Search This Blog

27.3.10

அன்னலட்சுமி விரதமல்ல பார்ப்பனத் தந்திரமே!




அஷ்ட அய்ஸ்வரர்யங்களுக்கும் அதிபதி வரலட்சுமி வரலட்சுமி விரதம் இருப்பதால் குடும்ப நிம்மதி, கணவருக்கு நீண்ட ஆயுள், நெல், பொன், வாகனம், அன்பு, அமைதி, இன்பம், ஆரோக்கியம், புகழ் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது அய்தீகம். ஆவணி மாதத்தில் வரும் விரதங்களில் முக்கியமான விரதம் வரலட்சுமி விரதம். இந்த விரதத்தின் பெருமை பவிஷ்யேந்தர புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. (தினமலர்_வாரமலர்)

பரமேஸ்வரனே பார்வதிக்கு வரலட்சுமி விரத மகிமைகளை விளக்கிச் சொன்னார் என்று கூறுவார்கள்.

விரதம் வந்த கதை குண்டினபுரம் என்ற ஊரில் சாருமதி இருந்தாள். மனத்தால் கூட அடுத்தவர்களுக்குத் தீங்கு நினைக்காதவள். அவளுடைய பேச்சும் மிக இனிமையாக இருக்கும்.

சாருமதியின் கனவில் ஒரு நாள் மகாலட்சுமி தரிசனம் தந்து சாருமதி! நான்தான் வரலட்சுமி. தெலுங்கில் சிராவண மாதமும் தமிழில் ஆடி மாதமும் உள்ள பவுர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமை அன்று பக்தியோடு பூஜை செய்தால், உனக்கு வேண்டும் வரங்களைத் தருவேன் என்று சொல்லி மறைந்தாள். கனவு கலைந்து, பொழுது விடிந்ததும், உறவினர்களிடமும் தெரிந்தவர்களிடமும், தான் கண்ட கனவை விவரித்தாள் சாருமதி. நல்லகனவு, வரங்களை அள்ளித் தரும் அந்த வரலட்சுமி விரதத்தை நாம் அனுஷ்டிக்க வேண்டும் என்றார்கள் அனைவரும்.

சில நாட்களுக்குள்ளாகவே, வரலட்சுமி விரதநாளும் வந்தது. அனைவரும் சாருமதியின் தலைமையில் கூடினர். நீராடி, தூய்மையான ஆடைகள் உடுத்தி, ஒரு கலசத்தில் (பித்தளைச்செம்பு அல்லது குடத்தில்) அரைஅரிசி கால்அரிசியாக ஒன்று கூட இல்லாமல், அனைத்தும் முழுசாக உள்ள பச்சரிசியைப்போட்டு, பூரணகும்பம் தயாரித்து, அதன்பின் அந்தக் கலசத்தில் வரலட்சுமியை ஆவாகனம் (எழுந்தருள) செய்து

பத்மஸநே பதிமகரே ஸர்வலோகைக பூஜிதே

நாராயண ப்ரியதேவி. ஸுரப்ரீதா பவணாவதா

நாராயணனுக்குப் பிரியமான தேவியே! தாமரைப் பூவில் இருப்பவளே! தாமரைப்பூவைக் கைகளில் ஏந்தியவளே! உலகமெல்லாம் பூஜிக்கப்படுபவளே! எங்களுக்குத் தரிசனம் தரவேண்டும் தாயே என்று துதித்துப் பூஜை செய்தார்கள். ஏற்கெனவே கனவில் மகாலட்சுமி கூறியபடி சாருமதியும் அவளுடன் விரதம் இருந்தவர்களும் மகாலட்சுமியின் விரதத்தினால் (கருணையினால்) எல்லாவிதமான செல்வங்களும் பெற்று வாழ்ந்தார்கள். அத்துடன் நமக்கு இந்த மங்கலங்கள் கிடைக்கக் காரணம் சாருமதி உபதேசித்த வரலட்சுமி விரதம் தான் என்று சொல்லி வருடாவருடம் அவர்கள் வரலட்சுமி விரதம் இருந்தார்கள்.

கேட்ட வரங்கள் கொடுப்பது வரலட்சுமி விரதம் என்று உலகத்தில் பிரசித்தமாக இருக்கிறது. வரலட்சுமி விரத சரித்திரத்தைக் கேட்டவர்களும் அடுத்தவர்களுக்கு நன்றாகப் புரியும்படிச் சொன்னவர்களும் எல்லாவிதமான செல்வங்களையும் அடைந்து நலமாக இருப்பார்கள்.

பூஜைபற்றிய தகவல்கள் விரத பூஜைக்கான இடத்தை நன்கு மெழுகித்துடைத்து, கோலம் போட்டு விளக்கேற்றி வைத்து வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் மேல் பூஜைக்குண்டான கலசத்தை வைக்க வேண்டும். கலசத்துக்குள் குறுநொய் இல்லாத பச்சரிசி, பொன் கருகமணி, மஞ்சள் முதலான மங்கலப் பொருள்-களைப் போட்டு, அதன் மேல் மாவிலை மற்றும் தேங்காய் வைக்க வேண்டும். பூஜையின் போது, அர்ச்சனை முடிந்த பின் கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீஸ்துதி முதலான லட்சுமிஸ் தோத்திரங்களையோ பாடல்களையோ பாடுவது நல்லது. கலசத்தில் வைத்த தேங்காயை அடுத்த வெள்ளிக்கிழமையன்று உடைத்து பாயாசம் பண்ணலாம்.

சிவனுக்கு வில்வம், மகாவிஷ்ணு-வுக்குத் துளசி; அதுபோல் மகாலட்-சுமிக்கு அருகம்புல். அருகம்புல் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது விசேஷம். பொதுவாக பெண்களுக்கான விரதமாக இருந்தாலும் சித்ரநேமி, நந்தன், விக்ரமாதித்தன் முதலான ஆண்களும் வரலட்சுமி விரதம் இருந்து நலமடைந்ததாக ஞானநூல்கள் கூறுகின்றன.

விரதத்துக்கு மறுநாள் புனர்பூஜை முடித்து, அன்றுமாலை ஆரத்தி எடுத்த பிறகு, பூஜைக் கலசத்தை இரவில் அரிசிப் பானையில் வைப்பது வழக்கம். எப்போதும் அன்னலட்சுமிக்குப் பஞ்சமே இருக்காது (சக்தி விகடன்)

(அஷ்டலட்சுமிகள் என்று பலராலும் சொல்லப்படும் ஒரு கடவுளுக்கே எட்டு உருவங்கள் உள்ளன. தனலட்சுமி, தான்யலட்சுமி வீரலட்சுமி, ராஜலட்சுமி, சந்தானலட்சுமி, ஆதிலட்சுமி, வித்யாலட்சுமி, விஜயலட்சுமி என்பவைதான். வரலட்சுமி என்று ஒரு பெயர் இல்லை இவர்களில் யார் வரலட்சுமி? சிவன் பார்வதிக்கு வரலட்சுமி விரதம் பற்றிச் சொன்னானாம். பார்வதி பூஜிக்கப் போகிறாளா? ஒரு பெண் தன் கனவில் மகாலட்சுமி வந்து விரதம் இருக்கச் சொன்னதாக எல்லோரிடமும் சொல்லி இந்த விரதம் வந்ததாம். அதற்குச் சொல்லப்பட்ட பாடல் மகாலட்சுமியைப் பற்றியதே. முதல் கூட்டம் பூஜை செய்த முறைக்கும் தற்போதுள்ளதற்கும் மாறுதல் உள்ளது. அது அவரவர் வசதியும் இஷ்டமும் போலும். ஓர் ஆண்டு விரதம் இருந்தால் தான் எல்லா செல்வங்களும் கிடைத்துவிடுமே. பின் ஏன் ஆண்டுக்கு ஆண்டு செய்ய வேண்டும்? சொல்லப்பட்டுள்ள தோத்திரங்கள் எல்லாம் வடமொழியே. கலசத் தேங்காயை அடுத்த வாரமே பயன்படுத்தச் சொல்கிறாள். ஒரு ஆண்டு வைத்திரு என்று சொல்லவில்லை, இதில் ஆண்களும் விரதம் இருந்தார்கள் என்ற ஒரு கதை. கலசத்தை அரிசிப் பானையில் வைக்க வேண்டும் என்றால் குடத்தை எப்படி அரிசிப் பானையில் வைக்க முடியும்? அன்னலட்சுமிக்குப் பஞ்சம் கிடையாதாம். யார் இவள்? இந்த விரதம் இருப்பதால் பல நலன்கள் கிடைக்கும் என்ற ஆசையைத் தூண்டி, பெண்கள் மாறாமல் இருக்கவே இந்தக் கதை. இந்த சரித்திரத்தைக் கேட்டவர்களும், பிறருக்குப் புரியும்படிச் சொன்னவர்-களும் பல நலன்கள் பெறுவராம். ஒரு கடவுளச்சிக்கு எட்டுப் பெயர்களுடன் எட்டு உருவங்கள் சொல்லி இன்னும் பல பெயர்கள் கூறப்படுகின்றன. மக்கள் என்றும் அறிவு பெறக்கூடாது என்பதே பார்ப்பனத் தந்திரம். சிந்திப்பீர்!


------------------ 20-3-2010 " விடுதலை” ஞாயிறுமலரில்

தங்க நாராயணசாமி அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: