Search This Blog

20.2.14

மிருகமும் பக்ஷியும் மலமும் மூத்திரமும் கடவுளா?காந்தியும் காங்கிரசும் சாதித்ததென்ன?

பட்டுக்கோட்டை பொதுக்கூட்டம்
காந்தியும் காங்கிரசும் சாதித்ததென்ன?
சு.ம. இயக்கம்
மிருகமும் பக்ஷியும் மலமும் மூத்திரமும் கடவுளா?

தோழர்களே!

தோழர்கள் பொன்னம்பலம், அழகிரிசாமி ஆகியவர்கள் பேசுகையில் நீங்கள் சிரித்து ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தீர்கள்.

நமது இழி நிலை

நமது கேவல நிலைமையையும், முட்டாள்தனத்தையும் நம்மைப் பார்ப்பனர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பதையும் விளக்கும்போது நமக்கு உண்மையான சுயமரியாதை உணர்ச்சி இருந்தால் சிரிப்பு வருமா? ஆத்திரமும், வெட்கமும் அல்லவா வரும்.

நமது இழிவானது நேற்று இன்று என்று இல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருவதால் நமது ரத்தம் வெட்கப்படுவதிற்கில்லாமல் இழிவிலேயே உறைந்து போய்விட்டது.

புரட்சி வேண்டும்

மனிதனுக்கு வெட்கமும், ரோஷமும் ஏற்படுவதற்கு ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு பெரும் சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதே ஒழிய சிரிப்பு விளையாட்டில் ஏற்படக் கூடியதல்ல. இதற்காக அனேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும்.

அனேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும், இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ்நிலைமைக்கும் ஆளாகிவருகிறோம். நம்மை நாம் திருத்திக்கொள்ளாமல் நமக்குள் ஒரு பெரிய மனமாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவதென்பது ஒருநாளும் முடியாத காரியமாகும்.

சமூகத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி, அடிமை ஜாதி என்பவைகள் இருப்பதோடு ஆண் பெண் தன்மைகளில் உயர்வு தாழ்வும் இருந்து வருகிறது. இவை தவிர ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி தன்மையும் இருந்து வருகிறது.

இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டதாகவும், சில முயற்சியால் செயற்கையாக ஏற்பட்டதாகவும், இவ்வளவுக்கும் காரணம் மனிதன் அல்ல வென்றும், சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும் பொருந்திய கடவுளால் ஏற்பட்டதென்றும் சொல்லப்படுகிறது. இவற்றையே மேல் நிலையில் உள்ளவனும் கீழ்நிலையில் உள்ளவனும் நம்பிக் கொண்டிருக்கிறான்.

மூடநம்பிக்கை

இந்த மூடநம்பிக்கை தான் வெகுகாலமாக மனித சமூகத்தில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதற்கில்லாமல் தடுத்துக்கொண்டு வருகிறது.

சாதாரணமாக மனிதப் பிறவியில் கீழ் ஜாதி, மேல் ஜாதி அடிமை (பறை) ஜாதி என்பவை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருகிறது. இதற்கு ஆக நாளதுவரை யாரும் எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

ஏனெனில் செய்யமுடியாதபடி அவனவன் நம்பிக்கையைச் செய்து கொண்டான்.

ஜாதி வித்தியாசங்களுக்கும், ஜாதிக்கொடுமைக்கும் கடவுள் காரணம் என்று எண்ணிய பிறகு யாரால் தான் பரிகாரம் செய்ய முடியும்? எந்த மனிதனும் மற்ற ஜாதியைப்பற்றி சந்தேகப்பட்டாலும் தன் ஜாதியைப்பற்றி நம்பிக்கை யாகவும், மேன்மையாகவும் கற்பித்துக்கொண்டு மற்றவர்களைத் தாழ்த்தி பெருமையடைகிறான். சாஸ்திரங்களில் மதங்களில் அவற்றிற்கு ஆதாரங்கள் கண்டுபிடிக்கிறான். புராணங்கள் எழுதி வைத்துப் பெருமையடைகிறான்.

இந்தக் குணம் பார்ப்பான் இடமாத்திரமல்ல; எல்லா ஜாதியாரிடமும் இருந்து வருகிறது.

ஜாதி பேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான். ஜாதிக் கலப்பை விவசாரித்தனமாக எண்ணுகிறான். இந்த மனப்பான்மை ஜாதி ஒழிப்புக்கு எமனாய் இருக்கிறது.

அஸ்திவாரத்தில் கையை வைத்து ஜாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள்.

திருவள்ளுவர், கபிலர், ராமானுஜர் முதலிய புராணக்காரர்களும் பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்மந்தமான சில புது முயற்சிகளும், மற்றும் எத்தனையோ சீர்திருத்த முயற்சிகளும் எல்லாம் உண்மையறியாமலும், உலக மெப்புக்கும் தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள ஜாதிபேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும் படியாகவோ செய்த காரியங்கள் அல்ல.

இதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். தயவு செய்து நடுநிலையுடன் கவனியுங்கள். ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்று செய்யப்பட்டு வந்த முயற்சிகளால் இதுவரை ஜாதி வித்தியாசங்கள் குறைந்ததா அதிகப்பட்டு வந்ததா என்று யோசித்துப்பாருங்கள். நாகரீகம் என்பதே புது புது ஜாதிகள் உற்பத்தி செய்வதாகத்தான் இருந்து வருகின்றது.

ஆதலால் ஜாதியை அடியோடு ஒழிக்க எவரும் முயற்சித்ததில்லை. மற்ற பலஜாதி மக்களின் முயற்சிகள் எப்படி இருக்கின்றன என்று பார்த்தாலோ அவர்களும் தாங்கள் எப்படியாவது மேல் ஜாதிக்காரர்கள் என்று மதிக்கப்பட வேண்டும் என்கிற முயற்சிகளாகவே இருக்கின்றன. ஜாதி இல்லாதவர்களும் கலப்பு ஜாதிக்காரர்களும் தாங்கள் ஒரு கலப்பற்ற ஜாதியை சொல்லிக் கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று வெட்கப்படுகிறார்களே ஒழிய, தங்களைப் பொறுத்தவரை ஜாதி ஒழிந்ததே என்று யாரும் திருப்தியடைவதில்லை. இந்த தொல்லைகள் அடியோடு ஒழிய வேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தில்தான் இடமிருக்கிறது; சுயமரியாதை இயக்கத்தால்தான் முடியும். மற்றபடி எப்படிப்பட்ட சீர்திருத்தவாதியானாலும் காரியத்திற்கு உதவவே உதவான்.

உதாரணமாக ஆசார சீர்திருத்தம் என்னும் பேரால் இந்தியாவில் சுமார் 50 வருஷங்களுக்கு முன்பிருந்தே பல அறிஞர்கள், மகாராஜாக்கள், பெரும் பதவியாளர்கள் முதல் எத்தனையோ பேர்கள் பாடுபட்டார்கள். ஒருவராலும் ஒரு சிறு காரியமும் செய்யமுடியவில்லை.

முந்திரிக்கொட்டை காந்தியார்

எல்லாவற்றிற்கும் மேல் முந்திரிக்கொட்டை மாதிரி தோழர் காந்தியார் புறப்பட்டார். ஜாதியைப் பற்றி பேசாமல் ங்பேசினால் பார்ப்பனர் நிஷ்ட்டூரம் வருமே என்று பயந்துசி தீண்டாமையை ஒழிக்கிறேன் என்று புறப்பட்டார். 10, 15 வருஷம் விளம்பரம் பெற்றார். பல பல லக்ஷம் ரூபாய்கள் வசூல் செய்தார். இன்று வரையில் அவர் வாயில் ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஒரு வார்த்தைகூட சொல்ல முடியாமல் போய்விட்டது. அதற்குப் பதிலாக ஜாதிகளை (வர்ணாச்சிரம முறையை) காப்பாற்ற வேண்டியது தனது கடமை என்று சொல்லிவிட்டார்.

காரணம் என்ன? தனது மகாத்மா பட்டம் நிலைக்க வேண்டுமானால் அவர் "ஜாதிகளை காப்பாற்றுகிறேன்" என்று சொல்லித்தானாகவேண்டும் என்கிற நிலைக்கு வந்து விட்டதேயாகும்.

சுயமரியாதை இயக்கம் துணிந்து சகல ஜாதியும் ஒழிந்துதான் ஆகவேண்டும் என்று சொல்லுவதற்கு காரணம் அது மனித சமூகத்தினிடமிருந்து எவ்வித பெருமையையும் மதிப்பையும் எதிர்பார்க்கவில்லை. ஜாதி ஒழிப்புக்கு தடையாகக்கொண்டு வந்து போடப்படும் எந்த முட்டுக் கட்டையையும் லட்சியம் செய்வதில்லை.

மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களின் எவ்வித சூழ்ச்சித் தொல்லை யையும் சமாளிக்கத் தயங்குவதில்லை. இந்தக் காரணங்களாலேயே சுய மரியாதைக்காரர்களால் சிறிதளவாவது வேலை செய்ய சாத்தியமாகின்றது.

நாளதுவரை ஜாதி வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதற்கு எதிரிகளால் ஏதாவது ஒரு யோக்கியமான காரணம் சொல்லப்பட்டதா என்று யோசித்துப் பாருங்கள்.

ஜாதி எப்படி உண்டாயிற்று

கடவுளால் ஜாதிகள் உற்பத்தி செய்யப்பட்டது என்பதும், மத சாஸ்திரங்களில் ஜாதிகள் இருக்கின்றன என்பதும் தவிர வேறு ஏதாவது சொல்லப்பட்டதா என்று யோசித்துப்பாருங்கள்.

சமீபத்தில் சென்னையில் ஒரு பார்ப்பனர் சங்கராச்சாரி என்ற பட்டத்தை உடையவர் மாத்திரம் ஜாதிக்கு இயற்கையில் ஆதாரமிருக்கிற தென்றும், பார்ப்பானையும் பறையனையும் அவனது ரத்தத்தை பரிசோதித்துப் பார்த்து கண்டுபிடித்து விடலாம் என்றும் சொன்னதாகப் பத்திரிகையில் பார்த்தேன்.

இதைத் தவிர வேறு யாரும் ஜாதி வித்தியாசத்துக்கு ஆதாரம் சொல்லவே இல்லை.

மற்றபடி அனேக ஜாதிகள் ஏற்பட்டதற்குக் காரணம் ஜாதி சங்கிரகம் என்னும் நூலில் வருணாச்சிரம முறைப்படி ஏற்பட்ட நான்கு ஜாதிகள் ஒன்றோடொன்று கலந்தும், மாறியும், கலப்பு முறையிலும், விவசாரித்தனத் தாலும் ஏற்பட்டவைகள் என்று கூறி இன்ன இன்ன ஜாதி கலந்து புணர்ந்ததால் இன்ன ஜாதி உண்டாகி இருக்கிறது என்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

இது சங்கராச்சாரி என்பவர் கூறிய அயோக்கியத்தனத்தை விட மோசமான அயோக்கியத்தனம் என்றுதான் சொல்லவேண்டும்.

ஏனெனில் இன்று உள்ள சகல உட்ஜாதியும் விவசாரித்தனத்தால் ஏற்பட்டது என்றால் இதை யார் தான் சகிக்க முடியும்?

அன்றியும் இந்த இரண்டு காரியமும் இன்று அமுலில் இல்லை. ஜாதி மாறிய புணர்ச்சிகள் தினமும் லட்சக்கணக்காக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதன் மூலம் குழந்தைகள் பிறந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவைகளால் எவ்வித ஜாதியும் புதிதாய் உண்டாவதில்லை.

ஆகவே இந்த தத்துவம் வருணாச்சிரம ஜாதியான நான்கு ஜாதியின் கீழ் வராதவர்களுக்கு பெரிய இழிவை உண்டாக்குவதற்கும் பயன்படக் கூடியதாய் இருக்கின்றதே தவிர மற்றபடி ஜாதி பிரிப்பதற்கோ, அதனால் ஏதாவது பயன் உண்டாவதற்கோ பயன்படுவதில்லை.

சங்கராச்சாரி

மற்றும் ரத்தத்தைக் கொண்டு ஜாதி கண்டுபிடித்து விடலாம் என்பதும் மற்ற மக்களின் சுயமரியாதை அற்ற தன்மையை ஆதாரமாகக் கொண்டு சொல்லப்படுவதே தவிர கேட்பவர்களுக்கு மானம், ஈனம், ரோஷம், அறிவு இருக்கும் என்று ஒருவன் கருதி இருந்தால் இவ்வளவு பெரிய அயோக்கியத் தனமான வார்த்தைகள் பேச இடமே இருந்திருக்காது. இந்தப்படி ஒரு சாதனம் இருக்குமானால் ரத்தத்தை பார்த்து பரீட்சிக்கக்கூடுமானால் அப்பரீக்ஷையின்படி அந்த சங்கராச்சாரியாரே "கீழ்" ஜாதியில் குறிக்கப்பட வேண்டியவராகி விடுவார் என்பதோடு இன்றைக்கு 100க்கு 99 பார்ப்பனர்கள் கதியும் அப்படித்தான் ஆகவேண்டி வரும் என்று உறுதியாய்ச் சொல்லுவோம். ஏனெனில் உள் ஜாதிகள் ஏற்பட்டதற்குக் காரணம் கலப்புப் புணர்ச்சி என்று மற்றொரு சாஸ்திரம் சொல்லுவதேயாகும்.

ஏழ்மைக்கு பரிகாரமில்லை

இவை நிற்க, ஆண் பெண் உயர்வு தாழ்வு தன்மைகளும், முதலாளி கூலிக்காரன் தன்மைகளும் இதுபோலவே கடவுள் பெயரையும், மதத்தின் பெயரையும் சொல்லி ஏமாற்றுவதாலேயே ஏற்பட்டதே தவிர வேறில்லை.

பெண் மக்களின் நிலைமையும், கூலிக்கார ஏழை மக்களின் நிலைமையும் இன்று ஒரு மனிதனால் சகிக்கக்கூடியதாய் இருக்கிறதா என்பதை யோசித்துப் பாருங்கள். கடவுளும் மதமும் இல்லாதிருந்தால் இவர்கள் நிலைமைக்கு வேறு ஏதாவது சமாதானம் சொல்ல முடிந்திருக்குமா?

எந்த மகானாலும், எந்த அவதார புருஷனாலும் ஏழ்மைத் தன்மைக்கும், அடிமைத் தன்மைக்கும் நமது நாட்டில் பரிகாரம் சொல்லப்படவே இல்லை. மேலும் மேலும் ஏழ்மைக்கும், அடிமைக்கும் சாதகமான சாதனங்களே ஏற்பட்டு வருகின்றன.

இந்த இருபதாவது நூற்றாண்டில் கூட பழமையை எதாஸ்திதியைக் காப்பாற்ற பலமான முயற்சிகள் நடைபெறுகின்றதே ஒழிய அவற்றை மாற்றுவதற்கு எவ்வித முயற்சியும் இல்லை. ஆதலாலே தான் சுயமரியாதை இயக்கம் ஒன்றே தான் பழமைத் தொல்லைகளை ஒழித்து எதாஸ்திதித்து வத்தை அடியோடு அழிக்கவேண்டும் என்கின்றது.

காங்கிரசு

சுயமரியாதை இயக்கத்துக்கு விரோதம் எல்லாவற்றையும் விட காங்கிரசே யாகும். அது ஒரு மத பாதுகாப்பு ஸ்தாபனமே ஒழிய மற்றபடி மனித சமூகத்துக்கு அதனால் கடுகளவு பிரயோஜனமும் ஏற்படப்போவ தில்லை என்பது உறுதி. இந்த நாட்டுக்கு இயற்கையாய் ஏற்பட வேண்டிய முற்போக்கைக்கூட காங்கிரஸ் தடுத்து தேசத்தை பின்னணிக்கு கொண்டு போய்விட்டது. மற்ற நாடுகளில் இந்த 20 வருஷத்தில் ஏற்பட்ட முற்போக்குகளில் 1000ல் ஒரு பங்குகூட நமது நாட்டில் ஏற்படவில்லை. ஒரு பணக்காரத்தன்மை கொண்ட ஆட்சியை மக்களுக்காக யாதொரு காரியமும் செய்யவிடாமல் இந்த நாட்டில் தடுத்து காப்பாற்றி வருவது நமது நாட்டு மத ஸ்தாபனமாகிய காங்கிரசேயாகும். காங்கிரசுக்கு ஜாதிமதச் சண்டை தவிர வேறு என்ன கொள்கை இருக்கிறது? வேறு என்ன வேலைதான் அது செய்து இருக்கிறது? என்று யோசித்துப் பாருங்கள்.

காந்தியார் காங்கிரசுக்குள் அடி வைத்தது முதற்கொண்டு ஜாதி மதச் சண்டைகளும், ஜாதி மத பாதுகாப்புகளும், ஜாதி மத உணர்ச்சிகளும் அல்லாமல் வேறு ஏதாவது ஒரு சிறு நன்மையாவது மக்களுக்கு ஏற்பட்டதாகச் சொல்ல முடியுமா? என்று கேட்கின்றேன்.

காந்தித் திட்டம் - தீண்டாமை விலக்கு

காந்தியார் 1920ல் மனித சமூக நன்மைக்கு என்று நான்கு திட்டங்கள் வகுத்தார். அதாவது தீண்டாமை விலக்கு, இந்து முஸ்லீம் ஒற்றுமை, மது விலக்கு, கதர் இந்த நான்கும் என்ன கதி அடைந்தது.

தீண்டாமை விலக்கு என்பது தீண்டாதவர்கள் என்பவர்கள் இந்து மதத்தை விட்டு விலகினால் ஒழிய தீண்டாமை விலகாது என்கின்ற நிலைமைக்கு வந்துவிட்டது. 1923ல் நான் இதை ஒரு காங்கிரஸ் கூட்டத்தில் சொன்னபோது என்னை எல்லோரும் வெறுத்தார்கள். 1928, 29ல் நான் சொல்லும்போது சிலர் பொறுமை காட்டினார்கள்; சிலர் கஷ்டப்பட்டார்கள். ஆனால் அது இன்று இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாய் முடிந்துவிட்டது. தீண்டாமை போக வேண்டுமானால் இந்து மதத்தில் இருந்துகொண்டு முடியாது; காங்கிரசிலும் முடியாது; காந்தியாராலும் முடியாது. இந்து மதத்தைவிட்டு வேறு மதத்திற்கு அதுவும் முஸ்லீம் மதத்துக்குப்போனால் தான் முடியும் என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இது சரியா தப்பா என்பது ஒரு புறமிருந்தாலும் காந்தியாரின் தீண்டாமை விலக்கு தத்துவம் இன்று இந்தியாவில் இந்த நிலையை உண்டாக்கிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்து முஸ்லீம் ஒற்றுமை

அதுபோலவே இந்து முஸ்லீம் ஒற்றுமையும் இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் ஏற்படுவதா? முஸ்லீம் ராஜ்யம் ஏற்படுவதா என்கின்ற நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது. 20 வருஷத்துக்கு முன் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இருந்த ஒற்றுமை கூட இன்று அடியோடு ஒழிந்துபோய் இந்து ராஜ்யத்தை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்று முஸ்லீம்களும், முஸ்லீம் ராஜ்யத்தை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்று இந்துக்களும் சொல்லும்படியான நிலைமை உண்டாகிவிட்டது.

தீண்டாமை ஒழிந்தாலொழிய சுயராஜ்ஜியம் ஏற்படாதென்றும், இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டாலொழிய சுயராஜ்யம் ஏற்படாதென்றும், தீண்டாமை ஒழியாமலும் இந்து முஸ்லீம் ஒற்றுமை இல்லாமலும் சுயராஜ்யம் கிடைத்தாலும் நான் ஏற்கமாட்டேன் என்றும் சொன்ன காந்தியார் இன்று பெரியதொரு கரணம் போட்டு தலைகீழ் மாற்றமடைந்து "சுயராஜ்யம் வந்த பிறகுதான் இந்து முஸ்லீம் ஒற்றுமை தானாகவே ஏற்படும்" என்றும் "தீண்டாமையும் தானாகவே ஒழியும்" என்றும் சொல்லிவிட்டார்.

இந்த மாதிரி அவர் சொன்ன பிறகே முஸ்லீம்களும், தீண்டாதவர்களும் ஒன்று சேர்ந்து "சுயராஜ்யம் கிடைத்தால் நம் இரு சமூகமும் இந்துக்களால் அழுத்தப்பட்டுவிடும்" என்று பயந்து "எங்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிட்டு சுயராஜ்யப் பேச்சைப் பேசுங்கள்; இல்லாவிட்டால் சுயராஜ்யமே வேண்டாம்" என்று சொல்ல வேண்டியவர்களாகி விட்டார்கள்.

இதன் பயனே இன்று தீண்டாதவர்கள் இந்துமதத்தை விட்டு விலகுவதும் முஸ்லீம் மார்க்கத்தில் போய்ச்சேருவதுமாய் ஆகிவிட்டது. தினம் தினம் பலர் சேர்ந்தும் வருகிறார்கள்.

இந்த இரண்டோடு அல்லாமல் தென்னாட்டில் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை முற்கூறிய இரண்டு பிரச்சினைக்கும் சிறிதும் இளைத்ததாக இல்லாமல் வளர்ந்துகொண்டே வருகிறது.

இவை எல்லாம் எந்தக் காலத்தில் வெடித்து இரத்தக் களரியை உண்டாக்குமோ என்று ஒவ்வொரு நிமிடமும் பயப்படவேண்டியதாய் இருக்கிறதே தவிர, ஏதாவது ஒரு வழியில் சிறிதாவது அடங்கிற்று என்று சொல்லும்படியான மாதிரியில் இல்லை.

ஆகவே காந்தியார் அரசியல் போர்வையை போர்த்திக்கொண்டு மத இயல் வேலையைச் செய்துவரும் ஒரு கபட சன்யாசி என்றே முஸ்லீம்களும், இந்துக்களில் பார்ப்பனரல்லாதாரும், தாழ்த்தப்பட்ட மக்களும் உறுதியாய் நம்பிவிட்டார்கள். இதற்கு ஆதாரம் பார்ப்பனர்களும், இந்து மத வெறியர்களும் காந்தியாரை ஆதரிப்பதும் அவரை மகாத்மாவாக்குவதும் ஆகிய ஒன்றே போதுமானது.

மதுவிலக்கு

மற்றப்படி காந்தியார் மதுவிலக்குப் பிரச்சினையில்தான் ஆகட்டும் எந்த அளவுக்கு வெற்றிப்பெற்றார் என்பதை யோசித்துப் பாருங்கள். மதுவிலக்கு மறியலுக்காக ஜெயிலுக்குப் போனோம். காந்தியார் எதிர்பார்த்ததற்கு மேலாகவே ஜெயிலுக்குப் போனோம். எங்கள் குடும்பத்தில் மாத்திரம் சுமார் 1000க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் வெட்டி எறியப்பட்டன. குடும்ப சகிதம், மனைவி தங்கை சகிதம் மறியல் செய்தோம். மற்றும் பதினாயிரக்கணக்கான பேர்களை மறியல் செய்யும்படியும் செய்தேன். எல்லாம் ஏமாற்றமாய் முடிந்தது. அரசியல் காரியங்களுக்காக நம்மை ஏமாற்றிவிட்டதாக காந்தியாரே, அவரது பிரதம சிஷ்யர்களே பெருமை அடையும்படியாக ஆகிவிட்டது. மதுவிலக்குத் திட்டம் போடும் போது நமது நாட்டில் செலவான கள்ளு, சாராயத்தைவிட இப்போது அதிகமாகவே செலவாகின்றது.

கள்ளு, சாராயக் கடை வியாபாரிகள் வீட்டிலேயே காந்தியார் தங்கவும், அவர்களையே இன்று எலக்ஷன்களில் நிறுத்தி வெற்றியை உண்டாக்கிக் கொடுக்கவும் காங்கிரஸ் உழைக்கின்றது.

சர்க்காரால் செய்த மதுவிலக்குப் பிரசாரத்தையும் காங்கிரஸ் பழிகூறி ஒழித்து விட்டது.

கடைசியாக காந்தியாரும் காங்கிரசும் இப்போதுதான் தான் இதுவரை செய்துவந்த காரியங்கள் மறியல்கள் இது விஷயமாய் சர்க்கார் உத்திரவு முதலியவைகளை மீறியவைகள் எல்லாம் முட்டாள் தனம் என்று கருதி எந்த இடத்தில் தவறு செய்ததோ அந்த இடத்திற்கு வந்திருக்கிறது.

காந்தியாரின் இன்றைய நிலை 1916ம் வருஷத்தில் இந்தியா எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்குப் போயிருக்கிறது என்பதைத் தவிர வேறில்லை.

இந்த 20 வருஷ ஊக்கம், உழைப்பு, உணர்ச்சி ஆகியவை எல்லாம் அடியோடு பாழாக்கப்பட்டது. காந்தியார் இனி புதிதாக திட்டம் போட வேண்டிய நிலைக்கு வந்து மயக்கத்தில் இருக்கிறார்.

1916ம் வருஷத்தில் இருந்த அரசியல் சுதந்திரத்தை விட இன்று மோசமாகவும், மக்களுக்கு வரி அதிகமாகவும், செலவு அதிகமாகவும் இருக்கிறதே தவிர காந்தியாலோ காங்கிரசாலோ கடுகளவாவது முற்போக்கு ஏற்பட்டதாகச் சொல்வதற்கில்லை.

கதர்

கதர் விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் தோழர் காந்தியாரின் திட்டம் அடியோடு தோல்வி அடைந்து விட்டது, அவனவனுக்கு வேண்டிய உடை அவனவன் நூற்று நெய்து அணிந்துகொள்ள வேண்டுமென்பதே கதர் திட்டத்தின் தத்துவமாகும். அந்தப்படியே நானும் பிரசாரம் செய்து நானும் நூற்றுப்பார்த்தேன். லக்ஷரதிபதி தாய்மாரையும், மனைவிகளையும், மக்கள்களையும் நூற்கச் செய்தேன். கடைசியாக அக்கொள்கை மக்களை காட்டுமிராண்டித் தனமான காலத்துக்குக் கொண்டு போவதற்குச் செய்யப்படும் சூழ்ச்சியே தவிர பொருளாதாரத்துக்கும், வேறு தேச முன்னேற்றத்துக்கும் சிறிதும் சம்மந்தப்பட்டதல்ல என்பதை நன்றாய் உணர்ந்தேன். இன்று அதன் யோக்கியதையும் அப்படியே ஆகி விட்டது.

இன்று கதருக்குள்ள யோக்கியதை யெல்லாம் எலக்ஷனுக்கு ஒரு சூழ்ச்சியாகவும் சில தனிப்பட்ட ஆட்களுக்கு வயிற்றுப்பிழைப்புக்கு மார்க்கமாகவும், பகுத்தறிவும் சுயமரியாதையும் உடைய மக்களை காங்கிரசில் சேர்க்காமல் இருப்பதற்காகவும், சில அடிமைகளை வளர்ப்பதற் காகவும் ஒரு சாதனமாய் இருந்துவருகிறதல்லாமல் வேறு என்ன காரியத்துக்கு பயன்படுகின்றது என்று யோசித்துப் பாருங்கள்.

கெஜம் 2லீ அணாவுக்கு கிடைக்கும் மில் துணிக்கு பதிலாக கெஜம் 12 அணா 14 அணா போட்டு கதர் வாங்கினாலும் அதற்கு ஈடாக்க முடியாத நிலையில் இருந்து வருவதும், 18 வருஷ காலமாக கோடிக்கணக்கான ரூ. செலவு செய்து பிரசாரம் செய்தும் இந்தியா முழுதும் 1000க்கு ஒருவர் வீதம்கூட பெண்களில் 10000க்கு ஒருவர் வீதம்கூட மக்கள் வாங்கிக் கட்ட அமலுக்கு கொண்டுவரமுடியாமல் இருக்கிறதென்றால் 10000க்கு ஒரு பெண்கூட வாங்கிக்கட்ட உதவாமலும் முடியாமலும் இருக்கிறதென்றால் கதர் திட்டம் வெற்றியடைந்ததா என்று பாருங்கள்.

உப்பு சத்தியாக்கிரகம்

உப்பு சத்தியாக்கிரகத்தின் யோக்கியதையும் உடும்பு வேண்டாம் கை விட்டால் போதும் என்கின்ற மாதிரியில் இர்வின் பிரபு இடம் மண்டி போட்டு இனிமேல் சத்தியாக்கிரகம் செய்வதில்லை என்று எழுதிக்கொடுத்து விட்டு ஜெயிலில் அடைபட்டுக்கிடந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்ததோடு முடிவடைந்தது.

ஆகவே காந்தியாரின் திட்டங்கள் எல்லாம் அடியோடு தோல்வி அடைந்தும் அவரது மகாத்மா பட்டம் மாத்திரம் இன்று கோவில்களுக்குள்ளும், தேர்கள் மீதும், திருவிழாக்களிலும் விளங்கும்படி பிரசாரம் செய்யப்பட்டு வருகிறதில் குறைவில்லை.

இந்த நிலையில் வாலிபர்கள் பலருக்கு காங்கிரஸ் மயக்கமும், காந்தி பைத்தியமும் இன்னும் இருந்து வருவதை நான் பார்க்கிறேன்.

தேர்தல்களுக்கு காந்தி பெயரையும், காந்தியார் பேரால் வசூலித்த பணத்தையும் கொடுத்து வாலிபர்களை ஏற்படுத்தி மதப் பிரசார முறையில் வேலை செய்வதின் பயனே இந்த மயக்கத்துக்கும், பைத்தியத்துக்கும் காரணம் என்பதே எனதபிப்பிராயம்.

இப்படிப்பட்ட மூட ஜனங்கள் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி குறைகூறுவதிலும், பழி சுமத்துவதிலும் அதிசயம் காணமுடியாது.

இந்த 10, 12 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்கம் செய்துவந்த வேலைகளை மக்கள் சரியானபடி உணராமல் சுயமரியாதை இயக்கம் நாஸ்திக இயக்கம், மதமற்ற இயக்கம் என்று பார்ப்பனர்கள் செய்யும் விஷமப் பிரசாரத்தைத்தான் தெரிந்துகொண்டிருக்கிறது.

கடவுளும் மதமும்

கடவுளும் மதமும் உலகில் ஆயிரம் வருஷத்துக்கு முன் இருந்ததைவிட எவ்வளவோ மறைந்தும் மாறுதலடைந்தும் சீர்திருத்தம் பெற்று இருக்கிறது. கடவுளால் மதத்தினால் பிழைக்கும்படி வாழ்க்கை ஏற்படுத்திக் கொண்ட கூட்டம் தவிர சமூகம் தவிர மற்ற இடங்களில் கடவுளும், மதமும் எவ்வளவோ குறைவடைந்து வருகின்றன.

உருவமில்லாத பெயரில்லாத கடவுள்கள் தோன்றிவிட்டன. மத சின்னமில்லாத மதங்கள் தோன்றிவிட்டன. இரண்டையும்பற்றி கவலைப் படாமல் தங்கள் தங்கள் வேலையை கவனிக்கும்படியான உணர்ச்சிகளும் தோன்றி விட்டன.

தங்களுக்கு அதைப்பற்றிய கவலை யில்லாமல் மற்றவனை ஏய்க்கவும், கட்டுப்படுத்தவும், அடிமையாக்கவும் மாத்திரமே இன்று கடவுளும் மதமும் வெகு மக்களால் கையாளப் படுகின்றதே ஒழிய வேறில்லை.

சகல துறைகளிலும் உலகம் முற்போக்கடைவது போலவே கடவுளிலும் மதத்திலும் கூட உலகம் முற்போக்கடைந்து வருகிறது. சுயமரியாதை இயக்கம் இந்த க்ஷணமே எல்லோரையுமே கடவுள் மத நம்பிக்கையை விட்டுவிடும்படி கட்டாயப்படுத்தவில்லை.

நமக்கு புரியாததும், நம்மால் அறிய முடியாததும் குணம், உருவம், சலனம் இல்லாததும் ஆன கடவுளைப்பற்றி சுயமரியாதை இயக்கத்துக்கும் கவலையில்லை.

மற்றபடி கடவுளைப்பற்றி தெரிந்துவிட்டதாகச் சொல்லுவதும் அதற்கு உருவம், பெயர், குணம், சலனம் ஏற்படுத்துவதும் அதன் மீது பொறுப்பைச் சுமத்துவதும் மனிதன் மற்றவர்களால் அடையும் கொடுமைக்கும், இழிவுக்கும் பொறுப்பாக்குவதுமான கடவுள் உணர்ச்சியையே சுயமரியாதை இயக்கம் குறைகூறுகிறது. மற்றும் கண்டதெல்லாம், நினைத்த தெல்லாம் கடவுள் என்கின்ற உணர்ச்சியையும் ஆயிரக்கணக்கான கடவுள்கள் உணர்ச்சியையும் ஒழிக்கவேண்டும் என்கின்றது.

இன்று ஒரு இந்துவால் எவை எவை எல்லாம் கடவுள் என்பதாக மதிக்கப்படுகின்றது என்றால் மரத்தில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படு கிறது. புல் பூண்டுகளில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படுகின்றது. மலத்தில் ஒரு கூட்டமும், பூச்சி புழுக்களில் ஒரு கூட்டமும், மிருகங்களில் பன்றி, நாய், கழுதை, மாடு முதலிய ஒரு கூட்ட மிருகமும், பக்ஷியில் கருடன், காக்காய், கோழி முதலிய ஒரு கூட்டமும், கல்லுகளிலும், மண்களிலும் ஒரு கூட்டமும், காகிதங்களிலும் எழுத்துக்களிலும் ஒரு கூட்டமும், மனிதர்களில் ஒரு கூட்டமும் இன்று மனிதனால் கடவுளாகப் பாவிக்கப்பட்டு பூஜை, வணக்கம், பலி முதலியவை செய்து ஏராளமான பொருள்கள் நாசமாக்கப் பட்டு வரப்படுகின்றது. இந்த முட்டாள் தனங்களையும் மோசடி கருத்துக்களையும் முதலில் ஒழிக்க வேண்டுமென்று தான் சு.ம. இயக்கம் சொல்லுகிறது.

இதை தைரியமாய் எடுத்துச் சொல்ல இன்று இந் நாட்டில் சுயமரியாதை இயக்கம் ஒன்றுதான் இருக்கிறது. அது இந்த மாதிரியான கடவுள் உணர்ச்சிகளை ஒழித்துத் தீருவதென்றே கங்கனம் கட்டிக்கொண்டு உயிர் வாழுகின்றது.

நாஸ்திக இயக்கம் என்று சொல்வதாலேயே அது பயந்துகொள்ளப் போவதில்லை. கடைசிவரை அது உழைத்துத்தான் தீரும். மதவிஷயத்திலும் இப்படித்தான் இருந்து வருகிறது. ஆகவே சுயமரியாதை இயக்கம் இன்னது என்றும் காங்கிரஸ் இயக்கம் இன்னது என்றும் உணர்ந்து உங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள். விஷமப் பிரசாரத்துக்கும் ஏமாற்றும் பிரசாரத்துக்கும் ஆளாகாதீர்கள்.

------------------------------------ 23.03.1936 ஆம் நாள் திங்கட்கிழமை மாலை பட்டுக்கோட்டை போஸ்டாபீசுக்கு எதிரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் 24.03.1936 இல் முத்துப் பேட்டைக்கு அடுத்த புத்தகபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் தந்தைபெரியார் அவர்கள்  ஆற்றிய சொற்பொழிவின் விளக்கம்.- “குடி அரசு” சொற்பொழிவு 05.04.1936

30 comments:

தமிழ் ஓவியா said...


சட்டமன்றத்தில் இன்று:


சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை செய்யப்படுவர்
முதலமைச்சரின் அறிவிப்புக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு


சென்னை, பிப்.19- ராஜீவ்காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் குற்றவாளி களாக ஆக்கப்பட்ட பேரறி வாளன், முருகன், சாந்தன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவதாக சட்ட மன்றத்தில் இன்று முதல மைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை சட்டமன்றத் தில் அனைத்து கட்சிகளும் வரவேற்றன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை கண்டித்து வெளி நடப்பு செய்தனர்.

சட்டமன்றத்தில் இன்று (19.2.2014) காலை 10 மணி யளவில் அவை கூடியதும் கேள்வி - பதில் நிகழ்வு நடைபெற்று முடிந்ததும், சிறப்புக் கவன ஈர்ப்பு தீர் மான அடிப்படையில் முத லமைச்சர் விதி 110- இன் கீழ் ஒரு அறிவிப்பை வாசிப் பார் என பேரவைத் தலை வர் ப. தனபால் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கீழ்க்கண்ட அறி விப்பை வாசித்தார்:

இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண் டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-இன்படி தமிழ் நாடு அமைச்சர வையின் முடிவு குறித்து மத்திய அர சுடன் கலந்தாலோசிக்கப் பட வேண்டும். எனவே, மத்திய அரசின் கருத்தி னைப் பெறும் வகையில், திருவாளர்கள் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், சிறீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ் நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடி யாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாள் களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக் கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச் சரவைக் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், சிறீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகி யோர் விடுவிக்கப்படுவார் கள் என்பதை இந்த மாமன் றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்ட மன்றத்தில் இன்று முதல மைச்சர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/75554.html#ixzz2tp0Y8xpJ

தமிழ் ஓவியா said...


கல்கிகளின் ஆசை

கல்கிகளின் ஆசை

கேள்வி: மோடி அலை வெறும் மாயை என்கிறாரே திருமாவளவன்?

பதில்: வண்டலூர் மாநாட் டுக்குத் திரண்டவர்களின் எண்ணிக்கையை தினமலர் பத்து ல,ட்சம் என்றது; தின மணி ஒரு லட்சம் என்றது; எண்ணிக்கை எதுவானலும் கூட்டம் பிரியாணி பொட் டலத்துக்கும், குவார்ட்டர் பாட்டிலுக்கும், ரூபாய்க்கும் திரண்ட கூட்டமல்ல; மோடி மீது நம்பிக்கை கொண் டோரின் கூட்டம். யதார்த்தம் எடுத்துரைக்கும் உண் மையைக் கண்டறிந்தும் மாயாஜாலமாகப் பேசுவது எதிர் அணி அரசியல்வாதிக்கு அவசியமாகி விடுகிறது.

இப்படி எழுதுவது ஆர். எஸ்.எஸின் விஜயபாரதம் அல்ல கல்கி தான் (23.2.2014 பக்கம் 43).
வண்டலூரில் மோடி கூட்டம் பேசிய அன்று (8.2.2014) அங்கு டாஸ்மாக் விற்பனை புதிய சாதனை படைத்ததாம் - ரூ.4.9 கோடி விற்பனையாம் - இந்தக் குவார்ட்டர்களை சொந்த மாகப் பணம் கொடுத்து வாங்கியதுதான் என்று கல்கி கூறுகிறதோ?

கோயம்பேட்டில் தனி யார்ப் பேருந்துகளை நிறுத்தி, கூவிக் கூவி மக்களை அழைத்த கதை ஊர் சிரிக்க வில்லையா? ஆகா! கல்கி களுக்குத்தான் மோடியைச் சிம்மாசனத்தில் உட்கார வைக்க எவ்வளவுப் பெரிய ஆசை!

நற்குடி மக்களா?

ஏடுகளில் அன்றாடம் ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. டாஸ்மாக் கடையை இங்கே வைக் காதே! பெண்கள் நடமாட முடியவில்லை! என்று பொது மக்கள் குறிப்பாகப் பெண்கள் வீதிக்கு வந்து போராடுவதை அறிய முடிகிறது. இதில் உள்ள நியா யத்தைப் புரிந்து கொள்ள வேண்டமா? குடிகுடியைக் கெடுக்கும் என்ற விளம்பரப் பலகையையும் ஒரு பக்கத் தில் மாட்டிக் கொண்டு - இன்னொரு பக்கத்தில் - மக்கள் அதிகமாகப் புழங் கும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை வைப்பது சரி தானா? இந்த மதுபானக் கடைகளை இழுத்து மூடி விட்டு, கள்ளுக் கடைகளைத் திறப்பது பற்றி அரசு யோசிக் கலாமே! திராவிடப் பெருங் குடி மக்கள் நற்குடி மக்க ளாக வாழ ஒரு வழி செய்யக் கூடாதா? மதுவை ஒழிக்க வேண்டும் என்று போடப் படுகின்ற மாநாட்டுத் திடலில், பொழுது விடிந்து பார்க்கும் பொழுது தான் உண்மை புரி கிறது - எங்குப் பார்த்தாலும் காலி மதுப்பாட்டில்களின் அணி வகுப்பு!

பேஷ், பேஷ்!

தாம்பரத்தையடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பட்டப் பகலில் படுகொலை செய் யப்பட்டுள்ளார். இதற்கு முன்புகூட அவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இப் படியே படுகொலை செய் யப்பட்டுள்ளனர். பேஷ், பேஷ்! சட்டம் ஒழுங்கு மிக நன்னாயிருக்கு...

வாராக்கடன்

வங்கிகளின் மொத்த வாராக் கடன் நடப்பு நிதி யாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 35.2 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/75561.html#ixzz2tp0fsfAc

தமிழ் ஓவியா said...

7பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி : கலைஞர்


சென்னை, பிப்.19- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முரு கன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண் டனையை ஆயுள் தண் டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப் பளித்தது. அவர்களை விடு தலை செய்யும் முடிவை மாநில அரசு மேற்கொள்ள லாம் எனவும் அந்த தீர்ப் பில் கூறியிருந்தது.

எனவே, இன்று சட்ட சபையில் முதல்வர் ஜெய லலிதா முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் உட னடியாக விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்க வேண் டும் என்று மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள் ளார். இதுகுறித்து திமுக தலைவர் கலைஞர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி அளிக் கிறது. 7 பேரையும் விரை வில் விடுதலை செய்ய மத் திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மகிழ்ச்சி என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/75557.html#ixzz2tp0oJKMu

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கவனச் சிதைவோ!

செய்தி: காஞ்சிபுரம் உலக ளந்த பெருமாள் கோயில் தேர் சக்கரம் உடைந்தது! சிந்தனை: உலகை அளந்த வருக்கே இந்தக் கதியா? ஒருக்கால் உலகை அளந்து கொண்டிருந்தபோது கவ னச் சிதைவால் இது நடந்து விட்டதோ!

Read more: http://viduthalai.in/e-paper/75555.html#ixzz2tp15lop7

தமிழ் ஓவியா said...


உலகளந்த பெருமாள் தேர் உடைந்து போனதே!


வாலாஜாபாத், பிப்.19- காஞ்சீபுரம் உலகளந்த பெரு மாள் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் தேர் சக்கரத் தில் விரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந் தனர். காஞ்சீபுரத்தில் உலக ளந்த பெருமாள் கோவில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 6 நாட்களாக நடை பெற்று வந்தது.

7-ஆம் திருநாளான நேற்று காலை திருத்தேர் உற்சவம் நடந்தது. முன்ன தாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனை யும் நடந்ததாம். பின்னர் திருத்தேரில் எழுந்தருளினா ராம். திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். காஞ்சீபுரத்தில் உள்ள ராஜ வீதிகளில் தேர் வலம் வந்தது.

செங்கழுநீரோடை வீதி யில் வந்தபோது திடீரென தேரின் முன்சக்கரத்தில் லேசான சத்தம் வந்தது. உடனே தேரை நிறுத்தி பார்த்தனர். அப்போது சக்கரத்தில் லேசான விரிசல் ஏற்பட்டு இருந்தது. இத னால் தேர் நிறுத்தப்பட்டு முன்பக்க சக்கரத்தை கழற்றி பின்பக்கமும், பின்பக்க சக் கரத்தை கழற்றி முன்பக்கத் திற்கும் மாற்றி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பூக்கடை சத்திரம் என்ற இடம் அருகே வந்தபோது சக்கரத்தில் திடீரென விரிசல் அதிகம் ஆனது. பின்னர் தேரை உடனடியாக நிறுத்தி சக்கரத்தை சீரமைக்கும் பணியை கோவில் நிர்வாகத் தினர் மேற்கொண்டனர். இதனால் அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக் குவரத்து பாதிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் கூடி விட்டனர். பின்னர் சக் கரத்தை தற்காலிகமாக சரி செய்து தேரை கோவில் நிலைக்கு பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர்.

திருத்தேர் உற்சவம் நடத் துவதற்கு அறநிலையத் துறை சார்பில் நேற்று முன் தினம் தான் திருத்தேர் நல்ல நிலையில் உள்ளது என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/75559.html#ixzz2tp1Ce2Z9

தமிழ் ஓவியா said...


பிஜேபி என்ன ஊழலுக்கு அப்பாற்பட்டதா?


மதவாத எதிர்ப்புக் கை கொடுக்குமா என்ற ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது ஒரு நாளேடு.

அந்த நாளேட்டுக்கு மட்டுமல்ல; இதே கருத்தைக் கொண்டுள்ள எவருக்கும் நாம் சொல்லக் கூடிய ஒரு பதில் - கண்டிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதவாத எதிர்ப்பு என்பது கை கொடுத்தே தீரும். காரணம் இது தந்தை பெரியார் அவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட பகுத்தறிவுப் பூமி. இந்த வினாவைத் தொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளாகவே கூட இந்த வினாவை எழுப்பிப் பார்த்திருக்க வேண்டாமா?

இன்னும் சொல்லப் போனால் ஊழலைவிட மிகப் பெரிய ஆபத்தானது மதவாதம் ஆகும்.

அதே நேரத்தில் மதவாதத்திற்குக் காரணமான பிஜேபி ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்டதல்ல. அதற்காக வெகு தூரம் சென்று ஆய் வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

பிஜேபி ஆட்சி செய்த கருநாடக மாநிலத்தில் என்ன நடந்தது? ஊழலின் ஒட்டு மொத்த உறைவிடமாக அது விளங்கவில்லையா? ரெட்டி சகோதரர்கள் அடித்த கொள் ளைக்கு அளவுண்டா? ஏன் முதல் அமைச்சர் பி.எஸ். எடியூரப்பா செய்த ஊழல் பட்டியல்தான் சாதாரண மானதுதானா?

நடந்து முடிந்த தேர்தலில் தென்னகத்தில் ஆட்சி புரிய வாய்ப்புக் கிடைத்த ஒரே மாநிலமாகவிருந்த கருநாடக மாநிலத்தில் ஆட்சியைப் பறி கொடுத்ததே!

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நடந்ததே சவப் பெட்டி ஊழல் - மக்கள் மறந்து விட்டார்களா? அகில இந்திய பிஜேபியின் தலைவர் பங்காரு லட்சுமணன் இலஞ்சப் பணத்தை வாங்கி மேசையின் அறையில் திணித்தது வரை தெகல்கா நிறுவனம் அம்பலப்படுத்தியதா இல்லையா?

மற்றொரு அகில இந்திய பிஜேபியின் தலைவர் நிதின் கட்காரிமீது ஊழல் புகார் வந்ததன் பின்னணியில் மறுபடியும் தலைவராக வர முடியாத இடத்துக்குத் தள்ளப் படவில்லையா? சோதனை செய்ய வந்த வருமானவரித் துறை அதிகாரிகளை மிரட்டியவர் தானே அவர்? மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று அதிகாரிகளை மிரட் டிய செய்தி வெளி உலகத்திற்கு வந்து சேரவில்லையா?

ஏன் அவ்வளவு தூரம் போவானேன்? பிஜேபியின் இன்றைய பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியின் குஜராத் ஆட்சியில்தான் என்ன வாழ்கிறது?

குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் 2009ஆம் ஆண்டு முதல் தவறான முறையில் செயல்பட்டதால் 5000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஏடுகள் சொல்லவில்லை; இந்தியத் தலைமைக் கணக்கு மற்றும் தலைமை அதிகாரியின் அறிக்கை அம்பலப் படுத்தியதா இல்லையா?

தேவையற்ற முறையில் சலுகைகள் வழங்கப்பட்ட நிறுவனங்களில், கவுதம் அதானி மின்னாற்றல், ரூயாயின் எஸ்ஸார் குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஆகியவை அடங்கும். சொல்லுவது இந்தியத் தலைமை தணிக்கைத் துறை என்பது குறிப்பிடத் தக்கதாகும். மதவாதம் ஒரு பக்கம், ஊழல் இன்னொரு பக்கம் எனும் ஆபத்தான இரட்டை குழல் துப்பாக்கிதான் பிஜேபி என்பதை மறந்து விடக் கூடாது.

இன்னும் சொல்லப் போனால் ஊழலைவிட மிகவும் ஆபத்தானது மதவாதம். நாட்டு மக்களை மதவாதக் கண் ணோட்டத்தோடு பார்த்து, அன்றாடம் நாட்டு மக்களி டையே கலவரத்தையும், பதற்றத்தையும் உருவாக்கக் கூடிய ஓர் ஆட்சி தேவையா?

2002இல் குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை அப்பட்டமாக தெரிந்த நிலையிலும் கட்டு விரியனை எடுத்துக் காதுக்குள் விட விரும்புவார்களா?

1992இல், அயோத்தியில் என்ன நடந்தது? 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தை, பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான சங்பரிவார் இந்துத்துவ வன்முறைக் கும்பல் கூடி, இடித்துத் தரை மட்டமாக்கவில்லையா?
கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, அசோக்சிங்கால் முதலிய முக்கிய தலைவர்கள் தலைமையேற்று இந்த அட்டூழியத்தைச் செய்து முடிக்கவில்லையா? இந்துக்கள் அலிகள் அல்ல - ஆண்கள் என்பதற்கு அடையாளம்தான் பாபர் மசூதி இடிப்பு என்று - உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டப்பட்ட நரேந்திர மோடி அப்பொழுது சொன்னாரா இல்லையா?

ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மீது ஊழல் புகாரை மட்டும் சொல்லி, அதைவிட பல மடங்கு ஊழலும், மதவெறியும் கொண்ட பிஜேபியை ஆட்சியில் அமர்த்துவதைவிட தற்கொலை வேறு ஒன்று உண்டா?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஏடுகள், ஊடகங்கள் கூட இதனைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அதை விட வேதனை எதுவாக இருக்க முடியும்?

Read more: http://viduthalai.in/page-2/75563.html#ixzz2tp1QuG7E

தமிழ் ஓவியா said...

இலங்கை போர்க்குற்றங்கள் மீதான சர்வதேச விசாரணை ஒன்றை இந்தியா ஏன் கோரவேண்டும்? (2)


நேற்றைய தொடர்ச்சி....

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இந்திய அரசை வலியுறுத்தும் வகையிலான பிரச்சாரத்தில் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஈடுபட்டுள்ளது. இதன்படி 09248074010 என்ற தொலைப்பேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த பிரச்சாரத்தில் பங்கேற்று ஆதரவு அளிப்பதால் இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கருதுகிறது. மிஸ்டு கால் கொடுத்தோரது எண்ணிக்கை இந்திய அரசிடமும் அய்.நா.விடமும் அளிக்கப்படும் என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

இலங்கை போர்க்குற்றங்கள் மீதான சர்வதேச விசாரணை ஒன்றை இந்தியா ஏன் கோரவேண்டும்? (2)


நேற்றைய தொடர்ச்சி....

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இந்திய அரசை வலியுறுத்தும் வகையிலான பிரச்சாரத்தில் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஈடுபட்டுள்ளது. இதன்படி 09248074010 என்ற தொலைப்பேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த பிரச்சாரத்தில் பங்கேற்று ஆதரவு அளிப்பதால் இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கருதுகிறது. மிஸ்டு கால் கொடுத்தோரது எண்ணிக்கை இந்திய அரசிடமும் அய்.நா.விடமும் அளிக்கப்படும் என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நிலவும் மனித உரிமை சூழல் பற்றி எதுவும் பேசாமல் காமன் வெல்த் அமைப்பு வாய்மூடி இருப் பதேன்? நீதி வழங்கும் மக்களாட்சி நடை முறையை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு இத்தகைய மவுனம் ஆதரவளிக் காதது மட்டுமன்றி, அவற்றில் ஈடுபட்டுள்ளவர் களுக்குப் பெரும் கவலை அளிப்ப தாகவும் உள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக் கையை ஏற்று செயல்பட இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதி லாக, இவ்வாறு செய்வதற்குத் தனக்கு போதிய கால அவகாசமும், சுதந்திரமும் அளிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை அரசின் கோரிக்கைக்கு காமன்வெல்த் செயலகம் அதிக மதிப்பளிப்பதாகவே தோன்றுகிறது.

இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் சூழல் பற்றிய பரிசீலனையில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக காமன்வெல்த் அமைப்பு கூறுவது உண்மையானதாகத் தோன்றவில்லை. காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றபோது, இலங்கையில் மனித உரிமை பாதுகாவலர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைப் பற்றி நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள செய்திகளைப் பற்றி காமன்வெல்த் அமைப்பிலிருந்து எவர் ஒருவரும் வெளிப்படையாகப் பேசாமல் இருந்ததை இதற்குத் தகுந்த எடுத்துக் காட்டாகக் கூறலாம். இந்த மவுனம் காமன்வெல்த் அமைப்பின் நம்பகத்தன்மையையும், கவுரவத்தையும் ஒட்டுமொத்தமாகக் குலைப்பதாகவே தோன்றுகிறது. இலங்கை அரசு மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும், காமன்வெல்த் அமைப்பின் நோக்கங்கள், கொள்கைகள் பிரகடனத் தில் தெரிவிக்கப்பட்டுள்ள உரிமைகளை, நெறிமுறைகளை மீறுவதாகவே அமைந் துள்ளவையாகும்.

இலங்கையின் பொதுத் தொடர்பு இயந்திரம் தெரிவிக்கும் செய்திகளை அப்படியே உண்மை என்று ஏற்றுக் கொள்வதை முதலில் நிறுத்திவிட்டு, இலங்கையில் நிலவும் மனித உரிமை சூழ்நிலையை மேம்படுத்த இலங்கை அரசை வலியுறுத்தும் நேர்மையான, உண்மையான நடவடிக்கைகளை காமன் வெல்த் அமைப்பு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பற்றிய ஓர் அனைத்துலக விசாரணை கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண் டும் என்று அனைத்துலக சமூகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வரு கிறது. வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவா வில் அய்க்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடை பெற உள்ள நிலையில், இந்த கோரிக்கை வலுப்பெற்று வருவதைக் காண மகிழ்ச்சி யாக இருக்கிறது.

அதே போல இலங்கையில் போர் முடிந்ததற்குப் பிறகு இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதும் முக்கியமானதேயாகும். சர்வாதிகாரத்தை நோக்கி உறுதியாக நடைபோட்டு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே தனது வழியில் குறுக்கே நிற்பவர்கள் எவர் ஆனாலும் அவர் களை, பெரும்பாலும் வன்முறை வழிகளி லேயே, அடக்கி ஒடுக்கி வருகிறார். மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்காமல், மாற்று கருத்து கொண்டவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் அவரது போக்கு பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், தொழில்சங்கத்தினர், எதிர்க் கட்சி உறுப் பினர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், ஆர்வலர்கள் அனைவரும் அச்சுறுத்தப் படுகின்றனர்; துன்புறுத்தப்படுகின்றனர்; மோசமாக இழிவுடுத்தி நடத்தப்படுகின் றனர். இலங்கை போர்க் குற்றங்கள் பற்றிய அனைத்துலக அளவிலான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஒன்றுபட்ட கோரிக்கையை முன் வைத்து வலியுறுத்தும் நாடுகளின் பட் டியலில் சில காமன்வெல்த் உறுப்பு நாடு கள் தனிப்பட்ட முறையில் சேர்ந்திருப் பது நம்பிக்கையை அளிக்கிறது. இலங் கையில் நிலவும் மனித உரிமை சூழல் பற்றி கவலை தெரிவித்து இந்தியா பேசி வருவது அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடந்த காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங் கலந்து கொள்ளாதது, இலங் கையில் நிலவும் மனித உரிமை சூழல் பற்றிய கவலை தெரிவிக்கும் ஒரு செய் தியே என்று பரவலாக விளக்கம் அளிக் கப்படுகிறது. போரின்போது இழைக்கப் பட்ட கொடுமைகளுக்கு பொறுப்பேற்று நீதி வழங்க வலியுறுத்தும் அய்க்கிய நாடுகள் அமைப்பின் தொடர் தீர்மானங் களை இந்தியா ஆதரித்தே வந்துள்ளது.

இவ்வாறு இந்தியா மேற்கொண்டிருக் கும் கடுமையான நிலை வரவேற்கத் தக்கதே. ஆனால் இதற்கும் மேலே டில்லி யினால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுவதாக அது ஆகாது. போர்க் குற்றங் களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் நடைமுறை எதனை யும் மேற்கொள்ள தான் விரும்பவில்லை என்பதையும், தன்னால் இயலாது என்ப தையும் இலங்கை அரசு காட்டியுள்ளது. போர்க்குற்றங்கள் மீது அனைத்துலக அளவிலான விசாரணை ஒன்று மேற் கொள்ளப்பட வேண்டும் என்ற நாளுக்கு நாள் வலுப்பட்டு வரும் அறைகூவலில் டில்லியும் இப்போது சேர்ந்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

(தொடரும்)

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page-2/75564.html#ixzz2tp1d3Z6l

தமிழ் ஓவியா said...


மோடி ஸ்வாமிகளின் தனிமை உபதேசம்


- குடந்தை கருணா

இமாச்சல பிரதேசத்தில் பேசிய மோடி, தனக்கு குடும்ப வாழ்க்கை இல்லாததால், தான் ஊழல் செய்து பணம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், குடும்ப சூழல் இல்லாதவர் மட்டுமே,ஊழலை ஒழிக்க முடியும் என ஊழல் ஒழிப் புக்கு புதிய இலக்கணத்தை உதிர்த் துள்ளார் மோடி ஸ்வாமிகள்.

மோடி ஸ்வாமிகளிடம் சில கேள் விகளை கேட்கும் விரும்புகிறோம்.

1. ஊழலை ஒழிக்க குடும்ப ஸ்தர்களால் முடியாது என்பதால் தான், அத்வானியை பிரதமர் வேட் பாளராக பாஜக அறிவிக்கவில்லையா?

2. பிரதமர் மட்டுமே முடிவு செய்து, ஊழலை ஒழிக்க முடியுமா?

3. ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், என அனைவரும் குடும்ப சூழல் இல் லாதவர்களாக இருக்க வேண்டுமா?

4.மோடி ஸ்வாமிகளின் கருத்தை, பாஜக ஏற்றுக் கொள்கிறதா?

5. இல்லற வாழ்க்கை இல்லாத வர்களுக்குத்தான் இம்முறை பாஜக சார்பில் வேட்பாளராக வாய்ப்பு தரப்படுமா?

6. அத்வானி, சுஸ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி போன்றோர் இம்முறை வேட்பாளர்களாக போட் டியிடுவார்களா?

7. எந்த ஆய்வின் அடிப்படையில் மோடி ஸ்வாமிகள் இந்தக் கருத்தை உபதேசிக்கிறார்?

8. எனக்கு குடும்ப வாழ்க்கை கிடையாது, முதல்வர் பதவியில் மாத ஊதியமாக ஒரு ரூபாய் தான் பெறு கிறேன் எனக் கூறியவர் தான்,கடந்த பதினேழு ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றப் படிகளில் ஏறி வருகிறார். அதற்கு மோடி ஸ்வாமிகளின் விளக்கம் என்ன?

9. யோகேந்திர யாதவ் மோடி ஸ்வாமிகளிடம் கேட்ட கேள்வியான, அதானி குழுமத்திற்கு அதிகப்படி யான சலுகைகள் அளிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதற்கு மோடி ஸ்வாமிகளின் பதில் என்ன?

அண்மையில் ஒரு திரைப் படத்தில் ஒரு வசனம் வரும். வெள் ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வசனம் வரும். அது போலத்தான் இருக்கிறது மோடி ஸ்வாமிகளின் பேச்சு.

Read more: http://viduthalai.in/page-2/75567.html#ixzz2tp1ss9mW

தமிழ் ஓவியா said...

முருகன், சாந்தன், பேரறிவாளன் 3 பேரின் தூக்கு ரத்து: முக்கிய விவரங்கள்


புதுடில்லி, பிப்.19- ராஜீவ் காந்தி கொலை வழக் கில் முருகன், சாந்தன், பேரறி வாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண் டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பரபரப்பான இந்த தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க லாம் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

தூக்கு தண்டனை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ் நாட்டுக்கு வந்தபோது சிறீ பெரும்புதூரில் மனித குண்டு வெடிப்பில் படு கொலை செய்யப்பட்டார்.

கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி நடந்தது. நாட்டை உலுக்கிய இந்த படுகொலை குறித்து சி.பி.அய். சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி னார்கள். சென்னை அருகே உள்ள பூந்தமல்லி தடா நீதி மன்றத்தில் நடைபெற்ற கொலை வழக்கு விசார ணையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், முருகன் மனைவி நளினி உள்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் உச்ச நீதிமன்றத் தில் நடைபெற்ற மேல் முறையீட்டு விசாரணையில் முருகன், சாந்தன், பேரறி வாளன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய்யப் பட்டது. ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண் டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற 19 பேர் விடுதலை செய்யப் பட்டனர். பின்னர் தமிழக ஆளுநர் பாத்திமாபீவி உத்தர வின் பேரில், நளினியின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்ட னையாக குறைக்கப்பட்டது.

சீராய்வு மனு

இந்த நிலையில், தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருடைய கருணை மனுக் கள், 11 ஆண்டுகளுக்கு பிறகு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து 3 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறை வேற்ற தடை விதித்தது.

இதற்கிடையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத் தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு வில், குடியரசுத் தலை வருக்கு அனுப்பிவைக்கப் பட்ட தங்களுடைய கருணை மனுக்கள் 11 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த தாலும், ஏற்கெனவே 23 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து இருப் பதாலும் தங்களுக்கு விதிக்கப் பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

அதைத் தொடர்ந்து ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த ரிட் மனுக்கள் மீதான விசாரணையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டு ஒன்றாக விசாரணை நடைபெற்றது. கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற இறுதி கட்ட விசாரணையின்போது இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடு முழுவதும் பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்ட இந்த வழக் கில், தலைமை நீதிபதி பி.சதா சிவம் தலைமையில் நீதிபதி கள் ரஞ்சன் கோகாய், சிவ கீர்த்தி சிங் ஆகியோரை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப் பை வழங்கியது.

தூக்கு தண்டனை ரத்து

முருகன், சாந்தன், பேரறி வாளன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்ட னையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 3 பேரும்இதுவரை அனுப வித்துள்ள சிறை தண்டனை யை கணக்கில் கொண்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.

மத்திய அரசு கருணை மனுக்களை முறையாக, விரைவாக பரிசீலனை செய்து முடிவை அறிவிக்க வேண் டும் என்றும், கருணை மனுக் களை பரிசீலனை செய்வதில் தேவையற்ற தாமதத்தை தவிர்க்கும்படி குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண் டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

தமிழ் ஓவியா said...

மரண தண்டனைக்கு எதிரான கருத்து உலகம் முழு வதும் பரவலாகிவரும் தற் போதைய சூழ்நிலையில், தூக்கு தண்டனையில் இருந்து 3 பேரை காப்பாற்றிய இந்த தீர்ப்பில், தலைமை நீதிபதி பி.சதாசிவம் மேலும் கூறி இருப்பதாவது:-

ஏற்க முடியாது

குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் தலையிடுவ தில் இந்த நீதிமன்றத்துக்கு கண்டிப்பாக மகிழ்ச்சி ஏதும் இல்லை. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வர்களின் கருணை மனுக் களின் மீது விரைந்து முடி வெடுப்பதற்காக, குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும்.

தூக்கு தண்டனை விதிக் கப்பட்ட இந்த மூவரும் கருணைக்கு உரியவர்கள் அல்ல என்றும், அவர்கள் தங்களின் குற்றத்துக்கு எந்த வகையிலும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும், அவர்களின் கருணை மனு வின் மீது பரிசீலனை செய் வதற்கு ஏற்பட்ட தாமதத்தி னால் அவர்களுக்கு எவ் வகையான பிரச்சினையும் ஏற்படவில்லை; அவர்கள் சிறையில் தங்கள் நாட்களை மகிழ்ச்சியுடன்தான் கழித்து வருகின்றனர் என்றும் கூறும் மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது.

தண்டனை குறைப்பு ஏன்?

இவர்கள் மூவரும் மீண் டும் மீண்டும் குடியரசுத் தவைருக்கு தங்கள் கருணை மனுக்களின் மீது பல நினை வூட்டல் கடிதங்களையும், மனுக்களையும் அனுப்பி யிருக்கிறார்கள். இவை அனைத் தும் அவர்கள் அடைந்த மன உளைச்சலை காண்பிக்கின் றன. அவர்களின் கருணை மனுவின் மீது முடிவெடுப் பதில் அரசு எடுத்துக் கொண்ட தேவையற்ற காலதாமதத் தையும் ஏற்றுக்கொள்ள முடி யாது. இது போன்ற கருணை மனுக்களின் விஷயத்தில் மத்திய அரசு சரியான வழி முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கடந்த ஜனவரி 21ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் (சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளி கள் 4 பேர் உள்பட 15 பேரு டைய தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது) வரை யறுத்துள்ள கோட்பாடுகளின் அடிப்படையில் இவர்களின் கருணை மனுவின் மீதான தேவையற்ற மற்றும் விளக் கம் தரவியலாத தாமதம் இவர்களின் தூக்குதண்டனை யை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான காரணமாக அமைகிறது.

இவர்கள் மூவரின் கருணை மனுக்களை பரி சீலனை செய்வதில் ஏற்பட்ட தேவையற்ற காலதாமதத்தை கருத்தில் கொண்டு இவர் களின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது.

மாநில அரசு முடிவு

இந்த வழக்கில் மூவரும் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தங்கள் வாழ்க் கையை கழித்திருக்கிறார்கள். குற்றவியல் சட்டத் தின் 432 மற்றும் 433-வது பிரிவுகளின் அடிப்படையில், மாநில அரசு தங்களுக்கு அளிக்கப் பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும், சட்ட ரீதியான வகையிலும் இவர் களுடைய சிறை தண்டனை காலத்தை பற்றிய முடிவை எடுக்கலாம். இவ்வாறு தலைமை நீதிபதி சதாசிவம் கூறி இருக் கிறார்.

Read more: http://viduthalai.in/page-2/75573.html#ixzz2tp2F8dOx

தமிழ் ஓவியா said...


மும்பையில் நடைபெற்ற சமூக நீதி விழா


சமூக நீதிப் புரட்சியாளர் மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் அவரது துணைவியார் சாவித்திரிபாய் பூலே உருவச் சிலைக்கு மரியாதை

நேற்றைய விடுதலையின் தொடர்ச்சி வருமாறு:-

நண்பகல் உணவு வேளையில்...

MET உயர் கல்வி வளாகத்தில் உள்ள மகாத்மா ஜோதிபா பூலே - சாவித்திரிபாய் பூலே சிலைகளுக்கு தமிழர் தலைவர் மரியாதை செலுத்துகிறார். உடன் கல்வி நிர்வாகி பங்கஜ் புஜ்பல், டாக்டர் சோம.இளங்கோவன், பொன்.அன்பழகன் அய்.ஏ.எஸ்., வீ.குமரேசன், அ.ரவிச்சந்திரன், பெ.கணேசன் ஆகியோர் உள்ளனர்.


தமிழ் ஓவியா said...

விழா நிறைவடைந்த தும் அமைச்சர் ஜெகன் புஜ்பல் தமிழர் தலைவர் மற்றும் தோழர்களுக்கு நட்சத்திர விடுதி ஒன்றில் நண்பகல் உணவளித்தார். அனைவரும் அமர்ந்து உணவருந்தும் பொது இடத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். உணவருந் திக் கொண்டே தமிழர் தலை வரும், அமைச்சர் ஜெகன் புஜ்பல் அவர்களும் சமூக நீதித் தளத்தில் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றிப் பேசிக் கொண்டனர். அமைச் சர், விடுதிக்கு வருகை தந்து உணவருந்துவதைப் பிறர் பார்த்தவிதம், ஜெகன் புஜ்பல் அமைச்சர் என்ற நிலையி னையும் தாண்டி, பொது மக்களால்மதிக்கப்படும் தலைவராக போற்றப்படும் நிலை தெரிந்தது.
நண்பகல் உணவருந்திய பின்னர், திருச்சிக்கு அருகில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு தமது பங்களிப் பாக ரூபாய் ஒரு லட்சத்தை அமைச்சர் ஜெகன் புஜ்பல் தமிழர் தலைவரிடம் வழங் கினார்.

அரசியல் பணி மட்டு மின்றி, ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு கல்வி வழங்க வேண் டும் என வலியுறுத்தி வருவ தோடு, தமது அறக்கட்டளை யின் பெயரால் பல கல்லூரி கள் மற்றும் கல்வி நிலை யங்கள் நடத்தப்படுவதை அமைச்சர் தமிழர் தலைவ ரிடம் எடுத்துரைத்தார். தமி ழர் தலைவர் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத் தின் வேந்தர் என்ற நிலையில் மும்பையில் உள்ள தமது கல்வி நிறுவனங்களை அவ சியம் பார்த்து, அவைகளின் மேம்பட்ட சேவைக்கு பரிந் துரை வழங்கிடவும் அமைச் சர் கேட்டுக் கொண்டார். தமது மகனும் மராட்டிய மாநில சட்டமன்ற உறுப்பின ருமான பங்கஜ் புஜ்பல்லிடம் தமிழர் தலைவரை அழைத் துச் சென்று கல்வி நிறுவனங் களைக் காட்டிடப் பணித்தார். தமது அலுவல்பணி காரண மாக தமிழர் தலைவருடன் வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து அமைச்சர் விடை பெற்றார்.

மராட்டிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனங்களைப் பார்வையிடல்.

மும்பை கல்வி அறக்கட்டளை உயர் கல்வி நிறுவனத்தில் நிர்வாகிகள், பேராசிரியர் மற்றும் மாணவர்களுடன் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ் ஓவியா said...

மும்பை நகரின் மய்யப் பகுதியில் மராட்டிய கல்வி அறக்கட்டளை (Mumbai Edcuational Trust - MET) சார்பாக நடத்தப்படும் உயர்கல்வி நிறுவன வளாகத்திற்கு அமைச்சரின் புதல்வர் பங்கஜ் புஜ்பல், தமிழர் தலைவர் மற்றும் தோழர்களை அழைத்து வந்தார். வெகு பிரம்மாண்டமான, கட்டிட அமைப்பு கொண்ட கல்வி நிறுவனத்தில் மேலாண்மை, மக்கள் ஊடகம், இதழியல், புத்தாக்கம், பற்றிய உயர் கல்விப் படிப்புகள் வழங் கப்படுகின்றன. அடிப்ப டைக் கட்டமைப்பு வசதி களான வகுப்பறை, பயிற்சி அறை, உபகரண கட்டமைப்பு ஆகியவற்றில் மேல்நாட்டு கல்வி நிறுவனங்களுக்கும் மேலாக MET கல்வி நிறுவ னங்கள அமைந்திருந்தன.

சமூக நீதிக் கொள்கை அடிப்படையில் எழுந்த கல்வி நிறுவனம் என்பதற்கு அடையாளமாக கல்வி நிறு வனத்தின் நுழைவு வாயிலில் மராட்டிய சமூக நீதிப் புரட்சி யாளர் மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் அவரது துணை வியார் சாவித்திரிபாய் பூலே ஆகியோரின் திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சமூக நீதிப் புரட்சி யாளர்களுக்கு மரியாதை செலுத்தினார் தமிழர் தலை வர். பின்னர் நிறுவனத்தின் பல்புலன் பேராசிரியர் பெரு மக்கள் மற்றும் மாணவர் களுடன் கலந்து உரையாடி னார். தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் சிலரும் அங்கு பயின்று வருகின்றனர். தமிழ் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச் சியுடன் தமிழர் தலைவரிடம் பேசிட முனைந்தனர் ஒளிப் படமும் எடுத்துக் கொண் டனர். தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை பல் கலைக்கழகமும், மும்பை கல்வி அறக்கட்டளையின் உயர்கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து பணியாற்று வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை கல்வி நிறுவனத் தின் தலைவர் பங்கஜ் புஜ் பல்லிடம் தமிழர் தலைவர் தெரிவித்து, தஞ்சை வல்லத் திற்கு அவசியம் வருகை தர வேண்டும் என அழைப்பை யும் தெரிவித்து விடை பெற் றார்.

தமிழர் தலைவரின் பன் முக ஆற்றல் மற்றும் அணு குமுறையின் சிறப்பு அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு வெளிப்பட்டது. அரசியல் தலைவர்களிடையிலான சூழல், சமூகநீதியாளர் சூழல், நாத்திகப்பெருமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகள், கல்வியாளர் சந்திப்புச் சூழல், இயக்கத் தோழர்களுடன் இருத்தல் என அந்தந்தச் சூழ லுக்கு பொருந்தி, அடிப்படை யில் தந்தை பெரியாரின் பணி நோக்க நிறைவேற்றத்தில் கவனமாக இருக்கும் வித் தகத் தன்மை மிக்க தமிழர் தலைவரின் சுறுசுறுப்பு, செயல்பாடு மிகவும் அரிதா னது. ஒப்புமை காண இய லாத தன்மை வாய்ந்தது. காலையில் சமூகநீதிக் கொள்கை வெளிப்பாட்டு டன் கூடிய சூழல், பிற்பகல் கல்வி நிறுவன பார்வையி டல், கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் என தமிழர் தலைவரின் பன்முகத் தன் மையின் பறைசாற்றலாக ஒரு நாள் நிகழ்வுகள் அமைந் திருந்தன.

எம்.இ.டி. மேலாண்மை நிறுவன பேராசிரியையுடன், எம்.இ.டி. மக்கள் ஊடக பேராசிரியையுடன் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துரையாடுகிறார்.

புத்தாக்க விமான நிலைய பார்வையில்

பிப்ரவரி 10ஆம் நாளன்று இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட புதிய பன்னாட்டு மற்றும் உள் நாட்டு விமான நிலையம், மும்பை நகர பெருமை வாய்ந்த ஒன்றாக விளங்கு கிறது. புதிய விமான நிலை யத்திற்கும் சத்ரபதி சிவாஜி பெயர் சூட் டப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாகாத நிலையில் திறப்பு விழா மட்டுமே நடத்தப்பட்டு, பொது மக் கள் பார்வைக்கு, பயன் பாட்டுக்கு வராத நிலையில் விமான நிலையம் உள்ளது. உரிய அனுமதியுடன் தமிழர் தலைர் மற்றும் உடன் இருந்த தோழர்களுக்கு புதிய விமான நிலையத்தினை பார் வையிடும் வாய்ப்பு கிட்டி யது. மேலை நாட்டு விமான நிலையங்களை பழமையாக் கிடும் வகையில் பிரம்மாண் டமான, புத்தாக்கத் தோற்றத் துடன், வசதிக் கட்டமைப் புடன் விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் மும்பை விமான நிலையத்தின் தோற் றப் பொலிவைப் பார்த்து, இந்திய நாட்டு நிலைமையும் வளமாக இருக்கிறது என பார்வையாளர் யாரும் கருதி விடக் கூடாது என்ற நினைப் பும் விமான நிலை பார்வை யிடலின் போது நெஞ்சில் நிழலாடியது.

மாலை 6 மணியளவில் விடுதிக்கு தமிழர் தலைவர் திரும்பினார். தோழர்களுடன் அடுத்த நாள் நிகழ்ச்சிகள் பற் றிய விசாரிப்பிற்குப் பின்னர், இரவு உணவருந்தி உறங்கச் சென்றார்.

- தொகுப்பு: வீ.குமரேசன்

- தொடரும்

Read more: http://viduthalai.in/page-2/75582.html#ixzz2tp2YPxsc

தமிழ் ஓவியா said...


மோடியின் மோசடிப் பிரச்சாரத்திற்கு பெரும் செலவில் பின்னணிப் பாடகர்கள்! எக்னாமிக் டைம்ஸ் அம்பலப்படுத்துகிறது


புதுடில்லி, பிப்21- மக்கள் மத்தியில் போலி யான மலிவுப் பிரச்சாரத் தைச் செய்வது எப்படி என்பதற்கு மோடியின் பின் னால் உள்ள நிபுணர்கள் குழுவை ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.

தேர்தல் காலம் நெருங்க நெருங்க பாஜக-வினால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி எந்த எந்த வகையில் புதிய புதிய அறிக்கைகளை விட்டு மக்களை ஏமாற்ற முடியும் என அனைத்துத் துறை நிபுணர்களிடமும் ஆலோசனை கேட்டு வரு கிறார்.

தேர்தலை மய்யமாக கொண்டு மூன்று நிலையில் மோடி கவனம் செலுத்தி வருகிறார்.

அது 1. மக்களை ஏமாற்றும் புதிய திட்டங் கள்,

2. அதை மய்யமாக வைத்து பொதுக் கூட்டங் களில் உரையாற்றுவது,

3. அவற்றை அப்படியே ஊட கங்களின் மூலம் மக்களி டம் கொண்டு சேர்ப்பது;

இதுதான் மோடியின் தேர் தல் மோசடித் திட்டம். மோடியின் இந்த மோசடித்திட்டத்திற்கு வலு வூட்ட பல நிபுணர்கள் கொண்டகுழு உள்ளது. இக்குழுவில் பொருளாதார நிபுணர் கொலம்பிய பல் கலைக்கழக பேராசிரியர் அரவிந்த பங்கரியா, பிரபல பங்குவர்த்தக முதலீட்டு ஆலோசகர் குரு ரவி மந்தா, கொள்கை ஆய்வு மய்யக் குழுவில் உறுப்பினராக இருந்த ஜெகதீஷ் திபோராய், மனீஷ் சபர்வால் போன் றோர் உள்ளனர்.

இந்தக்குழுவின் தலை வர் போல் செயல்படும் ஜகதீஷ் பகவதி, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மீது மதிப்பு கொண் டவர். ஆனாலும், அவரது சிந்தனைக்கு மாற்றுக் கருத்து கொண்டவர். இதில் பங்கரியா பாது காப்பு மற்றும் அயலுறவுத் துறை விவாகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவராம். இந்தக்குழு தொடர்ந்து இந்தியப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மோடிக்கு ஆலோசனை அளித்து வருகிறது. இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ஒருவர் இந்தக் குழுவின் ஆலோச னையின் பேரில் நரேந்திர மோடியின் உரைகள் தயா ரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்கள் அனைவரும் மோடியின் தேர்தல் களத் தின் பின் புலத்தில் உள்ளனர்.

இந்தக் குழு தற்போது நாடு எதிர்நோக்கி இருக் கும் முக்கிய பிரச்சினை யான மின்சாரத்தை முதன் மையாக எடுத்துள்ளது.

24 மணி நேரம் மின்சாரம் என்பது சாமானியர்களின் கனவாகும். இதை மனதில் கொண்டு மின்சாரம் மற் றும் இந்த பிரச்சினையை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது, இதன் மூலம் தன்னை பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடப் போகும் ஒருவராக காட்டிக் கொள்ள நரேந்திர மோடிக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். நிறைவேற்ற இயலாதவை! மேலும் இது குறித்து ஆங்கிலப் பத்திரிகை கூறு வது மோடியின் வளர்ச்சி பற்றிய பேச்சுக்களின் பின் புலத்தில் பொருளாதார, தொழில்வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து மிகப் பெரிய ஆலோசனைக்குழு வின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இவர்களின் ஆலோ சனைப்படியே நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்த உரையை அனைத்து மேடை களிலும் பேசி வருகிறார்.

பொருளாதார நலிவில் சிக்கியுள்ளதாக மாயையை முதலில் தனது பேச்சால் உருவாக்கி, அதன் பிறகு அதற்கான திட்டங்கள் இவை என்று மக்களிடம் கூறி வாக்காளர்களை கவர்ந்து (ஏமாற்றி) வருகிறார். உண்மையில் மோடிக்கு பின்புலத்தில் நிற்கும் நிபு ணர்களின் ஆலோசனைகள் பெரும்பாலானவை நிறை வேற்ற இயலாதவையா கவே உள்ளன .

- (நன்றி: எக்னாமிக் டைம்ஸ் நாள்:19.2.2014)

Read more: http://viduthalai.in/e-paper/75683.html#ixzz2u0MywW4H

தமிழ் ஓவியா said...


முடியாது


மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்றமடையவோ முடியவே முடியாது.

(குடிஅரசு, 7.5.1933)

Read more: http://viduthalai.in/page-2/75675.html#ixzz2u0NcsguV

தமிழ் ஓவியா said...


மதத்தைப் பற்றி மதவாதி!


இந்துமதம் பாசிசத் தன்மை கொண்டது. அய்யாயிரம் ஆண்டுகளாக இந்துமதம் மக்களை அடிமைப்படுத்தியே வந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டத் தகாதவர்களாகக் கருதி, அவர்களை மனிதனைவிட மிகக் கேவலமாக நடத்தி வருகிறது.

ஜாதிஇந்து என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்தினர். இன்றும் அவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது.

ஜாதி இந்துக்களின் தெருவிலுள்ள கிணற்றிலிருந்துகூட தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றுங்கூட தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. இந்துமதம் பெண்களை ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தி வருகிறது. இவற்றை யெல்லாம் நான் எதிர்க்கிறேன். ஆண்களைப் போன்று பெண்களையும் சமமாக கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை பார்ப்பானும் தாழ்த்தப்பட்டவனும் ஒன்றே.

மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற அனைத்து கலாச்சாரத்தையும், இதிகாசங்களையும் அழிக்க வேண்டும்; அவற்றிற்குத் தீயிட வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளவர் புனேயில் யோகா நிலையம் வைத்து நடத்தி வரும் ரஜனீஷ். அவரும் ஒரு மதவாதியே என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: ஆன் லுக்கர், டிசம்பர் 15 (1970

Read more: http://viduthalai.in/e-paper/75712.html#ixzz2u0OaWbbg

தமிழ் ஓவியா said...

கடவுள்களின் தலைஎழுத்து

முருகனும் - கணபதியும்: (பிரம்மனை நோக்கி) அண்டசராசரங்களையும் படைத்த பிரம்ம தேவரே! யானை முகத்தையும், ஆறு முகத்தையும் தாங்கிக் கொண்டு நாங்கள் படும்பாடு உமக்குத் தெரியாதா? ஏனிந்த சிரமம் எங்களுக்கு?



பிரம்மன்: மைந்தர்காள்! உங்களுக்குத்தானா அந்தக் கஷ்டம்? என்னைப் பாருங்கள் - நான்கு தலைகளும் எட்டு கைகளுமாக நானுந்தான்.... என்ன செய்வது? எல்லாம் தலை எழுத்தப்பா, தலை எழுத்து!

- திராவிட நாடு, 17.3.1946

Read more: http://viduthalai.in/e-paper/75712.html#ixzz2u0Oum1cA

தமிழ் ஓவியா said...


நாஸ்திக வாதம்! (கிளிக்கண்ணி மெட்டு)


1. கடவுள் எனும் சொல் வெறும்
கற்பனைச் சொல் ஆகுமடா
திடமுடன் டுடுட்டு வென்றால் - மனிதா!
தெரியும் பொருளே தடா!

2. கல்லில் ஒரு கடவுள்
கருத்தில் ஒரு கடவுள்
சொல்லில் ஒரு கடவுள் - மனிதா!
தொட்டதெல்லாம் கடவுள்

3. அர்த்தமில்லாக் கடவுள்
அனர்த்தஞ் செய்யுங் கடவுள்
மெத்த இம் மேதினியில் - மனிதா!
வீண் வீணென்றே உமிழடா

4. எட்டாக் கடவு ளென்று
எட்டிப் பிடிப்ப தன்றோ?
முட்டாள் ஆஸ்திகர்கள் - மனிதா!
முற்றும் முரண் பேசுவரே

5. உழைப்பு செல்வம் காலத்தை உண்டு சும்மா இருந்திடும்
பிழைப்புத்தான் கடவுட்கென்றால் - மனிதா!
பிசகென்ன நாஸ்திகத்தில்!

6. ஏழையுலகை வாட்டிடும்
ஈனக் கடவுளைத்தான்
ஆழக்குழி வெட்டியே - மனிதா!
ஆழ்த்திப் புதைத்திடடா

7. அறிவியல் அன்றும் இன்றும்
ஆத்திகம் காத்ததில்லை
குறி, சட்டம், ஸ்தாபனத்தால் - மனிதா!
கொடும் மதம் காத்ததடா

8. அரி சிவன் அல்லா பிரம்மம்
அருஞ் சமரிட்டதாலே
சொரிந்தனர் மக்கள் ரத்தம் - மனிதா!
சொல்லவும் கொதிக்குதடா

9. அடிமை வறுமை பஞ்சம்
அநியாயம் மோசம் நாசம்
மிடிமையும் கடவுள் மேலே - மனிதா
வேர்க் கொள்ளக் கண்டோமடா

10. மனிதன் மனிதனாக!
மதங்கள் கடவுள் வீழ்க!
புனிதப் பொதுவுடமை - மனிதா!
புது உலகம் வாழ்ந்திடவே.

Read more: http://viduthalai.in/e-paper/75711.html#ixzz2u0P5WXzY

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலின் பொன்மொழிகள்

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியை பிரித்து எடுத்துவிடும் மதங்கள், அவற்றின் கொள்கைகள், கோட் பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப் போடுங்கள். சிந்திக்காதே - அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் - எந்த வடிவில் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.
அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத் தனம் வேறு கிடையாது. அறிவுத்தாய் பெற்றெடுத்த அருங் குழந்தையின் பெயர் சுதந்திரம், உரிமை, விடுதலை என்றெல்லாம் கூறலாம்.


Read more: http://viduthalai.in/e-paper/75711.html#ixzz2u0PJdH4u

தமிழ் ஓவியா said...


கட்டிப்பிடி சாமியார் அமிர்தானந்தமயி திடுக்கிடும் தகவல்கள்!


கேரளாவைச் சேர்ந்த கட்டிப்பிடி சாமியார் அமிர் தானந்தமயியிடம் உதவியாள ராக இருந்த கெயில் ட்ரெட் வெல் என்ற காயத்ரி, ஹோலி ஹெல் (Holy Hell) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளி யிட்டுள்ளார்.

அந்த புத்தகத் தில் அமிர்தானந்தமயியின் தகிடுதத்தங்கள் பலவற்றை யும் அம்ப லப்படுத்தி யுள்ளார். அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் பணத்தை தங்க மாக மாற்றி அவரது உற வினர்கள் எப்படியெல்லாம் செல் வச் செழிப்புடன் இருக்கின்றனர் என்றும், ஏதேனும் தவறு செய்தால் அமிர்தானந்தமயி அடிப்பது, கடிப்பது போன்ற தண்டனைகள் கொடுப்பார் என்றும் காயத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் அமிர்தானந்தமயியின் ஆண் சீடர்களால், தான் பாலியல் வன்கலவிக்கு உள்ளான தாகவும் கெயில் ட்ரெட் வெல் என்ற காயத்ரி தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Read more: http://viduthalai.in/page1/75661.html#ixzz2u0jq4yFP

தமிழ் ஓவியா said...


கா. நமச்சிவாயனார்


தமிழ் உலகில் பெரும் புலமைக்குச் சொந்தக் காரர் வரிசையில் கா. நமச்சிவாயனார் அவர் களுக்குப் பெருமை மிக்க இடம் உண்டு.

திராவிடர் இயக்கம் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியும் திராவிடர் திரு நாள் பொங்கல் என்றும் மக்களிடையே பரப்பி தமிழர் பண்பாட்டுத் திசை யில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தாகும்

அந்தக் கால கட்டத் தில் (1934இல்) தமிழின் உயர்வினை கா. நமச் சிவாயனார் கீழ்க்கண்ட வாறு பாடுகிறார்.

தேனினும் இனிய நாத செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குதென் மொழியே
தானியல் சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!
என்று தமிழுணர்வின் பெருமையைப் பாடினார் கா. நமச்சிவாயனார்.

அவர் குறித்துத் தந்தை பெரியார் கூறும் ஒரு தகவல் - அந்தக் கால கட்டத்தில் தமிழின் - தமிழரின் நிலை எப்படி இருந்தது என்பதனை விளக்கவல்லதாகும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ் கிருத புரொஃபசர் வாங் கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரொஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியா சம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ் கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ் கிருத புரொஃபசருக்கு ரூ.350 சம்பளம்.

தமிழ்ப்பண்டிதருக்கு 75 ரூபாய்தான்சம்பளம் சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர்- புரொஃபசர்; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு கா.நமச்சிவாய - முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்த போது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத் தான் ஞாபகம் - அதே நேரத்தில் அங்கு சமஸ் கிருத புரொஃபசராக இருந்த திரு. குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கிய சம் பளம் சுமார் ரூ.300க்கும் மேல்; ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு பனகல் ராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்! என்றும் சொன்னார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன் மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார் என்று தந்தை பெரியார் எழுதினார்.

(விடுதலை 15.2.1960)

இது ஒரு பானை சோற் றுக்கு ஒரு பருக்கைப் பதம்!

குறிப்பு: இன்று பெரும் புலவர் கா.நமசிவாய (முதலி யார்) பிறந்த நாள் (1876).

- மயிலாடன் -20-2-2014

Read more: http://viduthalai.in/page1/75655.html#ixzz2u0kQ3QPl

தமிழ் ஓவியா said...

வைரம் எவ்வளவு ஆழத்தில் இருந்து கிடைக்கிறது?

வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா? ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப் போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.

ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக் கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மைல் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.

ஆனால் பூமிக்கு அடியில் 90 மைல் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மைல் தொலைவில் வெறும் நிலக்கரி மட்டுதான் கிடைக்கும்.

Read more: http://viduthalai.in/page1/75626.html#ixzz2u0lypyFZ

தமிழ் ஓவியா said...


கல் மீனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?


கல் மீன் எதிரியின் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக தரைமட்டத்தில் வாழும். இவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாது. மிகவும் சோம்பேறி மீன். அசைவற்றுக் அப்படியே கல்லு மாதிரி இருப்பதால் இப்பெயர் வந்தது.

இந்தக் கல் மீன் மிகவும் சாந்தமானது. ஆனால் இதுகல் மாதிரி இருப்பதால் அடையாளம் தெரியாமல் யாராவது இதை சீண்டி விட்டால் நைசாக தன் முதுகுப்புற முள்ளை அப்படியே விரிக்கும். இந்த முள் நாம் உடலில் குத்தும் போது விஷத்தை உடலில் பாய்ச்சிவிடும். விஷம் உடலில் ஏறியதும் பொறுக்க முடியாத வலி ஏற்பட்டு பயங்கரமாக கத்துவர்.

வாயில் நுரை தள்ளும். பனிரெண்டு மணி நேரம் இந்த வலி நீடிக்கும். தூக்க மருந்து வலி நிவாரண மருந்து எது கொடுத் தாலும் பலன் இருக்காது. கடித்த இடம் பயங்கரமாக வீங்கிவிடும். கடிபட்டவர் நிச்சயமாக இறந்துவிடுவார்.

Read more: http://viduthalai.in/page1/75630.html#ixzz2u0noA8sU

தமிழ் ஓவியா said...

அதென்ன? ரோச்சி எல்லை!

ஒரு கோளினுடைய துணைக் கோளானது, அந்த கோளைக் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே நெருங்க முடியும் என்பதை 1850ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டு கணிதவியல் அறிஞர் எட்வர்டு ரோச்சி இதை கணிதவியல் ரீதியாக நிரூபித்தார். இது ரோச்சி எல்லை என அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு கோளிற்கும் ரோச்சி எல்லை உண்டு. அது அந்தந்தக் கோளின் சுற்றுவட்டத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக இருக்கும். சனிக் கோளின் ரோச்சி எல்லை அதன் மய்யத்தி லிருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த தூரத்தைக் கடந்து உள்ளே செல்லும் துணைக் கோள்கள் வெடித்துச் சிதறி, ஒரு வட்டத்தை உருவாக்கு கின்றன. ஆனால் புவியிலிருந்து செல்லும் செயற்கைக் கோள்களுக்கு ரோச்சி எல்லை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page1/75630.html#ixzz2u0nwigtX

தமிழ் ஓவியா said...

மனித குருதி நிறம் என்ன?

மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்லது அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

Read more: http://viduthalai.in/page1/75628.html#ixzz2u0o8kLVw

தமிழ் ஓவியா said...


உலகின் மிகக் கொடிய விஷமுள்ள பூச்சி!


உலகின் மிக கொடிய விஷமுள்ள பூச்சி என்றதும் அது எங்கோ அடர்ந்த ஊசியிலைக்காடுகளிலோ, மலை களிலோ இருக்கும் என்று உங்கள் எண்ணம் ஓடினால்.. உங்கள் ஊகம் தவறு ! மிகக் கொடிய விஷமுள்ள பூச்சியினம் உங்கள் வீட்டு கொல்லைப்புறத்திலும் இருக்க வாய்ப்புள்ளது ! முதலில் பூச்சி என்றால் என்ன ?

6 கால்களும் 3 உடல் பாகங்களும் உடையதுதான் பூச்சி என்றழைக்கப்படுகிறது ! சரி, அந்த மிகக் கொடிய விஷமுள்ள பூச்சி எது தெரியுமா ? எறும்பு ?!

ஆம் எறும்பேதானாம் ! ஆனால் நாம் சாதாரனமாக பார்க்கும் இந்த எறும்பு இல்லை. அதன் பெயர் ஹார்வஸ்ட் ஆண்ட் என்றழைக்கப்படும் அறுவடை எறும்பு ஆகும்.

உருவத்தோடு சதவீத அடிப்படையில் ஒப்பிடுகையில் ஒரு தேனீக்கு இருக்கும் விஷத்தை விட இவ்வகை எறும்புகளுக்கு அதிக விஷம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

எறும்புகள் கடிப்பதும்,கொட்டுவதும் இரு வெவ்வேறு நடவடிக்கைகளாக இருப்பது கவனிக்கத்தக்கது. சில எறும்புகள் கடிக்கும் ஆனால் கொட்டுவதில்லை; சில எறும்புகள் கடித்து விட்டு கடித்த இடத்தில் விஷத்தை பீய்ச்சியடிக்கின்றன.

சில எறும்பு வகைகள் கொடுக்கு களால் கவ்விப்பிடித்துக்கொண்டு கடித்த பாகத்தில் தொடர்ச்சி யாக விஷத்தை செலுத்தும் பழக்கம் கொண்டவையாக இருக்கின்றன.

ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்: சுமார் இரண்டு கிலோ எடையுள்ள ஒரு எலியை இவ்வகை எறும்புகள் பன்னிரண்டு முறை கொட்டினால் இறந்து விடுமாம்.

Read more: http://viduthalai.in/page1/75628.html#ixzz2u0oEnYAL

தமிழ் ஓவியா said...


விண்வெளிக்கு எளிய வழி! ஏழு மணி நேரத்தில் செல்லலாம்


சற்று தொலை தூர ஊர் என்றால் பேருந்து, ரயில் பயணத்திலேயே 7,8 மணி நேரம் ஆகும்.

ஆனால் சமீபத்தில் பூமியில் இருந்து விண்வெளியில் வீரர்கள் வெறும் 6 மணி நேரப் பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து சாதனை படைத்து இருக்கிறார்கள். இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள், ஓர் அமெரிக்க விண்வெளி வீரர்தான் அந்தச் சாதனை யாளர்கள்.

கஸகிஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இவர்களின் சோயூஸ் காப்சூல்ஸ்' விண்வெளிச் சுற்றுப்பாதை அவுட் போஸ்ட்டான சர்வதேச விண்வெளி நிலையத்தை 6 மணி நேரத்துக்குள்ளாக அடைந்து விட்டது. வழக்கமான இந்த விண்வெளிப் பயணத்துக்கு ஆகக்கூடியது 51 மணி நேரம்.ஆனால் ஒரு குறுக்கு வழி'யில் சென்றதன் மூலம் 45 மணி நேரத்துக்குள் முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தை வீரர்கள் அடைந்துவிட்டனர்.

எக்ஸ்பிரஸ் ரூட் என்ற புதிய வழியின் மூலம்,அமெரிக்க விண்வெளி வீரர் கிரிஸ் காஸ்டி,ரஸ்ய விண்வெளி வீரர்கள் பாவல் வினோகி ரடோவ்,அலெக்ஸ்சாண்டர்,மிருஸ்கின் குழுவின் சோயூஸ்கேப்சூல்ஸ்,வெறும் 5 மணி நேரம் 45 நிமிடங்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தைத் தொட்டது. அங்குள்ள பாய்ஸ் மாட் ஊளில் பார்க்' ஆனது. அய்ந்தரை மாத விண்வெளி ஆய்வு பயணமாக இக்குழு சென்றுள்ளது.

இதற்கு முந்தைய விண்வெளிப் பயணக் கலங்கள் அனைத்துமே -தோது நாசாவின் ஓய்வு பெற்ற' ஸ்பேஸ் சட்டல்களாக இருக்கட்டும்-சர்வேதேச நிலையத்தை எட்ட குறைந்த பட்சம் இரண்டு நாள்கள் எடுத்துக் கொண்டி ருக்கின்றன.

இப்படி விரைவாக சர்வதேச விண்வெளி நிலையத்தை எட்டியதால்,நெருக்கடியான விண்கலத்தில் இரண்டு நாள்களுக்கு அடைபட்டுக் கிடக்கும் சிரமத்தில் இருந்து விடுதலை என்று நிம்மதி பெருமூச்சு விடு கிறார்கள், இந்த விண்வெளி வீரர்கள்!

Read more: http://viduthalai.in/page1/75627.html#ixzz2u0oPfxww

தமிழ் ஓவியா said...

அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம்


இந்தியாவின் நிலைப்பாடு என்ன? மாநிலங்களவையில் கவிஞர் கனிமொழி கேள்வி

புதுடில்லி, பிப்.20- அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலைப் பாடு என்ன என்று கவிஞர் கனிமொழி, மாநிலங்கள வையில் உரையாற்றுகை யில் கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களவையில் கவிஞர் கனிமொழி உரை யாற்றுகையில், தமிழக மீன வர்களை இலங்கைக் கடற் படையினர் நடுக்கடலில் இந்திய எல்லையில் தாக் கப்பட்டு வருவது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக இந்த அவையில் இந்தக் கூட்டத் தொடர் முழுவதுமே நாங் கள் பேசவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அனு மதி கேட்டு வருகிறோம்.

ஆனாலும், இது குறித்து பேச எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் அதாவது மார்ச் மாதம் அய்க்கிய நாட் டின் மனித உரிமை கவுன் சிலில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர் மானம் கொண்டு வரவிருக் கிறது. அதுகுறித்து இந்தியா வின் நிலைப்பாடு என்ன? என்பதைப்பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

இவ்வாறு குறிப்பிட்ட கவிஞர் கனிமொழி அவர் கள், மேலும் உரையாற்று கையில், தெரு வியாபாரி கள் மசோதா உள்ளிட்ட இரண்டு மசோதாக்களை தி.மு.க. ஆதரிக்கிறது என்றும், அதே நேரத்தில் மாற்றுத் திறனாளி கள் மசோதாவை எதிர்க்கி றோம் என்றும் அந்த மசோ தாவை நிலைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என் றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் கமல் நாத் இதற்கு பதிலளித்து உரையாற்றுகையில், உறுப்பினர் கவிஞர் கனி மொழி, பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப் பட்டு வருவதாக தெரிவித் தார். மேலும் அய்.நா. மன் றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசு தனது நிலையை தெரிவிக்கவேண்டும் என் றும் வலியுறுத்தினார்.

தமிழக மீனவர்கள் தாக் கப்படுவது குறித்து உறுப் பினர்களின் வேதனையை தாமும் பகிர்ந்து கொள்வ தாக நாடாளுமன்ற விவாக ரத்துறை அமைச்சர் கமல் நாத் கூறினார்.

மீனவர்கள் தாக்கப்படு வதை தடுக்கவும், சிறையி லிருந்து மீனவர்களை விடு விப்பதற்கும், இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் கமல்நாத் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/75613.html#ixzz2u0opAM6Y