Search This Blog

21.11.13

தாழ்த்தப்பட்டோர் எவரும் பார்ப்பனருடன் சேரக்கூடாது!


இந்நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகள் கூட்டித் தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகளைப் பற்றி பேசப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும், சுயமரியாதை பெற வேண்டும் என்றும், இந்த 10, 18- வருஷ காலமாகத்தான் வெளிப்படையாகவும், தைரியமாகவும் கிளர்ச்சி செய்யச் சந்தர்ப்பமும் சௌகரியமும் பெற்றிருக்கிறார்கள் என்பதோடு, உங்களுக்கே இந்த உணர்ச்சியும் இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நாட்டில், புராண காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மேம்பாட்டிற்காகப் பொதுவாக உழைத்ததாகவோ, உழைக்க ஆசைப்பட்டதாகவோ காண முடியவில்லை என்றாலும், ஏதோ இரண்டொருவர் நந்தன், பாணன், சொக்கன் என்பதாகச் சிலர் தங்கள் தங்கள் சொந்தத்தில் முக்தி அடையவோ, கடவுளைத் தரிசிக்கவோ என்று பாடுபட்டதாகப் புராணங்களில் காணலாம். அவை வெற்றி பெற்றதாகக் கதைகள் இருந்த போதிலும் அவை நம்ப முடியாததும், சாதிக்க முடியாத பெரிய நிபந்தனைகள் மீது அதாவது நெருப்பில் குளித்து விட்டு வந்தும், கடவுளுடைய சம்மதமும் உத்தரவும் பெற்ற பிறகும் ஏதோ முத்தியோ, மோக்ஷமோ அடைந்ததாகத்தான் காணப்படுகின்றனவே ஒழிய, இந்த உலகத்தில் மற்ற மனிதர்களைப் போல் மானத்துடன் வாழ முயற்சித்ததாகவோ வாழ முடிந்ததாகவோ பொய்க் கதைகள் கூட கிடையாது. அது மாத்திரமல்லாமல் இந்து (ஆரிய) அரசர்கள் காலத்திலும், நீங்கள் இன்றுள்ள நிலையைவிட மிக்க கேவலமான நிலையில் நடத்தப்பட்டதாகத்தான் காண முடிகின்றது.

அன்றியும், தமிழ் அரசர்கள் மூவேந்தர்கள் முதலியவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் மிக்க கேவலமாகவே உயிர் வாழ்ந்ததாகத்தான் காணக் கிடக்கிறது. அவற்றிற்கு உதாரணம் திருவாங்கூர், கொச்சி முதலிய இந்து அரசர்கள் வாழும் நாட்டில் நீங்கள் எப்படி நடத்தப்பட்டீர்கள்? நடத்தப்படுகிறீர்கள்? என்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

இந்து அரசர்கள் அல்லாத மகமதியர் அரசர்கள், கிறிஸ்துவர் அரசர்கள் ஆகியவர்கள் ஆட்சிக் காலமே உங்களை ஒரு அளவுக்காவது மனிதர்களாக நடத்தப்பட்டதாகச் சரித்திரமும் பிரத்தியட்ச அனுபவமும் காணப்படுகின்றது.

உண்மையாகவே இந்நாட்டில் முகம்மதிய அரசர்கள் ஆட்சி 600, 700- வருஷகாலம் நடந்திருக்கவில்லையானால், தாழ்த்தப்பட்ட தீண்டாத மக்களின் எண்ணிக்கை இன்று "தோட்டத்தில் முக்கால் பாகம் கிணறு" என்பதுபோல் சுமார் 15, 20- கோடி மக்களுக்குக் குறையாமல் இருந்திருக்கும்.

தீண்டப்படாதவர்கள் எண்ணிக்கை இன்று இந்திய ஜனத்தொகையில் 5-ல் ஒரு பாகத்திற்கு உள்ளாக இருப்பதற்குக் காரணம் முகமதிய ஆட்சியே ஆகும். அது பெருகாமல் அந்த அளவுக்கு உள்ளாகவே இருந்து வருவதற்கும், கூடிய சீக்கிரத்தில் அடியோடு ஒழிந்து போவதற்கும் நம்பிக்கைக்கு இடம் ஏற்படக் காரணமாய் இருப்பது பிரிட்டிஷ் அரசாட்சியின் பயனே ஆகும்.

இந்த இரண்டு ஆட்சியும் எந்தக் காரணத்தாலோ இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்க வில்லையானால் இந்தியாவில் ராஜ குடும்பமும், பார்ப்பனர் குடும்பமும் தவிர மற்ற மக்கள் எல்லோரும் தீண்டத்தகாதவர்களாய், தாழ்த்தப்பட்ட மக்களாய்த்தான் இருந்திருக்க வேண்டும். இன்றுகூடப் பார்ப்பனரொழிந்த மற்ற மக்கள் கீழ் ஜாதிக்காரராய் மத சம்பிரதாயப்படியும், பழக்க வழக்கப்படியும் ஏன் அரசாங்க சட்டமுறைப்படியும் குறிப்பிடப்பட்டிருப்பதை யார் மறுக்க முடியும்?

பழைய கால அரசர்கள் யோக்கியதைகள் பார்க்க வேண்டுமானால், அவர்கள் மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதை உணர வேண்டுமானால், ராமன், அரிச்சந்திரன், சந்தனராஜன், பாண்டியன் முதலிய இந்து அரசர்கள் என்பவர்கள் நாடகத்தைப் பார்த்தாலே அறியலாம்.

முதல் முதலாக அரசன் கொலு மண்டபத்துக்கு வந்தவுடன் என்ன கேட்கிறான்.

"மந்திரீ! நமது நாட்டில் பிராமணர்கள் ஜபதபம், ஓமம், எக்கியம், யாகம் முதலியவைகளைச் செய்து சுகமாக வாழ்கின்றார்களா?"

"அவர்களுக்கு மான்யங்கள் முதலியவைகள் தாராளமாக
விடப்பட்டிருக்கின்றனவா?"

சூத்திரர்கள், பிராமணர் முதலியவர்களுக்கு அடங்கி ஒடுங்கி ஒழுங்காகத் தொண்டு செய்து வருகிறார்களா?" என்று தானே நகர விசாரணை செய்கிறார்களே ஒழிய வேறு என்ன?

ஆனால் இன்று உள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் நகர விசாரணை எப்படி இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.

சமீப காலத்தில் பாராளுமன்றம் என்னும் பார்லிமெண்டைத் துவக்கியபோது அரசர் பெருமான் என்ன சொன்னார்?

"என்னுடைய பிரஜைகள் எல்லோரையும் அவர்கள் எந்த ஜாதியினராய் இருந்தாலும், எவ்வித வித்தியாசமும் இல்லாமல் எல்லாத் துறையிலும் சரி சமமாய் நடத்துவேன்" என்று சொல்லித் திறந்து வைத்தார்.

அந்தப்படி அவர் நடத்துவார் என்பதற்கு என்ன நம்பிக்கை என்று ராமராஜ்ய ஸ்தாபிதர்களாகிய காந்தியாரும், காந்தி பக்தர்களும் கேட்கலாம்.

மற்றக் காரியங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி நடந்து கொண்டு வந்தது என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய உங்களைப் பொறுத்த மட்டில் யோக்கியமாகவும் கூடிய அளவுக்கு நீதியாகவும் ஆட்சி புரிந்திருக்கிறது என்று தைரியமாய்ச் சொல்லுவேன்.

இன்று தாலூக்கா போர்டு, ஜில்லா போர்டு, பஞ்சாயத்துச் சபை, சட்டசபை, இந்திய சட்டசபை ஆகியவைகளில் உங்களுக்கு ஸ்தானம் அளித்து பெரிய சாஸ்திரிகள், கனபாடிகள், சங்கராச்சாரிய சுவாமிகள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என்பவர்களுக்குச் சமமாய் நடத்துகிறார்கள். ராமராஜ்யத்தில் இந்தச் சபைகளுக்கு கக்கூஸ் வாரவோ, பங்கா போடவோ கூட உங்களை அனுமதிக்கமாட்டார்கள்.

உதாரணமாக இன்றும் சில அக்கிரகாரங்களில் உங்களை எச்சிலை எடுக்கவோ, குப்பை கூட்டவோ, கக்கூஸ் வாரவோ கூட உங்களை அனுமதிப்பதில்லை. கும்பகோணம் முனிசிபாலிட்டியில் அக்கிராகாரத்துக்கு கக்கூஸ் எடுக்கச் சூத்திரர்கள் என்பவர்களை நியமிக்க வேண்டும் என்று பாடுபட்டது உங்களுக்குத் தெரியாதா?

இப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களைப் பொறுத்தவரை எவ்வளவோ நன்மை செய்து வந்திருப்பதோடு உங்களுக்கு ஒரு மந்திரி ஸ்தானமும் கிடைக்கும்படியான அளவுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி சீர்திருத்தம் வழங்கியிருக்கிறது.

ஆகவே நான் ஏதோ ராஜவிஸ்வாச உபன்யாசம் செய்வதாய் "தேசாபிமான வீரர்"களுக்குத் தோன்றலாம்.

பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரமே அல்லாமல், உலகில் உள்ள அரசாங்கங்கள் எல்லாமே ஒழிந்து போக வேண்டும் என்கின்ற ஆசையுள்ளவன் நான்.

ராஜாக்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும் பொது ஜனங்களுடைய சுயமரியாதைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும் சொல்லியும் எழுதியும் வருகின்றவன் நான்.

ராஜாக்கள் எனபவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும் பொதுஜனங்களுடைய சுயமரியாதைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும் சொல்லியும் எழுதியும் வருகின்றவன் நான்.

ராஜாக்கள் மாத்திரமல்லாமல் பணக்காரர்கள், ஜமீன்தாரர்கள், வியாபாரிகள், முதலாளிகள் என்கின்றதான கூட்டங்கள் கூடப் பொது ஜனங்களை அரித்துத் தின்னும் புழுக்கள் ஆனதால் அவை அழிக்கப்பட வேண்டியவை என்றும் கூடச் சொல்லுகிறவன் நான்.

உங்களைப் பொறுத்த வரையிலும் நீங்கள் காந்தி ராஜ்ஜியத்துக்கோ, ராமராஜ்ஜியத்துக்கோ கராச்சி சமதர்ம ராஜ்ஜியத்துக்கோ போவதைவிட பிரிட்டிஷ் அரசாங்கம் ஆயிரம் மடங்கு மேலானது என்று பறை அடிப்பேன்.

ராமராஜ்ஜியத்திலாகட்டும், காந்தி ராஜ்ஜியத்திலாகட்டும், கராச்சி திட்ட சமதர்ம ராஜ்ஜியத்திலாகட்டும், வருணாச்சிரம தர்மமோ, ஜாதிப் பாகுபாடோ இவைகள் சம்மந்தப்பட்ட பழைய பழக்க வழக்கங்கள் அது சம்மந்தமான கலைகளோ சிறிதுகூட மாற்ற முடியாது என்றும் அவை பத்திரமாகக் காப்பாற்றப்படும் என்றும் மேல் ஜாதியாருக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வாக்குறுதிகள் உங்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பது இப்போது ஒரு சமயம் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இந்த வாக்குறுதிகள் எவ்வித முற்போக்குக்கும் முட்டுக்கட்டையாக வந்து தடுத்துக் கொள்ளும்.

ஏதோ ஒரு காலத்தில் விக்டோரியா மகாராணியார் "உங்கள் மத விஷயங்களில் பிரவேசிப்பதில்லை" என்று வாக்குறுதி கொடுத்ததாகக் கூறிக் கொண்டு, இன்று அவ்வாக்குறுதியை, ஏதாவது ஒரு பொதுக் கிணற்றில் எல்லோரும் தண்ணீர் இறைத்துக் கொள்ளலாம் என்றாலும்,

ஏதாவது ஒரு பொது ரோட்டில் எல்லோரும் நடக்கலாம் என்றாலும், ஒரு பொதுச் சத்திரத்தில் எல்லோரும் இருக்கலாம் என்றாலும், விபசாரத்துக்குக் கடவுள் பேரால் பெண்களுக்கு (பொட்டுக்கட்டு) லைசென்சு கொடுக்கக் கூடாது என்றாலும், ஏதாவது ஒரு கடவுள் என்பதைக் கோயிலில் சென்று தரிசிக்கலாம் என்றாலும், பால் குடிக்கும் குழந்தைகளை சீலை கட்டத் தெரியாத குழந்தைகளைப் பெண் ஜாதியாக ஆக்கிப் படுக்கை வீட்டிற்குள் விடக் கூடாது என்றாலும்,

அவ்வாக்குறுதிகள் வந்து முட்டுக்கட்டையாக இருக்கும்படி பயன்படுத்தப்படுகின்றன. இப்படி இருக்கும் போது பழய பழக்க வழக்கங்கள், சாஸ்திரங்கள், கலைகள், தொழில் முறைகள் ஆகியவை காப்பாற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஒரு சமதர்ம ராஜ்ஜியத்தை  ஸ்தாபிப்பதென்றால் அந்த சமதர்ம ராஜ்யத்துக்குக் காந்தியாரால் ராமராஜ்ஜியம் என்றும் வருணாச்சிரம ராஜ்ஜியம் என்றும் பாஷ்யம் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், சர்வ வியாதிக்கும் ஒரே மாத்திரை என்பது போல் சகலவித சீர்திருத்தத்துக்கும் இந்த ஒரு வாக்குறுதியே எமனாய் வந்து கொன்றுவிடாதா என்று யோசித்துப் பாருங்கள். இந்த வாக்குறுதியின் கீழ் என்ன என்ன சீர்திருத்தமோ, ஏதாவது ஒரு மாறுதலோ செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

இன்று உங்கள் மக்களுக்கு இருக்கும் தரித்திரமும் கொடுமையும் சேர்த்து இந்த ராமராஜ்ஜியத்தை ஆதரிக்கச் செய்கின்றது. ஏன் உங்களைவிட பெரிய ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதி இந்துக்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பசியான தங்களுடைய சூத்திரப்பட்டம் இந்த ராமராஜ்ஜியத்தில் வர்ணாச்சிரம ராஜ்ஜியத்தில் கராச்சி சமதர்ம ராஜ்ஜியத்தில் ஒழியாது என்று தெரிந்திருந்தும் எத்தனை பேர் இன்று அதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, உங்களில் சிலர் ஆதரிப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை.

இவ்வளவு தூரம் நான் இவற்றை விவரித்துச் சொல்லக் காரணம், இன்று உள்ள உங்கள் குறைகள், இழிவுகள் நீங்கி மனிதத் தன்மை பெறுவதற்கு நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியைத் தான் நம்ப வேண்டுமென்றும், அது உள்ள காலத்திலேயே உங்கள் குறைகளை, இழிவுகளை நிவர்த்தித்துக் கொள்ள முயல வேண்டும் என்றும், அரசாங்கத்துக்கு விரோதமாகப் பேசவோ, மக்களுக்குள் விரோத உணர்ச்சி ஏற்படச் செய்கின்றதோ அரசாங்கத்தாரோடு போர் புரிவதாகவோ சொல்லிக் கொள்ளுகின்ற கட்சியிலோ கூட்டத்திலோ நீங்கள் கலந்து கொள்ளக்கூடாது என்றும் சொல்லுவதற்கு ஆகவே இவற்றைச் சொல்லுகிறேன்.

நீங்கள் எல்லாம் அப்படிச் செய்யவில்லையா என்றும் மற்றும் எத்தனையோ பேர் அந்தப்படி அரசாங்கத்துக்கு விரோதமாய் நடந்து கொண்டு வாழவில்லையா என்றும் கேட்பீர்கள்.

அவர்கள் நிலை வேறு, உங்கள் நிலை வேறு. அவர்களில் சிலர் இன்று மதத்தில் கீழாக மதிக்கப்பட்டாலும், பழக்க வழக்கத்தில் பலர் சமமாக மதிக்கப்படுகிறார்கள். கல்வியில் சிறிது முன்னணிக்கு வந்து விட்டார்கள். உத்தியோகம் தொழில்கள் ஆகியவைகளில் எதிலும் போட்டி போடத் தகுதி அடைந்து விட்டார்கள்.

பார்ப்பனர்கள் சங்கதியோ கேட்க வேண்டியதில்லை. எல்லா விதத்திலும் மதத்தாலும் பழக்க வழக்கத்தாலும் பிரத்தியட்சத்திலும் மேல் நிலையில் இருக்கிறார்கள்.

பாடுபடாமல் வாழ்க்கை நடத்தும் யோக்கியதை அடைந்து விட்டார்கள். 100-க்கு 100-பேர் படித்து இருக்கிறார்கள். 100-க்கு 90-க்கு மேல் உத்தியோகங்கள் அவர்கள் கைவசம் இருக்கிறது.

இனி அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்களோ அவர்களது அடிமைகளோ நாட்டை ஆள வேண்டியது என்பதைத் தவிர வேறு இல்லை. ஆதலால் அவர்கள் அரசாங்கத்தாரோடு போராடவும், சட்டம் மீறும் அரசாங்கத்துக்குச் சதா தொல்லை விளைவிக்கவும் சௌகர்யமுடையவர்களாக இருக்கிறார்கள்.

இது மாத்திரமல்லாமல் அவர்கள் மதத்துக்கும், பழக்க வழக்கத்துக்கும் விரோதமாக அரசாங்கம் சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்படுவதாலும், அதனால் பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பங்கம் வரும்போல் இருப்பதாலும், அச்சீர்திருத்தங்களைச் செய்ய வொட்டாமலும் செய்துவிட்டால் அது அமுலில் நடத்தப்படாமலும் இருப்பதற்கு ஆக வேண்டியாவது, அரசாங்கத்தை வழி மறிப்பதற்காக அரசாங்கத்துக்குத் தொல்லை விளைவிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆதலால் அவர்களுடன் நீங்கள் சேரக் கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்.

---------------------------------------------இராசீபுரம் தாலூக்கா தாழ்த்தப்பட்டோர் மக்கள் மாநாட்டில் தந்தை பெரியார் தலைமை தாங்கி 29.09.1935-இல் ஆற்றிய உரை. "குடி அரசு" 06.10.1935

24 comments:

தமிழ் ஓவியா said...


ராஜராஜன் எங்கள் ஜாதி என்று சொந்தம் கொண்டாடுவோர் அவன் கட்டிய கோவிலுக்குள் சென்று அர்ச்சனை செய்ய முடியுமா?



தலைவர்களை ஜாதி கூண்டுக்குள் அடைப்பதா?

ராஜராஜன் எங்கள் ஜாதி என்று சொந்தம் கொண்டாடுவோர்

அவன் கட்டிய கோவிலுக்குள் சென்று அர்ச்சனை செய்ய முடியுமா?

இந்த உரிமைக்காகப் போராட முன்வாருங்கள் - அதுதான் மான உணர்ச்சி!

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

ராஜராஜன் எங்கள் ஜாதியைச் சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடுவோர், அந்த ராஜராஜன் கட்டிய தஞ்சை பெருவுடையான் கோவிலுக்குள் சென்று அர்ச்சனை, அபிஷேகம் செய்ய உரிமை உண்டா? அதற்காகப் போராடுவதுதானே மான உணர்ச்சிக்கு அழகு? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பெரியார் பிறந்த மண்ணான, திராவிடர் இயக்கத் தொட்டிலான தமிழ்நாட்டில், பாழும் வாக்கு வங்கி அரசியலுக்காக நாளும் ஜாதி வெறி, மதவெறிக்கான தீய சக்திகளும், அவற்றின் கூலிப்படைகளும் மலிந்து வருவது மிகவும் ஆபத்தானதும், கேவலமானதும் - வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

ஜாதி ஒழிப்பிலும், சமூகநீதியிலும் நம்பிக்கை உடைய அத்தனை முற்போக்குச் சக்திகளும் ஒரே அணியில் திரண்டு கடுமையாக, போர்க்கால அடிப்படையில் பணியாற்ற முன்வரவேண்டியது அவசர அவசியமாகும்.

தலைவர்களின் பெயர்களில் மாவட்டங்கள்

கொஞ்சகாலத்திற்கு முன்பு தமிழ்நாட்டின் அரும்பெரும் தலைவர்களின் பெயர்கள் அவர்களது தியாகத்திற்காகவும், தொண்டிற்காகவும், மாவட்டங்களுக்கு சூட்டப்பட்டன. தந்தை பெரியார் பெயர் தொடங்கி, தொடர்ந்தது.


தமிழ் ஓவியா said...

உடனே ஜாதித் தலைவர்களை முன்னிறுத்தி புதிது புதிதாக, தோண்டித் துருவி, அவர்களின் பெயர்களை வைக்கக்கோரி வேண்டுகோள் கிளம்பியது; வாக்குகளைப் பெற ஆட்சிக்கு வந்தவர்களும், மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்குப் பெயர்களைச் சூட்டி, குறுக்கு வழியில் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தவிர்த்திடவே, தந்தை பெரியார்; அறிஞர் அண்ணா பெயர்களைக்கூட நீக்கச் செய்து, ஜாதிவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முன்பு தி.மு.க. ஆட்சியில் கலைஞர் இருந்த (நான்காம் முறை ஆட்சியில்) போது, நாம் கூறினோம்; முதல்வர் கலைஞரும் துணிந்து மாற்றிவிட்டார்.

புதிய தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு ஜாதி சங்கமும்கூட நன்றி, நன்றி என்று ஜாதீய சிமிழுக்குள் அத்தலைவர்களை அடைத்துக் கேவலப்படுத்தினர். இதைவிட வெட்கக்கேடு வேறு உண்டா?

திருவள்ளுவர் எந்த ஜாதி?

திருவள்ளுவர் பெயரை மாவட்டத்திற்கு வைத்தபோது, ஒருவரும் விளம்பரம் - நன்றி அறிவிப்பு தரவில்லை; காரணம், அவர் என்ன ஜாதி என்று அவர்களுக்கு உறுதிப்படுத்தி தெரிவிக்கப்படவில்லை.

திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தையும்கூட ஜாதிக்குள் அடக்கிடப் பார்த்தது கொடுமையல்லவா?

தியாகச் செம்மல் வ.உ.சி.யை ஜாதி சிமிழுக்குள் அடைப்பதா?

கப்பலோட்டிய தமிழர் தியாகச் செம்மல் வ.உ.சி. அவர்களைக்கூட இன்று வெறும் ஜாதி வட்டத்திற்குள் அடக்கிக் குறுக்கிவிட்டனர்!

உலகமகா அறிவாளியும், உன்னத சமூகநீதிப் புரட்சியாளருமான அண்ணல் அம்பேத்கர், அனைத்து மக்களுக்கும் உள்ள தலைவர்களுள் ஒருவராவர். அவரை ஏதோ தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர் என்று விஷமமாகக் குறிப்பிட்டது - ஏற்கத்தக்கதா?

அதுபோல, காமராசர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வரை இவ்விஷ முத்திரை குத்தப்பட்டது.

விளைவு...?

கூண்டுக்குள் தலைவர் சிலைகள்!

தென்மாவட்டங்களிலும், பழைய வட ஆற்காடு தென்னாற்காடு பகுதிகளான மாவட்டங்களிலும் அத்தலைவர்களின் சிலைகளை சிறையில் வைத்ததுபோல இரும்புக் கம்பி கூண்டுக்குள் அடைத்துப் பாதுகாக்கும் விசித்திரம்!

வடநாடுபோல அல்லது தென்னாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஜாதிப் பட்டத்தைப் பெயருக்குப் பின்னால் போடவே வெட்கப்பட்ட நிலை இருந்தது.

ஒரு மரியாதைக்காகப் போடப்பட்டதைக்கூட அத்தலைவர்களே வெறுத்து தூக்கி எறிந்தனர். 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டு முதலாவது சுயமரியாதை மாகாண மாநாட்டில் அந்த வகையிலே தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

இதோடு நிற்கவில்லை, தஞ்சையில் பெரிய கோவிலுக்குள் ராஜராஜன் சிலை வைக்க தொல்பொருள் துறை அனுமதிக்காததினால், வெளியே வைத்துக் காட்டினார் கலைஞர் (கோவில் கட்டிய தமிழன் கதி அதுதானே!).

ராஜராஜன் எந்த ஜாதி என்ற ஆராய்ச்சியா....?

இப்போது தஞ்சையில் பெரிய ஆராய்ச்சி மேல் ஆராய்ச்சி - ராஜராஜன் எந்த ஜாதி என்ற வெட்ககரமான, அநாகரிகமான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.
தமிழ் இந்து ஏட்டில் வெளிவந்துள்ள (நவம்பர் 16, 2013 பதிப்பில்) செய்தி (3 ஆம் பக்கம் காண்க) தரப்பட்டுள்ளது!

மிகவும் கேவலமாக, கேலிக்கூத்தாக இல்லையா?

பெருமை பேசும் இந்த ஜாதிக்காரர்கள், எவரும் ராஜராஜன் கட்டிய கோவிலில் உள்ள மாட்டு உருவத்திற்கோ, லிங்கத்திற்கோகூட அபிஷேக, ஆராதனை செய்ய உரிமை இல்லையே! காரணம், இவர்கள் சூத்திரர்; சூத்திரர், சற்சூத்திரர், பஞ்சமர்கள்.

இந்த இழிவை நீக்கி, அர்ச்சனை செய்யும் பூ+செய்=பூஜை செய்யும் உரிமையைப் பெறப் போராடும் எண்ணம் எழுந்ததா?

அதுவல்லவா மானம் உள்ள மக்களுக்கு அழகு?

எனவே, ஜாதி வெறியை மறந்து, உரிமையை நிலைநாட்ட முன்வாருங்கள் - அதுதான் தன்மானத்துக்கு அழகு!

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை 21.11.2013

தமிழ் ஓவியா said...


செய்தியும், பின்னணியும்!

பதற்றம்

ஏற்காட்டில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளும் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

(ஜனநாயகமே பதற்றத்தில்தானே இருக்கிறது!).

அதிசயம்... ஆனால்...

அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஏழு குழந்தைகளும் இப்போது தங்கள் 16 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டா டினர்.

(இது என்ன அதிசயம்; ரிஷி பிண்டம் ரா தங்காது என்பது இந்து மதப் புண்மொழி; நாரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஒரே நேரத்தில் 60 குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறவில்லையா?)

காவிரி அன்னைக்கு...

கும்பகோணம் மேலக்காவிரியில் நேற்று காவிரி அன்னை கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

(இனிமேல் கவலையில்லை; கருநாடகத்திற்கு விண்ணப்பம் போடத் தேவையில்லை - அதுதான் காவிரித் தாய் கடவுளாகிவிட்டாரே... அதுசரி கும்பாபிஷேகத்துக்கு ஜலம் பஞ்சமில்லாமல் கிடைத்ததா?)

இருமுடி திருட்டு!

கன்னியாகுமரி வந்த சென்னை அய்யப்பப் பக்தர்களின் வேனை உடைத்து இருமுடிக் கட்டுகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டது.

(அய்யப்பனே கொள்ளைக்காரன் என்ற கருத்துண்டே! அவனே ஆள் வைத்து ஏற்பாடு செய்திருப்பானோ!)

எட்டு வயதில் டும்! டும்! டும்!

உத்தரப்பிரதேசத்தில் நாசி என்னும் கிராமத்தில் 14 வயது சிறுவனுக்கும், 8 வயது சிறுமிக்கும் கல்யாணம் நடந்தது - தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை.

(அவ்வளவுத் தூரம் போவா னேன்?- சிதம்பரத்தில் தீட்சதப் பார்ப்பனர்கள் குடும்பத்தில் இன் றைக்குவரைக்கும் இது சர்வ சாதாரணமாயிற்றே!- சட்டம் பாயாது! படுத்துக்கொள்ளும். காரணம் அவாளாயிற்றே!- ராஜஸ்தானில் பால்ய விவாகத்தைத் தடுத்த பன்வாரி என்ற பெண்ணை மூன்று பார்ப்பனர்கள் பாலியல் வன்முறை செய்து தூக்கி எறிந்தனரே - வாழ்க பா.ஜ.க. ஆட்சி!).

செவ்வாயில்...

செவ்வாய்க் கோளில் கிரானைட் கற்கள் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

(இங்கு மணல் அள்ளுவதைப் போல் அங்குபோய் கிரானைட்டை அள்ளிவர ஏதாவது குறுக்குவழி இருந்தால் சொல்லுங்கள்).

சச்சின் கோவில்

சச்சின் டெண்டுல்கருக்கு பிகார் மாநிலத்தில் கோவில் கட்டப்படுகிறது.

(கோவில்கள் எப்படியெல்லாம் தோன்றியிருக்கின்றன என்பதற்கு கண்ணெதிரே நடைபெறும் இது ஒன்று போதாதா?)

தமிழ் ஓவியா said...


மோடிக்கு விசா கூடவே கூடாது! அமெரிக்கவில் மீண்டும் தீர்மானம்!


குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா தொடர வேண்டுமென்று அந்நாட்டு நாடாளுமன்றத் தில் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இதற்கான தீர்மானத்தை எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர். மத சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மோடிக்கு விசா மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்று அந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. குஜராத் கலவரத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்தத் தீர்மானம் அதில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தங்களுக்கு நீதி கோரி வருவதையும் குறிப்பிட்டுள்ளது.

அதே சமயம் இந்தியாவின் மத சகிப்பு தன்மை கொள்கையை தீர்மானத்தில் எம்.பி.க்கள் பாராட்டியுள்ளனர். ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி. கீத் எலிசன் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை, குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரித்துள்ளனர். இந்தத் தீர்மானம் வெளியுறவு அமைச்சக நாடாளுமன்ற துணைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத் கலவரத்திற்கு பின்னர் மோடிக்கு விசா வழங்குவதை 2005 ஆம் ஆண்டுமுதல் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இந்நிலையில் மோடிக்கு விசா வழங்கக் கூடாது என வலியுறுத்தி அமெரிக்கா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் புளுகுப் பிரச்சாரம் அம்பலம்!

ஸ்பெயினில் உள்ள சாலைப் படத்தைப் போட்டு மத்திய பிரதேசத்தில் பி.ஜே.பி.யின் சாதனை என்று விளம்பரம்!

50 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் சாலைப் பணியை மேம்படுத்தவில்லை, ஆனால் 10 ஆண்டுகளுக்குள் அப்படி இருந்த சாலையை இப்படி மாற்றிவிட்டோம் என்று பி.ஜே.பி.யினர் விளம்பரம் தந்து இருந்தார்கள்; படத்தை உற்றுநோக்கும்பொழுது அது ஸ்பெனியில் உள்ள ஒரு கார்கோ நிறுவன விளம்பரத்தில் உள்ள படம் இது. இந்த நிறுவனம் 2009 ஆண்டு இந்த இணைய தளத்தை துவங்கி அதில் விளம்பரத்திற்காக (வவயீ://றறற.உயசபடி ளாயீயீபே.உடிஅ) ஸ்பெயின் சாலையில் கார்கோ நிறுவன வண்டிகள் ஓடுவது போன்று உள்ள இந்த படத்தை அப்படியே எடுத்து எடிட்கூட செய்யாமல் ஒட்டி வைத்து சிவராஜ் சிங் சவுகானோடு போட்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் (ஃபேஸ்புக்) சீனாவின் பேருந்துகளை குஜராத்தின் சாலையில் ஓடும் பேருந்தாக சமூக வலைதளத்தில் போட்டு இருந்தார்கள் அது பொதுவான தளம் யாரும் என்னவேண்டுமானாலும், செய்யலாம், ஆனால் ஒரு மாநில அரசை ஆளும் கட்சி தன்னுடைய விளம்பரத்தில் இப்படி ஒரு பொய்யான விளம்பரத்தை பத்திரிக்கை வாயிலாக கொடுத்து அதிகாரபூர்வமாக மக்களை ஏமாற்றியுள்ளனர்.

அமெரிக்காவில் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு வீட்டைப் போட்டு, இதுதான் ஆ.இராசாவின் வீடு என்று இணைய தளத்தில் பித்தலாட்டப் பிரச்சாரம் செய்த யோக்கியர்களையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

கெட்டிக்காரன் புளுகே எட்டு நாள்கள்தான். பி.ஜே.பி.யின் புளுகுகள் ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகின்றன.

தமிழ் ஓவியா said...


கடவுள் செயல் என்பது...

தொட்டதற்கெல்லாம் கடவுள் செயல் - கடவுள் செயல் என்று சமாதானம் சொல்லு கின்றவர்கள் தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணராதவர்கள். அல்லது தங்கள் தவறுகளை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றவர்கள் ஆவார்கள்.
(குடிஅரசு, 4.5.1930)

தமிழ் ஓவியா said...


ராக்கெட் ஏவுதளத்தை கோட்டை விட்டது ஏன்?


தமிழகத்தைப் புறக்கணிக்கிறது இஸ்ரோ என்ற தலைப்பில் குங்குமம் வார இதழில் (18.11.2013) கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. அதில் ஆந்திர மாநிலம், சிறீஹரிகோட்டாவில் இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ள நிலையில், மூன்றாவது ஏவு தளத்தைத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் உருவாக்கும் திட்டம் ஒன்று கணக்கில் இருந்தது. இப்பொழுது அது கைவிடப் பட்டு, ஏற்கெனவே இரு ஏவுதளங்கள் உள்ள சிறீஹரி கோட்டாவிலேயே இந்த மூன்றாவது ஏவுதளமும் அமைக்கப்படுவது குறித்து தி.மு.க. தலைவர் கலை ஞர் அவர்களும் அறிக்கை ஒன்றினை வெளியிட் டுள்ளார்.

12 ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் விண்வெளி ஆய்வினை ஊக்கப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 60 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் இதுவும்.

எல்லா வகையிலும் இந்தத் திட்டத்தைக் குல சேகரப்பட்டினத்தில் நிறுவினால், பல கோடி ரூபாய் மிச்சப்படும் என்று அதிகாரவட்டாரங்கள் தெரி வித்திருந்தும், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தத் திட்டத்தை கையும் காதும் வைத்தாற்போல தமிழ்நாட்டுக்கு வராமல், சிறீஹரிகோட்டாவிலேயே முடக்கியது ஏன் என்பது புரியவில்லை.

தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தத் திட்டத்தைக் குலசேகரன்பட்டினத்தில் நிறுவுவது தான் சரியானது என்று திரவ இயக்க உந்து மய்யப் பொதுச்செயலாளர் எம்.மனோகரன் கூறுகிறார்:

சிறீஹரிகோட்டாவைவிட ராக்கெட் ஏவுதளம் அமைத்திட மிகச் சிறந்த இடம் குலசேகரன்பட் டினமே! சில தொழில்நுட்பக் காரணங்கள் மூலம் இதனை உறுதிப்படுத்தவும் முடியும். பி.எஸ்.எல்.வி. செயற்கைக்கோள்களை தெற்கு நோக்கி ஏவி, 450 கி.மீ. முதல் 1000 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்த வேண்டும். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை பூமத்திய ரேகைக்கு மேலாக கிழக்கு நோக்கி ஏவி 36 ஆயிரம் கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தவேண்டும். உலக விண்வெளி விதிமுறைப்படி ஒரு நாடு ஏவும் ராக்கெட் டுகள் இன்னொரு நாட்டின்மீது பறக்கக்கூடாது. ஆனால், சிறீஹரிகோட்டாவிலிருந்து நேரடியாக ராக்கெட்டுகளை ஏவினால், இலங்கை, இந்தோனே சியா நாடுகள்மீது பறக்க வாய்ப்புண்டு. அதற்காக தென் கிழக்காக அனுப்பி, மீண்டும் திசை திருப்பி, சுற்றுப் பாதைக்குக் கொண்டுவரவேண்டும். இத னால் கூடுதலாக பல கோடி ரூபாய்கள் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

மேலும், சிறீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மூலம் 1600 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை 650 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்த முடியும். ஆனால், குலசேகரன்பட்டினத்திலி ருந்து 2200 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்புவது சாத்தியம். 600 கிலோ கூடுதல் எடை கிடைக்கும். இன்றைக்குப் பன்னாட்டுச் சந்தையில் ஒரு கிலோ எடையை விண்ணில் அனுப்பிட ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம்வரை கட்டணம்; அப்படிப் பார்த்தால், 600 கிலோ கூடுதல் எடைக்கான கட்டணம் ரூ.60 கோடி என்பது போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன.

எல்லா வகையிலும் பொருத்தமான இடம் குல சேகரன்பட்டினம் என்று இஸ்ரோவைச் சேர்ந்த நிபுணர்களே கூறியும், பிடிவாதமாக தமிழ்நாட்டுக்கு வராமல் தடுத்த சக்தி எது?

பெரும்பாலும் மலையாளிகளும், பார்ப்பனர்களும், தமிழர்களுக்கு எதிராக இருப்பது ஒரு காரணமா?

இந்தத் திட்டம் குலசேகரன்பட்டினத்தில் செயல் படுத்தப்பட்டால் நேரடியாக 4000 பேருக்கும் மறை முகமாக 10 ஆயிரம் பேருக்கும், வேலை வாய்ப்புண்டு. அதிகபட்சம் 3 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் வரும் - அவற்றின்மூலம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், மறைமுகமாக சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிட்டும்.

இது இப்பொழுது தட்டிப் பறிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இதுகுறித்துப் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரும் அழுத்தம் கொடுத்திருந் தால், தமிழ்நாட்டுக்கு எவ்வளவுப் பெரிய ஒளிமயமான வாய்ப்புக் கிடைத்திருக்கும். இதனைக் கோட்டை விட்டது ஏன்? இதிலும் அரசியல்தானா?

சேது சமுத்திரத் திட்டத்தை, ராமன் பெயரைச் சொல்லித் தடுத்தாயிற்று. வளர்ச்சியை நோக்கிச் சிந்தித்துச் செயல்பட்டால்தான், அதற்குப் பெயர் மக்கள் நல அரசாகும் என்பதை நமது முதல்வர் உணர்வாரா?

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் 95 அடி பேருருவச் சிலை அமைப்பு

பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டும் தோழர்களே!

இருபத்தியோராம் நூற்றாண்டை பெரியார் நூற்றாண்டாக்கிடும் திட்ட இலக்கோடு செயல்படும் நாம் தற்காலத்தில் கற்காலத்தைத் தாண்டி, பொற்காலப் புது யுகத்தினை மக்களுக்கு உழைக்க உறுதி பூண்டு ஓய்வறியா உழைப்பினை - தன்னலம் துறந்த தொண்டறத் தினை, பதவி புகழ் வேட்டை அறி யாக் களப்பணியை முன்னாலே நிறுத்துவதில் சிறப்பான வகையில் மக்கள் ஆதரவினைப் பெற்று வருகிறோம்.

பால் (Sex), ஜாதி, மதம், கட்சி என்ற பேத உணர்வுகளைத் தாண்டி நமது இயக்கம் மக்கள் மத்தியில் பேராதரவினைப் பெற்றுவருவதால் இது பொற்காலம் ஆகும்!

தங்கம் தாருங்கள் என்று எங்கும் சென்று நீங்கள் சிறப்பாகத் திட்டமிட்டு, சிட்டுகளாகப் பறப்பதைக் கண்டு நாடே வியப்பு அடைகிறது!

தங்கம் தந்த தங்கங்கள் (‘Book of Gold People’) என்ற ஒரு அழகிய நூல் ஒன்றினை திராவிடர் கழகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டு அதில் பெயருடன் நன்கொடை விவரமும் பொறித்தால், வருங்கால சந்ததியினருக்கும், வரலாறு எழுதுவோருக்கும்கூட, இது எதிர்காலத்தில் நல்ல உதவியாக அமையக்கூடும் என்பது எனது பணிவன்பான யோசனையாகும்.

எவரிடமும் எதையும் கேட்டுப் பெறுவதற்கு முன்பு நாம் நமது பங்கினை அளித்துவிட்டுப் பேசுவதுதான் எடுத்துக்காட்டான அணுகுமுறை என்பதால், எளிய எம் தோழர்கள் குடும்பத்தில் உள்ள பொன் அணிகலன்களையும், தாலியையும் கூட இயக்கத்துக்கு மகிழ்வுடன் தந்து, எதிர்காலத்தில் இந்த இயக்கம் ஓர் உலக மாமலை யாகிட வேண்டும் என்பதற்கு நல்ல அடித்தளமிட்டுள்ளனர்.

இதற்காக இன்னும் சில மாதங்கள் உழைப்பு! உழைப்பு! உழைப்பு! - இவை மூலமாகவே நாம் இலக்கு அடைய வாய்ப்பு!

நமது கறுஞ்சிறுத்தைகள் அக ராதியில் நம் உழைப்பு ஒருக்காலும் தோல்வியை ஏற்படுத்தாது.

நமது இயக்கத்தை உலகளாவிய இயக்கமாக ஆக்கிடுதல் வேண்டும். மனிதனின் சுயமரி யாதையை முன்னிலைப்படுத்திய முதல் இயக்கம் அய்யா அணி - இந்த அறிவியக்கம் ஒன்றுதான் என்பது வரலாற்றுப் பெட்டகம் கூறும் உண்மையாகும்.

தமிழ் ஓவியா said...

மத இயக்கங்கள் எப்படியெல் லாம் ஒவ்வொரு நாட்டில், ஒவ் வொரு கால கட்டத்தில் வேரூன் றியது என்பதை இவ்வாண்டு விடுதலை அய்யா விழா மலரில் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

அமெரிக்காவில் நான் பயணம் செய்தபோது, செயின்ட்லூயிஸ் என்ற ஒரு பெருநகரத்தின் விமான நிலையத்தில் இறங்கிச் செல்லும் போது, அங்கே ஹரே இராமா, ஹரே கிருஷ்ணா இயக்கத்தினைச் சார்ந்த தொண்டர்கள் (இவர்கள் அமெரிக்கர்கள்) சிலர் பகவத் கீதை புத்தகங்களை வைத்து பிரச்சாரம் செய்வதைப் பார்த்து, அவர்களது வெளியீட்டினை நான் தோழர் அரசுமூலம் வாங்கினேன். அதில் உலக நாடுகளின் முக்கிய பெரு நகரங்களில் எல்லாம் அவர்களது கிளைகள் ஏற்படுத்தப்பட்டு நடை பெற்று வருகின்றன என்று இருந்தது.

அது மட்டுமா? பல மண்டை ஓட்டு அடையாள - ஆனந்த மார்க்க இயக்கத்திற்கு உலகம் முழுதும் 200, 300 கிளைகளாம்! இது எப்படி சாத்தியம்? தொண்டன் - உழைப்பு - நன்கொடை திரட்டல் - நிதி அடிப்படை சரியாக இருப் பதன் தத்துவம் தந்த தலைவருக்குப் பிறகு அதனைப் பலப்படுத்தி, பாரெங்கும் கொண்டு செலுத்தும் பணியை, அவருக்குப் பின்வரும் அத்தலைவரின் உண்மையான தொண்டர்கள் தான் செய்து முடித்திடுவர் -இதுதான் வரலாறு. மூலம் அடையலாம்.

கொள்கை பலமற்ற மனித குலத்தினைக் கூறுபோடுவோர் அதைச் செய்கின்ற நிலையில், மனித நேயத்தினையே மய்யப் படுத்தியுள்ள அரிய தத்துவ மாமலை பெரியார்தம் தத்துவத்தை உலகளாவச் செய்திட நாம் உழைப்பதுதானே நியாயம். பெரியார்விட்ட பணி முடிக்க எடுத்த சூளுரையில் உண்மையான செயலாக்கமாகவும் இருக்க முடியும்!

எந்தத் தத்துவமானாலும், எல்லா சமூக இயக்கங்களும் இப்படித்தான் உலக இயக்கங்களாக ஓங்கி உயர்ந்து நின்றன!

இதற்குமுன் இருபதாம் நூற்றாண் டில் பெரியார் தேவைப்பட்ட தைவிட, 21 ஆம் நூற்றாண்டில்தான் அதிகம் தேவைப்படுவார், பெரியார் என்றால் ஓர் வாழும் மானுடவியல் தத்துவம் - மனித குலத்தின் மகத்தான விடிவு! அதனை உருவாக்கிட நாம் எதை யும் கட்டுப்பாடு காத்து பழைமை வாதச் சக்திகளுடன் ஜாதி - மத - பேத மூடத்தனத்தினை - முகவர் களை எதிர்த்து, முழுப்போரை நடத்திட ஆற்றல் பெற்று, பெரிய ரின் இராணுவமாக ஆகிட வேண்டும்!

பெரியாருக்குப் பிறகு என்ற காலம்; மனித குலத்திற்கான பொற்காலம். உருவாக்க வேண்டிய பொறுப்பு மிகுந்த பணி நம் அனைவருக்கும் பேச்சாக அல்ல; மூச்சாகவே அமைந்துள்ளது என்பதை நான் இப்போது எடுத்துக் காட்டிடத் தேவையில்லை.

இயக்கக் குடும்பங்கள் ஒரு நிலையில் ஓங்கி உயர்ந்து தங்கம் திரட்டுவது, தனிப்பட்ட எவரின் சுயநல, சுகபோக வாழ்வுக்காக அல்ல; எதிர்கால மானுடத்தின் மகத்தான உய்வுக்காகவே!

இது இப்போது எழுதப்பட்ட தல்ல; எடைக்கு எடைத் தங்கம் வசூலிக்கும் திட்டத்தின்போது கழகத் தலைவர் 1998ஆம் ஆண்டு விடுத்த அறிக்கை இது!!

எனவே, அதே முயற்சியை மேலும் பன்மடங்காக்கி விழை யுங்கள்! வெற்றி நமதே! -

தலைமை நிலையம்

தமிழ் ஓவியா said...


ராஜராஜ சோழன் எங்க ஜாதி.. பங்காளி ஊரு மாப்ளே - வரிந்துகட்டி ஜாதிச் சங்கத்தில் உறுப்பினராக்கும்' அமைப்புகள்

ராஜராஜ சோழ உடையார்.. சோழர்குல படையாச்சியார்.. ராஜராஜ சோழ தேவேந்திரர்.. வன்னியர்குல சத்திரிய பேரரசன்.. - இந்த ஆண்டு ராஜராஜ சோழனின் 1028ஆவது சதய விழாவுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பளிச்சிட்ட வாசகங்கள்தான் இவை!

நேதாஜி, முத்துராமலிங்கத் தேவர், அம்பேத்கர் வரிசையில், கடல் கடந்து சைவத்தையும், தமிழையும் பரப்பிய ராஜராஜ சோழனையும் ஜாதி வட்டத் துக்குள் அடைத்துவிட்டார்கள். உடையார் என்றும் தேவர் என்றும் தேவேந்திரர் என்றும் ஆளாளுக்கு ராஜராஜ சோழனுக்கு ஜாதி முத்திரை குத்தியதால் இந்த ஆண்டு சதய விழா பதற்றத்துடனேயே கடந்திருக்கிறது.
பரம்பு மன்னனின் பேரன் ராஜராஜ சோழன்.., உடையார் ராஜராஜ சோழத் தேவருக்கு.. என்று கல் வெட்டுகளில் காணப்படுவதை வைத்து ராஜ ராஜனை எங்காளு என்கிறது உடையார் (பார்கவ குலம்) சமூகம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக பார்கவ குல இளைஞர் முன்னேற்றப் பேரவைச் செயலாளர் சசிகுமார், ராஜராஜன் உடையார்தான் என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கு. எங்கள் வம்சத்தைச் சேர்ந்த பரம்பு மன்னனின் பேரன்தான் ராஜராஜ சோழன். வர்ணாசிரம தர்மப்படி தேவேந்திரர்களோ, முக்குலத்தோரோ, சத்திரியர்களாக இருந்திருக்க முடியாது. அப்படி இருக்க, ராஜராஜன் எப்படி அந்த ஜாதிகளைச் சேர்ந்தவராக இருக்க முடியும்? என்றார்.

விஜயாலயச் சோழத்தேவர் எங்க ஊரு மாப்ளே!

ராஜராஜன் 48 சிறப்புப் பட்டங்களை உடையவர். இந்த உடையவர் என்பது தான் காலப்போக்கில் உடையார் என்றாகிவிட்டது. ஆனால், கல்வெட்டுக் களை முழுமையாக படித்துப் பார்த்தால் ராஜராஜ சோழத் தேவர் என்று இருப்பதை அறியமுடியும் என்கிறார் சோழ மண் டலத்து முக்குலத்தோர் சமுதாய மக்கள் அமைப் பைச் சேர்ந்த சிவகுரு நாதன். விஜயாலயச் சோ ழனுக்கு வலங்கைமான் அருகி லுள்ள ஊத்துக் காட்டில் வானவன்மா தேவி என்ற பெண்ணைத் தான் திருமணம் முடித் தார்கள். அந்தப் பெண் ணின் வம்சாவழியினர் எனக்கு உறவுமுறை. விஜ யாலயச் சோழன் எங்க ஊரு மாப்ளே என்கிறார்.
உடையார், தேவர் என்பதெல்லாம் ஜாதியில்லை
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலர் தியாககாமராஜ், உடையார், தேவர் என்பதெல்லாம் ராஜராஜனின் மறு பெயர்கள். சாதி அல்ல. ராஜராஜன் தேவேந்திரகுலத்தில் வந்தவன் என்பதை நாங்கள் தக்க சான்றுகளுடன் விவாதிக்கத் தயாராய் இருக்கிறோம் என்றார்.

சத்திரிய ஜாதி வன்னியர்கள் மட்டும்தான்!

வன்னியர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் ஆறு. அண்ணல் கண்டார், தமிழகத்தில் சத்திரியன் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஜாதி வன்னியர். சோழ மன்னர்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் முடிசூட்டு விழா நடப்பது வழக்கம். இன்று வரை சிதம்பரம் கோயிலில் முடிசூட்டும் ஒரே குடும்பம் வன்னியர்களான பிச்சாவரம் பாளையக் காரர் குடும்பம். நடராஜர் கோயிலில் இப்ப வரைக்கும் சோழர் மண்டகப்படின்னு மண்டகப் படியே நடத்திக்கிட்டு வர்றாரு. சகல சம்பத்துக்களும் உடையவர் என்பதால் ராஜராஜனை உடையார் என்றும் அனைவருக்கும் மேலானவன் என்பதால் தேவர் என்றும் அழைத்தார்கள். இந்த உண்மை தெரியாமல் அவரை தேவர் ஜாதியிலும் உடையார் ஜாதியிலும் சேர்ப்பது பிதற்றல் என்கிறார்.

அவலத்தை முளையிலேயே கிள்ளணும்

இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் கருத்து வேறாக இருக்கிறது. ராஜராஜன் இந்துப் பேரரசன். அதனால்தான் தன்னை சிவபாத சேகரன் என அழைத்துக் கொண் டான். அவரை ஜாதிக்குள் அடைப்பது அநியாயம்; அக்கிரமம். அருண்மொழித் தேவன் என்று இருப்பதால் அவரை தேவர் ஜாதி என்கிறார்கள். பெரிய கோயிலைக் கட்டியதால் ராஜராஜனுக்கு பெருந்தச்சன் என்ற பட்டம். இதனால் தச்சர்கள் எல்லாம், ராஜராஜன் எங்காளு என்கிறார்கள். தேவேந்திரகுலத்தினர், ராஜராஜன் மல்லர் குலத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள். இதைவிட அபத்தம் என்னவென்றால், சாதி இரண்டொழிய வேறில் லைனு சொன்ன அவ்வைப் பாட்டியையே மள்ளத்தி என்று சாதிய வட்டத்துக்குள் கொண்டு வந்து விட்டார்கள். ராஜராஜ சோழனையும் ஜாதிய வட்டத்துக்குள் கொண்டுவரும் அவலத்தை முளை யிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றார்.

தஞ்சை பெரிய கோயிலை ஆய்வு செய்துவரும் வரலாற்றுப் பேராசிரியர் குடவாயில் பாலசுப்பிர மணியனிடம் இந்த சர்ச்சை குறித்துக் கேட்டதற்கு, இதுதொடர்பாக இன்னும் நிறைய ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. ஆய்வின் முடிவில்தான் பதில் கிடைக்கும் என்று ஒதுங்கிக்கொண்டார். ராஜராஜ சோழனுக்கும் இது சோதனையான காலகட்டம்தான் போலிருக்கிறது! (தி இந்து, 16.11.2013)

தமிழ் ஓவியா said...


அஸ்திவாரம் கிடையாது

பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது. - (விடுதலை, 11.7.1954)

தமிழ் ஓவியா said...


தெரியாதோ நோக்கு?
- ஊசி மிளகாய்

புதுக்கோட்டை - திருச்சி இடையில் உள்ள மாத்தூர் காவல் நிலையத்தில், அடிக்கடி அப்பகுதி யில் கொலை, கொள்ளைகள் நடைபெறுவதைத் தடுக்க அங்குள்ள காவல் துறை அதிகாரிகளான பிரகஸ்பதிகள் பார்ப்பன குருக்களைஅழைத்து, யாகம் செய்துள்ளதாக, இம்மாதம் 15ஆம் தேதி ஏடுகளில் வந்துள்ள செய்தியைவிட, நம் அரசு, மதச்சார்பின்மையை காப்பாற்றுவதிலும், அரசியல் சட்டம் கூறும் அடிப்படைக் கடமையான அறிவியல் மனப்பான்மையைக் குடிமக்களிடம் வளர்க்க வேண்டிய அரிய பணியையும்விட அற்புதமான(?) செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மக்களுக்குத் திருடர் பயமோ, கொலை, கொள்ளை பீதியோ இனி ஏற்படவே ஏற்படாது; இது சத்தியம்! இது சத்தியம்!

பலே பலே, இவாளுக்கு தனியே பாராட்டு விழா நடத்தி முதல் அமைச்சரும், தமிழக அரசும் பண முடிப்பு அளித்து யாகாதிபதி. காவல் சுவாமிகள் பட்டங் களையும் வழங்கலாம்; குற்றத் தடுப்புக்கு இவ்வளவு எளிய வழியைக் கண்டுபிடித்த இவாளுக்கு டபுள் புரோமோஷன் அல்லவா அரசு வழங்க வேண்டும்! அடடா என்னே பக்தி! என்னே பக்தி!! மற்ற மாவட்டங்களிலும் இதையே கடைப்பிடிக்கலாம்; அவசர அரசு ஆணையையும் பிறப்பிக்கலாம்.

இனி டி.ஜி.பி. அய்.ஜி. பதவிகளுக்குப் பதிலாக, யாகாதிபதிகள், பர்ண சாலை பகவத் குஞ்சுகள் என்றெல்லாம் கூறி, எல்லா காவல் நிலையங்களையும், யாக சாலைகளாகவும், பர்ண சாலைகளாகவும், மாற்றி நித்தம் நித்தம் பூஜை, யாகம், நடத்தலாம்! நரபலி கூட கொடுத்தால் மேலும் யாகங்களின் பலன் குயிக்கா (ணுரஉம) கிட்டாதோ!

அப்புறம் பூணூல் குருஜிகளுக்கெல்லாம் ஏகப்பட்ட டிமாண்டோ டிமாண்டு ஏற்பட்டு விடும்!
அந்த யாகப் புகை மண்டலமே நல்ல ஆரோக்கிய சுற்றுச் சூழலை நன்னா பாதுகாக்கும்!

நம்ம பெரியவா கண்டுபிடிச்ச யாகமுன்னா மற்ற நாட்டுக்காராளெல்லாம்கூட வருவாளே?

ஏற்கெனவே நம் அய்யர் வாள்களை ராஜபக்சே அழைச் சுண்டு போய் யாகங்கள் நடத்தியல்லவா அந்த டெரரிஸ்ட் டுகளான புலிகளை அழிச் சாள் - தெரியாதோ நோக்கு?

இதைக்கேட்ட அந்த ஒபாமாகூட இந்த அல்கொய்தா தொல்லையை ஒழிக்க யாகத்தையே செய்யணும்னு சொல்லிண்டிருக்காராம்; நம்ம அடுத்தாத்து அம்புஜத்தின் ஒண்ணுவிட்ட சகலை யின் சம்பந்தியின் மருமா சொன்னார்! ஆமாம் ஏற்கனவே தீபாவளி கொண்டாடச் சொல்லி சாதிச்சுட்டோமே!

அவாளுக்கு ஸ்பெஷல் விசா கூட அதனால வருமாம்!

ஹூம் - நேக்குக் கிடைக்காத பாக்கியம் அவாளுக்கு அடிச்சுது யோகம்! ஒயிட் அவுஸ்போய் ஜாம் ஜாம்ன்னு உட்கார்ந்துண்டு யாகம் என்று40 நாள் பண்ணி ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணிட யோசனையாம்!

பலே பலே! நம்ம வேத விற்பன சிகாமணி யாக சாலை யோகானந்த குருக்கள்தான் இனிமே ஒயிட்அவுஸ் அதிபர் கொஞ்ச நாளைக்குன்னு சொல்லு!

அதுசரி, இந்த மாத்தூர் போலீஸ்காரர் மேலே தி.க. கறுப்புச் சட்டைக்காரனுங்க, பி.அய்.எல் அது தானே பொது நல வழக்கு அது இதுன்னு எதுவும் போட்டு, ஏதாவது ஏடா கூடாமா தீர்ப்பு வாங்கிடப் போறா?

அதையும் நன்னா விசாரியுங்கோ. இப்படி சிறீரங்கத்திலே ஒரு உரையாடல் நடந்தாலும் ஆச்சரியப்பட முடியாதே!

தமிழ் ஓவியா said...


தெரியாதோ நோக்கு?
- ஊசி மிளகாய்

புதுக்கோட்டை - திருச்சி இடையில் உள்ள மாத்தூர் காவல் நிலையத்தில், அடிக்கடி அப்பகுதி யில் கொலை, கொள்ளைகள் நடைபெறுவதைத் தடுக்க அங்குள்ள காவல் துறை அதிகாரிகளான பிரகஸ்பதிகள் பார்ப்பன குருக்களைஅழைத்து, யாகம் செய்துள்ளதாக, இம்மாதம் 15ஆம் தேதி ஏடுகளில் வந்துள்ள செய்தியைவிட, நம் அரசு, மதச்சார்பின்மையை காப்பாற்றுவதிலும், அரசியல் சட்டம் கூறும் அடிப்படைக் கடமையான அறிவியல் மனப்பான்மையைக் குடிமக்களிடம் வளர்க்க வேண்டிய அரிய பணியையும்விட அற்புதமான(?) செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மக்களுக்குத் திருடர் பயமோ, கொலை, கொள்ளை பீதியோ இனி ஏற்படவே ஏற்படாது; இது சத்தியம்! இது சத்தியம்!

பலே பலே, இவாளுக்கு தனியே பாராட்டு விழா நடத்தி முதல் அமைச்சரும், தமிழக அரசும் பண முடிப்பு அளித்து யாகாதிபதி. காவல் சுவாமிகள் பட்டங் களையும் வழங்கலாம்; குற்றத் தடுப்புக்கு இவ்வளவு எளிய வழியைக் கண்டுபிடித்த இவாளுக்கு டபுள் புரோமோஷன் அல்லவா அரசு வழங்க வேண்டும்! அடடா என்னே பக்தி! என்னே பக்தி!! மற்ற மாவட்டங்களிலும் இதையே கடைப்பிடிக்கலாம்; அவசர அரசு ஆணையையும் பிறப்பிக்கலாம்.

இனி டி.ஜி.பி. அய்.ஜி. பதவிகளுக்குப் பதிலாக, யாகாதிபதிகள், பர்ண சாலை பகவத் குஞ்சுகள் என்றெல்லாம் கூறி, எல்லா காவல் நிலையங்களையும், யாக சாலைகளாகவும், பர்ண சாலைகளாகவும், மாற்றி நித்தம் நித்தம் பூஜை, யாகம், நடத்தலாம்! நரபலி கூட கொடுத்தால் மேலும் யாகங்களின் பலன் குயிக்கா (ணுரஉம) கிட்டாதோ!

அப்புறம் பூணூல் குருஜிகளுக்கெல்லாம் ஏகப்பட்ட டிமாண்டோ டிமாண்டு ஏற்பட்டு விடும்!
அந்த யாகப் புகை மண்டலமே நல்ல ஆரோக்கிய சுற்றுச் சூழலை நன்னா பாதுகாக்கும்!

நம்ம பெரியவா கண்டுபிடிச்ச யாகமுன்னா மற்ற நாட்டுக்காராளெல்லாம்கூட வருவாளே?

ஏற்கெனவே நம் அய்யர் வாள்களை ராஜபக்சே அழைச் சுண்டு போய் யாகங்கள் நடத்தியல்லவா அந்த டெரரிஸ்ட் டுகளான புலிகளை அழிச் சாள் - தெரியாதோ நோக்கு?

இதைக்கேட்ட அந்த ஒபாமாகூட இந்த அல்கொய்தா தொல்லையை ஒழிக்க யாகத்தையே செய்யணும்னு சொல்லிண்டிருக்காராம்; நம்ம அடுத்தாத்து அம்புஜத்தின் ஒண்ணுவிட்ட சகலை யின் சம்பந்தியின் மருமா சொன்னார்! ஆமாம் ஏற்கனவே தீபாவளி கொண்டாடச் சொல்லி சாதிச்சுட்டோமே!

அவாளுக்கு ஸ்பெஷல் விசா கூட அதனால வருமாம்!

ஹூம் - நேக்குக் கிடைக்காத பாக்கியம் அவாளுக்கு அடிச்சுது யோகம்! ஒயிட் அவுஸ்போய் ஜாம் ஜாம்ன்னு உட்கார்ந்துண்டு யாகம் என்று40 நாள் பண்ணி ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணிட யோசனையாம்!

பலே பலே! நம்ம வேத விற்பன சிகாமணி யாக சாலை யோகானந்த குருக்கள்தான் இனிமே ஒயிட்அவுஸ் அதிபர் கொஞ்ச நாளைக்குன்னு சொல்லு!

அதுசரி, இந்த மாத்தூர் போலீஸ்காரர் மேலே தி.க. கறுப்புச் சட்டைக்காரனுங்க, பி.அய்.எல் அது தானே பொது நல வழக்கு அது இதுன்னு எதுவும் போட்டு, ஏதாவது ஏடா கூடாமா தீர்ப்பு வாங்கிடப் போறா?

அதையும் நன்னா விசாரியுங்கோ. இப்படி சிறீரங்கத்திலே ஒரு உரையாடல் நடந்தாலும் ஆச்சரியப்பட முடியாதே!

தமிழ் ஓவியா said...


காவல் நிலையத்தில் சிறப்பு யாகமா? கலைஞர் கருத்து


கேள்வி: புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலையத்திற்குள் சிறப்பு யாகம் செய்யப்பட்ட நிகழ்ச்சி புகைப்படத்தோடு ஏடுகளில் வெளிவந்திருக்கிறதே?

கலைஞர்: மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குள் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் அதிகரித்த காரணத்தால், போலீசார் சேர்ந்து, காவல் நிலையத்திற்குள் சிறப்பு யாகம் நடத்தியிருக்கிறார்கள். மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குள் மாத்திரமல்ல; தமிழகம் முழுவ திலுமே ஏராளமான கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தலைமைச் செயலகத்திற் குள்ளேயே சிறப்பான யாகம் நடத்தலாம்! இப்போது முதலமைச்சர் நிகழ்ச்சிகளிலே உரையாற்றும்போது அண்ணா நாமம் வாழ்க! என்றும், எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! என்றும் சொல்கிறார் அல்லவா; இனி மேல் பெரியார் நாமம் வாழ்க! என்றும் சேர்த்துக் கொள்ளலாம். காவல் நிலையத்தை யாகசாலையாக மாற்றிய காவல் துறையினருக்கும் ரொக்கப் பரிசுகள், பதவி உயர்வுகள் வழங்கலாம்! தமிழர்களே! இதற் காகத்தானே அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தீர்கள்!

தமிழ் ஓவியா said...


2ஜி' ஜெபிசி அறிக்கையை திருப்பி அனுப்புக! மீரா குமாருக்கு டி.ஆர்.பாலு கடிதம்!

புதுடில்லி, நவ.22- 2ஜி அலைக்கற்றை முறை கேடு தொடர்பான ஜேபிசி (நாடாளுமன்றக் கூட்டுக் குழு) அறிக்கை முழுமையற்றது என்றும், அதைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று மக் களவைத் தலைவர் மீரா குமாரிடம் நாடாளு மன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மீரா குமாருக்கு அவர் எழுதியுள்ள 3 பக்க கடி தத்தில், 2ஜி அலைக் கற்றை விவகாரம் தொடர்பான ஜேபிசி அறிக்கை அரசியல் சார் புடையதாக உள்ளது என்றும், அக்குழுவின் தலைவர் (சாக்கோ) ஒரு சார்பாக செயல்பட்டுள் ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு நெறிகளின் படி முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியு றுத்தியுள்ள அவர், ஒரு வேளை முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டால், அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட் டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

1998 முதல் 2009 வரை அரசு மேற்கொண்ட கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவை தொடர்பாக எந்தக் குறிப்பும் இல்லை என்றும் அவர் குறை கூறியுள்ளார்.

மேலும், '2ஜி அலைக்கற்றை விவகா ரம் தொடர்பான ஆ. ராசாவின் விளக்கம் இறுதிகட்ட அறிக்கை யில் சேர்க்கப்படும் என்று ஜேபிசி தலைவர் உறுதி யளித்திருந்தார். ஆனால், அந்த அறிக்கையை முறையாக பரிசீலிக்கா மல் அவர் நிராகரித்து விட்டார். எந்தவொரு காலக்கட்டத்திலும் ராசாவின் விளக்கம் விவாதிக்கப்படவே இல்லை.

இந்த விவகாரம் தொடர்பாக நான் தாக்கல் செய்த ஆட்சேப அறிக்கையில் இருந்தும் ஆ.ராசாவின் விளக்கம் குறித்த பகுதி நீக்கப்பட் டுள்ளது. இது எனக்கும் ஆ.ராசாவுக்கும் இழைக் கப்பட்ட அநீதி. என்னு டைய ஆட்சேப அறிக் கையை நீர்த்துப் போக செய்யும் வகையில் தவறான பிரிவின் கீழ் அது சேர்க்கப்பட்டுள் ளது. சில உண்மைகளை ஜேபிசி குழு முழுமை யாக நிரந்தரமாக மூடி மறைத்துவிட்டது.

எனவே, ஜே.பி.சி. அறிக்கையை அந்தக் குழுவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். 2ஜி குறித்து முழுமையாக விசாரணை நடத்தி மறுஅறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜே.பி.சி. அறிக்கையில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் எழுத்துப் பூர்வ விளக்கமும் சேர்க் கப்பட வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் டி.ஆர். பாலு கோரியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மோடியின் அடுத்த உளறல்


துடு (ராஜஸ்தான்) ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காந்தியா ரின் பெயரை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தவறாக உச் சரித்தார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ப தற்கு பதிலாக மோகன் லால் கரம்சந்த் காந்தி என மோடி குறிப்பிட் டார்.

ராஜஸ்தானின் துடு பகுதியில் நரேந்திர மோடி பேசுகையில், தனது வாழ்வின் இறுதியில் மகாத்மா காந்திக்கு ஓர் ஆசை இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. அதை நீங்கள் நிறை வேற்றுவீர்களா? மோகன்லால் கரம்சந்த் காந்தி... என நரேந்திர மோடி தனது பேச்சைத் தொடர்ந்தார்.

மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி என்பதற்குப் பதிலாக மோகன்லால் கரம்சந்த் காந்தி என உச்சரித்த தனது தவறை உணராமல் தொடர்ந்து உரையாற்றினார்.
சில நாள்களுக்கு முன் புரட்சியாளர் சியா மாஜி கிருஷ்ணா வர்மா வின் பெயரை குறிப்பிடு வதற்குப் பதிலாக ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி யின் பெயரை மோடி குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


மகிழ்ச்சியே!

செய்தி: செஞ்சி அருகே வகுப்பறை இல்லாததால் கோயில் வகுப்பறை ஆனது.

சிந்தனை: இந்த ஒரு நல்ல காரியத்துக்காவது கோயில் பயன்படுகிறதே -அந்த அளவில் மகிழ்ச்சியே!

தமிழ் ஓவியா said...


பித்தலாட்டத்தின் மறுபெயர் பிஜேபி இதோ இன்னொரு ஆதாரம்

நான் முதல் மந்திரி ஆவதற்கு முன்பு சாலைகள் மிகவும் மோசமாக போர்க் காலத்தில் குண்டு போட்ட சாலை போல் குண்டும் குழியுமாக இருந்தன. நான் மாநிலம் முழுவது பயணம் செய்தபோது இந்த அவலத்தைப் பார்த்தேன். என்னுடைய வாகனம் செல்வதுகூட பெரும் சிரமமாக இருந்தது. இவற்றையெல்லாம் சரி செய்வதென்பது எனக்கு மிகவும் பெரிய சோதனையான ஒன்றாக இருந்தது. இந்த பாழடைந்த சாலைகளை சீர் செய்ய மிகப் பெரிய யாகம் செய்வதைப் போன்று பெரிய காரியமாக இருந்தது. இப்போது நான் செய்த காரியத்தின் பலனை நீங்களே பாருங்கள்...

இந்த சாலையைப் பார்த்த பிறகு இந்தியாவே கூறும் பாதுகாப்பான மற்றும் நவீன வசதியுடைய சாலைகள் மத்திய பிரதேச சாலைகள் என்று...
இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது மத்திய பிரதேச பி.ஜே.பி. ஆட்சியால்.
உண்மை என்னவென்றால் இது மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் சாலையாகும்; பித்தலாட்டமே உன் பெயர்தான் பிஜேபியா?

தமிழ் ஓவியா said...


ஜீவா பாடுகிறார்!


நல்லாரை உழைப்போரைப் பறையரென்றார், நயவஞ்சகமுடையோர் மேல்ஜாதி யென்றார்,

பொல்லாத கொடியவரை மன்னரென்றார்

பொய்யுரைத்த குருக்கள், தமை குருக்கள் என்றார்

சொல்லாரும் தாயினத்தை அடிமையென்றார்

சூது மிகும் ஆசாரம் சமயம் என்றார்

இல்லாத பொய்வழியில் சொன்னதாலே

இந்நாட்டார் அடிமை வாழ்வு எய்தினாரே.

ப.ஜீவானந்தம்
தகவல்: எஸ்.எம்.தங்கவேலன், குஜராத்

தமிழ் ஓவியா said...

தலை எழுத்து

பிரம்மனால் பெண்ணுக்கும், ஆணுக்கும் தலை எழுத்து தனித் தனியே எழுதப்படுமாயின், மருத்துவத் தால் பெண்ணாக மாறும் ஆணுக்கும் ஆணாக மாறும் பெண்ணுக்கும் எவ்வாறு பொருந்தும்?

- சாமி. சேகரன், புதுவை

தமிழ் ஓவியா said...

காந்தியார் புகுத்திய குழப்பம்

ஒத்துழையாமை இயக்கத்தில் மதத்தைப் புகுத்தினார். ஆனால் எனது தந்தை, தேச பந்துதாஸ், லாலாஜி ஆகியோர் அரசியல் பிரச்சினைகளை மதச் சார்பற்ற முறையில் தான் அணுக வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அவர்கள் பொது வாழ்வில் மதத்தைப் புகுத்தியதே இல்லை.

நமது அரசியலில் இந்த மதம் பகுந்து வளர்வது கண்டு எனக்கு கவலை ஏற்பட்டது. அரசியலில் மதம் புகுவது எனக்கு பிடிக்கவே இல்லை. மவுல்விகளும், மவுலானாக்களும், சுவாமிகளும் மேடைப் பேச்சில் பரப்பிய கருத்துகள் கெடுதிடை உண்டாக்கக் கூடியவை. அவர்கள் நாட்டின் சரித்திரம்.

பொருளா தாரம், சமூக அமைப்பு பற்றிய உண்மைகளைத் திரித்துக் கூறி மக்களைக் குழப்பி தெளிவான சிந்தனைக்கு இடமில்லாமல் செய்துவிட்டார்கள்.

(நேரு எழுதிய உலக சரித்திரம், பக்கம் 139)

தமிழ் ஓவியா said...


மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...


பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞான முடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தி யாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக் கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடைய வனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

இராவணனுக்குப் பிறந்த பிள்ளை

இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும்போதே அவள் கர்ப்பிணி!

இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்குமணனை விடு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்குமணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.

இராமனால் விடப்பட்ட குதிரை இலவனால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் சுட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின்றான். அவனையும் கொன்று விடுகிறான்.

இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்தபிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!

-புரட்சிக் கவிஞர்

தமிழ் ஓவியா said...


பழைமைக்கு அடி!


ஓ ஜ ஜி! உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருது கிறேன்.

நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்ய வில்லையென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்

காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்ல வில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர் களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல் வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்ப தற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர்.

இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்பு கிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வ தில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங் களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப் படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம்.

இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும் தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ்வளவையும் பார்த்துக் கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்bகைவரை என்ற நூல்)

ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்