Search This Blog

14.10.14

இதுதான் வால்மீகி இராமாயணம் -35


இதுதான் வால்மீகி இராமாயணம்

இதுதான் வால்மீகி இராமாயணம்


அயோத்தியா காண்டம்

ஒன்பதாம் அத்தியாயம் தொடர்ச்சி


செய்ததும், இராமன், வசிட்டர், மந்திரிகள் அதைத் தடுக்காததும் எல்லோரும் கைகேயியைத் தூசிப்பதும் ஆச்சரியமே!.


தசரதன் கைகேயி வயிற்றுப் பிள்ளைக்கே பட்டத்தைத் தருவதாகச் சத்தியஞ் செய்து கொடுத்த செய்தி இராமாயணத்திலேயே இராமன் வாயிலிருந்து தான் அறிய இருக்கிறது. பரதன் இராமனை அழைக்கச் சித்திரகூடம் சென்றபோது, அங்கே பரதனை நோக்கி இராமன் இச்செய்தியை விவரமாகக் கூறுகிறான். (அயோத்தியா காண்டம் - சருக்கம் 107) இதனால் இராமனும் இச்செய்தியை அறிந்து கொண்டுதான் அவன் மயக்குற்ற தசரதனுடைய சூழ்ச்சிகளுக்கு உடந்தையாயி ருக்கிறான். வசிட்டன் சுமந்திரன் முதலிய பஞ்சமா பாதகர்களும் இதற்கு உடந்தையாய் இருக்கிறதோடு நில்லாமல் கைகேயியையும் பலவாறு தூற்றுகின்றனர். ஆனால் அவள் எதற்கும் இடங்கொடுக்கவில்லை.


சித்தார்த்தன் என்ற பிரதானி கூற்றில், சகானென்ற ஆரிய மன்னன், தனது மகனாகிய அசமஞ்சன் என்பான் ஊர்ப்பிள்ளைகளைத் தூக்கித் தண்ணீரில் போட்டு அவர்கள் முக்கிமுக்கிச் சாவதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டு கொன்ற கொலைபாதகங்களுக்குத் தண்டனையாக அவனை நாடு கடத்தினன் எனத் தெரிகிறது. இத்தகைய கொலைபாதகனாகிய அசமஞ் சனுக்கு நாடு கடத்துதல் ஒரு தண்டனையா? தன் மகன் செய்த பாதகத்திற்கு இவ்வாறு தண்டனை விதித்துப் பிறருக்கு வேறுவிதமான தண்டனை விதிக்கும் அரசர்கள் பலர் வேண்டும்! அவ்விதமான வழியில் பிறந்த தசரதன், உரிய மகனாகிய பரதனை வஞ்சித்து மற்றொரு மகனாகிய இராமனுக்கு நாட்டைக் கொடுக்க முற்பட்டது ஆச்சரியமன்று! இராமன் மிகவும் பேராசையுடையவன், ஆனால் தன் தீய எண்ணத்தைப் பிறர் அறியாதவாறு நடந்துகொள்ளக் கூடிய நுண்ணறிவுடையவன் என்பதை முன்பல இடங்களில் விவரித்தெழுதினோம். அதனால் தசரதனே தன் அரசைப் பிடுங்கிக்கொள் என்று தூண்டினாலும் அந்நன்மை பயவாத சொற்களுக்கெல்லாம் இராமன் இணங்கவில்லை. இராமனுக்கு உண்மையில் கைகேயி யிடத்தில் மிகவும் அன்புள்ளவன் போலப் பாசாங்கு செய்திருக்கிறான். இவன் இலக்குவனை உடனழைத்தேக மறுத்தபோது. (சருக்கம் 30) நீயும் காட்டிற்கு வந்து விட்டால் கோசலையைப் பாதுகாக்க யாருளர்? அரசனோ மன்மத பாசங்களால் கட்டுப்பட்டுப் பிறருடைய மனப்படி நடக்கிறார். கைகேயியும் நமது தாய்களுக்கு நன்மையைச் செய்யவேமாட்டாள், பரதனோ கைகேயிக்கு உட்பட்ட வனாதலின் அவள் செய்யும் தீமைகளைத் தடுக்க முடியாது. மேலும் அவன் கோசலையை நினைக்கவே மாட்டான் என்று கூறியிருக்கிறான். இதனால் கைகேயியைப் பற்றி மிகவும் கெட்ட எண்ணத்தை இலக்குவனுக்கு உண்டுபண்ணுகிறான். மேலும் தசரத னிடம் விடைபெறும்போது, தந்தையே! எனது தாயை அவளுடைய பகைவர்வசம் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்று தசரதனைக் கண்டித்து வேண்டுகிறான். மற்றும் தனது தாய் கோசலையைத் தன்னுடன் வரத்தடுக்கும்போது (சருக்கம் 24) தாங்களும் கைகேயியால் வஞ்சிக்கப்பட்ட என் பிதாவைக் கைவிட்டால், அவர் பிழைக்கமாட்டாரென்பது நிச்சயம் என்று கூறியிருக்கிறான்.


இராமன் பொய்யன் என்பது மேலே கண்ட வரலாற்றால் தெரியவருகிறது. அவன் சுமந்திரனைப் பொய்புகலுமாறு தூண்டுகிறான். இவ்வாறு இராமன் பல விதத்திலும் தீயவனாகவே இருந்திருக்கிறான் என்பது தெரியவருகிறது. தன் சகோதரனாகிய பரதனை வஞ்சிக்க முன்னின்றானெனின், இதைவிடப் பெரியதோர் பாதகம் வேறு யாதுளது? இத்தகைய இராமனாகிய ஆரியனைத் தமது தெய்வமெனத் தமிழ் மக்களிற் சிலர் ஏமாந்து நினைத்து நம்புகின்றனரே!
இனி தசரதனது தீய சிந்தனையை ஆராய்வோம். இவன் வசிட்டன் சுமந்திரன் முதலியவர்களைக் கைவசப்படுத்திக் கொண்டு அவர்களுடைய உதவியால் தன் அன்புக்குரிய மகனாகிய இராமனுக்கு முடிசூட்ட அநியாயமாய் முயல்கிறான். இவன் தன் தந்தைக்குத் தன்னை மணக்குமுன் செய்து கொடுத்த வாக்குறுதியை அறியாதவளாகிய கைகேசி, தெய்வாதீனத்தால் மனம்மாறி, தான் முன் பெற்றிருந்த இரண்டு வரங்களைக் காரணமாகக் கொண்டு பரதனுக்கு நாடும் இராமனுக்குக் காடும் பெறுகிறாள். பெறும்போது தசரதன் அவளைத் தன் மனைவியல்லள் என்றும், பரதன், இராமன் காடேகுவதை விரும்பினால் தன் உத்தரகிரியை களுக்கு உரியவனாகானென்றும் பயமுறுத்துகிறான், பின்னர் இராமன் காட்டுக்குப் போனபோதும் அவ்வாறே கூறுகிறான். தானியம், செல்வம், சேனை இவற்றை யெல்லாம் இராமனுடன் அனுப்பிவிடுவதாகப் பயமுறுத் துகிறான்.

கைகேயியிடம் இந்த பருப்பெல்லாம் வேகவில்லை. அவளுக்குத் தசரதன் கேகய மன்னனிடம் செய்து கொடுத்திருந்த வாக்குறுதி மட்டும் தெரிந்திருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். அவள் அதைக்கூறித் தசரதனுடைய துரோகத்தைக் குடிகளெல் லோரும் அறியுமாறு செய்திருப்பாள். அப்படியானால் தசரதன், இராமன், வசிட்டன், சுமந்திரன் இவர்களுடைய சூழ்ச்சிகளையெல்லாம் குடிகள் தெரிந்து இராமன் முதலியோரை வெறுக்கத் தலைப்பட்டிருப்பர். அப்போது  இராமன் அரசனாவது முடியாத காரியமாகிவிடும். அதனாலேதான் அந்தமட்டோடு காடேகி வேறு வகையாகப் பரதனை ஏமாற்றி அரசைக் கைக்கொள்ள லாமென இராமன் நினைத்தான். அதனாலேயே அவனை ஒருவராலும் காட்டிற்குப் போகாது தடுக்க முடியவில்லை.


பரதனோ, தசரதனுக்கு மிகவும் காதல்மிக்க மனைவியாகிய கைகேயியின் மகன். அவனை வஞ்சித்துச் சத்தியத்திற்கும் விரோதமாக இராமனுக்குக் கள்ளத்தனமாக முடிசூட்டுமாறு தசரதன் முயல் வானேன்? இது மிகவும் முக்கியமானதொரு செய்தியே. இதைப்பற்றி முன் கட்டுரைகளில் ஒருவாறு ஆராய் கிறோம். இங்கே அதை விவரமாகக் கவனிப்போம்.

                         ----------------------------"விடுதலை” 14-10-2014

14 comments:

தமிழ் ஓவியா said...

உண்மையைக் கக்கினார் சோ

கேள்வி: கொள்கையை விளக்கும் நோட்டீஸ் கொடுத்து வாக்குக் கேட்ட காலம் மாறி, ரூபாய் நோட்டைக் கொடுத்து ஓட்டுக் கேட்கும் காலம் வந்து விட்டதே?

பதில்: கடவுள் முன் வேண்டுகோள் வைக்கிற பக்தன் கூட ரூபாய் நோட்டு வைக்கிறான். தன்னு டைய வேண்டுதல் அப்போது ஆண்டவனிடம் சரியாக விளக்கப்படும் என்று நம்புகிறான். வேண்டுகோளுக்கே விளக்கம் தருகிற ரூபாய் நோட்டு, கொள்கைக்கு விளக்கம் தராதா, என்ன?

(துக்ளக், 15.10.2014 பக்கம் 9

என்னதான் இந்துத்துவா பேசினாலும், கடவுள், மதம், பக்தி என்று வாய் நீளம் காட்டினாலும் கடைசியில் பகுத்தறிவாளர் கருத்துப் பக்கம்தான் வந்தாக வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன், வேண்டுதல், வேண்டாமை இலான் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் தாசில்தாரிடம் கையொப்பம் வாங்க கீழே உள்ள வரை காணிக்கை கொடுத்துக் கவனிக்க வேண்டும் என்பது போலத்தான். கடவுள் கடாட்சம் பெறவும் கவனிக்க வேண்டியவர்களையும் கவனிக்க வேண்டியுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால் எல்லாம் - பேரம்தான்! கடவுளே நான் உனக்கு இதைத் தருகிறேன் - நீ எனக்கு நான் கொடுக்கும் பட்டியலை நிறைவேற்றிக் கொடு என்பதெல்லாம் சர்வ சாதாரணம் தானே!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா

என்று அவ்வையார் பாடுவதைக் கூட எடுத்துக் கொள்ளலாமே!

நான் உனக்கு நான்கு அயிட்டங்களைத் தருகிறேன். நீ எனக்கு மூன்று அயிட்டங்களைத் தருவியாம் என்பது வியாபாரம், பேரம்தானே!

ஓட்டுக்கு நோட்டுக் கொடுப்பதும், கடவுளுக்கு நோட்டு (காணிக்கை) கொடுப்பதும் ஒன்றே என்று காலங்கடந்தாவது ஒப்புக் கொண்ட சோ வகையறாக் களின் அறிவு நாணயத்தை வரவேற்கிறோம். இது தொடரட்டும்.

Read more: http://viduthalai.in/page-3/89274.html#ixzz3G7vRff9w

தமிழ் ஓவியா said...

அக்டோபர் 14: உலகத் தர நாள்


ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு பொருட்கள் தரமானவையா என்பதை நம்பிக்கைக்கு உட்பட்டு வாங்கிவந்தனர். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு நவீனமயமாதல் காரணமாக கலப்படம் உருவாகியது. இதற்கு முக்கியக் காரணம் தொழிற்போட்டி என்று கூறினாலும் பேராசையும் ஒரு காரணமாகிவிட்டது. முக்கியமாக உணவுப்பொருள் கலப்படம் அதிக அளவில் நடக்கத் துவங்கியது.

இந்தியா போன்ற ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் தரக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு மிகவும் தேவையான ஒன்றாகும். விடுதலையடைந்த பிறகு இந்தியாவில் நடுத்தர மக்களிடம் தரக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது.

தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பொருட்கள் பல நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி-இறக்குமதி நடைபெறும் நிலையில் நிலையில் தரக்கட்டுப்பாடு பற்றிய பொதுத்திட்டத்தை வரையறை செய்வது முக்கியமான ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக அய்.எஸ்.ஓ என்ற அமைப்பு 1974-ஆம் ஆண்டு ஜெனி வாவில் துவங்கப்பட்டது.

அய்.எஸ்.ஓ அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட அக்டோபர் 14 ஆம் தேதியே உலகத் தர தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தில் தரமான பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கு அறிவுரை மற்றும் ஆலோ சனைகள் வழங்கப்படுகின்றன. பன்னாட்டு தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு உயர் அமைப்பாக உலகத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் விளங்குகிறது.

உலகம் முழுவதும் பயன்படுத்தக் கூடிய தர நிர்ண யங்களைப் பொருள்களுக்கு ஏற்படுத்தி உலக நாடு களிடையே தடையின்றி வர்த்தகம் வளர வழி செய்வதே முக்கிய குறிக்கோளாகும். ஆரம்ப காலத்தில் இந்த அமைப்பில் வளர்ந்த நாடுகள் மட்டுமே உறுப்பினராக இருந்தன. படிப்படியாக அனைத்து நாடுகளும் உறுப்பினராகி இருக்கின்றன. 500-க்கும் மேற் பட்ட நிறுவனங்கள் உலகத் தர நிர்ணய நிறுவனத் துக்கு ஒத்துழைப்பைத் தந்து தரக்கட்டுப்பாட்டை, விதிகளுக்கு உட்பட்டு கடைப்பிடித்து வருகின்றன.

இந்தியத் தர நிர்ணய அமைப்பு (அய்.எஸ்.அய்) ஆரம்ப காலத்திலிருந்தே, உலகத்தர நிர்ணய நிறுவனம், உலக மின்தொழில் நுட்பக்குழு ஆகிய நிறுவனங் களோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியத் தர நிர்ணய நிறுவனம், உலகத் தர நிர்ணய நிறுவனத்தின் தொழில் நுட்பக்குழுக்கள், உலக மின்தொழில் நுட்பக் குழுக்கள், தொழில் நுட்பக் குழுக்கள் போன்றவற்றில் உறுப்பினராக உள்ளது.

அய்.எஸ்.அய். தர முத்திரையிடப்பட்ட பொருள் களை வாங்குவதால் நுகர்வோருக்கு என்ன பயன்?

கலப்படப் பொருள்கள் மற்றும் தரமற்ற பொருள்களால் ஏற்படும் விபத்துகள், ஆபத்து களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் தரம், சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படுகிறது. தரமான பொருள்கள் என்பதால் விற்பனை அதிகமாகவும், விரைவாகவும் இருக்கிறது. இதனால், அதிக உற்பத்தி, குறைந்த விலை சாத்தியமாகிறது.

மத்திய அரசு நுகர்வோர் நலன் கருதி, உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களையும், விபத்து ஏற்படுத்தும் பொருள்களையும் கட்டாய அய்.எஸ்.அய். தர முத்திரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. தரக்கட்டுப்பாடு மூலம் கிடைக்கும் நற்பயன்களை நுகர்வோர் உணர்வது இல்லை. நுகர்வோர்களிடம் தர விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், உற்பத்தி யாளர்களிடையே தரம் உயர்ந்த பொருள்களை உற்பத்தி செய்யும் எண்ணத்தை உண்டாக்கவும் உலகத் தர தினத்தில் கருத்தரங்கள், கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியத்தர நிர்ணய தலைமைச் செயலகம் டில்லியிலும், கிளைஅலுவலகங்கள் கொல்கத்தா, மும்பை, சண்டிகார், சென்னை போன்ற இடங்களிலும் அமைந்துள்ளன.

அக்மார்க் விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்ட நம்நாடு உணவுப்பொருட்களில் தனித்துவம் கொண்ட முத்திரையை அய்.எஸ்.ஓ.வின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்தி வருகிறது. தரம் மற்றும் தூய்மைக்கு அடையாளமாக அக்மார்க் அடையாளம் இருக்கிறது. பொதுமக்களாகிய நாம், தரக்கட்டுப்பாட்டில் மிகவும் அக்கறை செலுத்த வேண்டும். முன்பு கூறியது போல் கலப்படம் என்பது முழு சமூகத்தையே பாதிக்கும் ஒன்றாகும்.

லாபம் மற்றும் பேராசை காரணமாக கலப்படம் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனைச் செய்யும் நபர்களைப் பற்றி தெரிந்தால் உடனே மாநகராட்சி தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கவேண்டும்.

அயல்நாடுகளில் தரக்கட்டுப்பாடுகள் குறித்து அக்டோபர் 14 அன்று பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் இந்தியாவில் தனியார் நடத்தும் சில கல்வி நிறுவ னங்கள் மட்டும் விளம்பரத்திற்காக இந்த நாளைக் கொண்டாடிவருகின்றனர்.

நாகரிகம் மற்றும் தொழில் நுட்பம் பெருகி விட்ட காலத்தில் தரக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை நாமும் பெற்று மற்றவர்களுக்கும் இவ்விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-5/89250.html#ixzz3G7vo1REf

தமிழ் ஓவியா said...

பிரச்சாரக் கதைகள்

திராவிட மக்களை ஆரிய வலையில் விழச் செய்து அவர் களைத் தன்மான மற்றவராக, பகுத் தறிவற்றவராக ஆக்கி மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் பிரச்சாரக் கதைகளே பாரதம், இராமாயணம், பாகவதமாகும்.
(விடுதலை, 18.2.1968)

Read more: http://viduthalai.in/page-2/89238.html#ixzz3G7wJPqt5

தமிழ் ஓவியா said...

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை


முஸ்லிம் பெண்கள் கல்விக்கு எதிராக தாலிபன்கள் மேற்கொண்டு வரும் பிற்போக்குத்தனத்தை எதிர்த்துத் துணிவாகப் போராடி வரும் சிறுமி மலாலாவுக்கும், குழந்தைகள் நல உரிமை என்னும் கண்ணோட்டத்தில் குறிப்பாக குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதை ஓர் இயக்கமாக நடத்தி வரும் கைலாஷ் சத்யார்த்தி என்பவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் பற்றிய திசையில் இந்நிகழ்ச்சி ஓர் உரத்த சிந்தனையைத் தட்டி எழுப்பியிருக்கிறது - எழுப்பிடவும் வேண்டும். இந்தியாவில் 50 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக தன்னார்வ அமைப்பான க்ரெய் பில்லிப்ஸ் தெரிவித்துள்ளது.

உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக ஒரு நாள் கடைபிடிக்கப்படுகிறது. (ஜூன் 1) இதையொட்டி, மத்திய புள்ளியியல் துறையின் கீழ் உள்ள தேசிய மாதிரி சர்வே நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் 50 லட்சம் குழந்தைத் தொழி லாளர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரகண்டில் 17.5 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் 5.5 லட்சம், ராஜஸ்தானில் 4 லட்சம், குஜராத்தில் 3.9 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இது குறித்து சேவ் தி சில்ட்ரன் அமைப்பை சேர்ந்த தாமஸ் சாண்டி கூறும்போது, 14 வயதுக்கு உட்பட்டவர்களை, வீடுகளி லும் ஓட்டல்களிலும் வேலைக்கு வைக்கத் தடை உள்ளது. இருந்த போதிலும் ஏராளமான குழந்தைகள் ஓட்டல்களிலும், ஆபத்துகள் நிறைந்த தொழிற் சாலைகளிலும் வேலைக்கு விடப்படுகின்றனர் என்றார்.

"உலகிலுள்ள குழந்தைத் தொழிலாளர்களில் 40 விழுக்காடு இந்தியாவில் உள்ளனர். இதில் தலைநகர் தில்லியில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதுடன் ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் வேலை செய்கிறார்கள்" என குழந்தைகள் தன்னார்வ அமைப்பான க்ரெய் பில்லிப்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து செய்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "51 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட முதலாளிகள் படிக்க வேண்டிய அய்ந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளனர். இந்த ஆய்வில் நாற்பத்தேழு சதவிகித முதலாளிகள் சட்டத்தை அறிந்திருப்பதாகவும் ஆனாலும் அது அவர்களை குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்துவதிலிருந்து தடுப்பதில்லை" எனவும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்தது. குழந்தைத் தொழி லாளர்களை மீட்கும் நோக்குடன் செயல்படும் இந்த அமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் இதை வெளி யிட்டது. இந்த ஆய்வறிக்கை மூலம் குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் அதாவது எழுபத்தைந்து சதவிகிதம் பேர் தேனீர்க் கடைகள், உணவகங்கள் அல்லது சிறிய கடைகளில் பணிபுரிவ தாகவும், விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற இடங்களில் பணி நெறிமுறைகள் குறைபாடுகள் முழுவதுமாக காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டு களுக்குள் அடிப்படைக் கல்வியை அளிப்பது என்று இந்திய அரசியல் சாசனம் கூறுகின்றது. இந்தச் சட்ட திட்டம் மட்டும் சரியாகச் செயல்படுத்தப்பட்டு இருக் குமானால், இந்தக் குழந்தைத் தொழிலாளர்ப் பிரச்சினை என்ற கேள்வியே எழுந்திருக்காது.

இந்தக் குழந்தைத் தொழிலாளர் என்ற பிரச் சினையில்கூட வருணாசிரம தர்மத்தின் ஆணி வேர் ஆழமாக ஊடுருவியுள்ளதை யார்தான் மறுக்க முடியும்?

எந்தப் பகுதி மக்களிடத்தில் கல்வி வளர்ச்சி யில்லையோ அந்தப் பகுதியிலிருந்துதான் இந்த குழந்தைத் தொழிலாளர்கள் உற்பத்தியாகிறார்கள்.

சமூக நீதி முழுமையான அளவு கிடைக்கும் ஒரு சூழலில்தான், கால கட்டத்தில்தான் இந்தக் குழந்தைத் தொழிலாளர் என்னும் கொடுமைக்கு முடிவு ஏற்பட முடியும்.

தமிழ் ஓவியா said...

இன்னொரு வகையில் இது ஒரு மனித உரிமை மீறலும்கூட! குழந்தைகள் நல உரிமைகளுக்காகப் பாடுபட்டு நோபல் பரிசு பெற்றுள்ள கைலாஷ் சத்யார்த்தி கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கதாகும்.
இது ஒன்றும் சாதாரணப் பிரச்சினையல்ல. பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; வெறும் சட்டப் பிரச்சினையும் அல்ல. பல்வேறு விதமான சமூகப் பிரச்சினையின் கலவையாகும். சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் மிக மோசமான பிரச்சினை - என்று குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் உலகக் குழந்தைகள் நாளை ஒரு சடங்காக அனுசரிப்பதால் உருப்படியான விளைவுகள் ஏற்படப் போவதில்லை.

உயர் ஜாதி, உயர் பணக்கார வீட்டில் பிறந்தாலும் சரி, கீழ் ஜாதி என்று கீழே தள்ளப்பட்ட குடும்பங்களில், வறுமைக் கோட்டுக்கும்கீழ் கிடந்துழலும் குடும்பங் களில் பிறந்தாலும் சரி, குழந்தை குழந்தைதான்! குறிப்பிட்ட குடும்பங்களில் பிறந்து விட்டதால் அவர்களின் தலையெழுத்து அப்படித்தான் என்று நினைக்கும் மனப்பான்மைக்குக் கல்லறை எழுப்பப்பட வேண்டும். குழந்தைகள் நலனுக்குப் பாடுபட்டவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில் இந்தச் சிந்தனை எங்கும் பாய்ந்து பரவட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/89239.html#ixzz3G7wUeSeV

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடே பின்பற்றட்டும்! 56 ஆண்டுகளாக தீபாவளியைப் புறக்கணிக்கும் 12 பட்டி கிராமங்கள்


தீபாவளி பற்றி துளி கூட பரபரப்பு இன்றி, சிவகங்கை அருகே 12 பட்டி கிராமத்தினர் கடந்த 56 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடா மல் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றி யத்தைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி ஊராட்சி. இதில் மாம்பட்டி, ஒப்பி லான்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, இடைய பட்டி, கிலுகிலுப்பைப் பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப் புபட்டி, இந்திரா நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தீபாவ ளியே கொண்டாடுவ தில்லை.வட்டி மேல் வட்டி கட்டி நொந்த கிராமத்தினர் அய்ப்பசி மழைக்காலத்தில் பாசனப் பணிகளை தொடங்குவ தும், அதற்காக கடன் வாங்கி விதைப்பு செய்வ தும் விவசாயிகள் வழக்கம். தை மாதம் அறுவடை யின்போது, வாங்கிய கடனுக்கு வட்டியாக நெல், தானியங்களை கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அய்ப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பண்டிகைக்காக கூடுத லாகக் கடன் பட்டு வட்டி மேல் வட்டி கட்டி பெருந் துயரம் தொடர்ந்துள்ளது.

இதற்கு முடிவு கட்ட, கடந்த 1958ஆ-ம் ஆண்டு பெரிய அம்பலகாரர் பெரி.சேவுகன் அம்பலம் தலைமையில் ஊர்க்கூட் டம் போட்டுள்ளனர். அப் போது கிராம தெய்வ மான காடுகாவலர்சாமி மீது ஆணையாக, இனி தீபாவளி கொண்டாடுவ தில்லை என ஒருமித்து முடிவெடுத்தனர்.

விவசாயிகளை வாட்டி வதைக்கும் தீபாவளியை, துறப்பது என்ற கொள்கை முடிவை கடந்த 56 ஆண் டுகளாக இப்போதும் கடைப்பிடித்து வருகின் றனர்.

இதுகுறித்து பெரிய அம்பலகாரர் சே. சபாபதி கூறியதாவது: தீபாவளி வர்ற காலம் மழைக்கால மாகவும், விதைப்பு செய் யும் காலமாகவும் இருக் கும். அப்போ யாரு கைல யும் காசு இருக்காது. கையில இருக்குற நெல், தானியக் கையிருப்பும் கரஞ்சு, வெளியில வட் டிக்கு வாங்குற நெலம ஏற்பட்டுச்சு.

அப்போல்லாம், வட் டிக்கு வாங்கின 100 ரூபாய்க்கு ஒரு மூட்டை நெல் கொடுக்கணும். அந்த நேரத்தில வர்ற தீபா வளிய, கடன் வாங்கித் தான் கொண்டாடணும்ங் கிற நிலைமை. அது எல்லாருக்கும் கஷ்டத்த கொடுத்துச்சு. அப்பத்தான் கூட்டம் போட்டு, தீபா வளியை நிப்பாட்டிட்டு, அதுக்கு பதிலா பொங்கல சிறப்பா கொண்டாடுற துன்னு முடிவெடுத்தாங்க. தீபாவளிக்கு என்னென்ன பயன்படுத்துறோமோ அத பொங்கலன்னிக்கி பயன் படுத்தி கொண்டாட லாம்னு எல்லாரும் சேர்ந்து முடிவு செஞ் சாங்க. தீபாவளிய இருக்கிற வங்க கொண்டாடுவாங்க, இல்லாத வீட்டுப் புள் ளைக என்ன செய்யும்?

இருக்குற வீட்டுப் புள்ளைங் கோடி (புத் தாடை) கட்டி நிக்கும் போது, இல்லாத வீட்டுப் புள்ளைங்க பழசோட நின்னா மனசு எவ்வளவு கஷ்டப்படும். அதப்பாக் குறப்போ புள்ளைய பெத் தவங்களும் நொந்து போவாங்க.

அதனால, எல்லாரும் சந்தோஷமா இருக்குற நாளை தீபாவளியா கொண்டாடுவோம்னு நிப்பாட்டி 56 வருஷமாச்சு.

இந்த ஊரைச் சேர்ந் தவங்க எங்க இருந்தாலும், தீபாவளியன்னிக்கி பலகாரம் கூட போடாம சாதம், கஞ்சியத்தான் குடிப்பாங்க. தீபாவளி யன்னிக்கி இங்க பொண்ணு எடுத்தவங்களை விருந்துக்கு அழைக்கமாட் டோம், வெளியில பொண்ணு கட்டுனவங் களும் விருந்துக்கு போக மாட்டாங்க. மனக்குறை வந்துட கூடாதுங்கிறதால தோதுப்பட்ட இன்னொரு நாளில விருந்து வெப் பாங்க. சின்னப் புள்ளையில இருந்து பெரியாளுக வரைக்கும் இதை கடைப் புடுச்சி வர்றோம். 56 வரு ஷமா தைப்பொங்கலத் தான் தீபாவளியா கொண்டாடுறோம். என் றார்.

இக்கிராமத்தில் பெரிய வர்கள் வகுத்த கொள் கைக்காக சிறுவர்களும் பட்டாசு வெடிக்கும் ஆசைகளை துறந்து, விவசாயப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தருவது குறிப்பிடத்தக்கதாகும்.

பொருளாதாரம் காரணமாகக் கூறப்பட் டாலும் தீபாவளி என்பது மூடப்பண்டிகை மட்டு மல்ல - திராவிடர்களை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டது என்பது மிகவும் முக்கியமானது.

Read more: http://viduthalai.in/e-paper/89260.html#ixzz3G7wifdfc

தமிழ் ஓவியா said...

‪‎பார்ப்பனர்_குறித்து‬
‪‎தந்தை_பெரியார்_அவர்களின்_கூற்று‬ :
" ஆங்கிலோ - இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டு பார்ப்பனர்களும் ; ஆங்கிலோ - இந்தியர்கள் நம் நாட்டு தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள் தாமே. ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் டேய் டமில் மனுஷா என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள்? என்ற வரலாற்றை அறியாமல், தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியதுபோலச் சாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்!
அதைப் போலவே இந்நாட்டு பார்ப்பனர்களும் மேல் நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும் கூட, ஆரிய சாதி முறைகளையும் அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் சாதிகளாக அடிமைகளாக மிதித்து நடத்துகிறார்கள்.
(குடியரசு 8-5-1949)
‪அண்ணல்_அம்பேத்கர்_அவர்களின்_கூற்று‬ :
" தமது மூதாதையர்கள் உருவாக்கிய பார்ப்பானிய தத்துவத்தை ஒவ்வொரு பார்ப்பானும் நம்புகிறான். இந்துச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அன்னியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்தள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல் நாட்டினரைப் போலத்தான் தோன்றுவார்கள். ஒரு ஜெர்மனியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி அந்நியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அந்நியனோ, அது போலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான். "
(காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன?, பக்கம் 215)

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவரின் நூல்பற்றி தி இந்து!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதி வெளிவந்த கீதையின் மறுபக்கம் நூல்பற்றி இன்றைய தி இந்து (தமிழ்) நாளிதழ் எழுதி யிருப்பதாவது:

கீதையின் மறுபக்கம் பகவத் கீதையைப் பகுத்தறிவு கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் நூல்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதியுள்ள இந்நூல் கீதையை அறிவியல் பார்வையுடனும், வரலாற்றுக் கண்ணோட்டத்துடனும் தீவிரமாக விமர்சிக்கிறது.

திராவிடர் கழகம் 1998 இல் வெளியிட்ட இந்நூல் கீதையைபற்றிய மாற்றுப் பார்வையைத் தர்க்கப் பூர்வமாக முன்வைக்கிறது.

- இதுதான் இந்துவின் விமர்சனம்.

Read more: http://viduthalai.in/e-paper/89327.html#ixzz3GDy3Nl2f

தமிழ் ஓவியா said...

பிச்சைக்காரன் யார்?



பாடுபடச் சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு ஏமாற்றுவதாலும், சண்டித்தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள். - (குடிஅரசு, 19.9.1937)

Read more: http://viduthalai.in/page-2/89347.html#ixzz3GDyk22rX

தமிழ் ஓவியா said...

அமீத் ஷாவின் ஆதங்கம் நமக்கு புரிகிறது?


- குடந்தை கருணா

மகாராஷ்டிரா தேர்தல் பிரச் சாரத்தில் பேசிய பாஜகவின் தலைவர் அமீத் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது மனைவிக்குப் பிறகு, இன்னொரு பெண்மணியிடம் பேசினார் என்றால், அது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மட்டும் தான் என்று பேசியுள்ளார்.

அமீத் ஷா தனது பேச்சின் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எப்போதும் யாரிடமும் பேசுவதில்லை; ஆனால், தற்போதைய பிரதமர் மோடி, சிறப்பாக மக்களிடையே பேசுகிறார் என சொல்ல வருகிறார்.

இது மிகவும் தரக்குறைவான பேச்சு, இது முன்னாள் பிரதமரை மட்டுமல்ல, பெண்களையே இழிவு படுத்தும் பேச்சு, இதற்கு, அமீத் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

இதெல்லாம், அமீத் ஷா பரி வாருக்கு பெரிய விஷயமே அல்ல. அய்.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் 2011-ல் தொடுத்த வழக்கில், தன்னிடம் வேலை பார்த்த ஒரு பெண்மணியை, தொடர்ந்து வேவு பார்க்கும் வேலையை, அப் போதைய உள்துறை அமைச்சராக இருந்த, தற்போதைய பாஜக தலைவர் அமீத் ஷாவின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் செய்ததாகவும், அந்த பெண்மணியின் தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், புகார் மனுவில் கூறி இருந்தார்.

இவையெல்லாம், குஜராத்தில் சர்வ அதிகாரம் படைத்தவராக திகழ்ந்த மோடிக்காக செய்யப்பட்டது என்ற புகார் எழுந்தது. அந்தப் பெண் மணியை, மோடி அடிக்கடி சந்தித்த தாகவும், இந்த விஷயம், பிரதீப் சர்மா விற்கு தெரிந்த காரணத்தால், அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சர்மா, தனது புகார் மனுவில் கூறி இருந்தார். இது சம்பந்தமாக, குஜராத் அரசே, ஒரு கண்துடைப்பு விசாரணை கமிஷனை அமைத்தது.

இப்போது, மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், எல்லா வழக்குகளையும் போல, இந்த விசாரணையையும், மூடி விட்டார்கள்.

இப்படி தனி மனிதரை வேவு பார்க்கும், கீழ்த்தர பணியை மேற்கொண்ட, தங்களைப்போல், மன் மோகன் சிங் நடந்து கொள்ளாமல் இருந்தாரே, என்ற ஆதங்கத்தில், அமீத் ஷா பேசியிருப்பது நமக்குப் புரிகிறது.

Read more: http://viduthalai.in/page-2/89353.html#ixzz3GDz1O7GE

தமிழ் ஓவியா said...

இலட்சியத்தை அடைய...


நாம் இன்றுள்ள கீழ்மையான நிலையைப் பார்த்தால், நாம் போகவேண்டிய தூரம் மனத்திற்கே தெரியவில்லை. நாம் பெருங்கிளர்ச்சி செய்தாலன்றி, உணர்ச்சி பெற்றாலன்றி நம் இலட்சியத்தை அடைய இயலாது.
_ (குடிஅரசு, 4.3.1944)

Read more: http://viduthalai.in/page-2/89367.html#ixzz3GJo07zkZ

தமிழ் ஓவியா said...

கடல்நீர் உப்பு கரிப்பதின் காரணம் என்ன?


பூமி உருவான போது வெகு சூடாக இருந்தது. அப்பொழுது நீராவிப்படலம் எங்கும் சூழ்ந்திருந்தது. பூமி குளிரும் போது அந்நீராவியும் குளிர்ந்து பெரு மழை பெய்து பள்ளமான இடங்களை நிறைத்தது அதுவே கடல்.

ஆரம்பத்தில் பூமி வெப்பமாக இருந்தது எனப் பார்த்தோம். மழை பெய்து குளிரும் போது, வெப்பமான கடல் அடி மட்டத்தில் நீர் வினை புரியும் போது பல தாதுக்கள் அதில் எளிதில் கறையும். அதனாலும் உப்பு சேர்ந்தது. கடலில் நீருக்குள் பல எரிமலைகள் இருக்கின்றன. அவை வெளியிடும் லாவாக்கள் மற்றும் வாயுக்களில் இருக்கும் தாது உப்புகள் நீரில் கலந்து உப்புத் தன்மையை அதிகரிக்கும்.

கடல்வாழ் உயிர்கள் கடலில் இறந்து மக்கி தாதுக்களை சேர்க்கும். கடலுக்கு நதிகளும் நீரை கொண்டுவந்து சேர்க்கின்றன. அவ்வாறு வரும் போது எண்ணற்ற தாதுக்களும் அடித்து வரப்படுகிறது, அவையும் உப்பு தன்மையை அதிகரிக்கும். கடலில் தான் நதிகள் கலக்கின்றன. கடலில் இருந்து எந்த நதியும் பிறப்பதில்லை. இதனால் நீர் வெளியேற்றம், உப்பு என எதுவும் வெளியேறாது.

சூரிய வெப்பத்தின் மூலம் ஆவியாதல் தான் கடலில் இருந்து நீர் போகும் ஒரே வழி. அவ்வாறு ஆவியாகும் போது, உப்புக்கள் எடுத்து செல்லப்படாது கடலில் தங்கும். பின்னர் மழையாக நிலப்பகுதியில் பெய்து தாதுக்களுடன் மீண்டும் கடலில் சேரும்.

இதுபோன்ற நீர் சுழற்சி பல லட்சக்கணக்கான ஆண்டு களாக நடந்து கடல் நீரில் உப்புத் தன்மை மிகுந்து விட்டது. கடலில் நீர் சேரும் விகிதத்தில் ஆவியாதல் தவிர வேறுவழியில் நீர் வெளியேறிக்கொண்டு இருந்திருந்தால் உப்பு தன்மை மிகுந்து இருக்காது. தற்போது கடலில் இருந்து உப்புகள் எடுக்கும் வீதமும், சேரும் வீதமும் சம அளவில் இருப்பதால். கடல் நீரின் உப்பு ஒரு சம நிலை விகிதத்தில் இருக்கிறது.

கடல் நீர் உப்புக் கரிப்பது போல் மனிதர்களின் கண்ணீரும், வியர்வையும் உப்புக் கரிப்பது ஏன் என்றால் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து கண்ணீர் வருகிறது. அதில் உப்பு வரக் காரணம்.

நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் அதன் வெளிப்புறத்தில் உள்ள திரவங்களில் உப்பு இருக்கும். உள், வெளி உப்பு அடர்த்திக்கு ஏற்ப செல் உள் நீர் பரிமாற்றம் நடக்கும். எனவே தான் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து வரும் திரவமான ஆன கண்ணீரில் உப்பு இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/89384.html#ixzz3GJpG5A96

தமிழ் ஓவியா said...

முதலைக்கஞ்சாச் சிங்கம்!


முதலைக்கு அஞ்சாத சிங்கம் எது தெரியுமா? புளோவர் எனும் சின்னஞ்சிறு பறவைதான்.

எந்த உயிரைக் கண்டாலும் தன் வாய்க்குள் அனுப்பும் முதலை, இந்தப் பறவை வந்தால் மட்டும் வரவேற்கும் வகையில் வாய்த் திறந்து பற்களைக் காட்டுகிறது. இந்தப் பறவை முதலை வாய்க்குள் சென்று, முதலையின் பற்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாமிசத் துண்டுகளைத் தனது ஆகாரமாக்கிக் கொண்டு சிட்டாகப் பறந்துவிடுகிறதாம்!

என்னே, விந்தை! முதலைக்கு அஞ்சாத சிங்கம் என்று இதனைக் கூறினால் என்ன?

Read more: http://viduthalai.in/page-8/89400.html#ixzz3GJpkkmqZ

தமிழ் ஓவியா said...


சிம்சாங் கார்ட்டூனும் யோகன் கார்ட்டூனும்


அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விவாதத்திற்குரிய கருத்துப் படம் ஒன்றை வெளியிட்டதாகப் பரபரப்பு கிளம்பியது.

அறிவியலாளர்கள் உள்ள பணக்கார நாடுகளின் Elite Space Clubக்குள் தலைப்பாகை, வேட்டியுடன் இந்தியர் ஒருவர் மாடு ஓட்டிக்கொண்டு வந்து அலுவலகக் கதவைத் தட்டுவது போன்று கருத்துப் படம் வரையப்பட்டுள்ளது.

இந்தியர்களை, குறிப்பாக மலையாள மக்களை இந்தக் கருத்துப்படம் கோபப்படுத்தி உள்ளதாம். (அவர்கள் ஆதிக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகம் உள்ளதால் இருக்குமோ?) நியூயார்க் டைம்ஸ் பன்னாட்டுப் பதிப்பில் தலையங்கத்தை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த கருத்துப்படம் சிங்கப்பூர் ஓவியர் ஹெங் சிம்சாங் என்பவரால் வரையப்பட்டது.

பணக்கார, மேற்கத்திய நாடுகளால்தான் முடியும் என்பதை மாற்றி, இந்தியா செவ்வாய்க்கலன் ஏவியுள்ளது என்பதையே கருத்துப் படத்தின் ஓவியர் கருத்துப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துப்படத்தின் மூலம் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினால், நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பைக் கோருகிறோம். ஓவியர் ஹெங் எந்தவிதத்திலும் இந்தியாவையோ, அதன் அரசு மற்றும் குடிமக்களையோ எதிராகக் கருதவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் செய்திப் பிரிவின் சார்பில் அந்தப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆன்ட்ரியூ ரோசன்-தால் தெரிவித்துள்ளார்.

கோபம் எதற்கென்றால், தலைப்பாகை, கையில் மாடு என்று ஏழை வடநாட்டுக் குடியானவன் போல படம் போட்டு விட்டார்கள் என்பதற்காகவாம். சம்பந்த-மில்லாமல் தேசபக்தியும், ரோசமும் பொத்துக்-கொள்ளும் இவர்களுக்கு! இப்படித்தான் இந்த நாட்டின் வெகுமக்கள் இருக்கிறார்கள். அப்படியே இப்படம விமர்சிக்கிறது என்றாலும் அது மேலை நாடுகளையே ஏளனம் செய்கிறது. இந்தியாவைப் பாராட்டத்-தான் செய்கிறது. போகட்டும். இவர்களை இப்படியா விமர்சிப்பது? மங்கள்யானை அனுப்புவதற்கு கோயில், நாள், நேரம் என்று திரிந்தவர்கள் எங்கு எதை அனுப்பினால் என்ன? அடிப்படை அறிவில்லாவிட்டால் செவ்வாய்க்கலன் அனுப்பி என்ன பயன்? மைல் கல்லைக் கும்பிடும் இந்தக் கும்பலுக்கும், ராக்கெட் மாதிரியைக் காட்டி பகவானிடம் அப்ரூவல் வாங்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எனக்கென்னமோ, சிம்சாங்கின் கார்ட்டூனை விட, நம் கார்ட்டூனிஸ்ட் யோகனின் கார்ட்டூன்தான் இதற்கு சரியென்று படுகிறது.