Search This Blog

18.3.10

பெண்கள் தனியாக வந்தால் தரிசனம் கிடையாதாம்...


சரியான தீர்மானம்!

இனி பெண்கள் தனியாக வந்தால் அவர்களுக்குத் துறவிகள், சாமியார்கள் தரிசனம் கொடுக்கக்கூடாது என்று துறவிகளின் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் துறவிகள், சாமியார்கள் என்றாலே காம வெறியர்கள், பெண்களைப் போகப் பொருளாகக் கருதும் மிருகங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் என்றுதானே பொருள்?

சாமியார்கள், துறவிகளின் யோக்கியதை இவ்வளவு கீழ்த்தரமானது என்று தெரிந்து கொண்டதற்குப் பிறகு ஆண் துணையுடன்தான் பெண்கள் எதற்காக அவர்களிடம் செல்லவேண்டும்? அதுதானே ஒழுக்கத்தை முன்னிறுத்தும் சிந்தனையாகவும் இருக்க முடியும்?

கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் எல்லாவற்றையும் அவர் கவனித்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை பக்தர்களுக்கு இருக்குமேயானால், எதற்காக காவி உடையில் பதுங்கி இருக்கும் இந்த வேட்டை மிருகங்களை நாடிச் சென்றிட வேண்டும்?

கடவுள், மதம், பக்தி என்றாலே குழப்பம் - குழப்பத்துக்குமேல் படுகுழப்பம்தான் முரண்பாடுகளின் மொத்தமாகத் திரண்ட சாக்கடைதான்!

கடவுள் இல்லை என்று சொல்லும் நம்மைத்தான் நாத்திகர்கள் என்று சொல்கிறார்களே தவிர, ஒரு மதக்காரர் இன்னொரு மதக்காரருடைய கடவுளை ஏற்பதில்லையே, நம்புவதில்லையே அதற்கு என்ன பெயராம்? அது மட்டும் ஒரு மதக்காரர் இன்னொரு மதக்காரரின் பார்வையில் நாத்திகர் இல்லையோ!

நாம் நல்லது செய்தால் கடவுள் நமக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்குமானால், கோயிலுக்கு எதற்காகச் செல்லவேண்டும்? பூஜைகள் ஏன் செய்யவேண்டும்? காணிக்கைகள் ஏன் கொடுக்க வேண்டும்? விரதங்கள் ஏன் மேற்கொள்ளப்பட வேண்டும்?

கோயில் என்பதும், வழிபாடு என்பதும் வியாபார ரீதியாக உருவாக்கப்பட்டதன் விளைவுதான் இவ்வளவு பித்தலாட்டங்களுக்கும், சுரண்டலுக்கும் இடம் கொடுத்துவிட்டன என்பதை மரியாதையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் சங்கராச்சாரியார்களும், வாரியார் போன்றவர்களும், பக்தி என்பது பிசினஸ் ஆகிவிட்டது என்று கூறியிருந்தாலும், அதனை விளம்பரமாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதில்லை. காரணம், கோயில் அமைப்பு முறை என்பதே அடிபட்டுப் போனால் சங்கராச்சாரியார்களின் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கான உயர்ஜாதி அந்தஸ்தும், பிழைப்பும் நாறிப்போய்விடுமே.

சரி, சாமியார்கள், துறவிகள் தனியாகச் சென்று பெண்களை ஆசீர்வதிக்கக்கூடாது; அவர்களும் தனியாக வரும் பெண்களுக்கு தரிசனம் கொடுக்கக்கூடாது என்று தீர்மானம் செய்து விட்டார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும்.

கோயிலுக்குச் செல்லும் பக்தைகளைப் பற்றி ஏன் தீர்மானம் போடவில்லை?

சங்கர மடத்திற்குச் செல்லும் பக்தைகள்பற்றி ஏன் தீர்மானிக்கவில்லை?

காஞ்சிபுரம் மச்சேந்திரநாதர் கோயில் குருக்கள் பார்ப்பனர் தேவநாதன், கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்த பெண்களை கர்ப்பக்கிருகத்துக்குள்ளேயே உறவு கொண்டான். - அர்ச்சகர் தொழிலைவிட இந்தத் தொழிலில்தான் அதிகக் கவனமாக இருந்தான் என்று தெரிந்துவிட்ட பிறகு, இது குறித்து விளக்கமான அழுத்தமான தீர்மானத்தை கோயில் அர்ச்சகர்கள் குருக்கள் கூடி தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டாமா?

தனியாகப் பெண்கள் கோயிலுக்குப் போகக் கூடாது, கூட்டமாகப் போகவேண்டும்; அல்லது ஆண்கள் துணையோடு போகவேண்டும்; கோயில் அர்ச்சகர்களும் தனியாக வரும் பெண்களுக்காக அர்ச்சனை செய்யக்கூடாது என்று கறாராக ஓர் ஏற்பாட்டைச் செய்திட வேண்டாமா? இந்து அறநிலையத்துறையாவது பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டினைச் செய்து தரவேண்டாமா?

எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளை மற, மனிதனை நினை, சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்ற முடிவிற்குப் பக்தர்கள் வருவார்களேயானால் அறிவுக்கு அறிவும் மிச்சம்; ஒழுக்கத்திற்கு ஒழுக்கமும் மிச்சம்; பணத்துக்குப் பணமும் மிச்சம். சிந்திப்பார்களா?


--------------------" விடுதலை” தலையங்கம் 18-3-2010


0 comments: