Search This Blog

26.11.13

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா?ஜாதி இருக்கிற நாட்டிலே சுதந்திரம் இருக்குமா?

நவம்பர் 26 



நவம்பர் 26 என்பது திராவிடர் கழக வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வரலாற்றிலும்கூட மறக்க முடியாத நாள்! இந்த நாளில்தான் இன்றைக்கு 56 ஆண்டுகளுக்குமுன் (1957இல்) ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள பகுதியை தந்தை பெரியார் அவர்களின் கட்டளைப்படி திராவிடர் கழகத் தோழர்கள் எரித்து மூன்றாண்டுக் காலம் வரை கடுங்காவல் தண்டனை ஏற்ற நாள்.

1957 நவம்பர் 3ஆம் தேதி தஞ்சையிலே ஜாதி ஒழிப்பு (ஸ்பெஷல்) மாநாடு கூட்டினார்.

கொட்டும் மழையிலும் 4 லட்சம் மக்கள் கூடினார்கள். அந்த மாநாட்டிலே ஜாதி ஒழிப்புக்கான திட்டத்தைத் தந்தார் தந்தை பெரியார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதம், ஜாதிகளைக் காப்பாற்றும் பகுதிகளைச் சுட்டிக் காட்டினார் (13(2); 25(1); 26, 29(1)(2) 368).

15 நாட்களுக்குள் இந்தப்  பகுதியை மாற்றி ஜாதி ஒழிப்புக்கு அரசு வழி செய்யவில்லையென்றால் நவம்பர் 26 அன்று திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் பகுதியை எரிப்பார்கள் என்று பிரகடனப்படுத்தினார்.

பல லட்சக்கணக்கான மக்கள் கூடிய ஒரு மாநாட்டில் வெகு மக்களின் மாபெரும் தலைவர் ஒரு கருத்தை வெளி யிடுகிறார் என்றால், அதற்குரிய மதிப்பைக் கொடுத்து ஆராய்வதுதான் உண்மையான ஜனநாயகமாகும்.
ஆனால் அரசு அந்தப்படி நடந்து கொண்டதா என்றால் இல்லை என்பதுதான் வேதனையான ஒன் றாகும்.

சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடமில்லை, அப்படியொரு போராட்டத்தை அறிவித்தார் பெரியார்.
சென்னை மாநில அரசு அவசர அவசரமாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியது தேசிய அவமதிப்பு தடுப்பு மசோதா (Prevention of Insult to
National Honour 1957).

மூன்றாண்டுகள்வரை தண்டனை விதிக்கலாம் என்கிறது அந்தச் சட்டம்.
தந்தை பெரியாரா அஞ்சுவார்? கருஞ்சட்டைத் தோழர்களா பின் வாங்குவார்கள்? 10 ஆயிரம் தோழர்கள் எரித்தனர். வெறும் மூவாயிரம் பேர்களை அரசு கைது செய்தது. பலர் சிறையில் மாண்டனர்; வேறு பலர் நோய் வாய்ப்பாட்டு, வெளியில் வந்த சில நாட்களிலேயே மரணத்தை  தழுவினர்.

இன்றைக்கு 56 ஆண்டுகள் ஓடி விட்டனவே - இந்திய அரசு அந்த ஜாதி ஒழிப்புக்கு வழி செய்ததா? தந்தை பெரியார் கேட்டாரே - ஒரு சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கிற நாட்டிலே சுதந்திரம் இருக்குமா? என்று வினா எழுப்பினாரே - அறிவு நாணயமாக இதற்கு விடை உண்டா?

கடைசியாக தந்தை பெரியார் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் (1973 நவம்பர் 8,9) ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவில் இடம் பெற்று இருக்கும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே!

இதுவரை இதுகுறித்த சிந்தனை அரசியல் கட்சிகளுக்கு உண்டா? நாட்டுத் தலைவர்களிடத்தில்தான் உண்டா? ஊடகங்கள்தான் இதனைக் கண்டு கொள்வதுண்டா?

திராவிடர் கழகம் தானே தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்கள்தானே அதற்காகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் - களங்களைக் கண்டு கொண்டும் இருக்கின்றனர்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தேவை என்ற கழகத்தின் கோரிக்கை - போராட்டம் ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் மிக முக்கியமான கூறு அல்லவா!

இதுகுறித்துத் திராவிடர் கழகம் தொடர்ந்து பல திட்டங்களை வகுத்து நாடெங்கும் பிரச்சாரப் புயலைக் கிளப்பி கடைசியாக ஒருமித்த கருத்துள்ளவர்களை ஒன்று கூட்டி  மாநாட்டை நடத்தி, மாபெரும் போராட் டத்தை நடத்தும் திட்டம் கழகத்திடம் உண்டு.

உச்சநீதிமன்றமும் தேவையில்லாத வகையில் இந்த வழக்கை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

தந்தை பெரியார் அவர்களின் நியாயமான கொள்கையை ஏற்றுக் கொண்டு, மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையிலான ஆட்சி இரு முறை சட்ட மன்றத்தில் உரிய வகையில் சட்டம் இயற்றியும், தீர்மானம் நிறைவேற்றியும் உள்ள நிலையில் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்று விடுகிறார்கள்.

பிறவியின் அடிப்படையில் பேதம் பேசும் வழக்குக்கு எதிரான ஒரு பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அலட்சியம் காட்டுவது சரியானதல்ல;  விரைவில் தீர்ப்பினை வழங்க வேண்டும் என்று இந்த ஜாதி ஒழிப்புப் போராட்ட நாளில் வலியுறுத்துகிறோம்.

இந்த நாளில் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வெஞ்சிறை கண்ட தோழர்களுக்கெல்லாம், வீர மரணம் அடைந்த கருஞ்சட்டைகளுக்கெல்லாம் வீர வணக் கத்தைச் செலுத்துவோம்!

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
                    ----------------------------”விடுதலை” தலையங்கம் 26-11-2013

36 comments:

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொருளாளர் படம் அல்ல - பாடம்

பெரியார்ஊட்டியஅந்தச்சுயமரியாதைஉணர்வுஉள்ளவரை

எங்களையாரும்வீழ்த்திடமுடியாது-முடியவேமுடியாது

மறைந்த கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை அவர்களின் படத்தைத் திறந்து வைத்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் உரை

கழகப் பொருளாளர் மறைந்த கோ. சாமிதுரை படத்தினை தி.மு.க. தலைவர் கலைஞர் திறந்து வைத்தார்


சென்னை, நவ.26- தந்தை பெரியார் அவர்களால் ஊட்டப்பட்ட அந்தச் சுய மரியாதை உணர்வு - அந்தக் கொள்கை உள்ளவரை எங்களை யாரும் வீழ்த்த முடியாது என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

இன்று (26.11.2013) காலை சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக பொருளாளர் மறைந்த கோ.சாமிதுரை அவர்களின் உருவப் படத்தினைத் திறந்து கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
கலைஞர் உரை வருமாறு:-

மானமிகு சாமிதுரை அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற இந்த நாளில், அன்னார் அவர் களுடைய படத்தினைத் திறந்து வைக்கின்ற நிகழ்ச் சியிலே கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திக்கின்ற நிலையை எய்தியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு, நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உருக்கமிகு உரையாற்றிய திரா விடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், என்னுடைய அருமை இளவல் வீரமணி அவர்களே, முனைவர் நன்னன் அவர்களே, முன்னாள் அமைச்சர் வி.வி. சாமிநாதன் அவர்களே, குழந்தை தமிழரசன் அவர்களே, வரவேற்புரை நிகழ்த்திய கலி. பூங்குன் றன் அவர்களே, கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களே, வருகை தந்துள்ள சாமிதுரையின் குடும்பத்தினரே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனை வருக்கும் ஆறுதல் கூறுகின்ற நிலையில் சாமி துரையின் புகழ் என்றென்றும் வாழும் என்ற நம்பிக்கையை நாமெல்லாம் பெறுகின்ற இந்த நாளில் அவருடைய இழப்பினை எண்ணி வருந்துகின்ற இந்த நேரத்தில், அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து ஆற்றிடுவோம் என்ற சூளுரையைத் தந்தை பெரியாருடைய பெயரால் அமைந்துள்ள இந்தப் பெரியார் திடலில் நாம் மேற் கொள்வோம் என்று முதற்கண் கூறுகின்றேன்.

தமிழ் ஓவியா said...


இங்கே உரையாற்றிய நம்முடைய தமிழர் தலைவர், தளபதி வீரமணி அவர்களும் மற்றவர் களும் சாமிதுரை அவர்கள் மறைந்த அந்த நாளில் நான் இந்த அரங்கில் நுழைந்து எப்பொழுதுமே இங்கே இருக்கின்ற திராவிடர் கழகத்தின் தோழர்கள் பலரும் வேறொரு நிகழ்ச்சிக்காக திருச்சிக்குச் சென்றிருந்த காரணத்தால், தனி ஒருவனாக உடனடியாக வீட்டிலிருந்து புறப்பட்டு சாமிதுரை அவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டுமென்ற அந்த எண்ணத்தோடு ஓடி வந்ததை நினைவூட்டினார்களே, அது ஏதோ பிரச்சாரத் திற்காக, ஏதோ கடமையை ஆற்றுவதற்காக நடந்த நிகழ்ச்சியாக யாரும் கருதக் கூடாது. ஒன்றி போன உணர்வுகள், அதன் அடையாளத்தை, திராவிட இயக்கத் தோழர்களும், இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்லுகின்ற தளபதிகளும் உணர்ந்திருக் கிறார்கள்.

நாம் வாழும் நோக்கம்!

என்னைப் பொறுத்தவரையில் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சில் நிறைந்திருக்கின்ற சாமி துரை போன்றவர்களைத் தொடர்ந்து நினைவிலே நிறுத்திக் கொண்டிருந்தால்தான் நாம் ஏற்றுக் கொண்ட கொள்கைகள், வீரமணிஅவர்கள் குறிப்பிட்டதைப் போல, துவக்கிய வாய்மைப் போரை இடைவிடாமல் நடத்தி நாம் உடனடியாக வெற்றி பெற முடியாவிட்டாலும், நமக்குப் பிறகு தொடர்ந்து வருகிறவர்கள் பெறட்டும், திராவிடச் சமுதாயம் வெற்றி பெறட்டும் என்ற அந்த எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நான் இது போன்ற ஒரு நிகழ்ச்சியிலே குறிப் பிட்டேன். மறைந்த ஒருவருக்கு மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சி அது. அதை நினைவுபடுத்த விரும்புகிறேன். தென்னை மரத்திலிருந்து ஒரு மட்டை கீழே விழுந்து விட்டால், அந்த மரமே விழுந்து விட்டதாகப் பொருள் அல்ல. அந்த மட்டை இருந்த இடத்திலே ஒரு வடு தோன்றும். அந்த வடுக்கள் வளர வளர எண்ணிக்கைபெருக பெருக தென்னை மரத்தின் உயரம் தெரியும். அதைப் போல நம்முடைய சமுதாயத்திலே சாமிதுரை போன்ற கொள்கை வீரர்கள், இலட்சிய வீரர்கள், தந்தை பெரியாருடைய கொள்கைகளை எந்தக் காலத்திலும் தளர விடாமல் காப்பாற்றக் கூடிய சாமிதுரை போன்றவர்கள் இந்த இயக்கத்தை கட்டிக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு முறையும் நமக்கு துன்பம் வரும்போதும், அதைத் துடைத்துக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...

நான் என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள வேண்டுமேயானால், திராவிடர் இயக்கத்திலே ஏறத்தாழ 90 ஆண்டுக் காலமாக என்னுடைய பணியை பல்வேறு துறைகளிலே ஆற்றிக் கொண்டி ருக்கிறேன். எனக்குச் சளைத்தவர்கள் அல்ல வீரமணி போன்றவர்கள். எல்லோருடைய பணியும் சேர்ந்து தான் இந்த இயக்கம். நான் பெருமிதமாக நம்முடைய இயக்கத்தின் பணியைக் குறிப்பிட்டுப் பேசினாலும் கூட அதைக் குலைப்பதற்கு, அதை சீரழிப்பதற்கு நம்மைச் சுற்றி பல சக்திகள் தோன்றிக் கொண்டே இருப்பதையும், அப்படி தோன்றுகிற சக்திகளை யெல்லாம் தொலைத்தால் தான், இந்தச் சமுதாயத்தை சீரோடும், சிறப்போடும், எழுச்சி யோடும் ஏற்றத்தோடும் வளர்க்க முடியும், வாழ வைக்க முடியும் என்ற நிறைந்த நம்பிக்கையோடு பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். பணியாற்றிக் கொண்டிருக் கிறோம்.

நம் கொள்கையின் உயிர்ச் சக்தி!

நம்முடைய இயக்கத்தில் தந்தை பெரியாரை மாத்திரமல்ல; பெரியாரை இழந்தது மாத்திரமல்ல; அண்ணாவை இழந்தது மாத்திரமல்ல; பட்டுக் கோட்டை அழகிரிசாமி போன்ற தளபதிகளையெல் லாம் இழந்திருக்கிறோம். இவ்வளவு பேரையும் இழந்தும் கூட, பெரியாரை இழந்தும் கூட, அண் ணாவை இழந்தும்கூட, இன்னும் இந்த இயக்கம் வாழுகிறது என்று சொன்னால், நம்முடைய கொள்கை களுக்கு, அந்த உயிர்ச் சக்தி இருக்கிறது என்பது தான் பொருள். ஆட்களை வைத்து அல்ல, நபர்களை வைத்து அல்ல, மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற அத்தகைய சூழ்நிலைகளை வைத்தல்ல, ஒரு இயக்கம் என்ன தான் தன்னுடைய பல்வேறு விதமான வாய்ப்புகளை, வசதிகளை இழந்து விட்டாலுங்கூட, அதனுடைய உயிராக இருக்கின்ற அந்தக் கொள்கைகளை இழக்காமல் இருந்தால், அந்த இயக்கம் அழிந்ததாக எவராலும்சொல்ல முடியாது. எத்தனை தோல்விகள் வந்தாலும், எத்தனை வீழ்ச்சிகள் வந்தாலும், எத்தனை படைகள் நம்மை எதிர்த்து நின்றாலும், எத்தனை சக்திகள் நம்மைச் சாகடிக்க முயன்றாலும் நாம் சாக மாட்டோம், வீழ மாட்டோம், காரணம் நம்முடைய உயிர்க் கொள்கை, அந்தக் கொள்கையை இழக்காத வரையில், அந்தக் கொள்கைக்கு நாம் துரோகம் செய்யாத வரையில், அந்தக் கொள்கைகள்தான் இந்தச் சமுதாயத்தை முன்னேற்றும் கொள்கையாக இருக்கும், வாழ வைக்கும், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரால் நாங்கள் இயங்கினாலும், திராவிடர் கழகம் என்ற பெயரால் என்னுடைய அருமை இளவல் வீரமணி அவர்கள் தலைமையில் இயங்கினாலும், மொத்தத்தில் நாமனைவரும் திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் என்ற பெருமை நமக்கு உண்டு.

அந்தச் சுயமரியாதை உணர்வு

சாமிதுரை மறைந்தார் என்றதும், கருணாநிதி இங்கே ஓடோடி வந்தான் என்று செய்தி வருகிறது என்றால், எதற்காக? ஏன்? அப்படிப்பட்ட ஒரு உணர்வு சாமிதுரை, வழக்கறிஞராக இருந்தார் என்ற காரணத் திற்காக ஏற்பட்ட உணர்வா? அல்ல. சாமிதுரை பல பேராசிரியருடைய புகழை ஈட்டிக் கொண்டிருந்தார் என்பதற்காகவா? அல்ல. என்னைப் போன்ற ஒரு சுயமரியாதைக்காரர், அவரும் நானும் தந்தை பெரியார் அவர்கள் ஊட்டிய சுயமரியாதை பாலால் வளர்ந்த வர்கள் என்ற அந்தக் காரணம் தான், அந்த உணர்வு தான் எங்களை என்றைக்கும் ஒன்றாகச் சேர்த்து வைத்திருக்கின்றது. அந்த உணர்வு பட்டுப் போகாத வரையில் எங்களை யாராலும் வீழ்த்த முடியாது.

யாராலும் எங்களைத் தோற்கடிக்க முடியாது என்பதை இந்தப் படத்தின் முன்னால், அய்யா அவர்களுடைய அணுக்கத் தொண்டராக வாழ்ந்து இறுதி வரையில், அய்யாவின் கொள்கைகளுக்கு, சுயமரியாதை எழுச்சிக்கு, எறும்பு போல் உழைத்து, சுறுசுறுப்பு காட்டி, சுயமரியாதை வீரராக வாழ்ந்த அவருடைய படத்தை ஒரு சுயமரியாதைக் காரன் என்று மார்தட்டிக் கொள்கின்ற அளவுக்கு மனப்பக்குவம் படைத்த நான் இன்றைக்கு திறந்து வைத்திருக்கிறேன் என்பது எனக்குக் கிடைத்த வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்.
படம் அல்ல பாடம்!

அப்படிப்பட்ட நல்லவர், வல்லவர், இளம் பிராயம் முதல் ஈரோட்டு நிழலிலே வாழ்ந்தவர், அவருடைய மறைவு - எனக்கு முன்னால் பேசியவர்கள் குறிப் பிட்டதைப் போல மறைவாகத் தோன்றவில்லை. இந்த இயக்கத்திற்குக் கிடைத்த மன நிறைவாக வாழ்ந்த அரும் பெரும் செல்வம், நம்முடைய சாமி துரை இன்றைக்கு இல்லையென்றாலும், அவருடைய தியாகம், தொண்டு, அறிவு, ஆற்றல், அவர் பெரியாரி டம் கொண்டிருந்த பேரன்பு, நம்முடைய தமிழர் தலைவரிடம் வைத்திருந்த பாசம், என்னிடம் கொண் டிருந்த நட்புணர்வு இவை எல்லாம் - எங்களிடமிருந்து எப்படிப் பிரிக்க முடியாமல் வாழ்கிறதோ அதைப் போல அவருடைய உணர்வுகள் தமிழர்களின் நெஞ்சங்களிலிருந்து, இங்கே குழுமியிருக்கின்ற திராவிட இயக்கத் தோழர்கள் நெஞ்சங்களிலே இருந்து பிரிக்க முடியாத உணர்வாக கலந்திருக்கிறது. எனவே இங்கே நம் எதிரே உள்ள இந்தப் படம் நமக் கெல்லாம் ஒரு பாடமாக அமையும் என்ற நம்பிக்கை யோடு உங்களிடமிருந்து நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகம் அடுத்த கட்ட செயல்பாடுகள் என்ன? கழகத் தலைவர் அறிவிப்பின்படி செயல்படுவோம்!


தமிழர் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி

நாடெங்கும் 2000 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவோம்!

சேது சமுத்திரத் திட்டத்தினை முடக்கிட மேற்கொள்ளப்படும் கூட்டுச் சதி முறியடிக்கப்பட வேண்டும்

தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்




சென்னை, நவ.26- தமிழர் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழகம் தழுவிய அளவில் 2000 தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

26.11.2013 செவ்வாயன்று சென்னை பெரியார் திடல் துரை சக்ரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1) இரங்கல் தீர்மானம்

திராவிடர் கழகப் பொருளாளரும், மாணவர் பருவந் தொட்டு திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டு, கடைசி மூச்சு அடங்கும் வரை கழகத்தில் நம்பிக்கையும், விசுவாசமும் மிக்கவராகவும், சோதனை மிகுந்த காலக் கட்டங்களில் எல்லாம் நிலைத்து நின்று கழகத்திற்குத் தூணாக விளங்கியவருமான வழக்குரைஞர் மானமிகு கோ. சாமிதுரை (வயது 81) அவர்களின் மறைவு (9.11.2013) கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்களின் பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ள அவர் தம் குடும்பத்தினருக்கும் இயக்கத்தினருக்கும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும் பெரும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் 2:

பெரியார் உலகம் நிதி திரட்டுவதில் தோழர்கள் ஆற்றும் பணிக்குப் பாராட்டு!

திருச்சிராப்பள்ளி - சென்னை தேசிய நெடுஞ் சாலையில் சிறுகனூரில் 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு நிறுவப்பட இருக்கும் பேரு ருவச் சிலைக்கும் - அங்கு அமையவிருக்கும் பெரியார் உலகிற்கும் - நிதி திரட்டுவது என்ற கழகத்தின் தலைமைச் செயற்குழு, பொதுக் குழு தீர்மானத்தை யொட்டி, கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மிகவும் ஆர்வமாக தேனீக்கள் போல் பறந்து திரிந்து நம்மால் முடியாததும் உண்டோ? என்ற உணர்வோடு செயல்பட்டு வரும் சிறப்புமிகு பணிக்குக் கழகத் தலைமைச் செயற்குழு உள்ளம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. முதற்கட்டமாக ஆயிரம் பவுன் தங்கத்துக்காக மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை டிசம்பர் 2இல் தமிழர் தலைவரின் பிறந்த நாளில் தஞ்சாவூரில் அளிப்பதற்கான செயல்பாட்டில் தீவிரமாக இறங்குமாறு கழகப் பொறுப்பாளர்களையும், கழகத் தோழர்களையும் இத்தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இது தொடர்பாக அடுத்த கட்டமாகக் கழகத் தலைவரின் அறிவிப்பிற்கிணங்க செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3:

தமிழர் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மாவட்டம்தோறும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்

தமிழர் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி டிசம்பர் 2 முதல் அனைத்துக் கழக மாவட்டங்களையும் சேர்த்து குறைந்தபட்சம் இரண்டாயிரம் இடங்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப் படுகிறது.

மூடநம்பிக்கை ஒழிப்பு - பகுத்தறிவுப் பிரச்சாரம் (அய்யப்பன் - மகரஜோதி மோசடி உள்ளிட்டவை) சமூகநீதி - பெண் ணுரிமை - ஜாதீயவாத - மதவாத எதிர்ப்புப் பிரச்சாரப் பணிகளை முடுக்கி விடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

மகளிர் அணியினர் தனித்த முறையில் திட்டம் வகுத்து, முழுக்க மகளிரே பங் கேற்கும் தெரு முனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படு கிறது. (பிரச்சாரத் திட்டம் தனியே அறிவிக்கப்படும்).

தீர்மானம் எண் 4:

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் செயல்படுத்துக!

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியையும், இளைஞர் களுக்கு வேலை வாய்ப்புகளையும் உரு வாக்கித் தருவதோடு, வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல் லாமல், இதன்மூலம் குறைந்த நேரத்தில், எரிபொருள் மிச்சம், செலவு மீதம் - இவை போன்ற பல்வேறு நன்மைகளை உள்ளடக் கிய சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தி முடிப்பதற்கு இன்னும் சுமார் 12 கிலோ மீட்டர் தூரமே உள்ள நிலையில், ஏற்கெனவே சுமார் 800 கோடி ரூபாய்களுக்குமேல் செலவழிக் கப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் தடை யாணை காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கினை விரைவுபடுத்தி, மத்திய அரசு செயலில் இறங்கிட வேண் டுமென இக்கமிட்டி கேட்டுக்கொள்கிறது.

(ஆ) இத்திட்டத்தை, நிபுணர் சர்.ஏ.இராமசாமி (முதலியார்) தொடங்கி, தமிழ்நாட்டுத் தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காமராஜர் முதலியவர்களும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போன்றவர்களும் வற்புறுத்தி, கலைஞர் அரசின் (அய்க்கிய முற்போக் குக் கூட்டணி - யு.பி.ஏ. அரசின்) சீரிய கூட்டு முயற்சியால், தொடங்கி நடத்தப் பட்டு வந்த திட்டத்தை - மணல் திட்டுக் களை, ராமன் பாலம் என்று திரித்தும், மீனவர் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு என்றும் உச்சநீதிமன்றத்தில் பிர மாணப் பத்திரத்தில் பதிவு செய்து, அத் திட்டத்தை அடியோடு ரத்து செய்ய வற் புறுத்தியுள்ள அ.தி.மு.க. அரசை வன்மை யாக இச்செயற்குழு கண்டிக்கிறது.

மேற்காட்டிய மீன்வளப் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று சொல்லப் படுவதையெல்லாம் ஏற்கெனவே நீரி (NEERI) அமைப்பு நன்கு ஆய்வு செய்தே ஆறாம் வழித்தடத்தை பிரதமர் வாஜ்பேயி ஆட்சியில் (பா.ஜ.க.) தேர்வு செய்தது என்பது பச்சோரி கமிட்டி அறிக்கையில் கூட மறுக்கப்படவில்லை.

எனவே, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இதனை எதிர்த்து தக்க வலுவான ஆதாரங்களைக் காட்டி, உடனடியாக வழக்கினை முடித்து, சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு வற்புறுத்துகிறது. ஏற்கெனவே இரண்டு தேர்தல் அறிக்கைகளில் இதனை செயல்படுத்த வேண்டுமென்று வற்புறுத் திய இதே அ.இ.அ.தி.மு.க. இப்போது தலைகீழாக மாறியுள்ளது - முழுக்க முழுக்க அரசியல் அன்றி வேறில்லை.

இலங்கையில் உள்ள இராஜபக்சே அரசு இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி, ஜெயலிதாவின் அ.தி.மு.க. அரசு எடுத் துள்ள நிலைப்பாட்டைப்போலவே, ஒரு குழு போட்டு, மீனவர் சுற்றுச்சூழல் பாதிப்பு என்று இன்று அறிக்கை அளித் திருப்பது - இங்கே ஒரு கூட்டு எதிர்ப்பை உருவாக் கும் திட்டமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டு முற்போக்குச் சக்திகள் அனைவரும் ஒருங்கிணைந்து இதனை முறியடிக்க முன்வரவேண்டுமெனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 5

திராவிடர் இயக்கத் தலைவர்களுக்கு நூற்றாண்டு விழா

கழகத்தின் முதல் பொருளாளரான பழையகோட்டை பட்டக்காரர் அர்ச்சுன் அவர்களது நூற்றாண்டு விழாவை ஈரோட் டிலும், திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களின் 125 ஆம் ஆண்டு விழாவை சென்னையிலும், பெரிய மாநாடு போல நடத்துவது என்று தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது.

தமிழ் ஓவியா said...


கவனிக்கவேண்டும்


மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
_ (விடுதலை,3.12.1962)

தமிழ் ஓவியா said...


காலம் என்னும் அற்புத ஆயுதம்! (2)

காலம் - நேரம் - பறக்கிறது (‘Time Flies’) என்பது கெட்ட செய்தி! அதில் நீங்கள் விமானியாக (Pilot) இருக்கிறீர்கள் என்பது நல்ல செய்தி!! என்றார் மைக்கேல் அல்ஷுலர்.

காலத்தை (நேரத்தை) நாம் மாற்ற முடியாது; மாறாக அக் காலத்தை நாம் பயன்படுத்திட சரியாக திட்டமிட்டுச் செயல்படுத் திட முடியும். அப்போது நேர மில்லையே எனக்கு என்ற பஞ்சப் பாட்டுக்கு போலி சமாதானங் களுக்கு இடமே ஏற்படாது.

ஆழமாக மனதில் பதிய வைத் துக் கொள்ளுங்கள்.

பறக்கும் காலம் என்ற விமானத் தில் நீங்கள் விமான ஓட்டியாக, விமானியாக, அமர்ந்து விமா னத்தை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பயணம் செய் யுங்கள் - இலக்கு நோக்கி!

உங்களுக்கு ஒவ்வொரு நாளிலும் 1440 மணித் துளிகளும், ஒவ்வொரு ஆண்டிலும் 5,25,600 மணித் துளிகளும் உங்கள் கட்டுப்பாட்டிற் குள் உள்ளது என்று உணர்ந்து பறக்கும் விமானத்தை உற்சாகத் துடன் ஓட்டுங்கள்! இலக்கினை அடையும்போது இறக்குங்கள்!
சிலர் நேரத்தை எப்படி உருப்படி யான வகையில் செலவழிப்பது என்பதை நடைமுறைப்படுத்தி, அன்றாட வாழ்க்கையில் அனுபவ ரீதியாக கற்றுக் கொள்ள புத்தகம் புத்தகமாக புரட்டுவதில் அரிதினும் அரிதான காலத்தை நாம் வீணாக்கி விரயம் செய்து விடுகிறோம்.

உறுபயன் அதனால் உடன் விளைவது கிடையாது.

சமையலை வெறும் புத்தகங்களால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியாது. அவை ஒரு வழிகாட்டி என்று மட்டுமே கருதிட வேண்டும். ஒவ்வொரு முறை சமையலிலும் வெறும் வரி வரியாகப் படித்து சமையலைச் செய்யத் துவங் கினால் சமையலும் முடியாது; சுவை யாகவும் இராது, பொருள்களும் வீணாகவே செலவாகும்!

உள்வாங்கிய கருத்துக்களும், நடைமுறை அனுபவங்களும், வார்ப்புப் பட்டறைகளாகி, மளமளவென கற்றுக் கொள்ள கவனத்துடன் திட்டமிடு தலும் - திறம்படச் செய்தலும் தேவை யாகும்.

சிலர் காலத்தை நிர்வகிக்க என்று கனத்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டே காலத்தை அதில் விரயம் செய்து விடுகிறார்கள்!

அனாவசிய செலவாளிகள் பலர் எத்தனைப் பேர் பணத்தை கணக்குப் பார்க்காமல் செலவழிக்கிறார்கள். சாப்பிட்டு எழும்போது, உணவு விடுதிகளில் - ஓட்டல்களில் டிப்ஸ் என்ற ஒரு வெகுமதிப் பணம் அளவ றிந்துகூட தராமல், ஜம்பத்திற்காக 50 ரூபாய் தர வேண்டிய இடத்தில் 500 ரூபாய் தருவது எப்படி ஒரு தவறான விரும்பத்தகாத செயலோ, அது போன்றதே 5 மணித் துளிகளை ஒதுக்க வேண்டிய பணிகளுக்கு 50 நிமிடங்களை - செலவிட்டு வீணாக் குவது ஆகும்!

புத்தகங்களை இதுபோன்ற செய் திகளை அறிய என்ற தேவைகளுக்கு அப்பாற்பட்டு அதில் செலவழித்து விட்டு, ஏமாறுவது நியாயமா?

எடுத்துக்காட்டாக, தேர்வுக்கு விடை எழுதத் துவங்குமுன் நன்கு கேள்விகளைப் படித்துப் புரிந்து கொண்டு விடை எழுதத் துவங்கி னால் உங்களுக்கு நல்ல வெற்றி கிட்டும் என்று ஆசிரியர்கள் அறிவு றுத்துகின்றனர்.

உண்மைதான், அதற்காக கேள்வியைப் படித்து உள்வாங்கிடவே மொத்தம் உள்ள 2 மணி நேரத்தில் ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொள்ளலாமா? அது அபத்த மல்லவா? அதுபோலத்தான், இந்தக் காலத்தை, எப்படி நிர்வாகிப்பதில் வெற்றி பெறுவது பற்றியே சதா ஓர் ஆய்வு செய்கிறேன் என்று கூறி அந்த வழிகாட்டிகளைப் படித்துக் கொண்டே இருந்தால் எப்படி?

ரயில்வே டைம் டேபிள் வாங்கி ரயில் புறப்படும் நேரத்தைப் பார்த்து விட்டு சரியான நேரத்தில் (அதன்படி) சென்ற ரயிலில் ஏறி பயணம் செய்யாமல், டைம் டேபிளையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் உங்களுக்காக ரயில் நிற்குமா? அதுபோல எதற்கு எவ்வளவு நேர ஒதுக்கீடு - எப்பணிக்கு எம்மாத்திரம் அளவு என்ற நேர அளவீடும், முன்னுரி மையும் (Sense of Priority and Sense of Proportion) மிகவும் முக்கிய மாகும்.

ஆயுதத்தின் முனையை, சாணை பிடிப்பதுபோல் இந்தச் செயல்கள், பயன்பாடுகள் நமக்கு வெற்றியை ஈட்டித் தர முந்தும்!

நிறுவனங்கள், ஆய்வுக் கூட் டங்கள் என்ற பெயரில் தேவையற்ற விவாதங்கள் அடங்கிய கூட்டங் களால் பல பயனுறு பணிகள் தாமத மாகுமே தவிர, முழுப் பலன் தராது என்பது பல தலைமைப் பொறுப் பாளர்கள் அறிய மாட்டார்கள்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


திராவிடன் நலநிதி அமைந்துள்ள தளத்திற்கு சாமிதுரை கூடம் என பெயர் சூட்டப்படும்

திராவிடன் நலநிதி அமைந்துள்ள தளத்திற்கு சாமிதுரை கூடம் என பெயர் சூட்டப்படும்
மறைந்த பொருளாளர் கோ.சாமிதுரை படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் அறிவித்து உருக்கமிகு உரை

சென்னை, நவ.26- மறைந்த பொருளாளர் வழக் கறிஞர் கோ.சாமிதுரை அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள திராவிடன் நலநிதி அமைந்துள்ள தளத்திற்கு சாமிதுரை கூடம் என்று பெயர் சூட்டப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உருக்கமிகு உரையாற்றினார்.

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை அவர்களின் படத் திறப்பு நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.ராதா மன்றத்தில் இன்று (26.11.2013) நடைபெற்றது.

இந்நிகழ்விற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

குருதி உறவுள்ள குடும்பம் மட்டுமல்ல; கொள்கை உறவுள்ள குடும்பம்

மிகுந்த துன்பத்தோடும், துயரத்தோடும் இன் னமும் அந்தத் துயரத்தில் இருந்து நீங்கவில்லை என்ற நினைவோடும் இருக்கின்ற எங்களுக்கெல் லாம் இந்த திராவிட இயக்க பெருங்குடும்பத்தினு டைய இன்றைய மூத்த தலைவர் என்ற முறை யிலும், எங்கள் மூத்த சகோதரர் அண்ணன் என்ற வகையிலும், எங்களுக்கெல்லாம் மறைந்த எனது சகோதரர் தோழர் சாமிதுரை அவர்களுடைய உருவப் படத்தினைத் திறந்து வைத்து, அதன் மூலம் எனக்கு, எங்களுக்கு, நமக்கெல்லாம் ஆறுதல் கூற வந்திருக்கக்கூடிய அன்பிற்குரிய நமது இனமான தலைவர் முத்தமிழ் அறிஞர், மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களே, அருமைச் சான்றோர் பெருமக்களே, என்னுடைய குடும்பம் என்பது குருதி உறவுள்ள குடும்பம் மட்டுமல்ல;

கொள்கை உறவுள்ள குடும் பமும் என்பதற்கு அடையாளமாகத் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான குடும்பங்களிலே எனது சகோதரர் சாமிதுரை அவர்களின் குடும்பமும் மிக முக்கியமான ஒரு குடும்பம் என்கிற வகையில், அந்த இழப்புக்கு ஆளானாலும், நேரிடையான இழப்புக்கு ஆளா னாலும்கூட, அதற்காக ஆறுதல் பெறுவதற்காக இங்கே வந்திருக்கக் கூடிய அந்தக் குடும்பத்துச் செல்வங்களே, தாய்மார்களே, பெரியோர்களோ, நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் எனது தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கொண்டோம்!

இந்தப் பெரியார் திடலில், கலைஞர் அவர் களை நாங்கள் அழைத்து, நிகழ்ச்சிகளுக்கு அவர் களை எதிர்கொண்டு வரவேற்கும்பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியோடுதான் வரவேற்போம். அப்படி பல்வேறு சந்தர்ப்பங்கள் நடைபெற்ற துண்டு.

ஆனால், இன்றைக்கு அவரை அப்படி வரவேற்கும்பொழுது, அந்தக் கடமையைச் செய்யும்பொழுது என்னை அறியாமல், துக்கமும், துன்பமும், துயரமும் அடைத்தது என் நெஞ்சை.

அமைதியாக ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கொண்டோம்.

காரணம், ஒரு வாய்மைப் போர்; வயதில், அறிவில் முதியார்

வாய்மைப் போருக்கு என்றும் இளையார்

உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார் களே, அதில், தந்தை பெரியார் அவர்களைப்பற்றி குறிப்பிடும் நேரத்தில், வாய்மைப் போர் என்கிற அற்புதமான சொற்றொடரை அவர்கள் கையாண்டார்கள்.

ஒரு அற்புதமான தளபதி, இங்கே படமாகி விட்டார்

இன்றைக்கு அந்த வாய்மைப் போர் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆரியம் ஒரு பக்கத்தில் பல்வேறு அவதாரங் களோடு அரசியல் களம், பத்திரிகைக் களம், ஊடகக் களம் இன்னும் பல்வேறு நிலைகள்; பன்னாட்டு உருவங்கள் என்று இப்படியெல்லாம் வந்துகொண்டு, இந்த இயக்கத்தினுடைய அடி வேரை வேர்ப்புழு போல அரித்து விடலாமா என்கிற இந்தக் காலகட்டத்தில், அதனை எதிர்த் துப் போரிட, இந்தத் தலைவரைத் தவிர, இங்கே இருக்கின்ற இந்தப் போர் வீரர்களைத் தவிர வேறு கிடையாது என்கிற காலகட்டத்தில், ஒரு அற்புதமான தளபதி, இங்கே படமாகி விட்டார்.

எனக்குக் கொள்கைத் துணையாக இருந்தவர் சாமிதுரை


தமிழ் ஓவியா said...

நம்மோடு என்றைக்கும் நின்றவர்கள், அமைதி யாக, ஆழமாக தன்னுடைய 60 ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்காகத் தொண்டாற்றி, கலைஞர் அவர்கள் சாமிதுரை மறைவு இரங்கல் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல, மாண வப் பருவந்தொட்டே அவர்கள் தந்தை பெரி யாருடைய தொண்டராக, இந்த இயக்கத்தினு டைய வலுவுள்ள ஒரு தோழனாக அவர்கள் உயர்ந்து, நல்ல வழக்கறிஞர் என்கிற முறையில், நாங்கள் எல்லாம் சட்டக் கல்லூரியில் படித்த காலத்திலும் சரி, பிறகு வழக்கறிஞர் பணியில் ஈடுபட்ட காலத்திலும் சரி, அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இயக்கம்தான் எங்களுடைய மிக முக்கியமான கடமை என்கிற அய்யாவி னுடைய இலக்கையே நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், தலைசிறந்த ஒரு துணையாக, என்னுடைய வாழ்க்கைத் துணை என்று சொல்லவேண்டிய அளவில், வாழ்க்கைத் துணை என்று சொன்னால், அது இருபாலராகவும் இருக்கலாம் என்று சொல்லும் பொழுது, அதில் வேறு வகையான பொருள் கொள்ளவேண்டியதில்லை. கொள்கைத் துணை யாக - அந்த அளவிற்கு சாமிதுரை அவர்கள் இருந்தவர்கள்.

மறைந்த கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்களின் படத்திறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அறிஞர் பெருமக்கள் (சென்னை, பெரியார்திடல்,26.11.2013)

இங்கே அவருடைய மருமகன் சொன்னதைப் போல, முடியாது! எப்படி முடியும்? செய்ய முடியுமா? செய்ய மாட்டோம் என்கிற ஒரு தலையசைத்தல் கூட அவரிடம் கிடையாது.

ஒரு இயக்கம், அதனுடைய தளபதி என்று சொன்னால், கட்டுப்பாட்டுக்கு எப்படி பெயர் பெற்றவர்கள் என்பதற்கு அடையாளமாகத் திகழ்ந்தவர், இங்கே படமாகி, நமக்கெல்லாம் பாடமாகி இருக்கக்கூடிய அருமை சகோதரர் பொருளாளர் சாமிதுரை அவர்களாவார்கள்.

அவர்கள் இறுதி வரையில், அந்தக் கட்டுப் பாட்டை காத்து, இந்த இயக்கத்திற்கு சோதனை ஏற்பட்டபொழுதெல்லாம், இந்த இயக்கத்தை துரோகம் துளைபோடலாம் என்று நினைத்த நேரத்தில் எல்லாம், அதில் அவர்கள் விழிப்போடு இருந்தவர்.

என்னுடைய மாணவப் பருவந்தொட்டு, என் னுடைய பேராசிரியர்களுக்குக்கூட எனக்கும், அவருக்கும் வேறுபாடு தெரியாமல் இருந்த துண்டு.

தமிழ் ஓவியா said...

இயக்கப் பணிதான் முக்கியம்; எனது சட்டப் படிப்பு முக்கியமல்ல!

அரசியல் சட்ட எரிப்பில், கை அளவு கடி தாசியை கொளுத்திய வழக்கில், பல்லாயிரக் கணக்கில் தோழர்கள் சிறைச்சாலையில் 6 மாதம் முதற்கொண்டு மூன்றாண்டுகள் வரை சிறைச் சாலையில் இருந்தபொழுது, தந்தை பெரியார் அவர்கள் வேறு ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு, ஆறு, ஆறு மாதங்கள், ஒன்றரை ஆண்டு ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்பதினால், 6 மாதக் கடுங்காவல் பெற்ற நிலையில், மருத்துவ மனையில் இருந்தார். அப்பொழுது அன்னை மணியம்மையாரை அழைத்துச் சொன்னார்கள், சிறைச்சாலையில் உள்ள தோழர்களையும் பார்க்கவேண்டும்; வெளியிலும் இயக்கப் பணி களைத் தொடரவேண்டும் என்று சொன்னார் கள்.

அப்பொழுதுதான் நாங்கள் சட்டக் கல்லூரி யில் சேர்ந்து இருவரும் சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த நிலையில், இயக்கப் பணிதான் முக்கியம்; எனது சட்டப் படிப்பு முக்கியமல்ல என்று கருதினோம். அன்று சட்ட எரிப்பு நடந்த நாளும் நவம்பர் 26 தான்; சாமிதுரை அவர்களின் பிறந்த நாளும் நவம்பர் 26 தான்; இன்றைக்கு அவருடைய படத் திறப்பு நடைபெறுகின்ற நாளும் நவம்பர் 26 தான் என்றால், சரித்திரத்தின் விநோதத்தை என்ன வென்று சொல்வது.

அந்தக் காலகட்டத்தில், அன்னை மணியம்மை யார் அவர்களோடு, அய்யா அவர்களின் ஆணையை ஏற்று, சட்டக் கல்லூரியில் வகுப் புக்குப் போவதைப்பற்றி கவலைப்படாமல், இயக் கப் பணியில் ஈடுபட்டேன். சட்டக் கல்லூரியில் வகுப்புக்குப் போகாவிட்டாலும், வகுப்புக்குப் போனதாக பதிவு செய்யும் பழக்கம் அந்தக் காலத்தில் உண்டு.

அந்த வகையில், வகுப்பறையில் வீரமணி என்று அழைத்தவுடனே, சாமிதுரை அவர்கள் எழுந்து நின்று இருக்கிறேன் என்று சொல்லி, அட்டனென்ஸ் போடுவார். அதனால், ஓராண்டுக்கு மேலாக பேராசிரியர் அவர்கள், சாமிதுரையைத்தான், வீரமணி என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இதனுடைய விளைவு என்னவாயிற்று என்றால், ஒரு சான்றிதழ் வாங்கவேண்டுமென்று பேராசிரியரை நான் அணுகினால், வீரமணி தானே வரவேண்டும்; நீ ஏன் வந்திருக்கிறாய் என்று கேட்டவுடன், உடனடியாக சாமிதுரை அவர்களை அழைத்து வந்தேன். இதோ வீரமணி வந்துவிட்டாரே என்று என்னிடம் சொன்னார்.

உடனே சாமிதுரை அவர்கள் பேராசிரியர் அவர்களிடம், அய்யா நான் ஒரு உண்மையை உங்களிடம் சொல்லவேண்டும்; அவர்தான் வீரமணி; நான் சாமிதுரை. அவருக்காக நான் தொடர்ந்து உங்களிடம் அட்டனென்ஸ் கொடுத் ததனால், நீங்கள் தவறாக எண்ணிக் கொண்டி ருக்கிறீர்கள். அவர் பொது வாழ்க்கையில் இருக் கக்கூடியதால், நான் அதனை செய்தேன் என்று சொன்னார்.

தமிழ் ஓவியா said...

அந்தப் பேராசிரியரும் ஒன்றும் சொல்லாமல், சிரித்துக்கொண்டே அமைதியாக இருந்தார்.

சாமிதுரை அவர்களுடைய நினைவு இருக் கிறதே, எப்பொழுதும் மறக்க முடியாத மிகப் பெரிய அளவிற்கு இருக்கிறது. சாமிதுரை அவர் கள் சென்னையில் மறைந்தார்கள்; பெரியார் திடலில் வீரவணக்கம் செலுத்திய அந்த நாளில், இங்கே நம்முடைய துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, கலைஞர் அவர்கள் இங்கே வந்து, அவருக்கு இறுதி மரியாதை செய்தது என்பது, நாங்கள் எல்லாம் திருச்சியில் கழகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது;

அந்த வகையில், இப்பொழுதும் ஆறுதல் கூற வந்திருக்கிறார்கள். அவர்களை நீண்ட நேரம் அமர வைக்கக்கூடாது; நிகழ்ச்சியை வெகுசுருக்க மாக முடிப்பதாகச் சொல்லித்தான் அவர்களை அழைத்து வந்திருக்கிறோம். இந்த நேரத்தில் எத் தனையோ நண்பர்கள், அவர்களுடைய கருத்து களைச் சொல்லவேண்டும் என்று நினைத்தாலும் கூட, அவர்களின் சார்பில் நான் சொல்கிறேன் என்கிற வகையில், சாமிதுரை அவர்கள் ஒவ்வொரு வகையிலும் எடுத்துக்காட்டாக, லட்சியத் தொண்ட ராக வாழ்ந்தார்கள்.

தந்தை பெரியார் சொன்ன விளக்கம்!

தந்தை பெரியார் அவர்கள் லட்சியத் தொண்ட ருக்கு ஒரு மூன்று வரியை சொல்வார்கள்.

புத்தம் சரணம் கச்சாமி; தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி

என்று சொல்வார். தந்தை பெரியாரிடம் ஒரு செய்தியாளர் கேட்டார், இந்த வாக்கியங்களை எப்படி பயன்படுத்துகிறீர்கள்; இது மதம் சார்ந்த சொற்களல்லவா? அதனை எப்படி நீங்கள் பகுத் தறிவு நெறி என்று ஏற்கிறீர்கள் என்று கேட்டார். அப்பொழுது தந்தை பெரியார் அதற்கு விளக்கம் சொன்னார்:

அந்த மூன்று வரிகளுக்கு என்ன பொருள் தெரி யுமா? அதனை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்; அந்த வாக்கியங்களுக்கு மதக் கருத்தோ, சனாதனமோ இல்லை, பகுத்தறிவு கருத்துதான் இருக்கிறது.

புத்தம் சரணம் கச்சாமி என்றால், தலைவனுக்கு விசுவாசமாக உன்னை ஒப்படைத்து, அதற்காக நீ பாடுபடு. தம்மம் சரணம் கச்சாமி என்று சொன்னால், இந்தக் கொள்கைக்கு நீ உண்மையாக இரு; அதற்கு எந்தவிதமான துரோகமும் செய்யாதே!

தமிழ் ஓவியா said...

சங்கம் சரணம் கச்சாமி என்று சொன்னால், இந்த இயக்கத்தில் உன்னை ஒப்படைத்துவிடு; அதற்கு மேல் நீ வேறு எதையும் நினைக்காதே என்று பொருள்.

தலைமை, கொள்கை, இயக்கம் இந்த மூன்றை யும் அவர்கள் அப்படியே பின்பற்றி இளைஞர்க ளுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தார்கள்.

திராவிட இயக்கத்தினுடைய இன்றைய தேவை கூட, இதுவாகத்தான் இருக்கும். தலைமை, கொள்கை, இயக்கம் இந்த மூன்றையும் கட்டுப்பாட்டோடு பின்பற்றி வந்தால்தான், எத்தனைக் களங்களை வேண்டுமானாலும் நாம் சந்திக்கலாம் என்ற அந்த உணர்வை நாம் பெற முடியும். அந்த வகையில் சொல் லிக் கொண்டே போகலாம். கலைஞர் ஆறுதல் கூற நாம் பெறுவதற்காக இங்கே இருக்கிறோம்.

சாமிதுரை அவர்கள் கொள்கையால் வாழ்கிறார்!

என்னுடைய தனி வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அவருடைய தனி வாழ்க்கையாக இருந்தாலும் சரி, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கருத் துகளைப் பரிமாறிக் கொள்ளாமல் இருந்ததில்லை. அவருடைய பிள்ளைகளும் சரி, எங்களுடைய பிள்ளைகளும் சரி உறவுக்காரர்களுக்குமேல் நெருக்கமாக இருந்தவர்கள். அப்படிப்பட்ட அந்த 60 ஆண்டுகால உறவு எப்படியோ இயற்கையின் கோணல் புத்தியினால் பிரிக்கப்பட்டுவிட்டது.

சாமிதுரை அவர்கள் கொள்கையால் வாழ் கிறார்; லட்சிய உருவமாய் நடமாடிக் கொண்டிருக் கிறார் என்ற உணர்வினைப் பெறுகிறேன். கடைசி யாக ஒன்றைச் சொல்கிறேன், இந்தப் பெரியார் திடலைப் பொறுத்தவரையில், நாங்கள் எல்லாம் வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு வந்த வேளை யில், சாமிதுரை அவர்கள் செழிப்பான வகையில் வழக்கறிஞர் பணியைச் செய்து வந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்குமுன் எனக்கு துணையாக அந்தப் பணியை விட்டுவிட்டு வந்தார்.

ஒவ்வொருவரும் தொண்டறம் செய்தவர்கள்

ஓய்வு பெற்ற பலரும் இங்கே உதவிகரமாக இருந்தார்கள். அய்யா இராமநாதன் அவர்கள், அய்யா கு.வெ.கி.ஆசான் அவர்கள், அய்யா ஆள வந்தார் அவர்கள், அய்யா இறையனார் அவர்கள், அய்யா சிவராஜன் அவர்கள் என்று ஒவ்வொரு வராக வந்து, ஒரு மோனாஸ்டி என்று சொல்லக் கூடிய அளவிற்கு, யாரும் சம்பளத்திற்காக ஊழியஞ் செய்யாமல், தொண்டறம் செய்யவேண்டும் என்ப தற்காக தொண்டறம் செய்தவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியைச் செய்தார்கள்.

ஆனால், ஒவ்வொருவரும் மறைந்தார்கள் என்று சொல்லும்பொழுது, அந்த வரிசையில் கடைசியாக இருந்தவர் சகோதரர் சாமிதுரை அவர்கள். எனவே, இந்த இழப்புகளையெல்லாம் பார்க்கும்பொழுது, ஒவ்வொரு முறையும் எனக்குப் பலம் குறைந்ததாக நினைத்த நேரத்தில், அதனை ஈடுசெய்வதற்காக, அவர் இருந்தால் எவ்வளவு உழைப்போமோ, அதைவிட அதிகமாக உழைக்கவேண்டும்; அதன் மூலமாகத்தான் அதனை ஈடுகட்ட முடியும் என்று நினைத்து, ஒவ்வொரு முறையும் உழைக்கவேண்டும், உழைக்கவேண்டும் என்ற உணர்வைப் பெருக்கிக் கொண்டு வருவதுதான் எங்களுடைய பழக்கம்.

அந்த வகையில், இன்றைக்கு சாமிதுரை அவர்கள் எங்கள் ஈடுஇணையற்ற பொருளாளர் அவர்கள். முதல் பொருளாளர் பழையக்கோட்டை பட்டக்காரர் அர்ஜூனன் அவர்கள்; அவருக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு விழா. அதற்கடுத்து தஞ்சையில் திறம்பட இந்த இயக்கத்தை நடத்திய கா.மா. குப்புசாமி அவர்கள். அதற்கடுத்து நம்முடைய சாமிதுரை அவர்கள் ஆவார்கள். இந்த மூன்று பேரும் முப்பெரும் வரலாற்றை உருவாக்கிய பொருளாளர்கள்.

சாமிதுரை அவர்கள் 60 ஆண்டுகாலம் எல்லா வகையிலும் எனக்கு ஈடுகொடுத்தவர். எனக்குத் தோள் கொடுத்தவர். இறுதியில் அவருக்கு நான் தோள் கொடுத்து தூக்கி, அடக்கம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது, என்னுடைய வேதனை அதிகமாகியது. என்றாலும், இயற்கையை எண்ணி, பகுத்தறிவா ளர்கள் ஆறுதல் பெறவேண்டும் என்கிற உணர் வோடு, அதனை ஏற்றுக் கொள்கிறோம்.

சாமிதுரை கூடம்

என்றென்றைக்கும் பெரியார் திடலில் அவர்கள் வாழ்கிறார்கள் என்பதற்காக, ஒவ்வொருடைய பெயரும் இங்கே இருக்கிறது. அந்த வகையில், திராவிடன் நலநிதி கட்டடம் இருக்கிறதே அந்தத் தளத்திற்கு சாமிதுரை கூடம் என்கிற பெயர், சாமிதுரை பெயராலே அமையும்;

எப்படி இங்கே ஒவ்வொருவருடைய பெயராலே அமைந்திருக் கிறதோ, அதேபோல், அவருடைய பெயரும் நாளை முதல் இடம்பெறும் என்பதைக் கூறி கலைஞர் அவர்களுக்கு வழிவிட்டு, அவருடைய ஆறுதல் உரையைக் கேட்டு ஆறுதல் பெறுவதற்காக அமை கிறேன்.

வாழ்க பெரியார்! வாழ்க சாமிதுரை அவர்களின் கொள்கைகள். வளர்க, வருக ஜாதியற்ற, மதவெறியற்ற, மூடநம்பிக்கையற்ற, பெண்ணடிமை யற்ற சமூகம். வணக்கம், நன்றி!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டத்தை நிராகரிக்க அ.தி.மு.க. அரசு மேலும் ஒரு மனு தாக்கல் கலைஞர் கருத்து

சென்னை, நவ.26- சேது சமுத்திரத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருப்பது குறித்து தி.மு.க. தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (26.11.2013) சென்னை பெரியார் திடலில் தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர்களிடையே கூறியதாவது:

செய்தியாளர் :- சேது சமுத்திரத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசின் சார்பில் மேலும் ஒரு மனுவை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகச் செய்தி வந்திருக்
கிறதே?

கலைஞர் :- சேது சமுத்திரத் திட்டத்திற்காக 1967ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் முதலமைச் சராகப் பொறுப்பேற்றவுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தாரையும், தமிழ்நாட்டு மக்களையும் பார்த்து விடுத்த வேண்டுகோள், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.

அண்ணா அவர்களுடைய அந்த விருப்பத்தை நிறைவேற்ற, அந்தக் கனவை நனவாக்க, முயற்சிகள் எடுத்துக் கொண்டு, திராவிட இயக்கத்தாராகிய நாங்கள் பாடுபடும்போது, இன்றைக்கு இருக்கின்ற ஜெயலலிதா அரசு, ஏற்கென வே ஒரு முறை இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கோரி யிருக்கிறது.

திரும்பவும் இப்போது நான் கேள்விப்படுகிறேன் - இரண்டாவது முறையாகவும், ஏற்கெனவே தாங்கள் சொல்ல விட்டுப் போன விஷயங்களைச் சொல்லுகிறோம் என்று சொல்லி, சேது சமுத்திரத் திட்டத்தைக் கை விட வேண்டுமென்று உச்சநீதிமன்றத்திற்கு மேலும் ஒரு முறையீடு செய் திருக்கிறது.

அண்ணா அவர்களின் எண்ணங்களை, தமிழ் நாட்டு மக்களுடைய தேவைகளை ஜெயலலிதாவும், அவர் தலைமையிலே உள்ள இந்த ஆட்சியும் எந்த அளவுக்குப் புறக்கணிக்க முற்படு கிறார்கள் என்பதற்கு இதுவே தக்க அடையாளம்.

தமிழ் ஓவியா said...


சங்கர்ராமன் படுகொலை வழக்கு: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - கி.வீரமணி அறிக்கை


காஞ்சிபுரம் சங்கர்ராமன் படுகொலை வழக்கு:

சங்கராச்சாரியார்கள் உட்பட 25 பேரும் விடுதலையா?

81 பேர் பிறழ் சாட்சியானது எப்படி? காவல்துறை என்ன செய்தது?

தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்!

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

தமிழ்நாடு அரசின் முடிவைப் பொறுத்து நமது அடுத்த கட்ட நடவடிக்கை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் படுகொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கர்ராமன் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் (3.9.2004).

சங்கராச்சாரியார்கள் கைது

இது தொடர்பாக காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒரு தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டார் (11.11.2004) ஜெயேந்திரர் 61 நாட்களும், விஜயேந்திரர் 31 நாட்களும் சிறையில் இருந்தனர். மொத்தத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் சங்கராச்சாரியாரால் விண்ணப்பிக்கப் பட்டு, அதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற ஆணைப்படி புதுச்சேரி மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு நடைபெற்று வந்தது.

பொது மக்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு -பக்தர்கள் மத்தியிலும் பதற்றம் நிலவியதுண்டு. தொடக்கத்தில் குற்றத்திற்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டு, அதன்பின் உண்மைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

81 பேர்கள் பிறழ்சாட்சியாம்!

இந்த வழக்கில் அதிர்ச்சிக்குரியது என்னவென்றால் 81 பேர் பிறழ் சாட்சியாளர்களாக ஆனதுதான் -ஆக்கப்பட்டதுதான்.

இதுவரை எந்த ஒரு வழக்கிலும் இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் பிறழ் சாட்சி (Hostile) யானது கிடையாது.

குற்றத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் (Prosecution) எப்படி இதனை அனுமதித்தனர் என்பது மிகவும் முக்கியமானது. புலனாய்வுக்கென்றே காவல்துறையில் தனிப் பிரிவே இருக்கிறது. 81 பேர் பிறழ் சாட்சியாகும் அளவுக்கு எப்படி கோட்டை விட்டனர் என்பது அதைவிட முக்கியமானது.

இப்படி பிறழ் சாட்சி சொன்னவர்கள் மீதும் கூட வழக்குப்பதிவு செய்ய, தண்டிக்க, சட்டத்தில் இடம் உண்டு - இந்த வகையில் காவல்துறை ஏன்செயல்படவில்லை?
25 பேர்களும் விடுதலையாம்!

ஒரு கோயிலில் பட்டப் பகலில் பகிரங்கமாக நடைபெற்ற படுகொலை இது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டத்திலும், நியாயத்திலும் நம்பிக்கை உள்ள அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்டதாக புதுவை நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் பெரிய பெரிய சக்திகள் எல்லாம் தலையிடும் என்று எதிர்பார்த்ததுதான்; நீதிபதியிடமே குற்றஞ்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் தொலைப்பேசியில் பேசினார் என்பதெல்லாம் என்னாயிற்று என்று தெரியவில்லை.

அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்

இந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்து அரசு தனது நடவடிக்கையைக் கைவிட்டு விடக் கூடாது, மேல் முறையீடு செய்யப்பட வேண்டும்.

இல்லையென்றால் யாரும் எந்தக் குற்றத்தையும் செய்யலாம் - எளிதில் தப்பிவிடலாம் என்ற எண்ணத்தைப் பொது மக்கள் மத்தியில் எளிதில் ஏற்படுத்தி விடும்.

மற்ற மற்ற வழக்குகளில் மிகவும் ஆர்வம் காட்டும் அரசு இந்த மிக முக்கியமான பரவலாகப் பொது மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் மேற்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

அடுத்து நமது நடவடிக்கை

ஏதோ தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் இதனை நாங்கள் கூறவில்லை. நியாயமும், நீதியும், உண்மையும் தோற்றுவிடக் கூடாது என்ற பொது நோக்கோடு இதனை அணுகுகிறோம்.

அடுத்து தமிழ்நாடு அரசு எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து, மனித உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து உரியது செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை

27.11.2013

தமிழ் ஓவியா said...


இன்று வி.பி.சிங் நினைவு நாள்

மண்டல் குழுவின் பரிந்துரையை நிறைவேற்றிய பிரதமர்; பாரத ரத்னா அம்பேத்கர், பெரியார் ராமசாமி, ராம் மனோகர் லோகியா ஆகியோரது கனவை நனவாக்கிய செயல் இது என நாடாளுமன் றத்தில் (7.8.1990) முழங்கியவர்.

காவிரி நடுவர் மன்றம் அமைத் தவர்; மாநிலங்களிடையேயான குழு அமைத்தவர்; சென்னை விமான நிலையத்திற்கு அண்ணா, காமராசர் பெயரைச் சூட்டியவர்; பாபா சாகிப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது, அவரது படம் நாடாளுமன்றத்தில் இடம் பெறச் செய்தவர்; அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் மே தின விடுமுறை அறி வித்தவர்.

மண்டல் குழுப் பரிந்துரையை நிறைவேற்றியதால் தனது ஆட்சி கவிழும் என்ற நிலையிலும் உறுதியாய் இருந்தவர்; ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த முறையை எதிர்த்துப் போராடி வருகிறோம் என்பது எமக்குத் தெரியும். அவ்வாறு செய்யும் வேளையில், நாங்கள் சிக்கலுக் கும், சிரமத்திற்கும் ஆளாவோம் என்பதிலும் சந்தேகமில்லை; ஆனால் ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என மக்களவையில் (7.11.1990) சங்க நாதம் செய்தவர்.

இந்திய அரசியலை ஒடுக்கப் பட்ட மக்களுக்கான களமாக மாற்றியவர்.

அவரது நினைவு நாளில் (27.11.2008), அவரை வணங்கு வோம்; அவரது கொள்கை உரத்தை நாமும் கொள்வோம். வி.பி.சிங் வாழ்க.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொருளாளராக டாக்டர் பிறைநுதல் செல்வி

திராவிடர் கழக பொருளாளராக இருந்த வழக்கறிஞர் கோ.சாமி துரை அவர்கள் 9.11.2013 அன்று மறைவுற்றார்.

அவருக்குப் பதிலாக 26.11.2013 அன்று சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடை பெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் டாக்டர் பிறைநுதல் செல்வி (65) திராவிடர் கழகப் பொருளாளராகத் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார்.

கல்வித்தகுதி: பி.எஸ்.ஸி, எம்.பி.பி.எஸ், டி.ஜி.ஓ.

உதகையில் மருத்துவத்துறையில் துணை இயக்குநராகப் பதவி வகித்தவர். விருப்ப ஓய்வு கொடுத்து திராவிடர் கழகத்தில் பணியாற்ற முன்வந்தவர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். அவர் திராவிடர் கழகப் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். அவர் இணையர் இரா.கவுதமன் அவர்களும் மருத்துவர் ஆவார். ஒரு மகன் மருத்துவர்; ஒரு மகள் பொறியாளர். இருவரும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம்: அதிமுகவை மன்னிக்கவே முடியாது


சேது சமுத்திரத் திட்டம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டுக்கான பொருளாதார வளர்ச்சிக்கான மிகப் பெரிய திட்டம் - வெகு காலமாக தமிழ்நாட்டு மக்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் திட்டமாகும்.

அந்தத் திட்டம் கூடாது என்பவர்கள் யாராக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரானவர்களே - இது கல்லின் மேல் எழுத் தாகும். இந்தத் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க.வும் - அதன் பெயரில் அமைந்த அரசும் எதிர்க்கிறது - எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வது எந்த அடிப்படையில்? இப்பொழுது இரண்டாவது முறையும் எதிர்த்துப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது மன்னிக்கத் தக்கதுதானா?

இதே அ.இ.அ.தி.மு.க. இதற்குமுன் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் இந்தத் திட்டம் அவசியமானது - வேண்டுமென்றே மத்திய அரசு, கால தாமதம் செய்கிறது என்று குறிப்பிட்டி ருந்ததே - அந்தத் தெளிவான நிலை இப்பொழுது ஓடி மறைந்த மர்மம் என்ன?

திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற் குழுவில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளபடி இப்பொழுது அ.இ.அ.தி.மு.க. இத்திட்டத்தை எதிர்க்கிறது என்றால் அதற்குக் காரணம் அரசியல்! அரசியல்!! அரசியலே!!!

தி.மு.க. இடம் பெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தத் திட்டத்தை நிறைவேற்று வதால் அதன் பெருமை அல்லது அரசியல் லாபம் தி.மு.க.வுக்குப் போய் விடுமே என்ற ஆற்றாமை தான் இத்திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத் திற்குச் சென்றுள்ள காரணமாகும்.

அ.இ.அ.தி.மு.க.தான் இந்நிலையை எடுத் துள்ளது என்றால் பிஜேபி திடீரென்று எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? அய்யகோ இராமன் பாலத்தை இடிக்கிறார்களே! என்று சந்திரமதியின் மயானக் கூச்சலைப் போடுவானேன்?

பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தானே இந்தத் திட்டம் இப்பொழுதுள்ள பாதையில் செயல்படுத்தப்பட ஒப்புதல் வழங்கப்பட்டது?

பிரதமர் வாஜ்பேயி, முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி, சு.திருநாவுக்கரசர் இவர்கள் எல்லாம் யார்? பிஜேபியின் மத்திய அமைச்சர்கள் தானே - இவர்கள் தானே அனுமதி அளித்து ஒப்புதல் கையொப்பமிட்டார்கள்.

இன்றைக்கு ஏன் சுருதிபேதம்? அவர்களையும் ஆட்டிப் படைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சிதானா?

இராமன் பாலம் என்றெல்லாம் பேசுவது அறிவியலுக்கு உட்பட்டதுதானா? அரசு, தனது திட்டத்தில் புராண நம்பிக்கைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா? அப்படி எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் எந்த ஒரு திட் டத்தையும் உருப்படியாக நிறைவேற்றத்தான் முடியுமா?

இராமனையும், கிருஷ்ணனையும் அவரவர் வீட்டுப் பூஜை அறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அரசுப் பணத்தை செலவழிக்கும் ஒரு திட்டத்தில் மூக்கை நுழைக்க அனுமதிக் கலாமா?

இதுவரை 800 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளதே - அதன் நிலை என்னாவது? இவ்வளவுப் பெருந் தொகை செலவழிக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த முட்டுக்கட்டை போட்டால் இதற்கான நட்டத்தை ஏற்றுக் கொள்பவர்கள் யார்?

அ.இ.அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளுமா? அல்லது பிஜேபி என்ற கட்சிதான் ஏற்றுக் கொள்ளுமா?

தமிழ்நாட்டில் சேது சமுத்திரத் திட்டத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கட்சிகள் - இந்த நிலைகளுக்குப் பிறகும் மவுன சாமியார்களாக ஆன மர்மம் என்ன?

அரசியல்தானா? கூட்டணிதானா? கேவலம் ஒட்டுக்காகத் தானா?

பதவிப் பசி எடுத்தால் எதையும் விட்டுக் கொடுத்து விடுவார்களா? வெட்கம்! மகா வெட்கம்!!

தமிழ் ஓவியா said...


ஏன்?



மனிதர்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும் மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்பட வேண்டும்?
(குடிஅரசு, 16.11.1946)

தமிழ் ஓவியா said...


காலம் என்னும் அற்புத ஆயுதம்! (3)

நமக்குக் கிடைத்துள்ள காலம் என்பது அற்புதமான ஆயுதம்! மனித சமூகத்தின் தனித் தன்மை யான பகுத்தறிவின் பயன்பாட்டில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ஆயுதத்தின் பயன்பாடே நம் வாழ்வின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்.

இதுவரை சொன்ன கருத்துக் களை சற்று அசை போட்டு சிந்தித்து, பசை போட்டு மனதில் ஒட்டிக் கொள் ளுங்கள்.

1. காலத்தை நாம் நிர்வகித்து கூட்டவோ, குறைக்கவோ முடியாது; ஆனால் நமது அறிவு - ஆற்றல் காரணமாக நம்முடைய பணிகளை காலத்தை எப்படியெல்லாம் திட்ட மிட்டு பயனுறு வகையில் செலவழிக் கலாம் என்பதை நம்மால் நிர்ண யித்துக் கொள்ள முடியுமே!

2. அப்படி திட்டமிட்டு, நிர்ணயித் துப் பணியாற்றுகையில் எது மிக முக்கியமான, நெருக்கடியான உடனே தலையிட்டு தீர்வு காண வேண் டிய பிரச்சினை என்பதை அறிந்து (Critical tasks) அதற்கே முன்னுரிமை அளித்தல்.

3. திட்டமிட்டு நேரத்தைச் செலவழிக் கக் கற்றுக் கொள்ளுங்கள்; இன்றேல் எது உங்களால் தீர்வு காணப்பட வேண் டிய வெகு முக்கிய அவசரப் பிரச்சினை எது என்பதை எப்படி நீங்கள் கண்டறிய முடியும்?

4. மாதிரி வாரம் (Model Week) என்று அமைத்துக் கொண்டு செயல் படக் கற்றுக் கொள்ளுங்கள். இதில் பெரும் பகுதி நேரம், எது, முக்கியத் தீர்வு காண வேண்டிய நெருக்கடி தரும் பிரச்சினைகளோ அவைகளுக்கென தனியாக நேரத்தை ஒதுக்கி, தீர்வு காண சிந்தித்து செய லாற்ற முன் வாருங்கள்; இப்படிப்பட்ட அணுகு முறையை நீங்கள் - கையாள வில்லை யென்றால், உங்களை நோக்கி வாழ்வின் வெற்றி என்பது வந்து ஒரு போதும் உங்கள் கதவைத் தட்டாது!

5. முன்னுரிமை கொடுத்துத் தீர்க்க வேண்டிய இந்த அவசரப் பிரச்சினை களின் பட்டியலை உங்களோடு பணி யாற்றும் சக பணியாளர்களுக்கும், தோழர்களுக்கும் தெரிவித்து அவர் களுக்கும் அந்தப் பிரச்சினையின் தீர்வு அவசரமாகக் காண வேண்டியது என்பதைப் புரிய வையுங்கள்.

6. தேவைப்பட்டால், சிறிய, குறைந்த நேரத்தில் தோழர்களை - பணியாளர் களை அழைத்து ஒரு கலந் துரையாடலை நடத்தி, அவர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள் - பகிர்வு மிகவும் முக்கியம்.

7. ஏற்கெனவே வேறு வகையா கவோ, காலம் பறப்பதைப் பற்றிய கவலையோ இல்லாதவர்கள் இனியா வது இந்தக் கோணத்தில் புதிய சிந்தனைக்கு ஆளாகி, காலம் என்ற அற்புதக் கருவியை மிகவும் பயனுறு வகையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவின் மிகப் பெரிய சிந்தனையாளரான ரால்ப்ஃவேல்டா எமர்சன் அவர்களது கவிதை வரிகளை இங்கே சுட்டிக் காட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்:

உங்களால் முடியும் அளவுக்கு செய்து முடிக்கக் கூடிய பணியை ஒவ் வொரு நாளும் செய்து முடியுங்கள்;

சில தவறுகளும், அபத்தங்களும் கூட அப்பணியில் ஊடுருவி நுழைந் திருக்கலாம். அவற்றை எவ்வளவு விரைவில் மறக்க முடியுமோ அதைச் செய்து விட்டு; நாளை என்ற புதிய நாளைத் துவங்கட்டும்; நீங்கள் அதை மிகவும் பெருமிதத்துடனும், பழைய அர்த்த மற்ற நிகழ்வுகளை புறந்தள்ளிய புத்துணர்வுடன் இந்நாளைத் துவக் குங்கள்

- ஒவ்வொரு புதிய நாளும் புதிய தோர் அத்தியாயமாகப் பொலிவுற, புத்தாக்கம் செய்யுங்கள்; காலத்தைப் போற்றி கணக்கிட்டு திட்டமிடுதலே நீங்கள் வாழ்க்கையில் வாகைசூட வழிகாட்டும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமை - பொதுவுரிமை


பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
(குடிஅரசு, 25.3.1944)

தமிழ் ஓவியா said...


இலங்கை தமிழர் படுகொலை குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் லண்டன் பத்திரிகைக்கு கேமரூன் பேட்டி



லண்டன், நவ. 28- இலங்கையில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண் டார். அப்போது, தமிழர்கள் பகுதி யான வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.

அப்போது, தமிழர்கள் போரின் போது பட்ட அவதிகளையும், கொடு மைகளையும், ராணுவ அத்துமீறல் களையும் கதறியபடி அவரிடம் எடுத் துரைத்தனர். காணாமல் போன தங்களது குடும்பத் தினர் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கண்ணீர் வடித்தனர்.

அதை தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டில் பேசிய கேமரூன், இறு திக்கட்ட போரின் போது நடந்த தமிழர்கள் படுகொலை குறித்து இலங்கை அரசு நம்பகமான விசா ரணை நடத்த வேண்டும் என வலி யுறுத்தினார். அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. போரின் போது அத்துமீறல்கள் நடைபெறவில்லை என கூறியது.

இந்த நிலையில், தற்போது லண் டன் பத்திரிகைக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேட்டி அளித்துள்ளார். அதில் கூறி இருப்ப தாவது:

நான் இலங் கையின் வடக்கு மாகாணம் சென்று திரும்பி ஒரு வாரம் ஆகி விட்டது. ஆனா லும், அங்கு பார்த்த காட்சி கள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன. முதலில் தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான ஒளிவு மறைவற்ற சுதந்திரமான விசா ரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த போது அடுத்த மாதத்துக்குள் சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். விசாரணை தொடங்காவிட்டால் நாங்கள் அய்.நா. மூலமாக அத்தகைய விசாரணையை கேட்போம் என அவரிடம் தெளிவாக கூறிவிட்டேன்.

இலங்கையில் மனித உரிமை விஷ யத்தில் முன்னேற்றம் வேண்டும். உண் மையான கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். தமிழர் சிங்களர் இடையே நல்லிணக் கம் வேண்டும்.

நான் இலங்கை சென்றதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் சென்றதால் அங்கு செய்ய வேண்டிய காரியங்களை வலியுறுத்த முடிந்தது. - இவ்வாறு டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மின்னஞ்சலில்...



ராமர் பாலம் மிதக்கும் பாலமே! சுக்ரீவனின் சேனை சேது கரையோரமாக இருந்த கற்களையும், பாறைகளையும் பெயர்த்தெடுத்து விஸ்வகர்மாவின் மகன் நளன் கையில் கொடுக்க, அவன் அதைக் கடலில் தூக்கிப் போட்டான். நளன் கையில் பட்ட அனைத்தும் மிதக்கும் என்ற அவன் பெற்ற வரத்தின் காரணமாக அவை அனைத்தும் மிதந்தன. ஆகவே அது மிதக்கும் பாலமே, அது கடலின் அடிபகுதிக்கு எப்படி சென்றது? சிந்திப்பீர்!

- பெரியார்மணி

தமிழ் ஓவியா said...


இடையில் மூன்றே நாட்கள்!
எழுத்துரு அளவு Larger Font

கழகத் தோழர்களே, தோழியர்களே!

டிசம்பர் 2 - இடையில் மூன்றே நாள்கள்!

தந்தை பெரியார் பிறந்த நாள்,

தமிழர் தலைவர் பிறந்த நாள்,

பெரியார் பேருருவச் சிலை - பெரியார் உலகம் உருவாக்கத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதி வழங்கும் விழா -

தோழர்களே, உங்கள் மாவட்டத்திற்கான இலக்கினை முடித்து விட்டீர்களா?

நிலுவையிருந்தால், இந்த மூன்று நாள்களிலும் முடுக்கோடு முனைப்பாகச் செயல்படுவீர்!

செயல்படுவீர்!!

டிசம்பர் 2 - தஞ்சை கண்கொள்ளாக் காட்சி - களேபரமான ஏற்பாடுகள் - கழகத் தோழர்களின் கால்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

பெரியார் பேருருவச் சிலை இப்பொழுதே அங்கு நிற்பது போன்ற உணர்ச்சி அலைகள்!

வாழ்விலோர் திருநாள்!

வாருங்கள் தோழர்களே,

குடும்பம், குடும்பமாய்!

மறக்கவேண்டாம் - உங்கள் மாவட்ட இலக்கினை நிறைவு செய்த நிறைவோடு வாருங்கள் - கூடுதல் மகிழ்ச்சி உங்களுக்கும், தமிழர் தலைவருக்கும்!

என்ன சரிதானே!

- தலைமை நிலையம்

தமிழ் ஓவியா said...


ஏற்காடு இடைத்தேர்தல் அத்துமீறல்: கலைஞர் பேட்டி


சென்னை, நவ.28- ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளும் கட்சியினரின் அத்து மீறல் நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
செய்தியாளர் :- ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற விதி முறை மீறல்களையெல்லாம் உங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் எடுத்துக் கூறி வருகிறீர்கள். இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?

கலைஞர் :- தேர்தல் ஆணையம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை; என்ன நடவடிக்கை எடுக் கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்தியாளர் :- எரிவாயு குழாய்களைப் பதிக்கும் பிரச்சினையில் உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பினை எதிர்த்து, விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் வகையில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டு மென்று கோரிக்கை வைக்கப்படுகிறதே?

கலைஞர் :- விவசாயிகளின் கஷ்டத்தையும், அவர்களுடைய கோரிக்கையையும் நான் கவனமாகப் பார்த்து வருகிறேன். செய்தியாளர் :- உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டு மென்று நீங்கள் கருதுகிறீர்களா?

கலைஞர் :- வழக்காடுவதை விட இரு தரப்பாரும் பேசி, விவசாயிகளுக்கு பாதகமின்றி நன்மை ஏற்படுகின்ற வகையில் நல்ல தீர்வு காண வேண்டும் என்பது தான் என் கருத்து.
செய்தியாளர்:- புதுச்சேரி நீதிமன்றம் சங்கரராமன் கொலைவழக்கு குறித்து அளித்துள்ள தீர்ப்பு பற்றி.

கலைஞர்:- நான் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றி எப்போதும் விமர்சனம் செய்வதில்லை.

செய்தியாளர் :- உங்களுடைய ஆருயிர் நண்பர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நீங்கள் தான் உங்கள் ஆட்சிக் காலத்தில் சிலை வைத்தீர்கள். ஆனால் அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக, இப்போது அந்தச் சிலையை அகற்ற வேண்டுமென்று அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்

கிறார்களே? கலைஞர் :- கண்ணகி சிலை யையே எடுத்தவர்கள் இப்போது என்னுடைய நண்பர் சிவாஜி கணேசனின் சிலையை எடுக்க விரும் பினால், அதன் பலனை அவர்களே அனுபவிக் கட்டும். செய்தியாளர் :- தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டுக்குக் காரணம், மத்திய அரசின் சார்பில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஏற் பட்டுள்ள திடீர் பழுது கள் தான் என்றும், மத்திய அரசு சதி செய்கிறது என்றும் தமிழக முதலமைச்சர் கூறியிருக் கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- இதைப் பற்றிய குற்றச்சாட்டினை தமிழக முதல் அமைச்சரே பிரதம அமைச்சருக்குக் கடிதம் மூலமாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிரதமரின் பதில் வந்த பிறகு அந்த விவரத்தை அறிந்து நான் விளக்கம் அளிக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

அய்யாவின் ‘கணக்கில் நீ’ ஆயுட்கால வைப்பு நிதி!


எண்பத்தியொன்னில்
எடுத்தடி வைக்கும் எங்கள்
தொன்மைத் தமிழ்க்குடியின்
உண்மையான காவலனே!

அண்ணாவே வந்தழைத்தும்
அசைந்திடாத மன உறுதி!
அய்யாவின் கணக்கில் நீ;
ஆயுட்கால வைப்பு நிதி!

வாலிபங்கள் மைனராய்
திரியும் வயதிலேயே
பெரியார் மடியில் வந்து விழுந்த
கோகினூர் வைரம் நீ!

வாலிபமும், வருவாயும்
வருங்கால வசந்தம் காண
ஆசைகாட்டி அழைத்தபோதும்
மோசம் போகாமல்
ஆசையை அறுத்துவிட்டு
அய்யா அழைத்தவுடன்
அனைத்தையும் துறந்து வந்தாய்!

ஈரோட்டுக் கிழவரின்
கரம்பற்றி; கைத்தடியாய்
பகுத்தறிவுப் பாட்டையில்
பத்தியமாய் பயணித்தவன் நீ!

மேடையில் உன் பேச்சோ
போர் முழக்கம்!
ஆதாரங்கள் அதில் வந்து
அணிவகுக்கும்!
எதிரிகளுக்கு எடுக்கும்
குலை நடுக்கம்!
எங்கள் செவிகளிலோ
தேன் இனிக்கும்!

மக்கள் கூடும்
மாலை நேர வகுப்புகளில்
பெரியாரியலைப் போதிக்கும்
பேராசிரியனும் நீதான்!
பெரியாரை இன்னமும்
பயிலும் மாணவனும் நீதான்!

பெரியாரும், அண்ணாவும்
பச்சைத் தமிழர் காமராஜரும், கலைஞரும்
பேணிவளர்த்த சமூக நீதிக்கு
பார்ப்பனப் பெரும்புள்ளிகளை வைத்தே
பாதுகாப்பு வேலி போட்ட
அசகாய சூரன் நீ!
அசுரகுலத் தலைவன் நீ!
நீதி மன்றங்களுக்கும்
நீதி சொல்லிக் கொடுக்கும் பாடசாலை நீ!

அண்ணா அழைத்தபோதே சென்றிருந்தால்
அரசியலின் அதிசயமாய் ஆகியிருப்பாய்!
அய்யாவிடமே நின்றுவிட்டதால்
அரசியலே அதிசயக்கும்
அதிசயமாய் ஆகிவிட்டாய்!

சேர, சோழ, பாண்டியரும்
சரிநிகர் உனக்கில்லை!
அவர்களெல்லாம் வெறும்
அந்தப்புரத்துப் பொலிகாளைகள்!
சோற்றுத் துருத்திகள்;
சோம்பேறிகள்!

பார்ப்பனப் பாதந்தாங்கிகள்;
பெண் பித்தர்கள்!
மன்னர் மரபில் மட்டும்
நீ பிறந்திருந்தால்...
புத்தருக்கு ஒரு அசோகன்போல்
பெரியாருக்கு நீயும் ஆகியிருப்பாய்!

சாமானியனாய்
நீ பிறந்திட்டாலும்....
பெரியாரியலை உலகமயமாக்கும்
பெரும் பணியைத் தலைமேற்கொண்டு
சக்கரம் கட்டி உலகைச் சுற்றி
சரித்திரம் படைக்கின்றாய்!

புவியின் சுழற்சி
நிற்கும் மட்டும்; நின் புகழும்
மங்காது; மறையாது!
மாறாது நிலைத்திருக்கும்!

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திய மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திட, தமிழகம் முதல் டெல்லி வரை 42 மாநாடுகள் 16 போராட்டங்கள் நடத்தியவர் தமிழர் தலைவர் கி.வீரமணி என்பதும், அதன் விளைவாக மண்டல் சூறாவளி வடபுலத்தில் வீசி, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்து, மண்டல் அறிக்கையின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, தற்போது லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பட்டு வருகிறார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

ஒப்பிட முடியாத வாழ்க்கை


எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்காகவே தம்மை ஒப்படைத்துக் கொண்ட மனிதர்! தனி வாழ்வை கிஞ்சிற்றும் நுகராமல், பொது வாழ்வே முழு வாழ்வு என வாழ்பவர். பள்ளிப் பருவத்திலே மேடை ஏறி வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒரு சேரப் பெற்றவர். ஒரு இளைஞராக வாழ்ந்த காலத்தில், உரிய எந்த ஒன்றையும் அனுபவித்து மகிழாதவர்.

குறிப்பாக எல்லா சட்டத் திட்டங்களுக்கும் உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில், நேர்மையோடு வாழ்வதென்பது அவ்வளவு சாத்தியமில்லை.

அந்தக் காலங்களில் இப்படியான ஒரு சூழலைச் சில தமிழ்நாட்டுப் பள்ளிகள், தங்கள் விடுதிகளில் (Hostel அமல்படுத்தின. ஒரு மாணவனை முழு மனிதனாக ஆக்கும்பொருட்டு, பெற்றோர்கள் அங்கு வளர்த்தெடுக்க விரும்பினார்கள். எனினும் அவைகூட, கால ஓட்டத்தில் கரைந்து போயின. இப்படியான பொதுக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, சுயக்கட்டுப்பாடுகளுடன், பெரியார் கொள்கையை மட்டுமே மையமாகக் கொண்டு வளர்ந்து, மிளிர்ந்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரு மனிதருக்கான சராசரி இன்பங்களைக் கூட அனுபவிக்காமல் வளர்ந்தவர். இன்றைக்கு உலகளவில் அவர் புகழ்பெற்று, இயக்கத்தையும் அப்படியே வளர்த்து, உச்ச நிலையில் இருக்கிறார் என்றால், அதற்காக அவர் வழங்கியது தம் வாழ்வு முழுவதையும்! இப்படியான ஒரு உழைப்பை, ஒரு தொழில் அல்லது அரசியல் கட்சியில் வழங்கியிருந்தால், அதன் பலனே வேறு. பத்து வயதுச் சிறுவன் வீரமணிக்கும், இன்றைய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குமான இடைப்பட்ட வாழ்வை நினைத்துப் பார்த்தாலே நம் நெஞ்சம் சிலிர்க்கிறது. காரணம், அப்படியான ஒரு வாழ்வை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது; வேறு யாருடனும் ஒப்பிடவும் முடியாது. திராவிடர் கழக வரலாறு என்பது நெடிய பாதை மட்டுமல்ல; அது ஓர் கொடிய பாதை! விஷத்தை விடவும் கொடிய பார்ப்பனியத்தோடு மோதுகிற பாதை. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பாதை. எனினும், இன்றைய சூழலில் நிறைய மாறியிருக்கலாம். கொடிய பாதைகள், பெரியார் பாதைகளாக மாற்றப்பட்டிருக்கலாம்.

ஆனாலும், அன்றைய சூழலில் அதனோடு வாழ்ந்து, உழன்று, போராடியவர் ஆசிரியர் கி.வீரமணி என்பதை மறந்துவிடக் கூடாது. பொதுவாக இந்த உலகம், முதலீட்டு உலகமாகவே இருந்து வந்திருக்கிறது. எதில் முதலீடு செய்தால் இன்பம் காணலாம் என்பதாகவே மனிதனின் கணக்கு இருக்கிறது. ஒரு அய்ந்து ஆண்டு உழைப்பை முதலீடாகக் கொடுத்தால், அரசியல் அள்ளித் தரும் என்பது ஒரு கணக்கு. இது உள்ளூர் அரசியல் தொடங்கி, உலக அரசியல்வரை நீள்கிறது. இதுதவிர, உண்மையான சமூகச் சிந்தனையாளர்கள் அவ்வப்போது செயல்படுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். மேலை நாடுகளில் எழுதுவதும், பேசுவதுமாக அவர்களின் சமூகப் பணி இருந்து வந்திருக்கிறது. உறவின் வெறுப்பு, சமூக எதிர்ப்பு, வாழ்வின் வெறுமை, உயிருக்கு மிரட்டல், மன உளைச்சல், உடல் சோர்வு என்பதெல்லாம் அவர்களுக்கு மிக மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை. இதை நாம் குறையாகப் பதிவு செய்யவில்லை. மாறாக, அவர்களின் சமூகச் சூழல் அப்படி. ஆனால், நம் சூழலோ வேறு. உலகில் எங்குமே ஏற்பட்டுவிடக் கூடாத, பார்ப்பனக் கருத்துகள் நிறைந்த நாடு நம் நாடு.

உலகில் நிறைய விசயங்களுக்கு தரவரிசைப் பட்டியல் தயார் செய்கிறார்கள். அதைப் போல உலகின் கொடுமைகள் என வரிசைப்படுத்தினால் அதில் பார்ப்பனக் கொடுமைகள்தான் முதலிடம் பிடிக்கும். மற்றக் கொடுமைகளுக்கு அடுத்தடுத்த இடமே கிடைக்கும். காரணம், எல்லாக் கொடுமைகளும் ஒரு சேரப் பெற்றதுதான் பார்ப்பனியக் கொடுமை. கொடுமைகளின் பிறப்பிடம் பார்ப்பனியம், கொடுமைகளின் தாய் வீடு பார்ப்பனியம் என்றெல்லாம் நாம் வர்ணித்தால் அதில் கடுகளவும் பொய் இருக்க முடியாது; மிகை இருக்க முடியாது. இதை வெறும் எழுத்து வடிவிலோ, உணர்ச்சி விளிம்பிலோ நின்று எழுதவில்லை. மாறாக, அறிவியல் பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக இவற்றை நாம் உறுதி செய்ய முடியும்.

அப்பேற்பட்ட ஆபத்து நிறைந்த, வலிமை பொருந்திய ஒரு கூட்டத்தை நேரெதிர் நின்று களம் கண்ட இயக்கம் திராவிடர் கழகம். அந்தக் கழகத்தில் தம் வாழ்வையே அவர் அர்ப்பணித்திருக்கிறார். இயக்கத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையில் அல்லது பொதுவான சில கருத்துகளில் மாறுபட்டவர்கள் இருக்கலாம். எனினும், ஆசிரியர் கி.வீரமணி என்கிற மனிதரின் அர்ப்பணிப்பும், உழைப்பும் தமிழ்நாட்டின் அத்தனை பூமித் தடத்திலும் நிரவிக் கிடக்கிறது என்பதை எந்த நியாயாவாதியும் மறுக்கமாட்டார். தனக்கான சௌகரியத்தை மனிதன் தொடர்ந்து உறுதி செய்து கொண்டே இருப்பதும், தனக்காக மற்றும் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து வரும் மனிதர்களையும் மனதில் வைத்துச் சேர்த்து யோசித்தால், மேலே கூறியவை அனைத்தும் ஒப்பிட முடியாத சாதனைகள் என்பதை எளிதில் அறிய முடியும். அச்சாதனைகளை அவர் தொடர்ந்து செய்வார். அதனால்தான் கி.வீரமணியாய் இருந்தவர் தமிழர் தலைவரானார்!

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனியாக இலங்கைக்குள் வெளிப்படைத் தன்மை கொண்ட நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்த மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கெடு தவறினால் அய்.நா.மனித உரிமை ஆணையத்தை அணுகி சுயேச்சையான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.

- டேவிட் கேமரூன்,
பிரிட்டிஷ் பிரதமர்

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மனித உரிமைகள் ஒட்டு மொத்தமாக மீறப்பட்டுள்ளதே காமன்வெல்த் மாநாட்டை மொரிஷியஸ் புறக்கணித்ததற்கு முக்கியக் காரணம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொரிஷியஸ், காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற நிலையில், காமன்வெல்த் விவகாரத்தில் எங்கள் அரசு தற்போது எந்த முடிவைக் கொண்டுள்ளதோ அதே நிலைதான் நீடிக்கும்.

- நவீன் சந்திரராம் கூலம்,
மொரிஷியஸ் பிரதமர்

தமிழ் ஓவியா said...

நீ சொல்லு - நான் சொல்றேன்

(இன்றைய காலத்தில் கழிப்பறைகள் வீட்டுக்கு வீடு இருக்கின்றன. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை எடுப்புக் கழிப்பறைகள்தான் இருந்தன. நகரங்களில் சிலர் தெரு ஓரங்களையே கழிப்பிடமாக ஆக்கிவிடுவார்கள். அந்த மலத்தை அள்ளும் தொழிலாளர்கள் அதன் மீது முதலில் சாம்பலைப் போடுவார்கள்; பின்பு அள்ளிச் செல்வார்கள். இந்த நடைமுறை இருந்த காலத்தில் பின்வரும் நகைச்சுவை உரையாடலைப் பெரியார் எழுதியுள்ளார்.)

வைணவ தாசன்: என்ன தேசிகர்வாள், உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல் விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன, பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவப் பண்டாரம்: அசிங்கமென்னையா வந்தது? ஒரு சிம்ட்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பதாக விபூதி மான்மியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போகமுடியாதபடி சைவநெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால், விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாமென்றால் இதில் உமக்கேன் இத்தனை பொறாமை.

வைணவ: எனக்கு ஒன்றும் பொறாமையில்லை. சந்தோஷமாய் தாங்கள் மோட்சத்திற்குப் போங்கள். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். ஒரு சிமிட்டா சாம்பல் பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய்விடும் என்கிறீர்களே. மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த அந்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போயிருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த எழவு நாற்றத்தை எப்படிச் சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்.

சைவ: சரி, சரி! நீர் சுயமரியாதைக்காரர் போல் தெரிகின்றது; உம்முடைய யோக்கியதையைப் பார்ப்போம். பட்டையாய் வலிப்பு மாட்டுக்குச் சூடு போட்டதுபோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்?

வைணவ: உம்மைக் கேட்ட சங்கதிக்குப் பதில் சொல்லும்; பிறகு நான் பதில் சொல்லுகிறேன்.

சைவ: நாளைக்காவது சொல்லுவீரா?

வைணவ: நான் நீர் சொன்ன பிறகுதான் சொல்லுவேன்.

(9.11.1930 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதியது.)

தமிழ் ஓவியா said...

டிசம்பர் 6 : அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்


இந்து மதம் ஒழிவதே நல்லது!

இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்ற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் உணர்வுமிக்க தலைவர்கள், இந்தியாவின் மக்கள் என்று அழைப்பதையே கடுமையாக எதிர்த்த நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது! இந்திய தேசம் என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசத்தவர் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்.

பல ஆயிரம் ஜாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற முடியும்? சமூகத்தளத்தில் இந்தியர்கள் இன்னும் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பதை எவ்வளவுக் கெவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியர்களுக்குள் ஆழ வேரூன்றியுள்ள சமூகப் பிளவுகளை அகற்ற வேண்டிய அவசியத்தை நாம் உணர்வோம். அந்த இலக்கினை அடைவது நமக்கு மிகக் கடினமாக இருக்கப் போகிறது. அதுவும் அமெரிக்க அய்க்கிய நாட்டில் இருந்ததைவிட நமக்குக் கடினமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில், அமெரிக்க அய்க்கிய நாட்டில் ஜாதிகள் இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால், ஜாதிகளை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.

(-1949 நவம்பர் 11 ஆம் நாளன்று இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து...)

இந்துக்களைப் போல, சீக்கியர்களைப்போல, பார்சிகளைப்போல தீண்டத்தகாத மக்களும் தனித்த வகுப்பினர்; அவர்கள் இந்துக்கள் அல்லர். அம்மக்களை இந்துக்களாகக் கருதுவது பெரும் பிழையாகும். இந்திய வரலாற்று நோக்கில் தனித்த பண்பாடோடும், மத நம்பிக்கைகளோடும் வாழ்ந்த அம்மக்கள் தனித்த வகுப்பினராகக் கருதப்பட வேண்டும்

(1929 இல் சைமன் ஆணையத்திடம் அண்ணல் அம்பேத்கர் அளித்த அறிக்கையில்...)

இந்து மதத்தில் உள்ள சமத்துவமின்மைதான் நான் இந்து மதத்திலிருந்து வெளியேற எண்ணுவதற்கான அடிப்படைக் காரணமாகும். நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன், அது என் தவறன்று; ஆனால், நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் -1935இல் பம்பாய் இயோலா மாநாட்டில், இந்து மதத்தை இந்திய மண்ணிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதற்கு கிறித்துவமோ இசுலாமோ பயன்படாது. அந்த மதங்களின் கடவுள் கோட்பாடுகளும், ஜாதிப் பழக்க வழக்கங்களும் அதற்குத் தடையாக இருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பவுத்தத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். இந்து சமூகக் கட்டமைப்பில்தான் இந்தியாவின் பலவீனம் தங்கியிருக்கிறது. எனவே இந்து மதம் எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நமது சமூக நெறிகளும், இந்து மத மரபுகளும் நமது ஒற்றுமையைச் சீர்குலைப்பவையாக உள்ளன. எதிர்கால இந்தியாவில் இந்து மதத்தின் பங்கு எந்த அளவில் இருக்கப்போகிறது என்பதைப் பொருத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்.

- டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

நேர்மை + நாணயம் = ஆசிரியர்


ஆசிரியரின் சாதனைகள் யாவும் நாம் அறிந்ததே. அவை அளவிடற்கரியன. ஆனால், அவரது நேர்மைக்கும், நாணயத்துக்கும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. அதில் எனக்குத் தெரிந்ததில் இரண்டு மட்டும்.

ஆசிரியர் சென்னைக்கு - அய்யாவால் அழைக்கப்படுவதற்கு முன்பு, நாங்கள் வழக்குரைஞர்களாக கடலூரில் இருந்தோம். நான் கல்லக்குறிச்சியில் வழக்குரைஞர் தொழில் செய்து வந்தேன்.

கல்லக்குறிச்சியில் ஒரு வழக்கு என்னிடம் வந்தது. அதாவது, பங்காளிகள் இருவருக்குள் கொடுக்கல், -வாங்கலில் தகராறு. அதனால் எனது கட்சிக்காரர் மற்றவரின் எருது மாடுகளை அவரது பட்டியில் இருந்து ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். அதனால் காவல்துறையில் மாடுகள் திருடியதாக வழக்குத் தொடுத்து, அது விசாரணைக்குப் பின் எனது கட்சிக்காரர் மீது 379 இ.பி.கோ.படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டார்கள். அந்த வழக்கு விசாரணையில் எனது கட்சிக்காரருக்கு நான் வழக்காடினேன். கடைசியில் எனது கட்சிக்காரர் விடுதலை செய்யப்பட்டு மாடுகளும் அவரிடமே திருப்பிக் கொடுக்கும்படி உத்தரவாகி, காவல்துறையும் மாடுகளை எனது கட்சிக்காரரிடம் கொடுத்துவிட்டது.

மாடுகளுக்குச் சொந்தக்காரர், கடலூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி முன்பு மறுபரிசீலனைக்கு (Revision) மனுபோட்டார். கடலூரில் இருந்து அந்த அழைப்பாணை (Summons) யை எனது கட்சிக்காரர் எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். நான் நம் ஆசிரியருக்கு ஒரு கடிதம் கொடுத்து, இந்த வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படிச் சொன்னேன்.

அவரும் ஒப்புக்கொண்டு வழக்கு நகல்களைப் பெற்றுக்கொண்டு, வழக்கைப் பற்றி என் கட்சிக்காரரிடம் கேட்டிருக்கிறார். அவர் மாடுகள் தனக்குச் சொந்தமல்லவென்று உண்மையைச் சொல்லியிருக்கிறார். உடனே, ஆசிரியர் வழக்கு நகல்களைத் திருப்பிக் கொடுத்து அவரையே (என்னையே) வந்து வாதாடச் சொல். நான் பொய் சொல்லி வழக்கை நடத்த மாட்டேன் என்று திருப்பி அனுப்பிவிட்டார்.

எனது கட்சிக்காரர் என்னிடம் வந்து நடந்ததைச் சொன்னார். வழக்குத் தேதிக்கு வரும்படி அவரை அனுப்பிவிட்டு நான் கடலூர் போய் ஆசிரியரிடம் ஏன் இப்படிச் செய்துவிட்டீர்கள்? என்றேன். மாடுகள் தனக்குச் சொந்தமில்லை என்று சொல்கிறார். நான் எப்படிப் பொய் சொல்வது? என்றார்.

எனக்கு வியப்பாகப் போய்விட்டது. அவன் விடுதலையாக வேறு வழியில்லை. நீங்கள் வழக்கு நகலில் உள்ளபடி வாதாடுங்கள். அவன் சொன்னதை ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்? என்றேன். அதெப்படி முடியும். மன்னிக்கவும், நான் வழக்காட முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் வழக்கு நடத்த உள்ள தொகையை நான் பெற்றுக்கொண்டு நான் வாதாடினேன். அவரும், என்னருகில் நீதிமன்றத்தில் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அந்த வழக்கு என் கட்சிக்காரருக்குச் சாதகமாக முடிந்தது. இதைப் போல ஏராளம் சொல்லலாம் என்றாலும், இதை நான் எடுத்துக்காட்டாகத் தான் சொல்கிறேன்.

அடுத்து, அவருடைய நாணயத்தைச் சொல்ல இது ஒரு சம்பவம். ஒருமுறை அவருக்குப் பணமுடை வந்தது. ஆசிரியர், சென்னையில் ஊதியம் வாங்காமல் விடுதலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அய்யாவுக்குச் செய்தி தெரிந்து ஆசிரியரைக் கூப்பிட்டு ரூ.10,000/- (பத்தாயிரம்) கையில் கொடுத்தார். மிகவும் நன்றி சொல்லிவிட்டு அந்தத் தொகைக்கு, ஒரு கடன் உறுதிச்சீட்டு (Promissory Note) எழுதிக் கொடுத்தார்.

அய்யா, இதென்ன நான் கேட்கவில்லையே என்று சொல்லி திருப்பிக் கொடுத்ததை ஆசிரியர் வாங்க மறுத்துவிட்டார். அது அய்யாவிடமே இருந்தது. சில நாட்கள் கழித்து தொகையை அய்யாவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். கடன் உறுதிச் சீட்டை இவர் கேட்கவில்லை. அய்யாவிடமே இருந்ததா அல்லது திருப்பிக் கொடுத்தாரா என்று எனக்குத் தெரியாது. நான் அப்போது சென்னையில் இல்லை.

அய்யாவிடம் எந்தச் சூழ்நிலையிலிருந்தும் எதுவும் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

(தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007-இல் ஆசிரியருடன் சட்டக் கல்லூரியில் படித்து திராவிடர் கழகப் பொருளாளராக இருந்து அண்மையில் மறைந்த திரு. கோ.சாமிதுரை எழுதியது.)

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


கருணை அடிப்படையில் வேலை கேட்கும்போது தகுதி அடிப்படையில் மட்டுமே வேலை கொடுக்க வேண்டும், அவரது பெற்றோர் செய்த வேலையையே கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

பிறவியிலேயே உருவாகும் ஹிர்ஸ்பரங்க் என்னும் குடல் நோயை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் குணப்படுத்தும் முறையினை சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கையினால் தொடாமலேயே மின் சாதனங்களை இயங்கச் செய்யும் அகச் சிவப்புக் கதிர் (இன்பிராரெட்) தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்விட்சினை பொறியாளர் ஹரிராம் சந்தர் கண்டுபிடித்துள்ளார்.

செல்பேசி மூலமாக பயனாளிகள் மணியார்டர் தொகையினைப் பெறும் வசதி நவம்பர் 16 முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

சிறைச்சாலை மற்றும் காவல்துறையின் காவலில் இருக்கும் விசாரணைக் கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்று மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 19 அன்று தீர்ப்புக் கூறியுள்ளது.

பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் அனைத்து மகளிர் வங்கி (பாரதிய பெண்கள் வங்கி) நவம்பர் 19 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பாராட்டி வரவேற்கிறேன்


வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் 1-க்கு ரூ.200, ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைந்துவிட்டார்.

அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர்களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழுநேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.

- பெரியார் ஈ.வெ.ரா.
விடுதலை, 10.8.1962

தமிழ் ஓவியா said...

பேரறிவாளனை விடுதலை செய்வதே சரியானதாகும்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி சாதித்தது என்ன? கடுமையான மின்வெட்டு, மத்திய அரசின் திட்டங்கள் முடக்கம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு அளிக் கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 22 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் காலந்தாழ்ந்திருக்கும் நிலைமை, மறைமுகமான நன்மைகளையே (Blessing in Disguise) விளைவித்துள்ளது.

பல்வேறு புதைபட்ட உண்மைகள் நீதியின் அடிப் படையிலும், பலரின் மனசாட்சியின் விழிப்பின் காரணமாகவும் வெளிவரத் துவங்கியுள்ளன!

பேரறிவாளன் என்ற இளைஞனின் பங்கு அந்தக் கொலைக் குற்றத்தில், பிராசிகியூஷன் தரப்புப்படி, ராஜீவ்காந்தியைக் கொல்லப் பயன்படுத்துவதற்கான குண்டுக்காக பேட்டரி செல்கள் இரண்டை வாங்கிக் கொடுத்தவர் இவர் என்பதேயாகும்.

பேரறிவாளன் என்ற இளைஞர் பாலிடெக்னிக்கில் படித்தவர் என்பதை முடிச்சுப் போட்டு, இந்த பேட்டரி செல்கள் நான் வாங்கிக் கொடுத்தேன் என்ற வாக்கு மூலம் மட்டும் விசாரணை அதிகாரி கேட்ட கேள்விக்குப் பதிலாக அவர் சொன்னதை அப்படியே பதிவு செய்யாமல், வழக்கில் பிராசிகியூஷனுக்குச் சாதகமாக அமையும் வகையில், இந்தக் காரியத்திற்காக என்றே தெரிந்தே வாங்கிக் கொடுத்தேன் என்பதாக, அவரே சில வாக்கியங்களை _ பேரறிவாளன் சொல்லாததை வாக்கு மூலத்தில் இணைத்துக் கொண்டு, பதிவு செய்து விட்டார் -_ அந்த விசாரணை அதிகாரி. அவர் ஓய்வு பெற்ற நிலையில், இப்போது அவர், நான்தான் வழக்கில் தண்டனை வாங்கித் தருவதற்காக அந்த வரிகளைச் சேர்த்துக் கொண்டேன் என்று கூறி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் -_ -மனசாட்சி உறுத்தியதால்!

குற்றவாளியின் வாக்குமூலம் என்று விசாரணை அதிகாரிகள் எழுதி வைப்பதையெல்லாம் அப்படியே ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளும், அடிப்படை உரிமைப் பறிப்புக்கான சட்டம்தான் தடா சட்டம் ஆகும்.

குற்றம் சுமத்தப்பட்டவர்மீதான குற்றத்தை நிரூபிப்பது பிராசிகியூஷன் வேலை - -_ பொறுப்பு, என்பதைத் தலைகீழாக மாற்றி - -_ குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியே வர வேண்டியது -_ -குற்றம் சுமத்தப்பட்டவரின் பொறுப்பு என்பதாக இருப்பதும் மற்ற கிரிமினல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத சாட்சியங்களை, இந்தத் தடா சட்டத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்வதுமான கொடுமையான சட்டம் என்பதால்தான் அதற்கு எதிராக கருத்துப் போர் தொடுத்து, ஜனநாயக அடிப்படை மனித உரிமையாளர்கள் -_ நம்மைப் போன்ற இயக்கத்தவர்கள் இயக்கம் நடத்தி, ரத்துசெய்ய வைத்தோம். அதன் முழு நியாயமும் இப்போது வெளியான விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் படி, தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

குற்றத்தினை முடிவு செய்ய மென்ஸ்சிரியா (‘Mens Rea’) என்ற குற்றநோக்கு அக்குற்றவாளியின் மனதில் இருந்திருந்தால்தான் அவர் குற்றவாளியாக முடியும்; இன்றேல் அவர் நிரபராதிதான். இது (கிரிமினல்) குற்றச் சட்டத்தின் அடிப்படையாகும்.

பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததில் எந்தக் குற்ற நோக்கமும் இல்லையே! (விசாரித்த அதிகாரி யல்லவா அவசர ஜோடனை செய்து மேலும் சில வாக்கியங்களை இணைத்துக் கொண்டார். காவல்துறை விசாரணை வழமையில் இது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகும்).

எனவே இந்தத் தகவல் -_ அவரது தூக்குத் தண்டனைக்கு எவ்வித முகாந்திரமும், நியாயமும் இல்லை என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற சான்றாதாரம் ஆகும்.

அதுபோலவே முருகன், சாந்தன் இருவரும்கூட இவருடன் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துள்ள நிலையில், அவர்களைப் பற்றியும் இம்மாதிரி பல தகவல்கள் வெளியாகும் நிலையில், சந்தேகத்தின் பலனை ((Benefit of doubt) அவர்களுக்கே தந்து உச்சநீதி மன்றமே முன்வந்து, இந்த வழக்கை எடுத்துக்கோணலாகிப் போன நீதியைச் சரி செய்ய முன்வருதல் அவசரம்; அவசியம் ஆகும். 2. மேலும் தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான, ஜஸ்டீஸ் கே.டி.தாமஸ் அவர்கள், வழக்கின் தீர்ப்பு சரியாக வழங்கப்படவில்லை என்று குறிப்பினைக் கூறியதும் ஏடுகளில் வந்துள்ளது.

3. வழக்கு விசாரணையில் ஈடுபட்ட சி.பி.அய். அதிகாரிகளில் ஒருவரான திரு. ரகோத்தமன் அவர்கள் செய்தியாளர்கள் பேட்டி, தான் எழுதிய புத்தகம் ஆகியவற்றிலும் இவ்வழக்கில் விசாரணை சரியாகச் செல்லவில்லை என்ற கருத்தை மய்யப்படுத்தியுள்ளார்.

சதி என்பது பேரறிவாளனைப் பொறுத்து நிரூபிக்கப்படவே முடியாது --_ இல்லை என்பது வெளிச்சமாகியுள்ளது. எனவே அவர்கள் மூவரையும் விடுதலை செய்வதுதான் நீதிக்கு - நியாயத்திற்குத் தலை வணங்குவதாகும்.

இம்மூவருக்கும் ஏதோ கருணை காட்டி விடுதலை செய்கிறோம் என்று எண்ணாமல், நீதி கெட்டுவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில், நீதியின் கோணலை நிமிர்த்தி வைக்கும் கடமையாகவே இதனைக் கருதுவதும், நீதிக்குப் பெருமை சேர்ப்பதாகவே அமையும்.

கிரிமினல் சட்டம், பத்துக் குற்றவாளிகள் தப்பினாலும்கூட ஒரு நிரபராதி, தண்டிக்கப் பட்டுவிடக்கூடாது என்ற தத்துவத்தைக் கொண்டதல்லவா?

- கி.வீரமணி
ஆசிரியர்