Search This Blog

26.6.12

சாமியை கல்லென்று சொன்னீர்களே, சரியா?-பெரியார் பதில்

ஆயிரந்தரம் சொல்லுவேன்

ஈ.வெ.ரா.: ஸ்ரீ அய்யங்கார் வெகுநேரம் பேசியதில் குறிப்பாய் எடுத்துக்காட்டிய குற்றம் இன்னது என்பது எனக்குத் தெரியவில்லை.

நாராயண அய்யங்கார்: (எழுந்து) நீங்கள் சாமியை கல்லென்று சொன்னீர்களே, இது சரியா?

ஈ.வெ.ரா.: ஆம் வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள், காட்டுகின்றேன். (என்று மேஜை மீதிருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைதட்டி சிரித்தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலை குனிந்தார்.)


மற்றொரு பார்ப்பனர்: (பத்திரிகை நிருபர்) அந்தக் கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டிருக்கிறதே!

ஈ.வெ.ரா: அப்படியானால், மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்கு செய்த மந்திர உபதேசம் உண்மையில் சக்தி உள்ளதானால் இதோ எதிரில் இருக்கும் சகோதரருக்கும் கொஞ்சம் அதே மந்திர உபதேசம் செய்து அவரை அந்த கல்லுச்சாமிக்குப் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும்படியாகவாவது செய்யக்கூடாதா?

(அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார்.)

அய்யங்கார்: இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நீங்களாவது ஒரு புது மதம் சொல்லுவதுதானே?

ஈ.வெ.ரா.: நான் ஒரு புது மதத்தை போதிக்க வரவில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத்தில் அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்றுதான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகிறேன்.

அய்யங்கார்: இருக்கிறதை மறைப்பதால் புதிதாக ஒன்றைக் காட்டவேண்டாமா?

ஈ.வெ.ரா.: வீட்டிற்குள் அசிங்கமிருக்கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்குப் பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும். இந்து மதம் துர்நாற்றம் போய்விட்டால் அதுவே போதும். நீங்களே இந்து மதம் என்பதாக ஒன்று இல்லையென்று சொல்லி ஒப்புக்கொண்டு விட்டீர்களே, இனி நான் என்ன சொல்ல வேண்டும்!

அய்யங்கார்: நீங்கள் இவ்வளவு சமத்துவம் பேசுகின்றீர்களே, உங்களுகுக்கு லட்ச லட்சமாக சொத்துக்கள் இருக்கின்றதே! அதையேன் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கக்கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே?

ஈ.வெ.ரா.: ஸ்ரீமான் அய்யங்கார் சொல்லுகின்றபடி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்துக்கிடையாது.ஏதோ சொற்ப வரும்படிதான் வரக்கூடியதாயிருக்கின்றது. அதையும் எனக்குச் சரியென்று தோன்றிய வழியில் பொது நலத்துக்குத்தான் செலவு செய்து வருகின்றேன். அல்லாமலும் இந்தத் தொண்டுக்கு வருமுன் பெருவாரியாக வியாபாரமும் செய்து வந்தேன்.

வருடம் ஒன்றுக்கு 1,000 ரூபாய்கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கிறேன். ஆனால், அவைகளை இப்போது அடியோடு நிறுத்திவிட்டேன். இந்தப் பிரச்சாரச் செலவு சில சமயம் மாதம் 200, 300 ரூபாய்வீதம் ஆகிவருகிறது. மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான் ஒன்றும் அதிகமாய் அனுபவிப்பதில்லை. நான் அநேகமாய் மூன்றாவது வகுப்பு வண்டியில்தான் போகிறேன். அப்படியிருந்தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.

அய்யங்கார்: புரோகிதரைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத்திற்கு போவதில்லை, பிச்சைக்கும் போவதில்லை, காப்பிக் கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரையும் ஒன்றாக கண்டிக்கிறீர்கள். அப்படியானால், என்னதான் செய்கின்றது? எந்தப் புஸ்தகத்தைத்தான் படிக்கிறது?

ஈ.வெ.ரா.: நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவதில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிடமிருந்தாலும் மனிதனின் சுபாவத்திற்கும், சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கைகளும், கதைகளும் எதிலிருந்தாலும் அவைகளை ஒதுக்கி, சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.

இந்த ஊர் எவ்வளவோ நல்ல ஊர் என்றுதான் சொல்லுவேன். சில ஊர்களில் கல்லுகள் போடவும் கூட்டத்தில் கலகம் செய்யவும், கூச்சல் போடவும்கூட பார்த்திருக்கிறேன்றேன். இதெல்லாம் எனக்கு அனுபவிப்பது சகஜம்தான். எவ்வளவுக் கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகின்றதோ, அவ்வளவுக் கவ்வளவு எனது வேலையும் சுலபமாகும் எனது எண்ணமும் நிறைவேறும் என்கின்ற தைரியம் எனக்கு உண்டு. இம்மாதிரி வேலைகளை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் இருந்தே பலர் செய்து வந்திருக்கின்றார்கள்.

ஆனால், அந்த சமயம் இருந்த அரசர்கள் முட்டாள்களாகவும் பலவிதத்தில் பார்ப்பனர்களால் மயக்கப்பட்டவர்களாகவும் இருந்ததினால், அது பலிக்காமல் போய்விட்டது. ராமராஜ்யமாகவோ, பாண்டிய ராஜ்யமாகவோ இருந்தால் நான் இதுவரை ஒரே பாணத்தால் கொல்லப்பட்டிருப்பேன். அல்லது கழுவேற்றப்பட்டிருப்பேன். நல்ல வேலையாக அந்த அரசாங்கங்கள் மண் மூடிப்போய் விட்டது.

வேறு ஒரு லாபமும் இல்லாவிட்டாலும் நமது பணம் கொள்ளை போனாலும், மனிதனின் சுயமரியாதைப்பற்றியாவது வெள்ளைக்காரர் ராஜ்யத்தில் இதுவரை தாராளமாகப் பேச இடம் கிடைத்துவிட்டது. சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி, நான்கு நாள் முன்னோ பின்னோ சாகவேண்டியது தான்.

வீட்டில் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத்தொண்டிற்குப் பிரவேசித்திருக்கிறேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாகப் பயணம் சொல்லிக்கொண்டு தப்பிப் பிழைத்ததால்தான் திரும்பிவர முடியும் என்று என் பெண் ஜாதிக்கும், தாயாருக்கும் முடிவு சொல்லி உத்திரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உயிர் விட வேண்டும் என்பது எனது ஆசை.

ஏனெனில் நான் எடுத்துக்கொண்ட வேலை அவ்வளவு பெரியதும், பல எதிரிகளைக் கொண்டதும், தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால், இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும், தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும், இனிப் பயப்படுவது என்பது முடியாத காரியம்.

ஆயிரந்தரம் சொல்லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும் கல் - வெறும் கல். நமது தேசிய இயக்கம் என்கிற காங்கிரஸ் முதலியவைகள் வெறும் புரட்டு - வெறும் புரட்டு என்பது எனது முடிவு. யார் ஒப்புக்கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி. நான் யாருக்கும் போதிக்க வரவில்லை.

எனக்குப் பட்டதைச் சொல்ல வந்தேன். சரியானால் ஒப்புக்கொள்ளுங்கள். தப்பானால் தள்ளிவிடுங்கள். சாமி போய்விடும் என்று யாரும் சாமிக்காக வக்காலத்துப் பேசவேண்டியதில்லை. பேசினாலும் நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. உண்மையான கடவுளும் உண்மையான தேசியமும் எனக்குத் தெரியும். அதை வெளியிடும் தொண்டுதான் இது.

--------------------சிதம்பரத்தில் நடந்த சுயமரியாதைக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. குடிஅரசு 4.2.1928.

2 comments:

தமிழ் ஓவியா said...

புதுசா கார் வாங்கி ஓட்டிப் பார்த்த பஞ்சாயத்து தலைவர் விபத்தில் சிக்கி பலி


நெல்லை: நெல்லையில் புதியதாக கார் வாங்கி அதற்கு கோவிலில் வைத்து பூஜைகள் முடித்த பிறகு ஓட்டிப் பார்த்த பஞ்சாயத்து தலைவர் விபத்தில் சிக்கி பலியானார்.

நெல்லை மாவட்டம் தென்காசிக்குட்பட்ட சுந்தராஜபுரத்தைச் சேர்ந்த கைக்கொண்டான் மகன் முருகையா(எ) வெற்றிவேல் முருகன்(47). பஞ்சாயத்து தலைவர். அவர் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். அதற்கு இன்னும் பதிவு எண் கூட வாங்கவில்லை. இந்நிலையில் காரை அக்காரையில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து பூஜை செய்து அதை பூக்களால் அலங்கரித்து அழகு பார்த்தார்.

அதன் பிறகு காரை ஓட்டிப் பார்க்க விரும்பியவர் அதில் ஏறி கிளம்பினார். ஆனால் கார் கோவில் சுவற்றில் மோதியது. இதில் முருகன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

புதிதாக கார் வாங்கி அதை முதன்முதலில் ஓட்டிப் பார்க்கையில் விபத்தில் சிக்கி பஞ்சாயத்து தலைவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Unknown said...

பெரியாரின் முற்போக்கு சிந்தனையை நிறுவ எண்ணும் உங்கள் கொள்கை அனைவரிடத்தும் போய் சேருமா என்று கேட்டால் இப்போதைக்கு இல்லை....நம் மக்கள் நன்கு படித்த முட்டாள்கள் ..