Search This Blog

19.3.10

அன்னை மணியம்மையார் வரலாற்று நூல் வெளியீடு - ஒரு பார்வை

அன்னை மணியம்மையார் வரலாற்று நூல் வெளியீடு:
சுடர்விடும் மணிமகுடம்!

நேற்று (16.3.2010) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்டது.

அன்னையார் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று நூல் வெளிவந்ததுதான் அந்தச் சுடர்விடும் மகுடமாகும்.

சுயமரியாதை இயக்கம்பற்றி முதன்முதலாக ஆய்வு செய்து எம்.லிட்., பட்டமும், தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சியின் உள்கட்சிப் பூசல்பற்றி ஆய்வு செய்து பிஎச்.டி., பட்டமும் பெற்ற பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் அவர்கள் எழுதிய தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் எனும் தலைப்பில் 512 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலின் வெளியீட்டு விழா என்பது ஆக்கப்பூர்வமானது.

கடைசிவரை கறுப்பு மெழுகுவத்தியாகவே இருந்து மறைந்த அந்தத் தாய்க்குள் தமிழர்தம் வாழ்க்கை மூச்சான தந்தை பெரியார் அவர்களை நூறாண்டு வாழ வைக்கவேண்டும் என்ற வெறியும், தொண்டு செய்து பழுத்த அந்தப் பழத்துக்குத் தொண்டு செய்யவேண்டும் என்ற வைராக்கியமும், எந்த நிலையிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளக்கூடாது என்ற திட்பமும், எளிமை என்றால் என்ன என்பதற்கான விளக்கமும் புதைந்து கிடக்கக் கூடியன!

இந்த நூலில் அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததன்மூலம் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உதாரண குணங்களும், புதிய தலைமுறையினர் கடைப்பிடிக்கவேண்டிய கோட்பாடுகளும், பொதுத் தொண்டாற்ற ஆசைப்படுவோர் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுகலாறுகளும் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

ஓர் இயக்கத்துக்காகச் செய்யப்பட்ட ஆக்கப் பணி என்பதைவிட, சமுதாய மேம்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு கருவூலம் என்று இந்த நூலைச் சொல்லலாம்.

விழாவில் நிறைவுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மிகச் சரியாகச் சொன்னதுபோல இந்த நூலை உருவாக்கித் தந்ததன்மூலம் முனைவர் மங்கள முருகேசன் அவர்கள் எங்கள் இயக்கச் சுமையைப் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது உண்மையே!

சுயமரியாதை இயக்கம்பற்றி ஆய்வு செய்து, அதன்பின் வகுப்புரிமை முன்னோடி எஸ். முத்தையா முதலியார் அவர்களின் வரலாற்று நூலை எழுதி, அதன் தொடர்ச்சியாக இந்த நூலையும் அவர் எழுதியதன்மூலமாக திராவிட இயக்க வரலாறு என்பதில் மிக முக்கியமான பணிகளை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் மிகப் பொருத்தமாகவே கணித்துக் கூறினார்.

இந்த வரலாற்றுப் பணிக்காக முனைவர் மங்கள முருகேசன் அவர்களை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும் என்று தமிழர் தலைவர் சொன்னதை தமிழ்நாடே வழிமொழியும்!

பேராசிரியர் முனைவர் மு. தவமணி

திராவிடர் கழக மகளிரணி ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியின் வரவேற்புரையை சென்னை எத்திராஜ் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் மு. தவமணி வழங்கினார்.

தந்தை பெரியார் அவர்களின் ஆயுள் நீட்சிக்கு அம்மையார் காரணமாக இருந்ததோடு அல்லாமல், அய்யா அவர்களின் மறைவிற்குப் பிறகு கழகத்தையும் கட்டிக் காத்த அந்தப் பாங்கைப் பாராட்டிப் பேசினார்.

முனைவர் கு.ம. இராமாத்தாள்

விழாவுக்குத் தலைமை வகித்தவர் மேனாள் மகளிர் ஆணையத் தலைவர் பேராசிரியை முனைவர் கு.ம. இராமாத்தாள் ஆவார்கள்.

திராவிட இயக்கக் கொள்கையில், தன்மான இயக்கச் சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த அம்மையார் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. அவருடைய மகனுக்குப் பெயர் இராவணன் என்பதாம்.

நூலிலிருந்து அன்னை மணியம்மையார் பாரதிபற்றி கூறிய கருத்தினை எடுத்துக்காட்டி, பாரதிதாசனை மறைத்துவிட்டு, பாரதியாரை பெண்ணுரிமைக் கவிஞர் என்று கூறுவோர்க்குச் சாட்டையடி கொடுத்தார்!

ஒன்றே கடவுள் என்று கூறிக்கொண்டு, சர்வசக்தி வாய்ந்தவன் அவன் என்றும் பேசிக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள கடவுள்களுக்கெல்லாம் சக்தியில்லை என்று கருதி திருப்பதிக்கும், சபரிமலைக்கும் செல்லும் தமிழினப் பக்தர்களை உண்டு இல்லை என்று கூறி வெளுத்து வாங்கினார்.

சட்ட எரிப்புப் போராட்டத்தில் திருச்சி சிறையில் மாண்ட கருஞ்சட்டைத் தோழர்கள் மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை இராமசாமி ஆகியோரின் உடல்களைக் கொடுக்க மறுத்த சிறையதிகாரிகளுடன் போராடி, உடலை மீட்டு திருச்சியில் மாபெரும் இறுதி ஊர்வலத்தை நடத்திக்காட்டிய வீராங்கனை அன்னை மணியம்மையார் அவர்களுக்கு நிகர் யார் என்ற அவர்களின் கேள்வி பார்வையாளர்களை உணர்வுபெறச் செய்தது.

நூலாசிரியர், பேராசிரியர்
முனைவர் மங்கள முருகேசன்

மிகப்பெரிய செல்வத்துக்குச் சொந்தக்காரராக, பெரியாரின் துணைவியார் என்ற அந்தஸ்துக்கு உரியவராக இருந்த அம்மையார் எளிமையின் இலக்கணமாக கடைசிவரை வாழ்ந்து காட்டிய பண்பாட்டுக்கு இணையாக இன்னொருவரைக் கூற முடியாது. 95 ஆண்டு காலம் பெரியாரை வாழ வைப்பதற்காக தம்மைப்பற்றி நினைக்காமல் 58 ஆண்டுகளுக்குள்ளேயே தம் வாழ்வை முடித்துக்கொண்ட தியாக தீபம் என்று கூறி பல எடுத்துக்காட்டுகளை நூலாசிரியர் விளக்கினார்.

கவிஞர் கனிமொழி எம்.பி.,

மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி நூலினை வெளியிட்டு அரியதோர் ஆய்வுரையை வழங்கினார்.

பெரியார் திடலுக்குள் நுழைவது தாயின் கர்ப்பத்துக்குள் மீண்டும் செல்லும் உணர்வினைப் பெறுகிறேன் என்று எடுத்த எடுப்பிலேயே அவர் கூறியபோது நெகிழ்ந்துபோய் அனைவரும் கரவொலி எழுப்பினர்.

கவிஞர் கனிமொழி அவர்களுக்கு அன்னை மணியம்மையார், ராஜாத்தி அம்மாள், சிறுமி கனிமொழி ஆகியோர் உள்ள நிழற்படத்தினை நினைவுப் பரிசாக அளித்தார் தமிழர் தலைவர். அதனையொட்டி கவிஞர் கனிமொழி மிக உருக்கமுடன் இன்றைக்கு 35 ஆண்டுகளுக்குமுன் நடந்த அந்த நிகழ்வை நெக்குருகக் கூறினார்.

நெருக்கடி நிலை என்ற ஓர் இருண்ட காலம். திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க. முன்னணித் தலைவர்களும், தொண்டர்களும் சிறையில் தள்ளப்பட்ட காலகட்டம் அது.

வருமான வரித் துறையினர் கலைஞர் அவர்களின் வீட்டுக்குள் திபுதிபு என்று நுழைவார்கள். ஒவ்வொரு இடத்தையும் துருவித் துருவிப் பார்ப்பார்கள். பூந்தொட்டிகளைக்கூட ஆராய்வார்கள்.

கனிமொழியின் தாயாரை வருமான வரி அலுவலகத்துக்கும், வீட்டுக்குமாக அலைய விடுவார்கள். குடைந்து குடைந்து கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள்.

இந்தச் சூழ்நிலையில், ஒரு நாள் ஓர் அம்மையார் கனிமொழியின் வீட்டு வாயில்முன் வந்து நின்றார். அதுபற்றி கனிமொழி கூறினார். நான் விளையாடிக் கொண்டிருந்தேன். வீட்டில் யாரும் இல்லையா என்று அவர் கேட்டார். வீட்டில் அம்மா இருக்கிறார்கள் என்று சொன்னேன். உள்ளே சென்றார்கள். என் தாயாரைச் சந்தித்தார்கள். நடந்த சம்பவங்களையெல்லாம் தான் அறிந்து வேதனைப்பட்டதாகவும் கூறி தைரியத்தைக் கொடுத்தார்கள். ஆதரவாகப் பேசினார்கள். அந்த நேரத்தில் என் அன்னையாருக்கு அது பெரும் ஆறுதலாக, புண்ணுக்கு மருந்தாக இருந்தது. அந்த அம்மையார் யார் என்றால், அவர்கள்தான் அன்னை மணியம்மையார் என்று கவிஞர் கனிமொழி கூறியபோது பார்வையாளர்கள் கண்களில் உணர்ச்சித் திவலைகள் ததும்பி வழிந்தன.

இந்த நிகழ்ச்சிக்கு நான் செல்லுவதாக என் தாயார் ராஜாத்தி அம்மாவிடம் சொன்னபோது, இந்த நிகழ்ச்சியை எனக்கு நினைவூட்டினார்கள். அப்பொழுது என் தாயாரின் கண்கள் கலங்கின என்றார் கவிஞர்.

புரட்சித்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் அல்லவா? பெண்களின் யதார்த்தமான நிலையைப்பற்றி கவிஞர் கனிமொழி ஆழமான கருத்துகளை எடுத்து வைத்தார்.

இன்றைய சமூக அமைப்பில் பெண்கள் என்னதான் படித்திருந்தாலும், பதவிகளைப் பெற்றிருந்தாலும், பொருளாதார வசதிகளைப் பெற்றிருந்தாலும் குடும்ப உறவு என்ற கட்டினைத் தாண்டி வெளியே செல்ல முடியாது என்பதுதான் நிதர்சனம்.

எதை வேண்டுமானாலும் உடைக்கலாம்; ஆனால், குடும்பக் கட்டு என்பதை மட்டும் உடைக்க முடியாத நிலைதான் இன்றுவரை.

சமுதாயம் எப்படி இருக்கிறது?

ஒரு பெண்ணானவர் ஒரு சாமியாரைச் சந்திக்கப் போகலாம்; சாமியாரின் கை, கால்களை அமுக்கிவிடலாம்; அதற்கு நம் குடும்பங்கள் தாராளமாக அனுமதியளிக்கும்.

ஒரு பெண்ணானவர் ஒரு மனநல மருத்துவரை சந்திக்கவேண்டும் என்று விரும்பினால், அதற்கான அனுமதி சுலபமாகக் கிடைத்துவிடாது.

கலாச்சாரத்தின் காவலர்கள் என்று பெண்களைக் கூறுவார்கள். ஆனால், அந்தக் கலாச்சாரத்தில் விற்பனைப் பண்டம் யார் என்றால், நம் நாட்டுப் பெண்கள்தான்.

கடவுள், மதம், பக்தி, சாமியார் என்று எடுத்துக் கொண்டாலும், இவற்றில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

இத்தகு சமுதாயத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணான அன்னை மணியம்மையார் அவர்கள், ஒரு சமூகப் புரட்சி இயக்கத்துக்குத் தலைமை தாங்கியது என்பது சாதாரணமானதல்ல.

சமுதாயத்தின் பல வகை தடைகளை உடைத்து பெண்களுக்கான உரிமைகள் பற்றிப் பேசவும், போராடவுமான ஒரு நிலையை உண்டாக்கியது திராவிட இயக்கமே என்றார் கவிஞர் கனிமொழி.

தந்தை பெரியார் அவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை. அவர் உரையையும் நான் கேட்டதில்லை. ஆனால், பெரியார் அவர்களின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் நான் வரித்துக் கொள்வதற்குக் காரணமாக, ஊக்கச் சக்தியாக இருந்தது ஆசிரியர் அய்யா அவர்கள்தான் என்று மிகுந்த நன்றி உணர்ச்சியோடு சொற்களைப் பயன்படுத்தினார் கவிஞர் கனிமொழி.

அவர் உரை அய்யாவின் சித்தாந்த பார்வையில் தோய்ந்த கனமான கருத்து மழையாக இருந்தது என்றே சொல்லவேண்டும்.

தமிழர் தலைவர் கி. வீரமணி

நிறைவுரையை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் வழங்கினார்.

கவிஞர் கனிமொழியின் உரையைப் பாராட்டிய ஆசிரியர் அவர்கள் இன்றைய தலைமுறையினருக்கும், வரும் தலைமுறையினருக்கும் பாலமாக இருக்கக் கூடியவர் என்று அவரைக் குறிப்பிட்டார்.

நெருக்கடி காலத்தைப்பற்றி இங்கு பலரும் பேசினார்கள். அது ஓர் இருண்ட காலம். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்த காலகட்டம் அது.

ஆனாலும், பொதுத் தொண்டாற்றுவோருக்கு அது ஒரு பொற்காலம் என்பது எனது கருத்து. தொண்டறத்தை மேற்கொள்பவர்கள் இத்தகைய அனுபவப் பாடங்களைக் கற்கத்தான் வேண்டும் என்று புதிய கோணத்தில் கருத்துகளை எடுத்து வைத்தார்.

பாலியல் உரிமைபற்றி பெரிதாகப் பேசப்படும் காலகட்டம் இது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பதுபற்றி சர்ச்சைகள் எழுந்துள்ள காலகட்டம் இது.

பாலியல் நீதி கிடைத்தாலும், சமூகநீதி கிடைக்காத ஒரு அவலநிலைதான் இப்பொழுதும். அரைக் கிணறு இப்பொழுது தாண்டப்பட்டுள்ளது. மீண்டும் கதவு அடைக்கப்படுமோ என்ற அய்யப்பாடும் எழுந்துள்ளது. அப்படி மூடப்பட்டால், அந்தக் கதவுகளை உடைக்கும் கரங்களாக கனிமொழிகள் இருப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

இந்த நாட்டிலே ஆண்களுக்கு அடையாளம் உண்டு; பெண்களுக்கு அடையாளம் உண்டா? . இது எனது ஆடு, எனது மாடு என்று சொல்வதுபோலத்தான் ஆண்கள் பெண்களைக் கருதுகிறார்கள், சொல்லவும் செய்கிறார்கள்.

ஆண்களால் பெண்களுக்கு உரிமை கிடைக்கவே கிடைக்காது என்றார் தந்தை பெரியார். பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? என்று இயற்கையான சூழலில் வினாவை எழுப்பினார்.

அப்படியென்றால், பெரியாரும் ஆண்தானே? அவர் பெண்களுக்காகப் பாடுபட்டது எப்படி என்று வானொலி நிலையத்தில் உதவி இயக்குநராக இருந்த ஒரு பெண்மணி கேட்டபோது,

பெரியார் ஆண்தான்; ஆனால், அவர் ஒரு சமுதாய விஞ்ஞானி என்று தாம் பதிலாகச் சொன்னதை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார்.

கற்பழிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக பாலியல் தாக்குதல் என்ற சொல் பயன்படுத்தப்படவேண்டும் என்று மத்திய உள்துறை முடிவு செய்துள்ளதுபற்றி கூறிய திராவிடர் கழகத் தலைவர் இது தந்தை பெரியார் கருத்துக்குக் கிடைத்த வெற்றி என்று கூறினார்.

கற்பு என்று சொல்லி அது பெண்ணுக்கு மட்டும்தான் உண்டு என்று கூறி, கற்பின் பெயராலும் பெண்களை ஒடுக்கி வந்தார்கள்.

கற்பைப்பற்றி தந்தை பெரியார் கூறிய ஆழமான கருத்து இந்த இடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியது பொருத்தமானது.

கற்பு என்பதற்குப் பதிவிரதம் என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலிவு கொண்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்டதனாலும் பெண்கள் அடிமையாவதற்கும், புருஷர்கள் மூர்க்கர்களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை.

(நூல்: பெண் ஏன் அடிமையானாள்? - கற்பு- முதல் அத்தியாயம்)

விபச்சார வழக்கு என்று பெண்களைத்தான் குற்றவாளியாக்கும் நிலை இருந்து வந்தது. இப்பொழுது விபச்சாரத்துக்கு ஆண், பெண் இருவரும் பொறுப்பு என்ற வகையில் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

இதனைத் திராவிடர் கழகம் நீண்ட காலமாகவே சொல்லி வந்திருக்கிறது.

9.2.1985 அன்று திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் எண் 3:

விபச்சாரத் தடைச் சட்டத்தின்கீழ் பெண்கள் மட்டுமே தண்டிக்கப்படும் அநீதி மாற்றப்பட்டு, குற்றமானால் இருசாராரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களாக வேண்டும். கற்பு என்பது ஆணுக்குத் தேவையில்லை என்ற தத்துவமே நடைமுறையாக இருக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களின் தத்துவம், திராவிட இயக்கத்தின் கொள்கைகள் நாளும் வெற்றி பெற்று வருவதை தமிழர் தலைவர் எடுத்துக்காட்டினார்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சில கத்துக்குட்டிகள் காது கிழிய கதற ஆரம்பித்துள்ளன. அவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமானவை.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்று ஏடுகளைப் புரட்டினால் இந்த உண்மைகள் புரியாமல் போகாது!

அன்னை மணியம்மையார் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தாழமிக்கதாகவும், ஆக்க ரீதியான படைப்பாகவும் அமைந்தது என்பது பெருமிதத்திற்குரியதே!

------------------- மின்சாரம் அவர்கள் 17-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: