முடியாதே! அது மகிழ்ச்சியைத் தருமே!

அதற்குமுன் செலவழிக்கத் தவறிய உங்கள் குடும்பத்தவர் தொடங்கி, வீடு, தெரு, ஊர், சமூகம், உலகம் என்று உத விடும் பணி எல்லையற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு வாரி வாரி வழங்குமே!

இதை மறக்கலாமா? எனவே பண வேட்டையா முக்கியம்? மகிழ்ச்சி ஊற்றைத் தோண்ட முயலுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/73968.html#ixzz2rGubmMf2

தமிழ் ஓவியா said...


பேரறிவாளன் உள்ளிட்டோரையும் விடுதலை செய்க! கலைஞர் பேட்டி


சென்னை, ஜன. 23 - தூக்குத் தண்டனை கூடவே கூடாதென்ற எனது கருத்து இன்றைக்கு நிறைவேறியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்றும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேருக்கும் இந்தத் தண்டனை பொருந்தும் வகையில் முடிவு வெளி வந்தால் பெரு மகிழ்ச்சியடைவேன் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று பகலில் அண்ணாஅறிவாலயத்திலிருந்து இல்லத்திற்குப் புறப்பட்டபோது செய்தி யாளர்களுக்கு அளித்தபேட்டியில் குறிப் பிட்டார்.

கலைஞர் அவர்கள்அளித்த பேட்டி வருமாறு :-

செய்தியாளர்:- உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தூக்குத் தண்டனைக் கைதிகளின் தண்டனையைக் குறைத்து வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து உங்கள் கருத்துஎன்ன? ஏற்கனவே நீங்கள்பலமுறை தூக்குத் தண்டனை என்பதே கூடாது என்று பலமுறை எழுதியவர் ஆயிற்றே?

கலைஞர்:- தூக்குத் தண்டனை கூடவே கூடாதுஎன்று இன்று நேற்றல்ல; நீண்ட காலமாக நான் கூறி வருகிறேன். அது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.இதைப் பற்றி நான் விரிவாக முரசொலியில் எழுதியிருக் கிறேன்.

செய்தியாளர் :- ராஜீவ்காந்தி கொலை வழக்கிலே சிக்கி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது கருணை மனுதாக்கல் செய்துள்ளநிலையில் சிறை யிலே இருக்கும் மூன்று பேருக்கும் இந்தத் தண்டனை பொருந்துமா?

கலைஞர்:-அவர்களுக்கும் இந்தத் தண்டனை பொருந்தும் வகையில்முடிவு வெளிவந்தால் நான் பெருமகிழ்ச்சி அடை வேன்.

ஸ்டாலின் கருத்துப் பற்றி...

செய்தியாளர் :- கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கம்யூனிஸ்ட் கட்சி, சொத்துக் குவிப்பு வழக்கிலே சிக்கியுள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என்றுகேட்டிருந்தார். அதுபற்றி உங்கள்கருத்து?

கலைஞர் :-பொதுவாகமக்களிடம் பிரதிபலிக்கும் கருத்தினைஅவர் தெரிவித் திருக்கிறார்.

செய்தியாளர் :- மாநிலங்கள்அவைத் தேர்தலில் தி.மு.கழக வேட்பாளருக்கு நீங்கள் எந்தெந்தக் கட்சிகளிடம் ஆதரவு கேட்கப் போகிறீர்கள்? காங்கிரஸ் கட்சி யிடம் கேட்கின்ற உத்தேசம் இருக்கிறதா?

கலைஞர் :-இல்லை.

செய்தியாளர் :- தே.மு.தி.க.விடம் ஆதரவு கேட்கப்படுமா?

கலைஞர் :-பொறுத்திருந்துபாருங்கள்.

செய்தியாளர் :- மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியை தே.மு.தி.க.விற்கு தி.மு. கழகம் விட்டுக் கொடுத்தால், மக்களவைத் தேர்தலில்தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி உருவாக வாய்ப்பாக இருக்குமென்று அந்தக் கட்சியின் சார்பில் கருத்துச் சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- விஜயகாந்த் தலைமையிலே உள்ள தே.மு.தி.க.விற்கும், தி.மு. கழகத்திற்கும் இடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றால், அப்போது நீங்கள் தெரிவித்தகருத்தும் பரிசீலிக்கப்படும்.
செய்தியாளர் :- மனிதநேயமக்கள் கட்சி சார்பிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசார்பிலும் விஜயகாந்தைச் சந்தித்து, தே.மு.தி.க., இந்தத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணிவைத்துக் கொள்ள வேண்டு மென்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் களே?
கலைஞர் :-அவர்களுடைய நல்லெண் ணத்தை நான் பாராட்டுகிறேன். செய்தியாளர் :- தே.மு.தி.க.விற்கு நீங்களே நேரடியாக அழைப்பு விடுக்க லாமே?

கலைஞர் :-எங்களுடைய அழைப்பை தெரிவிக்க வேண்டிய முறையில் தெரிவித் திருக்கிறோம்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டி யளித்தார்.

Read more: http://viduthalai.in/page-3/73987.html#ixzz2rGuuZT5v

தமிழ் ஓவியா said...


பழநி கோயில் பஞ்சாமிர்தத்திலும் ஊழல்


பழநி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்திற்கு தேவையான கரும்பு சர்க்கரை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், விவசாயிகள் போர்வையில் வியாபாரிகளும் நுழைவதால், தரம் குறை வான சர்க்கரை அனுப்பப்படுவதாக விவ சாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சராசரியாக வாரத்திற்கு 2,000 மூட்டைகள் (ஒரு மூட்டை 60 கிலோ), பஞ்சாமிர்தத்திற்காக கொள்முதல் செய்யப்படும் நிலையில், சபரிமலை சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்காலங்களில் வாரத்திற்கு 5,000 மூட்டை சர்க்கரை வரை கொள்முதல் நடந்து வருகிறது.

கவுந்தப்பாடி அமைந்துள்ள தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில், 50 ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு பயிரிடப்படு கிறது. இதில், தனியார் சர்க்கரை ஆலைக்கு வழங்கியது போக 20 முதல் 25 ஆயிரம் ஏக்கர் கரும்பு நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்க பயன்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நிலம் மற்றும் நீர்வளம் காரணமாக இங்கு விளையும் கரும்பில் தயாரிக்கப்படும் சர்க்கரையை பயன்படுத்தி பஞ்சாமிர்தம் தயாரித்தால் கூடுதல் இனிப்பும், நீண்ட நாட்கள் கெடாமலும் இருப்பதாக கூறப் படுகிறது.
பஞ்சாமிர்தத்தின் தரம்

இதனால், கடந்த 25 ஆண்டுகளாக பழநி தேவஸ்தான நிர்வாகம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வாயிலாக நேரடியாக சர்க்கரையை கொள்முதல் செய்து வருகிறது. முருகன் கோயில் பிரசாதத்திற்கு 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொ டர்ந்து சர்க்கரை விற்பனை செய்து வரு கின்றனர். பிரசாதத்திற்கு செல்லும் சர்க்கரை என்பதால் அதன் தன்மை கெடாமல் அதனை தயாரிக்கும் விவசாயிகள், தங்களது காணிக்கையாக சில மூட்டை சர்க்கரையை வழங்குவதையும் வழக்கமாக கொண் டுள்ளனர்.

இந்நிலையில், கவுந்தப்பாடி விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் போர்வையில் வியாபாரிகளும் நுழைந்துள்ளதால், வெளிச்சந்தையிலிருந்து வரவழைக்கப்படும் தரம் குறைவான சர்க்கரை பழநி தேவஸ் தானத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ள தாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையாக சமீபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-3/73989.html#ixzz2rGvFfOdE

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கருத்து

24.1.2014 அன்று முற்பகல் தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் விடுத்த தி.மு.க.வின் கட்டுப்பாடு காக்கும் அறிக்கையின்மீது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கருத்து வருமாறு:

தந்தை பெரியார் அறிவுறுத்தியபடி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் கட்டுப்பாட்டிற்கே முதல் முன்னுரிமை என்பதற்கேற்ப அமைந்துள்ள இந் நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கது.

குடும்ப அரசியல் நடத்துகிறது தி.மு.க. என்ற பழி இதன்மூலம் துடைக்கப் பட்டுள்ளது.
தி.மு.க. இதன் மூலம் பேருரு (விஸ்வரூபம்) எடுத்துள்ளது.

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான ஆரோக்கியமான நடவடிக்கையாகும் இது என்பது தாய்க் கழகத்தின் கருத்தாகும்
.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.



சென்னை 24.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/74016.html#ixzz2rMQx189h

தமிழ் ஓவியா said...

பாலியல் வன்கொடுமை

பொன்னேரியையடுத்த சோம்பட்டையைச் சேர்ந்த நாகதாஸ் என்னும் பேர் வழி, பெண் ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட் டான். பெண் கர்ப்பம் தரித்தார். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தவன் பின் மறுத்தான். வழக்குத் தொடுக்கப்பட்டு - மேல் முறையீட்டில்தான் பெண்ணுக்கு நியாயம் கிடைத்தது - ஆசாமிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

(டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்; நாடே கொந்தளித்தது; ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து வந்த நிலையி லும், தமிழ்நாடு அமைதி பூத்த தடாகமாகக் காட்சி யளிக்கிறது; ஊடகங்களும் கப்-சிப்! புதிய மனுதர்மம் அழகு நடை போடுகிறதோ!)

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRFt2CR

தமிழ் ஓவியா said...

நீதியரசர் சி.எஸ். கர்ணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் ஒரு வழக்கில் தலையிட்டு வெளிப்படையாக நடந்து கொண்டது - சட்டப்படி தவறு.

-முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு

(என்ன சட்டமோ, அதனை அவர் சந்திக்கவும் செய்வார்; கொலை புகழ் சங்கராச்சாரியார் தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதி பால சுப்பிரமணியம் என்பவர் நான் ஒரு சங்கராச்சாரி பக்தன்! என்று நீதிமன்றத்திலேயே பட்டவர்த்தனமாய் சொன்னாரே அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவாம்? இதிலும் ஒரு குலத்துக்கொரு நீதியோ!)

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRMRYHh

தமிழ் ஓவியா said...

மோடி

தேர்தல் நேரத்தில்தான் காங்கிரசுக்கு ஏழைகள் நினைவு வரும். - நரேந்திரமோடி

(அது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்; தேர்தல் நேரத்தில்தானே இவர்களுக்கு மதச் சார்பின்மை பற்றியும், சிறுபான்மை மக்களைப் பற்றியும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது).

வை.கோ

இனி திமுக, அதிமுக நிழலில்கூட ஒதுங்க மாட்டோம்! - வைகோ (ஆமாம் ராமர்பாலம், ராமர் கோயில், இந்துத்துவா என்ற ஜோதியில் தான் கரைந்தாகி விட்டதே!)

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRSexMM

தமிழ் ஓவியா said...

வாரா(ய்) நீ வாரா(ய்) கடன்

வாராக் கடன் வசூலில் குறிப்பிடத்தக்க முன்னேற் றம் காணப்படுகிறது.
- ராஜீவ் டாக்ரு, ரிசர்வ் வங்கி செயலாளர்

(வாராக் கடன் பட்டியலில் உள்ள (அ)சிங்கங் களைத் தப்ப விட்டு விட்டு, ஏழை பாழையாம் சுண்டெலிகளை வேட்டையாடுவது என்ன நியாயமோ!)

அமெரிக்காவில்

அமெரிக்கப் பெண்களில் அய்ந்தில் ஒருவர் பாலியல் பலாத்காரத்தால் பாதிப்பு. (மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அங்கு ஒளிபரப்பு செய்திருப்பார்களோ!)

கார்ட்டூன் திமுகவுடன் தேமுதிக கூட்டணி பற்றி தினமணி வைத்திய நாதய்யர்வாள் வட்டாரத்தில் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறது என்பதற்கு இதுதான் அடையாளம் - ஆமாம், தினமணி நடு நிலை ஏடு நம்பித் தொலையுங்கள்!

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRZfMCf

தமிழ் ஓவியா said...



இதோ ஒரு இரட்டை நாக்கு!

காங்கிரஸ் மதவாதத்தைத் தூண்டும் கட்சி; பா.ஜ.க.வோ மதச் சார்பற்ற கட்சி இப்படி சொல்லி யிருப்பவர் யார் தெரியுமா, 450 ஆண்டு கால வரலாறு படைத்த முஸ்லீம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்த கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங்!

இரட்டை வேடம் - இரட்டை நாக்கு என்பது இந்துத் துவா கூட்டத்தின் இரட்டைக் குழந்தைகளோ!

Read more: http://viduthalai.in/e-paper/74024.html#ixzz2rMRgq8rP

தமிழ் ஓவியா said...


மோடியின் கரங்கள் அப்பாவி மக்களின் ரத்தம் தோய்ந்த கரங்கள்: முலாயம்சிங்


மோடியின் கரங்கள் "அப்பாவிகளின் ரத்தம் தோய்ந்த கரங்கள்' என்று முலாயம் சிங் (யாதவ்) குற்றம்சாட்டினார்.

வாரணாசியில் வியாழக் கிழமை நடைபெற்ற பேரணியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசியதாவது:

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியில் இருந்தபோது, 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, படுகொலை களும், அடக்குமுறைகளும், கொடுமை களும் அரங்கேறின.

அதற்குப் பிறகும், மோடியை எப்படி பிரதமர் வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது என்பது தெரியவில்லை.

கோரக்பூரில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தை குஜராத்தாக மாற்றப் போவதாக கூறியுள்ளார்.

ஆனால், குஜராத்தில் படுகொலை களை அரங்கேற்றியதுபோல், இங்கும் அத்தகைய சம்பவங்களை நிகழ்த்தும் நிலையில் அவர் இல்லை.

குஜராத்தில் நடை பெற்ற இனக்கலவரத்துக்கு மோடிதான் முழுப் பொறுப்பு. அவரது கரங் கள் "அப்பாவிகளின் ரத்தம் தோய்ந்த கரங்கள்'.

குஜராத் அரசு வேலை யில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங் கியதா? விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ததா? பெண்களுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத் ததா? இவற்றில் எதையும் செய்ய வில்லை. ஆனால், செய்ததாக புர ளியைப் பரப்புவதைத் தவிர பாஜகவுக்கு வேறு வேலை இல்லை.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சமாஜ்வாதி கட்சியின் ஆதரவின்றி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

மத்தியில் ஆட்சி செய்து வரும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழல் மற்றும் பணவீக்கத்தால் பொருளாதார நெருக்கடியை மட் டுமே கொடுத்தது என்று முலாயம் சிங் யாதவ் பேசினார்

Read more: http://viduthalai.in/e-paper/74019.html#ixzz2rMRxGL9U

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்


நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந்தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.

- (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page-2/74025.html#ixzz2rMS9LPGg

தமிழ் ஓவியா said...


இல்லஸ்டிரேட்டட் வீக்லியில் ஒரு கடிதம்


அய்யா, சினிமா நடிகர், நடிகைகள் இல்லங்கள் நோக்கி வருமான வரி திடீர் சோதனைகளை அரசு நடத்துகிறது. ஏன்? கடவுளரது இல்லங்கள் நோக்கி இவைகளை நடத்தக்கூடாது? சினிமா நடிகர்கள் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தைப் பெற கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்; மற்றவர்களுக்கு ஒரு கேளிக்கையாவது அளிக்கிறார்கள்.

புனிதமான இடங்களில் நடைபெறுவது பச்சையாக இலஞ்சம் அல்லாமல் வேறு என்ன? நாம் கடவுள் நம்பிக்கையை இழக்கத்தானே அவை பயன்படுகின்றன? புனிதமான இடங்கள் எனப்படுபவைகளை அரசு தேசிய மயமாக்கட்டும். வறுமையை ஒழிப்போம் - வறுமையே வெளியேறு என்ற கோஷத்தினை அச்செல்வத்தினை எடுத்து விநியோகிப்பதன் மூலம் செயல்படுத்தட்டும்.

அதில் முக்கியமாக விழிப்புடன் இருக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், அர்ச்சகர்களிடமிருந்து அதிகாரிகள் கொள்ளையாக அது மாறாமல் பார்த்துக் கொள்வதேயாகும். மேற்கண்ட கடிதம் 1.10.1972 இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஏட்டில் கல்கத்தாவைச் சேர்ந்த அருண்டுரோவர் என்பவரால் எழுதப்பட்ட ஒன்றாகும்.

Read more: http://viduthalai.in/page-7/74027.html#ixzz2rMT1YPg3

தமிழ் ஓவியா said...

ஜாதிக்கொரு சமையலறை

உயர்ந்த ஜாதி இந்து ஒருவன் சாப்பிடும் போது தான் சாப்பிடும் உணவு பற்றி மட்டும் கவனிப்பதில்லை. அந்த உணவைச் சமைத் தது யார் என்பது பற்றியும் அக்கறையோடு கவனிக்கிறான். தாழ்ந்த ஜாதி உணவை யார் சாப்பிட்டாலும் அல்லது சமைத்தாலும் அவனும் தாழ்ந்த ஜாதிக்காரனாகி விடு கிறான்.

எல்லா உயர்ந்த ஜாதிக்காரர்களுமே பணக்காரர்களாக இருந்து விடுவதில்லை. அவர்களிலும் சிலபல ஏழைகள் இருக்கின்றனர். இதனால் பணக்காரப் பார்ப் பனர்கள் தங்கள் வீடுகளில் சமைப்பதற்காக ஏழ்மை நிலையில் இருந்து கொண்டு, பிழைப்புக்கு வழி தேடிக் கொண்டு இருக்கும் பார்ப்பன சமையல்காரர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.

பார்ப்பனரல்லாதார் பலர் தங்கள் வீடுகளில் பார்ப்பன விருந்தினர்களுக்கு உணவு சமைக்க பார்ப்பன சமையல்காரர்கள் ஒருவரையும், தங்களுக்கும் பார்ப்பனரல்லாத விருந்தினர்களுக்கும் சமைப்பதற்காக மற்றொரு சமையல்காரரையும் வைத்திருக் கின்றனர். இதற்காக தனித்தனி சமைய லறைகள் உள்ளன.

தென்னிந்திய கல்லூரி ஒன்றில் வெவ்வேறு ஜாதி மாணவர்களுக்காக தனித் தனியாக எட்டு சமையற்கூடங்கள் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு ஜாதி மாணவனும் அந்தந்த ஜாதிக்கென்று உள்ள சமையற்கூட சாப்பாட்டு அறையில் சென்று சாப்பிடுவான். மக்களின் ஆன்மீகத் தலைவர்களாக பார்ப்பனர்கள் இருந்த காலத்தில்தான் இது போன்ற ஜாதிக்கொரு சமையலறை ஏற்பட்டது.

- ராபின் ஹோவே எழுதிய இந்தியா வில் உணவு என்ற கட்டுரையிலிருந்து.
நூல்: ஜான் கென்னத் கால்பிரெய்த் இன்ட்ரடியூகஸ் இண்டியா, பக்கம் 187.

Read more: http://viduthalai.in/page-7/74027.html#ixzz2rMTAJSul

தமிழ் ஓவியா said...


உறவின் முறையில் திருமணம் குறைபாடுடைய குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும்


சென்னை, ஜன. 24- உறவு முறைகளில் திரும ணம் செய்வது குறைபா டுடைய குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும் என மாற்றுத்திறனாளிகளுக் கான மாநில ஆணையர் கே.மணிவாசன் கூறினார்.

செவித்திறன் குறை பாடுள்ள குழந்தைக ளுக்கு செவியின் உள் பகுதியில் பொருத்தப் படும் காக்ளியர் கருவி பற்றிய விழிப்புணர்வு சி.டி. மற்றும் வீடியோ வெளியிடும் நிகழ்ச்சி போரூர் ராமச்சந்திரா மருத்துவக் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை துறை, பேச்சு மற்றும் கேட்பு அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் மருத்துவர் ஏ.ரவிக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கே.மணிவாசன் மற்றும் மருத்துவர் ஏ.ரவிக்குமார் ஆகியோர் பேசியது: குழந்தைகள் பிறந்த உடனேயே அனைத்து விதமான மருத்துவ சோத னைகளையும் தாமத மின்றி மேற்கொள்ள வேண்டும்.

பிறவியிலேயே ஏற் படும் குறைபாடுகளை சற்று தாமதமாக தெரிந் துகொள்வதன் மூலம் அதை சரிசெய்வதில் பல் வேறு சிரமங்கள் ஏற்படு கின்றன. காதுகேட்கும் திறன் குறைந்த மற்றும் முற்றிலுமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு காக் ளியர் கருவி பொருத்தப் பட்டவுடன் கேட்பியல் நிபுணர்கள், பேச்சுப் பயிற்சி நிபுணர்கள் ஆகி யோர் உதவியுடன் படிப் படியாக குழந்தைகளின் கேட்கும் திறன் மேம்படு கிறது.

இதுபோன்ற குறை பாடுகளுக்கு உறவின் முறையில் திருமணம் செய்துகொள்வதுதான் முக்கிய காரணமாக கரு தப்படுகிறது. எனவே இதுகுறித்த விழிப்பு ணர்வை பொதுமக்களி டம் ஏற்படுத்த வேண் டும் என்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/74056.html#ixzz2rMTHmhse

தமிழ் ஓவியா said...


மூட மதக்கிருமியைப் பரவ விடாதீர்!


நோய் நொடிகளால் சாகும் குழந்தைகளை விட பெற்றோர்களின் மூடநம்பிக் கைகளால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகம் என்று குழந்தை நல மருத்துவக் குழுவினர் அறிவித்திருக் கின்றனர்.

நோய்க்கிருமிகளைவிட மதக்கிருமியே பயங்கரமானது என்பதை அந்த மருத்துவக் குழுவின் கருத்து நமக்குத் தெரிவிக்கிறது.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான மூடநம்பிக்கை நிலவி வருகிறது. இவற்றால் நாள்தோறும் குழந்தைகள் இறந்தவண்ணமிருக்கின்றனர்.

இறந்த பிறகு மோட்சத்துக்குப் போக ஆண் குழந்தைதான் வேண்டுமாம்! எனவே, பெண் குழந்தைகள் புறக்கணிக்கப்படு கின்றனர்.

பிரசவ அறையின் கதவுகளும், ஜன்னல் கதவுகளும், எப்போதுமே மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டுமாம்! இல்லை யென்றால் குழந்தையையும், தாயையும் துர்த்தேவதைகள் தாக்கி அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமாம்!

உண்மையில் நடப்பது என்னவென்றால், பிரசவ அறையின் எல்லா கதவுகளையும் மூடி வைத்திருப்பதால் அவர்களுக்கு மூச்சுத் திணறல்தான் ஏற்படும்.

மற்றவர்களின் கண் திருஷ்டியால் தான் குழந்தைகளுக்கு கண்வலி வருகிறது என்ற மூடநம்பிக்கையும், இருந்து வருகின்றன. இதற்கு திருஷ்டி கழிக்க வேண்டி உணவு பொருள்கள் பாழாக்கப்படுகின்றன.

ஒருவனை நாய் கடித்து விட்டால் அவன் 16 கிணறுகளுக்குச் சென்று அந்தக் கிணறு களில் ஏதாவது ஒன்றிலாவது நாயின் உருவம் தெரிகிறதா என்று தொடர்ந்து பார்த்து வர வேண்டுமாம்! அப்படித் தெரிந் தால் அவன் சிகிச்சை எதுவும் செய்ய வேண்டாமாம்.

இப்படி அவன் நாட்களைக் கழிப்பதற்குள் நோய் முற்றி விடுகிறது. பின்பு யாராலும் அவனைக் காப்பாற்ற இயலாது போய்விடுகிறது. எனவே மக்களுக்கு பகுத் தறிவு ஊட்டுவதும், அவர்களை சிந்திக்க வைப்பதும் தான் இன்றைய அவசியத் தேவை.

- விமன்ஸ் எரா, (1976 டிசம்பர் 16 இதழ் தலையங்கம்

Read more: http://viduthalai.in/page-7/74031.html#ixzz2rMTTBskz

தமிழ் ஓவியா said...

ஆண்டவனின் தனிக் கருணை

அன்றொரு நாள் தான் எவ்வாறு ஆண்டவனின் தனிக்கருணைக்கு ஆளானார் என்பது குறித்து ஒருவர் என்னிடம் கூறிக் கொண்டு வந்தார். ஒருநாள் அவர் வெளிநாட்டிற்குக் கடற்பயணம் செய்ய இருந்தார். ஆனால், அது யாது காரணத்தாலோ, பயணம் தடைப்பட்டு விட்டது.

ஆண்டவனின் தனிக் கருணையால்அவர் போகாதது நின்றதே நல்லதாயிற்று. ஏன்? அந்தக் கப்பல் கடலில் மூழ்கி விட்டது. அதிலிருந்த அய்நூறு பேரும் மாண்டனர். அய்நூறு பேர்களோடு மூழ்கிய கப்பலில் செல்லாவண்ணம் ஆண்டவனின் தனிக் கருணையால் ஒருவன் காப்பாற்றப்பட்டான்.

ஆனால், இந்த அய்நூறு பேர்கள்? அதிலிருந்த தாய்மார்கள்? அவர்களின் கள்ளங்கபட மற்ற மழலை பேசும் இளங்குழவிகள்? அவற்றின் அருமைத் தந்தையர்? அக்கரையில் என்று கப்பல் வந்தடையும்? என் இனிய துணைவர் என்று வருவார் என்று ஆவலே உருவாய் நிற்கும் இளம்பெண்கள்? இவர்களின் கதி? இதன் பெயர்தான் ஆண்டவனின் தனிக்கருணை என்பது!

-அறிஞர் இங்கர்சால்
தகவல்: ச.ராமசாமி

Read more: http://viduthalai.in/page-7/74031.html#ixzz2rMTb6wf0

தமிழ் ஓவியா said...


மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக் கின்றன. அதுவும் சில நோய்களுக்குள், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழை களுக்காகக் கொண்டு வரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?

நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
தகுதிகள்: இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருவானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்: கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில்தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கவேண்டும். குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.
எங்கே விண்ணப்பிப்பது?

ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மய்யம் இயங்கி வருகிறது. அந்த மய்யத்திற்குச் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும், பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.

பயனை எப்படி பெறுவது?

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும். இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலம், கண் நோய் சிகிச்சை, இரைப்பை (ம) குடல் நோய்கள், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் , காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், கருப்பை நோய்கள், ரத்த நோய்கள்.

மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை:

சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சைமுடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து அய்ந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.

ஆன்லைனில் தெரிந்து கொள்ள: உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைப் பெற இந்த இணைப்பில் செல்லவும்.

https://docs.google.com/file/d/1vpMQHGnb QymYPIAxYoW8AFec27t6s6sUNMjA IJdGJUtzluRhC2G9 kqJI5aMS/edit.

கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்க வேண்டிய சான்றின் மாதிரிப் படிவத்தைக் காண இந்த இணைப்பில் செல்லவும்.

https://docs.google.com/file/ d/1oiaOxsjjbSFT3CFsMrR5AgnK6x8jvSGE4bNiGIYX9I EUJH5Do8cP9 JL6WL4J/edit

உங்கள் ஊரின் எந்த மருத்துவமனையில் இந்த வசதிகளைப் பெறலாம் என்பதைத் தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.

https://docs.google.com/file/d/1yOaTDA5h&NrGk&uJazqlgFKXvViHqJm ZaFKeRn9v8mm9 ZTsrEKq UNPVCCwv/eidt

மேலதிக விவரங்களுக்கு: இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

https://www.cmchistn.com/ இத்தளத்திற்குச் செல்லலாம்.
1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page2/74073.html#ixzz2rRo5t2Uy

தமிழ் ஓவியா said...


போகாத இடம்தன்னிலே போக வேண்டாம்


- மு.வி.சோமசுந்தரம்

விடுதலை வெளியூர் 23.7.2013 இதழில் ஒடிசா, பூரி ஜெகன்நாதர் தேரோட்டத் திருவிழாவில், இத்தாலி நாட்டை சேர்ந்த அம்மையாருக்கு, பக்தி போதையும் பண மோகமும் கொண்ட அர்ச்சகப் பார்ப்பன பண்டாக்களால் அரங்கேற்றிய வன்முறைச் செயலை, ஊசி மிளகாய் நன்கு எடுத்துக்காட்டி, பார்ப்பன பாரதியைக் கொண்டே வழிமொழியச் செய்துள்ளது பொருத்தமாக இருந்தது.

ஆணவமும், அகங்காரமும் கொண்ட அக்ரகார அர்ச்சகர்கள் பணம் தின்னும் பேய்கள் என்பதை விளக்கும், பூரி ஜெகன்நாத விழாவில் நடந்த கொடிய செயலை வேதனை யுடன், சென்னையை சேர்ந்த திரு. பி.இராமதாஸ், தி இந்து (23.7.2013) இதழில் ஆசிரியருக்கு கடிதம் பகுதி யில் கூறியுள்ளதைக் காண்போம்.

பூரியில், சிட்டாரிஸ்ட் அம்மையா ருக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி படித்தபோது நான் ஆச்சரியப்பட வில்லை. எழில் தோற்றத்துடனும், வழிபடத்தக்கதுமான லார்ட் ஜெகன்நாதன் கோயிலுக்கு யாத்ரீகர் களாக வரும் பெரும்பான்மையோ ருக்கும் இதே அவல நிலைதான். இதில் வித்தியாசம் இல்லை. ஒரு நண்பர் குழுவை 2011-ஆம் ஆண்டு ஒடிசாவுக்கு அழைத்துச் சென்றேன். மரத்தால் செய்யப்பட்ட ஜெகன்நாதர், பாலபத்ரா, சுபத்ரா கடவுள் பொம் மைகள் கருவறையில் ஒளி வீசி காணப்பட்டன.

நாங்கள் (கூட்டத்தில்) மெதுவாக நகர்ந்து கருவறை அருகில் சென்ற போது, அங்கிருந்த அர்ச்சகர்கள் எங்களை இழுத்து முரட்டுத்தனமாக வெளியே இழுத்தார்கள். அதில் ஒருவன் என்னை தள்ளி என் தலையை லார்ட் பாதங்களில் அழுத்தி, என்னை அசைய விடாமல், தலையைத் தூக்கவிடாமலும் வைத்து, நான் பல நூறு ரூபாய்களைக் கொடுத்தபிறகு என்னை விடுவித்தான். அர்ச்ககர்கள் எங்களை அடுத்ததாக கடவுள்களை சுற்றிவர சொன்னார்கள். அந்த குறுகிய பாதையில் வேறு பல அர்ச்சகர்களைப் பார்த்தோம். அவர்கள் மேலும் பணம் கொடுக்கும்படி நச்சரித்தார்கள்.

இது சூடுபட்ட பூனை போன்ற ஒருவரின் ஒளிவு மறைவற்ற ஒப்பாரி. மக்களின் பணத்தை உறிஞ்சும் அட்டை யாக செயல்படத்தான் கோயில்கள் கட்டப்பட்டன என்று அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் கூறியுள்ளார். பணத்தை பறிகொடுத்த துடன், அறிவையும் அடைமானம் வைக்கத் தயாராக உள்ளவரை என்னவென்று அழைப்பது? முட்டாள் என்று அழையுங்கள் என்று சரியான பதிலை அறிவு ஆசான் சொல் லிவிட்டாரே.

தந்தை பெரியார் சுருங்கச் சொல்லி விளங்க வைத்ததை தத்துவமாக பாடல் வரிகளாக
பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம் பேய்ப்பிடிப் புற்ற பிச்சுப்
பிள்ளைவிளையாட்டென உணர்ந்திடா துயிர்கள் பல
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன் என
வடலூர் வள்ளலார் கூறியுள்ளார்.

இதே பூரி செகன்நாதன் கோயி லுக்குச் சென்ற மேனாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரை கோயிலின் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. காரணம் அவரின் கணவர் இந்து அல்லவாம். போகாத இடந் தன்னில் போவதால்தானே இந்த வேடிக்கை பிள்ளை விளையாட்டெல்லாம்.

Read more: http://viduthalai.in/page2/74074.html#ixzz2rRoLxjf4

தமிழ் ஓவியா said...


வரிப் பாக்கி டிமிக்கிகள்!



1. வோடாபோன் இன்டர்நேஷனல் ஹோல்டிங் ரூ.22146 கோடி
2. எல்.அய்.சி. ரூ.11,606 கோடி
3. ஆதித்யா பிர்லாடெல்காம் ரூ.3173 கோடி
4. எச்.டி.எஃப்சி வங்கி ரூ.2653 கோடி
5. ஆந்திரா பேவரேஜ் கார்ப்பரேசன் ரூ.2413 கோடி
6. பிரதீப் பாஸ்பேட்ஸ் ரூ.2374 கோடி
7. மைக்ரோ சாஃப்ட் இந்தியா ரூ.1999 கோடி
8. ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1856 கோடி
9. ஆந்திரப் பிரதேச வீட்டு வசதி வாரியம் ரூ.1753 கோடி
10. அய்.சி.அய்.சி.அய். வங்கி ரூ.1658 கோடி
ரூ.51,661 கோடி

Read more: http://viduthalai.in/page8/74082.html#ixzz2rRpXgb00

தமிழ் ஓவியா said...

அந்தத் தீயும் - இந்தத் தீயும்

அந்தத் தீ: திருவண்ணாமலை நகரத்தில் நள்ளிரவில் கோயி லுக்குச் சொந்தமான கோயிலுக்கு எதிரே உள்ள 12 பாத்திரக்கடைகள் எரிந்து சேதமடைந்தன. வியாபாரிகள் அய்யோ, அய்யோ என்று வயிற்றில் அடித்துக் கொண்டார்கள்.

இந்தத் தீ: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கொப்பரையில் காடாவை யும், நெய்யையும் போட்டு எரித்தார்கள் கூடியிருந்த ஆயிரக்கான மக்கள் அரோகரா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

- எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page8/74082.html#ixzz2rRpgkmdc

தமிழ் ஓவியா said...


செவ்வாய்க்கோளில் நல்ல தண்ணீர் அமெரிக்காவின் ஆப்பர்சூனிட்டி விண்கலம் கண்டுபிடித்தது


வாஷிங்டன், ஜன.25- அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யம் கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பாக செவ்வாய்க்கோளுக்கு ஆப்பர்சூனிட்டி என்ற விண்கலத்தை அனுப் பியது. தற்போது அந்த விண்கலம் செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நல்ல தண்ணீர் இருந்த தற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளது. அது குடி தண்ணீரை போன்றது என்று வாஷிங் டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்விட் சான் கூறியுள்ளார்.

ஏற்கெனவே நாசா வின் மற்றொரு விண் கலமான கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய்க் கோளின் மற்றொரு பகுதி யில் தண்ணீர் இருந்த தற்கான ஆதாரத்தைக் கண்டறிந்தது. இப் போது ஆப்பர்சூனிட்டி விண்கலமும் கண்டு பிடித்திருப்பது செவ் வாய்க்கோளில் நல்ல தண்ணீர் இருந்ததற் கான வலுவான ஆதார மாக அமைந்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/74094.html#ixzz2rRq9odfj

தமிழ் ஓவியா said...


காகிதப் புலிகளின் கணிப்புகள்!


16ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபி வெற்றி உறுதி என்றும், நரேந்திரமோடி இப்பொழுதே பிரதமராக ஆகி விட்டார் என்பது போலவும் ஊடகங்கள் ஒருமாயையை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகின்றன. கருத்துக் கணிப்பு என்னும் புழுதியைக் கிளப்பிப் பொது மக்களின் கண்களை மறைக்கப் பார்க்கின்றன.

பெரும் பெரும் பணக்காரர்களும், தொழில் அதிபர்களும், உயர் ஜாதிப் பார்ப்பனர்களும் தொலைக்காட்சி மற்றும் ஏடுகள், இதழ்களின் உரிமையாளர்களாகவும், பிரச்சாரகர்களாகவும் இருப்பதால் மோடி பிரதமர் ஆவது அவர்களின் சுயநல வளர்ச்சிக்குப் பெரிதும் பயன் உடைய தாக இருக்கும் என்ற உள்நோக்கத்தில்தான் இத்தகையப் பிரச்சாரப் பலூனை ஊதி ஊதி வண்ண வண்ணமாக வானில் பறக்க விடும் கண்கட்டு வித்தையைச் செய்து காட்டுகின் றனர்.

கீரிக்கும், பாம்புக்கும் சண்டை சண்டை என்று கூவி பொது மக்களை பெரிய அளவில் கூட்டி அவர்களிடம் பணம் பறித்து கடைசி வரை அந்தச் சண்டையை நடத்திக் காட்டாத தெரு வோரத்துக் கில்லாடிகள் போல இந்துத்துவா கூட்டம் செயல்படத் தொடங்கி விட்டது!

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஆங்கிலம் மற்றும் இந்தி ஏடுகள் தொலைக்காட்சிகள் 37இல் முக்கியப் பொறுப்புகளில் உள்ள 315 பத்திரிகையாளர்களில் ஒருவர்கூட தாழ்த்தப் பட்டவரோ பழங்குடியினரோ இல்லை. இதில் 49 சதவிகிதம் பார்ப்பனர்கள் (இவ்வளவுக்கும் இவர்கள் மூன்றே மூன்று சதவீதத்தினரே!) மராத்தாக்கள், படேல்கள், ஜாட்கள் என்று 88 சதவீதம் உயர் ஜாதியினர் ஊடகத் துறைகளில்.

மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர் ஊடகத் துறையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவே. பெண்களைப் பொறுத்த வரையில் ஊடகத்துறையில் உயர் பதவிகளில் பார்ப்பனர்களாகவே இருந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் கவனத்தில், கணக்கில் கொண்டால்தான், கருத்துக் கணிப்பு என்ற பெயரால் மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்தும் சூழ்ச்சிக்கான பின்னணி புரியும்.


இணையதளங்களைப் பொறுத்தவரையில் மோடி செய்யும் மோடி மஸ்தான் வேலை அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.

மோடியின் டுவிட்டர் என்ற இணையதளத் தில் பத்து லட்சம் பேர் இணைந்து விட்டனர் என்று பிரச்சாரப் பெரு வெள்ளம் அனைவர் மூக்கிலும் விரலை வைத்துப் பார்க்கச் செய்தது. இலண்டன் ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதளப் பொறியாளர் குழு, மோடியின் கணக்கில் உள்ளதில் 46 சதவீதம் போலி என்றும்; 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்காளர்கள் என்றும் அம்பலப்படுத்தப் படவில்லையா!

இவற்றைப்பற்றி எல்லாம் - இப்பொழுது கருத்துக் கணிப்பு வெளியிடும் இந்த ஊட கங்கள் எந்த அளவு மோடியை அம்பலப் படுத்தின? மோடியை ஒரு பொய்யர் என்று எழுத முன் வந்தனவா?

2004 மக்களவைத் தேர்தலில்கூட பிஜேபி தான் வெற்றி பெறும் என்று இந்த ஊடகங்கள் எழுதவில்லையா? தேர்தல் முடிவு வேறு விதமாகத் தானே அமைந்தது. இதை அத்வானி சில நாட்களுக்கு முன் நினைவூட்டிட வில்லையா?

2009 தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சார விளம்பரம் பிஜேபிக்குக் கை கொடுத்ததா?

அதேபோல்தான் இப்பொழுது பிஜேபி பற்றியும், மோடி பற்றியும் திட்டமிட்ட வகையில் செய்யப்படும் பிரச்சாரமும், கருத்துக் கணிப்பும்! வாக்காளர்களே, ஏமாந்து விடாதீர்கள். விரியன் பாம்பை விலைக்கு வாங்காதீர்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/74099.html#ixzz2rRqbXzyg

தமிழ் ஓவியா said...

பார்ப்பன சூழ்ச்சியும் பனகல் ராஜாவும்

டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத் தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது ஒரு கவுரவமோ கண்ணியமோ, பிரதிநிதித் துவமோ பொருந்தியது என்று சொல்வதற் கில்லை. இந்த ஒரு வருஷத்திற்குள்ளாக 3,4, தடவை நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாய் விட்டது. இதைப் போன்ற விளை யாட்டு விஷயங்களே மிகுதியும் சட்ட சபைகளில் நடக்கின்றதேயல்லாமல் பொதுஜனங்களுக்கு அனுகூலமாக ஒரு காரியமாவது நடந்திருப்ப தாகச் சொல்வதற்கில்லை.

இப்போது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பார்ப்பனர் கட்சி யாகிய காங்கிரஸ் என்கின்ற கட்சியில் 23பேரும், மந்திரி கட்சியில் 7 பேரும், ஜஸ்டிஸ் கட்சியில் 6 பேரும் எழுந்து நின்ற தாகத் தெரிகின்றது. ஆகவே மூன்று கட்சிகளிலும் பிளவு ஏற்பட்டிருக் கிறதாகத் தெரிகிறது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியிலும் ஆறு பேர்கள் எழுந்து நின்றதாக ஏற்பட்ட தானது பெரிய முட்டாள்தனமான காரியம் என்றே சொல்லுவோம். ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக சர்க்காருடன் ஒத்துழைப்பதைப் பற்றியும், சர்க்காரோடு ஒத்துழையாமை செய்வதைப் பற்றியும், அவர்களும் பார்ப்பனர்களைப் போல் தேசிய வேஷம் போடுவதைப் பற்றியும் நமக்கு சிறிதும் கவலையில்லை. ஆனால் அந்த அறிவு அதாவது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு என்கின்ற அறிவு ஒரு சிறிதும் இல்லாமல் நூற்றுக்கு மூன்றுபேர் கொண்ட பார்ப்பன சூழ்ச்சிக்கு அனுகூலமான வழிகளில் பார்ப்பனருடன் ஒத்துழைக்கப் போவது நமது சமுகத்திற்கும் நாட்டிற்கும் ஆபத்தான காரியம் என்பதே நமதபிப் பிராயம். கொஞ்ச காலமாக பனகல் ராஜா அவர்களின் போக்கு மிகுதியும் ஒழுங்கற்ற தாகவே போய்க் கொண்டிருக்கின்றது. கோயமுத்தூர் மகாநாட்டிலிருந்து குற்றத் தின் மேல் குற்றம், அறியாமையின்மேல் அறியாமையாகவே, நடவடிக்கைகள் நடந்து கொண்டு வருகின்றன. இது ராஜா அவர்களின் பெரிய யுக்தியான காரியமாயும் இருக்கலாம். அதனால் ஏதாவது சில வெற்றி ஏற்பட்டதாகவும் காணலாம். ஆனால் இதெல்லாம் பார்ப்பன ரல்லாதார் கட்சி தேய்ந்து போகும்படியானதாகி விடும் என்று நாம் பயப்படுவதுடன் ராஜா அவர் களும் கண்டிப்பாய் சீக்கிரத்தில் உணரக் கூடும் என்றே சொல்லுவோம். டாக்டர். சுப்பராயனிடம் இப்போது ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவ நம்பிக்கை என்ன வென்று கேட்கின்றோம். இந்த விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ளும் ஏன் பிரிவு ஏற்பட இடம் உண்டாக வேண்டும்? பார்ப் பனர்கள் சைமன் கமிஷன் விஷயமாய் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள் என்பது ராஜா அவர்களுக்குத் தெரியாதா என்று கேட்கின்றோம்.

உண்மையில் இரட்டை ஆட்சியை ஒழிக்கத் தீர்மானம் கொண்டு வந்திருந்தால் அது வேறு விஷயம். அப்படிக்கில்லாமல் இரண்டு மந்திரி களை இரட்டை ஆட்சிக்கு உதவிபுரிய விட்டு விட்டு பார்ப்பன ஆட்சியின் அனுகூலத்திற்காக ஒரு தீர்மானம் பார்ப்பனக் கட்சியார் கொண்டு வந்தால் அதற்கு பார்ப்பனரல் லாதார் கட்சித் தலைவர் என்பவர் உதவி அளிக்கலாமா? என்பது நமக்கு விளங்கவில்லை. சூதாடுவதில் லாபமே ஏற்பட்டாலும் அதுகெட்டகாரியம் என்பதையும் அது எப்படியானாலும் கடைசி யாக நஷ்டத்தையும் கஷ்டத்தையும் கொடுத்தே தீரும் என்பதையும் உணர்ந்து இனியாவது ராஜா அவர்கள் தயவு செய்து இந்த அரசியல் சதுரங்கத்தை விடுத்து கட்சியை உருவாக்க முயற்சிப்பாராக!
- குடிஅரசு - தலையங்கம்-04.03.1928

Read more: http://viduthalai.in/page-7/74112.html#ixzz2rRrMCgmA

தமிழ் ஓவியா said...

பெரிய அக்கிரமம்

பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது,

ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல் போட்டு உபநயனம் செய்யப்பட்டதாம். இதற்காகப் பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டனவாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம்.

ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத்தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்மவர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயனத் தாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின்றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும். எனவே இந்தப் பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனிவாசய் யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார்களாகவும் விபூதி பூசினார்களானால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், கே.நடராஜன் போன்றவர்களாகவும், கோபி சந்தனம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் மதனமோகன மாளவியாவாகவும் தோன்றப்போகிறார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை. இவைகளுக்குச் சற்று தாமதமானாலும் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியா ராகவாவது வெகு சீக்கிரத்தில் வரப்போகிறார்கள் என்பது உறுதி. பூணூலை அறுத்தெரிய வேண்டிய சமயத்தில் ஆயிரக்கணக் கான பேருக்குப் பூணூல் உபநயனம் நடப்பது அக்கிரமம்! அக்கிரமம்!! பெரிய அக்கிரமம்!!!

எனவே தீண்டாதார்கள் என்கிற நமது சகோதரர்களைப் பார்ப்பன மதத்திற்கு விட்டு பார்ப்பனர்களுக்குப் பறிகொடுக்காமல் அவர்களுக்குச் சகல உரிமைகளும் கொடுக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் முக்கிய கடமையாகும்.
- குடிஅரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/74112.html#ixzz2rRrV7QWm

தமிழ் ஓவியா said...


அறிவியல் ரீதியான முன்னேற்றம் தேவை! மதவாதமும், பயங்கரவாதமும் பாதிப்பை ஏற்படுத்தும்


முன்னாள் குடியரசுத் தலைவர் விஞ்ஞானி அப்துல்கலாம் இளைஞர்களுக்கு அறிவுரை

புவனேஸ்வர், ஜன.26- மூடநம்பிக் கையை விட்டொழிப்பீர், அறிவியல் மனப்பான்மை இளைஞர்களுக்குத் தேவை மதவாதமும், பயங்கரவாதமும் உலகின் பல பாகங்களைப் பாதித்துள்ளது என்றார் விஞ்ஞானி அப்துல்கலாம். ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், சுவாமி சிதானந்தா ஜன்மா ஷதாபார்ஷிகி மகோற்சவா என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்துல் கலாம், இந்திய இளைஞர்கள் குறித்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது : அறிவியல் ரீதியிலான முன்னேற்றம் தொடர்பான அறிவு, மூடநம்பிக்கை மற்றும் தேவையற்ற விஷயங்களுக்கு எதிரான அறிவு ஆகியனவே நாட்டின் சீர்திருத்தத்திற்கு தேவையான, பயன்தரும் அம்சங்களாகும்; மதத் தலைவர்களும், ஆன்மிகத் தலைவர்களும் இது போன்ற சமுதாய மாற்றம் ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்;

மதம் சார்ந்த அடையாளங்கள், இனம் மற்றும் ஜாதி ஆகியன இந்திய சமுதாயத்தில் மாற்றமும், சீர்சிருத்தமும் ஏற்பட மிகப் பெரிய சவாலாக உள்ளன; சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அறிவியல் சார்ந்த அறிவைப் பெற இளைஞர்களைத் தூண்ட வேண்டும்; அவற்றை ஆராய்ந்து, அறிவு சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டு, மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மதவாதம் - பயங்கரவாதத்தின் ஆபத்து

இளைய இந்திய தலைமுறை, மற்றவர் களின் வழிகாட்டுதல் இன்றி, தானே தன்னை உணர்ந்து சுயஅறிவை வளர்த்துக் கொள்ளும் திறனை ஏற்படுத்துவது நமது கடமை; வழிகாட்டித் திறமையை வெளிப் படுத்துவது உண்மை இல்லை; சுயமாக உருவாக்குவது, சுயமாக அதனை வளர்த் துக் கொள்ள வேண்டும்; இது அறிவுத் திறன் குறைபாட்டை ஏற்படுத்தாது; உறுதிக் குறைப்பாட்டை ஏற்படுத்தி விடும்;

தனி மனிதனை விட நாடு முக்கியம்; இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்; மக்களை வலிமைப்படுத்தி, பிரிவினையை அகற்ற மதத் தலைவர்கள் முன்வர வேண்டும்; மனித சமுதாயம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டுள்ளது; பயங்கர வாதமும், மத மோதல்களும் உலகின் பல பகுதிகளைப் பாதித்துக் கொண்டுள்ளன.

இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட ஆன்மிக சமுதாயத்தினர் உறுதி கொள்ள வேண்டும்; மத ஒருங்கிணைப்பு ஏற்பட கோட்பாடு மற்றும் உலக ஒத் துழைப்புடனான வலிமையான அடித் தளத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அப்துல்கலாம் வலியுறுத்தினார்.

சமீபத்தில் தான் எழுதிய வட்டத்தை சதுரமாக்குவது : இந்திய மறுமலர்ச்சிக்கு ஏழு படிகள் என்னும் புத்தகத்தை மேற் கோள் காட்டியும் அப்துல் கலாம் உரை நிகழ்த்தினார்.

Read more: http://viduthalai.in/e-paper/74143.html#ixzz2rYdhTL6q

தமிழ் ஓவியா said...


நாமக் கடவுளுக்கே நாமம் போட்ட தேவஸ்தானம்

திருப்பதி, ஜன.26- திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் கடந்த வைகுண்ட ஏகாதசி, துவாதசியன்று சொர்க்க வாசல் வழியாக சுவா மியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதிய தாம்!

வி.அய்.பி.க்கள் பாஸ் அதிக அளவில் வழங்கப் பட்டதால் சாதாரண பக்தர்களுக்கு தரிசனம் செய்ய மணிக்கணக்கில் தாமதமானது. இதனால் பக்தர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

திருமலையில் ஆர்ப் பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ள தால் போராட்டம் நடத் திய பக்தர்கள் மீது வழக் குப் பதிவு செய்யப்பட் டது. பின்னர் அது திரும் பப் பெறப்பட்டது.

இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி யன்று சாதாரண பக்தர் களுக்கு போதிய வசதி செய்யவில்லை என்று தேவஸ்தானம் மீது குற் றச்சாட்டு கூறப்பட்டது.

இதுதொடர்பாக தெலுங்கு தேச பிரமுகர் தவசானி சிறீனிவாச யாதவ், ஆந்திர உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள் ளார். தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

வைகுண்ட ஏகாத சியன்று நாடு முழுவ திலும் இருந்து ஏராள மான பக்தர்கள் ஏழு மலையான் கோவிலுக்கு வருவார்கள் என்று தெரிந்தும் உரிய ஏற் பாடுகளை செய்ய நிர் வாகம் தவறி விட்டது.

வி.அய்.பி. தரிசன அனுமதிச் சீட்டுகளை முறைகேடாக விற்று விட்டது. வி.அய்.பி. பக் தர்கள் அதிக அளவில் தங்களது குடும்பத்தினரு டன் வந்ததால் அவர்கள் தரிசிக்க அதிக நேரம் ஒதுக்கப்பட்டதால் சாதாரண பக்தர்கள் அவதிப்பட்டனர்.

முதல் அமைச்சர் கிரண் குமார் ரெட்டி யின் தம்பி கிஷோர் குமார் ரெட்டிக்கு அதிக முக்கியத்துவம் அளிக் கப்பட்டது. எந்த பத வியும் இல்லாத ஒருவ ருக்கு தேவஸ்தானம் எப்படி முக்கியத்துவம் அளிக்கலாம்.

வைகுண்ட ஏகாத சியன்று வி.அய்.பி. பக்தர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தர விட வேண்டும். இவ் வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசா ரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/74138.html#ixzz2rYdqSfob

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்!

சுதந்திரம்

சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவுக்கு 8 அடுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு (சுதந்திரம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்; முன்பு ஒரு தடவை இந்தியப் பிரதமர் கூண்டுக்குள்ளிருந்து தேசியக் கொடியை ஏற்றினார் என்பதும் நினைவூட்டத்தக்கது).

வெற்றி! வெற்றி!!

இன்று சென்னை கடற்கரையில் குடியரசுத் தின விழா நடைபெற்றது. ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடியை ஏற்றினார். முதல் அமைச்சர் பங்கு கொண் டார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெற்றி! வெற்றி! எனும் தொடங்கும் ஒரே பாடலுக்கே நடனம், ஒயிலாட்டம், கரகாட்டம் என்று பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இரு பால் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர் - சிறப்பாகவே இருந்தது.

வெற்றி! வெற்றி! என்று முதல் அமைச்சரைக் குளிர வைப்பதற்கானவை அதற்குள் இடம் பெற்றி ருந்தன; நமது அதிகாரிகள் அரசியல்வாதிகளாக மாறி விட்டனரோ என்ற நினைக்கத் தோன்றுகிறது. அது எப்படியோ போகட்டும்!

அந்தப் பாடல் காளிதேவியிடம் அருள் கேட்பதாக அமைந்துள்ளதே - அது எப்படி? குடியரசு தினம் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது அல்லவா!

அதில் ஒரு ஹிந்து மதக் கடவுளச்சியிடம் பிரார்த்தனை செய்வதாகப் பாட்டு அமையலாமா?

வந்தே மாதரம் பாடல் வேறு வரிகளில் ஒலிக்கிறதா? காளியிடம் வேண்டுகோள்விடுப்பதை மற்ற மற்ற மதக் காரர்கள் ஏற்றுக் கொள்வார்களா? பகுத்தறிவாளர்களின் கருத்து அது பற்றி என்ன? மதச் சார்பற்ற ஓர் அரச மைப்புச் சட்டத்தை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு அந்த நாட்டின் குடியரசு தின விழாவிலே குறிப்பிட்ட மதத்தின் கடவுளை முன்னிலைப்படுத்தலாமா!

கட்சியின் பெயர்தான் வேறு - ஆனால் நடப்பது ஹிந்துத்துவா ஆட்சி என்று தங்களை அடையாளம் காட்டுகிறதா அ.இ.அ.தி.மு.க. ஆட்சி?
வாழ்க அண்ணா நாமம்!

அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்

மாநிலங்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளராக சின்னத்துரை என்பவர் முதல் நாள் அக் கட்சியின் பொதுச் செயலாளரால் அறிவிக்கப்படுகிறார். மறுநாள் அவருக்குப் பதிலாக வேறொருவர் அறி விக்கப்படும் தமாஷ் ஒருபுறம் இருக்கட்டும்.

முதலில் அறிவிக்கப்பட்டவரை கட்சியின் அடிப்படை உறுப் பினர் உட்பட அனைத்திலிருந்தும் நீக்கி வைக்கும் அதிரடி அறிக்கை கட்சியின் பொதுச் செயலாளரிட மிருந்து வருகிறது என்றால். அடேடே இதற்குப் பெயர்தான் அவரே போல் உண்டா? இதற்கெல்லாம் ஒரு தனி அத்து வேண்டும் என்று சொல்ல ஆரம் பித்து விடுவார்கள்; எழுத ஆரம்பித்து விடுவார்கள்.

ஒரு வேட்பாளரை அறிவிப்பதற்கு முன் அவரைப் பற்றி தீர விசாரித்து அடையாளங்கண்டு அறிவிக்கும் அடிப்படை அணுகுமுறை இல்லையே என்று எவராவது எழுதுவார்கள் என்று நினைக்கிறீர்களா? நல்ல பத்திரிகா தர்மம்!

வேதமந்திரம் குறுந்தகடு

வேத மந்திரம் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. ராமானுஜ எம்பார்ஜீயர் வெளியிட, பெற்றுக் கொண்டவர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி சுந்தரம், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் என். வெங்கட் ராமன், அறக்கட்டளைத் தலைவர் மோகன் பராசரன், மியூசிக் அகாடமி செயலாளர் பட்டி வேணுகோபால் ராவ் - இதில் அவாளைத் தவிர வேறு எவாளையும் அழைக்காததிலிருந்து என்ன தெரிகிறது? அவாள் என்றென்றும் அவாளாகவே இருக்கிறார்கள் - இது இவாளுக்கு எப்பொழுது புரியப் போகிறதோ?

Read more: http://viduthalai.in/e-paper/74142.html#ixzz2rYe93w7p

தமிழ் ஓவியா said...


ஜோடியைப் பிரித்தஜோசியர்!


திருமணமான ஒருசில மாதங்களிலேயே, கண வனை இழந்த நான், சமீ பத்தில், மறுமணம் செய்து கொண்டேன். சில மாதங் கள் வரை, எங்கள் மண வாழ்க்கை, சந்தோஷமாக சென்றது. இரண்டு மாதங்களுக்கு முன், என் கணவர், தான் வேலை செய்யும் இடத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில், அவருடைய கால் எலும்பு முறிந்து, மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். ஓர ளவு குணமான பின், வீடு திரும்பிய அவர், தனக்குத் தெரிந்த ஜோசியர் ஒரு வரிடம் குடும்பத்தின் எதிர் காலம்பற்றி கேட்டுள்ளார். பேச்சினிடையே என்னைப் பற்றியும் சொல்லியிருக் கிறார்.

உடனே, அவர் ஜோசி யர், நீ அந்த விதவைப் பெண்ணை மணந்து கொண்டதால் தான், இப் படிப்பட்ட ஆபத்து வந்திருக் கிறது. உன் மனைவிக்கு தோஷம் இருக்கிறது. கூடிய விரைவில் உன் உயிருக்கே கூட ஆபத்து வரலாம். அவளை விட்டு பிரிந்திருப் பதுதான் நல்லது.. என்று சொல்லி, என் கணவரைக் குழப்பி விட்டார்.

அதிலிருந்து எதற்கெ டுத்தாலும் எங்களுக்குள் ஒரே சண்டை, சச்சரவு தான். சிறு சிறு விஷயங் களை கூட பெரிதுபடுத்தி, என்னை அடிக்கவும், திட் டவும் ஆரம்பித்து விட்டார். இதனால், எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு, இரு வரும் பிரிந்து விட்டோம். இதற்கெல்லாம் காரணம், அந்த ஜோசியர்தான். இனி மேலாவது, ஒற்றுமையாக வாழ்ந்து வரும் குடும் பத்தைப் பிரித்து வைத்து, அவர்களின் வாழ்க்கையை பாழாக்காமல் இருப்பாரா!

- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி. மேற்கண்ட செய்தியை வெளியிட்டு இருப்பது உண்மை இதழ் அல்ல - விடுதலை நாளேடும் அல்ல. சாட்சாத் தினமலர் அய்யர்வாள் ஏடு.
(தினமலர் வார மலர் 26.1.2004 பக்கம் 4)

என்னதான் அவர்கள் நமது பகுத்தறிவுப் பிரச் சாரத்தை இருட்டடித்துப் பார்த்தாலும், திரித்து வெளியிட்டு வந்தாலும் அவர்களை அறியாமலேயே உண்மையைக் கக்கித்தான் தீர வேண்டியுள்ளது.

ஜோதிடம் வாழ வைக் கவா? வாழும் குடும்பத்தின் தலையில் கொள்ளி வைக் கவா?

என்பதை ஆறாவது அறிவு இருப்பதாகக் கரு தப்படுகிற மனிதன் சிந் திக்க வேண்டாமா?

மனிதன் பிறக்கிறான். அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகப் பொருத் தம் பார்க்கும் ஜோதிடர்கள், நாய் குட்டிப் போடுகிறதே - அந்த நேரத்தை வைத்து நாய்களுக்கு ஜாதகம் பார்ப்பதுண்டா?

மயிலாடுதுறையில் ஒரு நிகழ்ச்சி! நாய் குட்டிப் போட்ட நேரத்தையும், திரு மணம் ஆக வேண்டிய ஒரு பையன் பிறந்த நேரத்தை யும் கொண்டு சென்று ஒரு பிரபல ஜோதிடரிடம் கொடுத் துப் பொருத்தம் பார்க்கச் சொன்னபோது, சகலப் பொருத்தமும் ஜோடிக்கு ஜோராக இருக்கிறது என்று ஜோதிடர் அடித்துச் சொன் னதுதான் நினைவிற்கு வருகிறது. கறுப்புச் சட் டைக்காரன் சொல்லும் போது கோபம் வெடிக் கிறதே - தினமலரே சொல்லுகிறதே - என்ன செய்ய உத்தேசம்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/74192.html#ixzz2re4wCHjW

தமிழ் ஓவியா said...

உலகில் உயர்ந்தது ஆரிய இனமே என்று கொக்கரித்த கொடுங் கோலன் ஹிட்லர் 7 லட்சம் யூதர்களைப் படுகொலை செய்த நாள் இந்நாள் (1945).

இந்நாளை சர்வ தேசப் படுகொலை நினைவு நாளாக அய்.நா., அறிவித்துள்ளது (2005).

தமிழ் ஓவியா said...


இந்துத்துவா வெறியர்களின் வன்முறை வெறியாட்டம்!

மும்பை, ஜன.27- மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, நாக்பூர் சுங்கச்சாவடிகளை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, சுங்கச் சாவடிகளில் எந்த ஒரு கட்டணத்தையும் நாம் செலுத்தக் கூடாது. அப்படி செலுத்துமாறு யார் கேட்டாலும் போராடுங்கள்.. சண்டை போடுங்கள் என்று கூறியிருந்தார். இந்த பேச்சை தொடர்ந்து நாக்பூர், தானே மற்றும் அய்ரோலி ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கின்றனர் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவினர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/74195.html#ixzz2re5UdtVg

தமிழ் ஓவியா said...


இன்னும் எத்தனைப் பிரதமர்கள் தேவை?

புலி வருகிறது புலி வருகிறது! என்று சொல்லுவது போல, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு இதோ வருகிறது - இதோ வருகிறது என்று நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.

1996 தொடங்கி - இதுவரை பல பிரதமர்களைச் சந்தித்து வந்துள்ளது - இந்த மசோதா. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம், மக்களவையில் நிறைவேற்றப்பட முடியாத நிலைதான் இன்றுவரை; நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தொடர் கூட்டத்தில், இதற்கான சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் தருணம் என்பதால், அனேகமாக இந்தச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எதிர்ப் பார்க்கலாம்.

சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் போன்ற கட்சிகள் இதில் உள் ஒதுக்கீடு தேவை என்று வலியுறுத்துகின்றன; இது ஒரு நியாயமான கோரிக்கையாகும்.

உள் ஒதுக்கீடு அளிக்கப்படாவிட்டால், இந்த வாய்ப்பை உயர் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றிக் கொண்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் அதிகமாகவே நியாயம் உண்டு. மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியை உயர் மட்டப் பெண்கள் பிடித்தால் அது ஆபத்தாகவே முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்!

காங்கிரஸ் இந்த வகையில் தீர்க்கமாக முடிவு எடுத்தால் அதனை யார் எதிர்க்கப் போகிறார்கள்? இந்த எளிய கருத்து காங்கிரசுக்கு ஏன் விளங்கவில்லை என்பது விளங்காத புதிராகவே இருக்கிறது. காங்கிரசில் உள்ள உயர் ஜாதியினர், உள்ளுக்குள் முட்டுக்கட்டை போடுகிறார்களோ என்று அய்யப்படவும் இடம் இருக்கிறது.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினராக இருக்கும் பெண்களின் வாக்குகள், யாருக்குக் கிடைக்கின்றனவோ, அவர்கள்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை, மறந்து விடக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறதே, அதே நிலை, சட்ட மன்றங்கள், மற்றும் நாடாளுமன்றத்தில் ஏன் பின்பற்றக் கூடாது?

நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 10.7 விழுக்காடுதான்; உலக நாடுகளின் வரிசையில் இதில் இந்தியாவுக்கு 104 ஆவது இடம் என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். முசுலிம் நாடான பாகிஸ்தான் இப்பிரச்சினையில் 42ஆம் இடமாகும்.

இந்து மதம் - மற்ற மதங்களைவிட பெண்கள் பிரச்சினையில் எவ்வளவுப் பிற்போக்குத்தன மானது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் தங்கள் ஆற்றலை - சாதனைகளை வெளிப்படுத்தியே தீருவார்கள் என்பதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உண்டு.

கல்வியை எடுத்துக் கொண்டால், மிகவும் தாமதமாகப் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டாலும், தேர்வு முடிவுகளில் ஆண்களை பெண்கள் தண்ணீர் காட்டி வருகிறார்களே; இதன் பொருள் என்ன?

மாநிலங்கள், மற்றும் மத்திய அமைச்சரவையை எடுத்துக் கொண்டாலும் பெண்களுக்கு உரிய விகிதாசாரத்தில் இடம் கிடைப்பதில்லை - அப்படியே அமைச்சர் பொறுப்பு அளித்தாலும் சமூக நலத்துறை என்ற ஒன்றை பெண்களுக்காகவே ஒதுக்கி வைத்துள்ளார்கள்.

இதுபற்றியெல்லாம் பெண்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சி தேவையாகும். இந்தியாவிலேயே பெண்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவரும் ஒரே இயக்கம் - தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் கழகமே.

பெண்கள் கவனம் அழகு சாதனப் பொருள் களைச் சுற்றிச் சுழன்று வராமல், முற்போக்குச் சிந்தனையாளர்களாக, தங்களுடைய உரிமை களுக்காகக் களத்தில் இறங்கிப் போராடுபவர் களாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லையென்றால் எங்கள் வாக்குகளும் இல்லை என்று பெண்கள் வீதிகளில் வந்து குரல் கொடுக்கட்டும்! நிச்சயம் விடிவு கிடைக்குமே!

Read more: http://viduthalai.in/page-2/74198.html#ixzz2re5uDMdT

தமிழ் ஓவியா said...


கடவுளுக்கு முகவரி உண்டா? விடுதலை வாசகர் வட்டம் சொற்பொழிவில் கேள்வி

மதுரை, ஜன. 27- 12.01.2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பாக 13ஆவது தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. கூட்டத்திற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவரும் பணி நிறைவு பெற்ற நீதிபதியுமான பொ. நடராசன் தலைமை தாங்கினார். விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளா ளர் பெரி.காளியப்பன் வந்திருந் தோரை வரவேற்றார். "பெரி யார் பேழை" என்ற தலைப்பில் சடகோபன் அவர்கள் உரை யாற்றினார். அவரது உரையில் தானாக பிறக்காத மனிதன் தனக்காக மட்டுமே வாழக் கூடாது என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை விவ ரித்து பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. விடுதலை "இம்மாத சிந் தனை" என்ற தலைப்பில் மதுரை மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர் சுப.முருகானந்தம் இம்மாத விடுதலையில் வந்த செய்திகளை தொகுத்து ஆருத்ரா தரிசனம் பற்றிய விமர்சனம் மோடி வருகிறார் எச்சரிக்கை என்ற அரசியல் கட்டுரை, சிவகாசி மணியம் அவர்கள் எழுதிய கடவுளுக்கு முகவரி உண்டா" என்ற பகுத்தறிவுச் சிந்தனை, விடுதலை ஆசிரியரும் திராவிடர் கழகத்தலைவருமான தமிழர் தலைவர் அவர்களின் வாழ்வியல் சிந்தனையில் நடைப் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை மற்றும் பிரா மணாள் உணவு விடுதி பெயர் பலகை அகற்றல் பார்ப்பனர் மாநாட்டில் 10 இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை விரிவாக பேசி விடுதலையின் செய்திகள் அரசியல் பகுத்தறிவு வாழ்வியல் சிந்தனை இன உணர்வு போன்ற செய்திகளை சுட்டி காட்டியது வந்திருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. பேச்சாளர் பற்றிய அறிமுகத்தை மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் அ.வேல் முருகன் செய்தார்.

சிறப்புப் பேச்சாளரான மதுரை மாநகர திராவிடர் கழகத் தலைவர் சே. முனியசாமி "அயல் நாட்டு அனுபவங்கள்" என்ற தலைப்பில் அவர் சுற்றிவந்த 12 நாடுகள் பற்றிய அனுவங்களை சுவை பட எடுத்துரைத்தார். புத்தர் கோவிலில் 6 கைகள் உள்ள சிலையில் கையில் வேலா யுதம் சூலாயுதம் இருந்த கட் சியை சுவைபட எடுத்துக் கூறி னார். ஹுண்டாய் கார் கம்பெ னியில் ஒரு நிமிடத்திருக்கு ஒரு கார் தயாரிப்பதையும் ஒரு லட்சம் பேர் அங்கு வேலை செய்வதையும் அவர் கூறும் போது அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். சாலைகள் தூய்மையாக இருப்பதைக்கூறி காரில் செல்ப வர்கள் கூட உதிரும் இலை களை எடுத்து தங்கள் பையில் போட்டுகொள்கிறார்கள். அதே நேரத்தில் சீனர்கள் கடும் உழைப் பாளிகள் என்றாலும் ஏமாற்று பவர்களும் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார். அங்கு நீதிமன்றங்களில் உரிமை இயல் வழக்குகள் 6 மாதங்களி லும் குற்றவியல் வழக்குகள் 3 மாதங்களிலும் முடிவுக்கு வரு கின்றன என்று அவர் கூறும் போது வியப்பாக இருந்தது. அங்கு அணைகளில் தேங்கி யுள்ள தண்ணீர் 5 ஆண்டு பாசனத்திற்கு பயன்படுகிறது என்றார். ஹாங்காங்கில் உள்ள ஓட்டல்களில் தங்க கதவு செயற்கை வானம் ஆகியவை 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளதை வியந்து பாராட்டி பேசினார். அவரது அனுபவங் கள் அனைவரது கவனத்தை ஈர்த்ததோடு சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்திருந்தது. கூட்ட முடிவில் விடுதலை வாச கர் வட்ட செயலாளர் அ. முரு கானந்தம் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-4/74215.html#ixzz2re7jj1ea