Search This Blog

16.1.14

பார்ப்பனர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறார்களா?-பெரியார் மறுமொழி

தமிழர் திருநாள்
தமிழர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில் பல, தமிழர்களை இழிபடுத்துவனவாகவும், தமிழை அழிவுபடுத்துவனவாகவும், பொருளற்றனவும் அறிவுக்குப் பொருத்தமற்றனவுமான தொன்ம (புராண)க் கதைகளைப் பின்புலமாகக் கொண்டனவாகவும் இருந்த போதிலும் மக்கள் அவற்றையெல்லாம் பெரும்பொருட் செலவிலும் ஆரவாரமாகவும் கொண்டாடுவதில் பெரிதும் ஈடுபாடும் முனைப்பும் உடையவர்களாய் இருக்கின்றனர். இதனால் கடன்பட்டு உழல்வாரும் பலர்.

இந்நிலைகளுக்கு மாற்றாகவும், தமிழ் மக்களிடையே தமிழிய உணர்வும் இனநல உணர்வும் கிளர்ந்தெழுதற்கு வாய்ப்பாகவும், பொங்கலை வாழ்வியல் சிறப்பு விழா வாகக் கொண்டாடுவதோடு, இயக்க நிலைப்படுத்தியும் நாடெங்கும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று பெரு மக்கள் சிலர் மனங்கொண்டனர்.

பேரா. கா. நமச்சிவாயனார் ஏறத்தாழக் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்ப் பொங்கல் தமிழ் விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்னும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டார். தமிழ்ப் பேரறிஞர்கள், தமிழுணர்வுடைய அரசியல் கட்சித் தலைவர்கள் முதலானோரைக் கண்டு அளவளாவியதன் விளைவாகப் பொங்கல் தமிழர் திருநாளாக மலர்ந்தது. நாடெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பாகத் தமிழர் திருநாள் கூட்டங்கள் எழுச்சியுற நடைபெறலாயின.

தமிழர் திருநாள் தொடர்பாக மலேயாவில் உள்ள பெரியவர் புலவர் கா.ப. சாமி அவர்கள் கூறியுள்ளது அறியத் தக்கது. அது வருமாறு:

1937இல் திருச்சியில் அனைத்துத் தமிழர் மாநாடு என்று ஒரு மாநாடு, பசுமலை சோமசுந்தர பாரதியார்  தலைமையில் நடைபெற்றது. அதில் கா. சுப்பிரமணி யனார், மதுரைத் தமிழவேள் பி.டி. இராசன், திரு.வி.க., மறைமலையடிகளார் முதலான தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நானும் அக்காலத்தில் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு பெற்றிருந்தமையால், அங்கு இருந்த சூழ்நிலையில், அம் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டில், பொங்கல் சமய விழாவா, சமயமற்ற விழாவா என்று கடுமையான தருக்கம் நடைபெற்றது.

இறுதியாக மறைமலையடிகளார் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் இது (பொங்கல்) சமயச் சார்பு இல்லாத விழா. எந்தச் சமயத்துக்காரன், இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்த இலக்கணம் இதற்கு இருக்கிறது? எந்தப் புராணம், எந்த இதிகாசம் இருக்கிறது? எனவே, எந்தப் புராணமும் இல்லாத போது, தமிழில் புறநானூற்றில் பிட்டங் கொற்றனின் வரலாற்றில் கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கிறது. இதை யார் மறுக்க முடியும்? நண்பர் ஈ.வே.இரா. இதை ஏற்றுக் கொண் டாலும் சரி, ஏற்றுக் கொள்ளா விட்டாலும் சரி! என்றார்.

இல்லை; நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் தெளிவாக மறுமொழி உரைத்தார். பெரியார்தாம் இம்மாநாட்டை நடத்தினார்.

பொங்கல் மதச்சார்பற்ற, முதன்மையான, பொன்னான விழா என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் சொன்னதும் அனைவரும் கையொலி எழுப்பினர். திரு.வி.க எழுந்து, அருமை நண்பர் ஈ.வே.இரா. அவர்கள், பொங்கலைச் சமயச் சார்பற்ற ஒரு தனிப் பெருந் தமிழர் விழா என்று ஏற்றுக் கொண்டமைக்குத் தமிழுலகமே பாராட்டக் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டார். அதன் பிறகுதான் மிகச் சிறந்த விழாவாகப் பொங்கலை அனைவரும் ஏற்கத் தொடங்கினர்.

இச்செய்தி பலருக்குத் தெரியாது. நான் அம்மாநாட்டில் கலந்து கொண்டேன். எனக்கு அப்பொழுது அகவை 19.

அம்மாநாடு சிறப்பாக இந்தியை எதிர்ப்பதற்கு கூட்டப்பட்டதுதான். அதில்தான் பொங்கலைப் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தீர்மானத்தைமுன்மொழிந்தவர் பி.டி. இராசன். வழிமொழிந்தவர் திரு.வி.க.

தமிழர் திருநாள் கொண்டாடத் தொடங்கிய பின் வகை வகையான பொங்கல் வாழ்த்துக்கள் எழிலார்ந்த தோற்றத் தொடும், இனிய தமிழிலும் ஏற்றமிகு கருத்துகளொடும் மக்களி டையே பரவின. ஆரியப் பார்ப்பனர்கள் நடத்திய இதழ்கள் தீபாவளி மலர் வெளியிட்டு வந்ததைப் போல், தமிழுணர்வார்ந்த ஏடுகள் பொலிவான தோற்றத்தோடு பொங்கல் மலர் வெளியிடலாயின.

மேற்கூறியவாறு பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆங்காங் குத் தமிழர் திருநாள் கூட்டங்கள் எழுச்சியுற நடத்தப்பட்டன. தூயதமிழ்க் காவலர் கு.மு .அண்ணல்தங்கோ அவர்கள் தமிழர் திருநாளை ஆண்டுதோறும் பத்துநாள் விழாவாகப் பல்லாண்டுக் காலம் நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் மறுமொழி


பொங்கற் பெருநாளைத் தமிழர் திருநாளாக அறிவித்து அதனைத் தமிழ்நல, இனநல இயக்கங்களும் பிறவும் எழுச்சியுறக் கொண்டாடத் தொடங்கிய அளவில் அது தமிழ்மக்கள் வாழும் அயல்நாடுகளிலும் பரவலாயிற்று. ஆயினும் மலேயா -- சிங்கப்பூர் நாடுகளில் தமிழர் திருநாளைப் பரப்புவதில் பெரிதும் முனைந்து நின்றவர்களுட் சிலரே அதில் சற்று முரண்படுவார் ஆயினர்.

தமிழர்களில் கடவுள் நம்பிக்கையும் சமயப்பற்றும் கொண்டவர்களின் பொங்கல் கொண்டாட்டத்தில் சமயக் கடைப்பிடிகள் சில ஒட்டி நிற்றலைச் சுட்டிக்காட்டி, பொங்கல் விழா இந்துமதப் பண்டிகை யென்றும், அது தமிழர் திருநாளாகாது என்றும், தமிழர் திருநாளைப் பொங்கலொடு சார்த்தக் கூடாது என்றும், பொங்கற் பெருநாள் வேறு; தமிழர் திருநாள் வேறு என்றும் குறுக்குச்சால் ஓட்டத் தொடங்கினர்.

மலேயா -_ சிங்கப்பூரில் பொங்கல் நன்னாளே தமிழர் திருநாள் என்பாரும், அது இந்துமத விழாவே; தமிழர் திருநாள் அன்று என்பாருமாய்த் தமிழர்கள் முரண்பட்டு நின்ற நிலையில், அங்குச் சுற்றுச் செலவு மேற்கொண்டிருந்த தன்மானத் தந்தை பெரியார் ஈ.வே.இரா. அவர்களிடம் இதுபற்றி அவர்தம் கருத்தை அன்பர்கள் உசாவினர். அப்போது பெரியார் அவர்கள் கூறிய மறுமொழி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது!

அதுவருமாறு:

பொங்கல் தமிழர் விழாதான். அது இந்துமத விழா ஆகாது. இந்தமத விழாவாக இருந்தால், மற்ற மற்ற இந்துமத விழாக்களைப் போல் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுமா இல்லையா? அப்படிக் கொண்டாடப்படுவது இல்லையே, அது ஏன்? பொங்கல் தமிழ்நாட்டில் மட்டுந்தானே, அதிலும் தமிழர்களால் மட்டுந்தானே கொண்டாடப்படுகிறது!

பார்ப்பனர்கள் அதைக் கொண்டாடுகிறார்களா? இல்லையே! இந்துமத விழாவாக இருந்தால் அதைப் பார்ப்பான் கொண்டாடாமல் இருப்பானா?  அவன்தானே, அதைக் கொண்டாடுவதில் முந்திக் கொண்டு நிற்பான்! பார்ப்பான் அதைக் கொண்டாடவில்லை; கண்டு கொள்ளாமல் இருக்கிறான் என்றால் என்ன பொருள்? அது தமிழர் திருநாள் என்பதுதானே! இதில் என்ன ஐயப்பாடு?

------------------------நூல்: "தமிழ்த் தேசிய திருநாள்' புலவர் இறைக்குருவனார்

24 comments:

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?


தமிழ்நாடு அரசு தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ள பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவத் துறைப் பேராசிரியர்கள் உட்பட 84 பதவிகளுக்காகச் செய்யப்பட்ட விளம்பரத்தில் இடஒதுக்கீடு அறவே கிடையாது என்று குறிப்பிடப் பட்டுள்ளதானது தமிழ்நாட்டில் கட்சி, ஜாதி, மதங்களுக்கு அப்பால் பெரும் கொதி நிலையை ஏற்படுத்தி விட்டது.

அரசு விளம்பரத்திற்கு ஏதோ விளக்கம் கொடுப்பதுபோல் நினைத்துக் கொண்டு, முதல் அமைச்சர் கொடுத்த விளக்கம் மேலும் அரசின் தரப்பைப் பலகீனப்படுத்தி விட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனைப் பேராசிரியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தொட்டுக் காட்டிய இந்திரா சஹானி வழக்கில் நீதிபதிகள் ஆலோசனையாகச் சொன்ன வரிகளைப் பிடித்துக் கொண்டு, அந்த அடிப்படையில்தான் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக் கான விளம்பரத்தில் இடஒதுக்கீடு தவிர்க்கப் பட்டுள்ளது என்ற முதல் அமைச்சரின் சமாதானம் வலிய திணிப்பதாகும்.

அந்தத் தீர்ப்புக்குப் பிறகு மத்திய சுகாதார அமைச்சகம் அதே எய்ம்ஸ் மருத்துவமனை பணி நியமனத்தில் இடஒதுக்கீடு செய்வது தொடரப்பட வேண்டும்; சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் அரசு விண்ணப்பிக்கும் என்று ஆணை பிறப்பித்து அதன் அடிப்படையில் டில்லி மற்றும் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவ மனைகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் தம் அறிக்கையில் எவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தெளிவுபடுத்தி விட்டார்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் கூட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதா கூடாதா என்பதை மத்திய அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தியாகி விட்டது.

தமிழ்நாடு அரசுக்கு முன்னுள்ள ஒரே செயல் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தொடங்கப்பட உள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கான பணி நியமனம் குறித்து ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையைப் பின்வாங்கி 69 சதவீத அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதைத் தெளிவுபடுத்தி புதிய விளம்பரத்தை வெளியிடுவது என்பதேயாகும்.

நீதிமன்றத்தில் கூறப்பட்ட ஆலோசனை வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு, தான் எடுத்த நடவடிக்கையை நியாயப்படுத்த அதிமுக அரசு முயற்சி செய்யக் கூடாது.

சமூக நீதியில் அக்கறை இருக்கும் பட்சத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பு சிறிது கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணமும் செயலும்தான் முன்னால் வந்து நிற்கும்.

இடஒதுக்கீடு பிரச்சினை என்று வருகிறபோது தமிழ்நாட்டில் அசைக்கவே முடியாத 69 சதவீதத்தை உறுதிப்படுத்தும் சட்டம் இருக்கிறது. கண்களை மூடிக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட்டால் நீதிமன்றமும் குறுக்கிடாது; மக்கள் மன்றமோ இரு கரம் இணைத்து கரஒலி எழுப்பி மாலை சூட்டி வரவேற்கும்.

முதல் அமைச்சர் என்ன செய்யப் போகிறார் என்பதை வெகு மக்கள் வெகுவாகவே எதிர்ப்பார்க்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/73675.html#ixzz2qhqh4bOS

தமிழ் ஓவியா said...


இடஒதுக்கீடுபற்றி முடிவு மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க வேண்டும்


சிறப்புத் தகுதியுள்ள மருத்துவத்துறை போன்ற நியமனங்களுக்கு இடஒதுக்கீடுபற்றி முடிவு மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க வேண்டும்

பந்து அவர்களது கோர்ட்டில்தான் உள்ளது

டில்லி எய்ம்ஸ் மருத்துவப் பேராசிரியர்கள் வழக்கின் மறுசீராய்வு மனுவின்மீது 5 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு


புதுடில்லி, ஜன.17-சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல் லூரி பதவி நியமனங்க ளுக்கு இடஒதுக்கீடு வழங் குவது குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் உள் ளிட்ட சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத் துவமனைகளில் (எய்ம்ஸ்) உள்ள பதவி நியமனங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்தஜூலை மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி கோரி, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய் யப்பட்டு இருந்த மனு, எச்.எல்.தத்து தலைமை யிலான 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் எல்.நாகேஸ்வரராவ் தனது வாதத்தை தொடங்க முயன்றார்.

உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த 1992ஆம் ஆண்டின் மண்டல் வழக்கு என்று அழைக்கப்படும் இந் திரா சஹானி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளைக்கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, உயர் சிறப்பு நிலை பதவிகளுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. இதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று தீர்ப்பு கூறி இருந்தது. எனவே இந்த தீர்ப்புக்கு எதிரான நிலை எதையும் மேற் கொள்ள முடியாது என்று சுட்டிக் காட்டி னார்கள். நீதிபதிகள் மேலும் தொடர்ந்து கூறும்போது, இதைத் தான் எங்களால் சொல்ல முடியும். அதே நேரத் தில், இதுபோன்ற உயர் சிறப்பு நிலைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதா, வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் விளக்கம் அளித்தனர். நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான இந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் எஸ்.எஸ். நிஜ்ஜார், ரஞ்சன் கோகாய், எம்.ஒய்.இக் பால், விக்ரம்ஜித்சென் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர். அப்படி மத்திய அரசு விரும்பினால், அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து இந்த பதவி களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம். அதன்பின் இந்த விவகாரம் நீதிமன் றத்திற்கு வந்தால் அப் போது பார்த்துக் கொள் ளலாம் என்றும், நீதிபதி கள் அப்போது கருத்துத் தெரிவித்தனர்.

(13.1.2014 சமூகநீதிப் பொதுக் கூட்டத்திலும் 16.1.2014 தமிழர் தலைவர் அறிக்கையிலும் சுட்டிக் காட்டியபடி, மாநில, மத்திய அரசுகள் முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டதை நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி களும் கூறியிருக்கின்றனர்).

Read more: http://viduthalai.in/e-paper/73672.html#ixzz2qhrQUTNa

தமிழ் ஓவியா said...


மதம் மாற்றம் செய்யும் ஒரு கடவுள்!


மதம் மாற்றம் செய்யும் ஒரு கடவுள்!

இந்து மதம், சைவ சமயம் தவிர்த்த பிற மதங்களில் மத மாற்றம் என்பது அந்தந்த மதத்தைச் சேர்ந்த பக்தர்களால், தொண் டர்களால் நிகழ்த்தப் பெறுகிறது. அவர்கள் தங்கள் மத நன்மைகளையும், சீர்களையும், சிறப்புகளையும் எடுத்துச் சொல்லி, அறி வுரைகள் வழங்கி, அதன் அடிப்படையில் மத மாற்றம் செய்ய முனைகிறார்கள்.

மேலும் சிறப்பாகவும், குறிப்பாகவும், கிறித்துவ மதத்தினர் மக்களுக்குக் கல்வி தந்து - மருத்துவ வசதிகள் செய்து, பால் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கி, அதன் அடிப்படையில் மக்களை நேசித்துக் கவர்ந்து தங்கள் மதத்திற்கு ஈர்க்கிறார்கள். இதுதான் உலக நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், எந்த மதத்திலும், அந்த மதக் கடவுளே முன்னின்று மத மாற்றத் திற்குக் காரணமாக இருந்ததாக வரலாறு இல்லை. இந்நிலையில், சைவ சமயத்தில் தான், சைவ சமயக் கடவுளான பரமேஸ் வரன் என்னும் சாட்சாத் சிவபெருமானே முன்னின்று மதமாற்றம் நடைபெற காரணமாக இருந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

அதாவது அறிவுரை வழங்கியோ, நன்மைகளை எடுத்துரைத்தோ, மத மாற்றம் செய்ததாக தெரியவில்லை. மாறாக அடித்தும், மிரட்டியும், உதைத்தும், பயப்படுத்தியும் வழிப்பறி கொள்ளை நடைபெறுவது போல, பிற மதத்தைச் சேர்ந்தோருக்கு நோயைக் கொடுத்து மிரட்டி, அச்சப்படுத்தி தன் சமயத்திற்கு ஈர்த்ததாக வரலாறு அமைகிறது.

சைவ பக்த அடியார்கள் மிகப் பெருமை யாகக் கீழ்க்கண்டவாறு கூறுவதை நாம் அடிக்கடி கேட்கலாம். எங்கள் சிவபெரு மான் பாலைக் கொடுத்து ஞான சம்பந்த ரையும், ஓலை கொடுத்து சுந்தரமூர்த்தி யாரையும், நூலைக் கொடுத்து மாணிக்க வாசகரையும் தடுத்தாட்கொண்டு மீட்டது போல, - சூலைக் (சூலை என்று சொல்லக் கூடிய கடுமையான வெப்ப வயிற்று வலியை) கொடுத்து திருநாவுக்கரசரை ஆட் கொண்டார் அதாவது சமண சமயத்தி லிருந்து சைவ சமயத்திற்கு மாற்றினார்.

இதற்கு, மத மாற்றம் தவறு; கூடாது என்று கூச்சல் போட்டு குழப்பமும், குதர்க்கமும் செய்யும் இந்து முன்னணித் தலைவர் ஆரியப் பார்ப்பன இராம. கோபால அய்யர்வாள்தான் விடை யிறுக்க வேண் டும்; பதில் சொல்ல வேண்டும்!

இதோ ஆதாரம்: சமண மதம் புகுந்து, பின் சிவபெருமான் தந்த சூலை நோயால் மீண்டும் சைவ சமயம் சேர்ந்தார் திருநாவுக்கரசர்.

(மறைமலை அடிகள் எழுதிய சாதி வேற்றுமையும் போலிச் சைவமும் எனும் நூலில் பக்கம் 75, தகவல்: குடந்தை கும்பலிங்கன்) அரசர்களும் - புரோகிதர்களும்
தலைமைப் பதவியிலும், பிறருடைய உழைப்பைச் சுரண்டு வதிலும், கொள்வினை கொடுப்பினையிலும் பிறப்பினாலுங்கூட அரசர்களும், புரோகிதர்களும் ஒரே இனத்தவர்கள்தாம். ஆயினும் அவர்கள் சத்திரியர்கள், பிராமணர்கள் என்று தனித்தனியே அழைக்கப் படுகிறார்கள்.
- ராகுல சாங்கிருத்தியாயன்

Read more: http://viduthalai.in/page-7/73686.html#ixzz2qhsueob2

தமிழ் ஓவியா said...

பாசிச மனப்போக்கு

இராமாயணக் கதையில், சீதாப்பிராட்டியைத் தேடி வந்த ராமதூதன் அனுமான் இலங்கையை எரித்தது பயங்கரவாதச் செயலா அல்லது வெறும் தற்காப்புச் செயலா என்ற கேள்வியை டில்லியைச் சேர்ந்த ஹன்ஸ் என்ற இந்தி பத்திரிகை தனது தலையங்கத்தில் எழுப்பியிருக்கிறது. இலங்கையை எரித்த அனுமானை ஒரு பயங்கரவாதியாகத்தான் கருத வேண்டும் என்று அந்தப் பத்திரிகை முடிவு கட்டுகிறது.

புராண, இதிகாசங்களை விஞ்ஞான முறையில் அணுகினால், இந்த முடிவு சரிதான் என்று அந்தப்பத்திரிகையின் ஆசிரியர் ராஜேந்திர யாதவ் எழுதியிருப்பது, இந்து தெய்வங்களைத் தாழ்த்துவதாக விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவைகளிடமிருந்து கடும் எரிச்சல் மிகுந்த கண்டனத்தைக் கிளப்பியுள்ளது. பிரபல இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த் அவர்களால் 1930இல் துவங்கப்பட்ட இந்த ஹன்ஸ் பத்திரிகை முற்போக்கு இந்தி எழுத்தாளர்களின் இலக்கிய படைப்புகளுக்கும், பகுத்தறிவு ஆராய்ச்சிகளுக்கும் புகலிடம் தருகிறது.

எழுந்துள்ள கூக்குரலுக்குப் பதில் சொல்லும் வகையில், மதத் தலைவர்களின் முதன்மையை எதிர்த்து ஏதாவது சொன்னால், அதையே ஒரு வன்முறை என்று கூறி அடக்க வந்து விடுகிறார்கள் என்று ஆசிரியர் யாதவ் சொல்கிறார்

(டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.1.2002)

Read more: http://viduthalai.in/page-7/73686.html#ixzz2qht2sJCv

தமிழ் ஓவியா said...

வீரத் தமிழன்

என்னருமைத் துணைவி! நானோ கொடிய நோயினால் வருந்துகிறேன். இனிப் பிழைத் திருப்பேன் என்று சொல்வதற்கில்லை. ஆகவே என் மனதிலுள்ளதைச் சொல்லுகிறேன் கேள்.

நான் இறந்த பின், நீ என்னையே எண்ணிக் காலங்கழிக்காதே. என்னை மறந்துவிட்டு சந்தோஷமாயிரு. உன் மனதுக்குரியவனை மணந்து வாழ். மதவெறி கொண்ட நாய்கள் குரைக்கும். வைதீகப் பேய் பிடித்த கழுதைகள் கத்தும்.

சுயநலங் கொண்ட விஷப் பாம்புகள் சீறும். நீ இவைகளை கண்டு பயப்படாதே.

வீரத்துடன் வெளியே போ. மலர் மாலை சூடி மகிழ்வுடனே வந்து வாழ் என்று கூறி மகிழ்ச்சி யுடன் உயிரை விட்டான் வீரத் தமிழன். இதை அழகுற எடுத்துக் கூறுகிறார், நமது உயிர்க் கவி பாரதிதாசன் கீழ்வரும் உயிரோவியத்தில்.

பெண்ணே! கண்ணே!! கண்மணியே!!!
கடும்பிணியாளன் நான் இறந்தபின், மாதே!
கைம் பெண்ணாய் வருந்தாதே
பழி என்றன் மீதே.
அடஞ் செய்யும் வைதீகம்
பொருள்படுத் தாதே!
ஆசைக் குரியவனை நாடு -
மகிழ்வோடு - தார்சூடு - நலம் தேடு.

- (குடிஅரசு 27.11.1943)

Read more: http://viduthalai.in/page-7/73686.html#ixzz2qhtBQM1c

தமிழ் ஓவியா said...


86 வயது இளைஞர் புலிவலம் அகமது


இசுலாம் மார்க்கத்து குடும்பங்களில் பல பேர் திராவிடர் கழகத்தில் பணியாற்றிய வரலாறு உண்டு. இன்றும் உள்ளனர். அவர்களில் 81-ஆம் அகவையில் தமிழர் தலைவரின் மனதில் இடம் பெற்ற பழம்பெரும் கழகத் தொண்டர் திருவாரூர் - புலிவலம் வாழ் மானமிகு பி.எஸ்.அகமது; 86 வயதான சுறுசுறுப்பான இளைஞர்

இவர் பிறந்து வளர்ந்த ஊர் சன்னாநல்லூர் ஆகும். 1943-ஆம் ஆண்டு முதல் கழகத்தில் ஈடுபாடு கொண்டவர். இந்த ஊரில் ஒரு மளிகைக் கடையில் (அவரும் ஒரு முஸ்லீம்) நான் வேலை பார்த்தேன். அந்த கடைக்காரர் குடியரசு பத்திரிகை வாங்கிப் படிப்பார். நானும் மற்றவர்களும் ஓய்வு நேரங்களில் அதைப் படிக்கப் பழகினோம்.

நீடாமங்கலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாடுதான் நான் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி. பிறகு தந்தை பெரியார் பூந்தோட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தபோது திருவாரூர் தோழர் யாகூப் அவர்கள் அய்யாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அக்காலந்தொட்டு இன்றுவரை நான் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இருந்து வருகிறேன் என்று கூறிய இவரிடம் உங்கள் வாழ்வில் நெகிழ்ச்சி அடைந்த சம்பவம் என்று எதைக் கூறுவீர்கள்? என்று கேட்ட தற்கு சில ஆண்டுகளுக்கு முன் பூந்தோட்டத்தில் ஒரு திரையுலக இயக்குநர், கழக இளைஞர் ஒருவரின் திருமணத்தை தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் நடத்தி வைத்தபோது அவரது பழைய நினைவுகளை வெளிப்படுத்தி பேசும்போது இந்த ஊரில் கழகக் கூட்டத்தில் பேச வந்த என்னை கூட்டம் முடிந்ததும் அகமது என்ற கழகத்தொண்டர் மிதிவண்டியில் அழைத்துச் சென்று பேரளத்தில் புகைவண்டியில் அனுப்பி வைத்ததை நான் மறக்க மாட்டேன் என்று பெருமைப்பட பேசியதாக திருவாரூர் கழகத் தோழர்கள் வந்து சொன்னபோது, நெகிழ்ந்து மகிழ்ந்து போனேன் என்றார்.

திருவாரூர் புலிவலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய நான், மாவட்ட தலைவர் காலஞ் சென்ற சுயமரியாதைச் சுடரொளி எஸ்.எஸ்.மணியம் அவர்கள் இல்லத்தில் காவலராகப் பணியாற்றினேன். அவருடன் கழகப்பணிகளில் ஈடுபட்டேன் என்று கூறும் இவர் என் பயணம் கழகப்பணிகளில் தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று உணர்ச்சி ததும்பக் கூறினார்.

மேலும் திருவாரூரில் பெரியார் புத்தக விற்பனை நிலையத்தில் விற்பனையாளராக இருக்கும் இவர், இன்றும் மிதிவண்டியில் தான் இளைஞராக பயணிக் கிறார். இவரை ஊக்குவித்தல் நம் கடமையல்லவா!


- பேட்டி கண்டவர்: க.முனியாண்டி, திருவாரூர் மாவட்ட ப.க தலைவர்

Read more: http://viduthalai.in/page4/73729.html#ixzz2qtbFMUe8

தமிழ் ஓவியா said...


ஒரு கேள்வி? பதில்!



கேள்வி: நீங்கள் 1.10.2013 அன்று கலைஞர் தொலைக் காட்சியில் பேசினீர்களாமே?
பதில்: ஆமாம் சென்னையிலுள்ள எல்லா தொ.கா. களிலும் பேசியிருக்கிறேனே! அவர்களாக அழைத்துப் போனதுதான்!

கலைஞர் தொ.கா.யிலிருந்து உங்களை நேர்காண வேண்டும் வருகிறீர்களா? என்றார்கள், சென்றேன். என் பெயர்த்தியைப் போன்ற ஒரு பெண்மணி கேட்ட வினாக்களுக்கெல்லாம் உதிரிப்பூக்களால் மாலை தொடுப்பது போல தொடுத்தேன்.

அய்யாவைப்பற்றி, அண்ணாவைப்பற்றி, கலை ஞரைப்பற்றி, தமிழைப்பற்றி, தமிழ் அறிஞர்களைப்பற்றி, திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் வரும் பண்பாட்டுச் சீரழிவுகளைப் பற்றியும், அவற்றைப் போக்கும் வழிமுறைகளைப் பற்றியும் 35 மணித்துளிகளில் கடுகைத்துளைத்து ஏழு கடல்களைப் புகுத்தியதுபோல் சொல்லி முடித்துவிட்டு விடை பெறும்போது, நேர் காணல் செய்த பெண்மணியிடம், அம்மா, உங்களைப் போல் பல பெண்மணிகள் எல்லாத்துறையிலும் முன்னேறி இருப்பதற்குக் காரணம், தந்தை பெரியார் தான்! அவருடைய நூல்களில் பெண் ஏன் அடிமை யானாள்? இனிவரும் உலகம் என்னும் சிறு சிறு நூல் களையாவது படியுங்கள். அவை மிகக்குறைந்த விலையில் சென்னை - பெரியார் திடலில் கிடைக்கும் என்று என் முத்திரையைப் பதித்துவிட்டு விடைபெற்றேன்!

நூல்: முகம்
தொகுப்பு: சி.சுவாமிநாதன், ஊற்றங்கரை.

Read more: http://viduthalai.in/page4/73732.html#ixzz2qtbvLZiy

தமிழ் ஓவியா said...


மன்னர் காலத்தில் பயன்படுத்திய சுவர் விளக்கு


புதுக்கடை அருகே ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் சூசைபாக்கியம் (வயது 65). இவரது உறவினர் ஒருவர் புதிதாக வீடு கட்ட நிலத்தில் இருந்து மண் தோண்டப்பட்டது. அப்போது, கல்லினால் செய்யப்பட்ட சுவர் விளக்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தியதாக தெரிகிறது.

இந்த விளக்கு சிற்பியின் கைவண்ணத்தில், கருங்கல்லில் குடைந்து எடுக்கப்பட்டு இருந்தது. மின்சார விளக்குகள் இல்லாத காலக்கட்டத்தில் வசதியானவர்கள் வீடுகளிலும், கோயில்களிலும் இந்த விளக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த விளக்கில் எண்ணெய் ஊற்றி, துணியை திரியாக பயன்படுத்தி பழைமை வாய்ந்ததாக இருக்கலாம் எனத் தெரிகிறது. - தினத்தந்தி (21-10-2013)

Read more: http://viduthalai.in/page8/73738.html#ixzz2qtdtwxoS

தமிழ் ஓவியா said...


சாத்தாணியின் புரோகிதம்

நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.

அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான். அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு)

Read more: http://viduthalai.in/page8/73737.html#ixzz2qte6Dadq

தமிழ் ஓவியா said...


இதுதான் மதச் சார்பின்மையா? இந்துக் கடவுள் உருவம் பொறித்த புதிய நாணயங்களால் சர்ச்சை

புதுடில்லி, ஜன. 19- மாதா வைஷ் ணவ தேவி கோவில் வாரியத்தின் வெள்ளி விழாவைக் குறிக்கும் வகை யில் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களில் வைஷ்ணவி தேவி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தங்களது மத உணர்வை புண் படுத்துவதாகவும், மதச்சார்பின் மைக்கு இது எதிராக இருப்பதாகவும் முஸ்லிம் மத குருமார்கள் குறிப்பிட் டுள்ளனர்.

இந்திய நாணயத்தில் ஒரு இந்துமதக் கடவுளின் உருவம் வரும் போது தங்களின் பிறைச்சந்திரனும் நாணயங்களில் கொண்டுவரப்பட லாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

நேற்று பழைய டில்லியில் உள்ள முஸ்லிம் வர்த்தகப் பகுதியில் உள்ள ஒரு கடைக்காரரான முகமது அப்சல்கான் 500 ரூபாய்க்கு 5 ரூபாய் நாணயங்களைப் பெற்றுள்ளார். அவற்றில் கடவுளின் உருவத்தைக் கண்டதும் முதலில் இவை போலி யானவை என்று நினைத்துள்ளார்.

அதன்பின்னரே அவருக்கு அரசு அச்சடித்துள்ள புதிய நாணயங்கள் இவை என்று தெரியவந்துள்ளது. தான் எந்த மதத்திற்கும் ஆதரவு அளிப்பவர் அல்ல என்றபோதிலும் இவ்வாறான நாணயங்களை அரசு வெளியிடுவது வித்தியாசத்தைத் தோற்றுவிக்கும் என்று கான் குறிப்பிட்டார்.

இத்தகைய நாணயங்கள் மனதைப் புண்படுத்துவதாக உள்ளதால் அவற் றைப் பயன்படுத்துவது தவிர்க்கப் படவேண்டும். இத்தகைய நாணயங் கள் பிரச்சினைகளைத் தூண்டும் விதத்தில் பயன்படுத்தப்பட முடியும். தேச நலனுக்காக அரசு இவற்றைத் திரும்பப் பெறவேண்டும் என்று பதேபூர் மசூதியின் இமாமான முப்டி முகமது முகரம் அகமது கூறியுள்ளார்.

இதுபோன்ற நினைவு நாணயங்கள் வெளியிடப்படுவது சாதாரண நடைமுறை என்று குறிப்பிட்ட ரிசர்வ் வங்கியின் தகவல் தொடர்பாளர் அல்பனா கிள்ளவலா, மத்திய அரசின் வெளியீட்டை தாங்கள் விநியோகம் மட்டுமே செய்வதாகக் குறிப்பிட்டார்.

ஹோமிபாபா, செயின்ட் அல் போன்சோ, கதர் கிராமத் தொழில், இந்தியன் ஸ்டேட் வங்கி, ஓஎன்ஜிசி, லால்பகதூர் சாஸ்திரி, தண்டி யாத் திரை, சுவாமி விவேகானந்தா, மோதி லால் நேரு, மதன் மோகன் மாளவியா, மத்திய தலைமை கணக்கு தணிக்கை மற்றும் கு.க இயக்கம் போன்ற நினைவு நாணயங்கள் இந்தியாவில் வெளி யிடப்பட்டுள்ளன.

ஆயினும், வைஷ் ணவி தேவியின் உருவம் இந்து மதத்தை மட்டுமே குறிப்பிடுவதால் அரசு இதுபோன்ற முடிவுகளில் கவன மாக இருக்க வேண்டும் என்று வர்த்த வணிகரான கான் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-2/73769.html#ixzz2qtgHFrIr

தமிழ் ஓவியா said...


கடவுள் நம்பிக்கை இன்னமும் தேவையா?


மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற சையதினா முகமது புர்ஹானுதீனின் (உள்படம்) இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தாவூதி போரா சமூகத்தினர் - நெரிசலில் 18 பேர் பலி!

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

எல்லாம் கடவுள் செயல்; அவனின்றி ஓரணுவும் அசையாது

கடவுள் கருணையே வடிவானவன்; சர்வதயாபரன்

கடவுள் ஆபத்பாந்தவன் அகிலத்தையும் அறிந்தவன்

அவனே வழி நடத்துபவன்; அவனே ஆட்டி வைப்பவன்!

- இப்படியெல்லாம் நாளும் மதப் பிரசங்கிகளும், மதத் தலைவர்களும், அர்ச்சகர்களும், மதத்தின் மூலம் பக்தி வியாபாரம் செய்யும் கடவுள் தரகர்களும் கூறி, காலங் காலமாக பக்தி வியாபாரத்தைச் செழுமையுடன் நடத்தி, உழைப்பின்றி உண்டு கொழிக்கின்றனர்.

ஆனால், உண்மையாக நடக்கும் நடப்புகள் இக்கூற்றுகளைப் பொய்யாக்கவல்லோ செய்கின்றன!

எடுத்துக்காட்டாக இன்று வெளிவந்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் 9ஆம் பக்கத்தில் ஒரு செய்தி கடவுள் காப்பாற்றினாரா? பாதுகாத்தாரா?

கூடிய திருவிழாக் கூட்ட காலத்தில் ஆண்டுவாரி யாக எவ்வளவு பக்த கோடிகள் விபத்தில் நெரிசலில் சிக்கி உயிர் விட்டுள்ளனர் என்ற கோரச் செய்தியைப் பாருங்கள். கடவுள் காப்பாற்றி உதவினாரா இல்லையே!

1. 2003 ஆகஸ்ட் 27 நாசிக் (மகராஷ்டிர மாநிலம்): அருகில் நடந்த கும்பமேளாவில் கோதாவரி ஆற்றுக்கு அருகில் ஏற்பட்ட நெரிசலால் உயிரிழந்த வர்கள் சுமார் 40 பேர்.

2. 2005 ஜனவரி 25 (ராஜஸ்தான்): மந்தார் தேவிகோயில் திருவிழா நெரிசலில் சிக்கி உயிர் இழந்தவர்கள் சுமார் 300 பேர்.

3. 2008 மார்ச் 27 (மத்திய பிரதேசம்): கரில்லா கிராம திருவிழாவில் நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை எட்டு (8) பேர்.

4. 2008 ஆகஸ்ட் 3 (இமாச்சல் பிரதேசம்): மழைக்காகப் போட்டிருந்த பாதுகாப்புக் கூரை உடைந்து திருவிழாவுக்கு வந்தவர்கள் - நைனாதேவி கோயில் திருவிழா - இறந்தோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 140 பேர் ஆகும்!

5. 2008, செப்டம்பர் 30 (ராஜஸ்தான்): ஜோத்பூர் சாமுண்டிதேவி இந்து கோயில் திருவிழா நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை - கோயிலுள்ளே! (ஜோத்பூர் மேரங்கங்கார் கோட்டை அருகில்).

6. 2010 மார்ச் 4 (உத்தரப்பிரதேசம்): ராம் ஜானகி கோயில் திருவிழாவில் கட்டி முடிக்கப்படாத மேல் கூரைக் கட்டடம் விழுந்து 63 பேர் செத்தனர்!

7. 2011 ஜனவரி 14 (கேரளா): சபரிமலை அய்யப்ப பக்தர்கள் விழா முடிந்து திரும்பிடும் நிலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்தோர் 100 பேர்களுக்கு மேல் அய்யப்பப் பக்தர்கள்!

8. 2011 - நவம்பர் 8 (உ.பி.): ஹரித்துவார் அருகில் கங்கை ஆற்றில் 22 பேர் படகு கவிழ்ந்து இறந்தனர்.

9. 2012 பிப்ரவரி 19 (குஜராத் மாநிலம்): ஜுனாகாத் பவ்நாத் கோயில் மஹா சிவராத்திரி திருவிழா நெரிசலின்போது இரவு 6 பேர் உயிரிழந்தனர்!

10. 2013 அக்டோபர் 13ஆம் தேதி (மத்தியப் பிரதேசம்): தத்தியா மாவட்டம் அருகே உள்ள கோயில் திருவிழாவுக்கு ஒரு பாலம் வழியே செல்லும்போது பாலம் முறிந்து இறந்தவர் எண்ணிக்கை 89 பேர்.

மேலே காட்டிய வெறும் நெரிசலால் உயிர் இழந்த பக்த கோடிகள் மட்டுமே!

உத்திரகாண்ட் வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இதில் காட்டவில்லை!

கோயில்களுக்குச் சென்று திரும்பும் போது ஏற்பட்ட விபத்துக்களால் மறைந்த உயிர்களை இதில் குறிப்பிட வில்லை. நடுநிலையோடு, இப்போது சொல்லுங்கள் கடவுள் (கற்பனை) கருணை உள்ளது தானா?

போதைப் பொருளில் மூழ்கியவன் அதை மீண்டும் மீண்டும் எப்படித் தேடுவானோ அப்படி கடவுள் கடவுள் என்று கதறி கைப் பொருளையும், மானத்தையும், இழந்து கொண்டே இருக்கிறார்கள்! என்னே கொடுமை!!

சிந்தியுங்கள் பக்தர்களே!

கடவுளை மற; மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் அறிவுமொழியினைப் பின்பற்றி மாமனித ராகா விட்டாலும்கூட குறைந்தபட்சம் ஆறறிவு மனிதர் ஆகுங்கள். மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற சையதினா முகமது புர்ஹானுதீனின் (உள்படம்) இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தாவூதி போரா சமூகத்தினர் - நெரிசலில் 18 பேர் பலி!

Read more: http://viduthalai.in/e-paper/73767.html#ixzz2qtgjTC4i

தமிழ் ஓவியா said...


பிழிவுகள்... பிழிவுகள்...

ஒத்தி வைப்பு

சென்னையில் நாளை (20.1.2014) நடைபெற விருந்த தமிழ்நாடு - இலங்கை மீனவர் பேச்சு வார்த்தை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. (ஒத்தி வைக்கப்பட்டாலும் தேவை - நிரந்தரத் தேர்வு!). வழக்கமானது தான்

சென்னை - நந்தம்பாக்கம் தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், மூன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்டது. (வானிலை அறிக்கைபோல இது தமிழ்நாட்டின் அன்றாட செய்தி தானே!)

கோயிலுக்கு

திண்டிவனம் - தீர்த்தக்குளம் பூந்தோட்டத்தைச் சேர்ந்த செல்வராசு என்பவரின் மனைவி கிருட்டின வேணி கட்டி வைத்திருந்த கோயிலிலேயே அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டார்.

(காத்தல் தொழில் கடவுள் எங்கே போனதாம்?)

நீதிபதி கேட்கிறார்

சென்னையில் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தி இந்து (தமிழ்) ஏட்டில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். நீலாங்கரையில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மீன் சந்தை அமைப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித் துள்ளது.

இதுகுறித்து முன்னாள் நீதிபதி என்ன எழுது கிறார்? சைவ மதத்தில் கண்ணப்ப நாயனாருக்கும் (பன்றிக் கறி படைத்தவர்) சிறுத் தொண்டர் நாயனா ருக்கும் (பிள்ளைக் கறி படைத்தவர்) சிறப்பான இடத்தைக் கொடுத்து விட்டு, கடவுளை சைவமாக்க முயற்சிப்பது எவ்விதத்தில் சரி என்ற வினாவை தம் கட்டுரையில் எழுப்பியுள்ளார் முன்னாள் நீதிபதி சந்துரு. (கடவுளேகூட மீன் அவதாரம் (மச்ச அவதாரம்) எடுத்தவர்தானே?)

பதற்றம்

மோடி பிரதமரானால் இந்திய அமெரிக்க உறவில் பதற்றம் அதிகரிக்கும் என்று டைம்ஸ் பத்திரிகை கருத்துத் தெரிவித்துள்ளது. (இந்தியாவுக்குள்ளேயே நாளும் பதற்றம் வெடித்துக் கொண்டே இருக்குமே - முதலில் அதைப்பற்றித் தானே கவலைப்பட வேண்டும்)

ஒத்தி வைப்பு

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியை இந்தியா முறியடித்தது.
(இது என்ன ஓடி விளையாடு பாப்பா என்ற கதையாக அல்லவா அடிக்கடி நிகழ்கிறது!)

Read more: http://viduthalai.in/e-paper/73768.html#ixzz2qtgxmLqf

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்தின் தேவையற்ற வாசகங்களைப் புறந்தள்ளி இடஒதுக்கீட்டை அரசுகள் செயல்படுத்த முன்வர வேண்டும்

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?

தமிழர் தலைவரின் சமூகநீதிப் பாதுகாப்பு அறிக்கை நீதிமன்றங்கள் தம் கருத்தாகச் சொல்லும் சொற் களைப் பற்றிக் கவலைப்படாமல் சமூகநீதியைச் செயல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

ஏற்கெனவே சுப்ரீம்கோர்ட்டால் கொடுக்கப்பட்ட டில்லி AIIMS FACULTY -பேராசிரியர்கள் போட்ட வழக்கில் 18.7.2013 தீர்ப்பில் - மண்டல்கமிஷன் வழக்காகிய இந்திரா சஹானி வழக்கு என்ற வழக்கில் வெறும் கருத்துரையாக,OBSERVATION- (OBITER-DICTA) சொல்லப்பட்ட ஒன்றை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. உயர் சிறப்பு மருத்துவத் துறைப் படிப்பு (Super Speciality) மருத்துவத்துறையில் இட ஒதுக்கீடு கொடுப்பது விரும்பத்தக்கதல்ல என்றும் கருதலாம் என்பதாகக் குறிப்பிட்ட அந்தப் பெரும்பான்மை தீர்ப்பில் பாரா 861இல்

“..... Be that as it may, we are of the opinion that in certain services and in respect of certain posts, application of the rule of reservation may not be advisable for the reason indicated hereinbefore
என்று குறிப்பிட்டுள்ளது.

இதன் தமிழாக்கம்: முக்கியமான உயர்நிலை பதவிகளில் சேருவதற்கான விதிமுறைகளை பின்பற்றி பணிக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இடஒதுக்கீட்டுக்கான சட்டதிட்டங்கள் கடைப்பிடிக்கப் படுவது உகந்ததாக இருக்காது என்று கூறப்பட்டது. இது தீர்ப்புரை அல்ல; வெறும் கருத்துரை - பொதுவாகச் சொல்லப்பட்ட கருத்து.

இதன்படி இது சட்டக்கட்டாயத்தன்மை (MANDATORY LAW) அல்ல. நீதிபதியின் ஆலோசனை போன்ற ஒரு கருத்து.

அரசமைப்புச் சட்டம் 16 ஆவது பிரிவு கூறுவது என்ன?

தமிழ் ஓவியா said...


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தருவது பற்றிய 16 ஆவது பிரிவில், போதிய அளவு பிற்படுத் தப்பட்டவருக்குத் தருவது என்பதும், பிற்படுத்தப்பட்டவரை அடையாளம் கண்டறிந்து பட்டியலில் சேர்ப்பது என்பது பற்றியுமான உரிமையை அரசுக்குத்தான் அளித்துள்ளதே தவிர, நீதிமன்றங்களுக்கு அல்ல. In the opinion of the State என்றுதான் குறிப்பிடுகிறது.

நீதிமன்றங்கள் கருத்துக்கள் கூட கூற இயலாது என்பது இதன் மூலம் திட்டவட்டம்!

இந்திரா சஹானி (மண்டல்) வழக்கில் மேலே குறிப்பிட்ட பத்தியிலேயே இக்கருத்து முடிக்கப்பட்டு, வலியுறுத்தப்பட்டுள்ளது. “It is the Government of India to consider and specify the service and posts to which the rule of reservation shall not apply (but on that account the implementation in the impugned office Memorandum dated 13th August 1990 can not be stayed or with held)”

இதன் தமிழாக்கம்: இட ஒதுக்கீட்டிற்குப் பொருந்தாத சேவைகள் மற்றும் பணியிடங்கள் எவை என்பதை இந்திய அரசுதான் குறிப்பிட வேண்டும். (ஆனால் இந்த காரணங்களுக்காகவே குறிப்பிடப்பட்ட ஆகஸ்டு 13, 1990 நாளிட்ட அலுவலக குறிப்பினை நடைமுறைக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது).

இதன்படி, - அண்மையில் அய்ந்து நீதிபதிகள் மறு சீராய்வில் குறிப்பிட்டபடி, பந்து மத்திய அரசின் கோர்ட்டுக்குள்ளே தான் இருக்கிறது. அதாவது டில்லி மத்திய அரசுக்குத்தான் எவை எவை தெளிவாக இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படலாம் என்று கூறவேண்டிய பொறுப்பு என்று கூறிவிட்டு கடைசியில் தேவையற்ற ஒரு கருத்துரையைப் போட்டு ஒரு புதுக் குழப்பத்தை தீர்ப்பின் மூலம் எடுத்துக்காட்ட முயன்றுள்ளார்கள்.

தேவையற்ற கருத்து

அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய கருத்தே அது!

மத்திய அரசு குறிப்பிட்டுச் சொன்னாலே போதுமானது. அரசியல் சட்டத் திருத்தம் என்பது தேவையற்ற ஒன்று- இந்திரா சஹானி வழக்கின் பாரா 861 வாக்கியங்கள் அதை தெளிவாக்குகின்றன.

டில்லி எய்ம்ஸ் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று அளித்த தீர்ப்புரைக்குப்பிறகு, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், நாடாளுமன்றத்தில் தெளிவாகவே குறிப்பிட்டார்: We are ignoring the Judgement என்று கூறினார். அதனைத் தொடர்ந்து சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் தொடருவோம் - நீங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்யலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம், எய்ம்ஸ் நிறுவனத்துக்கு தாக்கீது பிறப்பித்தது. அதன் அடிப் படையில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிறுவனம் ஒப்பந்த அடிப் படையில் பணி நியமனம் செய்யும் ஒரு விளம்பரத்தில் இட ஒதுக்கீடு உண்டு என்று தெளிவாகவே தெரிவித்திருந்தது. துவக்கத்திலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போடுவதும், அதன்பிறகு புதிய சட்டத்திருத்தம், ஆணைகளை, அரசுகளும் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும், ஆட்சி மன்றமும் கொண்டு வந்து செயல்படுத்துவதும் நமது சமூகநீதிப் போராட்டத்தில் பல்வேறு மைல்கற்கள் அல்லவா?

வேகத்தடையும்- சமூகநீதிப் பயணமும்

எனவேதான் இந்த வேகத்தடைகளைப் பொருட்படுத் தாது சமூகநீதிப் பயணம் தடையின்றித் தொடரவேண்டும்.

தவறான வியாக்கியானங்களைப் புறந்தள்ளி ஆட்சிகள் செயல்படுவதுதான் நமது ஜனநாயகத்தில் சமூகநீதியை கடைக்கோடி மகனுக்கும், மகளுக்கும் கொண்டு போய்ச் சேர்ப்பதாகும்.



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 18.1.2014

Read more: http://viduthalai.in/page1/73739.html#ixzz2qthmCL86

தமிழ் ஓவியா said...


அடைய முடியும்


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page1/73742.html#ixzz2qtiT0O1E

தமிழ் ஓவியா said...


வேடிக்கை சம்பாஷணை - சித்திரபுத்திரன் -


குடித்தனக்காரன் : அய்யா ஆ ஆ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண் ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என் கிறது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக் குட்டி களுக்குப் புண்ணியமாகும்.

சித்திரபுத்திரன் : அய்யய்யோ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?

குடித்தனக்காரன்: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா.

சித்திரபுத்திரன்: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணாள் இருக் கின்றார்களா?

குடித்தனக்காரன் : ஆம் 4, 5 வீட்டுக் காரர்கள் இருக்கின்றார்கள்.

சித்திரபுத்திரன் : அவர்கள் ஏதாவது உங்கள் வீதிப்பக்கம் வந்தார்களா?

குடித்தனக்காரன் : ஆம் அய்யா, காலையில் ஒரு பிராமணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொணா மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில் தான் போனார்.
சித்திரபுத்திரன் : சரி, சரி, உங்கள் வீதி வீடுகள் வெந்துபோனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.

குடித்தனக்காரன் : என்ன அய்யா எனக்குத் தெரியவில்லையே!

சித்திரபுத்திரன் : இது தெரியாதா உனக்குப் பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்டதில்லையா?

குடித்தனக்காரன்: நான் கேட்ட தில்லையே!

சித்திரபுத்திரன் : அட பைத்தியமே, பிராமணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில் தூக்குகிறார்களே அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய் விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.

குடித்தனக்காரன் : அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவர் களை அந்த வீதியிலேயே நடக்கவிட்டு இருக்க மாட்டேனே. ஏமாந்து போய் விட்டேன்.

சித்திரபுத்திரன் : அது மாத்திரமா, பிராமணாள் வாயிலும், நெருப்பு, வயிற் றிலும் நெருப்பு; இது உனக்குத் தெரியாதா?

குடித்தனக்காரன்: தெரியவில்லையே! சற்றுத் தெரியும்படியாய் சொல்லுங்களேன்.

சித்திரபுத்திரன் : பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய் போய் விடுவாய் என்று சொல்லு கிறார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்ப தால்தானே அவர்கள் அப்படிச் சொல்வது. தவிரவும், பிராமணாள், நம்மைப் பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின்றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவதாய் இருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லா விட்டால் முடியுமா?

குடித்தனக்காரன் : இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழ்வது? இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவ தானால் இந்த நாலு பிராமணர்களாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய் விடும் போலிருக் கிறதே.

சித்திரபுத்திரன் : பின்னை தெரியா மலா நம்முடைய பெரியவாள் பிராமணர் களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.

குடித்தனக்காரன்: ஓ! ஹோ!! இதற் காகத்தான் அவர்கள் அப்படி சொல் கின் றார்களா! சரி, இனி புத்தியாய் பிழைத்துக் கொள்கிறேன். இந்த நெருப்பை எப்படி யாவது அணைத்து விடுங்களய்யா?

- குடிஅரசு -கற்பனை உரையாடல்- 18.03.1928

Read more: http://viduthalai.in/page1/73748.html#ixzz2qtjOohab

தமிழ் ஓவியா said...

தர்மத்தின் நிலை

நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக் கூடாததாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப் படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமூகத்தாராகிய பார்ப்பனரல் லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யாவிட்டாலும் முழுதும் பார்ப்பனர் களுக்கே உபயோகப்படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது. கோவில்கள், வேதபாடசாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யாணங்கள் முதலியவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்தவர்கள் தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே, இப்படிப் பார்ப் பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோடீஸ் வரர்களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர்களாவதில் யாரும் வருத்தப்பட நியாயமிருப்ப தாகவும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எந்த சமூகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ, கெட்ட வழியிலேயோ இப்படி கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார்களோ அந்த சமூகத்தாருக்குத் துரோகம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமூகத்தாருக்கே அதைச் செலவு செய்வதானால் அப்படியவர்கள் தண்டனை அடைய வேண்டியது கிரமமா அல்லவா! ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய்திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல்கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும்படியாக தக்க ஏற்பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண்ணாமலை செட்டியார் நன்மையையும், பார்ப்பனரல்லாதார் நன்மையையும், நமது நாட்டின் நன்மையையும், உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 08.04.1928

Read more: http://viduthalai.in/page1/73748.html#ixzz2qtjXKHfv

தமிழ் ஓவியா said...

துருக்கியில் மாறுதல்

துருக்கி ராஜாங்கத்தில் அரசாங்க விஷயத்தில் மதசம்பந்தமே இருக்கக் கூடாது என்று பலமான மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பதாக பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இதை நாம் மனமார வரவேற்பதுடன் இது உலக விடுதலைக்கு ஒரு பெரிய அறிகுறியென்றே சொல்லுவோம். துருக்கி ராஜாங்கம் மதத்திற் காகவே இருப்பதாக சொல்லப்படுவது. கிலாபத்து இயக்கமும் அதற்காகவே ஏற்பட்டது. அப்படிப்பட்ட அரசாங்கம் மத சம்பந்தத்தை நீக்க - மனித தர்மத்தை ஆதாரமாக வைத்து - அரசாட்சி புரிய ஏற்பட்டால் இன்றைய தினமே நாம் துருக்கிப் பிரஜையாக இருக்க பதிவு செய்து கொள்ளத் தயாராகயிருக்கிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 08.04.1928

Read more: http://viduthalai.in/page1/73748.html#ixzz2qtjdjYZc

தமிழ் ஓவியா said...


பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய 400 பாதிரியார்கள் பதவி நீக்கம் வாடிகன் தகவல்


வாடிகன்சிட்டி, ஜன.20- முன் னாள் போப் 17ஆவது பெனடிக்ட் கடந்த ஆண்டு இவர் தானாகவே முன் வந்து பதவி விலகினார். அதை தொடர்ந்து புதிய போப்பாக பிரான் சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெனடிக்ட் போப் ஆக இருந்த போது அய்ரோப்பியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பாதிரியார்கள்மீது பாலியல் குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு மற்றும் பெண்களிடம் பாலியல் வன்கொடுமை புகார்கள் கூறப்பட்டன.

எனவே, பாலியல் புகாரில் சிக்கிய 400 பாதிரியார்களை அவர் பதவி நீக்கம் செய்துள்ளார். அவர் பதவி விலகுவதற்கு முன்பு 2 ஆண்டுகளில் இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளார். அதில் 2011ஆம் ஆண்டில் 300 பேரும் 2012ஆம் ஆண்டில் 100 பேரும் அடங்குவர். இந்த தகவலை வாடி கனின் செய்தி தொடர்பாளர் பெடரி கோலாம் பார்டி தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/73828.html#ixzz2qzbsHhHS

தமிழ் ஓவியா said...


மாற்றம் ஒரு வழிப் பாதையா?


சென்னையில் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகம் அமைந்துள்ள ஹால்ஸ் சாலை தமிழ்ச் சாலை எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது குறித்து இந்து முன்னணியின் நிறுவனர் இராம. கோபாலன் அறிக்கை வருமாறு:

தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வந்துள்ள இந்தச் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தபிறகு அடிமைத் தனத்தின் அடையாளமாக இருந்த சாலை, ஊர்ப் பெயர்களை படிப்படியாக மாற்றி, தமிழ்ப் பெயர்கள், தேசப் பக்தர்கள் பெயர்களைச் சூட்டியிருக்க வேண்டும்.

இன்னமும் நம்மை அடிமைப்படுத்தி, ஆக்ரமிப்பு செய்தவர்களின் பெயர்களை சாலைகள், ஊர்கள் தாங்கி நிற்பது நமக்கு அவமானம், இதனைத் துடைத்தெறிய வேண் டும் என்று இந்து முன்னணி நிறுவனர் திருவாளர் இராம. கோபாலன் தன் அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை நாமும் நன்றாகவே வரவேற்கிறோம். அதே நேரத்தில் இவர் கூறுவது தமிழின்மீது கொண்ட பற்றுதலாலா? என்ற கேள்வி நியாயமாக எழத் தான் செய்யும்.

ஹால்ஸ் என்ற பெயர் ஆங்கிலேய கிறித்தவரின் பெயராக இருப்பதால்தான் அது மாற்றப்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கிறாரே தவிர, உண்மையிலேயே தமிழ்மீது கொண்ட ஆர்வமும், பற்றுதலும் அவரிடம் கரை புரண்டு ஓடுவதால் அல்ல- என்பது நினைவிருக்கட்டும்!

கோயில்களில் சமஸ்கிருதம் அர்ச்சனை மொழியாக இருப்பதை மாற்றி தமிழில்தான் அது நடக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அப்பொழுதுதான் அவாளின் உண்மை உருவம் வெளிவரும்.

கோயில்களில் உள்ள கடவுள்களின் சமஸ்கிருதப் பெயர்களை மாற்றினால் ஏற்றுக் கொள்வார்களா?

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் பெரு முயற்சியினால் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கொண்டு வரப்பட்ட போது இதே பார்ப்பன ஊடகங்கள் எப்படியெல்லாம் கேலி செய்தன? வீட்டுக்கு வீடு மட்டன் பிரியாணி வரப் போகிறது பாருங்கள் என்று தினமலர் எழுதிய போது இந்த ராம. கோபாலன்களின் வாய்கள் கோணி ஊசியால் தைக்கப்பட்டுக் கிடந்தனவா?

சென்னைப் பெரு நகரில் வணிக விளம்பரங்களில் தமிழுக்கு முதலிடம் என்று அந்நாள் மேயர் மா. சுப்பிரமணியம் அவர்களே களத்தில் இறங்கி அந்தப் பணியைச் செய்த போது, துக்ளக்கில் இது மொழி நக்சலிசம் என்று எழுதியபோது இந்த அய்யர்வாள் எங்கே முடங்கிக் கிடந்தார்?

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் நீண்ட காலமாக தமிழ் அறிஞர் பெரு மக்கள் கூறி வந்த கருத்தினை ஏற்று தனிச் சட்டம் செய்தாரே - அதனை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி யில் செல்வி ஜெ. ஜெயலலிதா மாற்றினாரே - அப்பொழுது இவர் போர்க் குரல் கொடுத்த துண்டா?

தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதமயமாகிக் கிடக்கின்றனவே; அவற்றைத் தமிழில் மாற்றம் செய்ய வேண்டும் என்று இதே இந்து முன்னணித் தலைவர் அறிக்கை வெளியிடத் தயாரா?

சிற்றம்பலம் சிதம்பரம் என்றும் திருமரைக் காடு வேதாரண்யம் என்றும் திருமுதுகுன்றம் விருத்தாசலம் என்றும், குரங்காடுதுறை கபிஸ் தலம் என்றும் சமஸ்கிருதமயம் ஆக்கப்பட் டுள்ளதே - அவற்றை மீண்டும் தமிழ் மயப் படுத்த இந்து முன்னணி வகையறாக்கள் போராட்டம் நடத்துவார்களா?

ஹால்ஸ் என்பது கிறித்தவரின் பெயராக இருப்பதால்தான் மதவெறி இந்துக் கண்ணோட் டத்தோடு அது மாற்றப்படுவதற்காக ஆதரித்து அறிக்கை வெளியிடுகிறார் - இந்த மதவெறி யர்களை அடையாளம் காண வேண்டாமா? மாற் றம் என்பது வெறும் ஒரு வழிப் பாதை தானா?

Read more: http://viduthalai.in/page-2/73821.html#ixzz2qzcInc7a

தமிழ் ஓவியா said...

பணம் பறிக்க நவீன வசதி ஏழுமலையானுக்கு செல்பேசியில் காணிக்கையாம்

திருப்பதி, ஜன.20- உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலை யானுக்கு செல்பேசி யில் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதன்படி ஆண்டுக்கு காணிக்கை மூலம் மட்டும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை வருமானம் கிடைத்து வருகிறது.

நேரடியாக வரும் பக்தர்கள் மட்டுமே கோவில் பிரகாரத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர். ஆனால் நேரடியாக கோவிலுக்கு வரமுடியாத பக்தர்களும் காணிக்கை செலுத்தும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பக்தர்கள் இ-உண்டி திட்டம் மூலம் தங்களது செல்பேசி மூலமாக திருப்பதி ஏழு மலையானுக்கு காணிக்கை செலுத்தலாம். இதற்காக கடந்த சில நாட் களுக்கு முன்னர் ஆந்திரா வங்கி இந்த சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. மொபைல் பேங்கிங் மூலம் (அய்.எம்.பி.எஸ்) இந்த சேவையை பக்தர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page-2/73824.html#ixzz2qzcTZTmh

தமிழ் ஓவியா said...


திராவிடர் திருநாள் விழாவில் (19.1.2014) பெரியார் விருது பெற்றவர்களின் விவரக் குறிப்புகள்


பேராசிரியர் அ.மார்க்ஸ்

தலைசிறந்த பெரியாரியவாதியாக இருந்துகொண்டு ஜாதி-மத எதிர்ப்புப் பிரச்சாரங்களை செய்து வருபவர். இவரது தந்தை அந்தோணிசாமி, கூலித் தொழிலாளி யாக மலேசியா சென்று, அங்கே பொதுவுடைமைக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். இவருடைய தலைக்கு விலை கூறப்பட்டுத் தப்பி வந்தபின் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்.

ராமதாஸ் என பொதுவுடமை இயக்கத்தில் அறியப்பட்ட அவர் இறுதி வரை ஒரு எளிய கம்யூனிஸ்டாக இருந்து மறைந்தவர். போராட்டக்காரரின் மகனாகப் பிறந்த அ.மார்க்ஸ் அவர்கள் நான்காம் வகுப்புவரை பள்ளி சென்று படித்ததில்லை. அதன்பின் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயின்றவர். மார்க்ஸ் அவர்கள் 37 ஆண்டுகள் அரசு கல்லூரி களில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்ற வர். கடைசியாகப் பணியாற்றியது சென்னை மாநிலக் கல்லூரி.

ஆசிரியர் இயக்கங்களில் பல்வேறு மட்டங்களிலும் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டவர். நிறப்பிரிகை ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பங்கு பெற்றவர். இலக்கியம், அரசியல் மற்றும் மனித உரிமைக் களங்களில் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். நாட்டில் கலவரங்கள் மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் நேரடியாக களத்திற்கே சென்று உண்மைகளை கண்டறிந்து வெளிக்கொணர் வதில் இவருடைய செயல்பாடுகள் அனைவரையும் வியக்க வைக்கும்.

அறிவாற்றல் மிகுந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் 77 பெரிய நூல்களையும் 27குறு நூல்களையும் 25க்கு மேற் பட்ட சிறு வெளியீடுகளையும் எழுதியுள்ளார். பல்வேறு ஏடுகளில் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவரது கருத்துக்கள் கடும் விவாதங்களுக்கு உரியதாய் இருந்து வந்துள்ளன; இருந்து வருகின்றன. இருந்தபோதிலும், ஏற்றதொரு கருத்தை மனதிற்குப் பட்டதைப் பேசியும் எழுதியும் வருகிறார். இன்று ஒரு முழுநேர எழுத்து மற்றும் மனித உரிமைப் பணியாளர்.

அவரது குறிப்பிடத்தக்க சில நூல்கள்:

1. நமது கல்விப் பிரச்சனைகள் 2. குணா -பாசிசத்தின் தமிழ் அடையாளம் 3. இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு (3 தொகுதிகள்)

4. பெரியார் யார்?

5. ஆட்சியில் இந்துத்துவம் 6. குஜராத் 2002 : அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும் 7. பெரியார் - தலித்கள் - முஸ்லிம்கள் 8. ஆரியக் கூத்து

9. பெரியாரின் கல்விச் சிந்தனைகள் 10. பார்ப்பனர்களின் இராமர் பால அரசியல் 11. இலக்கியத்தில் இந்துத்துவம் - காலச் சுவடு ஓர் ஆள்காட்டி அரசியல் 12. இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள் போன்ற ஆய்வுத்தர நூல்களைப் படைத்த தலைசிறந்த சிந்தனை யாளர்களில் ஒருவரான மனித உரிமைப் போராளி அ.மார்க்ஸ் அவர்களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-4/73815.html#ixzz2qzdBHzft

தமிழ் ஓவியா said...

திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொலைக் காட்சியில் நகைச்சுவைத்தொடராக வந்த சின்னபாப்பா பெரியபாப்பா என்ற தொடரில் காதின் மீது கைவைத்த படியே அச்சு அசலாக பாப்பார பாஷையில் பேசி அல்லல் படும் பட்டாபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டு தலைப்பெற்ற எம்.எஸ் பாஸ்கர் என்று அழைக்கப்படும் மு.சோ.பாஸ்கர்.

தன்னிகரற்ற கலைஞர்களைத்தந்த தஞ்சை மாவட்டமே இவரையும் திரை உலகிற்கு தந்துள்ளது. முத்துப்பேட்டை சோமு என்பவரின் மகனாகிய மு.சோ. பாஸ்கர் அவர்களின் நடிப்பாற்றலைக்கண்ட சினிமாத் திரை சின்னத்திரையிடமிருந்து சுவீகரித்துக் கொண்டது.

பச்சையப்பர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்ற இவர் சுமார் 1000 படங்களுக்கு மேல் பல நடிகர்களுக்கு பின்னணி பேசியவர்.

தமிழ் நடிகர்களுக்கு மட்டுமல்ல ஹாலிவுட் நடிகர் களுக்கும் தமிழில் பின்னணி பேசியுள்ளார். பின்னணி பேசியதில் சிறப்பாக, குறிப்பாக கர்மவீரர் காமராஜ் படத்தில் காமராஜராக நடித்தவருக்கு பின்னணி பேசிய தைக் குறிப்பிடலாம். பெரியார் திரைப்படத்தின் தொடக்க காட்சிலும், பெரியார் பற்றி கருத்துருவை சிறப்பாக தனது குரலில் வழங்கியுள்ளார்.

என்னதான் நடிப்பைக் கற்றுக்கொடுத்தாலும் அது எல்லோருக்கும் வருவதில்லை. அதிலும் குணசித்திர வேடங்களில் நடிப்பவர்களும் நகைச்சுவைப் பாத்திரங் களை ஏற்று நடிப்பவர்களும், அந்த நடிப்பிலிருந்து வேறுபட்ட நடிப்பை வழங்குவதென்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது.

ஒரு சிலர் மட்டுமே அதில் மேன்மை பெற்றவர்கள். அந்த ஒருசிலரில் மிக முக்கியமானவர் இன்று விருது பெற வீற்றிருக்கும் பாஸ்கர். இவருடைய நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாக வெள்ளித்திரை, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், தர்மபுரி, சிவகாசி, திருப்பாச்சி மாசிலாமணி, அழகியதீயே, சாது மிரண்டால், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களைச் சொல்லலாம்.

எங்கள் அண்ணா படத்தையும், குரு என் ஆளு படத்தையும் பார்த்தவர்கள் இவருடைய நகைச்சுவை நடிப்பைப் பார்த்து இன்றும் கூட மனதில் நினைத்தால் சிரிக்காமல் இருக்கமாட்டார்கள். இவருடைய குணசித்திர நடிப்புக்கான படங்களாக மொழி, பயணம், அஞ்சாதே, சூது கவ்வும் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக 2007-இல் வெளிவந்த மொழி என்ற திரைப்படம் இவருக்கு தமிழக அரசின் சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றுத்தந்தது. இந்த விருதைப்பெற்ற இவரை கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளை அறிந்தவர்.

இவ்வளவு பெருமைகள் பெற்ற திராவிட இனத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தரான மு.சோ.பாஸ்கர் அவர் களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-4/73815.html#ixzz2qzdLxV2X

தமிழ் ஓவியா said...


வாழைப்பழத்தின் வகைகளும், நன்மைகளும்


வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது என்பது பொதுவான கருத்தாகும். அது மட்டுமின்றி, அறிவியல் ரீதியாகவும் இது சரி என்று நிரூபணமாகி இருக்கிறது.

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், விட்டமின், கால்சியம், தாது சத்துக்கள் அடங்கி இருப்பதுடன், எளிதில் ஜீரணமாகும், கொழுப்பை குறைக்கும் சக்தியும் அதிகம் உள்ளதாம். இந்த சக்தி நன்றாக வேலை செய்யும்போது, உடல் எடையும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவுடன், அல்லது இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது. வாழைப் பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அனைத்து வகைகளும் உடலுக்கு பலனை அளிக்கக் கூடியவையே. இப்போது வாழைப்பழத்தின் வகைகளும், அவற்றின் நன்மைகளையும் பார்க்கலாம். மலை வாழைப்பழம்- மலச்சிக்கலைத் தீர்க்கும்

செவ்வாழைப் பழம்- உயிரணுக்களைப் பெருக்கும்

மஞ்சள் வாழைப்பழம்- குடல் புண்களை ஆற்றும்

ரஸ்தாளி வாழைப்பழம்- நாவுக்கு சுவை தரும்

மொந்தன் பழம்- உடலின் வறட்சியைப் போக்கும்

பச்சை வாழைப்பழம்- உடலுக்குக் குளிர்ச்சி தரும்

நேந்திரம் வாழைப்பழம்- சேரும் நஞ்சை முறிக்கும்.

தோலுக்கு மினுமினுப்பைத் தரும்.

Read more: http://viduthalai.in/page-7/73802.html#ixzz2qzeb66uE